Tag: நரசய்யா

  • ஒருகாம்பிருதலையும் பூ

    திரு நரசய்யா எழுதிய முதற்கதை விகடனில் 1964 ஆம் வருடம் செப்டம்பரில் வெளியானது. இக்கதை 100 கதைகளைத் தாண்டியது. திரு நரசய்யா அவர்களின்  அரை நூற்றாண்டு இலக்கியப் பயணத்தின் நினைவாக!

    நரசய்யா

    “கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
    வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
    ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம்

    பாங்கனுக்குப் பாங்கன் பயன்றிவான் மன்ற
    அறிவா ரறிவா ரறியா ரறியார்
    ஒருகாம் பிருதலையும் பூ”

    பெருந்தொகை பாட்டு எண் 1800

    அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
    (கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று
    இறங்குக்காற் பாடியது )

    சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றி அதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள் சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை
    நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது!

    அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப்பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன். அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில்களின் இடையில் சுமார் 10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்க முன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து 13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருந்த போது இன்னும் சிலர் சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றில் மீது நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து விடவே உறசாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும் கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன் தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செயத ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ தலையில் அடித்துக் கொண்டான்.

    ********

    இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண
    வரவேற்புக்காக; அந்த ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும. திருமண வரவேற்பு எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு
    வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . . எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கின்றனர்!

    அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருளகளும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும் அந்த ஹாலின் அருகில், துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும்
    அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருளகளைத் தந்து மகிழ்ந்தனர். அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.

    “புஷபவதி ஆன… ” அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரமயா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். “ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.

    சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?’

    “சீ” * * * *

    திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில் கை வைத்துக் கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன். “என்னாச்சு?” “என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம் இப்போ பாருங்கோ
    திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொலறா. .”

    தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும் தான் தெரியும் அப்பெண் பூப்பெய்து விட்டது; அதைத்தான அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும்
    சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. துண்டில் கிடந்த சில்லரையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று
    அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம் இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்து விட்டு கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித் தொழுது நிற்கையில் அப்போதே வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகார் நாராயண சாஸ்திரியைப்
    பார்த்து அம்மாது சொன்னாள்: “சாமி, எம்பொண்ணு பெரியவளாயிட்டா; கும்பிடறேன்” என்றாள். “அப்பிடியா! இனணிக்கு திதி நடசத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா” என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

    தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம் தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது அவர்களுக்கும் சந்தோஷத்தைத் தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும் அளிக்க வேண்டும்? கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும் கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அதுவும் ஒரு ஓசை தான்; ஏன் ஒரு ஓலம் தான்! நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத் தான்அவ்வாறு ஓலத்தை ச் செயது கொண்டு அவரும் பாவம் செல்கிறார்!

    அதிலிருப்பபவரும் மனிதன் தான். அரசியல் வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்! எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரியவேண்டுமா? “சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!” எனக் கேட்கலாம் போலிருந்தது! இங்கு தம்பட்டம் அடித்து தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொன்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்த”பெரிய” மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

    இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில் கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக “சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்” எனச் சொல்லலாம்! வேறுபாடுகள் இவ்வளவா?

    ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்தி தான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்! ஆனால் மனிதர்களுள எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டு
    கயிற்றையும் சுற்றிக கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக் கழைக்கூத்தாடி! சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின் கண்கள் அகல விரிந்தன. “ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடே நல்லா இருக்கணுமய்யா!” என்ற போது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில் பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல் வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, ” மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்” என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம் வியாபித்து, எல்லா பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்! அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்!

    Share
  • ஐம்பதாண்டுக்கால இலக்கியப் பயணம்!

    அன்பினிய நண்பர்களுக்கு,

    anas
    வணக்கம். இலக்கியப் பயணத்தில் அரை சதம் (50 ஆண்டுகள்) கடந்து வந்து எழுத்துலகில் பெரும் சாதனை புரிந்து, எண்ணற்றோருக்கு வழிகாட்டியாகவும் இருப்பவர் திரு. நரசய்யா அவர்கள். எளிமையும், தன்னடக்கமும் தன்னகத்தேக் கொண்ட இவரது அனுபவம் வாய்ந்த எழுத்துகளும், தெளிந்த ஆய்வுக் கட்டுரைகளும், நூல் விமர்சனங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், வருங்கால எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது என்றால் அது மிகையாகாது. இவருடைய முதல் தமிழ் சிறுகதை, தாம் தமிழ் மொழியை முழுமையாக அறியாத காலத்தில் எழுதிய கதையே, 1964ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆனந்த விகடன் முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று ஒன்பது கதைகள் முத்திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    narasiah-11-289x300

    1955ம் ஆண்டில் ஐ. என். எஸ். பெங்கால் என்ற கப்பலில் மாலுமியாகப் பணியாற்றியபோது, தனக்கேற்பட்ட பயங்கரமான ஒரு அனுபவத்தை சுவைபட அவர் விளக்குவதை இங்கே – அங்கிங்கெனாதபடி! காணலாம்.

    ஐயா அவர்களின் ஆன்மீக நாட்டமும், நூல் திறனாய்வுக் கலையும் அறிய இதோ இராம கதை – ஒரு சிறு விமர்சனம். இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து தம் இலக்கியப் பணியைத் தொடர திரு. நரசய்யா அவர்களை வாழ்த்திப் பணிகிறோம்.

