திவாகர்

“ஆமாண்டா.. ஆமா.. என் பொண்டாட்டி பிரியாவைத்தான் சொல்லறேன். அவர்கிட்ட அவ ஏற்கனவே ஏமாந்து போனவ. அப்படி ஏமாந்தவ இவரைக் கோர்ட்ல இழுப்பேன்.. கேஸ் போடுவேன் இல்லேன்னா தற்கொலை பண்ணிண்டு இவரை மாட்டிவிடுவேன்னு பயமுறுத்தியவுடனே அவளை சமாதானப்படுத்த எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வெச்சாரு.. அது கூட சாதாரண ரிஜிஸ்டர் கல்யாணம்தான். நம்ம உறவுக்காரங்களைக் கூட கூப்பிடலேன்னு உனக்குத் தெரியுமே. நீ வைசாக்ல இருந்தே.. அப்போதான்  உங்க பெரியப்பா உனக்கு ஃபோன் பண்ணி இந்த மாதிரி ‘முரளி அவனே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிண்டு வந்து என் முன்னாடி நிக்கிறாண்டா.. வேற என்ன பண்ண முடியும்.. ஆசீர்வாதம் பண்ணேண்டா’ன்னு என் முன்னாடியே பேசினவரு. சரி, நான் எதுக்காக ஒத்துண்டேன்னா சிம்பிள்.. அவர் எங்கிட்டே உண்மையைச் சொன்னார்.. அவர் சொன்னவிதம் அவருக்குச் சாதகமா சொன்னார். பிரியாவை பெரியப்பா ‘ரஞ்சிதா’ன்னு கூப்பிடுவார். அதாவது இந்த ரஞ்சிதா’ங்கிற பொண்ணுகிட்ட ஏதோ ஒருதடவை தான் மயங்கிட்டுப் போய் அவளோடு இருந்ததாகவும் ஆனா அவ அதைப் பயன்படுத்திக் கல்யாணம் செய்ய இவரை வற்புறுத்துவதாவும் அப்படி இல்லைன்னா தற்கொலை பண்ணிண்டு அதுக்குக் காரணம் இவருதான்னு எழுதிடுவேன்னு பயமுறுத்தினா.. ஆனா நான் கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாதுடா முரளி.. நீ எனக்கு உதவி பண்ணனும். எனக்குப் பதிலா நீ அவளுக்கு தாலி கட்டு. ரிஜிஸ்டர் பண்ணிக்கோ. ரெண்டு வருஷமானா நீ அவளை விவாகரத்து பண்ணிடலாம். நான் ரஞ்சிதாகிட்டே பேசறேன். இது சும்மா ஒரு  ஸ்டாப்-கேப்  அரேஞ்ச்மென்ட்தான். அதுவும் ரஞ்சிதாவுக்கு திருப்திகரமா இருக்கும்னுதான். இதுக்கு நான் உதவி பண்ணினா தான் சுயமா சம்பாதிச்ச சொத்துல  பாதியும் பத்து லட்சம் கேஷும் உடனடியா தர்றதா சொன்னாருடா. அப்போ எனக்கு பணம் ரொம்ப அவசரம்னதாலே அதுவும் பேருக்குதான் நான் ஹஸ்பண்ட் அத்தோட இது டெம்போரரி அர்ரேஞ்ச்மென்ட்கிறதாலே பத்து லட்ச ரூபாய் கேஷ் வாங்கிண்டு இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கினேண்டா..”

“அடச்சீ.. இது மானங்கெட்ட வாழ்க்கைன்னு உனக்குத் தெரியலியாடா?”

“தெரியும்டா.. ஆனா ஒரு டிராமா ஆடற மாதிரி கேட்டது என்னை வளர்த்த மாமாடா. எனக்கும் அப்போதைய அவசர தேவை பணம்டா.. இது ஏதோ ஒரு ஸ்டாப் கேப் ஏற்பாடுதானே.. ஆனா இந்த கல்யாணத்துக்கப்பறம் ரஞ்சிதா முழுசா மாறிட்டாடா.. அவ ஒரிஜினல் பேரு பிரியா.. மாமாதான் ரஞ்சிதான்னு புதுசா மாத்தினாராம் ஆனா இனிமே தான் பிரியாமுரளின்னுதான் அவ பேருன்னு சொன்னா. ‘இனிமே உங்களோடதான் என் வாழ்க்கை. தயை செஞ்சு உங்க மாமாவோட சம்பந்தம் இனிமே நமக்குத் தேவையில்லே.. நடந்தது நடந்து போச்சு, விவாகரத்து பண்ணி மறுவிவாகம் பண்ணினா மாதிரி நான் நினைச்சுக்கறேன்.  இனிமே நான் உங்களோட உறுதியான உண்மையான மனைவி நான். இதை உங்க மாமாகிட்டே என் முடிவாச் சொல்லிடுங்க ஆனா அவர் சுலபத்துல ஒப்புக்க மாட்டார்.. அவரு ஒரு மாதிரியான  பொம்பளை பைத்தியம்.. நானே அவர் என்னை விட்டுப் போயிடணும்னு நினைச்சுதான் தற்கொலை அது இதுன்னு சொல்லி பயமுறுத்தப் பார்த்தேன். ஆனா அந்த ஆள் பயப்படலே. நானும் இனிமே ஏன் பயப்படணும்? நாம் கலியாணமான தம்பதிங்க.. நம்ம வாழ்க்கையை நாம அனுபவிப்போம்’ அப்படின்னு  சொல்லிட்டா. போகப் போக நாங்க ரெண்டு பேரும் ஒத்தரை ஒத்தர் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பிக்கறச்சே மாமா நடுவுல வந்தாருடா.. ‘முரளி, இப்படியெல்லாம் என்னைத் தவிக்க வெக்கலாமா? உன் வீட்டுக்கு அழைச்சுண்டு போடா.. ரஞ்சிதா மேல நான் உயிரையே வெச்சுருக்கே’ன்னு எங்கிட்டே நச்சரிக்க ஆரம்பிச்சாரு. மாமாகிட்ட நான் சொல்லிட்டேன். எப்படியோ கல்யாணம்னு முடிஞ்சுபோச்சுன்னு நானும் அவளும் இப்போதான் நிம்மதியா புருஷன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிச்சிருக்கோம். நீங்க தயைசெய்து தலையிடாதீங்க மாமா’ன்னு சொல்லிட்டேன்.”

திடீரென கோம்டி குறுக்கிட்டாள்.

“அது சரி மிஸ்டர் முரளி, உங்க மனைவி பேரு ஒரிஜினலா ரஞ்சிதா இல்லையா அப்போ?.. அவங்க சிதம்பரத்துல கீழவீதில இருந்தாங்களா..”

“அது பழைய கதை.. என் மனைவியோட பிறந்த ஊர் சிதம்பரம். அவளோட அம்மா அங்கேதான் இருக்கா. ஆமாம். கீழவீதிதான். ஆனா என் மனைவி பேரே பிரியாதான். சர்டிஃபிகேட் எல்லாம் பிரியாதான். ஏன் மேரேஜ் சர்டிஃபிகேட் கூட பிரியா’ன்னுதான் கையெழுத்துப் போட்டா.. மேரேஜ் சமயத்துல நான் இதைப் பெரிசா கண்டுக்கலே.. மாமா பேச்சைக் கேட்டு முதல்ல இதுல நான் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தேன். ஆனா மாமா கூப்பிடற அந்த ரஞ்சிதா இல்லே இப்போ. பிரியாமுரளியா என்னோட அன்பா குடுத்தனம் பண்றா.. இப்போ அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் கூட எந்த சம்பந்தமுமில்லே..”

“சரி, இப்போ பொன்னம்மா கதைக்குப் போவோமா.. அந்த சித்ரா பௌர்ணமி ராத்திரி விஷயத்துக்கு போகலாமா..?”

கோம்டி கேட்டதும் தலையாட்டினான். அவன் நினைவு அந்த நாள் இரவுக்குப் போனது.

சித்ரா பௌர்ணமி, முரளியின் வீடு.. இரவு ஆரம்பித்த நேரம். கையில் ஒரு பெரிய காரியருடன் உள்ளே நுழைகிறார் கந்தசாமி.

