Tag: செ. கோட்டாளம்

  • காதலிக்க நேரமுண்டு – 2

    காதலிக்க நேரமுண்டு – 2

    செ. கோட்டாளம்

    ஒவ்வோராண்டும் நாங்களும் எங்கள் சித்திமக்களும் மாமாமார்மக்களும் யாராவது ஒருவரின் வீட்டில் ஒன்றாகச்சேர்ந்து கும்மாளமிட்டு கோடையை உல்லாசமாக கழிப்பது வழக்கம். இந்த ஆண்டு என் இளைய மாமாவின் வீட்டுக்கு செல்லும் முறையானது. ஆனால் என் தங்கை இனி போகவேண்டாம் என்று அம்மா தடுத்துவிட்டார். எனவே நான் மட்டும் கிளம்பி மாமாவீட்டுக்கு சென்றேன். நான் வண்டியிலிருந்து இறங்கியதும் வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்த என் மாமன்மகள் என்னை வரவேற்றாள். முகநிறைந்த மகிழ்ச்சியுடனும் வாய்நிறைந்த புன்னகையுடனும் ‘வாருங்கள், அத்தான்’ என்று அவள் சொன்னது என்னையும் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

    அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் இருந்ததாக உணர்ந்தேன். அவளை சில ஆண்டுகளாக நான் பார்த்ததில்லை என்பது அப்போதே என் நினைவுக்கு வந்தது. சென்ற ஆண்டு என் சித்திவீட்டுக்கு எல்லாரும் வந்திருந்தபோது அவள் வரவில்லை. ஓ, என் தங்கையை இப்போது அம்மா தடுத்துவிட்டதுபோல் என் அத்தையும் இவளை போகவேண்டாம் என்று சொல்லியிருப்பார்.

    உள்ளே ஓடிச்சென்று தன் அம்மாவிடம் நான் வந்திருப்பதை சொன்னாள். அவள் துள்ளிக்குதித்து ஓடிய விதம் என்னை என்னவோ செய்தது. அதன்பிறகே எனக்கு உறைத்தது. அவள் தாவணி போட்டிருந்தாள். அதுவரை பாவாடைச்சட்டையில் சிறுமியாகவே பார்த்த நான் அப்போதே அவளை ஒரு இளம்பெண்ணாக கண்டேன். அவள் ஓடியபோது தாவணியின் முந்தானை காற்றில் படபடத்த விதமே என்னை அவ்வாறு அலைக்கழித்தது. அந்தக்கணத்திலே நான் முந்தானைதாசனாகிவிட்டதை அப்போது உணரவில்லை.

    எல்லாரும் வந்துவிட்டபின்னும் எனக்கு மாமன்மகளுடன் பேசுவதும் அவளுடன் விளையாடுவதுமே அதிக ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அளித்ததை உணர்ந்தேன். அவளுக்கு பலவிதங்களில் வேடிக்கைகாட்டி சிரிக்கவைத்தேன். அவளும் என்னுருகில் இருப்பதை விரும்பியதாக தோன்றியது. தனிமையில் அவளுடன் பேச வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினேன். அவள் உடலழகை தொலைவிலிருந்து பார்த்து மகிழ்ந்தேன். அருகிலிருக்கும்போது தொட்டுப்பேச முயன்றேன். ஆனால் நான் அவளுடன் நெருக்கமானபோதெல்லாம் அத்தை ஏதாவது சாக்கை வைத்து அவளை அழைத்து ஏதாவது வேலைகொடுத்துவிடுவது வழக்கமானது. முறைப்பெண்ணையும் முறைப்பையனையும் நெருங்கவிடுவது ஆபத்தாக முடியலாம் என்று அவர் எண்ணுவது தெளிவாகவே எனக்கு புரிந்தது. ஆனால் அப்படி நெருங்கவே எனக்கு மிகவும் ஆசையாயிருந்தது!

    எந்தப்பெண்ணாலும் கவரப்படாத நான் இவள்மீது எப்படி கவர்ச்சியுற்றேன் என்பது எனக்கு விளங்கவில்லை. இவ்வாறிருந்தபோது ஒருநாள் திகில்பாட்டி மாமாவீட்டுக்கு வந்தது. திகில்பாட்டி என்பது என் அம்மாவின் சித்தி. பணக்கார தாத்தாவுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டது. ஒரு பையன் பிறந்தபின் சில ஆண்டுகளில் தாத்தா இறந்துவிட்டார். அந்த பையன் ஆளாகி தாத்தாவின் வியாபார மேலாண்மையையும் சொத்துப்பராமரிப்பையும் பாட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டபின் பாட்டி உல்லாசமாக ஊர்சுற்றிக்கொண்டிருந்தது. முன்னறிவிப்பில்லாமல் திடீரென்று யார்வீட்டிலாவது காரில் வந்து இறங்கும். தடால்புடாலென்று பேசி எல்லாரையும் அதட்டிவிட்டு வந்ததுபோலவே திடீரென்று சென்றுவிடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாருக்கும் அஞ்சாமல் தன் மனத்திலுள்ளதை அப்படியே போட்டு உடைத்துவிடும். பிள்ளைகளுக்கு ஏனோ இவரைப்பற்றி கொஞ்சம் அச்சம். அதனாலே நாங்கள் திகில்பாட்டி என்று பெயர்வைத்திருக்கிறோம். ஆனால் பெரியவர்கள் அது வந்தவுடனே தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலை எதுவாயினும் அப்படியே போட்டுவிட்டு திகில்பாட்டிக்கு சேவைசெய்ய போய்விடுவார்கள். திகில்பாட்டி வீட்டிலிருக்கும்போது அதனுடன் பேசுவதைத்தவிர, அதாவது அது பேசுவதை கேட்பதைத்தவிர, வேறு எந்த வேலையும் நடக்காது.

