Tag: நியாண்டர் செல்வன்

  • ஹிரோஷி யமவுச்சி

    ஹிரோஷி யமவுச்சி

    நியாண்டர் செல்வன்

    1949.. ஜப்பான்….. ஹிரோஷி யமவுச்சி (Hiroshi Yamauchi) எனும் இளைஞன்.. இளவயதில் அவன் அப்பா அவனைக் கைவிட்டுவிட்டு ஓடிப் போய்விட்டார். அம்மா மட்டுமே வளர்த்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கையில் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது, “உன் தாத்தா மரணப் படுக்கையில் இருக்கிறார். வந்து பார்” என.

    போனால் தாத்தா அவன் கையைப் பிடித்தபடி “நான் ஒரு சீட்டுக்கட்டு உற்பத்தி செய்யும் கம்பனியை நடத்தி வருகிறேன். அதை எனக்குப் பின் நீ தான் பார்க்கவேண்டும்” என்றார்.

    கம்பனி அப்போது இழப்பில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் இவனுக்கு அது தெரியாது. இளவயது வேறு. உற்சாகமாகச் சவாலை ஏற்றுக்கொண்டான்.

    கம்பனிக்குப் போனால் சீட்டுக்கட்டுகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் இருந்தன. சீட்டுக்கட்டு விற்பனை குறைந்துகொண்டே வந்தது. இவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.

    “இப்ப என்ன தொழிலுக்கு டிமாண்ட் இருக்கு” என நண்பர்களைக் கேட்டான்.

    “சீட்டு கம்பனி நடத்துகிறாய்,. கூடவே சூதாட்டம், விபச்சாரம் எல்லாம் செய்தால் நல்ல லாபம் வரும்” என அவர்கள் ஆலோசனை கூற, இவனும் ஓட்டல்களைக் குத்தகைக்கு எடுத்து ஒருமணி நேர வாடகைக்கு விட்டு நன்றாகச் சம்பாதித்தான். இளவயது… அவனுக்கு வாய்த்த நண்பர்கள் அந்த ரகம், இவனுக்கும் பெரிய அறிவு எல்லாம் கிடையாது.

    ஆனால் ஸ்ட்ரோக் வந்து படுக்கையில் கிடந்த தாத்தாவுக்கு விவரம் தெரிந்து, அவனை அழைத்துக் கண்டபடி திட்டித் தீர்க்க, “சரி வேறு ஏதாவது செய்யலாம்” எனச் சொல்லி “விஞ்ஞானிகள் தேவை” என விளம்பரம் கொடுத்தான்.

    இக்கம்பனி இருந்த நகரம், க்யோட்டோ. விஞ்ஞானிகள் எல்லாம் டோக்கியோவுக்கு வேலைக்குப் போகத் தான் ஆசைப்பட்டார்கள். வந்தவர்களை இண்டர்வியூ எடுத்ததில் குன்பேய் யோகோய் என்பவன் மட்டுமே தேறினான். அவனுக்கும் பெரியதாக எதுவும் தெரியாது. அவன் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மாணவன். மதிப்பெண்கள் மிகக் குறைவு. எந்த அனுபவமும் இல்லை. அவன் கொடுத்த சம்பளத்துக்கு இவன் மட்டுமே தேறினான்.

    முதலாளி, விஞ்ஞானி.. இருவரும் கல்லூரி மாணவர்கள், கம்பனி மூழ்கும் நிலையில் இருக்கிறது…… ஏதோ அதிசயம் நடக்கவேண்டும்.. நடந்தது.

    “நீ போய் உன் விருப்பப்படி ஆராய்ச்சி பண்ணு. நல்லதா ஒரு பொருளைக் கண்டுபிடி. விற்கலாம்” என முதலாளி சொன்னார்.

    குன்பே யோகோய், லேபுக்கு போனான். அங்கே போர் அடித்ததால் நீளமான குச்சியை எடுத்து, செயற்கைக் கை ஒன்றைப் பதித்து, அதை வைத்துத் தூரத்தில் இருக்கும் பொருட்களை எடுக்க முயற்சி செய்துகொண்டு இருந்தான்.

    ஜன்னல் வழியே பார்த்த முதலாளி, “வாடா என் ஆபிசுக்கு” என்றார்.

    “சரி வேலை காலி” என நினைத்து பயந்தபடி உள்ளே போக “இப்ப செஞ்சு விளையாடினாயே ஒரு கை? அதை விற்பனைக்கு விட்டால் என்ன?”

    “நல்ல ஆலோசனையா இருக்கே..”

    “சும்மா கை மட்டும் போதாது. அதுக்கு வாகா கலர் பந்தையும் தயார் பண்ணு. தூரத்தே இருக்கும் பொருட்களை எடுக்கலாம்னு சொல்லி… விற்கலாம்”

    அந்தப் பொம்மை, சந்தையில் சக்கைபோடு போட்டது. பெரிய கம்பனிகள் இக்கம்பனியை நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தன.

    அதன்பின் விஞ்ஞானி ஒரு நாள், முதலாளி ஆபிசுக்கு வந்தார்.

    “மெட்ரோ ரயிலில் வருகையில் பார்த்தேன். ஜப்பானில் எல்லாரும் தினம் 1- 2 மணிநேரம் பயணித்துத் தான் ஆபிசுக்கு வருகிறார்கள். ரயிலில் வருகையில் பயங்கரமாக போர் அடிக்கிறது. ஒருத்தன் கால்குலேட்டரை வைத்து அமுக்கிக்கொண்டே வந்தான். அப்போது எனக்கு அந்த ஆலோசனை தோன்றியது. கால்குலேட்டர் கம்பனி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம். கால்குலேட்டர் உருவில் கையில் வைத்து விளையாடுவது மாதிரியான கருவி ஒன்றைச் செய்து விற்றால் என்ன? ரயில் பயணிகள் ஏராளமாக வாங்குவார்கள்..”

    ஷார்ப் எனும் கால்குலேட்டர் கம்பனியைப் பிடித்தார்கள். ஐடியாவைச் சொன்னதும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். “ஏம்ப்பா ஆபிசுக்கு போகிறவன் எத்தனை டென்சன்ல போவான்? அவனுக்கு விளையாட்டுப் பொம்மையா? பெரியவங்க எல்லாம் பொம்மையை வெச்சு விளையாடுவாங்களா? சரி. அது உன் கவலை…. பணம் கொடு. நாங்க தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்…”

    கேம்பாய் எனும் அக்கருவி வெளிவந்து விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல் ஆண்டில் 4.3 கோடி பொம்மைகள் விற்றுத் தீர்ந்தன. ரயிலில் போகையில் அது இல்லாமல் போக முடியாது எனும் அளவுக்கு மக்கள் அதற்கு அடிமை ஆனார்கள். அதன் பல்வேறு வெர்சன்களைக் கொண்டு வந்து விற்க, ஒவ்வொன்றையும் மக்கள் பைத்தியம் பிடித்தது போல வாங்கினார்கள்.

    அதன்பின் சர்வதேச ஆர்டர்கள் குவிய, கம்பனி பன்னாட்டு நிறுவனம் ஆனது…

    அக்கம்பனி நின்டென்டோ (Nintendo)….

    எதுவும் தெரியாத இரு கல்லூரி மாணவர்கள் இணைந்து செய்த சாதனை இது.

    இருவருக்கும் இருந்தது எதாவது செய்து முன்னேற வேண்டும் எனும் துடிப்பும், அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அதில் பல முட்டாள்தனங்களைச் செய்தார்கள். விபச்சார விடுதி நடத்தியது மாதிரியான முட்டாள்தனம் தான், செயற்கைக் கையை விற்றதும், கேம்பாயை விற்றதும். ஆனால் நூறு முட்டாள்தனங்களைச் செய்தால் தான் ஒரு நல்ல விசயத்தை நமக்கே தெரியாமல் செய்வோம். அது ஜீனியஸ் ஸ்ட்ரோக் ஆக இருக்கும்… நம்மை அது எங்கோ கொண்டுபோய்விடும்.

    Share
  • தேசத் துரோகியின் கதை

    தேசத் துரோகியின் கதை

    நியாண்டர் செல்வன்

    “என்னடா சோதனைமயமான வாழ்க்கை இது, இத்தனை கடினமாக இருக்கிறது? இதில் இருந்து எப்படி மீண்டு வருவது?” என நினைக்கும் சூழல் வந்தால் அலெக்சாண்டர் சோல்சென்ஸ்டைனை (Aleksandr Solzhenitsyn) நினைத்துக்கொள்ளவும்.

    அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்:

    ஹிட்லர் ஆட்சியில் துன்புறுதல்

    ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து போரிடுதல்

    அதன்பின் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு எட்டாண்டுகள் உலகின் மிகக் கொடிய சிறைவாசம்

    நிர்ப்பந்த விவாகரத்து..மனைவியை பிரிந்து 15 ஆண்டுகள்

    அதன்பின் உள்நாட்டுத் தனிமைச் சிறையில் அடைபடுதல்

    அதன்பின் கான்சர்

    சொந்த நாட்டை விட்டுக் குடியுரிமை பறிக்கப்பட்டு, துரத்தி அடிக்கப்படுதல்……”

    இத்தனையும் ஒரு மனிதனுக்கு நிகழ்ந்தால் அவன் அதன்பின் என்ன ஆவான்?

    அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன் ஓர் எளிய ரஷ்ய வீரர். அவரது நாட்டை ஹிட்லர் படையெடுத்துப் பிடிக்க, ரஷ்ய ராணூவத்தில் சேர்ந்து வீரப் போர் புரிந்தார் அலெக்சாந்தர். இருமுறை விருது பெற்றார்.

    அவரது துரதிர்ஷ்டம்… போர் சமயம் ஸ்டாலினை விமர்சித்து அவர் எழுதி வைத்திருந்த சில குறிப்புகள் ராணுவ அதிகாரிகள் கையில் கிடைக்க, தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உலகப் போரில் ஜெர்மனி தோற்றதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் சிறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

    தேசத் துரோகிகளுக்கு 10 ஆண்டுகள் குலாக் எனப்படும் வதைமுகாமில் தண்டனை கிடைக்கும். போருக்கு முன் அவர் மணந்த மனைவியை நாட்டுக்காக, திருமணம் ஆன ஒரே ஆண்டில் பிரிந்து போருக்குச் சென்றார் அலெக்சாந்தர். ஆனால் தேசத் துரோகி ஆகிவிட்டதால் அவர் மனைவியின் ரேசன் கார்டு ரத்தாகும் நிலை வர, இருவரும் வேறு வழியின்றி விவாகரத்து பெற்றனர்.

    அதன்பின் குலாகில் 10 ஆண்டுகள் கடுமையான சித்திரவதை அனுபவித்தார். அதன்பின் விடுதலை பெற்றாலும் அவரை அவர் பிறந்த பகுதியை விட்டு, கசாகஸ்தானுக்கு நாடு கடத்தினார்கள். அங்கே அவருக்குக் கேன்சரும் வந்தது.

    இதுதான் அவரது வாழ்வின் மிகச் சோதனையான கட்டம். இங்கிருந்து தான் அவர் மீண்டெழுந்தார்.

    தன் சிறை அனுபவங்களை வைத்து ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி, ஒரு நாவல் எழுதினார் (One Day in the Life of Ivan Denisovich). கடும் பத்திரிக்கை தணிக்கை இருந்த ரஷ்யாவில் அதை எப்படி வெளியிட முடியும்? ஆனால் ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. ஸ்டாலின் இறந்து குருசேவ் அதிபரானார். குலாக் முறையைக் கடுமையாகச் சாடி வந்த குருசேவ் அரசின் தணிக்கைத் துறையிடம் இந்த நூல் அனுமதிக்குப் போனது.

    “நூல் எழுதியதற்குத் தன்னைக் கைது செய்ய மீன்டும் போலிஸ் வரும்” என நினைத்திருந்த அலெக்சாந்தர் சோல்சென்டைன் வீட்டுக்கு நூலை வெளியிட அனுமதி அளித்துக் கடிதம் வந்தது.
    நூல் வெளியானது… இரும்புத் திரை நாட்டிலிருந்து அரசை விமர்சித்து இப்படி ஒரு நூலா என உலகமே ஸ்தம்பித்தது.. ஒட்டுமொத்த உலகிலும் ரஷ்யாவில் பாலாறும், தேனாறும் ஓடுவதாக ஒரு பிம்பம் கட்டமைக்கபட்டிருந்த 1960களில் இப்படி ஒரு நூல் ரஷ்யாவிலிருந்தே வெளியானது உலகையே வியப்பில் ஆழ்த்தியது…

    ஆனால் அதற்குள் குருசேவ் இறக்க, சோல்சென்ஸ்டைனுக்கு வேறு எந்த நூலை எழுதவும் அனுமதி கிடைக்கவில்லை. அவரை போலிஸ் கைது செய்ய முனைகையில் அந்தச் செய்தி வந்தது… அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது என…

    அதன்பின் அவரைக் கைது செய்யும் முயற்சியை சோவியத் அரசு கைவிட்டது. ஆனால் வீட்டுக் காவலில் அதிபயங்கரமான ஒரு நூலை அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு தாளாக எழுதி, தன் மகள் மூலம் நூலை ரகசியமாக ஒவ்வொரு தாளாக வெளியே கொண்டு போனார்.

    அதில் இருந்தது, குலாகுகளின் விவரம், அதில் அடைபட்டுக் கிடந்த 256 கைதிகளின் பேட்டி, அங்கே நடந்த கொடுமைகள், ரஷ்ய மக்களின் வாழ்க்கை விவரம் ஆகியவையே.

    எஸ்தோனியாவில் இருந்து இலக்கிய ஆர்வலர்கள் மூலம் நூல் பாரிசுக்குச் சென்றது. நூல் பதிப்பும் ஆனது. சோவியத் அரசுக்குப் பேரதிர்ச்சி… தன் உயிரே போனாலும் பரவாயில்லை எனக் கடும் வீட்டுக் காவலில் இருந்து அந்த நூலை எழுதினார் அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன்.

    The gulag archipelago என அழைக்கப்படும் அந்த நூல் வெளியாகி, உலகெங்கும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தது. அவரை என்ன செய்வது எனக் குழம்பிய சோவியத் அரசு, அதன்பின் அவரது குடியுரிமையைப் பறித்து நாடு கடத்திவிட்டது.

    1974இல் நாடு கடத்தப்பட்ட அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன், அதன்பின் 1994இல் சோவியத் அரசு வீழ்ந்த பின்னர்தான் ரஷ்யா திரும்பினார். அவரது குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டது மாத்திரமின்றி அவர் ரஷ்யாவின் மாபெரும் சிந்தனையாளராக அறிவிக்கப்பட்டு, ரஷ்ய மாணவர்களுக்கு அவரது நூல் பாடப் புத்தமாக வைக்கப்பட்டது.

    2008ஆம் ஆண்டு அவர் ரஷ்யாவில் இறந்தபோது, ரஷ்ய அதிபர் மெட்வடேவ் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

    முதல் பத்தியை இப்போது மீண்டும் படிக்கவும்.

    Photo courtesy: Wikipedia

    Share
  • பணம் என்பது காகிதத்தாள் தான்!

    பணம் என்பது காகிதத்தாள் தான்!

    நியாண்டர் செல்வன்

    கேரளாவில், முத்தூட் பைனான்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்துக்கு ஒரு ரிப்பேர் வேலை பார்க்க ஒரு எஞ்சினியர் செல்கிறார்.

    அந்தச் சமயம் அந்த வங்கியில் ஐந்து கொள்ளையர், துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயல்கிறார்கள்.

    இவர் அவர்களை எதிர்த்துப் போராட-> டிஷ்யூம்….வீர மரணம்.

    “அவர் ஒரு வீரர்” எனப் போலிஸ் கமிசனர் பாராட்டுகிறார்..

    இதில் வீரம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.

    வீரம் என்பது வள்ளுவர் சொன்னதுபோல் “வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணை வலியும்” எண்ணிச் செய்ய வேண்டிய செயல்.

    நாம் என்ன காரியம் செய்யவிருக்கிறோம்? அதைச் செய்து முடிக்கவேண்டிய வலிமை என்ன? எதிரியின் வலிமை என்ன? நமக்குத் துணையாக வருபவர் வலிமை என்ன?-> இதைக் கணக்கிட்டுச் செயல்பட வேண்டும்.

    துப்பாக்கியுடன் ஐந்து பேர். எதிரே ஒருவர்… வந்தவர் நோக்கம் பணத்தைக் கொள்ளை அடிப்பது… ஆட்களை கொல்வது இல்லை.

    அதிலும் அது இவர் பணமும் இல்லை, நிதி நிறுவனப் பணம். பணம் போனால் சம்பாதித்துக்கொள்ளலாம். உயிர் போனால் என்ன செய்ய முடியும்?

    புகழ்மாலைகளைச் சூட்டிவிட்டு போலிஸ் கலைந்துவிடும், நிதி நிறுவனம், இன்சூரன்சு சில லட்சங்களைக் கொடுக்கலாம். அதன்பின் இவரது குடும்பம், தாய், மனைவி, பிள்ளைகள்… வாழ்நாள் முழுக்க இவரை இழந்து வருந்துவார்கள். எத்தனை பணமும், புகழும் அதை ஈடு கட்டாது.

    ஒரு பத்து நிமிடம் ஹேன்ட்ஸாப் பொசிசனில் இருந்திருந்தால், இன்று இவர் உயிருடன் இருந்திருப்பார்.

    உயிரைப் பொருட்படுத்தாமல் போரிட வேண்டிய சமயங்கள் உண்டு. இன்னொரு உயிரைக் காப்பாற்ற அப்படிப் போரிடலாம்.

    நிதி நிறுவனத்தின் பணத்தைக் காப்பாற்ற தன் உயிரை இழக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

    உங்கள் போர்க்களங்களை நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். நினைத்தபோது விட, உயிர் மலிவான பொருள் இல்லை.

    பணம் என்பது காகிதத்தாள் தான்……

    Share
  • சாதித்துக் காட்டிய சாரா ப்ளேக்லி (Sara Blakeley)

    சாதித்துக் காட்டிய சாரா ப்ளேக்லி (Sara Blakeley)

    நியாண்டர் செல்வன்

    12ஆவது முடித்தபின் சட்டப் படிப்பில் சேரலாம் என நினைத்தேன். மதிப்பெண் குறைவாக இருந்தது. அதனால் டிஸ்னிலாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் வேலையில் சேர்ந்தேன். ஸ்டாண்ட் அப் காமடியை முயன்றேன். அதன்பின் பேக்ஸ் மெசின் விற்கும் கம்பனியில் சேர்ந்து கடை, கடையாக ஏறி பேக்ஸ் மெஷின் விற்றேன். அது நிலையான வேலை இல்லை. விற்பனையைப் பொறுத்துத் தான் வருமானம்.

    பெண் என்பதால் விரைவில் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிடுவேன் எனத்தான் வீட்டில் நினைத்தார்கள். காதலனும் விரைவில் திருமணம் செய்யலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

    இந்தச் சூழலில் ஒரு நாள் பார்ட்டி ஒன்றுக்கு சீ த்ரூ வெள்ளை ஸ்கர்ட் அணிந்து போக வேண்டும். அதற்கு டைட்டான கருப்பு உள்ளாடை அணிந்து போனால் பின்புறம் எடுப்பாகத் தெரியும் என நினைத்தேன். சந்தையில் அப்படி எந்தப் பொருளும் இல்லை. நாமே தைத்தால் என்ன என யோசித்து பார்ட்டிக்குக் கூட போகாமல் உட்கார்ந்து தைத்தேன். நல்ல எடுப்பாக இருந்ததாக எல்லாரும் சொன்னார்கள்.

    இந்த உள்ளாடையைச் சந்தைக்கு கொண்டுவந்தால் என்ன எனத் தோன்றியது. ஆனால் கையில் பணம் இல்லை. தொடர்புகள் இல்லை. நான் ஒரு சாதாரண பேக்ஸ் மெசின் விற்பனைப் பிரதிநிதிதான். பொருளை உற்பத்தி செய்யக்கூட ஒரு பாக்டரி அவசியம். கையில் விதவிதமான சாம்பிள்கள் இல்லாமல் எப்படி துணிக்கடைகளை அணுக முடியும்?

    வார இறுதி நாட்களில் துணி உற்பத்தி செய்யும் மில்களுக்குப் படையெடுத்தேன். என் ஐடியாவை உட்கார்ந்து கேட்கக்கூட யாரும் முன்வரவில்லை. அதன்பின் அந்த ஸ்பின்னிங் மில் முதலாளிகள், உணவு இடைவேளையில் வெளிவரும் நேரம், ஆபிஸில் காரில் ஏறும் நேரம் எனப் பார்த்துப் பிடித்து என் ஐடியாவை விளக்க நேரம் கேட்டேன். பத்து நொடிகள்தான் கிடைக்கும். அந்த 10 நொடிகளுக்குள் அவர்களைச் சிரிக்கவைத்தால் இன்னும் 10 நொடி கூடுதலாகக் கிடைக்கும். ஐடியாவை கேட்ட அனைவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். “இதெல்லாம் மிக எளிமையான உள்ளாடை. விற்காது. விற்றாலும் யார் வேண்டுமானாலும் காப்பியடித்து எளிதில் போட்டிக்கு வந்துவிடுவார்கள்” என்றார்கள். அவர்கள் அனைவரும் ஆண்கள். பெண்களுக்கு இம்மாதிரி உருவத் தோற்றத்தை மேம்படுத்தும் பொருள்கள் எத்தனை முக்கியம் என அவர்களுக்குத் தெரியவில்லை.