“முரளி.. முரளிக் கண்ணா.. என்னடா நீ கூப்பிடாமயே நான் வந்திருக்கேன் அப்படின்னு பார்க்கிறயாடா? பரவாயில்லே.. நீ கூப்பிடாட்டி என்னடா.. நீ யாரு? உன்னை வளர்த்து ஆளாக்கினவனே நான்தானேடா.. வா இன்னிக்கு இங்கதான் நான் சாப்பிடப் போறேன். பொன்னம்மாவை ஹெல்ப்க்கு வரச் சொல்லி இருக்கேன். இப்போ வந்துடுவா”

பிரியா வருகிறாள்.

“மாமா.. இங்க ஏன் வந்தீங்க? உங்களை வரவேண்டாம்னு இவர்கிட்டே சொல்லி அனுப்பியிருந்தேனே.. தயை செய்து முதல்ல வெளியே போங்க..”

“முரளி என்னடா இது என் ரஞ்சிதாவா இப்படியெல்லாம் பேசறா? மாமா’ன்னு கூப்பிடறா.. நான் வெளியே போகணுமாம் என்னடா இது புதுசா இருக்கு? “

பிரியா சப்தமிடுகிறாள்.

“இல்லே.. நான் இப்போ அந்த ரஞ்சிதா இல்லே.. அவ செத்துப் போயாச்சு.. நான் பிரியா.. பிரியாமுரளி.. நீங்க வெளியே போய்தான் ஆகணும். இல்லே போலீஸைக் கூப்பிடுவேன்.”

சிரித்தார் கந்தசாமி.

“இதோ பாரு ரஞ்சிதா! போலீசு.. அது இது எல்லாம் எங்கிட்டே எதுக்கு பூச்சாண்டி காமிக்கறே.. நம்ம முரளி நாமெல்லாம் இப்போ சேர்ந்து சாப்பிட்டதுக்கப்பறம் அவன் என் வீட்டுக்குப் படுக்கப் போயிடுவான். எனக்கு  மத்தியானம்தான் இன்னிக்கு சித்ரா பௌர்ணமின்னு ஞாபகம் வந்துச்சு.  ரெண்டாம் வருஷம் நம்ம சித்ரா பௌர்ணமி வைபவத்தை சிதம்பரத்துல உங்க அம்மா வீட்ல கொண்டாடினோமே.. எல்லாம் மறந்துட்டியா.. நான் அந்த இன்பமான இரவை மறக்கலே.. மறக்கவும் முடியாது. உங்கம்மாதான் எல்லா ஏற்பாடும் உங்க வீட்டு மொட்டை மாடில கச்சிதமா பண்ணினாளே.. உனக்குத் தெரியுமா உங்கம்மாவுக்கு சமீபத்துல கூட அஞ்சு லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன். எல்லாம் யாருக்காக? என் ரஞ்சிதாவுக்காகத்தான்.”

பிரியா கத்தினாள்.

“முரளி.. முதல்ல உங்க மாமாவை நீங்க வெளியே துரத்துங்க.. இதோ பாருங்க மிஸ்டர் கந்தசாமி.. எனக்கும் எங்கம்மாவுக்கும் உறவு எப்பவோ அறுந்து போச்சு. அதேமாதிரி  இனிமே எனக்கும் உங்களுக்கும் எந்த உறவுமில்லே.. நான் உங்க வளர்ப்பு முரளியோட அன்பு மனைவியா வாழ்ந்துட்டிருக்கேன்.. தயை செய்து எங்க குடும்ப வாழ்க்கையைக் கெடுக்காதீங்க..”

“ஆமாம் மாமா.. நான் ஏற்கனவே நிறைய தடவை உங்களுக்குச் சொன்னதுதான். இப்போ பிரியா என்னோட பொண்டாட்டி. தாலி கட்டியிருக்கேன் நான். அவளைப் பாதுகாக்கவேண்டியது என் பொறுப்பு. எங்களுக்கு நீங்கதான் கலியாணம் செஞ்சு வெச்சிங்க. தயை செய்து பழசையெல்லாம் மறந்து எங்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்து எங்களை வாழவிடுங்க.”

“மடையா! இவ உன் பிரியா இல்லே.. என்னோட ரஞ்சிதா.. நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவ. ஏன் அவளே என்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தானே சொன்னவ.. இல்லேன்னு சொல்லச் சொல்லு.. முரளி.. நீ குழந்தை.. உனக்கு ஒண்ணும் தெரியாது.. இதோ பார். இது ஒரு காண்ட்ராக்டு, இதுல நீ அந்த காண்டிராக்டர்.. உனக்குப் பணம் கொடுத்தாச்சு. உன் வேலை என்னவோ அதை செஞ்சுருக்கே.. அவ்வளவுதான்.. நீ நகரு சொல்லறேன்!” கந்தசாமி அவளருகே சென்று அவள் கன்னத்தைப் பிடித்தார். அவளோ அவரைப் பிடித்துப் பின்னால் தள்ள அவர் பின்வாங்கினார்.

அப்போதுதான் பொன்னம்மா கதவைத் தட்டி உள்ளே நுழைந்தாள். அவள் அங்கு நடந்த விஷயங்கள் புரியாததால் அங்குள்ள டைனிங்க் டேபிளில் இருந்த கேரியரை ஒவ்வொரு கப்பாக எடுத்து வைத்துவிட்டு பிரியாவைக் கேட்டாள்.

“பிளேட்லாம் எடுத்து வையுங்கம்மா.. எங்க வெச்சிருக்கற சொல்லு. நான் கொண்டாறேன்”, என்று சமையலறை பக்கம் சென்றாள். அவளோடு வந்த பிரியாவும் அங்கே வந்து அழுதாள். அவள் கண்ணீர் பெருக நின்ற நிலை பொன்னம்மாவுக்கு இரக்கம் தந்தது.

“எதுக்கும்மா அழறே.. வாம்மா.. நான் உனக்கு ஹெல்ப் பண்ணறேன்.. ஐய்ய அழுவாதேம்மா..” குரலைக் கேட்டு முரளி உள்ளே வந்தான். பிரியாவிடம் அமைதியாகப் பேசினான்.

“அழாதே பிரியா.. வா.. சாப்பிடலாம்..பொன்னம்மா பறிமாறுவா..” என்றவன் அவள் காதருகே வந்தவன் மெல்லப் பேசினான். “நான் சாப்பிட்டவுடனே அவரை அனுப்பிச்சுடறேன்.. நீ பயப்படாம வா..”

மூவரும் டைனிங்க் டேபிளில் சாப்பிடுகையில் மெதுவாக ஆனால் சர்வ சாதாரணமாகப் பேசினார் கந்தசாமி.

“முரளி! நாம சாப்பிட்டதும் என்ன பண்றே? பொன்னம்மாகிட்டே பாத்திரம் கொடுத்தனுப்பாதே.. அவளையும் சாப்பிடச் சொல்லிட்டு நீ என்ன பண்றேன்னா கீழே என் காரை எடுத்துண்டு நம்ம வீட்டுக்குப் போயிட்டு ஜாலியா படுத்துத் தூங்கு. நான் ராத்திரி இங்க இருக்கேன். காலைல நீ வரச்சே சீக்கிரம் வந்துட்டியானா ரெண்டு பேரும் சேர்ந்து வாக்கிங்க் போகலாம். ஏன் வேணுமின்னா ரஞ்சிதா கூட நம்ம கூட ஜாயின் பண்ணலாம். என்ன ரஞ்சிதா கண்ணு.. உனக்கும் ஓகேயா?”

பிரியா திடீரென பாதிச் சாப்பாட்டில் எழுந்தாள். கந்தசாமியை ஒரு முறை முறைத்துவிட்டுச் சென்றாள்.

சாப்பிட்டதும் பொன்னம்மாள் சொல்லிக்கொண்டு வெளியே கிளம்பினாள்.  கூடவே வெளியே வந்த பிரியா, பொன்னம்மாளை கையைப் பிடித்து நிறுத்தினாள்.

“தயவு செய்து என்னை விட்டுட்டு போகாதே பொன்னம்மா. நீயும் என்னோட இங்க தங்கு பொன்னம்மா ப்ளீஸ்..”

“ஐய்யய்யோ என்னம்மா நான் எப்படி உங்க கூட தங்கறது?.”

“இல்லே பொன்னம்மா.. என்னை இப்போ நீதான் இந்த வெறிபிடிச்சவங்கிட்டேயிருந்து காப்பாத்தணும். தயவு செஞ்சி நீ இங்க ஒரு ராத்திரி என்னோட படுத்துக்கோ.. நாளைக்கு நான் எங்க ஊருக்குப் போயிடறேன்.”

பொன்னம்மா காலைப் பிடித்து அழுதாள் பிரியா. அவளுக்கு ஏதோ புரிந்தது.

“ஏம்மா ஒரு காரியம் பண்றியா?”

“எதை நீ சொன்னாலும் கேக்கறேன். இன்னிக்கு ஒரு ராத்திரி உதவி பண்ணு பொன்னம்மா?”

“நீ கீழ மயக்கம் போட்ட மாதிரி விழு”

பிரியா உடனே “அம்மா’ எனச் சொல்லிக்கொண்டே கீழே விழுந்தாள். உடனே பொன்னம்மா கூவ ஆரம்பித்து விட்டாள். ‘ஐய்யோ இந்தப் பொண்ணு கீழ வியுந்துடுச்சே.. என்று கத்தினாள். உடனே முரளி வெளியே வந்தான். அவளைத் தாங்கிக் கொண்டே அவள் தலை அவன் தோள் மேல் சாய மெல்ல சாலைக்கு வந்து பொன்னம்மாவையும் அவளையும் சேர்த்து ஆட்டோவில் பக்கத்திலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு போகச் சொன்னான், அவளும் அப்படியே செய்ய ஆட்டோ வேகமாகப் போனவுடன் மேலே வந்தான்.

மறுபடியும் கல்யாண் வீடு.

முரளி சொன்ன அத்தனையும் கல்யாணும் கோம்டியும் கேட்டார்கள். கோம்டி புன்னகைத்தாள்.

“உங்க நிலைமை எனக்குப் புரியுது மிஸ்டர் முரளி. இப்போ வரைக்கும் நீங்க சொன்னதை வெச்சுப் பார்க்கிறபோது பாசவலையில சிக்கித் தவிச்சு வேற வழியில்லாம ஒருவிதமான விசித்திர வாழ்க்கையை அனுபவிச்சிருக்கீங்க.. சரி அதுக்கப்பறம் அன்னிக்கு ராத்திரி ஏன் நீங்க யாரும் பிரியாவைப் பார்க்க ஹாஸ்பிடல் போகலே.. பிரியாவுக்கு ஒரு ஆபத்துன்னா நீங்க ஓடிப்போயிருக்கணுமே.”

“சரிதான் ஆனா பிரியாவை தூக்கிண்டு போகறச்சேயே அவன் காதுல ஒரு வார்த்தை முனகினா.. அவ சொன்னபடி செஞ்சதினாலே நான் போகலே.”

மறுபடியும் முரளி பழைய இடத்துக்கு தன் நினைவுகளைக் கொண்டு போனான்.

முரளி வீட்டின் வாசலறை.

பிரியாவைக் கஷ்டப்பட்டு தோளில் சாய்த்தபோது அவன் காதருகே மெல்ல முனகினாள்.

“இன்னிக்கு எப்படியாவது ஹாஸ்பிடல்ல நான் படுத்துண்டு நாளைக்கு வரேன். நீங்க அந்தாளை ஏதாவது சொல்லித் துரத்தி விட்டாதான் என் மூஞ்சில மறுபடி முழிக்கமுடியும்.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”

அவன் தலைய ஆட்டிக்கொண்டே அவளையும் பொன்னம்மாவையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தான். அங்கே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த கந்தசாமி உறுமினார்.

“என்ன நாடகம்டா இது.. என்னாச்சு அவளுக்கு.. ம்.. நீ கூட நம்மளோட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனை மறந்துட்டியா.. நானும் போனா போறதுன்னு இவ்வளோ நாள் பொறுத்துண்டிருந்தேன்.. ஏண்டா மடையா.. என் வீக்னெஸ் எல்லாம் சொல்லித்தாண்டா உனக்குக் கல்யாணம் பண்ணேன். உனக்கு அதுக்காக பணமும் கொடுத்தேன், பத்து லட்ச ரூபாய்டா.. சுளையா கேஷாக் கொடுத்தேனேடா.. நீ என்னடான்னா பேரை மாத்திட்டேன் ஊரை மாத்திட்டேன், வாழ்க்கை சுகமா போறது.. அப்படியே விடுங்கன்னு கெஞ்சறே.. நோ நோ.. நீ இந்த பொம்பளைக்கு மயங்கிட்டியா சொல்லுடா.. எனக்குத் தெரிஞ்சாகணும்.”

முரளி கொஞ்சம் மௌனம் சாதித்து விட்டுப் பேசினான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.