    மாமாவீட்டுக்கு திகில்பாட்டி வந்தபோது நானும் சில தம்பிமாரும் தெருவில் மட்டையாடிக்கொண்டிருந்தோம். அது காரிலிருந்து இறங்கியதும் நாங்களெல்லாம் ‘ஐ…யா, பாட்டி!’ என்று (பொய்யான) மகிழ்ச்சியுடன் சென்று வணக்கமிட்டோம். மட்டையாட்டத்துக்கு முற்றுப்புள்ளி. பாட்டி ஒவ்வொருவரையும் விசாரித்துக்கொண்டு சிலருக்கு பாராட்டுகளையும் சிலரின் அம்மாவையோ அப்பாவையோ பற்றிய ஏதாவது குறைகளையும் வாரிவழங்கிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தது. நாங்களும் பின்தொடர்ந்தோம். பாட்டி வந்திருக்கும்போது விளையாடிக்கொண்டிருந்தால் எங்கள் பெற்றோரிடமிருந்து எங்களுக்கு வசவு கிடைக்கும்.

    அத்தை பாட்டியை மிகவும் ஆர்ப்பாட்டமாக வரவேற்று அமரச்சொன்னார். மாமாவை வயலிலிருந்து விரைவாக வரும்படி அலைபேசியில் சொல்லிவிட்டு பால்வாங்கிவர ஒரு பொடியனை விரட்டினார். சமையலறையிலிருந்த மகளை அழைத்து பாட்டிக்கு வணங்கஞ்செய்யவைத்தார். அவளைப்பார்த்த பாட்டி ‘அட, பெரியவளாக வளர்ந்துவிட்டாளே! அப்படியே அவள்பெரியத்தையை உரித்துவைத்திருக்கிறாள்’ என்றது. நான் சற்றே அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தேன். அவளுக்கு பெரியத்தை என் அம்மா! அப்போதே எனக்கு பல உண்மைகள் உறைத்தன. என் மாமன்மகள் என் அம்மைவைப்போலவே இருந்தாள். இந்த உருவ ஒற்றுமை என் உள்ளுணர்வுகளில் பட்டதாலே இவள்மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறுவயதில் என் அம்மா இவளது இப்போதைய தோற்றத்திலே இருந்திருக்கவேண்டும்.

    இதை உணர்ந்ததும் எனக்கு அவள்மீதிருந்த ஆசை காதலாகவே மலரத்தொடங்கியது. சிறுவயதுள்ள அம்மாவுடன் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையெல்லாம் இப்போது நனவாகத்தொடங்கியது. இவளுடன் சிரித்துப்பேசுவதை என் அம்மா சிறுவயதினராயிருந்தபோது அவருடன் பேசுவதைப்போலவே எண்ணிக்கொண்டேன். அவளும் என்னுடன் பேசுவதை மிகவும் விரும்புவதாக தோன்றியது.

    அவளுடன் தனிமையில் பேசும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினேன். அவ்வாறான வாய்ப்பை உண்டாக்க அவளது செயல்களை கவனித்தேன். அவள் மொட்டைமாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கவரும் நேரம்பார்த்து நான் மாடிப்படியில் அமர்ந்து  ஒரு செய்தித்தாளை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாசாங்குசெய்தேன். அவள் வரும் கொலுசொலி கேட்டபோதே மகிழ்ந்தேன். ஆனால், ‘விரைவில் வாடி. மாவாட்டவேண்டும்’ என்ற அத்தையின் குரல் என் ஆசையில் நீரூற்றியது. அவள் அமைதியாக என்மீது ஒரு குறும்புப்புன்னகையை வீசிவிட்டு சென்றாள்.

