Tag: க. பாலசுப்பிரணியன்

  • வாழ்ந்து பார்க்கலாமே 39

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்விகளுக்கு யார் காரணம் ?

    பல நேரங்களில் நாம் நம்முடைய தோல்விகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்குகின்றோம். எப்பொழுதுமே நமது தோல்விகளுக்கு நாமே காரணமாக இருக்கின்றோம் என்பதை உணருவதில்லை அல்லது உணர மறுக்கின்றோம். தோல்விகளில் நம்முடைய பங்கு எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்தால் தன்னுடைய சுய கௌரவத்திற்கு தாக்குதல் ஏற்படுமோ என்ற பயத்தில் உண்மையிலிருந்து விலகி நிற்கின்றோம்.  மற்றவர்கள் நம்முடைய தோல்விக்காக நாம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நாம் ஏன் மற்றவர்களை நம்முடைய தோல்விகளுக்கு பொறுப்பாக்குகின்றோம்? இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

    1. நாம் நம்முடைய சுய தனித்திறன்களை அறிந்து கொள்வதிலும் . நம்முடைய தனித்திறன்கள் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை. அவைகளைக் குறைத்து மதிப்பிடுகின்றோம். அல்லது நமது திறன்கள் விலைபோகுமா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. நாம் நம்மை மற்றவர்களிடம் ஒப்பிடும் பொழுது பல நேரங்களில் நமது திறன்கள் மீது நாம் கொண்ட பார்வை துல்லியமாக இல்லாமல் பாரபட்சமாகவோ அல்லது ஒருவித தயக்கத்துடனோ இருக்கின்றது. இதை மற்றவர்கள் அறிந்து தங்களுடைய நம்பிக்கைகளின் அடிப்படையிலும் தங்களுடைய புத்திசாலித்தனமான உள்ளீடுகள் மூலமாகவும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிடுகின்றனர்.
    1. வெற்றிப்பாதைகளுக்கு ஏற்றவாறு நாம் நமது திறன்களை புதிப்பித்துக்கொள்வதில்லை. பல நேரங்களில் நாம் நம்முடைய பழைய அறிவுகள், சிந்தனைகள், கற்றல்கள், திறன்கள் ஆகியவற்றை பெரும் சொத்தாக நினைத்து அவைகளின் அடிவாரகங்களில் கட்டப்பட்ட மாளிகைகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காலப் போக்கில் இவைகள் உபயோகமற்றவைகளாகவும் தேவையற்றவைகளாகவும்  மாறி நமக்கு உதவாமல் உளுத்துப் போகின்றன. வேகமாக மாறிவரும் அறிவு மற்றும் திறன்களின் சந்தையில் நாம் தனிமரமாக தோல்வியின் சின்னமாக நின்றுவிடுகின்றோம். இதற்கு யார் பொறுப்பு? மற்றவர்களோ தங்கள் அறிவினையும் சிந்தனைகளையும் திறன்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகக் கூர்மையாக்கிக் கொண்டு வருகின்றனர்.  வெற்றிக்கனியை பிடிப்பதற்குத் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். பல நேரங்களில் அவர்கள் நம்மை விட அனுபவத்தில் குறைந்தவர்களாகவும் வயதில் குறைந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. அந்த நேரங்களில் நாம் அவர்களைக் கண்டு பொறாமை கொண்டோ அல்லது வெறுப்புக் கொண்டோ அவர்களை நம்முடைய தோல்விகளுக்கு காரணமாகக் காட்டுகின்றோம். இதை வெல்ல ஒரே ஒரு வழி – நித்தம் நம்முடைய அறிவையும் திறன்களையும் சீர் செய்து கொண்டு இருப்பதுதான் !
    1. தோல்விகளைக் கண்டு துவளாமல் உயர்வது எப்படி என்று நாம் சிந்திப்பதில்லை.  ஒருமுறை எட்மண்ட் ஹில்லாரி (Edmund Hillary) எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக தன்னுடைய முதல் முயற்சியை மேற்கொண்ட பொழுது தோல்வியைத் தழுவினார். அவர் இமயத்தை விட்டு கீழே இறங்கியதும் அந்தச் சிகரத்தை ஒரு முறை நோக்கி சொன்னார்: ” நீ இதைவிட பெரியதாக உயரமுடியாது. ஆனால் நான் இப்பொழுது இருப்பதைவிட பெரியவனாக உயர முடியும்.” என்னே! ஒரு மனப்பான்மை. தோல்விகள் நமக்கு கற்றலையும் துணிவையும் கொடுக்கக்கூடியவை. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளாமல் மற்றவர்களை அந்தத் தோல்விக்கு காரணமாக ஆக்குவது நமது குறுகிய மனப்பான்மையையும் நமது இயலாமையின் வெளிப்பாட்டையும் காட்டுகின்றது.
    1. சில நேரங்களில் தோல்விகளின் தாக்குதல்களிருந்து விடுபட நாம் மாறுபட்ட சிந்தனைகளைக் (Out of Box thinking) கையாள வேண்டும். நேர்கோட்டுச் சிந்தனை (Linear thinking) முறைகள் பல நேரங்களில் பயன் அளிப்பதில்லை. எனவே ஒவ்வொரு நேரத்தில் எப்படிப்பட்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சிந்தித்து அதற்குத் தக்கவாறு கையாள வேண்டும். செகப்பிரியர் (Shakespeare) எழுதிய “வெனிஸ் நாடு வியாபாரி” (The Merchant of Venice) என்ற கதையிலே தன்னுடைய தேவைக்காக ஷைலக் (Shylock) என்பவரிடம் ஒரு தொகையைக் கடன் வாங்கிய அன்டோனியோ (Antonio) என்பவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தக் கடனைத் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளிக்க, அது தவறினால் தன்னுடைய இதயத்திலிருக்கும் சந்தையிலிருந்து ஒரு பவுண்டு சதையைத் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றார். குறிப்பிட்ட காலத்தில் அந்தப் பணத்தை திருப்பித் தர முடியாததால் ஷைலக் ஒரு பவுண்டு இதயச் சதையைக் கேட்க பல நண்பர்கள் அதற்குப் பதிலாக பலமுறை அதிகமாகப் பணம் தருவதாகவும் தன்னுடைய கோரிக்கையைக் கைவிட்டுவிடுமாறும் ஷைலக்கை கேட்கின்றனர். இதற்குப் பணியாத அந்த வியாபாரி ஷைலக்கிடம் மாறுவேடத்தில் ஒரு வழக்குரைஞராக வந்த போர்ஷியா (Portia) என்ற பெண் அந்தக் கோரிக்கையை ஏற்று “உங்களுக்கு ஒரு பவுண்டு இதயச் சதை நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால் அதை எடுக்கும் பொழுது ஒரு துளி இரத்தம் வந்தாலும் உங்களுடைய பணம் மட்டுமின்றி உங்கள் வாழ்வும் போய்விடும் என்று கூறி அந்த வழக்கை வென்று விடுகின்றார். இந்த கதை ஒரு மாறுபட்ட சிந்தைக்கு (Lateral thinking) முகாந்திரமாக அமைகின்றது. பல நேரங்களில் மாறுபட்ட சிந்தனைகள் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தோல்விகளைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாக அமைகின்றது.
    2. தோல்விகள் நிரந்தரம் அல்ல; மற்றும் தோல்விகள் ஒரு முடிவின் வெளிப்பாடு அல்ல. வாழ்க்கை என்ற பயணத்திலும் முன்னேற்றம் என்ற பாதையிலும் தோல்விகள் சில நேரங்களில் தடைக்கற்கள். அவைகளைக் கடந்து செல்ல நாம் பயில வேண்டும். இந்த வழியிலே வெற்றிகண்டவர்கள் சரித்திரம் படைக்கின்றார்கள் ஆபிரஹாம் லிங்கனின் (Abraham Lincoln) வாழ்க்கை இதற்கு ஒரு சான்று. இது போன்று சரித்திரம் படைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை நமக்கு பாடங்கள் சொல்லித் தருகின்றன. அவர்கள் வழிகள் நம்முடைய பாதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அனுபவங்கள் ஆசானாக இருக்கும்பொழுது தோல்விகளுக்குத் தோள்கொடுக்கத் துயரங்கள் வருவதில்லை. தோல்விகளைப் பாராட்டுபவர்கள் இருக்கும் இடத்திலேயே நின்று குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதற்கு நபர்கள் மிகக் குறைவு.

    எனவே நாம் நிமிர்ந்து நிற்கப் பழகிக் கொள்ளவேண்டும். தோல்விகளைச்  சிறிய நிகழ்வுகளாகக் கருதி மேலே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர கற்றுக்கொள்ள வேண்டும்.

    என்ன, முயன்று பார்க்கலாமா ?

    (தொடரும் )

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 37

    க. பாலசுப்பிரமணி

     

    தோல்விகளுக்கு பொதுவான காரணங்கள் என்ன?

    வெற்றியும் தோல்வியும் ஒரு நிகழ்வின் இரண்டு எதிர்மறையான பரிமாணங்கள். வெற்றிவாகை சூடி மதம் பிடித்த உள்ளங்களோடு உலவுவதும் தோல்வியைக் கண்டு துவண்டு ஒதுங்குவதும் நலமான முதிர்ச்சியும் வளர்ச்சியும் அடைந்த உள்ளங்களின் வெளிப்பாடுகள் அல்ல. நிகழ்வுகள் பயணங்கள் ஆவதில்லை. பல நேரங்களில் தோல்விகள் எழுப்பும் வினாக்களிலே வெற்றிக்கான வித்துக்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவைகளை நாம் ஏன் கண்டுகொள்வதில்லை என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து கொண்டிருக்கும். எனவே தோல்விகளின் இடைப்பாடுகளில் நடுவே அமர்ந்து அலசி ஆராய்ந்து நம் தவறுகளைத் திருத்திக் கொள்வதே உண்மையான கற்றலாகும். இந்த அலசலைச்  செய்யவோ அல்லது அவைகளின் உண்மைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ  நாம் தயங்கக்கூடாது அல்லது வெட்கப்படக்கூடாது. வெற்றி தோல்விகளின் காலப் பரிமாணங்கள் மிகவும் குறைவானவை. அவற்றைக் கடந்து வாழ்வின் இலக்கையும் வளத்தையும் மேன்மையையும் உணர்ந்து முன்னே செல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    தோல்விக்குத் துணை போகும்பொழுது நம்பிக்கையின் ஆணிவேர்கள் அசைக்கப் படுகின்றன. அதற்கு இடம் கொடுக்கும் பொழுது அது நம்மைப் பார்த்து சிரிப்பது மட்டுமின்றி நம்மை நாமே தரக்குறைவாக எடைபோடக் காரணமாகின்றது.” நம்முடைய வீழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது. அதன் முழுப்பொறுப்பும் நமதே.” என்றும் “நம்முடைய சம்மதமின்றி யாரும் நம்மை வீழ்த்த முடியாது ” என்றும் மனநல வல்லுநர்கள் உறுதியாகக்  கூறுகின்றனர்.

    iதோல்வியை நாம் ஏன் ஏற்றுக்கொள்கின்றோம்? நமது தோல்விகளுக்கான பொதுவான காரணங்கள்தான் என்ன? சிலவற்றைக் காண்போமே !

    1. நமது இலக்குகளில் தெளிவு இல்லாமல் இருக்கலாம்.
    2. இலக்கை நோக்கிச் செல்லும் பாதைகள் தவறாக இருக்கலாம்.
    3. நமக்கே அந்த இலக்குகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
    4. நம்து முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்
    5. நமது முயற்சியின் வேகமும் தாக்கமும் வலுவானதாக இல்லாமல் இருக்கலாம்.
    6. நமது திறன்கள் வெற்றியை அளிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.

    7, நாம் பல நேரங்களில் நமது பார்வைகளை மற்றவரிடம் செலுத்தி அவர்களோடு ஒப்பிட்டு நமது திறன்களுக்கும்  முயற்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கலாம்.

    1. நமது கற்றல், திறன்கள், ஆக்க சக்திகள் ஆகியவற்றை விலக்கி நாம் மற்றவர்களுடைய திறன்கள் ஆக்க சக்திகள் ஆகியவற்றை நமது பாதைகளில் இறக்குமதி செய்து முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.
    2. நமது செயல் கருவிகள் துருப்பிடித்தாக இருக்கலாம்.

    10.முயற்சிப் பாதைகளில் நாம் புதிய கற்றல்களைத் தவிர்த்து பின்னடைந்து கொண்டிருக்கலாம்.

    மேடைகளில் ஏறி பலமுறை முயன்றும் சரியாகப் பேச முடியாமல் திணறிய வின்ஸ்டன் சர்ச்சில் உலகின் ஒரு மிகச் சிறந்த பேச்சாளராக மாறியது சரித்திரம் கண்ட உண்மை. தன்னுடைய படைப்புக்கள் பல முறை திரும்பி வந்ததால் மனம் நொந்து போன ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகின் மிகப் பெரிய படைப்பாளியாக உருவானது உலகம் அறிந்ததே! தான் கண்டுபிடித்த கார்கள் விற்க முடியாமல் கடனில் அவதிப்பட்ட போர்ட் உலகின் ஒரு சிறந்த தொழிலதிபராக முன்னேறியது யாவரும் அறிந்ததே!

    படிக்கும் காலத்தில் நேரத்தை வீணடித்து நம்முடைய திறன்களை சீரழித்து மற்றவர்களுடைய மகிழ்ச்சியை நமது மகிழ்ச்சியாக நினைத்து தோல்விகளை முடிவுகளாகக் கருது எத்தனை இளைஞர்கள் மனநோய்களுக்கு இரையாகி இருக்கின்றார்கள்! இது வேதனையான விசயம். அது மட்டுமல்ல நாம் மற்றவர்கள் போல் வாழ முடியவில்லையே என நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்” அவர்கள் தோல்விகளின் காரணங்ளைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சிகள்  செய்தாலும் பலன் கிடைப்பதில்லை..  காற்று எதிர்நோக்கி வீசுகின்றது. நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. “எதிர்நோக்காகக் காற்று வீசும் பொழுது திறமையான மாலுமிகள் தங்கள் பாய்மரங்களின் திசைகளை மாற்றி சரி செய்து கொள்ளுகின்றார்கள்” என்பது ஒரு வழக்கு மொழி. இதன் உட்கருத்தைப் புரிந்து செயல்படுபவர்கள் பாதிப்புக்களுக்கு ஆளாவதில்லை.

      பல நேரங்களில் நம்முடைய தோல்விகளுக்கு முன்னேற்றத் தடைகளுக்கும் காரணமாக இருப்பது நம்முடைய “இயலாமை மனப்போக்கு’  என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் இந்த மனப்போக்கு ஒரு உள்ளடங்கிய கற்றலாக மாறி எந்தப் புதிய முயற்சியிலும் திறனாக்கத்திலும் தடைக்கல்லாக அமைகின்றது. இதன் காரணமாக நாம் அடிக்கடி ” இது எனக்கு வராது. இதை என்னால் கற்றுக்கொள்ள முடியாது. இதற்கும் எனக்கும் ரொம்ப தூரம். இந்தக் கற்றலின பாக்கியத்தை இறைவன் எனக்கு அளிக்கவில்லை. ஒரு வயதுக்கு மேல் நாம் இந்தப் புதிய கற்றலலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த வயதில் மூளை வேலை செய்யாது ” என்ற பலப்பல காரணங்களைக் கண்டுபிடுத்து  நம்மைச் சிறைப் படுத்திக்கொள்கின்றோம். இவை அத்தனையும் இயலாமை மனப்பான்மையின் அறிகுறிகள்.

     தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் நமது மூளையின் திறன்களையும் ஆக்க சக்தியையும்  வெளிச்சம் போட்டுக்காட்டி நமது தொடர் கற்றலின் ஆற்றல்களை விளக்குகின்றன.

    தோல்விகளைக் கண்டு துவழாமலும் வெற்றிகளின் போதையில் மயங்காமலும் சீராக வாழ்ந்துபார்க்க முயற்சிக்கலாமே !

    தொடரும்..

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 30

    க. பாலசுப்பிரமணியன்

     

    மகிழ்வும் திறனும் தொழிலுக்குத் தேவை

    பல நேரங்களில் நமக்கு நாம் விரும்பிய தொழிலோ அல்லது வேலைகளோ கிடைப்பதில்லை. எவ்வளவுதான் ஆர்வம் நமக்கு இருந்தாலும் குறிப்பிட்ட சில கல்வித்தகுதிகள் இல்லாததாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ நாம் விரும்பிய தொழில்களில் ஈடுபட முடிவதில்லை. ஆனாலும் நம் உள்மனதில் அந்தத் தொழிலைப் பற்றிய ஆர்வம் மற்றும் ஈடுபாடு இருந்துகொண்டே இருக்கின்றது. நாம் அந்த விருப்பங்களுக்கும் ஆர்வங்களும் மாறுபட்ட நிலையில் வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு விடுகின்றோம். சில சந்தர்பங்களில் இந்த மாதிரியான நிர்பந்தங்கள் குடும்பச்  சூழ்நிலைகளாலோ அல்லது பொருளாதாரச் சூழ்நிலைகளாலோ அல்லது சமுதாய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாகவோ அமையக்கூடும். அந்த நேரங்களில் பலருக்கு ஒரு தோல்வி மனப்பான்மையோ  அல்லது ஏமாற்றமோ ஏற்பட வாய்ப்புக்கள்  உண்டு. இந்தச் சூழ்நிலைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மை, மன அமைதியின்மை. மன அழுத்தங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தலாம். இதிலிருந்து மீண்டு நாம் எந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோமோ அதையே ஒரு பரிசாக ஏற்று அந்தத் தொழிலை மகிழ்வுடனும் சிறப்பாகவும்  செய்ய கற்றுக்கொள்ளவும் முயலவும் வேண்டும்.

    எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் மகிழ்வும் ஈடுபாடும் இல்லாமல் செய்யும் பொழுது அது நமக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடுகின்றது. அதையே மகிழ்வோடு செய்யும் பொழுது அது நல்வாழ்வுக்கு உரமாக மாறிவிடுகின்றது. உலகின் மிகப் பெரிய தத்துவ மேதை அரிஸ்டாட்டல் கூறுகின்றார் “மகிழ்வோடு செய்யும் எந்த வேலையும் மிகச் சிறப்பாக அமைகின்றது.”

    சில நேரங்களில் நாம் தொழிலில் நமக்கு அதைச் செய்வதற்கான வெகுமானமும் சம்பளமும் கிடைக்காததால் நம்முடைய ஈடுபாடுகளையும் மகிழ்வையும் குறைத்துக்கொள்கின்றோம். அது மட்டுமல்ல, நாம் நம்மைப் போன்ற பலருடன் நம்மை ஒப்பிட்டு நம்முடைய தரத்தை உயர்த்தியோ குறைத்தோ மதிப்பீடு செய்கின்றோம். இது ஒரு தவறான நோக்கு. இந்த ஒப்பீடுகள் ஓரளவிற்கு நம்முடைய திறனுக்கு அளவுகோலாக இருக்குமேயன்றி எல்லா நேரங்களிலும் நம்முடைய ஈடுபாட்டிற்கும் திறனுக்கும் நிரந்தரச் சான்று அல்ல. எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடோடு செய்யும் பொழுது நமது திறன் ஒளிர்கின்றது. அதில் கிடைக்கும் மகிழ்வே அந்தச் செயலை சரியாகச் செய்வதற்கான கூலியாக அமைகின்றது. இதையே பகவத் கீதையின் கர்மயோகத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. “கர்மண்யேவாதிகாரஸ்தே; மா பலேஷு கதாசன” என்ற கூற்றில் கண்ணன் அர்ச்சுனனுக்கு கூறுகின்றார் “பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய்.”

    சில நேரங்களில் நாம் மற்றவர்களிடம் சென்று “நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் தெரியுமா” என்று தங்களுடைய திறன்களையும் தொழில் வளர்ச்சியையும் பற்றி தற்பெருமையுடன் சொல்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். சிறப்பாகத் தொழில் செய்பவர்களுக்கு இதற்கான அவசியம் இல்லை. “ஒரு சிறந்த வேலைக்காரனுக்கு அவன் தொழில் திறனே முகவரியாக அமைகின்றது”  என்று சொல்லப்படுகின்றது. அறிவுசால் சமுதாயத்தில் அறிவும் திறனும் உள்ளவர்களைத் தேடி உலகம் செல்கின்றது. இது நடைமுறை உண்மை. அவர்களுக்கு ஒரு விளம்பரமோ அல்லது பரிந்துரையோ தேவையில்லை. விளம்பரமும் பரிந்துரைகளும் கொண்டு தொழிலிலும் வாழ்விலும் முன்னேறுபவர்கள் அவர்களுடைய ஒவ்வொரு படியின் முன்னேற்றத்திலும் யாரையாவது தேடிக்கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடைய தயவும் ஒத்துழைப்பும் இல்லாமல் தங்களுடைய முன்னேற்றத்தின் சரித்திரத்தை அவர்களால் எழுத முடியாது.

