Blog

  • ஏகாந்தம்

    ஏகாந்தம்

    பாஸ்கர்

    அதே இடத்தில் இன்றும் அமர்ந்திருக்கிறேன்
    தபால்காரர் உதட்டை சுழித்து ஏதுமில்லை என்கிறார்
    புறா ஒன்று வெறுமெனே அமர்ந்து இருக்கிறது
    சப்தம் போடாமல் இலைகள் விழுகின்றன
    கோவில் மணி சப்தம் அடங்கியும் எதிரொலிக்கிறது
    விமானத்தின் சப்தமும் அதிர்வும் அடங்கவில்லை
    சட்டென உதித்த நிசப்தம் கலவரம் செய்கிறது
    நான் மட்டுமே உயிருடன் எனும் நினைவே நிற்கிறது
    சுயமெதிரில் அமர்ந்திருக்க விழிப்பே பிரமிப்பாகிறது
    உறைந்த மனம் கடக்காமல் காலமே தள்ளி நிற்கிறது
    கண்களும் மனதும் விரிந்தே கிடக்கிறது மூலையில்
    ஏகாந்தம் இனிதெங்கே என்றும் இந்த வாழ்வினில்
    விழிப்பொன்றே நிஜம்- நிஜமே என்றும் விழிப்பு .
    கனிந்து போய் கிடந்து பாரும் -காலமே இல்லையங்கு.

    Share
  • இயற்கைக்கு மாறாகச் செய்த இயற்பகையார்!

    இயற்கைக்கு மாறாகச் செய்த இயற்பகையார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீரின் ஆழமும் தெரியாது. நெருப்பின் சூடும் தெரியாது.புயலும் தெரியாது. பனியும் தெரியாது. மழையும் நனைக்காது. வெய்யிலும் தாக்காது. இனிப்பும் ஒன்றுதான். கசப்பும் ஒன்றுதான். இன்பமும் ஒன்றுதான். துன்பமும் ஒன்றுதான். இப்படி எண்ணு பவர்கள் உல கத்தில் இருக்கிறார்களாஇருந்தார்களா என்று எண்ணிடத் தோன்றுகிறதாஆம்.. இப்படியானவர்கள்தான் ஓடும் செம் பொனும் ஓக்க நோக் குபவர்கள்“. இவர்களைப் பெரியவர்கள், அரியவர்கள் என்றும் அழைக்கலாம் அல்லவாஇப்படிப் பெரியவர்க ளையும்அரியவர்களையும் யாவருக்கும் காட்ட வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டார். அவரின் ஆசையின் விளைவாக மலர்ந்த துதான் பெரியபுராணம்“. பெரியபுராணம் என்று இப்புராணத்துக்கும் பெயர் அமைந்தமைக்குக் காரணமே பெரியவர்களாக அடியார்களைச் சேக்கிழார் தன்னுடைய மனத்தில் இருத்திக் கொண்டமையே எனலாம்.  இதனை மனதில் வைத்துத்துத்தான் எங்கள் ஒளவைப்பாட்டியும் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே“ என்றாரோ என்று எண்ணிடத் தோன்று கிறதல்லவா?

    ஆண்டவனைப் பற்றிய அருட்செயல்களைக் கருவாக்கியே அநேகமான புராணங்களும் இதிகாசங்களும்கதைகளும்வந்திருக்கின்றன. அந்த ஆண்டவனையே அல்லும் பகலும் நினைந்துருகும் அடியாரள் பற்றிய கதையாக நாம் பார்ப்பதுதான் பெரியபுராணம். இங்கே காட்டப்படும் அடியார்கள் அத்தனைபேருமே சமூகத்தின் பல்வேறு வகையினராகவே அமைந்திருக்கிறார்கள். இப்படி அமைந்தவர்கள் சிந்தனையும்செயற்பாடுகளும் வெவ்வேறாகவே அமைந்தும் காணப்படுவதுதான் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய கருத்தெனலாம். படித்தவர்கள் இருக்கிறார் கள்பாமரர்கள் இருக்கிறார்கள். வசதியானவர்கள் இருக்கிறார்கள். உயர்குலத்தவர்கள் இருக்கிறார்கள். ஒதுக்கப்பட்ட குலத்தவர் என்று சொல்லப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இப்படி அமைந்தவர்களை ஒன்று சேர்த்து அவர்கள் அனைவரையும் அடியா ர்கள் என்று முத்திரை குத்திக் காட்டிய உத்தி ஒரு புத்தம்புதிய உத்தி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வகையில் வருகின்ற அடியார்களின் செயல்கள் சிலவற்றைப் பார்க்கும் பொழுது – அத்தனையுமே இயற்கைக்கு எதிர் மாறான தாய்சாதாரண வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததாகவே தெரிகிறது. இயற்கைக்கு மாறான வகையில் நடந்த அடியார்களை ஏன் சேக்கிழார் காட்ட முயலுகிறார் என்பது பலருக்கும் மனத்தில் எழுகின்ற ஒரு பெருங் கேள்வியாகவே இருக் கிறது! இதற்கு விடை தேடுவதை விட்டுவிடு  – சேக்கிழாரின் மனத்தின் உண்மை நிலையினை உணருவதுதான் மிகவும் பொருத்தமாய் இருக்கும்.

    சோழ நாட்டின் முக்கிய பொறுப்பான அமைச்சராக விளங்கியவர் சேக்கிழார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர் சேக்கிழார். நுண்மாண் நுழைபுலம் வாய்ந்தவர் சேக்கிழார். இப்படி எல்லாம் வாய்க்கப் பெற்றவர் வாழ்க்கையிலே எவருமே நினைத் துப்பார்க்கவே முடியாத செயல்களை எப்படி காட்ட எண்ணினார் என்பதுதான் எமது சிந்தனைக்கு விடப்பட்ட பெருஞ்சவாலாகவே இருக்கிறதல்லவா!

    அருமையாய்ப் பெற்றெடுத்துச் சீராட்டி வளர்த்த ஆண் பிள்ளையினை, அம்மா பிடிக்க அப்பா அரிவாளால் வெட்டுகின்றார். அதனைக் கறியாகவும் சமைத்துக் கொடு க்கின்றார்கள். ஒருவர் தன்னுடைய கண்களையே பிடுங்குகின்றார். ஒரு கண்ணை மட்டு மல்ல இரண்டு கண்களையுமே பிடுங்குகின்றார். இன்னொருவர் தந்தையின் காலையே வெட்டுகிறார். தான் தாலி கட்டிய தனக்கு வாழ்க்கைத்துணையாகவே வாய்த்திருக்கும் மனைவியின் கையினையே வெட்டுகிறார். நாட்டின் பட்டத்து இராணியின் மூக்கினையே ஒருவர் வாளினால் வெடுகின்றார். இவை எல்லாம் நடக்குமா? என்று எமது மனம் கேள்வி கேட்கத் துடிக்கிறதல்லவா!

    இந்த நிலையில் ஒருவரைச் சேக்கிழார் கொண்டுவந்து காட்டுகிறார். சேக்கிழாரால் காட்டப்படுவபரின் இயற்பெயரினை அறிய முடியவில்லை. அவரின் செய்கையின் காரணத்தால் அவர்  “இயற்பகை” என்று பெயரில் பெரியபுராணத்தில் இடம் பெற்றிருக்கிறார். வசதியான  குடும்பத்தில் பிறக்கிறார். வசதியாகவே வாழ்கிறார். நல்ல மனைவி நல்ல குடும்பம். ஆண்டவனை நினைப்பதும் அவனது அடியார்களைப் பேணுவதுமே வாழ்வின் இலட்சியம் என்று மனத்தில் இருத்திக் கொண்டு வாழ்பவர். சிவனின் அடியார்களைச் சிவனெனவே சித்தத்தில் இருத்திக் கொண்டவர். நிறைத்துக் கொண்டவர். அடியார்களுக்காக எதையுமே செய்வதைப் பெருவிருப்பமாகக் கொண்ட வர்.அவரின் இலட்சியம் என்னவோ உயர்ந்ததாக இருந்த பொழுதும், அவர் செய்த செயல் ஏற்றுக் கொள்ளவே இயலாத ஒன்றாகவே இன்றளவும் யாவராலும் கருதப்படுகிறது. அப்படி யாவராலும் கருத முடியாமலும் விமர்சனத்துக்கு உள்ளாவதுமான செயல்தான் எதுவாக இருக்கலாம் என்று எண்ணிட வைக்கிறதல்லவா!

    சிவனடியார்களை உபசரிப்பது. சிவனடியார்கள் எதனைக் கேட்டாலும் அதனைக் கொடுப்பது. இதுதான் அவரின் ஆத்மார்த்தமான காரியமாக இருந்தது. பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்கள் பலரும் சிவனடியார்களை உபசரித்து அவர்களின் ஆசியினைப் பெறுவதை வழக்கமாக்கியே நிற்கிறார்கள் என்பது பொதுவான ஒரு நிலை எனலாம். இப்படியான சிவனடியார்கள் மத்தியில் இயற்பகையாரின் செயல் முற்றிலும் மாறுபட்டதாகவும் , வேறு பட்டதாகவும், எவராலுமே ஏற்றுக் கொள்ள இயலாததுமாகவே அமைவதுதான் இங்கு மிகவும் முக்கியமாகும். சிவனடியார்கள் சாதாரண நிலையிலே இருப்பவர்கள் என்று மட்டும் கருதிவிடல் பொருத்தமன்று. பெரியபுராணத்தில் வருகின்ற சிவனடியார்கள் சாதாரணமான மனித தோற்றத்தில் இருந்தாலும், சில இடங்களில் அந்தச் சாதாரண மனித உருவினை எம்பெருமானான சிவனே தாங்கி, தன்னுடைய அடியவனின் பக்தி வைராக்கியத்தை உலகினருக்கும் காட்டும் பாங்கில் எழுந்தருளியிருந்திருக்கிறான் என்பதையும் பார்த்திட முடிகிறது.

    பெரிய புராணம் பாடப்பட்டதற்கு அடிப்படைக் காரணமே சிவனின் அடியவர்கள் என்பவர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து நற்தொண்டினை ஆற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்பதை சமூகத்தில் இருக்கின்றவர்கள் பலரும் உணரவேண்டும் என்பதற்காகவே என்றும் எடுத்துக் கொள்ள முடிகிறது அல்லவா! அப்படி வாழ்ந்த அடியவர்களில் சிலர் சமூக மே நினைத்துப் பார்க்க முடியாதவாறு செயற்கரிய காரியங் களைஆற்றி அந்தப் பரம்பொருளையே பிரமிக்கச் செய்திருக்கிறா ர்கள் என்னும் புதிய கருத்தைச் சமூகத்துக்குள் விதைக்கும் நோக்கும் இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! அந்த வகையில் பிரமிக்க வைக்கும் ஒரு செயலை ஆற்றி இன்று வரையும் விமர்சனத்துக்கு உரிய ஒருவராக விளங்கு கின்றார் “இயற்பகையார்.”

    சோதிப்பதும் பின்னர் பக்தனின் சாதனையை மற்றவர்க்கும் வெளிப்படுத்திக் காட்டுவதையும் ஒரு விளையாட்டாக எம் பெருமான் கொண்டிருக்கிறார். அதனைத் திருவிளையாடல் என்று  கூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? அத்தகைய திருவிளை யாடலின் பொழுது எம்பெருமானின் வேடமும், அவர் தனது பக்தனைச் சோதிக்கும் பாங்கும் மிகவும் வினோதமாகவும், சில வேளை வெறுக்கத்தக்கதாகவும் அமைவதைப் புராணங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இப்படியான விடயங்களைப் பார்க்கின்ற பொழுது பரம்பொருளானவர் இப்படிச் செய்யலாமா? என்னும் ஐயமும் எமக்குள் கட்டாயம் எழுந்தே தீரும். பரீட்சை வைப்பவர்க்குத்தான் தெரியும் யாருக்கு எந்தவித பரீட்சை பொருத்தமானது என்பது.அடியவர்களுக்கு எப்படியான சோதனை களைக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தவர்தான் பரம் பொருள். “நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல  கொல்லவல்ல” இதனைக் கருத்தில் கொண்டால் அத்தனையும் எங்களுக்கு வெளிச்சமாய் தெரியும்.

    இயற்பகையாரினை அறிமுகம் செய்யும் பொழுதே சேக்கிழார் எப்படிக் காட்டுகிறார் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

      அக்குலப்பதி குடிமுதல் வணிகர்; அளவில் செல்வத்து
               வளமையின் அமைத்தார்
     செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத்
               திரத்தின் மிக்கவர் மறைச்சிலம்படியார்,
     மிக்க சீரடுயார்கள் யார் எனினும் வேண்டும்
              யாவையும் இல்லை என்னாதே
     இக் கடற்படி நிகழுமுன் கொடுக்கும்
             இயல்பின் நின்றவர்; உலகியற் பகையர்

    என்று காட்டிய பின்னரும்  , இயற்பகையார்பற்றி இன்னும் காட்டுகிறார் சேக்கிழார் என்பதுதான் முக்கியமாகும்.

    ” நீறுசேர்திரு மேனியர் மனத்து
       நினைத்து யாவையும் வினைப் படமுடித்து
     மாறிலாத தன்னெறியினில் விளங்கும்
       மனையறம் புரி மகிழ்ச்சியின் வந்த
     பேறெலாம் அவர் ஏவின செய்யும்
        பெருமையே எனப் பேணி வாழ்நாளில் “

    இயற்பகையார் எப்படியானவர் அவரின் மனோபாவமும் செயற்பாடுகளும் எப்படியாய் இருக்கும் என்பதையெல்லாம் சேக்கிழார் தெளிவாகக் காட்டியே அவர் செய்யப்போகும் செயற் கரிய செயலினுக்குகான அடித்தளத்தை அமைக்கிறார் என்பது புலனாகிறதல்லவா!

    அடிவர்களை உபசரித்து அதன் பின்னர்தான் அவரும் மனைவியும் உணவருந்துவதை வழக்கமாக்கியே இருந்தனர். அன்றைய தினம் அடியவர்கள் எவருமே வராதிருக்க அவர்கள் மனங்கலங்கி இருந்த வேளை வாசலில் ஒரு சிவடியாரின் குரல் கேட்கிறது. பேரானந்தத் துடன் ஓடிச் சென்று அவர்கள் வரவேற்கிறார்கள். அப்படி வந்தவர் எப்படியான மனநிலையில்  இருந்தார் அவர் என்ன புகன்றார் என்ப தையும் சேக்கிழார் காட்டுகிறார்.

     ” கொன்றை வார் சடையா ரடியார்கள்
        குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
      ஒன்றும் நீர் எதிர்மறாது உவந்தளிக்கும்
         உண்மை கேட்டு நும்பால் ஒன்று வேண்டி  
      இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு
         இசையலாம் எனின் இயம்பலாம் ”    

    சிவனடியாரின் பேச்சினை இங்கு உற்று நோக்குதல் அவசியமாகும். சிவனின் அடியார்கள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பாய் என்று கேள்விப்பட்டே உன்னிடம் ஒன்றை வேண்டி வந்திருக்கிறேன், விருப்பம் இருந்தால் அதனைத் தரலாம்” என்று ஒரு பொடிவை த்துப் பேசுவதாகச் சேக்கிழார் காட்டுகிறார். சிவனடியாரின் விருப்பத்தை நிறைவேற்று வதையே வாழ்வின் இலட்சியமாய் கருதி வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு, சிவனடியாரின் சூட்சுமமான எண்ணமோ அவர் கையாண்ட சொல்லின் தன்மையோ விளங்கவில்லை. அவர் விளங்கும் மனோ நிலையிலையிலுமில்லை. இதற்குக் காரணம் தான் கருதிய காரியம் ஒன்றுதான் அவரின் கருத்தில் நிறைந்து இருந்தமை எனலாம்.

    எதைக் கேட்கப் போகிறார்? எப்படிக் கேட்கப் போகிறார்? கேட்டாலும் நம்மால் கொடுத்துவிட முடியுமா? கொடுக்க முடியா விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் சிந்திக்கும் மனநிலை யில் இயற்பகையார் இருக்கவே இல்லை. சிவனடியார் கேட்டுவிட்டார். அவர் விரும்பியதைக் கொடுப்பதே அறமாகும் என்பதே அவர் அகத்துள் அமர்ந்திருந்தது என்பதுதான் கருத்திருத்த வேண்டியதாகும்.

    யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியார் உடைமை; ஐயமில்லை; நீர் அருள் செய்யும்”

    இப்படி உரைக்கிறார் இயற்பகையார்.தன்னிடம் இருக்கும் அத்தனையும் தன்னுடையதல்ல. எம்பிரான் அடியாருக்கே உரியதாகும். ஆதலாம் தாராளமாகக் கேட்கலாம் என்பதுதான் இயற்பகையாரின் விடையாக மலர்கிறது.

    சம்மதம் கிடைத்தவுடன் வந்த சிவனடியார்,

      மன்னு காதல் உன்மனைவியை வேண்டி வந்தென இங்கு “

    என்று அங்கணர் எதிரே சொன்ன போதிலும்……

    எப்படியான கேள்வி! பூகம்பமே வெடிக்கும் அல்லவா! கேட்ட சிவனடியாரை நாமென்றால் என்ன செய்திருப்போம்? அந்த இடத்தி லேயே வெட்டிச் சாய்த்திருக்க மாட்டோமா? ஆனால் அப்படி எதுவுமே இங்கே நடக்கவே இல்லை. இயற்பகையார் மனமகிழ்ந்தார் என்றுதான் சேக்கிழார் செப்புகிறார். தன்னிடம் இருக்கும் பொருளையே சிவனடியார் கேட்டுவிட்டார் என்பதில் பேரானந்தம் உற்றாராம் இயற்பகையார். மனைவியை அவர் வீட்டிலிருக்கும் ஒரு பொருளாகவே கருதிவிட்டார்.தாலிகட்டிய மனைவி என்று எண்ணாமல் மனைவியும் வீட்டிருக்கும், கட்டிலோ, கதிரையோ, பாத்திரமோ என்றுதான் அவர் கருதிவிட்டார். அதனால் சிவனடியார் மனைவியைத் தருவாயா என்று கேட்டவுடன் எந்தவிதப் பதட்டமும் அற்றவராய் தருகிறேன் அழைத்துச் செல்லுங்கள் என்றும் சொல்லும் மனோ நிலை அவருக்கு ஏற்பட்டது.

