Tag: முனைவர் ஆ.சந்திரன்

  • சங்கப் பாடல்களில் கூற்றும் / கதைசொல்லியின் குரலும்

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்த் துறை

    தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)

    திருப்பத்தூர்

    வேலூர்

    பண்டைக்கால புலவர்களின் உணர்வின் வெளிப்பாடுகளை நமக்கு உணர்த்தி நிற்பவை சங்கப் பாடல்கள். ஏறக்குறைய ஐந்நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகால அளவில் பரந்து விரிந்த தமிழ் நிலப்பரப்பில் புலவர்களின் தன்னுணர்ச்சிப் பாக்களாக உருவான அப்பாடல்கள் பின்னர், அகம் – புறம், திணை – துறை, கூற்று என்று பல நிலைகளில் பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் கூற்று என்பது புலவர் பெயரால் அமைகிறது. ஆனால் அகப்பாடல்கள் கூற்று என்று வரும் போது தலைவன், தலைவி, தோழி என்று கற்பனை பாத்திரத்தின் பொதுப் பெயராக அமைகிறது. இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அது அகப்பாடல் பற்றியது. அதாவது அகப்பாடல்கள் புறப்பாடல்கள் போல் புலவர்களால் பாடப்பட்டிருந்தாலும் பாடலைப் பாடியவராகத் தலைவனோ, தலைவியோ, தோழியோ அல்லது வேறு ஏதோ ஒரு பாத்திரமாகவோ கருதப்படுகிறது. அதாவது பாடலாசிரியன் வேறு – பாடலில் வெளிப்படும் குரல் வேறு என இது அமைகிறது.

    பாடப்பட்டுள்ள பாடல்களின் சில அடையாளங்களைக் கொண்டுதான் இது தலைவன் குரல், இது தோழி குரல், இது தலைவி குரல் என்று இனங்காணமுடிகிறது. இத்தகைய ஒரு சிந்தனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர் கொண்டிருப்பது வியப்பான ஒன்று.  என்றாலும், அவ்வாறு அவர்கள் வகுத்துச் சென்ற கூற்று என்ற வரையறை அனைத்தும் சரியாக அமைந்துள்ளனவா? அவற்றில் மாற்றம் செய்ய இடமுள்ளதா? மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை இன்று சிலர் எழுப்புகின்றனர். அப்பாடல்களின் நுட்பமான பொருளை அறிந்தால் இம்மாதிரியான கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியும்.

    “கதைசொல்லியின் குரல்” என்ற புதிய சிந்தனை பாடலின் நுட்பப் பொருளை அறிய உதவும்  என நம்பலாம். யார் இந்தக் கதை சொல்லி. கதாசிரியருக்கும் இந்தக் கதை சொல்லியின் குரலுக்கும் என்ன உறவு என்பது பற்றிய விளக்கம் இங்கு அவசியமாகிறது. ”எல்லா இலக்கியப் படைப்புகளும் –எழுத்து ரூபத்தில் இருப்பதால் – அடையாள ரீதியாக சிலவற்றைச் சொல்லும்” இந்த அடையாளங்களில் ஒன்றாக ஒரு குரல் வருவதுண்டு. இந்தக் குரல் ஆசிரியன் குரல் அல்ல. கதைசொல்லியின் குரல்” (தமிழவன்). இந்த விளக்கத்தின்படி பார்க்கும்போது கதை, கதாசிரியனைத் தாண்டி நின்று ஒலிக்கும் குரலாகக் கதைசொல்லி அமைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    “கதைசொல்லியின் குரல்”  என்ற சிந்தனையை முன்னிருத்தி தமிழவன், முனைவர் ஆ. முத்தையன் முனைவர் ஆ.சந்திரன் முதலானோர் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் சில புதிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். இவை இயல்பான வாசிப்பில் காண இயலாதவை. இத்தகயை ஒரு முயற்சி அதாவது, “கதைசொல்லியின் குரல்” என்ற சிந்தனையை முன்நிறுத்தி சங்கப் பாடல்களை வாசிக்கும் முயற்சி இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அதே வேளை சிவத்தம்பியின் சில கருத்துகள் இம்மாதிரியான அடையாளக் குரலைக் காணமுடியும் என்பதற்கு வழிகாட்டியாக அமைகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

    புறநானூற்றுப் பாடலின் கதையாடலைக் கட்டவிழ்க்கும் அவர் “மாவாராதே மாவாராதே எனும் பாடலில் வரும் சோகம் பற்றியோ, கைம்மை காரணமாகச் சாணி மெழுகிய நிலத்தில் போடப்பெற்ற வீரன் ஒருவனின் உடலை எரிப்பதா புதைப்பதா எனக் கேட்கப்பெறும் வினாவின் உக்கிரத்தையோ அன்றேல் ‘துடியன், கடம்பன் பாணன் பறையனென்று இந்நான்கல்லது குடியுமில்லை‘  என்ற பாடலில் காணப்படுகின்ற புதிய மரபு நிராகரிப்பையோ நன்கு விளங்கிக் கொண்டவர்களாக மாட்டோம். புறத்திணைப் பற்றி விதந்துரைக்கப்படாத பல அமிசங்கள் புறநானூறு ஏறத்தாழ 250 ஆவது பாடலுக்குப் பின்னரே பெரும்பாலும் காணப்படுகின்றன” (தமிழின் கவிதையியல். பக்: 12, 13) என்று கூறும் சிவத்தம்பி, தலைவனின் பிரிவால் வாடும் பெண்ணின் அங்கலாய்ப்பாய் அமையும் அப்பாடல் புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அத்துடன், குறிஞ்சிப்பாட்டின் தோழி வெளிப்படுத்தும் (குறிஞ்.பா.26-29) கருத்தை ஐயப்படும் அவர், “சங்க அகமரபைப் போன்று இல்லாமல் பிற்கால கோவை இலக்கியங்களில் வரும் தோழி பேசுவது போல் அக்கருத்து அமைவதாகக்” (தொல்காப்பியமும் கவிதையியலும்.பக்: 23, 24) குற்றம் சாட்டுகிறார். இவ்விரு கருத்துகளும் அவருடைய நுட்பமான வாசிப்பின் வெளிப்பாட்டால் உருவானவை. இவை பாடலின் கருத்தோ அல்லது கதாசிரியன் கருத்தோ எனில், இவை கதைசொல்லியின் குரலை அடையாளங் கண்டுகொண்டதால் உருவான கருத்து என்பது புனலாகும். அதனால் கதைசொல்லியின் குரல் என்ற சிந்தனையை அவர் முன்வைத்தார் என்பது அல்ல இங்கு பொருள். அச்சிந்தனையைத் தமிழ் இலக்கியத்தில் பரிசோதித்தவர் தமிழவன். அதே நேரம் சிவத்தம்பியிடம் அப்படிப்பட்ட சிந்தனை இருந்துள்ளது என்பதும் இங்குக் கவனிக்கத்தக்து.

    சங்கப்பாடல்கள் அனைத்தையும் இந்தக் கோணத்தில் ஆராய்ந்தால் அகம் – புறம் என்பதைத் தாண்டிய தனிமனித உணர்வுகள் பலவற்றை வெளிக்கொணரமுடியும் என நம்பலாம். அந்த முயற்சியின் துவுக்கமாக எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ள அகப்பாடல்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு அவற்றின் அடையாளக் குரல் – அது முன் வைக்கும் கருத்து ஆகியனவற்றை ஆராய முயல்கிவது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

    நற்றிணை 124 ஆம் பாடல் தன்னுடைய துணை பிரிந்த போது வருந்தும் அன்றில் பறவை போன்ற தனிமைத் துயர் தரும் பருவம் இது எனவே இப்போது நீங்கள் என்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டாம் என்ற பொருளைத் தருகிறது. ஆனால் “பிரிவுணர்த்தப் பட்ட தோழி தலைவர்க்கு உரைத்தது” என்று இப்பாடலுக்கு கூற்று வரையறுக்கப் பட்டுள்ளது. இது பொருத்த முடையதாகத் தோன்ற வில்லை.

    பொதுவாக தலைவன் கார் காலத்தின் தொடக்கத்தில் வருவேன் என்று கூறிச் செல்வான். தலைவி அப்பருவம் வரும்வரை ஆற்றியிருப்பாள். கார்காலம் வந்தும் அவன் வர தாமதமானால் வருந்துவாள். முல்லை மலர் அவள் வாட்டத்தை அதிகரிக்கும். வாடைத் துயர் அவளை அதிகம் வாட்டும். இவ்வாறு பிரிவு பற்றிய பாடல்கள் அமையும். ஆனால் இப்பாடலில் தலைவன் பிரியக் கருதிய காலம் தலைவியின் ஆற்றாமையை அதிகரிக்கும் கூதிர் பருவம். அதாவது தலைவன் திரும்பி வரவேண்டிய பருவத்தில் பிரியக் கருதுகிறான். அவ்வாறன சூழலைத்தான் பாடல் புலப்படுத்துகிறது. அப்பாடலின் விளக்கம் வருமாறு.

    “தன் துணை பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற்பறவை ஆற்றாது இறந்துபடுதல் போலத் தனிமையுற்று இருக்கும் துன்பமான வாழ்வினை யானும் ஆற்றவியலாது இருக்கும் தன்மையானேன். ஈங்கையின் அரும்பும், மல்லிகை மலரும் உயர்ந்த மணலால் அமைந்த திடலில் உதிர்கின்றன. மான்கள் வன்மையான குளம்புகளினால் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை உருக்கிச் சாய்க்கும் கொள்களத்தை ஒத்து வடியும் தெளிந்த நீர்க்குமிழியையுடைய தண்ணீரைப் பெற்றதாகக் கூதிர்ப்பருவம் வந்துவிட்டது. இப்பருவமே யான் ஆற்றாதிருப்பதற்குக் காரணம் ஆகும். ஆதலின் ஐயனே! என்னை விட்டு நீங்காது இருப்பாயாக. நீ நெடுங்காலம் வாழ்வாயாக!” (நற். 124)

    மேற்கண்ட பாடலில் “புன்கண் வாழ்க்கை”- “யானும் ஆற்றேன்” “அதுதான் வந்தது” என்பன  தலைவியன் துன்பத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது தலைவன் பிரிவைத் தாங்க இயலாமல் தவிக்கும் தலைவியின் குரல் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆக இப்பாடல் தலைவி கூற்றுப் பாடல் என்று கொள்வதே சரியாக இருக்கும்.

    அடுத்து நற்றிணை 132 பாடலைப் பார்ப்போம். “பெரிதாய் விளங்கும் இவ்வூரின்கண் உள்ள யாவரும் துயில்கின்றனர். விழித்திருப்பவர் என ஒருவரும் இல்லை” (நற்.132-1) என்று தொடங்கும் இப்பாடல் அதன் பிறகு மழை பொழிவு, ஊரில் இரவு வேளையில் புரியும் கடுங்காவல் பற்றி விவரிக்கிறது. அவ்வாறு இரவு முழுவதும் காவல் கடுமையாக இருப்பதால் தலைவி தலைவனைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போகிறது. அதனால் அவள் ”இன்றுகொல் அளியேன் பொன்றும் நாளோ” (நற்132-11) என்று புலம்புகின்றாள் என்று முடிகிறது. இப்பாடலில் தோழி பற்றிய குறிப்பு இல்லை. தோழியிடம் தலைவி பேசுவதாகப் பொருள்கொள்ளவும் இடமில்லை என்பது பாடலில் தெளிவாகப் புலப்படுகின்றது. அப்படி இருக்க இப்பாடல் தோழி கூற்றுப்பாடல் என்று கூற்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

    நற்றிணை 36 ஆம் பாடல் “இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது”  என்று கூற்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    குறுங்கை இரும் புலிக் கோள்வல் ஏற்றை,
    பூ நுதல் இரும்பிடி புலம்ப, தாக்கி,
    தாழ்நீர் நனந்தலைப் பெருகளிறு அடூஉம்
    கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
    யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து

    அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
    புரைஇல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
    ஆனாக் கௌவைத்துஆக,
    தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே! (நற். 36)

    இப்பாடல் தோழி கூற்றுப் பாடல் என்று கொள்ள இடமிருப்பதாகத் தெரியவில்லை. “தலைவனின் சொல்லை நம்பி யாம் எம் நலனை இழந்தோம்” (நற்.36) என்று வருந்தும் தலைவி “இவ்வூர் எதை இழந்தது இப்படி என்னைப் பழி கூறிக் கொண்டுள்ளது” (நற்.36) என்று புலம்புகிறாள். இது பாடலில் தெளிவாக உள்ளது. அப்படியிருக்க இது எவ்வாறு தோழி கூற்றாக அமையும் என்பது கேள்விக்குறி.

