முனைவர் ஆ.சந்திரன்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த் துறை

தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)

திருப்பத்தூர்

வேலூர்

முகத்தில் தெளித்த இளநீரைச் சுவைத்தவாறே கண்விழித்த இளைஞன் தங்கரதத்தில் சாய்ந்து கிடப்பதை உணரத் தவறினான். எதிரில் இருந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் மீண்டும் அவன் மயங்கிப் போனான்.

யார் அவன்? ஏன் மயங்கினான் என்பதை அறிய நாம் அவனுடைய இறந்த காலத்திற்குப் போகத்தான் வேண்டும். வேறு வழி ஏது?

அரபிக்கடலைக் கிழித்துக்கொண்டு கிளம்பிய சூரியனின் ஒளி மலைகளுக்கு இடையில் இருந்த அந்த ஊரில் படவில்லை. இதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் “அந்தப் பெரியவர்” தான் என்பதை ஊர் மக்கள் திடமாக நம்பினர். “மாடசாமி” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அந்தப் பெரியவர், ஊர் ஊராய் அலைந்து திரிந்து அந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் அவருடைய தலைமுடி நரைத்துப் போனதாகச் சிலர் பேசிக்கொண்டனர். அதனால் அவருக்கு இளம் வயதிலேயே “பெருசு” என்ற பட்டத்தைக் கொடுத்து  மகிழ்ந்தது அந்த ஊர். அந்தப் பட்டம் கொடுத்த ஏழுாவது நாள் அவருக்குப் பிறந்த நாள் வந்தது.

அது அவரது எழுநூற்று ஐம்பதாவது பிறந்த நாள். அதனால் அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன. கொண்டாட்டம் கலைகட்டியது.

அந்த ஊரில் வாழ்ந்த மனிதர்களில் அவர்தான் மூத்தவராய் இருந்ததால் அவரது பிறந்த நாளுக்கு வந்திருந்தவர்கள் அவரை வணங்கி மட்டுமே சென்றனர். அப்படி வணங்க வந்தவர்களில்  பேரிளம்பருவப் பெண் ஒருத்தி விநோதமாக நடந்துகொண்டாள். அவரது கழுத்தில் மங்கல நாண் ஒன்றை அணிவித்தாள். அது அந்த நிகழ்வை முன்னின்று நடத்திய உயரமான மனிதரை மிகவும் பாதிக்க, அவர் மாரடைப்பு வந்து சில காலத்திற்குப் பின்னர் இறந்து போனதாக அந்த ஊரில் உள்ளவர்கள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

திடீரெனக் கொட்டித்தீர்த்த அடைமழையில் பெருக்கெடுத்தோடிய வெல்லத்தில் நனையாமல் கரையேறியவர்களில் ஒருவன்தான் மயங்கிக்கிடக்கும் அந்த இளைஞன். அவனுடைய மயக்கத்தைப் போக்க இளையவள் தொடர்ந்து முயன்று கொண்டிருந்த தருணத்தில் அவன் தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டான்.

ஆற்றுவெள்ளத்தில் கொட்டும் மழையில் தள்ளாடி கரையடைந்த பெருங்கூட்டத்தில் பலர் சில நாட்களிலேயே இறந்த போனார்கள். தப்பிப் பிழைத்த ஒரு சிலர் நேய்வாய்ப்பட்டதால் இறந்தவர்களின் ஆயுளும் நோயுற்றவர்களின் வலிமையும் இவனுக்குச் செந்தமானது. அதனால் அவன் தன்னுடைய தலையெழுத்தை திருத்தி எழுதிக் கொண்டான். அவ்வாறு செய்ததால் அவனுக்கு எழுத்தன் என்ற பெயர் பிறந்தது. தன்னுடைய தலையெழுத்தை மாற்றிக்கொண்டது போல் மற்றவர்களின் தலையெழுத்தும் மாறவேண்டும் என்று உறங்காமல் தவம் கிடந்தான்.

