அன்பினிய நண்பர்களுக்கு,

anas
வணக்கம். இலக்கியப் பயணத்தில் அரை சதம் (50 ஆண்டுகள்) கடந்து வந்து எழுத்துலகில் பெரும் சாதனை புரிந்து, எண்ணற்றோருக்கு வழிகாட்டியாகவும் இருப்பவர் திரு. நரசய்யா அவர்கள். எளிமையும், தன்னடக்கமும் தன்னகத்தேக் கொண்ட இவரது அனுபவம் வாய்ந்த எழுத்துகளும், தெளிந்த ஆய்வுக் கட்டுரைகளும், நூல் விமர்சனங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், வருங்கால எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது என்றால் அது மிகையாகாது. இவருடைய முதல் தமிழ் சிறுகதை, தாம் தமிழ் மொழியை முழுமையாக அறியாத காலத்தில் எழுதிய கதையே, 1964ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆனந்த விகடன் முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று ஒன்பது கதைகள் முத்திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

narasiah-11-289x300

1955ம் ஆண்டில் ஐ. என். எஸ். பெங்கால் என்ற கப்பலில் மாலுமியாகப் பணியாற்றியபோது, தனக்கேற்பட்ட பயங்கரமான ஒரு அனுபவத்தை சுவைபட அவர் விளக்குவதை இங்கே – அங்கிங்கெனாதபடி! காணலாம்.

ஐயா அவர்களின் ஆன்மீக நாட்டமும், நூல் திறனாய்வுக் கலையும் அறிய இதோ இராம கதை – ஒரு சிறு விமர்சனம். இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து தம் இலக்கியப் பணியைத் தொடர திரு. நரசய்யா அவர்களை வாழ்த்திப் பணிகிறோம்.

அன்புடன்

பவள சங்கரி

அவள் வீட்டு வாசல் மண்

நரசய்யா

‘வேஷ்யத்வார் மிருத்திகா’ அல்லது வங்காளியில் சாதாரணமாக அறியப்படும் புண்ணிமட்டி என்பது புண்ணியமான மண் – மிருத்திகா மட்டி என்றறியப்படுகிறது. வேஷ்யத்வார் என்பது வேசியின் வீட்டு வாசல் என்பதாகும். காளியின் உருவத்தைத் துர்கா பூஜையின் போது செய்ய முற்படுகையில், முதல் முதலாக ஒரு வேசியின் வீட்டு வாசல் மண் சிறிதளவாவது எடுத்துக் கொள்ளப்படும். ஏனெனில் துர்கா பூஜை சமூகத்தினால் நடத்தப்படும் பூஜை. இதற்குச் செய்யப்படும் சிலைக்கு வேண்டிய மண்ணில் ஒரு பங்கில் எல்லோர் காலும் பட்டிருக்கவேண்டும் என்பது ஒரு ஐதீகம்.! ஆகையால் இந்த மண் தேவை என எண்ணப்படுகிறது. ஜாதி மத வேறுபாடின்றி எல்லோராலும் மிதிக்கப்படும் வாசல் ஒரு பாலியல் வேலையாளரின் வீட்டு வாசல்தான் என்பதும் ஒரு நம்பிக்கை! வட கொல்கத்தா பகுதியில் இருக்கும் குமார்த்துலி என்னும் இடத்தில்தான் இப்பொம்மைகளைச் செய்யும் இனத்தவரான குயவர்கள் வசிக்கிறார்கள்.அவர்கள் தான் இம்மண்ணை எடுத்துவந்து ஏப்ரல் மாதத்திலேயே விநாயகபூஜையுடன் தமது வேலையை ஆரம்பிக்கிறார்கள். இதில் அவர்கள் தமது முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்கிறார்கள். பால் என்ற கடைசிப்பெயரைக் கொண்ட இவர்கள் வேலை செய்வதைக் காண்பதே ஒரு பெரிய மகிழ்வைத்தரும் விஷயம். குமார்த்துலியின் குறுகிய சந்துகளில் சென்று புகைப்படங்கள் எடுத்து இவ்விடத்திற்கு அமரத்துவம் அளித்தவர்களில் உலகின் சிறந்த புகைப்படமேதைகளான ரகுராயும் ஹென்றி கார்ட்டியர் பிரசென்னும் அடங்குவர்.