    ஆனால் “தலைவன் இரவுக்குறியிடத்தே வந்து நிற்க, அதனை அறிந்த தோழி அவன் விரைவில் வரைந்து கொள்ளுதல் வேண்டித் “தலைவனின் சொல்லை நம்பி யாம் எம் நலனை இழந்தோம். ஊர் அலர் தூற்றுகிறது. எம்மைப் போல் இந்த ஊரும் துயிலாது அமைய எதனை இழந்தது” என்று கூறு முகத்தால் “ஊர் உம்மைக் கண்டு கொள்ளும் எனவே வரைந்து கொள்க“ என்று வற்புறுத்துவதாக கூற்று விளக்கம் வலிந்து கூறுவதாகத் தோன்றுகிறது.

    தலைவனை அடைய இயலாது தவிக்கும் தலைவியின் உள்ளக் குமுறல் என்பது தான் இப்பாடல் தரும் பொருள். அப்படி வாசிக்க பொருள் தெளிவாகும் நிலையில் வலிந்து பொருள் கொள்ள வேண்டுமா என்பது சிந்திக்க வேண்டியதே. இவ்வாறு கூற்று முறையில் மாற்றம் கோரி நிற்கின்ற பாடல்கள் பல இந்நூலில் உள்ளன.

    கதைசொல்லியின் குரல் முன்வைக்கும் கருத்துகள் சில

     “பூவின் அன்ன நலம் புதிது உண்டு

    நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாமே

    நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி

    மாசு இல் கற்பின் மடவோள் குழவி

    பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு

    சேணும் எம்மொடு வந்த

    நாணும் விட்டோம் அலர்க இவ் ஊரே” (நற்.15)

    தலைவியின் நலத்தைக் களவில் நுகர்ந்தான் எனினும் வரைவுக்கு அவன் உடம்படவில்லை என்ற தன் மனவருத்தத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இப்பாடல். இது தலைவனால் ஏமாற்றப்பட்ட ஒரு தலைவியின் ஆதங்கத்தின் வெளிப்பாடு. அப்படி இருக்க இப்பாடல் தோழிக் கூறுவதாக இதற்கு கூற்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் ஆதங்கக் குரலாக வெளிப்படையாகத் தெரியும் இது ஆய்வுக்குரிய ஒன்று.

    அதே வேளையில் காதலிப்பதற்கு முன்பு ஆணின் பண்புகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற சிந்தனையையும் இக்குரல் முன்வைக்கிறது. பெண்ணைக் காதலித்து பின் கைவிடும் செயல் அக்காலத்தில் இருந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.

    அகநானூற்றுப் படலில் தோழியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லியின் குரல் இக்கருத்தை வெளிப்படையாகவே கூறுகிறது. “நெறி தவறிய அறமிலி ஒருவன் இளம்பெண் ஒருத்தியின் அழகிய பெண்மை நலத்தை கவர்ந்து கொண்டான். பின்னர் அவளை அறியேன் என்று அறவோர் முன்னர் அறமற்ற பொய்ச் சூளும் உரைத்தான். அவர் தம் சேர்க்கையை அறிந்தார் வாய்க் கேட்டறிந்த அவையத்தார் அவன் செய்த அடாச் செயலை உண்மையெனத் தெளிந்து தளிர்கள் கொண்ட பெரிய மரத்தின் கவர்த்த கிளையில் அவனை இருகக் கட்டி வைத்து அவன் தலையில் நீற்றினைப் பெய்தனர்” (அகம். 256.13 – 21).

    இப்பாடலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான மற்றொரு அம்சம் இந்தச் செய்தி பரத்தையருடன் தலைவன் நீராடிய போது எழுந்த அலருக்கு உவமையாகத் தோழியால் கூறப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மறுப்பவனுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பரத்தையர் எத்தனைப்பேருடன் வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். இது அக்கால சமூக முரண் பாட்டை நமக்கு உணர்த்துகிறது. வழக்கமாகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழாசிரியா்கள் கூறும் “ பண்டைத் தமிழர் வாழ்வு ஒருவனுக்கு ஒருத்தி என அமைந்திருந்தது“ என்ற கூற்றை இது மறுக்கிறது.

    இவ்வாறு பெண்ணின் ஆதங்கம் அகப்பாடல்கள் பலவற்றில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. அவ்வாறான பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.

    “காட்டில் உள்ள மயிலானது பாறையில் ஈன்ற முட்டைகளைக் கருங்குரங்கின் விளையாடும் குட்டிகள் உருட்டி விளையாடும் குன்றுகளையுடைய நாடன்” (குறு.38) என்று தலைவியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லி, பெண்ணின் (தலைவியின்) நெஞ்சம் பற்றி அறியாமல் அவளை ஒரு போகப்பொருளாக மட்டும் பார்க்கிறான் ஆண் (தலைவன்) என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. குரங்கு உயிருள்ள முட்டையை கல்லாக நினைத்து விளையாடுவது போல ஆண் பெண்ணின் உடலை நினைக்கிறான். தனக்கும் மனம் உண்டு. அதில் ஆசைகள், ஏக்கங்கள் உண்டு. அவற்றைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் உடலை மட்டும் விரும்புகின்ற ஆணின் சுயநல சிந்தனையைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பெண்ணின் குரல்.

    குரங்கின் பண்பை வைத்து சமூகத்தின் இன்னொரு பண்பினை வெளிப்படுத்துகிறது மற்றொரு பாடல். அப்பாடல் குறுந்தொகை 69 ஆம் பாடல். “இருளில் தாவுதலையுடைய ஆண்குரங்கு இறந்துவிட்டது. கணவனை இழந்து வருந்தும் பெண்குரங்கு கைம்மை வாழ்வினை விரும்பவில்லை. தலைவனைப் போன்ற தொழிலை இன்னும் கற்காத தன்குட்டியைச் சுற்றத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு உயரந்த மலை சிகரத்திலிருந்து விழுந்து இறந்துபோனது” (குறு.69) என்று வெளிப்படும் கதைசொல்லியின் குரல் கவனிக்கத்தக்கது. “தாவுதலைத் தன்குட்டி கற்கவில்லை.  ஆனால் அதன் தந்தை அதைக் கற்றிருந்தது. அதனால் அது இறந்தது. தான் கைம்மை நிலைக்குத் தள்ளப்பட்டதால் இனி நான் வாழ தயாரில்லை. எனவே என் குட்டியை அதன் தந்தையைப் போல் வளர்க்க வேண்டாம் என்று கூறி உயிர் துறக்கிறது.

    இப்படலில் கூறப்படும் கருங்குரங்கு என்பதை ஆணின் குறியீடாகக் கொள்ள இடமுள்ளது. இப்படி கொண்டால், மந்தி என்பது பெண்ணைக் குறிக்கிறது. குட்டி குழந்தையைக் குறிக்கிறது. இப்படிக் கொண்டால் இப்பாடல் ஆணால் கைவிடப்பட்ட பெண் தன் குழந்தையை நல்ல முறையில் (தந்தையைப் போல் அல்லாமல்) வளர்க்குமாறு கூறி இறந்துபோவது இயல்பாக நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. இவ்வாறு கணவனால் ஏமற்றப்பட்ட பெண்கள் வயிற்றிலிருந்த தம் குழந்தை பிறக்கும் வரை அவர்களுக்காக உயிர் வாழ்தனர் என்பதும், அக்ககுழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்த பின்னர் தம் உயிரைத் துரந்தனர் என்பதும் புலனாகிறது. இது அச்சமூகத்தில் நிலவிய ஒன்றாக விளங்கிக்கொள்ளமுடிகிறது.

    இது மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதை மற்றொரு குறுந்தொகைப் பாடலும் கூறுகிறது. “தலைவியின் நோய்க்குக் காரணம் குறிஞ்சி நிலத்தலைவன் தகுதியில்லாதவன் போலக் கட்டுவிச்சி இது தெய்வத்தால் வந்தது என்று தீமை பயக்கும் மொழிகளை உரைத்தாள்…. வலிய குட்டியின் தந்தையாகிய கடுவனும் அக்கொடிய தலைவனை அறியும். அது தன் கண்களால் கண்ட நிகழ்ச்சியைக் கண்டிலேன் எனப் பொய் கூறாது” (குறு.26) என்று தோழியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லி ஆணின் தகுதி- பெண்ணின் துயரம் பற்றிய பதிவுகளை நமக்குத் தருகிறது. இப்பாடலில் கூறுப்படும் ஆண் பெண்ணுக்குத் தகுதியில்லாதவன். அதனால் குறிசொல்லும் பெண் இது தெய்வத்தால் வந்தது என்று பொய் சொன்னாள் என்கிறது கதைசொல்லி. அடுத்து அவர்களுடைய காதலை அறிந்தது ஒரு குரங்கு. அதனால் “இவ்விருவரும் காதலித்தார்கள்“ என்று கூறமுடியாது. எனவே தலைவியின் வேதனை அவள் உள்ளத்தை வருத்திக்கொண்டுள்ளது. வருந்துவதைத் தவிர அவளால் வேரென்ன செய்யமுடியும்.

    ” கதைசொல்லியின் குரல் என்ற அடையாளத்தைக் கொண்டு சங்கப்பாடல்களை வாசிக்கும் போது இவ்வாறு பல புதிய செய்திகளை நாம் அறியமுடியும். அத்துடன் வரையறை செய்துள்ள கூற்று என்ற அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் பல உண்மைகளை மீட்டெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

    அடுத்து நாம் கவனிக்கவேண்டிய ஒன்று குழந்தை பேய் என்ற வெளிப்பாடுகள். “குழந்தையைக் கவர்ந்து கொண்ட பேயை என்ன செய்யமுடியும்? அதுவாக வந்து கொடுத்தால் தான் உண்டு. இல்லையென்றால் போனது போனதுதான் என்று விட்டு விடவேண்டியதுதான்“. அதைத்தவிர வேறேதும் செய்யமுடியாது என்று வெளிப்படும் கதைச்சொல்லியின் குரல் அகமரபை விட்டு வெளியேறிய நிலையைக் காட்டுவதாக உள்ளது. அதாவது இனி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று காதலனால்  ஏமாற்றப்பட்ட பெண்ணின் அவலத்தை இது புலப்படுத்துகிறது.

    தலைவனே! நேற்று உன்னோடு தங்கி உறங்கியவள்…. பூந்துகள் கமழும் கூந்தல் விளங்கிய வகையில் அசையுமாறும், இடையிற் கட்டிய உடை சரியவும், நெருங்கிய வளை ஒலிக்கவும் கண்ணால் பெயர்த்து நோக்கியபடி எமது தெருவில் சென்றாள்… அவள் உன்னுடைய தழுவலிலிருந்து நீங்கி எமது தெருவில் சென்றாள். அத்தகைய இளம் பருவமுடைய பரத்தையை நான் கண்டேன். அவள் உன்னோடு நீடு வாழ்வாளாக” (நற்.20) என்ற கதைசொல்லியின் குரல் இங்கு கவனிக்கத்தக்கது. தன்னை விட்டு நீங்கினாலும் பரவாயில்லை. நீ விரும்பிய – உன்னை விரும்பிய இளம் பெண்ணிடமாவது நீ சேர்ந்து வாழ் என்று தன்னைப் போன்ற வேறொரு பெண்ணுக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்யத் தயாரக இருக்கும் பெண்ணின் பண்பையும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளும் ஆணின் பண்பையும் விளக்குகிறது இப்பாடல். பாடல் இவ்வாறு பொருள் தர, “பரத்தையரோடு இருந்து மீண்டவன் ‘யாரையும் அறியேன்‘ என்று கூற, அதற்கு பதில் கூறுவதாக இப்பாடல் அமைகிறது என்றும் தோழி வாயில் மறுத்தது என்றும்” இதற்கு வகுக்கப்பட்டுள்ள வரையறை மறுபரிசீலனைக்கு உரியது.

    இவ்வாறு ”கதைசொல்லியின் குரல் என்ற அடையாளத்தைக் கொண்டு சங்கப்பாடல்களை வாசிக்கும் போது பாடலின் பின்புலத்திலுள்ள செய்திகளை நாம் அறியமுடியும். அத்துடன், வரையறை செய்துள்ள “கூற்று“ என்ற அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் மக்களின் வாழ்வியல் உளப்பாங்கை  மீட்டெடுக்க முடியும்.

    பயன்பட்ட நூல்கள்

    1. செயபால். முனைவர் இரா., அகநானூறு மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
    2. பாலசுப்பிரமணியன். முனைவர் கு. வெ., நற்றிணை மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
    3. மோகன். முனைவர் இரா., பத்துப்பாட்டு மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
    4. நாகராசன். முனைவர் வி., குறுந்தொகை மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
    5. சிவத்தம்பி. கா, தமிழின் கவிதையியல், 2007 குமரன் புத்தக இல்லம், சென்னை – 600 026.
    6. ………………… தொல்காப்பியமும் கவிதையியலும், 2007, குமரன் புத்தக இல்லம், சென்னை – 600 026 .
    7. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு),  2008, அடையாளம், 1205 / 1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி – 621 310.
    8. …………………, பழந்தமிழ் அமைப்பியல் மற்றும் குறியில் ஆய்வுகள், 2009 (முதல் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113.
    9. சந்திரன். முனைவர் ஆ., சங்கப்பாடல்களும் கதைசொல்லியின் குரலும், புதிய அவையம் மின்னிதழ்,  http://shcpub.edu.in/shc/publish_paper/?name=Puthiya+Aaviayam
    10. ……..  மாதொரு பாகன் கதைசொல்லியின் குரல், சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2016, volume 2 issue 5 பக் 45 –  48.
    11. முத்தையன் முனைவர் ஆ., நடனக்காரியான 35 வயது எழுத்தாளர், சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2016, volume 3 issue 2, பக் 36 – 39.
    12. ………….. மொழிதல் கோட்பாட்டு நோக்கில் பன்றிக்குட்டி, சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2018, volume5 issue 1 பக் 48 – 51
    Share
  • சார்ஜ் தீர்ந்து விட்டது

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்த் துறை

    தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)

    திருப்பத்தூர்

    வேலூர்

    முகத்தில் தெளித்த இளநீரைச் சுவைத்தவாறே கண்விழித்த இளைஞன் தங்கரதத்தில் சாய்ந்து கிடப்பதை உணரத் தவறினான். எதிரில் இருந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் மீண்டும் அவன் மயங்கிப் போனான்.

    யார் அவன்? ஏன் மயங்கினான் என்பதை அறிய நாம் அவனுடைய இறந்த காலத்திற்குப் போகத்தான் வேண்டும். வேறு வழி ஏது?

    அரபிக்கடலைக் கிழித்துக்கொண்டு கிளம்பிய சூரியனின் ஒளி மலைகளுக்கு இடையில் இருந்த அந்த ஊரில் படவில்லை. இதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் “அந்தப் பெரியவர்” தான் என்பதை ஊர் மக்கள் திடமாக நம்பினர். “மாடசாமி” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அந்தப் பெரியவர், ஊர் ஊராய் அலைந்து திரிந்து அந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் அவருடைய தலைமுடி நரைத்துப் போனதாகச் சிலர் பேசிக்கொண்டனர். அதனால் அவருக்கு இளம் வயதிலேயே “பெருசு” என்ற பட்டத்தைக் கொடுத்து  மகிழ்ந்தது அந்த ஊர். அந்தப் பட்டம் கொடுத்த ஏழுாவது நாள் அவருக்குப் பிறந்த நாள் வந்தது.

    அது அவரது எழுநூற்று ஐம்பதாவது பிறந்த நாள். அதனால் அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன. கொண்டாட்டம் கலைகட்டியது.

    அந்த ஊரில் வாழ்ந்த மனிதர்களில் அவர்தான் மூத்தவராய் இருந்ததால் அவரது பிறந்த நாளுக்கு வந்திருந்தவர்கள் அவரை வணங்கி மட்டுமே சென்றனர். அப்படி வணங்க வந்தவர்களில்  பேரிளம்பருவப் பெண் ஒருத்தி விநோதமாக நடந்துகொண்டாள். அவரது கழுத்தில் மங்கல நாண் ஒன்றை அணிவித்தாள். அது அந்த நிகழ்வை முன்னின்று நடத்திய உயரமான மனிதரை மிகவும் பாதிக்க, அவர் மாரடைப்பு வந்து சில காலத்திற்குப் பின்னர் இறந்து போனதாக அந்த ஊரில் உள்ளவர்கள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

    திடீரெனக் கொட்டித்தீர்த்த அடைமழையில் பெருக்கெடுத்தோடிய வெல்லத்தில் நனையாமல் கரையேறியவர்களில் ஒருவன்தான் மயங்கிக்கிடக்கும் அந்த இளைஞன். அவனுடைய மயக்கத்தைப் போக்க இளையவள் தொடர்ந்து முயன்று கொண்டிருந்த தருணத்தில் அவன் தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டான்.

    ஆற்றுவெள்ளத்தில் கொட்டும் மழையில் தள்ளாடி கரையடைந்த பெருங்கூட்டத்தில் பலர் சில நாட்களிலேயே இறந்த போனார்கள். தப்பிப் பிழைத்த ஒரு சிலர் நேய்வாய்ப்பட்டதால் இறந்தவர்களின் ஆயுளும் நோயுற்றவர்களின் வலிமையும் இவனுக்குச் செந்தமானது. அதனால் அவன் தன்னுடைய தலையெழுத்தை திருத்தி எழுதிக் கொண்டான். அவ்வாறு செய்ததால் அவனுக்கு எழுத்தன் என்ற பெயர் பிறந்தது. தன்னுடைய தலையெழுத்தை மாற்றிக்கொண்டது போல் மற்றவர்களின் தலையெழுத்தும் மாறவேண்டும் என்று உறங்காமல் தவம் கிடந்தான்.

    ஊர்ச்சுற்றச் சென்ற தலைவன் திரும்பி வருவான் என்று தென்னை மரத்தின் அடியில் ஒற்றைதக் காலில் கிடந்த அவளுடைய தவத்திற்குப் பலனாக அவளுக்குத் தங்கப்பதக்கம் ஒன்று கிடைத்தது. அதைத் தனக்குக் கிடைத்த பாக்கியமாக நினைத்த அவள் அவ்வப்போது மார்புடன் இருக்கமாக அனைத்து மகிழ்ந்தாள். தனிமை கிடைக்கும் போதெல்லாம் அது அவளுக்குத் துணையாக இருந்ததாய் அவள் தன்னுடைய சுயசரிதையில் பின்னால் எழுதியதைச் சிலர் மட்டுமே வாசித்திருந்தனர் என்பதுதான் துர்ப்பாக்கியம்.

    ஃ என்ற பதம் அ ஆ இ ஈ என்ற உயிர் எழுத்துக்களின் தனியன் என்று விளக்கிக்கொண்டிருந்த ஆசானின் வாய் இப்போது அம்மா, ஆடு, இலை, ஈ, என்று மெல்லிய குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.

    அப்போது இரவும் பகலும் மக்களின் தலையெழுத்து மாறவேண்டி உறங்காமல் கிடந்த எழுத்தருக்கு கைமேல் பலனாக ஏராளமான பன்றிகுட்டி குட்டிகள் பிறந்தன. அவற்றின் வருகையால் வீட்டின் தென்மேற்கு மூலையின் நிறம் மாறத்தொடங்கியது. அவற்றிற்கு வண்ணம் அடிக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனை அவருக்குத் தோன்றும் முன்னரே மஞ்சள் வண்ணத்தைத் தீட்டி அவருக்கு அதிர்ச்சியளித்தனர் அவருடைய விசுவாசிகள்.

    உறங்காமல் நீண்ட காலம் தவம் கிடந்த எழுத்தருக்கு அன்று ஏனோ முன்னிரவிலே உறக்கம் வந்தது. எனவே ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று படுக்கையறைக்குப் போனார். உறக்கம் களைந்து எழுந்தவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டின் நிறம் சிவந்திருந்து. எப்படி ஓர் இரவில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தது என்று அவர் யாரிடமும் கேட்கவில்லை. அன்று முதல் அவருடைய இடதுகால் நடக்க மறுத்துவிட்டது. அதன்பிறகு அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது.

    அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போதெல்லாம் வந்து நலன் விசாரித்துச் செல்பவர்களில் சிலர் அவரிடம் தனிமையில் உரையாடிச் செல்வதுண்டு. அப்படி வந்தவர்களில் ஒருத்தன் அவருடைய கைகளை இருகப்பற்றினான். அவனைப் பார்த்த எழுத்தரின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவராய் அருகில் இருந்த இளம்வாரிசு சொன்னான் “இவர் நம்ம பக்கத்து ஊரின் தலைவர் வீட்டிற்குப் புதிதாக குடிவந்தவர் என்று”

    அதைக் கேட்டவுடன் “வாழைப்பழத்தில் ஊசியை குத்திவிட்டுப் பின்னர் அதைச் சுவைப்பது” என்று முடிவெடுத்து நிற்பவர்களுக்கு மத்தியில், காதுகளைப் பொத்திக்கொண்டு  மூன்று கால்களுடன் ஊர் ஊராய்ச் சென்றுகொண்டிருந்த உயரமான தேகம் பளிச்சென நெற்றியில்  தோன்றி மறைய, விழாமல் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு சில பற்களைக் காட்டிச் சிறித்தார் எழுத்தர்.  நெடுநேரம் ஏதேதோ பேசிய இளைஞன் விடைபெற்றுச் சென்றான்.  தாங்கித் தாங்கி நடந்துசென்ற இளைஞனின் கால்களை கவனித்த எழுத்தரின் பார்வை அவருடைய கால்கள் மீது திரும்பியது.

    தங்கப் பதக்கம் பளபளப்புடன் இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த இளையவளுக்குப் ஆயிரமாவது பிறந்தாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

    அதை விமரிசையாக எவ்வாறு கொண்டாடலாம்? என்ற கேள்வி எழுந்தபோது  யோசனைகள் பல முளைக்கத் தொடங்கின. இப்படிக் கொண்டாடலாம்! அப்படி கொண்டாடலாம்! என்ற கடிவாளங்கள் இறுதியாக மௌனத்தில் அமிழ்ந்தன.

    இளநீர் விற்பதில் இருந்து இளையவளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களில் சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டு எதையும் கேட்காமல் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

    டீக்கடையிலும் இந்த விவாதம் பற்றி எரிந்தது. “சரித்திரத்தில் இதுவரை இப்படி ஒருவிழா கொண்டாடப்படவில்லை” என்ற குரல் அதிர்ந்து ஒலித்தது. அது டீ குடிக்க வந்தவர்களின் காதுகளைச் செவிடாக்கியது.

    “இளையவளின் ஆயிரமாவது  பிறந்த நாள் சரித்திரம் அறியாதவாறு தடபுடலாய்க்  கொண்டாடப்படும்” என்று  ஊரே எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது. அப்போதுவரை அவளுடைய படுக்கையறையை அலங்கரித்து வந்த தங்கப்பதக்கம் திடீரென மண்ணாக மாறியது. அதைப் பார்த்த அவள் அதிர்ச்சியடைந்தாள். இமைகள் இணைந்தன. மயங்கிக் குப்புறவிழுந்தாள். மயக்கம் தெளிந்து கண்விழித்தவள் மீண்டும் மயங்கிப்போனாள். இரண்டாம் முறையாகக் கண்விழித்தபோது மருத்துவரின் குரல் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள்.

    அதன் பிறகு மருத்துவமனைக்கு அடிக்கடி ரகசியமாகப் போய் வந்துக்கொண்டிருந்தாள். அதற்கான காரணம் அவளுடைய வீட்டிலிருந்த வேலைக்காரிக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தாள். ஆனால் அவளுக்குத் தெரிந்திருந்தது என்பதை அந்த வீட்டில் இருந்த இரு கண்கள் கண்டுபிடித்திருந்தன. அதற்கு வாய் இல்லாததால் அதை யாருக்கும் அது சொல்லவில்லை.

    ஆயிரத்தொன்றாவது பிறந்தநாளுக்கு ஒருமாதத்திற்கு முன்னர் இளையவள் கருவுற்றிருப்பதை அவளுடைய வயிறு வெளிவுலகிற்கு வாய்த்திறந்து சொன்னது.

    அவளது வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்பதை அவளுடைய வேலைக் காரி எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டாள். பிறக்க இருப்பது எழுபத்தைந்தாவது குழந்தையாக இருந்தாலும் அதுதான் அவளுக்குப் பிறக்க இருக்கும் முதல் ஆண் குழந்தை என்பது இளையவளின் காதுகளுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.

    அந்த ஊரில் எழுபத்தைந்து குழந்தைகளை ஆயிரமாண்டுகளுக்குப் பிறகுப் பெறப்போகும் புண்ணியம் அவளுக்கு மட்டுமே வாய்த்திருப்பதாகப் பஞ்சாங்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டிருப்பதாக ஒரு செய்தி மக்களிடம் புயலாய்ப் பரவியது.

    தனிமையில் இருந்த இளையவளுக்கு  முதல் பிரசவத்தைப் பற்றிய நினைவுகள் அரும்ப ஆரம்பித்தன.

     இளநீர் விற்ற பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கேக் வாங்க கடைக்குப் போய் வெறுங்கையுடன் சோகமாக வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த அவளுடைய முகம் பிரகாசமானது. அவள் பிரமித்துப் போனாள். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளுடைய வீட்டின் அழகுதான் அவளுடைய அந்த பிரமிப்பிற்குக் காரணம்.

    வீட்டின் உள்ளே நுழைந்தபோது “இது கற்பனை இல்லையே” என்பதை நம்ப கொஞ்ச நேரம் அவளுக்குத் தேவைப்பட்டது.

    பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்குத் தேவையான அனைத்தும் அவள் நினைத்துப் பார்ப்பதற்கும் மேலாக அங்கே குவிக்கப்பட்டிருந்தன. அவள் கண்களின் தேடலில் சிக்கிய இளைஞன்  கொடுத்த பரிசு தான் பத்துமாதங்கள் கழித்து அழகான பெண் குழந்தையாய்ப்  பிறந்தது.

    கொஞ்ச நாள் கழித்து தன்னுடைய மாளிகையின் மேல் தளத்தில் அவளைக் குடிவைத்தான் அந்த இளைஞன். பின்னர் திடீரென ஒரு நாள் அவன் காணாமல் போய்விட அவனைத் தேடுவதின் அவசியம் ஒரு கட்டத்தில் இளையவளுக்கு ஏற்படாமல் போனது.

    அந்தக் கட்டத்தில் அந்த இளைஞன் இல்லை. தன் நினைவிலும் அவன் இல்லை என்பதை இரவில் மட்டுமே அவ்வப்போது உணர ஆரம்பித்தாள் அவள். அவ்வாறான வேளைகளில்  “மண்ணில் தனக்குச் சொர்க்கத்தை உருவாக்கித் தந்துவிட்டு வானுலகில் நிரந்தரமாய் அவன் தங்கிவிட்டதாய்” தன் மனதைச் சமாதானம் படுத்திக்கொள்வாள்.

    அவனைப் போல் தானும் வானுலகம் போக ஏற்பாடுகள் நடைபெறுவதாக அவளுக்குச் செய்தி வானிலிருந்து வந்தது.

    அப்போதுதான் அவளுக்கு எழுபத்தைந்தாவது கரு உருவான விசயம் காதுகளுக்கு வந்துசேர்ந்தது. செய்வதறியாது திகைத்துப் போனாள்.

    நாள் நெருங்கிக் கொண்டிருந்ததை அவளது உடல் உணர்த்தியது. நாட்கள் நிமிடங்களாகச் சுருங்கின.

    ”பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அவசர அவசரமாய்ப் பறந்தாள்” என்ற செய்தி பரவியது. ஊரே ஆவலாய் எதிர்பார்த்து நின்றது. ஆண் குழந்தை பிறக்க வேண்டுதல்கள் முளைத்தன புதுப்புது வடிவங்களில்.

    “இன்னும் சற்று நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த காற்று வரும். அப்பொழுது மழை பெய்யும். இதுவெல்லாம் நடந்தால் நான்கு கால்கள், நான்கு கைகள், நான்கு கண்கள், இரண்டு தலைகள், இரண்டு வாய்கள், நான்கு மூக்குத்துவாரங்கள் கொண்ட ஒரு குழந்தை இளையவளுக்குப் பிறக்கும்” என்று வானில் இருந்து அசரீரி ஒலித்தது.

    அதைக் கேட்ட மக்கள் மழையில் குடையைத் தூக்கியெறிந்து ஆனந்தக் குளியலை அனுபவித்தனர். பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்க மருத்துமனையின் வாயிலில் தவம் கிடந்தனர். அவர்களின் செவிமடல்களில் மோதித்தெரித்த தண்ணீர் துளிகள் பிரவாகமெடுத்து வெள்ளமாய் ஓடத்தொடங்கியது.

    பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர் பெண்ணே அல்லள். அவன் ஓர் ஆண்மகன்” என்று துள்ளி குதித்த சொற்கள். பிரவாகத்துச்செல்லும் செல்லும் வெள்ளத்தின் வேகத்தில் அமுங்கிப்போனது அடயாளமின்றி.

    அந்த வர்த்தைகளைக் கேட்ட உழவன் “போங்கடா புண்ணாக்குகளா…….” என்று தலையில் அடித்தவாறே மாட்டின் கயிற்றை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

    குறிப்பு: லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்து விட்டதால் சொற்கள் இத்துடன் நிற்கின்றன. தொழில் நுட்பக் கோளாறுக்காக வருந்துகிறேன். ஆனால் நீங்கள் தொடரலாம்.

    நன்றி.

    வணக்கம்.

    .

    Share
  • அறிவழகனும் அவனது கூட்டாளிகளும்

    -முனைவர் ஆ. சந்திரன் 

    விண்ணை முட்டிநின்றது மலை.  அந்த மலையிலிருந்துதான் பேய் வரும் என்று பெரியவர் கூறியிருந்தார்.  அவன் அந்த மலையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் தென்படவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலால் பல நாட்கள் அவ்வாறு செய்தான்.

    ஆனால் அவனது முயற்சி தோற்றுக்கொண்டே இருந்தது. அதனால் அவனுக்குப் பெரியவர் கூறியதன் மீது சந்தேகம் வந்தது. ஒரு வேளை பேய் பற்றிக் கூறியது பொய்யாக இருக்குமோ என்று நினைத்தான். அவரிடம் அது பற்றி எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

    அப்போது அவனது கூட்டாளிகள் வந்தார்கள். தன்னுடைய எண்ணத்தை அவர்களிடம் கூறினான் அறிவழகன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.

    “சரி சரி சிரிச்சது போதும் வாங்கடா விளையாடப் போகலாம்” என்றான் அந்த கூட்டத்திலேயே உயரமாக இருந்த ஒருவன். அவனை எல்லோரும் வளர்ந்துகெட்டவன் என்றுதான் அழைப்பார்கள். அவன்தான் அவர்களில் வயதில் மூத்தவன்.

    பக்கத்தில் இருந்த மைதானத்தில் கபடி விளையாட ஆரம்பித்தார்கள்.

    அப்போது அந்த வழியாக அந்தப் பெரியவர் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் ஸ்ரீ ஸ்ரீ பால ராம கங்க சிங்கர். அவர் மீது அந்த ஊரில் உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. காரணம் அவர்தான் அந்த கிராமத்தில் அதிகம் படித்தவர். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவார்.

    அவரைப் பார்த்ததும் அவரிடமாவது இந்த சந்தேகத்தைக் கேட்கலாமா? என்று அறிவழகன் யோசித்தான்.

    அதைப் புரிந்துகொண்ட கூட்டாளிகளில் ஒருவனான அந்த வளர்ந்துகெட்டவன் அதைக் கேட்டேவிட்டான். ஐயா! கொல்லிக்கட்டி பேய்னு ஒன்னு இருக்கா? என்று.

    கொல்லிக்கட்டி பேயா? என்று வாய்ப்பிளந்த அவர், ”ஆமாம்! முன்னாடி இருந்தது. நான் என்னுடைய சின்ன வயசில பார்த்திருக்கிறேன். வெள்ளையாக இருக்கும். அதோட தலை வானத்திலும் கால்கள் பூமியிலும் இருக்கும். ஆனால் நம்ம ஊருக்கு மின்சாரம் வந்ததில் இருந்து அது வருவதில்லை” என்று பெருமூச்சு விட்டவர் தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    இரவு மீண்டும் புலர்ந்தது.

    அன்றும் வழக்கம் போல நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தார்கள் அறிவழகனும் அவனுடைய கூட்டாளிகளும்.

    மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் அறிவழகன். அவனுக்கு நட்சத்திரங்களை எண்ணுவதில் ஆர்வம் அதிகம். அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய கூட்டாளிகளுக்கும் அப்படித்தான். சில  நேரங்களில் யார் அதிகமாக நட்சத்திரங்களை எண்ணுகிறோம் பார்க்கலாம் என்று அவர்களுக்குள் போட்டி வரும்.

    இரவு ஏழு மணியளவில் இம்மாதிரியான வாதம் துவங்கும். அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார்கள். மறுநாள் மீண்டும் அது தொடரும். அந்த  கிராமத்துச் சிறுவர்களின் வாடிக்கை அது.

    எட்டொன்பது வீடுகளைக் கொண்ட அந்தக் கிராமத்தில் நான்கு பிரதான தெருக்கள் இருந்தன. அவற்றில் மூன்று தெருக்கள் கிழக்கு மேற்காக இருந்தன. அவற்றை இணைப்பது போல் அமைந்திருந்தது நான்காவது தெருவான சங்கத் தெரு. வாடைக் காற்றை வரவேற்கும் அத்தெருவில்தான் அறிவழகனின் வீடு இருந்தது.

    அந்தத் தெருவில் வசிப்பவர்கள் இரவில் பெரும்பாலும் வாயிலுக்கு வெளியில் பாய்விரித்துப் படுத்துறங்குவது வழக்கம். இந்த வழக்கம் எவ்வளவு காலமாக உள்ளது என்ற கேள்விக்குப் பதில் யாருக்கும் தெரியாது. யாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பவில்லை.

    அன்று வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே பாய்போட்டுப் படுக்கப்போனான் அறிவழகன். அவனுடைய கூட்டாளிகள் சிலரும் அவனுடன் இருந்தார்கள். அப்போது தான் அதைப் பற்றி அவர்கள் முதல் முறையாகக் கேட்டார்கள்.

    கொல்லிக்கட்டி பேய். அது இரவு வேளையில் நடமாடும். வானளவு உயரத்திற்கு அது இருக்கும். வெள்ளையாக இருக்கும். அது நடந்துவரும் போது “ஜல் ஜல்” என்று சத்தம் வரும் என்று பேய் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர்.

    அவர் பெயர் ஆனந்தன். அவர் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தார்.

    சிறுவர்கள் குதூகலத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மின்விளக்கின் ஒளியில் அவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி நன்றாகத் தெரிந்தது.

    அவர் தொடர்ந்தார். ”தான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் தன்னுடைய அப்பாவுடன் வயலுக்குச் செல்லும்போதுதான் முதல் முறையாக அப்பேயைக் கண்டதாகவும், அப்போது சிலீஸ்! சிலீஸ்! என்று அவருடைய அப்பா கூற அப்பேய் அவர்களை ஒன்றும் செய்யாமல் போய்விட்டதாகவும்” அவர் கூறினார்.

    அக்கதையைக் கேட்ட சிறுவர்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அறிவழகனுக்கு அது சுவாரசியமாக இருந்தது. கொல்லிக்கட்டிப் பேயைப் பார்க்க அவன் மனம் ஆவல் கொண்டது. பெரியவர் கூறிய வடிவம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்தப் பேய் இப்போதும் நடமாடிக்கொண்டுள்ளதா? என்று பெரியவரிடம் கேட்கலாம் என்று அவன் நினைத்தான்.

    ஆனால் ஏனோ கேட்காமல் விட்டுவிட்டான்.

