கல்வெட்டுகள் வெறும் கல்வெட்டுகள் அல்ல அவை உண்மையின் உரைகற்கள் ஆகும். ஏனெனில் ஓலைகளில் இடைச் செருகலைச் செய்ய முடியும் ஆனால் கல்வெட்டில் ஒருமுறை பதித்தால் அதை மாற்றவே முடியாது. அப்படி மாற்றி இடைச்செருகினால் அது தெள்ளத் தெளிவாகத்  தெரிந்துவிடும். இனி வாரும் நாமும் சில கல்வெட்டுகளை உரசிப் பார்த்து உண்மையை அறிவோம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருவூர் வட்டம்  கருவூர் பசுபதி ஈசுவரர் கோவில் மொட்டை கோபுர வலது நுழைவாயிலில் உள்ள  9 வரிக் கல்வெட்டு. 

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திரிபுவனச்  சக்கரவத்திகள் கோ நேர்மேல் கொண்டான் வெங்கால நாட்டுக் 
  2. கருவூர் ஆள் (உ)டையார் திருவாநிலை (ஆ)ளுடையார் கோயில் காணி உடைய சிவப்பிரா 
  3. மணர்க்கும்  ஆண்டார்களுக்குந் தேவரடியார் கைக்கோளர்க்கும்  வெள்ளாள(ர்)க்கு
  4. ம் உவச்ச(ர்)க்கும் ஓலை குடுத்த பரிசாவது, இவர்கள் நம்மை தின்மைகளுக்கு இரட்டை சங்கு   
  5. ஊதவும் பேரிகை கொட்டவும் தங்கள் வீடுகள் இரண்டு நிலை எடுத்துச் சாந்து இட்டுக்கொள்
  6. ளவும்  இரட்டை கதவு இட்டுக் கொள்ளவும் செங்கழுநீர் பூவால் வாசிகை தோள் இடவும் இ
  7. வர்கள் நம் சரக்குக்கு தருவதான அச்சு நாற்பதுங்  கொண்டு இவர்கள் மக்கள் செ(ய்)து
  8. கொள்வார்கள் ஆக நம் ஓலை பிடிபாடாக கொடுத்தோம் (3) ஆண்டு நாள் 2(100)8(10)7 நந்தபன்ம
  9. ன் எழுத்(து) வை(யிராத்)தராயன் எழுத்து தொண்டை(மான்  எழுத்து) காலிங்கரா(ய)ன் எழு(த்து). 

திருவானிலை – கருவூர் சிவன் கோவில்: ஆளுடையார் – செயற்பாடுகளை நிர்வகிப்போர்; காணிஉடையார் – பரம்பரை உரிமை உடையவர்; ஆண்டார் – அடியார், பக்தர்; உவச்சர் – மத்தளம் கொட்டுவோர்; ஓலை – ஆணை ஓலை; பரிசு – விவரம்; சாந்து – சுண்ணாம்பு; இரண்டு நிலை – முன், பின் என இரு வாயில் கால்; வாசிகை தோள் – வாயில் அரண்வளை இருபுறம்: சரக்கு – பண்டாரம், கருவூலம்; அச்சு – பொற் காசு; பிடிபாடு – வழிகாட்டு நெறி, guidelines; கதவு – கதல் என்றால் பக்கவாட்டில் நகர்தல் (to slide aside), நகர்தல் அசைதல். இதை வேராகக் கொண்டு கதல் + வு = கதவு என்ற சொல் உண்டானது.

விளக்கம்:  இக்கல்வெட்டு, கொங்குச் சோழன் கோ நேரின்மை கொண்டான் வீரராசேந்திரனின் 3ஆம் ஆட்சி ஆண்டில் 1210 இல் நாள் 287 இல் வெட்டப்பட்டுள்ளது. வெங்கால நாட்டில் அடங்கும் கருவூர் நகரை நிர்வகிப்போர், அங்கத்து சிவன் கோவிலை நிர்வகிப்போர், பரம்பரை உரிமை உடைய சிவப் பிராமணர், அடியார்கள், தேவரடியார்கள், கைக்கோளர்கள், வெள்ளாளர்கள், மங்கல இசைஞர்கள் ஆகியோருக்கு இந்த ஆணை ஓலையில் கொடுத்த சலுகை விவரம் யாதெனில், “இவர்கள் குடும்ப நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு ஊதிடவும், முரசு கொட்டவும், தமது வீடுகளில் இரண்டு நிலை வாயில் நிறுத்தவும், சுவருக்கு சுண்ணாம்பு பூசவும், வாயிலுக்கு இரண்டு கதவுகள் பொருத்தவும்  வாயில் அரண்வளையின் இரு புறமும் செங்கழுநீர்ப் பூ தொடுத்த மாலையை அணிவிக்கவும் உரிமை தரப்படுகிறது. மேலும் இவர்கள் என் கருவூலத்திற்கு ஆண்டாண்டு செலுத்துகின்ற 40 பொற்காசுகளை இனி தராமல் அதைக் கொண்டு இவர்கள் பிள்ளைகளை வளர்க்கட்டும் என்று இந்த ஆணை ஓலைப்படி பற்றி ஒழுகக் கொடுத்தோம். இது நந்தபன்மன் ஒப்புதல் எழுத்து, வயிராதராயன் எழுத்து, தொண்டைமான் எழுத்து, காலிங்கராயன் எழுத்து என்று உள்ளது.

இப்படி சமூக நிலையை உயர்த்தும் உரிமை தரும் கல்வெட்டுகள் கொங்குப் பகுதிகளில் ஆங்காங்கே காணப்படுகின்றன.  இதன் மூலம் இந்த உரிமைகள், மக்களுக்கு இதற்கு முன்னம் மறுக்கப்படிருந்தன என்ற உண்மை விளங்குகிறது. கொங்கில் போலவே பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் 12 ஆம் நூற்றாண்டு வரை இந்த உரிமைகள் மக்களுக்கு மறுக்கப்படிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. இப்படியான உரிமைகளை  அரச குடும்பத்தவர், படைத்தலைவர்கள் ஏற்கனவே அனுபவித்து இருந்தால் மட்டுமே பின்னீடு அதே போன்று பிறரும் வாழ வகை செய்யும் எண்ணம் தோன்ற முடியும். அக்காலத்தில் ஒருவரது உடை, வீடு ஆகியவற்றை வைத்தே அவரது சாதி, சமூக நிலை எல்லார்க்கும் தெரியும்படியான நிலை தான் இருந்துள்ளது. இப்படி சமூகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவ ஆட்சி ஆண்ட அரசர்களும் படைத் தலைவர்களுமே  முழுக் காரணமாக இருந்துள்ளனர். தமக்கு என்று தனி அந்தஸ்து, கெளரவம் இருப்பதாக எண்ணிய ஆட்சியாளர்கள் இந்த வேற்றுமையை தமது ஆட்சிப் பகுதியில் நிலைப்படுத்தி இருந்துள்ளனர். இதனால் சமத்துவம் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் இந்த வரலாற்று உண்மைக்கு மாறாக இந்து மதம், சனாதன தர்மம், மனு தர்மம், பார்ப்பனியம், பார்ப்பனர் தான் எல்லா சமூக ஏற்றத் தாழ்விற்கும் காரணம் என்று பொய் பரப்புரை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பொய்யை இக்கல்வெட்டு, சுக்கு நூறாக உடைக்கின்றது.

பார்வை நூல்: A R no  136 of 1905 no 137. பக்கம் 173 & 174 of South Indian Inscriptions,  Vol  39

வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜா வட்டம்  குடிமல்லூர்  பூமீசுவரர் கோவிலின் நடுக் கோவில் வட சுவரில் உள்ள  11 வரிக் கல்வெட்டு. 

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திருபுவனச்  சக்கரவத்தி ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு  12 பன்னிரண்டாவது மேஷ  நாயற்றுப் பூர்வ பக்ஷத்து சதுத் தேசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற அவிடத்து நாள் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூர் கோட்டத்து கலவைப்பற்று கரைவழி  
  2. வல்லியூர் உடையார் கிடாரங்கொண்ட சோளீசுரமுடைய நாயினார் கோயில் கெங்கைகொண்ட சோழன் திருக்காவணத்து கலவைப்பற்று  ஆந்திநாடு அத்திப்பற்று முறுகன்மங்கலப்பற்று  நாட்டாரும் அகம்படியாருமான மற்றும் வலங்கைக்கடைத்த சாதியுள்ளாரும் இடங்கைக்கடைத்த சா
  3. தி(யிலுள்ளாரும்) நிறைவற நிறைந்து குறைவறக் கூடியிருந்து  எங்களிலிசைந்து  _ _ _ நாயனாற்கு  உபய நிச்சயித்துக் குடுத்தபடி  இராசத் துரோகியுமாய் நாட்டுத் துரோகியுமான  (கொல்லத்) தரையனை கொல்வதாக நாடாகக் குவிந்து வருகையில் இவன் 
  4. இன்னாயனார் திருக்கோயில் திருமலையில் மேலேறியிருக்கையி லிவநைக் கொல்லுமளவுக்குத்  திருமலையை (இறக்கி) கொல்ல வேண்டுமென்று சொல்லுகையில். இக்கோ(யி)ல் மாகேசுரர், தானத்தார், கவரிப்பிணா பொற்கோயிற்  கைக்கோளரும் 
  5. திருமலையை இறக்கவொண்ணாதென்று சொல்லுகையில் திருமலை(யிறக்கி) கொன்றால்த்  திருமலைகு சென்றாலே இழிந்து வெள்ளியிலே புரிக்  கட்டவும் பூசைக்கு _ _ _ 
  6.  (ணக்க) நாங்கள் வைத்த உபையஞ் சந்திராதித்த வரையு நடத்தக் கடவதென்று  சம்மதித்து அறுதி பண்ணிக்  குடுத்தபடி ஆண்டொன்று(க்கு  வேலி) ஒன்றுக்கு  கலநெல்லு அரைப்பணமும் புஞ்செப்பற்றுக்கு ஏர் ஒன்றுக்குக் கல(தானியம்)  
  7. யெறு சாத்திறங்கு சாத்து பாக்கு மிளகு பொதிக்கு பொதிஒன்றுக்கு ஒரு பணமு முப்புப்பொதிக்கு எள்பொதிக்கு பொதிஒன்றுக்கு  அரைப்பணமு _ _ _  நெல்லு  _ _  _ _ கால்ப்  பணமு _ _ _   ஒன்றுக்கு _ _ _ (சால்)தறி ஒன்றுக்கொரு பணமு வாணிகர் செக்கு வாணிகர் (செ)
  8. கொள்ளக் கடவதாகவும். இப்படி சம்மதித்து இந்த உபையஞ்  சந்திராதித்த வரை நடத்திக் குடுக்க  _ _ _ 
  9. டுத் துரோகியுமான  கொல்லத் தரையனைக் கொல்ல திருமலை  இறக்கி யிவனையுங் கொன்று இந்த _ _ _ 
  10. மெடுத்துத் தண்டிக் கொள்ளும்படிக்கு உடையார் கிடாரங்கொண்ட சோளீசுரமுடைய நாயனார்  
  11. _ _ உருத்திர ஸ்ரீ  மாயேசுரர் ஸ்ரீ காரியஞ் _ _ _ (த்தாரும்)  கவரிபிணா பொற்கோயில் கைக்கோளர்க்கும்  ஸ்ரீ வீரபத்திரர்க்கும் இப்படி (ச)ம்மதித்து  

