Author: முனைவர் ஆ. சந்திரன்

  • (Peer reviewed) அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

    (Peer reviewed) அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

    முனைவர் ஆ.சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த் துறை
    தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்

    அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்

    “தற்காலத் திறனாய்வில் மட்டுமல்ல, பழங்காலத்திலேயே கவிதையானது பல உறுப்புகள் இணைந்த அமைப்பு என்ற சிந்தனை நிலவியிருந்தது. எனவே அரிஸ்டாட்டிலின் கவிதையியலிலும் கவிதையைப் பல தளங்களாலான அமைப்பாக நோக்கும் பாங்கு காணப்படுகிறது” என்று கூறும் இலா.குளோறியா சுந்தரமதி, “முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் செய்யுளின் உறுப்புகள் என்று 34-இனை (26-8) கூறும் செய்யுளியலின் முதல் நூற்பாவினைச் சான்று காட்டி, பழங்காலத்திலிருந்தே இத்தகைய ஓர் ஆய்வுச் சிந்தனை இருந்துள்ளது”1 எனக் குறிப்பிட்டுள்ளார். புகழ் பெற்ற இலக்கியத் திறனாய்வு மேதையான ரெனிவெல்லக் என்பவரும் “ஒரு கலைப் படைப்பு பல அளவைகளாலான ஓர் எளிய தொகுதியன்று. அது பல அடுக்குகளைத் தன்னுட்கொண்ட ஒரு தொகுதியாகும்”2 என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட விளக்கங்கள், கவிதை என்பது பல வகையான உறுப்புகள் அல்லது உட்கூறுகளால் கட்டப்பெற்ற ஒன்று என்பதை உறுதி செய்கின்றன.

    பிரெஞ்சு அமைப்பியல் வல்லுநரான தோடரவ், கதை ஆய்வில் பகுப்பாய்வினை மேற்கொண்டு கதையின் இலக்கணத்தை மொழி இலக்கணத்தைப் போன்று உருவாக்கியுள்ளார். அவா் “கதைகளுக்கு ஓர் அடிப்படையான இலக்கணம் ஆழ்ந்த நிலையில் உண்டு. அதிலிருந்து தனிக் கதைகள் உருவாகின்றன”3 என்ற தன்னுடைய கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளார். விளாடிமா் பிராப் எனும் உருசிய நாட்டு அறிஞா், வனதேவதைக் கதைகளைப் பகுப்பாய்வு செய்தார். அதன் விளைவாக அக்கதைகள் அனைத்தும் முப்பத்தொரு ‘செயற்கூறுகளினுள் அடங்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவரது பகுப்பாய்வு அமைப்பியல் ஆய்வில் ஒரு மைல் கல்லாகவே கருதப்படுகிறது.”4 இவ்வாறு மேற்கில் உருவான அமைப்பியல் ஆய்வு முறையில் ஈடுபட்டவா்களில் உல்ப்கான் கிளமன், தோடராவ், விளாடிமா் பிராப் முதலானவா்கள் குறிப்பிடத்தக்கவராவா்.

    கதைகளையும் கவிதைகளையும் அமைப்பியல் நோக்கில் ஆராயும் இத்தகைய புதிய ஆய்வுப் போக்கானது 1980-களில் இருந்து தமிழில் நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய ஆய்வில் ஈடுபட்டவர்களில் தமிழவன்5, இலா.குளோறியா சுந்தரமதி6, அ.ஆலிஸ்7, த.விஷ்ணுகுமரன்8 போன்றோர் குறிப்பிடத்தக்கவராவா். இத்தகைய ஆய்வுகளின் தொடர்ச்சியாகப் பத்துப் பாட்டில் இடம்பெற்றுள்ள முல்லைப் பாட்டு மற்றும் நெடுநல்வாடையின் அமைப்பு முறை எவ்வாறு உள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

    முல்லைத் திணையின் பின்புலத்தில் அமைந்துள்ள இந்த இரு பாடல்களையும் பொருள்தரும் சிறு சிறு கூறுகளாகப் பகுக்க, அவற்றில் மொத்தம் பத்துப் பொருட்கூறுகள் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. அவை  பின்வருமாறு அமைந்துள்ளன.

    வ.எண் பொருட்கூறுகள் முல்லைப்பாட்டு நெடுநல்வாடை
    1 கார்கால வருணனை 1-6 1-2
    2 கோவலா்களின் செயல்பாடுகள் 12-15 2-8
    3 மாலைக்கால வழிபாடு 6-11 36-44
    4 கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள் (நெடுநல்வாடையில் மட்டும்) 45 -71
    5 பாசறை அமைப்பு வருணனை – அரண்மனை அமைப்பு வருணனை 24-36

     

    72-100
    6 படைவீட்டின் அமைப்பு வருணனை – அந்தப்புரத்தின் அமைப்பு வருணனை 37-58 101-114

     

    7 பள்ளியறை அமைப்பு வருணனை – கட்டில் அமைப்பு வருணனை 59-66 115-135
    8 தலைவியின் துயரம் 22-23,

    81-88

    136-147,157-167
    9 தலைவியைத் தேற்றுதல் 16-21 148-155
    10 வேந்தனின் செயல்பாடுகள் (மனநிலை)

     

    67-80,

    89-103

    168-188

     

    இவற்றில் “கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்” என்ற கூறினைத் தவிர்த்த பிற ஒன்பது பொருட்கூறுகளும் இரு பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பொருட்கூறுகள் 5, 6, 7 ஆகியன இரு பாடல்களிலும் அமைப்பு நிலையில் ஒத்துள்ளன. ஆனால், கூறும் இடங்கள் மட்டும் வேறுபட்டு அமைந்துள்ளன. அதாவது, முல்லைப் பாட்டில் பாசறை அமைப்பு பற்றிய வருணனை கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் பாசறை பற்றிய வருணனையின் இடத்தில் அரண்மனையின் அமைப்பு வருணனை அமைந்துள்ளது. இதைப் பாசறை அமைப்பிற்குப் பதிலியாகக் கொள்ளலாம். இவ்வாறே முல்லைப் பாட்டின் படைவீட்டின் அமைப்பு மற்றும் பள்ளியறை அமைப்புகளுக்கு, நெடுநல்வாடையின் அந்தப்புர அமைப்பு வருணனை மற்றும் கட்டில் அமைப்பு வருணனை ஆகியவற்றைப் பதிலிகளாகக் கொள்ளலாம். இக்கூறுகள் அமைந்துள்ள முறைகளைப் பற்றி இனிச் சுருக்கமாகக் காண்போம்.

    கார்கால வருணனை

    “காரும் மாலையும் முல்லை” (தொ.பொ.அகம்.952)

    என்று முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதையும் சிறுபொழுதையும் தொல்காப்பியம் கூறுகிறது. காரும் மாலையும் முல்லைக்கு  உரியனவாகக் கூறக் காரணம் “பிரிந்து மீளும் தலைவன் திறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுவது முல்லைப் பொருளாம். அம்முல்லைக்குரிய காலம் கார்காலம்” என்று விளக்கமளித்துள்ளார் நச்சினார்க்கினியா். இத்தகைய கார்காலத்தில் பெய்த பெரும் மழையைப் பற்றி இரு பாடல்களிலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பொருட்கூறு, இரு பாடல்களிலும் முதல் ஆறு அடிகளுக்குள் அமைந்துள்ளது.

    “அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கர வடிவமும், வலம்புரி சங்கின் வடிவமும் ஆகிய குறிகளைக் கொண்ட கைகளையுடையவனும் திருமகளைத் தன் வலப்பக்க மார்பில் தங்கச் செய்தவனும் மாவலி வார்த்த நீர் தன்கையில் நிறைந்து வழிந்த உடனே விண்ணிடத்தே நிமிர்ந்து நின்ற நெடியோனும் ஆகிய திருமால் போல், பேரொலி செய்கின்றதும் குளிர்ச்சி உடையதுமாகிய கடலின் நீரைப் பருகி, வலப்பக்கமாக வானத்தே எழுந்து, மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, உலகத்தை வளைத்தெழுந்த விரைந்து செல்லுதலையுடைய முகில் பெருமழை பெய்த சிறுபொழுதாகிய இழிந்த மாலைக் காலம் (1-6)” என்று முல்லைப் பாட்டில் கார்கால வருணனை உவமையுடன் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

    நெடுநல்வாடையில், “உலகம் குளிரும்படி பருவந்தோறும் பொய்யாது மழை பொழிகின்ற முகில்கள் திரண்டு எழுந்து அவை படிந்து கிடந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து மழையைப் பொழிந்தன (நெடு.1-2)” என்று கார்காலத்தில் பெய்த புது மழையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

    முல்லைப் பாட்டில் கார்கால மழை மேகத்தின் செயலினைத் திருமாலின் வாமன அவதார புராண நிகழ்ச்சியுடன் உவமித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் கார்காலம் பற்றிக் ‘கார் காலத்தில் பெய்த புதுப்பெயல்’ என்று இரண்டே அடிகளில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

    கோவலா்களின் செயல்பாடுகள்

    கார்காலத்தில் பெய்த பெருமழையால் கோவலர்கள் அடைந்த துன்பங்கள் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன. முல்லைப் பாட்டில் “இடையா் குலமகள் குளிரால் நடுங்கிய தன் தோள்களின் மேல் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள் (முல்.13-15)” என்று ஒரே அடியில் கோவலரின் செயல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் “கோவலர்கள் பெருமழையின் காரணமாக அந்த நிலத்தை விட்டு மேடான நிலத்தை நோக்கித் தம்மிடம் உள்ள பசு, எருமை, ஆடு ஆகியவற்றுடன் சென்றனா். அவா்களின் உடல் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. அக்குளிரின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள இயலாமல் இடையா்கள் பலரும் ஒன்றுகூடி நெருங்கியிருந்ததுடன், நெருப்பினைக் கொண்டு குளிரைப் போக்கிக்கொள்ள முயன்றனா். ஆயினும் குளிர்மிகுதியால் அவா்களுடைய பற்கள் பறை கொட்டின (முல்.2-8)” என்று கோவலா்களின் துயரங்கள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ‘கோவலா்கள் அடைந்த துயரங்கள்’ என்ற இந்தப் பொருட்கூறு, முல்லைப் பாட்டைவிட நெடுநல்வாடையில் சற்று விவரித்துக் கூறப்பட்டுள்ளது.

    மாலைக்கால வழிபாடு

    முல்லை நில மக்கள் சிறுபொழுதாகிய மாலைக் காலத்தில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுதல், நெல்லுடன் பலவித மலா்களைத் தூவி இறைவனை வழிபடுதல் ஆகியவற்றினை மேற்கொள்வா். அத்தகைய பெருமழை பொழிந்த அம்மாலை வேளையில் மகளிர் வழிபாடு செய்த முறையைப் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

    “பெருமழை பெய்த சிறு பொழுதாகிய இழிந்த மாலைக் காலத்தில், பகைவா்கள் எளிதில் புகுவதற்கு இயலாத அரிய காவல் அமைந்த பழமையான ஊரில், யாழ் போன்ற இசையுடன் வண்டினங்கள் ஆரவாரஞ்செய்ய, நாழி என்னும் அளவுக் கருவியில் கொண்ட நெல்லுடன் நல்ல மணம் கமழும் மலா்ந்த புதிய மலா்களைச் சிதறி, தெய்வத்தைக் கையால் தொழுது வயது முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்பா் (முல்.6-11)” என்று முல்லைப் பாட்டில் மாலைக் காலத்தில் நடக்கும் வழிபாட்டினைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறே நெடுநல்வாடையிலும் மாலைக் காலத்தில் நடந்த வழிபாட்டினைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு. “வெண்மை நிறம் பொருந்திய சங்கு வளையல் அழுந்திய முன்கையையும் மூங்கில் போன்ற தோளினையும் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இனிய சாயலையும் உடையவா் ஊர் மக்கள். அவா்கள் முத்துப் போன்ற பொலிவினையுடைய மகரக் குழைகளைக் காதில் அணிந்துள்ளனா். அதற்கு ஏற்றாற்போல் உயா்ந்து தோன்றுகின்ற அழகினையுடைய குளிர்ந்த கண்களைப் பெற்றுள்ளனா். இளம்பெண்டிர் பூந்தட்டிலே இட்டுவைத்த மலரும் நிலையிலிருக்கும் பிச்சியின் அரும்புகள் பசிய நிறமுள்ள தம் காம்புகள் வரை மென்மையாக மலா்ந்து மணம் பரப்ப, மாலைப் பொழுது வந்தது எனத் திரிகளை இரும்பு விளக்கில் இட்டனா். நெய்வார்த்துக் கொளுத்தினா். நெல்லையும் மலா்களையும் தூவித் தம் இல்லத் தெய்வத்தைக் கைகுவித்து வணங்கினா் (நெடு.36-44)”.

    இவ்வாறு இரு பாடல்களிலும் மாலை நேரத்தில் மகளிர் விளக்கேற்றுதல், நாழிகை அளவுடைய கருவியில் நெல்லினையும் மணம் கமழும் பலவித மலா்களையும் தூவி இறைவனை வணங்குதல் ஆகியன ஒரே தன்மையில் கூறப்பட்டுள்ளன.

    எனினும் முல்லைப் பாட்டில் மாலைக் கால வழிபாடும் அதனைத் தொடர்ந்து கோவலர்களின் செயல்பாடுகளும், நெடுநல்வாடையில் கோவலர்களின் செயல்பாடுகளும் அதனைத் தொடர்ந்து மாலைக்கால வழிபாடும் என்ற முறையில் இந்தப் பொருட்கூறுகள் (மாலைக்கால வழிபாடு, கோவலர்களின் செயல்பாடுகள்) முன்பின் / பின்முன் என இடம் மாறி அமைந்துள்ளன. மற்றபடி இந்த இரு பொருட்கூறுகளும் ஒரே தன்மையில் அமைந்துள்ளன.

    தலைவியின் துயரம்

    போரின்கண் பிரிந்து சென்ற தலைவன், தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும், அவன் வாராமையால் அவனை நினைத்து நீங்காத துயா் அடைகிறாள் தலைவி. அவ்வாறு துயருற்று வருந்தும் தலைவியின் துன்பத்தைப் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

    “தலைவி, தோழிகள் ஆறுதல் சொல்லியும் மனம் தளா்ந்து பூப்போன்ற கண்களில் முத்துப் போன்ற துளிகள் சிந்த (முல்.22-23) துன்பமுற்று தன் நெஞ்சை அவன்பால் போக்கினாள். தன் மனக் கட்டுப்பாட்டினை இழந்து தனிமையில் வருந்தினாள். பின்னா் இங்ஙனம் வருந்துதல் தன் தலைவன் சொல்லைத் தவறியதாகும் என்றும், பிரிந்தாலன்றி அரசியல் நிகழாது போலும் என்றும் தன்னைத் தேற்றிக்கொண்டாள். கழலும் வளையல்களைத் திருத்திக் கொண்டாள். மீண்டும் மயங்கினாள். பெருமூச்சு விட்டாள். அம்பு தைத்த மயில்போல் நடுங்கினாள். மீண்டும் அணிகலன்கள் நெகிழப் பெற்றாள். பாவை விளக்கு ஏந்தி நின்ற தகளியில் பெரியதாய் விளக்குச் சுடா் நின்று எரிந்துகொண்டிருந்தது. தனக்குரிய இடம் எல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்று உயா்ந்து விளங்கிய ஏழடுக்கு மாளிகையில் கூடல் வாய்களினின்று சொரியும் பெரிய வாய்த்திரண்ட மழைநீர் அருவி போல் விழ, அதன் இனிய பல இசையாகிய ஓசையைக் கூர்ந்து செவி கொடுத்துக் கேட்டுத் தன் மனக்கருத்தை வேறொன்றில் செலுத்திக் கிடந்தாள் (முல்.81-88)” என்று தலைவியின் துயரக் காட்சியை விவரிக்கிறது முல்லைப் பாட்டு.

    இவ்வாறே நெடுநல்வாடையும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துயரை விவரிக்கின்றது. அது பின்வருமாறு அமைந்துள்ளது.  “முத்தால் செய்த கச்சு சுமந்த பருத்த மார்பிடத்தே ஒப்பனை செய்யாமல் நெடிய மங்கல நாண் ஒன்று மட்டுமே தொங்கிக்கொண்டிருந்தது. தன் கணவனைப் பிரிந்தமையால் அழகிய நெற்றியை உடைய அரசியார் நெய்ப்புத் தன்மை வற்றிப் போனாள். மிக்க ஒளி செய்யும் காதணியாகிய மகரக் குழையை அகற்றிவிட்டதனால் அக்குழை அழுத்தியதால் ஏற்பட்ட வடு, காதினில் நன்றாகத் தெரிந்தது. பொன்னால் செய்த தொடி கிடந்து அழுத்திய தழும்பு இருந்த அவள் முன்கையில் இப்போது வலம்புரி சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட வளை ஒன்று மட்டுமே இருந்தது. வாளை மீனின் திறந்த வாயை ஒப்ப முடக்கத்தை உண்டாக்கிச் சிவந்த விரலிடத்தே செந்நிறமான பூத்தொழிலை உடைய மோதிரத்தை அணிந்திருந்தாள். அவள் தோற்றம் வடிவம் மட்டும் வரைந்த புனையா ஓவியம் போல் இருந்தது (நெடு.136-147)” அவள் ஞாயிறுடன் மிகவும் மாறுபட்ட திங்களின் ஓவியத்துடன் நிலைத்துள்ள ரோகிணியின் ஓவியத்தை உற்று நோக்கி, ‘யாமும் இவள் போன்று காதலரோடு பிரிவின்றி உடனுறைய பெற்றிலமே’ என்று நினைத்து கண்களிலே நீர் பெருக்கெடுக்க வருத்தமுற்று காணப்பட்டாள் (நெடு.162-165)”.

    முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்து தலைவியுற்ற துயரம், அம்பு தைத்த மயிலின் நடுக்கத்தை ஒத்தது என்கிறது. ஆனால், நெடுநல்வாடையிலோ தலைவியின் துயரம் புனையாத ஓவியம் போன்றது என்கிறது. அத்துடன், தலைவனின் வருகைக்காகக் காத்திருந்த தலைவியின் நிலையை இரு பாடல்களும் சிறந்த உவமைகளுடன் வருணித்துள்ளன. முல்லைப்பாட்டில் தலைவனின் குதிரைச் சத்தத்தை எதிர்நோக்கியவளுக்கு அருவியின் ஒலியே மிஞ்சியது என்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் தலைவனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்குச் சந்திரன், உரோகிணி இணைந்துள்ள ஓவியமே எதிர்ப்பட்டது என்று கூறுகிறது. அதாவது, இருவரின் துன்பத்தையும் இந்த நிகழ்வுகள் மேலும் அதிகப்படுத்தின என்பதையே இவை  காட்டுகின்றன.

    தலைவியைத் தேற்றுதல்

    தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியைத் தேற்றுவதான பொருட்கூறு இரு பாடல்களிலும் அமைந்துள்ளது.

    தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவனுடைய வருகையைக் காணாமல் தலைவி மிகவும் வருத்தமடைகிறாள். தலைவியின் அந்த வருத்தத்தைப் போக்கத் தோழிகள், “இளங்கன்று தாய் பசுவைப் பிரிந்து வருந்திக்கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட முதுமகள் அவற்றினை நோக்கி உங்கள் தாயார் விரைவில் வந்துவிடுவா் என்றாள். அத்தகைய நன்மொழியை நாங்கள் கேட்டோம். அதனால் நம் தலைவருடைய வாய்மொழி என்றும் தவறாது. எனவே தலைவா் பகைவா்களை வென்று விரைவில் திரும்பிவிடுவார். நீ உன் துன்பத்தை நீக்குவாயாக! (முல்.16-21)” என்று ஆறுதல் கூறுவதாக முல்லைப் பாட்டில் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறே நெடுநல்வாடையிலும்,

    “சென்முகச் செவிலியா் கைமிகக் குழீஇ
    குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
    இன்னே வருகுவா் இன்துணையோர் என” (நெடு.148-156)

    ஆறுதல் கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    அதாவது, முல்லைப் பாட்டில் ‘நற்சகுணம் ஏற்பட்டதால் தலைவன் விரைவில் வருவான்’ என்று ஆறுதல் மொழி கூறுவதாகவும் ஆனால், நெடுநல்வாடையில் ‘குறியவும் நெடியவும் பல கதைகள் கூறித் தலைவன் விரைவில் வருவான்’ எனத் தேற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளன. அத்துடன், முல்லைப்பாட்டின் தலைவியைத் தோழிகள் ஆற்றுப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் தலைவியைச் செவிலித்தாய் ஆற்றுப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறும் செய்திகள் மற்றும் கூறுபவா் வேறுபட்டிருப்பினும், நோக்கம் தலைவியின் மனத்தில் உள்ள துயரத்தைப் போக்குவதேயாகும். ஆக, அந்த அம்சம் இரு பாடல்களில் ஒரே தன்மையில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.

    வேந்தனின் செயல்பாடுகள்

    தலைவி, தலைவனைப் பிரிந்து வாடும் அதே வேளையில் போர்முனையில் இருக்கும் தலைவன் போரில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளான். இவ்வாறு போர்முனையில் இருக்கும் வேந்தனின் செயல்பாடுகள் பற்றி இரு பாடல்களும் கூறுகின்றன.

    “தலைவன் பகைவா்களுடன் நடைபெற்ற போரில் புண்பட்ட வீரா்கள், யானைகள் மற்றும் குதிரைகளைப் பற்றி நினைத்து வருத்தமுற்றும் மறுநாள் நடைபெறப் போகும் போரைக் குறித்துக் கவலையுற்றும் உறங்காமல் கண்விழித்திருந்தான். மறுநாள் போரில் பகைவா்களை வென்ற மகிழ்ச்சியில் இரவு நன்றாக உறங்கினான்” (முல்.67-74) என்றும் “பகைவரை வென்று அவா்களுடைய நிலங்களைக் கைக்கொண்டு, திரண்ட பெரும் படையொடு, வெற்றிக் கொடியை உயா்த்தித் தன்நாடு நோக்கித் திரும்பினான். அவ்வாறு அவன் திரும்பும்போது கொம்புகள் ஊதப்பட்டன; சங்குகள் முழங்கத் தொடங்கின; வழியில் நுண் மணலிடத்து வளரும் நெருங்கிய இலைகளை உடைய காயாச் செடிகள் அஞ்சனம் போல் மலர்ந்தன; தளிரினையும் கொத்தினையும் உடைய கொன்றை மரங்கள் பொன் போன்ற இதழ்களைச் சொரிந்தன; வெண்காந்தளின் குவிந்த அரும்புகள் அங்கை போல் விரிந்தன; தோன்றிச் செடிகள் இரத்தம் போன்ற நிறமுடைய இதழ்களை மலா்த்தின; செழுமையான முல்லை நிலத்தில் விளைந்த கதிர்களை உடைய வரகு பயிரிடத்தே முருக்கிய கொம்புகளையுடைய கலைமான்களுடன் இளமையுடைய மான்களும் துள்ளி விளையாடின; இனிமேலும் பெய்வதற்காகச் செல்லும் வெண்மேகங்கள் மழை பொழிவதற்குரிய கார்காலம் தொடங்கும் ஆவணித் திங்களின் தொடக்கத்தில் முதிரும் காய்களையும், வள்ளிக் கிழங்கின் கொடிகளையும் கொண்ட காடு பின்னடைய விரைந்து செல்லும் இயல்புடைய குதிரைகளை மேலும் தூண்டிச் செலுத்தும் செல்லுகையுடையவராய் தலைவா் வந்தார். போர்த்தொழிலில் சிறந்த தமது திறம் மேலும் சிறந்து விளங்கும் நெடிய தோலால் பூட்டப்பட்டிருந்த அவருடைய குதிரைகள் ஆரவாரித்தன (முல்.89-103)” என்றும் முல்லைப் பாட்டில் தலைவனின் செயல்பாடுகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், நெடுநல்வாடையில் சுட்டப்படும் மன்னன், பாசறையில் அந்நாள் போரில் ஏற்பட்ட விளைவுகள் குறித்து வருந்துவதும், புண்பட்ட வீரா்களுக்கு ஆறுதல் கூறுவதுமான செயல்களைச் செய்துகொண்டிருப்பதாகவும் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு. “ஒளி விளங்கும் முகபடாத்தொடு பொலிவு பெற்று, போர்த்தொழிலைப் பயின்ற யானைகளை முன்னா் கொன்று பின்னா் பகைவருடைய ஒளி பொருந்திய வாள் பிளத்தலால், சீரிய புண்பட்டவராகிய வீரா்களின் புண்ணைப் பார்த்து ஆறுதல் கூறும் பொருட்டுத் தன் இருக்கையிலிருந்து புறத்தே புறப்பட்டான் அரசன். வட திசைக்கண்ணின்று குளிர்ந்த காற்று வீசும் தொறும் அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்து ஒளிவிடும் பெரிய சுடா் நல்ல பல விளக்குகளில் அணையாது எரிந்து கொண்டிருந்தது. வேப்பந்தாரை முனையில் கட்டின வலிமை வாய்ந்த காம்பினையுடைய வேலொடு முன்னா்ச் செல்கின்ற படைத் தலைவன், புண்பட்ட மறவரை முறை முறையாகக் காட்டிச் சென்றான். மணிகளைத் தம்மேல் இடப்பட்டனவும், பெரிய கால்களை உடையனவுமான யானைகளோடு, சேனம் நீங்காதனவும் பாய்ந்து செல்லும் இயல்பினையுடைய குதிரைகளும் நிறைந்த இடங்களில் சென்ற அவன்மீது அவை சேற்றுத் துளிகளைச் சிதறின. தன் இடத்தோளினின்றும் நழுவி விழுந்த மேலாடையை இடப்பக்கத்தே ஒரு கையால் அணைத்துக்கொண்டு வேலேந்தி முன்னா் செல்லும் காளையின் தோளிலே வலக்கையை வைத்துக்கொண்டு விழுப்புண் பட்ட வீரரைப் பார்த்துத் தன் செய்ந்நன்றியறிதலும் அன்பும் தோன்ற, முகத்தில் ஆர்வம் தோன்றுமாறு நோக்கி ஆறுதல் மொழிகளைக் கூறிச் சென்றுகொண்டிருந்தான். அவன் முத்து மாலை கட்டிய வெண்கொற்றக் குடை ‘தவ்’ என்னும் ஒலி பட்டசைந்து மழைத் துளியைத் தன்மீது விழாமல் மறைத்து நிற்க, நடுயாமத்தில் பள்ளி கொள்ளானாய்ச் சில மறவா்களே தன்னைச் சூழ்ந்து வரப் பாசறையின்கண் திரிந்து கொண்டிருந்தான் (நெடு.168-188)”.

    முல்லைப் பாட்டில் தலைவன் இரவில் உறக்கம் கொள்ளாமல் அடுத்த நாள் போருக்கான செயல்பாடுகள் பற்றிச் சிந்தித்தல், புண்பட்ட வீரா்கள், யானைகள், குதிரைகள் பற்றி நினைத்து வருந்துதல் ஆகியவற்றினைக் கூறி, அதன் பின்னா் மறுநாள் போரில் பகைவா்களை வெற்றி பெறல், மிக்க ஆரவாரத்துடன் தன் நாட்டிற்குத் திரும்புதல் ஆகியனவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  ஆனால், நெடுநல்வாடையில் அரசன் இரவு நேரத்தில் புண்பட்ட வீரா்களுக்குத் தன் பரிவாரங்களுடன் சென்று ஆறுதல் கூறுவதுடன் பாடல் நிறைவடைகிறது.

    அதாவது, ‘தலைவனின் செயல்பாடுகள்’ என்னும் இந்தப் பொருட்கூறு முல்லைப் பாட்டில் விரிவாகவும் நெடுநல்வாடையில் சற்றுக் குறைவாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

    கூறுகள் இடம் மாறி அமைந்தவை

    முல்லைப்பாட்டு தலைவியின் துயரினைப் பற்றிக் குறைவாகக் கூறி, தலைவனின் பாசறை இருப்பினைப் பற்றி விரிவாகக் கூறுகின்றது. ஆனால், நெடுநல்வாடை தலைவியின் துயரினைப் பற்றி விரிவாகக் கூறித் தலைவனின் பாசறை இருப்பினைப் பற்றிச் சுருக்கமாகவே விவரிக்கின்றது. நெடுநல்வாடையில் கார்கால நிகழ்வுகளைத் தொடா்ந்து ஊரின் வளம், பெண்களின் மாலைக்கால வழிபாடு, கூதிர்க் காலத்தில் நகரில் நடைபெறும் பிற நிகழ்வுகள், அரண்மனையின் தோற்றம்,  அந்தப்புர அமைப்பு, கட்டிலின் அமைப்பு ஆகியவற்றை விரிவாகக் கூறித் தலைவியின் துயா் கூறப்பட்டுள்ளது. ஆனால் முல்லைப் பாட்டில் கார்கால நிகழ்வுகள், கோவலா் செயல்கள் ஆகியவற்றினைத் தொடா்ந்து காட்டிலிருக்கும் தலைவனின் போர்ப் பாசறை, அதன் அமைப்பு, மகளிர் விளக்கேற்றுதல் எனப் போர்ப் பாசறை நிகழ்வுகள் பற்றிக் கூறிய பின்னர், தலைவியின் துயா் கூறப்பட்டுள்ளது அதாவது, இடம் மட்டுமே இங்கு மாற்றமடைகிறது. ஆனால் கூறுகின்ற பொருள், கூறும் முறைமை ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.

    முல்லைப்பாட்டில் கூறப்பட்டுள்ள பாசறையின் அமைப்பு (24-36), படைவீட்டின் அமைப்பு (37-44), பள்ளியறையின் அமைப்பு (59-66) ஆகியவற்றின் இடத்தில், நெடுநல்வாடையிலுள்ள அரண்மனை அமைப்பு (72-100), அந்தப்புரத்தின் அமைப்பு (106-114), கட்டிலின் அமைப்பு (115-135) ஆகிய வருணனைகள் இடம் பெற்றுள்ளன. அதாவது தலைவன் இருப்பிடம் தலைவியின் இருப்பிட வருணனைகளாக இவை மாறி மாறி அமைந்துள்ளன. இந்தப் பொருட்கூறுகள் அமைந்துள்ள முறையினைப் பற்றி இனிக் காண்போம்.

    பாசறை அமைப்பும் – அரண்மனை அமைப்பும்

    மகளிரின் மாலைக் கால வழிபாடுகள் பற்றிக் கூறிய பின்னா் முல்லைப் பாட்டு, பாசறை அமைப்பு (24-36) பற்றிக் கூறுகின்றது. ஆனால் நெடுநல்வாடை, அரசி வீற்றிருக்கும் அரண்மனையின் அமைப்பு பற்றிக் (72-100) கூறுகின்றது.  அதாவது, முல்லைப் பாட்டு, போர் மீது சென்ற தலைவன் போர்க்களத்தில் அமைத்த படைவீட்டின் அமைப்பைப் பற்றிக் கூற, நெடுநல்வாடை தலைவி வீற்றிருக்கும் அரண்மனையின் எழில்மிகு தோற்றத்தைப் பற்றிக் கூறுகின்றது.

    “காட்டாறு சூழ்ந்த அகன்ற பெரிய காட்டினிடத்தே மணமிக்க பிடவ மலா்களுடன், பசுமையான தூறுகளையும் வெட்டினா். பகைவா் நாட்டிற்குக் காவலாக அமைந்த வேட்டுவா்களின் சிறு வயல்களையுடைய அரண்களையும் அழித்தனா். அக்காட்டில் உள்ள முட்களால் மதில் போன்ற வேலியை உண்டாக்கினா். அதனைக் காவலாக வளைத்து அமைக்கப்பட்டது, மிக்க நீர் நிறைந்த கடல் போன்று அகன்ற பாசறை. அப்பாசறையின் அருகில் இருந்த யானைகள், உணவு உண்ணுதலை மறுத்தன. அவற்றினைப் பாகா்கள் உணவு உண்ணுமாறு செய்தனா் (முல்.24-36)” என்று பாசறை அமைந்துள்ள அழகைப் பற்றி முல்லைப்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறே நெடுநல்வாடையிலும் மதிலின் அமைப்பு, வாயிலின் தோற்றம், மற்றும் அரண்மனை வாயிலில் குதிரைகள், மயில்கள் போன்றன இருந்த தன்மைகள் ஆகியன விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு. “எல்லாத் திசைகளிலும் தன் கதிர்களைப் பரப்பி அகன்ற ஞாயிறு மண்டிலம், நிலத்தே இரண்டிடங்களில் நாட்டப்பெற்ற இரு கோலின் நிழல் எப்பக்கமும் விழாதபடி அக்கோலிலேயே பதினைந்து நாழிகையில் அடங்கி நிற்றலை நூலறி புலவா் நுட்பமாய் ஆராய்ந்து பார்த்தனா். அதன்பின் அங்ஙனம் நின்ற நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துவோர் முதலிய திசைகளைக் குறித்துக் கொண்டனா். பின்னா் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களை நோக்கி, முடிமன்னா் வாழ்வதற்கு ஏற்ப, மனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் பிறவற்றையும் கூறுபடுத்தி அமைத்தனா். இவை அனைத்தும் உள்ளே இருக்குமாறு வளைத்து உயா்ந்து நிற்கும்படி மதிலினை அமைத்தனா். பெரிய இரும்பு ஆணிகளுடன் பட்டங்களும் கட்டிச் செவ்வரக்குப் பூசி இரட்டைக் கதவுகளைச் சிறிதும் இடைவெளியின்றி இணைத்து, அழகிய உத்திரத்திலே செருகினா். அதில் மலா்ந்த குவளையை ஒப்ப உருக்களை அமைத்தனா். கைத்தொழில் வல்ல தச்சன் செய்ததால், யாதொரு குறைபாடும் இன்றிப் பொருத்தமுற அந்த வாயில் அமைந்திருந்தது. வெற்றி குறித்து உயா்த்திய கொடியொடு யானைகள் சென்று புகும்படி உயா்ந்தனவும், மலையை வெட்டித் திறந்தார் போன்றனவும் ஆகிய கோபுர வாயில்களைக் கொண்டமைந்தது, அந்த அரண்மனை. அரண்மனையின் வாயிலில் ஆண் கவரிமான்களும் அன்னங்களும் தாவித் திரிந்துகொண்டிருந்தன. குதிரைகள் பந்தியில் நிற்றலையும் புல்லைக் குதட்டுதலையும் வெறுத்துத் தனிமைத் துன்பத்தை வெளிப்படுத்தும் கனைத்தலைச் செய்தன. ஆண் மயில்களைக் கண்ட பெண்மயில்கள் ஆரவாரித்தன. அந்த ஓசை மலையின்கண் இயற்கையில் நிகழும் ஆரவாரம் போலக் கேட்டது” (நெடுநல்-72-100).

    முல்லைப்பாட்டில் படைவீட்டின் அமைப்பினையும் நெடுநல்வாடையில் அரண்மனையின் அமைப்பினையும் பற்றிக் கூறப்பட்டிருப்பினும் அதனை அவை ஒரே தன்மையில் வருணித்துள்ளன. அதாவது, முல்லைப்பாட்டு படைவீட்டின் அமைப்பு வருணனை, அதனைத் தொடா்ந்து அப்படைவீட்டின் முன் யானை இருந்த நிலை, யவனா் செயல் ஆகியன பற்றிக் கூறுகின்றது.  இவ்வாறே நெடுநல்வாடையிலும் அரண்மனையின் அமைப்பு, அரண்மனையின் முன் இருந்த குதிரைகள், மயில்கள் போன்றவற்றினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

    படைவீட்டின் அமைப்பு – அந்தப்புர அமைப்பு

    முல்லைப்பாட்டில் படைவீட்டின் அமைப்பும் (37-58), நெடுநல்வாடையில் அந்தப்புர அமைப்பும் (101-114) கூறப்பட்டுள்ளன.

    “காவிக்கல்லின் சாயத்தில் தோய்த்து உடுத்திய தவ வேடந்தாங்கிய முக்கோலையுடைய அந்தணர், முக்கோலில் ஆடைகளை இட்டுவைத்தாற் போல் போரில் முதுகு காட்டி ஓடாமைக்குக் காரணமான வலிய வில்லினை ஊன்றி அதன் மேல் தூணிகளைத் தொங்கவிட்டனா். பூவேலைப்பாடமைந்த ஈட்டிகளை நட்டு, கேடயங்களை வரிசையாகப் பிணைத்துப் பல்வேறு படைகளின் இருக்கைகளை அமைத்து அதன் நடுவே அரசனுக்கு இவற்றின் வேறான நெடிய குத்துக்கோல்களுடன் பல நிறத்தால் கூறுபட்ட திரைத்துணிகளை வளைத்து அரசன் தங்கும் படைவீடு அமைத்தனா் (முல்.37-44). அங்குக் குறிய தொடியை அணிந்த முன்கையினையும், கூந்தல் அசைந்து கிடக்கின்ற அழகிய சிறிய முதுகினையும், திண்ணிய பிடியினையுடைய வாளை வரிந்து கட்டின கச்சிலே அணிந்தவருமாகிய மகளிர் இரவுப் பொழுதைப் பகல் பொழுதாக்கும் தன்மையில் பாவை விளக்குகளில் நெய்யை வேண்டும் அளவு வார்த்து விளக்குகளைச் சுடா்விட்டு எரியுமாறு செய்து கொண்டிருந்தனா் (முல்.45-49). நள்ளிரவில் புனலிக்கொடி படா்ந்த சிறுதூறுகள் தூறலோடு காற்றில் அசைந்தாற்போல் உடலை வெண்சட்டையால் மூடிய நல்லொழுக்க மிக்க காவலா்கள் உறக்கத்தால் ஆடி அசைந்து கொண்டிருந்தனா். நாழிகையை அளந்து அறியும் பொய் பேசுதல் அறியா நாழிகைக் கணக்கர் நாழிகை வட்டிலிலே நாழிகை இத்துணை என்று கூறிக்கொண்டிருந்தனா் (முல்.50-58)” என்று முல்லைப்பாட்டில் படை வீட்டின் அமைப்பு பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    “யவனா் அழகு பெறப் பண்ணின வேலைப்பாடு அமைந்த மாட்சிமை அமைந்த பாவை, தன் கையில் ஏந்தியிருக்கின்ற அழகிய அகல் நிறையும்படி பெரிய திரியை இட்டனா். பின்னா் அதில் நெய்யை வார்த்தனா். நெய்வற்றி ஒளிமங்கும் காலத்துத் தூண்டுதலும் நெய்வார்த்தலும் செய்து எல்லா இடங்களிலும் இருள் நீங்கச் செய்தனா். பெருமை மிக்க பாண்டியனை அல்லாது பிற ஆடவா் நுழைய முடியாத அரிய காவலையுடைய அந்தப்புரத்தின்கண், மலைகளின் மீது தோன்றும் வானவில் போன்று காட்சியளிக்கும் கொடிகளை நட்டிருந்தனா். வௌ்ளியைப் போன்று விளங்கும் சுண்ணச்சாந்து அரண்மனைக்குப் பூசப்பட்டிருந்தது. அரண்மனையினுள் நீலமணியைப் போன்று கருமையினையும், திரட்சியினையும் உடைய திண்ணிய தூண்கள் பலவற்றினை அமைத்திருந்தனா். பெரிய சுவரில் பல வகையான பூங்கொடி போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது (நெடு.101-114)” என்று நெடுநல்வாடையில் அரசியார் வீற்றிருக்கும் அந்தப்புரம் அமைந்துள்ள முறை பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, முல்லைப்பாட்டில் வில், அம்பு, ஈட்டி, கேடயம் முதலிய படைக் கருவிகளைக் கொண்டு படைவீடு அமைக்கப்பட்டுள்ளதையும், அழகிய அந்தப் படைவீட்டில் அரசன் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி அறையின் சிறப்பும் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் சித்தரிக்கப்படும் அந்தப்புரம், யவனா்களால் செய்யப்பட்டது. அது அரசனை அன்றி வேறு ஆடவா் நுழைய முடியாத அரிய காவலையுடையது. அது காண்பவா்க்கு மலைகளோ எனத் தோன்றும் உயா்ச்சியுடையது. அதில் பல நிற சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கருபகிரகம் அமைந்துள்ளது.

    அத்துடன், இரு பாடல்களிலும் இரவு நேரத்தில் மகளிர் விளக்கேற்றும் முறைமையினைப் பற்றி ஒரே தன்மையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், விளக்கேற்றும் இடம் மட்டும் மாறுபடுகிறது. அதாவது, முல்லைப் பாட்டில் தலைவன் வீற்றிருக்கும் பாசறையில் மகளிர் விளக்கேற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நெடுநல்வாடையில் அரண்மனையில் தலைவி வீற்றிருக்கும் அந்தப்புரத்தில் மகளிர் விளக்கேற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு முல்லைப் பாட்டில் அரசன் வீற்றிருக்கும் படைவீட்டின் அமைப்பும், நெடுநல்வாடையில் தலைவி வீற்றிருக்கும் அந்தப்புர அமைப்பும் ஒரே தன்மையில் விவரிக்கப்பட்டுள்ளன என்றாலும், முல்லைப்பாட்டில் வருணனை அளவு சற்று நீண்டதாகவும் நெடுநல்வாடையில் சற்றுக் குறைந்ததாகவும் அமைந்துள்ளது.

    பள்ளியறை அமைப்பு – கட்டிலின் அமைப்பு

    முல்லைப் பாட்டு அரசன் வீற்றிருக்கும் பள்ளியறையின் அமைப்பு (59-66) பற்றியும் நெடுநல்வாடை தலைவி வீற்றிருக்கும் பள்ளியறையைப் (கட்டில்) பற்றியும் (115-135)  கூறுகின்றன.

    “வலிமை மிக்க உடம்பினையுடைய யவனா்களால் புலிச் சங்கிலி விடப்பட்ட அழகமைந்த இல்லம் அமைக்கப்பட்டது. அது அழகிய மாணிக்க விளக்கை எரிய வைத்துத் திண்ணிய கயிற்றாலே திரையை வளைத்து இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் உடம்பின் உரைக்கும் உரையா நாவினை உடைய மிலேச்சா் காத்திருந்தனா் (59-66)” என்று முல்லைப்பாட்டில் அரசன் தங்கியிருக்கும் பள்ளியறை அமைந்துள்ள அழகைப் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது.

    “நாற்பது ஆண்டுகள் வயது நிரம்பிய போரில் விழுப்புண் பட்டு இறந்த அழகிய வடிவத்தையுடைய களிற்று யானையின் தாமே விழுந்த தந்தங்களைச் சீறும் செம்மையும் படச்செதுக்கி கைத்தொழில் வல்ல தச்சன் கூரிய உளியால் அதில் இலைத் தொழில் வேலைப்பாடு அமையச் செய்து பொருந்தியதும் சூல் முற்றிய மகளிர் தம்பால் கட்டியதில் பருத்த மார்பகங்களை ஒப்ப புடைதிரண்ட குடத்தை உடையது பாண்டில் என்னும் பெயா் பெற்ற அந்தக் கச்சுக் கட்டில். அது தன்னிடத்தே காலுறுப்பாகிய குடத்திற்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளியின் முதல் போன்ற உறுப்பினை உடையது. முத்து மாலைகளைக் கட்டிலோடு ஒழுங்குற மெல்லிய நூல் கொண்டு அழகுறும்படித் தொடுத்து தொங்கவிடப்பட்டிருந்தது. புலியினது வரிகளைத் தன்னிடத்தே குத்துதல் தொழிலால் அமைக்கப்பட்ட தட்டம் போன்ற தகடுகளைக் கட்டிலின் மேல் போர்த்தப்பட்டிருந்த போர்வையின் மேலே சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்மேல் பலவிதப் பூக்களின் உருவங்கள் நிரம்பியுள்ளன. காதல் துணைகளாய்த் தம்முட் புணா்ந்த அன்னப் பறவைகளின் வௌ்ளிய மயிரை இணைத்து இயற்றிய மெத்தையை மேன்மையுண்டாகுமாறு விரித்து, அதன் மேல் தலையணை விரிப்பினை மணமிக்க மலரிதழ்களால் மணம் ஊட்டப்பெற்று பின்னா் படுக்கையின் மேல் விரித்திருந்தனா் (115-135)” என்று நெடுநல்வாடையில் பள்ளியறையின்கண் அமைந்துள்ள தலைவியின் கட்டில் அழகுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப் பாட்டில் அரசன் வீற்றிருக்கும் பள்ளியறையின் அமைப்பு மற்றும் அங்குக் காவல் நின்ற யவனா் (ஊமை மிலேச்சர்) பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஆனால், நெடுநல்வாடையில் அரசி வீற்றிருக்கும் பள்ளியறையிலுள்ள கட்டிலின் அழகு மட்டும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    கார்கால மழையினால் ஏற்பட்ட மாற்றங்கள்

    கார்காலத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி நெடுநல்வாடையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முல்லைப்பாட்டில் இந்தப் பொருட்கூறு பற்றிக் கூறப்படவில்லை. அதாவது, முல்லைப் பாட்டு மாலைக் காலத்தினை மட்டும் வருணிக்க, நெடுநல்வாடை மாலைக்கால வருணனையுடன் கூதிர் காலத்தினையும் சோ்த்து வருணித்துள்ளது. அது பின்வருமாறு அமைந்துள்ளது.

    “மாமேய மறப்ப மந்தி கூற
    பறவை படிவன வீழ கறவை
    கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
    குன்று குளிர்ப்பன்ன கூதிர் பானாள்” (9-12)

    என்று கார்காலத்தில் பெய்த மழையால் விலங்குகள் மற்றும் பறவைகள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தன.  “மழைத்துளிகள் பட்டதால் முசுண்டையும், பீர்க்கம்பூவும் மலா்ந்தன. சேற்றில் நாரைகளும், கொக்குகளும் திரிந்துகொண்டிருந்தன. மிகுந்த மழையால் பாக்கு மரத்தின் பசுமையான காய்கள் இன்சுவை தோன்ற முற்றின. மரங்களிலுள்ள மலா்களிலும், இலைகளிலும் மழை நீர்த்துளிகள் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. உயா்ந்த மாடங்களில் விளங்கும் வளமான பழைய ஊரின்கண் உள்ள அகன்ற தெருக்களில், முழுவலிமாக்கள் கள்ளுண்ட மயக்கத்தில் தம்மீது விழும் மழைத்துளியையும் பொருட்படுத்தாமல் திரிந்துகொண்டிருந்தனா். வீட்டிலுள்ள கொடுங்கைகளில் தங்கி வாழும் செந்நிறக் கால்களைக் கொண்ட ஆண்புறா, தன்னுடைய பெண்புறாவுடன் சுற்றித் திரியாமல் மயங்கிச் செயலற்று நின்றன. அவற்றின் கால்கள் கடுத்தபோது சோர்வு போக்கிக்கொள்ள, கால்களை மாற்றி மாற்றி நின்றன. வீடுகளிலுள்ள மணங்கமழும் கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை அரைப்பதற்கு உதவும் அம்மியும், வடநாட்டவா் தந்த வெண்மை நிறங்கொண்ட வட்டவடிவக் கல்லும் தென்னகத்துச் சந்தனம் ஆகியவையும் பயன்படாமல் இருந்தன. இளவேனில் காலத்தில் தென்றல் வருவதற்கென அமைக்கப்பட்டுக் கிடந்த பலகணிகள், திண்ணிய கதவுகள் பொருத்தப்பட்டுத் தாழிட்டுக் கிடந்தன. ஆடல்தொழிலைச் செய்யும் விறலியா் தம்பாட்டினை யாழில் இசைப்பதற்கு நரம்பைத் தெரித்துப் பார்க்க, அவை குளிரால் ஓசை வெளிப்படுத்தாது நிலை திரிந்து இருந்தன. தம் கணவரைப் பிரிந்த மகளிர் வருந்துமாறு, பருவ கால மழை மிகுதியாகப் பெய்து, தன் வருகையைக் கூதிர்க் காலம் நிலையாக உணா்த்தியது” (13 – 24).

    முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை முடிபுகள்

    இரு பாடல்களையும் பகுத்து ஆராய்ந்ததில் கார்கால வருணனை, கோவலா்களின் செயல்பாடுகள், மாலைக் கால வழிபாடு, பாசறை அமைப்பு வருணனை – அரண்மனை அமைப்பு வருணனை, படைவீட்டின் அமைப்பு வருணனை – அந்தப்புர அமைப்பு வருணனை, பள்ளியறை அமைப்பு வருணனை – கட்டில் அமைப்பு வருணனை, தலைவியின் துயரம், தலைவியைத் தேற்றுதல், வேந்தனின் செயல்பாடுகள் (மனநிலை) என்ற 9 பொதுவான பொருட்கூறுகளைக் கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

    ‘கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்’ என்ற ஒரு பொருட்கூறு, நெடுநல்வாடையில் மட்டும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பொருட்கூறினைத் தவிர்த்த பிற ஒன்பது பொருட்கூறுகள் இரு பாடல்களிலும் பொதுவாய் அமைந்துள்ளன.

    மக்கள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாடைக் காற்றினால் (பனி) துன்புற்றிருந்த நிலை பற்றிய செய்தியைத் (கார்கால மழையினால் நகரில் ஏற்பட்ட மாற்றங்கள்) தலைவியது மனவேதனையை விளக்க புலவா் ‘கையாண்ட உத்தியாகக்’ கொள்ளலாம்.  அப்படிக் கொள்ளும் நிலையில் இந்தப் பொருட்கூறு கோவலர்களின் செயல்பாடுகளின் நீட்சியாக அமைகிறது. பாடல்களின் அளவு 103, 188 என அமைந்துள்ளதைக் கருத்தில் கொள்ள, இவ்வாறு கொள்வது சரி என்றே படுகின்றது.

    முல்லைப்பாட்டில் பாசறை அமைப்பு பற்றிய வருணனை கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுநல்வாடையில் பாசறை பற்றிய வருணனையின் இடத்தில் அரண்மனையின் அமைப்பு வருணனை அமைந்துள்ளது. அதாவது, முல்லைப்பாட்டு காட்டில் தங்கியிருக்கும் தலைவனின் பாசறையினைப் பற்றிக் கூற, நெடுநல்வாடையில் தலைவி தங்கியிருக்கும் அரண்மனையினைப் பற்றி வருணித்துள்ளது. அதாவது இங்கு இடம் மட்டுமே மாறி அமைந்துள்ளது. எனவே இதனைப் பாசறை அமைப்பிற்குப் பதிலியாகக் கொள்ளலாம். அவ்வாறே முல்லைப்பாட்டின் படைவீட்டின் அமைப்பு மற்றும் பள்ளியறை அமைப்புக்கு, நெடுநல்வாடையில் உள்ள அந்தப்புர அமைப்பு வருணனை மற்றும் கட்டில் அமைப்பு வருணனை ஆகியவற்றையும் பதிலிகளாகக் கொள்ளலாம்.

    நெடுநல்வாடையில் தலைவியின் வருணனை நீண்டும், முல்லைப்பாட்டில் தலைவனின் வருணனை நீண்டும் அமைந்துள்ளன.

    ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்க இரு பாடல்களும் 9 பொதுபொருட் கூறுகளால் உருவாகியுள்ள ஒத்த தன்மையுடைய பாடல்கள் எனத் தெளிவாக அறிய முடிகின்றது.

    சான்றெண் விளக்கக் குறிப்புகள்

    1. குளோறியா சுந்தரமதி, இலா., பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், 1987, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.24.
    2. மேற்படி, ப.12
    3. மேற்படி, பக்.11-14
    4. விஷ்ணுகுமரன், த., புறநானூறு ஒரு பொருட்பகுப்பாய்வு (முனைவா் பட்ட ஆய்வேடு), 2006, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.
    5. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு), 2008, அடையாளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி.
    6. குளோறியா சுந்தரமதி, இலா., பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், 1987, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
    7. ஆலிஸ்,அ., கட்டமைப்பு ஆய்வில் அகநானூறும் புறநானூறும், 1991, அன்னம் (பி)லிட், சிவன் கோயில் தெற்கு தெரு, சிவகங்கை.
    8. விஷ்ணுகுமரன், த., புறநானூறு ஒரு பொருட்பகுப்பாய்வு (முனைவா் பட்ட ஆய்வேடு), 2006, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.

    =======================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    சங்க இலக்கிய நூல்களான முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை ஆகிய நூற்களை  அமைப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அரிஸ்டாட்டிலின் கவிதையியல், ரெனிவெல்லக்கின் இலக்கியக் கொள்கை, டாக்டா் இலா.குளோறியா சுந்தரமதியின் பகுப்பாய்வு நோக்கில் சங்க இலக்கியம், தமிழவனின், அமைப்பியலும் அதன் பிறகும் போன்ற ஆய்வோடு தொடர்புடைய நூற்களை ஆய்வாளர் கற்று, இக்கட்டுரையை எழுதியுள்ளார்

    ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருண்மையை ஆராய்ந்து தெளிவாக விளக்கி இருப்பது, ஆய்வாளரின் ஆய்வுத் திறனைக் காட்டுகிறது. ஆய்வுத் தலைப்பை ஒட்டிய கருதுகோள், ஆய்வு நோக்கம் ஆகியவற்றைத் திறம்பட ஒப்பிட்டு விளக்கியமையும் தெளிவான மொழி நடையும் கருத்துகளின் முறையமைப்பும் சிறப்பாக அமைந்துள்ளன. ஆய்வின் பயனை நிறைவுறுத்தும் வகையில் அடிக்குறிப்புகள் அமைந்துள்ளன.

    ‘இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்க முல்லைப் பாட்டும் நெடுநல்வாடையும் 9 பொதுபொருட் கூறுகளால் உருவாகியுள்ள ஒத்த தன்மையுடைய பாடல்கள்  எனத் தெளிவாக அறிய முடிகின்றது’ என்ற முடிவுரை சிறப்பாக அமைந்துள்ளது

    தலைப்புத் தேர்வு , ஆய்வாளரின் தரவு சேகரிப்பு முறை, தரவுகளை முறையாகப் பயன்படுத்தி ஆய்ந்துள்ள முறை, ஆய்வு நேர்மை, கருத்துகளைச் சிறப்பாக கட்டமைத்துள்ள ஆய்வுப் பாங்கு, முடிவுகளைத் தரவுகளின் அடிப்படையில் துல்லியமாகத் தரும் முறை ஆகியவற்றைப் பாராட்டுகிறோம்.

    =======================================================================

    Share
  • வாலாட்டிச் சென்ற கருங்குருவி

    -முனைவர் ஆ. சந்திரன்

    கருங்குருவியின் வால் மேலும் கீழும் அசைந்துகொண்டிருப்பதை வறட்டுப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த தாடிக்காரன். அவனுக்குப் பித்து பிடித்திருப்பதாக அவ்வூர் மக்கள் திடமாக நம்பினார்கள். அதனால் அவனுக்கு அப்பெயரே நிலைத்துப் போனது; பித்தன். ஆனால் அவனுடைய பெயர் மாணிக்கம். பெயருக்கு ஏற்பத்தான் அவனும் இருந்தான் என்பது தனிக்கதை.

    ஊர்மக்களால் பித்தன் என்றும் பிச்சைக்காரன் என்று அழைக்கப்பட்ட மாணிக்கம் பாழடைந்த அந்த இரும்புக் கேட்டின் மேல் மெல்ல அடியெடுத்து வைத்து பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்த கருங்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    கீச்… கீச்… என்ற குருவியின் ஓசையைக் காதில்வாங்கிய அவனுடைய மனம் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியிருந்தது.

    காட்டூரில் ரயில் பயணத்திற்கான வெள்ளோட்டம் அப்பொழுதுதான் முதன்முறையாக நடந்தது. புகையைக் கக்கிக்கொண்டு சீரான வேகத்தில் ரயில் அந்த ஊரைநோக்கி வந்துகொண்டிருந்தது. வயிறுமுட்டத் தின்ற சாரைப்பாம்பாய் வளைந்து நெளிந்து மெதுவாக  நடைமேடையில் நுழைந்து நின்றது. ரயில்வே ஊழியர்கள் ஒன்றுகூடி ரயிலுக்குக் கிடாய்வெட்டி ஆரத்தியெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் பக்தி தலைக்கேறியவனாய்க் காணப்பட்டான்.

    ஊரே அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதிசயமான அந்தக் காட்சியை மக்களிடம் உதிர்த்துவிட்டு மெல்ல ரயில் அங்கிருந்து புறப்பட்டுப் போனது.

    ரயில்போன சிறிது நேரத்தில், தண்டவாளத்தின் இரு மருங்கிலும் தலைகவிழ்ந்து நின்ற நெல்மணிகள் நிறைந்த வயலுக்குள் கல்லெறிந்த தேன் கூட்டிலிருந்து பறந்து செல்லும் தேனீக்களாய்ப் புகுந்தனர் வேடிக்கை பார்க்கக் கூடியவர்கள். வயல்வெளிக்குள் சென்ற ரயிலின் பிம்பங்கள் மறைய வாரங்கள் பல ஆயின.

    அதன் பிறகு காட்டூர் ரயில் நிலையத்தைத் தினமும் பல ரயில்கள் கடந்து சென்றன. என்றாலும், மக்கள் எவ்வித மாற்றமுமின்றி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

    அப்போது….மணிக்கம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அன்றிரவு வானில் ஒரே நேர்கோட்டில் வரிசையாக இருந்த மூன்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அழகிய அக்காட்சியை அவன் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வருகிறான். அதற்குமுன் எத்தனையோ முறை நட்சத்திரங்களைப் பார்த்தபோதும் இல்லாத ஒரு வியப்பு அவனுக்கு அன்று தோன்றியது. அது புதுமையாக இருந்தது அவனுக்கு. எண்ணிறந்த நட்சத்திரங்களின் நடுவே வரிசையாக சம அளவில் இருக்கும் அந்தக் காட்சி அவனுடைய மனதில் வடுவாக நிலைத்துப் போனது.

    அவன் வானத்து நட்சத்திரங்களை எண்ணத்தொடங்கிய சமயத்தில் அவனுடைய வயது சிறுவர்களில் சிலர் கல்லை வரிசையாக அடுக்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் சிறுசிறு செடிகளைப் பிடுங்கி சிறிய குழிகளை நோண்டி அதில் நட்டு வளர்க்கும் வேலையில் மூழ்கியிருந்தார்கள். இன்னும் சிலர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நடந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குச் சத்தமாகக் கத்திப் பேசுவதற்குப் பிடித்திருந்தது. எனவே அவனுடன் விளையாட யாருக்கும் பிடிக்காமல் போனதில் வியப்பொன்றும் இல்லை. அதைப் பற்றி அவன் ஒன்றும் அலட்டிக்கொள்ளவும் இல்லை.

    ஒரு நாள் அப்பாவுடன் வயலுக்கு நீர்பாய்ச்சச் சென்றிருந்த மாணிக்கம் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    கருமேகங்கள் வானில் வேமாகச் சென்று கொண்டிருந்தன. நீரைச் சுமந்துகொண்டிருந்த அவற்றைப் பார்த்தவன் தனக்குப் பழக்கமான ஆடு, மாடு, அம்மா, முறுக்குமீசை வைத்திருந்த அப்பா, தங்கச்சிப் பாப்பா, கருவுற்றிருந்த சித்தி என ஒப்பிட்டுக் கொண்டிருந்தான்.

    நீரின் சுமையைப் பொறுக்க முடியாத மேகத்துண்டுகள் சில அவனுடைய ஒப்பனையில் மாட்டாமல் தப்பி ஓடிக்கொண்டிருந்தன. அவற்றினுடன் போட்டியிடும் விதமாக வயலில் இருந்து பூச்சிகள் படையெடுக்க ஆரம்பித்தன.

    அவ்வாறு புறப்பட்ட தும்பிகளுள் ஒன்று நெற்றியில் மோதி அவனுடைய கவனத்தைச் சிதைத்தது.

    அப்பூச்சியைப் பிடித்து விளையாட அரம்பித்தான். அதுவும் அவனுடைய விரல்களின் மேல் நடனம் பழக ஆசைப்படுவதுபோல் நடந்துகொண்டது.

    சிறிது நேரத்தில் அவனை நோக்கி ஏராளமான பூச்சிகள் படையெடுத்தன. ஒரு கட்டத்தில் சூறாவளியில் சிக்குண்ட இரும்புத் தூணாய்ப் பூச்சிகளுக்குள் நின்றான் அவன்.

    “ஏய் மாணிக்கம்! மழைவரும் போல் இருக்கு”  என்று சற்றுத் தொலைவில் இருந்த தன் மகனை அழைத்தவாறே வெண்டைக்காய்த் தோட்டத்திற்குள் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் நீரின் மடையை நெல் வயலுக்குள் திருப்பிவிட்டு மோட்டாரை நீறுத்த ஓடினான் மாணிக்கத்தின் அப்பா வேலாயுதம். அதற்குள் வானம் சிந்திய நீர்த்துளிகள் அவனை முழுமையான நீராட்டின.

    தன்னுடைய தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது வெள்ள நீர் முழங்காலைக் கடந்து போனதால் தந்தையின் தோள்மீது அமர்ந்து வீட்டிற்குப் போனான்.

    தன்னுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் எப்போது உறங்கினான் என்று தெரியாது. கிழக்கில் உதித்த கதிரவனின் கரங்கள் அவனுடைய கண்களைத் தழுவ உறக்கம் அவனை விட்டு விடைபெற்றுச் சென்றது.

    அவன் எழுந்த போது அம்மா மாட்டிற்குத் தண்ணீர் வைத்துக்கொண்டிருந்தாள். அப்பா அப்போது வயலில் இருப்பார் என்று தெரியும்; அதனால் அவன் வேகமாக நடந்து செல்லும் தொலைவிலிருந்த வயலை நோக்கி நடந்தான். இல்லை… இல்லை… ஓடினான்.

    நேற்றுப் பெய்த மழையால் புத்துணர்ச்சி பெற்ற நெல்மணிகள் அவனுடைய கால்களை வருடி மகிழ்ந்தன. இல்லை…இல்லை… அவன் அவற்றை வருடி மகிழ்ந்தான்.

    நெல்மணிகளின் புன்னகையுடன் பள்ளியை அடைந்தான்.

    ஆங்கில ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். ”ரெயின் ரெயின் கோ அவே”  என்ற பாடலைப் பாடியமைக்காக அவனுக்கு பள்ளியில் நல்ல பெயர் உண்டானது. பல முறை அப்பாடலைப் பாடுமாறு பள்ளியில் கேட்டதுண்டு. அவனும் மகிழ்ச்சியாகப் பாடியுள்ளான்.

    அவன் வளர வளர வயலோடு சேர்த்து வானத்து நட்சத்திரங்களுடனும் நெருக்கமானான். மனிதர்களுடன் பழகுவதைவிட அதிக நேரம் அவனுடைய நெருக்கம் அதிகமாக இருந்தது. வயலில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதால் அவனுக்கு நேரம் போவதே தெரிவதில்லை. சில நேரம் அதனால் கல்லூரிக்குத் தாமதமாகப் போனதுண்டு.

    அப்படிப் போகும்போது அவனை ஆசிரியர்கள் மட்டுமன்றி சக மாணவர்களும் கிண்டல் செய்வதுண்டு. அப்படி ஒரு நாள் அவனது வரவால் தன்னுடைய பாடம் தடைப்படுவதாகக் கோபங்கொண்ட ஆசிரியர், “ஏன் லேட்”….  என்றார் சத்தமாக.

    “வயல்ல கொஞ்சம் வேலையிருந்தது…… அதனால…… ” என்று மாணிக்கம் தயங்கியவாரே மெதுவாகச் சொல்ல…..

    சரி… சரி…  வா! வா! என்றவர், தன் கடமையைத் கடுகடுப்புடன் தொடர்ந்தார்.

    மதியம் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவச் சென்றபோது அவனுக்கும் ரமேஷ்க்கும் சின்னதாக ஒரு கைகலப்பு. பிரச்சனை ஆசிரியர் வரை போனது.

    இருவரும் விசாரணை வளையத்தில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

    ரமேஷ் தரப்பில் அவன்தான் என்னை முதலில் அடித்தான் என்று சொல்லப்பட்டதால் ஏன் அடித்தாய் என்ற கேள்வி மாணிக்கத்தின் மீது பெரிதாக எழுந்தது.

    “காட்டுவாசின்னு என்னைத் திட்டினான் அதனால் தான் அவனை அடித்தேன்னு” நடந்ததைச் சொல்லி பூமியைப் பார்த்து நின்றான் மாணிக்கம்.

    அந்த நிகழ்விற்குப் பிறகு அவன் தலை வானத்தை நோக்கியே நின்றது எப்போதும்.

    அதற்குக் காரணம் அவனுடை கண் பார்வைக்கு அன்று புதிய ஒளி கிடைத்தது. ஆசிரியர் வழியில்.

    மனித இனத்தின் உன்னதத்தைப் பற்றிய அந்த விளக்கம் அவனுடை மனதில் பசுமையாய்க் குடிகொண்டது.

    தன்னுடைய ஊரின் சிறப்பைப் பற்றி அறிந்துகொள்ள அவன் அன்று தன்னுடைய பயணத்தைத் தொடங்கினான்.

    காட்டில் வாழும் யானை, புலி, சிங்கம், ஓநாய்களைப் பற்றி அறிந்திருந்தவனுக்கு அவனுடைய காட்டூரின் வரலாறும் அதன் அருமையும் விளங்கியது.

    தன்னுடைய சிறப்பை மனதில் சுமந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தவனுடைய பார்வையில் தண்டவாளத்தின் இருபுறமும் ஆங்காங்கே புதிதாக முளைத்திருந்த வீடுகள், ஊரின் மையப்பகுதியில் இருந்த இரண்டு பெரிய உரக்கடை முதலியன பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

    பேருந்திலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்துசென்றவன் வழக்கமாகக் குடிக்கும் பன்னீர் சோடாவைக் குடிக்க பெட்டிக் கடையை நோக்கி போனான். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்து வந்த பெட்டிக்கடை அந்த இடத்தில் இல்லை. அதற்குச் சற்றுத் தள்ளி பெரிய குளிர்பானக் கடை ஒன்று புதிதாய் முளைத்திருந்தது. பளபளப்பான டிஜிட்டல் பேனருடன் இருந்த அந்தக் கடையை உற்றுப்பார்த்தவனுக்குக்  காணாமல்போன பெட்டிக்கடை மனக் கண்ணில்  தெளிவாய்த் தெரிந்தது.

    அதைப்பற்றி ஊரில் உள்ள மக்களிடம் கூறினான். அவன் கூறியதைப் பலர் நம்பவில்லை. சிலர் நம்பினாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

    விடாப்பிடியாய் தன்னுடைய கருத்தைக் கூறிக்கொண்டு வந்துகொண்டிருந்த அவனுடைய பாதையில் ஒருத்தன் குறுக்கிட்டான். யாருடைய கண்ணுக்கும் எளிதாகத் தெரியாமல் இருக்கும் அவன் என்ன என்ன செய்வான் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

    அவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வானிலிருந்த மூன்று நட்சத்திரங்களில் ஒன்று கீழே விழுந்தது. அவனுக்குப் பிரமை உண்டாக அதிர்ந்தான். அவனுடைய அந்த அதிர்ச்சியைப் பார்த்து அவ்வளவு காலம் அவனுடன் பயணித்த கருங்குருவி வாலாட்டிக்கொண்டு அங்கிருந்து பறந்துபோனது.

    அதுவரை கருங்குருவி இருந்த இடத்திற்குப் பின்னால் மறைந்திருந்த ஒற்றைக் கண்ணனைக் கண்கொட்டாமல் பார்த்தான் மாணிக்கம்.

    அவனுடைய பார்வையில் வழக்கம் போல் அன்றும் எவ்வித பதற்றமும் இல்லை…….

    கம்பீரமாய் நடக்க ஆரம்பித்தான்…

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த் துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்.

    Share
  • சங்கப் பாடல்களில் கூற்றும் / கதைசொல்லியின் குரலும்

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்த் துறை

    தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)

    திருப்பத்தூர்

    வேலூர்

    பண்டைக்கால புலவர்களின் உணர்வின் வெளிப்பாடுகளை நமக்கு உணர்த்தி நிற்பவை சங்கப் பாடல்கள். ஏறக்குறைய ஐந்நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகால அளவில் பரந்து விரிந்த தமிழ் நிலப்பரப்பில் புலவர்களின் தன்னுணர்ச்சிப் பாக்களாக உருவான அப்பாடல்கள் பின்னர், அகம் – புறம், திணை – துறை, கூற்று என்று பல நிலைகளில் பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் கூற்று என்பது புலவர் பெயரால் அமைகிறது. ஆனால் அகப்பாடல்கள் கூற்று என்று வரும் போது தலைவன், தலைவி, தோழி என்று கற்பனை பாத்திரத்தின் பொதுப் பெயராக அமைகிறது. இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அது அகப்பாடல் பற்றியது. அதாவது அகப்பாடல்கள் புறப்பாடல்கள் போல் புலவர்களால் பாடப்பட்டிருந்தாலும் பாடலைப் பாடியவராகத் தலைவனோ, தலைவியோ, தோழியோ அல்லது வேறு ஏதோ ஒரு பாத்திரமாகவோ கருதப்படுகிறது. அதாவது பாடலாசிரியன் வேறு – பாடலில் வெளிப்படும் குரல் வேறு என இது அமைகிறது.

    பாடப்பட்டுள்ள பாடல்களின் சில அடையாளங்களைக் கொண்டுதான் இது தலைவன் குரல், இது தோழி குரல், இது தலைவி குரல் என்று இனங்காணமுடிகிறது. இத்தகைய ஒரு சிந்தனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர் கொண்டிருப்பது வியப்பான ஒன்று.  என்றாலும், அவ்வாறு அவர்கள் வகுத்துச் சென்ற கூற்று என்ற வரையறை அனைத்தும் சரியாக அமைந்துள்ளனவா? அவற்றில் மாற்றம் செய்ய இடமுள்ளதா? மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை இன்று சிலர் எழுப்புகின்றனர். அப்பாடல்களின் நுட்பமான பொருளை அறிந்தால் இம்மாதிரியான கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியும்.