ஊர்ச்சுற்றச் சென்ற தலைவன் திரும்பி வருவான் என்று தென்னை மரத்தின் அடியில் ஒற்றைதக் காலில் கிடந்த அவளுடைய தவத்திற்குப் பலனாக அவளுக்குத் தங்கப்பதக்கம் ஒன்று கிடைத்தது. அதைத் தனக்குக் கிடைத்த பாக்கியமாக நினைத்த அவள் அவ்வப்போது மார்புடன் இருக்கமாக அனைத்து மகிழ்ந்தாள். தனிமை கிடைக்கும் போதெல்லாம் அது அவளுக்குத் துணையாக இருந்ததாய் அவள் தன்னுடைய சுயசரிதையில் பின்னால் எழுதியதைச் சிலர் மட்டுமே வாசித்திருந்தனர் என்பதுதான் துர்ப்பாக்கியம்.

ஃ என்ற பதம் அ ஆ இ ஈ என்ற உயிர் எழுத்துக்களின் தனியன் என்று விளக்கிக்கொண்டிருந்த ஆசானின் வாய் இப்போது அம்மா, ஆடு, இலை, ஈ, என்று மெல்லிய குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அப்போது இரவும் பகலும் மக்களின் தலையெழுத்து மாறவேண்டி உறங்காமல் கிடந்த எழுத்தருக்கு கைமேல் பலனாக ஏராளமான பன்றிகுட்டி குட்டிகள் பிறந்தன. அவற்றின் வருகையால் வீட்டின் தென்மேற்கு மூலையின் நிறம் மாறத்தொடங்கியது. அவற்றிற்கு வண்ணம் அடிக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனை அவருக்குத் தோன்றும் முன்னரே மஞ்சள் வண்ணத்தைத் தீட்டி அவருக்கு அதிர்ச்சியளித்தனர் அவருடைய விசுவாசிகள்.

உறங்காமல் நீண்ட காலம் தவம் கிடந்த எழுத்தருக்கு அன்று ஏனோ முன்னிரவிலே உறக்கம் வந்தது. எனவே ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று படுக்கையறைக்குப் போனார். உறக்கம் களைந்து எழுந்தவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டின் நிறம் சிவந்திருந்து. எப்படி ஓர் இரவில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தது என்று அவர் யாரிடமும் கேட்கவில்லை. அன்று முதல் அவருடைய இடதுகால் நடக்க மறுத்துவிட்டது. அதன்பிறகு அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது.

அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போதெல்லாம் வந்து நலன் விசாரித்துச் செல்பவர்களில் சிலர் அவரிடம் தனிமையில் உரையாடிச் செல்வதுண்டு. அப்படி வந்தவர்களில் ஒருத்தன் அவருடைய கைகளை இருகப்பற்றினான். அவனைப் பார்த்த எழுத்தரின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவராய் அருகில் இருந்த இளம்வாரிசு சொன்னான் “இவர் நம்ம பக்கத்து ஊரின் தலைவர் வீட்டிற்குப் புதிதாக குடிவந்தவர் என்று”

அதைக் கேட்டவுடன் “வாழைப்பழத்தில் ஊசியை குத்திவிட்டுப் பின்னர் அதைச் சுவைப்பது” என்று முடிவெடுத்து நிற்பவர்களுக்கு மத்தியில், காதுகளைப் பொத்திக்கொண்டு  மூன்று கால்களுடன் ஊர் ஊராய்ச் சென்றுகொண்டிருந்த உயரமான தேகம் பளிச்சென நெற்றியில்  தோன்றி மறைய, விழாமல் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு சில பற்களைக் காட்டிச் சிறித்தார் எழுத்தர்.  நெடுநேரம் ஏதேதோ பேசிய இளைஞன் விடைபெற்றுச் சென்றான்.  தாங்கித் தாங்கி நடந்துசென்ற இளைஞனின் கால்களை கவனித்த எழுத்தரின் பார்வை அவருடைய கால்கள் மீது திரும்பியது.

தங்கப் பதக்கம் பளபளப்புடன் இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த இளையவளுக்குப் ஆயிரமாவது பிறந்தாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

அதை விமரிசையாக எவ்வாறு கொண்டாடலாம்? என்ற கேள்வி எழுந்தபோது  யோசனைகள் பல முளைக்கத் தொடங்கின. இப்படிக் கொண்டாடலாம்! அப்படி கொண்டாடலாம்! என்ற கடிவாளங்கள் இறுதியாக மௌனத்தில் அமிழ்ந்தன.

இளநீர் விற்பதில் இருந்து இளையவளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களில் சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டு எதையும் கேட்காமல் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

டீக்கடையிலும் இந்த விவாதம் பற்றி எரிந்தது. “சரித்திரத்தில் இதுவரை இப்படி ஒருவிழா கொண்டாடப்படவில்லை” என்ற குரல் அதிர்ந்து ஒலித்தது. அது டீ குடிக்க வந்தவர்களின் காதுகளைச் செவிடாக்கியது.

“இளையவளின் ஆயிரமாவது  பிறந்த நாள் சரித்திரம் அறியாதவாறு தடபுடலாய்க்  கொண்டாடப்படும்” என்று  ஊரே எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது. அப்போதுவரை அவளுடைய படுக்கையறையை அலங்கரித்து வந்த தங்கப்பதக்கம் திடீரென மண்ணாக மாறியது. அதைப் பார்த்த அவள் அதிர்ச்சியடைந்தாள். இமைகள் இணைந்தன. மயங்கிக் குப்புறவிழுந்தாள். மயக்கம் தெளிந்து கண்விழித்தவள் மீண்டும் மயங்கிப்போனாள். இரண்டாம் முறையாகக் கண்விழித்தபோது மருத்துவரின் குரல் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள்.

அதன் பிறகு மருத்துவமனைக்கு அடிக்கடி ரகசியமாகப் போய் வந்துக்கொண்டிருந்தாள். அதற்கான காரணம் அவளுடைய வீட்டிலிருந்த வேலைக்காரிக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தாள். ஆனால் அவளுக்குத் தெரிந்திருந்தது என்பதை அந்த வீட்டில் இருந்த இரு கண்கள் கண்டுபிடித்திருந்தன. அதற்கு வாய் இல்லாததால் அதை யாருக்கும் அது சொல்லவில்லை.

ஆயிரத்தொன்றாவது பிறந்தநாளுக்கு ஒருமாதத்திற்கு முன்னர் இளையவள் கருவுற்றிருப்பதை அவளுடைய வயிறு வெளிவுலகிற்கு வாய்த்திறந்து சொன்னது.

அவளது வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்பதை அவளுடைய வேலைக் காரி எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டாள். பிறக்க இருப்பது எழுபத்தைந்தாவது குழந்தையாக இருந்தாலும் அதுதான் அவளுக்குப் பிறக்க இருக்கும் முதல் ஆண் குழந்தை என்பது இளையவளின் காதுகளுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.

அந்த ஊரில் எழுபத்தைந்து குழந்தைகளை ஆயிரமாண்டுகளுக்குப் பிறகுப் பெறப்போகும் புண்ணியம் அவளுக்கு மட்டுமே வாய்த்திருப்பதாகப் பஞ்சாங்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டிருப்பதாக ஒரு செய்தி மக்களிடம் புயலாய்ப் பரவியது.

தனிமையில் இருந்த இளையவளுக்கு  முதல் பிரசவத்தைப் பற்றிய நினைவுகள் அரும்ப ஆரம்பித்தன.

 இளநீர் விற்ற பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கேக் வாங்க கடைக்குப் போய் வெறுங்கையுடன் சோகமாக வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த அவளுடைய முகம் பிரகாசமானது. அவள் பிரமித்துப் போனாள். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளுடைய வீட்டின் அழகுதான் அவளுடைய அந்த பிரமிப்பிற்குக் காரணம்.

வீட்டின் உள்ளே நுழைந்தபோது “இது கற்பனை இல்லையே” என்பதை நம்ப கொஞ்ச நேரம் அவளுக்குத் தேவைப்பட்டது.

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்குத் தேவையான அனைத்தும் அவள் நினைத்துப் பார்ப்பதற்கும் மேலாக அங்கே குவிக்கப்பட்டிருந்தன. அவள் கண்களின் தேடலில் சிக்கிய இளைஞன்  கொடுத்த பரிசு தான் பத்துமாதங்கள் கழித்து அழகான பெண் குழந்தையாய்ப்  பிறந்தது.

கொஞ்ச நாள் கழித்து தன்னுடைய மாளிகையின் மேல் தளத்தில் அவளைக் குடிவைத்தான் அந்த இளைஞன். பின்னர் திடீரென ஒரு நாள் அவன் காணாமல் போய்விட அவனைத் தேடுவதின் அவசியம் ஒரு கட்டத்தில் இளையவளுக்கு ஏற்படாமல் போனது.

அந்தக் கட்டத்தில் அந்த இளைஞன் இல்லை. தன் நினைவிலும் அவன் இல்லை என்பதை இரவில் மட்டுமே அவ்வப்போது உணர ஆரம்பித்தாள் அவள். அவ்வாறான வேளைகளில்  “மண்ணில் தனக்குச் சொர்க்கத்தை உருவாக்கித் தந்துவிட்டு வானுலகில் நிரந்தரமாய் அவன் தங்கிவிட்டதாய்” தன் மனதைச் சமாதானம் படுத்திக்கொள்வாள்.

அவனைப் போல் தானும் வானுலகம் போக ஏற்பாடுகள் நடைபெறுவதாக அவளுக்குச் செய்தி வானிலிருந்து வந்தது.

அப்போதுதான் அவளுக்கு எழுபத்தைந்தாவது கரு உருவான விசயம் காதுகளுக்கு வந்துசேர்ந்தது. செய்வதறியாது திகைத்துப் போனாள்.

நாள் நெருங்கிக் கொண்டிருந்ததை அவளது உடல் உணர்த்தியது. நாட்கள் நிமிடங்களாகச் சுருங்கின.

”பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அவசர அவசரமாய்ப் பறந்தாள்” என்ற செய்தி பரவியது. ஊரே ஆவலாய் எதிர்பார்த்து நின்றது. ஆண் குழந்தை பிறக்க வேண்டுதல்கள் முளைத்தன புதுப்புது வடிவங்களில்.

“இன்னும் சற்று நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த காற்று வரும். அப்பொழுது மழை பெய்யும். இதுவெல்லாம் நடந்தால் நான்கு கால்கள், நான்கு கைகள், நான்கு கண்கள், இரண்டு தலைகள், இரண்டு வாய்கள், நான்கு மூக்குத்துவாரங்கள் கொண்ட ஒரு குழந்தை இளையவளுக்குப் பிறக்கும்” என்று வானில் இருந்து அசரீரி ஒலித்தது.

அதைக் கேட்ட மக்கள் மழையில் குடையைத் தூக்கியெறிந்து ஆனந்தக் குளியலை அனுபவித்தனர். பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்க மருத்துமனையின் வாயிலில் தவம் கிடந்தனர். அவர்களின் செவிமடல்களில் மோதித்தெரித்த தண்ணீர் துளிகள் பிரவாகமெடுத்து வெள்ளமாய் ஓடத்தொடங்கியது.

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர் பெண்ணே அல்லள். அவன் ஓர் ஆண்மகன்” என்று துள்ளி குதித்த சொற்கள். பிரவாகத்துச்செல்லும் செல்லும் வெள்ளத்தின் வேகத்தில் அமுங்கிப்போனது அடயாளமின்றி.

அந்த வர்த்தைகளைக் கேட்ட உழவன் “போங்கடா புண்ணாக்குகளா…….” என்று தலையில் அடித்தவாறே மாட்டின் கயிற்றை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

குறிப்பு: லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்து விட்டதால் சொற்கள் இத்துடன் நிற்கின்றன. தொழில் நுட்பக் கோளாறுக்காக வருந்துகிறேன். ஆனால் நீங்கள் தொடரலாம்.

நன்றி.

வணக்கம்.

.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *