Tag: ரஞ்சனி நாராயணன்

  • மஹாளயபட்ச நன்னாள் – ஒரு புதிய சிந்தனை

    — ரஞ்சனி நாராயணன்.

    மஹாளய அமாவாசைநன்றிக் கடன்!

    புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த நிறைந்த நாளே நவராத்திரியின் ஆரம்ப நாள். அதுமட்டுமில்லாமல் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நமது நன்றிக்கடனை நாம் செலுத்தும் நாளும் இதுவே.

    பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த தலைமுறை மனிதர்கள் எல்லோருமே நமது இன்றைய வாழ்விற்கு ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்றைக்கு நாம் பேசும் மொழி, நாம் உடுத்தும் உடை, நாம் வசிக்கும் வீடுகள், நமது நடை என்று எல்லாமே அவர்களிடமிருந்து நாம் கற்றவைதான். நாம் பெற்றவைதான், இல்லையா?

    இந்தப் பூமியில் விலங்குகள் மட்டுமே இருந்துவந்த காலத்தில் உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் இவற்றினூடே தங்களைக் கொல்லவரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பது இவையே முக்கியமானவைகளாக இருந்தன. பின் மெதுமெதுவே  விலங்குகள் பரிணாமம் பெறத் தொடங்கின. அகலமாக வளர்ந்தவைகள் எழுந்து நிற்கத் தொடங்கின.  மூளை, வளர்ச்சி பெறத் தொடங்கியவுடன், பல்வேறு திறன்களும் வளரத் தொடங்கின… ஒரு செல் பிறவியாக இருந்த உயிரினம் பல செல் பிறவியாக, மனிதனாக பரிணாமம் பெற்றது. மனித இனத்தின் மிக முக்கியமான பரிணாமம் தன்னைச்  சுற்றியிருக்கும் பொருள்களை பல்வேறு வகைகளில் அவன்  பயன்படுத்தத் தொடங்கியது தான். இந்த எளிமையான திறன் தான் பிற்காலத்திய தொழில் நுட்பங்களுக்கு அடிகோலியது. தன் கைகளை மட்டுமே நம்பியிருந்தவன் மரக்கிளைகளை ஆயுதமாகக் கொண்டு தன்னை எதிர்த்து வந்த எதிரியுடன் போரிட்டபோது நுட்பவியலின் கதவுகள் திறந்தன. தன்னைச் சுற்றியுள்ள பல பொருட்களையும் கொண்டு தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் மனிதன். இதுவே மனித இனத்தின் நீடித்த வாழ்வின் ஆரம்பம் எனலாம்.

    விலங்குகளைப் போல இருந்த மனிதன் மெதுமெதுவே தன் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ள ஆரம்பித்தான். இதனால் விலங்குகளைவிட சிறந்த வாழ்வு அவனுக்குக் கிடைத்தது. தனக்கென தங்குமிடம் வேண்டுமென விரும்பியதால் கட்டிடங்கள் வர ஆரம்பித்தன. கட்டடக்கலை இப்போது வானுயர வளர்ந்திருப்பதற்கு என்றோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவரின் மனதில் தோன்றிய ‘தனக்கென ஒரு இடம் வேண்டும்’ என்ற எண்ணம். குளிர், வெயில், மழை இவற்றிலிருந்து உடலை காக்க விரும்பியதால் உடைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த உலகத்தில் மனிதனாலேயே பலவும் நிகழ்த்தப்பட்டன. இரண்டு கற்கள் உரசும்போது ஏற்பட்ட தீப்பொறியால்  அதுவரை பச்சையாகத் தின்னப்பட்ட உணவு சமைக்கப்பட்ட உணவானது. காலங்கள் செல்லச்செல்ல சமைக்காத உணவை பதப்படுத்தவும், சமைத்த உணவை பாதுகாக்கவும் மனிதன் கற்றான். அதுவே இப்போது நமக்குக் கிடைக்கும் தயார் நிலை உணவிற்கு முன்னோடி.

    ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’
    ‘எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்’

    கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; அவைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் நவீனப்படுத்தப்பட்டன; மேம்படுத்தப்பட்டன.  இன்னும் மேம்படுத்தலுக்கு இடமும் அளித்தன. என்னைப்போல தையல் கலையை அறியாத தையல்களும் இன்று தைத்த உடைகளை அணிவதற்கு எப்போதோ ஒரு தலைமுறையில் தைத்து உடுத்த வேண்டும் என்ற உந்துதலுடன் பிறந்த ஒரு மனிதனோ மனுஷியோ தானே காரணம். தான் தைத்து உடை உடுத்தியதுடன் தையற்காரர் என்ற ஒரு தலைமுறையையும் உருவாக்கிய தலைமுறைக்கு நாம் எல்லோருமே கடன்பட்டிருக்கிறோமே! தயார் நிலை ஆடைகளை தைக்கும் தொழிற்சாலை நடத்தும் வியாபாரிகளும், அங்கு தைக்கும் பெண்களும், அவற்றை விற்கும் கடைக்காரர்களும் யாரோ ஒரு புண்ணியவானுக்கு / புண்ணியவதிக்கு பட்ட கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள்!

    சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதால் அல்லவா இன்று போக்குவரத்து நெருக்கடியில் நாம் சிக்கித் தவிப்பது தினசரி நடவடிக்கை ஆகிவிட்டது! எண்களில் ஜீரோவைக் கண்டுபிடித்து எண்ணற்ற கணித மேதைகளை உருவாக்கியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். என்னைப் போன்ற கணித வெறுப்பாளர்களையும் உருவாக்கியதும் அவர்களே. மருத்துவ உலகில் எத்தனை எத்தனை அரிய கண்டுபிடிப்புகள்! நமது வாழ்நாளின் அளவு நீண்டிருப்பதற்கு எத்தனையெத்தனை முன்னோர்கள் காரணம்!

