Tag: முனைவர் நா.பிரபு

  • கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 3

    -முனைவர் நா.பிரபு

    வாழ்க்கை வரலாற்று நூல்கள்

    எழுத்தாளர் விந்தன் அவர்கள் திரையுலக மேதைகளான எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் எம்.ஆர். இராதா ஆகியோரின் கலைப்பயண வரலாறுகளை நூலாக்கியுள்ளார். பாகவதரின் மறைவுக்குப் பின்னர் அவரது வரலாறு குறித்த தேவையான தகவல்களின் அடிப்படையில் ‘எம்.கே.டி. பாகவதர் கதை’ என்னும் நூலும் எம்.ஆர்.இராதா வாழும்போதே அவரிடம் நிகழ்த்திய உரையாடலின் மூலமாக உருவாக்கிய ‘நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்’ என்னும் நூலும் என இரண்டு நூல்களை வெவ்வேறு அடிப்படைகளில் உருவாக்கியுள்ளார்.

    பாகவதர் செவ்வியல் இசைப்பாடகராக, நாடக நடிகராக திரைப்படக் கலைஞராகப் புகழின் உச்சிக்குச் சென்றவர். இவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்டது. இந்தச் சாதனை இதற்கு முன்பும் பின்பும் நடந்ததில்லை. நல்ல உடலழகும் குரல் வளமும் பெற்றிருந்ததன் காரணமாகத் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இவர் புகழ் பரவியிருந்தது. மலையாள மொழியிலும் இவர் குறித்த நூல்கள் வெளிவந்துள்ளன.

    எம்.ஆர்.இராதா அவர்கள் நாடகக் கலைஞராக அறிமுகமாகி திரைத்துறையில் கலகக்காரராக வலம் வந்தவர். திராவிட இயக்க உருவாக்கத்தின் கலைப்பின்னணியாகச் செயல்பட்டவர். எம்.ஆர். இராதாவின் வாழ்க்கையை அவரது சொந்தக் குரலிலேயே பதிவுசெய்துள்ளார். அவர் குறித்த அறிமுகமே இப்படித்தான் தொடங்குகின்றது.

    சக பத்திரிக்கையாளர் ஒருவர், “உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன்” என்கிறார் வினயத்துடன்.

    “என் மனைவியை எதுக்கு கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லை!” என்று இராதா ‘பட்’டென்று பதிலளிக்கிறார்.

    சிறைச்சாலை அனுபவங்கள் என்று இவரது நூலுக்குத் தலைப்பினை வைத்துள்ளார் விந்தன் என்ற போதிலும் சிறைச்சாலைக்கு வெளியில் நிகழ்ந்த அவரது கலையுலக வாழ்க்கை குறித்தே இந்நூலில் மிகுதியும் உரையாடப்பட்டுள்ளது.

    இவ்விருவரது வாழ்முறையும் கலைப்பயணமும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. பாகவதர் தன்வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை ஆழமான இறை நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். நடிப்பிலுங்கூட அதற்கு எதிராகச் செயல்பட மறுத்தவர். அன்று திராவிடக்கட்சியின் வளர்ச்சியில் தீவிரமாக இயங்கிய அண்ணாதுரை இவருக்காக நாடகம் எழுதி நடிக்கக் கேட்டபொழுதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தவர். ஆனாலும் அனைத்து அரசியல் இயக்கத்தவர்களுடன் நட்புமுறையில் பழகியவர்.

    நாடக வரலாற்றையும் சினிமா வரலாற்றையும் மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை இவ்விரு நூல்களும் முன்வைக்கின்றன. தமிழ் நாடகத்தின் தந்தை என்று சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்பல் சம்பந்த முதலியாரையும் குறிப்பிடும் வழக்கம் நாடக வரலாறுகளில் தொடர்கிறது. அவர்களின் பங்களிப்பினை மறுக்க இயலாதென்றாலும், இத்தகைய வரலாற்று கட்டுமானங்கள் பிற கலைஞர்களை நிராகரிக்க அல்லது மறக்கச் செய்துவிடுகிறது. இதிலிருந்து கலைஞர்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. ஜகந்நாத அய்யரின் நாடகக் கம்பெனியில் இருந்த ராதாவின் அனுபவங்களைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் போது, சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி விந்தன் கேட்கிறார். அதற்கு,

    “சங்கரதாஸ் சுவாமிகள் வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால் ‘இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா!’ என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார்.”

    “அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே?”

    அதை நான் ஒப்புக்கொள்ளமட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடையில்லாமல் எழுதுவார்….. அதெல்லாம் சரி. ஆனா இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையாயிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராகத்தான் இருக்க முடியும். ஏன்னா இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழி வழியா வந்த கலைஞர்களே. இதை யாராலும் மறுக்க முடியாது” (நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், ப:22) என எம்.ஆர்.ராதா கூறியதாகப் பதிவுசெய்துள்ளார்.

    இதே போன்று பாகவதர் வரலாற்றில் கதை-வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கிய இளங்கோவன் குறித்து எழுதும்போது,

    “இவர் உண்மையிலேயே அந்தத் துறைக்கு வேண்டிய தகுதியும் திறமையும் உடையவர். அத்துடன் இப்போது யாரோ வசனத்தில் ‘புரட்சி’ செய்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அந்தப் புரட்சியைக் கண்ணகி படத்தின் மூலம் எப்போதோ மெளனமாகச் செய்துவிட்டு, இன்றும் அதை வெளியே சொல்லாமல் மெளனமாக இருந்துகொண்டிருப்பவர். (எம்.கே.டி. பாகவதர் கதை, ப. 178) எனவும் எழுதியுள்ளார். இவ்விரு ஆளுமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளது உள்ளபடியேயும், எவருக்கும் அஞ்சாமலும் விந்தன் அவர்கள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    குட்டிக் கதைகள்

    ‘விந்தன் குட்டிக் கதைகள்’ என்னும் தொகுப்பில் விந்தன் எழுதிய குட்டிக் கதைகள், மகிழம்பூ ஆகிய இரு நூல்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன.

    பிற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டக்கூடியது ஆறாம் அறிவான பகுத்தறிவு என்று சொல்கிறோம். ஆனால் அந்தப் பகுத்தறிவால்தான் மனித சமூகத்தில் தன் தேவையை மீறிய ஆசை, அதன் காரணமாகப் பிறரை ஏய்த்துப் பிழைத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகள் முதலானவை உருவாயின. எனவேதான் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடலில் மனிதனின் ஆறாவது அறிவான பகுத்தறிவு மனிதனுக்கு வழங்கப்பட்ட சாபம் என்று கடவுளை விந்தன் கூற வைக்கிறார்.

    ‘ஆறாவது’ என்னும் கதையில் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடல் பின்வருமாறு தொடர்கிறது.

    “எங்களுக்கில்லாத பகுத்தறிவை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத்தான் அவன் ‘ஆறாவது அறிவு’ என்கிறான்!” என்றது சிங்கம்.

    “நாசமாய்ப் போச்சு; அவனுக்கு நான் கொடுத்த சாபமல்லவா அது?”

    “சாபமா!”

    “சந்தேகமென்ன? எதையும் அறிய முயல்வதும், அறிந்தாலும் அதை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் நான் அவனுக்குக் கொடுத்த சாபம்தான்” என்றார் கடவுள் (விந்தன், ப. 13)

    விந்தன் கூறுவது எவ்வளவு உண்மை. இனிப்பு சாப்பிடுவது தனக்குக் கேடு விளைவிக்கும் என்பது ஒரு சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும்; குடிப்பது உடல் நலத்திற்குக் கேடானது என்று குடிகாரர்களுக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அறிந்ததை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் பகுத்தறிவுடைய மனிதனுக்கு நடக்கின்றதே!

    மாடுகளைச் சந்தையில் பிறருக்கு விற்பதும், அவ்வாறு விற்கப்பட்ட மாடுகள் பழைய உரிமையாளரின் வீடு தேடி வருவதும் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வுதான். பணத்திற்காகப் பாசத்தை மறக்கும் மனித இனத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்ட ‘மாடும் மனிதனும்’ என்னும் கதையின் மூலமாக விந்தன் இந்நிகழ்வைப் பயன்படுத்துகிறார்.

    ‘ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தன்னை விற்றவனைத் தேடிக்கொண்டு வந்தது மாடு. வாங்கினவனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; “இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா?” என்று அதை ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கிவிட்டான்.

    வீறிட்டலறிய மாட்டை நோக்கி அதனுடன் வசித்த ஆடு கேட்டது:

    “விற்றவன் உன்னை அன்றே மறந்துவிட்டது போல நீயும் அவனை மறந்துவிட்டிருந்தால் இந்தக் கதிக்கு ஆளாகி இருக்கமாட்டாயல்லவா?”

    கண்ணீரும் கம்பலையுமாக மாடு சொல்லிற்று:

    “அது எப்படி முடியும்? நான் மனிதனாகப் பிறக்காமல் மாடாக அல்லவா பிறந்துவிட்டேன்?”

    தன்னிடம் பாசமுடன் வளர்ந்த ஓர் உயிரை விட வெறும் காகிதமான பணம் மனிதனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் மாட்டுக்கு எத்தனை அடி வாங்கினாலும் தன்னை வளர்த்தவர் மீதான பாசமே பெரிதெனக் காட்டுகிறார்.

    இரவில் வீட்டுக்குக் கடைசியாக வந்த வீட்டுக்காரர் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்கிறார். இதைப் பார்த்த ஜன்னல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறது. ஏன் என்று கதவு கேட்க, மனிதனைக் காற்றில் வாழவைத்ததற்காக. இல்லையென்றால் உன்னைச் சாத்திவிட்டுச் சென்றதுபோல் என்னையும் சாத்திவிட்டுச் சென்றிருப்பார் அல்லவா? என்று ஜன்னல் சொன்னது.

    இதைக் கேட்டதும் “அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்?” என்ற அலுப்பும் சலிப்புமாக ஆரம்பித்த கதவு, திடீரென்று தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “உன்னிடம் நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்றது ஜன்னலிடம்.

    “சொல்லு?” என்றது ஜன்னல்.

    “இப்போதெல்லாம் மனிதன் தன்னைப்போல் மனிதனை நம்புவதில்லை; என்னைப்போன்ற கதவைத் தான் நம்புகிறான்!” என்றது கதவு. இவ்வாறு மனிதச் சமூகம் தன் சக மனிதனை நம்பாமல் உயிரற்றப் பொருட்களான கதவு, ஜன்னல், பூட்டை நம்பும் நிலைக்கு வந்ததனை ‘கதவும் மனிதனும்’ என்னும் கதையில் விந்தன் ஏளனத்துடன் பதிவு செய்கிறார்.

    எளியவரிடம் மட்டுமே தம் வீரத்தைக் காட்டி, வலியவரிடம் வளைந்து குழையும் பெரும்பான்மையான மனிதர்களின் மனநிலையை விந்தன் அவர்கள் ‘வீரம்’ என்னும் கதையில் கட்டைவண்டி, மகிழ்வுந்து (கார்), ரயில் ஆகியவற்றைக் கொண்டு சித்தரிக்கிறார். மெதுவாக அசைந்து சென்றுகொண்டிருக்கிறது ஒரு மாட்டுவண்டி. அதன் பின்னால் வந்த மகிழ்வுந்து ஒன்று “ஏய், சனியனே! ஒதுங்கிப் போ! என்று மிரட்டி விரட்டிற்று.

    “மரியாதைக் குறைவாகப் பேசாதே! என்ன இருந்தாலும் உனக்கு நான் மூத்தவன் என்பதை மறந்து விடாதே!” என்றது மாட்டுவண்டி.

    “மூத்தவனாவது, கீத்தவனாவது! யாராயிருந்தாலும் என்னைக் கண்டதும் ஒதுங்கி வழி விட்டால்தான் ஆச்சு; இல்லாவிட்டால் அவர்களை நான் மோதி மிதித்து விடுவேனாக்கும்!” என்று கார் உறுமிற்று.

    “ஐயோ வேண்டாம் அப்பனே! இதோ நான் ஒதுங்கி விடுகிறேன்; நீ போ, கன ஜோராகப் போ!” என்று ஒதுங்கி வழி விட்டுவிட்டது மாட்டுவண்டி.

    அது சொன்னபடியே கன ஜோராகப் போன காரை “எங்கே, என்னை மோதி மிதித்து விடு பார்ப்போம்?” என்பதுபோல் ஒரு ரயில்வே கேட் தடுத்து நிறுத்தியது.

    வேறு வழியில்லாமல் நின்ற காரை நெருங்கி, “அந்த ரயில் மட்டும் உன்னைக் கண்டதும் ஏன் அப்பா ஒதுங்கி வழி விடவில்லை?” என்று மாட்டு வண்டி கேட்டது.

    கார் வாயைத் திறக்கவில்லை!’

    தமக்குக் கிடைக்கும் சில சலுகைகளுக்காக அடிமை வாழ்வில் சுகம் காண்பவர்களை எள்ளி நகையாடும் விதத்தில் ‘சுதந்திரம்’ என்னும் கதையை விந்தன் எழுதியுள்ளார். இக்கதையில் நாயொன்று கட்டப்பட்டிருக்கிறது. அதன் எதிரே கிளி ஒன்று கூண்டில் அடைபட்டிருக்கிறது. இரண்டுமே சுதந்திர வாழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. அப்பொழுது அவ்வழியாக வந்த குரங்கொன்று அவை இரண்டையும் விடுவிக்கின்றது. இரண்டுமே விடுதலை கிடைத்த மகிழ்ச்சியோடு வெளியேறுகின்றன.

    ‘சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தன்னால் விடுதலை செய்யப்பட்ட கிளியைச் சந்தித்த குரங்கு, “எப்படி இருக்கிறது, விடுதலை?” என்று கேட்டது.

    “ஆனந்தம், பரமானந்தம்!” என்றது கிளி, கன குஷியுடன்.

    ‘மகிழ்ச்சி!” என்ற குரங்கு அதனுடன் விடுதலை செய்யப்பட்ட நாயை நோக்கி, “எப்படி இருக்கிறது, சுதந்திரம்?” என்று கேட்டது.

    “சுத்த மோசம்! காலையில் பால், மத்தியானம் இறைச்சி, மாலையில் பிஸ்கெட், இரவு மறுபடியும் பால் – இதெல்லாம் இந்தச் சுதந்திர வாழ்வில் எங்கே கிடைக்கிறது? ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும் ஒரு கவளம் எச்சில் சோற்றுக்கு ஓராயிரம் நாய்களுடன் போட்டியல்லவா போட வேண்டியிருக்கிறது? என்றது நாய், வெறுப்புடன்.”

    அடிமை வாழ்வை நினைத்து ஏங்கும் நாயை நினைத்து “சுதந்திரத்தில் கூட எல்லோருக்கும் சுகம் கிட்டி விடாது போலும்?” என்று குரங்கு சொல்லிற்று என உலக நடப்பியலைப் பதிவு செய்கிறார்.

    நன்றி மறக்கும் தன்மைக்கு குளத்துப் பறவைகளைச் சான்றாகக் காட்டுவர். இதனை வேறொரு கோணத்தில் ‘ஆலமரம்’ என்னும் கதையில் விந்தன் பார்க்கிறார். ஆலமரம் துளிர்த்துப் பூத்துக் குலுங்கும் காலத்தில் பறவைகள் அங்கேயே தங்கி உண்டு மகிழ்ந்தன. மரம் வாடியதும் பறவைகள் இரை தேடி வேறிடத்துக்குப் பறந்தன. அப்போது அருகிலிருந்த அரசமரம் “என்ன நன்றி கெட்ட பறவைகள் அவைகள்! எல்லாம் இருக்கும் வரைதான் அவற்றின் உறவுபோலும்?” என்றது ஆலமரத்திடம். ஆலமரம் சிரித்துச் சொல்லிற்று: “உனக்கும் எனக்கும் உள்ள இடத்திலேயே உணவு கிடைப்பதுபோல் அவற்றுக்கும் கிடைத்தால், அவையும் நன்றியுள்ள ஜீவன்களாய்த்தான் இருக்கும்!”

    மனிதன் வாழும் சூழல், அவனது பொருளாதார நிலைமை, அவனுக்குக் கிடைக்கும் கல்வி போன்ற பல காரணங்கள் ஒரு மனிதனின் குணத்தை, நடத்தையை நிர்ணயிக்கிறது. மனித இனத்தில் சிலர் கொலைகாரர்களாய், போக்கிரிகளாய், விபசாரிகளாய் வாழ்வதற்கு அவர்களின் சூழலும் தேவையுமே காரணம். அவர்களின் பொருளாதாரத் தேவைகள் உயர் வகுப்பினர்போல் நிறைவடைந்தால் அவர்கள் இவ்வாறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை ‘ஆலமரம்’ என்னும் கதை உணர்த்துகிறது.

    ஒரு மனிதன் வாழ இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தூக்கிட்டுக் கொள்கிறான். இதைப் பார்த்த பறவைக் குஞ்சு தனது தாயிடம், “அதெல்லாம் நமக்குக் கிடைக்கும்போது அவனுக்கு மட்டும் ஏன் அம்மா கிடைக்கவில்லை?”

    தாய்ப்பறவை சொல்லிற்று:

    “அவன் அடைந்த நாகரிகம் அப்படி! அவனும் நம்மைப் போல் இந்த உலகத்தில் எதற்கும் உரிமை கொண்டாடாமல் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கும் நமக்குக் கிடைப்பதுபோல் எல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அவன் எப்போது இது உன்னுடையது, அது என்னுடையது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தானோ, அப்போதே அவனுக்கு இங்கே எதுவுமே உரிமையில்லாமல் போய்விட்டது!”.

    மனிதச் சமுதாயம் தனது புராதனப் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பை மறந்து ‘நாகரிகம்’ பெற்ற தனியுடைமைச் சமுதாயமாக மாறியதுதான் சமூகம் அனுபவிக்கும் பெரும்பாலான இன்னல்களுக்குக் காரணம் என்பதை ‘நாகரிகம்’ என்னும் இக்கதையில் விந்தன் உணர்த்துகிறார். தனக்கென்று ஒரு காணி நிலம் இருந்தால் கஞ்சிக்கு ஏன் அலையப் போகிறேன் என்று பலர் பெருமூச்சு விடுவதைப் பார்த்த மண் தன்னையொத்த இயற்கைப் பொருட்களான நெருப்பு, காற்று, நீர், வான் ஆகியவற்றை நோக்கி,

    “நீ எல்லோருக்கும் சொந்தமாயிருக்கிறாயே, நான் ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறேன்?” என்று கேட்டது.

    அதற்குப் “போடி பைத்தியமே! உன்னிடம் இருக்கும் பொன்னை நீ ஏன் மனிதனுக்குக் காட்டினாய்? அதனால் தான் எங்களைப்போல் உன்னால் எல்லோருக்கும் சொந்தமாயிருக்க முடியவில்லை!” என்றது வானம்.

    இக்கதையின் மூலம் மனித சமூகம் பொருளாசையால், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் மனிதத்தன்மை இழந்து நிற்பதை விந்தன் உணர்த்துகிறார்.

    விந்தன் கடவுள் நம்பிக்கை கொண்டவரா? கடவுள் நம்பிக்கை அற்றவரா? என்பதை ‘விந்தன் குட்டிக்கதைகள்’ என்னும் நூலின் அடிப்படையில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ‘தன்னம்பிக்கை’ என்னும் கதையில் நாட்டுப் பசுவொன்று குளத்தங்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த புலி நாக்கைச் சப்புக் கொட்டிற்று. இதைக் கண்ட பசு “ஏ! அறியாமை நிறைந்த புலியே! நீயும் நானும் ராம ராஜ்ஜியத்தில் எப்படி ஒற்றுமையாய் இருந்தோம் தெரியுமா?” என்று பல்வேறு சான்றுகள் மூலம் ஆராய்ச்சி பூர்வமாகப் வலியுறுத்திக் கூறியது. புலியோ அதன் கூற்றை எள்ளல் செய்து அதனைக் கொன்று தின்ன வருகிறது. இதனைக் கண்ட பசு, “அட ராமா, உன்னை நம்பிய எனக்கா இந்தக் கதி?” என்று புலம்பிற்று பசு.

    “உனக்கென்ன, தன்னை நம்பாத எவனுக்குமே இந்தக் கதைதான்! – நீ மட்டும் அவனை (ஆண்டவன்) நம்பாமல் உன்னையும் உன் கொம்புகளையும் நம்பியிருந்தால் இந்நேரம் என்னை விரட்டியிருக்கலாமே!” என்று அதன்மேல் பாய்ந்துவிட்டது புலி.

    இக்கதையின் அடிப்படையில் விந்தன் அவர்களைக் கடவுள் நம்பிக்கை அற்றவராக மதிப்பிடலாம். ஆனால் அவர் ‘புதிய புராணம்’ என்னும் கதையை நாராயணனுக்கும் நாரதருக்குமான உரையாடலாய் எழுதுகிறார். இக்கதையில் நாரதர் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக நாராயணனிடம் செல்கிறார். நாரதர் ‘ஏழைகளுக்கு வீடு கட்டித் தருபவர்கள் பெயர் நிலைத்து நிற்குமா? அல்லது தங்களுக்கு கோவில் கட்டித் தருபவர்களின் பெயர் நிலைத்து நிற்குமா?’ என்று தன் சந்தேகத்தை நாராயணனிடம் முன்வைக்கிறார்.

