நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்தின்

பகையு முளவோ பிற.                                                

       -திருக்குறள் -304(வெகுளாமை)

புதுக் கவிதையில்…

 

தவத்தின் பலனாய்

ஒருவன் பெற்ற

முக மலர்ச்சியையும்

அக மகிழ்ச்சியையும்

அழித்துவிடும்

அவன்கொண்ட சினம்..

அச் சினத்தை மிஞ்சிய

பகையேதும்

அவனுக்கில்லை…!

குறும்பாவில்…

 

கொள்ளும் கோபம் அழித்துவிடும்                

மனிதனின் முக அக மகிழ்ச்சிகளை,  

அதைமிஞ்சிய பகையும் வேறில்லை…!

மரபுக் கவிதையில்…

தவத்தால் வந்திடும் அகமகிழ்வும்

     தொடர்ந்து சேரும் முகமகிழ்வும்,

அவற்றால் வந்திடும் முழுமகிழ்வு

     அனைத்துமே யழிந்திடும் கோபத்தாலே,

அவப்பெயர் தந்தே யழித்துவிடும்

     ஆற்றல் மிக்க சினமதுபோல்

அவனை யழிக்கும் பகையதுதான்

     அவனி மீதில் வேறிலையே…!

லிமரைக்கூ..

 

அறவோர் கொண்டிடும் கோபம்,      

மகிழ்ச்சியை யழிப்பதுடன் அவரையழிக்கும்                    

ஆற்றல்மிகு பகையாகும் சாபம்…!

கிராமிய பாணியில்…

 

கோவப்படாத கோவப்படாத

கொடுமதரும் கோவப்படாத..

தவமிருந்து சேத்துவச்ச

மொகப்பொலிவயும் மனநெறவையும்

தானே அழிச்சிப்புடும்

தடயில்லாம வருங்கோவம்..

அவன அழிச்சிட

அதமிஞ்சின கொடிய

பகயேது மில்ல..

அதால

கோவப்படாத கோவப்படாத

கொடுமதரும் கோவப்படாத…!

செண்பக ஜெகதீசன்…

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *