-பன்னீர்செல்வம் மகேந்திரன்
அமைதியான ஆழ்கடல்
ஆழிப்பேரலை கண்டதுபோல்
அவதானித்து விழித்தேன்!
அமைதியின் தன்மையது
ஆர்ப்பரிப்பு கொண்டது ஏன்?!!
விடையற்றுப் போன
வினாக்கணை ஒன்றினை
வீதிவழி எடுத்துச்சென்றேன்!
விதிவழி கடந்துசென்ற
விந்தைமிகு காட்சி காண!!
ஈர மணற்தடம் நோக்கி
ஈருருளி வேகம் கொண்டேன்!
ஈவுகள் தேடியவன்
ஈடற்ற விடைகள் கண்டு
ஈர்க்கப்பட்டு நின்றேன்!!
மகரந்தத்தேன் குடித்த
மதுவுண்ட வண்டது போல்
மயங்கிப்போய் நின்றேன்!
மடக்கைகள் பலகொண்ட
மண்டிநிறை அஞ்ஞானங்களால்!!
அகப்பட்ட தூண்டிலதை
ஆலிங்கனம் செய்வித்து
அகத்தினில் கறைபடிந்த
அரூபப் பொழுதுகளை
அகழ்ந்து நோக்கினேன்!!
தூளியின் வெப்பம் கடந்து
துள்ளி எழுந்த காலம் முதல்
தூற்றிவிட்டுப் போன பருவங்களை
தூர்த்து துளாவினேன்
துர்குணங்களின் ஆதிக்கமே!!
தனக்கான தகுதியை
தரணி புகழ்கையில்
தகுதியாகு பெற்றவனென
தற்பெருமை கொண்டிருந்தேன்
தகைவாய் இன்றுவரை!!
செம்மாந்த உறைவிடத்தில்
செருக்கின் சுவடுகளால்
செதுக்கிய சிலையான பின்னே
செயப்படு பொருளுக்கெல்லாம்
செந்தீமை விளைவித்தேன்!!
பெரும்பணம் சேர்த்து
பெட்டக கொட்டிலிலே
பெட்டியில் பூட்டி வைத்து – உடல்
பெருக்கம் கொண்ட நான்
பெறுமதி ஈதலை மறந்திருந்தேன்!!
குடல்கொண்ட மேனியெல்லாம்
குருதி நிறம் ஒன்றல்லவென
குடையுறை வேந்தன்போல்
குணத்தில் சாதி கொண்டு
குற்றம் புரிந்திருந்தேன்!!
நிறைகர்வம் கொண்டிருந்தேன்
நிகரில்லா அகங்காரத்தால்
நிகழ்காலப் புகழுக்காக – பிறரை
நிந்தை செய்வித்து
நிதானம் இழந்திருந்தேன்!!
இவனா அவன்?
இங்ஙனம் வளர்ந்திட்டானா?
இவனிலும் குறைந்தவனா – நானென
இதனினும் மேற்படியடைய
இதயத்தை இற்றுப் போகச் செய்தேன்!!
சோலையான ஆழ்மனம்
சோகையாய் மாறியதேன்?
சோடனையாய் நான்கொண்ட
சோடை போன குணங்கள் தானோ
சோதித்துப் பார்க்கிறது??!!!
அமைதியான எனதுளத்தில்
ஆழ கல் பாய்ந்ததால்
அகச்சுழற்சி விட்டுப்போன
ஆழிப்பேரலை ஆர்ப்பரிப்பு
அமைதி கொள்வதெப்போது??!!!





