Tag: மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா

  • சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!

    சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ
    சித்திரைத் திருமகள் சிறப்பாக வந்திடுவாள்
    அவளை வரவேற்க ஆனவற்றைச் செய்திடுவோம்
    அனைவருமே வாருங்கள் அகமகிழ வரவேற்போம்

    தையினை அடுத்துச் சித்திரை வருகிறது
    தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழரது நம்பிக்கை
    உழவரை உயர்த்திடும் உன்னதத் திருநாளாய்
    உயர்வாக மலருவதே தைப்பொங்கல் திருநாளே

    உழவினை உயர்த்தும் உன்னதத் திருநாள்
    தையோடு மட்டும் தடைபட்டு நிற்கவில்லை
    சித்திரையும் இணைகிறது சிறப்பான உழவோடு
    அத்தனையும் பண்பாட்டின் அடித்தளமாய் அமைகிறது

    தையிலும் பொங்கல் சித்திரையிலும் பொங்கல்
    பொங்கலைப் பொங்கினால் பூரிப்பே கிடைக்கும்
    மாவிலை தோரணம் வாசலை அலங்கரிக்கும்
    மனமகிழச் சித்திரையை வரவேற்று மகிழுவோம்

    பங்குனி தன்பின்னே சித்திரையைக் கூட்டிவரும்
    சித்திரை பிறந்தாலே கெட்டிமேளம் ஒலித்துவிடும்
    திருமணங்கள் தொடங்கும் திருவிழாத் தொடங்கும்
    சிறப்பாக வசந்தம் ஊஞ்சலாய் ஆடிநிற்கும்

    புத்தாடை  உடுத்துவார் புத்துணர்வு பெறுவார்
    மத்தாப்பு பட்டாசு மனமகிழச் செய்யும்
    இல்லங்கள் தோறும் இனிப்பான பலகாரம்
    எல்லோரும் சித்திரையை ஏந்தியே மகிழுவார்

    ஆலயம் செல்லுவார் ஆண்டவனைப் பணிவார்
    அறிவோடு தெளிவும் அமைந்திடவே வேண்டுவார்
    உறவுகளை அழைப்பார் உபசாரம் செய்குவார்
    மூத்தோரை வணங்கி முழுவாசி பெற்றிடுவார்

    ஈழத்தில் இருவினத்தார் கொண்டாடி மகிழ்வார்
    சிங்களமும் செந்தமிழும் சித்திரையைச் சிறப்பிக்கும்
    தமிழகமும் கொண்டாடும் வடநாடும் கொண்டாடும்
    தனிச்சிறப்பாய் சித்திரையும் சிறப்பாக மலர்ந்துவிடும்

    அறிவியலும் கலந்திருக்கு ஆன்மீகம் நிறைந்திருக்கு
    சமயமொடு சன்மார்க்கம் சமத்துவம் அமைந்திருக்கு
    இல்லார்க்கும் இன்பந்தரும் இருப்பார்க்கும் இன்பந்தரும்
    எல்லோர்க்கும் நல்லதையே நல்கவரும் சித்திரையே

    பட்டிமன்றம் பாட்டரங்கம் பாங்காக நடக்கும்
    பலவறிஞர் பாடகர்கள் விருந்தளித்து நிற்பார்
    ஆண்டவனின் கோவில்களில் உற்சவங்கள் நடக்கும்
    ஆனந்தம் பொங்கிடவே சித்திரையும் மலரும்!

    Share
  • மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீண்டநாள் வாழ நெஞ்சம் நினைக்கிறது
    வேண்டாத வினைகள் வில்லங்கம் தொடர்கிறது
    தூண்டா மணிவிளக்காய் துலங்கிடும் தூமணியே
    நீண்டநாள் நிலைக்கவே நீயருள் புரிந்திடுவாய்

    கொடியவர் கொன்றிடுவார் கொள்ளையும் அடிப்பார்
    கடுகளவும் கருணை காருண்யம் காட்டார்
    நினைவெல்லாம் நிட்டூரம் நிறைத்துமே வைப்பார்
    நீண்டநாள் வாழுவது நியாயமா சொல்நிமலா

    அறமற்றார் அரசியலை ஆட்டிப் படைக்கின்றார்
    அறங்கூறும் இடமெல்லாம் அரக்கரே நிறைகின்றார்
    உயிர்காக்கும் மருத்துவர்கள் உணர்விழந்து நிற்கின்றார்
    உயர்பொரு ளாயிருப்பவனே உனக்கொன்றும் தெரியாதா