நாயிற்று – ஓரை, ராசி; நாட்டார் – ஊரவர், அடைத்த – அடங்கிய; உபயம் நிச்சயித்து – கோவிலுக்குக் கொடை உறுதி ஆக்கி; நாடாக குவிந்து – ஊரே கூடி, திருமலை – போர்த்திய விமான கவசம்; இறக்கி – நீக்கி, கலைத்து; கவரிப்பிணா – கவிழ்த்துக் கட்டிய; இழிந்து – அவிழ்ந்து, சேதம், damage; புரி – முறுக்கிய கயிறு, twine; தண்டி – திரட்டு, வசூலி, collect.

விளக்கம்:  இக்கல்வெட்டு, மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 12ஆம் ஆட்சி ஆண்டு 1279இல் வெட்டப்பட்டது. மேழ ஞாயிற்று(ராசி) சந்திர மாதத்தின் முதல் பாதி 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கூடிய அவிட்ட நாண் மீன் நாளன்று செயங்கொண்ட சோழமண்டலத்தின் படுவூர் கோட்டத்தில் அடங்கிய கலவைப்பற்று கரைவழி வல்லியூர் உடைய கிடாரங்கொண்ட சோழீசுவரமுடைய இறைவன் கோயிலில் கங்கைகொண்ட சோழன் திருகாவணத்து கலவைப்பற்று, ஆந்திநாட்டு அத்திப்பற்று, முருகன் மங்கலப்பற்று ஊராரும், அகம்படியாரும், இடங்கை வலங்கையில் அடங்கிய சாதியாரும் ஒன்று கூடித் தாமே விரும்பி நன்கொடை உறுதி செய்து கொடுத்தது யாதெனில், “இராசத் துரோகியும், நாட்டுத் துரோகியுமான கொல்லத்து அரையனைக் கொல்வதற்கு நாட்டினர் திரண்டு வரும்போது அவன் இந்த இறைவன் கோவிலில் விமானத்தில் ஏறி அதை போர்த்திய கவசத்தில் ஒளிந்து கொண்டான். அப்போது அந்த போர்த்திய கவசத்தை நீக்கி அவனைப் பிடித்துக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிற போது இக்கோயில் மகேசுவரர், பொறுப்பாளர், கவித்துக் கட்டிய பொற்கவசக் கைக்கோளரும் சேர்ந்து விமானக் கவசத்தை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். மீறி விமானக் கவசத்தில் ஏறிக் கொன்றால் கவசம் சேதமாகிவிடும். அதை மீண்டும் கட்ட வேண்டும் என்றால் வெள்ளி முறுக்குக் கயிறால் தான் கட்ட முடியும் என்று கூறுவதோடு மீண்டும் அதற்குப் புதிதாகப் பூசை செய்யவேண்டும் என்று சொல்லுகின்றனர். இதற்கு இணங்க நாங்கள் செய்கின்ற நன்கொடை சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரை நடத்திச் செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டு முடிவாக அறிவித்தபடி “ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வேலி நெல்லில் இருந்து ஒரு கலநெல்லும் அரைப்பணமும் புன்செய்  நிலத்தில் இருந்து ஏர் ஒன்றுக்குக் கல தானியமும், ஏறும் பாக்கு மரத்தில் சாத்துப் பாக்கும், மிளகு பொதியில் பொதி ஒன்றுக்கு ஒரு பணமும், உப்பு பொதி, எள் பொதியில் பொதி ஒன்றுக்கு  அரைப்பணமும் (கல்வெட்டு சிதிலமடைந்து படிக்க முடியவில்லை) தறி ஒன்றுக்கு ஒரு பணமும் இப்படி சம்மதித்து இது சந்திர சூரியர் உள்ள வரை நடப்பதாகுக. இதற்கு ஈடாக இராச துரோகியும் நாட்டுத் துரோகியும் ஆன கொல்லத்தரையனைப்  பிடித்துக் கொல்வதற்கு  விமானக் கவசத்தை நீக்கிக் கொன்று, இந்த ஒப்புதல்படி பணத்தைத் திரட்டிக்கொள்ளுமாறு கிடாரம் கொண்ட சோழீசுவரமடைய இறைவன் கோவில் உருத்திரர், மாகேசுவரர், கோவில் பணியாளர், கவிழ்த்துக் கட்டிய தங்கக் கோவில் கைக்கோளருக்கும் வீரபத்திரருக்கும் இப்படியாக நடந்து போக ஒப்புக்கொண்டோம் என்று உறுதி தந்தனர்.

கொல்லத்தரையன் நாடே சினந்து திரண்டு கொல்லும் அளவிற்கு வரிப் பணத்தைத் திரட்டி அதைக் கருவூலத்தில் செலுத்தாமல் கவர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அதனால் தான் கல்வெட்டில் இதை இராச துரோகம், நாட்டுத் துரோகம் என்று  குறிப்பிட்டுள்ளனர். ஒரு மனிதனை தம் கோவம் அடங்குவதற்காக உடனே கொல்வதென்பது தேவையற்றது. அவன் இரண்டு நாள்கள் மேலாக சோறும் தண்ணீரும் இன்றி விமானக் கவசத்திலேயே ஒளிந்து இருக்க முடியாது. அப்படி இருந்தால் பட்டினிச் சாவு தான் அல்லது அவன் தானே கீழே இறங்கிவிடுவான் அப்போது அவனை பிடித்துக் கொல்ல முடியும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதே உலக நடப்பு.

பார்வை நூல்: A R no  136 of 1905 no 137. பக்கம் 228 & 229 of South Indian Inscriptions,  Vol  39.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம்  குளத்தூரில்  சிதிலமடைந்த சிவன் கோவில் கிழக்கு சுவர் 3 வரிக் கல்வெட்டு. 

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ  இத்திருக்கற்றளியிலும் திருவக்ர மண்டபத்திலும் 
  2. எழுத்து வெட்டாதொழிக; வெட்டில் இராசத்துரோபியும் 
  3. சிவத்துரோபியு மினத்துரோபியுமாவான்  

அக்ர மண்டபம் – முக மண்டபம்

விளக்கம்:  இக்கல்வெட்டு சுந்தர சோழீசுவரமுடைய நாயனார் கோவிலில் 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோவில் சன்னதியிலும் முகமண்டபத்திலும் கல்வெட்டு ஏதும் வெட்டக் கூடாது அப்படி மீறி வெட்டுவோர் அரச துரோகியும், சிவத் துரோகியும் சிவபிராமணத் துரோகியும் ஆவான் என்று இனத்தைச் சுட்டி எச்சரிக்கிறது.

இதன் மூலம் அறிய வரும் உண்மை யாதெனில் எல்லா அரச ஓலையிலும் “கல்லிலும் செப்பிலும் வெட்டிக் கொள்க” என்று கூறினாலும் அந்த எல்லா ஓலை ஆணையும் அவ்வாறு கல்லில் வெட்டப்படவில்லை, சிவாச்சாரியார் அவற்றில் எதை வெட்டுவதற்கு ஒப்புக் கொண்டாரோ அதுவே கல்வெட்டானது மற்றையவை ஓலையாகவே இருந்து அழிந்தன. மேற்படியான கொள்கையில் சில பிராமணர் இருந்தாலும் கிடைத்த மொத்த தமிழ்க் கல்வெட்டுகள் 60,000 இல் நடுகல் கல்வெட்டு, ஊர்க் கல்வெட்டு என 1,000 கல்வெட்டுகள் போக எஞ்சிய 59,000 கல்வெட்டுகள் கோவிலில் பொறிக்கப்பட, கோவில் சிவ பிராமணரும் பட்டாச்சாரிகளுமே காரணம் ஆவர். இந்த 59,000 கல்வெட்டுகள் வெட்டப் பெறாமல் கோவில் புனிதம் கெட்டுவிடும் என்று தடுத்திருந்தால் இன்று நமக்கு எந்த வரலாறும் கிடைத்திருக்காது. இதற்குத் தமிழ் உலகம் பிராமணருக்கு நன்றி கூற வேண்டும்.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள்  – மடலம் 34, பக்கம் 347

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  வட்டம் ஒழுகூரில் தனியார் வீட்டின் எதிரே உள்ள 7 வரி வீரர் கல்வெட்டு. 

  1. மதிரை கொண்ட கோப்பர கேசரி ப
  2. ன்மற்கி  யாண்டு பதினாறாவதில் 
  3. படுவூர் கோட்டத்து ஒழுகையூர் னாட்டு 
  4. ஒழுமூர் தேர் வய நசரரும
  5. த்தி கோசத்தாரு மவை வீரக்
  6. கைச் சிறப்பு  இவகாவலாய் இவ
  7. களே ரக்ஷிப்பார்கள். 

ஒழி > ஒழு – ஒய்வு, leisure; வய – வழி, via; நசரர் – கண்காணிப்பாளர், உயர் பொறுப்பு அதிகாரி( நல்/ நய் > நச் – வெண்மை கருத்து வழி ஒளி, காட்சி கருத்துக்கு வேரானது. காண்க > நளி – வெள்ளைச் சாரணை. நய் > நயனம் – ஒளிபடைத்த கண். யகர சகர திரிபில் இந்த நய > நச ஆகி இந்தி, உருது  போன்ற மொழிகளில் நசர் என்று பார்வையை குறிக்கிறது. ஆக நயனம் என்பதும் தமிழ் வேர் உடையது என்பது இக்கல்வெட்டால் அறிய முடிகிறது; அத்தி  நெடுமைக் கருத்தில் யானை, மரம், மலையை குறித்தது; ஹஸ்தி என்ற சமசுகிருத சொல் அத்தி என்று ஆகவில்லை என்பதைக் கருத்தில் கொள்க. அத்தி தூய தமிழ்ச் சொல்லே. கோசத்தார் – போர்க்களத்தில் யானைக்கு ஊறு நேராமல் கவசமாக இருந்து பேணுவோர்; வீரக்கை – வீரச்செயல்

விளக்கம்:  இக்கல்வெட்டு முதற் பராந்தக சோழனின் 16ஆம் ஆட்சி ஆண்டு 923இல் வெட்டப்பட்டது. படுவூர் கோட்டத்தில் அடங்கிய ஒழுகையூர் நாட்டின் ஒழுமூரில் மண்ணில் அழுந்தி விடாமல் தேருக்கு வழிக் காவல் போகும் பொறுப்பு அதிகாரிகளும், யானைப் பேணுவோரும் அவை வீரச்செயலின் சிறப்பு என்று கருதி அவற்றுக்குக் காவலாய் இவர்களே இருந்து காக்க வேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. இங்கு  வீரச்செயல் என்ன என்பது பற்றித் தெளிவான குறிப்பு ஏதும் இல்லை. 4-5ஆம் நூற்றாண்டு பூலாங்குறிச்சி கல்வெட்டில் அத்திகோயத்தார் என்று குறிக்கப்பட்டது இங்கே அது கோசத்தார் என்று யகர சகர திரிபாக குறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு  ஆணைக் கல்வெட்டு ஆகும். அன்றைய ஒழுமூர் தான் இன்றைய ஒழுகூர். ஒழு என்றால் ஒய்வு இதாவது, யானை, குதிரை ஆகியன போரில்லாத போது ஒய்வு கொள்ளும் இடம் என்று பொருள். இதனால் ஒழுகூரில் பராந்தகன் காலத்தில் யானைப் படைக்கும், தேர்ப் படைக்கும் இங்கே நிலை இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

பார்வை நூல்: ஆவணம் 2019, பக்கம் 12

கல்வெட்டு தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் பெரும்பாலை பூவாலை சிவன் கோவில் அருகில் உள்ள 26 வரிக் கல்வெட்டு,

ஸ்வஸ்தி ஸ்ரீ வீரவல்லாள தேவர் ப்ரிதிவி இரா / ச்சியம் பண்ணியருளா நின்ற யு(வ) ஸம்வத்ஸ / ரத்து சித்திரை மாஸத்து (அத) பூர்வபக்ஷத்து / சதுர்தி திங்கட்கிழமை பெற்ற நாள் (சிமிளில்) கண் / டர  ஹனுமன் செம்பொந் தியாகப்பெருமாள் ப / வழத்தூரில் இருக்கையில் தண்டியதேவர் பவழ / த்தூரிலே புது படையாக்குகையில் தம்முடைய (ச) / ( மூ) கத்தில்  தந்திரிமாரை யழைத்து வேட்(ட)டினவர்  / களுக்கு ஊர்களுங் குடுத்து  வேண்டும் வரிசைகளு / (ங்) குடுக்கக் கடவேனாகவும் என்று குறுப்பு நாட்டில்  வி / சையன் மங்கலத்து முடக்கோழி வேட்டுவரில் செங் / குன்றந் மகன் சோழங்க தேவர் வேட்டி இரண்டு / குதிரையும் பிடித்துக் களத்திலே தாமும் படுகையி / ல் தம்முடைய தம்பி செம்பொன் தியாகப் பெருமாள் / திருமுன்பே குதிரை யிரண்டு மொப்பித்து குடுத்த / வளவில் சொன்னமை பாஷைக்குத் தப்புவராயர் கண் / டர் கண்டர்  ஹனுமன் பல வடகரை வஞ்சி நாட்டில் வா / ள கைகாட்டும் பெரும்பாலி பூவாலங்  காணியாட்சி / யாகக் குடுத்தேன் மதன வம்சத்து மத்தளி வகாரா _ _  /  ர் சூரியன் தட்டுக்(கு தட்டை) சிங்காரம் மலை கலங் / கிலு மனங் கலங்காத கண்டன் சோழங்கத் / தேவனுக் குடுத்தோம். இக்காணியாட்சிக்கு அல்லல் / பேசினார் உண்டாகில் கங்கை(மாக்) கரையிலே ப்ராஹ்ம / ணனை வதஞ் செய்தான் பாவம், குரால் பசுவை  / கொன்றான் பாவம் புகக்கடவார்களாகவும்  இ கா /  ணியாட்சி குடுத்தவனை  தே _ _ 

பிரிதிவி இராச்சியம் – மண்ணுலக அரசியம்; சிமிலில் – குடுமியில்; சமூகத்தில் – அருகில், சமீபம்; தந்திரி – படைத் தலைவன். பண்டு படைத் தலைவரே அமைச்சராகவும் இருந்தனர். வேட்டாடினவர் – போரில் விலங்குகளைப் பிடித்தோர்; வரிசை – அரசனின் பாராட்டு, மதிப்பு; ஒப்பித்து – ஒப்படைத்து; தட்டுக்கு தட்டை – அடிக்கிற அடியில்; சிங்காரம் – அழகு; காணியாட்சி – நில உரிமை.

விளக்கம்:  இக்கல்வெட்டு, போசள வேந்தன் வீர வல்லாளனின் 41ஆம் ஆட்சி ஆண்டில் இதாவது, யுவ ஆண்டில் மண்ணுலக அரசை ஆளுகின்ற போது சித்திரை மாதம் முதல் பாதி நாலாம் நாள் திங்கட்கிழமையில் குடுமியில் கண்டர அனுமனை சூடிய அரசர் செம்பொன் தியாகப்பெருமாள் பவழத்தூரில் தங்கி இருந்த போது தண்டியத் தேவர் பவழத்தூரில் புதிய படைத்தளத்தைக் கட்டிய போது தன் அருகே படைத் தலைவர்களை அழைத்து, போர்க்களத்தில் விலங்குகளைப் பிடித்தோருக்கு ஊர்களும் அளித்துச் செய்ய வேண்டிய மதிப்பும் செய்வேன் என்று சொல்ல, அப்போது குறுப்பு நாட்டில் விசையன் மங்கலத்தை சேர்ந்த முடக்கோழி வேட்டுவரில் செங்குன்றம் மகன் சோழங்க தேவன் போர்க்களத்தில் இரண்டு குதிரைகளைப் பிடித்து அக்களத்திலேயே வீரச் சாவடைந்தான். அவன் தம்பி செம்பொன் தியாகப்பெருமாள் முன்னே அந்த இரண்டு குதிரையையும் ஒப்படைத்த போது சொன்னபடியே பேச்சு தவறாமல் கண்டர் அனுமன் வடகரை வஞ்சிநாட்டில் நீள கைகாட்டிய பெரும்பாலையில் உள்ள பூவாலை ஊரை உரிமை நிலமாக கொடுத்தான். மதன வம்சத்து மத்தளியினர் இதை அனுபவிக்கட்டும், வெய்யில் அடிக்கிற அடியில் ஒரு மலை தன் எழில் குலைந்து கலங்கினாலும் கலங்கும் ஒழிய எதற்கும்  கலங்காத கண்டன் சோழங்க தேவனுக்காகக் கொடுத்தேன். இந்த நில உரிமையைச்  செல்லாது என்று பேசுவோர் இருப்பராயின் கங்கைக் கரையில் பிராமணனைக் கொன்றவன் அடையும் பாவத்தையும் குரால் பசுவைக் கொன்றவன் அடையும் பாவத்தையும் அடைவர். இந்த நில உரிமை கொடுத்தவனை என்பதற்கு மேல் கல்வெட்டு சிதைந்துவிட்டது.

பார்வை நூல்: ஆவணம் 33, 2022, பக்கம் 98 & 99

கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் 40 வரி வணிகக் கல்வெட்டு 

ஸ்வஸ்தி ஸ்ரீ சம / ஸ்த பு(வ)ன விக்யாத வீர /ர் வீரஸாஸன அனேக கு / ன கனாலம்க்ரித ஸ்த்ய ஸே / ஸா ஸாரி ஸாரித்ரய ஸமை / சம்புன்ன வளஞ்சிய ஸ்ரீ / மர்ஹதாரி மக்களாகிய எ / யிநாட்டு திருப்பெறு மாடப்ப / ள்ளித் தளத்தை ஞூற்றுவரோம் அ / ய்ங்குன்றத்து அய்கமநான மும் / முறி தன்மசெட்டிக்கு வீரதாவள / மாக வைத்தபடி, இவன் இருந்த ஊ / ரில் நமக்கள் வீரபெரு நிரவிமா / ரும் நாட்டு செட்டிகளும் வந்தவன / றுமெய் கண்டு சோறு உண்பதாக / வும் பணமென்றும் பாவாடை / கொங்கவாரெழுநூறும் கண்டழி / மூலபத்திரரும் ஐய்யன் போய் / களமடக்கி கீழ் மேற் காக்கை (பின்பக்கம்) / நாநாதேசியும் / கொற்றக்குடைப் படை முன் / நூறும் / யென்றும் கொள்ளப் பெறு / தார்களாகவும். இப்பரிசல்ல / து செய்வார் கெங்கை இடை / குமரியிடைப்பட மாப்ப / ட்ட பாவத்தில் படுவார். இவ / ந் சிறிய தம்பநு தமைய / நும் தொறு மீட்டுப்பட்ட / நன்மை கண்டு வைத் / தோம். இவன் பரியுடைமை / கண்டு வைத்தோம், தி / ருப்பெறு மாடப்பள்ளித் தளதை / ஞூற்றுவரோம். பதிலழிவாந் / நமில் வே / ரு வந் / ந் / பழவரி இவீர / நும் அப்பி / த் தம்பலமும்.   

பொருள்சமஸ்த பு(வ)ன– அனைத்து உலகும்; விக்யாத –  அறிந்த;  வீரஸாஸன – வீரர்  ஆவணம்; அனேக குண கனாலம்க்ரித – எல்லா ஒழுக்கமும் நிரம்பி அழகுறுத்தும் கூட்டம்; ஸத்ய ஸேஸா ஸாரி – வாய்மை, சிறப்பு, ஒழுக்கம்; ஸாரித்ரய – ஒழுக்கம் மூன்றும்; ஸமை – பொறையுடைமை, forgiveness; சம்புன்ன –  திறமை; மர்ஹதாரி – புகழ்மிக்க; தளதை – படைக்குழு உள்ள இடம், military base; ஞூற்றுவரோம் – நூற்றுவர்; அய்கமநான –  உயர் தலைவனான ( – தலைமை, கமனம் – செலுத்தல்), high commander; மும்முறி – மூன்றுமுறை முறியடித்த; வீர தாவளமாக  – வீரர்க்குரிய ஆதரவாக, army base; வைத்தபடி – கொடுத்தபடி; நிரவிமார் – மதிப்பீட்டாளர்; அறுமெய் கண்டு – நன்மை (goodness) கண்டு; பாவாடை – மதிப்புறு ஆடை; வார் -கயிறு; கண்டழி மூலபத்திரர் – துணைநிற்கும் மூலப்படை; ஐய்யன் போய் – இமைக்கும் நேரத்தில் விரைந்து சென்று, in no time,  கண்ணை குறிக்கும் வழக்கொழிந்த தமிழ்ச் சொல் ஆனால் இன்றும் ஆங்கிலத்தில் Eye என்றே வாழ்குகிறது; களமடக்கி – வென்று போர்முடித்து; காக்கை – காப்பதற்கு; பரிசு – நற்செயல்; பரியுடைமை – இரங்குகை, பாதுகாப்பு; பதிலழி – பதிலாகச் செல், மாற்றாள், go as a substitute. பதில் தமிழல்ல என்போர் தம் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கும் கல்வெட்டு இது.

விளக்கம்: இக்கல்வெட்டு 12 – 13 நூற்றாண்டினதாகும். எல்லா உலகும் அறிந்த வீரர்தம் வீர ஆவணமாவது பல குணம் கொண்ட கணத்தால் அணி செய்யப்பட்டு வாய்மை, சிறப்பு, நல்லொழுக்கம் என மூன்று ஒழுக்கமும் பொறைமையும்  திறமையும் அமையப்பெற்ற வளஞ்சிய வணிகக் குழு என்று வணிகரின் மெய்க்கீர்த்தியைச் சொல்கிறது. “வளஞ்சிய வணிகக் குழுவின் புகழ்மிக்க மக்களாகிய எயிநாட்டு திருப்பெறு மாடப்பள்ளிப் படைத்தளத்தைச் சேர்ந்த நூற்றுவர் நாம் ஒன்றுகூடி ஐங்குன்றத்துப் படைத்தலைவரும் மும்முறை எதிரிகளின் தாக்குதலை முறியடித்தவரும் ஆன தன்மசெட்டிக்கு வீரர்க்குரிய ஆதரவை  (support) கொடுத்தபடியாவது, இவன் இருந்த ஊரில் நம் மக்களான வீரபெரு மதிப்பீட்டாளரும் நாட்டுச் செட்டிகளும் வருபவரின் நன்மை கருதி சோறு உண்பதற்குப் பணமாகவும் மதிப்புறு ஆடையாகவும் கொங்குநாட்டின் கயிறு எழுநூறும் கொடுத்தனர். துணைநிற்கும் மூலப் படையினர்  விரைந்து போய் போர் முடித்து, கிழக்கு மேற்கு திசையைக் காப்பதற்கு  நாநாதேசி குழு வணிகரும் அரசகுடையும், படை முந்நூறு எண்ணிக்கையையும் கொள்ளப் பெறுவார்களாக” என்று ஏற்பாடு செய்கின்றனர்.  இந்த நற்செயலை இல்லாமல் அழிப்பவர் கங்கை இடை குமரியிடை வாழ்பவர் செய்த பாவத்தில் வீழ்வார். திருப்பெறு மாடப்பள்ளித் படைத்தள நூற்றுவராகிய நாம் “இவனுடைய சிறிய தம்பியும்,  தமையனும் கால்நடை மீட்டு இறந்த நற்செயல் கண்டு இதை கொடுத்தோம்”. “இவனுடைய பெருமை கண்டு இதை கொடுத்தோம்”.  இறுதி வரி விளங்கவில்லை. (பதிலழிவான் என்றால் மாற்றாள் (substitute) என்று கொண்டால் நம்மிடையே மாற்றாளுக்கு உரிய பழைய கட்டு (வரி) போலவே இவ்வீரனுக்கும் அவ்வழியாக கிட்டட்டும் ( தம்பலம்).

வணிகர் நெடுவழியில் தம்மை ஆரலைக் கள்வர் தாக்கி அழித்து தம் பொருளை கவர்ந்து செல்லா வண்ணம் தமக்குத் தாமே ஒரு படை கட்டிப் போரிட்டுத்  தம்மையும் தம்பொருளையும் பேணிக் காத்துக்கொண்டனர். அவ்வாறு ஒரு நிகழ்வில் வளஞ்சிய வணிகர் தன்ம செட்டியின் போர்ச் செயலை கேள்வியுற்று அவனைப் பாராட்டி அவனுக்கு மேலும் படை ஆதரவைக் கூட்டி வழங்கினர் என்பதே இக்கல்வெட்டு செய்தி.

பார்வை நூல்: ஆவணம் இதழ் 30, 2019

கேரள மாநிலம்  பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள பட்டணம்புதூரில் காணப்படும் 20 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு. 

ஸ்வஸ்தி ஸ்ரீ ஸமஸ்த புவ / நாச்ரய பஞ்ச சத வீர / சாஸனஞ் செய்த பரிசாவ / து நாடாழ்வானை எறிஞ்ச கொங்க ம / ண்டலமுய்யக் கொண்டானும் நாடாழ் / வானை எறிஞ்ச அய்யபொழில் நம் / பியும் (பசும்பை நுவக்கியை) எறி / ஞ்ச எழுமடி கொங்கரிளஞ் சிங் / கமும் களக்காடுடையானை எறிஞ்ச  / அஞ்ஞூற்றுவ பேரரையனும் வீரர்கள் ம / _ _ _ பொன் வில்லார் புத்திரனும் / திகை மாணிக்கச் செட்டியும் அறை / ஞாட்டுப் பொரத்தி  நிரந்த வீ / ர பெரு நிரவித் திகை ஆயிரத்த / ஞ்ஞூறவரோம் பொரத்திக்குந் தான் / றிக்கும் வீரப்பட்டனஞ் செய்து / குடுத்தோம். பணிசெய் மக்களானா / ர்  மெய்க்கண்டு சோறுண்க.  பண்டை கோ / ரவி வீரமாணிக்க செ(ட்)டி _ _ _ / (ளச்சரப் பேரையே) 

ஆஸ்ரய – அடைக்கலம், ஆதரவு, புகலிடம்; பரிசு – விவரம்; எறிஞ்ச – வென்ற, கொன்ற; திகை – திசை; பொரத்தி – பொறுமை, ஓய்வு, தங்கில், rest house < பிற சொற்களில் இருந்து பெற்ற ஊகம் தான் இதற்கு நேரடிப் பொருள் இல்லை; நிரந்த – நிறைந்த; வீரபெரு – வீரம்மிகுந்த; தான்றி – எல்லை வேலி; வீர பட்டணம் – வீரர் தங்கும் சிற்றூர்.

விளக்கம்:  இக்கல்வெட்டு 10ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. சேர அரசர் ரவி பெயர் இறுதியில் குறிக்கப்படுவது இதற்குச் சான்று. உலகுக்கெல்லாம் புகலிடமான ஐந்நூற்றுவ வணிகர் குழு தம் வீர ஆவணத்தில் செய்திட்ட விவரம் யாதெனில், “நாடாழ்வானை வென்ற கொங்க மண்டலம் உய்யக் கொண்டானும், நாடாழ்வானை வென்ற ஐயம்பொழில் நம்பியும், பசும்பை நுவக்கியை வென்ற ஏழு மடங்கு கொங்கர் இளஞ் சிங்கமும், களக்காடுடையானை வென்ற ஐநூற்றுவ பேரரையனும், _ _ _ பொன் வில்லார் மகனும், திசை மாணிக்கச் செட்டியும் அறை நாட்டு பொறுமை நிறைந்த வீரம் மிகுந்த நிரவியைச் சேர்ந்த திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரும் சேர்ந்து ஓய்வு இல்லத்திற்கும் அதன் எல்லை வேலிக்கும் அடங்கிய வீர பட்டணம் (குடியிருப்பு) செய்து கொடுத்தனர். இங்குப் பணி செய்யும் மக்கள் உண்மையை அறிந்து பின் சோறு இட வேண்டும். பண்டு அரசன் ரவி (பாஸ்கர ரவி அல்லது தாணு ரவி) வீர மாணிக்கச் செட்டிக்கு என்பதோடு கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளது.

இன்றைய பட்டணம் புதூரே பண்டைய நிரவி ஆகும். இங்கு தான் போரில்லாத காலத்தில் அல்லது நோயுற்ற காலத்தில் ஓய்வு கொள்ள வீர வணிகருக்கு என்று தங்கில் அமைந்தனர் திசை ஆயிரத்து ஐநூற்று வணிகர். பிராமணர் தான் தமிழில் சமசுகிருதம் திணித்தனர் என்பதை பொய்யாகும் விதமாக வணிகரும் தமது மெய்க்கீர்த்தியை சமசுகிருதத்தில் எழுதி வைத்துள்ளனர் என்பது அதை பொய்யாக்குகிறது.  மனுஸ்ம்ரிதி சத்திரியருக்குத் தான் போர்த் தொழிலை உரித்தாக்குகிறது ஆனால் நாடோடும் வணிகரும் போர்த் தொழில் புரிந்தது மனுஸ்ம்ரிதி மீறல் அன்றோ? இது மநுஸ்மிருதி நடைமுறையில் இல்லாத ஏட்டுச் சுரைக்காய் என்பதை உணர்த்துகிறது.

பார்வை நூல்: ஆவணம் 33, 2022, பக்கம் 9 & 10

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் நல்லமனார்கோட்டை என்னும் ஊரிலிருந்து வலப்புறமாக இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெரும்புள்ளி என்னும் ஒரு சிறிய கிராமம். அங்குள்ள கன்னிமார் கோவிலுக்குச் செல்லும் வழியில் வயல்வெளிகளினூடே இரண்டு நடுகற்கள் உள்ளன. அதில் ஒரு நடுகல் இரண்டாக உடைந்த நிலையில் கல்வெட்டுகளைத் தாங்கியுள்ளது. இதன் காலம் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு பத்தாம் நூற்றாண்டாக கொள்கின்றனர்.

1.ஸ்ரீ அரையரெள்

2 ளி கோய்த்திர

3 னான மதுரா

4 ந்தகப் பள்

5 ளி வேளான் ப

6 ள்ளி நாட்டு நி

7 ரை போகயில்

8.பட்டான்

விளக்கம்: அரையர் எள்ளியின் கோத்திரத்தைச் சேர்ந்த மதுராந்தகப் பள்ளி வேளாண் என்பவன் பள்ளி நாட்டின் நிரைகள் கொள்ளை போகையில் அதை மறித்து வீரச் சாவடைந்தான் என்பது கல்வெட்டின் பொருள். பல்லவர் ஆட்சிக் காலத்தில் வேள் என்ற சங்க காலச்சொல் அரையர் என்ற மாற்றுச் சொல்லால் கைவிடப்பட்டாலும் அச்சொல் வேளுடைய ஆள்  என்ற பொருளில் வேளாண் என்ற மற்றொரு சொல்லால் அழியாமல் தொடர்ந்து புழங்கி வந்துள்ளது. வேளாளன் = வேள்  + ஆள் + அன். வேளாண் என்போர் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் பங்காளிகள், சொந்தக்காரர்கள் என்பதையே இக்கோத்திரக் குறிப்பு குறிக்கின்றது. வேள், அரையன் ஆகிய சொற்கள் duke என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானவை. வேந்தனுக்கு (emperor) படைத் தளபதியாக மன்னன் (king) இருந்தான். மன்னனுக்கு படைத் தளபதியாக அரையன்/வேள் (duke) இருந்தான். இந்த அரையனுக்குப் படைத் தளபதியாக கிழான் (knight) இருந்தான். ஆக இந்த படைத் தளபதிகள் அமைத்த சாதிகள் தான் ஆண்ட பரம்பரை என்னும் இன்றைய நிலவுடைமைச் சாதிகள்.

இந்த வேளாண்களே பண்டு நிலவிற்பின் போது உடன் இருந்து கண்காணித்து கையெழுத்திட்டுள்ளனர் என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.  இதே வேளாண்களிடம் தான் நீதி வழங்கும் நியாயத்தர் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வேளாண்கள் தான் சில இடங்களில் வெள்ளாளராகவும், சில இடங்களில் பள்ளிகளாகவும் சில இடங்களில் அம்பலக்காரர் என்றும் உள்ளனர்.

ஆவணம் , இதழ் – 18,  2007, பக். 21 மற்றும் கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.