    இறையடியார்கள் “வீடும் வேண்டா விறலுடைடையவர்”. அவர்களுக்கும் ஓடும் சர்தான். பொன்னும் சரிதான். அவர்கள் மனம் முழுவதுமே இறவன் நினைப்பு மட்டுமே நிறைந்திருக்கும். அவர்களுக்கு உயர்திணை எது? அஃறிணை எது என்னும் பேதமே தெரிய வராது. சிவனைன் அடியார்களைச் சிவனெனவே நினைப்பார்கள். அதனால் வந்திருப்பவர்கள் மனிதராக இருந்தாலும், கபடதாரிகளாக இருந்தாலும், கள்வராக இருந்தாலும், கொளைசெய்யும் நோக்கோடு கொடு வாளுடன் வந்தாலும் – அத்தனை பேருமே சிவனடியாராகவே அவர்கள் எடுத்துக் கொள்ளுவார்கள். இதனை சொல்லி விளங்கிப் படுத்தவே முடியாது. இது சிவனடியார்கள் சிலரின் இயல்பாகும். இதற்குக் காரண காரியமோ விளக்கமோ விமர்சனமோ காண்பதென்பது பொருந்தா நிலை என்றே எண்ண வேண்டி இருக்க்கிரது அப்படி ஒரு நிலையித்தான் இயற்பகையாரின் செய்கையினையும் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும்.

    காதல் மனைவியை அடியவருக்கு வழங்குகிறார். உற்றவரும் ஊராரும் இயற்பகையாரை ஏசுகிறார்கள். தூர்த்தனான சிவனடியார் இயற்பகையின் மனைவியை உடன் அழைத்துச் செல்லுவதை எதிர்த்துப் போரிடுகிறார்கள். எதிர்த்தவர்களையெல்லாம் இயற்பகை யாரும் துணிவுடன் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்துகிறார். சிவனடியார் எந்தவித இடையூறுமின்றி ஊரைத் தாண்டிச் செல்ல உதவி நிற்கிறார்.

    இயற்கைக்குப் பகையான காரியத்தை இவர் ஆற்றியிருக்கிறார். சிவனடியார் என்றால் இப்படியும் செய்யத்தான் வேண்டுமோ? என்றெல்லாம் எண்ணியெண்ணி மனந்தடுமாறுவது பொருத்தமற்றது. சிவனடியார்களில் இயற்பகையாரின் செய்கை வேறுபட்டதாக இருக்கிறது என்பதும் அதற்குக் காரணம் அவரின் இயல்புதான் என்றும் எடுத்துக் கொண்டால் எந்தச் சிக்கலும் இருக்காது. அவரின் இந்தச் செயலினால் அடியார்களுள் அவர் ஒப்பாரும் மிகாருமாய் இருக்கிறார் என்று சிந்திந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா!

    அவரின் இந்த ஒப்பற்ற செயலினால்தான் இறைவனே அவரை –

       ” இயற்பகை முனிவா ஓலம் ! ஈண்ட நீவருவாய் ஓலம் !
         அயர்ப்பிலாதானே ஓலம் ! அன்பனே ஓலம் ! ஓலம் !
         செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் ! “

    “செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம்!” என்று சொல்லு வதாகச் சேக்கிழார் காட்டி இறைவனே அவரை எத்தகைய பெருமைக்கு ஆட்படுத்தி இருக்கிறார் என்று சுட்டி நிற்பதால் இயற்பகையார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகவே விளங்குகிறார் என்பதுதான் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

     ” சொல்லுவ தறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
      வல்லைவந்தருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
      எல்லையில் இன்பவெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி
      தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன “

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    சி. ஜெயபாரதன், கனடா

    எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை [1830 -1886]

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர்.

    எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன.

    எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள்.


    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -1: ஏகாந்த நிலை 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ஒளிந்துளேன் நான் என் மலருக் குள்ளே
    உன் மார்பு மேல் தொங்கும் மாலையில் !
    சிந்திக்காது அணிந்துளாய் என்னை நீயும்
    தேவதைகள் அறியும் மற்றவை யாவும்.

    ஒளிந்துளேன் நான் என் மலருக் குள்ளே
    உலர்ந்து தேயுது அம்மலர் உன் கும்பாவில்
    உறுதியாய் நேச உணர்வு என்மீ துனக்கு
    ஏறக் குறைய ஏகாந்த நிலை எனக்கு !

    ****************

    Loneliness

    I hide myself within my flower
    That wearing on your breast,
    You, unsuspecting, wear me too—
    And angels know the rest.

    I hide myself within my flower,
    That, fading from your vase,
    You, unsuspecting, feel for me
    Almost a loneliness

    **********

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -2: யாருமில்லை நான் 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    யாரு மில்லை நான் ! யார்  நீ ?
    யாருமில் லையா நீயும் ? சரிதான்
    நாம் இருவர் எனச் சொல்லாதே !
    நாடு கடத்துவர் நம்மை, தெரிந்து கொள்.

    சிலராய் இருப்பது எப்படி அச்சம் அளிக்குது !
    தவளை போல்  வாழ்வு  பொதுவானது ?
    வாழ்நாள் முழுதும் உன்பேர் சொல்வது
    புழுதி பூசிப் புகழ்வது  போன்றது !

    ************************

    “I’m nobody! Who are you?
    Are you nobody, too?
    Then there’s a pair of us—don’t tell!
    They’d banish us, you know.

    How dreary to be somebody!
    How public, like a frog
    To tell your name the livelong day
    To an admiring bog!”

    ***************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -3: வெற்றி 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    வெற்றி தேன்போல் இனிக்கும்
    தோல்வியே என்றும் அடைவோர்க்கு !
    அருஞ்சுவை தனை உணர்ந்து கொள்ள
    பெரும் புண் பட் டிருக்க வேண்டும் !

    வெற்றிக் கொடி ஏந்தும் காக்கி உடை
    வீரன் எவனும் இன்றைய தினம்
    விளக்கிச் சொல்ல இயலாது
    தெளிவாய் வெற்றி யாதென்று !

    தோற்கும் நிலையில் மடிகிறவன்
    கேளாத காதில் தெளிவாய் விழாது
    வெற்றிக்கு ஆரம்ப மெய் வருத்தம்,
    வேதனை முறிவு, மனக்கொ திப்பு.

    ******************

    Success is counted sweetest
    By those who ne’er succeed.
    To comprehend a nectar
    Requires sorest need.

    Not one of all the purple Host
    Who took the Flag today
    Can tell the definition
    So clear of victory

    As he defeated – dying –
    On whose forbidden ear
    The distant strains of triumph
    Burst agonized and clear!

    ******************

    Share
  • வரி வாலாட்டிக் குருவியின் குரல்

    வரி வாலாட்டிக் குருவியின் குரல்

    வரி வாலாட்டிக் குருவி (White-browed wagtail) அல்லது வெண்புருவ வாலாட்டி என்பது இந்தியாவில் காணப்படும் ஒரே ஓர் இடம்பெயரா வாலாட்டிக் குருவி. இதன் உடலின் மேலே கருப்பு மற்றும் கீழே வெள்ளையுடன், வெள்ளைப் புருவமும் கொண்டது. இது தனது நீண்ட வாலிறகைத் தொடர்ந்து ஆட்டும் பண்பினைக் கொண்டது. நீண்ட தூரங்களுக்கு மிக வேகமாகப் பறக்கும். மணிக்கு 40 கி. மீ. வேகத்தில் பயணிக்கும்.

    இந்தியாவில் பண்டைய காலங்களில், இந்தச் சிற்றினம் கூண்டுப் பறவையாக வளர்க்கப்பட்டது. இதன் குரலுக்காகப் பாராட்டப்பட்டது. இதன் மார்பில் விஷ்ணுவின் சாலிகிராம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இதைக் காண்பதை நல்ல சகுனமாகக் கருதினர். இந்தப் பறவை எங்கு அமர்கிறது, என்ன செய்கிறது என்பதன் மூலம் எதிர்காலம் பற்றிய பல்வேறு நம்பிக்கைகள் சரத்சந்திர மித்ராவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (விக்கிப்பீடியா)

    பலவிதமான ஒலிக் குறிப்புகளுடன் கூடிய இதன் குரலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கிறிஸ்துமஸ் கோலங்கள்

    கிறிஸ்துமஸ் கோலங்கள்

    தமிழக வீதிகளில் மார்கழிக் கோலங்களைப் போலவே புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும் கோலம் வரைவது உண்டு. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரையப்பெற்ற கோலங்கள் சிலவற்றை இங்கே கண்டுகளியுங்கள். உங்கள் பகுதியில் இத்தகைய கோலங்களைக் கண்ணுற்றால், எமக்குப் படம் எடுத்து அனுப்புங்கள் (annakannan@yahoo.co.in). அடுத்த பதிப்பில் வெளியிடுவோம்.