    அன்புடன்

    பவள சங்கரி

    அவள் வீட்டு வாசல் மண்

    நரசய்யா

    ‘வேஷ்யத்வார் மிருத்திகா’ அல்லது வங்காளியில் சாதாரணமாக அறியப்படும் புண்ணிமட்டி என்பது புண்ணியமான மண் – மிருத்திகா மட்டி என்றறியப்படுகிறது. வேஷ்யத்வார் என்பது வேசியின் வீட்டு வாசல் என்பதாகும். காளியின் உருவத்தைத் துர்கா பூஜையின் போது செய்ய முற்படுகையில், முதல் முதலாக ஒரு வேசியின் வீட்டு வாசல் மண் சிறிதளவாவது எடுத்துக் கொள்ளப்படும். ஏனெனில் துர்கா பூஜை சமூகத்தினால் நடத்தப்படும் பூஜை. இதற்குச் செய்யப்படும் சிலைக்கு வேண்டிய மண்ணில் ஒரு பங்கில் எல்லோர் காலும் பட்டிருக்கவேண்டும் என்பது ஒரு ஐதீகம்.! ஆகையால் இந்த மண் தேவை என எண்ணப்படுகிறது. ஜாதி மத வேறுபாடின்றி எல்லோராலும் மிதிக்கப்படும் வாசல் ஒரு பாலியல் வேலையாளரின் வீட்டு வாசல்தான் என்பதும் ஒரு நம்பிக்கை! வட கொல்கத்தா பகுதியில் இருக்கும் குமார்த்துலி என்னும் இடத்தில்தான் இப்பொம்மைகளைச் செய்யும் இனத்தவரான குயவர்கள் வசிக்கிறார்கள்.அவர்கள் தான் இம்மண்ணை எடுத்துவந்து ஏப்ரல் மாதத்திலேயே விநாயகபூஜையுடன் தமது வேலையை ஆரம்பிக்கிறார்கள். இதில் அவர்கள் தமது முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்கிறார்கள். பால் என்ற கடைசிப்பெயரைக் கொண்ட இவர்கள் வேலை செய்வதைக் காண்பதே ஒரு பெரிய மகிழ்வைத்தரும் விஷயம். குமார்த்துலியின் குறுகிய சந்துகளில் சென்று புகைப்படங்கள் எடுத்து இவ்விடத்திற்கு அமரத்துவம் அளித்தவர்களில் உலகின் சிறந்த புகைப்படமேதைகளான ரகுராயும் ஹென்றி கார்ட்டியர் பிரசென்னும் அடங்குவர்.

    கொல்கத்தா நகரத்தைப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து.

    திபின்பால் வைக்கோலையும் மூங்கில் குச்சிகளையும் வைத்து மற்றொரு முறை என்ன செய்வதென்று அறியாமல் துர்க்கா மாதாவின் உருவத்தைச் சீர் செய்ய ஆரம்பித்தவுடன் அவனுக்கு நேற்றைய சண்டைதான் நினைவுக்கு வருகிறது. அவன் மனைவி சுருசி அவனை வறுத்து எடுத்து விட்டாள். “வேலையும் கிடையாது. ஒரு இடத்துக்குப் போய் சம்பாதிக்கவும் வக்கு கிடையாது குடிக்கிறதுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? வெக்கமா இல்லையா?”
    அவளுக்குத் தெரியாது அவன் அங்கு பட்ட அவஸ்தை.. இந்தப் பொம்மையைச் செய்யவேண்டிய முதற்பொருளை அவன் கொண்டுவர முடியாதது அவனுக்கு அச்சத்தை அளித்தது.

    அவன் வேலை செய்ய வேண்டுமென்றுதான் நினைக்கிறான். எவ்வளவோ நம்பிக்கையுடன்தான் அவன் குழுவின் தலைவன் சொன்ன படி ஒரு பிடி மண் எடுத்து வர வேண்டி, கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியான சோனாகச்சி சென்றிருந்தான். அவனுக்குத் தெரியுமா இப்படி விரட்டியடிக்கப்படுவானென்று? ஏதோ புதிய இயக்கமாம் . தர்பார் மகிள சமானாய் சமிதி என்று பெயராம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் சொல்லியிருக்கிறார்களாம். “ஒங்களெ ஏமாத்தி வர்ற இந்தக் கேடுகெட்ட சமுதாயத்துக்கு ஒரு அடி கொடுக்கணும். அவர்கள் பூஜைக்குப் பொம்மை செய்ய ஒங்களெத்தேடித்தான் வருவார்கள். ஒரு சின்னப் பிடி கூட கொடுக்கவேண்டாம்.. . .”

    அதிகமாகத்திட்டியவள் சம்பா.! அவள் அழகுக்காக அறியப்பட்டவள்.

    திபின் பாலுக்குப் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என சம்பந்தம்? மா (துர்க்காதேவி அப்படித்தான் அறியப்படுகிறாள்) பொம்மை செய்வதில் யாருக்கு எவ்வாறு அபிப்ராயப் பேதம் வரலாம்? இந்த மண் கொண்டு வரவில்லையென்றால் பணம் கிடையாது. யோசனையில் ஆழ்ந்திருந்த அவனுக்குச் சக தொழிலாளி தான் சொன்னான், “மோஷாய் வா. . .ஒரு பாட்டில் அடிச்சிட்டுப் போயிடலாம். அப்பறம் ஐடியா ஏதாவ்து வரும்.”

