Tag: சேசாத்திரி சிறீதரன்

  • கல்வெட்டு சொல்லும் மெய் வரலாறு

    கல்வெட்டு சொல்லும் மெய் வரலாறு

    கல்வெட்டுகள் வெறும் கல்வெட்டுகள் அல்ல அவை உண்மையின் உரைகற்கள் ஆகும். ஏனெனில் ஓலைகளில் இடைச் செருகலைச் செய்ய முடியும் ஆனால் கல்வெட்டில் ஒருமுறை பதித்தால் அதை மாற்றவே முடியாது. அப்படி மாற்றி இடைச்செருகினால் அது தெள்ளத் தெளிவாகத்  தெரிந்துவிடும். இனி வாரும் நாமும் சில கல்வெட்டுகளை உரசிப் பார்த்து உண்மையை அறிவோம்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருவூர் வட்டம்  கருவூர் பசுபதி ஈசுவரர் கோவில் மொட்டை கோபுர வலது நுழைவாயிலில் உள்ள  9 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திரிபுவனச்  சக்கரவத்திகள் கோ நேர்மேல் கொண்டான் வெங்கால நாட்டுக் 
    2. கருவூர் ஆள் (உ)டையார் திருவாநிலை (ஆ)ளுடையார் கோயில் காணி உடைய சிவப்பிரா 
    3. மணர்க்கும்  ஆண்டார்களுக்குந் தேவரடியார் கைக்கோளர்க்கும்  வெள்ளாள(ர்)க்கு
    4. ம் உவச்ச(ர்)க்கும் ஓலை குடுத்த பரிசாவது, இவர்கள் நம்மை தின்மைகளுக்கு இரட்டை சங்கு   
    5. ஊதவும் பேரிகை கொட்டவும் தங்கள் வீடுகள் இரண்டு நிலை எடுத்துச் சாந்து இட்டுக்கொள்
    6. ளவும்  இரட்டை கதவு இட்டுக் கொள்ளவும் செங்கழுநீர் பூவால் வாசிகை தோள் இடவும் இ
    7. வர்கள் நம் சரக்குக்கு தருவதான அச்சு நாற்பதுங்  கொண்டு இவர்கள் மக்கள் செ(ய்)து
    8. கொள்வார்கள் ஆக நம் ஓலை பிடிபாடாக கொடுத்தோம் (3) ஆண்டு நாள் 2(100)8(10)7 நந்தபன்ம
    9. ன் எழுத்(து) வை(யிராத்)தராயன் எழுத்து தொண்டை(மான்  எழுத்து) காலிங்கரா(ய)ன் எழு(த்து). 

    திருவானிலை – கருவூர் சிவன் கோவில்: ஆளுடையார் – செயற்பாடுகளை நிர்வகிப்போர்; காணிஉடையார் – பரம்பரை உரிமை உடையவர்; ஆண்டார் – அடியார், பக்தர்; உவச்சர் – மத்தளம் கொட்டுவோர்; ஓலை – ஆணை ஓலை; பரிசு – விவரம்; சாந்து – சுண்ணாம்பு; இரண்டு நிலை – முன், பின் என இரு வாயில் கால்; வாசிகை தோள் – வாயில் அரண்வளை இருபுறம்: சரக்கு – பண்டாரம், கருவூலம்; அச்சு – பொற் காசு; பிடிபாடு – வழிகாட்டு நெறி, guidelines; கதவு – கதல் என்றால் பக்கவாட்டில் நகர்தல் (to slide aside), நகர்தல் அசைதல். இதை வேராகக் கொண்டு கதல் + வு = கதவு என்ற சொல் உண்டானது.

    விளக்கம்:  இக்கல்வெட்டு, கொங்குச் சோழன் கோ நேரின்மை கொண்டான் வீரராசேந்திரனின் 3ஆம் ஆட்சி ஆண்டில் 1210 இல் நாள் 287 இல் வெட்டப்பட்டுள்ளது. வெங்கால நாட்டில் அடங்கும் கருவூர் நகரை நிர்வகிப்போர், அங்கத்து சிவன் கோவிலை நிர்வகிப்போர், பரம்பரை உரிமை உடைய சிவப் பிராமணர், அடியார்கள், தேவரடியார்கள், கைக்கோளர்கள், வெள்ளாளர்கள், மங்கல இசைஞர்கள் ஆகியோருக்கு இந்த ஆணை ஓலையில் கொடுத்த சலுகை விவரம் யாதெனில், “இவர்கள் குடும்ப நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு ஊதிடவும், முரசு கொட்டவும், தமது வீடுகளில் இரண்டு நிலை வாயில் நிறுத்தவும், சுவருக்கு சுண்ணாம்பு பூசவும், வாயிலுக்கு இரண்டு கதவுகள் பொருத்தவும்  வாயில் அரண்வளையின் இரு புறமும் செங்கழுநீர்ப் பூ தொடுத்த மாலையை அணிவிக்கவும் உரிமை தரப்படுகிறது. மேலும் இவர்கள் என் கருவூலத்திற்கு ஆண்டாண்டு செலுத்துகின்ற 40 பொற்காசுகளை இனி தராமல் அதைக் கொண்டு இவர்கள் பிள்ளைகளை வளர்க்கட்டும் என்று இந்த ஆணை ஓலைப்படி பற்றி ஒழுகக் கொடுத்தோம். இது நந்தபன்மன் ஒப்புதல் எழுத்து, வயிராதராயன் எழுத்து, தொண்டைமான் எழுத்து, காலிங்கராயன் எழுத்து என்று உள்ளது.

    இப்படி சமூக நிலையை உயர்த்தும் உரிமை தரும் கல்வெட்டுகள் கொங்குப் பகுதிகளில் ஆங்காங்கே காணப்படுகின்றன.  இதன் மூலம் இந்த உரிமைகள், மக்களுக்கு இதற்கு முன்னம் மறுக்கப்படிருந்தன என்ற உண்மை விளங்குகிறது. கொங்கில் போலவே பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் 12 ஆம் நூற்றாண்டு வரை இந்த உரிமைகள் மக்களுக்கு மறுக்கப்படிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. இப்படியான உரிமைகளை  அரச குடும்பத்தவர், படைத்தலைவர்கள் ஏற்கனவே அனுபவித்து இருந்தால் மட்டுமே பின்னீடு அதே போன்று பிறரும் வாழ வகை செய்யும் எண்ணம் தோன்ற முடியும். அக்காலத்தில் ஒருவரது உடை, வீடு ஆகியவற்றை வைத்தே அவரது சாதி, சமூக நிலை எல்லார்க்கும் தெரியும்படியான நிலை தான் இருந்துள்ளது. இப்படி சமூகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவ ஆட்சி ஆண்ட அரசர்களும் படைத் தலைவர்களுமே  முழுக் காரணமாக இருந்துள்ளனர். தமக்கு என்று தனி அந்தஸ்து, கெளரவம் இருப்பதாக எண்ணிய ஆட்சியாளர்கள் இந்த வேற்றுமையை தமது ஆட்சிப் பகுதியில் நிலைப்படுத்தி இருந்துள்ளனர். இதனால் சமத்துவம் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் இந்த வரலாற்று உண்மைக்கு மாறாக இந்து மதம், சனாதன தர்மம், மனு தர்மம், பார்ப்பனியம், பார்ப்பனர் தான் எல்லா சமூக ஏற்றத் தாழ்விற்கும் காரணம் என்று பொய் பரப்புரை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பொய்யை இக்கல்வெட்டு, சுக்கு நூறாக உடைக்கின்றது.

    பார்வை நூல்: A R no  136 of 1905 no 137. பக்கம் 173 & 174 of South Indian Inscriptions,  Vol  39

    வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜா வட்டம்  குடிமல்லூர்  பூமீசுவரர் கோவிலின் நடுக் கோவில் வட சுவரில் உள்ள  11 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திருபுவனச்  சக்கரவத்தி ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு  12 பன்னிரண்டாவது மேஷ  நாயற்றுப் பூர்வ பக்ஷத்து சதுத் தேசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற அவிடத்து நாள் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூர் கோட்டத்து கலவைப்பற்று கரைவழி  
    2. வல்லியூர் உடையார் கிடாரங்கொண்ட சோளீசுரமுடைய நாயினார் கோயில் கெங்கைகொண்ட சோழன் திருக்காவணத்து கலவைப்பற்று  ஆந்திநாடு அத்திப்பற்று முறுகன்மங்கலப்பற்று  நாட்டாரும் அகம்படியாருமான மற்றும் வலங்கைக்கடைத்த சாதியுள்ளாரும் இடங்கைக்கடைத்த சா
    3. தி(யிலுள்ளாரும்) நிறைவற நிறைந்து குறைவறக் கூடியிருந்து  எங்களிலிசைந்து  _ _ _ நாயனாற்கு  உபய நிச்சயித்துக் குடுத்தபடி  இராசத் துரோகியுமாய் நாட்டுத் துரோகியுமான  (கொல்லத்) தரையனை கொல்வதாக நாடாகக் குவிந்து வருகையில் இவன் 
    4. இன்னாயனார் திருக்கோயில் திருமலையில் மேலேறியிருக்கையி லிவநைக் கொல்லுமளவுக்குத்  திருமலையை (இறக்கி) கொல்ல வேண்டுமென்று சொல்லுகையில். இக்கோ(யி)ல் மாகேசுரர், தானத்தார், கவரிப்பிணா பொற்கோயிற்  கைக்கோளரும் 
    5. திருமலையை இறக்கவொண்ணாதென்று சொல்லுகையில் திருமலை(யிறக்கி) கொன்றால்த்  திருமலைகு சென்றாலே இழிந்து வெள்ளியிலே புரிக்  கட்டவும் பூசைக்கு _ _ _ 
    6.  (ணக்க) நாங்கள் வைத்த உபையஞ் சந்திராதித்த வரையு நடத்தக் கடவதென்று  சம்மதித்து அறுதி பண்ணிக்  குடுத்தபடி ஆண்டொன்று(க்கு  வேலி) ஒன்றுக்கு  கலநெல்லு அரைப்பணமும் புஞ்செப்பற்றுக்கு ஏர் ஒன்றுக்குக் கல(தானியம்)  
    7. யெறு சாத்திறங்கு சாத்து பாக்கு மிளகு பொதிக்கு பொதிஒன்றுக்கு ஒரு பணமு முப்புப்பொதிக்கு எள்பொதிக்கு பொதிஒன்றுக்கு  அரைப்பணமு _ _ _  நெல்லு  _ _  _ _ கால்ப்  பணமு _ _ _   ஒன்றுக்கு _ _ _ (சால்)தறி ஒன்றுக்கொரு பணமு வாணிகர் செக்கு வாணிகர் (செ)
    8. கொள்ளக் கடவதாகவும். இப்படி சம்மதித்து இந்த உபையஞ்  சந்திராதித்த வரை நடத்திக் குடுக்க  _ _ _ 
    9. டுத் துரோகியுமான  கொல்லத் தரையனைக் கொல்ல திருமலை  இறக்கி யிவனையுங் கொன்று இந்த _ _ _ 
    10. மெடுத்துத் தண்டிக் கொள்ளும்படிக்கு உடையார் கிடாரங்கொண்ட சோளீசுரமுடைய நாயனார்  
    11. _ _ உருத்திர ஸ்ரீ  மாயேசுரர் ஸ்ரீ காரியஞ் _ _ _ (த்தாரும்)  கவரிபிணா பொற்கோயில் கைக்கோளர்க்கும்  ஸ்ரீ வீரபத்திரர்க்கும் இப்படி (ச)ம்மதித்து  

    நாயிற்று – ஓரை, ராசி; நாட்டார் – ஊரவர், அடைத்த – அடங்கிய; உபயம் நிச்சயித்து – கோவிலுக்குக் கொடை உறுதி ஆக்கி; நாடாக குவிந்து – ஊரே கூடி, திருமலை – போர்த்திய விமான கவசம்; இறக்கி – நீக்கி, கலைத்து; கவரிப்பிணா – கவிழ்த்துக் கட்டிய; இழிந்து – அவிழ்ந்து, சேதம், damage; புரி – முறுக்கிய கயிறு, twine; தண்டி – திரட்டு, வசூலி, collect.