    தொகுப்பு – சுதா மாதவன்

    யாவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எளிய மக்களின் பண்பாட்டை வெளிச்சப்படுத்திய மானுடவியல் ஆய்வாளர் 

    எளிய மக்களின் பண்பாட்டை வெளிச்சப்படுத்திய மானுடவியல் ஆய்வாளர் 

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழகத்தின் பண்பாடு மிகப் பழமையானது, செழுமையானது என்பதற்குச் சங்க நூல்கள் சுட்டிக்காட்டும் பண்டைத் தமிழரின் வாழ்வியல் சான்றாய்த் திகழ்கின்றது. காலப்போக்கில் தமிழரல்லாதோரின் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டதன் மூலமாகவும் வடநாட்டுச் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொண்டதன் காரணமாகவும் தமிழ்மக்களின் வாழ்விலும் பண்பாட்டுக் கூறுகளிலும் மாற்றங்கள் பல ஏற்பட்டன.

    இவ்வாறு நம் மக்களிடையே ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்கள் என்னென்ன என்பதை மானுடவியல் நோக்கில் ஆய்வுசெய்து ஆவணப்படுத்தியவர்கள் நம் தமிழகத்தில் வெகுசிலரே ஆவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மயிலை சீனி வேங்கடசாமி, நா. வானமாமலை போன்ற அறிஞர்கள். அவ்வரிசையில், நம்மிடையே வாழ்ந்து அண்மையில் மறைந்த, தொ.ப. என்று சுருக்கமாய் அழைக்கப்படும் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    ”வரலாறு என்பதே சாமானிய எளிய மக்களின் வரலாறுதான்” என்பார் நாட்டார் வழக்காற்றியலுக்கு வெளிச்சம் பாய்ச்சிய பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள். அந்தச் சாமானிய மக்களின் வரலாற்றை – வாழ்வியலை அதற்குள் புதைந்துகிடக்கும் பண்பாட்டு அசைவுகளைத் தேடித் தொகுப்பதையும் அவை குறித்து உரையாடுவதையுமே தம் வாழ்நாள் நோக்கங்களாகக் கொண்டிருந்தவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். அந்த ஆய்வியல் அறிஞரின் வாழ்வையும் பணிகளையும் சிறிது சிந்திப்போம்.

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950இல் பிறந்த தொ.பரமசிவன் அவர்கள்,  மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பொருளாதாரமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழும் பயின்றார். அதன்பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராய்ப் பணியாற்றிய அவர், 1976இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வு மாணவராய்ச் சேர்ந்தார்.

    முனைவர்ப் பட்டம் பெறுவதற்கு புதுமைப்பித்தன் குறித்து ஆய்வுசெய்ய அவர் எண்ணியிருந்த நிலையில், அவருடைய ஆய்வுநெறியாளர் மு. சண்முகம் பிள்ளையவர்கள், கோயில் குறித்துஆய்வு மேற்கொள்ளும்படிக் கூறவே, மதுரையிலுள்ள அழகர் கோயிலைத் தமது ஆய்வுப் பொருளாய்த் தெரிவுசெய்தார் தொ.ப.

    அழகர் கோயில் எனும் அவருடைய ஆய்வேடு, கோயில் குறித்து அதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த ஆய்வுகளைப் போல் கோயிலின் வரலாற்றையும் அதன்மேல் பாடப்பட்டுள்ள தலபுராணங்களையும், அக்கோயிலைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ள பனுவல்களையும் பட்டியலிடும் பணியைச் செய்யவில்லை. மாறாக, அக்கோயிலைச் சுற்றி வாழ்ந்த எளிய மக்களைப் பற்றியும் அம்மக்களுக்கும், அழகர் கோயிலுக்கும் இருந்த பண்பாட்டுப் பிணைப்பையும் வெளிப்படுத்தியது. ஊகங்களின் அடிப்படையிலோ வேறு நூல்களின் கருத்துக்களை வழிமொழிந்தோ எழுதப்பட்ட ஆய்வேடு அன்று அது! அழகர்கோயில் பகுதியில் தங்கியிருந்து கள ஆய்வுசெய்து திரட்டிய உண்மைகளையே அதில் வகுத்தும் தொகுத்தும் தந்திருக்கின்றார் தொ.ப.

    அவ்வகையில் ஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் முனைவர்ப் பட்ட ஆய்வேட்டை எப்படி உழைத்து உருவாக்கவேண்டும்  என்பதற்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாய் விளங்குகின்றது. இந்த ஆய்வேட்டை ஏற்று தொ.ப.வுக்கு முனைவர்ப்பட்டம் வழங்கிய மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமே இதனை நூலாகவும் வெளியிட்டிருப்பது இந்நூலின் தரத்திற்கும் தனித்தன்மைக்கும் சான்று பகர்கின்றது.

    பேராசிரியர் தொ.ப. அவர்கள் இளையான்குடி ஜாகிர் ஹுசேன் கல்லூரி, மதுரைத் தியாகராசர் கல்லூரி, அதைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர்.

    தொ.ப.வின் குறிப்பிடத்தக்க படைப்புக்களாக விளங்குபவை தெய்வம் என்பதோர், அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், சமயம் – ஓர் உரையாடல், பாளையங்கோட்டை – ஒரு மூதூரின் வரலாறு, சமயங்களின் அரசியல், உரைகல், மரபும் புதுமையும், இதுவே சனநாயகம், தொ.பரமசிவன் நேர்காணல்கள் முதலியவை.

    இவற்றில் ‘தெய்வம் என்பதோர்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலில் பழந்தமிழரின் தாய்தெய்வ வழிபாடுகள் குறித்தும் அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் விளக்குகின்றார் தொ.ப.

    குறிஞ்சி நிலத்தில் முருகு எனும் இயற்கை அழகு முருகனாக வளர்ச்சிபெற்றபோது அங்குள்ள நிலப்பகுதிகளில் செழுமையின் அடையாளமாய் எங்கும் வளர்ந்திருந்த வள்ளிக்கொடி வள்ளி எனும் பெயரில் அவனுக்கு மனைவியாக்கப்பட்டாள் என்கின்றார்.

    நெல்லை மாவட்டம் சிங்கிகுளம் மலைப்பகுதியிலுள்ள பகவதியம்மன் கோயில் அடிப்படையில் அம்பிகா யட்சி எனும் சமணப் பெண் தெய்வத்தின் கோயிலாகும் என்கின்ற உண்மையை ‘ஒரு சமணக் கோயில்’ எனும் தலைப்பில் விளக்குகின்றார்.

    சடங்கியலில் தலைமை இடம்பெற்றிருந்த முடிதிருத்துவோர், வண்ணார், வள்ளுவர் முதலிய சாதியார் தம் தலைமையைப் பார்ப்பனரிடம் பறிகொடுத்துக் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட சாதியார் ஆயினர் என்கின்ற வரலாற்றை இந்நூல் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    சிறு தெய்வங்கள் என வகைப்படுத்தப்பட்டுவிட்ட நாட்டார் தெய்வங்களுக்கும் வைதிக நெறியில் வளர்ச்சிபெற்றிருக்கும் பெருந்தெய்வங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை விளக்கவரும் தொ.ப., நாட்டார் தெய்வங்கள் சுதந்தரமானவை; ஒரு குறிப்பிட்ட சாதியாருக்கு மட்டுமே சொந்தமானவை என்ற கட்டுக்குள் அடங்காதவை. நிறுவனப்படுத்தப்பட்ட அதிகார மையம் என்று அவற்றுக்கு எதுவும் இல்லை. ஆனால், பெருந்தெய்வங்களின் நிலைவேறு. அவை நிறுவனப்படுத்தப்பட்ட தலைமைப் பீடம், வழிபடுநூல், புனித வழிபாட்டுத் தலங்கள், பொதுவான பூசைமுறை என்று பல அடிப்படைத் தேவைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. அத்தோடு நாட்டார் தெய்வங்களெல்லாம் காவல் தெய்வங்களாக நிற்பவையே அன்றி வரமளிக்கும் தெய்வங்களாக முன்னிற்பவை அல்ல என்று பல செய்திகளைத் தம் கள அனுபவங்களின் அடிப்படையில் நமக்கு அறியத் தருகின்றார்.

