குறளின் கதிர்களாய்…(517)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(517)
யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
-திருக்குறள் -895(பெரியாரைப் பிழையாமை)
புதுக் கவிதையில்…
ஆற்றல் மிக்க
அரசனின் சினத்துக்கு
ஆளானவர்
அவனிடமிருந்து தப்பிக்க
அவனியில்
எங்கு சென்றாலும்
ஆகிறார்
உயிர் பிழைக்க
இயலாதவராய்…!
குறும்பாவில்…
ஆளும் அரசனின் சினத்திற்கு
ஆட்பபட்டோர் அதிலிருந்து தப்பிக்க எங்கு
சென்றாலும் உயிபிழைக்க இயலாதவரே…!
மரபுக் கவிதையில்…
ஆற்ற லுடனே நாட்டினையே
ஆளும் வல்ல அரசனவன்
சீற்றம் கொள்ளும் வகையினிலே
சீண்டி விட்ட ஒருவர்தான்,
ஆற்றா அச்சம் கொண்டேதான்
அதனில் நின்றும் தப்பிக்க
மாற்ற மாக எங்குபோயும்
மண்ணில் வாழ இயலாரே…!
லிமரைக்கூ…
ஆள்வான் சிறப்பாய் நாட்டை,
அவ்வரசன் சினமுற வைத்தோர் எங்கொளித்தும்
அடைவார் உயிரிழக்கும் கேட்டை…!
கிராமிய பாணியில்…
ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு..
நல்ல மொறயில
நாட்ட ஆளுற ராசாவே
கோவிச்சிக்கிற அளவு நடந்தவன்,
பயந்து
தப்பிச்சி எங்க போனாலும்
அவனால
உயிரோட இருக்கமுடியாதே..
அதுனால
ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு…!