    அப்படிக் குடித்துவிட்டு வந்தவனைத்தான் மனைவி ‘வறுத்து’ எடுத்தாள்.! அவனுக்கு இந்த உலகத்தின் போக்கே புரியவில்லை. எப்போதாவது ஓரிரு தடவை நாடிய சம்பாவின் நினைவு திரும்பியும் அவனுக்கு வந்தது
    சோனாகச்சியின் இருண்ட சந்துகளில் வசிக்கும் ‘அவர்கள்’ இன்று நேற்றல்ல; நாகரீகம் தோன்றிய நாளிலிருந்து தமது தொழிலை நடத்தி வருகிறார்கள். வாழ்வின் விளிம்பில் வாழ்ந்துவரும் அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பும் கிடையாது. வறுமையால் விரட்டப்பட்டு, நோயும் புறக்கணிப்பும் உடன் வர, இரவின் போர்வையில் (போர்வை தமக்கு மட்டுமல்ல தம்மைத் தேடி வரும் வக்கிர புத்தி கொண்டவர்களுக்கும்தான்) ஒதுக்கப்பட்ட இடமான கொல்கத்தாவின் சோனாகச்சியில் சொந்தபந்தங்களுக்கு அப்பாற்பட்டு தாயின் அரவணைப்பும் தந்தையின் பாசமும் எப்போதோ மறுக்கப்ப்ட்டுவிட்ட அவர்களும் இந்த மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள் தாம் என்பதையே சமூகம் மறந்து விட்ட நிலையில் உயிருடன் நடமாடுகிறார்கள். . . வாழ்கிறார்கள் என்று சொன்னால் அது பொய்யெனவே தோன்றுகிறது.

    இந்தச் சமூகமோ அவர்கள் தேவைகளை, தமது கோரமான வக்கிரங்களுக்கு அப்பாற்பட்டு, துர்கா பூஜையின் போது வேண்டுகிறது. இதை என்னவென்று சொல்ல? சமூகத்தின் வஞ்சப்புகழ்ச்சியா அல்லது தனது தவறுகளைத் துடைத்தெறிய முற்படும் பிராயச்சித்த ஏற்பாடா? ஒதுக்கப்பட்டு, தாழ்வாகப் பேசப்பட்டு, ஓரத்துக்குத் தள்ளப்பட்டவர்களின் வீட்டுவாசல் மண் பூஜையின் போது வேண்டப்படுவது எதனால்? ஆண்டவன் சமூகத்திற்கு இட்ட ஒருவகைத் தண்டனையா?

    வடமேற்கு நிலத்திலிருந்து சொந்தக்காரர்களின் சதியுடன் கொல்கத்தாவின் இருண்ட பகுதியான சோனாகச்சிக்குத் தள்ளப்பட்டவள் சம்பா!

    சம்பா தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். “இந்தத் தடவை வரட்டும் பார்க்கிறேன் . . . ஒரு சிட்டிகை கூட த்ர மாட்டேன்.” அப்படிச் சொன்னவள் முன்னால் வந்து நின்ற முதல் துரதிருஷ்டசாலியான தபின் பாலுக்குக் கிடைத்த திட்டுகளில் பெரும்பகுதி இவளிடமிருந்துதான் வந்தது.

    “அப்படியானால் பூஜை நடக்கக்கூடாது என்கிறாயா?” அவன் விரட்டப்பட்டவுடன் மாசி கேட்டாள். மாசி எனறறியப்பட்ட அவள் இவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. “அது அம்மாவைக் கோபமடையச் செய்யாதா?”

    “கோபம் வரட்டும். மா என்ன செய்வாள்? இதுவரை என்ன செய்திருக்கிறாள்?” மாசி பயந்து விட்டாள். “மாவைப்பற்றி அப்படியெல்லாம் பேசாதே..” இவளுக்குப் புத்தி தா தாயே என்று மாசி வேண்டிக் கொள்வதைப் பார்த்த சம்பாவுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. ’இந்த மாசியும் ஒருகாலத்தில் என்னைக் கொடுமைப் படுத்தியவள் தானே! ஆனால் இன்றோ எனக்கு ஆறுதலாகவும்துணையாகவும் உள்ளாள்’ மனதில் நினைத்துக் கொண்டாள்.

    மாசி தொடர்ந்தாள். “ஒனக்குத்தெரியுமா இந்த மண் இல்லாமே குமார்த்துலிக்காரர்களால் ஒண்ணும் செய்யவே முடியாதுன்னு? மா பொம்மை செஞ்சாதான் அவங்களுக்குச் சோறு கிடைக்கும்! நாம் நல்லவங்களோ கெட்டவங்களோன்னு எனக்குத் தெரியாது. ஒங்களையெல்லாம் கூட நான்தான் இந்தத் தொழில்லே சேத்தேன் அப்பவே எத்தனையோ பாவம் செஞ்சுட்டேன். ஆனா நான் என்ன செய்வேன்? எனக்குத்தெரிஞ்ச தொழில் இது ஒண்ணுதான்.. ஒன்னோடே நெலமையும் அதேதான். ஏதோ எந்த ஜென்மத்திலேயோ செஞ்ச பாவத்துக்கு இப்போ அனுபவிச்சிக்கிட்டிருக்கோம்.”

    மூச்சு விடாது பேசி முடித்த மாசியைப் பார்த்தாள் சம்பா. “நான் என்ன பாவம் செஞ்சேன்? பத்து வயசிலே கொண்டுவந்தாங்க. அதுக்கப்பறம் ஒங்கிட்டே பட்டது போதாதா? இப்போ ஒன்னே விட்டா எனக்கும் யாரும் இல்லே. இதிலே பாவமும் புண்ணியமும் எங்கேயிருந்து வந்தது? என் வயசு பொண்கள் போல இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா என்ன?”