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்

    Share
  • எழுதப்படாத பக்கங்களை வாசிக்கத் தொடங்கியவன்

    -முனைவர் ஆ. சந்திரன்

    “ஆகாயத்திலிருந்து விழும் தீப்பந்தங்கள் அனைத்தையும் தன்னுடைய வாய்க்குள் போட்டுக் கொள்ளும்” என்பதை முன்னரே அறிந்தவர்கள்  போல இருந்தன அவர்களுடைய செயல்பாடுகள். அதனால் தானோ என்னவோ தங்களுடைய முன்னோர்கள் பற்றி இப்படி எழுதியிருந்தனர். “கூகுலில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்கள் போன்ற கட்டுமஸ்தான உடல்வாகு. யானைகளைத் தலைதெறிக்க புறமுதுகிட்டு ஓடவிடும் வலிமையான வீரர்கள். தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாக வழங்குவதே தம்முடைய நோக்கம் என்ற வாசகங்களின் மேல் வீற்றிருக்கும் மன்னன்” என்று.  இந்த உண்மை மன்னனில் இருந்து வெளியேறிய போது, அழிவிலிருந்து மீண்ட அந்தத் தேசம் புது சரித்திரம் எழுதும் வேலை தொடங்கியிருந்தது. புதிய மன்னனின் அரசாணையின் பேரில் அது தொடங்கப்பட்டிருந்தது என்பது மிகமுக்கியமான ஒன்று. அவ்வாறு எழுதப்பட்ட புதிய சரித்திரத்தை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப மறுத்தவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் கூட ஊற்றப்பட்டது. அந்த விஷத்தின் சுவை தெரியாமல் இருக்க ஒரு சிலருக்கு மட்டும் ஆம்லெட் சைடிஸாகப் பெறும் சிறப்புச் சலுகை இருந்தது. சிதைவிலிருந்து உருவான நகரின் எல்லையில் அமைந்திருந்த அடர்ந்த வனப்பகுதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் எச்சங்கள் பதுங்கி இருந்தன. அம்மண்ணின் மேல் தவழ்ந்து விளையாட்டுப் பழகி வளர்ந்ததால், அவற்றின் மீது அவனுக்கு இயற்கையாகவே ஒரு பிடிப்பு இருந்தது. “பெயரின் முன் ஒட்டிக்கொண்டிருந்த தாயின் நினைவுகளை அழிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்குப் புதுப் பெயருடன் மெல்ல பட்டாணியும் கிடைக்கும்” என்று உத்தரவாதம் வீதிகள் தோறும் கால்முளைத்து நடக்க ஆரம்பித்தன. அவற்றின் மீது ஏறியவர்களின் பார்வையில் கலிஸ்டட்டிட்  பரிதாபமாகக் காட்சியளித்தான். அவனுடைய வாய் கலிஸ்! கலிஸ்! என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அது அவனுடைய தாயின் பெயர்.

    வேகமாக வலப்பக்கமாக ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு எதிராக நடைபோட ஆரம்பித்தன பாபிணகன் கால்கள். அதனால் அவனது காலடிச் சுவடுகள் அந்நாட்டில் தனியாகத் தெரிந்தன. அந்தக் கால்களைத் தொடர்ந்து தயக்கத்துடன் சிலர் நடக்க ஆரம்பித்தனர். அப்படி நடந்தவர்களுக்கு ஒரு தலைவன் திடீரெனக் கிடைத்தான். அதனால் அவனைப் பின்தொடர்வதில் அம்மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது. அதனால் அவர்களின் நடையின் வேகம் அதிகரித்தது. மக்களின் நடைக்கு ஏற்ப அவனுடைய தலைவனுக்குக் விலைமதிப்பற்ற பொற்காசுகள் பரிசாகக் கிடைத்தன. பரிசு கொடுத்தவரின் முகம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டதைத் தலைவனின் ஒன்று விட்ட தம்பியின் மகன் கண்டு கண்பிடித்த மறுநாள் அதிகாலையில் இறந்து போனான். அவன் இறந்த செய்தி மக்களின் தலைவனான திடதத்தனின் கையெழுத்துடன் அறிவிக்கப்பட்டது. “என் உயிருக்கும் மேலான இளவலின் மரணம் இயற்கையானது. நெடுநாள் வயிற்றுவலியால் அவன் துடித்துக்கொண்டிருந்தான் என்பது நீங்கள் அறிந்த ஒன்றே! வலிதாங்காமல் துடித்துக்கொண்டிருந்த அவனுடைய உயிரை அதிகாலை 3.33 மணிக்கு  எடுத்துக்கொண்டு வயிற்று வலி பறந்து போனதை நானே நேரில் பார்த்தேன்” என்று  அந்த அறிவிப்பு அமைந்திருந்தது. வாசகத்தின் கீழ், தலைவன் தன்னுடைய கட்டைவிரலால் கிறுக்கியிருந்தார்.  அந்தக் கிறுக்கலின் உள்ளே பதுங்கியிருந்தது ஒரு இராஜ இரகசியம். அது “தலைவனின் நூறாவது மகனின் ஆறாவது வாரிசுக்கு மட்டும் புரிய வேண்டும் என்று டிசைன் செய்யப்பட்டிருந்து. அதன் குறிப்பு ஒன்றினைப் பேழையில் மறைத்து வைத்துவிட்டு அத்தலைவன் தன்னுடைய இறுதி மூச்சினைக் கடைசியாக ஒருமுறை வேகமாக இழுத்துவிட்டான். அவன் இறந்த இரண்டாவது சகாப்பத்தின் கடைசி நாள் நள்ளிரவில் கீழ்வானில் ஓர் ஒளிவட்டம் தோன்றியது. முழுநிலவு நாளில் தோன்றிய அதை மக்கள் இரவெல்லாம் கண்விழித்துக் காத்திருந்து பார்த்து மகிழ்ந்தனர். வானில் அன்று வழக்கத்திற்கு மாறாக ஒன்பது கோள்களும் ஒரு புள்ளியில் வந்துநின்று தம்முடைய மகிழ்ச்சியைக் கைக்லுக்கி பரிமாறிக்கொண்டிருந்தன.  அப்போது “இந்த சாம்ராஜ்ஜியத்தின் மகாசக்கரவத்தி நான்” என்று முடிசூட்டி மகிழ்ந்த முதல் மன்னனின் வாழ்க்கை முழுமை அடைந்தது. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த மகாசக்கரவத்தியின் ஏகபத்தினி அன்று ஓர் பாலகனைப் பிரசவித்தாள். ஊரே அதைக் கொண்டாட ஆரம்பித்தது.

    பாதியளவு நிரம்பியிருந்த குளத்தின் மையத்தில் வீசியெறிந்த கல்லை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த முதியவரின் நரை தண்ணீரின் மெல்லிய அலைகளுக்கிடையே நன்றாகவே தெரிந்தது. அப்போது மழைக்காலமாக இல்லாவிட்டாலும் அக்குளத்தில் மட்டும் தண்ணீர் பாதிக்குமேல் இருந்தது. மழைக்குப் புறம்பான காலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழைநீரும் அதில் கலந்திருந்ததால் தெளிவாய் இருந்தது. வட்ட வடிவிலான அலைகள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருந்தன. அவரது பார்வை மையத்திலிருந்து தன்னுடய காலடியைத் தொட விரையும் அலைகளுடன் பயணித்து திரும்புவதற்குள் கல்லெறிந்த இடம் அடையாளம் இன்றிப் போனது. அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், தன்னுடைய நெஞ்சில் இருந்த சுமை விலகியதாய் உணர்ந்தார். அப்போது அவருக்குப் பிறந்த புதுத்தெம்பு அவரை தெற்கு நோக்கி இழுத்தது. எதையோ சாதித்தவர்போல் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தார். தன்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தபோது அவருடைய ஆறாவது விரலில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

    அறிமுகமில்லாத ஆனால் தன்முன்னோர்கள் வாழும் தேசத்தில்தான் வாழ்கிறேன் என்பதை உணரும் போது அவனுக்கு வயது 99 ஆகியிருந்தது.  என்றாலும், அவனுடைய நடையில் அது தெரியாததில் வியப்பொன்றும் இல்லை. அது அந்நிலத்தின் நியதிகளில் ஒன்று. “யுகப் புதல்வன் அந்நிலத்திற்குக் கொடுத்திருந்த வரம் அது” என்பதை மக்கள் அறிந்துகொண்டது முதல் மூப்பின் வியர்வைத்துளிகள் அம்மண்ணில் சிந்துவது முற்றிலும் நின்று போயிற்று. வேண்டிய இடத்தின் வரைபடம் அவர்கள் கண்முன் தோன்றும். அதனால் அவர்களுடைய கால்களுக்கு வேலையில்லாமல் போனது. சிலர் பயனற்ற அந்த கால்களை வெட்டி மியூசியத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஆரம்பித்தனர். அப்படி பாதுகாத்தவற்றில் சில இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் நடைப் பயிற்சியில் ஈடுபட்டன. குறுக்கும் நெடுக்கமாக மண்புழுக்கள் போல் நடக்கும் அவற்றினைப் புகைப்படம் எடுத்தவனின் கைகள் மீது பரிசு மழை பெய்தது. அவற்றில் இருந்து தப்பிக்க அவன் அடிக்கடி குகைக்குள் ஓட ஆரம்பித்தான். அவ்வாறு ஓடிக்கொண்டிருந்த ஒருநாள் அவன் தோள் மீது அவனுக்குத் தெரியாமல் வானரம் ஒன்று தொற்றிக் கொண்டது. அதன் பிறகு அவன் அடிக்கடித்  தண்ணீருக்கு அருகிலிருந்த குளத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். தாகம் தணிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவன் முகம் தாமரை போல் மலர ஆரம்பித்தது. அதை அவனுடைய கண்கள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றின.

    10.30 மணிக்கு வந்தடைவேன் என்று கங்கன் முன்கூட்டியே அனுப்பிய குறுஞ்செய்தி பொய்க்கவில்லை. ஆனால் வெறும் 20 நிமிடங்கள் மட்டும்தான் கால தாமதமானது. ஆதலால்தான் அவன் ரொம்ப கூலாக இருந்தான். ஒரு மணிநேரம் காத்திருப்போம். அதற்குள் வரவில்லை என்றால் பிறகு என்ன செய்வதென்று காத்திருந்தவர்களுக்கு, ஒன்றரை மணிநேரம் தேவைப்பட்டது. தங்கள் முடிவை மாற்றாமல் இருப்பதற்கு. அதற்குக் காரணம் கங்கன் நாற்பது நிமிடங்கள் முன்னரே வந்துவிட்டதுதான் என்றும் நினைக்கலாம். அல்லது அவர்களுடைய பொறுமைக்குப் பொற்காசுகளும் தரலாம். கிளம்பலாம் என்று முடிவெடுத்தால், கிளம்பவேண்டியது தானே! என்றும் நினைக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. முடிந்த ஒன்றின் தொடர்ச்சியா, தொடர்ச்சியின் முடிவா? என்ற கேள்விகளும் எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு. “வயது ஆகிவிட்டாலே இப்படித்தான். எதையும் ஞாபகத்ததுல வைக்க முடியருதில்ல” என்ற முணுமுணுப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதில் பெரிய மன வருத்தம் ஏற்படவில்லை. என்றாலும், நாடு மக்கள் பழக்க வழக்கம் என எல்லாம் அவனுக்குப் பழகியதாக இருந்தாலும், ஏனோ அன்று புதிதாகத் தோன்றியது. அதனால் அவன் தன்னுடைய ஊருக்கே திரும்பிப்போக முடிவுசெய்தான்.

    ராப்பகல் சந்திப்பு. கைத்தடியுடன் ரயிலில் இருந்து இறங்கிய பெரியவருக்கு மாலை மரியாதை மலிந்தன. அவருடைய கால்களின் நிழல்கள் ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பின்படி அந்தப் படிக்கட்டுகளைக் கடந்து சென்றன.  நல்ல மேய்ப்பனாய் இருந்து புகழ்பெற்றதால் வானில் இருந்து நேரடியாய் பூமிக்கு வந்தது ஆயிரம் ஆண்டுகளில் அவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப் பரிசாகக் கிடைத்திருந்தது. அதனால் அவன் அந்த கூட்டத்தின் ஒப்பற்ற நாயகனாய் மாறினான். மக்களின் துயரங்களைக் காதில் வாங்கி அவற்றை வானதிற்கு அப்பால் வீசியெறிந்து கொண்டிருந்தபோது தடியுடன் வந்த பெரியவரின் நிழல் காத்திருந்து இரகசியமாக களவில் மகிழ்ந்ததை அந்த ஊரில் இருந்த சிலருடைய வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அவை பெரியவரின் கைதடியை வாங்கிக்கொண்டதும் அமைதியடைந்தது.

    ஜிலேப்பியைப் பிச்சிப்போட்டது போல் தலையெழுத்து இருந்ததைப் பற்றிய நினைவுகள் ஏதும் அவர்களிடம் இப்போது இருக்கவில்லை. எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று வரலாற்றை அவர்களின் குழந்தைகளும் நன்கு அறிந்திருந்தனர். ரத்தவெள்ளம் அடிக்கடி ஊரின் வழியாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து ஏன் இந்த வாழ்க்கை நமக்கு என்று வேதனையுடன் இருந்த போதுதான் அவர்களின் வேதனைத் துடைக்கும் மருந்தாய் அவர்களிடம் வந்து சேர்ந்தான் அந்தப் புனிதன். அவனுடைய பயணத்தின் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பித்தது என்பதைப் பற்றிய  நினைவு அவனிடம் இருக்கவில்லை. ஆனால் அவன் போய்ச்சேரும் இலக்கைப் பற்றிய வரைபடத்தைத் தன்னுடைய நெற்றியில் வரைந்துவைத்திருந்தான். அவனுடைய வருகைக்குப் பிறகு ரத்த வெள்ளம் ஊரை நோக்கி வருவது முற்றிலும் நின்று போனது. மக்கள் ஆற்றில் நீச்சல் பழகி மகிழ்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.

    ஐந்து சகோதரர்களைத் துரத்தியடித்த பூரிப்பு நெடுநேரம் அவர்களுக்கு நீடிக்கவில்லை. ஆசை யாரை விட்டது.  அவர்களை விட்டு வைக்க. மூத்தவனை இளையவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு இருக்கும் சொத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ஆனால் விதி வேறொரு கணக்கை கையில் வைத்திருந்தது என்பது துரத்தப்பட்ட சகோரதரர்களுக்குத் தெரிந்த போதும் அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. காலக்கணக்கில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பாதையில் பயணிப்பதையே விரும்பினார்கள். அதனால் அவர்களின் வாரிசுகளில் பலர்  தங்களுடைய உருவத்தை மாற்றிக்கொண்டால் என்ன? என நினைத்தனர். அப்படி மாற்றிக்கொண்டவர்களில் பலர் பின்னாளில் சரித்திரத்தில் தங்களுடைய பெயர் பொறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.

    இரவின் இருளில் மறைந்து வாழ்ந்து பழகியதால் எல்லாம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததில் வியப்பில்லை. ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளக் கூடாதென்பதில் கவனமாக இருந்தார்கள். அதனால்  கோழியை அறுத்து அதன் முட்டையைக் கரியுடன் கலந்து கள் குடித்து உண்டான போதயை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்தார்கள். தங்களைப் பற்றிய உண்மையை யாரும் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர்கள் பூமியில் இரத்தத்தை அவ்வப்போது தெளிப்பார்கள். சில வேளை அவர்களே ஆடுகளாக வேடமிட்டும் அலைவார்கள். அப்போது தானே அவர்களுக்கு நல்ல மேய்ப்பன் கிடைப்பான். அவனை வைத்து அவர்கள் விளையாட்டைத் தொடரமுடியும். அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இரண்டு பெரிய கண்களைத் தயாரித்து வானில் உலவவிட்டு மகிழ்ந்தார்கள். அதைப் பார்த்து மக்கள் அங்கே பார் இரண்டு கண்கள் என்று அதிசயத்து நின்றனர். ஆனால் உண்மையில் அவை இரண்டு கண்கள் அல்ல. ஏன் அவை கண்களே அல்ல. என்பதைக் கண்டு பிடித்தான் வள்ளரிஸ். அதனால் அவனுடைய உடல் இருட்டறையில் அடைக்க சத்தமில்லாமல் ஏற்பாடு நடந்தது. யார் அவனை இருட்டறையில் அடைத்தார்கள்? என்ற செய்தியும் இருட்டிலே அடைந்து கிடந்ததுதான் வேடிக்கை என்றாலும், அதையும் அறிந்துகொண்டவனின் கண்களும் இருளில் அடைக்கப்பட்டது வியப்புதான். அவ்வாறு இருட்டில் அடைப்பட்டுக்கிடந்தாலும் அவற்றிற்கு அந்த ஒற்றைக் கண் தெளிவாகத் தெரிந்தது. அதை அவனால் நன்றாக இப்பொழுதும் பார்க்க முடிந்தது. அப்படி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் கண்ணில் இருந்து சில உருவங்கள் ஓசையின்றி நடைபோட்டுக்கொண்டிருந்தன. அவை அவனுக்கு வியப்பைத் தரவில்லை என்றாலும் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். இருளின் நீளத்திற்கு உருவங்கள் தொடர்ந்தன …….

    வேகமாக அடுத்தப் பக்கத்தைப் புரட்டிய ஜெயந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பக்கத்தில் எதுவும் எழுதப்படவில்லை. அந்த புத்தகத்தின் அடுத்தடுத்தப் பக்கங்களும் அவ்வாறே வெறுமையாக இருந்தன.  பாதிக்குமேல் ஒன்றும் எழுதப்படாத அட்டை கிழிந்திருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு விரக்தியுடன் தூங்கப்போனான். படுக்கையறையில் வெகுநேரம் உறக்கம் இல்லாமல் தவித்தவனின் கண்களை உறக்கம் மெல்ல தழுவ முயன்றது. அப்போது அவனுடைய கண்கள் எதை எதையோ பார்க்கத் தொடங்கின.

    பக்கங்களைத் திருப்பி வாசிக்க ஆரம்பித்தான்…

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூர், வேலூர்

    Share
  • தோலுரிக்கும் வேலை!

    -முனைவர் ஆ.சந்திரன்

    மெரினா கடற்கரையைக் வங்கக்கடல் விழுங்க முயன்றபோது அந்த தொழிற்சாலையை உலகமயமாக்குவதாக அறிவித்தார்கள். அப்படிச் செய்வதால் அந்நிறுவனத்திற்கு உலகம் முழுதும் கிளைகள் உருவாகும் என்ற அலர் காற்றில் மிக வேகமாகப் பரவியது. அந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தவர்களில் நம்பியும் ஒருவன். அவனுக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாகத் தோன்றியது. அவனைப் போல் பலர் அவ்வாறு நினைத்திருந்தார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.

    மெதுவாக நடக்கும் மக்கள் வாழும் ஊர். அங்குதான் அந்த தொழிற்சாலை வெகுகாலமாக நேர்மையாகச் செயல்பட்டு வந்தது. உலகமயமாக்கப்பட்ட உடனே அந்த தொழிற்சாலையின் தலைமையகத்தை எப்படியாவது தங்களுடைய தலைநகருக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற பகீரத முயற்சியில் சிலர் இறங்கினார்கள். அப்போது வேறு சிலர் அந்தொழிற்சாலை அங்கேயே இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று பெரிதும் விரும்பினார்கள்.

    அவ்வாறு சொன்னவர்கள் மீது தாய்நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்ற வசை சொற்கள் வீசியெறியப்பட்டன. நம்முடைய மண்ணிற்கு அந்தத் தொழிற்சாலையின் தலைமையகம் வருவது நல்லதுதானே. அவ்வாறு வந்தால் நமக்கு இன்னும் கூடுதலான பலன்கள்  கிடைக்குமல்லவா? என்று நம்பிக்குத் தோன்றியதால் தொடக்கத்தில் அவனுக்கும் அவர்கள் மீது கோபம் ஏற்பட்டது. ஆனால், பிறகு அவனுடைய நினைப்பு தவறாய்ப் போனதை அவன் புரிந்துகொண்டான்.

    பலாப்பழங்களைப் பிரித்துச் சுவைப்பது; பலாக்கனிகளில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்று எண்ணிப்பார்ப்பது; சுவையுடையவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எனப் பத்தம்சத் திட்டங்களை முதலில் செய்துமுடிப்பது “சிங்சங்” தொழிற்சாலையின் முதல் கட்ட நோக்கமாகச் சொல்லப்பட்டது. அதற்காகச் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் பஞ்சக்குழுவும் அட்டக்குழுவும் முக்கியமானவை. ஏனெனில் அக்குழுக்களுக்குத்தான் இந்தப் பத்தம்சத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்து.

    தொடக்கத்தில் நாடு முழுவதிலும் இருந்து அக்குழுக்களுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் பலாக்கனிகளைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்களாக இருந்தார்கள். கனிகளை உண்ணவரும் காக்கைளை விரட்டுபவர்கள் சிலரும் அக்குழுவில் சத்தமில்லாமல் இணைந்து கொண்டார்கள்.

    பெரும்பான்மையானவர்கள் ஆசைப்பட்டதுபோல் தொழிற்சாலை செயல்பட ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே தலைமையகம் தலைநகருக்கு மாற்றப்பட்டது. சிலரது அயராத முயற்சியால்தான் அது நடந்தது என்ற குரல் அடங்கச் சில காலம் ஆனது. அதன் பிறகு அந்தத் தொழிற்சாலையின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுவருகின்றன என்றும், பத்தம்சத் செயல்திட்டங்களை விரைந்து முடிக்க விரும்புகிறார் அதன் தலைவா் என்றும் ரூமர் காற்றில் பரவியது.

    அப்போது மாம்பழத்தை ரசித்துக்கொண்டிருந்தவர்கள், வாழைப்பழங்களைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள், பூக்களின் வாசத்தை நுகர்ந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவற்றைத் தூக்கி வீசியெறிந்துவிட்டுப் பலாப்பழங்களைத் தோலுரிப்பது எப்படி என்று கற்கத் தொடங்கினர்கள். அதற்குக் காரணம் பத்தம்சத் திட்டம் பற்றி வெளியான அந்த வதந்தி.

    அப்போது நம்பி வாழை சாகுபடி பற்றியும் அவற்றின் வரலாறு பற்றியும் அவனுடைய தந்தையிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். அவனிடம் சிலர் சொன்னார்கள் நீயும் பலாக்கனிகளைத் தேலுரிக்கக் கற்றுக்கொள். அப்படிக் கற்றுக்கொண்டால் உனக்கு உடனடியாக சிங்சங் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று.

    அப்போது அதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் மாங்கனி பயிரிடுவது பற்றி அறியத்தான் அவன் முதலில் விரும்பி இருந்தான். அவனுடைய அப்பாதான் அவனை வாழையைப் பயிரிடப் பழக்கினார். தொடக்கத்தில் விருப்பம் இல்லாமல் பயிற்சி மேற்கொண்டாலும் போகப்போக அது அவனுக்கு ரொம்பப் பிடித்துப்போனது. எனவே வாழைமரம் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு வேண்டுமானால் பலாக்கனிப் பற்றிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அவனுடைய எதிர்காலம் கருதி பலாப்பழம் பற்றிய பயிற்சிக்குத் தன் அப்பாவால் நிர்ப்பந்திக்கப்பட்டான். வேறு வழியில்லாமல் பலாப்பழம் சாகுபடி அதன் வரலாறு பற்றி விரிவாகக் கற்க ஆரம்பித்தான். கனிகளின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருந்தபோது ஓர் அழைப்பு அவனைத் தேடிவந்தது.

    எதிர்ப்பார்த்தது போல் அந்த அழைப்பு சிங்சங் தொழிற்சாலையிலிருந்துதான் வந்திருந்தது. அப்போது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த வேலைக்கு முழுவதும் தயாராகவில்லை என்று நினைத்திருந்தான். ஆனால் அந்த வேலைக்குரிய எல்லாத் தகுதியும் அவனுக்கு இருக்கிறது என்று நம்பினார் அவன் தந்தை. அதனால் அவர் நேர்காணலுக்குப் போகச் சொன்னார்.

    நம்பிக்கு நேர்காணலுக்குப் போக விருப்பமில்லை. ஆனாலும் போகச் சம்மதித்தான். அதற்குக் காரணம் அவன் தந்தைமீதுஅவன் கொண்டிருந்த நம்பிக்கை. ஏனெனில் அவனுடைய தந்தை பிறரைப் போல் அன்றி மா, பலா, வாழை முதலானவற்றை நவீனமுறையில் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் இருந்து தொழில் கற்பதை அவன் தன் பாக்கியமாகக் கருதினான். எனவே அவருடைய பேச்சை மதித்து நேர்காணலுக்குப் புறப்பட்டான்.

    நேர்காணல் மேகம் தவழும் மலையடிவாரத்தில் நடந்தது. அந்த ஊருக்கு அவன் முதல் முறையாக அப்போதுதான் போனான். பொதிகை மலையின் சாரல் அங்கு எதிரொலிக்கும் என்று அங்கு அறிமுகமான நண்பர் ஒருவர் சொன்னார். மிகவும் ரம்மியமாக இருந்தது காற்றில் வந்த வாசம். நம்பியின் மனம் ஏதேதோ நினைத்தது. கால்கள் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. அவனைப்போல் பலர் அப்படிதான் இருந்தார்கள்.

    சிலர் நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள் தம் தந்தையர்களால் என்பதை அங்குப் பேசிக்கொண்டிருந்த சிலரின் உரையாடல்களில் இருந்து அவன் தெரிந்துகொண்டான். அது அவனுக்கு வியப்பாக இருந்தது.

    சிலர் கருங்காக்கைகளின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் வெண்கலச் செம்புகளில் தேவையில்லாமல் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய செயல்கள் நம்பிக்குப் புதுமையாகவும் வினோதமாகவும் தோன்றியது. அவர்களுடைய செயலை அவன் கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர் அவனருகே வந்தார்.

    அவனைவிடச் சற்று உயரமாக இருந்தார். கொஞ்சம் கலராக இருந்தார். பார்க்க முரட்டுத்தனமாகத் தோன்றினார். அவர் முகத்தை உற்றுப்பார்த்தபோது தன்னைவிட வயதில் மூத்தவராக இருக்கலாம்  என்று நினைத்தான்.

    வந்தவர் என்ன தம்பி நேர்காணலுக்குப் புதுசா? என்றார்.

    “ஆமாங்க“ என்று வேகமாகத் தலையை ஆட்டிய நம்பிக்கு அவருடைய கேள்வியில் ஏதோ ஒன்று உள்ளதுபோல் தோன்றியது. ஆனால் அதைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை.

    நீங்கள்? என்ற அவனுடைய கேள்வியிலிருந்து அவ்விருவர் விவரங்களின் பறிமாற்றம் ஆரம்பமானது. ஊர், பிடித்தவை, நோக்கம் என்று நீண்டுகொண்டிருந்த உரையாடலுக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. “நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் அருகிலுள்ள அறைக்குச் செல்லுங்கள்” என்ற ஒலி.

    நான் நீ என்று முண்டியடித்துக்கொண்டு அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் நேர்காணலுக்கு வந்தவர்கள். அவர்களின் செயல்களைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதைக் கவனித்த இளங்கோ சிரித்துக்கொண்டே வா! தம்பி நாமும் போகலாம் என்றார். அவருடைய இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் நம்பி அமர்ந்துகொண்டான்.

    கஞ்சியின் மடிப்பு மறையாத வெள்ளாடை அணிந்திருந்த இருவர், கதராடைக்கு ஏற்ற பேண்ட் அணிந்திருந்த ஒருவர் என மூவர் அறைக்குள் நுழைந்தார்கள். நேர்காணலுக்கு வந்திருந்த எல்லோரும் எழுந்து நின்றார்கள். வந்தவர்கள் மேடையில் இருந்த நாற்காலிகளில் பவ்யமாக அமர்ந்தார்கள்.

    பிறகு ஒருவர்பின் ஒருவராக மூவரும் அடுத்தடுத்துப் பிரசங்கம் நிகழ்த்தினார்கள். சுமார் இரண்டு மணிநேரம் அமர்க்களப்பட்டது அந்த அறை. அவர்கள் பேசிய செய்திகளை இளங்கோ திருக்குறள் போல் இரத்தினச் சுருக்கமாக நம்பியின் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னார்.

    அவருடைய அந்த அறிவுக்கூர்மை அவனை மிகவும் வியப்படையச் செய்தது. முகம் பிரகாசமாகத் தோன்றியது அவனுக்கு. தன்னை மறந்து இருந்தவன்  “இப்போது பலாக்கனி தோலுரிக்கும் நிகழ்வு ஆரம்பமாக உள்ளது“ என்ற குரல் கேட்டு தன்னிலைக்குத் திரும்பினான்.

    நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் பெயர் அகரவரிசைப்படி அழைக்கப்படும். அவ்வாறு அழைக்கப்படும் நபர் மேடைக்கு வந்து பலாக்கனியை உரித்துக் காட்டவேண்டும். சரியாக உரிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்! நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது! என்று நீண்ட சொற்பொழிவாற்றியவர் முதல் பெயரை வாசித்தார் அன்பு என்று.

    அறையில் ஒரே அமைதி நிலவியது. யார் அந்த அன்பு?. அவர் எப்படி பலாக்கனியின் தோலை உரிக்கப்போகிறார்? என்று பார்க்கவேண்டும் ஆவலில். நம்பியின் முகத்திலும் அது குடிகொண்டிருந்தது.

    சலனமின்றி மேடையேறிய அன்பு இல்லாத பலாக்கனியை இருப்பதாகப் பாவித்து அற்புதமாக உரித்துக்காட்டினார். அவர் பலாக்கனி உரித்தது தன்னுடைய தந்தையின் செயலை நினைவுபடுத்தியது. நம்பி மனம் சொல்லியது இவருக்கு வேலை உறுதியாகக் கிடைக்கும் என்று. மேடையில் இருந்த நடுவர்களும் மகிழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் வாய்த்திறந்து பாராட்டினார் தம்பி! நீங்க அருமையாகத் தோலுரித்தீர்கள்! வாழ்த்துகள்! என்று.

    இரண்டாவதாக இளங்கோ! என்ற பெயர் ஒலித்தது.

    தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் எழுந்து செல்வதை ரசித்துக் கொண்டிருந்த நம்பி அவர் தோலுரித்துக் காட்டியதை ரசித்துப் பார்த்தான். இப்படியும் தோலுரிக்க முடியுமா என்று வியந்தான். அவன் உள்மனம் நினைத்தது இவருக்கும் வேலை நிச்சயமென்று.

    தன் இருக்கையில் அமர வந்தவரிடம் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்! என்றான். நன்றி! என்றவர் சலனமின்றி அமர்ந்தார்.

    அவரைத் தொடர்ந்து கமல் என்று பெயர் அழைக்கப்பட்டது. ஓ! இவன் பெயர் கமலா என்று நினைத்தபோது அவன் செம்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. “இப்போதும் அவன் தண்ணீர் நிரம்பிய சொம்பைக் கையில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறான்” என்று இளங்கோ கூறிய பிறகுதான் அது பிரமையல்ல என்று உணர்ந்தான்.

    கம்பீரமாக மேடை ஏறியவன் ஐஸ்கட்டியாக உருகினான். அவனுடைய செய்கையைக் கண்டுப் பொறுக்கமுடியாமல் பக்கத்திலிருந்த இளங்கோவைப் பார்த்தபோது அவர் புன்னகை சிந்திக்கொண்டிருந்தார் சலனமின்றி.

    அறையில் ஒரே சலசலப்பு. கடைசிவரை அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை. அவனுக்குப்பிறகு ஏழெட்டுபேர் அவ்வாறே தொடர்ந்தார்கள்.

    நம்பியின் முறை வந்தது. மேடைக்குச் சென்ற அவன் தனக்குத் தெரிந்த அளவில் பலாக்கனியை உரித்துக் காட்டினான். அவன் உரித்தவிதம் புதுமையாக இருந்ததாகப் பாராட்டினார் நடுவர்களில் ஒருவர். இளங்கோவும் அதையே சொன்னார்.

    அவனுக்குப் பிறகு மேடையேறியவர்களில் பலர் நன்றாகத் தோலுரித்தார்கள். சிலர் நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றார்கள்.

    இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் சிலர் நேரமாகிறது என்று நேர்காணலில் பங்குபெறாமல் தம் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களில் கமலுடன் பயிற்சிபெற்ற மாணிக்கமும் அடக்கம்.

    நேர்காணல் முடிந்தது.

    சரியாக இரண்டு மாதங்கள் கழித்து பலாக்கனி எண்ணும் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியானது.

    அப்போது அன்புவும், இளங்கோவும் வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்த வயலில் நடப்பட்டிருந்த நெல் நன்றாக விளைந்திருந்தது. அதிக மகசூல் கிடைக்கும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள்.

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூர், வேலூர்.

    Share
  • மூதாட்டியைப் புணர்ந்த முனியன்

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்த் துறை

    தூயநெஞ்சக் கல்லூரி

    திருப்பத்தூர் வேலூர்

    ————————————–

    மார்பெலும்பை நன்றாகக் கவ்விய தூண்டில் முள்ளின் இழுவிசையில் நடந்துகொண்டிருந்தது சுகமாய் இருந்தது. மங்களான வெளிச்சத்தில் கால்கள் தரையில் படும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை. நிலவின் ஒளியற்ற இருளில் கண்களுக்கு காட்சிகள் மங்களாகவே தெரிந்தது. தெளிவற்ற பிம்பங்களைப் பார்த்தவாறே மெல்ல நடந்துகொண்டிருந்தான் முனியன்.

    புருவத்தின் ஓரம் லேசாகக் கீரிச்சென்ற முள்ளின் சுவடு குருதியாய்க் கன்னத்தில் வழிந்தபோதுதான் இடது பக்கம் முள்செடிகள் இருப்பது அவனுக்குப் புரிந்தது. ஏனோ! அதுவும் அவனுக்கு இன்பமாகவே தோன்றியது.

    இருளின் அடர்த்தி மெல்ல மெல்ல கூடிக்கொண்டே இருந்ததால் கல்களை எச்சரிக்கையாக எடுத்துவைத்து மெல்ல நடந்துகொண்டிருந்தான்.

    சுற்றுமுற்றும் பார்த்து மெதுவாக நடந்துகொண்டிருந்த அவனுடைய கண்களில் தொலைவில் கொழுந்துவிட்டு எரியும் தீயின் ஒளி தென்பட்டது.

    ஓடும் ரயிலை எட்டிப்பிடிப்பவன் போல் வேகமெடுத்த அவனுடைய கால்கள் ஒளி வந்த அந்த இடத்தை அடைந்து பிறகுதான் நின்றன. பூனையைப் போல் மெல்ல அருகில் சென்றபோது அங்கு கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

    அதற்குக் காரணம் யாருமற்ற அந்த வனாந்திரத்தில் ஒரு மூதாட்டி அடுப்பில் எதையே வேகவைத்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தில் அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

    நரைத்த கூந்தல். சுருக்கங்கள் பீடித்த தேகம். தளர்ந்த நடை என அணிவகுத்து நின்ற உறவுகளைப் பெற்ற மகிழ்ச்சி அவளது முகத்தில் தெரிந்தது.

    கால்கடுக்க நெடுந்தூரம் நடந்த களைப்புடன் பசியும் கூட்டணி அமைத்து தாக்க மூதாட்டியிடம் உண்ண ஏதாவது கேட்கலாமா? என்று முனியன் யோசித்த போது, “இந்தா தம்பி” என்று ஒரு சிறு மண்பாண்டத்தில் எதையோ உண்ணத் தந்தாள்.

    பசியில் “அது என்ன என்று ஆராயுமுன்” வயிற்றில் அடைக்கலம் அடைந்தது.

    பசி நீங்கிய உடன் அந்த மூதாட்டியிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

    ஆனால் அதற்குள் அவன் பயணம் மீண்டும் தொடர்ந்தது.

    கொஞ்ச தூரம் நடந்ததும் அதுவரை இழுத்துவந்த தூண்டில் அவனை விட்டு திடீரென மறைந்தது.

    ஏன் தூண்டில் காணாமல் போனது? எங்கு போனது? தன்னை ஏன் இங்கு இழுத்து வந்தது? போன்ற கேள்விகள் அவனைத் தொலைத்துக் கொண்டிருந்தபோது, சர்ர்ர்…னு வந்த அம்பு ஒன்று அவனது மார்பில் ஊடுருவி புற்றில் நுழைந்த நாகம் போல் முதுகில் தலையை எட்டிப்பார்த்தது.

    அம்பைத் தொட்ட அவனது கரங்களை அருவி நீராய் பீரிட்ட குருதி நனைக்க சூரைக்காற்றில் சிக்குண்ட வாழை குலையாய்த் தலைசுற்றி மண்ணில் வீழ்ந்தான்.

    திடுக்கிட்டு அலறிஅடித்துக்கொண்டு எழுந்த முனியனுக்குத் தன் மார்பில் ஏதும் இல்லாததை அறிந்த போதுதான் அனைத்தும் கனவென்று புரிந்தது.

    கனவு அவனது நினைவைப் பின்னிக்கொள்ள உறக்கம் அவனை உதறிதள்ளிவிட்டு ஓடியது.

    எழுந்து விளக்கைப் போட போன போது மின்சாரம் தடைப்பட்டிருப்பது தெரிந்தது.

    படுக்கையில் ஊடல் கொண்ட காதலியுடன் போராடுவது போல் போரடித் தோற்றுப் போனதால் மீண்டும் மின்சாரம் வந்துள்ளதா? என்று பார்த்து ஏமாந்தவன், பூசையறையில் இருந்த மண் விளக்கை எடுத்து தீப்பந்தந்தைப் போல் எரியச் செய்தான்.

    ஜன்னல் வழியாக சில்லென்று வந்த காற்று அவனைத் தழுவத்துடித்தது. அவனுக்கும் அதே உணர்வு வந்தால் ஜன்னலை நோக்கிப் போனான்.

    வங்கி சேமிப்பில் சேர்ந்திருந்த பணத்தில் கட்டிய வீட்டில் நல்ல தரமான பளிங்கு கற்களை பலகடைகள் ஏறி இறங்கி தேர்வு செய்து பதித்தான். புதுமனை புகுவிழாவிற்கு வந்த நண்பர்கள் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த போது  “டிசைன் சூப்பர். செம்ம கலர். ஆனா.. யூ.பி. எஸ் போட்டிருந்தா நல்லா யிருக்கும்” என்று பேசிக்கொண்டிருந்தது முனியன் காதில் விழுந்தது. அதைக் கேட்காதவன் போல் அப்போது அவன் நடந்துகொண்டான்.

    தீப்பந்தம் போல் எரிந்த விளக்கில் வெளியான வேம்பின் வாடை அவனைத் தழுவிக்கொள்ள ஜன்னல் நோக்கி வந்தது.

    சில் காற்றில் தவழ்ந்து வந்த முல்லையின் மணமும் அகல்விளக்கில் இருந்து வந்த வேம்பின் மணமும் நான் நீ என மோதிக் கொள்வதை அவன் உணர்ந்தபோது வாழை இலையின் மேல் விழுந்த மழைத்துளிகள் அவன் காதில் சந்தடியில்லாமல் நுழைந்துகொண்டிருந்தன.

    ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். பூமித்தாயின் வயிறு நிறைந்திருந்தது. மின்மினி போன்ற மின்னலின் ஒளியில் அது நன்றாகத் தெரிந்தது.

    அப்போது கனவில் கண்ட மங்கிய இருள் அவனை வேதாளம் போல் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

    மங்கிய வெளிச்சித்தில் பார்த்த மூதாட்டியின் முகமோ? அவள் தந்த உணவோ? தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவற்றைத் தெளிவாகப் பார்க்க பகீரதனாய் முயன்று கொண்டிருந்தான்.

    இறுதியாக வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி பயணப்பட்டான்.

    பாதியில் குறுக்கிட்ட ஆற்றில் வெண்ணிற அலைகள் திருடனைத் துரத்துவது போல் ஓடிக்கொண்டிருந்தது.

    சில மணிநேர பணயத்திற்குப் பிறகு பேருந்திலிருந்து இறங்கியவன் புற்களுக்கிடையே காலடிகள் பட்டுத்தேய்ந்த பாதையில் நடக்க ஆரம்பித்தான். தன் முதுகில் தொங்கிய பையை அவ்வப்போது சரிசெய்தபடியே நடந்துகொண்டிருந்தான்.

    உழவர்கள் வயலில் மூழ்கியிருந்தனர். அவர்களைக் கண்டு அஞ்சிய சர்ப்பம் ஒன்று முனியனின் பாதையில் நாலடிமுன்னார் உயிர் பிழைத்துக்கொள்ள ஓடியது. வளைந்து நெளிந்து தாவிக் குதித்தோடிய அதன் அழகை ரசித்தபடியே படம் பிடித்தவன் பாம்பின் உருவம் மறைந்ததும் அங்கிருந்து புறப்பட்டான்.

    அவனது இடப்பக்கத்தைத் தாக்கிக்கொண்டிருந்த சூரியனின் கதிர்கள் இப்போது அவனது தலையை மட்டும் குறிவைத்து தாக்க ஆரம்பித்தது. அதனால் களைத்துப்போனவன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதில் இருந்த தண்ணீரைத் தேடி அதை நாக்கில் படும்படிசெய்தான்.

    தன்னைக் கடந்து போன மேகத்துண்டுகளைப் பார்த்து அவ்வப்போது நன்றி கூறியவாறு நடந்துகொண்டிருந்தவன் நாவறண்டு தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தான்.

    ஒரு வழியாக இடப்பக்கமாக இருந்த ஓரு நீரோடை அவனது கண்ணில் பட திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் திரும்பப்பெற்றவர் போல் அதை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

    மலையிலிருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் காட்டாற்றில் தண்ணீர் தெள்ளத் தெளிவாக இருந்தது.

    அதைப் பார்த்ததும் பருகவேண்டும் என்ற ஆவல் மேலிட தன்முதுகில் இருந்த பையை இறக்கி அருகிலிருந்த ஒரு சிறு கல்லின் மேல் வைத்தான். மெல்ல தண்ணீரின் மேற்பரப்பைத் தன் உள்ளங்கையால் இருபுறமும் விளக்கியபோது அவன் முன்னர் ஒரு சிட்டுக் குருவி படபடத்துக்கொண்டிருந்தைப் பார்த்தான்.

    பேருந்து நிறுத்ததில் இறங்கிபோது அக்குருவியைப் பார்த்ததாக ஒரு நினைவு அவனுள் தோன்றி மறைந்தது.

    அதே நினைவுடன் இருகையால் தண்ணீரை அள்ளி வாயருகே கொண்டு சென்றபோது அவன் காதுகளை அடைந்த அந்தக் குரல் கையிலிருந்த தண்ணீரை கை கழுவ செய்தது.

    “அண்ணே! அந்தத் தண்ணீரைக் குடிக்காதீங்க” என்று கத்தியபடி ஒரு சிறுவன் முனியனை நோக்கி மூச்சிறைக்க ஓடிவந்தான்.

    அது நல்ல தண்ணி இல்லண்ணே! குடிக்க தண்ணி வேணுமா? வாங்க என்று அழைத்தான்.

    “தண்ணீர் நல்லா தானே இருக்கு. ஏன் குடிக்கக் கூடாது?” என்று தெள்ளத் தெளிவாக இருந்த அதன் தோற்றம் அவனைக் கேட்க வைத்தது.

    ஆனால் கோவணத்துடன் இருந்த அச்சிறுவனிடம் அதைப் பற்றி ஏதும் கேட்க வில்லை.

    மஞ்சு புற்கள் நிறைந்த இங்கொன்றும் அங்கொன்றும் சிதறிக்கிடந்த தேயாத கால்தடங்கள் தென்பட்ட பாதையில் நடக்க ஆரம்பித்த சிறுவன் வலப்பக்கத்தில் கொஞ்ச தொலைவில் இருந்த பாறையைச் சுட்டிக்காட்டி “அதோ அந்தப் பாறையில் ஒரு சுனை இருக்கு. அங்க நல்ல தண்ணீ கிடைக்கும் வாங்க“ என்று கூறியவாறே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

    “ஆமா? தம்பி நீ இங்க தனியா என்ன பண்ற? ஸ்கூல் போகறதுதில்லையா?” என்று முனியன் கேட்டான்.

    அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல அதனால ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு மாடு மேய்க்க வந்துட்டேன்.

    என்ற பதிலைக் கேட்டு முனியன் அடுத்த கேள்வியைத் தயக்கமின்றி கேட்டான். என்ன வகுப்பு படிக்கிறாய் என்று.

    “எட்டாம் வகுப்பு“ என்று ஆங்கிலத்தில் கூறியது அவனது மண்டையில் ஆணி அடித்தது போல் அழுத்தமாய் பதிந்தது.

    தான் கனவில் கண்ட காட்சியைப் பற்றிக் கூறி மூதாட்டி பற்றி விசாரித்தான்.

    அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் புன்னகைப்பதாக அவனுக்குத் தோன்றினாலும் ஏன் சிரிக்கின்றாய் என்று கேட்கவில்லை.

    அதற்குள் தண்ணீர் இருந்த சுனையை அடைந்ததால் முனியன் தன்தாகத்தைத் தீர்த்துக்கொண்டான்.

    தாகம் தணிந்த தெம்பில் “தம்பி இங்க பாம்புமலை எங்கிருக்கு என்று கேட்க” சற்றும் தாமதிக்காத அந்தச் சிறுவன் வடக்கு திசையை நோக்கியிருந்த மலையைச் சுட்டிக்காட்டி “அதோ தெரியுதே அந்த ஆர்ப்பு மரக்காட்டைத் தண்டினால் நீங்கத் தேடிவந்தது கிடைக்கும்” என்று கூறிய சிறுவன் மாடுகள் பற்றிய நினைவு வந்தவனாய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

    தன்னுடைய  இலக்கு கண்ணில் தெரிந்த தெம்பில் வேகமாக நடந்த முனியன் ஆர்ப்பு மரக்காட்டை நெருங்கியபோது தான் கனவில் கண்ட பாதை எதிர்படுவதாய் உணர ஆரம்பித்தான்.

    அதனால் இன்னும் வேகமாய் நடக்க ஆரம்பித்தான். இங்கொன்னும் அங்கொன்றுமாய் இருந்த நெல்லி மரங்களில் சிலவற்றில் மட்டும் நெல்லிக்காய் காய்த்திருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சென்றவனின் கண்முன்னர் பெரிய யானையை ஒத்த பாறை திடீரெனத் தோன்றியது. அதன் உச்சியில் பிரண்டைக் கொடிகள் பாம்புகள் போல் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

    அதைக் கடந்தவனுக்கு பிரமிப்பு அதிகமானது அச்சு அசல் கடந்து வந்த மலையைப் போன்ற மற்றொரு மலை எதிரில் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. அதைக் கடந்தவனுக்கு மயக்கம் வருவது போல் ஆனது. மீண்டும் ஒரு மலை அதே போல் இருந்தது.

    திரும்பிப் போய் விடலாம் என்று கூட அவன் நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தூண்டுவதாய் அவன் உணர்ந்தான்.

    ஏழு மலைகளைத் தாண்டியபோது இதுவரை கடந்துவந்த மலைகளை ஒன்று சேர்த்ததுபோல் பருத்த பாறை கண்ணில் பட்டது. அந்தப் பாறையின் நடுவில் ஒரு பெரிய நுழைவு வாயில் போன்ற தோற்றம் இருந்தது. அதனருகே சென்றான். அதுவரை உடன் வந்த சிட்டுக் குருவி திடீரெனக் காணாமல் போனது.

    தயக்கத்துடன் அந்த வாயிலினுள் நுழைந்தவன் கனவில் கண்ட மூதாட்டியை நேரில் பார்த்தான். ஆனால் இப்போது அவனுக்கு பிரமிப்பு ஏதும் ஏற்படவில்லை.

    அவனைப் பார்த்த அந்த மூதாட்டி தன்னிருக்கரங்களை நீட்டி அவனை தன்னருகே அழைத்தாள். அவளுடைய நெற்றியில் இருந்த திலகத்தைப் பார்த்தவாறே சென்று அருகில் நின்றான் பித்துப் பிடித்தவனாய்.

    நீட்டிய கரங்களால் அவனை ஆரத்தழுவினாள் அம்மூதாட்டி.. அவளுடைய கொங்கைகள் அவனுடைய மார்பில் ஈட்டியாய்த் துளைத்தது.

    அவளை விளக்க முயன்றகொண்டிருந்த போது மூதாட்டியின் சாயம் மெல்ல மெல்லவிலகியது.

    உடுத்தியிருந்த இருவரின் ஆடைகளும் மண்ணைத் தஞ்சமடைந்தன.

    இருவரின் சரீரங்களும் பாம்புகளாய்ப் பின்னிக்கொண்டு நின்றன.

    சூரியன் பூமியை நோக்கி வீசியெறிந்த ஒளிக்கதிர்களுக்கு அஞ்சி இருவரும் காற்றில் மறைத்துக்கொண்டார்கள்.

    அது சரி முனியன் பற்றி கூறும் நீ யார்? என்று கேட்கிறீர்களா?

    ம்…. ம்…. புரிகிறது

    ………………………… நான் தான் முனியனின் நிழல்.

    Share