    இன்றைக்கும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன; நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இவை நிச்சயம் பயன்படும். ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. நம்மிடையே யாருக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று ஒரு அலட்சியம். இருக்கும் வளத்தையெல்லாம் நாமே பயன்படுத்திக் கொண்டுவிடவேண்டும் என்ற ஒரு சுயநலம் பிறந்துள்ளது.

    ‘உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

    எல்லா இயற்கை வளங்களும் நமக்காகவே இறைவனால் படைக்கப்பட்டன என்பது உண்மை.  ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நதி நீர் மாசு படிந்துவிட்டது; காற்று அசுத்தமாகிவிட்டது; பல நதிகள் இருந்த இடமே தெரியாமல் வறண்டு போய்விட்டன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நீர் வேண்டாமா? நமது பேரக்குழந்தைகள், அவர்களது பேரக்குழந்தைகள் நல்ல நீர் குடிக்க வேண்டாமா? நல்ல காற்றை சுவாசிக்க வேண்டாமா? ‘இருக்கும் நல்லவற்றையெல்லாம் நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு அழுக்கு நீரையும் அசுத்தக் காற்றையும் விட்டுவிட்டுச் செல்லுகிறீர்களே’ என்று நம் இளைய தலைமுறைகள் கேட்கும் முன் விழித்துக் கொள்வோம்.

    நாம் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நன்றி சொல்லும் இந்த மஹாளய பட்ச தினத்தில் நம் வருங்கால சந்ததியினரையும் மனதில் கொள்வோம். அவர்களது நலன்களையும் பாதுகாக்க உறுதி பூணுவோம். அவர்களும் நாளை இன்று நாம் செய்வதுபோல நமக்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள் முழு மனதுடன்.

    படம் உதவிக்கு நன்றி: http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_6.html

    Share
  • அன்புள்ள இந்தியர்களே!

     

    ஆக்கம் : மேதகு அப்துல் கலாம்

    மொழிபெயர்ப்பு : ரஞ்சனி நாராயணன்

    images (1)

    அன்புள்ள இந்தியர்களே,

    இந்த உரையை நான் ஹைதராபாத் நகரத்தில் ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு 14 வயது பெண் என் கையெழுத்து வேண்டுமென்றாள். நான் அவளிடம் அவளது எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள்: முன்னேறிய இந்தியாவில் நான் வாழ வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் நானும் இந்த முன்னேறிய இந்தியாவை உருவாக்க வேண்டாமா? இந்தியா பின்தங்கிய நாடு அல்ல; மிகவும் முன்னேறிய நாடு தான் என்று நாம் பிரகடனப்படுத்த வேண்டும். எப்போது இதைச் செய்யப் போகிறோம்? இதைச் செய்வதை விட்டுவிட்டு  இப்போது  நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

    நமது அரசாங்கம் திறமையானது அல்ல என்கிறோம்;

    நமது சட்டங்கள் மிகப் பழமையானவை என்கிறோம்;

    மாநகராட்சி கழிவுகளை சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்கிறோம்;

    தொலைபேசிகள் இயங்குவதில்லை; இரயில் நிர்வாகம் ஒரு ஜோக். விமானப் போக்குவரத்து உலகிலேயே படுமட்டமான ஒன்று. தபால்கள் ஆமை வேகத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேருவதே இல்லை. இன்னும் இன்னும் எத்தனையோ குறைகள் இந்த நாட்டைப்பற்றி சொல்லுகிறோம். நாம் என்ன செய்தோம் இவற்றை சரிசெய்ய?

    இந்தியாவிலிருந்து சிங்கபூர் செல்லும் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள்; உங்கள் முகத்தைக் கொடுங்கள்; இப்போது அந்த ‘நீங்கள்’ சிங்கபூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறீர்கள். நன்னடத்தையின் உருவமாக அங்கு இருக்கிறீர்கள். அங்கு சிகரெட்டை பிடித்துவிட்டு மீதியை தெருவில் போடுவதில்லை நீங்கள். அவர்களது பாதாள இரயில் பற்றி அவர்களைப் போலவே பெருமிதம் அடைகிறீர்கள்; நமது மாஹிம் கடல்வழிப் பாதை போலவே அமைந்திருக்கும் ஆர்செர்ட் சாலையில் மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை போக 5 டாலர்கள் (இந்தியப்பணம் சுமார் 60 ரூபாய்) கூசாமல் கொடுக்கிறீர்கள்; மால் அல்லது உணவகத்தின் வெளியில் நிறுத்தியிருக்கும் காரை எடுக்கத் தாமதமானால் அதிகப்படியான பார்க்கிங் பணத்தை பேசாமல் செலுத்துகிறீர்கள்; சிங்கப்பூரில் இதற்கெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லுவதில்லை.

    ரமதான் சமயத்தில் துபாயில் இருந்தால் வெளியில் சாப்பிட பயப்படுவீர்கள்;

    ஜெட்டாவில் தலையை துணியால் மூடிக்கொள்ளாமல் எங்கும் செல்ல மாட்டீர்கள்;

    ‘என்னுடைய வெளியூர் தொலைபேசிக் கட்டணத்தை இன்னொருவருக்கு அனுப்பிவிடு’ என்று சொல்லி இந்தியாவில் தொலைபேசி ஊழியரை விலைக்கு வாங்கலாம்; லண்டனில் இது நடக்குமா? காரில் அநாயாசமாக வேக அளவை தாண்டி சென்றுவிட்டு, கேள்வி கேட்கும்  காவல்துறை அதிகாரியிடம், ‘நான் யார் தெரியுமா?’ என்று இந்தியாவில் பெருமை பேசலாம்; வாஷிங்கடனில் முடியுமா?

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்கரைகளில் காலி சாக்லேட் பேப்பரை  குப்பைத் தொட்டிகளில் போடுவீர்கள், இங்கு?

    டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை சாற்றைத் துப்பத் துணிவீர்களா?

    பாஸ்டனில் உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை பரீட்சை எழுத வைக்கவோ, பொய் சர்டிபிகேட் வாங்கவோ உங்களால் முடியுமா?

    இப்போதும் ‘உங்களைப்’ பற்றித்தான் பெசிகொண்டிருக்கிறோம். நீங்கள் மற்ற தேசங்களில் உள்ள சட்டதிட்டங்களுக்கு தலை வணங்குவீர்கள் ஆனால் உங்கள் தேசத்தில் இதைச் செய்ய மாட்டீர்கள்.

    இந்திய மண்ணைத் தொட்டவுடன், சிகரெட் துண்டை, கையிலிருக்கும் துண்டுக் காகிதங்களை வீதியில் வீசி எறிவீர்கள். அந்நிய தேசங்களுக்குப் போய் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு கொண்டு அங்குள்ளவர்களை போற்றத் தெரிந்த உங்களால் உங்கள் தேசத்தில் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? அமெரிக்காவில் ஒவ்வொரு நாய் சொந்தக்காரரும் தெருவில் நாயுடன் நடக்கும்போது, கூடவே கையில் ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துப் போவார்கள். தங்கள் நாய் கக்கா போனவுடன் அதை எடுத்து பையில் போட்டுக் கொள்வார்கள். நம் நாட்டில்  எந்த இந்தியனாவது செய்வானா?

    தேர்தலில் ஓட்டு போட்டவுடன் நம் கடமைகள் முடிந்துவிட்டதாக நினைத்து, வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொள்வோம். அரசு நமக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் நமது பங்களிப்பு வெறும் பூஜ்யம். மாநகராட்சி தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போம், ஆனால் குப்பைகளை தெரு முழுவதும் போடுவது நம் தப்பு என்று உணர மாட்டோம். அல்லது தெருவில் கிடக்கும் ஒரு துண்டு காகிதத்தையாவது எடுத்து குப்பைத் தொட்டியில் போடமாட்டோம்.

    ரயில்வே நிர்வாகம் கழிப்பறைகளை சுத்தமாக வைக்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால் நாம் அவைகளை சரிவர பயன்படுத்த வேண்டும் என்பது நம் பொறுப்பு என்பதை உணர மாட்டோம். விமானப் பயணங்களில் மிகச்சிறந்த உணவு கொடுக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த சோப்பு, ஷாம்பூ இவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. ஆனால் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் இவைகளை திருடக்கூடத் தயங்கமாட்டோம்.

    பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரதட்சிணை, பெண்சிசு கொலை போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக நாம் என்ன செய்கிறோம்? வீட்டில் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு வாய்கிழியப் பேசுவோம். வீட்டில் பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று சிந்திப்போமா?

    இப்படி நடந்துகொள்ள நாம் சொல்லும் சால்ஜாப்புகள் என்ன?

    ‘அமைப்பு மாறவேண்டும், நான் ஒருவன் மாறி என்ன ஆகப்போகிறது?’

    யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார்கள்? இந்த அமைப்பில் அங்கத்தினர்கள் யார்? நம்மைப் பொறுத்தவரை இந்த அமைப்பில் இருப்பவர்கள் நமது அக்கம்பக்கத்தவர்கள், மற்ற வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமூகங்கள் இவை தவிர அரசு. நிச்சயமாக நீங்களும் நானும் இதில் இல்லை.

    உண்மையில் நமக்கு இந்த சமூகத்தை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். ஏதாவது நேர்மறையாக நமது பங்களிப்பை கொடுப்போமா? குடும்பத்துடன் பத்திரமான இடத்திற்கு போய், ஒரு கூண்டுக்குள் ஒளிந்துகொண்டு விடுவோம். யாரோ ஒரு திருவாளர் ‘சுத்தம்’ வந்து தனது கையை ‘விஷுக்’ கென்று வீசி ஏதாவது அற்புதங்கள் செய்ய வேண்டும். அல்லது நாம் வேறு ஏதாவது வெளிதேசத்திற்கு கோழைகள் போல ஓடிவிடுவோம். அமெரிக்காவிற்கு சென்று அவர்களது நாட்டின் அமைப்பைப் புகழுவோம் அவர்களது பெருமையில் குளிர் காய்வோம். நியூயார்க் நகரம் பாதுகாப்பானதாக இல்லையா, ஓடு இங்கிலாந்திற்கு; இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டமா, அடுத்த விமானத்தைப் பிடித்து ஓடு வளைகுடா நாட்டிற்கு; வளைகுடா நாடுகளில் போர் அபாயமா? உடனே இந்திய அரசு ஓடிவந்து உங்களை காப்பாற்றவேண்டும்!

    இங்கிருப்பவர்கள் எல்லோரும் இந்த நாட்டை தூற்றவும், மோசமாகப் பேசவும் தான். யாருக்குமே இந்த நாட்டின் அமைப்பின் மீது அக்கறை இல்லை. நமது மனசாட்சியை பணத்திற்கு அடமானம் வைத்துவிட்டோம்.

    அன்புள்ள இந்தியர்களே, இந்த கட்டுரை உங்களை சிந்திக்க வைக்கவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து கொள்ளவும்தான் எழுதப்படுகிறது. இந்தக் கேள்விகள் உங்கள் மனசாட்சியை கொஞ்சமாவது தட்டி எழுப்பும் என்றுதான்.

    ஜான் எப் கென்னடி சொன்னதை நானும் திரும்பச் சொல்லுகிறேன்: ‘இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும், என்ன செய்தால் அமெரிக்காவும் பிற நாடுகளும் இன்றிருக்கும் நிலைமைக்கு இந்தியா வரமுடியுமோ அதைச் செய்வோம்.’

    இந்தியாவிற்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். இந்தக் கடிதத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் அனுப்புங்கள் – ஜோக்குகள் அனுப்புவதற்குப் பதிலாக!

    நன்றியுடன்,

    அப்துல் கலாம்.

