Tag: தீபா சரவணன்

  • ஸ்ராவணி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்


    மரணம். . . . .

    இரண்டாவது  நாளும் மருத்துவமனை  படுக்கையில் கிடக்கும் ஸ்ராவணியைத் தேடிவரவில்லை. ஆனால் வந்ததோ ஒரு தனியார் தொலைக்காட்சியின் மேக்கப்மேனும் ஒரு பெண் நிருபரும். இரண்டு கேமரா அசிஸ்டென்டுகளும் உடன் இருந்தனர். மருத்துவ அதிகாரிகளின் அனுமதி அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்திருந்தது.

    “இல்ல நாங்க ஒருவிதத்திலும் சிறுமியை  தொல்லை  செய்யமாட்டோம்.”

    நிருபரான ரேணுகா இரண்டாவது நாளும் மரணம் தேடிவராத மாணவியின் பெற்றோரிடம் நயமாகக் கூறினாள். மேக்கப் மேன் சுனில் பட் அதிகம் பேசாத குணம் உடையவனாதலால் தலையை மட்டும் ஆட்டி ரேணுகாவிற்குத் துணைநின்றான். எப்படியிருந்தாலும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு கொஞ்சம் அவசரம்ங்கற தோரணை அவனது முகத்தில் ஓடியது.

    ”சொல்லப்போனா நேத்தே நாங்க வந்திருக்க வேண்டியது. எங்க துரதிர்ஷ்டம் என்ன நடந்துச்சுனு இன்னைக்குக் காலைலதா ஆபீஸ்க்கே தெரியுது. உடனே  நாங்க இங்க வர்றோம்.”

    ரேணுகா விளக்கினாள். அதற்குமேல் அவளுக்கொன்றும் சொல்வதற்கில்லை. தனது படபடக்கின்ற மனதுக்கு ஓய்வு கொடுக்கலாம் என நினைத்து தனது பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை வெளியில் எடுத்தாள். ஆனால் மருத்துவமனைக்குள் புகைக்கலாமா என்ற சந்தேகத்தில் மீண்டும்  அதை பைக்குள்ளேயே வைத்தாள்.

    “டோன்ட் கெட் எக்ஸைட்டடு. டேக் இட் ஈஸி” சுனில் மெல்லிய குரலில் கூறினான்.

    ”ஐ ஆம் ஆல்ரைட்” அவள் சிரிக்க முயற்சித்தாள்

    சென்ட் தேரேசாஸ் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாவது மாடியிலிருந்து ஸ்ராவணி குதித்தது மிகக்கொடுமையான விஷயம் என்றாலும் இரண்டாவது நாளாகியும் மரணம் அவளைத்தேடி வரவில்லை. ஃபினோயில் வாசமுள்ள வழிகள், படிக்கட்டுகள் வராந்தா, மொட்டைமாடி என எங்காவது மரணம் பதுங்கி நின்றுகொண்டிருக்கும். இல்லை நிறம் மங்கின ஜன்னலுக்கருகில் நிலத்தைத்தொடாமல் வாயுவில் கலந்து ஜன்னல் கம்பிகள் வழியாக அவளைப்பார்த்துக் கொண்டிருக்கும். விழுந்து நொறுங்கிய பல பாகங்களையும் சேர்த்து வைத்துத் துணியால் மூடப்பட்ட ஒரு மண்பொம்மை போல கிடக்கிறாள்.

    பளீரென  ஓர்  ஒளி கண்களில்  பட்டபோது அவள் நெளிந்துகொண்டு கண்களைத் திறந்தாள். ஆனால் பாதி திறந்த கண்கள்  வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல்  மூடவேண்டியிருந்தது.

    “கட்”- ரேணுகா கூறினாள்.

    சென்ட் தேரேசாஸ் ஹைஸ்கூலின் தரைத்தளத்தில் உள்ள ஆபீஸ் அறையிலிருந்து சிஸ்டர் மெர்சிலின் மிருதுவான இருக்கையிலிருந்து மேக்கப்மேன் சுனில்பட்டைப்  பார்த்தார்.

    ”ஓ.கே”- சுனில் கூறினான்

    ரேணுகா கேமராவின் ஒரு பக்கத்தில் குனிந்து நின்றுகொண்டு சிஸ்டர் மெர்சிலினிடம் பேசத்தொடங்குமாறு கை அசைத்துக் கூறினாள்.

    “ஸ்ராவணி, யெஸ் ஐ ரிமம்பர்…… அவள் மார்க்ஷீட் வாங்க தனியாகத்தான் வந்தாள். சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பினும்  இங்க  எம்முன்னாடி உட்கார்ந்து சில ரெஜிஸ்டர்கள சரி செய்திட்டிருந்தாங்க. அப்போதுதான் ஸ்ராவணி வந்தா”

    ஸ்ராவணி அறைக்குள் ஏறிவந்தபோது சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பனும் ஒரு நிமிடம் முகமுயர்த்தி அவளைப் பார்த்தனர். சிஸ்டர் இடா அவளுக்கு பௌதீக ஆசிரியர். வரலாற்று ஆசிரியர் க்ரிஸ்பின். முகபாவத்தில் எந்த மாற்றமும்  இல்லாமல் அவளைப் பார்த்தனர். இருவரும் தங்களின் வேலையைத் தொடர்ந்தனர். அவள் சிஸ்டர் மெர்சிலினுக்கு அருகில் நின்றாள். அவளுடைய முகத்தில் தயக்கம் தெளிவாகத்  தென்பட்டது.

    ”நீ இந்த முறையும் பாஸ் பண்ணல. இந்த மார்க்ஷீட்ட எடுத்திட்டுப்போய் பேரன்ஸ்கிட்ட காட்டு. அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.” சிஸ்டர் மெர்சிலின் கூறினாள்

    சிஸ்டர் இடாவும் சிஸ்டர் க்ரிஸ்பினும் வேலைக்கிடையில் மெதுவாக  சிரித்தனர்.

    ’யூனிஃபாமும் புத்தகமும், ஷூஸும் எல்லாம் வாங்கி இங்க அனுப்பும்போது  மனசில என்ன நெனச்சீங்கனு அவங்ககிட்ட கேட்கணும். சிஸ்டர் மெர்சிலின்  மார்க் சீட்டை ஸ்ராவணிக்கு நேராக நீட்டினாள். அவள் மார்க் சீட்டை வாங்கிய உடனே சிஸ்டர்  காலிங் பெல்லில் விரல் அமர்த்தினார்.

    ஸ்ராவணி வெளியேறினாள். அடுத்த சுற்று தெல்மா ஜோர்ஜினுடையது. பிறகு மேகாஜெயின். அதுக்கப்புறம் பவ்யலட்சுமி, அவளுக்குப்பிறகு ராகேஸ்வரி. அடுத்தது நேஹா மைத்ரா. பிறகு அனுஸ்ரீ கிட்வானி  பிறகு டெல்னாஸ்  ஒரே மாதிரி சீருடை அணிந்த சிறுமிகளின் நீண்ட வரிசை அவர்களுக்கு பக்கத்து வழியாக ஸ்ராவணி நடந்தாள்.

    ”இதுதான்  ஸ்ராவணியோட மார்க் சீட் ” ரேணுகா கேமராவின் நேராக அதை உயர்த்திப்பிடித்தாள். அடுத்தடுத்து கீழ்கீழாக குறிக்கப்பட்ட எண்களின் மேல் கேமராவின் நுண்ணியக்காட்சிப் படர்ந்தது. ரேணுகா மார்க் சீட்டின் மறுபக்கத்தைக் காட்டினாள். அங்கே எண்களில்லை. சில வார்த்தைகள். வித்தியாசமான ஒரு மன்னிப்புக்கடிதம். அதற்குக்கீழ் ’உங்களுக்கு சொந்தமான ஸ்ராவணி’

    ”நா  அவளோட அப்பா…….”

    அவர் ரேணுகாவின் முகத்தைப்பார்த்துக் கூறினார். கூட்டமான ஒரு தெரு வழியாக அவர் மூச்சு வாங்க ஓடினார். பலரும் இடித்துக்கொண்டு ஓடியதால் அவருடைய ஓட்டம் தடைபட்டது. சில வாகனங்கள் அவருக்கு அருகில் வந்து திடீரென பிரேக்கிட்டு நின்றன.  ஃபோன் சத்தங்கள் முழங்கின. வித்தியாசமான ஒரு போட்டிக்கிடையில்  மதம் பிடித்த குதிரையைப்போல அவர் பாய்ந்தார்.

    ’வித்யா மந்திர் ஹயர் செகன்ட்ரி’ பள்ளியில் பிரின்ஸிபல் அருணா தேசாய் ரிஸீவரைக் கீழேவைத்துத் தனக்கு முன்னால் உள்ள ஆங்கில ஆசிரியரான சாகரிடம் கூறினார்.

    ”சென் தேரேசாசில் ஒரு சிறுமி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து விட்டாள். அந்த குண்டு சிஸ்டரோட அகம்பாவம் இனி  கொஞ்சம் குறையும். அவ வெளியில என்ன  சமாதானம்  சொல்லுவாள்

    ”நம்மை தோற்கடிக்கக் கிடைக்கற ஒரு வாய்ப்பையும் சென்ட் தரேசாஸ் வீணாக்கனதில்ல” சாகர் ஞாபகப்படுத்தினான்.

    ஆ……….மா……….

    ”இத நமக்கு பெரிசு பண்ணனும்”

    ”இப்ப நாம இதைப் பெரிசாக்கணும்”

    ”நம்ம சிஸ்டர் மேர்சிலினை இப்பவே போய் பாக்கலாம்”

    சில நிமிடங்கள் கழிந்து அருணா  தேசாவும், சாகரும் கிளம்பினர். அருணாதான் கார் ஓட்டினாள். சாகர் இடதுபக்கம் உட்கார்ந்தான். கார் சென்ட்தெரேசஸை இலட்சியமிட்டு அதிவேகமாகச் சென்றது.

    சிஸ்டர் மேர்சிலினாவின் முகம் திடீரென இனம் புரியாமல் இருண்டது. பார்க்க வந்தவர்கள் கதவுக்கருகில் நின்றனர்.

    அருணாதேசாவும் சாகரும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஒரு வரவேற்பை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்ற சிந்தையைப் பங்கிட்டு அறைக்குள் நுழைந்தனர்.

    ”ரொம்ப சங்கடமா இருக்கு சிஸ்டர் மேர்சலின்” – அருணா தேசாயி கூறினாள்

    சிஸ்டர் மேர்சிலின் மனதில் ஒரு முணுமுணுப்பு மேலிட்டது. ’தேவிடிச்சி சங்கடமா இருக்குதாமா’

    ”உட்காருங்க!…….”. மனதின் முணுமுணுப்பை அடக்கிக்கொண்டு உபச்சாரப்பூர்வமாக சிஸ்டர் மேர்சிலின் கூறினாள்.

    ”அருணாவும்  சாகரும் திடீர்னு இங்கெ!!!!!……”

    ”குழந்தைங்க இப்படி அவங்களப்பத்தி ஓர் உணர்வில்லாமப்  பழகினா நாம என்ன செய்யமுடியும்? சமூகம் நம்மைத்தானே  குத்தஞ்சொல்லும்.”

    சிஸ்டர் மேர்சிலானாவின் மனது மறுபடியும் சகிக்கமுடியாமல் புலம்பியது. ’காமப்பிசாசு. அழுக்கு   டிச்சிலிருக்கற புழு, மூதேவி.’

    ’ஆமா’- சிஸ்டர் மேர்சிலினா  ஆழ்ந்த சிந்தனையிலிருந்து வெளிவந்தவளாய் கூறினாள்.

    ”இனி இப்போ  பேப்பர்காரங்க இத ஊதி பெரிசு பண்ணுவாங்களே அதுதா பிரச்சனை”.  சாகர்  சுட்டினான்.

    ”டி.வி.காரங்க சும்மா இருப்பாங்களா? ”அருணா கேட்டாள்.

    ரேணுகா, சுனில் பட்டின் காதுகளில் ஏதோ கூறினாள். சுனில் கேமரா ஆஃப் செய்தான். அந்த நிகழ்வின் இறுதியில் ஸ்ராவணி கண்கள் மூடிக்கிடந்தாள்.

    ஒரு முழக்கம் கேட்கிறதே அவள் செவிமடுத்தாள். கடல் அலைகள். கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு நேராக உயர்ந்து வீசி பலவகை நீர்க்கைகளாக அவை வாயுவில் கலந்தன. எல்லைக்கருகில் நிற்கிறவர்கள் ஆரவாரம் செய்தனர். மின்சார விளக்குகளின் ஒளியில் நீர்க்கரங்கள் மின்னியது. ஸ்ராவணி தம்பியின் கையைப்பிடித்துக்கொண்டு  பின்னால் நகர்ந்தாள்.

    அப்போது கறுப்பு நிறக் கோட்டும் பெரிய தொப்பியும் வைத்த ஒருவன் இருட்டிலிருந்து அவளுடைய முன்னால் வந்தான். தோளில் மாட்டின பையிலிருந்து ஒரு கத்தி எடுத்து அவன் தனது கழுத்தில் குத்தினான். ஸ்ராவணி பயந்து சத்தமிடத்தொடங்கினாள். அவனின் கை அசைந்தது. கைப்பிடிவரைத் தாழ்ந்து இறங்கிய கத்தி மறுபடியும் வெளியில் நீண்டு வந்தது. அவன் சிரித்தான். இரண்டு பன்றிகள் போல இருந்தது. ட்ராகுலாவின் முகமாயிருந்தது அவனுக்கு. ஸ்ராவணி அடக்கிப்பிடித்த சத்தத்துடன் பின்னால் நகர்ந்தாள். அவன் தனது செயற்கைப் பற்களை கைகளில் உமிழ்ந்துவிட்டு சத்தமாக சிரித்தான்

    . ஹ……..ஹ….ஹ….ஹ…….

    ”ஸ்டார்ட்” ரேணுகா கூறினாள்

    சுனில் கேமரா ஆன் செய்தான்.

    மாறுவேடக்காரனுடைய சிரிப்பு ஸ்ராவணியின் காதுகளில் முழங்கிக்கொண்டிருந்தது.

    Share
  • நெடும்பாவில் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    நெடும்பாவில் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
                        உதவிப்பேராசிரியர்
                        ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ’எச்’ தாலுக்காவின் ஐம்பதாம் எண் வாக்குச்சாவடி எதுவென்று தெளிவானது. நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள நெடும்பாவில்

    “கலெக்டரின் கணினியில் இத்தனை நாட்களாக பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய இரகசியங்களில் ஒன்று இதுதான்” என்பதை முதலாவது சாவடியின் ஆபிஸர் சிவப்பட்டேரிக் கூறினார். உயர் இரத்த அழுத்தத்தைக் காரணம் காட்டி தன்னை தேர்தல் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    பழக்கப்பட்ட தாலுக்கா ஆபிசின் வாசிலில் நானும் மூன்று வாக்குச்சாவடி அலுவலர்களும் ஒரு வாக்குச்சாவடி அசிஸ்டெண்டும் உடன் இருந்தனர். நாங்கள் தேர்தல் சம்பந்தப்பட்ட பொருள்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்தோம்.

    அதற்கிடையில் ஒரு பழக்கமில்லாதவன் எங்க பக்கத்தில் வந்தான்.

    ”இங்க எங்கே…….?” அவன் நலம் விசாரித்தான்.

    ”நெடும்பாவிற்கு” நான் சொன்னேன்.

    ”ஹா! நெடும்பா!

    நல்ல இடம்…… .நா பல தடவ அங்க போயிருக்கேன்”  அறிமுகமில்லாதவன் இனம் புரியாத சிரிப்புடன் கூறினான். அவனின் கண்கள் ஜொலித்தது. நான் கொஞ்சம் சந்தேகத்தோடு சிவப்பட்டேரியின் முகத்தைப்பார்த்தேன்.

    ”அங்கே சௌகர்யமா இருக்குமா?”

    சிவப்பட்டேரி அவனுக்கு நேராகத் திரும்பினான்.

    சாரே என்ன சௌகர்யம் வேணும்? நல்ல காட்டுப்பூனை போல இருக்கிற பொம்பளங்க இருக்கற ஊருதா. வெளியிலிருந்து வர்ற ஆளுங்களப் பார்த்தாலே குதித்து விழுவாங்க. கறுப்பா இருந்தா என்ன? தேகத்தோட ஒரு வடிவமிருக்கே? போதாக்குறைக்கு பச்ச மருந்துகளோட மணமும்; அறிமுகமில்லாதவன் இவ்வளவும் கூறி, கூடுதலாக வேறெதுவும் கேட்க இடந்தராமல் கூட்டத்தில் கலந்தான்.

    மதியவேளை. ஜீப் அதிகவேகமாகப் பாய்ந்தது. நான் ரூட் ஆபிசர்க்கும் டிரைவருக்குமிடையில் அமர்ந்திருந்தேன். சிவப்பட்டேரியும் மற்றுள்ளவர்களும் பின்னால் அமர்ந்திருந்தனர்.  பின்னால் அவர்களுக்கு நடுவில் இரண்டு வாக்கு பெட்டிகள். எண்ணி அடுக்கப்பட்ட எண்ணூற்றி முப்பது வாக்கு காகிதங்கள். திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணை அழியாத மை. அரக்கு. முத்திரை. காடாத்துணிப் பைகள் முதலியவை. ஜீப் பின்னுக்குத் தள்ளப்படுகின்ற நகரக்காட்சிகளில் ஆங்காங்கே காமசூத்ராவின் விளம்பரங்கள். அவை படிப்படியாக இல்லாமல் போனது. வெளிக்காட்சிகள் மாறியது.

