உழைப்பவர் நலத்தினை உயர்த்தியே போற்றுவோம்!

0

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் 
மெல்பேண், ஆஸ்திரேலியா

ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது
உழைக்கின்றார் வாழ்வெல்லாம் உயர்வுபெற மறுக்கிறது
காசுள்ளார் கைகளிலே உழைப்பெல்லாம் போகிறது
கவலையுறும் உழைப்பாளி கண்ணீரில் மிதக்கின்றான் !

சமத்துவங்கள் பேசுகிறார் சங்கங்கள் அமைக்கின்றார்
நினைத்தவுடன் மாநாடு நிறையவே வைக்கின்றார்
அனைத்துமே உழைக்கின்றார் அனுசரணை என்கின்றார்
ஆனாலும் உழைக்கின்றார் அல்லலிலே இருக்கின்றார் !

வியர்வையிலே தொழிலாளி வேதனையில் தொழிலாளி
நலமிழந்து கிடக்கின்றான் நயமெதுவும் காணவில்லை
முதலீட்டும் முதலாளி தலைநிமிர்ந்து நிற்கின்றான்
முழுதுழைக்கும் தொழிலாளி நிலையிழந்து தவிக்கின்றான் !

பணமெண்ணும் மனமகன்று மனமெண்ணும் நிலைவேண்டும்
உழைப்பதனை உயர்வென்று உணர்த்தியே விடவேண்டும்
உழைத்திடுவார் இருப்பிடங்கள் உயரவெண்ணும் உளம்வேண்டும்
உழைப்பாளி முதலாளி ஓரணியாய் வரவேண்டும் !

வளமாக வாழ்வதற்கு வழிசமைக்கும் தொழிலாளி
நிலமீது நிம்மதியாய் தலைநிமிர வழிவேண்டும்
வளமீட்டும் முதலாளி மனமகிழ வைத்துவிடும்
வாழ்வளிக்கும் தொழிலாளி வாழும்நாள் வரவேண்டும் !

உழைத்திடும் கைகளென்றும் உயர்வினைப் பெறவேண்டும்
உழைப்பினை மதித்திடும் உளமது எழவேண்டும்
உழைப்பினால் உலகமே உயர்ந்திடும் தன்மையால்
உழைப்பவர் நலத்தினை உயர்த்தியே போற்றுவோம் !

உழைப்பை மதிக்கும்நாள் உன்னதமே உலகினுக்கு
உழைப்பை மதிக்கும்நாள் உயர்வினையே உணர்த்திவிடும்
உழைப்பை மதிக்கும்நாள் உழைப்பாளர் மகிழ்ந்திடுவார்
உழைப்பை மதித்திடுவோம்ஓரணியாய் வாருங்கள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *