Tag: பன்னீர் செல்வம் மகேந்திரன்

  • ஆழிப்பேரலை அமைதி!!!

     

    -பன்னீர்செல்வம் மகேந்திரன்

    அமைதியான ஆழ்கடல்
    ஆழிப்பேரலை கண்டதுபோல்
    அவதானித்து விழித்தேன்!
    அமைதியின் தன்மையது
    ஆர்ப்பரிப்பு கொண்டது ஏன்?!!

    விடையற்றுப் போன
    வினாக்கணை ஒன்றினை
    வீதிவழி எடுத்துச்சென்றேன்!
    விதிவழி கடந்துசென்ற
    விந்தைமிகு காட்சி காண!!

    ஈர மணற்தடம் நோக்கி
    ஈருருளி வேகம் கொண்டேன்!
    ஈவுகள் தேடியவன்
    ஈடற்ற விடைகள் கண்டு
    ஈர்க்கப்பட்டு நின்றேன்!!

    மகரந்தத்தேன் குடித்த
    மதுவுண்ட வண்டது போல்
    மயங்கிப்போய் நின்றேன்!
    மடக்கைகள் பலகொண்ட
    மண்டிநிறை அஞ்ஞானங்களால்!!

    அகப்பட்ட தூண்டிலதை
    ஆலிங்கனம் செய்வித்து
    அகத்தினில் கறைபடிந்த
    அரூபப் பொழுதுகளை
    அகழ்ந்து நோக்கினேன்!!

    தூளியின் வெப்பம் கடந்து
    துள்ளி எழுந்த காலம் முதல்
    தூற்றிவிட்டுப் போன பருவங்களை
    தூர்த்து துளாவினேன்
    துர்குணங்களின் ஆதிக்கமே!!

    தனக்கான தகுதியை
    தரணி புகழ்கையில்
    தகுதியாகு பெற்றவனென
    தற்பெருமை கொண்டிருந்தேன்
    தகைவாய் இன்றுவரை!!

    செம்மாந்த உறைவிடத்தில்
    செருக்கின் சுவடுகளால்
    செதுக்கிய சிலையான பின்னே
    செயப்படு பொருளுக்கெல்லாம்
    செந்தீமை விளைவித்தேன்!!

    பெரும்பணம் சேர்த்து
    பெட்டக கொட்டிலிலே
    பெட்டியில் பூட்டி வைத்து – உடல்
    பெருக்கம் கொண்ட நான்
    பெறுமதி ஈதலை மறந்திருந்தேன்!!

    குடல்கொண்ட மேனியெல்லாம்
    குருதி நிறம் ஒன்றல்லவென
    குடையுறை வேந்தன்போல்
    குணத்தில் சாதி கொண்டு
    குற்றம் புரிந்திருந்தேன்!!

    நிறைகர்வம் கொண்டிருந்தேன்
    நிகரில்லா அகங்காரத்தால்
    நிகழ்காலப் புகழுக்காக – பிறரை
    நிந்தை செய்வித்து
    நிதானம் இழந்திருந்தேன்!!

    இவனா அவன்?
    இங்ஙனம் வளர்ந்திட்டானா?
    இவனிலும் குறைந்தவனா – நானென
    இதனினும் மேற்படியடைய
    இதயத்தை இற்றுப் போகச் செய்தேன்!!

    சோலையான ஆழ்மனம்
    சோகையாய் மாறியதேன்?
    சோடனையாய் நான்கொண்ட
    சோடை போன குணங்கள் தானோ
    சோதித்துப் பார்க்கிறது??!!!

    அமைதியான எனதுளத்தில்
    ஆழ கல் பாய்ந்ததால்
    அகச்சுழற்சி விட்டுப்போன
    ஆழிப்பேரலை ஆர்ப்பரிப்பு
    அமைதி கொள்வதெப்போது??!!!

    Share
  • உயிர்ப்பிழந்த சாசனங்கள்!!!

     

    -மகேந்திரன்

    நியாயத்தின் சாரங்களால்
    நியமனம் செய்யப்பட்ட
    நிதர்சன சாசனங்கள் – யாவும்
    நீர்த்துப்போன படிமங்களோ?!!

    படிமங்களாயின் பாதகமில்லை
    வடிவங்கள் உருமாறி
    நொடியிழந்த மணித்துளியாய் – தாவும்
    கடிவாளமற்ற புரவியாமோ?!!

    புரவியின் பிடரியாய் உலுக்காது
    நரம்புகள் தளர்ந்து
    தரங்களின் துணை தவிர்த்த – காவாம்
    நரகத்தின் காவலாமோ?!!

    காவலின் தொனியிலே
    பாவலன் போல் இறுமாந்து
    சேவகம் தனை மறந்து – பாழும்
    நாவடி பிறழ்ந்த வஞ்சகமோ!!

    வஞ்சகப் பேய்களுக்கு
    தஞ்சம் கொடுத்துவிட்டு
    நெஞ்சம் அழுகிப்போன – மேவும்
    மஞ்சம் வீழ்ந்த சாமரமோ!!

    சாமரத் தென்றல் வீசி
    கமல வதனம் சிவந்திருக்க
    கோமள நாண்பூண்டு – ஆங்கே
    தமனியன் தாள் புகுந்தாயோ!!

    புகுந்த வீட்டிலோ
    தகுந்த மரியாதை இல்லாது
    வெகுண்டால் வெண்காடு தானென – ஊதும்
    மகுடிக்கு அடங்கினாயோ!!

    அடங்கியதால் தவறென்று
    முடக்கியுனை போட்டுவிட்டு
    சடங்குகள் கொண்டாடி – உன்னை
    அடக்கிவைத்தல் நியாயம்தானே?!!

     

    Share
  • அகவுறை ஆற்றுப்படுகை!!!

     
    மகேந்திரன்

    பிறந்த இடமதை
    துறந்து பாய்ந்தேன்!
    திறந்த மடையாய்
    கறந்த பால்போல்
    குறவஞ்சி பாடிவந்தேன்!!

    ‘ஆ’வென்று
    அரற்றினேன்
    ‘ஓ’வென்று
    ஓலமிட்டேன்
    ‘கோ’வினின்று
    தாவியபின்!!

    உச்சிதனை விட்டு
    கூச்சல் தணித்து
    நீச்சம் வியாபித்து
    சிச்சிலிகள் சுற்றிநிற்க
    மச்சம் சுமந்தேன்!!

    கன்மம் ஈடேற்ற
    மண்மிசை தவழ்ந்து
    குன்னம் உறையும் முன்
    காண்டிகை உரைத்திட
    எண்ணம் செய்வித்தேன்!!

    சுனையாக பொங்கிய நான்
    அணைக்கட்டில் சிக்குண்டேன்!
    திணைவழி ஏகிட
    ஏனைய செயலுக்காய்
    சுனைத்தெழுந்தேன் மதகுவழி!!

    அழகு நடைபயின்று
    கூழாங்கல் உருட்டி
    கழனி வழி பாய்ந்து
    உழவின் உயிரேற்றி
    சோழகம் ஏந்திவந்தேன்!!

    சிதறாது கரையடங்கி
    சதங்கை ஒலியெழுப்பி
    மிதமான வேகத்தில்
    இதமாக ஓடிய நான்!
    மேதகு தாகம் தணித்தேன்!!

    சற்றே அகம் களைத்து
    முற்றாய் உரகடல் இணையுமுன்
    வற்றாத நினைவுகளுடன்
    ஆற்றுப் படுகையாகி
    நோற்புடை ஆழி கண்டேன்!!

    அகச்சுவை அரங்கேற்றிய
    உகப்புறை சமவெளியானேன்!
    சேகரமாய் எனக்குள்ளே
    சாகரமாய் வழித்தடத்தை
    போகணியில் போட்டுவைத்தேன்!!

    மலையகம் அவதரித்து
    விலையில்லா பயனளித்து
    இலையமுதம் புறம்கொண்டு
    கலைக்கதிர் தொட்டிலென
    தலைச்சங்கம் தாங்கி நின்றேன்!!

    செங்குவளை மணமெடுத்து
    பாங்குடனே முடிதரித்த
    அங்குச மன்னவனாய்
    எங்கனம் பிறப்பெனினும்
    இங்கனம்தான் முடிவதுவோ?!!

    நெஞ்சின் கனமது
    பஞ்சுக்குவியல் ஆனது
    எஞ்சிய உணர்வது
    சிஞ்சிதமாய் ஒலிக்கிறது
    துஞ்சாது என்னுள்ளே!!

    Share