    “கதைசொல்லியின் குரல்” என்ற புதிய சிந்தனை பாடலின் நுட்பப் பொருளை அறிய உதவும்  என நம்பலாம். யார் இந்தக் கதை சொல்லி. கதாசிரியருக்கும் இந்தக் கதை சொல்லியின் குரலுக்கும் என்ன உறவு என்பது பற்றிய விளக்கம் இங்கு அவசியமாகிறது. ”எல்லா இலக்கியப் படைப்புகளும் –எழுத்து ரூபத்தில் இருப்பதால் – அடையாள ரீதியாக சிலவற்றைச் சொல்லும்” இந்த அடையாளங்களில் ஒன்றாக ஒரு குரல் வருவதுண்டு. இந்தக் குரல் ஆசிரியன் குரல் அல்ல. கதைசொல்லியின் குரல்” (தமிழவன்). இந்த விளக்கத்தின்படி பார்க்கும்போது கதை, கதாசிரியனைத் தாண்டி நின்று ஒலிக்கும் குரலாகக் கதைசொல்லி அமைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    “கதைசொல்லியின் குரல்”  என்ற சிந்தனையை முன்னிருத்தி தமிழவன், முனைவர் ஆ. முத்தையன் முனைவர் ஆ.சந்திரன் முதலானோர் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் சில புதிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். இவை இயல்பான வாசிப்பில் காண இயலாதவை. இத்தகயை ஒரு முயற்சி அதாவது, “கதைசொல்லியின் குரல்” என்ற சிந்தனையை முன்நிறுத்தி சங்கப் பாடல்களை வாசிக்கும் முயற்சி இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அதே வேளை சிவத்தம்பியின் சில கருத்துகள் இம்மாதிரியான அடையாளக் குரலைக் காணமுடியும் என்பதற்கு வழிகாட்டியாக அமைகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

    புறநானூற்றுப் பாடலின் கதையாடலைக் கட்டவிழ்க்கும் அவர் “மாவாராதே மாவாராதே எனும் பாடலில் வரும் சோகம் பற்றியோ, கைம்மை காரணமாகச் சாணி மெழுகிய நிலத்தில் போடப்பெற்ற வீரன் ஒருவனின் உடலை எரிப்பதா புதைப்பதா எனக் கேட்கப்பெறும் வினாவின் உக்கிரத்தையோ அன்றேல் ‘துடியன், கடம்பன் பாணன் பறையனென்று இந்நான்கல்லது குடியுமில்லை‘  என்ற பாடலில் காணப்படுகின்ற புதிய மரபு நிராகரிப்பையோ நன்கு விளங்கிக் கொண்டவர்களாக மாட்டோம். புறத்திணைப் பற்றி விதந்துரைக்கப்படாத பல அமிசங்கள் புறநானூறு ஏறத்தாழ 250 ஆவது பாடலுக்குப் பின்னரே பெரும்பாலும் காணப்படுகின்றன” (தமிழின் கவிதையியல். பக்: 12, 13) என்று கூறும் சிவத்தம்பி, தலைவனின் பிரிவால் வாடும் பெண்ணின் அங்கலாய்ப்பாய் அமையும் அப்பாடல் புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அத்துடன், குறிஞ்சிப்பாட்டின் தோழி வெளிப்படுத்தும் (குறிஞ்.பா.26-29) கருத்தை ஐயப்படும் அவர், “சங்க அகமரபைப் போன்று இல்லாமல் பிற்கால கோவை இலக்கியங்களில் வரும் தோழி பேசுவது போல் அக்கருத்து அமைவதாகக்” (தொல்காப்பியமும் கவிதையியலும்.பக்: 23, 24) குற்றம் சாட்டுகிறார். இவ்விரு கருத்துகளும் அவருடைய நுட்பமான வாசிப்பின் வெளிப்பாட்டால் உருவானவை. இவை பாடலின் கருத்தோ அல்லது கதாசிரியன் கருத்தோ எனில், இவை கதைசொல்லியின் குரலை அடையாளங் கண்டுகொண்டதால் உருவான கருத்து என்பது புனலாகும். அதனால் கதைசொல்லியின் குரல் என்ற சிந்தனையை அவர் முன்வைத்தார் என்பது அல்ல இங்கு பொருள். அச்சிந்தனையைத் தமிழ் இலக்கியத்தில் பரிசோதித்தவர் தமிழவன். அதே நேரம் சிவத்தம்பியிடம் அப்படிப்பட்ட சிந்தனை இருந்துள்ளது என்பதும் இங்குக் கவனிக்கத்தக்து.

    சங்கப்பாடல்கள் அனைத்தையும் இந்தக் கோணத்தில் ஆராய்ந்தால் அகம் – புறம் என்பதைத் தாண்டிய தனிமனித உணர்வுகள் பலவற்றை வெளிக்கொணரமுடியும் என நம்பலாம். அந்த முயற்சியின் துவுக்கமாக எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ள அகப்பாடல்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு அவற்றின் அடையாளக் குரல் – அது முன் வைக்கும் கருத்து ஆகியனவற்றை ஆராய முயல்கிவது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

    நற்றிணை 124 ஆம் பாடல் தன்னுடைய துணை பிரிந்த போது வருந்தும் அன்றில் பறவை போன்ற தனிமைத் துயர் தரும் பருவம் இது எனவே இப்போது நீங்கள் என்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டாம் என்ற பொருளைத் தருகிறது. ஆனால் “பிரிவுணர்த்தப் பட்ட தோழி தலைவர்க்கு உரைத்தது” என்று இப்பாடலுக்கு கூற்று வரையறுக்கப் பட்டுள்ளது. இது பொருத்த முடையதாகத் தோன்ற வில்லை.

    பொதுவாக தலைவன் கார் காலத்தின் தொடக்கத்தில் வருவேன் என்று கூறிச் செல்வான். தலைவி அப்பருவம் வரும்வரை ஆற்றியிருப்பாள். கார்காலம் வந்தும் அவன் வர தாமதமானால் வருந்துவாள். முல்லை மலர் அவள் வாட்டத்தை அதிகரிக்கும். வாடைத் துயர் அவளை அதிகம் வாட்டும். இவ்வாறு பிரிவு பற்றிய பாடல்கள் அமையும். ஆனால் இப்பாடலில் தலைவன் பிரியக் கருதிய காலம் தலைவியின் ஆற்றாமையை அதிகரிக்கும் கூதிர் பருவம். அதாவது தலைவன் திரும்பி வரவேண்டிய பருவத்தில் பிரியக் கருதுகிறான். அவ்வாறன சூழலைத்தான் பாடல் புலப்படுத்துகிறது. அப்பாடலின் விளக்கம் வருமாறு.

    “தன் துணை பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற்பறவை ஆற்றாது இறந்துபடுதல் போலத் தனிமையுற்று இருக்கும் துன்பமான வாழ்வினை யானும் ஆற்றவியலாது இருக்கும் தன்மையானேன். ஈங்கையின் அரும்பும், மல்லிகை மலரும் உயர்ந்த மணலால் அமைந்த திடலில் உதிர்கின்றன. மான்கள் வன்மையான குளம்புகளினால் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை உருக்கிச் சாய்க்கும் கொள்களத்தை ஒத்து வடியும் தெளிந்த நீர்க்குமிழியையுடைய தண்ணீரைப் பெற்றதாகக் கூதிர்ப்பருவம் வந்துவிட்டது. இப்பருவமே யான் ஆற்றாதிருப்பதற்குக் காரணம் ஆகும். ஆதலின் ஐயனே! என்னை விட்டு நீங்காது இருப்பாயாக. நீ நெடுங்காலம் வாழ்வாயாக!” (நற். 124)

    மேற்கண்ட பாடலில் “புன்கண் வாழ்க்கை”- “யானும் ஆற்றேன்” “அதுதான் வந்தது” என்பன  தலைவியன் துன்பத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது தலைவன் பிரிவைத் தாங்க இயலாமல் தவிக்கும் தலைவியின் குரல் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆக இப்பாடல் தலைவி கூற்றுப் பாடல் என்று கொள்வதே சரியாக இருக்கும்.

    அடுத்து நற்றிணை 132 பாடலைப் பார்ப்போம். “பெரிதாய் விளங்கும் இவ்வூரின்கண் உள்ள யாவரும் துயில்கின்றனர். விழித்திருப்பவர் என ஒருவரும் இல்லை” (நற்.132-1) என்று தொடங்கும் இப்பாடல் அதன் பிறகு மழை பொழிவு, ஊரில் இரவு வேளையில் புரியும் கடுங்காவல் பற்றி விவரிக்கிறது. அவ்வாறு இரவு முழுவதும் காவல் கடுமையாக இருப்பதால் தலைவி தலைவனைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போகிறது. அதனால் அவள் ”இன்றுகொல் அளியேன் பொன்றும் நாளோ” (நற்132-11) என்று புலம்புகின்றாள் என்று முடிகிறது. இப்பாடலில் தோழி பற்றிய குறிப்பு இல்லை. தோழியிடம் தலைவி பேசுவதாகப் பொருள்கொள்ளவும் இடமில்லை என்பது பாடலில் தெளிவாகப் புலப்படுகின்றது. அப்படி இருக்க இப்பாடல் தோழி கூற்றுப்பாடல் என்று கூற்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

    நற்றிணை 36 ஆம் பாடல் “இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது”  என்று கூற்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    குறுங்கை இரும் புலிக் கோள்வல் ஏற்றை,
    பூ நுதல் இரும்பிடி புலம்ப, தாக்கி,
    தாழ்நீர் நனந்தலைப் பெருகளிறு அடூஉம்
    கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
    யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து

    அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
    புரைஇல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
    ஆனாக் கௌவைத்துஆக,
    தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே! (நற். 36)

    இப்பாடல் தோழி கூற்றுப் பாடல் என்று கொள்ள இடமிருப்பதாகத் தெரியவில்லை. “தலைவனின் சொல்லை நம்பி யாம் எம் நலனை இழந்தோம்” (நற்.36) என்று வருந்தும் தலைவி “இவ்வூர் எதை இழந்தது இப்படி என்னைப் பழி கூறிக் கொண்டுள்ளது” (நற்.36) என்று புலம்புகிறாள். இது பாடலில் தெளிவாக உள்ளது. அப்படியிருக்க இது எவ்வாறு தோழி கூற்றாக அமையும் என்பது கேள்விக்குறி.

    ஆனால் “தலைவன் இரவுக்குறியிடத்தே வந்து நிற்க, அதனை அறிந்த தோழி அவன் விரைவில் வரைந்து கொள்ளுதல் வேண்டித் “தலைவனின் சொல்லை நம்பி யாம் எம் நலனை இழந்தோம். ஊர் அலர் தூற்றுகிறது. எம்மைப் போல் இந்த ஊரும் துயிலாது அமைய எதனை இழந்தது” என்று கூறு முகத்தால் “ஊர் உம்மைக் கண்டு கொள்ளும் எனவே வரைந்து கொள்க“ என்று வற்புறுத்துவதாக கூற்று விளக்கம் வலிந்து கூறுவதாகத் தோன்றுகிறது.

    தலைவனை அடைய இயலாது தவிக்கும் தலைவியின் உள்ளக் குமுறல் என்பது தான் இப்பாடல் தரும் பொருள். அப்படி வாசிக்க பொருள் தெளிவாகும் நிலையில் வலிந்து பொருள் கொள்ள வேண்டுமா என்பது சிந்திக்க வேண்டியதே. இவ்வாறு கூற்று முறையில் மாற்றம் கோரி நிற்கின்ற பாடல்கள் பல இந்நூலில் உள்ளன.

    கதைசொல்லியின் குரல் முன்வைக்கும் கருத்துகள் சில

     “பூவின் அன்ன நலம் புதிது உண்டு

    நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாமே

    நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி

    மாசு இல் கற்பின் மடவோள் குழவி

    பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு

    சேணும் எம்மொடு வந்த

    நாணும் விட்டோம் அலர்க இவ் ஊரே” (நற்.15)

    தலைவியின் நலத்தைக் களவில் நுகர்ந்தான் எனினும் வரைவுக்கு அவன் உடம்படவில்லை என்ற தன் மனவருத்தத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இப்பாடல். இது தலைவனால் ஏமாற்றப்பட்ட ஒரு தலைவியின் ஆதங்கத்தின் வெளிப்பாடு. அப்படி இருக்க இப்பாடல் தோழிக் கூறுவதாக இதற்கு கூற்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் ஆதங்கக் குரலாக வெளிப்படையாகத் தெரியும் இது ஆய்வுக்குரிய ஒன்று.

    அதே வேளையில் காதலிப்பதற்கு முன்பு ஆணின் பண்புகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற சிந்தனையையும் இக்குரல் முன்வைக்கிறது. பெண்ணைக் காதலித்து பின் கைவிடும் செயல் அக்காலத்தில் இருந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.

    அகநானூற்றுப் படலில் தோழியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லியின் குரல் இக்கருத்தை வெளிப்படையாகவே கூறுகிறது. “நெறி தவறிய அறமிலி ஒருவன் இளம்பெண் ஒருத்தியின் அழகிய பெண்மை நலத்தை கவர்ந்து கொண்டான். பின்னர் அவளை அறியேன் என்று அறவோர் முன்னர் அறமற்ற பொய்ச் சூளும் உரைத்தான். அவர் தம் சேர்க்கையை அறிந்தார் வாய்க் கேட்டறிந்த அவையத்தார் அவன் செய்த அடாச் செயலை உண்மையெனத் தெளிந்து தளிர்கள் கொண்ட பெரிய மரத்தின் கவர்த்த கிளையில் அவனை இருகக் கட்டி வைத்து அவன் தலையில் நீற்றினைப் பெய்தனர்” (அகம். 256.13 – 21).

    இப்பாடலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான மற்றொரு அம்சம் இந்தச் செய்தி பரத்தையருடன் தலைவன் நீராடிய போது எழுந்த அலருக்கு உவமையாகத் தோழியால் கூறப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மறுப்பவனுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பரத்தையர் எத்தனைப்பேருடன் வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். இது அக்கால சமூக முரண் பாட்டை நமக்கு உணர்த்துகிறது. வழக்கமாகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழாசிரியா்கள் கூறும் “ பண்டைத் தமிழர் வாழ்வு ஒருவனுக்கு ஒருத்தி என அமைந்திருந்தது“ என்ற கூற்றை இது மறுக்கிறது.

    இவ்வாறு பெண்ணின் ஆதங்கம் அகப்பாடல்கள் பலவற்றில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. அவ்வாறான பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.

    “காட்டில் உள்ள மயிலானது பாறையில் ஈன்ற முட்டைகளைக் கருங்குரங்கின் விளையாடும் குட்டிகள் உருட்டி விளையாடும் குன்றுகளையுடைய நாடன்” (குறு.38) என்று தலைவியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லி, பெண்ணின் (தலைவியின்) நெஞ்சம் பற்றி அறியாமல் அவளை ஒரு போகப்பொருளாக மட்டும் பார்க்கிறான் ஆண் (தலைவன்) என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. குரங்கு உயிருள்ள முட்டையை கல்லாக நினைத்து விளையாடுவது போல ஆண் பெண்ணின் உடலை நினைக்கிறான். தனக்கும் மனம் உண்டு. அதில் ஆசைகள், ஏக்கங்கள் உண்டு. அவற்றைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் உடலை மட்டும் விரும்புகின்ற ஆணின் சுயநல சிந்தனையைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பெண்ணின் குரல்.

    குரங்கின் பண்பை வைத்து சமூகத்தின் இன்னொரு பண்பினை வெளிப்படுத்துகிறது மற்றொரு பாடல். அப்பாடல் குறுந்தொகை 69 ஆம் பாடல். “இருளில் தாவுதலையுடைய ஆண்குரங்கு இறந்துவிட்டது. கணவனை இழந்து வருந்தும் பெண்குரங்கு கைம்மை வாழ்வினை விரும்பவில்லை. தலைவனைப் போன்ற தொழிலை இன்னும் கற்காத தன்குட்டியைச் சுற்றத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு உயரந்த மலை சிகரத்திலிருந்து விழுந்து இறந்துபோனது” (குறு.69) என்று வெளிப்படும் கதைசொல்லியின் குரல் கவனிக்கத்தக்கது. “தாவுதலைத் தன்குட்டி கற்கவில்லை.  ஆனால் அதன் தந்தை அதைக் கற்றிருந்தது. அதனால் அது இறந்தது. தான் கைம்மை நிலைக்குத் தள்ளப்பட்டதால் இனி நான் வாழ தயாரில்லை. எனவே என் குட்டியை அதன் தந்தையைப் போல் வளர்க்க வேண்டாம் என்று கூறி உயிர் துறக்கிறது.

    இப்படலில் கூறப்படும் கருங்குரங்கு என்பதை ஆணின் குறியீடாகக் கொள்ள இடமுள்ளது. இப்படி கொண்டால், மந்தி என்பது பெண்ணைக் குறிக்கிறது. குட்டி குழந்தையைக் குறிக்கிறது. இப்படிக் கொண்டால் இப்பாடல் ஆணால் கைவிடப்பட்ட பெண் தன் குழந்தையை நல்ல முறையில் (தந்தையைப் போல் அல்லாமல்) வளர்க்குமாறு கூறி இறந்துபோவது இயல்பாக நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. இவ்வாறு கணவனால் ஏமற்றப்பட்ட பெண்கள் வயிற்றிலிருந்த தம் குழந்தை பிறக்கும் வரை அவர்களுக்காக உயிர் வாழ்தனர் என்பதும், அக்ககுழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்த பின்னர் தம் உயிரைத் துரந்தனர் என்பதும் புலனாகிறது. இது அச்சமூகத்தில் நிலவிய ஒன்றாக விளங்கிக்கொள்ளமுடிகிறது.

    இது மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதை மற்றொரு குறுந்தொகைப் பாடலும் கூறுகிறது. “தலைவியின் நோய்க்குக் காரணம் குறிஞ்சி நிலத்தலைவன் தகுதியில்லாதவன் போலக் கட்டுவிச்சி இது தெய்வத்தால் வந்தது என்று தீமை பயக்கும் மொழிகளை உரைத்தாள்…. வலிய குட்டியின் தந்தையாகிய கடுவனும் அக்கொடிய தலைவனை அறியும். அது தன் கண்களால் கண்ட நிகழ்ச்சியைக் கண்டிலேன் எனப் பொய் கூறாது” (குறு.26) என்று தோழியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லி ஆணின் தகுதி- பெண்ணின் துயரம் பற்றிய பதிவுகளை நமக்குத் தருகிறது. இப்பாடலில் கூறுப்படும் ஆண் பெண்ணுக்குத் தகுதியில்லாதவன். அதனால் குறிசொல்லும் பெண் இது தெய்வத்தால் வந்தது என்று பொய் சொன்னாள் என்கிறது கதைசொல்லி. அடுத்து அவர்களுடைய காதலை அறிந்தது ஒரு குரங்கு. அதனால் “இவ்விருவரும் காதலித்தார்கள்“ என்று கூறமுடியாது. எனவே தலைவியின் வேதனை அவள் உள்ளத்தை வருத்திக்கொண்டுள்ளது. வருந்துவதைத் தவிர அவளால் வேரென்ன செய்யமுடியும்.

    ” கதைசொல்லியின் குரல் என்ற அடையாளத்தைக் கொண்டு சங்கப்பாடல்களை வாசிக்கும் போது இவ்வாறு பல புதிய செய்திகளை நாம் அறியமுடியும். அத்துடன் வரையறை செய்துள்ள கூற்று என்ற அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் பல உண்மைகளை மீட்டெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

    அடுத்து நாம் கவனிக்கவேண்டிய ஒன்று குழந்தை பேய் என்ற வெளிப்பாடுகள். “குழந்தையைக் கவர்ந்து கொண்ட பேயை என்ன செய்யமுடியும்? அதுவாக வந்து கொடுத்தால் தான் உண்டு. இல்லையென்றால் போனது போனதுதான் என்று விட்டு விடவேண்டியதுதான்“. அதைத்தவிர வேறேதும் செய்யமுடியாது என்று வெளிப்படும் கதைச்சொல்லியின் குரல் அகமரபை விட்டு வெளியேறிய நிலையைக் காட்டுவதாக உள்ளது. அதாவது இனி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று காதலனால்  ஏமாற்றப்பட்ட பெண்ணின் அவலத்தை இது புலப்படுத்துகிறது.

    தலைவனே! நேற்று உன்னோடு தங்கி உறங்கியவள்…. பூந்துகள் கமழும் கூந்தல் விளங்கிய வகையில் அசையுமாறும், இடையிற் கட்டிய உடை சரியவும், நெருங்கிய வளை ஒலிக்கவும் கண்ணால் பெயர்த்து நோக்கியபடி எமது தெருவில் சென்றாள்… அவள் உன்னுடைய தழுவலிலிருந்து நீங்கி எமது தெருவில் சென்றாள். அத்தகைய இளம் பருவமுடைய பரத்தையை நான் கண்டேன். அவள் உன்னோடு நீடு வாழ்வாளாக” (நற்.20) என்ற கதைசொல்லியின் குரல் இங்கு கவனிக்கத்தக்கது. தன்னை விட்டு நீங்கினாலும் பரவாயில்லை. நீ விரும்பிய – உன்னை விரும்பிய இளம் பெண்ணிடமாவது நீ சேர்ந்து வாழ் என்று தன்னைப் போன்ற வேறொரு பெண்ணுக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்யத் தயாரக இருக்கும் பெண்ணின் பண்பையும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளும் ஆணின் பண்பையும் விளக்குகிறது இப்பாடல். பாடல் இவ்வாறு பொருள் தர, “பரத்தையரோடு இருந்து மீண்டவன் ‘யாரையும் அறியேன்‘ என்று கூற, அதற்கு பதில் கூறுவதாக இப்பாடல் அமைகிறது என்றும் தோழி வாயில் மறுத்தது என்றும்” இதற்கு வகுக்கப்பட்டுள்ள வரையறை மறுபரிசீலனைக்கு உரியது.

    இவ்வாறு ”கதைசொல்லியின் குரல் என்ற அடையாளத்தைக் கொண்டு சங்கப்பாடல்களை வாசிக்கும் போது பாடலின் பின்புலத்திலுள்ள செய்திகளை நாம் அறியமுடியும். அத்துடன், வரையறை செய்துள்ள “கூற்று“ என்ற அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் மக்களின் வாழ்வியல் உளப்பாங்கை  மீட்டெடுக்க முடியும்.

    பயன்பட்ட நூல்கள்

    1. செயபால். முனைவர் இரா., அகநானூறு மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
    2. பாலசுப்பிரமணியன். முனைவர் கு. வெ., நற்றிணை மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
    3. மோகன். முனைவர் இரா., பத்துப்பாட்டு மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
    4. நாகராசன். முனைவர் வி., குறுந்தொகை மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
    5. சிவத்தம்பி. கா, தமிழின் கவிதையியல், 2007 குமரன் புத்தக இல்லம், சென்னை – 600 026.
    6. ………………… தொல்காப்பியமும் கவிதையியலும், 2007, குமரன் புத்தக இல்லம், சென்னை – 600 026 .
    7. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு),  2008, அடையாளம், 1205 / 1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி – 621 310.
    8. …………………, பழந்தமிழ் அமைப்பியல் மற்றும் குறியில் ஆய்வுகள், 2009 (முதல் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113.
    9. சந்திரன். முனைவர் ஆ., சங்கப்பாடல்களும் கதைசொல்லியின் குரலும், புதிய அவையம் மின்னிதழ்,  http://shcpub.edu.in/shc/publish_paper/?name=Puthiya+Aaviayam
    10. ……..  மாதொரு பாகன் கதைசொல்லியின் குரல், சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2016, volume 2 issue 5 பக் 45 –  48.
    11. முத்தையன் முனைவர் ஆ., நடனக்காரியான 35 வயது எழுத்தாளர், சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2016, volume 3 issue 2, பக் 36 – 39.
    12. ………….. மொழிதல் கோட்பாட்டு நோக்கில் பன்றிக்குட்டி, சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2018, volume5 issue 1 பக் 48 – 51
    Share
  • சார்ஜ் தீர்ந்து விட்டது

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்த் துறை

    தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)

    திருப்பத்தூர்

    வேலூர்

    முகத்தில் தெளித்த இளநீரைச் சுவைத்தவாறே கண்விழித்த இளைஞன் தங்கரதத்தில் சாய்ந்து கிடப்பதை உணரத் தவறினான். எதிரில் இருந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் மீண்டும் அவன் மயங்கிப் போனான்.

    யார் அவன்? ஏன் மயங்கினான் என்பதை அறிய நாம் அவனுடைய இறந்த காலத்திற்குப் போகத்தான் வேண்டும். வேறு வழி ஏது?

    அரபிக்கடலைக் கிழித்துக்கொண்டு கிளம்பிய சூரியனின் ஒளி மலைகளுக்கு இடையில் இருந்த அந்த ஊரில் படவில்லை. இதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் “அந்தப் பெரியவர்” தான் என்பதை ஊர் மக்கள் திடமாக நம்பினர். “மாடசாமி” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அந்தப் பெரியவர், ஊர் ஊராய் அலைந்து திரிந்து அந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் அவருடைய தலைமுடி நரைத்துப் போனதாகச் சிலர் பேசிக்கொண்டனர். அதனால் அவருக்கு இளம் வயதிலேயே “பெருசு” என்ற பட்டத்தைக் கொடுத்து  மகிழ்ந்தது அந்த ஊர். அந்தப் பட்டம் கொடுத்த ஏழுாவது நாள் அவருக்குப் பிறந்த நாள் வந்தது.

    அது அவரது எழுநூற்று ஐம்பதாவது பிறந்த நாள். அதனால் அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன. கொண்டாட்டம் கலைகட்டியது.

    அந்த ஊரில் வாழ்ந்த மனிதர்களில் அவர்தான் மூத்தவராய் இருந்ததால் அவரது பிறந்த நாளுக்கு வந்திருந்தவர்கள் அவரை வணங்கி மட்டுமே சென்றனர். அப்படி வணங்க வந்தவர்களில்  பேரிளம்பருவப் பெண் ஒருத்தி விநோதமாக நடந்துகொண்டாள். அவரது கழுத்தில் மங்கல நாண் ஒன்றை அணிவித்தாள். அது அந்த நிகழ்வை முன்னின்று நடத்திய உயரமான மனிதரை மிகவும் பாதிக்க, அவர் மாரடைப்பு வந்து சில காலத்திற்குப் பின்னர் இறந்து போனதாக அந்த ஊரில் உள்ளவர்கள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

    திடீரெனக் கொட்டித்தீர்த்த அடைமழையில் பெருக்கெடுத்தோடிய வெல்லத்தில் நனையாமல் கரையேறியவர்களில் ஒருவன்தான் மயங்கிக்கிடக்கும் அந்த இளைஞன். அவனுடைய மயக்கத்தைப் போக்க இளையவள் தொடர்ந்து முயன்று கொண்டிருந்த தருணத்தில் அவன் தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டான்.

    ஆற்றுவெள்ளத்தில் கொட்டும் மழையில் தள்ளாடி கரையடைந்த பெருங்கூட்டத்தில் பலர் சில நாட்களிலேயே இறந்த போனார்கள். தப்பிப் பிழைத்த ஒரு சிலர் நேய்வாய்ப்பட்டதால் இறந்தவர்களின் ஆயுளும் நோயுற்றவர்களின் வலிமையும் இவனுக்குச் செந்தமானது. அதனால் அவன் தன்னுடைய தலையெழுத்தை திருத்தி எழுதிக் கொண்டான். அவ்வாறு செய்ததால் அவனுக்கு எழுத்தன் என்ற பெயர் பிறந்தது. தன்னுடைய தலையெழுத்தை மாற்றிக்கொண்டது போல் மற்றவர்களின் தலையெழுத்தும் மாறவேண்டும் என்று உறங்காமல் தவம் கிடந்தான்.

    ஊர்ச்சுற்றச் சென்ற தலைவன் திரும்பி வருவான் என்று தென்னை மரத்தின் அடியில் ஒற்றைதக் காலில் கிடந்த அவளுடைய தவத்திற்குப் பலனாக அவளுக்குத் தங்கப்பதக்கம் ஒன்று கிடைத்தது. அதைத் தனக்குக் கிடைத்த பாக்கியமாக நினைத்த அவள் அவ்வப்போது மார்புடன் இருக்கமாக அனைத்து மகிழ்ந்தாள். தனிமை கிடைக்கும் போதெல்லாம் அது அவளுக்குத் துணையாக இருந்ததாய் அவள் தன்னுடைய சுயசரிதையில் பின்னால் எழுதியதைச் சிலர் மட்டுமே வாசித்திருந்தனர் என்பதுதான் துர்ப்பாக்கியம்.

    ஃ என்ற பதம் அ ஆ இ ஈ என்ற உயிர் எழுத்துக்களின் தனியன் என்று விளக்கிக்கொண்டிருந்த ஆசானின் வாய் இப்போது அம்மா, ஆடு, இலை, ஈ, என்று மெல்லிய குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.

    அப்போது இரவும் பகலும் மக்களின் தலையெழுத்து மாறவேண்டி உறங்காமல் கிடந்த எழுத்தருக்கு கைமேல் பலனாக ஏராளமான பன்றிகுட்டி குட்டிகள் பிறந்தன. அவற்றின் வருகையால் வீட்டின் தென்மேற்கு மூலையின் நிறம் மாறத்தொடங்கியது. அவற்றிற்கு வண்ணம் அடிக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனை அவருக்குத் தோன்றும் முன்னரே மஞ்சள் வண்ணத்தைத் தீட்டி அவருக்கு அதிர்ச்சியளித்தனர் அவருடைய விசுவாசிகள்.

    உறங்காமல் நீண்ட காலம் தவம் கிடந்த எழுத்தருக்கு அன்று ஏனோ முன்னிரவிலே உறக்கம் வந்தது. எனவே ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று படுக்கையறைக்குப் போனார். உறக்கம் களைந்து எழுந்தவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டின் நிறம் சிவந்திருந்து. எப்படி ஓர் இரவில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தது என்று அவர் யாரிடமும் கேட்கவில்லை. அன்று முதல் அவருடைய இடதுகால் நடக்க மறுத்துவிட்டது. அதன்பிறகு அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது.

    அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போதெல்லாம் வந்து நலன் விசாரித்துச் செல்பவர்களில் சிலர் அவரிடம் தனிமையில் உரையாடிச் செல்வதுண்டு. அப்படி வந்தவர்களில் ஒருத்தன் அவருடைய கைகளை இருகப்பற்றினான். அவனைப் பார்த்த எழுத்தரின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவராய் அருகில் இருந்த இளம்வாரிசு சொன்னான் “இவர் நம்ம பக்கத்து ஊரின் தலைவர் வீட்டிற்குப் புதிதாக குடிவந்தவர் என்று”

    அதைக் கேட்டவுடன் “வாழைப்பழத்தில் ஊசியை குத்திவிட்டுப் பின்னர் அதைச் சுவைப்பது” என்று முடிவெடுத்து நிற்பவர்களுக்கு மத்தியில், காதுகளைப் பொத்திக்கொண்டு  மூன்று கால்களுடன் ஊர் ஊராய்ச் சென்றுகொண்டிருந்த உயரமான தேகம் பளிச்சென நெற்றியில்  தோன்றி மறைய, விழாமல் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு சில பற்களைக் காட்டிச் சிறித்தார் எழுத்தர்.  நெடுநேரம் ஏதேதோ பேசிய இளைஞன் விடைபெற்றுச் சென்றான்.  தாங்கித் தாங்கி நடந்துசென்ற இளைஞனின் கால்களை கவனித்த எழுத்தரின் பார்வை அவருடைய கால்கள் மீது திரும்பியது.

    தங்கப் பதக்கம் பளபளப்புடன் இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த இளையவளுக்குப் ஆயிரமாவது பிறந்தாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

    அதை விமரிசையாக எவ்வாறு கொண்டாடலாம்? என்ற கேள்வி எழுந்தபோது  யோசனைகள் பல முளைக்கத் தொடங்கின. இப்படிக் கொண்டாடலாம்! அப்படி கொண்டாடலாம்! என்ற கடிவாளங்கள் இறுதியாக மௌனத்தில் அமிழ்ந்தன.

    இளநீர் விற்பதில் இருந்து இளையவளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களில் சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டு எதையும் கேட்காமல் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

    டீக்கடையிலும் இந்த விவாதம் பற்றி எரிந்தது. “சரித்திரத்தில் இதுவரை இப்படி ஒருவிழா கொண்டாடப்படவில்லை” என்ற குரல் அதிர்ந்து ஒலித்தது. அது டீ குடிக்க வந்தவர்களின் காதுகளைச் செவிடாக்கியது.

    “இளையவளின் ஆயிரமாவது  பிறந்த நாள் சரித்திரம் அறியாதவாறு தடபுடலாய்க்  கொண்டாடப்படும்” என்று  ஊரே எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது. அப்போதுவரை அவளுடைய படுக்கையறையை அலங்கரித்து வந்த தங்கப்பதக்கம் திடீரென மண்ணாக மாறியது. அதைப் பார்த்த அவள் அதிர்ச்சியடைந்தாள். இமைகள் இணைந்தன. மயங்கிக் குப்புறவிழுந்தாள். மயக்கம் தெளிந்து கண்விழித்தவள் மீண்டும் மயங்கிப்போனாள். இரண்டாம் முறையாகக் கண்விழித்தபோது மருத்துவரின் குரல் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள்.

    அதன் பிறகு மருத்துவமனைக்கு அடிக்கடி ரகசியமாகப் போய் வந்துக்கொண்டிருந்தாள். அதற்கான காரணம் அவளுடைய வீட்டிலிருந்த வேலைக்காரிக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தாள். ஆனால் அவளுக்குத் தெரிந்திருந்தது என்பதை அந்த வீட்டில் இருந்த இரு கண்கள் கண்டுபிடித்திருந்தன. அதற்கு வாய் இல்லாததால் அதை யாருக்கும் அது சொல்லவில்லை.

    ஆயிரத்தொன்றாவது பிறந்தநாளுக்கு ஒருமாதத்திற்கு முன்னர் இளையவள் கருவுற்றிருப்பதை அவளுடைய வயிறு வெளிவுலகிற்கு வாய்த்திறந்து சொன்னது.

    அவளது வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்பதை அவளுடைய வேலைக் காரி எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டாள். பிறக்க இருப்பது எழுபத்தைந்தாவது குழந்தையாக இருந்தாலும் அதுதான் அவளுக்குப் பிறக்க இருக்கும் முதல் ஆண் குழந்தை என்பது இளையவளின் காதுகளுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.

    அந்த ஊரில் எழுபத்தைந்து குழந்தைகளை ஆயிரமாண்டுகளுக்குப் பிறகுப் பெறப்போகும் புண்ணியம் அவளுக்கு மட்டுமே வாய்த்திருப்பதாகப் பஞ்சாங்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டிருப்பதாக ஒரு செய்தி மக்களிடம் புயலாய்ப் பரவியது.

    தனிமையில் இருந்த இளையவளுக்கு  முதல் பிரசவத்தைப் பற்றிய நினைவுகள் அரும்ப ஆரம்பித்தன.

     இளநீர் விற்ற பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கேக் வாங்க கடைக்குப் போய் வெறுங்கையுடன் சோகமாக வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த அவளுடைய முகம் பிரகாசமானது. அவள் பிரமித்துப் போனாள். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளுடைய வீட்டின் அழகுதான் அவளுடைய அந்த பிரமிப்பிற்குக் காரணம்.

    வீட்டின் உள்ளே நுழைந்தபோது “இது கற்பனை இல்லையே” என்பதை நம்ப கொஞ்ச நேரம் அவளுக்குத் தேவைப்பட்டது.

    பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்குத் தேவையான அனைத்தும் அவள் நினைத்துப் பார்ப்பதற்கும் மேலாக அங்கே குவிக்கப்பட்டிருந்தன. அவள் கண்களின் தேடலில் சிக்கிய இளைஞன்  கொடுத்த பரிசு தான் பத்துமாதங்கள் கழித்து அழகான பெண் குழந்தையாய்ப்  பிறந்தது.

    கொஞ்ச நாள் கழித்து தன்னுடைய மாளிகையின் மேல் தளத்தில் அவளைக் குடிவைத்தான் அந்த இளைஞன். பின்னர் திடீரென ஒரு நாள் அவன் காணாமல் போய்விட அவனைத் தேடுவதின் அவசியம் ஒரு கட்டத்தில் இளையவளுக்கு ஏற்படாமல் போனது.

    அந்தக் கட்டத்தில் அந்த இளைஞன் இல்லை. தன் நினைவிலும் அவன் இல்லை என்பதை இரவில் மட்டுமே அவ்வப்போது உணர ஆரம்பித்தாள் அவள். அவ்வாறான வேளைகளில்  “மண்ணில் தனக்குச் சொர்க்கத்தை உருவாக்கித் தந்துவிட்டு வானுலகில் நிரந்தரமாய் அவன் தங்கிவிட்டதாய்” தன் மனதைச் சமாதானம் படுத்திக்கொள்வாள்.

    அவனைப் போல் தானும் வானுலகம் போக ஏற்பாடுகள் நடைபெறுவதாக அவளுக்குச் செய்தி வானிலிருந்து வந்தது.

    அப்போதுதான் அவளுக்கு எழுபத்தைந்தாவது கரு உருவான விசயம் காதுகளுக்கு வந்துசேர்ந்தது. செய்வதறியாது திகைத்துப் போனாள்.

    நாள் நெருங்கிக் கொண்டிருந்ததை அவளது உடல் உணர்த்தியது. நாட்கள் நிமிடங்களாகச் சுருங்கின.

    ”பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அவசர அவசரமாய்ப் பறந்தாள்” என்ற செய்தி பரவியது. ஊரே ஆவலாய் எதிர்பார்த்து நின்றது. ஆண் குழந்தை பிறக்க வேண்டுதல்கள் முளைத்தன புதுப்புது வடிவங்களில்.

    “இன்னும் சற்று நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த காற்று வரும். அப்பொழுது மழை பெய்யும். இதுவெல்லாம் நடந்தால் நான்கு கால்கள், நான்கு கைகள், நான்கு கண்கள், இரண்டு தலைகள், இரண்டு வாய்கள், நான்கு மூக்குத்துவாரங்கள் கொண்ட ஒரு குழந்தை இளையவளுக்குப் பிறக்கும்” என்று வானில் இருந்து அசரீரி ஒலித்தது.

    அதைக் கேட்ட மக்கள் மழையில் குடையைத் தூக்கியெறிந்து ஆனந்தக் குளியலை அனுபவித்தனர். பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்க மருத்துமனையின் வாயிலில் தவம் கிடந்தனர். அவர்களின் செவிமடல்களில் மோதித்தெரித்த தண்ணீர் துளிகள் பிரவாகமெடுத்து வெள்ளமாய் ஓடத்தொடங்கியது.

    பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர் பெண்ணே அல்லள். அவன் ஓர் ஆண்மகன்” என்று துள்ளி குதித்த சொற்கள். பிரவாகத்துச்செல்லும் செல்லும் வெள்ளத்தின் வேகத்தில் அமுங்கிப்போனது அடயாளமின்றி.

    அந்த வர்த்தைகளைக் கேட்ட உழவன் “போங்கடா புண்ணாக்குகளா…….” என்று தலையில் அடித்தவாறே மாட்டின் கயிற்றை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

    குறிப்பு: லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்து விட்டதால் சொற்கள் இத்துடன் நிற்கின்றன. தொழில் நுட்பக் கோளாறுக்காக வருந்துகிறேன். ஆனால் நீங்கள் தொடரலாம்.

    நன்றி.

    வணக்கம்.

    .

    Share
  • அறிவழகனும் அவனது கூட்டாளிகளும்

    -முனைவர் ஆ. சந்திரன் 

    விண்ணை முட்டிநின்றது மலை.  அந்த மலையிலிருந்துதான் பேய் வரும் என்று பெரியவர் கூறியிருந்தார்.  அவன் அந்த மலையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் தென்படவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலால் பல நாட்கள் அவ்வாறு செய்தான்.

    ஆனால் அவனது முயற்சி தோற்றுக்கொண்டே இருந்தது. அதனால் அவனுக்குப் பெரியவர் கூறியதன் மீது சந்தேகம் வந்தது. ஒரு வேளை பேய் பற்றிக் கூறியது பொய்யாக இருக்குமோ என்று நினைத்தான். அவரிடம் அது பற்றி எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

    அப்போது அவனது கூட்டாளிகள் வந்தார்கள். தன்னுடைய எண்ணத்தை அவர்களிடம் கூறினான் அறிவழகன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.

    “சரி சரி சிரிச்சது போதும் வாங்கடா விளையாடப் போகலாம்” என்றான் அந்த கூட்டத்திலேயே உயரமாக இருந்த ஒருவன். அவனை எல்லோரும் வளர்ந்துகெட்டவன் என்றுதான் அழைப்பார்கள். அவன்தான் அவர்களில் வயதில் மூத்தவன்.

    பக்கத்தில் இருந்த மைதானத்தில் கபடி விளையாட ஆரம்பித்தார்கள்.

    அப்போது அந்த வழியாக அந்தப் பெரியவர் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் ஸ்ரீ ஸ்ரீ பால ராம கங்க சிங்கர். அவர் மீது அந்த ஊரில் உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. காரணம் அவர்தான் அந்த கிராமத்தில் அதிகம் படித்தவர். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவார்.

    அவரைப் பார்த்ததும் அவரிடமாவது இந்த சந்தேகத்தைக் கேட்கலாமா? என்று அறிவழகன் யோசித்தான்.

    அதைப் புரிந்துகொண்ட கூட்டாளிகளில் ஒருவனான அந்த வளர்ந்துகெட்டவன் அதைக் கேட்டேவிட்டான். ஐயா! கொல்லிக்கட்டி பேய்னு ஒன்னு இருக்கா? என்று.

    கொல்லிக்கட்டி பேயா? என்று வாய்ப்பிளந்த அவர், ”ஆமாம்! முன்னாடி இருந்தது. நான் என்னுடைய சின்ன வயசில பார்த்திருக்கிறேன். வெள்ளையாக இருக்கும். அதோட தலை வானத்திலும் கால்கள் பூமியிலும் இருக்கும். ஆனால் நம்ம ஊருக்கு மின்சாரம் வந்ததில் இருந்து அது வருவதில்லை” என்று பெருமூச்சு விட்டவர் தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    இரவு மீண்டும் புலர்ந்தது.

    அன்றும் வழக்கம் போல நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தார்கள் அறிவழகனும் அவனுடைய கூட்டாளிகளும்.

    மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் அறிவழகன். அவனுக்கு நட்சத்திரங்களை எண்ணுவதில் ஆர்வம் அதிகம். அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய கூட்டாளிகளுக்கும் அப்படித்தான். சில  நேரங்களில் யார் அதிகமாக நட்சத்திரங்களை எண்ணுகிறோம் பார்க்கலாம் என்று அவர்களுக்குள் போட்டி வரும்.

    இரவு ஏழு மணியளவில் இம்மாதிரியான வாதம் துவங்கும். அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார்கள். மறுநாள் மீண்டும் அது தொடரும். அந்த  கிராமத்துச் சிறுவர்களின் வாடிக்கை அது.

    எட்டொன்பது வீடுகளைக் கொண்ட அந்தக் கிராமத்தில் நான்கு பிரதான தெருக்கள் இருந்தன. அவற்றில் மூன்று தெருக்கள் கிழக்கு மேற்காக இருந்தன. அவற்றை இணைப்பது போல் அமைந்திருந்தது நான்காவது தெருவான சங்கத் தெரு. வாடைக் காற்றை வரவேற்கும் அத்தெருவில்தான் அறிவழகனின் வீடு இருந்தது.

    அந்தத் தெருவில் வசிப்பவர்கள் இரவில் பெரும்பாலும் வாயிலுக்கு வெளியில் பாய்விரித்துப் படுத்துறங்குவது வழக்கம். இந்த வழக்கம் எவ்வளவு காலமாக உள்ளது என்ற கேள்விக்குப் பதில் யாருக்கும் தெரியாது. யாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பவில்லை.

    அன்று வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே பாய்போட்டுப் படுக்கப்போனான் அறிவழகன். அவனுடைய கூட்டாளிகள் சிலரும் அவனுடன் இருந்தார்கள். அப்போது தான் அதைப் பற்றி அவர்கள் முதல் முறையாகக் கேட்டார்கள்.

    கொல்லிக்கட்டி பேய். அது இரவு வேளையில் நடமாடும். வானளவு உயரத்திற்கு அது இருக்கும். வெள்ளையாக இருக்கும். அது நடந்துவரும் போது “ஜல் ஜல்” என்று சத்தம் வரும் என்று பேய் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர்.

    அவர் பெயர் ஆனந்தன். அவர் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தார்.

    சிறுவர்கள் குதூகலத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மின்விளக்கின் ஒளியில் அவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி நன்றாகத் தெரிந்தது.

    அவர் தொடர்ந்தார். ”தான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் தன்னுடைய அப்பாவுடன் வயலுக்குச் செல்லும்போதுதான் முதல் முறையாக அப்பேயைக் கண்டதாகவும், அப்போது சிலீஸ்! சிலீஸ்! என்று அவருடைய அப்பா கூற அப்பேய் அவர்களை ஒன்றும் செய்யாமல் போய்விட்டதாகவும்” அவர் கூறினார்.

    அக்கதையைக் கேட்ட சிறுவர்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அறிவழகனுக்கு அது சுவாரசியமாக இருந்தது. கொல்லிக்கட்டிப் பேயைப் பார்க்க அவன் மனம் ஆவல் கொண்டது. பெரியவர் கூறிய வடிவம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்தப் பேய் இப்போதும் நடமாடிக்கொண்டுள்ளதா? என்று பெரியவரிடம் கேட்கலாம் என்று அவன் நினைத்தான்.

    ஆனால் ஏனோ கேட்காமல் விட்டுவிட்டான்.