    விளக்கம்:  இக்கல்வெட்டு, மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 12ஆம் ஆட்சி ஆண்டு 1279இல் வெட்டப்பட்டது. மேழ ஞாயிற்று(ராசி) சந்திர மாதத்தின் முதல் பாதி 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கூடிய அவிட்ட நாண் மீன் நாளன்று செயங்கொண்ட சோழமண்டலத்தின் படுவூர் கோட்டத்தில் அடங்கிய கலவைப்பற்று கரைவழி வல்லியூர் உடைய கிடாரங்கொண்ட சோழீசுவரமுடைய இறைவன் கோயிலில் கங்கைகொண்ட சோழன் திருகாவணத்து கலவைப்பற்று, ஆந்திநாட்டு அத்திப்பற்று, முருகன் மங்கலப்பற்று ஊராரும், அகம்படியாரும், இடங்கை வலங்கையில் அடங்கிய சாதியாரும் ஒன்று கூடித் தாமே விரும்பி நன்கொடை உறுதி செய்து கொடுத்தது யாதெனில், “இராசத் துரோகியும், நாட்டுத் துரோகியுமான கொல்லத்து அரையனைக் கொல்வதற்கு நாட்டினர் திரண்டு வரும்போது அவன் இந்த இறைவன் கோவிலில் விமானத்தில் ஏறி அதை போர்த்திய கவசத்தில் ஒளிந்து கொண்டான். அப்போது அந்த போர்த்திய கவசத்தை நீக்கி அவனைப் பிடித்துக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிற போது இக்கோயில் மகேசுவரர், பொறுப்பாளர், கவித்துக் கட்டிய பொற்கவசக் கைக்கோளரும் சேர்ந்து விமானக் கவசத்தை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். மீறி விமானக் கவசத்தில் ஏறிக் கொன்றால் கவசம் சேதமாகிவிடும். அதை மீண்டும் கட்ட வேண்டும் என்றால் வெள்ளி முறுக்குக் கயிறால் தான் கட்ட முடியும் என்று கூறுவதோடு மீண்டும் அதற்குப் புதிதாகப் பூசை செய்யவேண்டும் என்று சொல்லுகின்றனர். இதற்கு இணங்க நாங்கள் செய்கின்ற நன்கொடை சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரை நடத்திச் செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டு முடிவாக அறிவித்தபடி “ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வேலி நெல்லில் இருந்து ஒரு கலநெல்லும் அரைப்பணமும் புன்செய்  நிலத்தில் இருந்து ஏர் ஒன்றுக்குக் கல தானியமும், ஏறும் பாக்கு மரத்தில் சாத்துப் பாக்கும், மிளகு பொதியில் பொதி ஒன்றுக்கு ஒரு பணமும், உப்பு பொதி, எள் பொதியில் பொதி ஒன்றுக்கு  அரைப்பணமும் (கல்வெட்டு சிதிலமடைந்து படிக்க முடியவில்லை) தறி ஒன்றுக்கு ஒரு பணமும் இப்படி சம்மதித்து இது சந்திர சூரியர் உள்ள வரை நடப்பதாகுக. இதற்கு ஈடாக இராச துரோகியும் நாட்டுத் துரோகியும் ஆன கொல்லத்தரையனைப்  பிடித்துக் கொல்வதற்கு  விமானக் கவசத்தை நீக்கிக் கொன்று, இந்த ஒப்புதல்படி பணத்தைத் திரட்டிக்கொள்ளுமாறு கிடாரம் கொண்ட சோழீசுவரமடைய இறைவன் கோவில் உருத்திரர், மாகேசுவரர், கோவில் பணியாளர், கவிழ்த்துக் கட்டிய தங்கக் கோவில் கைக்கோளருக்கும் வீரபத்திரருக்கும் இப்படியாக நடந்து போக ஒப்புக்கொண்டோம் என்று உறுதி தந்தனர்.

    கொல்லத்தரையன் நாடே சினந்து திரண்டு கொல்லும் அளவிற்கு வரிப் பணத்தைத் திரட்டி அதைக் கருவூலத்தில் செலுத்தாமல் கவர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அதனால் தான் கல்வெட்டில் இதை இராச துரோகம், நாட்டுத் துரோகம் என்று  குறிப்பிட்டுள்ளனர். ஒரு மனிதனை தம் கோவம் அடங்குவதற்காக உடனே கொல்வதென்பது தேவையற்றது. அவன் இரண்டு நாள்கள் மேலாக சோறும் தண்ணீரும் இன்றி விமானக் கவசத்திலேயே ஒளிந்து இருக்க முடியாது. அப்படி இருந்தால் பட்டினிச் சாவு தான் அல்லது அவன் தானே கீழே இறங்கிவிடுவான் அப்போது அவனை பிடித்துக் கொல்ல முடியும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதே உலக நடப்பு.

    பார்வை நூல்: A R no  136 of 1905 no 137. பக்கம் 228 & 229 of South Indian Inscriptions,  Vol  39.

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம்  குளத்தூரில்  சிதிலமடைந்த சிவன் கோவில் கிழக்கு சுவர் 3 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  இத்திருக்கற்றளியிலும் திருவக்ர மண்டபத்திலும் 
    2. எழுத்து வெட்டாதொழிக; வெட்டில் இராசத்துரோபியும் 
    3. சிவத்துரோபியு மினத்துரோபியுமாவான்  

    அக்ர மண்டபம் – முக மண்டபம்

    விளக்கம்:  இக்கல்வெட்டு சுந்தர சோழீசுவரமுடைய நாயனார் கோவிலில் 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோவில் சன்னதியிலும் முகமண்டபத்திலும் கல்வெட்டு ஏதும் வெட்டக் கூடாது அப்படி மீறி வெட்டுவோர் அரச துரோகியும், சிவத் துரோகியும் சிவபிராமணத் துரோகியும் ஆவான் என்று இனத்தைச் சுட்டி எச்சரிக்கிறது.

    இதன் மூலம் அறிய வரும் உண்மை யாதெனில் எல்லா அரச ஓலையிலும் “கல்லிலும் செப்பிலும் வெட்டிக் கொள்க” என்று கூறினாலும் அந்த எல்லா ஓலை ஆணையும் அவ்வாறு கல்லில் வெட்டப்படவில்லை, சிவாச்சாரியார் அவற்றில் எதை வெட்டுவதற்கு ஒப்புக் கொண்டாரோ அதுவே கல்வெட்டானது மற்றையவை ஓலையாகவே இருந்து அழிந்தன. மேற்படியான கொள்கையில் சில பிராமணர் இருந்தாலும் கிடைத்த மொத்த தமிழ்க் கல்வெட்டுகள் 60,000 இல் நடுகல் கல்வெட்டு, ஊர்க் கல்வெட்டு என 1,000 கல்வெட்டுகள் போக எஞ்சிய 59,000 கல்வெட்டுகள் கோவிலில் பொறிக்கப்பட, கோவில் சிவ பிராமணரும் பட்டாச்சாரிகளுமே காரணம் ஆவர். இந்த 59,000 கல்வெட்டுகள் வெட்டப் பெறாமல் கோவில் புனிதம் கெட்டுவிடும் என்று தடுத்திருந்தால் இன்று நமக்கு எந்த வரலாறும் கிடைத்திருக்காது. இதற்குத் தமிழ் உலகம் பிராமணருக்கு நன்றி கூற வேண்டும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள்  – மடலம் 34, பக்கம் 347

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  வட்டம் ஒழுகூரில் தனியார் வீட்டின் எதிரே உள்ள 7 வரி வீரர் கல்வெட்டு. 

    1. மதிரை கொண்ட கோப்பர கேசரி ப
    2. ன்மற்கி  யாண்டு பதினாறாவதில் 
    3. படுவூர் கோட்டத்து ஒழுகையூர் னாட்டு 
    4. ஒழுமூர் தேர் வய நசரரும
    5. த்தி கோசத்தாரு மவை வீரக்
    6. கைச் சிறப்பு  இவகாவலாய் இவ
    7. களே ரக்ஷிப்பார்கள். 

    ஒழி > ஒழு – ஒய்வு, leisure; வய – வழி, via; நசரர் – கண்காணிப்பாளர், உயர் பொறுப்பு அதிகாரி( நல்/ நய் > நச் – வெண்மை கருத்து வழி ஒளி, காட்சி கருத்துக்கு வேரானது. காண்க > நளி – வெள்ளைச் சாரணை. நய் > நயனம் – ஒளிபடைத்த கண். யகர சகர திரிபில் இந்த நய > நச ஆகி இந்தி, உருது  போன்ற மொழிகளில் நசர் என்று பார்வையை குறிக்கிறது. ஆக நயனம் என்பதும் தமிழ் வேர் உடையது என்பது இக்கல்வெட்டால் அறிய முடிகிறது; அத்தி  நெடுமைக் கருத்தில் யானை, மரம், மலையை குறித்தது; ஹஸ்தி என்ற சமசுகிருத சொல் அத்தி என்று ஆகவில்லை என்பதைக் கருத்தில் கொள்க. அத்தி தூய தமிழ்ச் சொல்லே. கோசத்தார் – போர்க்களத்தில் யானைக்கு ஊறு நேராமல் கவசமாக இருந்து பேணுவோர்; வீரக்கை – வீரச்செயல்

    விளக்கம்:  இக்கல்வெட்டு முதற் பராந்தக சோழனின் 16ஆம் ஆட்சி ஆண்டு 923இல் வெட்டப்பட்டது. படுவூர் கோட்டத்தில் அடங்கிய ஒழுகையூர் நாட்டின் ஒழுமூரில் மண்ணில் அழுந்தி விடாமல் தேருக்கு வழிக் காவல் போகும் பொறுப்பு அதிகாரிகளும், யானைப் பேணுவோரும் அவை வீரச்செயலின் சிறப்பு என்று கருதி அவற்றுக்குக் காவலாய் இவர்களே இருந்து காக்க வேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. இங்கு  வீரச்செயல் என்ன என்பது பற்றித் தெளிவான குறிப்பு ஏதும் இல்லை. 4-5ஆம் நூற்றாண்டு பூலாங்குறிச்சி கல்வெட்டில் அத்திகோயத்தார் என்று குறிக்கப்பட்டது இங்கே அது கோசத்தார் என்று யகர சகர திரிபாக குறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு  ஆணைக் கல்வெட்டு ஆகும். அன்றைய ஒழுமூர் தான் இன்றைய ஒழுகூர். ஒழு என்றால் ஒய்வு இதாவது, யானை, குதிரை ஆகியன போரில்லாத போது ஒய்வு கொள்ளும் இடம் என்று பொருள். இதனால் ஒழுகூரில் பராந்தகன் காலத்தில் யானைப் படைக்கும், தேர்ப் படைக்கும் இங்கே நிலை இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    பார்வை நூல்: ஆவணம் 2019, பக்கம் 12

    கல்வெட்டு தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் பெரும்பாலை பூவாலை சிவன் கோவில் அருகில் உள்ள 26 வரிக் கல்வெட்டு,

    ஸ்வஸ்தி ஸ்ரீ வீரவல்லாள தேவர் ப்ரிதிவி இரா / ச்சியம் பண்ணியருளா நின்ற யு(வ) ஸம்வத்ஸ / ரத்து சித்திரை மாஸத்து (அத) பூர்வபக்ஷத்து / சதுர்தி திங்கட்கிழமை பெற்ற நாள் (சிமிளில்) கண் / டர  ஹனுமன் செம்பொந் தியாகப்பெருமாள் ப / வழத்தூரில் இருக்கையில் தண்டியதேவர் பவழ / த்தூரிலே புது படையாக்குகையில் தம்முடைய (ச) / ( மூ) கத்தில்  தந்திரிமாரை யழைத்து வேட்(ட)டினவர்  / களுக்கு ஊர்களுங் குடுத்து  வேண்டும் வரிசைகளு / (ங்) குடுக்கக் கடவேனாகவும் என்று குறுப்பு நாட்டில்  வி / சையன் மங்கலத்து முடக்கோழி வேட்டுவரில் செங் / குன்றந் மகன் சோழங்க தேவர் வேட்டி இரண்டு / குதிரையும் பிடித்துக் களத்திலே தாமும் படுகையி / ல் தம்முடைய தம்பி செம்பொன் தியாகப் பெருமாள் / திருமுன்பே குதிரை யிரண்டு மொப்பித்து குடுத்த / வளவில் சொன்னமை பாஷைக்குத் தப்புவராயர் கண் / டர் கண்டர்  ஹனுமன் பல வடகரை வஞ்சி நாட்டில் வா / ள கைகாட்டும் பெரும்பாலி பூவாலங்  காணியாட்சி / யாகக் குடுத்தேன் மதன வம்சத்து மத்தளி வகாரா _ _  /  ர் சூரியன் தட்டுக்(கு தட்டை) சிங்காரம் மலை கலங் / கிலு மனங் கலங்காத கண்டன் சோழங்கத் / தேவனுக் குடுத்தோம். இக்காணியாட்சிக்கு அல்லல் / பேசினார் உண்டாகில் கங்கை(மாக்) கரையிலே ப்ராஹ்ம / ணனை வதஞ் செய்தான் பாவம், குரால் பசுவை  / கொன்றான் பாவம் புகக்கடவார்களாகவும்  இ கா /  ணியாட்சி குடுத்தவனை  தே _ _ 

    பிரிதிவி இராச்சியம் – மண்ணுலக அரசியம்; சிமிலில் – குடுமியில்; சமூகத்தில் – அருகில், சமீபம்; தந்திரி – படைத் தலைவன். பண்டு படைத் தலைவரே அமைச்சராகவும் இருந்தனர். வேட்டாடினவர் – போரில் விலங்குகளைப் பிடித்தோர்; வரிசை – அரசனின் பாராட்டு, மதிப்பு; ஒப்பித்து – ஒப்படைத்து; தட்டுக்கு தட்டை – அடிக்கிற அடியில்; சிங்காரம் – அழகு; காணியாட்சி – நில உரிமை.

    விளக்கம்:  இக்கல்வெட்டு, போசள வேந்தன் வீர வல்லாளனின் 41ஆம் ஆட்சி ஆண்டில் இதாவது, யுவ ஆண்டில் மண்ணுலக அரசை ஆளுகின்ற போது சித்திரை மாதம் முதல் பாதி நாலாம் நாள் திங்கட்கிழமையில் குடுமியில் கண்டர அனுமனை சூடிய அரசர் செம்பொன் தியாகப்பெருமாள் பவழத்தூரில் தங்கி இருந்த போது தண்டியத் தேவர் பவழத்தூரில் புதிய படைத்தளத்தைக் கட்டிய போது தன் அருகே படைத் தலைவர்களை அழைத்து, போர்க்களத்தில் விலங்குகளைப் பிடித்தோருக்கு ஊர்களும் அளித்துச் செய்ய வேண்டிய மதிப்பும் செய்வேன் என்று சொல்ல, அப்போது குறுப்பு நாட்டில் விசையன் மங்கலத்தை சேர்ந்த முடக்கோழி வேட்டுவரில் செங்குன்றம் மகன் சோழங்க தேவன் போர்க்களத்தில் இரண்டு குதிரைகளைப் பிடித்து அக்களத்திலேயே வீரச் சாவடைந்தான். அவன் தம்பி செம்பொன் தியாகப்பெருமாள் முன்னே அந்த இரண்டு குதிரையையும் ஒப்படைத்த போது சொன்னபடியே பேச்சு தவறாமல் கண்டர் அனுமன் வடகரை வஞ்சிநாட்டில் நீள கைகாட்டிய பெரும்பாலையில் உள்ள பூவாலை ஊரை உரிமை நிலமாக கொடுத்தான். மதன வம்சத்து மத்தளியினர் இதை அனுபவிக்கட்டும், வெய்யில் அடிக்கிற அடியில் ஒரு மலை தன் எழில் குலைந்து கலங்கினாலும் கலங்கும் ஒழிய எதற்கும்  கலங்காத கண்டன் சோழங்க தேவனுக்காகக் கொடுத்தேன். இந்த நில உரிமையைச்  செல்லாது என்று பேசுவோர் இருப்பராயின் கங்கைக் கரையில் பிராமணனைக் கொன்றவன் அடையும் பாவத்தையும் குரால் பசுவைக் கொன்றவன் அடையும் பாவத்தையும் அடைவர். இந்த நில உரிமை கொடுத்தவனை என்பதற்கு மேல் கல்வெட்டு சிதைந்துவிட்டது.

    பார்வை நூல்: ஆவணம் 33, 2022, பக்கம் 98 & 99

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் 40 வரி வணிகக் கல்வெட்டு 

    ஸ்வஸ்தி ஸ்ரீ சம / ஸ்த பு(வ)ன விக்யாத வீர /ர் வீரஸாஸன அனேக கு / ன கனாலம்க்ரித ஸ்த்ய ஸே / ஸா ஸாரி ஸாரித்ரய ஸமை / சம்புன்ன வளஞ்சிய ஸ்ரீ / மர்ஹதாரி மக்களாகிய எ / யிநாட்டு திருப்பெறு மாடப்ப / ள்ளித் தளத்தை ஞூற்றுவரோம் அ / ய்ங்குன்றத்து அய்கமநான மும் / முறி தன்மசெட்டிக்கு வீரதாவள / மாக வைத்தபடி, இவன் இருந்த ஊ / ரில் நமக்கள் வீரபெரு நிரவிமா / ரும் நாட்டு செட்டிகளும் வந்தவன / றுமெய் கண்டு சோறு உண்பதாக / வும் பணமென்றும் பாவாடை / கொங்கவாரெழுநூறும் கண்டழி / மூலபத்திரரும் ஐய்யன் போய் / களமடக்கி கீழ் மேற் காக்கை (பின்பக்கம்) / நாநாதேசியும் / கொற்றக்குடைப் படை முன் / நூறும் / யென்றும் கொள்ளப் பெறு / தார்களாகவும். இப்பரிசல்ல / து செய்வார் கெங்கை இடை / குமரியிடைப்பட மாப்ப / ட்ட பாவத்தில் படுவார். இவ / ந் சிறிய தம்பநு தமைய / நும் தொறு மீட்டுப்பட்ட / நன்மை கண்டு வைத் / தோம். இவன் பரியுடைமை / கண்டு வைத்தோம், தி / ருப்பெறு மாடப்பள்ளித் தளதை / ஞூற்றுவரோம். பதிலழிவாந் / நமில் வே / ரு வந் / ந் / பழவரி இவீர / நும் அப்பி / த் தம்பலமும்.   

    பொருள்சமஸ்த பு(வ)ன– அனைத்து உலகும்; விக்யாத –  அறிந்த;  வீரஸாஸன – வீரர்  ஆவணம்; அனேக குண கனாலம்க்ரித – எல்லா ஒழுக்கமும் நிரம்பி அழகுறுத்தும் கூட்டம்; ஸத்ய ஸேஸா ஸாரி – வாய்மை, சிறப்பு, ஒழுக்கம்; ஸாரித்ரய – ஒழுக்கம் மூன்றும்; ஸமை – பொறையுடைமை, forgiveness; சம்புன்ன –  திறமை; மர்ஹதாரி – புகழ்மிக்க; தளதை – படைக்குழு உள்ள இடம், military base; ஞூற்றுவரோம் – நூற்றுவர்; அய்கமநான –  உயர் தலைவனான ( – தலைமை, கமனம் – செலுத்தல்), high commander; மும்முறி – மூன்றுமுறை முறியடித்த; வீர தாவளமாக  – வீரர்க்குரிய ஆதரவாக, army base; வைத்தபடி – கொடுத்தபடி; நிரவிமார் – மதிப்பீட்டாளர்; அறுமெய் கண்டு – நன்மை (goodness) கண்டு; பாவாடை – மதிப்புறு ஆடை; வார் -கயிறு; கண்டழி மூலபத்திரர் – துணைநிற்கும் மூலப்படை; ஐய்யன் போய் – இமைக்கும் நேரத்தில் விரைந்து சென்று, in no time,  கண்ணை குறிக்கும் வழக்கொழிந்த தமிழ்ச் சொல் ஆனால் இன்றும் ஆங்கிலத்தில் Eye என்றே வாழ்குகிறது; களமடக்கி – வென்று போர்முடித்து; காக்கை – காப்பதற்கு; பரிசு – நற்செயல்; பரியுடைமை – இரங்குகை, பாதுகாப்பு; பதிலழி – பதிலாகச் செல், மாற்றாள், go as a substitute. பதில் தமிழல்ல என்போர் தம் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கும் கல்வெட்டு இது.

    விளக்கம்: இக்கல்வெட்டு 12 – 13 நூற்றாண்டினதாகும். எல்லா உலகும் அறிந்த வீரர்தம் வீர ஆவணமாவது பல குணம் கொண்ட கணத்தால் அணி செய்யப்பட்டு வாய்மை, சிறப்பு, நல்லொழுக்கம் என மூன்று ஒழுக்கமும் பொறைமையும்  திறமையும் அமையப்பெற்ற வளஞ்சிய வணிகக் குழு என்று வணிகரின் மெய்க்கீர்த்தியைச் சொல்கிறது. “வளஞ்சிய வணிகக் குழுவின் புகழ்மிக்க மக்களாகிய எயிநாட்டு திருப்பெறு மாடப்பள்ளிப் படைத்தளத்தைச் சேர்ந்த நூற்றுவர் நாம் ஒன்றுகூடி ஐங்குன்றத்துப் படைத்தலைவரும் மும்முறை எதிரிகளின் தாக்குதலை முறியடித்தவரும் ஆன தன்மசெட்டிக்கு வீரர்க்குரிய ஆதரவை  (support) கொடுத்தபடியாவது, இவன் இருந்த ஊரில் நம் மக்களான வீரபெரு மதிப்பீட்டாளரும் நாட்டுச் செட்டிகளும் வருபவரின் நன்மை கருதி சோறு உண்பதற்குப் பணமாகவும் மதிப்புறு ஆடையாகவும் கொங்குநாட்டின் கயிறு எழுநூறும் கொடுத்தனர். துணைநிற்கும் மூலப் படையினர்  விரைந்து போய் போர் முடித்து, கிழக்கு மேற்கு திசையைக் காப்பதற்கு  நாநாதேசி குழு வணிகரும் அரசகுடையும், படை முந்நூறு எண்ணிக்கையையும் கொள்ளப் பெறுவார்களாக” என்று ஏற்பாடு செய்கின்றனர்.  இந்த நற்செயலை இல்லாமல் அழிப்பவர் கங்கை இடை குமரியிடை வாழ்பவர் செய்த பாவத்தில் வீழ்வார். திருப்பெறு மாடப்பள்ளித் படைத்தள நூற்றுவராகிய நாம் “இவனுடைய சிறிய தம்பியும்,  தமையனும் கால்நடை மீட்டு இறந்த நற்செயல் கண்டு இதை கொடுத்தோம்”. “இவனுடைய பெருமை கண்டு இதை கொடுத்தோம்”.  இறுதி வரி விளங்கவில்லை. (பதிலழிவான் என்றால் மாற்றாள் (substitute) என்று கொண்டால் நம்மிடையே மாற்றாளுக்கு உரிய பழைய கட்டு (வரி) போலவே இவ்வீரனுக்கும் அவ்வழியாக கிட்டட்டும் ( தம்பலம்).

    வணிகர் நெடுவழியில் தம்மை ஆரலைக் கள்வர் தாக்கி அழித்து தம் பொருளை கவர்ந்து செல்லா வண்ணம் தமக்குத் தாமே ஒரு படை கட்டிப் போரிட்டுத்  தம்மையும் தம்பொருளையும் பேணிக் காத்துக்கொண்டனர். அவ்வாறு ஒரு நிகழ்வில் வளஞ்சிய வணிகர் தன்ம செட்டியின் போர்ச் செயலை கேள்வியுற்று அவனைப் பாராட்டி அவனுக்கு மேலும் படை ஆதரவைக் கூட்டி வழங்கினர் என்பதே இக்கல்வெட்டு செய்தி.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 30, 2019

    கேரள மாநிலம்  பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள பட்டணம்புதூரில் காணப்படும் 20 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு. 

    ஸ்வஸ்தி ஸ்ரீ ஸமஸ்த புவ / நாச்ரய பஞ்ச சத வீர / சாஸனஞ் செய்த பரிசாவ / து நாடாழ்வானை எறிஞ்ச கொங்க ம / ண்டலமுய்யக் கொண்டானும் நாடாழ் / வானை எறிஞ்ச அய்யபொழில் நம் / பியும் (பசும்பை நுவக்கியை) எறி / ஞ்ச எழுமடி கொங்கரிளஞ் சிங் / கமும் களக்காடுடையானை எறிஞ்ச  / அஞ்ஞூற்றுவ பேரரையனும் வீரர்கள் ம / _ _ _ பொன் வில்லார் புத்திரனும் / திகை மாணிக்கச் செட்டியும் அறை / ஞாட்டுப் பொரத்தி  நிரந்த வீ / ர பெரு நிரவித் திகை ஆயிரத்த / ஞ்ஞூறவரோம் பொரத்திக்குந் தான் / றிக்கும் வீரப்பட்டனஞ் செய்து / குடுத்தோம். பணிசெய் மக்களானா / ர்  மெய்க்கண்டு சோறுண்க.  பண்டை கோ / ரவி வீரமாணிக்க செ(ட்)டி _ _ _ / (ளச்சரப் பேரையே) 

    ஆஸ்ரய – அடைக்கலம், ஆதரவு, புகலிடம்; பரிசு – விவரம்; எறிஞ்ச – வென்ற, கொன்ற; திகை – திசை; பொரத்தி – பொறுமை, ஓய்வு, தங்கில், rest house < பிற சொற்களில் இருந்து பெற்ற ஊகம் தான் இதற்கு நேரடிப் பொருள் இல்லை; நிரந்த – நிறைந்த; வீரபெரு – வீரம்மிகுந்த; தான்றி – எல்லை வேலி; வீர பட்டணம் – வீரர் தங்கும் சிற்றூர்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு 10ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. சேர அரசர் ரவி பெயர் இறுதியில் குறிக்கப்படுவது இதற்குச் சான்று. உலகுக்கெல்லாம் புகலிடமான ஐந்நூற்றுவ வணிகர் குழு தம் வீர ஆவணத்தில் செய்திட்ட விவரம் யாதெனில், “நாடாழ்வானை வென்ற கொங்க மண்டலம் உய்யக் கொண்டானும், நாடாழ்வானை வென்ற ஐயம்பொழில் நம்பியும், பசும்பை நுவக்கியை வென்ற ஏழு மடங்கு கொங்கர் இளஞ் சிங்கமும், களக்காடுடையானை வென்ற ஐநூற்றுவ பேரரையனும், _ _ _ பொன் வில்லார் மகனும், திசை மாணிக்கச் செட்டியும் அறை நாட்டு பொறுமை நிறைந்த வீரம் மிகுந்த நிரவியைச் சேர்ந்த திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரும் சேர்ந்து ஓய்வு இல்லத்திற்கும் அதன் எல்லை வேலிக்கும் அடங்கிய வீர பட்டணம் (குடியிருப்பு) செய்து கொடுத்தனர். இங்குப் பணி செய்யும் மக்கள் உண்மையை அறிந்து பின் சோறு இட வேண்டும். பண்டு அரசன் ரவி (பாஸ்கர ரவி அல்லது தாணு ரவி) வீர மாணிக்கச் செட்டிக்கு என்பதோடு கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளது.

    இன்றைய பட்டணம் புதூரே பண்டைய நிரவி ஆகும். இங்கு தான் போரில்லாத காலத்தில் அல்லது நோயுற்ற காலத்தில் ஓய்வு கொள்ள வீர வணிகருக்கு என்று தங்கில் அமைந்தனர் திசை ஆயிரத்து ஐநூற்று வணிகர். பிராமணர் தான் தமிழில் சமசுகிருதம் திணித்தனர் என்பதை பொய்யாகும் விதமாக வணிகரும் தமது மெய்க்கீர்த்தியை சமசுகிருதத்தில் எழுதி வைத்துள்ளனர் என்பது அதை பொய்யாக்குகிறது.  மனுஸ்ம்ரிதி சத்திரியருக்குத் தான் போர்த் தொழிலை உரித்தாக்குகிறது ஆனால் நாடோடும் வணிகரும் போர்த் தொழில் புரிந்தது மனுஸ்ம்ரிதி மீறல் அன்றோ? இது மநுஸ்மிருதி நடைமுறையில் இல்லாத ஏட்டுச் சுரைக்காய் என்பதை உணர்த்துகிறது.

    பார்வை நூல்: ஆவணம் 33, 2022, பக்கம் 9 & 10

    திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் நல்லமனார்கோட்டை என்னும் ஊரிலிருந்து வலப்புறமாக இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெரும்புள்ளி என்னும் ஒரு சிறிய கிராமம். அங்குள்ள கன்னிமார் கோவிலுக்குச் செல்லும் வழியில் வயல்வெளிகளினூடே இரண்டு நடுகற்கள் உள்ளன. அதில் ஒரு நடுகல் இரண்டாக உடைந்த நிலையில் கல்வெட்டுகளைத் தாங்கியுள்ளது. இதன் காலம் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு பத்தாம் நூற்றாண்டாக கொள்கின்றனர்.

    1.ஸ்ரீ அரையரெள்

    2 ளி கோய்த்திர

    3 னான மதுரா

    4 ந்தகப் பள்

    5 ளி வேளான் ப

    6 ள்ளி நாட்டு நி

    7 ரை போகயில்

    8.பட்டான்

    விளக்கம்: அரையர் எள்ளியின் கோத்திரத்தைச் சேர்ந்த மதுராந்தகப் பள்ளி வேளாண் என்பவன் பள்ளி நாட்டின் நிரைகள் கொள்ளை போகையில் அதை மறித்து வீரச் சாவடைந்தான் என்பது கல்வெட்டின் பொருள். பல்லவர் ஆட்சிக் காலத்தில் வேள் என்ற சங்க காலச்சொல் அரையர் என்ற மாற்றுச் சொல்லால் கைவிடப்பட்டாலும் அச்சொல் வேளுடைய ஆள்  என்ற பொருளில் வேளாண் என்ற மற்றொரு சொல்லால் அழியாமல் தொடர்ந்து புழங்கி வந்துள்ளது. வேளாளன் = வேள்  + ஆள் + அன். வேளாண் என்போர் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் பங்காளிகள், சொந்தக்காரர்கள் என்பதையே இக்கோத்திரக் குறிப்பு குறிக்கின்றது. வேள், அரையன் ஆகிய சொற்கள் duke என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானவை. வேந்தனுக்கு (emperor) படைத் தளபதியாக மன்னன் (king) இருந்தான். மன்னனுக்கு படைத் தளபதியாக அரையன்/வேள் (duke) இருந்தான். இந்த அரையனுக்குப் படைத் தளபதியாக கிழான் (knight) இருந்தான். ஆக இந்த படைத் தளபதிகள் அமைத்த சாதிகள் தான் ஆண்ட பரம்பரை என்னும் இன்றைய நிலவுடைமைச் சாதிகள்.

    இந்த வேளாண்களே பண்டு நிலவிற்பின் போது உடன் இருந்து கண்காணித்து கையெழுத்திட்டுள்ளனர் என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.  இதே வேளாண்களிடம் தான் நீதி வழங்கும் நியாயத்தர் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வேளாண்கள் தான் சில இடங்களில் வெள்ளாளராகவும், சில இடங்களில் பள்ளிகளாகவும் சில இடங்களில் அம்பலக்காரர் என்றும் உள்ளனர்.

    ஆவணம் , இதழ் – 18,  2007, பக். 21 மற்றும் கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40.

    Share
  • கூவம் தந்த செழுச்சி அல்லிக்கேணி

    சேசாத்திரி சிறீதரன்

     

    மயிலைமா வல்லிக் கேணியான்

    திவ்.இயற்.நான்மு.35

    குரவமே கமழும் குளிர் பொழிலூடு

    குயிலொடு மயில்கள் நின்று ஆல

    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்

    திருவல்லிக்கேணிக் கண்டேனே (1073)

    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்

    திருவல்லிக்கேணிக் கண்டேனே (1075)

    – திருமங்கை ஆழ்வார்

    http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3792

    குரவம் – common bottle flower

    குரவ மலர் மணம் வீசும் குளிர்ந்த பொழில்களும் கதிரவனின் ஒளிக்கதிர் படா இருண்ட சோலைகளில் குயிலும் மயிலும் திரிகின்ற மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி என அதன் இயல்பைப் புகழ்கிறார் திருமங்கை ஆழ்வார். மயிலையும் அல்லிக்கேணியும் அக்கால் ஒன்றுபட்ட பகுதியாகவே இருந்துள்ளன. மயிலை இன்னும் சிறப்புற்று இருந்ததாலேயே மயிலையின் திருவல்லிக்கேணி எனப்பட்டது போலும். இவ்விரு நிலத்தொகுதியும் செழுச்சியுற்றது (fertile) என்னவோ கூவம் ஆற்று ஓட்டத்தின் நீர்ப்பாய்ச்சனத்தினால் தான் என்பது யாவரும் உணரவேண்டிய உண்மை.

    திருவல்லிக்கேணி, வேங்கட கிருஷ்ணன் எனப் பெயரிய பார்த்தசாரதி பெருமாளின் கோவில் கொண்ட ஊர். இது ஆழ்வார்கள் பாடல் பெற்ற,108 வைணவ தலங்களுள் ஒன்று. இங்கத்து கோவிலின் கருவறை முற்றத்தில் உள்ள தந்திவர்மப் பல்லவனின் 12 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.808) கல்வெட்டு இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கு சான்று. மேலும் கருவறை முதல் முற்றம் வரை உள்ள பாறை கருங்கல் வகை சார்ந்தது . கருவறையின் புறச்சுவர் மஞ்சள் நிறப் பாறை வகையினது என்பது இக்கோவில் பின்னீடு சோழர்களால் கட்டப்பட்டது என்பதற்கு சான்றாகிறது. இக்கோவில் அக்காலத்தே அந்த அளவிற்கே சிறிதாக இருந்துள்ளது.


    ​​

    1. வடக்கு கருவறைச் சுவர். ​(சோழர் காலம் வரை கோவில் இந்த அளவே இருந்துள்ளது)

    2. மேற்கு கருவறைச் சுவர்.

    3. தாயார் சன்னதியை ஒட்டிய தெற்கு கருவறைச் சுவர்.