    இந்த அத்தையையாவது சமாளிக்கலாம். ஆனால் என் மச்சான் இருக்கிறானே! என் எண்ணம் அவனுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தது. நான் அவளை எங்காவது ஓரங்கட்டினால் இவன் வந்து இடையில் அமர்ந்துகொண்டான். மாமன்மகளுடன் நெருங்கி அமர தயங்கி சற்று இடைவெளிவிட்டே நான் அமர்வது வழக்கம். இவன் அந்த இடைவெளியில் இருவரையும் உரசிக்கொண்டு அமர்ந்துகொள்வான். எனக்கு அவன்மீது எரிச்சலாக வந்தது. ‘இரு, இரு. உனக்கு இருக்குடா! என்றைக்காவது ஒருநாள் நான் இவளையே கட்டிக்கொள்வேன். அன்றைக்கு உன்னை வெளித்தள்ளி இவளை உள்வைத்து கதவை தாழிட்டுக்கொள்கிறேன்’ என்று மனத்துள் கருவிக்கொண்டேன்.

    Share
  • காதலிக்க நேரமுண்டு (சிறுகதை)

    காதலிக்க நேரமுண்டு (சிறுகதை)

    செ. கோட்டாளம்

    பேருந்து வந்தது. ஏறிக்கொண்டோம். அவன் நேராக ஒரு அழகான பெண்ணருகில் போய் நின்றுகொண்டான். பேருந்து நகர நகர அவள்மீது சரிந்து உரசத்தொடங்கினான். அவள் திரும்பிப்பார்த்து முறைத்தாலும் அவன் கவலைப்படவில்லை. அவள் இறங்கியதும் வேறொருத்தியின் அருகில் நின்று தன் வேலையை தொடர்ந்தான்.

    எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. நான் அவனுக்கு நண்பன் என்று காட்டிக்கொள்ளவே எனக்கு வெட்கமாயிருந்தது. சற்று விலகி வேறெங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். இருக்கை கிடைத்ததும் அமர்ந்தேன். அவனருகில் இருக்கை கிடைத்தாலும் வேறு யாரையோ அமரவிட்டு அவன் அவளருகிலே நின்றுகொண்டான்.

    பேருந்திலிருந்து நாங்கள் இறங்கியதும், ‘என்னடா, இப்படி மோசமாக நடந்துகொள்கிறாய்? அவள் வைதாளே, அதுவும் உனக்கு உறைக்கவில்லையா?’ என்றேன்.

    அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்னை கேலிசெய்தான். ’நீ என்ன ஆண்பிள்ளை? உனக்கு ஏன் இந்த ஆசைகளெல்லாம் வரவில்லை?’ என்றான்.

    அவன் இப்படிக்கேட்டதும் நான் வாயடைத்துப்போனேன். ஆம், மற்ற இளம்பையன்களுக்கு பெண்கள்மீது ஆசை ஏற்படுவதுபோல் எனக்கு வரவில்லை. சொல்லவியலாத ஒரு சிக்கல் என் மனத்தில் இருந்து வாட்டியது. நண்பனுக்கு ஏதோ விடையளித்து சமாளித்துவிட்டேன். எனினும் என் மனம் அலைபாய்ந்தது.

    நல்லவேளை நான் வந்தபோது அப்பா வீட்டில் இல்லை. என்னைப்பற்றி குறைசொல்வதற்கும் கேள்விகேட்பதற்கும் திட்டுவதற்கும் ஏதாவது காரணம் அவருக்கு எப்போதும் இருக்கும். முகங்கழுவி சமையலறைக்கு சென்று அம்மாவிடம் சற்று கொஞ்சி காப்பியை வாங்கி குடித்தேன். அம்மாவுக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளையே. அம்மா மட்டும் இல்லாவிட்டால் அப்பா என்னை எப்போதோ கொன்று தின்றிருப்பார்.

    என் தங்கை வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தாள். அருகில் சென்று பார்த்து தவறுகளை சுட்டியும் திட்டியும் அண்ணனின் ஆதிக்கத்தை நிலைநாட்டினேன். எனக்கு சிறுவயதில் அம்மாவே பாடஞ்சொல்லிக்கொடுப்பதுண்டு. அன்னையின் மடியில் அமர்ந்து ஆனா ஆவன்னா வாசித்ததும் கூட்டல், கழித்தல், இன்ன பிற கணக்குகளை போட்டதும் என்றுமே இனிக்கும் நினைவுகள். அதனாலே எனக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

    உயர்நிலைப்பள்ளியிலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை வாங்கியபோது அம்மாவிடமே காட்டி மகிழ்ந்ததுண்டு. அம்மாவிடமிருந்து பாராட்டை பெறுவதில் எப்போதுமே ஒரு தனி இன்பம். அம்மா அன்புடன் உச்சந்தலையில் முத்தமிடுவதற்கு உலகில் எதுவுமே ஈடாகாது. அம்மாவை மகிழ்விப்பதற்காகவே நான் எதையும் செய்தேன். இது எல்லாருக்கும் இயல்பானதாயிருக்கலாம். எனினும் எனக்குக்கிடைத்த அம்மா ஒரு தனித்துவமான அம்மா என்பதில் எனக்கு ஐயமேயில்லை. என் அம்மாவுக்கு உலகில் யாருமே ஈடாகவியலாது.