    பேராசிரியர் தொ. பரமசிவனின் ‘அறியப்படாத தமிழகம்’ என்ற நூல் அவருக்கு நல்லதோர் அறிமுகத்தையும் பரவலான வாசகர் வட்டத்தையும் தமிழ்கூறுநல்லுலகில் உருவாக்கித் தந்தது எனில் மிகையில்லை.

    இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரும், வரலாற்றுப் பேராசிரியருமான முனைவர் ஆ. இரா வேங்கடாசலபதி அவர்கள், தொடர்ந்து வாசிக்கவும் சிந்திக்கவும் விவாதிக்கவும் வலிமை இழந்துபோன நம் இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. முற்போக்காளர்கள் சிலர் கருதுவதுபோல் இது பழமை பாராட்டுதல் அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான் என்கிறார் நச்சென்று!

    தொ.ப.வின் எழுத்துப்பணி மட்டுமல்லாது அவருடைய உரையாட்டுத் திறமும் சிறப்புவாய்ந்தது என்று குறிப்பிடும் வேங்கடாசலபதி, தொ.ப.விடமிருந்து தெறிக்கும் கருத்துக்களும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்துபெற்ற பட்டறிவும் உடன் உரையாடுபவரை மலைப்பில் ஆழ்த்தக்கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளியைப் பாய்ச்சுவதும், பழகிப்பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்லிலிருந்தோ தொடரிலிருந்தோ சமூகப் புரிதலைச் சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.ப.வின் கருத்துப் புலப்பாட்டு முறையாகும். விண்ணிலும் மண்ணிலுமாக மாறிமாறி மாயஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர்முறையோடு ஒப்பிடத் தகுந்தது தொ.ப.வின் கருத்துப் புலப்பாடு எனக்கூறி வியக்கின்றார்.

    ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு ஊடும் பாவுமாகப் பிணைந்திருக்கின்றன என்பதை ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது என்று வேங்கடாசலபதி உரைப்பது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்பதனை அறியப்படாத தமிழகம் நூலை வாசிப்போர் ஐயமின்றி அறிந்துகொள்ளலாம்.

    சான்றுகளாகச் சிலவற்றைச் சுட்டுகின்றேன்.

    நீரானது வானிலிருந்து சுரந்து உலக மக்களைப் புரந்துவருவதால் அதனை அமிழ்தம் என்று போற்றும் நம் வள்ளுவர், மழைதருகின்ற மேகத்தை எழிலி என்ற அழகிய சொல்லால் குறிப்பிடுவார்.

    அதுபோலவே நீர்நிலைகளுக்கும் தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பலவாகும் எனக் குறிப்பிடும் தொ.ப., சுனை, கயம், ஊற்று, பொய்கை முதலியவை தாமே நீர்கசிந்த பகுதிகளாகும்; குட்டை என்பது மழைநீரின் சிறிய தேக்கமாகும்; குளித்து உடலைக் குளிர்விக்கப் பயன்படும் நீர்நிலை குளம்; ஊர்மக்கள் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ஊருணி; ஏர்த்தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ஏரி; மழைநீரை மட்டுமே ஏந்திநிற்கும் நீர்நிலை ஏந்தல்; கண்ணாறுகளை உடைய நீர்நிலை கண்மாய் என்று விவரிக்கும்போது நம் தமிழ்மக்களின் நுண்மாண் நுழைபுலத்தையும் அதனை எடுத்துவிளக்கும் தொ.ப.வின் ஆராய்ச்சித் திறத்தையும் எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை.

    தமிழர்தம் உணவுமுறையை விளக்குமிடத்து, பண்டைத் தமிழர் உணவு வகைகளை நாம் கூர்ந்து கவனித்தால், அவர்கள் உணவில் சுட்டும் அவித்தும் வேகவைத்தும் வறுத்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே மிகுதி.

    எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, பகோடா, வடை, காரச்சேவு போன்றவையெல்லாம் கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பழக்கங்களே. குறிப்பாக விஜயநகர ஆட்சிக்காலத்தில்தான் பொரிப்பதற்கு நாம் பெரிதும் பயன்படுத்தும் கடலை எண்ணெய் தமிழகத்தில் அறிமுகமானது என்கின்றார் தொ.ப.

    ஈதொப்பவே, சமையலில் காரத்துக்கு அன்று மிளகைத்தான் கறி என்ற பெயரில் பழந்தமிழர் பயன்படுத்தி வந்தனர். யவனர் என்று அழைக்கப்பட்ட கிரேக்கரும் உரோமரும் தங்கள் நாட்டிலிருந்து பொன்னையும் மதுவையும் தம்முடைய மரக்கலங்களில் கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கிவிட்டுச் சேரநாட்டு முசிறித் துறைமுகத்திலிருந்து ’கறி’யை அதாவது மிளகை தம் நாட்டுக்குக் கொண்டுசென்ற செய்தியை அகநானூறு,

    ”யவனர் தந்த வினைமாண் நன்கலம்
    பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
    வளங்கெழு முசிறி”
    (அகம்: 149)

    என்று குறிப்பிடுவது தமிழகத்து மிளகின் சிறப்பைப் புலப்படுத்துகின்றது. இறைச்சி உணவு சமைப்பதற்கு இந்தக் கறியைத் துணைப்பொருளாகத் தமிழர்கள் அதிகம் பயன்படுத்தியமையால் இறைச்சியே பிற்காலத்தில் கறி என்று பெயர்பெற்றது என்கின்ற தொ.ப.வின் கூற்று நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

    கி.பி. 15ஆம் நூற்றாண்டளவில்தான் சிலியிலிருந்து (Chile) மிளகாய் தமிழ்நாட்டில் நுழைந்தது என்பதையும் இந்நூல் வாயிலாய் அறிகின்றோம்.

    சோறிடுதலை ஓர் அறமாகவே நெடுங்காலம் செய்துவந்தவர்கள் தமிழர்கள். ”உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” எனும் கோட்பாட்டினர். சோற்றையும் நீரையும் விற்பதில்லை என்பது தமிழர் பண்பாடு. அந்தப் பண்பாட்டைச் சிதைத்த பெருமை ஆங்கிலேயரைச் சாரும். அவர்கள் ஆட்சியில்தான் ஹோட்டல் எனப்படும் உணவு விற்கும் விடுதிகள் தமிழகத்தில் அறிமுகமாயின என்று வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

    இவ்வாறு எத்தனையோ அரிய செய்திகளை எளிய சொற்களில் தாங்கிநிற்கின்றது அறியப்படாத தமிழகம் எனும் தொ.ப.வின் நூல்.

    தமிழ் வைணவத்தைத் தூக்கிப் பிடிக்கின்றார் தொ.ப. என்ற விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டதுண்டு. ஆனால், அழகர் கோயில் என்ற தம்முடைய ஆய்வேட்டில் புகழ்பெற்ற திருமால் கோயிலாக இன்று திகழ்கின்ற அக்கோயில் முன்பு பௌத்தக் கோயிலாக இருந்தது என்று அவர் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்து, சமயப்பற்றைக் கடந்த அவரின் ஆய்வு நேர்மையையும், காய்தல் உவத்தலற்ற நடுவுநிலையான அணுகுமுறையையும் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

    தமிழர் வரலாறு, பண்பாடு, சமயம், அரசியல் போன்ற பல்துறைசார்ந்த செய்திகளையும் கள ஆய்வுகளின் அடிப்படையிலும் தாம் கற்றறிந்தவற்றின் அடிப்படையிலும் நேரிய முறையில் பதிவுசெய்துவிட்டு மறைந்திருக்கின்றார் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள்.

    அவர் தமிழர்க்கு அளித்துச் சென்றிருக்கும் இந்த அறிவுக் கருவூலம் மகத்தானது. அரிதின் முயன்று அவர் உருவாக்கியிருக்கும் அவருடைய படைப்புக்கள், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடங்களாக வைக்கப்பட்டு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை பரவலாக மக்கள் திரளைச் சென்றடையும். அவரை அடியொற்றிப் பல ஆய்வாளர்கள் உருவாவதற்கும் அவை வழிவகுக்கும். அதுவே அவர் தமிழ்மக்களுக்குச் செய்திருக்கும் மகத்தான தொண்டுக்கு நாம் செய்கின்ற சிறிய கைம்மாறாகவும் இருக்கும்.

    Share
  • விஷத்தை முறிக்கும் விஷ மூங்கில்

    விஷத்தை முறிக்கும் விஷ மூங்கில்

    இதன் பெயர் விஷ மூங்கில் (Spider Lily). பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள். இதைப் பற்றிய ஆங்கில விளக்கத்தில், நாட்டு மருந்து என்பதை folk remedy எனக் குறித்திருப்பது சரியா? பார்த்துச் சொல்லுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆழியாறு சிறுவர் ரயில்

    ஆழியாறு சிறுவர் ரயில்

    கோவை மாவட்டம், ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர் ரயில் ஒன்று ஓடுகிறது. பெரியவர்களும் உடன் செல்லலாம். மிகப் பழைய ரயில். உட்காரும் இருக்கை உள்பட, முழுவதும் இரும்பினால் ஆனது. சற்று தடதடவென்று செல்லும். தலா ரூ.30 கட்டணத்திற்கு எத்தனை ரவுண்டு அடிக்கிறார்கள் என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மக்கள் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்!