    ​ஆனால் இக்கோவில் இன்று மிகக் கம்பீரமாக காட்சிப்படுவதற்கு காரணம் விசய நகர ஆட்சியின் போது அரங்கநாதர், இராமர், வரதர், நரசிம்மர், ஆண்டாள், ஆழ்வார்கள் என தனி சன்னதி அமைக்கப்பட்டு விரிவுற்றது. கோவிலின் பழைய அமைப்பு அக்கால் மறுசீரமைக்கப்பட்டது. அதற்கு சோழர் கால கல்வெட்டுகள் பல அடிக்கல்லாக தரையில் வைத்து பூசியிருப்பதே சான்று,

    பின்னர் இக்கோவிலில் மேற்கு புறத்தில் கசேந்திர வரதர் சன்னதி முதல் ஆண்டாள் சன்னதி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டு அதற்கு பண உதவி செய்த தெலுங்கு ஆண், பெண் கொடையாளிகளின் சிலைகள் செதுக்கப்பட்டு ஒவ்வொரு தூணிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தூண்களைப் பார்த்தாலே அவற்றின் செலவுக்கு கணக்கு என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும். அதே போல ஆண்டாள் சன்னதி முதல் சுவர் கண்ணாடி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு உதவிய தெலுங்குப் பெண்ணின் சிலை ஒரு தூணிலே வடிக்கப்பட்டு அதன் மேல் தெலுங்கு கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தெலுங்கரின் முயற்சியால் இக்கோவில் கம்பீரத்தோடு பிரம்மாண்ட தோற்றத்தையும் எய்தியது எனலாம். பெருமாளின் தென்புறச்சுவரில் நெடிய தெலுங்கு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. இந்நெடியக் கல்வெட்டு 1585 இல் பெனுகொண்டாவை தலைமை இடமாகக் கொண்டு ஸ்ரீ ரங்கராயர் ஆண்டுவந்த போது இராமராஜ வேங்கடபதிராஜுவின் தளவாய் திருமலைராயர் மாட நெல்லூர் செஞ்சம் கிராமம் தலையாறி கண்காணிப்பிலுள்ள , நீடு கிராமம் நிடாரம்பரம் கிராமம் ஆகிய இரு கிராமங்களை திருஅல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு தானமாகக் கொடுத்து அதைக்கொண்டு பெருமாளுக்கு என்னென்ன கைங்கரியம் செய்யவேண்டும் என்று ஒரு நெடிய பட்டியலே கொடுத்து அதில் ஒரு குறையும் இல்லாமல் நடந்தேற வேண்டும். அதற்கு இடர் செய்வார் கங்கை கரையில் பசுவையும் பிராமணரையும் கொன்ற பாவத்தை அடைவார் என்று பொறித்துள்ளார்.

    கோவிலுக்குள் சிறிதளவேனும் வெளிச்சமும் காற்றும் வரட்டும் என்று கருதித்தானோ என்னவோ தென்புறத்தில் மடைப்பள்ளிக்கும் தாயார் சன்னதி மண்டபத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பெரிதாக மண்டபம் ஏதும் கட்டாமல் விட்டுவிட்டதை உணர முடிகிறது.


    4. மேற்கு திசை சிலை மண்டபம்.

    5. ஆண்டாள் சன்னதிக்கு நேரே அமைந்த மண்டபம்.

    6. ஆண்டாள் சன்னதி மண்டபம் எழும்ப உதவிய பெண். தலைமேல் அவர் பற்றி தெலுங்கு கல்வெட்டு.
    ​​

    இப்படியாக விசயநகர – நாயக்கர் ஆட்சியின் போது இக்கோவில் 16 /17 ஆம் நூற்றாண்டுகளில் விரிந்து பெருமையுற்ற நிலையில் சத்திரபதி சிவாஜி தனது படை ஒளரங்கசிப்பின் தென்னக படையெடுப்பால் அழிந்து விடாமல் காக்கும் உத்தியாக தமிழகம் வந்தார். அப்போது வேலூர், செஞ்சி நாயக்கர் ஆட்சி ஒழிக்கப்பட்டு மராத்தியர் ஆட்சி நிறுவப்பட்டது. இவ்வாட்சி சிறு காலப் பொழுதே நிலைத்தாலும் பல சிவன் கோவில்களில் மராத்தியர் வெற்றி நினைவாக மண்டபங்கள் கட்டுவிக்கப்பட்டு அறப்பணிகள் நிறைவேறினர். மராத்தியரில் சிலர் மாத்துவ வைணவத்தை பின்பற்றுவோரும் உண்டல்லவா? ஆதலால் மராத்தியர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் தமது முத்திரையை பதித்தனர். கோவிலினுள் கட்டுவதற்கு இடமே இல்லாமல் தெலுங்கர் தமது அறப்பணியை ​முடிந்துவிட்டதால் மனம் கலங்காத மராத்தியர் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து திருக்குளம் நோக்கி புடைப்பு சிற்பங்கள் கொண்ட நெடிய வரவேற்பு மண்டபத்தை கட்டுவித்தனர். அதில் ஒரு தூணில் ஒரு மராத்திய அதிகாரி தனது மனைவியுடன் ஒருங்கே நின்று பெருமாளை நோக்கி கைக் கூப்பி நிற்கிறார். அவர் தலையை மராத்திய தலைச் சிதவல் அணி செய்கிறது. அவரது சிலைக்கு கீழே மண்ணீ வர் என்று அவரது பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.


    ​​

    7. வெளியில் அமைந்த மராத்தியர் கட்டிய வரவேற்பு மண்டபம்.

    8. மண்ணீவர் என பெயர் பொறித்த மராத்திய அதிகாரி மனைவியுடன் தொழுகிறார்.

    9. திருக்குளமும் அதில் மண்டபமும்.

    கல்வெட்டும் / விளக்கமும்:

    – – – நம்பியும் அருளாளனும் உள்ளிட்டோம் – – – / – – – டும் ஆக உரு இருபத்தாறுக்கும் எரிக்க கடவ திருநு – – / – – – கக் கடவோம் இவ்வுரு இருபத்தாறுங் கைக்கொண் – – – / – – -ரான நான தண்டிப்பிடிக்கோன் மக்களில் திருவா – – – / – – – ர்க்கு இரண்டும் எரிய இட்ட குத்துவிளக்கு இரண் – – –

    விளக்கம்: கோயிலில் காட்சி படுத்தியுள்ள, இரு ஓரங்களிலும் எழுத்தை இழந்த 12 – 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இது. நுந்தா விளக்கு எரிக்கிறோம் என ஆடு (உரு) 26 ஐ பெற்றுக்கொண்ட பிராமணர், நான்காம் அதிகார நிலை நாடு கிழார் தண்டிப்பிடிக்கோன் பிள்ளைகளில் திருவா- – என்பவரிடம் இருந்து விளக்கு எரிக்க இரண்டு குத்துவிளக்கும் பெறப்பட்டன என்பது செய்தி .



    ஸ்வஸ்தி ஸ்ரீ த்ரிபுவனச் சக் – – – / ஸிங்க நாயற்று பூர்வ ப[ க்ஷ ] – – – / ண்ட சோழ மண்டலத்து புலியு – – -/ ஆளுடையர் திருவாந் யூருடை – – – / ளைகளில் கழுமலவூரர் பக் – – – / கொண்ட நற்புதுக் கா[சு] – – – -/கச் செலுத்தக் கடவோமாக – – –

    விளக்கம்: வலது ஓரம் எழுத்துகளை இழந்து தரையில் கிடந்து மிதிபட்டு தவிக்கும் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. கழுமலவூரரிடம் (சீர்காழி) இருந்து திருவான்மியூர் உலகாளுடைய பெருமானுக்கு அன்றாட பூசனைக்கு வேண்டியன செய்ய புதுக்காசுகளை பெற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.



    ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரண[ம்] ஸ்வஸ்தி ஸ்ரீ மன்மகாமண்டலேஸ்வர ஸ்ரீ வீர பிறுதாப சதாசிவ தேவமகாராயற்கு செல்லா நின்ற ஸம்வற்ஸரம் 1486 (1564) க்கு செ

    ல்லா நின்ற ரத்தாக்ஷி வருஷ மகரநாயற்றில் பூற்வபக்ஷத்தில் உத்திராடமும் ஆதித்யவாரமும் பெற்ற நாள் தெள்ளிய சிங்கப்பெருமாளிட தாஸன் நரசிங்கதாஸன் தேசாந்திரி பண்ணி — க்க — –

    யிங்கரியம் பள்ளிகொண்ட பெருமாள் மகாலக்ஷ்மியார் பூ[மி] தேவியார் நாரசிங்கப்பெருமாள் வராகனாராயணப் பெருமாள் சேஷன் திருப்பதிஷ்ட்டையும் கிஷ்ணன் யுஹ்மணிதேவி பல – – – [டா]ள் – – –

    மதன் அனுருத்திரன் ஸாத்திகை ஆழ்வார் திருப்பதிஷ்டையும் வேதவல்லினாச்சியாற்கு உற்சவ விக்கிறகமும் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலும் கிஷ்ணன் கோ{யி}[லும்] முன் – – –

    மண்டபமும் வேதவல்லி நாச்சியார் கோயிலும் முன் திருவாய்மொழி மண்டபமும் திருமடப்பள்ளியும் அடைய வளைஞ்சாந் திருமதிளும் திருவாபரணங்களும் யிந்த ஸறுவ

    கயிங்கரியமும் தேஸாந்திரி நரசிங்கயங்கார் கையிலே தெள்ளிய ஸிங்கப் பெருமாள் கொண்டருளினார். கிறாமம் புதுப்பாக்கம் வேப்பேரி வேஷாறுபாடி யிந்த [கிறாம]

    ங்களும் கொண்டருளினார் யிந்த ஸகளவித கயிங்க [ரியங்களும் சந்திராதித்தவரைய் தெள்ளியஸிங்கப் பெருமாள் கொண்டருளவும்.

    விளக்கம்: 1564 ல் விசயநகர வேந்தர் சதாசிவ ராயர் ஆட்சியின் போது தெள்ளிய சிங்கப்பெருமாளின் தாசன் என்று கூறிக்கொண்டு நரசிங்கையிங்கார் என்பவர் அரங்கநாதர், இலக்குமி, பூதேவி, நரசிம்மர், வராகர், சேஷ நாகம், கிருஷ்ணன், ஆழ்வார் போன்றோருக்கு சன்னதிகள் ஏற்படுத்தி பதிவித்தார் (பிரதிஷ்டை செய்தார்). நகையணியும், வேதவல்லித் தாயாருக்கு செப்புத் திருமேனியும் செய்வித்துக் கொடுத்தார். அரங்கநாதர், கிருஷ்ணன் சன்னதிக்கு முன் மண்டபம் கட்டுவித்தார். வேதவல்லி தாயாருக்கு தனி சன்னதியும், மடைப்பள்ளியும், முன் திருவாய்மொழி மண்டபமும், வளைந்த மதிலும் கட்டி கொடுக்க இவை அனைத்தையும் தெள்ளிய சிங்க பெருமாள் ஏற்றுக்கொண்டார்.

    அதோடு வேப்பேரி, வியாசர்பாடி அவற்றுக்கு இடைப்பட்ட புதுப்பாக்கம் (இக்கால் பட்டாளம் ஆக இருக்க வேண்டும்) ஆகிய கிராமங்களை தெள்ளிய சிங்க பெருமாள் நரசிங்கய்யங்காரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறார்.

    வேப்பேரி தினத்தந்திக்கும் வியாசர்பாடி அம்பேதுக்கர் கல்லூரிக்கும் 5- 6 கிலோ மீட்டர் நீளத் தொலைவு இடைவெளி, தினத் தந்தி முதல் தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலகம் வரை 2.5 – 3 கிலோ மீட்டர் தொலைவு அகலம் உள்ளது. இத்தனைப் பெருங்கொடையை அளிக்க வேண்டுமெனில் நரசிங்கயங்கார் பெரிய ஆட்சி அதிகாரப் பொறுப்பில் இருந்தவராய் இருக்க வேண்டும்.என்று எண்ணத் தோன்றுகிறது. இதே போன்ற தெளிவான செய்தி உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆழ்வார்கள், ஆண்டாள் போன்றோருக்கு எப்போது தனி சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் வணங்கி வரலாயினர் என்பதை உறுதிப்படுத்தலாம். அதோடு கோவில்களில் வாகனங்களில் தெய்வத்தை ஏற்றி ஊர் உலா வரும் திருவிழா எப்போது தொடங்கியது என்பதையும் அறிந்து கொள்ளலாம். அதே போல் சிவன் கோவில்களில் 63 நாயன்மார்கள் எப்போது சிலையாக பதிவிக்கப்பட்டனர் என்பதையும் உறுதிப்படுத்தலாம். இவை தாம் உண்மையான தொல்லியல் நோக்கிலான கோவில் கட்டட ஆராய்ச்சி.