    அம்மா எல்லாரிடமும் அன்பாக இருப்பார். என்னையும் அப்பாவையும் தங்கையையும் மிகவும் பரிவுடன் பார்த்துக்கொள்வார். சில நேரங்களில் அம்மா அப்பாவுடனும் தங்கையுடனும் சிரிப்பும் கும்மாளமுமாக பேசுவது எனக்கு பொறாமையாயிருக்கும். அம்மா எனக்கு மட்டுமே வேண்டும் என்ற ஆசை எழும். சின்னஞ்சிறு வயதில் அம்மாவை கட்டிப்பிடித்து அணைத்தது என் மனத்தில் பசுமையாக நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் நான் பெரியவனாகிவிட்டேனென்று அம்மா தடுத்துவிட்டார்.

    இப்போதும் காப்பி குடித்துக்கொண்டே அம்மாவை மறைமுகமாக பார்த்துக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாகவே எனக்கு இந்த பழக்கம் இருந்துவருகிறது. அதாவது அம்மாவே எனக்கு மிகவும் கவர்ச்சியாக தோன்றினார். வேறு எந்தப்பெண்ணும் அழகாகத்தோன்றவில்லை.

    அதே நேரத்தில் எனக்குள் ஒரு குற்றவுணர்வும் தோன்றி என் கண்களை வேறுபக்கம் திருப்பச்செய்தது. எண்ணங்களையும் திசைதிருப்ப முயன்றேன். எனக்குள் பல ஆண்டுகளாக ஒரு மனப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. என் மனத்தில் கீழ்த்தரமான எண்ணங்கள் எழுவதாக உணர்ந்தேன். ஆனால் அவற்றை மாற்ற இயலாமல் தவித்தேன்.

    சிறுவயதில் அம்மாவின் அன்புப்பேச்சும் அணைப்புமே என் மனத்துக்கு இனிமையூட்டின. பிறகு தனிமையாயிருந்தபோது அவற்றை எண்ணி மனத்துக்குள்ளே திளைத்திருப்பது வழக்கமாயிற்று. நான் வளர வளர அம்மாவின் உடலழகையும் கண்டு களிக்கத்தொடங்கினேன்.

    அம்மாவுடன் பேச்சுக்கொடுத்தபடியே காப்பியை மெதுவாக குடித்துக்கொண்டிருந்தேன். அம்மா இரவுணவுக்காக சமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நான் பின்பக்கமிருந்து வெட்கமில்லாமல் பார்த்தேன். வெட்கமில்லாவிட்டாலும் அம்மாவை அப்படி பார்ப்பதும் எண்ணுவதும் தவறு என்ற ஒரு குறுகுறுப்பு மனத்துள் இருந்துகொண்டேயிருந்தது.

    அந்த வயதில் அம்மா அவ்வளவு அழகாகவும் அன்பாகவும் கவர்ச்சியாகவும் இருந்தால் தன் இளம் வயதில் எப்படியிருந்திருப்பார் என்று எண்ணிப்பார்த்தேன். உடனே காப்பிக்குவளையை வைத்துவிட்டு நான் படிக்கப்போகிறேன் என்றும் யாரும் தொல்லை தரக்கூடாது என்றும் அறிவித்துவிட்டு என் அறைக்குள் வந்து தாழிட்டுக்கொண்டேன்.

    எனக்கு ஏன் மற்றப்பெண்களின்மீது ஆசை வராமல் அம்மாவையே திருட்டுத்தனமாக மனத்துள் எண்ணும் ஆசை வருகிறது என்பது விளங்கவில்லை. யாருக்கும் தெரிந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்! அம்மாவுக்கு தெரிந்தால்? ஐயோ, வேண்டாம். அம்மாவின் முன்னிலையில் மிகவும் நல்ல பிள்ளையாக நடித்துவந்தேன். ஒன்றுமறியாத சிறுபிள்ளையாகவே அம்மா என்னை எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றப்பையன்களைப்போல் பெண்களின்பின் நான் அலைவதில்லை என்பதில் அம்மாவுக்கு பெருமை.

    எனக்கு இருக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்கும் இருக்குமா, எனக்கு மட்டுந்தானா? எனக்கு மட்டுமாயிருந்தால் இது ஒரு மனநோயன்றோ! ஆம், நான் இயல்பானவன் அல்லேன். என்னில் ஏதோ தவறு இருக்கிறது. நான் மற்றவர்களைப்போல் இல்லை. எனக்கு ஏதோ மனக்கோளாறே. இதை யாரிடம் போய் சொல்வேன்! எங்கிருந்து உதவி பெறுவேன்! யாரிடமும் சொன்னால் வெட்கக்கேடு! கூகிளாண்டவரிடம் முறையிடுவதன்றி வேறு வழியில்லை.