    காய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்ட செருப்புகளும், தொங்க விடப்பட்ட தோல் சுருளுகளும், நாங்கள் கடந்து செல்வது செருப்பு தைப்பவர்களின் கிராமம் வழியாக என்பதை வெளிப்படுத்தியது.

    வரண்ட உற்சாகமற்றச் சற்றுப்புறங்கள். ஏதோ பழமையான ஒரு கடவுளின் கோயிலுக்கு முன்னால் சில சிறுவர்கள் அம்மணமாக அசைவற்று நின்று கொண்டிருந்தார்கள். நிழல்களில் சாய்ந்து படுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்கள்.

    ”இனியும் ரொம்பகாலத்துக்கெல்லாம் இவங்க  செருப்பு தயாரிக்க மாட்டாங்க” வயதானவர்கள் மேலிருந்த பார்வையை நகர்த்தி ரூட் ஆபிஸர் கூறினார்.

    ”அது ஏ அப்படி?” டிரைவர் அந்த காரணத்தை அறிய விருப்பம் காட்டினார்.

    ”மிருக வதை நிறுத்தப் போறாங்க இல்லையா?. அப்பறம் இவங்களுக்கு தோல் எப்படிக் கிடைக்கும்” ரூட் ஆபிஸர் கம்யூனிசக் கண்ணோட்டத்தோடு கூறினார்.

    ஜீப் போய் கொண்டிருந்தது.   காய்ந்த கிளைகளுள்ள மரங்களுக்கிடையில் வெயில் மின்னியது. நான் கண்களை மூடினேன். பிறகெப்போதோ குயவர்களின் ஊர் வந்தது. வரிசை வரிசையாக மண்பாண்டங்கள்.

    ”நாம இனியும் அந்த எடத்துக்குப் போகல இல்லையா?” பின்னாலிருந்து மூன்றாம் ஆபிஸரான அரபி  மொழியாசிரியர் கேட்டார்.

    ”பாதி தூரம்தான் ஆயிருக்கு” ரூட் ஆபிஸர் கூறினார். சுவர் விளம்பரங்களோ வெளியில் எங்கும் காணவில்லை. ஒரு பாலைவன பூமி போன்ற இடம் வழியாக ஜீப் நகர்ந்தது.

    முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மஞ்சள் கட்டிடத்தின் முன்பாக ஜீப் தனது பயணத்தை முடித்தது. அரசு அலுவலகம் என்று சுவரில் கறுப்பு நிற எழுத்தால் குறிக்கப்பட்டிருந்தது. நான் வெளியிலிறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். செம்மண் மைதானத்தின் ஓரங்களில் கறுப்பு நிறப் பாறைகளும், நரைத்த முடி போன்ற ஒரு வகை புல்லும், வடக்குப் பக்கத்தில் ஒரு பெரிய காற்றாடி மரமும் அசையாமல் நின்றது.

    ”இங்கேயெல்லாம் யாரையுமே காணோமே” சிவப்பட்டேரி சொன்னான்.

    ”ஆளுக எல்லாம் அங்கக் கீழே இருப்பாங்க. ரூட் ஆபிஸர் காற்றாடி மிஷினுக்கு நேராக கை காண்பித்தார்.

    போலிங் அசிஸ்டெண்டும், மற்ற இரண்டு சாவடி ஆபிஸர்களும் ஜீப்பிலிருந்து தேர்தல் அறைக்கான பொருட்களைக் கீழே இறக்கினர். ரூட் ஆபிஸர் கட்டிடத்தைத் திறந்தார். அதற்குள்ளிருந்து நாற்றம் வந்தது.

    “நாசம் புடிச்ச எலிங்க. நேத்துதா அத்தன எலிப்பீயையும் எடுத்து வீசினேன்” ரூட் ஆபிஸர் கோபப்பட்டார்.

    எலிகளை எங்கும் பார்க்க முடியல ஆனால் நாங்கள் இருக்கிறோம் என்கிற சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தன.

    ”பாத்துக்கோ இன்னைக்கு இங்க ஆளிருக்கு. தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கியும்  புடிச்சு ஒரு போலீஸ்காரணும் நிப்பா” ரூட் ஆபிஸர் எலிகளை மிரட்டினார். அவைகளோ அவரின் மிரட்டலை ஏற்றுக்கொண்டது போல மேலும் சத்தமிட்டது.

    “பரவால்லே” ரூட் ஆபிஸர் தனது வேலையில் ஈடுபட்டார். அவருக்கு அவசரமாகத் திரும்பிப்போக வேண்டியிருந்தது.

    ”கீழே ஐயா என்கிற ஆளோட டீக்கடை இருக்கு. சாப்பாடு அங்கே கிடைக்கும். தண்ணிக்கும் பிரச்சனையில்லை. இதுக்கு மேலே ஒரு சௌகர்யம். இந்த மாதிரி இடத்தில எதிர் பார்க்கக் கூடாது இல்லையா?”. அவர் அலுவலகத்தின் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு ஜீப்பிற்கு நேராக நடந்தார்.

    நாங்க வேலை தொடங்கினோம். நெடும்பாவில் வெயில் மங்கத் தொடங்கியது. இருட்டறதுக்கு முன்பு நிறைய வேலைகள் முடிக்க வேண்டியிருக்கு. அதிகாலைல எழுந்திருக்க வேற செய்யணும். போலிங் ஏழு மணிக்கே ஆரம்பிக்க வேண்டும். திடீரென என்னமோ மேலிருந்து வந்து எங்களுக்கு நடுவில விழுந்தது.

    நான் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஓடினேன். வெளியில் கறுப்புநிறச் சிறுவன். அவனுடைய கண்களில் விசித்திரமானப் பார்வை தெரிந்தது. ஒன்று ரெண்டு நிமிடங்கள் அவன் அப்படியே நின்றுவிட்டு வேகமாக ஓடினான்.

    ஒரு கல்லில் பொதிந்து எதையோ அவன் எங்களுக்கு நடுவில் எறிந்த செய்தியை அதற்குள் அனைவரும் வாசித்திருந்தனர்.

    ”ஒ. இது கொடூரம் தான்” அரபி மொழியாசிரியரின் முகம் வெளிறியது.

    ”நாம என்ன பண்றது”?. ரெண்டாம் போலிங் ஆபீஸரான ஓவிய ஆசிரியர் பயத்தோடு கேட்டார்.

    வெளியில் ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது. எங்களது கவனம் அங்கே திரும்பியது. கரும் நீல நிற வாகனம் ஒன்று மைதானத்திற்கு அருகில் நின்றது. யூனிஃபோம் அணிந்த ஒரு போலீஸ்காரன் கையில் மூங்கில் தடியும் மற்றொரு கையில் பையுடன் இறங்கினான். பையை கீழேவைத்துவிட்டு மூங்கில் தடியை இடது தோளில் சொருகிவிட்டு வாகனத்தின் முன்சீட்டில் இருக்கும் மேலதிகாரியை அதிகாரப்பூர்வமாக வணங்கினார். வாகனம் திரும்பிச் செல்லும்வரை அவர் அதே நிலையில் நின்றார்.

    ”அப்பாடா! சரியான நேரத்துக்கு போலீஸ்காரர் வந்தாரே” போலிங் அசிஸ்டெண்ட் ஆபிஸர் நிம்மதியடைந்தார்.

    ”ஒவ்வொரு கல்லையும் நான் அசைத்து பார்ப்பேன். நெடும்பாவில் இருக்கிற ஒவ்வொரு கல்லையும்” போலீஸ் ஆபிஸர் நெடும்பாவில் கிராமம் வழியாக நடக்கும்போது என்னுடன் வந்த அவர் சத்தம்போட்டுக் கூறினார்.

    ”யாரு அந்த பையன்? பதுங்கி நிக்காம சீக்கிரமா வெளில வர்றதுதான் நல்லது”. அவர் புல்தரையில் நின்றுகொண்டு சத்தமிட்டார் பதிலொன்றும் எழவில்லை

    ”எல்லோரோட முட்டியயும் அடிச்சு ஒடச்சிருவேன். வாடா வெளில” அவர் ஷூக்களணிந்த வலது காலை நிலத்தில் ஓங்கி அடித்தார்.

    ”சார் இங்க நில்லுங்க, நானொரு கை பாக்கறே” அவர் ஒரு வேட்டைநாயைப்போல இருப்பக்கங்களிலும் கவனமாகப்பார்த்துக் கொண்டு ஒரு வைக்கோல் போருக்குப்பின்னால் மறைந்தார். சிறிது நேரம் கழிந்து வெற்றியரவத்தோடு அவர் வெளியில் வந்தார். அவருடன் கூனிக்குறுகி நடுங்குகின்ற ஒரு கிழவனுமிருந்தார்.

    ”நானிந்த ராஸ்கலைப்  வைக்கோலுக்குள்ளிருந்துதான் புடிச்சேன். போலீஸ்காரன் அவரை எனக்கு முன்னால் நகர்த்தி நிறுத்தினார்.

    வயதானவரின் கண்களில் வெண்மைநிற அடையாளம் இருந்து.

    ”சொல்லடா. உன்னோட பேரு என்னான்னு?” போலீஸ்காரர் கர்ஜித்தார்.

    ”சௌக்கார்” கிழவன் கூறினான்.

    ”அந்த திமிரெடுத்த பையன் உன்னோட யாரு?

    கிழவன் பேசவில்லை. அதற்குள் மறைவிடங்களிலிருந்து பலரும் வந்தனர். கறுப்பு நிற சிலை போன்ற முகங்கள்.

    ”ஓ ஒளிஞ்சிருந்தீங்களா? போலீஸ்காரன் ஏளனமாகக் கேட்டு மற்றுள்ளவர்களுக்கு நேராக நகந்தார். அவர்கள் யாரும் அசையவில்லை. உறைந்தக்காட்சிகள்.

    ”பரவாயில்ல. இங்க உங்கக் கூட்டத்தில நிறைய அழகிக இருக்காங்கனு கேள்விப்பட்டேனே. அவங்க எல்லா எங்கே? பச்ச மருந்துகளோட வாசனை தானே அவங்களுக்கு”?

    போலீஸ்காரர் தன்னை உற்றுப்பார்க்கின்றவர்களுக்கு முன்னால் மூங்கில் தடியை வாயுவில் சுழற்றிக்கொண்டு நடந்தார்.

    “காட்டுப்பூனைகளோட அறிவு. பச்சை மருந்துகளோட வாசம்.

    ”நானிங்க வந்ததே அதையும் மனசில வெச்சுதா. ட்யூட்டி மட்டும் வேணும்னா எனக்கு வேற ஏதாவது இடத்தில வாங்கியிருக்கலாம்” போலீஸ்காரன் சிரித்தான். அவருடைய மூங்கில் தடி அப்போது வலது கை தொடையில் தொங்கிக்கொண்டிருந்தது.

    “சார் நமுக்குப் போகலாம்” நான் அவரை அழைத்தேன்.

    “உம். ஆனா நா இங்க வருவே. எனக்கு வேண்டியது நல்ல பரங்கி மாங்காய் வற்ற வெச்ச சாராயமும், ஒரு கோழியும், ரெண்டு பொம்பளைகளும். புரிஞ்சுதா? ” அவன் என்னுடன் நடந்தார்.

    நான் திரும்பி பார்த்தபோது. பார்வை, துணுக்கு செய்தி அனுப்பின சிறுவனை எங்களுடைய கண்கள் அடைந்தது. ஒரு நிமிடம் நான் திகைத்துப்போனேன்.

    ”இத பாத்தீங்களா? டீக்கடை நடத்தும் ஐயா, கரிபடர்ந்த சுவரில் உள்ள ஒரு நோட்டீஸை சுட்டிக்காண்பித்தார்.

    ”நெடும்பாவில் சொல்கிறது” அதுதான் நோட்டீஸின் தலைப்பு சிவப்பு எழுத்துக்கள்.

    யாரு இத இங்க ஒட்டனாங்கனு தெரியல, ஆனா புடுங்கி வீச தைரியமில்லை”. ஐயா சொன்னார். அவர் பச்சை நிறமுள்ள அரைக்கை ஆடையும், முழங்கால் வரைக்கட்டிய துண்டும். காதில் சின்ன கடுக்கணும் அணிந்திருந்தார். அவருடைய கால் முழங்காலுக்குக் கீழே சொரிந்து வீங்கியிருந்து.

    பார்த்துக் கொண்டிருக்கவே நெடும்பாவில் இருட்டானது. எலிகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. வெளியில் மைதானத்தில் சத்தமிட்டுக் கொண்டு  காற்று வீசியது. இந்த சப்தங்கள் அச்சத்தை உருவாக்கின.

    ”காற்று இப்படி ஓசையிடுவதை நான் இதுவரைக் கேட்டதே இல்லை” சிவப்பட்டேரி கூறினான்.

    தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல்கள் காற்றில் ஆடியது. உடனே வந்தர்றேன்னு சொல்லிட்டுப்போன போலீஸ்காரர் இனியும் வரவில்லை. காற்று சற்று அதிகமானது. நான் கேட்கறது போலீஸ்காரரோட அலறல்னு எனக்கு ஏதோ தோன்றியது. ஒரு வைக்கோல் போருக்கு முன் ஒரு விலங்கைப் போல நின்று அவர் அலறிக்கொண்டிருந்தார். தீ எரிந்து கொண்டிருந்து. அவரின் உருவம் தீ வெளிச்சத்தில் தெளிவானது. அவர் அம்மனமாக நின்றிருந்தார். குறிகள் தொங்கிக் கொண்டிருந்தது.

    ”நாம கூப்பிட்டுப்பார்த்தாலோ” நான் சிவப்பட்டேரிகிட்ட சொன்னேன்.

    அவர் உடனே என்னுடன் புறப்பட்டார். அவரிடம் டோர்ச் லைட் இருந்தது. நாங்க காற்றை எதிர்த்து நடந்தோம். இடைவெளி இல்லாத இருட்டில் காற்று ஆரவாரித்துச் சென்றது. புழுதி எங்களை மூடியது. பாறைகளின் வெப்பம் தணிந்திருக்கவில்லை.

    ”ஓய்”. ஒரு பாறைக்கு மேல் ஏறி நின்று சிவப்பட்டேரி கூவி விளித்தார்.

    அது இருட்டில் எங்கோ கலந்தது. மற்றொரு பாறையில் நான் ஏறி நின்றேன். நெடும்பாவின் கூரிருட்டைப் பார்த்து நான் சத்தமிட்டேன்.

    ஓய்…………….ஓய்.…………………..

    Share
  • இறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    இறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல ஆசிரியர்: ஸ்டான்லி
    மூல மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

    மரணத்தின் ஈரம் முகத்தில். நான் மீண்டும் மீண்டும் உமிழ்ந்து ஈரத்தை அதிகப்படுத்தினேன். இரண்டு விபத்துகளில் மரணத்தைத் தோற்கடித்த ஆஜானுபாகுவாக நின்ற எனக்குப் பொன்னாடையும் பொருளும் பரிசாகத் தர முகமில்லாத கடவுள் கடந்து வந்தார்.

    மருத்துவமனை படுக்கை அறையில் ஒருமுறை நான் இறந்து கிடந்தேன். ஓ மன்னிச்சிருங்க. மரத்துக் கிடந்தேன். நினைவுகளைப் புதிதாகப் படைத்துக் கொண்டிருந்தேன்.

    கடவுள் விருந்தாளியாகக் கட்டிலுக்கருகில் வந்தபோது நான் ஆச்சர்யப்படவும், ஆதரவாக அவரைப் பார்த்து அருகிலுள்ள இருக்கையில் உட்காரவும் வைத்தேன். நான் அவரைப் படுக்கையில் அமர்த்தவில்லை. அது என் மனைவிக்கு மட்டும் உரிமையானது.

    பொன்னாடையும் பொருளும் எனக்குக் கொடுத்துவிட்டு துக்கத்துடன் அவர் செல்லுகையில் கட்டிலுக்கடியில் அவர் மறைத்து வைத்த பழையதும் உடைந்ததுமான முகக் கவசத்தை அவர் குனிந்தெடுத்தார். நான் நன்றியை வெளிப்படுத்தக் கையெடுத்து வணங்கியதும் அவர் என் இடுப்புக்குக் கீழே போர்த்தியிருந்த சிவப்புப் போர்வையைத் தூக்கிப் பார்த்தார். வலது காலின் தொடை எலும்பிற்கு கீழ் ஒன்றுமே இல்லாதிருப்பதைக் கண்டதும் முகக் கவசததின் இரண்டு துவாரங்கள்  வழி கொஞ்சம் நீர் சொரிந்தது.

    கையிலும் நெற்றியிலும் காய்ந்து கொண்டிருக்கும் காயங்களுடன் மனைவி கட்டிலுக்கருகில் வந்து நின்று அழுதாள். மருந்தின் வாசம் நிறைந்த சூழலில் கணவரின் ஆயுளுக்காகத் தாலியைக் கையில் பிடித்துக்கொண்டு ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். ஒரு சுபமுகூர்த்தத்தில் தர்ப்பைப் புற்கள் தூவி என் மனைவியாக உறுதிப்படுத்தப்பட்டது இந்த உறவு. பிறகு ஏன் இப்படியாயிற்று?

    துக்கம் விசாரிக்க வந்த, மனைவியைத் தேடி வந்த பெண்குழுக்கள், கட்டிலுக்கருகில் வரிசையாய் வந்து நின்றனர். குழுவில் குட்டையான ஒருத்தி முண்டியடித்துக்கொண்டு என் மனைவியின் கண் பார்வையில் படுமாறு வந்து நின்றாள். திரும்பச் செல்லும் போதும் பஸ் பயணச் செலவை மனைவியே ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை என்று வேண்டிக்கொண்டாள். மனைவி  மூக்கைச் சீந்தியதும் அனைவரும் அதேபோல செய்தனர். நான்காவதாக நின்றவள் வலதுகையால் மூக்கைச் சீந்தியதும், மூன்றாவதாக நின்றவளின் பார்வை பட்டதும் இடது கைவிரலால் மூக்கைத் துடைத்தாள். அவள் அமைதியானாள். இந்தத் துக்கங்களைப் பார்க்க முடியாமல் நான் கசடில்லாத தூய வானத்தைப் பார்த்துச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். வானத்தில் தூய அழகு மட்டும் நிலைத்தது.

    என் கவனத்தைத் திருப்பவும் மனைவியை மகிழ்விக்கவும் மீண்டும் உரையாடல் தொடங்கியது.

    ஸ்கூட்டர்ல போனதனாலதா இப்படியொரு விபத்து ஏற்பட்டுச்சு.  சைக்கிள்ல  போயிருந்தா இப்படி நடந்திருக்காது. ஒரு வேளை தலை மட்டும் இழந்திருக்கலாம். அது இதைவிட பரவால்லையே. மாதக் கணக்கில் மருத்துவமனைல படுக்க வேண்டியிருந்திருக்காது. சாலையில இவ்வளவு ஆழத்தில குழி தோண்டக்கூடாதுதா. பைப்பு போடணும்னா வானம் வழியா போட்டிருக்கலாமில்ல. கான்ட்ராக்ட் எடுத்தவனுக்கும் உதவணும். கார்ப்பரேஷனோட ஊழல நிறுத்தணும். மனைவிக்கு நெற்றியிலும் கையிலும் அடிபட்டதிலும் வருத்தமிருந்தது. அவளுடைய தொடைக்குக்கீழே கால் இருந்ததிலும் போராட்டக்காரர்களின் தொண்டை இடறியிருக்கணும். இறுதி யாத்திரையைக் கொண்டாட முடியாமல் போனதில் வருந்தி, போராட்டக்காரர்கள் சென்றனர்.

    அவரவருடைய இறுதி யாத்திரைக்கான தாகத்தோடு சிந்தித்துக்கொண்டு கிடந்தேன்.

    “திடீர்னு இது கைக்கடியில வெச்சு நடக்க கஷ்டமாதா இருக்கும். நல்லாப் பழகணும்”

    பச்சை அறையில் ரசிகர்களின் கூட்டம். பாராட்டு மலைக்கு நடுவில் மனசாட்சிகளின் நுனிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அடர்த்தியான பௌடரை கலைக்கப் பூசப்பட்ட தேங்காய் எண்ணெய், உலர்ந்த துணியால் அழுத்தித் துடைத்தபோது முகம் வலித்தது. தொலைவிலிருந்து வந்த ரசிகர்களுக்குப் பணம் கொடுத்துச் சரியான நேரத்தில் அவர்களைத் திரும்ப அனுப்பிவைக்க வேண்டுமென்ற அறிவிப்பு மீண்டும் மீண்டும் குழுவினரால் ஒலிபரப்பப்பட்டது. வேகமாகக் கிளம்பியபோது நண்பர்கள் எப்போதுமுள்ள பார்ட்டியின் விஷயத்தைக் கூறித் தடுத்தனர். மனைவி என்ற கம்பார்ட்மென்ட் உடன் இருப்பதைக் கூறினர். மனைவியின் முகம் எதிர்பார்த்த அளவிற்குப் பொலிவுடையதாகத் தெரியவில்லை.

    ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோதும். கொஞ்ச தூரம் சென்ற போதும் மனைவி ஒன்றும் பேசவில்லை. தேவையில்லாமல் வேணும்னே போட்ட பிரேக்கில பின்னால தள்ளி உட்கார்ந்திருந்த மனைவி நெருங்கி வந்தாள். அப்போ மெல்ல கேட்டேன்.

    ”இன்றைய நடிப்பு எப்படி இருந்துச்சு.?”

    மனைவியின் திடமான மௌனம்

    “ஓ இப்படியொண்ணும் இனிமே நடிக்க வேண்டாம். கண்ணும் காலும் இல்லாம. காலில்லாம தடி  ஊன்றி ஸ்டேஜ்ல வந்ததும் பதறிப் போச்சு…….

    என்னுள் ஏதோ உணர்வு வெளிப்பட்டது.

    “ஒரு காலு போனா என்ன, நடிப்பு நல்லா இருந்துச்சில்ல. முதல் பரிசும் கிடச்சிதில்ல”

    ஒரு சரக்கு லாரியின் தீக்கண்கள் என் கண்களை இருட்டாக்கியது. முன்னால் ஒரு பெரிய குழி இருந்ததோ……..

    ஒன்றுமே நினைவில்லை…………….

    கண்கள் திறந்தபோது மருத்துவமனை கட்டிலில் கருநாக்கால ஒண்ணும் சொல்லாதீங்க மூஸண்ணா நீலிக்கே அறிவுரை கூறுவது போல.


    ஆசிரியர் குறிப்பு

    கொச்சியில் பிறந்த மலையாளியான ஸ்டான்லி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நடிகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல துறைகளில் கால்தடம் பதித்தவர். பதினான்கு மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட இருபது புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். கோவை மலையாள சமாஜத்தின் குட்டன் நாயர் நாடக விருதை ஏழு முறை பெற்ற இவர், நல்லி திசைஎட்டும் விருது, நாராயணகுரு விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    Share
  • பார்வைகள்

    மூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

    ஆஃப்டர் கேர்ஹோமிற்கு முன்னால் உள்ள பைன் மரங்களுக்கிடையில் ரோஸியும் மாத்யூவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். டிசம்பர் மாதம். ஒரு மாலை நேரம் வெப்பமற்ற குறைந்த வெயில்.

    மாத்யூ ரோஸியை பார்க்க வந்திருந்தான்.

    ரோஸி ஆஃப்டர் கேர் ஹோமில் தங்கியிருந்தாள்.
    அதற்கு முன்பு புவர்ஹோம் சொசைட்டி நடத்துகின்ற அனாதை இல்லத்திலிருந்தாள். பதினெட்டு வயதான பிறகு ஆஃப்டர்கேர் ஹோமிற்கு மாறிவிட்டாள். அவளைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவளது மனதைத் தொடுமளவிற்கு ஏதாவது கூறவேண்டும் என்று மாத்யூ நினைப்பான். ஆனால் பேருந்தை விட்டிறங்கி பைன் மரங்கள் நிறைந்த நடைபாதையை அடைவதற்குள் அவன் நினைத்ததெல்லாம் மறந்திருப்பான்.

    ரோஸியும் ஏதேதோ சொல்லவேண்டும் என நினைப்பாள். ஆனால் வார்த்தைகள் வெளியில் வராது.

    வார்த்தைகள் பயன்படவில்லையெனில் தான் சொல்ல வந்த எண்ணங்களை கண்களால் வெளிப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் அவள் மாத்யூவை உற்றுப்பார்த்தாள்.

    ஆஃப்டர்கேர் ஹோமின் மேல்நிலையிலிருந்து ஜன்னலுக்கருகில் ஒன்றாக நின்று பலரும் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர். சிலர் அன்புடன், சிலர் ஆசையுடன்.

    தாங்கள் கவனிக்கப்படுகிறோமென்று கட்டடங்களைப் பார்க்காமலேயே மாத்யூவுக்கும் ரோஸிக்கும் தெரிந்திருந்தது. அப்பார்வைகள் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

    ஒன்றும் பேசவில்லை. சொல்லப்போனால் பேசுவதற்கோ நிறைய இருந்தது.

    ரோஸியின் கண்கள் திடீரென ஈரமாயின

    மாத்யூ செய்வதறியாது அவளுடைய தோள்களில் கை அமர்த்தினான். அவளை சமாதானப்படுத்த என்ன சொல்வதென்று அறியாமல் அவன் தயங்கினான். கவலைப்படவேண்டாம் என்றும் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூற அவன் விரும்பினான். அவர்களுக்கிடையில் பைன் மரங்களின் வழியே காற்று நுழைந்தது.

    “அவங்க என்ன பேசியிருப்பாங்க?”

    ஆஃப்டர்கேர் ஹோமின் மேல்நிலையில் இடப்புறத்தின் கடைசியில் ஜன்னலுக்கருகில் நிற்கின்ற ‘நோர்மா’ அருகில் நிற்கும் ப்ரஜித்தாம்மாவிடம் கேட்டாள்.

