கவிக்கோ ஞானச்செல்வன்
கவிக்கோ ஞானச்செல்வன்
மதிப்பீடும் முடிவுகளும்.
—————————–
வணக்கம். வல்லமை மின்னிதழ் வளர்ச்சியை ஊக்கும் நல்லிதழ்.
நல்லமைப் பண்பினர் நயந்து போற்றும்மெல்லிதழ்.
பத்தொன்பதாம் படக்கவிதைப் போட்டிக்கு14 கவிதைகள் வந்துள்ளன.எல்லாம் முகமூடிக் கவிதைகள்.
பொய்ம்முகத்துப் போலிகளும் புகழ்முகங்கள் ஆகிவர
மெய்ம்முகத்தார் வனவாசம் மேவுகின்ற காலமிது.
என்று ஒரு கவியரங்கில் நாம் குறிப்பிட்ட வரிகள் நினைவில் தோன்றுகின்றன.
முழுமையும் மரபு வழுவாத இலக்கணத்தோடு அமைந்த கவிதைகளோ,புதுக்கவிதையின் வீச்சும் படிமங்களும் சிறப்பாக அமைந்த கவிதைகளோ இல்லையாயினும்,சிந்தனை மாட்சியும் சீர்த்திமிகு கருத்தும் கவிதை வரிகளில் விரவி நிற்பதைப் பாராட்ட வேண்டும்.பங்கேற்ற அன்பர் அனைவரையும் வாழ்த்திப் பாராட்டிமகிழ்கிறோம்.
நாடகமே உலகம்-தலைப்பில்
சிலமனிதர்கள்
சிலநேரங்களில் மட்டும்
கழற்றிய
நிழல்மூடிகள்……என்று தொடங்கி,
முகமூடி அணியாத
கலியுக
மாந்தர் உண்டோ?- என்று முடித்து ள்ளார்,திரு. ஜெயபாரதன்.
உருவங்கள் மாறினாலும்எண்ணமும் குணமும் மாறாது
பொய்முகம் என்றும் உண்மைமுகம் ஆகாது.
மனிதனே வாழ்க்கையில் பலவுருவம் எடுக்கிறான்
பசுத்தோல் போத்திய புலிபோல். வாழ்கிறான். என்று திரு.பார்த்த சாரதி பகர்கிறார்.
கவிஜி என்ற கவிஞரோ,
கருவிழிகளற்ற
வெள்ளை தேசம்
காணுவதாக அவர்கள்
திரிகிறார்கள்.
பூனைகளும் புதையல்களும்
புனைவுகளால்
ஆளப்பட்டாலும்,
புதிர் விதைத்து
மறைக்கிறார்கள்.——என்று புதுக்கவிதை உத்தியைப் புரட்டிப் பார்த்துள்ளார்.
க கனத்தின் உள்ளே கரந்துறையும்
நாகத்தின் விசம்போலக் கொல்லும்
மிக க் கொடிய முகமூடித்தனங்கள்
இகத்திலே மிகமலிந்து விட்டதே. என வேதனைப்படுகிற புனிதா கணேசன்,
முகமூடி மாயைக்குள் முகம் நுழைத்தே
அகத்தழகை இழக்காமல் சிறப்போமே. என்று முடித்துள்ளார்.
உறவெல்லாம் தொடர்கதை
தொடர்வதில்லை புதுக்கவிதை
காரணம் மனங்களிடை
மாயையின் திரையிடை –
வேசம் போட்ட வாழ்க்கை
நாசமாகும் நம்பிக்கை
வேண்டாமே நிஐவாழ்வில்
உறவுகளில் வேசங்கள். என்கிறார் …கருப்பையா துஷ்யந்தி.
மேடையில் அடுத்தவர்
முகத்தைத் தரித்தவன்
பாடையில் சொந்த முகத்தோடு
கிடக்கிறான்!
யாருக்கும் அடையாளம் தெரிய வில்லை
வந்தவர்கள் தேடுகிறார்கள்
கலைஞனை,
சுவரில் அவன்களைந்து போட்ட
முக ஒப்பனைகள் !——————இது,கனவுதிறவோனின் சில வரிகள்.
வீட்டிலும் நாட்டிலும்
பொய்முகங்கள்காட்டி
வளையவருகிறார்பலர்
சிரித்துக் கெடுப்பார்சிலர்
நடித்துக் கெடுப்பார்சிலர் சிலர்
கடன்கேட்க ஒருமுகம்
கழிக்கப் பார்ப்பது ஒருமுகம். எனத்தொடர்கிறார் சரஸ்வதி இராசேந்திரன்.
அகம்மூடிச் சிரிப்பு
முகம்மூடிப்பேச்சு…….
திருட்டில் ஒட்டும் நண்பன்
உருட்டும் தலைக்குள் வஞ்சம்
இருட்டைப்போல் பற்றிக் கவலை யில்லை
வெருட்டென மருட்டும் முகமூடி.-இது வேதா இலங்காதிலகம் வரிகள்.