    நாராயணன், ‘எவனொருவன் இயற்கையின் உபாதைகளுக்கு அடிக்கடி ஆளாகும் ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஏற்றமிகு மாளிகைகளைக் கட்டித் தருகிறானோ, அவன் பூதவுடலை நீத்ததும் என்னை வந்து அடைந்துவிடுகிறான். எல்லாம் வல்ல எனக்காகக் கோயில் கட்டுபவன் எனை வந்து ஒரு நாளும் அடைவதில்லை; என்னுள் ஐக்கியமாவதும் இல்லை. இதனால் ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களைச் சிரிக்க வைப்பவனின் பெயர் மண்ணுலகில் மறைகிறது; விண்ணுலகில் நிலைக்கிறது. எனக்குக் கோயில் கட்டித் தருபவனின் பெயரோ மண்ணுலகில் நிலைக்கிறது; விண்ணுலகில் மறைகிறது. – இதுதான் உண்மை என்றார் நாராயணன். இவ்வாறு இருவேறு தளங்களில் விந்தன் பயணித்திருப்பினும் பெரும்பான்மை அவர் மனிதத்தையே முன்னெடுத்துள்ளார்.

    சாதிய முரண்பாடு, வர்க்க முரண்பாடு குறித்துத் தெளிவான சிந்தனையைக் கொண்டிருக்கும் ஆண் மனதும் கூட ஒடுக்கப்பட்ட பாலினமான பெண்கள் குறித்துத் தன் நனவிலி மனத்தில் கேலியையும் கிண்டலையும் புதைத்து வைத்துள்ளது. ‘மாட்டுத் தொழுவம்’ என்னும் தன் சிறுகதையில் பெண்ணினம் இந்தச் சமூகத்தில் மாட்டைவிடக் கேவலமாக நடத்தப்படுவதனை நேர்த்தியாகப் பதிவு செய்தவர் விந்தன். அவரே கூட தனது குட்டிக் கதைகளில் பெண்களை ஏளனத்துக்கு உள்ளாக்குகிறார். ‘பெண்ணின் பெருமை’ என்னும் கதையில் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையைக் கண்டு பூரிக்கிறாள் எஜமானி. அதற்கு விந்தன் ‘அடடா! என்ன சந்தோசம், என்ன சந்தோசம்! தன் சொந்த புத்திக்கு வேலை கொடுக்காதவர் யாராயிருந்தாலும் இந்தப் பெண்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது!’ என்று கூறுகிறார். ‘கடமை’ என்னும் கதையில் பரிசு கொடுத்தால்தான் பெண்கள் புன்னகை பூப்பர் என்று எள்ளல் செய்கிறார். ‘முடியவில்லை’ என்னும் கதையில் குடும்பத் தலைவர் ஒருவர் பொங்கலையொட்டி பழைய சாமான்களை எல்லாம் அகற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது வந்த அவரது நண்பர், “வேலை முடிந்துவிட்டது போலிருக்கிறது; வேண்டாத சாமான்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து விட்டீர்கள் போலிருக்கிறது!” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார்.

    “ஆமா; இன்னும் ஒரே ஒரு சாமான்தான் பாக்கியிருக்கிறது. அதை எடுத்து வெளியே எறிய என்னால் முடியவில்லை!” என்றார் கிரகஸ்தர்.

    “அது என்ன அப்படிப்பட்ட சாமான்?” என்று நண்பர் நெருங்கி ஆவலுடன் கேட்டார். “வேறு என்னவாயிருக்க முடியும்? என் மனைவிதான்!’ என்றார் கிரகஸ்தர் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே.

    அவ்வளவுதான்; “எங்கே அப்பளக் குழவி?” என்று உள்ளே யாரோ உறுமும் சத்தம் கேட்டது. வந்தவர் எழுந்து பிடித்தார் ஓட்டம்!’ இக்கதை விந்தனுடைய எழுத்துகளைப் போல் அல்லாமல் வெகுசனப் பத்திரிக்கைகளில் வரும் நகைச்சுவைத் துணுக்கைப் போல இருக்கிறது. வெகுசனப் பத்திரிகையின் தேவைக்கு இம்மாதிரியான தீனியை விந்தன் போன்றவர்களும் போடவேண்டிய சூழல் நெருக்கடி நிலவியது போலும்.

    இந்த உலகத்தில் தன்னால் முடியாத காரியம் என்று எதுவுமில்லை என்று கர்வம் கொண்டிருக்கிறான் ஒரு விஞ்ஞானி. ஒரு முதியவர் அவனிடம் ரோஜா மொட்டு ஒன்றைக் கொடுத்து மலரவைக்கச் சொல்கிறார். அவனும் அன்று முழுவதும் தன் ஆய்வுக் கூடத்தில் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். மறுநாள் காலை இயற்கையாக செடியிலிருந்த ரோஜா மொட்டுக்கள் தானாக மலர்ந்து மணம் வீசின. மணம் வந்த திசையை நோக்கித் திரும்பிய விஞ்ஞானி “இத்தனை மொட்டுக்களையும் இவ்வளவு அழகாக இவற்றுக்கு அருகில்கூட வராமல் மலர வைத்தது யார்?” என்றான் வியப்புடன். முதியவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். இப்படித்தான் மனிதர்கள் அறிவியலில் வளர்கிறேன், நாகரிகம் அடைகிறேன் என்று இறுதியில் இயற்கைக்கும் தனக்குமான சங்கிலியை அறுத்துவிடுகின்றனர். நிலநடுக்கத்தையும், ஆழிப்பேரலையையும் நாயாலும் யானையாலும் உணர முடிகிறது; மனிதனால் முடியவில்லை. இயற்கைக்கும் செயற்கைக்குமான போட்டியில் எவ்வளவு முயன்றாலும் மனிதனால் இயற்கையை வெற்றிக் கொள்ள முடிவதில்லை என்பதை இக்கதையில் உணர்த்துகிறார்.

    விந்தன் எழுதிய ‘செந்தமிழ் நாட்டிலே’ என்னும் கதை வாழும்போது எழுத்தாளனைக் கண்டுகொள்ளாத சமூகம் அவன் இறந்த பின்பு அவனையும் அவன் எழுத்துகளையும் கொண்டாடுவது குறித்த எள்ளலே. வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் கொள்கைக்காகத் தனது எழுத்துப் பணியைக் கடும் வறுமையிலும் தொடர்கிறார் எழுத்தாளர் சதானந்தம். அவரின் எழுத்தைத் கொண்டாடவோ அவருக்கு உதவி செய்யவோ யாருமில்லை. அவர் சூரிய கிரகணத்தன்று கடலில் மூழ்கி இறந்துவிட்டார் என்று தெரிந்தும் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்; ரசிகர்கள் உதவித்தொகைத் திரட்டி அவரது குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கின்றனர். பத்திரிகையாளர்கள் அவரது சந்ததியார்களைப் பற்றி எழுதிப் பணம் சேர்க்கின்றனர். ஆனால் பிறரை இறந்த பிறகும் வாழவைக்கும் சதானந்தமோ இறக்கவில்லை; அவர் தமிழ் நாட்டில் பிழைக்க முடியாமல் வட நாட்டுக்குச் சென்று இந்தியில் நாவல் எழுதுகிறார்; அது மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வருகிறது. இவ்வாறு ஒரு எழுத்தாளரின் வாழ்வையும் வலிகளையும் எள்ளலுடன் தம் கதையில் பதிவு செய்தவர் விந்தன். அதேபோல் மற்றொரு கதையான ‘சமதர்மம்’ என்னும் கதையில், கடைத்தெருவைக் கூட்டம் வந்து மொய்க்கும் நேரம். தன் கடையிலிருந்த பழங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் கடைக்காரன்.

    புது மெருகு ஏற்றப்பட்ட ஆரஞ்சுப் பழம் ஆற்றாமையுடன் பொருமிற்று.

    “நம்மையெல்லாம் துடைத்து வைப்பதோடு சரி; அந்த ஆப்பிள் பழத்துக்கு மட்டும்…..”

    “என்னவாம்?” என்று இடைமறித்துக் கேட்டது திராட்சை.

    “வெள்ளைக்கலை உடுத்தி, வெள்ளைப் பணி பூண்டு, வெள்ளை அரியாசனத்தில் ஏற்றி……”

    ‘ஓ’ அதைச் சுற்றி வைத்திருக்கும் அந்த மெல்லிய வெள்ளைக் காகிதத்தைச் சொல்கிறாயா? ஆமாம்! ஆமாம்!, அதற்கு எப்போதுமே ஒரு தனி அலங்காரம்தான்! என்று அது சொன்னதைத் திராட்சை ஆமோதித்தது.

    “ஏன், இருக்கக் கூடாதா? அது உன்னைப்போல் கன்னங் கரேலென்றா இருக்கிறது? எப்போதுமே அது தன் அழகிலும் தனி, மதிப்பிலும் தனி! என்றது அன்னாசி. மாதுளை திரும்பி, “யாரது, பைன் ஆப்பிள் சாரா? யு ஆர் கரெக்ட்! முள்ளம்பன்றி போல் இருக்கும் உமக்குச் சாதாரண பன்றிபோல் இருக்கும் ஆப்பிள் தன் அழகிலும் தனியாய்த்தான் தெரியும்! மதிப்பிலும் தனியாய்த்தான் தெரியும்” என்றது எரிச்சலுடன்.

    அப்போது அழுகிப்போன ஆரஞ்சுப்பழம் ஒன்றோடு, கன்றிப்போன ஆப்பிள் பழம் ஒன்றையும் எடுத்துக் கடைக்காரன் குப்பைத் தொட்டியில் விட்டெறிய, “வாழ்க, சமதர்மம்!” என்றது வாழைப்பழம்.

    “ஸ்…. பேசாதே! மனிதர்களுக்குச் சமதர்மம் சுடுகாட்டில் கிட்டுவதுபோல், நமக்குக் குப்பைத் தொட்டியிலாவது கிட்டட்டும்!” என்று சொல்லி அதன் வாயை அடக்கிற்று திராட்சை” என்று இவ்வுலகின் சமதர்ம நிலையினை காட்டுகிறார்.

    ‘புகழரசி’ என்னும் குட்டிக் கதையிலும் எழுத்தாளரின் வாழ்வே மையம். காலதேவனுக்கும் புகழரசிக்கும் இடையிலான உரையாடலாக இக்கதையை விந்தன் அமைத்துள்ளார். இந்தத் தொகுப்பில் இருக்கக் கூடிய கதைகளிலே அதிகப் பக்கங்களைக் கொண்ட கதையும் இதுதான். எழுத்தாளர்கள் வாழும்போதே புகழ் அவர்களை ஏன் அடையவில்லை என்று காலதேவன் கேட்பதே இக்கதையின் மையம். இதற்குக் “கலைஞன் உயிரோடிருக்கும்போது அவனுடைய குற்றங்கள் பெரிதாகவும் கலைத்திறன் சிறிதாகவும் ஜனங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே, என்னுடைய அருள் ஒரு கலைஞனுக்கு அவனுடைய ஜீவிய காலத்தில் நியாயமாகக் கிடைத்தாலும், ஏதோ காரியார்த்தமாக நாலுபேர் சேர்ந்துகொண்டு அவனைத் தூக்கி விடுவதாக ஜனங்கள் புறம் பேசுகிறார்கள். அசூயையும் பொறாமையும் சேர்ந்து அவர்களுடைய உள்ளத்தை அவ்வாறு மாசுபடுத்தி விடுகின்றன!” என்று புகழரசி பதில் கூறுகிறாள். விந்தனின் இவ்விரண்டு கதைகளும் அவர் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை போலவே உள்ளன; வாழும்போது பாட்டாளியாய் வாழ்ந்து பாட்டாளிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவுமே வாழ்ந்தவர்; அவர் இறந்தபிறகு தன் எழுத்துகளால் பிறரை வாழவைக்கிறார். 

