Tag: பிரசாத் வேணுகோபால்

  • வெண்பா விருந்து: புதன்காலை எட்டு மணி!

    –பிரசாத் வேணுகோபால்.

     

    Eternal_clock

    உறவுகளுக்கு வணக்கம்.

    யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.

    வல்லமைக் குழுமத்தில் பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

    வெண்பாவிற்கான ஈற்றடியாக  “புதன்காலை எட்டு மணி” வழங்கப்பட்டதில்  14 வெண்பாக்கள் வந்துள்ளன.  அவை:

    [1]
    திட்டம் இதுதான், தெளிவாகக் கேட்டுக்கொள்!
    கெட்டிமேளம், ரெட்டைமாலை, தாலிதயார் – பட்டூ
    முதுகோவில் தன்னில் நமக்குக்கல் யாணம்
    புதன்காலை எட்டு மணி.

    – அண்ணா கண்ணன்

    ___________________________________________________________

    [2]
    கட்டிலை  விட்டிறங்கி  கொட்டாவி  விட்டிடவே,
    எட்டுமணி  ஆகும்  எனதன்பே! -எட்டத்
    புதமாகக் கண்விழித்தால், பார்க்கலாம் நாளை,
    புதன்காலை எட்டு மணி

    [3]
    கூற்றவன்  போல்நின்ற,  கோதெண்டம்  ஏந்தியவன்,
    சீற்றமின்றி  சாந்தமாய்ச்  செப்பினன், -தோற்றோய்,
    இதம்தரும்  சொல்கேளாய், இன்றுசெல்வா நாளை
    புதன்காலை  மணி எட்டு

    – கிரேசி மோகன்

    ___________________________________________________________

    [4]
    பெண்ணொருத்திக் கண்டேன் கடற்கரை தன்னிலே
    பின்தொடர்ந்து சென்றேன் அவளை அன்பால்
    இதமாய்த் தொடர்ந்தஎம் காதல்கல் யாணம்
    புதன்காலை எட்டு மணி      

    [5]
    அலகிடல் வேண்டுமா கேட்கிறார் அன்பர்
    அலகெங்கே யிட்டா லழகென் றறிந்தவன்
    தந்தான் பறவைக்கு; கண்டேன்நான் அவ்வழகை
    புதன்காலை எட்டு மணி

    – நடராஜன் கல்பட்டு
    (திருத்தம்: கணேசன், அண்ணாகண்ணன், பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    [6]
    திருப்பதியில் வீற்றிருக்கும் வேங்கடவன் பாதம்
    தரிசிக்கும் ஆவலில் காத்திருப்பில் நானும்
    வரிசைநகர் முன்பதிவில் வந்தமைந்த நேரம்
    புதன்காலை எட்டு மணி.  

    – பிரசாத் வேணுகோபால்

    ___________________________________________________________

    [7]
    தினம்தினம் என்கனவு ! தீராத மோகம்!
    எனதுகண் பார்த்தபோது ஏங்கும் – வினோதம்
    நிதம்நிதம்வாய்ப் பில்லையே, நேர்முகப் பேச்சு
    புதன்காலை எட்டு மணி.     

    [8]
    எட்டுமாதப் பிள்ளை  நடைபயிலும் நேரத்தில்
    தட்டுத் தடுமாறி வீழ்ந்துவிடும் ! – கட்டும்
    முதல்வெண்பா தொல்லைதரும்; கற்கத் தொடங்கு
    புதன்கிழமை எட்டு மணி

    – சி.ஜெயபாரதன்

    ___________________________________________________________

    [9]
    உறவிடம் சொல்லா(து) தனி;புறப் பட்டேன்
    இரவுமணி பத்துக்கு மேல்சூளை  மேட்டுக்கு
    வண்டியுடன் காத்திருப்பேன் ஓடி விடலாம்
    புதன்காலை எட்டு மணி              

    – செம்பூர் நீலு (நீலகண்டன்)
    (திருத்தம்: பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    [10]
    மூன்று;மா தங்கள் முனைந்து செயல்பட்டு
    முத்தாய்த் தயாரித்தோம் மக்கள்வாழ் விற்காய்
    முழுமையாயோர் திட்ட அறிக்கை;வெளி யீடு
    புதன்காலை எட்டு மணி.

    – பி. தமிழ் முகில்
    ( திருத்தம் : பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    [11]
    நகைச்சுவை பட்டிமன்றக் காட்சியது ஒன்றாம்
    தவறாது காண அரங்கிலே மக்கள்
    அனைவரும் கூடிட வேண்டிய  நேரம்
    புதன்காலை எட்டு மணி.    

    – தேமொழி

    ___________________________________________________________

    [12]
    மூடத் தனத்தை முடமாக்க வேண்டுமெனில்
    ஆட வழியின்றி வீழ்த்ததை  ; தையில்
    ​அதன்காலை வெட்டிவிட நான்கணித்த நேரம்​
    புதன்காலை எட்டு மணி. ​

    – துரை ந. உ.

    ___________________________________________________________

    [13]
    கூப்பாடு போடு;கும்பல் கூட்டுபின்னும் ஏதோசெய்
    எப்பாடு பட்டும் செயலைமுடி; அன்றி
    கதைசொன்னால் நான்முடிப்பேன் உன்கதையைப் பாங்காய்
    புதன்காலை எட்டு மணி   

    – திவாகர்
    ( திருத்தம் : பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    [14]
    சிசேரியன் வேண்டாம் சுகமாய் பிரசவம்”
    வைத்தியர் சொன்னாலும் வேண்டாத தெய்வமில்லை
    ஒன்பதுக்கு மேல்பிறக்க வேண்டி;வலி  கண்டேன்
    புதன்காலை எட்டு மணி   

    – தமிழ்த்தேனீ
    (திருத்தம் : பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________________

    அடுத்து வரும்  ஈற்றடி: “வேண்டாம் தனி தமிழ்நாடு”

    ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.

    நன்றி.

    பிரசாத் வேணுகோபால்

     

    Share
  • வெண்பா விருந்து: போதுமப்பா ஆளை விடு!

    –பிரசாத் வேணுகோபால்.

     

    leave me alone

    உறவுகளுக்கு வணக்கம்.

    யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.

    வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

    வெண்பாவிற்கான ஈற்றடியாக  “போதுமப்பா ஆளை விடு” வழங்கப்பட்டதில் எட்டுப் பேர்களின் 11 வெண்பாக்கள் வந்துள்ளன.  அவை:

    ___________________________________________________

    [1]
    சாதுபோல உள்நுழைந்தான் சாமான்யன் என்நெஞ்சில்
    சாத்திரங்கள் நானறிந்தேன் சங்கடங்கள் ஏதுமில்லை
    போது(ம்)கண்ணன் எண்ணமதே; போதனைகள் தேவையில்லை
    போதுமப்பா ஆளை விடு. 

    – பிரசாத் வேணுகோபால்

    [2]
    எத்தனைதான் கேட்டாலும் எத்தனைப்போல் ஏய்த்துநிற்கும்
    பித்துக்குளி பேச்சுனது பித்தராக்கும் கேட்பவரை
    சாதுவாம் என்னையும்நீ சண்டியராய் மாற்றாதே
    போதுமப்பா ஆளை விடு  

    – பிரசாத் வேணுகோபால்

    [3]
    நாலு வரிவெண்பா நானெழுத ஆசைபட்டு
    நாளெல்லாம் யோசிச்சி நானெழுதிப் போட்டாக்க
    போதுபோ(து) என்று தலைவலி தான்லாபம்
    போதுமப்பா ஆளை விடு.       

    – பிரசாத் வெணுகோபால்.

    ___________________________________________________

    [4]
    எனதப்பா கண்டுவிட்டால் என்னுடனே உன்னை
    கணம்தப்பா துன்னை கொலைசெய்வார் அஃதில்
    எனக்கேதும் சந்தேகம் இல்;அதனால் ஓடிவிடு
    போதுமப்பா ஆளை விடு.          

    – நடராஜன் கல்பட்டு (திருத்தம்: பிரசாத் வேணுகோபால்)

    ___________________________________________________

    [5]
    தளைதட்டும்  வெண்பா  தவறுதான்,  ஆனால்
    களைகட்டா  விட்டாலோ  குற்றம்; -இலையிலிட்ட,
    சாதமப்பா  தேடப்ர  சாதமப்பா , தொல்காப்யம்
    போதுமப்பா  ஆளை விடு 

    – கிரேசி மோகன்

    ___________________________________________________

    [6]
    மண்வெட்டும் வேலையில் மத்திய வேளையில்
    கண்கட்டக் கச்சிதமாய் ‘நண்பரே – பண்ணிரண்டு
    தாருமப்பா’ என்றவுடன் பன்னிரண்டு பாடிவைப்பார்;
    ​போதுமப்பா ஆளை விடு     

    – துரை ந. உ.

    ___________________________________________________

    [7]
    நீரோட்டம் போல்வெண்பா நெய்கின்ற அண்ணாரே
    தேரோட்ட வெண்பா திரள்கிறதே — சாரேநான்
    மோதுதற்காய் இங்கே முனையவில்லை; ஆகவே
    போதுமப்பா ஆளை விடு.       

    – ஹரிகிருஷ்ணன்

    ___________________________________________________

    [8]
    வீட்டுக் கடன்,வெளி நாட்டுக் கடன்,தனி,
    ஈட்டுக் கடன்,வா கனக்கடன்  – கூட்டியென்
    காது கருகக் கடன்காரன் ஆக்காதே
    போதுமப்பா ஆளை விடு.   

    – அண்ணாகண்ணன்

    ___________________________________________________

    [9]
    அரசியலைச் சூதாட்டம் ஆக்கிடும் செல்வர்
    தரணியைச் சீர்குலைப்பர்​ தாமாய் – உரிமையென
    வேதனை தந்திடும் வீணான சூதாட்டம்
    போதுமப்பா ஆளை விடு.

    – சி. ஜெயபாரதன்

    [10]
    ஏதப்பா காதலிந்த ஏழமை வாழ்க்கைதனில் ?
    மாதப்பா தோல்வியில் மாள்வது ! –  வேதனை
    மோதுமப்பா காதலர்க்கு ! மோகக் கனவுகள்
    போதுமப்பா ஆளை விடு !

    – சி. ஜெயபாரதன்
    ___________________________________________________

    [11]
    கண்ணே மணியே கவின்மலர்க் காதலியே
    கண்கவர் ஓவியமே  என்னுயிர் நீயென்ற
    பொய்யுரை கேட்டு மயங்காத பெண்ணுண்டு
    போதுமப்பா ஆளை விடு.

    –  தேமொழி

    ___________________________________________________

    அடுத்து வரும்  ஈற்றடி: “புதன்காலை எட்டு மணி”

    ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.

    நன்றி.

    பிரசாத் வேணுகோபால்
     
     
     
     
     
     
     
     
    நன்றி, படம் உதவி: http://8tracks.com/

    Share
  • வெண்பா விருந்து: என்னோடு நீவந்து இரு!

    –பிரசாத் வேணுகோபால்.

     

    என்னோடு நீவந்து இரு!

     

    உறவுகளுக்கு வணக்கம்.

    யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.

    வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

    வெண்பாவிற்கான ஈற்றடியாக  “என்னோடு நீவந்து இரு” வழங்கப்பட்டதில் எட்டுப் பேர்களின் 12 வெண்பாக்கள் வந்துள்ளன.  அவை:

    சி. ஜெயபாரதன், கனடா:

    உன்னோடு வாழ்வேன் ஒருதுணையாய், கண்மணியே
    பொன்முகம் தாய்மையில் பொங்கிடும்  –  அன்னை நீ
    உன்னருகில் நானுதவ உள்ளதே, என்னில்லம்
    என்னோடு நீவந் திரு.

    _______________________________________________

    பிரசாத் வேணுகோபால்:

    [1]
    எண்ணற்ற ஆசையினால் இங்குபலர் அல்லலுற
    எண்ணத்தை உன்பாலே  ஏற்றியிங்கு வாழ்பவர்க்கு
    எந்நாளும் நன்னாளே என்றுணர்ந்தேன் நான்முகனே
    என்னோடு நீவந்து இரு.

    [2]
    காலங்கள் மாற கருத்துகள் மாறலாம்இக்
    கோலத்தை நன்குணர்ந்து; கொள்ளும் மனப்பாங்கே
    என்றென்றும் நான்விட்டு எளியேனாய் வாழ்ந்திருக்க
    என்னோடு நீவந்து இரு.

    [3]
    தன்னையும் தன்எதிரி தன்னையும் மாய்த்துவிடும்
    வெஞ்சினம் கொன்றழிக்கும் வெற்றிவஜ் ராயுதமே
    என்றும் பெருமை எனக்களிக்கும் நல்பொறையே
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    துரை.ந.உ.:

    Widow
    [1]
    என்னையழித்(து) உன்னை வளர்த்தேனே; பின்னாளில்
    உண்மைமறந்(து) என்னைத் துறந்தாயே – தன்இடத்தை
    இன்றிழந்த என்கண்ணே,  வாமுதியோர் இல்லத்தில்
    என்னோடு நீவந்(து) இரு.

    [2]
    உன்ஓடு நானென்(று) இருந்ததும் வாழ்வினில்
    என்ஓடு நீயென்(று) இருந்ததும் வீழ்ந்ததே
    உன்னோடு நான்வந்(து) இருப்பேன்; இனியாவ(து)
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    கிரேசி மோகன்:

    திங்கள் முகத்தவளே, தித்திக்கும் செவ்வாயே,
    தங்கபுத னாய்வந்த தேவியே, -சங்கரன்,
    தன்னோடு பின்னிய தாயே, குருவாக,
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    தேமொழி:

    [1]
    கன்னல் மொழிகொண்டு கற்கவே, சிந்தைமகிழ்
    இன்னிசைப் பண்கள் இசைத்திடவே – என்னுயிரே
    உன்புகழ் பாடிடவே சங்கத் தமிழமுதே
    என்னோடு நீவந்து இரு.
    (திருத்தம்: அண்ணாகண்ணன்)

    [2]
    கன்னல் தமிழ்மொழியில் கற்பனைச் சாறெடுத்து
    இன்னிசையில் பண்கள்  இயற்றிடுவோம் – மின்வலையில்
    உன்புகழ் மேவ உலகெலாம் செந்தமிழே
    என்னொடு நீவந் திரு.
    (திருத்தம்: ஜெயபாரதன்)

    _______________________________________________

    அண்ணாகண்ணன்:

    இல்லை ஒருசொந்தம் என்றே வருந்தாதே
    எல்லாம் இழந்தேனென்று ஏங்காதே இங்கேவா
    என்னவுண்டோ சேர்ந்துண்போம் இன்பக் கதைவளர்ப்போம்
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    தமிழ்த்தேனீ:

    கன்னிமா டம்தன்னில் கன்னிநான் காத்திருந்தேன்
    என்னுயிரின்  பாதியே ஸ்ரீராமா – கண்ணோடு
    கண்ணோக்கிக் காதலினைத் தந்தாய், களிபெருக
    என்னோடு நீவந்து இரு.

    _______________________________________________

    ஹரிகிருஷ்ணன்:

    மூட்டை பிரிச்சா முழுங்கலாம்; தீத்துடலாம்.
    ஓட்டையெண்ணு தோசைல ஒய்ங்காக — சேட்டைக்கோர்
    அன்பா பிரசாத்தா ஆஞ்சாட்டு* அப்புறமா
    என்னோடு வந்தே இரு.

    *ஆஞ்சாட்டு: மம்மம் சாப்பிட்டுவிட்டு.

    _______________________________________________

    அடுத்த ஈற்றடி: போதுமப்பா ஆளை விடு

    களத்தில் இறங்குங்கள், தூள் கிளப்புங்கள்

    ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.

    நன்றி.

    பிரசாத் வேணுகோபால்

    Share