    பல மாதங்கள் முயன்றபின் ஒரு மில் முதலாளியைச் சந்தித்தேன். அவருடன் 1 நிமிடம் மட்டுமே பேசினேன். முதலாளி ஐடியாவைக் கேட்டுவிட்டு, முடியாது என்றார். விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். காரில் ஏறுகையில் அழுகையாக வந்தது…. அப்போது அவர் பின்னால் வந்தார். “எனக்கு மூன்று பெண்கள். உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. உனக்கு சாம்பிள்கள் தயாரித்துக் கொடுக்கிறேன். அதன்பின் உன் அதிர்ஷ்டம்” என்றார்.

    அதன்பின் கையில் இருந்த $750 போட்டு சின்னதாக கம்பனி ஒன்றைப் பதிவு செய்தேன். ஸ்பான்க்ஸ் எனும் பிரண்டு பெயரையும் பதிவு செய்தேன். துணிக்கடை ஒன்றில் சாம்பிள்களைக் காட்டிச் சின்னதாக ஆர்டர் ஒன்றை வாங்கினேன். அது மிகப்பெரும் செயின். உள்ளூரில் உள்ள ஒரு கடையில் இதை விற்க முன்வந்தார்கள். பொருளைக் கொடுத்ததுடன் கடமை முடிந்தது என இருக்காமல் கடைக்குப் போய் அங்கே வரும் வாடிக்கையாளரிடம் என் பொருளை நானே டெமாண்ஸ்ட்ரேட் செய்து விற்றேன்.

    கொஞ்சம், கொஞ்சமாக விற்பனை சூடு பிடித்தது. அதன்பின் என் வேலையை விட்டுவிட்டு, துணிக்கடையில் தவமிருந்து பொருளை விற்றேன். விற்பனை சூடுபிடிக்க, பிற கிளைகளில் விற்க முன்வந்தார்கள். அங்கெல்லாம் சென்று பொருளை நானே கடையில் நின்று விற்றேன். முதலாண்டு $4 மில்லியன் அளவுக்கு விற்பனை.

    அதுவரை வீட்டில் நான் இதை எல்லாம் செய்ததே யாருக்கும் தெரியாது. நண்பர்களுக்குத் தெரியாது. காதலனுக்குத் தெரியாது. சொல்லியிருந்தால் “எதுக்கு வெட்டி வேலை? இருக்கும் வேலையைப் பார். கல்யாணம் செய்துகொள், இது எல்லாம் உருப்படாது” எனத்தான் சொல்லியிருப்பார்கள்.

    ஆனால் முதலாண்டில் $4 மில்லியன் விற்பனையைச் சாதித்தபின் வீட்டில் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தாலும், அதன்பின் அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு உதவ முன்வந்தார்கள். கையில் இருக்கும் பணத்தைப் புரட்டிக் கொடுத்தார்கள். காதலன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரம் என் கம்பனியில் பணியாற்றினார். இரண்டாமாண்டு $10 மில்லியன் விற்பனை. பிராண்டு வளர்ந்தது. விளம்பரம் செய்தோம். பல கடைகளை அணுகினோம். ஏழாம் ஆண்டில் என் 30ஆவது வயதில் என் முதல் பில்லியன் டாலரைச் சம்பாதித்தேன்.

    போர்ப்ஸ் பத்திரிகை, என்னை உலகின் 93ஆவது வலிமை வாய்ந்த பெண்ணாகத் தேர்ந்தெடுத்தது. இன்று என் கம்பனி, விற்பனையில் சக்கைபோடு போடுகிறது. எனக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    டிஸ்னிலாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் பணியில் இருந்த, பள்ளி இறுதியை மட்டுமே தொட்ட ஒரு பெண்ணால் 30 வயதில் பில்லியனர் ஆக முடிகிறது என்றால் உங்களால் ஏன் நீங்கள் விரும்பும் உயரத்தைத் தொட முடியாது?

    Share