    துணைநின்ற நூல்கள்

    • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
    • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
    • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
    • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
    • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
    • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
    • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
    • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
    • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

    இதழ்கள்

    • குங்குமம், மார்ச்-1994
    • தினமணி, வெள்ளிமணி,10.1987
    • மனிதன்,08.1954

    ***** 

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
    சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
    திருவண்ணாமலை 606603
    கைப்பேசி: 9786863839
    மின்னஞ்சல்: drnprabu@gmail.com

     

    Share
  • கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 2

    -முனைவர் நா.பிரபு

    சிறுகதைகள்

    தமிழ் அறிவுச் சமூக மரபில்  விந்தன் எழுதத் தொடங்கிய காலம், படித்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கே எழுத்தும் இதழ்களும் சொந்தம் என்று எண்ணிய சூழல் நிலவிய காலமாகும். அத்தகைய சூழலில் எழுதிய விந்தனின் சிறுகதைகளைப் பற்றி “ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு சாதியரைப் பற்றியே வந்துகொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தபடியால் அந்தச் சாதியினரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன. அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ்நடை, பிராமணக் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது. பிராமண எழுத்தாளர் கஷ்டப்பட்டு வேறு சாதியினரைப் பற்றிக் கதை எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை, உடை, பாவனைகள் அவ்வளவு சரியாக இருப்பதில்லை. இந்தச் சமயத்தில் நவயுக புதுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருஷ்யக் கதைகளையும் மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை எளியவர்களையும் உழைப்பாளி மக்களையும் பற்றிய கதைகள் எழுதத் தொடங்கினார்கள். விந்தன், உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகளின் சுக துக்கங்களை இதயம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர். அந்த உணர்ச்சிகளை இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றின் மூலம் அவர் திறம்பட எழுதியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணி தூக்கம் இல்லாமல் தவிக்க நேரும்” (முல்லைக் கொடியாள், முன்னுரை) என்று கல்கி அவர்கள் கூறுமளவிற்கு விந்தனின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தை உருக்குவன.

    மேலும், சமுதாய விரோதி என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள தேற்றுவார் யார்? என்னும் சிறுகதையைப்பற்றி கி.சந்திரசேகரன் அவர்கள் “முகத்தைச் சுளிக்காது எதிர் கொண்டழைக்கத் தகுந்தவைகளில் விந்தன் தரும் புத்தகம் சேர்க்கப்பட வேண்டியதே. ஆழ்ந்த மனச்சூழல்களில் நம்மைச் செருகும் தன்மை பெற்றவை. இங்குள்ள கதைகளில் சில ஒரு முறைக்கு இருமுறையாக அவற்றின் கருத்து நம்மை துழாவ வைப்பதற்குக் காரணம் அதுவே. அபிப்பிராயத்தின் தொனி விஷேசம் சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டுவிடுகிறது. சில வேளைகளில் உலுக்கியும் விடுகிறது. இதற்குச் சான்று தேற்றுவார் யார்? என்ற சிறுகதை” (சமுதாய விரோதி, முன்னுரை) எனக் கூறுகிறார்.

    ஏழையின் குற்றம் என்னும் கதையில் வரும் செட்டியார், தன் வேலைக்காரனான சின்னசாமிக்கு தரும் இன்னல்களை விந்தன் இவ்வாறு பதிவு செய்கின்றார். “வழக்கம்போல் அன்று இரவு பத்து மணிக்குப் பிறகு நான் போயிட்டு வரேனுங்க! என்றான் சின்னசாமி.

    ”என்னடா இவ்வளவு சீக்கிரம்! என்று கேட்டார் செட்டியார்.

    இனிமேதான் என் கூலியை எடுத்துக்கிட்டுப் போய் ஏதாச்சும் வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கணும். அவ வேற காத்துக்கிட்டுக் கிடப்பா. குழந்தைகள் வேற அழுதுக்கிட்டு இருக்கும்.

    அதற்கு நீ வேலை பார்க்கக் கூடாது. வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்.

    கோவிச்சுக்காதீங்க சாமி இன்னும் ஏதாச்சும் வேலையிருந்தா சொல்லுங்க செஞ்சிட்டு போறேன்.

    சரிதான் இந்த அரிசி மூட்டையை எடுத்துக்கிட்டுப்போய் நம் வீட்டுலே போட்டுவிட்டுப் போடா! என்று சொல்லி அன்றைய கூலி ஆறணாவை எடுத்து அவனிடம் கொடுத்தார் செட்டியார்.

    இப்படிக் கூலி கொடுக்கும்போதெல்லாம் செட்டியார் தினசரி தம் வீட்டு வேலை ஏதாவது ஒன்றைச் சின்னசாமிக்கு இடுவது வழக்கம். இந்த வேலைக்குக் கூலி கிடையாது. கூலி கொடுக்கும் வேலைக்கு இவையெல்லாம் கொசுறு வேலைகள்.

    சின்னசாமிக்குச் செட்டியார் இப்படி எத்தனையோ கொடுமைகளை கொடுத்தபோதிலும் அவன் அவர்முன் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசியதில்லை” எனக் காட்டுகிறார். இந்நூலுக்கு மு.வ. அவர்கள் “விந்தன் எய்யும் சொல்லம்புகள் குறி தவறாமல் பாய்கின்றன. சமூகத்தை அவர் சிற்சில இடங்களில்தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை. இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக்காட்டி பேசாமல் கதை சொல்கிறார். அவர் படைக்கும் பாத்திரங்கள் பெரும்பாலும் அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின்மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதேயில்லை. ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது.

    விந்தன் நோக்கம் என்ன என்பதை அவருடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்திலிருந்தும் இலக்கிய நோக்கிலிருந்தும் நாம் கண்டுகொள்ள முடிகிறது. வாழ்வின் கசப்பான அனுபவங்களை முழுவதுமாகப் பெற்றவர் என்ற காரணத்தினால் அவர் வாழ்வு நோக்கு என்பது மிகத் தெளிவாக உருவாகியுள்ளது. அவர் சாதாரண மனிதனுக்காக இலக்கியம் படைக்கப் புகுந்தவர். அவர் அடிப்படையில் உலக இயக்கங்களை மிகப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காணும் மனப்போக்கு அவரிடம் உள்ளது. உழைப்பவனுக்கும் வீணில் உண்டு களித்திருப்பவனுக்குமான போராட்ட உலகைக் காண்கிறார் விந்தன்” (ஒரே உரிமை, முன்னுரை) எனத் தம் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

    விந்தன் நடுத்தர வர்க்கத்தைப்பற்றியும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சீரழிவுகள், சிக்கல்கள் பற்றியும் விவரிக்கும் கதைகள் பல எழுதியுள்ளார். விந்தன் கதைகளைப் பற்றி கல்கி இதழின் முன்னாள் துணை ஆசிரியர் எஸ்.வேங்கட சுப்பிரமணியம் “விந்தன் கதைகள் மகாகவி தாகூர் கதைகள் மாதிரி இருக்கின்றன” (விந்தன், ப.43) எனக் கூறியுள்ளார். அத்தகைய நடுத்தர வர்க்கத்தைப் பற்றிய கதைகள் சில:

    “முதல்தேதி நடுத்தரவர்க்கத்தில் ஒரு நம்பிக்கையான சொல். ஒரு மாதம் முழுவதும் கடன் வாங்குபவன் கடன்காரனுக்குச் சொல்லும் ஒரே பதில் ‘முதல்தேதி தருகிறேன்’ என்பதுதான். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாக அமைவது முதல்தேதிதான்.

    பிரசவத்துக்கு வந்திருக்கும் தங்கையை ஊருக்கு அனுப்புவது முதல், பிள்ளைகள் கேட்கும் நாடகம், சினிமா முதற்கொண்டு அனைத்துக்கும் ஒரே பதில் முதல்தேதிதான்.

    சிக்கனமாக குடும்பம் நடத்த வேண்டும் என்பது மனைவியின் ஆசை.பார்க்கப்போனால் நம்மைக் காட்டிலும் வாழ்க்கையில் குறைந்த அளவு தேவையுடன் திருப்தியடைபவர்கள் வேறு யாருமே இருக்க மாட்டார்கள்.

    ஏன் இல்லை? எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முனியன், மூக்கன், தொப்பை, சப்பை என்று இல்லையா?

    அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? பிறர் வாழ்வதற்காக நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

    பிரெஞ்சு அறிஞன் ஒருவன் ஜனங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறான். மேல் வகுப்பு, கீழ் வகுப்பு, மத்திய வகுப்பு என்று அவன் பிரித்திருக்கிறான்.

    மேல் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு வாங்குகிறார்கள். கீழ் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு விற்கிறார்கள் என்று அவன் சொல்கிறான். இந்த இரு வகுப்பினர்களுக்கும் இடையில் இரண்டும் கெட்டானாக இருந்து கொண்டு அவதிப்படுபவர்கள்தான் நம்மைப் போன்றவர்கள். நம்முடைய சூழ்நிலை வேறு, அவர்களுடைய சூழ்நிலை வேறு. இவையனைத்தையும் கூட்டிக் குழப்பி ஒன்று சேர்க்க முயல்கிறார்கள் அரசியல்வாதிகள்” என்று தம் ஆழ்மனத்தின் எண்ணக் குமுறல்களை ‘முதல்தேதி’ என்னும் கதையின் வழி வெளிப்படுத்துகிறார்.

    மேலும் நடுத்தர வர்க்கத்தினர் முதல்தேதி ஒன்றை எதிர்பார்த்திருப்பினும் அத்தேதியில் அவர்களின் தேவைகள் நிறைவேறுகின்றதா என்பதையும் இவ்வாறு பதிவு செய்கிறார். “அவன் எதிர்பார்த்த முதல்தேதியும் வந்தது. வாங்கிய சம்பளத்தைக் கடன்காரர்களுக்குக் கொடுத்துவிட்டு மிச்சம் இருந்த ஒரு ரூபாயை முழுசாகக் கொடுத்தான் இந்த மாத குடும்ப செலவுக்கு என்று மனைவியிடம்.

    பின்னர் பிள்ளைகள் சர்க்கஸ், சாக்லெட், சைக்கிள் என்றார்கள். அனைவருக்கும் ஒரே பதில் முதல்தேதி, முதல்தேதி!

    இந்த முதல்தேதிக்கு முடிவே கிடையாதா? அவர்கள் வாழ்வு முடியும் வரையில் அதற்கு முடிவே கிடையாது” என்பதையும் பதிவு செய்துள்ளார். கீழ்த்தட்டு மக்களின் போராட்டங்களை அறிந்துள்ளமை போலவே நடுத்தரவர்கத்தினரின் வாழ்வியலையும் அறிந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் திறம்பட வலியுறுத்துகிறார் விந்தன்.

    இசுலாமிய சமூகத்தினரைப் பற்றி அன்பும் அதிகாரமும், தங்க வளையல் ஆகிய கதைகளின் வழி பேசுகிறார். சரித்திர, புராணக் கதை மாந்தர்களைப் பற்றி கதைகள் எழுதாத விந்தன் சமகால மக்களின் வாழ்வியலையே எழுதியவர். ஆயினும் கற்பனையில் எழுதிய இசுலாமிய அரசரின் கதைதான் ‘அன்பும் அதிகாரமும்’ என்னும் சிறுகதை. அக்கதையில் வரும் அரசன் அன்பை அதிகாரத்தால் அடைய நினைக்கின்றான். அன்பை விலை பேசுகிறான். அதனை விற்பதற்கும் வாங்குவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என அறிந்து ஆத்திரப்படுகிறான். அச்சமயத்தில் பாதுஷா முல்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசவைக் கூடுகிறது. அனைவரும் வருகின்றனர். அப்பொழுது ஒரு மான் குட்டியுடன் கவி இசா வருகின்றான்.

    அந்த மான் குட்டியின் மீது ஆசைப்படுகின்றாள் இராணி ஜிஜியா. தன் விருப்பத்தை அரசனிடம் சொல்ல, அரசன் இராணியின் விருப்பத்தை கவி இசாவிடம் தெரிவிக்கின்றான். இதனை விந்தன் இவ்வாறு பதிவு செய்கின்றார். “ராணி மான் குட்டியிடம் மனத்தைப் பறிகொடுத்தாள் சரி. மான் குட்டி ராணியிடம் மனத்தைப் பறி கொடுத்ததா? பின்னர், அன்புக்கும் அதிகாரத்துக்கும் விவாதம் நீடிக்கின்றது. கடைசியில் கவி சிறையிலும் மான் குட்டி அரசு உத்தியான வனத்திலும்.” எனக் காட்டியுள்ளார்.

    கவியைத் துறந்து உயிர் வாழ முடியாத மான் உணவை, உறக்கத்தை மறந்து ஒரு நாள் உயிரை விட்டது. அதை அறிந்த கவியும் தானும் பறந்து செல்வதாகக் கூறி பறந்து சென்றான். மான் இறந்து விட்டதை அறிந்த அரசன் அன்பின் மகிமையை வியந்து கவியிடம் மண்டியிட்டு மன்னிக்கும்படி வேண்டுகிறான். அல்லா உன்னை ஒரு நாளும் மன்னிக்கமாட்டார் என்கின்றான். மனம் நெகிழும்படியான இக்கதையை உணர்வுபூர்வமான உரையாடல்கள் மூலமும் இசுலாமிய சமுதாயத்தின் மொழியாலும் சிறப்பாகப் படைத்துள்ளார்.

    சிறுகதை, நாவல்களில் எள்ளல் தன்மையுடன் கருத்துக்களை கூறிச்செல்லும் விந்தன் முழுமையான நகைச்சுவைக் கதைகளையும் எழுதியுள்ளார். கவிதைத் துறையில் கவிதைகள் எழுதித் தம்மை கவிஞர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு மாறாக, தாகூர் மாதிரி தாடி வளர்த்துக் கொள்வது, குர்தா அணிவது, இப்படி உடையால் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட கவிஞர் ஒன்பாற்சுவையாரை எவரும் கவிஞர் என்று அழைக்கவில்லை. அதுவே அவருக்கு கெளரவக் குறைவாகப்பட்டது.

    ‘நமக்குத் தொழில் கவிதை’ என்று அவரே முழுநேரக் கவிஞராக ஆகிவிட்டார். ஆனால் காசுதான் அவரை நெருங்கவில்லை. கவிஞருக்கு கவிதை பிறந்ததோ இல்லையோ கவிதாதேவி என்னும் பெண் குழந்தை பிறந்தது. வாழ்க்கைக்குக் காசு வேண்டும் என்ற எண்ணத்தில் கவிஞர் ஒன்பாற்சுவையாரின் இல்லத்தரசி இன்பவல்லி அம்மையார் இட்லி, வடை கடைகளை நடத்தினார். இட்லி கிடைத்துச் சட்னி கிடைக்காததால் ஆத்திரத்தில் கவிஞர் பாடினார்.

    வேதனை வேதனை வேதனை
    வேதனை போயின்
    சோதனை சோதனை சோதனை
    இட்லி இட்லி இட்லி
    இட்லிக்கு வேண்டும்
    சட்னி சட்னி சட்னி

    அச்சமயத்தில் வீட்டு வாசலில் மகிழுந்து ஒன்று நின்றது. அதிலிருந்து இறங்கியவர் ஐந்நூறு ரூபாய்க்குக் காசோலை எழுதி கவிஞர் ஒன்பாற்சுவையாரிடம் கொடுத்துவிட்டு நாளை அலுவலகத்திற்கு வரும்படி சொல்லிவிட்டுச் சென்றார். அவ்வளவுதான் ஒன்பாற்சுவையார் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.

    மறுநாள் அவரின் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே உம்மைப் பாட்டு எழுத அழைக்கவில்லை. பின்னணி பாடத்தான் அழைத்தோம் என்று சொன்னதைக் கேட்டவுடன் மீண்டும் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.
    “இத்தனைக்கும் நான் அப்படியொன்றும் கேட்டுவிடவில்லை.
    ஆனப்பட்ட கம்பனே தன்னைத்தானே ‘கவிஞன்’ என்று அழைத்துக்கொள்ளாதபோது நீங்கள் ஏன் உங்களை நீங்களே ‘கவிஞன்’ என்று அழைத்துக் கொள்கிறீர்கள்? என்றுதான் கேட்டேன் அவ்வளவுதான். பாலர் பாடம் படித்திருக்கிறீரா? இல்லை, நீர் பாலர் பாடமாவது படித்திருக்கிறீரா, என்று அவர் என்மேல் பாய ஆரம்பித்துவிட்டார். அதில் என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு? தெரியாவிட்டால் கேளுங்கள் சொல்கிறேன் என்றேன். அடக்க ஒடுக்கமாக, “நன்று, நவிலும். ‘அ’ என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?

    ‘அணில் படம் போட்டிருக்கிறது’

    ‘அதற்குக் கீழே’

    ‘அணில் என்று எழுத்தில் போட்டிருக்கிறது’

    ‘நன்று ‘ஆ’ என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?’

    ‘ஆட்டின் படம் போட்டிருக்கிறது’

    ‘அதற்குக் கீழே?’

    ‘ஆடு என்று எழுத்தில் போட்டிருக்கிறது’

    ‘அணிலையும் ஆட்டையும் அறியாதார் அவனியில் உண்டோ?’

    ‘இல்லை’

    ‘அங்ஙனம் இருந்தும் சித்திர விளக்கத்தோடு அதற்குரிய எழுத்து விளக்கமும் சேர்ந்து நிற்பது எதற்கு?

    எடுத்துக்காட்டும் பொருள் பள்ளிச் சிறுவர்கள் கண்ணில் பதிவதோடு எழுத்திலும் பதியவேண்டும் என்பதற்காக இருக்கணும் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது”

    “அம் முறையைத்தான் யாமும் கையாண்டு வருகிறோம். எனவே பிறவிக் கவிஞரே என்று முகம்  மலர அகம் குளிர எம்மை விளிப்பாரைக் கண்டிலோம், கண்டிலோம்” இவ்வாறு நகைச்சுவை ததும்ப நயமுடன் எழுதியுள்ளார் விந்தன்.

    கவிதைகள்

    1956இல் விந்தன் ‘பசி கோவிந்தம்’ என்ற சிறுநூல் எழுதினார். அந்த நூலைப் பற்றி டாக்டர் ஆ.ரா. வெங்கடாசலபதி அவர்கள், புலவர் த.கோவேந்தன் எழுதிய புதுநாநூறு  என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னோட்டத்தில் குறிப்பிடுகிறார்.

    “இராஜாஜியின் பஜகோவிந்தத்தை நையாண்டி செய்து விந்தன் ‘பசி கோவிந்தம்’ எழுதினார். இராஜாஜி அரசியல் தலைவராகவும் இந்தியாவின் நடுவண் ஆளுநராகவும் இருந்ததால் அவருக்கு இலக்கிய பீடத்தில் இடம் கிடைத்துவிட்டது. அவருடைய பஜகோவிந்தத்தை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்.  இயல்பாகவே விந்தன் ஒரு சிறுகதையோ நாவலையோ எழுதும்போதுகூட ஆசிரியர் கூற்றாகப் பகுதிக்கு ஒரு வரியேனும் எழுதி சமூக இழிவுகளையும் ஒழுக்கங்களையும் நையாண்டி செய்யாமல் விந்தனுக்கு கதையை நடத்திச் செல்லத் தெரியாது. அப்படி இருக்கையில் நையாண்டி செய்வதற்காகவே எழுதப்பட்ட ‘பகடி’ நூலில் கேட்க வேண்டுமா? தன்னுடைய நூலைப் புடைநூல் என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார் ‘புடை புடை’ என்று புடைத்து விடுகிறார் விந்தன்.”

    “வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் பெருங்கடல் வாலிபம்; பசிமிக்க பாரதத்தில் வறுமைமிக்கோர் அதைக் கடப்பது கடினம்; ஆயினும் வயலில் சிறு வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையில் சிலர் வாலிபக் கடலைத் தாண்டி விடுகின்றனர். அதற்கேற்ற வசதியும் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகிறது. சுவாதீனத்தால் சோம்பேறித்தனத்தையும் சுகானுபவத்தால் சொர்க்கலோக இச்சையையும் வளர்த்து வரும் அவர்களுடைய பரம்பரை சொத்துகளையும் பாராதீனப்படுத்து பசிக்குப் பலியாகும் கோடானுகோடி மக்களைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற நோக்கத்தால் எழுந்ததே இந்தப் பசிகோவிந்தம் பாட்டு!

    பாரதம் வாழி பாரதம் வாழி
    பசிகோவிந்தம் பாட பசிதந்த
    பாரதம் வாழி!”

    ‘தினமணிக் கதிர்’ ஏட்டில் மகாபாரதக் கதையை ‘பாட்டினில் பாரதம்’ என்ற பெயரில் காவியமாக எழுதினார். அதைப் படித்த சிலர் காவியம் எழுதும் அளவுக்கு விந்தனுக்கு தமிழில் புலமை உள்ளதா என்று வினாயெழுப்பினர். ஆனால், புலவர் த. கோவேந்தன் போன்றவர்கள், உரைநடையை எளிமையாக எழுதியது போலவே காவியத்தையும் எளிமையாக இலக்கணம் பிறழாமல் எழுதுகிறார் என்று பாராட்டினர்.

    ‘கதிர்’ ஏட்டில் ‘பாட்டினில் பாரதம்’ தொடர் வந்து கொண்டிருந்தபோது ஆசிரியர் ஏ.என். சிவராமன் விந்தனைப் பார்க்கும்பொழுதெல்லாம் தொடரைப் பாராட்டுவதோடு “தொடர்ந்து எழுதுங்கள்!” என்று உற்சாகமூட்டி பாராட்டுவாராம். பலரின் பாராட்டுக்குரிய ‘பாட்டினில் பாரதம்’ இன்னும் நூலாக வரவில்லை.