கொல்கத்தா நகரத்தைப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து.

திபின்பால் வைக்கோலையும் மூங்கில் குச்சிகளையும் வைத்து மற்றொரு முறை என்ன செய்வதென்று அறியாமல் துர்க்கா மாதாவின் உருவத்தைச் சீர் செய்ய ஆரம்பித்தவுடன் அவனுக்கு நேற்றைய சண்டைதான் நினைவுக்கு வருகிறது. அவன் மனைவி சுருசி அவனை வறுத்து எடுத்து விட்டாள். “வேலையும் கிடையாது. ஒரு இடத்துக்குப் போய் சம்பாதிக்கவும் வக்கு கிடையாது குடிக்கிறதுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? வெக்கமா இல்லையா?”
அவளுக்குத் தெரியாது அவன் அங்கு பட்ட அவஸ்தை.. இந்தப் பொம்மையைச் செய்யவேண்டிய முதற்பொருளை அவன் கொண்டுவர முடியாதது அவனுக்கு அச்சத்தை அளித்தது.

அவன் வேலை செய்ய வேண்டுமென்றுதான் நினைக்கிறான். எவ்வளவோ நம்பிக்கையுடன்தான் அவன் குழுவின் தலைவன் சொன்ன படி ஒரு பிடி மண் எடுத்து வர வேண்டி, கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியான சோனாகச்சி சென்றிருந்தான். அவனுக்குத் தெரியுமா இப்படி விரட்டியடிக்கப்படுவானென்று? ஏதோ புதிய இயக்கமாம் . தர்பார் மகிள சமானாய் சமிதி என்று பெயராம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் சொல்லியிருக்கிறார்களாம். “ஒங்களெ ஏமாத்தி வர்ற இந்தக் கேடுகெட்ட சமுதாயத்துக்கு ஒரு அடி கொடுக்கணும். அவர்கள் பூஜைக்குப் பொம்மை செய்ய ஒங்களெத்தேடித்தான் வருவார்கள். ஒரு சின்னப் பிடி கூட கொடுக்கவேண்டாம்.. . .”

அதிகமாகத்திட்டியவள் சம்பா.! அவள் அழகுக்காக அறியப்பட்டவள்.

திபின் பாலுக்குப் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என சம்பந்தம்? மா (துர்க்காதேவி அப்படித்தான் அறியப்படுகிறாள்) பொம்மை செய்வதில் யாருக்கு எவ்வாறு அபிப்ராயப் பேதம் வரலாம்? இந்த மண் கொண்டு வரவில்லையென்றால் பணம் கிடையாது. யோசனையில் ஆழ்ந்திருந்த அவனுக்குச் சக தொழிலாளி தான் சொன்னான், “மோஷாய் வா. . .ஒரு பாட்டில் அடிச்சிட்டுப் போயிடலாம். அப்பறம் ஐடியா ஏதாவ்து வரும்.”

அப்படிக் குடித்துவிட்டு வந்தவனைத்தான் மனைவி ‘வறுத்து’ எடுத்தாள்.! அவனுக்கு இந்த உலகத்தின் போக்கே புரியவில்லை. எப்போதாவது ஓரிரு தடவை நாடிய சம்பாவின் நினைவு திரும்பியும் அவனுக்கு வந்தது
சோனாகச்சியின் இருண்ட சந்துகளில் வசிக்கும் ‘அவர்கள்’ இன்று நேற்றல்ல; நாகரீகம் தோன்றிய நாளிலிருந்து தமது தொழிலை நடத்தி வருகிறார்கள். வாழ்வின் விளிம்பில் வாழ்ந்துவரும் அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பும் கிடையாது. வறுமையால் விரட்டப்பட்டு, நோயும் புறக்கணிப்பும் உடன் வர, இரவின் போர்வையில் (போர்வை தமக்கு மட்டுமல்ல தம்மைத் தேடி வரும் வக்கிர புத்தி கொண்டவர்களுக்கும்தான்) ஒதுக்கப்பட்ட இடமான கொல்கத்தாவின் சோனாகச்சியில் சொந்தபந்தங்களுக்கு அப்பாற்பட்டு தாயின் அரவணைப்பும் தந்தையின் பாசமும் எப்போதோ மறுக்கப்ப்ட்டுவிட்ட அவர்களும் இந்த மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள் தாம் என்பதையே சமூகம் மறந்து விட்ட நிலையில் உயிருடன் நடமாடுகிறார்கள். . . வாழ்கிறார்கள் என்று சொன்னால் அது பொய்யெனவே தோன்றுகிறது.

