காதலிக்க நேரமுண்டு (சிறுகதை)
செ. கோட்டாளம்
பேருந்து வந்தது. ஏறிக்கொண்டோம். அவன் நேராக ஒரு அழகான பெண்ணருகில் போய் நின்றுகொண்டான். பேருந்து நகர நகர அவள்மீது சரிந்து உரசத்தொடங்கினான். அவள் திரும்பிப்பார்த்து முறைத்தாலும் அவன் கவலைப்படவில்லை. அவள் இறங்கியதும் வேறொருத்தியின் அருகில் நின்று தன் வேலையை தொடர்ந்தான்.
எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. நான் அவனுக்கு நண்பன் என்று காட்டிக்கொள்ளவே எனக்கு வெட்கமாயிருந்தது. சற்று விலகி வேறெங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். இருக்கை கிடைத்ததும் அமர்ந்தேன். அவனருகில் இருக்கை கிடைத்தாலும் வேறு யாரையோ அமரவிட்டு அவன் அவளருகிலே நின்றுகொண்டான்.
பேருந்திலிருந்து நாங்கள் இறங்கியதும், ‘என்னடா, இப்படி மோசமாக நடந்துகொள்கிறாய்? அவள் வைதாளே, அதுவும் உனக்கு உறைக்கவில்லையா?’ என்றேன்.
அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்னை கேலிசெய்தான். ’நீ என்ன ஆண்பிள்ளை? உனக்கு ஏன் இந்த ஆசைகளெல்லாம் வரவில்லை?’ என்றான்.
அவன் இப்படிக்கேட்டதும் நான் வாயடைத்துப்போனேன். ஆம், மற்ற இளம்பையன்களுக்கு பெண்கள்மீது ஆசை ஏற்படுவதுபோல் எனக்கு வரவில்லை. சொல்லவியலாத ஒரு சிக்கல் என் மனத்தில் இருந்து வாட்டியது. நண்பனுக்கு ஏதோ விடையளித்து சமாளித்துவிட்டேன். எனினும் என் மனம் அலைபாய்ந்தது.
நல்லவேளை நான் வந்தபோது அப்பா வீட்டில் இல்லை. என்னைப்பற்றி குறைசொல்வதற்கும் கேள்விகேட்பதற்கும் திட்டுவதற்கும் ஏதாவது காரணம் அவருக்கு எப்போதும் இருக்கும். முகங்கழுவி சமையலறைக்கு சென்று அம்மாவிடம் சற்று கொஞ்சி காப்பியை வாங்கி குடித்தேன். அம்மாவுக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளையே. அம்மா மட்டும் இல்லாவிட்டால் அப்பா என்னை எப்போதோ கொன்று தின்றிருப்பார்.
என் தங்கை வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தாள். அருகில் சென்று பார்த்து தவறுகளை சுட்டியும் திட்டியும் அண்ணனின் ஆதிக்கத்தை நிலைநாட்டினேன். எனக்கு சிறுவயதில் அம்மாவே பாடஞ்சொல்லிக்கொடுப்பதுண்டு. அன்னையின் மடியில் அமர்ந்து ஆனா ஆவன்னா வாசித்ததும் கூட்டல், கழித்தல், இன்ன பிற கணக்குகளை போட்டதும் என்றுமே இனிக்கும் நினைவுகள். அதனாலே எனக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
உயர்நிலைப்பள்ளியிலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை வாங்கியபோது அம்மாவிடமே காட்டி மகிழ்ந்ததுண்டு. அம்மாவிடமிருந்து பாராட்டை பெறுவதில் எப்போதுமே ஒரு தனி இன்பம். அம்மா அன்புடன் உச்சந்தலையில் முத்தமிடுவதற்கு உலகில் எதுவுமே ஈடாகாது. அம்மாவை மகிழ்விப்பதற்காகவே நான் எதையும் செய்தேன். இது எல்லாருக்கும் இயல்பானதாயிருக்கலாம். எனினும் எனக்குக்கிடைத்த அம்மா ஒரு தனித்துவமான அம்மா என்பதில் எனக்கு ஐயமேயில்லை. என் அம்மாவுக்கு உலகில் யாருமே ஈடாகவியலாது.
அம்மா எல்லாரிடமும் அன்பாக இருப்பார். என்னையும் அப்பாவையும் தங்கையையும் மிகவும் பரிவுடன் பார்த்துக்கொள்வார். சில நேரங்களில் அம்மா அப்பாவுடனும் தங்கையுடனும் சிரிப்பும் கும்மாளமுமாக பேசுவது எனக்கு பொறாமையாயிருக்கும். அம்மா எனக்கு மட்டுமே வேண்டும் என்ற ஆசை எழும். சின்னஞ்சிறு வயதில் அம்மாவை கட்டிப்பிடித்து அணைத்தது என் மனத்தில் பசுமையாக நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் நான் பெரியவனாகிவிட்டேனென்று அம்மா தடுத்துவிட்டார்.