    மக்கள் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈழத்தில் பிறந்தார். இன்னல் பல கண்டார். எதற்குமே இளைக்காமல் ஏற்றம் பல பெற்றார். இரக்கமே அவருள் எங்கும் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம்கொண்டார். இதயக் கனியானார்.

    வாழவைத்த தெய்வமானார். கலங்கரை விளக்கமானார்.எங்க வீட்டுப்  பிள்ளை ஆகி என்றுமே மக்கள் திலகமாக எம் ஜி ஆர் விளங்குகிறார்.

    அவர்கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும், காட்டாறுகளும் நிரம்பியதாகும். அவர் தென்றலைத் தீண்டியதி ல்லை. தேன் தொட்டு நின்றதும் இல்லை.பஞ்சணையில் படுத்ததும் இல்லை. பசியாற உண்டதும் இல்லை.

    அரைவயிறு, கால் வயிறுதான், அவருக்கும் அவரது குடும்பத்துக்குமே கிடைத்தது.

    நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் நலிவடைந்து போனதால் நாட்டை விட்டு நாடுவரும் நிலையங்கு தோன்றியது. தந்தையை இளம் வயதில் பறி கொடுத்துவிட்டு தாயுடனும் சகோதரருடனும் ஈழத்தைவிட்டு இந்தியா வந்தனர் எம் ஜி ஆர் குடும்பத்தார்.

    பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருந்தமையால் படிப்பு என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகி இருந்தது. பாலகனான எம் ஜி ஆர் மூன்றாம் வகுப்புடன் பள்ளியை விட்டு நாடகத் துறைக்குள் புகுந்துவிடும் நிலை உருவானது. வருமானத்துக்கு நடிப்பே வழிகாட்டியது.

    எழுத்தாளர் அனுராத ரமணனின் தாத்தா குடிலன் ஆர். பாலசுப்பிரமணியன் எம் ஜி ஆரின் ஆசிரியராக இருந்தார். இவர் பிற்காலத்தில் குணசித்திர நடிகரானார்.

    நாடகத்தில் இருந்து படிப்படியாக திரைத்துறைக்குள் எம் ஜி ஆர் வந்து சேர்ந்தார். 1945 ல் ஜுபிடர் நிறுவனத்தார் எம்ஜிஆரை தமது படங்களான ராஜகுமாரி, அபிமன்யு, படங்கள் வாயிலாக கதாநாயகன் ஆக்கினார்கள்.

    1947 – 1948 காலப் பகுதியில் எம்ஜிஆருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ350 ஆகும்.

    இக்காலகட்டமானது எம்ஜிஆரின் முதல்காலகட்டம் எனக் கொள்ளலாம். சாதாரண எம்ஜிஆராக அவர் இருந்தாலும் அவருக்குள்ளேதான் முனேற வேண்டும் என்னும் என்னும் வேகமே காணப்பட்டது எனலாம். அவர் யாரையும் நோகடிக்கமாட்டார். முரண்டு பிடிக்கமாட்டார். மரியாதை கொடுப்பார். சற்றுக் கூச்சச் சுபாபம் உள்ளவராகவும் காணப்பட்டார். காந்தியச் சிந்தனை அவர்மனத்தில் அக்காலத்தில் பதிந்துகாணப்பட்டது. அவரிடம் கடவுள் நம்பிக்கையிருந்தது. உருத்திராட்சம் அணிந்திருந்தார். அவர் பிற்காலத்தில் திமுகவில் இணைந்திருந்தாலும் சில கொள்கைகளில் விடாப் பிடியாக இருந்தாலும்… கடவுள் நம்பிக்கையை பழித்ததோ, குறைகூறியதோ இல்லை என்றே சொல்லலாம்.

    “பக்தியுள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும்.சாமி கும்பிட வேண்டாம் என்று நான் சொல்லத் தயாரில்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர்கள். மோசடிகள் செய்ய முயலாதீர்கள்.என்பதே என் வேண்டு கோள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுதான் என் கொள்கை” என்று 15/ 12/ 1962 ல் மருதமலை முருகன் கோவிலில் எம்ஜிஆர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

    எம்ஜிஆர் அவர்களின் ஸ்டூடியோவில் 14 வருடங்கள் பணிபுரிந்தவர் திருமதி ஜோதி பிரபா. எம்ஜிஆரின் கடவுள் நினைப்புப் பற்றி அவரே சொல்லி இருக்கிறார். எம்ஜிஆர் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது கேக்கின் மேல் வைக்கப்பட்ட மெழுகு திரியை அணைத்த பொழுது எம்ஜிஆர் அவர்கள்…… ” ஏற்றிய ஒளியைப் பிறந்த நாளன்று அணைப்பது தவறு…. கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்… நமக்குத் தேவை யில்லை. நமது பண்பாடு கோவிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்தையும் பெறவேண்டும்.. என்று கண்டித்தாக குறிப்பிடுகிறார்.

    எம்ஜிஆர் அவர்கள் தமது அம்மாவின் நினைவு நாளில் மெளன விரதம் இருப்பாராம். அவருடை செயினில் இருக்கும் அம்மாவின் படம் பதித்த டாலருக்கு தினமும் சந்தனம் வைத்து அதனை தனது பனியனுள் வைத்துக் கொள்ளுவாராம். கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ள மாட்டாராம் என்று அவரிடம் பணிபுரிந்த ஜோதி பிரபா சுட்டிக்காட்டுகிறார்.

    எம்ஜிஆர் அவர்களின் மனதில் ஆத்மீகச் சிந்தனை இருந்து கொண்டே வந்திருக் கிறது. ஆனால் வெளியே அதனை விளம்பரப்படுத்திட அவர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது. இந்த ஆத்மீக பலமே அவரைப் பல இன்னல்களிலும் இருந்து காப்பாற்றியது என்பதையும் மறுப்பதற்கில்லை எனலாம்.

    நடிகமணி டி.வி. நாராயணசாமி என்பரே எம்ஜிஆர் அவர்கள் திமுக சார்பானவராக மாறக்காரணம் என்று சொல்லப்படுவதும் உண்டு. அண்ணா அவர்களோடு நெருங்கவும் திமுக காரனாக மாறவும் ஆன ஒரு சூழ்நிலைக்கு எம்ஜிஆர் அவர்களுக்கு ஏற்பட்டது.இதனால் அரசியலிலும், சினிவாவிலும் செல்வாக்கு மிக்கவராக உருவாகத் தொடங்கினார்.

    எம்ஜிஆர் அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் மிகுந்த விருப்பும், மரியாதையும் இருந்தது. திமுகாவில் அவர் இணைந்தாலும் திமுகவின் கொள்கைகளில் பூரண ஐக்கியம் இருந்திருக்கிறதா என்பது சந்தேகமே! அவர் மனம் ஆஸ்த்திகத்தையே நாடி நின்றது எனலாம்.

    மதுரையில் எம்ஜிஆர் அவர்களுக்கு வளங்கப்பட்ட வெள்ளி வாளை மூகாம்பிகை அம்மனுக்கே வளங்கினார். காஞ்சிப் பெரியவரே எம் ஜிஆரை “இவர் நல்லமனுஷன்” என்று சொல்லியிருக்கிறார் என்றால் ஆஸ்த்திகத்தின் செல்வாக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நிறைந்தே இருந்திருக்கத்தானே வேண்டும்.

    முருகபக்தரான திருமுருக வாரியார் சுவாமிகளுக்கு திமுக தொண்டர்களால் தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்ட வேளை அவரையும் சமாதானம் செய்து…. அண்ணாவையும் சமாதானம் ஆக்கி.. வாரியார் சுவாமிகளைக் கொண்டே “பொன்மனச் செம்மல்” என்னும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர் என்றால் …. அங்கும் அடியாக இருந்தது ஆஸ்திக வேரே எனலாம்.அவரின் அந்த ஆஸ்த்திக நம்பிக்கைதான் அவரை அதியுயர் நிலைக் குக் கொண்டுசென்றிருக்கலாம் என்பது எனது எண்ணக்கிடக்கையாகும்.

    தேவருக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் மிகவும் நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும்.தான் அரசியலில் பிரவேசித்துக் கட்சி தொடங்குவது, தேர்தலில் நிற்பது பற்றியெல்லாம் எம்ஜிஆர் சொன்ன போது…. எம்ஜிஆர் நல்லபடி வெற்றி பெறவேண்டு மென்று தேவர் மருதமலை முருகனுக்குக் காணிக்கையும் செலுத்தி அரிச்சனையும் செய்து , விபூதிப்பிரசாதத்துடன் எம் ஜி ஆரிடம் வந்து கொடுக்கிறார். எம் ஜி ஆரும் தேவர் கொடு த்த பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்லாமல்… அதனை வாங்கிக்கொள்கின்றார்.இவையெல்லாம் மக்கள் திலகத்தின் ஆஸ்த்திகத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா?