    “ஆசை எனக்கும்தான் சம்பா இருக்கு. கொழந்தெகளைக் கொஞ்சணும். ஒரு மனிதனோடே வாழணும்கற ஆசை எனக்கு இல்லேங்க்றேயா? ஆனா முடியுமான்னு நெனச்சுப் பாரு”

    “அது நீயாதானே செஞ்சுக்கிட்டது? ஒன்னையும் கெடுத்துக்கிட்டு எங்களையும் இந்தப் பாழும் குழியிலே தள்ளினது நீதானே” கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் சம்பா. பல வருடங்களுக்குப் பிறகு அவள் அழுகிறாள். சிலை போல அமர்ந்திருந்த மாசி பேசவே யில்ல. சின்னவளாக பேரே தெரியாத இவள் இங்கு தள்ளப்பட்ட போது கொள்ளைபோகிற அழகு! இவளை வைத்து எவ்வள்வு சம்பாதிக்கலாம் என்ற ஒரே எண்ணம்தான் மாசிக்கு இருந்தது. இணங்காத இவளை எவ்வள்வோ கொடுமைப் படுத்தியதும் இவளே தான். சம்பா என்ற பெயரும் இவள் வைத்தது தான். மாசிக்கும் கண்கள் குளமாயின.

    சம்பா, நீ சொல்றது எல்லாம் சரிதாம்மா. ஆனா இப்போ என்ன செய்ய முடியும்? ஒன்னாலே போய் அந்த ஜனச்முத்திரத்திலே சேர்ந்து வாழமுடியுமா? அந்தக் கும்பல் ஒன்னை ஏத்துக்குமா? நான் ஒருதடவை காளிகட் (கொல்கத்தாவின் காளி கோவில்) போநிருந்தப்போ அங்கே பூஜை செய்யற பட்டசார்யாவைக் கேட்டேன். . . எங்களுக்கு விமோசனமே கிடையாதான்னு . ‘ஒங்கமேலே பழி போடற சமூகத்துக்குத் தெரியணுங்க்றத்துக்காகத்தான் ஒங்க வீட்டு வாசல் மண்ணைக் கொண்டுதான் மா பொம்மையைச் செய்யணும்னு மா ஒரு கண்டிஷன் போட்டிருக்கா! அப்படிக் கொடுக்கற மண்ணுலே ஆரம்பிச்சு செய்யற மா பொம்மையைத் தான் எல்லோரும் பூஜை பண்றோம். அந்த மண்ணிலே ஆரம்பிக்கப்பட்ட பொம்மையைப் பாத்துத்தான் நமஸ்காரம் பண்றாங்க. கன்னத்துலே போட்டுக்கறாங்க இல்லையா? இந்த மாதிரி செய்யறப்போ ஒங்க பாவம் கொறையத்தான் செய்யும்’” என்று அவர் சொன்னார். அதே நான் நம்பறேன். . .”

    கோபத்துடன் திரும்பினாள் சம்பா. ‘எல்லாம் கட்டுக்கதை! யாருக்கு வேணும் பாவம் கொறைய சமாசாரம்? நானா பாவம் செஞ்சேன்? என்னைக் கொண்டுவந்து இங்கே தள்ளிவிட்டு இப்போ நான் பாவம் செஞ்சதா சொல்றது மகா மடத்தனம்” ஆவேசத்துடன் அவள் பெசியதைக்கேஏட்டு பயந்து விட்டாள் மாசி. சுற்றி நின்ற பெண்களுக்கும் மாசிக்கும் அவளே ஒரு மாதாவாகக் காணப்பட்டாள். ”நம்பமாட்டேன்.! இந்த மண்ணைக் கொண்டு போகவும் விடமாட்டேன் பூஜையே இல்லாமல் போனாலும் பரவாயில்லை”

    மாசியின் பயம் உச்சக்கட்டத்தை அடைந்தது. “அப்படிச் சொல்லாதே அம்மா . . பூஜை நடக்கல்லேன்னா ஒலகமே அழிஞ்சுடும்”

    “அழியட்டுமே!” முற்றுப்புள்ளி வைத்து விட்டாள் சம்பா.

    ஓடிப்போன மாசி திருமபவும் பட்டாச்சார்யாரைச் சந்தித்தாள். நடந்ததைச் சொன்னாள். எண்பது வயதைத் தாண்டிய அவர் நிதானமாகப் பேசினார். ”அவள் சொல்றதிலே தப்பு இல்லையே! பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். மா ஏதாவது வ்ழி வைத்திருப்பாள். . .பயப்படாதே.”

    கோபத்துடன் நடந்தாள் சம்பா. சோனாகச்சியினின்றும் வந்து நகரத்துக்குள் போகும் சாலைக்கு அவள் வந்தபோது இருட்டிவிட்டிருந்தது. எவ்வளவோ திட்டியிருந்தும் தன்னை நோக்கி வருவது திபின்பால் என்பதைத் தெரிந்து கொண்ட சம்பா அவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள். திடீரெனத் தனது காலில் விழ வந்த அவனைத் தடுத்தாள் சம்பா. “நான் யார்னு தெரிஞ்சும் என் காலில் விழ வர்ரியே ஒனக்குப் புத்தி இருக்கா.”

    “சம்பா நீதான் ஏதாவது சொல்லணும். எனக்கு மூணு பொண்கொழந்தைங்க. வீட்லே ஒரு மீன் கொழம்பாவது எம்பொஞ்சாதி வெக்கணும்னா, இவங்கெல்லாம் பட்டினியாலே சாகக் கூடாதுன்னா இங்கேருந்து நான் மண் கொண்டு போனாத்தான் உண்டு. தயவு செஞ்சு பாரும்மா”

    பெண் குழந்தைகளா?
    பெண் குழந்தைகள். தான்! உதவி செய்யாவிடில் என்னாகும்? பணம் இல்லையென்றதால் தன்னையே விற்ற தனது மாமாவின் நினைவு வந்தது அவளுக்கு. முடியாது. இது நடக்கவிடக் கூடாது. “நீ வீட்டுக்குப் போ . .நான் பாத்துக்கறேன். காலையிலே பாத்துக்கலாம்.” என்று சொன்னவளின் உறுதியான் பேச்சைக் கேட்டு ஏதோ ஒரு வகையில் திருப்தி அடைந்தவனாக திபின் தாயை வேண்டிக்கொண்டு வீட்டைநோக்கி நடந்தான்.

    அதிகாலையில் வீட்டு வாசலில் சம்பா நிற்பதைக் கண்ட சுருசிக்குக் கோபம் எல்லையைத் தாண்டியது. “கேடு கெட்டவளே இங்கேயே வர்ற தைர்யம் ஒனக்கு வந்துடுச்சா? மண்ணு கொடுக்க மாட்டேன்னியாமே? என்ன கொழுப்பு? விளக்குமாறாலே தான் அடிக்கணும்!” அவள் சொல்லி முடிக்குமுன்பு அவளையும் தள்ளிக்கொண்டு வந்து நின்றான் திபின் பால். “மன்னிச்சுடு தாயே” என்றவன் கையில் ஒரு பெரிய பொட்டலத்தைத் திணித்துவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்று விட்டாள் சம்பா.

    அந்தப் பொட்டலம் அவள் வீட்டு வாசல் மண் எனத்தெரிந்து அப்படியே கண்களில் ஒற்றிக் கொண்டவனின் காலில் விழுந்தாள் சுருசி!.

    (ஆனந்தவிகடன் பவள விழாவின் போது முத்திரைக் கதையாக 20-10-2002 அன்று வெளியிடப்பட்டது. திருப்பூர் தமிழ் சங்கத்தின் பரிசு பெற்ற தீர்க்கரேகைகள் என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து.. விகடனுக்கு நன்றிகளுடன் வெளியிடப்படுகிறது)

    Share
  • இராம கதை – ஒரு சிறு விமர்சனம்.

    நரசய்யா

    கைக்கு அடக்கமான ஒரு சிறு நூல்; ஆனால் கடலளவு தன்னுள் அடக்கியுள்ள பெரு நூல்! அப்படித்தான் இந்த இராமகதை என்ற நூலைப் பற்றிச் சொல்லத் தோன்றுகிறது!

    gopal0001

    அழகான அட்டைப்படம், பூஜை அறையில் வைக்கவேண்டுமென்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றது. 60 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தில், முதல் 28 பக்கங்களில் இராமகதை சுருக்கமாக, ஆனால் படிப்பதற்கு வசதியான எளிமையான் தமிழ் பேசுகவிதையில் வார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கம்பராமாயணத்தைச் சார்ந்து தான் எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நான் சமீபத்தில் திரு. மணவாளன் அவர்களைப் பற்றிப் பேசியதை நினைவு கூறுகிறேன். முனைவர் மணவாளன் 2011 ஆம் வருடத்திற்கான சரஸ்வத் சம்மான் பெற்றவர். இவ்விருது அவர் எழுதிய இராமகாதையும் இராமாயணங்களும் என்ற நூலுக்கு வழங்கப்பட்டது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், திபேத்தியம், தமிழ், பழைய ஜாவானியம், ஜப்பானியம், தெலுங்கு, அஸ்ஸாமி, மலையாளம், வங்கமொழி, கன்னடம், மராத்தி, இந்தி, ஒடிசி, பாரசீகம், மலேசியா, பர்மா, மரோனா, தாய், லாவோசியா, காஷ்மீரி, முதலான 48 மொழிகளில் உள்ள இராமாயணங்களை இந்த நூலில் மணவாளன் ஒப்பீடு செய்துள்ளார்! அதன் மூலம், ஒப்பீட்டுத் திறனாய்வுக்காக அவர் விருது பெற்றார். மனித இயல்பிலே ஒப்பிடுவது சாதாரணமாக நிகழ்வதே. ஒப்பிடுவதின் நோக்கம் இன்றைய பட்டிமன்றங்கள் போன்றது அல்ல; ஒன்றனை விட மற்றொன்று சிறப்பானது என்று கூறுவதற்கும் அல்ல; ஒவ்வொன்றின் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு மட்டுமே; ஒரு வழிமுறை அல்லது உத்தி எனலாம். அதுதான் ஒப்பிலக்கியத்தின் முக்கிய நோக்கம். அப்படிப் பார்க்கப்போனால், கோபாலனின் நூலும் இத்திறனாய்வில் பங்கு பெறலாம்!

    எது எவ்வாறாயினும் ஒப்பிடுகையில் நாம் பார்ப்பது என்ன?

    கம்பராமாயணத்தில் குகப்படலத்தில் , கம்பர் சொல்வது:

    வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
    நல்கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை
    கல்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
    வில்கையின் நின்று இடை வீழ விம்முற்று நின்றொழிந்தான்.

    இதையே திரு கோபாலன் இவ்வாறு வார்க்கிறார்:

    மரவுரி தரித்த மாசு படிந்த மெய்யும்
    சிரமேல் குவித்த இருகரங்களும்
    பொலிவற்று நகையற்று விளங்கிய முகமும்
    நலிவுற்று துயருற்று வாடிய தோற்றமும் . . .

     

    அதே போல, கம்பனின் தாக்கம் மண்டோதரி கதறுகையில் முற்றிலுமாகவே காண முடிகிறது. இது போன்று பல இடங்களில், தமது விளக்கங்களில் கம்பனையே ஆசானாகக் கொண்டு எழுதியுள்ளமை தெரிகிறது. ஆங்காங்கு வால்மீகியையும் கருத்தில் கொண்டு படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டுமாறு கதையை நடத்துகிறார். நூல் சிறிதேயாயினும் எங்கும் முக்கிய விஷயங்களைத் தவறாது சொல்லியுள்ளார்.

    சில இடங்களில் மொழி எளிமையில் அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனையையும் ஒத்துள்ளது. பாட்டு கற்றவர்களுக்கு, பாடுவதற்கு வசதியாகக் கூட இருக்கலாம்!

    இராமகதை சொல்லி முடித்த கையோடு, பஜனை செய்வதற்கு வசதியாக, ஸ்ரீராமஜெயம் மகிமை, இராமாயண அட்சரமாலை, அனுமான் நாற்பது (ஹனுமான் சார்லீஸ் உரையுடன்) சங்கடமோசன அனுமானஷ்டகம், அனுமன், அனுமான் பிரசாதம் மற்றும் பக்தி கவிதைக் கொத்து முதலியவற்றையும் சுமார் முப்பது பக்கங்களில் தந்துள்ளார். முக்கியமாக ஹனுமான் சார்லீஸ் பாராயணம் செய்பவர்களுக்கு ஒரு பிரசாதம். ஏனெனில் இதுவரை வந்துள்ள சர்லீஸ் பொருளுரைக்குப் பதிலாக, இவரது உரையும் பாடத் தகுந்ததே!

    மொத்தத்தில் இந்த நூல் பக்தர்களுக்கு ஒரு சிறந்த பரிசெனவே சொல்லலாம். ஒரு சிறந்த அதிகாரியாக, மத்திய அரசில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் சுமார் பத்து வருடங்கள் அரசு ஆலோசகராகப் பணிபுரிந்த கோபாலன், அளித்துள்ள இந்த நூல் அவரது சிறந்த சமூகத் தொண்டெனவே கூறலாம்!

    இப்படி ஒரு சிறந்த நூலை அளித்ததற்கு அவருக்கு இராமபிரான் அருள் பாலிக்கவேண்டுகிறேன்.

    தொடர்பிற்கு:

    திரு எஸ். கோபாலன்

    T – 75A, Triyambhava,

    Kalapatti Rd, (Near SITRA)

    Coimbatore – 641014,

    Mobile – 9600801888

    E-mail : subragopalan@hotmail.com

    Share
  • அங்கிங்கெனாதபடி!

    நரசய்யா

    என்னைப் பொறுத்தவரையில் இக்கதை உண்மையாக நடந்த விஷயம்.சிறிதும் புனைவு கிடையாது!. நான் தான் கதாநாயகன். இப்போது நினைத்துப் பார்த்தாலும் பயமாக உள்ளது.


    1955 ஆம் வருடம் இறுதி மாதங்கள் – நான் ஐ. என். எஸ். பெங்கால் என்ற கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கப்பல் பம்பாய்த் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தது. அது மைன் ஸ்வீப்பர் வகையைச் சேர்ந்தது. சுமார் 100 அடி நீளமே கொண்ட மிகச் சிறிய இரண்டாம் உலக மஹா யுத்தத்தில் பங்கு கொண்ட கப்பல்; சுதந்திரத்தின் போது, பாகிஸ்தானும் இந்தியாவும்  பங்கு போட்டுக் கொண்ட போது இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிக் கப்பல் – என் போன்றவர்களுக்கு ஒரு தண்டனை. 22 வயதில் என் வயதினையொத்தவர்கள இன்னும் பெற்றோர் அரவணைப்பில் இருந்து கொண்டிருந்த நிலையில், நான், அந்தத் தண்டனைக் கப்பலில், (ஆம்; மற்ற மாலுமிகள் இம்மாதிரிக் கப்பல்களைத் தண்டனைக் கப்பல்கள் என்றுதான் அழைப்பர்) ஒரு விதமான சௌகரியங்களும் இல்லாத, எப்போதும் நின்று விடக்கூடிய பழுது பட்ட இயந்திரங்களுடன் அதில் பணி புரியும் எல்லோருக்கும் மிக்க வேதனையைத் தந்து கொண்டிருந்த கப்பலின் ஒரு மாலுமி! அதுவும் கப்பற்பொறியியல் துறை பயின்ற ஒரு மாலுமி! இத்தனை துன்பம் தந்துகொண்டிருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் என்னால் மிகவும் விரும்பப்பட்ட கப்பல்! அதன் கேப்டன் கமாண்டர் டி அல்மைடா எனபவருக்கு எப்போதும் கடல் வியாதி உண்டு! பக்கத்தில் ஒரு வாளியை வைத்துக்கொண்டு அதில் வாந்தி எடுத்துக் கொண்டு பிரிட்ஜில் (கப்பல் செலுத்துமிடம்) நின்று கொண்டிருப்பார். எஞ்சின் நின்றுவிட்டால் எங்கே அந்த நரசய்யா என்பார். அதுவும் அடிக்கடி நிகழும் சங்கதி! சீஃப் எஞ்சினீயரோ கோவாவைச் சேர்ந்த ஒரு வயலின் இசைக் கலைஞர். அவரை எஞ்சினீயர் என்று கூறுவதே தவறு! அவரே சொல்வார்: “எனக்கு எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்று கூட தெரியாது. ஆனால் நரசய்யா இருக்கும் வரை எனக்குக் கவலை இல்லை!” அதையே தான் கமாண்டர் அல்மைடாவும் உறுதி செய்வார்! ”நீ நீரோ போல பிடில் வாசிக்கத்தான் தகுதி; ரோம் எரிந்தாலும் கவலையில்லையே!” என்பார் அதே போல கொந்தளிக்கும் கடலிலும் வயலின் வாசித்துக் காட்டுவார். “பீதோவனின் கோதெர்ட் வாசிக்கிறேன் கேட்கிறாயா?” என்பார். தலையெழுத்து என்றால் இதுதான்; ஆனாலும் சிறந்த மனிதன் எவரும் கஷ்டப்படுவதை விரும்பமாட்டார்.

    அப்போது இந்தியாவையே அச்சுறுத்திய ஃப்ளூ காய்ச்சல் பம்பாயிலும் தனது கைங்கரியத்தைத் துவங்கியது. முதலில் கேப்டனுக்கு அந்தக் காய்ச்சல் வந்தது. தொடர்ந்து எல்லோருக்கும் வந்தது.

    ஓரிரவு எனக்குத் தலைவலி மிக அதிகமாகி விட்டது. நடு இரவில் காய்ச்சல் அதிகமாகிவிடவே என்னை பக்கத்திலிருந்த (எங்கள் கப்பலில் ஒரு விதமான மருத்துவ உதவியும் கிடையாது) ஒரு பெரிய கப்பலுக்குப் படகில் அழைத்துச் சென்றார் எனது நண்பர் தான்சாமா என்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்தக் கப்பலிலிருந்த ஒரே ஒரு எஸ். பி. ஏ (ஆண் நர்ஸ்) மருத்துவம் தெரிந்த அளவில் என்னைப் பரிசோதித்து விட்டு காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளதால், ஐ. என். எஸ் அஸ்வினி என்ற பம்பாயின் சிறந்த இந்திய கப்பற்படையின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்படி கூறி விட்டார். அப்போது என்னை அங்கு அழைத்துச் செல்ல தான்சாமாவுக்குக் கிடைத்த வாகனம் ஒரு கடற்படையின் ஒரு பெரிய லாரிதான்! அந்த லாரியில் சில சாமான்கள் கொலாபாவுக்குச் சென்று கொண்டிருந்தன. அந்த சாமான்களுடன் என்னையும் மற்றொரு சாமான் போல, கம்பளியால் சுற்றிவைத்துக் கொண்டு வந்தார் அந்த தான்சாமா. வழி நெடுக அவர் இந்திய கப்பற்படையையும் அதிகாரிகளையும் திட்டிக்கொண்டு வந்தார். எனக்கு நினைவு வருவதும் போவதுமாய் இருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் அம்மாதிரி பிராயாணம் செய்த பிறகு, (அப்படித்தான் எனக்குத் தோன்றியது ஆனால் எடுத்துக் கொண்டது ஒரு மணிநேரம்) மருத்துவ மனை சென்றடைந்தோம்.

    அந்த மருத்துவமனையில் என்னைப் பரிசோதித்த ட்யூடி டாக்டர் என்னை அங்கே அட்மிட் செய்து விட்டு தான்சாமாவைப் போகச் சொல்லி விட்டார்! அவரையும் திட்டி விட்டு தான்சாமா ஃபிளீட் கேண்டீனுக்கு பியர் குடிக்கச் சென்று விட்டார். கோபம் வந்தால் அவருக்குக் குடிக்கத்தான் தெரியும். அதுவும் பியர் ஒன்றுதான்.

    நான் உணர்விழந்திருந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் கண் விழித்த போது மருத்துவ மனையின் ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் பேசிக்கொள்வது எனக்குக் கேட்டது. என்னைப் பரிசோதித்த டாக்டர் என்னை “டி. ஐ. எல்” லில் (Dangerously Ill List) போட்டு விட்டதோடல்லாமல் என்னை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றச் சொன்னது எனக்குக் கேட்டது. திரும்பவும் பிரக்ஞை இழந்து விட்டேன்!  காலம் வெவ்வேறு விதமாக ஓடுகிறது. காத்திருக்கும் காதலர்களுக்கும் கட்டிலில் கிடக்கும் நோயாளிக்கும் வினாடிகள் நாட்களாக காணப்படுகிறது. அதுவும் தெரியாமல் இந்த மாதிரி ‘மிலிட்டரி’ ஆஸ்பத்திரிகளில் இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம். சாதாரணமாக இவையெல்லாம் கால்நடை மருத்துவ மனை போலத்தான் செயல் படுகின்றன. ‘தேசத்திற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்ய வந்திருக்கும்” என்று அரசியல் வாதிகளால் (வெட்கமற்றவர்கள் ) வருணிக்கப்படும் போர்வீரர்கள் கால்நடைகள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள் என்பது நான் கண் விழித்த போது தெரிந்தது. நான் இப்போது வெராந்தாவில் கிடத்தப்பட்டிருந்தேன். கண் விழித்த போது மிகவும் பெரிய மார்பகங்களை உடைய நர்ஸ், (இவருக்கே 50 வயதிருக்கும் போலத் தோன்றியது எனக்கு) என்னைத் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்ததைக் கண்டு, எனக்குப் பதிலாக அவரது மார்பகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆர்மி டாக்டருக்குச் சொன்னார்: “இன்னும் உயிருடன் தான் உள்ளான்” அவர் குரலில் ஏமாற்றம் இருந்தது போல எனக்குப் பட்டது! சித்திரகுப்தனும் எமனும் பேசிக்கொள்வது போல இருந்தது. “இன்னும் டயம் வரவில்லை” டாக்டர் தமது கண்களை வைத்த இடத்திலிருந்து எடுக்காமலேயே கூறினார்.

    சில நல்லதுகளும் இம்மாதிரி மருத்துவ மனைகளில் நடக்கின்றன. அந்த நர்ஸ் மிகவும் நல்லவர் என்பது பிறகு தான் எனக்குப் புரிந்தது. “நீ ஒரு வெஜிடேரியனா?”

    அப்போது நானிருந்த நிலையில் எனக்கே புரியவில்லை என்ன கேட்கிறாரெனப் புரியவில்லை. நான் மிரளுவதைப் பார்த்து, ஒரு தாயின் உணர்வோடு பேசினார். “நீ மெட்ராசி தானே? உன்னோடே மார்பிலே பூணூல் தெரிகிறது. அதனால் தான் கேட்டேன்” என்று மராத்தி கலந்த ஹிந்தியில் கேட்டார். “நிறைய பால் சாப்பிடு காய்ச்சல் போயாச்சு, தண்ணியும் நெறய்ய குடி” இப்போது அவர் தமிழில் பேச முயன்றது ஆச்சரியத்தை அளித்து! ஹிந்தியில் தொடர்ந்தார். அவர் சிறிது காலம் மெட்ராஸ் மிலடரி ஆஸ்பத்திரியில் வேலை செய்த போது தமிழ் கற்றாராம்! தமிழுக்கு வந்த தலைவலி!

    டாக்டர் வந்தார். பஞ்சாபி; எல்லோரையும் திட்டிக் கொண்டு வந்தார். என்னைப் பார்த்தும் கத்த ஆரம்பித்து விட்டார். “ஏன் கீழே கிடக்கிறாய்? செத்துத் தொலைவதற்கா?” அவர் கேள்வி எனக்கு ஆச்சரியத்தை அளித்து. ஏதோ நானே இங்கு வந்து படுத்திருப்பதாக எண்ணமோ?

    அவர் போன பிறகு அந்த நர்சை அழைத்தேன்.  ”நான் இங்கே வந்து எத்தனை நாளாயிற்று?”

    அவர் சொல்லித்தான் தெரிந்தது. மூன்று நாட்கள் முன்பு நான் அட்மிட் ஆன போது மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் எங்கள் கமாண்டிங் ஆபிசர் வந்த பார்த்துச் சென்றதாகவும் ஆனால் அவரும் இங்கே பின்னர் அட்மிட் ஆகி விட்டதால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லயென்பதும் நான் சென்றுவிட்டால், (அதாவது உலகத்தை விட்டு) என்ன செய்வதெனப் பேசிக்கொண்டிருந்ததாகவும் சொன்னார். சிரித்துக் கொண்டே சொன்னார்!

    வெராந்தாவிலிருந்து உள்ளே  வார்டுக்கு மாற்றப்பட்டேன் அங்கு வேலைசெய்யும் ஆண்  நர்சுகள் திருமூலர் படித்திருப்பார்கள் போலும் என் பெயர் சொல்லாமல் பெயரினை நீக்கி என்னைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்! “பரவாயில்லை பயப்படாதே; இனிமேல் ஒரு ப்ராப்ளமும் இல்லை. ட்யூடி டாகடர் வருவார். அவரும் ஒரு பஞ்சாபி தான். கிறுக்கும் கூட. ஏதாவது கேட்டால் மருந்து சாப்பிட்டேன் என்று மட்டும் சொல். அவர் தான் உன்னை வெராந்தாவில் போடச் சொன்னவர்; நீ போகல்லை என்று வருத்தப்பட்டாலும் படுவார்!”

    அவர் வந்தார்! வந்தாரா? சுனாமி போல நுழைந்தார். “நீ இன்னும்  இருக்கிறாயா?”  வந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன் ஆனால் அவர் தொடர்ந்து பேசியது என் மனதை இளக வைத்தது. “ஒங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம் தான் ஒன்னைக் காப்பாத்தியிருக்கு!: எஸ்பெஷலி ஒங்க அம்மா! உனக்கு இனிமே சாவே கெடையாது!” என்று சொல்லி டிஸ்சார்ஜ் என்று எனது கேஸ் ஷீட்டில் எழுதிச் சென்று விட்டார். எங்களுக்குச் சகட யோகம் லாரிதான்! இந்தத்தடவை ஒரு த்ரீ டன்னர். பரவாயில்லை பெஞ்ச் போல சீட் கூட இருந்தது. திருமபவும் படகில்; ஆனால் சக மாலுமிகள் ஜாக்கிரதையாக்க் கப்பலில் ஏற்றினர். .

    மறுநாள் கப்பலில் தன்சாமா  ஒரு கப்பில் தக்காளி  சூப் மிகச் சூடாகக் கொண்டு வந்து கொடுத்தார். அமிர்தம் போலிருந்தது. அல்மைடா வந்து  பார்த்தார். “ந்ல்ல வேளை ஆஸ்பத்திரியில் உன்னைக் கொல்லாது விட்டார்கள்!”  ஒரு கிளாசில் விஸ்கியும் எலுமிச்சம் பழ ஜூசும் கலந்து அத்துடன் கொதிக்கும் நீரை ஊற்றி, “இது தான் ஹாட் ஸ்காட்ச். இதைக் குடித்தால் எல்லாவியாதியும் பறந்துவிடும்” என்றார்.

    பழனியில் அபிஷேகப் பாலை எடுத்துக் கொள்வதைப் போல அதைக் குடித்துவிட்டு நான் திருமுருகாற்றுப்ப்டையைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

    தன்சாமா நல்ல(?)ழ் கெட்ட வார்த்தைகளால் எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். சீப் இஞ்சினீயர் பிடிலில் பீதோவன் வாசிக்கக் கண்ணயர்ந்து விட்டேன். கனவில் அந்த நர்ஸ் தனது பெரிய மார்பகங்களில் என்னை அணைத்துக் கொண்டு என்னைத் தாலாட்டுவது போலத் தெரிந்தது. அப்போதுதான் உண்மையும் புலப்பட்டது. சாவுக்கும் வாழ்வுக்கும் அதிக வித்தியாசமில்லை! நான் வைதர்ணியின் கரைகளைப் பார்த்தவனாயிற்றே!

    படத்திற்கு நன்றி:
    http://www.navsource.org/archives/11/05idx.htm

    Share