    ப்ரஜித்தம்மாவோ கீழே இருக்கும் ரோஸியையும், அவளைப் பார்க்க வந்த மாத்யூவையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
    “ரெண்டு தேவதகளைப் பார்க்கற மாதிரி இருக்கு”.
    அவள் திரும்பிப்பார்க்காமல் கூறினாள்.

    பின்னாலொரு அறையிலிருந்து கிறிஸ்டீனா என்ற பெண் வயலின் வாசிக்கத் தொடங்கினாள். அறையில் கிறிஸ்டீனா தனியாக இருந்தாள். அவள் வயலின் வாசித்துக்கொண்டே அறையில் மெதுவாக நடந்தாள். ஜன்னலுக்கருகில் நின்று கொண்டிருந்த காத்ரின் பரிதாபத்தோடு அவளைப் பார்த்தாள். அவள் யாரையும் கவனிக்காமல் கண்களைப் பாதி மூடினாள். வயலினுடன் அறையில் நடந்தாள்.

    பைன்மரங்களுக்கிடையில் மாத்யூவும், ரோஸியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆஃப்டர்கேர் ஹோமின் மேல்நிலையின் ஜன்னல்கள் வழி பலவிதமானப் பார்வைகள் அவர்களின் மேல் விழுந்து கொண்டிருந்தது.
    —————————————————–

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    Share
  • நித்திரை தொடராமல் கனவில்லை

    தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    நித்திரை தொடராமல் கனவில்லை

    ஒரு வடிவம் உருவகப்படுகிறது. நீட்டிப்பிடித்த கைத்தலங்களின் இரயில். ஓவர் பிரிட்ஜிற்கு நேராக தெற்கிலிருந்து வருகின்ற இரயில். மரணம், ஃபாஸ்பென்டர் கூறியதுபோல தண்மையானதா? என்று இப்போது தெரியும். ’ஆக்ஷன்!’ கைகள் அசைந்தது. கைவரிசை கடக்கத்தான் வேண்டியிருந்தது. கொஞ்சம் கூட ஈடுபாடில்லை. பாதி தூரத்தை அடையும் முன்பு ஷோர்ட் ஃப்ரீஸ் செய்து கடைசி டைட்டில் அதன் மேல் ‘தி என்ட்’. மனதிற்குள் ஒரு மின்வெட்டு பாய்ந்தது.

    எ ஃபிலிம் ஈஸ்…………, எ ஃபிலிம் ஈஸ்………….. எ ஃபிலிம்…………….

    நினைவுகள் அவ்வளவும் அடங்கியது. கண்களை இறுக மூடினான்.மறுபடியும் அதை திறப்பதற்குள் எலக்ட்ரிக் ட்ரெயின் சென்று விட்டிருந்தது. ஏதோ ஒரு பெண் நெருக்கமாகப் பின்னால் நிற்கிறாள். தோள்வரை நீண்ட முடி. கண்ணாடி. நீல நிற ஜீன்ஸும், பிங்க் நிற டாப்பும். மாநிறம். தோளில் பை. கையில் ஆந்த்ரே ஆர்கோவ்ஸ் கியின் நூல். லான்ட்மார்க்கிலிருந்து வாங்கியிருப்பாள் புதியதாக இருந்தது.

    ‘இங்கேயே பாத்தது என்னோட அதிர்ஷ்டம். நான் வீட்டுக்கு வருவதாக இருந்தேன்’ அவள் கூறினாள்.

    “எதுக்கு?” கேட்காமலிருக்க முடியவில்லை. நினைத்திருந்தால் கொஞ்சம்

    மென்மையாக மயமாகக் கேட்டிருக்கலாம். சத்தத்தின் உச்சத்தை அவள் கவனிக்கவில்லை.

    “அறிமுகப்படுத்ததா என் பேரு சோஃபி”. அவள் கைநீட்டினாள். இளமை அவளது விரல் நுனிவரை நிறைந்து நின்றது. அதன் வீர்யம் தெரிய வந்தது.

    “முழுப்பெயர் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ்”, என்று கையை விடுவிக்கும் முன்பு கூறினாள்.

    நல்ல பெயர் என்று கூடக் கூறவில்லை. அவள் பாலத்தின் கைச்சுவரில் சாய்ந்து நின்றாள். காற்று வீசியது. முடியைக்கட்டி வைத்திருக்கவில்லை. அவள் முடியொதுக்காமல் எதையோ சாதித்த நினைப்பில், நோர்த் உஸ்மான் ரோட்டில் உள்ள அசோசியேஷன் ஆபீஸிலிருந்து முகவரிதேடி அடைந்ததைப் பற்றி விளக்குவதற்குள், பாலத்தின் வழியாக மூன்று வண்டிகள் கடந்துபோயின. ஓவர் பிரிட்ஜில் எப்போதும் வழக்கம்போல உள்ள கூட்டம்தான். இரயில்வே டிராக்கின் இருபுறத்திலும் வாழ்க்கையின் இரம்பல் ஓசை. நகரச்சுற்றுவட்டாரத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ப்ளெக்ஸ் போர்டுகள். பல காட்சிகள். மங்கிய வெயில், வறண்ட காற்று. இரும்புப் பாதையின் வழிகள் மறுபடியும் நிறைந்தது.

    “சரி……”அறிமுகப்படுத்துவதை அப்படியே முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அவள் அதற்கு ஒத்துவரவில்லை. அவளிடம் ஒரு சி.டி. இருந்தது. என்ன சி.டி.? அவளே தயாரித்தக் குறும்பட சி.டி. ஓ………. விஷ்வல் கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருக்கிறாள் நல்லதுதான். அவள் தோள் பைக்குள் கையிட்டு சி.டி.யை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவசரமாக விலக்கினேன்.

    “வேண்டா, பாக்க நேரமிருக்காது”.

    “இன்னக்கே பாக்கணும்னு இல்ல சார்”

    “நா … கொஞ்சம் பிசி”

    “தெரியும் சார்”. அவள் அதற்குள் சி.டி.யை வெளியிலெடுத்திருந்தாள்.

    “நா எதுக்கு இத பாக்கணும். ஏதாவது ஷோர்ட் ஃபிலிம் பெஸ்டிவெலுக்கு அனுப்ப வேண்டியதுதானே”.

    “அதில்ல சார்”

    “அப்புறம்”

    “அதிகமா யாரிடமும் நா இத காமிக்கல. சாரோட கருத்து என்னான்னு தெரியணும் அதுதா”…

    “என்னோட கருத்திலொண்ணும் பெரிய காரியமில்ல…… போம்மா…”

    மீண்டும் காட்சியில் இரயில் வண்டிகளும், தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும், காத்துக் கிடக்கும் இரயில் பாலங்களும் வந்தன. அங்கே தூரத்தில் ஏதோ சேரிக்கி அருகில் புகைச்சுருளுகள் உயர்ந்தது. சிதையிலிருந்து வந்ததாக இருக்காது. அப்படி இருந்தாலும் சொல்வதற்கில்லை.

    “சார்………”

    திரும்பிப் பார்த்தேன். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் போகவில்லை. முகத்தில் ஒரு விண்ணப்ப பாவம்.

    “ஒரு ரிக்வஸ்ட் இருக்கு சார். சாவகாசமாக சி.டி.யை பாத்தபின்னர்,

    “நான் அதுக்குத் தகுதியுடையவள்னா மட்டும் போதும்”.

    “புரியல”

    “எனக்கு சாரோட அசிஸ்டென்ட் ஆனா பரவால்லேன்னு இருக்கு. என்னோட பெரிய ஆச சார் அது”

    சத்தமாக சிரித்துவிட்டேன், அப்படி சிரிக்க முடியுமென்று எதிர்பார்க்கவில்லை. அது கட்டுப்பாட்டை மீறி வந்தது. ஒரு திருடன் பயணியின் முன்பு குதித்தது போன்ற சிரிப்பு. அப்பெண்ணின் முகத்தில் ஆச்சர்யம் படர்ந்திருந்தது. கண்களின் பார்வை கூர்மையானது.

    “நா ஒரு படம் எடுத்து வருஷம் ஏழாச்சு, ஒனக்கு அது தெரியாது இல்லயாம்மா…”

    மறுபடியும் சிரிப்பு அடக்க முடியவில்லை. இப்படி சிரிச்சு ரொம்ப காலமாச்சு. நல்ல ஜோக்குகள் சமீபமாக கேட்பதேயில்லை. கொஞ்சம் சிரிப்பதற்காக தொலைக்காட்சி சேனல்களைத் தேடிப்பார்த்தால் அதுவும் எல்லா துக்கமாத்தான் இருக்கும். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ். சிரிக்க வைக்கக் கூடிய பெரிய திறனாளி.

    ஒத்துக்காமல் முடியல

    “லுக். ஐ ஆம் சீரியஸ். ஜோக்குக்காக சொல்லல”.அவளின் முகபாவம் மாறியது.