    Share
  • மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

    ரஞ்சனி நாராயணன்

    மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

    உன் நெடுநாளைய ஆசையை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். நீ சொல்வாயே, இந்த ஈமெயில் கொசு மெயில் எல்லாம் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் எனக்காக செலவழித்து காகிதமும் பேனாவும் எடுத்து சற்று மெனக்கெட்டு நாலுவரி எழுது. எனக்குத் தோன்றும் போதெல்லாம் படித்துப் பார்ப்பேன் என்பாயே, அந்த உன் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.

    இப்போதெல்லாம் பழைய நினைவுகளே அதிகம் வருகின்றன, அம்மா. உன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் போவேனே, அந்த நினைவுகள். இன்னும் இன்னும் அந்த காலத்திய நினைவுகள் பசுமையாக மனதில் வாசம் வீசிக் கொண்டிருக்கின்றன, அம்மா.

    ‘எனக்கு ஏன் மணிவண்ணன் என்று பெயர் வைத்தாய், என் பள்ளித்தோழன் என்னை வணி மண்ணன் என்று கேலி செய்கிறான்’ என்று ஒருமுறை உன்னிடம் வந்து அழுதேன், நினைவிருக்கிறதா, அம்மா? நீ என்ன சொன்னாய் தெரியுமா? ‘அட! உன் தோழனுக்கு தெரியுமா? இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மாற்றிப் போட்டுப் பேசுவது தான் உன் பெயரை அவன் என்ன அழகாக மாற்றி இருக்கிறான் பார்’ என்று இன்னும் பல ஸ்பூனரிச வார்த்தைகளைச் சொன்னாய். ‘என்.எஸ். கிருஷ்ணன் இந்த உத்தியை ‘சந்திரலேகா’ படத்தில் பயன்படுத்துவார். ‘தரையிலே உக்காரு’ என்பதை உரையிலே தக்காரு என்பார்’ என்றாய்.

    நான் கொஞ்சம் சமாதானம் ஆனவுடன், ‘இத பாரு மணி, நம் குடும்பமே ‘மணி’ குடும்பம். மணிமணியான குடும்பம்! உன் அப்பா பெயர் மணிமாறன், என் பெயர் மணிமொழி, உன் பெயர் மணிவண்ணன். உன் அக்கா மணிமேகலை. வேறு யாருக்காவது இப்படி கிடைக்குமா? இன்னொரு விஷயம் ஒப்பிலியப்பனை ஆழ்வார் ‘பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன்’ என்கிறார். திருமங்கையாழ்வாரும் ‘முத்தினை, மணியை, மணி மாணிக்க வித்தினை’ திருவிண்ணகர் போய் சேவித்துவிட்டு வாருங்கள்’ என்கிறார். உனக்குத் தெரிந்த திருப்பாவையில் மாலே! மணிவண்ணா! என்று கண்ணனை அழைக்கிறாள் ஆண்டாள். உன் பெயர் அத்தனை அழகான பெயர்’ என்று சொல்லிவிட்டு, ‘உன் மனைவியின் பெயரும் இதேபோல மணி என்று வரவேண்டும்’ என்றாய். நான் சின்னவன் அப்போது. ‘போம்மா’ என்று சிணுங்கிக்கொண்டு எழுந்து போய்விட்டேன். ஆனால் நீ இதைப் பற்றி எத்தனை தீவிரமாக இருந்திருக்கிறாய் என்று பிறகு தெரிந்தது. எனது மனைவி பெயர் ரமா என்றிருந்ததை நீ ரமாமணி என்று மாற்றினாய், எங்கள் திருமணத்திற்குப் பிறகு.

    எப்படியம்மா நீ ஸ்பூனரிசம் பற்றியும் பேசுகிறாய், திவ்யபிரபந்தம் பற்றியும் பேசுகிறாய் என்று வியந்து நின்றேன் மனதிற்குள். இப்போதும் அந்த வியப்பு மாறவில்லை அம்மா!

    எனக்கு உன்னையும் அப்பாவையும் நன்றாக நினைவிருக்கிறது. நீ கொஞ்சம் கருப்புதான் ஆனாலும் ரொம்பவும் அழகு. அப்பா நல்ல நிறம். சட்டென்று பார்த்தால் நீதான் உயரம் போலத் தோன்றும். உன் ஆளுமை அப்படி. உன் பெயர் போலவே நீ சொல்லும் மொழிகளும் மணிதான். பேசும்போதே உன் குரலின் மென்மை மற்றவர்களை வசீகரிக்கும். வார்த்தைகளையும் அப்படித்தான் தேர்ந்தெடுத்துப் பேசுவாய். கோவம் என்பதே வராது உனக்கு. மென்மையான குரலில் நீ பாடும் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறதம்மா. கடிதம் எழுதுவதும் நான் உன்னிடமிருந்து கற்றதுதான். குட்டிகுட்டியாக உன் எழுத்துக்கள் ஒரு சீராக மணிமணியாக இருக்கும். உன் அப்பா நீ இப்படித்தான் இருப்பாய் என்று அகக்கண்களால் உணர்ந்து இப்படி ஒரு பெயர் வைத்தாரோ? உன் கடிதங்களைப் படிக்கும்போது உன் வார்த்தைகள் அருவமாக நின்று மனதை வருடிக் கொடுக்கும்.

    உன்னையும் அப்பாவையும் பலமுறை இங்கு வந்து என்னுடன் இருக்கும்படி சொன்னேன். ஏனோ இருவருக்கும் இங்கு வர விருப்பம் இல்லை. அக்காவிற்கும், எனக்கும் திருமணம் ஆகி இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்தோம். நீங்கள் இருவரும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு திவ்ய தேசம் போய் அங்கு தங்கி எல்லா உற்சவங்களும் சேவித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி கிளம்பிவிட்டீர்கள். எனக்கு மிகவும் வருத்தம். ஒருமுறை நீங்கள் இருவரும் திருக்கண்ணபுரத்தில் இருந்தபோது நான் மனைவி குழந்தைகளுடன் அங்கு வந்திருந்தேன். இரவு முநியதரையன் பொங்கல் வாங்கி வரச்சொல்லி எங்களுக்குக் கொடுத்தாய். இரவு நாமிருவரும் மெல்லியதாக அலையடித்துக் கொண்டிருந்த மிகப்பெரிய குளக்கரையில் உட்கார்ந்திருந்தபோது சொன்னாய்: ‘ஸ்ரீரங்கத்தில் பிறக்க வேண்டும்; திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கவேண்டும். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? ஸ்ரீரங்கத்தில் பிறந்துவிட்டேன்.
    ‘சரணமாகும் தனதாளடைந்தார்கெல்லாம்
    மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’

    எனக்கு இந்த பாக்கியத்தைக் கொடுப்பாரா?’ என்றாய். என்னுடன் வர மறுத்துவிட்டாய்.