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்

    Share
  • எழுதப்படாத பக்கங்களை வாசிக்கத் தொடங்கியவன்

    -முனைவர் ஆ. சந்திரன்

    “ஆகாயத்திலிருந்து விழும் தீப்பந்தங்கள் அனைத்தையும் தன்னுடைய வாய்க்குள் போட்டுக் கொள்ளும்” என்பதை முன்னரே அறிந்தவர்கள்  போல இருந்தன அவர்களுடைய செயல்பாடுகள். அதனால் தானோ என்னவோ தங்களுடைய முன்னோர்கள் பற்றி இப்படி எழுதியிருந்தனர். “கூகுலில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்கள் போன்ற கட்டுமஸ்தான உடல்வாகு. யானைகளைத் தலைதெறிக்க புறமுதுகிட்டு ஓடவிடும் வலிமையான வீரர்கள். தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாக வழங்குவதே தம்முடைய நோக்கம் என்ற வாசகங்களின் மேல் வீற்றிருக்கும் மன்னன்” என்று.  இந்த உண்மை மன்னனில் இருந்து வெளியேறிய போது, அழிவிலிருந்து மீண்ட அந்தத் தேசம் புது சரித்திரம் எழுதும் வேலை தொடங்கியிருந்தது. புதிய மன்னனின் அரசாணையின் பேரில் அது தொடங்கப்பட்டிருந்தது என்பது மிகமுக்கியமான ஒன்று. அவ்வாறு எழுதப்பட்ட புதிய சரித்திரத்தை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப மறுத்தவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் கூட ஊற்றப்பட்டது. அந்த விஷத்தின் சுவை தெரியாமல் இருக்க ஒரு சிலருக்கு மட்டும் ஆம்லெட் சைடிஸாகப் பெறும் சிறப்புச் சலுகை இருந்தது. சிதைவிலிருந்து உருவான நகரின் எல்லையில் அமைந்திருந்த அடர்ந்த வனப்பகுதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் எச்சங்கள் பதுங்கி இருந்தன. அம்மண்ணின் மேல் தவழ்ந்து விளையாட்டுப் பழகி வளர்ந்ததால், அவற்றின் மீது அவனுக்கு இயற்கையாகவே ஒரு பிடிப்பு இருந்தது. “பெயரின் முன் ஒட்டிக்கொண்டிருந்த தாயின் நினைவுகளை அழிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்குப் புதுப் பெயருடன் மெல்ல பட்டாணியும் கிடைக்கும்” என்று உத்தரவாதம் வீதிகள் தோறும் கால்முளைத்து நடக்க ஆரம்பித்தன. அவற்றின் மீது ஏறியவர்களின் பார்வையில் கலிஸ்டட்டிட்  பரிதாபமாகக் காட்சியளித்தான். அவனுடைய வாய் கலிஸ்! கலிஸ்! என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அது அவனுடைய தாயின் பெயர்.

    வேகமாக வலப்பக்கமாக ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு எதிராக நடைபோட ஆரம்பித்தன பாபிணகன் கால்கள். அதனால் அவனது காலடிச் சுவடுகள் அந்நாட்டில் தனியாகத் தெரிந்தன. அந்தக் கால்களைத் தொடர்ந்து தயக்கத்துடன் சிலர் நடக்க ஆரம்பித்தனர். அப்படி நடந்தவர்களுக்கு ஒரு தலைவன் திடீரெனக் கிடைத்தான். அதனால் அவனைப் பின்தொடர்வதில் அம்மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது. அதனால் அவர்களின் நடையின் வேகம் அதிகரித்தது. மக்களின் நடைக்கு ஏற்ப அவனுடைய தலைவனுக்குக் விலைமதிப்பற்ற பொற்காசுகள் பரிசாகக் கிடைத்தன. பரிசு கொடுத்தவரின் முகம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டதைத் தலைவனின் ஒன்று விட்ட தம்பியின் மகன் கண்டு கண்பிடித்த மறுநாள் அதிகாலையில் இறந்து போனான். அவன் இறந்த செய்தி மக்களின் தலைவனான திடதத்தனின் கையெழுத்துடன் அறிவிக்கப்பட்டது. “என் உயிருக்கும் மேலான இளவலின் மரணம் இயற்கையானது. நெடுநாள் வயிற்றுவலியால் அவன் துடித்துக்கொண்டிருந்தான் என்பது நீங்கள் அறிந்த ஒன்றே! வலிதாங்காமல் துடித்துக்கொண்டிருந்த அவனுடைய உயிரை அதிகாலை 3.33 மணிக்கு  எடுத்துக்கொண்டு வயிற்று வலி பறந்து போனதை நானே நேரில் பார்த்தேன்” என்று  அந்த அறிவிப்பு அமைந்திருந்தது. வாசகத்தின் கீழ், தலைவன் தன்னுடைய கட்டைவிரலால் கிறுக்கியிருந்தார்.  அந்தக் கிறுக்கலின் உள்ளே பதுங்கியிருந்தது ஒரு இராஜ இரகசியம். அது “தலைவனின் நூறாவது மகனின் ஆறாவது வாரிசுக்கு மட்டும் புரிய வேண்டும் என்று டிசைன் செய்யப்பட்டிருந்து. அதன் குறிப்பு ஒன்றினைப் பேழையில் மறைத்து வைத்துவிட்டு அத்தலைவன் தன்னுடைய இறுதி மூச்சினைக் கடைசியாக ஒருமுறை வேகமாக இழுத்துவிட்டான். அவன் இறந்த இரண்டாவது சகாப்பத்தின் கடைசி நாள் நள்ளிரவில் கீழ்வானில் ஓர் ஒளிவட்டம் தோன்றியது. முழுநிலவு நாளில் தோன்றிய அதை மக்கள் இரவெல்லாம் கண்விழித்துக் காத்திருந்து பார்த்து மகிழ்ந்தனர். வானில் அன்று வழக்கத்திற்கு மாறாக ஒன்பது கோள்களும் ஒரு புள்ளியில் வந்துநின்று தம்முடைய மகிழ்ச்சியைக் கைக்லுக்கி பரிமாறிக்கொண்டிருந்தன.  அப்போது “இந்த சாம்ராஜ்ஜியத்தின் மகாசக்கரவத்தி நான்” என்று முடிசூட்டி மகிழ்ந்த முதல் மன்னனின் வாழ்க்கை முழுமை அடைந்தது. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த மகாசக்கரவத்தியின் ஏகபத்தினி அன்று ஓர் பாலகனைப் பிரசவித்தாள். ஊரே அதைக் கொண்டாட ஆரம்பித்தது.

    பாதியளவு நிரம்பியிருந்த குளத்தின் மையத்தில் வீசியெறிந்த கல்லை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த முதியவரின் நரை தண்ணீரின் மெல்லிய அலைகளுக்கிடையே நன்றாகவே தெரிந்தது. அப்போது மழைக்காலமாக இல்லாவிட்டாலும் அக்குளத்தில் மட்டும் தண்ணீர் பாதிக்குமேல் இருந்தது. மழைக்குப் புறம்பான காலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழைநீரும் அதில் கலந்திருந்ததால் தெளிவாய் இருந்தது. வட்ட வடிவிலான அலைகள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருந்தன. அவரது பார்வை மையத்திலிருந்து தன்னுடய காலடியைத் தொட விரையும் அலைகளுடன் பயணித்து திரும்புவதற்குள் கல்லெறிந்த இடம் அடையாளம் இன்றிப் போனது. அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், தன்னுடைய நெஞ்சில் இருந்த சுமை விலகியதாய் உணர்ந்தார். அப்போது அவருக்குப் பிறந்த புதுத்தெம்பு அவரை தெற்கு நோக்கி இழுத்தது. எதையோ சாதித்தவர்போல் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தார். தன்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தபோது அவருடைய ஆறாவது விரலில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

    அறிமுகமில்லாத ஆனால் தன்முன்னோர்கள் வாழும் தேசத்தில்தான் வாழ்கிறேன் என்பதை உணரும் போது அவனுக்கு வயது 99 ஆகியிருந்தது.  என்றாலும், அவனுடைய நடையில் அது தெரியாததில் வியப்பொன்றும் இல்லை. அது அந்நிலத்தின் நியதிகளில் ஒன்று. “யுகப் புதல்வன் அந்நிலத்திற்குக் கொடுத்திருந்த வரம் அது” என்பதை மக்கள் அறிந்துகொண்டது முதல் மூப்பின் வியர்வைத்துளிகள் அம்மண்ணில் சிந்துவது முற்றிலும் நின்று போயிற்று. வேண்டிய இடத்தின் வரைபடம் அவர்கள் கண்முன் தோன்றும். அதனால் அவர்களுடைய கால்களுக்கு வேலையில்லாமல் போனது. சிலர் பயனற்ற அந்த கால்களை வெட்டி மியூசியத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஆரம்பித்தனர். அப்படி பாதுகாத்தவற்றில் சில இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் நடைப் பயிற்சியில் ஈடுபட்டன. குறுக்கும் நெடுக்கமாக மண்புழுக்கள் போல் நடக்கும் அவற்றினைப் புகைப்படம் எடுத்தவனின் கைகள் மீது பரிசு மழை பெய்தது. அவற்றில் இருந்து தப்பிக்க அவன் அடிக்கடி குகைக்குள் ஓட ஆரம்பித்தான். அவ்வாறு ஓடிக்கொண்டிருந்த ஒருநாள் அவன் தோள் மீது அவனுக்குத் தெரியாமல் வானரம் ஒன்று தொற்றிக் கொண்டது. அதன் பிறகு அவன் அடிக்கடித்  தண்ணீருக்கு அருகிலிருந்த குளத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். தாகம் தணிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவன் முகம் தாமரை போல் மலர ஆரம்பித்தது. அதை அவனுடைய கண்கள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றின.

    10.30 மணிக்கு வந்தடைவேன் என்று கங்கன் முன்கூட்டியே அனுப்பிய குறுஞ்செய்தி பொய்க்கவில்லை. ஆனால் வெறும் 20 நிமிடங்கள் மட்டும்தான் கால தாமதமானது. ஆதலால்தான் அவன் ரொம்ப கூலாக இருந்தான். ஒரு மணிநேரம் காத்திருப்போம். அதற்குள் வரவில்லை என்றால் பிறகு என்ன செய்வதென்று காத்திருந்தவர்களுக்கு, ஒன்றரை மணிநேரம் தேவைப்பட்டது. தங்கள் முடிவை மாற்றாமல் இருப்பதற்கு. அதற்குக் காரணம் கங்கன் நாற்பது நிமிடங்கள் முன்னரே வந்துவிட்டதுதான் என்றும் நினைக்கலாம். அல்லது அவர்களுடைய பொறுமைக்குப் பொற்காசுகளும் தரலாம். கிளம்பலாம் என்று முடிவெடுத்தால், கிளம்பவேண்டியது தானே! என்றும் நினைக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. முடிந்த ஒன்றின் தொடர்ச்சியா, தொடர்ச்சியின் முடிவா? என்ற கேள்விகளும் எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு. “வயது ஆகிவிட்டாலே இப்படித்தான். எதையும் ஞாபகத்ததுல வைக்க முடியருதில்ல” என்ற முணுமுணுப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதில் பெரிய மன வருத்தம் ஏற்படவில்லை. என்றாலும், நாடு மக்கள் பழக்க வழக்கம் என எல்லாம் அவனுக்குப் பழகியதாக இருந்தாலும், ஏனோ அன்று புதிதாகத் தோன்றியது. அதனால் அவன் தன்னுடைய ஊருக்கே திரும்பிப்போக முடிவுசெய்தான்.

    ராப்பகல் சந்திப்பு. கைத்தடியுடன் ரயிலில் இருந்து இறங்கிய பெரியவருக்கு மாலை மரியாதை மலிந்தன. அவருடைய கால்களின் நிழல்கள் ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பின்படி அந்தப் படிக்கட்டுகளைக் கடந்து சென்றன.  நல்ல மேய்ப்பனாய் இருந்து புகழ்பெற்றதால் வானில் இருந்து நேரடியாய் பூமிக்கு வந்தது ஆயிரம் ஆண்டுகளில் அவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப் பரிசாகக் கிடைத்திருந்தது. அதனால் அவன் அந்த கூட்டத்தின் ஒப்பற்ற நாயகனாய் மாறினான். மக்களின் துயரங்களைக் காதில் வாங்கி அவற்றை வானதிற்கு அப்பால் வீசியெறிந்து கொண்டிருந்தபோது தடியுடன் வந்த பெரியவரின் நிழல் காத்திருந்து இரகசியமாக களவில் மகிழ்ந்ததை அந்த ஊரில் இருந்த சிலருடைய வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அவை பெரியவரின் கைதடியை வாங்கிக்கொண்டதும் அமைதியடைந்தது.

    ஜிலேப்பியைப் பிச்சிப்போட்டது போல் தலையெழுத்து இருந்ததைப் பற்றிய நினைவுகள் ஏதும் அவர்களிடம் இப்போது இருக்கவில்லை. எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று வரலாற்றை அவர்களின் குழந்தைகளும் நன்கு அறிந்திருந்தனர். ரத்தவெள்ளம் அடிக்கடி ஊரின் வழியாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து ஏன் இந்த வாழ்க்கை நமக்கு என்று வேதனையுடன் இருந்த போதுதான் அவர்களின் வேதனைத் துடைக்கும் மருந்தாய் அவர்களிடம் வந்து சேர்ந்தான் அந்தப் புனிதன். அவனுடைய பயணத்தின் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பித்தது என்பதைப் பற்றிய  நினைவு அவனிடம் இருக்கவில்லை. ஆனால் அவன் போய்ச்சேரும் இலக்கைப் பற்றிய வரைபடத்தைத் தன்னுடைய நெற்றியில் வரைந்துவைத்திருந்தான். அவனுடைய வருகைக்குப் பிறகு ரத்த வெள்ளம் ஊரை நோக்கி வருவது முற்றிலும் நின்று போனது. மக்கள் ஆற்றில் நீச்சல் பழகி மகிழ்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.

    ஐந்து சகோதரர்களைத் துரத்தியடித்த பூரிப்பு நெடுநேரம் அவர்களுக்கு நீடிக்கவில்லை. ஆசை யாரை விட்டது.  அவர்களை விட்டு வைக்க. மூத்தவனை இளையவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு இருக்கும் சொத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ஆனால் விதி வேறொரு கணக்கை கையில் வைத்திருந்தது என்பது துரத்தப்பட்ட சகோரதரர்களுக்குத் தெரிந்த போதும் அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. காலக்கணக்கில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பாதையில் பயணிப்பதையே விரும்பினார்கள். அதனால் அவர்களின் வாரிசுகளில் பலர்  தங்களுடைய உருவத்தை மாற்றிக்கொண்டால் என்ன? என நினைத்தனர். அப்படி மாற்றிக்கொண்டவர்களில் பலர் பின்னாளில் சரித்திரத்தில் தங்களுடைய பெயர் பொறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.

    இரவின் இருளில் மறைந்து வாழ்ந்து பழகியதால் எல்லாம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததில் வியப்பில்லை. ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளக் கூடாதென்பதில் கவனமாக இருந்தார்கள். அதனால்  கோழியை அறுத்து அதன் முட்டையைக் கரியுடன் கலந்து கள் குடித்து உண்டான போதயை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்தார்கள். தங்களைப் பற்றிய உண்மையை யாரும் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர்கள் பூமியில் இரத்தத்தை அவ்வப்போது தெளிப்பார்கள். சில வேளை அவர்களே ஆடுகளாக வேடமிட்டும் அலைவார்கள். அப்போது தானே அவர்களுக்கு நல்ல மேய்ப்பன் கிடைப்பான். அவனை வைத்து அவர்கள் விளையாட்டைத் தொடரமுடியும். அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இரண்டு பெரிய கண்களைத் தயாரித்து வானில் உலவவிட்டு மகிழ்ந்தார்கள். அதைப் பார்த்து மக்கள் அங்கே பார் இரண்டு கண்கள் என்று அதிசயத்து நின்றனர். ஆனால் உண்மையில் அவை இரண்டு கண்கள் அல்ல. ஏன் அவை கண்களே அல்ல. என்பதைக் கண்டு பிடித்தான் வள்ளரிஸ். அதனால் அவனுடைய உடல் இருட்டறையில் அடைக்க சத்தமில்லாமல் ஏற்பாடு நடந்தது. யார் அவனை இருட்டறையில் அடைத்தார்கள்? என்ற செய்தியும் இருட்டிலே அடைந்து கிடந்ததுதான் வேடிக்கை என்றாலும், அதையும் அறிந்துகொண்டவனின் கண்களும் இருளில் அடைக்கப்பட்டது வியப்புதான். அவ்வாறு இருட்டில் அடைப்பட்டுக்கிடந்தாலும் அவற்றிற்கு அந்த ஒற்றைக் கண் தெளிவாகத் தெரிந்தது. அதை அவனால் நன்றாக இப்பொழுதும் பார்க்க முடிந்தது. அப்படி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் கண்ணில் இருந்து சில உருவங்கள் ஓசையின்றி நடைபோட்டுக்கொண்டிருந்தன. அவை அவனுக்கு வியப்பைத் தரவில்லை என்றாலும் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். இருளின் நீளத்திற்கு உருவங்கள் தொடர்ந்தன …….

    வேகமாக அடுத்தப் பக்கத்தைப் புரட்டிய ஜெயந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பக்கத்தில் எதுவும் எழுதப்படவில்லை. அந்த புத்தகத்தின் அடுத்தடுத்தப் பக்கங்களும் அவ்வாறே வெறுமையாக இருந்தன.  பாதிக்குமேல் ஒன்றும் எழுதப்படாத அட்டை கிழிந்திருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு விரக்தியுடன் தூங்கப்போனான். படுக்கையறையில் வெகுநேரம் உறக்கம் இல்லாமல் தவித்தவனின் கண்களை உறக்கம் மெல்ல தழுவ முயன்றது. அப்போது அவனுடைய கண்கள் எதை எதையோ பார்க்கத் தொடங்கின.

    பக்கங்களைத் திருப்பி வாசிக்க ஆரம்பித்தான்…

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூர், வேலூர்

    Share
  • மொழிதல் கோட்பாட்டு நோக்கில் “மயானத்தில் நிற்கும் மரங்கள்”

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப் பேராசிரியர்

    தமிழ்த்துறை

    தூயநெஞ்சக் கல்லூரி

    திருப்பத்தூர், வேலூர்

     

    “ஏய் ஒன்னத்தான்” என்ற சப்தம் பொதுமக்கள் புழங்கும் இடத்தில் எழுகிறது. அந்தச் சப்தம் வந்த திசையை நோக்கி சிலர் திரும்பிப் பார்க்கின்றனர். அந்தச் சப்தத்திற்கான பொருள் அது யாரையோ நோக்கி விளிப்பதாக அமைகிறது. அது அதை எழுப்பியவருக்கும் அது யாரை நோக்கி விளிக்கப்பட்டாதோ அவருக்கும் இடையிலான உறவாக அமைகின்றது. அந்த அமைப்பு எதிர் எதிர் தன்மை கொண்டதாக அமைகின்றது.  அதாவது, சப்தத்தை எழுப்பியவன் தன்னிலையில் நிற்பதால் அவன் நான் என்றும் அவனது எதிரில் இருக்கும் ஒருவனை நோக்கிதாக விளித்தல் அமைவதால் அவன் நீ என்றுமாக நான்  x நீ என்ற நிலையில் அவ்விருவரும் தொடர்பு கொள்ளுகின்றனர். இது உரையாடலுக்கான தொடக்க நிலையாகும். இதன் அடுத்த நகர்வாக “மச்சான் நீ எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாளாச்சி!. நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? உங்க  வீட்டல எல்லாரும் நல்லா இருக்காங்கலா? எங்க வீட்டில எல்லாம் நன்றாக இருக்கோம்” என்பன போன்ற வாக்கியங்களாய் அவ்வுரையாடல்  நீளலாம். இந்த உரையாடல் இருவருக்கு இடையில் நான் x நீ என்ற எதிர் எதிர் தளங்களில் தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கும். அவர்கள் சந்திப்பு முற்று பெறும்வரை.  இவ்வாறே இலக்கியங்களிலும் இடம் பெறும் உரையாடல் அல்லது கூற்று என்பதும் நான் x நீ என்ற எதிர்வுகளாய் அமையும். இது இலக்கியத்தில் ஒரு உத்தியாகவே அமைகிறது.

    இக்கூற்று முறை அதாவது ஒருவா் மற்றொருவரோடு உரையாடுவது என்ற தன்மை சங்க அகப்பாடல்கள்  முதல் (சான்றாக தோழி கூற்று, தலைவி கூற்று, தலைவன் கூற்று, செவிலி கூற்று, கண்டோர் கூற்று முதலானவற்றைக் கூறலாம்.) தற்கால கவிதைகள்  வரை தொடர்ந்து இயங்கிவரும் உத்தியாக உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையிலான ஆய்வுகளில் தமிழவன், முத்தையன், சண்முக விமல்குமார், சந்திரன்,  போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முயற்சியின் தொடர்ச்சியாய் அதை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் பெருமாள் முருகனின் “மயானத்தில் நிற்கும் மரங்கள்” எனும் கவிதை தொகுப்பில் உள்ள மொழிதல் கோட்பாட்டுச் சிந்தனைகளை ஆராய முற்படுகிறது இக்கட்டுரை.

    நான் x நீ இருமை எதிர்வும் இன்மைப் பொருளும்

    “ஆசிரியன் தன் மொழிக்குள் (authorial speech) இன்னொருவரின் மொழியைப் போலச் செய்தலின் (parody) மூலம் வைத்திருக்க முடியும். அவ்வாறு கவிஞனின் சொந்த மொழியும் போலச் செய்தல் மொழியும் ஒன்றுக்குள் ஒன்று இருக்க முடியும். அதாவது ஓா் ஆசிரியனின் மொழிக்குள் எப்போதும் இன்னோர் ஆசிரியனின் மொழி இருக்க முடியும். இந்தத் தர்க்கத்தின் மூலம் ஓா் ஆசிரியன் தன் மொழிச் செயல்பாட்டுத் தருணத்தின் (அதாவது படைக்கும்போது) இன்னோர் ஆசிரியனுடன் ஓர் உரையாடலில் (கூற்றில்) இருக்கிறான் என்று அர்த்தம்” (ப. 20, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) என்று படைப்பாளரின் மனோநிலையில் படைப்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்று விளக்குகிறார். அதாவது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் ஒருவா் உரையாடுகிறார் என்பதே அதன் அர்த்தம். உரையாடுதல் என்பது இருவா் பங்கெடுக்கும் செயலாகும். அதில் நான் x நீ அல்லது A x B என்கிற இருமை எதிர்வு அமைப்பு செயல்படும். அந்த வகையில் “மயானத்தில் நிற்கும் மரங்கள்” எனும் கவிதை தொகுப்பிலும் ஏராளமான நான் x நீ என்கிற எதிர்வு நேரடியாக வெளிப்பட்டும் வெளிபடாமலும் வந்திருக்கின்றன.

    நீ என் கால் நக்கி

    உன் உழைப்பு என் உடல் வளர்த்தி

    உன் பொருள் என் பிச்சை

    உன் பெண்டு என் தினவுக்கு

    வேத வாசகம்  வேத வாசகம்

    கருமத்தைச் செய் பலன் பாராதே” (பக். 24)

    உன் சுட்டுவிரல் தொடுதலே

    மாறுதலின் தொடக்கம்

    என் துயரப் படிவுகளிடையே

    நகைஅதிர்வுகள் எழும்பின

    ……………………………….

    சொல்லடங்கிய மொழி

    உன் இமையேறிப் புதைந்தது

    பின்னெழும் நிலவொளி துலக்கிக் காட்டும்

    கோபுர அழகென உருவு தோன்றிற்று

    நீ மூட்டிய கனலில்

    அனைத்தையும் வளர்த்துவிட்ட

    ஒளி சூழ்ந்த அக்கணமே

    உண்மையிலும் உண்மை

    பின்

    எனதென்று எதுவுமில்லை என்னிடத்தில் (பக்.55)

    “கேள்விகளின் நாற்றத்தை உணர்த்த வேண்டாம்

    என் கண்ணீர் நனைத்த உன் துணிகளை

    எங்கும் பத்திரப்படுத்தாதே” (பக். 63)

    “எங்கும் பறந்துவிடாமல்

    என்னைப் பிடித்து வைத்துக்கொள்ள

    விரும்புகிறாய் நீ

    என் இதயத்தின் எல்லா அறைகளிலும்

    நீயே நிரம்பி இருக்க வேண்டும்

    என்னும் விருப்பத்தை நானறிவேன்

    என் சட்டைக் காலரில்

    நீ மாட்டிவிட்ட கொக்கிகள்

    எப்போதும்  இழுத்த வண்ணமிருக்கின்றன

    எங்கும் நான் தங்கிவிடாமல்

    உன்னை நோக்கி விரட்டியபடி

    உன் கரிய விழிகள் கூடவே வருகின்றன

    உன் கண்ணீர்த் துளிகளின் வாசம் நிரம்பிய

    கைக்குட்டையை

    என் பையில் வைத்து ஏன் அனுப்புகிறாய்

    உன்னைப் போல் எனக்கு

    உணர்த்த முடியாமலிருக்கலாம்

    நம்பிக்கையூட்டும் வெறும் சொற்களையும்

    நான் உதிர்க்கவில்லை

    விட்டுவிடு அனைத்தையும்

    உன்னிலன்றி நிலைபடாதது என் மனம்” (பக். 71)

    எனும் கவிதைகளில் நான், நீ, என், உன், என்பன வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த நான் x  நீ என்பது சில கவிதைகளில் இருக்கமாகவும் இன்னும் சிலவற்றில் சற்று இடவெளியுடனும் வரும் தன்மையில் சிறு மாறுபாட்டைக் கொண்டுள்ளது என்பது மேற்கண்ட கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இது இவ்வாறிருக்க சில கவிதைகளில் நான், நீ வெளிப்படாமலும் வருகின்றன.

    இன்னும் சிலவற்றில் நான் என்பதும் சிலவற்றில் நீ என்பதும் மட்டும் வெளிப்படையாக இல்லாமல் வரும் தன்மையிலும் கவிதைகள் உள்ளன.

    என்னைப் பற்றிய

    தீர்மானமே

    எனக்குள் இல்லை

    அவனைப் பற்றி நான்

    என்ன சொல்லவது (பக். 21)

    என்ற கவிதையில் நான் (என்) என்பது வெளிப்படையாக உள்ளது. ஆனால் இக்கவிதையில் நீ என்பது அவ்வாறு வெளிப்படையாக இல்லை. அவன் என்ற மூன்றாவது நபரைப் பற்றிய கருத்தை இக்கவிதைசொல்லி யாரிடம் கூறுகிறார். எதிரே இருக்கும் நபரிடமா? அல்லது தன்னுடைய நெஞ்சிடமா? என்பது வாசகனைப் பொருத்து அமையும். ஏனெனில் இந்தக் கவிதைசொல்லியின் குரலைக் கேட்பவர்  எதிரே இருப்பவரா?  அல்லது நெஞ்சமா (சங்க அகப்பாடல் தலைவன் செலவழுங்கல் போல) என்பதைப் பொருத்து நீ என்பது தீர்மானிக்கப்படும். என்றாலும் இக்கவிதையில் நீ என்ற அமைப்பு வெளிப்படாத நிலையில் கமுக்கமாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

    இவ்வாறே சில கவிதைகளில் நான் x நீ என்ற இரு அமைப்புகளும் கமுக்கமாக வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுறைந்து காணப்படுவதும் உண்டு.

    “நிகழ் உறவு” என்ற தலைப்பிலான கவிதை இத்தகைய அமைப்பைக் கொண்ட கவிதைக்குச் சான்றாகக் கூறலாம்.

    “இருந்தும்

    முன்னோக்கிப் பரவும்

    ஓயாத அலைகள்

    முட்களை வாரி வரும்

    காற்றுக் காலம்

    மூச்சில் அறையும்

    சூனியப் புகைகள்

    மூட்டத்தினூடே

    கழுத்துக்கு நீளும்

    கையொடிருந்த விரல்கள்

    நகர்ந்து ஓடும்

    நெருங்கி நடந்த தோள்கள்

    உயர்ந்தும் தாழ்ந்தும்

    முறித்தும் முறிந்தும்

    தெரியும்

    ராஜபாட்டையில் அல்ல

    இடிபாடுகளுக்கிடையே தான்

    தொடரும் பயணம்”

    இந்தக் கவிதையில் நான் x நீ என்பது வெளிப்படையாக இல்லை. ஆனால், கவிதையின் கடைசியில் இடம்பெற்றுள்ள “தொடரும் பயணம்” என்னும் வரிகள் தன்னுடைய பயணம் இடிபாடுகளுக்கிடையே நடப்பதாகக் கவிதைசொல்லி கூறுவதாக உணர முடிகிறது. இது கவிதைசொல்லியின் குரலில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது யாருடைய பயணம்? என்ற வினாவிற்குத் தன்னுடைய பயணம் என்பது விளக்கமாகப் பெறப்படுகின்றது. தன்னுடைய பயணத்தைப் பற்றிக் கவிதையில் வரும் நான் யாரிடம் கூறுகிறது? என்று கேட்டால் அது நிச்சயம் எதிரில் இருக்கும் நபரான நீயிடம்தான் கூறுகிறது என்பது பெறப்படும்.

    இவ்வாறு கவிதையில் நான் என்பதும் நீ என்பதும் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் வருவதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் காணமுடிகின்றது.

    இதில் “நான் என்பது கவிஞன் குரலல்ல; இது கவிதையில் வருபவனின்  குரல்; கவிஞன் வேறு, கவிதையில் வருபவன் (narrator) வேறு. இந்த narrator-ஐ கவிதையின் சூத்திரதாரி என்றும் கருதலாம். நாடகத்தில் சூத்திரதாரி, நாடக ஆசிரியனிலிருந்து வேறானவனாய் மேடையில் தோன்றுவான். கவிதையின் சூத்திரதாரி தனியாய்த் தோன்றாததால் கவிஞனாகக் கருதும் பிழையைப் பலா் செய்வதுண்டு” (ப. 63, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) என்று தமிழவன் கூறுகிறார். இந்த ’நான்’ கவிதைசொல்லி என்றும் அழைக்கப்படுகிறது என்றும் கூறுகிறார். மேலும் ’நீ’ பற்றி ஆராயும் தமிழவன் “நான் கவிஞனாகிய நான் அல்ல எனில் ’நீ’யும் கவிஞனின் காதலி அல்ல. அல்லது கவிஞனுக்கு முன் நிற்கும் ’நீ’ அல்ல. சூத்திரதாரிக்கான ஒரு எதிர்வு அதாவது கற்பிதமான மாயா சூத்திரதாரி. இப்போது நான் x நீ என்ற மொழி எதிர்வு இன்னொரு கருத்தியல் எதிர்வு ஜோடியான சூத்திரதாரி x மாயாசூத்திரதாரி என்பதற்கு வளர்கிறது (ப. 64, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) என்றும் கூறுகிறார். இப்பண்பு கவிதையிலும் எதிர்வுகளைக் கொண்டுள்ளதை அறியமுடிகிறது.

    “தொடரும் பயணம்” என்று முடியும் மேலே கண்ட கவிதை வளமை x வறுமை என்ற இரு எதிர்வுகளைக் கொண்டு அமைவதைப் பார்க்கலாம். தான் நடப்பது ராஜபாட்டையில் அல்ல இடிபாடுகளுக்கிடையே என்று கூறுவதும், முட்களை வாரிவரும் ஓயாத அலைகள், காற்றுக்காலம், மூச்சில் அறையும் சூனியப் புகைகள், நீளும் கையொடிருந்த விரல்கள்,  நகர்ந்து ஓடும் நெருங்கி நடந்த தோள்கள்”  போன்ற குறிப்புகள் இதனை நன்கு உணர்த்துகின்றன. அத்துடன் இந்தக் கவிதையின் நான் என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு குரலாகவும் நீ என்பது அதற்கு நேர் எதிரான ஆதிக்கச் சமுகத்தையும் குறிக்கிறது. அதாவது இக்கவிதையில் வரும் ராஜபாட்டை X  இடிபாடு எதிர்வுகள் இதைப் புலப்படுத்துகிறது. அத்துடன், இது வளமை X வறுமை என்ற இரு அர்தத்தளங்களைக் கவிதைக்குள் புதைத்து வைத்துள்ளது.

    இதன் தொடர்ச்சி பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயக்கவியல் விதி பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், ஏமாற்றம் ஒன்று இங்கு இருப்புகொண்டுள்ளது. அது நேற்று போல் இன்றும் தொடர்கிறது என்கிற வறுமையின் மாறத் தத்துவத்தைப் பிரதிபலித்து நிற்கின்றன சில கவிதைகள். சான்றாகப் பின்வரும் கவிதைகளைக் கூறலாம்.

    “…………………

    மேடும் பள்ளமும்

    இறக்கமும் ஏற்றமும்

    நிமிர்வும் துவள்வும்

    பாதைகளில்

    ……………….” (பக் 31)

    இந்த வருசம்

    இன்றைக்கு முதல்

    நானும் தங்கச்சியும்

    போன வருசம்

    இதே தருணம்

    அண்ணனும் நானும்” (ப. 36)

    “வெட்டுப்பட்ட கால்களை

    இழுத்து நகர்கிறது காலை

    எப்படியோ தீய்கிறது பகல்

    வெறுமை மாரடித்துக்

    கதறிப் பற்றுகிறது மாலை

    மணலாய்ச் சிதறிய மனசோடு

    அழைப்பு மணிக்காய் எழுந்தோடிக்

    கண்ணெரியக் கழிகிறது இரவு

    நீயற்ற நாட்கள்

    ஏதோ போகிறது பொருளற்று” (ப. 66)

    என்ற கவிதை வரிகளில் மேடு X பள்ளம், இறக்கம் X  ஏற்றம், நிமிர்வு X துவள்வு, கடந்தகாலம் X நிகழ்காலம், காலை X மாலை, இரவு X பகல் போன்ற இருமை எதிர்வுகளைக் கொண்டுள்ளன. இவை வெளிப்படையாக அமைந்து கவிதையை நகர்த்துகின்றன.  இது ஒருபுறமிருக்க இந்தக் கவிதைகளில் ஒட்டுமொத்தமாக ஒரு சோகக் குரல் ஒலிப்பதைப் பார்க்க முடிகின்றது. அது தனிமனிதன் X சமூகம் என்ற எதிர்தளத்தில் நிற்கிறது. இந்த எதிர்எதிர் தளங்கள் தனக்குள் புதைத்துவைத்துள்ள இன்பம் X துன்பம் என்ற இரு இன்மை எதிர்வுகளை வெளியிடுகின்றன. துன்பம் என்ற ஒன்றைப் பற்றிக்  கொண்டு காலை X மாலை, பகல் X இரவு, கடந்தகால X நிகழ்கால என்ற கால எல்லையில் விரிகின்றது. அது தனிமனிதன் X சமூகம் என்ற எதிர்வில் வெளிப்படையாகவும், பூடகமாகவும் அமைகின்றது என்பதைக் கவிதைசொல்லியின் குரலின் வழி நாம் அறியமுடிகின்றது.

    பொதுவாகக் கவிதைகளில் “இந்த இருமை எதிர்வு இரண்டு வகையில் அமையும் என்கிறார்   தமிழவன். அவை : 1. வெளிப்பட்டும் நிற்கும் இருமை எதிர்வு, 2. வெளிப்படாமல் பூடமாக நிற்கும் இருமை எதிர்வு (ப. 86, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) ஆகும்.  இந்த இருவகையான எதிர்வுகளை இந்தக் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் காணமுடிகின்றன.

    “காற்று கொண்டு வருகிறது உன்விரல்களின் மிருதுவான தொடுதலை”(ப.68) எனத் தொடங்குகிறது “நிறைநினைவு” என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். இக்கவிதை காதல் ரசத்தைச் சாறுபிழிந்து தருவதாய் உள்ளது.

    “இரவின் மௌனத்தில் காதலியின் அருகிருப்பைக் காதலன் உணர்கிறான். அப்போது அவனுக்கு அந்த மௌனத்திலும் காதலியின் கடந்தகால நினைவு மயக்க நிலையில் வெளிப்படுகின்றது. அத்துடன்  அது தெளிவாக உள்ளது”. அதாவது, மயக்கம் x தெளிவு  என்ற எதிர்வுகளில் அமைந்துள்ள கவிதை பிரிவின் நினைவைக் காட்சிப்படுத்துவதாக உள்ளது. மௌனத்தின் அமைதியைக் குலைத்து, மனதில் ஆரவாரத்தைத் தூசு தட்டி எழுப்பிவிடுகிறது. அமைதியாக இருந்த அவனுடைய மனம் இப்பொழுது கலவரத்தில் மூழ்கிப் போகிறது. இக்கவிதையில் ஆனந்தம் x துன்பம், அமைதி x ஆரவாரம், மௌனம் x  பேச்சு என்ற இருமை எதிர்வுகள் பின்னிப் பிணைந்து கவிதையாய் வடிவம் பெற்றுள்ளது.

    இரைச்சல்களின் நடுவே

    தலைகுனிந்து மௌனமாய் நான்

    உறவு சொற்கள் அமுக்கும் பிசாசுகளாகின்றன

    கோத்து நடந்த விரல்கள் குரவலைகள தடவுகின்றன

    செத்தொழிந்த எல்லா மனிதர்களுக்குமான அழுகை

    என்தலையில் கொட்டுகிறது” (ப.69)

    என்ற கவிதை ஆடம்பரத்தின் ஆரவாரங்கள் நடுவே அமைதியாய் இடம் தெரியாமல் வாழ்க்கையைக் கழிக்கும் நிலையை விவரிக்கிறது. பணம் இருந்தால் முகம் தெரியாதவர்களும் கை்ககுலுக்கி உறவினர் ஆவதும், பணம் வசதி உயர்பதவி என்ற ஏதும் இல்லாமல் ஒரு வேளை நல்ல பண்புகள் மட்டும் ஒருவன்  கொண்டிருந்தால், அவனை  உதவாக்கறை என்றோ பிழைக்கத் தெரியாதவன் என்றோ இந்தச் சமூகம் தூற்றும். நெருங்கிய உறவுகள் கூட விலகிச் செல்லும். கைவிரைல்கள் கூட அவனை நேசிக்க மறுக்கும் சூழுலுக்குத் தள்ளப்படுவான். தனிமை வாட்டி எடுக்கும். யாரும் இல்லை என்ற சோகம் மெனியைத் திருகும். இத்தகைய சூழுல் ஒருவனுக்கு நேரும் என்றால் அவனுக்கு எல்லாமும் துயரமாய்ப் போகும். அது “அழுகை தலையில் புரண்டோடுவது” போல் அது அமையும்.

    அத்தகைய சோகமான தனிமைத் துயரைக் காட்சிபடுத்தும் கவிதையாக இக்கவிதை அமைகின்றது. இக்கவிதை இரைச்சல் x அமைதி, உறவு x பகை, இணைவு x பிரிவு என்ற அர்த்தத்தளங்களை இன்மை நிலையில் பூடகமாய் வாசகனின் மனதில் தன்னுடைய சோகத்தினை இறக்கி வைத்துவிட்டுச் செல்லுகின்றது கவிதைசொல்லி.

    துணை நின்றவை

    1. பெருமாள் முருகன், மயானத்தில் நிற்கும் மரங்கள், 2016 (முதல் பதிப்பு), காலச்சுவடு பப்ளிகேசன்ஸ் (பி) லிட், 669, கே.பி.சாலை, நாகர் கோவில், 629 001.
    2. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு), 2008, அடையாளம், 1205 / 1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி, 621 310.
    3. …………………, பழந்தமிழ் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள், 2009 (முதல் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113.
    4. ……………….., தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், 1995 (முதல் பதிப்பு), காவ்யா, 16, 17 இகிராஸ், இந்திரா நகர், பெங்களுர், 560 038.

    Share
  • தோலுரிக்கும் வேலை!

    -முனைவர் ஆ.சந்திரன்

    மெரினா கடற்கரையைக் வங்கக்கடல் விழுங்க முயன்றபோது அந்த தொழிற்சாலையை உலகமயமாக்குவதாக அறிவித்தார்கள். அப்படிச் செய்வதால் அந்நிறுவனத்திற்கு உலகம் முழுதும் கிளைகள் உருவாகும் என்ற அலர் காற்றில் மிக வேகமாகப் பரவியது. அந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தவர்களில் நம்பியும் ஒருவன். அவனுக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாகத் தோன்றியது. அவனைப் போல் பலர் அவ்வாறு நினைத்திருந்தார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.

    மெதுவாக நடக்கும் மக்கள் வாழும் ஊர். அங்குதான் அந்த தொழிற்சாலை வெகுகாலமாக நேர்மையாகச் செயல்பட்டு வந்தது. உலகமயமாக்கப்பட்ட உடனே அந்த தொழிற்சாலையின் தலைமையகத்தை எப்படியாவது தங்களுடைய தலைநகருக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற பகீரத முயற்சியில் சிலர் இறங்கினார்கள். அப்போது வேறு சிலர் அந்தொழிற்சாலை அங்கேயே இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று பெரிதும் விரும்பினார்கள்.

    அவ்வாறு சொன்னவர்கள் மீது தாய்நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்ற வசை சொற்கள் வீசியெறியப்பட்டன. நம்முடைய மண்ணிற்கு அந்தத் தொழிற்சாலையின் தலைமையகம் வருவது நல்லதுதானே. அவ்வாறு வந்தால் நமக்கு இன்னும் கூடுதலான பலன்கள்  கிடைக்குமல்லவா? என்று நம்பிக்குத் தோன்றியதால் தொடக்கத்தில் அவனுக்கும் அவர்கள் மீது கோபம் ஏற்பட்டது. ஆனால், பிறகு அவனுடைய நினைப்பு தவறாய்ப் போனதை அவன் புரிந்துகொண்டான்.

    பலாப்பழங்களைப் பிரித்துச் சுவைப்பது; பலாக்கனிகளில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்று எண்ணிப்பார்ப்பது; சுவையுடையவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எனப் பத்தம்சத் திட்டங்களை முதலில் செய்துமுடிப்பது “சிங்சங்” தொழிற்சாலையின் முதல் கட்ட நோக்கமாகச் சொல்லப்பட்டது. அதற்காகச் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் பஞ்சக்குழுவும் அட்டக்குழுவும் முக்கியமானவை. ஏனெனில் அக்குழுக்களுக்குத்தான் இந்தப் பத்தம்சத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்து.

    தொடக்கத்தில் நாடு முழுவதிலும் இருந்து அக்குழுக்களுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் பலாக்கனிகளைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்களாக இருந்தார்கள். கனிகளை உண்ணவரும் காக்கைளை விரட்டுபவர்கள் சிலரும் அக்குழுவில் சத்தமில்லாமல் இணைந்து கொண்டார்கள்.

    பெரும்பான்மையானவர்கள் ஆசைப்பட்டதுபோல் தொழிற்சாலை செயல்பட ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே தலைமையகம் தலைநகருக்கு மாற்றப்பட்டது. சிலரது அயராத முயற்சியால்தான் அது நடந்தது என்ற குரல் அடங்கச் சில காலம் ஆனது. அதன் பிறகு அந்தத் தொழிற்சாலையின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுவருகின்றன என்றும், பத்தம்சத் செயல்திட்டங்களை விரைந்து முடிக்க விரும்புகிறார் அதன் தலைவா் என்றும் ரூமர் காற்றில் பரவியது.

    அப்போது மாம்பழத்தை ரசித்துக்கொண்டிருந்தவர்கள், வாழைப்பழங்களைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள், பூக்களின் வாசத்தை நுகர்ந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவற்றைத் தூக்கி வீசியெறிந்துவிட்டுப் பலாப்பழங்களைத் தோலுரிப்பது எப்படி என்று கற்கத் தொடங்கினர்கள். அதற்குக் காரணம் பத்தம்சத் திட்டம் பற்றி வெளியான அந்த வதந்தி.

    அப்போது நம்பி வாழை சாகுபடி பற்றியும் அவற்றின் வரலாறு பற்றியும் அவனுடைய தந்தையிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். அவனிடம் சிலர் சொன்னார்கள் நீயும் பலாக்கனிகளைத் தேலுரிக்கக் கற்றுக்கொள். அப்படிக் கற்றுக்கொண்டால் உனக்கு உடனடியாக சிங்சங் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று.

    அப்போது அதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் மாங்கனி பயிரிடுவது பற்றி அறியத்தான் அவன் முதலில் விரும்பி இருந்தான். அவனுடைய அப்பாதான் அவனை வாழையைப் பயிரிடப் பழக்கினார். தொடக்கத்தில் விருப்பம் இல்லாமல் பயிற்சி மேற்கொண்டாலும் போகப்போக அது அவனுக்கு ரொம்பப் பிடித்துப்போனது. எனவே வாழைமரம் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு வேண்டுமானால் பலாக்கனிப் பற்றிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அவனுடைய எதிர்காலம் கருதி பலாப்பழம் பற்றிய பயிற்சிக்குத் தன் அப்பாவால் நிர்ப்பந்திக்கப்பட்டான். வேறு வழியில்லாமல் பலாப்பழம் சாகுபடி அதன் வரலாறு பற்றி விரிவாகக் கற்க ஆரம்பித்தான். கனிகளின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருந்தபோது ஓர் அழைப்பு அவனைத் தேடிவந்தது.

    எதிர்ப்பார்த்தது போல் அந்த அழைப்பு சிங்சங் தொழிற்சாலையிலிருந்துதான் வந்திருந்தது. அப்போது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த வேலைக்கு முழுவதும் தயாராகவில்லை என்று நினைத்திருந்தான். ஆனால் அந்த வேலைக்குரிய எல்லாத் தகுதியும் அவனுக்கு இருக்கிறது என்று நம்பினார் அவன் தந்தை. அதனால் அவர் நேர்காணலுக்குப் போகச் சொன்னார்.

    நம்பிக்கு நேர்காணலுக்குப் போக விருப்பமில்லை. ஆனாலும் போகச் சம்மதித்தான். அதற்குக் காரணம் அவன் தந்தைமீதுஅவன் கொண்டிருந்த நம்பிக்கை. ஏனெனில் அவனுடைய தந்தை பிறரைப் போல் அன்றி மா, பலா, வாழை முதலானவற்றை நவீனமுறையில் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் இருந்து தொழில் கற்பதை அவன் தன் பாக்கியமாகக் கருதினான். எனவே அவருடைய பேச்சை மதித்து நேர்காணலுக்குப் புறப்பட்டான்.

    நேர்காணல் மேகம் தவழும் மலையடிவாரத்தில் நடந்தது. அந்த ஊருக்கு அவன் முதல் முறையாக அப்போதுதான் போனான். பொதிகை மலையின் சாரல் அங்கு எதிரொலிக்கும் என்று அங்கு அறிமுகமான நண்பர் ஒருவர் சொன்னார். மிகவும் ரம்மியமாக இருந்தது காற்றில் வந்த வாசம். நம்பியின் மனம் ஏதேதோ நினைத்தது. கால்கள் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. அவனைப்போல் பலர் அப்படிதான் இருந்தார்கள்.

    சிலர் நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள் தம் தந்தையர்களால் என்பதை அங்குப் பேசிக்கொண்டிருந்த சிலரின் உரையாடல்களில் இருந்து அவன் தெரிந்துகொண்டான். அது அவனுக்கு வியப்பாக இருந்தது.

    சிலர் கருங்காக்கைகளின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் வெண்கலச் செம்புகளில் தேவையில்லாமல் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய செயல்கள் நம்பிக்குப் புதுமையாகவும் வினோதமாகவும் தோன்றியது. அவர்களுடைய செயலை அவன் கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர் அவனருகே வந்தார்.