    பிராமணரை எதிர்ப்பது என்பது திராவிடக் கட்சிகளின் மிகப்பெரிய பிரசாரமாகும். ஆனால் எம்ஜிஆர் கருத்து சற்று வித்தியாசமானதாகவே காணப்பட்டது. “முன்னேறிய ஜாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய கஷ்டங்களும் தீரவேண்டும்” என்று எம்ஜிஆர் கூறினார். ஆனால் அவரின் கட்சிக்கு இது ஒத்துவராத கொள்கை தான். கடும் எதிர்ப்பு வந்ததும் அதைப்பற்றிப் பேசாமலேயே இருந்துவிட்டார்.

    எம்ஜிஆர் ரசிகமன்றத்தையே முதன் முதலாக தோற்றுவிக்கக் காரணமாயிருந்ததே யார் என நினைக்கிறீர்கள்? கல்யாணம் என்னும் ஏழைப் பிராமண இளைஞனே !

    எம்ஜிஆர் மனத்தில் இவையெல்லாம் பிற்காலத்தில் பலமாற்றங்களுக்கும் சிந்தனைக்கும் வித்திட்டிருக்கலாம் அல்லவா?

    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் படப் பிடிப்போடு நின்று அதில் தீவிரம் காட்டத் தொடங்கினார். திராவிட நாடு பிரிவினையை அண்ணா அவர்கள் கைவிட்ட போது எம்ஜிஆர் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை. ஹிந்தி எதிர்ப்புக் காலத்தும் அவரின் ஈடுபாடு அவ்வளவு இருந்ததாகவும் தெரியவில்லை.

    திமுக கொள்கைகளைவிட …. அவர்களது பேச்சாற்றல், நல்ல தமிழ் எழுத்து, அதுமட்டுமல்லாமல் அந்தக்கட்சியில் தனக்குக் கிடைத்த வரவேற்பு, செல்வாக்குஇவைதான் எம்ஜிஆர் அவர்களைக் கவர்ந்திருந்தது என்பதே உண்மையாகும்.

    ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தனது செயல்களில் உற்சாகமாக உழைப்பதை மட்டும் விட்டுவிடாமலும் இருந்தார். அவரிடம் சில கொள்கைகள் இருந்தன. அவற்றை அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார். அதே வேளை தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக வற்புறுத்தவும் மாட்டார்.முன் கோபம் உள்ளவர். ஆனால் பின்னர் சரியான காரணத்தை எடுத்துக் கூறினால் சமாதானம் ஆகியும்விடுவார்.சந்தேகமும் அவரிடம் காணப்பட்டதாகப் பலகுறிப்புகள் வாயிலாக அறியமுடிகிறது. பலம்களும் பல்வீனங்களும்தான் மனித வாழ்க்கை. அதில் இருந்து யருமே விட்டுவிலகவே முடியாதல்லவா ?

    எம்ஜிஆர் படங்களுக்குப் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து எம்ஜிஆர் அவர்களின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாய் இருந்தவர் கவிஞ்ஞர் வாலி அவர்கள். அவர் ஸ்ரீரங்கத்துப் பிராமணர். நெற்றியில் விபூதி இல்லாமல் அவர்வருவதே இல்லை. ஒரு படப்பிடிப்பின் போது .. எம்ஜிஆர் அவர்கள் .. வாலியிடம் .. தான் சார்ந்தகட்சியினர் விபூதியணியும் வாலியை எப்படிப் பாட்டெழுத சமமதித்தாய்? எங்கள் கட்சியில் வேறு ஆட்களா இல்லை என்று கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். ஆகையால் இனி வரும்போது விபூதியை இட்டுக்கொள்ளாமல் வந்தால் நல்லது என்று எம்ஜிஆர் வாலியிடம் சொல்ல நேர்ந்தது.

    அதற்கு வாலி சொன்னார்-அப்படியா அண்ணா! நல்லது நீங்கள் வேறு பொருத்தமானவரை பார்த்து எழுதச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானார். ஆனால் பொன்மனச் செம்மல் அவரைச் சமாதானப் படுத்தி உங்கள் விருப்பப்படியே விபூதியுடனே எழுதுங்கள் என்று சொன்னதாக.. வாலிஅவர்களே கூறியிருக்கிறா ர்கள்.

    தனது கருத்தைச் சொன்னார். ஆனால் மற்றவர் வருந்த மக்கள் திலகம் முயலவில்லை.இதனால் வாலியும் அவரும் நீண்டகாலம் கலையுலக் நண்பர்களாகவே இருந்ததை யாவரும் அறிவர். எம்ஜிஆர் இயல்பாகவே எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவர். ஒழுக்கமாக வாழ்ந்தவர். ஏழ்மையை நன்கு அனுபவித்தவர். வீடு இல்லாமல், படிக்க முடியாமல், பணம் இல்லாமல், ஆதரவு இல்லாமல், வாழ்ந்து வந்தவர். இல்லாமை இல்லாமல் போக வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். குடிசைகள் குடியிருக்கும் நல்லமனை ஆகவேண்டும். ஏழை என்று சொல்லும் நிலை இருக்கவே கூடாது. கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், மடமை ஒழிந்து மக்கள் விழிப்புப் பெறவேண்டும். என்றெல்லாம் எம்ஜிஆர் மனத்தில் பெரிய கனவு இருந்தது.

    அந்தக் கனவுகளை கண்முன்னே கொண்டுவந்து மக்களுக்கு வெளிச்சமாகக் காட்டி அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டவேண்டும் என்றுவிரும்பினார்.அதற்கு அவர் கையில் எடுத்த உத்திதான் தமிழ்ச் சினிமா.

    எப்படி எப்படி எல்லாம் கனவுகண்டாரோ அப்படியே அதே பாத்திரமாகவே சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் தோன்றினார். வெற்றியும் கண்டார். அந்த வெற்றிதான் அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரி பதவியைத் தேடிக் கொடுத்தது. உயர், மத்தியதர, மக்களை இலக்காகக் கொள்ளாமல்… தொழிலாளர்கள், விவசாயமக்கள், கீழ், மத்திய தரத்தினரை தனது இலக்காகாக் கொண்டு… ஏழைபங்காளனாக, வீரனாக, நீதியை நிலை நாட்டுபவ னாக சமதர்மவாதியாக, என்று .. நல்ல குணமுடைய, யாவரும் விரும்பும் பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து… அதற்கு ஏற்ப கதை , வசனம் ,பாடல்கள்காட்சிகள் அமைத்து எம்ஜிஆர் மக்கள் மனத்தில் குடியேறி நின்றார்.

    எம்ஜிஆர் அவர்களின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனித மேல் நிலைப் பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதியவைக்கப் பெற்றது.அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவரகவே அவர் போற்றப்பட்டார்.

    இதனால் தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படி நிலையினர் இடையே அவர் ஒரு புருஷராகவே போற்றப்பட்டார்.தம் நிலையிலுள்ள ஒருவர் மேல் நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் .. அச் சமூக மட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.

    இதனால் தன்னம்பிக்கையும், சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையும் உள்ள ஓர் இளைஞ்ஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது எனலாம். எம்ஜிஆர் தனது கவர்ச்சியின் தளமாக … தமிழ் பற்றிய நிலைப்பாட்டினைக் கொள் ளவில்லை. இன்றும்கூட கலைஞ்ஞர் கருணாநிதியோடு தொடர்புறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்ஜிஆர் அவர்க ளொடு பொருத்திப் பார்க்கப்படுவதில்லை. எம்ஜிஆர் அவர்களுடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதனாக வரவேண்டும் என்பது பற்றியதாகாவே காணப்பட்டது.

    இன்று எம்ஜிஆர் அவர்கள் இல்லாத நிலையிற்கூட.. நினைத்துப் பார்க்கும்பொழுது… அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது எனலாம்.

    எம்ஜிஆர் அவர்களை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது… அதனைத் தளமாகாக் கொண்டு வளர்ந்து.. தனக்கென ஓரிடத்தினை வகுத்துக் கொண்டார் என்றே கூறல் வேண்டும். மேலும் அண்ணா, கலைஞ்ஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்றே கொள்ளல் வேண்டும்.

    அண்ணாவின் பாசறையில் வளர்ந்தாலும் எம்ஜிஆர் அவர்கள் அண்ணாவிடம் இருந்த நல்லகுணங்களையே எடுத்துக்கொண்டார். தனக்கென உள்ளவற்றைப் பறிகொடுக்கவிரும்பவில்லை. சரியெனப் பட்டதை சமயத்தில் வெளிப்படுத்தித் தன்னுடைய தனியியல்பையும் அவர் வெளிப்படுத்தத் தவறியதும் இல்லை. எம்ஜிஆர் அவர்கள் எம்ஜிஆர் ஆகவே இருக்க விரும்புகிறார் என்பதை பேரறிஞர் அண்ணாவும் அறிந்து வைந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    நீதியை, நியாயத்தை, விட்டுவிட எம்ஜிஆர் விரும்பவில்லை. நீதியும் நியாயமும் எடுபடா நிலையில்த்தான் அவருக்கும் ஏனையோருக்கும் கருத்து மோதல் வந்து பிரியும் நிலை ஏற்பட்டது. அந்த நேர்மைதான் அவரை மக்கள் மனத்தில் என்றும் மக்கள் திலகம் ஆக்கியது.

