Tag: நூ. த. லோகசுந்தரம்

  • கோயில் எனும் சொல்!…

    நூ.த. லோகசுந்தரம்

     

    “கோயில்” & “கோவில்”

     

    கோ + இல் = கோயில்

    கோ = இறைவன் = கடவுள்

    கோ = இறை = நாடாளும் மன்னன்

    என ‘கோ’ விற்கு இரு பொருள்கள் உள்ளன அறிவோம்

    இல்= வாழும் இடம் = இல்லம்

    கோவில்: இச்சொல் இறைவனை வழிபடும் இடம் என்னும் பொருளில் வழங்குதல் ஏனோ இந்நாள் நன்கே பரந்துள்ளது.

    எனினும் மேற்காட்டிய இருவித பயன்பாடுகளில் கோயில் என யகர இகரம் (யி) இட்டு எழுதுதலே பிழை அற்றதாகும்.

    இச்சொல் நிலைமொழி யின் ‘ஓகார’ த்துடன் வருமொழியின் இல் லின் ‘இகரம்’ சேரும் புணர்வில் ‘இ’ யின் இணைஒலியான (அணித்ததான) ‘’யி’’ கரம்தன் இயல்பாக வரமுடியுமே அன்றி ‘வி’ என இதழ் குவியும் சேய்மை ஒலியாக வருவது இயைபு உடையது ஆகாதது காணலாம்

    மேலும்……..

    கோயில் எனும் சொல்தான் நம் இலக்கிய நூல்களில் யாங்கணும் காண்கின்றோம் சங்க நூல்களிலும் சிலம்பு மணிமேகலை முதல் பிற்கால நூல்கள் வரை யாவற்றிலும், கோவில் என எவ்விடத்திலும் காணாது, கோயில் எனும் சொல்தான் தெள்ளத் தெளிவாக நூறு சதம் பயனில் உள்ளமை காணமுடிகின்றது. இணைப்பில் உள்ள இரு கோப்பினைக் காண்க. அதனில் வைத்துள்ள 90 எடுதுக்காட்டுகள் அல்லாமல் இறைவழிபாட்டு திரு மறை நூல்களாம் 12 சைவத் திருமுறைகள் ஆழ்வார்களின் 4000 திவ்யப் பிரபந்த பாசுரங்களை நோக்க ஆங்கெல்லாம் கோயில் எனும் சொல்லே பயன் கொள்ளப்படவும் அந்த 1150 இடங்களில் யாங்கணும் கோவில் என காணவே இல்லை என்பதும் உணரப்பட்டது. சைவம் வைணவம் எனும் இரு மரபுகளின் தலையாய தலங்களாம் தில்லை திருவரங்கம் இரண்டும் கோயில் எனத்தான் குறிக்கப் படுகின்றனதும் அறிவோம் அல்லவா?

     

    எனவே நாம் இனி கோயில் எனவே வழுவின்றியே எழுதுவோமே “கோவில்” எனும் சொல் பயன்பாட்டினைத் முற்றிலும் தவிர்ப்போம்

    Share
  • மௌவல் – “மல்லிகை மௌவலின் போதலர்த்தி” – மௌலி — மவுவா (MAHUA )

    மௌவல் மௌவல்
    நூ த லோ சு
    மயிலை

    ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சாதாரண மக்களால் ஊடகம் வழி நன்கு அறியப்பட்ட முணுமுணுக்கப்பட்ட
    ஓர் திரைப்பட (சிவாஜி) பாடல் வரியில் பலரறிய வந்த நல்ல சங்கத்தமிழ் சொற்களில் ஒன்று
    மௌவல் மௌவல்

    கவிஞர் வைர முத்து என்னும் நல்ல கவிஞர் புனைந்த பாடல் அது என பலரும் அறிவர்

    ஆனால் இங்கு நாம் காட்ட நினைப்பது மௌவல் எனும் பூவினை குறிக்கும் சொல்லினைப் பற்றி
    ஐயம் எழுந்த மடல் ஒன்று நம் மடலாடலில் கண்டேன்

    வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால்
    கொன்ற தேவநின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே
    மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி
    தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே

    என திருமங்கை மன்னன் தன் பெரிய திருமொழி (நா.தி.பி.- 5.3.1 / 1368 )
    பாசுரத்தில்பயன்கொண்ட இடத்து இதற்கு ஓர் பூ அல்லாத வேறு ஓர் பொருள் கொள்ள முடியுமா என்பதே அது

    மேலும் மடலிழையில் அறிஞர் பலர் இதற்கே மரமல்லிகை எனவும் பொருள் காட்டினர்

    இவ்வையங்களை களைய எழுந்ததே இக்கருத்துரை

    பாசுரத்தில் திருமங்கையாழ்வார் பேசும் கருத்து

    தென்றலானது (வீடு / பொது) மன்றிலிலும் மாமரப் பொழிலி நுழைந்து வந்த நிலை மல்லிகையின்
    மற்றும் மௌவல் மலர்களின் ‘போது’ களை விரியச் செய்ததால் அம் மணங்களை ஏந்தி வந்து நாறும்
    ‘வெள்ளறை’ எனும் தலத்தில் உறையும் நின்ற கோலம் காட்டும் திருமாலே
    போர்க்கருவியாம் மழுவினை ஏந்தி முன் ஒரு காலத்தில் ஏழேழ் தலைமுறையில் வந்த மன்னர்
    பலரை கொன்றொழித்த தேவனே உன்னுடைய கழலினைத் தொழும் வழியை காட்டமாட்டாயா

    ஈங்கு மௌவல் ஓர் மலர் என பொருள்கொள் நிலைதான் உள்ளது.

    ‘மல்லிகை’ யில் (யின்) எனும் வேற்றுமை தொக்கி நின்றுள்ளது

    மல்லிகையின் மௌவலின் (எனும் இரண் டின்) எனக்கொள்ளவேண்டும்

    தென்றல் – – – – – மல்லிகை மௌவல் எனும் இருவகை மலர்களின் போதுகளை அலர்த்தி
    தான் மண ம் நிறைத்துக் கொண்டு வீசியது எனக் கொளளல் வெண் டும்

    அரும்பு>>> போது >>> மலர் >>>> அலர் என்பது பொதுவாக
    ஓர் மலரின் பருவ வடிவ வளர்ச்சி என பலரும் அறிவர்

    காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
    மாலை மலரும் இந் நோய் குறள் 1227
    அலர் என்பது மலர்ந்த நிலை கடந்து மேலும் சில நாள் வாடிவிடாமல் பூத் துக்கா ண் பது

    இங்கு மௌவல் என்பது மல்லிகையின் வெண்மை பருவம் வடிவம் என வேறு ஒர் பண்பு ஆகாது

    ஆகமுடியாது ஏனெனில் வெண்மை என பொருள் உள்ள ஓர் சொல் லுடன் யின் எனும்
    வேற்றுமை சேர அது போது எனும் சொல்லுடன் அமையாது

    ‘போது’ எனும் சொல் பின் உள்ளதால் வடிவமும் பருவமும் குறிக்கும் பண்பு முன் வரத் தேவையில்லை

    மௌவல் என்பது ஓர் மலர்தான் என்பதை
    கீழ் வரும் மேற் கோள் பாடல் அடிகள் ஐயம் ஏதும் இன்றி காட்டக் காண லாம்

    மேலும்
    மௌவல் ஓர் கொடி >>>>>>>>>>> தேவாரம் 1.101.3 பெரிய 12-1217 ; 12-2955 ; அகம் 23-12 ; நச்சி. உரைமேற்கோள் பாடல் ;

    மகளிர் தலை யில் அணியும் மலர் >>>>>>>>>> நா.தி.பி. 3.2.7 / 1164 ; சீவக சிந்தாமணி;

    நல்ல மண ம் வீசக்கூடியது >>>>>>>>>> நா.தி.பி. 9.1.3 / 1750 ; 9.10.2 / 1839 ; தேவா 1.14.7 ; 3.46.7; 3.59.1 ; 3.110.7 ; 3.119.5 ;
    கலி 14-3 ; கலி 27-4; கல்லாடம் 83-26 ;

    அஃதும் இரவில் பூத்து நாறும் பண்பினது >>>>>>> குறு 19

    வெண்மையான இதழ்களை உடையது >>>>>>>>>>> தேவா 1.136.3 ; அகம் 21-1 ;

    இதன் அரும்பு பல்லிற்கு உவமை >>>>>>>>>>>>> கலி 14-3 ; கலி 27-4 ;

    புதராக பல்வகை இனத்துடன் வளர்வது >>>>>>>>> தேவா 2.84.9

    வீட்டிலும் வளர்ப்பார் >>>>>>>> அகம் 21-1 ; கல்லாடம் 83-26 ; பெரிய 12.1217

    மரமல்லிகை அல்ல என்பது
    மேற்கண்டபடி
    ஓர் கொடியாவதாலும்
    புதராக முல்லை மல்லிகை என பலவகை இனத்து டன் படர்ந்து மிடைந்து வளர்வதாலும்
    பல்லிற்கு உவமை காட்டுவதாலும்

    மேலும்
    மௌவல் நீண்மலர் மேலுறைவானொடு
    பௌவ வண்ணனு மாய்ப் பணிவார்களே 5.97.13 அப்பரடிகளின் சித்தத் தொகை

    இதனில் நீண்மலர் (= நீள் மலர் நீண்ட காம்பினை உடைய து ) என்றது தாமரையை அதாவது பிரமன் அமர்ந்த மலர்

    எங்கனம் எனில்
    கடல் வண்ணனும் (பௌவ வண்ணன் = திருமால்) உடன்
    அடிமமுடி காணாத திரு விளையாடல் காட்டப்படுவதால்
    எனவே நீள் மலர் = நீண்ட காம்பினை உடைய மரமல்லி ஆகாது
    இங்கு மௌவல் எனும் சொல் எதுகை நோக்கி வெண்மைக்கு ஆகுபெயராக வந்தது

    அதான்று,
    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும் (குடமூக்கு தேவாரம் 3.59.1 )
    எனும் வரிகளில் காணும் மர எனும் சொல் மரவம் எனும் வேறு ஒரு மலரைக் குறி த்தது

    அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
    குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
    இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே

    இப்பாடலில் கோடல் மல்லிகை குரா முதலிய மலர்களைத்தான் பேசுகிறது காண்க

    ——————————————————————————

    மேற்கோள் வரிகள்

    மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து நா.தி.பி. 3.2.7 / 1164
    திருமங்கை பெரிய திருமொழி

    போதலர் புன்னை மல்லிகை மௌவல் புதுவிரை மதுமல ரணைந்து நா.தி.பி. 9.1.3 / 1750
    திருமங்கை பெரிய திருமொழி

    மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து நா.தி.பி. 9.10.2 / 1839
    திருமங்கை பெரிய திருமொழி
    தேவாரம்
    மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட 1.14.7 கொடுங்குன்றம்

    கொல்லையின்முல்லை மல்லிகைமௌவல் கொடிபின்னி 1.101.3 கண்ணார்கோயில்

    தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர் 1.136.3 தருமபுரம்

    புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை 2.84.9 நனிபள்ளி

    கந்த மௌவல் கமழும் கருகாவூர் எம்எந்தை 3.46.7 கருகாவூர்

    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும் 3.59.1 குடமூக்கு

    நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி 3.110.7 வடகரை மாந்துறை

    வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணைந் தெழுந்த 3.119.5 வீழிமிழலை

    விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்தி 3.123.5 கோணமாமலை

    மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு 5.97.13

    துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் 12.240 பெரிய புராணம்

    நடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் 12.1217

    மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்தி 12.2955

    சங்க நூல்கள்

    ஞாழன் மௌவல் நறுந்தண் கொகுடி குறிஞ்சி 81

    மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத் அகம் 21-1-

    தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச்சினை அகம் 23-12

    மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும் அவ்அளவு அகம் 117-1

    மணமௌவல் முகைஅன்ன மாவீழ்வார் நிரைவெண்பல் கலி 14-3

    மாதரார் முறுவல்போல் மணமௌவல் முகைஊழ்ப்ப கலி 27-4

    மல்லிகை மௌவல் மணம்கமழ் சண்பகம் பரிபாடல் 12

    மனைமரத்து எல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் குறு 19

    மாக்குரல் நொச்சி மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழ குறு. 115

    மெல்அவல் மருங்கின் மௌவலும் அரும்பின குறு. 122

    மலரில் மௌவல் நலம் வரக் காட்டி கயல் ஏர் உண்கண் குறு 316

    முல்லையும் மௌவலும் முருகுயிர்த்து அவிழ கல்லாடம் 39-7

    மௌவல் இதழ்விரிந்து மணம்சூழ் பந்தர்செய் முன்றிலும் கல்லாடம் 83-26

    பொறி வண்டு மூசிய மௌவல் முருகுயிர்ப்பத்-தேசிகப் 270 விக்கிரமசோழனுலா

    மாடுநின்ற கொன்றைஏறி மௌவல்பூத்த பாங்கெலாம் நச்சி. உரைமேற்கோள் பாடல்

    மௌவலம் குழலியை மன்னன் ஏயினான் சீவக சிந்தாமணி

    —————————-
    அதான்று
    மௌவல் >>>>>>>> மௌலி எனும் சொல்லுடன் பிணைத் த ஐயம் மும் கட்ட ப்பட்டது

    ஆனால்
    மௌவல் >>> மௌலி என்பன வேறுவேறு சொற்கள்

    மௌலி என்பது தலையில் அணியும் ஓர் அணிகலன் = முடி = கிரீடம்

    கீழ் காணும் பெரிய புராணப் பாடல் வரிகளைக் காண்க ஐயம் எதும் இன்றி மன்னர்களின் முடியைப் பே சுகின்றது

    ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச் செவ்வான்மதி 3.126.2 (விடைவாய் தேவாரம் )

    சூடும் சடைமௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் 12.1015 பெரிய புராணம்

    சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னி திரு நாட்டு 12.1022 பெரிய புராணம்

    பொன்னாரும் மணிமௌலிப் புரவலன்பால் அருளுடையார்12.1292 பெரிய புராணம்

    பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார் 12.3783 பெரிய புராணம்

    பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும் அமைச்சர்க்கு 12.3793 பெரிய புராணம்

    கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு 199 குலோத்துங்கசோழனுலா
    ————————–

    நிற்க

    வாட இந்தியாவில் மவுவா (MAHUVA ) எனும் சொல்லால் விளிக்கப்படும் ஓர் மலர் உள்ளது

    அதுவோ தமிழில் இலுப்பை எனும் மரமாகும் இதன் மலர்களை இனிப்புச் சுவைகாகப் பயனகொள் வர்

    “ஆலை இல்லை ஊருக்கு இலுப்பைப்பூ சர்கரை ” எனும் முதுசொல்தான் அறிவோமே

    தலையில் அணியப் படாமல் வாணிப மல ராக க உள்ளமைக் காண்க இந்த ‘மவு வா’ பற்றி சில இணையச் சுட்டிகள்
    http://en.wikipedia.org/wiki/Madhuca_longifolia

    https://www.google.co.in/search?q=mahua+flower+in+english&espv=210&es_sm=93&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=bciLUpniK5GkiQejioHwAg&ved=0CE8QsAQ&biw=1920&bih=954

    Share
  • தேவாரத் தலங்கள் சில (பகுதி-4)

    நூ.த.லோகசுந்தரம்

    அன்பில் ஆலந்துறை

    ‘தேவாரத் தலங்கள் சில’ எனும் கருத்தில் திருச்சி அருகு திருப்பட்டூர் (பிடவூர்) ஊட்டத்தூர்(ஊற்றத்தூர்) லால்குடி (தவத்துறை) என மூன்று வைப்புத்தலங்கள் பற்றி நாம் பார்த்தோம். இப்போது லால்குடிக்குக் கிழக்காக 5 கி மீ ‘அன்பில்’ எனும் சிற்றூரில் அமைந்த தொன்மை மிகு, ஆலந்துறையைக் காண்போம்.

    இஃது சம்பந்தர் ஒன்று (தக்கராகம் – 1.33 – ” கணை நீடெரி மாலரவம் வரை வில்லா”), அப்பர் ஒன்று (குறுந்தொகை – 5.80 – ” வானம் சேர்மதி சூடிய மைந்தனை “) என இரு தேவாரமுள்ள, நீர்வளமிகு, பொழில்சூழ், சோழநாட்டு, காவிரி வடகரைத், தலம்.

    தேவாரத் தலமாம் புளமங்கையும் ‘ஆலந்துறை’ எனக் காண்கின்றது. அதனருகே உள்ள சக்கரப்பள்ளி இறைவரும் ‘ஆலந்துறையார்’ ஆகிறார். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருந்தகை ஞானசம்பந்தர் கொங்குநாடு வழிபட்டுத் திரும்பும் வழியில் காவிரித் தென்கரை திருப்பராய்த்துறை அருகு செந்துறையுடன் ஓர் ‘ஆலந்துறை’ வழிபட்டு “கற்குடி சேர வந்தார்” என ஆவணப்படுத்தியுள்ளார்.

    வடநாடு முழுதும் நேரடி சென்று வழிபட்டு ஆங்கமைந்த சோதிலிங்கத் தலங்களுடன் வடகோடி ‘தாவி’ நதியையும் குறித்த அப்பரடிகள் காசுமீரத்து அமைந்த அமர்நாதம் எனப் பெரும் பேர் பெற்ற இயற்கையாகப் பனி குயில்கின்ற தலத்தை ஆலந்துறை என அடைவு திருத்தாண்டகத்தில் குறித்துள்ளார்

    “பதினோறாம் திருமுறை பரணர் சிவபெருமான் திருவந்தாதியிலும் ஒர் ஆலந்துறை காட்டப்பட்டுள்ளது”

    ‘ஆலம்’ எனும் சொல் நீரினைக் குறிக்கும். ‘ஆலங்கட்டி’ மழை, ஞாயிறு-திங்களை சுற்றித் தோன்றும் ‘ஆலவட்டம்’ எனும் சொற்களும் நீர் வழிப் பிறந்தவைகளே. நீர் எப்போதும் நிலைத்து நின்று மண்வாகு இளகிய நிலங்களிலும் சாய்ந்து விடாமல் நிற்க பரிணாம வளர்ச்சியால் 10 முழ உயர குறுக்குக் கிளைகளினின்றும் காற்று வழியில் விழுது(வேர்)களை வீழ்த்தி அங்கும் நிலைத்து வளரும் திறம் பெற்றதால் ஆல்=நீர் வழி அப்பெயர் பெற்றது ஆலமரம். ஓர் நீர்நிலையை அணித்தே ஆலத்தூர், ஆலங்கானம், ஆலக்கோயில், ஆலப்பாக்கம், ஆலத்துறை, ஆலக்குடி என ஊர்கள் அமைந்தன. ஆலங்காடு, ஆலம்பொழில் என்பனவோ ஆலமரம் பற்றி வழங்கியவை.

    அன்பிலுக்கு திருச்சியிலிருந்தே நகரப்பெருந்து உள்ளது. ஊரினுள் கோயிலின் மிக அருகேயே இறங்கலாம். சிற்றூராதலால் காபி, சிற்றுண்டிக்கும்/உணவிற்கும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும். எனினும் இலால்குடிதான் அருகுள்ளதே. நம் அன்பில் ஆலந்துறைக் கோயில் சிறிதாயினும் சீர்மிகு 5 நிலை 5 கலச வெளிச் சுற்றுக் கோபுரம் தொன்மையான பழங் கல்வெட்டுகளுடைய முற்றுப் பெறாத உள்சுற்று பழங்கோபுரம், கல்வேலைப்பாடு சிறந்த நந்திகளும் இருகையுடன் காணும் வாயில் காப்போனும் கற்றளியாக திருஉண்ணாழிகைகளும் திருச்சுற்று மண்டபங்களும் தலத் தேவாரக் கல்வெட்டும் திருவரங்கம் கோயிலின் உபகோயில் எனக்குறிக்கும் தாரண வைகாசி 27குடமுழுக்கினை அறிவிக்கும் கற்பலகையும் காணலாம்

    இறைவர்=ஆலந்துறைநாதர்/ இறைவி=அழகம்மை/ தலப்பயிர் = ஆல்/ தூநீர்= காவிரி/ (கொள்ளிடம் – வடகரை). மக்களரவம் ஏதுமின்றி அமைதியாக தியானம் செய்நிலையிலும் நம் ஆலந்துறையாரை வழிபடலாம். முன் குறித்தபடிப் பாடல் பெற்ற வடகரை மாந்துறை லால்குடிக்கு சிறிதே மேற்குள்ளதால் மிக எளிதாக மூன்றினையும் ஓர் பகலிலேயே வழிபடலாம்.

    ‘பொருள்வழித் திருமுறை’=’அன்பில்’ பாடல்கள் தொகுப்பினை இணைப்பில் காணலாம் என்கருவி வழி வெளிப்பட்ட படங்களையும் கண்டு, தேர்ந்து ஓர் நாள் வழிபடலாமே.

    திருச்சிற்றம்பலம்

    இணைப்பு

    நமசிவாய

    பொருள்வழித் திருமுறை © இதனில் அன்பில் திருமுறை ©

    திருமுறை தொகுப்பாளன் – நூ.த.முத்து முதலி மயிலை

    1
    வன்புற்று இள நாகம் அசைத்து அழகாக
    என்பில் பல மாலையும் பூண்டு எருதேறி
    *அன்பில்* பிரியா தவளோடும் உடனாய்
    இன்புற்று இருந்தான்தன் இடைமருது ஈதோ 1.32.6
    சம்பந்தர் தேவாரம்

    2
    எழிலார் இராச சிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றைக்
    குழலார் கோதை வரைமார்பில் குற்றாலத்து எம் கூத்தனை
    நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
    அழலார் வண்ணத்து அம்மானை *அன்பில்* அணைத்து வைத்தேனே 4.15.7
    அப்பர் தேவாரம்

    3
    அம்மையே அப்பா ஒப்பிலா மணியே *அன்பினில்* விளைந்த ஆரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 8.538
    மணிவாசகர் திருவாசகம்

    4
    வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்கள் *அன்பில்*
    செல்லிகைப் போதின் எரியுடையோன் தில்லை அம்பலம்சூழ்
    மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்டு ஊதவிண் தோய்பிறையோடு
    எல்லிகைப் போதியல் வேல்வயல் ஊரற்கு எதிர் கொண்டதே 8/2.364
    மணிவாசகர் கோவையார்

    5
    தானொரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
    வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
    தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
    தானொரு வண்ணம்என் *அன்பில்* நின்றானே 10.275
    திருமூலர் திருமந்திரம்

    6
    அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
    முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரானவன்
    அன்பின் உள்ளாகி அமரும் அரும்பொருள்
    அன்பின் உள்ளார்க்கே அணைதுணை ஆமே 10.279
    திருமூலர் திருமந்திரம்

    7
    கண்டேன் கமழ்தரு கொன்றையினான் அடி
    கண்டேன் கரியுரியான்தன் கழல் இணை
    கண்டேன் கமலமலர் உறைவான் அடி
    கண்டேன் கழலதுஎன் *அன்பினுள்* யானே 10.285
    திருமூலர் திருமந்திரம்

    8
    முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
    அன்பில் இறைவனை யாம்அறிவோம் என்பர்
    இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
    *அன்பில்*அவனை அறியகி லாரே 10.287
    திருமூலர் திருமந்திரம்

    9
    காரணன் *அன்பில்* கலந்து எங்கும் நின்றவன்
    நாரணன் நின்ற நடுஉடலாய் நிற்கும்
    பாரணன் அன்பில் பதஞ்செய்யும் நான்முகன்
    ஆரணமாய் உலகாய் அமர்ந் தானே 10.391
    திருமூலர் திருமந்திரம்

    10
    இசைந்தெழும் *அன்பில்* எழுந்த படியே
    பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
    சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
    உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே 10.1590
    திருமூலர் திருமந்திரம்

    11
    போது சடக்கெனப் போகின்றது கண்டும்
    வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
    நீதியுளே நின்று நின்மலன் தாள்பணிந்து
    ஆதியை *அன்பில்* அறியகில் லார்களே 10.2085
    திருமூலர் திருமந்திரம்

    (தொடரும்)

    Share
  • தேவாரத் தலங்கள் சில (பகுதி-3)

    ஊற்றத்தூர்-ஓர் தேவார வைப்புத்தலம்

    நூ.த.லோகசுந்தரம்

    மூவர் முதலிகள், தம் காலமாம் 1350 ஆண்டுகள் தொன்மமுடை, சிவனுறைத் தலங்கள் பலவற்றினை, அவர்கள் நேரடி வழிபட்டு, அவற்றிற்கு எனத் தனிப்பதிகங்கள் இயற்றா விடினும், சேத்திரக் கோவை, அடைவுத் திருத்தாண்டகம், ஊர்த்தொகை என நன்றே தொகுத்துப் பாடின பாங்குடன், நுற்றுக்கணக்கானவற்றைப் பிறப்பதிகங்களில், வைப்புத் தலங்களாக குறிக்கப்பட்டமை, நாம் பெற்ற பேறே. வைணவ மரபில், ‘பாசுரமுள்ளன’, ‘குறிக்கப்பட்டவை’, எனப் பாகுபாடு செய்யாது, யாவும் 108 திவ்யதேசங்களே, எனப் புவி கடந்த மேலுலகத் தலங்களையும், ஒன்றாகக் கொண்ட, நோக்கு சைவத்தில் ஏனோ, காணவில்லை.

    சைவநெறிச் சான்றோர் பலர், சைவத் திருமுறைகளாம் மாகடல் தீரத்தம் ஆடி, ஆயுங்கால், அவ்வைப்புத் தல முத்துக்கள், 300க்கு மேலும் கண்டுள்ளனர். சைவப் பெரியார், சிவஞானமுனிவர், 250 தலங்களை ஆவணப்படுத்தி, ‘வைப்புத்தலக் கோவை‘ பாடினார். பின்வந்தோர், தொடர்ந்து மேலும் பலவற்றினை இனம் கண்டும், அவற்றின் அமைவிடம், வரலாறு, போன்றவற்றையும், ஆய்ந்தனர். 12 திருமுறை, 18000+ பாடல்கள் என ஆழந்து பரந்த கடலாதாலால் மொழியறிவின் வழி முதலில் இது தலப்பெயர், பிறகு அத்தலம் எங்குள்ளதெனும் வரலாறிணைந்த புவியியல் அறிவுடன் ஆய்வு, பல காலும் நடந்த வண்ணமே, உள்ளன.

    இவ்வகைத் தொன்மப் புகழுடைய, சீர்மை மிகு சிவத் தலங்களை, வாய்ப்புகள் கிடைக்கும் காலத்து, பாடல் பெற்ற தலங்களுடனும், தனித்தும், வழிபடுவது, கூடும். அவ்வகையில் காணக்கூடிய தலம் நடுநாட்டு தென் எல்லை கடந்து, சோழநாட்டு வடஎல்லையிலுள்ள, ஊற்றத்தூர் ஆகும். திருச்சி>>சென்னை பெருவழிச் சாலைக்கு மிக அருகேயே, (15கிமீ-சமயபுரம்) கடந்து 35 கிமீ தூரத்தே, பாடாலுர் எனும் சிற்றூரின்கண், கிழக்கே செல்லும் நல்ல சாலை வழியில், 5 கிமீ தொலைவில், மிகச்சிறப்பான கற்றளி ஒன்றில், நகர மக்கள் ஆர்ப்பாட்டரவம் ஒன்றுமின்றி, தூய்மை மிகு தியானச் சூழ்நிலையில், ஊற்றத்தூர் ‘உடையாரை‘ வழிபடலாம்.

    நல்லதோர் தேர், 16கால் வெளிமண்டபம், 5 நிலை 7கலச ராஜகோபுரம், தலப் பெயருக்கேற்ப நந்தியம் பெருமானருகு கோயிலினுள் நடுவண் திருமஞ்சன ஊற்றுக் கிணறு, 63 நாயன்மார் படிமவரிசை, ஐம்பொன் உடன் கருங்கல்லாலும் ஆடல்வல்லான், உருவமெனும் தனிச் சிறப்புகளுடன் அம்மையுடனும் உறைகின்ற

    “பிறையூரும் சடைமுடிஎம் பெருமானைத்
    தொழஇடர்கள் தொலையும் அன்றே”
    எனும் அப்பரடிகள் தாண்டக அருள் வரிகளை நம்பி வழிபடுவோமே.

    இறைவர் >>>>> தூய மாமணீசுவரர்
    இறைவி >>>>> அகிலாண்டேசுவரி
    என் கைபேசிக்கருவி உள்கொண்ட படங்களை கண்டு தேர்க.

    ஊற்றத்தூர் தலத்தினைப் பேசும் தேவாரப் பாடல்கள் இவை :-

    திருநாவுக்கரசர் :
    சேத்திரக்கோவைத் தாண்டகம் – திருமுறை 6.70.10
    நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு
    நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
    துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
    தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
    உறையூர் கடல் ஓற்றியூர் ஊற்றத்தூர்
    ஓமாம்புலியூர் ஏர் ஏடகத்தும்
    கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
    கயிலாய நாதனையே காணலாமே

    திருநாவுக்கரசர் :
    அடைவு திருத் தாண்டகம் – திருமுறை 6.71.3
    பிறையூரும் சடைமுடிஎம் பெருமான் ஊர்
    பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
    நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
    நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
    உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
    அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
    துறையூரும் துவையூரும் தோழுர் தானும்
    துடையூரும் தொழஇடர்கள் தொலையும்அன்றே

    பெயர்வழித் திருமுறை © பாடல்கள்
    சிவபெருமான் ஓர் ஊற்று

    (1)
    வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
    மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
    ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
    ஓவாத சத்தத் தொலியே போற்றி
    ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
    ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
    காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி 1
    அப்பரடிகள் தேவாரம் (6.55)
    போற்றித் திருத்தாண்டகம்

    (2)
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்(து) அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்(கு) உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மாணிக்கவாசகர் திருவாசகம்
    சிவபுராணம் (8.1)

    (3)
    அழிதரும் ஆக்கை ஒழிச்செய்த ஒண்பொருள்
    இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
    அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
    ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி
    ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
    போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
    மாணிக்கவாசகர் திருவாசகம்
    திரு அண்டப் பகுதி (8.3)

    (4)
    போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
    ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
    வேற்றுடல் தானென்றும் அதுபெரும் தெய்வமாம்
    காற்றது ஈசன் கலந்து நின்றானே 28
    திருமூலர் திருமந்திரம்
    தோத்திரம் (10.3009)

    மேலும், ஊருக்குள், சிவன்கோயிலுக்கு தென்மேற்கு திசையில், திருமாலுக்கு ஓர் பெரிய கோயில்.உள்ளது. அதான்று, ஓரிரு கிமீ தூரம் மேற்கே, கடத்துப் பாறைகள் மேல், ஓர் முருகன் கோயிலும், காண்கின்றது. மற்றும், பாடலுரிலிருந்து இவ்வூரினுக்கு செல்லும் வழியில், *தெரணி*யிலும் நல்ல பழமையான கோயிலொன்று உள்ளது.

    Share