வாழ்ந்து பார்க்கலாமே – 37
க. பாலசுப்பிரமணி
தோல்விகளுக்கு பொதுவான காரணங்கள் என்ன?
வெற்றியும் தோல்வியும் ஒரு நிகழ்வின் இரண்டு எதிர்மறையான பரிமாணங்கள். வெற்றிவாகை சூடி மதம் பிடித்த உள்ளங்களோடு உலவுவதும் தோல்வியைக் கண்டு துவண்டு ஒதுங்குவதும் நலமான முதிர்ச்சியும் வளர்ச்சியும் அடைந்த உள்ளங்களின் வெளிப்பாடுகள் அல்ல. நிகழ்வுகள் பயணங்கள் ஆவதில்லை. பல நேரங்களில் தோல்விகள் எழுப்பும் வினாக்களிலே வெற்றிக்கான வித்துக்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவைகளை நாம் ஏன் கண்டுகொள்வதில்லை என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து கொண்டிருக்கும். எனவே தோல்விகளின் இடைப்பாடுகளில் நடுவே அமர்ந்து அலசி ஆராய்ந்து நம் தவறுகளைத் திருத்திக் கொள்வதே உண்மையான கற்றலாகும். இந்த அலசலைச் செய்யவோ அல்லது அவைகளின் உண்மைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ நாம் தயங்கக்கூடாது அல்லது வெட்கப்படக்கூடாது. வெற்றி தோல்விகளின் காலப் பரிமாணங்கள் மிகவும் குறைவானவை. அவற்றைக் கடந்து வாழ்வின் இலக்கையும் வளத்தையும் மேன்மையையும் உணர்ந்து முன்னே செல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.
தோல்விக்குத் துணை போகும்பொழுது நம்பிக்கையின் ஆணிவேர்கள் அசைக்கப் படுகின்றன. அதற்கு இடம் கொடுக்கும் பொழுது அது நம்மைப் பார்த்து சிரிப்பது மட்டுமின்றி நம்மை நாமே தரக்குறைவாக எடைபோடக் காரணமாகின்றது.” நம்முடைய வீழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது. அதன் முழுப்பொறுப்பும் நமதே.” என்றும் “நம்முடைய சம்மதமின்றி யாரும் நம்மை வீழ்த்த முடியாது ” என்றும் மனநல வல்லுநர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
iதோல்வியை நாம் ஏன் ஏற்றுக்கொள்கின்றோம்? நமது தோல்விகளுக்கான பொதுவான காரணங்கள்தான் என்ன? சிலவற்றைக் காண்போமே !
- நமது இலக்குகளில் தெளிவு இல்லாமல் இருக்கலாம்.
- இலக்கை நோக்கிச் செல்லும் பாதைகள் தவறாக இருக்கலாம்.
- நமக்கே அந்த இலக்குகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
- நம்து முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்
- நமது முயற்சியின் வேகமும் தாக்கமும் வலுவானதாக இல்லாமல் இருக்கலாம்.
- நமது திறன்கள் வெற்றியை அளிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.
7, நாம் பல நேரங்களில் நமது பார்வைகளை மற்றவரிடம் செலுத்தி அவர்களோடு ஒப்பிட்டு நமது திறன்களுக்கும் முயற்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கலாம்.
- நமது கற்றல், திறன்கள், ஆக்க சக்திகள் ஆகியவற்றை விலக்கி நாம் மற்றவர்களுடைய திறன்கள் ஆக்க சக்திகள் ஆகியவற்றை நமது பாதைகளில் இறக்குமதி செய்து முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.
- நமது செயல் கருவிகள் துருப்பிடித்தாக இருக்கலாம்.
10.முயற்சிப் பாதைகளில் நாம் புதிய கற்றல்களைத் தவிர்த்து பின்னடைந்து கொண்டிருக்கலாம்.
மேடைகளில் ஏறி பலமுறை முயன்றும் சரியாகப் பேச முடியாமல் திணறிய வின்ஸ்டன் சர்ச்சில் உலகின் ஒரு மிகச் சிறந்த பேச்சாளராக மாறியது சரித்திரம் கண்ட உண்மை. தன்னுடைய படைப்புக்கள் பல முறை திரும்பி வந்ததால் மனம் நொந்து போன ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகின் மிகப் பெரிய படைப்பாளியாக உருவானது உலகம் அறிந்ததே! தான் கண்டுபிடித்த கார்கள் விற்க முடியாமல் கடனில் அவதிப்பட்ட போர்ட் உலகின் ஒரு சிறந்த தொழிலதிபராக முன்னேறியது யாவரும் அறிந்ததே!
படிக்கும் காலத்தில் நேரத்தை வீணடித்து நம்முடைய திறன்களை சீரழித்து மற்றவர்களுடைய மகிழ்ச்சியை நமது மகிழ்ச்சியாக நினைத்து தோல்விகளை முடிவுகளாகக் கருது எத்தனை இளைஞர்கள் மனநோய்களுக்கு இரையாகி இருக்கின்றார்கள்! இது வேதனையான விசயம். அது மட்டுமல்ல நாம் மற்றவர்கள் போல் வாழ முடியவில்லையே என நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்” அவர்கள் தோல்விகளின் காரணங்ளைப் புரிந்து கொள்ளவேண்டும்.
சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சிகள் செய்தாலும் பலன் கிடைப்பதில்லை.. காற்று எதிர்நோக்கி வீசுகின்றது. நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. “எதிர்நோக்காகக் காற்று வீசும் பொழுது திறமையான மாலுமிகள் தங்கள் பாய்மரங்களின் திசைகளை மாற்றி சரி செய்து கொள்ளுகின்றார்கள்” என்பது ஒரு வழக்கு மொழி. இதன் உட்கருத்தைப் புரிந்து செயல்படுபவர்கள் பாதிப்புக்களுக்கு ஆளாவதில்லை.
பல நேரங்களில் நம்முடைய தோல்விகளுக்கு முன்னேற்றத் தடைகளுக்கும் காரணமாக இருப்பது நம்முடைய “இயலாமை மனப்போக்கு’ என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் இந்த மனப்போக்கு ஒரு உள்ளடங்கிய கற்றலாக மாறி எந்தப் புதிய முயற்சியிலும் திறனாக்கத்திலும் தடைக்கல்லாக அமைகின்றது. இதன் காரணமாக நாம் அடிக்கடி ” இது எனக்கு வராது. இதை என்னால் கற்றுக்கொள்ள முடியாது. இதற்கும் எனக்கும் ரொம்ப தூரம். இந்தக் கற்றலின பாக்கியத்தை இறைவன் எனக்கு அளிக்கவில்லை. ஒரு வயதுக்கு மேல் நாம் இந்தப் புதிய கற்றலலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த வயதில் மூளை வேலை செய்யாது ” என்ற பலப்பல காரணங்களைக் கண்டுபிடுத்து நம்மைச் சிறைப் படுத்திக்கொள்கின்றோம். இவை அத்தனையும் இயலாமை மனப்பான்மையின் அறிகுறிகள்.
தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் நமது மூளையின் திறன்களையும் ஆக்க சக்தியையும் வெளிச்சம் போட்டுக்காட்டி நமது தொடர் கற்றலின் ஆற்றல்களை விளக்குகின்றன.
தோல்விகளைக் கண்டு துவழாமலும் வெற்றிகளின் போதையில் மயங்காமலும் சீராக வாழ்ந்துபார்க்க முயற்சிக்கலாமே !
தொடரும்..