    ஆற்று மேடுகளில் கோவில் இயக்கம் உருப்பெறவும் கால்கொள்ளவும் பெரிதும் துணைநின்றவர் ஆட்சியில் முதல் அதிகார நிலையில் இருந்த பல்லவ வேந்தர்கள் ஆவர். மேலைச் சாளுக்கியர், இராட்டிரகூடர் எழுச்சியால் பின்னாளில் இவர்கள் இரண்டாம் அதிகார மன்னர் நிலைக்கும், மூன்றாம் அதிகார அதியரைசர் நிலைக்கும் தாழ்ந்து போனார்கள். இவர்கள் இக்கால் எந்த சாதியில் கலந்து கரைந்து போயிருப்பார்கள் என்ற ஆவல் அனைவர் உள்ளத்திலும் எழுவது இயல்பே. இதற்கு சான்றாக ஒரு 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது.

    சென்னைபுரி / ஸ்ரீ அருணாச்சலேசுவர / ர் கோயில் – வீடு – / மயிலை நல்லப்பா / முதலியார் புத்திரராகிய / ஜஷ்டீ சு முத்துசாமி / முதலியார் தற்மம் தொ / ண்ட மண்டலத்தா/ ரில் – வைசிய குலம் / துளுவவேளாளம் / பு. பல்லவராய கோ / த்திரம் – போதாய[ன] / சூத்திரம் -சாலிவா / கன – வருஷம் / 1764

    விளக்கம் : தொண்டை மண்டலம் மூன்றாம் வருணம் துளுவ வேளாள சாதியில் பல்லவ கோத்திரத்தில் பிறந்த மயிலைவாழ் நல்லப்ப முதலியார் மகன் ஜஸ்டிசு முத்துசாமி முதலியார் சென்னை அருணாசலேசுவரர் கோயிலுக்கு வீடு ஒன்றை தானமாகக் கொடுத்தார்.

    மேற்சொன்ன நான்கு கல்வெட்டுகளும் “சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்” நூலில் உள்ளன. மேற்கோள் உதவி கோவை திரு. சுந்தரம்.

    தொண்டை மண்டல கல்வெட்டில் குறிக்கப் பெறும் மூன்றாம் அதிகார நிலை அதியரைசர்கள் அரையன், ராயன் என்றும், நான்காம் அதிகார நிலை கிழார்கோன்கள் நாடுகிழான் என்றும் குறிக்கப்படுகின்றனர் . அரையன், கிழான் யாவரும் பெரு நிலக்கிழார்களே. ஆகவே தொண்டை மண்டலத்தில் 16 /17 ஆம் நூற்றாண்டில் சாதி உருவான காலத்தில் இவர்கள் துளுவ வேளாளர்களாக தம்மை அறிவித்துக் கொண்டுள்ளனர். மேலும் 17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியிலும், 19 ஆம் நூற்றாண்டு வெள்ளையர் ஆட்சியிலும் இந்த துளுவ வேளாளர்கள் பல கோவில்களை கட்டுவித்ததும், மறுசீரமைத்ததும், பல கொடைகளை நல்கியதும் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன என்பது இவர்கள் முன்னோரான அரையன், கிழவன் போன்றோர் செய்தது போலவே அறப்பணியை தொடர் ந்து இவர்கள் வெள்ளையர் ஆட்சி வரை செய்து வந்துள்ளனர் எனக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் பார்த்தால் கல்வெட்டுகளில் சிவாச்சாரி பிராமணர்களுக்கு இணையாக அல்லது அடுத்ததாக கல்வெட்டுகளில் அதிகம் இடம்பெறும் மக்கள் வேளாள மக்களாகவே உள்ளனர். தமிழ் மொழிக் காப்பு, பண்பாடு நாகரிகக் காப்பு, சமய அறங்காப்பு ஆகியவற்றில் தமக்கு நிகரில்லாத முதலிடம் பெற்ற இந்த வேளாள மக்கள் இக்கல்வெட்டுகள் உள்ள காலம் வரை அவரின் பங்களிப்பு நினைத்து போற்றலுக்கு உரியதாகிறது.

    கோவில் ஆடு மாடுகளை வளர்த்து அன்றாடம் விளக்கு எரிக்க நெய் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மன்றாடி, கோணார் போன்ற இடையர் கல்வெட்டில் மூன்றாம் இடம் பிடிக்கின்ற சாதியார் ஆவார். .

    கலிங்கத்தை வெற்றிகொண்ட பல்லவன் கருணாகரத் தொண்டைமானை அவன் மனைவி தான் வழங்கிய திருநந்தா விளக்கு கல்வெட்டில் அவனை வேளாண் என்று குறிப்பிடுகிறாள், “ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்துமூந்று ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து திருவத்தி / யூராழ்[வா]ர்க்கு சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டு திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி உடையான் வேளாண் கருணாகரநாந தொண்டைமானார் / தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு.

    நூல்: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், 2011, தொகுதி 2, எண் :5, பக் – 10, காஞ்சி வரதர் (அருளாள பெருமாள்) கோயில்

    Share
  • கொசத்தலை ஞாயிறு

    நீரின்றி எவ்வாறு உலக வாழ்க்கை அமையாதோ அவ்வமே ஞாயிறுக் கீற்று மண்ணில் விழாமல் உயிர்ப்பு நிகழாது. புல், பூண்டு, பயிர், பச்சை, பாசி என யாவும் கதிரொளியால் உயிர்க்கின்றன. இந்த கதிரொளியான எல்லிக்கீற்று மண்ணில் விழாவிட்டால்.பயிர், பச்சை, பாசிகளை நம்பி வாழும் உயிர்கள் எத்தனை பெருமை மிக்கதானாலும் மாண்டு போகும். நீரும் ஒளியும் உயிர் நிலைப்பிற்கும் பெருக்கத்திற்கும் இன்றியமையாதன.

    கோள்கள் கதிரோனைச் சுற்றிவருவதால் இக்கோள்களின் தாக்குறுத்தம் தம் எதிர்கால வாழ்வை பாதிப்படைய செய்யும் என்பதால் அதைத் தவிர்க்க. இந்த உருள் கோள்களை மனித வடிவில் வடித்து அவற்றுக்கு கழுவாய்ப் பூசனை ஆற்றுகின்றனர் மக்கள். பூசனையால் அந்த தாக்குறுத்தத்தில் இருந்து தப்பலாம் என நம்புகின்றனர், நம்புவிக்கப்படுகின்றனர்

    தஞ்சை திருவாரூர் மாவட்ட கோவில்கள் பலவற்றில் கோள்களுக்கான கழுவாய் (பரிகார) பூசனைகள் ஆற்றப்படுகின்றன. இந்த நம்பிக்கையால் நாடு முழுவதும் இருந்து அக்கோவில்கள் திரளான மக்களை நாள்தோறும் ஈர்க்கின்றன. அதனால் அக்கோவில்கள் வளமாக, செழிப்பாக உள்ளன.

    கொசத்தலை ஆறு சென்னைக்கு அருகே சோழவரத்தைக் கடந்த பின் கொசத்தலை ஆற்றில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இஞ் ஞாயிறு என்னும் கிராமத் திருத்தலம் அமைந்து உள்ளது. கொசத்தலை ஆற்றில் இறுதியாக அமைந்த பழமையான கோவில் இந்த ஞாயிறு கோவிலே. இக்கால் வேயப்பட்டுள்ள வெளி வட்டச் சுற்று சாலை (outer ring road) இக்கோவிலை எளிதில் விரைந்து அடைய உதவுகிறது. செங்குன்றம் – மீஞ்சூர் வரை நீளும் இச்சாலையில் அருமந்தை கூட்டு சாலை அமைந்த இடத்தில வடக்காக 3 கிலோமீட்டர் சென்றால் இக்கோவிலை அடையலாம். செங்குன்றம் வழி செல்லாமல் மாதவரம் > வடபெரும்பாக்கம் > விளாங்காடுபாக்கம் > பெருங்காவூர் > அருமந்தை கூட்டுச் சாலை வழியாக செல்வது தொலைவைக் குறைக்கும்.​

    வழிநெடுகலும் பச்சைப் பசுமை போர்த்திய வயல்களைக் கடந்தால் ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேசுவரர் கோவிலை அடையலாம். அண்மையில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் காணப்படும் கோவில் இது. ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கழுவாய் தேடி வழிபடுகிறார்கள். இத்தனைக்கும் இங்கு கதிரோனுக்கு என்று தனி சன்னதி கூட இல்லை. ஈசுவரருக்கு தென்கிழக்கு மூலையில் கதிரவன் புஷ்பரதேசுவரரை நோக்கி நின்ற நிலையில் இரண்டடி சிலையாகக் காட்சிப்படுகிறார்.


    அம்மன் சன்னதி முதல் இன்றுள்ள தெற்கு வாயில் வரையான தலைவாயில் நோக்கிய தூண் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. மண்டபம் கட்டியவர் நுழைவு வாயிலில் தனது உருவத்தை சிலையாக வடித்து தன்பெயரை தெலுங்கில் பொறித்துள்ளார். ஆக நாயக்கர் ஆட்சிக்கு முன் மண்டபம் கட்டியிருக்கவில்லை என்பது புலனாகிறது. சன்னதியை விட்டு வெளியே வரும் போது இருதூண் மண்டபம் உள்ளது. அவற்றில் எதிர் எதிராக மராத்திய அதிகாரிகளின் (அண்ணன் தம்பிகள் போலும்) புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பாகை அவர்கள் மராத்தியர் என்று அடையாளப்படுத்துகிறது. அவர்களுக்காகவே கட்டப்பட்ட இருதூண் மண்டபம் என்று தெரிகிறது. ஏற்கெனவே திருக்கழுக்குன்றம், திருவொற்றியூர் கோவில்களில் மராத்திய அதிகாரிகளின் சிற்பம் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளதை நான் குறிப்பிட்டுள்ளேன். இது குறுகிய கால மராத்திய ஆட்சியில் வடதமிழ்நாட்டில் சைவம் புத்தெழுச்சி பெற்றதைக் காட்டுகிறது. கோவிலில் சுந்தரரை மணந்த சங்கிலி நாச்சியாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது, அவர் இவ்வூரினர் என்பதால்.

    ​​ ​

    கோவில் கருவறையின் மேற்கு, தெற்கு புறச்சுவரில் சில தெளிவில்லாத கல்வெட்டுகள் தேய்ந்த நிலையில் காணக்கிடக்கின்றன. ஆனால் சன்னதியை விட்டு வெளியே வரும் போது கிழக்கு வலப்புறத்தில் மண்டபத்தை ஒட்டிய கருங்கல் சுவற்றில் நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. இது கோவிலின் பழமைக்கு சான்றாக உள்ளது என்றாலும் கல்வெட்டு ஆழமாக வெட்டப்படாததால் அல்லது தேய்த்து மெறுகேற்றியதால் எழுத்துகளை படத்தில் படிக்க முடியவில்லை. எனவே மைசூர் நடுவண் தொல்லியல் துறையிடம் இருந்து மைப்படி வாங்கப்பட்டு அதன் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. தென்புற கல்வெட்டு மிக தேய்ந்துள்ளதால் அப்போதே ASI மைப்படி எடுக்கவில்லை. கருவறையின் மேற்கு குமுதம் கிழக்கு சுவரில் உள்ள கல்வெட்டுகளை மட்டும் படியெடுத்துள்ளனர். ஜடவர்மன் சுந்தர பாண்டியன் காலத்து முடிவுறாத கல்வெட்டுப் பலகை ஒன்று இருந்துள்ளது. இப்போது இல்லை என்றாலும் இக்கோவில் அவன் காலத்தது என்பது தெளிவு.

    படம்

    1. தலைவாயில்.

    2. அருள்பாலிக்கும் கதிரவத் தேவன்.

    3. 15 ஆம் நூற்றாண்டில் தலைவாயிலை நோக்கி தூண் மண்டபம் கட்டியவர்.

    4. மராட்டிய அதிகாரி சிலை.

    5. மராட்டிய அதிகாரியின் உடன்பிறந்தவர்.

    6. சங்கிலி நாச்சியார் சன்னதி.​

    7. திருவோடு மரம்.

    8. கண்கவரும் தாமரைக் குளம்.

    சங்கிலியார் சன்னதி

     

    திருவோடு மரம்

    தாமரைக்குளம்


    9. ஒயிலாக அமர்ந்த பெண் இன்னும் சிலையாகாமல் ஓவியமாய் நின்றுவிட்டாள்,என்றாலும் எழில் நங்கை தான். ஏன்இப்படி? சிற்பி கத்துக்குட்டியா? அல்லது மண்டபம் அமைத்த தெலுங்கர் குறைந்த கூலி கொடுத்தாரா? தெரியவில்லை. பல தூண் சிற்பங்கள் ஓவியமாகவே நின்றுவிட்டன இங்கு.

    10. கோவில் விமானம்.

    11.கொடிமர நோக்கு.



    ​ ASI 1916 ஆம் ஆண்டு அறிக்கையில் பொன்னேரி வட்டம் ஞாயிறு கிராமம் புஸ்பரதேசுவரர் கோயில் கல்வெட்டுகள் பற்றி

    12 . கல்வெட்டின் மைப்படியில் இருப்பது கிழக்கு சுவர் கல்வெட்டு.

    13 & 14 கிழக்கு சுவர் கல்வெட்டின் இரு பாதி ஒளிப்படங்கள் அடுத்தடுத்து


    கொசத்தலை ஆறு ஞாயிறை அடுத்து மீஞ்சூர், விச்சூர், மணலி புதுநகர் கடந்து எண்ணூர் உப்பங்கழியில் கலக்கிறது.

    ஞாயிறு கல்வெட்டு பாடம் / விளக்கம் > திரு. சுந்தரம் (கோவை)

    முதல் படம்: இரண்டாவது படம்

    1 ………ஸ்ரீமஹாமண்டலேசுர ராஜாதிராஜ ராஜ…………….. வீரப்ரதாப பூர்வதெக்ஷிண………………
    2 ய நம ………..ஆளாநின்ற ஸ்ரீ வீர அச்சுந்தை ய தேவ ய தேவ ………….ராஜ்யம் பண்ணி அருளாநின்ற
    3 மஹாராயர் …………செல்லாநின்ற விசய வருஷம் மாசி மாதம் சிவராத்ரி புண்ணியகால………………….
    4 னமந ய …..குமாரன் நாகம நாயக்கர் சமற்பித்த கிறாம தர்ம்ம சாஸ நம் ……………………..ந்தன்ம..
    5 ப…ம……க்குள கிறாமம் பூதேரி விளாகம் நாயற்று பூ…. ………………..அங்கரங்க வைபோகத்துக்கும் சுவாமி
    6 தேவ ம. ….ற்கு புண்ணியமாக தந்தனவோலு வொந்நப்ப நாய க்கர் குமாரன் நாகம நாயக்கர்…….கிறாமம் பூதேரி விளாகம்
    7 முதல் ……………வயிபவமும் நடத்த கடவதாகவும் யிந்த தறுமத்துக்கு யாதொருத்தர் அஹிதம் பண்ணினார்கள்
    8 கெங்கை கரயிலே கோஹத்தி பிறம்ம ஹத்தி பண்ணின பாவத் திலே போக கடவனாகவும்

    விளக்கம்:

    கிராம தர்ம சாசனம் என்று கல்வெட்டு குறிக்கிறது. ஒரு கிராமத்தின் ஒரு பகுதியான பூதேரி விளாகம் என்னும் பகுதி கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்படுகிறது. கொடையாளி நாகம நாயக்கர் என்பது “நாகம நாயக்கர் சமற்பித்த கிறாம த்ர்ம்ம சாஸனம்” என்ற கல்வெட்டுத்தொடரால் அறிந்துகொள்ள இயலுகிறது. கல்வெட்டின் தொடக்கத்தில், ஆட்சியிலிருக்கும் விஜய நகர் மன்னர் பற்றிய குறிப்பு தெளிவாயில்லாதது கொண்டு அரசர் பெயரை உறுதிப்படுத்த இயலவில்லை.. “அச்சுந்தை…ய தேவ” என்பது யாரைக் குறிக்கிறதுஎனத் தெரியவில்லை. அரசர் பெயரை முன்னிறுத்தி அவருக்குப் புண்ணியமாகக் கொடை அளிக்கப்பட்டுள்ளது. கொடையாளி தந்தனவோலு என்னும் ஊரினர் என்பதாகப் பொருள் கொள்ளலாம். ஆந்திரத்தில், பட்டிபுரோலு என ஓர் ஊர் உண்டு. அது போன்றஓசையமைப்பில் இந்த தந்தனவோலு ஊர் அமைந்திருக்கலாம். கொடையாளியின் பெயர் நாகம நாயக்கர் என்றாலும், அவருடைய தந்தை பெயர் வொந்நப்ப நாயக்கர் என்பதை பொன்னப்ப நாயக்கர் எனவும் படிக்க வாய்ப்புள்ளது. “வொ” எழுத்து கிரந்தமாயின் பொந்நப்ப நாயக்கர் எனப் படிக்கலாம். கொடை கோயிலில் அங்கரங்க வைபோகத்துக்கும், சுவாமியின் (பூசைக்கும்?) மற்றும் சிலவைபவத்துக்கும் அளிக்கப்படுகிறது. அங்கரங்கவைபோகம் என்பதற்கு விக்கிரக அலங்காரம், பூசை, படைப்பு முதலிய அனைத்துத் தேவைகள் என்று கல்வெட்டுச் சொல்லகராதி கூறுகிறது. 7-ஆம் வரியில் வருகின்ற வயிபவம், வைபவம் ஆகலாம். இச்சொல் கல்வெட்டுச் சொல்லகராதியில் காணப்படவில்லை. மாதம் ஒரு முறை நடத்தப்பெறும் சில குறிப்பிட்ட நிகழ்வாயிருக்கலாம். கல்வெட்டின் இறுதியில், கல்வெட்டு மரபுப்படி (ஓம்படைக்கிளவி), மேற்படி தர்மத்துக்கு கேடு செய்பவர்கள் கங்கைக் கரையில்,
    பசுவையும், பிராமணரையும் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இன்னொருவர் தந்த பாடம்:

    வரி 1. ஸ்வஸ்தி ஸ்ரீ மஹா மண்தலேசுர ராஜாயிராஜ ராஜ வீரபிரதாப பூர்வதெக்ஷிண உத்

    வரி 2. த்த ஸமுத்ராதிபதி ஆளா நின்ற ஸ்ரீ வீர அச்சுதைய தேவ மகாராயர் பிரிதிவிராஜ்யம் பண்ணி அருளா நின்ற — –

    வரி 3. சூசளசயஅ (1448) த[ன்] மேல் செல்லா நின்ற விசய வருஷ மாசி மாதம் சிவராதிரி புண்ணிய காலத்திலே நா[ய]ற்று பூதே{ரி] அப்ப[னுக்]கு தந்தன்ம – – – – –

    வரி 4. ன்ம நாயக்கர் குமா[ரர்] நாகமநாயக்கர் சமற்பித்த கிறாம தர்ம்ம சாஷநம் அச்சுதராய மஹாரா[யர்] நாயக்க- – த்தனமாக பண்ணி – – –

    வரி 5. – – க்கு – – ள கிறாமம் பூதேரி வளாகம் நாயற்று பூதேரி அப்பற்கு அ – – – தைக்கும் அங்கரங்க வைபோகத்துக்கு[ம்]

    வரி 6. தேவ மஹாராயற்கு புண்ணியமாக கந்தனவோலு பொந்நப்ப நாயக்கர் குமாரர் நாகம நாயக்கர் விட்ட கிறாமம் பூதேரி விளாகம். இந்த கிறாமத்தி – – –

    வரி 7. ட முதல் பூசையும் அங்கரங்க வயிபவமும் நடத்த கடவதாகவும் இந்த தருமத்து[க்கு] யாதொருத்தர் அஹிதம் பண்ணிநார்கள்

    வரி 8. [கங்]கை கரையிலே கோ ஹத்தி பிரம்ம ஹத்தி பண்ணின பாவத்திலே போவானாகவும்

    கட்டுரையாளர் பின் குறிப்பு:

    கல்வெட்டில் இடம் பெறும் நாகம நாயக்கர் என்பவர் இன்று கர்னூல் என மருவிவிட்ட அன்றைய கந்தெனவோலுவை வாழிடமாகக் கொண்ட பொன்னப்ப நாயக்கருடைய மகன் ஆவார். இவர் புண்ணியம் கருதி ஞாயிற்று கிராமத்தில் கோவில் கொண்ட பூதேரி அப்பனான புஷ்பரதேசுவரருக்கு (பூந்தேர் = புஷ்பரதம்) தன்னை நாயக்கனாக ஆக்கியதற்கோ அல்லது அச்சுதராயர் அரசராக பொறுப்பேற்றதற்கோ கொடையாக தந்த கல்வெட்டு ஆவணம் யாதெனில் “பூத்தேரி அப்பன் கோவிலில் முதல் பூசைக்கும் விழாக்காலத்தில் தெய்வத்திருமேனிக்கு அலங்காரம் செய்யவும் ஒரு கிராமத்தை தந்தார்” என்பதே. இந்த கிராமக் கொடையை 1533 ல் நடக்கின்ற விஜய வருடம் மாசி மாதம் சிவராத்திரி நன்னாளில் வழங்குகிறார். ஆனால் 1448 உடன் சக ஆண்டு 78 ஐ சேர்த்தால் 1526 என்ற ஆண்டில் வந்து நிற்கிறது. அப்போது கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசை ஆண்டு கொண்டிருக்கிறார். அவரது தம்பி அச்சுதராயர் அப்போது அரச பொறுப்பில் இல்லை என்பது காலக்குறிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளதை காட்டுகிறது. இந்த கொடைக்கு யாரொருவர் கேடு (அஹிதம்) செய்கின்றானோ அவன் கங்கைக் கரையில் பசுக்கொலையும் பிராமணக்கொலையும் புரிந்த பாவத்தை அடைவான் என்று கல்வெட்டு முடிவுறுகிறது.

    தமிழ்ச் சொல்லை அகற்றி சாசனம், அஹிதம், ஹத்தி ஆகிய சமற்கிருத சொற்கள் இடம்பெற்றுள்ளன. பூந்தேர் இன்னும் பிற்காலத்தில் புஷ்பரதம் என்றாகியுள்ளது. .

    இத்தலம் பற்றிய செய்தி தரும் பிற தரவுகள்:

    http://templesoftamilnadu.co.in/gnayiru-gramam-suryan-sthalam/

    Share
  • அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்

    சேசாத்திரி சிறீதரன்

     

    தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன. இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க பரிகாரம் செய்யவேண்டி பலவேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் வருவதால் கும்பகோணம் ஒரு ஆன்மீகத் திருச்சுற்றுலா தலமாக உள்ளது. அதன் காரணமாகவே இவ்வூரில் பல தங்கும் விடுதிகள், கடைகள் என சுற்றுலாவினால் தொழில்வளமையும் பொருளியல் வளமையும் பொங்குகிறது. திருச்செலவு தான் இவ்வூர் இயக்கத்திற்கு உயிர்நாடி.

    இவ்வூரில் பல கோவில்கள் அமையப்பெற்றாலும் கல்வெட்டு, சிற்பம் பழமை ஆகியவற்றில் முதன்மையானது என குறிக்கத்தக்க பெருமை உடைய கோவில் .அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில்.. ஆதி கும்பேசுவரர் கோவில் போல் மிகப் பெரிதாக இல்லாவிட்டாலும் மக்கள் கூட்டம் நிரம்பி இராவிட்டாலும் சிறப்பு என்னவோ இந்த கோவிலுக்கு தான்.

    பொதுவாக கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களில் கருவறையையோ அல்லது மண்டபத்தையோ ஒட்டி தேர்ச்சக்கரங்கள் பொருத்தி குதிரை பூட்டி இழுப்பது போலவும் யானை இழுப்பது போலவும் கட்டி இருக்கிறார்கள். இது கட்டடபாணி பிற்கால சேர்கையாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொண்டைமண்டல கோவில் தூண்களில் புடைப்பு சிற்பம் இருப்பது போல இக்கோயில்களில் புடைப்பு சிற்பம் அவ்வளவாக காணப்படாமல் பூக்கோலம், மரம், கொடி போன்றவையே அதிகமாக பொதுவாக வடிக்கப்பட்டுள்ள்ளன. மேலும் பல மண்டபத் தூண்கள் கருநாடக கோவில் கட்டட அமைப்பை கொண்டுள்ளதானது இவை விசயநகர ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன, அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அமர்த்தி இக்கோயில்கள் நன்றாகக் பேணப்பட்டு வருகின்றன..

    பேருந்து நிலையத்திலிருந்து கோவில்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் அருகருகே அமைந்துள்ளதானது இவ்வூர் முன்பு 2 கிலோமீட்டர் பரப்பளவிற்கும் குறைவாக இருந்திருக்கும் என்பதை காட்டுகிறது. இனி படங்கள் காண்போம்.

     

    இளமை குலுங்கும் இளவரசி அல்லது இளைய அரசி
    தாலி அணிந்த வேந்தி /அரசி
    நகையணி துறந்து பூணூல் மட்டுமே அணிந்து நோன்பு கோலத்தில் வேந்தர்

    கருவறை புறச்சுவரை சுற்றிலும் சோழ வேந்தர், வேந்திகளின் சிலைகள் கண்கொட்டாமல் பார்க்கும்படியாக அழகுற செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளன. கச்சை இல்லா முலைமார்பு பல்லவர் உருவங்கள் தாமோ என மதிமயக்குகின்றன. எனினும் சிலைகளுக்கு அருகிலேயே வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இவற்றின் காலத்தை அறியமுடியும் பல்லவரா/ சோழரா? என்றும் அறிய முடியும் என நம்பலாம்.

    காதில் குழையுடன் நோன்பிருந்த வேந்தன் இப்போது ஒயிலாக நிற்கிறான்
    சோழ வேந்தருக்கே உரிய தலைமயிர்கட்டு அணி. சிவப்பு கல்லில் இருந்து மாறுபட்ட பழுப்பு கல் பிறப்பட்டதோ
    உலகப் பேரழகு தோற்கும் இந்த வேந்தியிடம்
    பேரமைதி தவழும் தோற்றம்
    வேந்தனுக்கு உரிய மிடுக்கு

     

    3 & 4 படங்கள் ஒரே ஆளுடையன. பிற வெவ்வேறு  ஆள்களுடையவை .
    தேராக மாற்றப்பட்ட மண்டபம். சக்கரத்தில் 12 ராசிக்கு உரிய அதிபதிகள் புடைப்பு சிற்பம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 19, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. சேசாத்திரி சிறீதரன்  அவர்கள்

    Seshadri Sridharan2

    வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிறீதரன் அவர்கள். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகள் செம்மொழி தகுதிச்சான்றினை இந்திய அரசிடம் இருந்து பெறும் பொருட்டு சமர்ப்பித்த கல்வெட்டுகளை இவர் மறுஆய்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில், மாற்றுக்கோணத்தைக் காட்டும் கட்டுரைகளை வல்லமை கூகுள் குழுமத்தில் (https://groups.google.com/forum/?fromgroups#!forum/vallamai) எழுதியதற்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

    கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள், 2000 ஆண்டு வாக்கில், அந்நாளில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படாமல் இருக்க நேர்ந்ததன் காரணத்தை விளக்க முற்பட்டபொழுது (Statement on the Status of Tamil as a Classical Language, Professor of Tamil at the University of California, Berkeley, April 11, 2000), இந்திய அரசியல் சூழ்நிலையும், தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கினால் பிற இந்திய மொழிகளும் தங்கள் மொழிக்காக வற்புறுத்தும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று கீழ்வருமாறு தனது மடல் ஒன்றில் (http://southasia.berkeley.edu/tamil-classes) குறிப்பிட்டிருந்தார்…

    “In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. “

    இந்திய மொழிகளில் செம்மொழித்தகுதிகள் கொண்டவை தமிழும் சமஸ்கிருதமும் மட்டுமே என்பது பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் கருத்து. அவர் குறிப்பிட்ட “அரசியல்” என்ற காரணம் பின்னாளில் பொய்க்கவில்லை. தமிழுக்குச் செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதும், தமிழில் இருந்து கிளைத்த பிற திராவிட மொழிகளும் தங்கள் மொழிக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் செம்மொழி தகுதி கேட்டு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கத் துவங்கின.

    இதைத் தொடர்ந்து, ஒரு மொழிக்கு செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றியது. அந்த நெறிமுறைகளின்படி, ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. இந்த வரைமுறைகளின் அடிப்படையில் இதுவரை தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    தங்கள் மொழியின் பழமைக்குச் சான்றாக கன்னட மொழியினர் “ஹல்மிடி” கல்வெட்டினையும், தெலுங்கு மொழியினர் “கலமல்லா” கல்வெட்டினையும் சமர்ப்பித்து தங்களது மொழிகளுக்குச் செம்மொழி தகுதியினைப் பெற்றனர்.

    இதற்கான சான்றுகளையும், அதன் மேல் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் இனி சுருக்கமாக கீழே காணலாம் (கருத்துக்களை விளக்க இயன்றவரை அவர் எழுத்துகள் கையாளப்பட்டுள்ளன). அக்கட்டுரைகளின் முழு வடிவங்களையும் கீழ்காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்.

    செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
    https://groups.google.com/d/msg/vallamai/iLKZBO5bKsc/_WWdsK_qBQAJ

    செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு
    https://groups.google.com/d/msg/vallamai/GLpn2097IAw/mqMoWM1MAwAJ

    Seshadri Sridharan1

    கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின்கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது. கல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்று அறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை, என்று கூறும் சேசாத்திரி,

    • இக்கல்வெட்டில் குறிப்பிடும் அரசன் அதே பெயரிலுள்ள பிற்காலத்தவர் என்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன
    • கல்வெட்டில் சமஸ்கிரதம் அதிகம் கலந்துள்ளது, ஆனால் தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது என்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது
    • கல்வெட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்துகள் எடுத்தாளப்படுகிறது
    • அத்துடன் கல்வெட்டு குறிப்பிடும் பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மக்களிடம் பரவியது
    • இக்கல்வெட்டில் காணப்படும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் இந்தக் கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது
    • கற்கோவில்கள் தென்னகத்தில் பரவிய காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் என்பதால் அக்காலத்தியக் கல்வெட்டாகவே இக்கல்வெட்டு இருக்கும் வாய்ப்புள்ளது

    எனவே, மேற்கூறிய காரணங்களால் ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்குச் செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது எனக் கூறுகிறார்.

     

    அடுத்து, தெலுங்கு மொழியின் பழமைக்குச் சான்றாக, கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது, கி.பி. 575 ஆம் நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்குச் சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர் தெலுங்கு மொழியினர். அக் கல்வெட்டுத் தொடர்பான சேசாத்திரியின் கருத்துகள்,

    • தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 ல் இக்கல்வெட்டின் காலம் குறித்தோ அல்லது எழுத்தமைதி மிகப் பழமையானது என்றோ எந்தக் குறிப்பும் இல்லை
    • கல்வெட்டிலும் காலக் குறிப்பு ஏதும் இல்லை
    • ரேனாட்டு சோழன் தனஞ்சயனின் மெய்க்கீர்த்திகளோ அல்லது ரைவணனின் அரச பின்னணிக் குறிப்புகளோ இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை ஆதலால் இது அரசர் வெட்டிய கல்வெட்டு அல்ல
    • எரிகல் முத்துராஜு புண்ணியகுமார என்ற பெயரில் இன்னொரு அரசனும் இருந்துள்ளான். ஆதலால் பிற்கால அரசர் சிலர் எரிகல் முத்துராஜு என்ற மூதாதையின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதே சரி
    • கல்வெட்டு குறிக்கும் தனஞ்சயன், ரேவண் ஆகிய பெயர்கள் புராணப் பெயர்கள். தனஞ்சயன் என்ற பெயர் முதன் முதலாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசர் இயற்றப்பட்ட பாகவத புராணத்தில் தான் இடம் பெறுகிறது. அதற்கு முன்னம் இப்பெயர் பரவியிருக்க வாய்ப்பில்லை
    • பாறைகளைச் செதுக்கி கற்றளிகள் கட்டுவது தென்னிந்தியாவில் முதன்முதலாக 8 ஆம் நூற்றாண்டில் தான் ராசசிம்மப் பல்லவனால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட கல்வெட்டு அல்ல மாறாகக் கற்கோவிலின் ஒரு தூணில் இருபக்கங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு எனும்போது இது 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க முடியாது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கல்வெட்டாகத்தான் இருக்க முடியும்
    • மேலும், கல்வெட்டில் இழிந்த குலத்தோர் என்ற குறிப்பு இக்கல்வெட்டின் காலத்தை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. புராண இந்து மதம் பரவிய பின்பு 9 – 10 ஆம் நூற்றாண்டுகளில் தான் பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகள் மக்கள் கருத்தில் வேரூன்றின. ஆகவே இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டளவில் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதவே இடம் தருகிறது

    எனவே, தெலுங்கைச் செம்மொழி என காட்டற்கு இக்கல்வெட்டிற்குச் சற்றும் தகுதி இல்லை. ஏனெனில் இதனினும் பழமையான தெலுங்கு நடுகல் கல்வெட்டுகள் உள்ளன என்பது கல்வெட்டு பற்றிய சேசாத்திரியின் கருத்து

    எனவே, இரு கல்வெட்டுகளும் அவை கூறப்படும் காலத்திற்கு பிற்காலத்தவை, இவை பிற்காலத்தில் கற்கோவில்கள் தோன்றிய பிறகு அவற்றின் பகுதிகள், இவை பிற்காலப் புராணக் கதைகளை கொண்டுள்ளன, பிற்காலத்திய அரசன் பெயர்கள் என்பது கருத்தில் கொள்ளப்படவில்லை, பிற்காலத்தில் மக்களிடம் புழக்கத்திற்கு வந்த கருத்தாக்கங்களை கொண்டுள்ளன என்ற காரணங்களைக் காட்டி, கல்வெட்டுகளின் கால நிர்ணயத்தின் மீது கேள்விகள் எழுப்பி அவற்றின் பழமையை நிராகரிக்கிறார் திரு. சேசாத்திரி.

    இவ்வாறு புதிய கோணங்களைக் காட்டி, கல்வெட்டு ஆவணச் சான்றுகளின் காலத்தைப் பற்றிய சிறப்பான கட்டுரைகளை வழங்கியதற்காக, திரு. சேசாத்திரி அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share