ஆணாதிக்கத்சைச் சாடி அழகிய கவிதை தந்துள்ளார் இலட்சுமி.
மெய்யன் நடராசன் வரிகள் மெச்சத்தக்கவை.
அன்பின் முகவரியை அடையாளப் படுத்தி யுள்ளார். கார்த்திகா.
இறுதியாக வந்துள்ள(புதுக்கவிதை போன்ற)தமிழ்முகில் என்பார்தம்கவிதையை முதல் இடத்திற்கு உரியதாக நாம் அறிவிக்கின்றோம்.அறிவில் ஓங்கிய மனிதாம் அறமற்ற அனைத்தும் துணிந்து செய்கிறார்கள் முகமூடிக்குள் மறைந்து எனும் கருத்தை ஏற்றுப் பாராட்டுகிறோம். கவிதை காண்க:
பூனை புலி
நாய் நரி
பாம்பு பட்டாம்பூச்சி
உருவங்கள் பல
அறிவென்னவோ ஐந்தே
இவைதம்
உளந்தனில் வஞ்சகமில்லை
தம்மினத்தைத் தாமே அழிப்பதில்லை!
பகுதறிவுள்ள மனிதர்களே
துவேஷம் சுமந்து
தம்மினத்தையே கொன்று குவிக்கிறார்!
ஒரேமுகம்-ஆனால்,
முக மூடிகள் பல
உளந்தனில் மண்டிக் கிடக்கும்
அழுக்குகள் பல!
யாரை நம்ப, யாரைநம்பாது போக,
உலகமே உண்மைமுகம் மறைத்ததோ?
இனி,இரண்டாம் இடத்தில் பாராட்டுப்பெறும் கவிதை பெரிதும் மரபு யாப்பமைந்த ஒன்று.
இரண்டு எண்சீர் விருத்தங்கள்? அவற்றுள் ஒன்று:
விதவிதமாய் மனிதர்பலர் நம்மிடையே இருக்கின்றார்
விசித்திரமாய் நாய் புலி மான் சிங்கமொடு நரியாக
நிதமொரு விதமான விலங்காய் வலம்வந்தே
நடமாடித் திரிகின்றார் மனிதமுக மூடிகளாய்!
முதலையாய்க் கடித்து யானை சாய்த்திடுவார் விழுங்கிடும்
மலைப்பாம்பாய் மாறிடுவார் நன்மை தான் மிகச்செய்து
உதவுகின்றது நாக்கினிலே உறவாடித் திரிந்திடுவார்
உலகினில் உய்யவே உண்மையைக் கண்டுணர்வீர்!
(உலகத்தார் உய்ந்திடவே). (சில திருத்தங்கள் செய்யப்பட்டன)
பங்கேற்ற அனைவரையும் மீண்டும் பாராட்டி வாழ்த்துகிறோம்.வல்லமை இதழாசிரியர்,எம் அன்பு மாணவர் அண்ணாகண்ணன் ஆகியோர்க்கு நன்றி.வளர்க பொலிக வல்லமை!a
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

திருமதி. கீதா மதிவாணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.07.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
தமிழறிஞரும் வசீகரமான பேச்சாளரும் செழுமையான மரபுக் கவிஞருமான கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள், வல்லமையில் இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்கு நடுவராகப் பொறுப்பேற்க இசைந்துள்ளார்.
இவர், பன்னூறு அரங்குகளில் கவிதை முழங்கியவர். திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்லாண்டுகள், தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்’ என்ற தலைப்பில், ‘தினமணி’ நாளிதழின் இலவச இணைப்பான ‘தினமணி கதிர்’ வார இதழில் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதிப் பலரையும் கவர்ந்தவர். மக்கள் தொலைக்காட்சியில் ‘தமிழ் பேசு தங்கக் காசு’ நிகழ்ச்சிக்கு நடுவர் பொறுப்பு ஏற்றவர். ஞானச்செல்வன் கவிதைகள், அர்த்தமுள்ள அரங்குகள், நீங்களும் கவிஞராகலாம், சொல்லறிவோம், தமிழில் மரியாதைச் சொற்கள், பாரதி வாழ்கிறார் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். ‘நல்ல தமிழ் அறிவோம்’ என்ற தலைப்பில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய வகுப்பறையில் காணொலிக் காட்சி மூலமாகப் பாடங்களை நடத்தி வருகிறார்.
சிறப்புகள் மிகுந்த கவிக்கோ அவர்களை வல்லமைக்கு வரவேற்கிறோம். வழக்கம் போல், உற்சாகத்துடன் போட்டியில் பங்கேற்க, அன்பர்களை அழைக்கிறோம்.
கவிக்கோ ஞானச்செல்வன் மின்னஞ்சல் முகவரி – kavikkognanachelvan@gmail.com