இந்தச் சமூகமோ அவர்கள் தேவைகளை, தமது கோரமான வக்கிரங்களுக்கு அப்பாற்பட்டு, துர்கா பூஜையின் போது வேண்டுகிறது. இதை என்னவென்று சொல்ல? சமூகத்தின் வஞ்சப்புகழ்ச்சியா அல்லது தனது தவறுகளைத் துடைத்தெறிய முற்படும் பிராயச்சித்த ஏற்பாடா? ஒதுக்கப்பட்டு, தாழ்வாகப் பேசப்பட்டு, ஓரத்துக்குத் தள்ளப்பட்டவர்களின் வீட்டுவாசல் மண் பூஜையின் போது வேண்டப்படுவது எதனால்? ஆண்டவன் சமூகத்திற்கு இட்ட ஒருவகைத் தண்டனையா?

வடமேற்கு நிலத்திலிருந்து சொந்தக்காரர்களின் சதியுடன் கொல்கத்தாவின் இருண்ட பகுதியான சோனாகச்சிக்குத் தள்ளப்பட்டவள் சம்பா!

சம்பா தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். “இந்தத் தடவை வரட்டும் பார்க்கிறேன் . . . ஒரு சிட்டிகை கூட த்ர மாட்டேன்.” அப்படிச் சொன்னவள் முன்னால் வந்து நின்ற முதல் துரதிருஷ்டசாலியான தபின் பாலுக்குக் கிடைத்த திட்டுகளில் பெரும்பகுதி இவளிடமிருந்துதான் வந்தது.

“அப்படியானால் பூஜை நடக்கக்கூடாது என்கிறாயா?” அவன் விரட்டப்பட்டவுடன் மாசி கேட்டாள். மாசி எனறறியப்பட்ட அவள் இவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. “அது அம்மாவைக் கோபமடையச் செய்யாதா?”

“கோபம் வரட்டும். மா என்ன செய்வாள்? இதுவரை என்ன செய்திருக்கிறாள்?” மாசி பயந்து விட்டாள். “மாவைப்பற்றி அப்படியெல்லாம் பேசாதே..” இவளுக்குப் புத்தி தா தாயே என்று மாசி வேண்டிக் கொள்வதைப் பார்த்த சம்பாவுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. ’இந்த மாசியும் ஒருகாலத்தில் என்னைக் கொடுமைப் படுத்தியவள் தானே! ஆனால் இன்றோ எனக்கு ஆறுதலாகவும்துணையாகவும் உள்ளாள்’ மனதில் நினைத்துக் கொண்டாள்.

மாசி தொடர்ந்தாள். “ஒனக்குத்தெரியுமா இந்த மண் இல்லாமே குமார்த்துலிக்காரர்களால் ஒண்ணும் செய்யவே முடியாதுன்னு? மா பொம்மை செஞ்சாதான் அவங்களுக்குச் சோறு கிடைக்கும்! நாம் நல்லவங்களோ கெட்டவங்களோன்னு எனக்குத் தெரியாது. ஒங்களையெல்லாம் கூட நான்தான் இந்தத் தொழில்லே சேத்தேன் அப்பவே எத்தனையோ பாவம் செஞ்சுட்டேன். ஆனா நான் என்ன செய்வேன்? எனக்குத்தெரிஞ்ச தொழில் இது ஒண்ணுதான்.. ஒன்னோடே நெலமையும் அதேதான். ஏதோ எந்த ஜென்மத்திலேயோ செஞ்ச பாவத்துக்கு இப்போ அனுபவிச்சிக்கிட்டிருக்கோம்.”