    பெரியார் அறிவுச்சுவடி என்னும் நூலில் எழுதியுள்ள பகுத்தறிவைத் தூண்டும் கவிதைகள் அவரின் கவிதைத் திறனுக்குச் சான்றாகும்.

    சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை
    தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே
    மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
    ராவண காவியம் ரசித்துப் படி
    மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை
    “பீடை என்பது பிராமணியமே
    முக்தியால் வளர்வது மூடத்தனமே
    மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை 

    கட்டுரைகள்

    1947இல் தொழிலாளர் பிரச்சனையை முன் வைத்து ‘வேலை நிறுத்தம் ஏன்?’ என்னும் சிறு நூலை ஒரே இரவில் எழுதி வெளியிட்டார். அந்த நூல் இன்னும் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு ஏற்றதாகவும் போராடுவதற்குத் தூண்டுதலாகவும் இருப்பதால் அந்நூலை ஆசிரியரின் அனுமதியின்றியே அச்சிட்டுத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள்.

    சென்னை மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றிய காலத்தில் சுதேசமித்திரன் ஏட்டில் ‘சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்கிற தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதினார். அச்சமயத்தில் விந்தன் சேரியில் வாழும் ஏழை எளியவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு பத்திரிகையில் எழுதினார். அதன் மூலமே சென்னையில் எத்தனை சேரிகள் உள்ளன என்பதனையும் அவர்களின் அவலநிலைமையும் அறிந்தார் விந்தன். (அந்தக் கட்டுரைகள் இன்னும் நூலாக வெளிவரவில்லை) விந்தன் அவ்வப்போது பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள், அவரின் நூலுக்கு எழுதிய முன்னுரைகள் அனைத்தையும் மு. பரமசிவம் அவர்கள் தொகுத்துத் தர “விந்தன் கட்டுரைகள்” என்ற தலைப்பில் 1998இல் கிறிஸ்துவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ளது.

    இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ள பத்தொன்பது கட்டுரைகள் பலதிறப்பட்டவை. பாரதி வாழ்ந்த பாண்டி, பாரதிதாசனின் குடும்ப விளக்கு, ஒப்பற்றகவி, கவிமணியும் காலனும், உலகத்துக்கு ஒருவர், புகையிலையும் புதுமைப்பித்தனும் ஆகிய கட்டுரைகள் இலக்கிய ஆளுமைகள் குறித்தவை.

    எனக்குப் பிடித்த புத்தகம் என்னும் கட்டுரை மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் குறித்த அறிமுகமாகும்.

    முடிவுரை, என்னுரை, வயிறும் வாழ்வும், வாழ்த்து, சுழலும் உலகிலே, சுயம்வரத்திற்கு முன்னால் கொஞ்சம் சுய விளம்பரம், முன்னுரை, சுடச்சுட குளு குளு ஆகியவை தன் நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளாகும். படித்தேன் – சொல்கிறேன் என்னும் கட்டுரை பிறரது நூலிற்கு வழங்கிய முன்னுரையாகும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கட்டுரையும் ‘இதோ! ஒரு சுயமரியாதைக்காரன்’ என்ற கட்டுரையும் சமூக விமர்சனங்களாக அமைந்தனவாகும்.

    பாரதி, பாரதிதாசன், கவிமணி, கல்கி, புதுமைப்பித்தன் ஆகிய ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும், பார்வையற்றவர், கால் இழந்தவர், கையிழந்தவர், கால்முடப்பட்டவர், ஒரு கை விளங்காதவர் என இவர்களை ஊதுபத்தி விற்பவராய், பத்திரிகை போடுபவராய், தோசைக்கடை வைத்திருப்பவராய், செருப்புத் தைப்பவராய் வாழ்க்கையுடன் போராடி, பிச்சையெடுக்காமல் தங்கள் சுயமரியாதையைக் காத்து கொள்பவர்களாய்த் திகழ்வோரை உணர்ச்சி பொங்கச் சித்தரித்துள்ளார். இத்தகையோரை அட்டைப் படத்திலும் வெளியிட்டுச் சமுதாயத்தின் மையத்திற்குக் கொணர்ந்து பெருமைப்படுத்தியுள்ளார்.

    [தொடரும்]

    *****

    துணைநின்ற நூல்கள்

    • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
    • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
    • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
    • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
    • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
    • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
    • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
    • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
    • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

    இதழ்கள்

    • குங்குமம், மார்ச்-1994
    • தினமணி, வெள்ளிமணி,10.1987
    • மனிதன்,08.1954

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
    சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
    திருவண்ணாமலை 606603
    கைப்பேசி: 9786863839
    மின்னஞ்சல்: drnprabu@gmail.com

     

     

    Share
  • கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 1

    -முனைவர் நா.பிரபு

    சுயமரியாதை எழுத்தாளர் விந்தன் அவர்கள் தம் எழுத்துலக வாழ்வில் பல்வேறு தடங்களில் பயணித்தவர். அஃதாவது நாவல்கள், சிறுகதைகள், குட்டிக்கதைகள், கவிதைகள், திரையிசைப்பாடல்கள், கட்டுரைகள் எனப் பன்முக ஆளுமையோடு விளங்கியவர். சிறந்த எழுத்தாளனாகவும் கவிஞனாகவும் தன்னை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்திக்கொண்ட விந்தனின் படைப்புகளை இக் கட்டுரை ஆய்கின்றது. 

    நாவல்கள்

    விந்தன், கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம், தெருவிளக்கு ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘தெருவிளக்கு’ முற்றுப்பெறவில்லை. விந்தன் அவர்கள் சில நாவல்களை மட்டுமே எழுதி இருப்பினும் அவை அனைத்தும் சமுதாயத்தில் எழுச்சிகளையும் எண்ணக் கிளர்ச்சிகளையும் உண்டாக்கியன.

    கண் திறக்குமா?

    அரசியல் சார்பற்ற இலக்கியவாதியாக விளங்கிய விந்தன், ஒரு பேரியக்கத்தின் பெயரால் நடைபெற்ற மோசடிகளைக் காணப்பொறுக்காமல் தவறுகளைச் சுட்டி சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்பும் பணியில் பெரிதும் தம்மை ஆட்படுத்திக்கொண்ட பொன்னி இதழில் ‘நக்கீரன்’ என்னும் புனைபெயரில் எழுதிய நாவல் கண் திறக்குமா?.

    “தவறுகளை வெளியே நிறுத்திக் கதவைத் தாழிடுவாயானால், உண்மையும் வெளியே நின்றுவிடும்!” என்னும் மகாகவியின் சிந்தனையோடு தொடங்கும் இந்நாவலில் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு தம் தங்கை மற்றும் உடமைகளை எல்லாம் இழந்து நிற்கும் செல்வம், போலியான அரசியலும் பொய்யான தத்துவங்களும் நாட்டில் வரவேற்கப்படுவதைக் கண்டு வேதனையுற்று இறுதியில் பொய்யெல்லாம் மெய்யென்றும், போலியெல்லாம் உண்மை என்றும் நம்பி அதற்குத் தம்மையே ஈடுபடுத்திக்கொள்வதாகக் காட்டியுள்ளார்.

    ஏழை எளிய பெண்களின் கற்பைச் சூறையாடிய கயவன் சிவகுமார், ஒரு நாள் வீராங்கனை ஒருத்தியால் கொலை செய்யப்பட்டதும் சிவகுமார் இந்த தேசத்தின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்தான் என்று செல்லுமிடமெல்லம் பரப்புரை மேற்கொண்டு தன் மகனைத் தியாகியாக்க நினைக்கும் ‘பாரிஸ்டர் பரந்தாமன்’ செயல்களையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்நாவலில் காந்தியின் பெயரால், பணத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடைபெறும் கொடுமைகளை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கண்மூடிக் கிடக்கும் சமூகமே! உன் கண் திறக்குமா? என்று கேட்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

    இந்நாவலில் சூத்திரர்-பார்ப்பனர் பேதத்தை இவ்வாறு காட்டுகிறார்: “அப்பொழுதெல்லாம் இவனுக்கு நான் சூத்திரச்சி என்றும் இவனுடைய அப்பா பிராமணரென்றும் தெரியாது. ஆகவே, எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் என்னுடன் பழகுவான். அதெல்லாம் அந்தக்காலம். இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இருக்க முடியுமா?” என்றாள் செங்கமலத்தின் தாயார் பாலுவை நோக்கி.

    “ஏன் முடியாது சித்தி? நிச்சயம் முடியும்!” என்றான் பாலு.

    “எப்படி முடியும்? புனிதம் மிக்க உங்கள் மனுதர்மம் அதற்கு இடம் கொடுக்காதே!” என்றேன் நான் சிரித்துக் கொண்டே.

    “மனுதர்மமாவது, மண்ணாங்கட்டியாவது?” என்னைப் பற்றி நீ தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். மனித தர்மத்தைத் தவிர வேறொரு தர்மத்தையும் நான் ஒப்புக்கொள்வதில்லை” என்றான் பாலு ஆவேசத்துடன்.

    “நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கவில்லை. சட்டம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அழகான உலகத்தில் எந்தக் காலத்திலாவது மனுதர்மராஜன் என்றொரு புண்ணியவான் இருந்தானோ இல்லையோ, அவன் பெயரால் ‘இந்து’ லா (Hindu Law) என்றொரு சட்டம் மட்டும் இன்றுவரை இருப்பது உண்மை. அந்தச் சனியன் பிடித்த சட்டம் இல்லாமலிருந்தால் உன் சித்திக்கு இந்தக் கதி வந்திருக்குமா? என்றேன் நான்.

    பிராமணப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்ட சூத்திரன் இறந்துவிட்டால் அந்தச் சூத்திரனின் சொத்தில் பங்குகொள்ள அந்தப் பிராமணத்திக்கு உரிமையுண்டாம். ஆனால்…சூத்திரப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட பிராமணன் இறந்து விட்டால், அவனுடைய சொத்தில் பங்கு பெறச் சூத்திரப் பெண்ணுக்கு உரிமை இல்லையாம்” எனக் காட்டுவதன் மூலம் இந்து திருமண சட்டம் சூத்திரர்களுக்கு எதிரானது என்பதைக் காட்டி விமர்சிக்கின்றார்.

    “எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும் என்பது, நான் எழுத ஆரம்பித்தபோதே எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை. இவை இரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பயன்?” (நாவல் பிறக்கிறது, கட்டுரை) என்று கேள்வி எழுப்பும் விந்தன், தம் முதல் நாவலான கண் திறக்குமா? கதையை உணர்ச்சியோடும் துடிப்போடும் எழுதியுள்ளார். 

    பாலும் பாவையும்

    1950–இல் கல்கி இதழில் தொடராக வெளிவந்த இந்நாவல் பிற்காலத்தில் விந்தனை ‘பாலும் பாவையும் விந்தன்’ என அடையாளாப்படுத்துமளவிற்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. பாலும் பாவையும் என்னும் நாவல் ‘அகல்யா’ என்னும் பாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. இக்கதையில் வரும் அகல்யா இந்திரன் என்பவனைக் காதலிக்கிறாள். அவனும் அவளைக் காதலித்து ஏமாற்றுகிறான். அவனிடம் தன்னை இழந்த அகல்யா ஒரு சூழலில் கனகலிங்கம் என்பவனைச் சந்தித்து அவனைக் காதலிக்கிறாள். அகல்யாவின் சித்தப்பா செய்த சூழ்ச்சியால் கனகலிங்கம் கொல்லப்படுகிறான். இந்நிலையில் அகல்யாவிற்கு தசரதகுமாரன் என்பவன் அடைக்கலம் தந்து அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அப்பொழுது வேலைக்காரன் ‘நீங்கள் வரத் தாமதமானதால் பால் கெட்டுவிட்டது’ எனக் கூறுகிறான். அதைகேட்ட தசரதகுமாரன் பாலும் பாவையும் கெட்டால் பயன்படாது என அகல்யாவைக் கைவிடுகிறான். கெட்டுப்போன பாலும் பாவையும் ஒன்றா? என நினைத்துக்கொண்டு, இந்த மனிதர்களைவிட இந்தச் சமூகத்தைவிட ஆயிரமாயிரம் மடங்கு பெரியதும் பரந்து விரிந்ததுமான கடல், யார் கைவிட்டாலும் அது தன்னைக் கைவிடாது; யார் கதவைச் சாத்தினாலும் அது கதவைச் சாத்தாது என்கிற எண்ணம் அகல்யாவிற்குப் பளிச்சிடவே அவள் கடலை நோக்கி ஓடுகிறாள். கடல், கெட்டுப்போனவள் என்று நெட்டித் தள்ளவில்லை. ஓடிப்போனவள் என்று ஒதுக்கிவிடவில்லை; பழியைச் சுமந்தவள், பாதிக்கப்பட்டவள் என்னும் பரிவோடும் பாசத்தோடும் வங்கக் கடல் அகல்யாவை வாரியணைத்துக் கொண்டது.

    “நல்லவர்கள் வாழ்வதில்லை
    நானிலத்தின் தீர்ப்பு” என்று முடித்துள்ளார்.

    இந்நாவலில் விந்தன் “கடவுளைத் துணைக்கு அழைப்பவர்கள், கடவுளுக்கு பயப்படுகிறவர்களெல்லாம் யார் என்று நினைக்கிறீர்கள்? அவர்களில் பெரும்பாலோர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பவர்கள். தோலிருக்கச் சுளை விழுங்கிகள். கன்னக்கோல் திருடர்கள். தூங்கும்போது கழுத்தை அறுப்பவர்கள், படுமோசக்காரர்கள், பாவிகள், நயவஞ்சகர்கள் ஆகியவர்கள்தான்” என்று கனகலிங்கம் அகல்யாவிடம் கூறுவதாக ஓர் உரையாடலை அமைத்துள்ளார். “பொழுதை வீணாகப் போக்காதே, அப்படிப் போக்குவதாயிருந்தால் எந்தச் சமயத்திலும் உன்னைக் கைவிடாத நண்பர்களான புத்தகங்களைப் படிப்பதில் போக்கு” என்று பிறிதொரு சூழலில் கனகலிங்கம் அகல்யாவுக்குக் கடிதம் எழுதி வைத்திருப்பான். காதலனால் கைவிடப்பட்ட அகல்யாவிற்கு, எந்தச் சமயத்திலும் ‘உன்னைக் கைவிடாத நண்பர்கள்’ என்று புத்தகங்களைச் சுட்டுகிறார்.

    இலங்கைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பாலும் பாவையும் நாவல் பற்றிப் பதிவுசெய்துள்ள கருத்து இந்நாவலின் சிறப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கதாகும். “பாலும் பாவையும் ஆசிரியர் வேண்டுமென்றே இராமாயணப் பாத்திரங்களையும் கதா சம்பவங்களையும் குறிப்பிடுகிறார். இதனால் இதிகாசமும் நவீன கதையும் ஒன்றையொன்று ஒட்டவும் வெட்டவும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர் பழைய கருத்துக்களைக் கொள்ளும்போதும், தள்ளும்போதும் நின்று நாம் கவனிக்குமாறு இசைவுப்பொருத்தங்களை உணர்த்திக்கொள்கிறார்.” என்று தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

    “பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியே பெரும்பாலும் கதை எழுதிக் கொண்டு வந்த தாங்கள், காதலைப் பற்றி ஏன் எழுத வேண்டும்?” என்று பெண் வாசகர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு, “காதல் தோல்வியுறுவதற்குக்கூடக் காரணம் பொருளாதார நிலைதான்; அதைத்தான் இந்தக் கதையில் வரும் கனகலிங்கம் அகல்யாவுக்குச் சுட்டிக் காட்டுகிறான்” என்று விந்தன் முன்னுரையில் சொல்லியிருப்பது, ஏதோ சமாதானத்திற்காகச் சொன்னதுபோல் இல்லாமல் மிகுந்த பொறுப்புடனும் சமூக நோக்குடனும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையே இந்நாவல் உணர்த்துகின்றது. மேலும், “பெண்குலத்தை மாசுபடுத்துவதற்காக நான் இந்தக் கதையை எழுதவில்லை; தூய்மைப்படுத்துவதற்காகவே எழுதியிருக்கிறேன். இந்தக் கதையில் வரும் அகல்யாவிடம் எவ்வித வெறுப்பும் எனக்கு இல்லை. அவள் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்று குறிப்பிடும்போது மட்டும் எனக்கு அந்த இனத்தின் மேல் இயற்கையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டியிருக்கிறேன் -அவ்வளவுதான்” இத்தகைய அழுத்தமானக் கருத்துக்களைக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    “கெளரவம் தகுதியைப் பொறுத்தது. அது நம்மைத் தேடிக்கொண்டு வரவேண்டுமே தவிர நாம் அதைத் தேடிக்கொண்டு செல்லக்கூடாது. அப்படித் தேடிச்சென்று அடையும் கெளரவம் நிலைக்கவும் நிலைக்காது. பொன்னுக்கும், பொருளுக்கும் உள்ள மதிப்பு இந்தக் காலத்தில் பெண்ணுக்கு ஏன், அவள் கற்புக்குக்கூட இல்லைதான்” (பாலும் பாவையும்) என்று கருதியவர் விந்தன். அதனை இந்நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.   

    அன்பு அலறுகிறது

    1957 ஆம் ஆண்டு ‘அமுத சுரபி’ இதழில் ‘அன்பு அலறுகிறது’ என்னும் தொடர்கதையை எழுதினார். “பிறர்மனை நோக்காத பேராண்மை – சான்றோர்க்கு அறனன்றோ ஆன்ற ஒழுக்கு” என்னும் குறளைக், கேட்டும் படித்தும் அறியாத பாமரர்கள் – ஏழை எளியவர்கள் ‘பிறர்மனை நோக்காத பேராண்மை’யாளர்களாக வாழ்ந்துவந்த போதிலும், படித்தவர்கள் அதிலும் தமிழைப் படித்தவர்கள் குறளுக்குப் புதிய புதிய உரைகளைக் கண்டுபிடித்தார்கள்! எப்படி? ‘பிறர்மனை நோக்குதலே பேராண்மை!’ என்னும் போக்கில்!

    இத்தகைய புதுமைகளும் புரட்சிகளும் புற்றீசல்கள் போல் பெருகி வளர்ந்து தமிழர்களின் வாழ்க்கையை, பண்பாட்டைச் சீர்திருத்தம் என்கிற பேரால் சீரழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், இருபது வயது நிறைந்த லலிதாவுக்கும், அறுபது வயது நிறைந்த பணக்காரருக்கும் திருமணம் நடக்கிறது; அதுவும் இரண்டாம் தாரம் என்கிற சமூக முத்திரையோடு. தாய் – தந்தையை இழந்து அத்தையின் ஆதரவில் வளர்ந்த லலிதா, தனக்கு வாய்த்த இரண்டாந்தாரத் திருமணத்தை மிகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறாள்.

    இவளின் திருமணத்தையும், வயோதிகக் கணவரையும் கண்டு அனுதாபப்பட்ட ‘சிநேகிதி’களுக்காக இவள் ரொம்பவும் அனுதாபப்படுகிறாள்! ஏனெனில், வாழ்க்கைக்கு உயிர்போன்ற அன்பே பெரிதென்றும், அத்தகைய அன்பு எங்குக் கிடைத்தாலும் சரி அதற்கு வாலிபம், வயோதிகம் என்கிற வேறுபாடு கிடையாது என்றும் மெய்யாகவும் நம்புகிறாள். ஆம், அந்த அளவிற்கு வயோதிகக் கணவர் அவள் பேரில் அன்பைப் பொழிகிறார்; அந்தரங்கச் சுத்தியோடு நடந்துகொள்கிறார்.

    ஆனால், முதலிரவோடு அந்த முழு நிலவுக் காட்சி முடிந்து விடுகிறது! அடுத்து ஒரே இருட்டு. எதிர்பாராமல் ஏற்படுகிறது. ஒரு விபத்து! அந்த விபத்தில், ‘ஆண்மை’யை இழந்து விடுகிறார் வயோதிகர்; அத்துடன் அவள் மெய்யாக நம்பிய ‘அன்பு அலறுகிறது!’

    எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் தன் கணவர் ‘ஆண்மை’யை மட்டும்தான் இழந்தார் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவரோ சகல பண்புகளையும் இழந்து மிச்சச் சொச்சம் ஏதும் இல்லாதவராய்ப் பேச ஆரம்பித்தார். அதற்கு முன்னுதராணமாகத் தம் மனைவியை எவனுக்காவது தாரை வார்த்துக் கொடுத்திட வேண்டும் என்கிற முடிவுதான்!

    இந்தப் ‘புரட்சி’கரமான முடிவிற்கு எழுத்தாளன் ஒருவன் துணைசேர்கிறான்; அவளுக்கு அத்தான் முறையான மற்றொருவனும் அவளைச் சுற்றி வருகிறான். கடைசியில் அந்தப் பணக்கார வயோதிகன் தன் மனைவியை எழுத்தாளனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு வெளிநாட்டிற்குப் பயணமாகி விடுகிறார்!

    கணவனின் முடிவைக் கேட்டு அவள் உள்ளம் அலறுகிறது! எழுத்தாளனும், அத்தானும் ஒவ்வொரு நிமிடமும் போட்டி போட்டுக் கொண்டு அவளை அடைவதற்கும், அந்தஸ்தை அனுபவிப்பதற்கும் ‘தெருச்சண்டை’ போட்டுக் கொள்வதைக் காணப் பொறுக்க முடியாமல் ஊருக்குப் புறப்பட்டுப் போகிறாள்.

    முடிவில் ‘பிறன்மனை நோக்குதலே பேராண்மை….!’ என்னும் வெறியோடு வாழும் மனிதர்களை வெறுத்து, அவர்கள் எதைச் செய்தாலும் ‘அன்பு’ என்றும் பண்பு என்றும் மூடிமறைக்கும் சமூகத்தைத் துறந்து, தன் உயிரை முடித்துக் கொள்ளத் துணிகிறாள். அதற்கு முன்… எவரும் ‘அன்புப் பணி’ செய்யாமல் அமைதியாகயிருப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாகவும், அதற்குத் தன்னுடைய சொத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்து இவ்வுலகத்தை விட்டு விடுதலை பெறுகிறாள். அவளுடைய முடிவைக் கண்டு ‘சிநேகிதி’ அலறுகிறாள்; அன்பு அலறுவது போல்! 

    காதலும் கல்யாணமும்  

    தினத்தந்தி நிறுவனத்தின் ‘இராணி’ இதழில் ‘கனவிலே வந்த கன்னி’ என்னும் தலைப்பில் தொடர்கதையை எழுதினார். அக்கதையை ‘காதலும் கல்யாணமும்’ என்னும் தலைப்பில் க.நா.சுப்பிரமணியம் முன்னுரையுடன் காவேரி புத்தக நிலையம் 1965 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளது. விந்தன் எழுதிய நாவல்களில் அதிகப் பக்கங்களைக் கொண்டது இந்நாவல்.

    மோகன் என்கிற திருமணமாகாத இளைஞன், ‘கனவு காண்பது என் வாழ்க்கை’ என்கிற மாதிரி பருவ வயதுக் கனவுகளிலே உழன்று கொண்டிருக்கிறான். ஒரு கனவுக் கன்னி அவனுடைய கனவுகளில் வந்து அவனைத் தொடர்ந்து சீண்டியபடி இருக்கிறாள். கனவில் வரும் அதே சாயலுள்ள பெண்ணை ஒருநாள் பஸ் நிறுத்தத்தில் மோகன் பார்க்கிறான். அவள் பெயர் பாமா. பிறகென்ன, அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். முதலில் முரண்டு பிடிக்கும் அவள் எல்லாக் காதல் கதைகளின் இலக்கணத்தை மீறியா நடந்து கொள்ளப் போகிறாள்? காதலிக்கிறாள். இடையில் வழக்கம்போல பல பிரச்சினைகள். இறுதியில் திருமணம் நடைபெறுவதாக முடிகிறது. 

    “கலைஞன் என்பவன் தன் நாட்டைப் பற்றிய உணர்வுடனும், தன்னுடைய சமுதாயத்தின் செவியாகக், கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன். தான் வாழும் காலத்தில் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன்” (விந்தன், ப.76) என்னும் மார்க்சிம் கார்க்கியின் வாசகத்தில் பற்றுக் கொண்டிருந்த விந்தன், தான் வாழும் காலத்தின் உண்மைகளை, அவ் உண்மைகளை மறைக்க போலியாய் நடத்தப்பட்டப் போராட்டங்களை எப்பொழுதும் தம் எழுத்துக்களின் வழியே வெளிப்படுத்த தயங்கியதில்லை என்பதற்கு இந்நாவலே சான்றாகும். “வாழ்க்கையின் பலப் பிரச்சனைகளுக்கிடையே பிறந்தும் வளரமுடியாத என் நாவல்களை சர்வ வல்லமையுள்ள காசால்தான் காப்பாற்ற முடியுமா? கடவுளே உன்னால் காப்பாற்ற முடியாதா?” என்று விந்தன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலச்சூழலில் எழுதப்பட்ட இந்நாவலில், சர்வ வல்லமையுள்ள பணத்தால்தான் எதையும் சாதிக்கவும் மூடி மறைக்கவும் முடியும் என்பதை மிகவும் ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறார். 

    மனிதன் மாறவில்லை

    1961 –இல் ‘அமுதசுரபி’ இதழில் ‘மனிதன் மாறவில்லை’ என்னும் தொடரை எழுதினார். இத்தொடர் பலரின் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளானது. காரணம் வள்ளுவரின் பெயரைச்சொல்லி வளமாக வாழும் தமிழ்ப்பேராசிரியர் ஒருவரின் மறுப்பக்கத்தை வெளிப்படுத்துகிறது என்று பலராலும் பேசப்பட்டதேயாகும்.

    ‘மனிதன் மாறவில்லை’ ராமமூர்த்தி என்னும் விரிவுரையாளரையும் அவருடைய பேராசிரியர் நெடுமாறனாரையும் முன்னிறுத்தி புனையப்பட்டுள்ளது. ராமமூர்த்தியின் வீட்டுவாசலில், பெற்றவர் யாரென்றே தெரியாமல் கிடத்தப்படும் குழந்தையிலிருந்து ஒரு கமுக்க உத்தியுடன் கதையை நகர்த்துகிறார்.

    இந்நாவலில் விந்தன் பொதுவுடைமைக் கொள்கையுடையவராகவும் போலிப் பகுத்தறிவை விமர்சிப்பவராகவும் காட்சியளிக்கிறார். அதாவது டாக்டர் நெடுமாறனார், ராமமூர்த்தியிடம் “எல்லாம் அந்தக் குருச்சேவ்வால் வந்த வினை. செத்த பிறகும் தன்னுடைய செல்வாக்குக்குத் தடையாயிருந்து வந்த ஸ்டாலின் புகழை மறைப்பதற்காக ‘தனிநபர் வழிபாடு கூடாது’ என்று அவன் புதிய இயக்கத்தை தொடங்கி வைத்தாலும் தொடங்கி வைத்தான், மாணவர் உலகம் இப்போதெல்லாம் யார் எதைச் சொன்னாலும் எடை போட்டுப் பார்க்கவும், எதிர்க்கேள்வி கேட்கவும் தொடங்கிவிட்டது” (மனிதன் மாறவில்லை, ப.37) இவ்வாறு கூறுவதாக அமைத்துள்ளார்.

    மேலும், இக்கதையில் வரும் நறுமணத்திற்கும் கிழவனுக்கும் நடக்கும் உரையாடலிலும் பொதுவுடைமையை வலியுறுத்துகிறார்.

    “ஏன் தாத்தா, நீங்கள் படிக்கவில்லை என்றாலும் தாழம்பூவைப் படிக்க வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?”

    “அந்தக் குற்றத்தை நான் செய்யவில்லை அம்மா. செய்தவன் அவளுடைய அத்தான்.”

    “அத்தான் வேறு இருக்கிறாரா, தாழம்பூவுக்கு?”

    “இருக்கிறார், இருக்கிறார்.”

    “என்ன வேலை அவருக்கு”

    “வேலையா, இப்பொழுது ஒன்றுமில்லை. ஏதோ திராவிட நாடாமே, அது கிடைத்தால்தான் அவருக்கு வேலை கிடைக்குமாம்”

    “அதுவரை தின்னச் சோறு?”

    “திராவிட நாடு கிடைத்தால்தானாம்”

    “கட்டத் துணி?”

    “அதற்கும் திராவிட நாட்டைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்”

    “இருக்க இடம்?”
    “திராவிட நாடு கிடைக்கிற வரை, எங்கே கிடைக்கிறதோ, அங்கே”

    “அப்படியானால் இப்போது….”

    “எப்படி உயிர்வாழ்கிறார் என்று கேட்கிறாயா? அவருடைய கைகள் செய்யவேண்டிய வேலையையும் சேர்த்து இந்தக் கைகளே செய்கின்றன. அதனால் அவரைப் பொறுத்தவரை திராவிட நாட்டுக்கு அப்படியொன்றும் அவசரமில்லை” (மனிதன் மாறவில்லை, ப.56,57).

    வாழ்க்கை என்னும் தளத்தில் நடந்து முடிந்த கதைகளை எடுத்துக்கொண்டு அதற்கு இல்லாத பண்புகளெல்லாம் இருப்பதாகச் சொல்லி யாரையும் ஏமாற்றுவதில்லை; தன்னையும் ஏமாற்றிக்கொள்வதில்லை. மாறாக நடந்துகொண்டிருக்கின்ற கதைகள் – வாழ்க்கையைத் தேர்வுசெய்து அதில் காணப்படும் பண்பற்ற அதிலும் குறிப்பாக தமிழர்தம் மரபிற்கு அப்பாற்பட்ட செயல்களைச் சிறிதும் அஞ்சாமல் எடுத்துரைத்து பலரின் தூற்றுதலுக்கு உட்பட்டு இன்னலுற்றபோதும் விந்தன் தன் பண்பை, பழக்கத்தை, தன் பாடுபொருளை மாற்றவில்லை என்பதற்கு ‘மனிதன் மாறவில்லை’ நாவல் சிறந்த சான்றாகும்.

     சுயம்வரம்

    இந்த நாவலின் முன்னுரையில் விந்தன் கூறுகிறார்: “இது டீன் ஏஜர்களுக்கு எழுதப்பட்ட நாவல்தான் என்றாலும், இதில் வரும் ஆனந்தனைப் போலவோ அருணாவைப் போலவோ வேறு யாரும் ஆகிவிடக்கூடாது என்பதே என் விருப்பம். உங்கள் விருப்பமும் அதுவாகத்தான் இப்போதும் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

    பெண்களை பல வகையிலும் தெய்வமாகப் போற்றி வந்தது இந்த நாடு; ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!’ என்று பாரதியைப் பொங்கியெழுந்து பாடச்செய்தது இந்த நாடு. அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை வெறும் ‘போகப்பொருள்’களாகக் கருதி, அவர்களுடைய பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், ஒளிந்துகொள்ளாமலும் சில ஆண்கள் கவர்ச்சிகரமாக, வயிற்றுப் பிழைப்புக்காக எழுதும் கதைகள் அவற்றைக் கூசாமல் வெளியிடும் ஏடுகள் – கண்ணராவி, கண்ணராவி!

    அந்த ரகத்தில் சேராத இந்த நாவலை அவர்கள் சொல்லும் ‘டீன்ஏஜர்’சாரும் படிக்கலாம்.” (சுயம்வரம், முன்னுரை) இன்றைய தமிழ் எழுத்து மரபில் படைக்கப்படும் படைப்புகளை யார் வாசிக்கின்றார்களோ இல்லையோ படைப்பாளனின் மனைவி மக்கள்கூட வாசிக்க முடியாத நிலையில் பெண்களை இழிவாக எழுதும் சூழலில் “இந்நாவலை எவரும் படிக்கலாம்” என்று விந்தன் உறுதிபடக்கூறுவதிலிருந்து அவர் எழுத்தின் கண்ணியம் புலப்படுகிறது.

    [தொடரும்]

    *****

    துணைநின்ற நூல்கள்

    • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
    • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
    • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
    • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
    • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
    • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
    • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
    • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
    • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

    இதழ்கள்

    • குங்குமம், மார்ச்-1994
    • தினமணி, வெள்ளிமணி,10.1987
    • மனிதன்,08.1954

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
    சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
    திருவண்ணாமலை 606603
    கைப்பேசி: 9786863839
    மின்னஞ்சல்: drnprabu@gmail.com

     

    Share