    அம்மாமீது ஆசை வருவதுபற்றி கூகிளிட்டு தேடினேன். என்ன வியப்பு! கூகிளாண்டவரிடம் எல்லாவற்றுக்கும் விடை இருப்பதை நான் முன்பே அறிவேன். ஆனால் எனக்கு இருப்பது ஒரு தனிப்பட்ட நிலைமை என்று எண்ணியிருந்தேன். இது மருத்துவர்கள் நனகறிந்த ஒரு நிலைமை என்று கூகிளாண்டவர் சொன்னார். இதற்குப்பெயர் தாயீர்ப்புணர்தொகுப்பு[1] என்பதாம். அப்படியெனில் இது மற்றவர்களுக்கும் இருந்திருக்கிறது என்பதை அறிந்து சற்று நிம்மதியடைந்தேன். இதன் அறிகுறிகள் ஓரளவுக்கு எல்லாருக்கும் இருப்பது இயல்பேயாம்.

    என் நிலையிலிருக்கும் ஒரு பையன் கேட்ட கேள்விக்கு உளவிய வல்லுநரின் விடை[2]யை கண்டு சற்று ஆறுதலைடைந்தேன். உண்மையில் இந்தப்பையன் என்னைவிட மோசமான நிலையிலிருந்தான். அவன் சுவரில் ஓட்டைபோட்டு அம்மா குளிக்கும்போது பார்ப்பானாம். சீ, இப்படியும் இருக்கிறார்களே! இந்தப்பையனுக்கு உளவியலர் சொன்ன மறுமொழியின் ஒரு பகுதி: “பல பையன்கள் சிறுவயதில் தம் அம்மாமாரிடம் கவரப்படுகிறார்கள். பலர் இந்த ஈர்ப்பை அமுக்கிவிடுகிறார்கள். பருவமடைந்தபின் இது மறைந்துவிடுகிறது. சிலருக்கு வளர்ந்தபின் அம்மாவை காமக்கோணத்தில் எண்ணிப்பார்ப்பது பிடிக்காமல் போய்விடும். ஆனால் ஒரு சிலருக்கு வளர்ந்தபின்னும் இது தொடர்வது காம ஈர்ப்பின் ஒரு இயல்பான வடிவமே. அம்மாமீது காம ஈர்ப்பு ஏற்படுவது இயல்பற்றதுமன்று, எங்கும் கேள்விப்படாததுமன்று. ஆனால் தக்க நேரத்தில் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் நிலைப்பற்ற மணவுறவுகள், இப்போதைய உங்கள் நடத்தையைப்பற்றிய குற்றவுணர்வுகள் போன்ற கடும் பின்விளைவுகள் ஏற்படலாம். ஈர்ப்பு ஏற்கக்கூடியதெனினும் உங்கள் நடத்தை ஏற்கக்கூடியதன்று,” என்பது. இவ்வாறு சொல்லி சுவரின் ஓட்டையை மூடிவிடும்படி அறிவுரையையும் வழங்குகிறார். நல்லவேளை! என் எண்ணங்களெல்லாம் மனத்தில் மட்டுமே. நான் இவனைப்போல் செயலில் இறங்கவில்லை.

    கூகிளாண்டவர் மேலும் தாயீர்ப்புணர்தொகுப்பு[3] என்ற மனநோயைப்பற்றிய ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காட்டியருளினார். தாயீர்ப்பு கடுமையான மனநோயாகவும் வளரக்கூடுமாம். மேலும் தாயை தன் காதலியாகவும் தந்தையை காதலுக்கு போட்டியாகவும் எண்ணுவதால் தந்தைமீது வெறுப்பும் அச்சமும் ஏற்பட்டு அவரை கொல்ல விரும்புமளவுக்கு செல்லலாமாம். இதையெல்லாம் படித்தபோது எனக்கு சிரிப்பாக வந்தது. உலகில் எவ்வளவு விந்தையான மக்கள் இருக்கிறார்கள்!

    அதேநேரத்தில் என் தந்தைமீது என்னையறியாமல் எனக்கு ஏற்பட்ட வெறுப்புக்கும் அச்சத்துக்குமான காரணத்தை புரிந்துகொண்டேன். இதை உணர்ந்ததும் அவர் என்மீது வைத்திருந்த உண்மையான அன்பு நினைவுக்கு வந்தது. என்னையுமறியாமல் அவர்மனம் புண்படும்படி நடந்துகொண்டேனோ என்று சிந்தித்தேன். பரவாயில்லை; அப்படியே நடந்திருந்தாலும் அது அவரை பாதிக்காது. அவர் பெரியவர்; மனவலிமையுடைவர். குஞ்சு மிதித்து கோழி சேதமடையாது என்று ஒருமுறை அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

    எப்படியாயினும் எனக்கு அம்மாமீது இருந்த ஈர்ப்பு ஓரளவுக்கு இயல்பானது என்பதையும் விரைவில் மறைந்துவிடும் என்பதையும் புரிந்துகொண்டேன். அப்பாமீதுள்ள அச்சமும் சற்று தணிந்தது. அறியாமையே பல தொல்லைகளுக்கு காரணம் என்று எங்கோ படித்ததை நினைவுகொண்டேன். நம் உணர்ச்சிகளின் காரணங்களையும் இயல்புகளையும் புரிந்துகொள்வதே பல சிக்கல்களை தவிர்க்கிறது.

    [1] Oedipus complex
    [2] https://timesofindia.indiatimes.com/life-style/relationships/ask-the-expert/i-am-sexually-attracted-towards-my-mother/articleshow/65165181.cms, 21 திச, 2019 மீட்பெற்றது
    [3] https://en.wikipedia.org/wiki/Oedipus_complex, 21 திச, 2019 மீட்பெற்றது

    Share
  • மாற்றுக் கோணங்கள் (சிறுகதை)

    மாற்றுக் கோணங்கள் (சிறுகதை)

    செ. கோட்டாளம்

    வீட்டு வேலைகளெல்லாம் முடிந்துவிட்டன. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

    பிள்ளைகள் வீட்டிலிருந்தவரை ஓய்வில்லாமல் ஏதாவது வேலை இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் வளர்ந்து வெளியேறியபின் வீட்டிலும் எங்கள் வாழ்விலும் நிறைய வெற்றிடங்கள் தோன்றியதுபோலிருந்தது. அந்த வெற்றிடங்களை கணவரும் நானும் ஒருவருக்கொருவர் நிரப்ப முயன்றோம்.

    அவரருகில் வந்து அமர்ந்தேன். அவரோ படிப்பதில் கவனமாயிருந்தார். சற்றுநேரம் தொந்தரவுசெய்யாமலிருந்தேன்.

    சட்டென்று திரும்பி “என்ன?” என்று கேட்டார். நான் என்னையுமறியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்போலும். அதை உணர்ந்து சற்றே வெட்கி, “ஒன்றுமில்லை,” என்று சொல்லி வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.

    இந்த வயதிலும் அவரது கம்பீரத்தோற்றம் என்னை கவரவே செய்தது. திருமணமான புதிதில் அவர்கவனத்தை ஈர்க்க நான் செய்த குறும்புகளை நினைத்துக்கொண்டேன்.

    அவர் படித்துக்கொண்டிருந்த நூலை மேசையில் வைத்துவிட்டு, மீண்டும் என்பக்கம் திரும்பி, “என்ன சிரிப்பு?” என்றார். ஐயோ, மறுபடியும் மாட்டிக்கொண்டேன்.

    “ஒன்றுமில்லை. நம் தொடக்கநாள்களை நினைத்துக்கொண்டேன்.”

    அவர் புன்னகைத்து, “அப்படியா? என்ன நினைத்துக்கொண்டாய்?” என்றார்.

    “இப்படித்தான் நீங்கள் எதையாவது படித்துக்கொண்டிருப்பீர்கள். நான் வந்து உங்களை நோண்டுவேன்.”

    “அப்போதெல்லாம் நான் படிக்கவேண்டியது நிறைய இருந்தது. என் தொழில் அப்படி!”

    “இன்னும் படித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள்!”

    “இப்போது பொழுதுபோக்குக்காக நான் விரும்புவதை படிக்கிறேன். படிக்கவேண்டிய கட்டாயமில்லை.”

    “ஆம். இப்போதாவது நான் ஒருத்தி இருக்கிறேனே என்று திரும்பிப்பார்த்து பேசுகிறீர்கள்!”

    “முன்பு மட்டுமென்ன? நீ அருகில் வந்தால் புத்தகங்களை தூக்கியெறிந்துவிடுவேனே!”

    இருவரும் ஒரேநேரத்தில் தொடங்கி பெரிதாக சிரித்தோம். அந்த சிரிப்பில் ஏராளமான மறைபொருள்கள் பொதிந்து கிடந்தன.

    “நாம் தனியாயிருந்து எவ்வளவு கூத்தடித்திருக்கிறோம்!” என்றேன்.

    “ஆம். என் வேலை வெளியூரிலிருந்ததால் தனிமை கிடைத்தது. இது எல்லாருக்கும் கிடைப்பதில்லை.”

    “அதே தனிமை இப்போது மீண்டும் கிடைத்திருக்கிறது.”

    “அப்படியானால் இனியும் என்னை படிக்க விடமாட்டாய்?”

    “மாட்டேன்! என்னுடன் பேசுங்கள்!”

    அவர் சிரித்து, “என் தலைவிதி! எங்கு போனாலும் எனக்கு இதே தொல்லைதான்!”

    “என்ன, வேறு யாருமா?”

    “சீ, என்ன நீ? நான் கல்லூரியில் படித்தபோது என் நண்பன் வரதன் செய்த குறும்புகளை சொன்னேன்.”

    “ஆமாமாம். அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள். அவர்மீது எனக்கு பொறாமையாயிருக்கிறது.”

    அவர் வெடிச்சிரிப்பு சிரித்து, “போயும் போயும் அவன்மீதா உனக்கு பொறாமை? நீ பொறாமைப்பட எத்தனையோபேர் இருக்கிறார்கள்,” என்று என்னை சீண்டினார்.

    “யார், மாலாவா?” என்று நானும் அவரை சீண்டினேன்.

    “ஆம். அவளும் ஒருத்தி.”

    “மொத்தம் எத்தனைபேர்?”

    “எத்தனையோபேர்! அது சரி, மாலாவைப்பற்றி உனக்கு எப்படித்தெரியும்?”

    “நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள்! அவர்களை நீங்கள் காதலித்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.”

    “அதெல்லாம் வயதுக்கோளாறு; ஒரு இனம்புரியாத கவர்ச்சி! காதலென்றால் என்னவென்று நீ வந்தபிறகுதானே தெரிந்தது!”

    “உக்கும்! ஒன்றும் ஐசுவைக்கவேண்டாம்!”

    இதுபோன்ற பல பொருளற்ற உரையாடல்களுக்காக எங்களுக்கு நிறைய நேரமிருந்தது. மற்றொருமுறை எங்கள் நண்பர் மலரைப்பற்றிய உரையாடல் எழுந்தது. பாவம், அவர் அண்மையில் கணவரையிழந்த துயரத்திலிருந்து மீளாமலிருந்தார்.

    “அவர்களுக்கு கணவரே உலகம். வேறு சிந்தனை ஏதும் இல்லாமல் இருந்து பழகிவிட்டார்கள்,” என்றார் என் கணவர்.

    “ஆம். அவர் இறந்ததும் எப்படி துடித்துவிட்டார்கள்!”

    சற்றே சிந்தனையிலிருந்தபின் ஒரு பெருமூச்சை வெளியிட்டார். பிறகு சொன்னார், “இன்னும் நம் பெண்கள் தமக்கென்று ஒரு வாழ்வையும் தமக்கென்று ஒரு உலகையும் அமைத்துக்கொள்வதில்லை. கணவரும் குழந்தைகளுமே அவர்களுடைய உலகமாகிவிடுகிறது,” என்றார். அவர் படித்த நூல்களிலிருந்து எதையோ எடுத்துவிட்டார்போலும்.

    “இப்போது கொஞ்சங்கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் மலரும் அவர்கணவரும் பழங்காலத்தினர்.”

    “நாம் அவர்களைவிட மிகவும் இளையவர்கள் அல்லோம். நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.”

    “ஆம். நம் பிள்ளைகளாவது அப்படியிருக்கமாட்டார்கள் என்று நம்புவோம்,” என்றேன்.

    “இப்போது மலர் எப்படியிருக்கிறார்கள்? நீ பேசினாயா?”

    “ஆம். அன்று பேசினேன். என்னுடன் பேசுவதில் சற்று ஆறுதலடைகிறார்கள். நாமும் அடிக்கடி போய் பார்க்கவேண்டும்,” என்றேன்.

    நான் அவருக்கு நெருங்கிய தோழி. என்னுடன் எதையும் மனந்திறந்து பேசுவார். எனக்கு தன் துயரங்களை சொல்வதில் அவருக்கு ஒரு நிம்மதி!

    மற்றொருமுறை மாலாவைப்பற்றியும் வரதனைப்பற்றியும் பேச்சு எழுந்தது.

    மாலாவுக்கும் இரண்டு பிள்ளைகளாம். அவர்களும் வளர்ந்திருப்பார்கள். இவர் அவருடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொள்வதில்லை; எனினும் நண்பர்கள்மூலம் அவரைப்பற்றி தவறாமல் தெரிந்துகொள்வார். ஒருமுறை வேலன் என்ற ஒரு நண்பர் வீட்டுக்கு வந்திருந்தபோது இவர் அவரிடம் மாலாவைப்பற்றி அக்கறையுடன் விசாரித்ததில் எனக்கு இவர்மீது கோபமே வந்துவிட்டது.

    அன்று எங்கள் வீட்டுக்கு வந்தபோதே வேலனுக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது; அது எங்களுக்கு தெரியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து தம் நாற்பத்தாறாம் வயதில் இறந்துவிட்டார். இவரும் இவர்நண்பர்களும் மிகவும் துயரமடைந்தனர். வேலன் திருமணமே செய்துகொள்ளாமலிந்ததால் அந்த துயரத்தில் பங்கேற்க மனைவிமக்கள் இல்லை.

    “உங்கள் நண்பர் ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?” என்றேன்.

    “அதுதான் எனக்கும் புரியாத புதிராயிருக்கிறது. நானும் பலமுறை கேட்டுவிட்டேன். சிரித்து மழுப்பிவிட்டான். வரதனும் அப்படித்தான்.”

    இதைச்சொன்னதும் அவர்முகத்தில் ஒரு திடீர்மாற்றம் ஏற்பட்டது. பல உணர்ச்சிகள் அவரை தாக்கியதை கண்டேன்.

    “எவ்வளவு முட்டாளாயிருந்தேன்!” என்றார். அவர்கண்கள் நீர்கோத்ததைக்கண்டு நான் பதறிவிட்டேன்.