    ”வேறு யாருடனும் வேலைசெய்யவிருப்பமில்லை. காத்திருக்கத் தயார்.”

    “எவ்வளவு நாள்?”

    “எவ்வளவு நாள் வேணும்னாலும். டு பி ப்ராங்க். ஐ ஹேவ் எ டெரிபிள் பேஷன் ஃபோர் யு. சாரோட எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.

    “அதெல்லாமே முழுக்க தோல்வியடைந்தவை. அதெல்லா தெரியாது இல்லையா?”

    “தியேட்டர்களில வேண்டிய அளவு ஓடலேங்கறதுக்காக, அதெ அப்படி மதிக்கலாமா?”.

    “என்னமோ……. நா இப்போ அதோட பேருகூட நினைக்கறதில்ல”

    அவற்றில் ஒன்றுகூட மறுபடியும் கண்டெடுக்க முடியாது உயிரற்றவை. இல்லை அதிசயமொன்றும் சம்பவிக்காது.

    “சார் வாக்கிங் வந்தது தானே”?

    “உம்”

    “கொஞ்சநேரம் நானும் கூடவரட்டுமா?”

    ஒரு ஹெலிகாப்டரின் இரம்பல் சத்தம் கேட்டு முகமுயர்த்திய போது ‘லாடோள்ஸ்’ விற்ற ஞாபகம் வந்தது. ஹெலிகாப்டரில் தொங்கிநின்று நகர்வலம் வருகின்ற கிறிஸ்து உருவம் ஃபெல்லினியாவின் மேஜிக். அடுத்த நிமிடத்தில் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் சி.டி. கைமாறினாள். அதுவும் மேஜிக். வானம் இருண்டது. கையில் சிடியுடன் நிற்கும்போதே பச்சைநிற பஸ்ஸில் சோஃபி குதித்து ஏறினாள். பின்னால் திரும்பி கொஞ்சமாக கைஆட்ட மறக்கவில்லை.

    பா…ய்…

    வீட்டின் தனிமைக்குத் திரும்பி வருவோமென்று நினைக்கவில்லை. சாவியெடுத்துக் கதவைத் திறந்தான். மக்கள் ஓடி வந்து கட்டிப்பிடிப்பதற்கோ, அவர்களின் அம்மா காபியும் கொண்டு சமையலறையிலிருந்து வெளியில் வருவதோ எதிர்பார்ப்பதற்கில்லை. குளிர்ந்த வரவேற்பறை, செய்தித்தாள்களும் புத்தகங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்திருந்தது. அவற்றின் காவல்காரன் என்பதுபோல சுவரில் சாப்ளினுடைய சல்யூட் மறுபடியும் பார்க்க முடிந்ததில் சந்தோஷம். கொஞ்சம் பிராண்டி குடிப்பது ஒருவேளை உறங்குவதற்கு உதவும். சியர்ஸ். இனி செய்ய வேண்டிய ஒரு செயல் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸின் குறும்படம் பார்ப்பது. ’காஸ்பர் தோமஸ் என்ற வயதானவரின் கதை எழுபத்தி நான்கு வயதான அவர் பஸ்ஸை விட்டிறங்கி ஒரு பேகையும் பிடித்துக்கொண்டு கிராமத்தின் மிகப்பழமையான ஆலயத்தை நோக்கி நடந்தார். நிறைய கற்படிகள் ஏறினால்தான் ஆலய முற்றத்தை அடையமுடியும். அவர் தளர்ச்சியுடன் ஒவ்வொரு படியும் ஏறினார். அவர் முகத்தைப் பார்த்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரத்தைத் தன் முதுகில் சுமக்கிறார் எனத்தோன்றும். கடந்தகால வாழ்க்கை வேதனை நிறைந்ததாக இருந்தது என்பதை அவருடைய அங்கங்கள் வெளிப்படுத்தின. தேவாலயக் கட்டடிடத்தின் வெள்ளை நிற முகப்போடு சேர்ந்து மின்னுகின்ற சிலுவை வானம் வரை உயர்ந்து நின்றது. காஸ்பர் தோமஸ், ஃபாதர் ஜோனின் முன்னால் வந்தார்.

    “யாரது? தெரியலையே……………” ஃபாதர் சொன்னார். ஃபாதருக்கு அம்பது வயதுக்கு மேலிருக்கும் மேசைமேல் உள்ள கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்.

    “என் பேரு காஸ்பர் தோமஸ்”. அவர் தன்னை அறிமுகப்படுத்தினார். ஃபாதர் இதற்கு முன்பு அவரைப் பார்த்ததில்லை. இருவரும் முற்றிலும் பழக்கமில்லாதவர்கள்.

    “நான் உட்காரட்டுமா?” அவர் கேட்டார்

    “ஐ ஆம் ஸோரி. நான் அதெ சொல்ல மறந்திட்டேன்” என்று திடுக்கத்தில் கூறினார் ஃபாதர். அவர் சந்தோஷப்பட்டார்.

    “நான் கொஞ்சகாலம் வெளியிலிருந்தேன். இதே ஊர்க்காரன் தான் நானும். திருமுழுக்கும், கல்யாணமும் இங்கதான் நடந்துச்சு”.

    “பார்க்க முடிந்ததில மனம் நிறைந்த மகிழ்ச்சி. நா இங்க சார்ஜெடுத்து ரொம்பக் காலமாகல” ஃபாதர் ஜோன் கூறினார்.

    “இங்கிருந்து போகும்போது ஜோஸஃப் கிழக்கன் காலேலச்சனாயிருந்தார்.” காஸ்பர் தோமஸ் கூறினார்.

    “அது ரொம்பக்காலமாச்சே” ஃபாதர் கேட்டார்.

    “ஆமா” அவர் கூறினார். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜன்னலுக்கு வெளியில் ஜாதி மரத்தின் இலைகள் காற்றில் ஆடின. மரத்திற்கு அப்புறம் பலப்பல செடிகள் கடும்பச்சை நிறத்தில் தளிர்த்திருந்தன.

    “இந்த வரவிற்குக் காரணம் ஏதாவது!…………”

    “உண்டு” அவர் அதைக்கூற கொஞ்ச நேரம் தயங்கினார். சுலபமாக மனம் திறக்கவில்லை.

    நாற்பது ஆண்டுகளாக அவர் சென்னை நகரத்தின் ஒரு மூலையில் பிஸினஸ் செய்து கொண்டிருந்தார். பிஸினஸிலும் வாழ்க்கையிலும் துணையானஹில்டா சில மாதங்களுக்கு முன்பு இறைவனடடி சேர்ந்துவிட்டாள். பிறகு அவருக்குத் தனிமைதான். ஒரு மகள் ஜெர்மனியில் மகன் அமெரிக்காவில் இரண்டாவது மகள் நெதர்லான்டில். அவங்க யாரும் போனதுகப்பறம் வரவேயில்லை. ஹில்டா இறந்தபோது அவர் அவர்களை மிகவும் எதிர்பார்த்தார் ஆனால் அவர்களின் துர்பாக்யம் வரமுடியல ஃபாதர் ஜோன் தனக்குத் அறிமுகமில்லாத ஹில்டாவின் ஆத்மாவிற்கு நித்ய சாந்தி வேண்டினார். காஸ்பர் தோமஸ் கவலையுடன் இருந்தார். சௌன்ட் ட்ராக்கில் கவலையில் ஸ்ருதி அது அப்படியே தொடர்ந்தது.

    கொஞ்சம் கூட பிராண்டி அதற்கிடையிலும் ஸ்க்ரீனிலிருந்து கண்ணெடுக்கவில்லை. காஸ்பர் தோமஸ் தனக்கு வேண்டி ஒரு கல்லறை செய்யச் சொல்லியிருந்தார். கோன்ட்ராக்ட் காரன் நதானியலும் ரெண்டு வேலக்காரர்களும், பார்வையாளராக ஃபாதர் ஜோனும். கல்லறைக் கட்டி முடித்து காஸ்பர் தோமஸ் மரணம் வரும் வரை காத்து மீதி நாட்களை இடவகயில் கழிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார். ஃபாதர் அவரின் தீர்க்கமான முடிவிற்குக் கீழ்படிந்தார். கல்லறை வேலை தீர்ப்பதற்கும், தொடர்ந்துள்ள வாழ்க்கைக்குமான பணம் போக மீதமிருக்கும் தனது வருவாய் அனைத்தையும் பள்ளிக்கு என வாக்குமூலம் கொடுத்தார். யாரோ மயானம் வழியாக வந்தார். அவர் உற்சாகமாக இருந்தார்.

    “என்னா அதிசயமிது? குஞ்ஞாச்சியா……….. நான் கொச்சும்மன்”

    காஸ்பர் தோமஸ் விழித்தார். குஞ்ஞாச்சி என்பதும் காஸ்பர் தோமஸின் பேர்தான். ஆனால் பல ஆண்டுகளாக அப்பெயரில் யாரும் அவரை அழைத்ததில்லை.