    நீ இங்கு வரவேண்டும் அம்மா. வந்து என் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லவேண்டும். சௌரிபெருமாள் பக்தனுக்காக கூந்தல் வளர்த்தது, தவிட்டுப் பானை தாடாளன், ஸ்ரீரங்கம் பெருமாளின் ஈரவாடை வண்ணான் சேவை – ஆ! மறந்துவிட்டேனே, திருவரங்கனின் உலா பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். இதைப்போல சரித்திர நிகழ்வுகளை நம் அடுத்த தலைமுறைக்கு நாம்தானே சொல்லவேண்டும் என்று நீதானே அடிக்கடி சொல்லுவாய்?

    குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்? இன்னும் ஒரு விஷயம், அம்மா. சீர்காழியில் இருக்கும் நம் பூர்விக வீட்டை விற்றுவிட வேண்டாம். நாங்கள் சின்ன வயதில் கோடைவிடுமுறை என்றால் ஸ்ரீரங்கத்தில் இருந்த பாட்டி வீட்டிற்குத் தான் போவோம். மறக்கமுடியாத நாட்கள்! கொளுத்தும் வெயில் எங்களை ஒன்றுமே செய்யாது. காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு (அப்போதெல்லாம் காப்பி தான் எங்களின் ஆரோக்கியபானம்) கொள்ளிடத்திற்குப் போவோம். நாங்களாகவே நீச்சல் கற்றுக் கொண்டோம். வேடிக்கை என்ன தெரியுமா, அம்மா? என் பிள்ளைகளுக்கு பயிற்சியாளர் வந்து நீச்சல் சொல்லிக் கொடுப்பார். சிறுவயதில் ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப ஆடிபெருக்கன்று ரயில் பாலத்தின் மேலிருந்து கொள்ளிடத்தில் குதித்து நீந்திக் கரை சேர்ந்ததை அவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்படுவேன். என் குழந்தைகளுக்கும் பாட்டி வீடு என்கிற சொர்க்கத்தைக் காட்ட விரும்புகிறேன்.

    என் ஞாபகசக்தி உனக்கு வியப்பாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ‘வர வர இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு நினைவே இருப்பதில்லை’ என்று ரமாமணி சொல்கிறாள் அடிக்கடி. டாக்டர் வருகிறார். ஏதேதோ மருந்துகள் கொடுக்கிறார். இதோ இப்போதும் என் காலடியில் ஒரு சின்னப் பையன் உட்கார்ந்திருக்கிறான். என்னை தாத்தா, தாத்தா என்கிறான். யார் என்றே தெரியவில்லை.

    உன்னுடன் செலவழித்த நாட்கள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. உனக்கு தினமும் பல பல கடிதங்கள் எழுதுகிறேன்.

    மணிமொழியாகிற என் அம்மா…..என் அம்மா…..

    Share
  • பாட(ல்) பெறாத தலைவிகள்

    ரஞ்சனி நாராயணன்

     

    ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் என்றால் பல பெண்கள் என் நினைவிற்கு வருவார்கள். முதலில் என் பாட்டி, பிறகு என் அம்மா, என் அக்கா. இவர்கள் எல்லோரையும் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேன். இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த மகளிர் தினத்திற்கு எனது தோழிகள் மற்றும் எனது மாணவிகள் சிலரைப்பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

    மகளிர் நலம் பற்றிய கட்டுரையில் இவர்களின் பங்களிப்பு என்ன என்று தோன்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள் புரியும்.

    முதல் அறிமுகம் சாந்தி. நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் இவளும் திருமணம் ஆகி இந்த ஊருக்கு வந்தவள். எனது தோழியின் உறவு. தோழியின் தொடர்பு விட்டுப்போய் பலவருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சாந்தியுடன் ஆன எனது நட்பு இன்றும் தொடருகிறது – கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக. வியப்பாக இருக்கிறது, இல்லையா?

    எங்கள் நட்பு இத்தனை வருடங்கள் ஆனபின்னும் வலுவாக இருக்கக் காரணம் நிச்சயம் நானில்லை. இந்தப்பெருமை முழுக்க முழுக்க சாந்தியைத்தான் சேரும். முதலில் சாந்தியின் வீடு எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. சாந்தி வேலை செய்த பள்ளிக்கூடமும் அருகில் அதனால் ஏறக்குறைய தினமுமே சாந்தி என் வீட்டிற்கு வருவாள். என் குழந்தைகளுக்காக செய்யும் சிற்றுண்டியை சாந்திக்கும் கொடுத்து இருவருமாக காப்பி சாப்பிடுவோம். சில மாதங்களில் அவள் கருவுற்றாள். பிரசவத்திற்கு தாய்வீடு செல்லும்வரை மாலைவேளைகளில் எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். சில மாதங்களில் நாங்கள் வேறு வீட்டிற்கு மாறினோம். சாந்தியும் கணவரின் வேலை காரணமாக போபால் போய்விட  தொடர்பு விட்டுப் போயிற்று. வருடங்கள் கழிந்தன. ஒருநாள் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் நாங்கள் இருவரும் மீண்டும் சந்திக்க – நட்பு தொடர்ந்தது.

    எனக்கு சாந்தியிடம் மிகவும் பிடித்த விஷயம் எதற்கும் துளிக்கூட அலுத்துக் கொள்ள மாட்டாள். எங்கள் வீட்டுப் பக்கம் வரும்போதெல்லாம் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாள். பல மாதங்கள், வருடங்கள் பார்க்கவில்லை என்றாலும் நேற்று பார்த்து பேசியதை இன்று தொடர்வது போல குற்றம் குறை கூறாமல் பேசுவாள். ஏன் எங்கள் வீட்டிற்கு வரவில்லை; ஃபோனாவது செய்யலாமே என்று கேட்கவே மாட்டாள்.

    வாழ்க்கை அவளை நிறையவே புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசவே மாட்டாள். என்ன ஒரு அதிசயமான குணம்! குணக்கோளாறான கணவர்; பிறந்தவீடு புகுந்த வீடு இரண்டு பக்கமும் எந்தவித ஆதரவும் கிடையாது. சின்னசின்ன பள்ளிகளில் வேலை; கொடுக்கும் சம்பளத்திற்கு மேல் பிழிந்து எடுக்கும் வேலை. ஆனால் இவற்றைப்பற்றி பேசவே மாட்டாள். எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? எனது தோழி சொல்வாள் கதை கதையாக. ஒருவழியாக இப்போது ஒரு பெரிய பள்ளியில் நல்ல சம்பளத்தில் வேலை. பவித்ராவும் படித்து முடித்துவிட்டாள். இனியாவது அவளது வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதுதான் எனது தினசரிப் பிரார்த்தனை.

    இரண்டாவது அறிமுகம் நிர்மலா. ஒருமுறை நானும் என் கணவரும் வெளியே போய்விட்டு திரும்பும்போது மழை கொட்டு கொட்டென்று கொட்ட, நாங்கள் அடைக்கலம் புகுந்தது நிர்மலாவின் கடையில். நாங்கள் இருவரும் தமிழில் பேசுவதைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் கூப்பிட்டு, தலை துடைக்க துண்டு கொடுத்து சுடச்சுட பாதாம் பால் கொடுத்தாள். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. நிர்மலாவும் தமிழ் நாட்டில் பிறந்தவள். திருமணம் ஆகி பெங்களூருக்கு வந்தவள். ஊறுகாய், அப்பளம் விற்கும் கடையை நடத்தி வந்தார்கள் கணவனும் மனைவியும். அத்துடன் பால் விநியோகம். கூடவே காப்பி, டீ, பாதாமி பால் தயாரித்துக் கொடுப்பார்கள். ‘காதலொருவனைக் கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து’ என்ற பாரதியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டியவள் நிர்மலா. விடியற்காலையில் வரும் பால் வண்டியிலிருந்து பால் பொட்டலங்களை எண்ணி வாங்கி இறக்குவதிலிருந்து, மணிக்கணக்கில் கடையில் நின்று கொண்டு வியாபாரத்தை மேற்பார்வையிடுவதும், காப்பி, டீ, பாதம் பால் போன்றவற்றை தானே தயாரிப்பதும் ஆக அலுக்காமல் சலிக்காமல் உழைப்பவள். எப்போது போனாலும் சிரித்த முகத்துடன், கடும் உழைப்பின் அயர்ச்சி முகத்தில் தெரியவே தெரியாமல் வரவேற்கும் பக்குவம் எப்படி வந்தது இந்தப் பெண்ணிடம் என்று நான் வியப்பேன். இவளும் தனது குடும்பக் கஷ்டங்களை வாய்விட்டுச் சொல்லவே மாட்டாள். இன்று இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து சொந்த வீடும் வாங்கி தனது நிலைமையை முற்றிலும் மாற்றிக் கொண்டு விட்டாள் நிர்மலா.

    மூன்றாவதாக எனது மாணவி வெங்கட்லக்ஷ்மி. அருமையான பெண். எனது வகுப்பில் சேர்ந்தபோது திருமணம் ஆகியிருக்கவில்லை. முதல் நாள் வகுப்பில் மாணவர்களை ‘அவர்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ பற்றிப் பேசச் சொன்னேன். லக்ஷ்மி சொன்னாள்: ‘நான் வேலையில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. இந்த மாதம் எல்லோருக்கும் சம்பள உயர்வு கொடுத்திருந்தார்கள். எனக்குத் தெரியும் எனக்கு சம்பள உயர்வு கிடைக்காது என்று. எல்லோருடைய சம்பள உயர்வையும் அறிவித்த எனது நிறுவன முதலாளி எனக்கு நாலாயிரம் ரூபாய் உயர்வு என்று சொன்னாவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. ‘உன்னுடைய திறமைக்கு நான் கொடுக்கும் பரிசு இது’ என்றார் அவர். இதுதான் மேடம் என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ என்றாள். அலுவலக வேலையில் மட்டுமல்ல; எல்லாவற்றிலும் அவள் திறமையானவள் என்பதற்கு இன்னொரு சம்பவம்:

    லக்ஷ்மி சேர்ந்திருந்த எனது வகுப்பு முடிவடையும் நாள். (வகுப்பு என்று நான் சொல்வது 24 நாட்கள் கொண்டது) கடைசி நாளன்று எங்கேயாவது போகலாம் என்று மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். காலையில் போய்விட்டு இரவுக்குள் திரும்பிவிட வேண்டும். பலரும் பல யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். லக்ஷ்மி வந்தவுடன் எல்லோரும் அவளிடத்தில் யோசனை கேட்டனர். அவள் சொன்னாள்: ‘சிவன சமுத்திரம் போகலாம். மழை பெய்து அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலையில் போய்விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடலாம். சிற்றுண்டி, மதியம் உணவு, எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துவிட்டீர்களா? போவதற்கு வண்டி? எத்தனை பேர் போகிறோம்? ஒவ்வொருவரும் எத்தனை பணம் கொடுக்க வேண்டும்?’ கிடுகிடுவென்று திட்டம் போட்டு, தொலைபேச வேண்டியவர்களுக்கு பேசி, வண்டி, சிற்றுண்டி, மதிய உணவு, நீர் என்று எல்லா ஏற்பாடுகளும் விரல் சொடுக்கும் வினாடியில் செய்து முடித்தாள். சின்ன பெண் என்ன ஒரு சாமர்த்தியத்துடன்  நிலைமையை கையாளுகிறாள்!

    லக்ஷ்மியின் அப்பா அம்மா இருவரும் கிராமத்திருப்பவர்கள். தனது தங்கைகளையும் தன்னுடன் பெங்களூருக்குக் கூட்டி வந்து அவர்களைப் படிக்க வைத்தவள் லக்ஷ்மி. தனக்குத் திருமணம் ஆனவுடன் தங்கைகளுக்கும் திருமணம் செய்து சொந்தமாக வீடு கட்டி அலுவலகம், குடும்பம் இரண்டையும் சிறப்பாக நிர்வகித்து வரும் லக்ஷ்மி என்னை வியக்க வைத்ததை என்னவென்று சொல்ல?

    நான் சொன்ன இவர்கள் எல்லோருமே என்னைவிட சிறியவர்கள். ஆனால் நான் இவர்களிடம் கற்றது ஏராளம். சாதிப்பதற்கு என்று எந்தக் களனும் வேண்டாம்; சொந்த வாழ்வில் வெற்றி பெறுவதுதான் நிஜமான சாதனை என்று நிரூபித்த பாட(ல்) பெறாத இந்த தலைவிகளைப் பற்றிய இனிய நினைவுகளுடன் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

    Share
  • இவனுக்கு அப்போது மனு என்று பெயர் – புத்தக மதிப்புரை

    ரஞ்சனி நாராயணன்

    manu

    புத்தகத்தின் பெயர்: இவனுக்கு அப்போது மனு என்று பெயர்

    ஆசிரியர் : இரா. எட்வின்

    பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

    பக்கங்கள்: 104

    விலை: ரூ. 70/-

    ஆசிரியர்:

    பெரம்பலூரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் திரு இரா. எட்வின், ஒரு பள்ளி ஆசிரியர். பத்திரிக்கைகளுக்கு எழுதுவதுடன் ‘நோக்குமிடமெல்லாம்’ என்ற வலைப்பதிவையும் நிர்வகித்துவருகிறார். ஆசிரியராக இருப்பதால் இவரது பதிவுகள் பள்ளிக்கூடம், மாணவர்கள் சார்ந்ததாக இருக்கிறது. கூடவே சமூகத்தில் தான் காணும் ஏற்றத்தாழ்வுகளையும் பதிவு செய்கிறார்.

    இந்தப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கும் கவின்மலர் இவரது எழுத்துக்கள்  ‘பாசாங்கு இல்லாத எழுத்துக்கள்’ என்கிறார். இவரது வெளிப்படையான எழுத்துக்கள், அதிலிருக்கும் உண்மைகள் நம்மையும் கவருகின்றன. இந்தப்புத்தகத்தில் மொத்தம் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. வலைப்பதிவுகளின் தொகுப்பாக இருப்பதால், ரொம்பவும் நீண்டதாக இல்லாமல் சுருக்கமாகவும் நறுக்கென்றும் இருக்கின்றன என்பதால் படிப்பதற்கு எளிதாக இருக்கின்றன. ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பதுபோல இவரது கட்டுரைகளும் காரசாரமாகவே இருக்கின்றன.

    முதல் கட்டுரையில் முகநூலில் தான் கண்ட ஒரு கிழிந்த பனியனின் புகைப்படத்தைப் பற்றி எழுதுகிறார். தனக்குப் பிறந்திருக்கும் புது குழந்தையை போர்த்தி எடுத்துக் கொண்டுபோக காசில்லாத ஒரு ஏழை தந்தையின் கிழிந்த பனியன் அது என்பது நம் மனதை மிகவும் வருத்துகிறது. சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களாகியும் ஏழ்மையை ஒழிக்க முடியாத இந்நாட்டில் பொக்ரான் எதற்கு? என்று கேட்கிறார் இந்த முகநூல் பக்கத்தின் உரிமையாளர் டெல்லி AIIMS இன் இளம் மருத்துவர். 2010 இல் மட்டும் ஏறத்தாழ 1,30,000 இந்தியக் குழந்தைகள் ஏதேதோ காரணங்களால் மாண்டு போயிருக்கிறார்கள் என்பதை அழுதுகொண்டே பதியும் இந்த இளம் மருத்துவர் புன்னகைத்துக்கொண்டே கொந்தளித்து கேட்கும் இன்னொரு கேள்வியையும் இரா.எட்வின் நம் முன் வைக்கிறார்: ‘18 மைல் தூரத்திலிருந்து வந்தால் அவனுக்கு அகதி முகம். 4000 மைல் தொலைவான இத்தாலியிலிருந்து வந்தால்….?

    கணவனை இழந்த கண்ணகிக்கு சிலை வைக்கும் இந்த சமூகம், நல்ல நிகழ்ச்சிகளில் விதவைகளை கேவலப்படுத்துவது ஏன்?

    மன்மோகன் சிங்கிற்கு ஏறத்தாழ பத்து டாக்டர் பட்டங்கள் ஏன்?

    முகநூலில் பொன்னான நேரத்தை வீணாக்கும் மனிதர்களிடையே இப்படியும் ஒரு இளைஞன் என்று நமக்கு அறிமுகம் செய்கிறார் இரா. எட்வின்.

    மழைகாலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதத்திற்கு, கால்நடை சேதத்திற்கு, உடமை சேதத்திற்கு, குடிசை சேதத்திற்கு நிவாரணத் தொகைகளை வாரிவழங்கும் அரசு அந்தத் தொகையை  ஏரிகள், குளங்கள், குட்டைகள், கசிவு நீர் குட்டிகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள், போன்றவற்றை தூர் எடுக்கவும், நதிகளில் ஏரிகளில் மற்றும் நீர் நிளிகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரை, சீத்தகருவை போன்றவற்றை அப்புறப்படுத்துவதற்கும்   ஏன் பயன்படுத்தக் கூடாது என்று ‘நதி பயணப்படும் பாதை’ என்ற கட்டுரையில் கேட்கிறார்.

    வோட்டு போடுவதற்கு பணம் கொடுக்கும் வழக்கத்தை கட்சிகள் எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன, எங்கேயெல்லாம் இந்தப் பணத்தை ஒளித்து வைக்கின்றன என்று சொல்லும் ஆசிரியர் மதுரையில் ஒருவர் தனது வீட்டில் ‘எங்கள் வீட்டு வாக்குகள் விற்பனைக்கல்ல’ என்று எழுதிவைத்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.

    தனித்தனியான கட்டுரைகள் என்றாலும் இயல்பாகவே சில கட்டுரைகள் இன்னொன்றின் தொடர்ச்சியாகவோ  அல்லது அதனுடன் சம்பந்தப்பட்டதாகவோ அமைந்திருக்கின்றன இந்தப் புத்தகத்தில். ‘பெயரில் இருக்கிறது’ என்ற கட்டுரையில் பார்ப்பனீய எதிர்ப்பாளரும், தமிழ்மொழிப் பற்றும் கொண்ட  கனக சுப்புரத்தினம் எப்படி பாரதிதாசன் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்பதற்கு பாரதிதாசன் சொன்ன பதில்களை தனது பதிவில் குறிப்பிடும் ஆசிரியர் பாரதியும், பாரதிதாசனும் முதல்சந்திப்பை ‘உச்சங்களின் முதல் சந்திப்பு’ என்று இன்னொரு கட்டுரையில் எழுதுகிறார்.

    இந்தப் புத்தகத்தின் பெயரில் வரும் கட்டுரையில் 1892 ஏப்ரலில் சென்னை விக்டோரியா மகாலில் நடைபெற்ற ‘சென்னை மகா சபை கூட்டம்’ பற்றி பேசுகிறார். அயோத்திதாசப் பண்டிதர் பறையர் குலத்தின் பிரதிநிதியாக ஆலயங்களில் வழிபடும் உரிமை, தரிசாகக் கிடக்கும் நிலங்களை தனது குலத்தைச் சார்ந்த கிராமவாசிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது, தனது இனக் குழந்தைகளுக்கும் நான்காவது வரை படிப்பதற்கு இலவச பாடசாலைகள் அமைப்பது போன்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைக்கிறார். அதை எதிர்த்து சிவராம சாஸ்த்ரி திமிராகப் பேசுவதையும் அதற்கு பண்டிதர் கொடுக்கும் பதிலடியையும் கூறி எல்லாக்காலத்திலும் மனு இருக்கிறான். பெயர்தான் வேறு என்கிறார்.

    இதற்கு அடுத்த கட்டுரை ‘கதவை சாத்தியது யார்?’. படிக்கத்தெரியாத ஒரு பையனால் ‘இழு’ என்று எழுதப்பட்டிருக்கிற கதவை திறக்க முடியவில்லை என்ற செய்தி சொல்லும் குறும்படத்தைப் பற்றியது. படிப்பு எல்லாக் கதவுகளையும் திறக்கும் என்பது சரி, ஆனால் கதவை சாத்தியது யார் என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார். கல்வி இல்லாதவனுக்கு கதவுகள் திறக்காது என்பதை ஒத்துக்கொள்ளும் வேளையில் இவர்களை உள்ளே விடாமல் கதவைச் சாத்திய களவாணிகளை சும்மா விடப்போவதில்லை என்கிறார்.

    தாத்தாவின் பணத்தைக் கொடுத்து மருத்துவ படிப்பு படிக்க விரும்பாத ஒரு மாணவன், கூட்டம் நெறியும் பஸ்ஸில் பிரயாணிக்க நேரும்போது இப்படி நசுங்கிக் கொண்டு பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறதே என்று ஒவ்வொருவரும் நடத்துனரை சபித்துக் கொண்டுவர, அவரை பார்த்து ‘பாவம்’ என்று பரிதாபப்படும் சிறுவன் என்று பலரையும் இவரது கட்டுரைகளில் சந்திக்க முடிகிறது.

    சீருடையும் மதிய உணவும் கொண்டுவந்த பெருந்தலைவர் காமராசரைப் பற்றியும், முரட்டு மொழிப்பற்றாளர் என்று நெ.து. சுந்தரவடிவேலு பற்றியும், திப்பு சுல்தான் பற்றியும் நெகிழ்வுடன் எழுதுகிறார் ஆசிரியர்.

    சின்ன சின்ன கட்டுரைகளால் நம்மைப் பெரிதும் சிந்திக்க வைக்கும் இவரது திறமை வியக்க வைக்கிறது. எல்லோரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல்.

    Share
  • டாலர் நகரம் – புத்தக மதிப்பு​ரை

    மதிப்பு​ரை – ரஞ்சனி

    டாலர் நகரம்

    எழுதியவர்: ஜோதிஜி

    பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்

    விலை: ரூ. 190

    பக்கங்கள் : 247

    வெளியான ஆண்டு: 2013

    Doller nagaram2

    ஆசிரியர் குறிப்பு:

    கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண்குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள்’ சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு சுமார் 5,000 தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது.

    புத்தகம்: டாலர் நகரம்

    டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்?  இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தை தனது டாலர் நகரம் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில்.

    ஒரு சாதாரண தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையை சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார்.  புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது.

    தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே.

    நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார்.

    திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு  என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்பிக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதுக்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை?

    சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூக பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது.

    மையத் தொழிலான ஆடை தொழிலை சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார்.

    ‘உலகமய பொருளாதார பாதிப்பின் நேரடி உதாரணமாக திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மை கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான்’.

    அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூட கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர்’.

    உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர்வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றபோகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது.

    26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஆனந்த விகடன் இயர் புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டு புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல?

    Share