மூச்சு விடாது பேசி முடித்த மாசியைப் பார்த்தாள் சம்பா. “நான் என்ன பாவம் செஞ்சேன்? பத்து வயசிலே கொண்டுவந்தாங்க. அதுக்கப்பறம் ஒங்கிட்டே பட்டது போதாதா? இப்போ ஒன்னே விட்டா எனக்கும் யாரும் இல்லே. இதிலே பாவமும் புண்ணியமும் எங்கேயிருந்து வந்தது? என் வயசு பொண்கள் போல இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா என்ன?”

“ஆசை எனக்கும்தான் சம்பா இருக்கு. கொழந்தெகளைக் கொஞ்சணும். ஒரு மனிதனோடே வாழணும்கற ஆசை எனக்கு இல்லேங்க்றேயா? ஆனா முடியுமான்னு நெனச்சுப் பாரு”

“அது நீயாதானே செஞ்சுக்கிட்டது? ஒன்னையும் கெடுத்துக்கிட்டு எங்களையும் இந்தப் பாழும் குழியிலே தள்ளினது நீதானே” கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் சம்பா. பல வருடங்களுக்குப் பிறகு அவள் அழுகிறாள். சிலை போல அமர்ந்திருந்த மாசி பேசவே யில்ல. சின்னவளாக பேரே தெரியாத இவள் இங்கு தள்ளப்பட்ட போது கொள்ளைபோகிற அழகு! இவளை வைத்து எவ்வள்வு சம்பாதிக்கலாம் என்ற ஒரே எண்ணம்தான் மாசிக்கு இருந்தது. இணங்காத இவளை எவ்வள்வோ கொடுமைப் படுத்தியதும் இவளே தான். சம்பா என்ற பெயரும் இவள் வைத்தது தான். மாசிக்கும் கண்கள் குளமாயின.

சம்பா, நீ சொல்றது எல்லாம் சரிதாம்மா. ஆனா இப்போ என்ன செய்ய முடியும்? ஒன்னாலே போய் அந்த ஜனச்முத்திரத்திலே சேர்ந்து வாழமுடியுமா? அந்தக் கும்பல் ஒன்னை ஏத்துக்குமா? நான் ஒருதடவை காளிகட் (கொல்கத்தாவின் காளி கோவில்) போநிருந்தப்போ அங்கே பூஜை செய்யற பட்டசார்யாவைக் கேட்டேன். . . எங்களுக்கு விமோசனமே கிடையாதான்னு . ‘ஒங்கமேலே பழி போடற சமூகத்துக்குத் தெரியணுங்க்றத்துக்காகத்தான் ஒங்க வீட்டு வாசல் மண்ணைக் கொண்டுதான் மா பொம்மையைச் செய்யணும்னு மா ஒரு கண்டிஷன் போட்டிருக்கா! அப்படிக் கொடுக்கற மண்ணுலே ஆரம்பிச்சு செய்யற மா பொம்மையைத் தான் எல்லோரும் பூஜை பண்றோம். அந்த மண்ணிலே ஆரம்பிக்கப்பட்ட பொம்மையைப் பாத்துத்தான் நமஸ்காரம் பண்றாங்க. கன்னத்துலே போட்டுக்கறாங்க இல்லையா? இந்த மாதிரி செய்யறப்போ ஒங்க பாவம் கொறையத்தான் செய்யும்’” என்று அவர் சொன்னார். அதே நான் நம்பறேன். . .”

கோபத்துடன் திரும்பினாள் சம்பா. ‘எல்லாம் கட்டுக்கதை! யாருக்கு வேணும் பாவம் கொறைய சமாசாரம்? நானா பாவம் செஞ்சேன்? என்னைக் கொண்டுவந்து இங்கே தள்ளிவிட்டு இப்போ நான் பாவம் செஞ்சதா சொல்றது மகா மடத்தனம்” ஆவேசத்துடன் அவள் பெசியதைக்கேஏட்டு பயந்து விட்டாள் மாசி. சுற்றி நின்ற பெண்களுக்கும் மாசிக்கும் அவளே ஒரு மாதாவாகக் காணப்பட்டாள். ”நம்பமாட்டேன்.! இந்த மண்ணைக் கொண்டு போகவும் விடமாட்டேன் பூஜையே இல்லாமல் போனாலும் பரவாயில்லை”

மாசியின் பயம் உச்சக்கட்டத்தை அடைந்தது. “அப்படிச் சொல்லாதே அம்மா . . பூஜை நடக்கல்லேன்னா ஒலகமே அழிஞ்சுடும்”

“அழியட்டுமே!” முற்றுப்புள்ளி வைத்து விட்டாள் சம்பா.