    “என்னங்க? என்ன ஆனது? திடீரென்று இப்படி ஆகிவிட்டீர்கள்!”

    “வேலனும் வரதனும் திருமணஞ்செய்துகொள்ளாமலிருந்ததன் காரணம் எனக்கு விளங்குகிறது,” என்று சொல்லி சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.

    “என்ன?” என்று கேட்டுவிட்டு அவர் பதில்சொல்ல காத்திருந்தேன்.

    மென்குரலில் நிதானமாக சொன்னார், “அவர்கள் காதலர்கள்!”

    “நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏதோ காதல் தோல்வியாயிருக்கலாம். அல்லது காதலிகளை வைத்திருந்திருக்கலாம்,” என்றேன்.

    “நான் சொல்வது உனக்கு புரியவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் காதலர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.”

    நான் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனக்கு விளங்கவில்லை. விளங்கியது; ஆனால் தடுமாறினேன். என் மூளை இரண்டுபகுதிகளாக விடுபட்டு தவறான திசையமைவில் மீண்டும் சேர்ந்துகொண்டதுபோலிருந்தது. கண்ணாடியில் பார்க்கும்போது நம் முகம் தெரியாமல் முதுகு தெரிந்தால் எப்படியிருக்கும்? அப்படி உணர்ந்தேன்.

    “அப்படியா நினைக்கிறீர்கள்?” என்றேன். வேறேதும் சொல்லத்தோன்றவில்லை. ஆனால் ஐயமில்லை. அவர்களிருவருடைய வாழ்க்கைகளையும் மாற்றுக்கோணத்தில் பார்த்தபோது எல்லாமே தெளிவானது. கோளாறு நம் கண்ணோட்டத்திலே இருந்திருக்கிறது. குருடிக்கு திடீரென்று கண்திறந்ததுபோலிருந்தது.

    இருவருமே படித்த அறிவாளிகள். சமுதாயம் மதிக்கும் பெரிய வேலைகளிலிருப்பவர்கள். வேறு காலக்கட்டமோ இடமோவாயிருந்தால் அவர்கள் தங்கள் உறவை வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இப்போதைய உலகில் அவர்களுக்கு இடமில்லாததால் மறைவில் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி வாழ்ந்திருக்கின்றனர்,

    பலநாள்களுக்குப்பிறகும் என் கணவர் துயரத்துடனே காணப்பட்டார். நான் அவரது கவனத்தை திருப்பி கலகலப்பாக்க முயன்றேன். அவர்மனத்தின் உள்ளெண்ணங்களை பகிருமாறு ஊக்கினேன்.

    “மலர் கணவரையிழந்த துயரத்தில் துடித்ததுபோலவே வரதனும் வேலனையிழந்து துடித்திருப்பான். மலருக்கு நீ இருப்பதுபோல் வரதனுக்கு நான் நெருங்கிய நண்பன். வேலன் இறந்ததும் வரதன் முதல்வேலையாக என்னிடமே பேசினான். ஆனால் நீ மலருக்கு அளித்த ஆறுதலை நான் வரதனுக்கு அளிக்கவில்லை. அவனது கவலையை நான் கற்பனையிலும் காணவில்லை. அவன் காதலனை இழந்தது மட்டுமல்லாமல் தன் துயரத்தை வெளியிடவியலாத நிலையிலும் தனியே தவித்திருப்பான்.”

    அவரை என்மீது சாய்த்துவைத்து ஆற்றுப்படுத்த முயன்றேன். சொல்வதற்கு ஏதும் கிடைக்கவில்லை. நாம் வாய்கிழியப்பேசும் இலக்கியமும் பண்பாடும் வாழ்க்கைமுறையும் விழுமியங்களும் இந்த நிலையை கையாள்வதற்கு பயிற்சியளித்திருக்கவில்லை. என்மீது சரிந்து குழந்தைபோல் அழுதுகொண்டிருந்தவரை உச்சந்தலையில் முத்தமிட்டு முதுகில் தடவினேன்.

    வரதனுக்கு இவர்மீதே முதலில் காதல் என்பதை இவர் உணரவில்லை; நான் சுட்டிக்காட்டப்போவதில்லை.


    About the Author

    J. Kottalam is retired after serving in the scientific and technological research and development fields. He was born in 1954 in Kotkai of southern Tamilnadu in India. Having received MSc from Indian Institute of Technology at Madras and PhD from Michigan State University in USA, he worked at institutions such as University of California at San Diego, Scripps Research Institute, Harvard University and Cray Research with scholars including Nobel laureate Martin Karplus. He contributed to developing numerical algorithms for simulating the structures and dynamics of macromolecules such as proteins and nucleic acids in supercomputers. His further contributions are in the fields of Computational Fluid Dynamics and Statistical Physics. Now he is engaged in developing aids necessary for bringing the scientific wealth available in English to Tamil in a planned systematic manner.

    Share