    பல நேரங்களில் நல்ல திறனுள்ளவர்கள் என்ன திறமையிருந்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்’ என்ற ஒரு பிற்போக்கான கருத்தை மனதில் நிறுத்தி தாங்கள் செய்யும் வேளையிலும் தொழிலும் தங்களுடைய முழுமையான உழைப்பை செலுத்தாமல் இருப்பார்கள். இவர்கள் அநேகமாகத் தோல்வியையே சந்திப்பார்கள். காரணம்- என்னதான் திறமையிருந்தாலும் கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை. அமெரிக்க மனநல மற்றும் சமூகச் சிந்தனையாளர் மால்கம் கிளாட்வெல் என்பவர் கூறுகின்றார். “திறன்கள் மட்டும் போதுமானதல்ல. அந்தத் திறன்கள் அமைதியாக இருக்கும் பொழுது உங்களுடைய கடின உழைப்பு உங்களுக்காகப் பேசுகின்றது.”  சில சமயங்களில் நாம் நம்முடைய திறன்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டேன் “உங்களுக்கு இந்தத் திறன்களெல்லாம் உண்டென்று உங்கள் மேற்பார்வையாளருக்குத் தெரியுமா?”

    அவர் அளித்த பதில் என்னைத் திகைப்படையச் செய்ததது. “இல்லை அய்யா. நான் அதெல்லாம் தெரியும் என்று சொன்னால் என்னை அதையெல்லாம் செய் என்று சொல்லுவார்கள். கொடுக்கின்ற சம்பளத்திற்கு அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டுப் போகவேண்டும்.” இந்த நோக்கு சரியானது அல்ல. நம்முடைய திறன்களை சரியான நேரங்களில் நாம் வெளிக்காட்டாவிட்டால் அவைகளின் பயன் என்ன? நமக்கு நம்மைத் தவிர யார் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்?

    நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யலாமே  !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 28

    க. பாலசுப்பிரமணியன்

     

    மாற்றங்களை சீரான மனநிலையோடு பார்க்கலாமே!

    மாற்றங்கள் உலகத்தில் புறத்தில் மட்டும் ஏற்படுவதில்லை. நம்முடைய உடலிலும் உள்ளத்திலும் நாம் வாழ்கின்ற வாழ்க்கையிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் சமாளிக்கவும் அவைகள் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து புரிந்து வாழ்க்கையை மேலும் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

    சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நிறுவனத்தில் அங்கிருந்த ஊழியர்கள் அனைவருக்குமான ஒரு பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது. பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த சொற்பொழிவாளர் தன்னுடைய உரையில் மிகவும் எளிதான முறையிலும் எல்லோரும் மகிழ்ந்து சிரிக்கும் வகையிலும் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சைக் கண்டு மகிழ்ந்து அந்த அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் பங்கேற்ற ஒருவர் மட்டும் எதிலுமே ஈடுபாடுயில்லாதவராய் ஏதோ பறிகொடுத்தவர் போல் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த சொற்பொழிவாளர் அவர் அருகில் சென்று எல்லோரும் சிரிக்கும் வகையில் ஒரு கதையைச் சொன்னார். அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. ஆனால் அந்த நபர் மட்டும் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார். சொற்பொழிவாளர் நொந்து போய் ‘ஒருவேளை அவருக்கு காதுகொஞ்சம் மந்தமோ’  என நினைத்தார்.

    அந்த நிகழ்வு முடியும் நேரத்தில் அனைவருக்கும் அந்தப் பயிற்சி முகாம் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்ய ஒரு விமர்சனக் குறிப்பேடு கொடுக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தபின் அந்த சொற்பொழிவாளர் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் அறையில் அமர்ந்து அந்தக் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை படித்துக்கொண்டிருந்தார்.

    ஒரு பதிவினைப் பார்த்த அவருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. அந்தப் பதிவு கீழ்கண்டவாறு இருந்தது. ” இந்தப் பயிற்சியின் இடைவேளையில் கொடுக்கப்பட்ட சமோசா மிகச் சிறியதாக இருந்தது. அடுத்த முறை இதில் கவனம் செலுத்தவும்.”

    சொற்பொழிவாளருக்கு மிகுந்த அதிர்ச்சி. அந்த மூத்த அதிகாரியிடம் இதைக் காட்டி “யார் இப்படி எழுதியது?” என்று கேட்க, அவரோ “நீங்கள் கடைசியில் அமர்ந்து சிரிக்காமலேயே ஒருவர் இருந்தார் என்று சொன்னீர்களே அவர்தான்.” என்றார். தொடர்ந்து “அவர் இந்த நிறுவனத்தில் எனக்கு அடுத்தபடியாக உள்ள அதிகாரி. அவர் என்னோடு நான் தற்போது இருக்கும் இந்தப் பதவிக்கு முயற்சி செய்தார். நேர்காணலில் அவருக்குத் தேர்ச்சியாகவில்லை. நான் இந்த நிறுவனத்திற்கு வெளியே இருந்து முயற்சி செய்தவன். எனக்கு இந்தப் பதவி கிடைத்ததிலிருந்து அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் ஏதாவது தவறான அல்லது ஒத்துப்போகாத கருத்துக்களை பதிவு செய்வதே அவர் வழக்கமாகிவிட்டது. யாரைப் பார்த்தாலும் சிரிக்க மாட்டார். தோல்வி மனப்பான்மை அவரை வாட்டி வதைக்கின்றது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி மாற்ற முயற்சித்தோம். முடியவில்லை.”

    பல நேரங்களில் தோல்விகள் நம்முடைய உறவு நிலைகளை மாற்றிவிடுகின்றன. வீடுகளிலும் சரி, வேலை பார்க்கும் இடங்களிலும் சரி எப்பொழுதுமே நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம். வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே சீராகப் பார்த்து முன்னேறிச் செல்வது வாழ்க்கையின் அமைதிக்கு இன்றியமையாதது.

    தோல்விகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் தவிர, சில சிறிய நிகழ்வுகளால் வாழ்க்கையின் முடிவுக்கே வந்துவிட்டோம் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. சில நேரங்களில் நமக்கு ஏற்படும் தோல்விகளில் நாம் நம்மைவிடத் தகுதியில் குறைந்தவரையோ அல்லது நாம் செய்யும் தொழில்களில் சற்றும் அனுபவங்கள் இல்லாதவரிடமோ வேலை பார்க்க நேரிடும். அதனால் நமது திறமைகளோ அல்லது மதிப்போ குறைந்து விட்டது என்ற பொருள் கொள்ளுதல் தவறானது. “இதுவும் கடந்து போகும்” என்ற சிந்தனையை மனதில் கொண்டு தொழிலிலும், உறவுகளிலும், தொடர்புகளிலும் மேல்நோக்கான சிந்தனைகளைக் கொண்டு முன்னேற வேண்டும்.

    பல நேரங்களில் நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்களும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குச் சென்று விடுகின்றனர். இது மிகவும் துயரமானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானதும் கூட. சில நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையின் போக்கையும் வளத்தையும் வெற்றியையும் கட்டுப்படுத்துவதில்லை.

    தோல்விகளாலும் வெற்றிகளாலும் ஏற்படும் மாற்றங்களை நாம் ஒரு சீரான மனநிலையுடன் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். எவ்வாறு தோல்விகள் நம்மை பாதிக்கக்கூடாதோ அதே போல் வெற்றிகளும் நமக்கு தலைகனத்தையும் ஆணவத்தையும் ஏற்படுத்தக்கூடாது. வெற்றிகளின் மகிழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து செல்லுதல் அவசியம்.

    நாம் பக்குவப்பட்ட மனநிலையுடன் வாழப் பழகிவிட்டால் வெளிப்புற மாற்றங்களும் உள்ளுணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களும் நம்மை பாதிக்காது. ‘மனத்தளவே வாழ்வு’ என்பதை நாம் புரிந்துகொண்டால் மகிழ்வு என்றும் நிலைத்திருக்கும்.

    சீரான மனநிலையோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  •   வாழ்ந்து பார்க்கலாமே  23

    க. பாலசுப்பிரமணியன்

    துணிவுக்கு வரும் சவால்கள்

    துணிவு முன்னேற்றத்திற்கான ஒரு  அறிகுறி. துணிவு இல்லாமல்  நம்மால் எதிலும் முன்னேற்றம் காணமுடியாது. துணிவுக்கு எதிர்மறையானதே பயம். துணிவு இருளில் ஒளியைத் தேடுகிறது. பயம் ஒளியில் இருளைக் காண்கிறது. துணிவு சாதனைக்கு வழியைத் தேடுகின்றது. பயம் சாதனைப் பாதையில் உள்ள தடைக்கற்களை கண்டு தயங்கி நிற்கிறது. துணிவு தோல்வியைக்கண்டு அஞ்சுவதில்லை. பயம் வெற்றிப்பாதையில் தோல்வியின் தடயங்களைக்கண்டு மலைக்கின்றது.

    துணிவால் கிடைக்கின்ற சிறிய வெற்றிகூட அடுத்த முயற்சிக்கு வேண்டிய துணிவை நமக்கு அள்ளித்  தருகின்றது.இந்திய கடற்படையைச் சார்ந்த ஆறு பெண்மணிகள் Lt  கமாண்டர் விருத்திகா ஜோஷி அவைர்கள் தலைமயில் உலகம் முழுவதையும் ஒரு இயந்திர படகின் மூலமாக சுற்றி வருவதற்கான துணிவான முயற்சியை மேற்கொண்டார்கள், உலகின் பல்வேறு கடலலைகளின் தாக்கங்ககளையம் தாக்கல்களையும் முறியடித்துக்கொண்டு எட்டு மாதங்கள் தங்களுடைய பின்னடைவுகளுக்கு இரையாகாமல் துணிவோடு பயணித்தார்கள். எட்டு மாதங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன் அவர்கள் இந்தியா திரும்பியபோது இந்தப் பெண் வீராங்கனைகளை இந்திய துணைக்கண்டம் மற்றுமின்றி உலகத்தின் பல்வேறு நாடுகளும் புகழ்ந்தன .”

    இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரர் திரு சத்யேந்திர வர்மா தனது பள்ளியில் படிக்கும் பொழுதே வாழ்க்கையில் ஏதாவது புதிய சாதனை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார். விமானப் படையில் சேர்ந்ததும் விமானத்திலிருந்து கீழே விமானக்குடைகள் (parachute) மூலமாக குதிப்பதில் வல்லமை பெற்றார். அவருடைய சாகசங்கள் அவருடைய துணிவை மேலும் வளர்த்தன. அதன் பின் உலகின் பல உயரமான கட்டிடங்களிருந்து எவ்வாறு பாதுகாப்பான முறையில் கீழே குதிப்பது என்பதற்கான முயற்சிகளைத் துணிவுடன் மேற்கொண்டு பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டினார். இந்தியாவிலேயே இந்த சாகச விளையாட்டுக்களில் மிகத் தேர்வு பெற்றவராக விளங்கி இந்திய அரசின் பாராட்டுதல்களையும் பட்டங்களையும் இந்திய ஜனாதிபதியிடமிருந்து  பெற்றார். இளைஞர்களுக்கு அவர் கொடுத்த ஒரு செய்தியில் “துணிவு என்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது. அதைத் தொடர்ந்து நாம் ஈடுபடும் செயல்களில் நமக்கு போதிய அறிவும் திறன்களும் அந்த சாகசங்களை போதுமான தற்காப்புக்களுடனும் செய்வதற்கான திட்டங்களும் தேவை. துணிவுடன் செயல் படுவது என்பது ஒரு கண்மூடித்தனமான செயல் அல்ல

    ஆழம்தெரிந்து .காலைவிடு என்பது பழமொழி மட்டுமல்ல ஒரு சிந்திக்கவைக்கும் அறிவுரை. பலபேர்கள் தொழில்களைத் தொடங்கும் பொழுது தங்களிடம் போதுமான பணம் இருக்கின்றது என்ற ஒரே ஆணவத்தில் தொழிலில் ஈடுபட்டு அதை முறையாகச்  செயல்படுத்துவதற்கோ அல்லது நடத்துவதற்க்கோ தேவைப்படும் திறன்கள் இல்லாமல் தோல்விகளில் தங்களை இழந்து விடுகின்றார்கள். மேலும் சில பேர் தங்களிடம் அறிவும் திறனும் இருப்பதால் மட்டும் தொழில்களில் மூலதனமின்றி ஈடுபட முடியும் என்ற ஒரு குருட்டு தைரியத்தில் தங்கள் பொன்னான நாட்களை இழந்து நிற்கின்றார்கள். இந்த இரண்டு வகையினரும் துணிவைத் தவறாக எடை போட்டவர்கள். அறிவு துணிவுக்குக் கண்கள். திறன்கள் துணிவுக்குக் கைகள். ,மூலதனமும் வளங்களும் துணிவுக்குக் கால்கள். இவை அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் துணிவுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

    அறிவும் திறனும் இருந்து விருப்பமில்லாத பாதையில் துணிவாகச் செல்ல முயல்வது முட்டாள்தனம். பல நேரங்களில் பல படித்த துணிவான இளைஞர்கள் தங்களுடைய முன்னோர்கள் செய்த தொழிலை குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக விருப்பமின்றிச் செய்து பின்னடைவு ஏற்படுத்திய நிகழ்வுகள் பலவற்றைக் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். ஒரு முறை மருத்துவப் படிப்பிற்கான தேர்வுகள் நடந்துகொண்டிருந்த மையத்தில் தேர்வின் முடிவில் ஒரு மாணவனை நேர்கண்டபோது அவரிடம் எப்படி எழுதியிருக்கின்றீர்கள் என்று கேட்ட பொழுது “மிக நன்றாகத் தான் எழுதியிருக்கின்றேன். முதல் நூறு பேருக்குள் உறுதியாக வந்துவிடுவேன். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு மருத்துவத்தில் விருப்பமில்லை. என் தாய் தந்தை இருவரும் மருத்துவராக இருப்பதினால் நான் இந்தத் தொழிலில் தான் வரவேண்டும் என்று விருப்பப்படுகின்றார்கள். எனக்கோ இலக்கியத்தில் தான் விருப்பம்.” என்று சொன்னபோது சில சமுதாய பார்வைகள் நமது வருங்காலத்தோடு எவ்வாறு விளையாடிக்கொண்டிருக்கின்றன என்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

    துணிவோடு செயல் படுபவர்கள் தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். அவர்கள் மாற்றங்களுக்கு வித்திடும் பொழுதும் புதிய சிந்தனைகளை முன்வைக்கும் பொழுதும் அதற்கான ஏற்புக்கள் குறைவாகவும் எதிர்புக்கள் அதிகமாகவும் இருக்கத்தான் செய்யும். இந்த எதிர்ப்புக்களை அவர்கள் தங்கள் ஆக்க சக்திக்கு உரமாக்கிக்கொண்டு முன்னேறுவதில் தங்கள் சாதனைகளுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பார்கள். முதல் முறையாக கிராமபோனை நியூட்டன் கண்டுபிடித்த பொழுது அமெரிக்காவின் ஒரு முன்னணிப் பத்திரிகை அவரை மிகவும் சாடியது மட்டுமின்றி தரக்குறைவாக விமர்சித்தது. அவரின் கண்டுபிடுப்பு பைத்தியக்காரத்தனத்தின் எல்லை என்றும் அது அமெரிக்காவின் நாகரீகத்தின் அடிப்படைகளைச் சிதைத்து விடுமென்றும் கூறியது.. ஆனால் நியூட்டன் துணிவும் விடாமுயற்சியும் இந்த விமர்சனங்களை புறக்கணித்து தன்னுடைய ஆராய்ச்சிகளின் வெற்றிகளின் பாதைகளை வகுத்துக்கொண்டிருந்ததன.

    உங்கள் துணிவு பலபேரின் பயத்திற்குக் காரணமாக இருக்கலாம். உங்கள் துணிவு மற்றவர்களின் கருத்து ஆதிக்கங்களுக்குச் சவாலாக இருக்கலாம் உங்கள் துணிவு பழக்கத்தில் உள்ள பல நெறிமுறைகளுக்கும் செயல்களுக்கும் முடிவுரையாக இருக்கலாம். ஆனால் துணிவுதான் சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கல். அதற்கு நீங்களும் நானும் ஏன் முன்னுரை எழுதக்கூடாது ?

    துணிந்து வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • பந்தோடு பந்தாக….

    க.பாலசுப்பிரமணியன்

     

    கைப்பந்தாய் கால்பந்தாய் வண்ணமலர் கலைப்பந்தாய்

    வான்வெளியில் கோள்கள் எண்ணின்றி இருக்கையிலே

    கருப்பந்தில் எனைவைத்து வாழ்வொன்றில் விளையாட

    பூப்பந்தில் அழைத்ததேனோ யானறியேன் பூரணனே !

     

    புலன்தேடும் தேடலிலே வாழ்வெல்லாம் இரையாக்கிப்

    பார்முழுதும் பகலிரவாய் அலைந்தாலும் பயனேது

    ஊர்தேடிப் பேர்தேடி உறவுபலவும் தேடித்தேடி

    புகழ்தேடிப் பாதையிலே மாய்வதேனோ மாயவனே !

     

    கன்றாகிக் காளையாகிக் காமத்தில் வேடுவனாகிக்

    காலத்தின் தூதுவனாகிக்  கருமத்தின் சுமையாகிக்

    கற்பனையின் இரையாகிக் களைப்பின்றி விளையாடிக்

    கடைநிலையில் மூப்பினிலே முதிர்வதே னோ மூத்தவனே !

     

    விதிவிரட்ட  ஒருபக்கம் மதிதடுக்க மறுபக்கம்

    சதிராடும்  வாழ்வினிலே கதிதேடும் உயிரே

    விழிபிதுங்கி மதிமயங்கித் தன்னைத் தேடும்

    தேடலின் முடிவென்ன யானறியேன் வேதவனே !

     

    பருவங்கள் மாறிடவே பதறுகின்ற நெஞ்சமே

    உருவங்கள் மாறிடினும் உண்மைகள் உணராது

    தருணங்கள் வீணாக்கித்  தேடிட்ட திரவியத்தை

    நிலையென்று நினைத்தே தவிப்பதேனோ பராபரமே !

     

    கூவிட்ட சேவலுக்கோ கதிரவனே சொந்தமில்லை

    குயில்பாட்டு இனித்தாலும் குயிலுக்குச் சொந்தமில்லை

    நறுமணத்தைச் சுமந்தாலும் காற்றுக்குச் சொந்தமில்லை

    நானென்று அழைப்பதையே நாமறக்குமோ நாரணனே !

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  -14

    க. பாலசுப்பிரமணியன்

     

    முயற்சிகளுக்கு அப்பால் ..

     

    உழைப்பும் முயற்சியும் இருந்தும் வெற்றிப்படிகளில் ஏற முடியாதவர்களைப்  பார்த்தால் சில நேரகங்களில் நமக்கு வருத்தமாகத்தான் இருக்கின்றது. எவ்வளவு தீவிரமாகவும் கவனமாகவும் இலக்கை நோக்கிப் பயணித்த்தாலும்  வெற்றி நம் கைகளிலிருந்து நழுவிச் செல்கின்றது. உண்மைதான்… சில நேரங்களில் நம்மை விடக் குறைவான தகுதி உள்ளவர்கள் நம்மை ஒதுக்கிவிட்டு வெற்றிப்படிகளில்  ஏறிச்செல்லும் பொழுது நமது மனம் அல்லல் படுகின்றது. இந்த நேரங்களில்தான் நாம் வாழ்வின் உண்மைப் பொருளை அறிந்து அமைதியுடனும் நிதானத்துடனும் செயல்படத்  தெரிந்து கொள்ள வேண்டும்.

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி.

    சென்னையில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன். அறிவிலும் ஆற்றலிலும் நல்ல முதிர்ச்சி பெற்றவன். இருந்தாலும் தன்னுடைய வெற்றிக்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டிருந்தான். கடைசி ஆண்டுக்கு கல்லூரிப் படிப்பில் தன்னுடைய முதலாவது வகுப்பிற்கான மதிப்பெண்கள் பெறத் தவறியதால் மனமொடிந்து கல்லூரிக்கு அருகிலேயே ஒரு இடத்தில் தற்கொலை செய்து கொண்டான். இது போன்று தன்னுடைய இலக்குகள் தவறியதால் தன்னுடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டவர்கள் எத்தனையோ பேர்கள்.  தனக்கு விரும்பிய வேலை கிடைக்கவில்லை, தனக்கு விரும்பிய பெண் அல்லது கணவர் கிடைக்கவில்லை, தன்னுடைய வியாபாரத்தில் வெற்றி கிடைக்கவில்லை என்று தன்னுடைய வாழ்க்கையையே முடித்துக்கொண்டவர்களைப் பார்க்கும்பொழுது நமது மனம் நொந்து போகின்றது. அப்பொழுது நமது மனதில் எழும் கேள்வி ” ஒரு இலக்கு நமக்கு கிடைக்காவிட்டால் வாழ்க்கையே தோற்று விட்டதா? ” என்பதுதான். இந்த மாதிரி முடிவுகளை எடுப்பவர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வாழ்வையும் அதன் பொருளையும் மனதில் கொண்டு முடிவுகளை  எடுப்பவர்கள். அவர்கள், இந்த வாழ்க்கை என்பது சில இலக்குகளையையும் வெற்றிகளையும் கடந்தது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்.

    தற்பொழுதைய சூழ்நிலையில் சில இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் சில சிறிய சிறிய ஆசைகள் நிறைவேறாவிட்டால்  கூட தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றார்கள். இது வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படுகின்ற ஒரு நிலை. வாழ்க்கை ஒரு சில நிகழ்ச்சிகளால் மட்டும் நிர்ணயிக்கப் படுவது அல்ல. நிகழ்வுகளுக்கு அப்பால் நாம் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    முயற்சிகள் நமது ஆர்வங்களாலும் விருப்பங்களாலும் உந்தப்படுபவை. ஆர்வங்கள் இல்லாத ஒரு பாதையில் மற்றவர்களோடு போட்டிபோட்டுக்கொண்டோ அல்லது மற்றவர்களுடைய விருப்பங்களை முன்னுதாரணமாகக் கொண்டோ நாம் முயற்சிகள் செய்யும் பொழுது அதற்கான முழுப் பலன்கள் நிச்சயமாகக் கிடைப்பதில்லை. நம்முடைய விருப்பங்கள் உள்ள பாதைகளில் முயற்சிகள் செய்யும் பொழுது அதற்கான சரியான வளங்களும் தொலைநோக்கும் இல்லாத பொழுதோ அல்லது நம்முடைய விருப்பங்களுக்கும் உண்மையான நிலைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும் பொழுதோ நமது முயற்சிகள் வெற்றி பெறுவதிலில்லை. ஆகவே நடைமுறைக்கேற்ற சிந்தனை (Pragmatic thinking) அவசியம் தேவை. அவசரங்களும் தெளிவில்லாத முயற்சிகளும் விருப்பங்களும் மட்டும் நமது வாழ்வை நிர்ணயிப்பதில்லை. என்பதைப் புரிந்து கொண்டு தெளிவான சிந்தனையோடு வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.

    சில தினங்களுக்கு முன்பு நான் சந்தித்த ஒரு இளைஞன் ஒரு நிறுவனத்தில் தூதுவருக்கான (Messenger) வேலையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் பேச சந்தர்பம் கிடைத்த்தபொழுது அவர் ஒரு பொறியியல் துறையில் பட்டப்படிப்பு படித்தவர் என்று தெரிய வந்தது. “எனக்கு உண்மையில் அதில் எல்லாம் விருப்பம் இல்லை. எங்கள் வீட்டில் என்னை நிர்பந்தமாக அதில் சேர்த்து விட்டார்கள். என்ன செய்வது?” என்று கூறியவர் “நான் இந்த வேலையை மிகவும் விரும்புகிறேன். எனக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் விருப்பம். இதில் காலையிலும் மாலையிலும் பல இடங்களுக்குச் செல்ல வாய்ய்பு கிடைக்கும் பொழுது நான் வாழ்க்கையை ரசிக்கின்றேன்.” ஒரு விதத்தில் பார்க்கும் பொழுது அவருடைய மனப்பக்குவம் எனக்குப் பிடித்த்திருந்தது.

    “வெற்றி வேண்டுமா , போட்டுப் பாரடா எதிர்நீச்சல்” என்று பாடிய அந்த மாபெரும் கவிஞர்  தான் “கல்தரை மீது கைபோட்டு நீந்தும் மனிதா, காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?”  என்றும் பாடினார்.

    வாழ்க்கைக்கு இலக்குகள் தேவை. ஆனால் இலக்குகளால் வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது. வாழ்க்கையில் விருப்பங்கள் தேவை. ஆனால் நிறைவேறாத விருப்பங்களால் வாழ்க்கை முடிவது அல்லது தோற்பது இல்லை. வாழ்க்கை ஒரு  இனிய பயணம். இதில் பல பருவங்கள் உண்டு. வசந்தத்தில் மகிழவேண்டும். வேனில் பருவத்தில் துவளக்கூடாது. இலையுதிர் பருவத்தை இரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். மொத்தத்தில் வாழ்க்கையை புரிந்துகொள்ளவேண்டும். வெற்றி தோல்விகளுக்கப்பால் நாம் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.

    வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  (2)

    க. பாலசுப்பிரமணியன்

    வாழ்க்கை ஒரு போராட்டமோ போட்டியோ அல்ல 

    வாழ்ந்து பார்க்கலாமே!

    விமானத்திற்கு உள்ளே செல்வதற்கான பயணிகள்  வரிசையாகச் சென்றுகொண்டிருந்தார்கள். நானும் அந்த வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். எனது இருக்கைக்கு  அருகில் வந்ததும்  எனது இருக்கை அந்த வரிசையின் நடு இருக்கையாக இருந்ததால் அதற்கு முன் இருக்கையில் இருந்தவர் சற்றே எழுந்து எனக்கும் என் இருக்கைக்கு முன் இருந்தவருக்கும் உள்ளே செல்ல வழி விட வேண்டிய  நிலை இருந்தது. எங்கள் இருவரையும்  ஒரு மாதிரியாகப் பார்த்த அவர் “நீங்கள் இருவரும் நான் அமருவதற்கு முன்னாலேயே வந்திருக்கவேண்டும்” என்று சற்றே முனகினார். எனக்கு சற்று வியப்பாக  இருந்தது. கூட இருந்த நபரோ பதிலுக்கு “நாங்களும் வரிசையில் தான் வந்து கொண்டிருக்கின்றோம். சற்று பின்னே… ” என்று சொல்லி முடிப்பதற்குள் “அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் உட்காருவதற்கு முன்னே நீங்கள் வந்திருக்க வேண்டும்” என்று மீண்டும்  சொன்னார்

    அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் நாங்கள் எங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் கீழே எதையோ தேடிய அந்த நபர் கீழே விழுந்திருந்த தன்னுடைய சிறிய தொப்பியைக் கைகளால் எடுத்துக்  கொண்டே “உங்களுக்காக எழுந்ததால் தான் தொப்பி கீழே விழுந்து விட்டது” மீண்டும் ஒரு கசப்பான வார்த்தையை வெளிப்படுத்தினார். சிறிது நேரத்தில் பணிப்பெண்கள் சிற்றுணவுகளை விற்பதற்காக வந்தபொழுது  ஏதோ ஒன்றை வாங்கிய அவர், அந்த பணிப்பெண்ணிடம்  “இதற்குத் தொட்டுக்கொள்ள சட்னி எங்கே?” என்று வினவினார். பணிப்பெண்ணோ இதற்குத் தொட்டுக்கொள்ள ஒன்று கிடையாது” என்று சொல்ல, அவர் துர்வாச முனிவராகவே மாறிவிட்டார். “நீங்களெல்லாம் ஏதோ சொர்க்கத்திலிருந்து எங்களுக்குப் பணி செய்ய வந்தது போல் உங்களுக்கு நினைப்பு” என்று விரும்பத்தகாத வரையில் பேசினார். அனைவரும் அவருடைய பேச்சையும் நடவடிக்கைகளையும் பார்த்துச் சிரித்தனர். மொத்தத்தில் அவரைச் சுற்றி உள்ள எல்லா நடவடிக்கைகளிலும் அவர் போராட்டம் வெளிப்பட்டது.!

     பலபேர் இவ்வாறு வாழ்க்கையில் தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்திலும், தோல்விகளைச் சந்திக்கவும் ஏற்றுக்கொள்ளவும்  இல்லாத ஒரு மனநிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    “கற்க கசடறக் கற்பவை

    கற்றபின் நிற்க  அதற்குத் தக”  – என்பது வள்ளுவம்.

    கற்றல் என்பது ஒரு இடத்தில் நிகழக்கூடிய நிகழ்வு அல்ல.   அது ஒரு மனிதனை வாழ்கைக்குத்  தயாரிக்கும் நிகழ்வு.  நல்லவற்றையும் பயனுள்ளவைகளையும் கற்றுக்கொண்டு அவைகள் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் அவற்றை அமைத்துக்கொள்ளுவதுதான் கல்வியின்  நோக்கமே.

    சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பப் பள்ளியில் காலெடுத்து வைத்த பொழுது சொல்லிக்கொடுக்கப்பட்ட முதல் தாரக மந்திரம் “அறம் செய்ய விரும்பு ” . மனித நேயத்தை வளர்ப்பதற்கான முதல் படி கல்வியின் நோக்கமே ஒரு தனி மனிதனை சமூகத்திற்கு உபயோகமுள்ளவனாகவும் மனிதநேயம் உள்ளவனாகவும் வளர்ப்பதே.

    மாறாகத் தற்காலத்தில் இளம் வயதிலிருந்தே போட்டி மனப்பான்மையையும் ஆதிக்க எண்ணங்களையும் வளர்ப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துவிட்டது.  இதனால் இளம் வயதிலிருந்தே  போட்டிகளால் ஏற்படக்கூடிய உணர்வுகளான பொறாமை, இயலாமையினால் வரக்கூடிய தோல்வி மனப்பான்மை, தன்னம்பிக்கை இழத்தல், தன்மானப் பிரச்சனைகள்,  தாழ்வு நோக்கங்கள், பொறுமையின்மை, எரிச்சல்கள்  உணர்வுப் போராட்டங்கள் வாழ்க்கையில்  மகிழ்ச்சியை அழித்துக்கொண்டிருக்கின்றது. இந்தக் கட்டத்தில் சிறுவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியின் தேவை  அத்தியாவசியமாகின்றது.

    குழந்தை வளர்ப்பு வல்லுநர்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிக்கு சிறிய வயதில் அவர்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளை முன்னுதாரணமாக வைக்கின்றார்கள். வீடுகளில்  குழந்தைகளை மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் வளர்த்தால் அவர்கள் மனநலம் நல்ல முறையில் வளர்ந்து வளமான வாழ்விற்கு வித்தாக அமைவதாகக் கூறுகின்றார்கள் ஒரு குழந்தைக்கு முக்கியமானது தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் மிக்க அவசியம். வீடுகளில் தங்கள் நிர்பந்தங்களுக்கு நடுவிலும் சிறிது நேரம் குழந்தைகளுக்காகவே  ஒதுக்குதல் அவசியம்.

    அலைபேசியில் வர்ணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு குடும்பம் வாழ்ந்துவந்தது. அந்த குடும்பத் தலைவர் மாதத்தில் பல நாட்கள் தொழில் நிமித்தம் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஒருநாள் மாலை தன்வீட்டில் இரவு உணவுக்காக அவர் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கின்ற அவருடைய சிறிய மகன் தந்தையை அணுகி ” நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றான். உடனே அவனும் தந்தையைப் பார்த்து “உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான சம்பளம் எவ்வளவு?” எனக் கேட்டான். வியப்படைந்து தயங்கிய தந்தை, சற்று யோசித்த பின் “எனக்கு ஒரு மணி நேரத்திற்கு பத்து டாலர் கிடைக்கிறது.” என்கிறார். உடனே மகனோ “அப்பா, எனக்கு ஒரு ஐந்து டாலர் கடனாகக் கொடுக்க முடியுமா. நான் அப்புறமாகத் திருப்பித் தருகின்றேன்.” எனச் சொல்ல மீண்டும் வியந்த தந்தை தயங்கிக்கொண்டே தன்னுடை பர்சிலிருந்து ஒரு ஐந்து டாலரைக் கொடுக்கின்றார். அதை வணங்கி கொண்டு சென்ற அவர் மகன் தன்னுடைய படுக்கையறைக்குச் சென்று தலையணைக்குக் கீழே வைக்கப் பட்டிருந்த சில காசுக்களை எடுத்து எண்ணுகின்றான். அதுவும் ஒரு ஐந்து டாலர் இருக்கின்றது., இரண்டையும் சேர்த்து பத்து டாலராக எடுத்துக் கொண்டு தந்தையிடம் சென்று “அப்பா, இதோ பத்து டாலர் இருக்கின்றது, எனக்காக நீங்கள் ஒரு மணி நேரம் வேலை பார்க்கமுடியுமா?” எனக் கேட்க, அதிர்ச்சியடைந்த தந்தை அவனிடம் “உனக்காகவா? என்ன செய்ய வேண்டும்?” என்றவுடன் “நீங்கள் ஒரு மணி நேரம் என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்” என்று கேட்கின்றான். தந்தையின் கண்கள் கலங்குகின்றன.

    இது பல வீடுகளில் நடக்கும் வாழ்க்கை முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க்கை வெறும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல. வாழ்க்கையை நாம் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். “ஒரு மனிதனின் எண்ணங்களே அவன் வாழ்கையையே வடிவமைக்கின்றது” என்பது பல அறிஞர்களின் கருத்து, வாழ்க்கையைப் பற்றி நம்முடைய சிந்தனை தான் என்ன?

    (தொடருவோம் )

    Share