ஓடிப்போன மாசி திருமபவும் பட்டாச்சார்யாரைச் சந்தித்தாள். நடந்ததைச் சொன்னாள். எண்பது வயதைத் தாண்டிய அவர் நிதானமாகப் பேசினார். ”அவள் சொல்றதிலே தப்பு இல்லையே! பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். மா ஏதாவது வ்ழி வைத்திருப்பாள். . .பயப்படாதே.”

கோபத்துடன் நடந்தாள் சம்பா. சோனாகச்சியினின்றும் வந்து நகரத்துக்குள் போகும் சாலைக்கு அவள் வந்தபோது இருட்டிவிட்டிருந்தது. எவ்வளவோ திட்டியிருந்தும் தன்னை நோக்கி வருவது திபின்பால் என்பதைத் தெரிந்து கொண்ட சம்பா அவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள். திடீரெனத் தனது காலில் விழ வந்த அவனைத் தடுத்தாள் சம்பா. “நான் யார்னு தெரிஞ்சும் என் காலில் விழ வர்ரியே ஒனக்குப் புத்தி இருக்கா.”

“சம்பா நீதான் ஏதாவது சொல்லணும். எனக்கு மூணு பொண்கொழந்தைங்க. வீட்லே ஒரு மீன் கொழம்பாவது எம்பொஞ்சாதி வெக்கணும்னா, இவங்கெல்லாம் பட்டினியாலே சாகக் கூடாதுன்னா இங்கேருந்து நான் மண் கொண்டு போனாத்தான் உண்டு. தயவு செஞ்சு பாரும்மா”

பெண் குழந்தைகளா?
பெண் குழந்தைகள். தான்! உதவி செய்யாவிடில் என்னாகும்? பணம் இல்லையென்றதால் தன்னையே விற்ற தனது மாமாவின் நினைவு வந்தது அவளுக்கு. முடியாது. இது நடக்கவிடக் கூடாது. “நீ வீட்டுக்குப் போ . .நான் பாத்துக்கறேன். காலையிலே பாத்துக்கலாம்.” என்று சொன்னவளின் உறுதியான் பேச்சைக் கேட்டு ஏதோ ஒரு வகையில் திருப்தி அடைந்தவனாக திபின் தாயை வேண்டிக்கொண்டு வீட்டைநோக்கி நடந்தான்.

அதிகாலையில் வீட்டு வாசலில் சம்பா நிற்பதைக் கண்ட சுருசிக்குக் கோபம் எல்லையைத் தாண்டியது. “கேடு கெட்டவளே இங்கேயே வர்ற தைர்யம் ஒனக்கு வந்துடுச்சா? மண்ணு கொடுக்க மாட்டேன்னியாமே? என்ன கொழுப்பு? விளக்குமாறாலே தான் அடிக்கணும்!” அவள் சொல்லி முடிக்குமுன்பு அவளையும் தள்ளிக்கொண்டு வந்து நின்றான் திபின் பால். “மன்னிச்சுடு தாயே” என்றவன் கையில் ஒரு பெரிய பொட்டலத்தைத் திணித்துவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்று விட்டாள் சம்பா.

அந்தப் பொட்டலம் அவள் வீட்டு வாசல் மண் எனத்தெரிந்து அப்படியே கண்களில் ஒற்றிக் கொண்டவனின் காலில் விழுந்தாள் சுருசி!.

(ஆனந்தவிகடன் பவள விழாவின் போது முத்திரைக் கதையாக 20-10-2002 அன்று வெளியிடப்பட்டது. திருப்பூர் தமிழ் சங்கத்தின் பரிசு பெற்ற தீர்க்கரேகைகள் என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து.. விகடனுக்கு நன்றிகளுடன் வெளியிடப்படுகிறது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *