இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . 303

சக்தி சக்திதாசன்
லண்டன்
அன்பான வாசகர்களுக்கு, அன்பு வணக்கங்களுடன் அடுத்தொரு மடலோடு உங்கள் மத்தியில் வருவதில் மகிழ்கிறேன்.
அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலைகளிலும் தினமும் ஏதோவொரு நாடகம் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது.
இங்கிலாந்து மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன ?
எனது கடந்த மாத மடலுக்கும் இந்த மடலுக்குமிடையில் பல அரசியல் அதிர்வுக் காட்சிகள் இங்கிலாந்து மேடையிலே அரங்கேறி விட்டன.
அது என்ன அதிர்வுகள் ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுந்திருக்கும்.
பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சி எனும் அரசியல் கானகத்தில் அடைபட்டுக் கிடந்தது தொழிற்கட்சி.
தொடர்ந்து தேர்தல் வெற்றிகளை சந்தித்து அரச அதிகாரத்தில் 12 வருடங்களாக இருந்தது கன்சர்வேடிவ் கட்சி.
அவர்களின் அரசியல் ஆணவம் மக்களின் வாழ்வாதாரச் சிக்கலைச் சிக்கும் வழிகளை கண்டறிய விடவில்லை.
அவ்விரக்தி மக்கள் மனதிலே கொடுத்த மாற்றம் லேபர் கட்சியை அதீத பெரும்பான்மை பலத்துடன் அரச கட்டிலில் அமர்த்தியது.
இதுவெல்லாம் நீங்கள் அறிந்ததே !
ஆனால் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து தொழிற் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.
ஏனேனில் அதிரடியான மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்துவதற்கு ஏதுவான ஒரு பொருளாதார ஸ்திர நிலையை வெளியேறிய கன்சர்வேடிவ் கட்சி விட்டுச் செல்லவில்லை.
விளைவு !
பொருளாதார ஸ்திரத்தை ஏற்படுத்த மக்களுக்கு அதிருப்தி அளிக்கக்கூடிய சில கடினமான பொருளாதார நிலைப்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை அரச அதிகாரத்திலுள்ள தொழிற்கட்சிக்கேற்பட்டது.
அதன் காரணமாக பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த ஒரு அரசின் பிரதமர்களில் மிக வேகமாக செல்வாக்கு சரிவைச் சந்தித்த முதலாவது பிரதமர் எனும் சாதனையை தனதாக்கிக் கொண்டார் நமது பிரதமர் கியர் ஸ்டாமர்.
அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை எனது அரசின் பதவிக்காலமான 5 வருட முடிவில் என்னைப் பற்றியும் எனது அரசின் கொள்கைகள் பற்றியும் கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார் பிரதமர்.
இதனிடையே பலகாலமாக இங்கிலாந்து அரசுக்கு தலையிடியாக இருந்துவருவது வெளிநாட்டவரின் அரசியல் தஞ்சம் கோரும் சட்டவிரோத குடியேற்றம்.
குறிப்பாக பிரெஞ்சு நாட்டிலிருந்து கள்ளத்தோணியில் இங்கிலாந்துக் கால்வாய் வழியாக உள்ளே நுழையும் வெளிநாட்டுகாரர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இங்கிலாந்தில் தீவிர வலதுசாரக் கொள்கையுடைய கட்சிகளின் கூக்குரல் இங்கிலாந்தின் பொருளாதர , வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய குடியேற்றமே காரணம் என்று கூவியது.
மக்களின் கருத்துக் கணிப்புகளும் இங்கிலாந்தின் வெளிநாட்டவரின் குடியேற்றம் பற்றிய சர்ச்சையின் எதிரொலியாகவே இருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று ப்ரசாரம் செய்து வெற்றி கண்டவர் நைஜல் வராஜ் .
இப்போ இங்கிலாந்தின் மறுமலர்ச்சிக் கட்சி Reform Party எனும் கட்சியின் தலைவராக கடந்த தேர்தலில் முதன்முறையாக வெற்றியீட்டி பாரளுமன்ற எம்.பி ஆக உள்ளார்.
இவர் அமேரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் ஆதரவாளர்.
ட்ரம்ப் அவர்களின் பரிபூரண ஆதரவும் இவருக்கு உண்டு.
இன்றைய இங்கிலாந்து அரசியல் சூழலில் கன்சர்வேடிவ் கட்சியையே இவர் இல்லாமல் ஆக்கி விடுவாரோ எனும் வகையில் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்த சூழலில் தான் இம்மாத ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் இடம் பெற்றது.