இப்போதும் காப்பி குடித்துக்கொண்டே அம்மாவை மறைமுகமாக பார்த்துக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாகவே எனக்கு இந்த பழக்கம் இருந்துவருகிறது. அதாவது அம்மாவே எனக்கு மிகவும் கவர்ச்சியாக தோன்றினார். வேறு எந்தப்பெண்ணும் அழகாகத்தோன்றவில்லை.
அதே நேரத்தில் எனக்குள் ஒரு குற்றவுணர்வும் தோன்றி என் கண்களை வேறுபக்கம் திருப்பச்செய்தது. எண்ணங்களையும் திசைதிருப்ப முயன்றேன். எனக்குள் பல ஆண்டுகளாக ஒரு மனப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. என் மனத்தில் கீழ்த்தரமான எண்ணங்கள் எழுவதாக உணர்ந்தேன். ஆனால் அவற்றை மாற்ற இயலாமல் தவித்தேன்.
சிறுவயதில் அம்மாவின் அன்புப்பேச்சும் அணைப்புமே என் மனத்துக்கு இனிமையூட்டின. பிறகு தனிமையாயிருந்தபோது அவற்றை எண்ணி மனத்துக்குள்ளே திளைத்திருப்பது வழக்கமாயிற்று. நான் வளர வளர அம்மாவின் உடலழகையும் கண்டு களிக்கத்தொடங்கினேன்.
அம்மாவுடன் பேச்சுக்கொடுத்தபடியே காப்பியை மெதுவாக குடித்துக்கொண்டிருந்தேன். அம்மா இரவுணவுக்காக சமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நான் பின்பக்கமிருந்து வெட்கமில்லாமல் பார்த்தேன். வெட்கமில்லாவிட்டாலும் அம்மாவை அப்படி பார்ப்பதும் எண்ணுவதும் தவறு என்ற ஒரு குறுகுறுப்பு மனத்துள் இருந்துகொண்டேயிருந்தது.
அந்த வயதில் அம்மா அவ்வளவு அழகாகவும் அன்பாகவும் கவர்ச்சியாகவும் இருந்தால் தன் இளம் வயதில் எப்படியிருந்திருப்பார் என்று எண்ணிப்பார்த்தேன். உடனே காப்பிக்குவளையை வைத்துவிட்டு நான் படிக்கப்போகிறேன் என்றும் யாரும் தொல்லை தரக்கூடாது என்றும் அறிவித்துவிட்டு என் அறைக்குள் வந்து தாழிட்டுக்கொண்டேன்.
எனக்கு ஏன் மற்றப்பெண்களின்மீது ஆசை வராமல் அம்மாவையே திருட்டுத்தனமாக மனத்துள் எண்ணும் ஆசை வருகிறது என்பது விளங்கவில்லை. யாருக்கும் தெரிந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்! அம்மாவுக்கு தெரிந்தால்? ஐயோ, வேண்டாம். அம்மாவின் முன்னிலையில் மிகவும் நல்ல பிள்ளையாக நடித்துவந்தேன். ஒன்றுமறியாத சிறுபிள்ளையாகவே அம்மா என்னை எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றப்பையன்களைப்போல் பெண்களின்பின் நான் அலைவதில்லை என்பதில் அம்மாவுக்கு பெருமை.
எனக்கு இருக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்கும் இருக்குமா, எனக்கு மட்டுந்தானா? எனக்கு மட்டுமாயிருந்தால் இது ஒரு மனநோயன்றோ! ஆம், நான் இயல்பானவன் அல்லேன். என்னில் ஏதோ தவறு இருக்கிறது. நான் மற்றவர்களைப்போல் இல்லை. எனக்கு ஏதோ மனக்கோளாறே. இதை யாரிடம் போய் சொல்வேன்! எங்கிருந்து உதவி பெறுவேன்! யாரிடமும் சொன்னால் வெட்கக்கேடு! கூகிளாண்டவரிடம் முறையிடுவதன்றி வேறு வழியில்லை.
அம்மாமீது ஆசை வருவதுபற்றி கூகிளிட்டு தேடினேன். என்ன வியப்பு! கூகிளாண்டவரிடம் எல்லாவற்றுக்கும் விடை இருப்பதை நான் முன்பே அறிவேன். ஆனால் எனக்கு இருப்பது ஒரு தனிப்பட்ட நிலைமை என்று எண்ணியிருந்தேன். இது மருத்துவர்கள் நனகறிந்த ஒரு நிலைமை என்று கூகிளாண்டவர் சொன்னார். இதற்குப்பெயர் தாயீர்ப்புணர்தொகுப்பு[1] என்பதாம். அப்படியெனில் இது மற்றவர்களுக்கும் இருந்திருக்கிறது என்பதை அறிந்து சற்று நிம்மதியடைந்தேன். இதன் அறிகுறிகள் ஓரளவுக்கு எல்லாருக்கும் இருப்பது இயல்பேயாம்.
என் நிலையிலிருக்கும் ஒரு பையன் கேட்ட கேள்விக்கு உளவிய வல்லுநரின் விடை[2]யை கண்டு சற்று ஆறுதலைடைந்தேன். உண்மையில் இந்தப்பையன் என்னைவிட மோசமான நிலையிலிருந்தான். அவன் சுவரில் ஓட்டைபோட்டு அம்மா குளிக்கும்போது பார்ப்பானாம். சீ, இப்படியும் இருக்கிறார்களே! இந்தப்பையனுக்கு உளவியலர் சொன்ன மறுமொழியின் ஒரு பகுதி: “பல பையன்கள் சிறுவயதில் தம் அம்மாமாரிடம் கவரப்படுகிறார்கள். பலர் இந்த ஈர்ப்பை அமுக்கிவிடுகிறார்கள். பருவமடைந்தபின் இது மறைந்துவிடுகிறது. சிலருக்கு வளர்ந்தபின் அம்மாவை காமக்கோணத்தில் எண்ணிப்பார்ப்பது பிடிக்காமல் போய்விடும். ஆனால் ஒரு சிலருக்கு வளர்ந்தபின்னும் இது தொடர்வது காம ஈர்ப்பின் ஒரு இயல்பான வடிவமே. அம்மாமீது காம ஈர்ப்பு ஏற்படுவது இயல்பற்றதுமன்று, எங்கும் கேள்விப்படாததுமன்று. ஆனால் தக்க நேரத்தில் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் நிலைப்பற்ற மணவுறவுகள், இப்போதைய உங்கள் நடத்தையைப்பற்றிய குற்றவுணர்வுகள் போன்ற கடும் பின்விளைவுகள் ஏற்படலாம். ஈர்ப்பு ஏற்கக்கூடியதெனினும் உங்கள் நடத்தை ஏற்கக்கூடியதன்று,” என்பது. இவ்வாறு சொல்லி சுவரின் ஓட்டையை மூடிவிடும்படி அறிவுரையையும் வழங்குகிறார். நல்லவேளை! என் எண்ணங்களெல்லாம் மனத்தில் மட்டுமே. நான் இவனைப்போல் செயலில் இறங்கவில்லை.
கூகிளாண்டவர் மேலும் தாயீர்ப்புணர்தொகுப்பு[3] என்ற மனநோயைப்பற்றிய ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காட்டியருளினார். தாயீர்ப்பு கடுமையான மனநோயாகவும் வளரக்கூடுமாம். மேலும் தாயை தன் காதலியாகவும் தந்தையை காதலுக்கு போட்டியாகவும் எண்ணுவதால் தந்தைமீது வெறுப்பும் அச்சமும் ஏற்பட்டு அவரை கொல்ல விரும்புமளவுக்கு செல்லலாமாம். இதையெல்லாம் படித்தபோது எனக்கு சிரிப்பாக வந்தது. உலகில் எவ்வளவு விந்தையான மக்கள் இருக்கிறார்கள்!
அதேநேரத்தில் என் தந்தைமீது என்னையறியாமல் எனக்கு ஏற்பட்ட வெறுப்புக்கும் அச்சத்துக்குமான காரணத்தை புரிந்துகொண்டேன். இதை உணர்ந்ததும் அவர் என்மீது வைத்திருந்த உண்மையான அன்பு நினைவுக்கு வந்தது. என்னையுமறியாமல் அவர்மனம் புண்படும்படி நடந்துகொண்டேனோ என்று சிந்தித்தேன். பரவாயில்லை; அப்படியே நடந்திருந்தாலும் அது அவரை பாதிக்காது. அவர் பெரியவர்; மனவலிமையுடைவர். குஞ்சு மிதித்து கோழி சேதமடையாது என்று ஒருமுறை அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.
எப்படியாயினும் எனக்கு அம்மாமீது இருந்த ஈர்ப்பு ஓரளவுக்கு இயல்பானது என்பதையும் விரைவில் மறைந்துவிடும் என்பதையும் புரிந்துகொண்டேன். அப்பாமீதுள்ள அச்சமும் சற்று தணிந்தது. அறியாமையே பல தொல்லைகளுக்கு காரணம் என்று எங்கோ படித்ததை நினைவுகொண்டேன். நம் உணர்ச்சிகளின் காரணங்களையும் இயல்புகளையும் புரிந்துகொள்வதே பல சிக்கல்களை தவிர்க்கிறது.
[1] Oedipus complex
[2] https://timesofindia.indiatimes.com/life-style/relationships/ask-the-expert/i-am-sexually-attracted-towards-my-mother/articleshow/65165181.cms, 21 திச, 2019 மீட்பெற்றது
[3] https://en.wikipedia.org/wiki/Oedipus_complex, 21 திச, 2019 மீட்பெற்றது