    சன்மார்க்கம் மறக்கின்றார் சமத்துவம் தகர்க்கின்றார்
    எஞ்ஞான்றும் பொய்யுரைத்து ஏற்றமிலா செய்கின்றார்
    வஞ்சனையை நெஞ்சிருத்தி வாழ்வாரை வதைக்கின்றார்
    இவரெல்லாம் இவ்வுலகில் எப்படிநீ இருக்கவிட்டாய்

    துட்டரைத் துரத்தவேணும் கெட்டாரைத் திருத்தவேணும்
    மட்டில்லா மதுகுடிப்பார் மனம்மாற வைக்கவேணும்
    அட்டகாசம் செய்வாரை அடக்கியே வைப்பதற்கு
    ஆயுளை நீடித்து அளித்திடுவாய் ஆண்டவனே

    அன்னதானம் செய்யவேணும் அறப்பணிக ளாற்றவேணும்
    ஆதரவற்றோரை அரவணைத்துப் பார்க்க வேணும்
    மெலியாரை வருத்தும் வலியராரை திருத்தவேணும்
    நிலமீது எனக்கிறைவா நீண்டநாள் தந்திடுவாய்

    தளராத மனம்வேணும் அன்பகலா நிலைவேணும்
    உளமுழுதும் பழுதில்லா உயர்குணமே வேணும்
    வழுவில்லா நாளெல்லாம் வாழவே வேணும்
    மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    Share
  • உழைப்பவர் நலத்தினை உயர்த்தியே போற்றுவோம்!

    உழைப்பவர் நலத்தினை உயர்த்தியே போற்றுவோம்!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது
    உழைக்கின்றார் வாழ்வெல்லாம் உயர்வுபெற மறுக்கிறது
    காசுள்ளார் கைகளிலே உழைப்பெல்லாம் போகிறது
    கவலையுறும் உழைப்பாளி கண்ணீரில் மிதக்கின்றான் !

    சமத்துவங்கள் பேசுகிறார் சங்கங்கள் அமைக்கின்றார்
    நினைத்தவுடன் மாநாடு நிறையவே வைக்கின்றார்
    அனைத்துமே உழைக்கின்றார் அனுசரணை என்கின்றார்
    ஆனாலும் உழைக்கின்றார் அல்லலிலே இருக்கின்றார் !

    வியர்வையிலே தொழிலாளி வேதனையில் தொழிலாளி
    நலமிழந்து கிடக்கின்றான் நயமெதுவும் காணவில்லை
    முதலீட்டும் முதலாளி தலைநிமிர்ந்து நிற்கின்றான்
    முழுதுழைக்கும் தொழிலாளி நிலையிழந்து தவிக்கின்றான் !

    பணமெண்ணும் மனமகன்று மனமெண்ணும் நிலைவேண்டும்
    உழைப்பதனை உயர்வென்று உணர்த்தியே விடவேண்டும்
    உழைத்திடுவார் இருப்பிடங்கள் உயரவெண்ணும் உளம்வேண்டும்
    உழைப்பாளி முதலாளி ஓரணியாய் வரவேண்டும் !

    வளமாக வாழ்வதற்கு வழிசமைக்கும் தொழிலாளி
    நிலமீது நிம்மதியாய் தலைநிமிர வழிவேண்டும்
    வளமீட்டும் முதலாளி மனமகிழ வைத்துவிடும்
    வாழ்வளிக்கும் தொழிலாளி வாழும்நாள் வரவேண்டும் !

    உழைத்திடும் கைகளென்றும் உயர்வினைப் பெறவேண்டும்
    உழைப்பினை மதித்திடும் உளமது எழவேண்டும்
    உழைப்பினால் உலகமே உயர்ந்திடும் தன்மையால்
    உழைப்பவர் நலத்தினை உயர்த்தியே போற்றுவோம் !

    உழைப்பை மதிக்கும்நாள் உன்னதமே உலகினுக்கு
    உழைப்பை மதிக்கும்நாள் உயர்வினையே உணர்த்திவிடும்
    உழைப்பை மதிக்கும்நாள் உழைப்பாளர் மகிழ்ந்திடுவார்
    உழைப்பை மதித்திடுவோம்ஓரணியாய் வாருங்கள் !

    Share