இதுவரை இங்கிலாந்து அரசியல் மேடை கண்டிராத மிகபெரிய அதிர்வலைகளை இத்தேர்தல்கள் ஏற்படுத்தியது.
ஆமாம் இதுவரை இங்கிலாந்து தேர்தல்களம் சந்தித்திராத ஒரு புதுவிதமான முடிவை அள்ளி வீசியது.
காலகாலமாக இங்கிலாந்து தேர்தல் களத்தில் அதிமுக்கிய கட்சிகளாக விளங்கிய கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி இரண்டு கட்சிகளுமே அதிர்ந்து போகக்கூடிய வகையில் நைஜல் வராஜ் அவர்களது ரிபோர்ம் கட்சி Reform Party அதிக அளவிலான கவுன்சில்களையும், கவுன்சிலர்களையும் பெற்று பெருவெற்றி ஈட்டியுள்ளது.
கன்சர்வேடிவ், லேபர் இரண்டு கட்சிகளுமே அத்திவாரத்தில் ஆட்டம்.கண்டுள்ளன.
இங்கிலாந்தில் இதுவரை நடந்து வந்த இரு கட்சி ஆட்சிமுறை மாற்றம் காணப்போகிறதோ எனும் ஐயப்பாடு முதற்தடவையாக அரசியல்.அவதானிகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
இதன் பிரதிபலிப்பு இதுவரை லேபர் கட்சி பிரதமராக இருக்கும் ஒருவரிடமிருந்து எதைக் கேட்க முடியாது என்று எண்ணிருந்தார்களோ அதைக் கேட்கும்படியாகி அவர்களின் நம்பிககைக்கு ஒரு பெருத்த அடியைக் கொடுத்துள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களில் பெரும்பான்மையோர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்று ஆராயும் நிலைக்குக் கட்சிகளைத் தள்ளியுள்ளது.
காலகாலமாக வெளிநாட்டவரின் குடியேற்றத்தை ஆதரிக்கும் கொள்கைகளை முன்வைக்கும் லேபர் கட்சியின் தலைவர் வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய வருகையால் இந்நாட்டு மக்கள் தம் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர் எனும் தாழ்வு மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று பேசியுள்ளார்.
இதுவே ஒரு லேபர் கட்சித் தலைவர் முதன்முறையாக வெளிநாட்டவரின் வருகைக்கு எதிராக பேசிய முதல் பேச்சு என்று அரசியல் மட்டத்தில் கருதப்படுகிறது.
அதிரடியாக வெளிநாட்டவருக்கு கொடுக்கும் பணிகளுக்கான விசா , மற்றும் மாணவர்களுக்கான விசா ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன.
இதைத்தான் கவியரசர் ” மாற்றம் ஒன்றே மாறாதது ” என்று கூறியிருந்தாரோ ?
சரி இனி எமது பிரதமர் நாட்டின் பொருளாதாரச் சீரமைப்புக்காக எடுத்த நடவடிக்கைகளைப் பார்ப்போம்
வெளிநாட்டு வர்த்தக உடன்பாடுகள் பலவற்றை பிரதமர் கியர் ஸ்டாமர் எட்டியுள்ளார்.
அவரது இணக்கப்பாடுகள் இந்தியா , அமேரிக்கா , மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பனவற்றுடன் எட்டப்பட்டுள்ளன.
இது எமது பிரதமரின் சர்வதேச அளவிலான நிலையினை ஸ்திரப்படுத்தியுள்ளது எனும் கருத்துக்கு வலுச் சேர்க்கிறது.
குறிப்பாக அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் எமது பிரதமர் ஸ்டாமருக்கும் , அதிபர் ட்ரம்ப்புக்குமிடையிலான உறவைப்பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் பிரதமர் கியர் ஸ்டாமர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமேரிக்காவுடனும் , அதன் அதிபருடனும் ஒரு சுமுகமான உறவைப் பேணி வருகிறார்.
அடுத்து யூக்கிரேனுக்கும், ரஸ்யாவுக்கும் இடையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு கியர் ஸ்டாமர் பக்கபலமாக இருப்பது போலத் தோற்றமளிக்கிறது.
சமீபத்தில்.பாலஸ்தீன)ன் பகுதியான காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தடைகளைக் கண்டித்து மிகவும் காரசாரமான ஒரு செய்தியை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து சார்பில் கியர் ஸ்டாமர் விடுத்துள்ளார்.
இந்த ஒருமாத காலத்துக்குள் பல காட்சிகள் அரங்கேறியுள்ளன இவை இனிவரும் நாட்களில் எமது அரசியல் அரங்கில் மேடையேற்றப்போகும் காட்சிகளை அடுத்த மடலில் பகிர்ந்து கொள்கிறேன்.