    அவனைவிடச் சற்று உயரமாக இருந்தார். கொஞ்சம் கலராக இருந்தார். பார்க்க முரட்டுத்தனமாகத் தோன்றினார். அவர் முகத்தை உற்றுப்பார்த்தபோது தன்னைவிட வயதில் மூத்தவராக இருக்கலாம்  என்று நினைத்தான்.

    வந்தவர் என்ன தம்பி நேர்காணலுக்குப் புதுசா? என்றார்.

    “ஆமாங்க“ என்று வேகமாகத் தலையை ஆட்டிய நம்பிக்கு அவருடைய கேள்வியில் ஏதோ ஒன்று உள்ளதுபோல் தோன்றியது. ஆனால் அதைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை.

    நீங்கள்? என்ற அவனுடைய கேள்வியிலிருந்து அவ்விருவர் விவரங்களின் பறிமாற்றம் ஆரம்பமானது. ஊர், பிடித்தவை, நோக்கம் என்று நீண்டுகொண்டிருந்த உரையாடலுக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. “நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் அருகிலுள்ள அறைக்குச் செல்லுங்கள்” என்ற ஒலி.

    நான் நீ என்று முண்டியடித்துக்கொண்டு அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் நேர்காணலுக்கு வந்தவர்கள். அவர்களின் செயல்களைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதைக் கவனித்த இளங்கோ சிரித்துக்கொண்டே வா! தம்பி நாமும் போகலாம் என்றார். அவருடைய இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் நம்பி அமர்ந்துகொண்டான்.

    கஞ்சியின் மடிப்பு மறையாத வெள்ளாடை அணிந்திருந்த இருவர், கதராடைக்கு ஏற்ற பேண்ட் அணிந்திருந்த ஒருவர் என மூவர் அறைக்குள் நுழைந்தார்கள். நேர்காணலுக்கு வந்திருந்த எல்லோரும் எழுந்து நின்றார்கள். வந்தவர்கள் மேடையில் இருந்த நாற்காலிகளில் பவ்யமாக அமர்ந்தார்கள்.

    பிறகு ஒருவர்பின் ஒருவராக மூவரும் அடுத்தடுத்துப் பிரசங்கம் நிகழ்த்தினார்கள். சுமார் இரண்டு மணிநேரம் அமர்க்களப்பட்டது அந்த அறை. அவர்கள் பேசிய செய்திகளை இளங்கோ திருக்குறள் போல் இரத்தினச் சுருக்கமாக நம்பியின் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னார்.

    அவருடைய அந்த அறிவுக்கூர்மை அவனை மிகவும் வியப்படையச் செய்தது. முகம் பிரகாசமாகத் தோன்றியது அவனுக்கு. தன்னை மறந்து இருந்தவன்  “இப்போது பலாக்கனி தோலுரிக்கும் நிகழ்வு ஆரம்பமாக உள்ளது“ என்ற குரல் கேட்டு தன்னிலைக்குத் திரும்பினான்.

    நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் பெயர் அகரவரிசைப்படி அழைக்கப்படும். அவ்வாறு அழைக்கப்படும் நபர் மேடைக்கு வந்து பலாக்கனியை உரித்துக் காட்டவேண்டும். சரியாக உரிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்! நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது! என்று நீண்ட சொற்பொழிவாற்றியவர் முதல் பெயரை வாசித்தார் அன்பு என்று.

    அறையில் ஒரே அமைதி நிலவியது. யார் அந்த அன்பு?. அவர் எப்படி பலாக்கனியின் தோலை உரிக்கப்போகிறார்? என்று பார்க்கவேண்டும் ஆவலில். நம்பியின் முகத்திலும் அது குடிகொண்டிருந்தது.

    சலனமின்றி மேடையேறிய அன்பு இல்லாத பலாக்கனியை இருப்பதாகப் பாவித்து அற்புதமாக உரித்துக்காட்டினார். அவர் பலாக்கனி உரித்தது தன்னுடைய தந்தையின் செயலை நினைவுபடுத்தியது. நம்பி மனம் சொல்லியது இவருக்கு வேலை உறுதியாகக் கிடைக்கும் என்று. மேடையில் இருந்த நடுவர்களும் மகிழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் வாய்த்திறந்து பாராட்டினார் தம்பி! நீங்க அருமையாகத் தோலுரித்தீர்கள்! வாழ்த்துகள்! என்று.

    இரண்டாவதாக இளங்கோ! என்ற பெயர் ஒலித்தது.

    தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் எழுந்து செல்வதை ரசித்துக் கொண்டிருந்த நம்பி அவர் தோலுரித்துக் காட்டியதை ரசித்துப் பார்த்தான். இப்படியும் தோலுரிக்க முடியுமா என்று வியந்தான். அவன் உள்மனம் நினைத்தது இவருக்கும் வேலை நிச்சயமென்று.

    தன் இருக்கையில் அமர வந்தவரிடம் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்! என்றான். நன்றி! என்றவர் சலனமின்றி அமர்ந்தார்.

    அவரைத் தொடர்ந்து கமல் என்று பெயர் அழைக்கப்பட்டது. ஓ! இவன் பெயர் கமலா என்று நினைத்தபோது அவன் செம்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. “இப்போதும் அவன் தண்ணீர் நிரம்பிய சொம்பைக் கையில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறான்” என்று இளங்கோ கூறிய பிறகுதான் அது பிரமையல்ல என்று உணர்ந்தான்.

    கம்பீரமாக மேடை ஏறியவன் ஐஸ்கட்டியாக உருகினான். அவனுடைய செய்கையைக் கண்டுப் பொறுக்கமுடியாமல் பக்கத்திலிருந்த இளங்கோவைப் பார்த்தபோது அவர் புன்னகை சிந்திக்கொண்டிருந்தார் சலனமின்றி.

    அறையில் ஒரே சலசலப்பு. கடைசிவரை அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை. அவனுக்குப்பிறகு ஏழெட்டுபேர் அவ்வாறே தொடர்ந்தார்கள்.

    நம்பியின் முறை வந்தது. மேடைக்குச் சென்ற அவன் தனக்குத் தெரிந்த அளவில் பலாக்கனியை உரித்துக் காட்டினான். அவன் உரித்தவிதம் புதுமையாக இருந்ததாகப் பாராட்டினார் நடுவர்களில் ஒருவர். இளங்கோவும் அதையே சொன்னார்.

    அவனுக்குப் பிறகு மேடையேறியவர்களில் பலர் நன்றாகத் தோலுரித்தார்கள். சிலர் நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றார்கள்.

    இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் சிலர் நேரமாகிறது என்று நேர்காணலில் பங்குபெறாமல் தம் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களில் கமலுடன் பயிற்சிபெற்ற மாணிக்கமும் அடக்கம்.

    நேர்காணல் முடிந்தது.

    சரியாக இரண்டு மாதங்கள் கழித்து பலாக்கனி எண்ணும் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியானது.

    அப்போது அன்புவும், இளங்கோவும் வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்த வயலில் நடப்பட்டிருந்த நெல் நன்றாக விளைந்திருந்தது. அதிக மகசூல் கிடைக்கும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள்.

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூர், வேலூர்.

    Share
  • மூதாட்டியைப் புணர்ந்த முனியன்

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்த் துறை

    தூயநெஞ்சக் கல்லூரி

    திருப்பத்தூர் வேலூர்

    ————————————–

    மார்பெலும்பை நன்றாகக் கவ்விய தூண்டில் முள்ளின் இழுவிசையில் நடந்துகொண்டிருந்தது சுகமாய் இருந்தது. மங்களான வெளிச்சத்தில் கால்கள் தரையில் படும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை. நிலவின் ஒளியற்ற இருளில் கண்களுக்கு காட்சிகள் மங்களாகவே தெரிந்தது. தெளிவற்ற பிம்பங்களைப் பார்த்தவாறே மெல்ல நடந்துகொண்டிருந்தான் முனியன்.

    புருவத்தின் ஓரம் லேசாகக் கீரிச்சென்ற முள்ளின் சுவடு குருதியாய்க் கன்னத்தில் வழிந்தபோதுதான் இடது பக்கம் முள்செடிகள் இருப்பது அவனுக்குப் புரிந்தது. ஏனோ! அதுவும் அவனுக்கு இன்பமாகவே தோன்றியது.

    இருளின் அடர்த்தி மெல்ல மெல்ல கூடிக்கொண்டே இருந்ததால் கல்களை எச்சரிக்கையாக எடுத்துவைத்து மெல்ல நடந்துகொண்டிருந்தான்.

    சுற்றுமுற்றும் பார்த்து மெதுவாக நடந்துகொண்டிருந்த அவனுடைய கண்களில் தொலைவில் கொழுந்துவிட்டு எரியும் தீயின் ஒளி தென்பட்டது.

    ஓடும் ரயிலை எட்டிப்பிடிப்பவன் போல் வேகமெடுத்த அவனுடைய கால்கள் ஒளி வந்த அந்த இடத்தை அடைந்து பிறகுதான் நின்றன. பூனையைப் போல் மெல்ல அருகில் சென்றபோது அங்கு கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

    அதற்குக் காரணம் யாருமற்ற அந்த வனாந்திரத்தில் ஒரு மூதாட்டி அடுப்பில் எதையே வேகவைத்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தில் அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

    நரைத்த கூந்தல். சுருக்கங்கள் பீடித்த தேகம். தளர்ந்த நடை என அணிவகுத்து நின்ற உறவுகளைப் பெற்ற மகிழ்ச்சி அவளது முகத்தில் தெரிந்தது.

    கால்கடுக்க நெடுந்தூரம் நடந்த களைப்புடன் பசியும் கூட்டணி அமைத்து தாக்க மூதாட்டியிடம் உண்ண ஏதாவது கேட்கலாமா? என்று முனியன் யோசித்த போது, “இந்தா தம்பி” என்று ஒரு சிறு மண்பாண்டத்தில் எதையோ உண்ணத் தந்தாள்.

    பசியில் “அது என்ன என்று ஆராயுமுன்” வயிற்றில் அடைக்கலம் அடைந்தது.

    பசி நீங்கிய உடன் அந்த மூதாட்டியிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

    ஆனால் அதற்குள் அவன் பயணம் மீண்டும் தொடர்ந்தது.

    கொஞ்ச தூரம் நடந்ததும் அதுவரை இழுத்துவந்த தூண்டில் அவனை விட்டு திடீரென மறைந்தது.

    ஏன் தூண்டில் காணாமல் போனது? எங்கு போனது? தன்னை ஏன் இங்கு இழுத்து வந்தது? போன்ற கேள்விகள் அவனைத் தொலைத்துக் கொண்டிருந்தபோது, சர்ர்ர்…னு வந்த அம்பு ஒன்று அவனது மார்பில் ஊடுருவி புற்றில் நுழைந்த நாகம் போல் முதுகில் தலையை எட்டிப்பார்த்தது.

    அம்பைத் தொட்ட அவனது கரங்களை அருவி நீராய் பீரிட்ட குருதி நனைக்க சூரைக்காற்றில் சிக்குண்ட வாழை குலையாய்த் தலைசுற்றி மண்ணில் வீழ்ந்தான்.

    திடுக்கிட்டு அலறிஅடித்துக்கொண்டு எழுந்த முனியனுக்குத் தன் மார்பில் ஏதும் இல்லாததை அறிந்த போதுதான் அனைத்தும் கனவென்று புரிந்தது.

    கனவு அவனது நினைவைப் பின்னிக்கொள்ள உறக்கம் அவனை உதறிதள்ளிவிட்டு ஓடியது.

    எழுந்து விளக்கைப் போட போன போது மின்சாரம் தடைப்பட்டிருப்பது தெரிந்தது.

    படுக்கையில் ஊடல் கொண்ட காதலியுடன் போராடுவது போல் போரடித் தோற்றுப் போனதால் மீண்டும் மின்சாரம் வந்துள்ளதா? என்று பார்த்து ஏமாந்தவன், பூசையறையில் இருந்த மண் விளக்கை எடுத்து தீப்பந்தந்தைப் போல் எரியச் செய்தான்.

    ஜன்னல் வழியாக சில்லென்று வந்த காற்று அவனைத் தழுவத்துடித்தது. அவனுக்கும் அதே உணர்வு வந்தால் ஜன்னலை நோக்கிப் போனான்.

    வங்கி சேமிப்பில் சேர்ந்திருந்த பணத்தில் கட்டிய வீட்டில் நல்ல தரமான பளிங்கு கற்களை பலகடைகள் ஏறி இறங்கி தேர்வு செய்து பதித்தான். புதுமனை புகுவிழாவிற்கு வந்த நண்பர்கள் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த போது  “டிசைன் சூப்பர். செம்ம கலர். ஆனா.. யூ.பி. எஸ் போட்டிருந்தா நல்லா யிருக்கும்” என்று பேசிக்கொண்டிருந்தது முனியன் காதில் விழுந்தது. அதைக் கேட்காதவன் போல் அப்போது அவன் நடந்துகொண்டான்.

    தீப்பந்தம் போல் எரிந்த விளக்கில் வெளியான வேம்பின் வாடை அவனைத் தழுவிக்கொள்ள ஜன்னல் நோக்கி வந்தது.

    சில் காற்றில் தவழ்ந்து வந்த முல்லையின் மணமும் அகல்விளக்கில் இருந்து வந்த வேம்பின் மணமும் நான் நீ என மோதிக் கொள்வதை அவன் உணர்ந்தபோது வாழை இலையின் மேல் விழுந்த மழைத்துளிகள் அவன் காதில் சந்தடியில்லாமல் நுழைந்துகொண்டிருந்தன.

    ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். பூமித்தாயின் வயிறு நிறைந்திருந்தது. மின்மினி போன்ற மின்னலின் ஒளியில் அது நன்றாகத் தெரிந்தது.

    அப்போது கனவில் கண்ட மங்கிய இருள் அவனை வேதாளம் போல் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

    மங்கிய வெளிச்சித்தில் பார்த்த மூதாட்டியின் முகமோ? அவள் தந்த உணவோ? தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவற்றைத் தெளிவாகப் பார்க்க பகீரதனாய் முயன்று கொண்டிருந்தான்.

    இறுதியாக வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி பயணப்பட்டான்.

    பாதியில் குறுக்கிட்ட ஆற்றில் வெண்ணிற அலைகள் திருடனைத் துரத்துவது போல் ஓடிக்கொண்டிருந்தது.

    சில மணிநேர பணயத்திற்குப் பிறகு பேருந்திலிருந்து இறங்கியவன் புற்களுக்கிடையே காலடிகள் பட்டுத்தேய்ந்த பாதையில் நடக்க ஆரம்பித்தான். தன் முதுகில் தொங்கிய பையை அவ்வப்போது சரிசெய்தபடியே நடந்துகொண்டிருந்தான்.

    உழவர்கள் வயலில் மூழ்கியிருந்தனர். அவர்களைக் கண்டு அஞ்சிய சர்ப்பம் ஒன்று முனியனின் பாதையில் நாலடிமுன்னார் உயிர் பிழைத்துக்கொள்ள ஓடியது. வளைந்து நெளிந்து தாவிக் குதித்தோடிய அதன் அழகை ரசித்தபடியே படம் பிடித்தவன் பாம்பின் உருவம் மறைந்ததும் அங்கிருந்து புறப்பட்டான்.

    அவனது இடப்பக்கத்தைத் தாக்கிக்கொண்டிருந்த சூரியனின் கதிர்கள் இப்போது அவனது தலையை மட்டும் குறிவைத்து தாக்க ஆரம்பித்தது. அதனால் களைத்துப்போனவன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதில் இருந்த தண்ணீரைத் தேடி அதை நாக்கில் படும்படிசெய்தான்.

    தன்னைக் கடந்து போன மேகத்துண்டுகளைப் பார்த்து அவ்வப்போது நன்றி கூறியவாறு நடந்துகொண்டிருந்தவன் நாவறண்டு தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தான்.

    ஒரு வழியாக இடப்பக்கமாக இருந்த ஓரு நீரோடை அவனது கண்ணில் பட திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் திரும்பப்பெற்றவர் போல் அதை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

    மலையிலிருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் காட்டாற்றில் தண்ணீர் தெள்ளத் தெளிவாக இருந்தது.

    அதைப் பார்த்ததும் பருகவேண்டும் என்ற ஆவல் மேலிட தன்முதுகில் இருந்த பையை இறக்கி அருகிலிருந்த ஒரு சிறு கல்லின் மேல் வைத்தான். மெல்ல தண்ணீரின் மேற்பரப்பைத் தன் உள்ளங்கையால் இருபுறமும் விளக்கியபோது அவன் முன்னர் ஒரு சிட்டுக் குருவி படபடத்துக்கொண்டிருந்தைப் பார்த்தான்.

    பேருந்து நிறுத்ததில் இறங்கிபோது அக்குருவியைப் பார்த்ததாக ஒரு நினைவு அவனுள் தோன்றி மறைந்தது.

    அதே நினைவுடன் இருகையால் தண்ணீரை அள்ளி வாயருகே கொண்டு சென்றபோது அவன் காதுகளை அடைந்த அந்தக் குரல் கையிலிருந்த தண்ணீரை கை கழுவ செய்தது.

    “அண்ணே! அந்தத் தண்ணீரைக் குடிக்காதீங்க” என்று கத்தியபடி ஒரு சிறுவன் முனியனை நோக்கி மூச்சிறைக்க ஓடிவந்தான்.

    அது நல்ல தண்ணி இல்லண்ணே! குடிக்க தண்ணி வேணுமா? வாங்க என்று அழைத்தான்.

    “தண்ணீர் நல்லா தானே இருக்கு. ஏன் குடிக்கக் கூடாது?” என்று தெள்ளத் தெளிவாக இருந்த அதன் தோற்றம் அவனைக் கேட்க வைத்தது.

    ஆனால் கோவணத்துடன் இருந்த அச்சிறுவனிடம் அதைப் பற்றி ஏதும் கேட்க வில்லை.

    மஞ்சு புற்கள் நிறைந்த இங்கொன்றும் அங்கொன்றும் சிதறிக்கிடந்த தேயாத கால்தடங்கள் தென்பட்ட பாதையில் நடக்க ஆரம்பித்த சிறுவன் வலப்பக்கத்தில் கொஞ்ச தொலைவில் இருந்த பாறையைச் சுட்டிக்காட்டி “அதோ அந்தப் பாறையில் ஒரு சுனை இருக்கு. அங்க நல்ல தண்ணீ கிடைக்கும் வாங்க“ என்று கூறியவாறே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

    “ஆமா? தம்பி நீ இங்க தனியா என்ன பண்ற? ஸ்கூல் போகறதுதில்லையா?” என்று முனியன் கேட்டான்.

    அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல அதனால ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு மாடு மேய்க்க வந்துட்டேன்.

    என்ற பதிலைக் கேட்டு முனியன் அடுத்த கேள்வியைத் தயக்கமின்றி கேட்டான். என்ன வகுப்பு படிக்கிறாய் என்று.

    “எட்டாம் வகுப்பு“ என்று ஆங்கிலத்தில் கூறியது அவனது மண்டையில் ஆணி அடித்தது போல் அழுத்தமாய் பதிந்தது.

    தான் கனவில் கண்ட காட்சியைப் பற்றிக் கூறி மூதாட்டி பற்றி விசாரித்தான்.

    அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் புன்னகைப்பதாக அவனுக்குத் தோன்றினாலும் ஏன் சிரிக்கின்றாய் என்று கேட்கவில்லை.

    அதற்குள் தண்ணீர் இருந்த சுனையை அடைந்ததால் முனியன் தன்தாகத்தைத் தீர்த்துக்கொண்டான்.

    தாகம் தணிந்த தெம்பில் “தம்பி இங்க பாம்புமலை எங்கிருக்கு என்று கேட்க” சற்றும் தாமதிக்காத அந்தச் சிறுவன் வடக்கு திசையை நோக்கியிருந்த மலையைச் சுட்டிக்காட்டி “அதோ தெரியுதே அந்த ஆர்ப்பு மரக்காட்டைத் தண்டினால் நீங்கத் தேடிவந்தது கிடைக்கும்” என்று கூறிய சிறுவன் மாடுகள் பற்றிய நினைவு வந்தவனாய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

    தன்னுடைய  இலக்கு கண்ணில் தெரிந்த தெம்பில் வேகமாக நடந்த முனியன் ஆர்ப்பு மரக்காட்டை நெருங்கியபோது தான் கனவில் கண்ட பாதை எதிர்படுவதாய் உணர ஆரம்பித்தான்.

    அதனால் இன்னும் வேகமாய் நடக்க ஆரம்பித்தான். இங்கொன்னும் அங்கொன்றுமாய் இருந்த நெல்லி மரங்களில் சிலவற்றில் மட்டும் நெல்லிக்காய் காய்த்திருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சென்றவனின் கண்முன்னர் பெரிய யானையை ஒத்த பாறை திடீரெனத் தோன்றியது. அதன் உச்சியில் பிரண்டைக் கொடிகள் பாம்புகள் போல் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

    அதைக் கடந்தவனுக்கு பிரமிப்பு அதிகமானது அச்சு அசல் கடந்து வந்த மலையைப் போன்ற மற்றொரு மலை எதிரில் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. அதைக் கடந்தவனுக்கு மயக்கம் வருவது போல் ஆனது. மீண்டும் ஒரு மலை அதே போல் இருந்தது.

    திரும்பிப் போய் விடலாம் என்று கூட அவன் நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தூண்டுவதாய் அவன் உணர்ந்தான்.

    ஏழு மலைகளைத் தாண்டியபோது இதுவரை கடந்துவந்த மலைகளை ஒன்று சேர்த்ததுபோல் பருத்த பாறை கண்ணில் பட்டது. அந்தப் பாறையின் நடுவில் ஒரு பெரிய நுழைவு வாயில் போன்ற தோற்றம் இருந்தது. அதனருகே சென்றான். அதுவரை உடன் வந்த சிட்டுக் குருவி திடீரெனக் காணாமல் போனது.

    தயக்கத்துடன் அந்த வாயிலினுள் நுழைந்தவன் கனவில் கண்ட மூதாட்டியை நேரில் பார்த்தான். ஆனால் இப்போது அவனுக்கு பிரமிப்பு ஏதும் ஏற்படவில்லை.

    அவனைப் பார்த்த அந்த மூதாட்டி தன்னிருக்கரங்களை நீட்டி அவனை தன்னருகே அழைத்தாள். அவளுடைய நெற்றியில் இருந்த திலகத்தைப் பார்த்தவாறே சென்று அருகில் நின்றான் பித்துப் பிடித்தவனாய்.

    நீட்டிய கரங்களால் அவனை ஆரத்தழுவினாள் அம்மூதாட்டி.. அவளுடைய கொங்கைகள் அவனுடைய மார்பில் ஈட்டியாய்த் துளைத்தது.

    அவளை விளக்க முயன்றகொண்டிருந்த போது மூதாட்டியின் சாயம் மெல்ல மெல்லவிலகியது.

    உடுத்தியிருந்த இருவரின் ஆடைகளும் மண்ணைத் தஞ்சமடைந்தன.

    இருவரின் சரீரங்களும் பாம்புகளாய்ப் பின்னிக்கொண்டு நின்றன.

    சூரியன் பூமியை நோக்கி வீசியெறிந்த ஒளிக்கதிர்களுக்கு அஞ்சி இருவரும் காற்றில் மறைத்துக்கொண்டார்கள்.

    அது சரி முனியன் பற்றி கூறும் நீ யார்? என்று கேட்கிறீர்களா?

    ம்…. ம்…. புரிகிறது

    ………………………… நான் தான் முனியனின் நிழல்.

    Share