    “கொச்சும்மன்!” அவர் அற்புதப்பட்டார்.

    “ஆமாண்டா உங்கூட ஆத்திலயும் காயல்லயும் மீன்பிடிக்க வர்ற அதே நண்பந்தா. நாம நெறய வராலும், வற்றயும் கரிமீனுமெல்லா புடிச்சத மறந்திட்டியா?.

    கொச்சும்மன் அவசரமாகக் கூறினான். இருவரும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டனர். விதும்பினர் ஃபாதர் ஜோனும், நதானியலும், வேலைக்காரர்களும் செயலற்று நின்றனர். அவர் சிறு ஆறுகளில் விளையாடும் உயிர்களைப் பற்றியும், சேற்றில் பறந்து இறங்கும் பறவைகளைப் பற்றியும், வாத்தின் சிறகுகளைக் குறித்தும் கூறிக்கொண்டிருந்தனர். காஸ்பர் தோமஸ் என்ற குஞ்ஞாச்சியும், கொச்சும்மனும் இளமை நினைவில் துள்ளிக் கொண்டிருந்தனர். ஆற்றின் ஓரத்தில் நீர்ப்பறவைகள் சத்தமிட்டன. எங்கிருந்தோ ஒரு குக்கூ சத்தம்; மறு குக்கூ சத்தமும் கேட்டது. சேற்று வயலிலிருந்து பறவைகள் பறந்தன. ஆரவாரம் கேட்டு வாத்தின் கால்கள் நகர்ந்தன.

    “குஞ்ஞாச்சி எனக்கு என்னோட மனைவியையும் மக்களயும் பார்க்க வேண்டாமா?”

    “நானும் அதத்தா சொல்ல வந்தே” காஸ்பர் தோமஸ் கூறினார். அவர்கள் கைகள் கோர்த்தனர்.

    “நாங்க போறோம்” கொச்சும்மன் ஃபாதர் ஜோனைப் பார்த்து சொன்னான்.

    ஃபாதர் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். அவருடைய காட்சியில் கொச்சும்மனும் காஸ்பர் தோமஸும் சிறுவர்களைப்போல நடந்து அகன்றனர். கொச்சும்மன் சத்தமாகக் கூப்பிடும்போது வீட்டிற்குப் பின்னால் உள்ள கோழிக்கூட்டிற்கருகில் ரஜீனாம்மா மீன் கழுவிக் கொண்டிருந்தாள். கோழிகள் நாலைந்து ரஜீனாம்மாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தன.

    “இங்க கொஞ்சம் வா என்னோட ரஜீனாம்மா…….” கொச்சம்மன் கத்தினான்.

    ரஜீனாம்மா கத்தியும் மண்சட்டியுமாக எழுந்தாள், சட்டியில் சின்னச்சின்ன மீன்கள்.

    “ரஜீனாம்மா … இது என்னோட சின்ன வயது நண்பன் குஞ்ஞாச்சி. நா சொல்லிருக்கேல்ல உங்கிட்ட ரொம்ப காலத்துக்கப்பறம் நாங்க ரெண்டு பேரும் பாக்கறோம். நா இதக் கொண்டாடுவே. நம்மோட சேவல் வாத்து எங்கே?”.

    கொச்சம்மன் நான்கு புறமும் பார்த்துக்கொண்டு இரைபிடிக்கத் தக்க நேரம் பார்த்து உற்சாகத்தோடு காத்துக் கொண்டிருக்கும் காட்டு விலங்கைப் போல தேடி மறைந்தார்.

    “இங்க உட்காரலாமே. அவர் இப்ப வருவாரு” ரஜீனாம்மா காஸ்பர் தோமஸிடம் கூறினாள்.

    எங்கிருந்தோ வாத்தின் அலறல் கேட்டது. கொச்சம்மனின் வெற்றியும் அதில் கலந்திருந்தது. நீரில் உயிரினங்கள் துடித்தது. கொச்சமனும் காஸ்பர் தோமஸும் ஒரு துணியின் இரண்டு முனையையும் பிடித்து குனிந்து நின்றனர். மீன்குட்டிகள் நிறைய துணியில் வந்தது. சில மீன்கள் ஈரத்தோடு குதித்தன. கொச்சமனும் அவன் நண்பனும் அவற்றை மீண்டும் தண்ணீரிலேயே விடுகின்றனர். இருவரும் ஆழமில்லாத நீர்ப்பரப்பில் தண்ணீரை கைகளால் சிதறிக் கொண்டு ஓடுகின்றனர். அடுத்தக் காட்சி பள்ளியில் வைத்து கொச்சமாவின் மகள் மெட்டீல்டாவின் திருமணச் சடங்கு. காஸ்பர் தோமஸ் மகிழ்ச்சியோடு நிற்கின்ற கொச்சமாவின் தோளில் கை வைத்தார். கொச்சமன் உணர்வுப்பூர்வமாக தனது கையை அக்கைகள் மீது வைத்து அமர்த்தினான். ‘எபனீசர்’ சவப்பெட்டிகளுக்கு நடுவில் காஸ்பர் தோமஸைக் காத்துக்கிடந்தார். சவப்பெட்டிகளிலொன்று சித்திரவேலைகள் முடிந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. அது காஸ்பர் தோமஸின் அவசியத்திற்கிணங்க எபனீசர் செய்து முடித்த வேலை. நதானியல் வேகவேகமாக நடந்து வந்தான்.

    ‘எடா நீ அந்த வெளிநாட்டுக்காரன எங்கயாவது பாத்தயா?”. அவன் எபனீசரிடம் கேட்டான்.

    “யார அந்த காஸ்பரையா?”

    “அவரையேதா”

    “அது சரி நானினி அவரத் தேடாத இடமில்ல. ஒன்னு பாத்தாலோ மின்னல் போல மறஞ்சிடறாரு………..

    “பிணம் எறக்கி வைக்குமளவுக்கு கல்லறயோட வேல முடிஞ்சு எவ்வளவு நாளாச்சுன்னு தெரியுமா?. கொச்சும்மனைப் பாத்தபின்ன அந்தப் பக்கமே வறல”.

    “அதோ அங்க பாரு” எபனீசர் கை நீட்டினான்.

    நதானியல் அங்கே பார்த்தான். பாதையருகில் ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. காஸ்பர் தோமஸ் அதன் பின்சீட்டில் ஒரு பாகமாகத் திரும்பி உட்கார்ந்திருந்தார். கொச்சம்மன் அழுத்தி ஓட்டிக் கொண்டிருந்தார். காஸ்பர் தோமஸின் கையில் கறுப்புநிற கரிமீன்கள் அவை வெயிலேற்று மின்னின.

    “கொஞ்சம் நில்லுங்க” நதானியலும் எபனீசரும் ஒரே குரலில் கூறினர். கொச்சம்மன் சைக்கிளின் வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.

    “நாங்க கொஞ்சம் வேலயா இருக்கோம்……..” காஸ்பர் தோமஸ் கூறினார். எபனீசர் ஏற்கனவே சொன்னதேதான் நடந்தது. ஒரு மின்னல் போல அவர்கள் மறைந்தனர். மெதுவாக ஸ்கிரீன் இமேஜுகள் இல்லாமல் ஆனது. அதில் ஒரு பெயர் தெளிந்தது.

    “சோஃபி எஸ்தர் ஆன்ட்ரூஸ்”.

    ஃபோனின் மறுமுனையில் அவள்……… நான் உறங்கவில்லையென்றும் நேரம் தவறி தான் அழைத்து தொந்தரவு செய்யவில்லை என்றும் உறுதிப்படுத்திக் கொண்டாள்.

    “படம் பாத்தீங்களான்னு தெரிவதற்காகத்தான்”.

    “ஆமாம் பாத்து இப்பத்தா முடிச்சேன். நல்லா இருக்கு”

    “ரியலி!………….”

    “உம்”

    அவள் குதூகலமடைந்தாள். பெரியநகரத்தின் இரவில் அலையின் அசைவுகள்.

    “நாளைக்கு பார்க்க முடியுமா?………..” சோஃபி கேட்கிறாள்,.

    ” ஏ முடியாது? பார்க்கலாமே”

    “குட் நைட்.”

    “குட் நைட்.”

    பிறகு உறங்க சென்றபோது சோஃபியின் கதாபாத்திரத்தின் முகம் தானாக நினைவுக்கு வந்தது. படத்தில் இல்லாத ஒரு க்ளோஸ்அப். …. ’காஸ்பர் தோமஸ்!’……………. ஏதோ கனவு கண்டு உறக்கத்தில் சிரிக்கிறார்.

    காட்சி மாய்வதில்லை
    ஒரு நிமிடம்
    இரண்டு நிமிடம்
    அவரின் உறக்கம் தொடர்ந்தது
    மூன்று ……
    நாலு ……
    அஞ்சு ……

    Share