    தமிழ்ச் சினிமாவில், அரசியலில், தனிப்பட்ட நடைமுறையில் எல்லாம் எம்ஜிஆர் அவர்களை ஒரு காலபுஷன் என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல நண்பனாக இருந்துள்ளார் நல்ல நடிகனாக இருந்துள்ளார். சிறந்த கொடைவள்ளலாக விளங்கியுள்ளார். கடின உழைப்பாளியாகவும் இருந்துள்ளார். சிறந்த தொண்டனாகவும் இருந்துள்ளார். அதேவேளை நல்ல அரசியல் ஆட்சியாளனாகவும் விளங்கியுள்ளார்.

    எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவேளையில் பல அருமையான பணிகளை எல்லாம் ஆற்றியிருக்கி ன்றார். இலவசங்கள் பலவற்றை ஈந்து எல்லோர் மனங்களிலும் மன்னாதி மன்னனானார்.

    மதுவிலக்கை 1984ல் அமுலுக்குக் கொண்டுவந்தார். தமிழர் அல்லாதவர் எம்ஜிஆர் என்றும் … அவர் ஒரு மலையாளி என்றும் பிரசாரம் செய்யப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது பின் கண்டறியப்பட்டது. எம்ஜிஆர் அவர்களது காலத்திலேதான் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கம் நிகழ்ந்தது. எம்ஜிஆர் அவர்கள் தனது சினிமாவில் எதையெல்லாம் காணவிளைந்தாரே அவற்றை நிறைவேற்றவே எண்ணம் கொண்டு உழைத்தார்.

    அவர் பட்டப்படிப்புப் படித்தவர் அல்ல. ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று கனவும் கண்டார். அதற்கான வழிவகைகளை தன் ஆட்சியிலும் ஏற்படுதிக்கொடுத்தார். அவரின் உதவியினால் படித்து முன்னேறி யவர்கள் பலபேர். அவர்கள் எல்லாம் அவரை இன்றும் தெய்வமாகவே போற்றுகின்றனர்.

    அவரின் உயர்வுக்கும் பெருமைக்கும் காரணம் அவரது வள்ளல் தன்மை என்பதை எவருமே ஏற்றுக்கொள் ளுவார்கள். கலைஞர் அவர்கள் தனது குடுப்பத்தைப் பார்ப்பார். எம்ஜிஆர் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப் பதையே நினைப்பார். தனக்கென எதையுமே சேர்த்துவைக்கும் நிலை எம்ஜிஆர் அவர்களிடம் இருக்கவில்லை. அவரது கைகள் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள். கலியுகக் கர்ணன் என்றால் அது எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப்பொருந்தும் எனலாம்.

    படமுதலாளிகள், பட இயக்குனர்கள், சகநடிகர்கள், படத்தொழிலாளர்கள், உதவியென நாடிவருபவர்கள் யாவ ருக்கும் வளங்கிய வள்ளலாக எம்ஜிஆர் அவர்கள்விளங்கினார். அப்படி ஒருவரை இன்று காண்பது அரிது என்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வர்கள்.

    ஈழத்தமிழரைக் காப்பாற்ற தன்னால் இயன்றரை அதாவது உயிரிருக்கும்வரை எண்ணியவர் எம்ஜிஆர் அவர்கள். பிரபாகரனை தனது மகனாக எண்ணி கோடி கோடியாக தனது சொந்தப் பணத்தைக் கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர் அவர்கள். தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ மனத்தாலே ஆசைப்பட்டவர் மகோன்னத மாம னிதர் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள். அவரின் பிரிவால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்தை விடப் பலமடங்கு புலம்பிப் புரண்டவர்கள் ஈழத்துத் தமிழர்கள் ஆவர்.அந்த அளவுக்கு மக்கள் திலகம் ஈழத்துத் தமிழர்களின் இதயதெய்வமாக விளங்கினார்.

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.

    நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடி நடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக் காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம். அதுமட்டு மல்ல.. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும்?

    குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும்.. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை. “நான் செத்துப் பிழைச்சவன்டா” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே” என்று எம்மை யெல்லாம் உற்சாகப் படுத்தி “நாளை நமதே இந்த நாளும் நமதே” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில் அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் நாடோடி மன்னனாகவும் கண்டோம் சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்” “ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார் அந்த “இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா? அவர்தான் மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டு கொண்டு இருக்கிறார்!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 97

    பழகத் தெரிய வேணும் – 97

    நிர்மலா ராகவன்

    குருட்டுத்தனம் வேண்டாமே!

    கோலாலம்பூரில் உள்ள பத்து மலையில் (BATU CAVES) தைப்பூசத் திருவிழா.

    “எங்கேடா போறோம்?”

    “யாருக்குத் தெரியும்?”

    லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களுமாக கும்பல் திரண்டிருந்தது. பலவிதமான ஒலிகளுக்குமேல் அங்கு கேட்ட ஓர் உரையாடல் அது.

    தவிர்க்க முடியாத கும்பலில் சரி. ஆனால், எப்போதும் பிறரைப் பின்தொடர்ந்தால் என்ன ஆகும்?

    `தடம் பதித்தவர்கள்’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம்.

    நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து, அதே தடத்தில் நடந்தால், நமக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமே என்ற நப்பாசை பலருக்கு. ஆனால், அவர்கள் காலடி எப்படிப் பிறர் கண்களில் படும்? திருப்திதான் கிட்டுமா?

    அரசாங்க ரீதியில் இப்படிச் செய்யும்போது, ஒரு நாட்டு மக்கள் ஆட்டுமந்தைகளாக அதிகார வர்க்கத்தினரைப் பின்தொடர்கிறார்கள்.

    வாலறுந்த நரி ஒன்று பிற நரிகளைக் கேலி செய்து, அவையும் தம் வாலை வெட்டிக்கொள்ளச் செய்ததாம். தன்னை வித்தியாசமாகக் கருதிவிடப்போகிறார்களே என்ற பயம் அதற்கு.

    சமீபத்தில் மலேசியாவில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான சமாசாரம் இது.

    மாஜி பிரதமர் ஒருவர், “சீனர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள். இன்னமும் தங்கள் வழக்கப்படி, உணவு உட்கொள்ள CHOP STICKS (குச்சிகள்) பயன்படுத்துகிறார்கள்! நம்மைப்போல் கையைப் பயன்படுத்துவதில்லை,” என்று பேசியிருந்தார்.

    எல்லா இனத்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    `சீனர்கள் தம் உணவை மிகுந்த சூடாக உட்கொள்வார்கள். (குளிர்நாட்டுப் பழக்கம் அது). அத்தனை சூட்டில் கை வைக்கமுடியாது,’ என்று ஒருவர் விளக்க, நாட்டு ஒற்றுமையைக் குலைக்கப்பார்க்கிறார் என்ற பழி கிட்டியது.

    தமக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருக்குமா என்று பலரும் யோசிக்கத் தவறிவிடுகிறார்கள்.

    நம்மில் ஒவ்வொருவருக்கும் மூளை என்ற ஒன்று ஏன் தனித்தனியாக அமைந்திருக்கிறது?

    அதிகாரத்தை விரும்பும் சில அற்பர்கள் பயமுறுத்தியும், கேலி பேசியும் பிறரைப் பணியவைக்க முயல்வார்கள். அவர்கள் தைரியசாலிகளாக இருக்கமாட்டார்கள். அதை மறைக்கத்தான் முரட்டுத்தனம்.

    எல்லாரும் தம்மைப்போலவே நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் எதிர்த்திசையில் நடப்பவனுக்கு `கர்வி,’ `ஒற்றுமையாக இருக்காதவன்’ என்று பெயர் சூட்டிவிடுவார்கள்.

    “நீ ஓயாமல் தமிழ் புத்தகங்களைப் படிக்கிறாயே! நன்றாகவா இருக்கும்?” ஒரு மலாய் ஆசிரியை என்னைக் கேட்டாள், முகத்தைக் கோணியபடி.

    அவளுக்குப் புரியாத மொழியில் நான் படித்ததால் அவளுக்கு அச்சமோ?

    “எனக்குப் பிடிக்கும்!” என்றேன் அவள் முகத்தில் அடித்தாற்போல்.

    பழக்கவழக்கங்கள் புரியாது..

    பிற மனிதர்களை மட்டுமின்றி, பண்டைக்கால பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதும் ஒரு விதத்தில், அறியாமைதான்.

    தீபாவளியன்று எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்த ஒரு சீனர், “எதற்காக முன்வாசலில் தோரணம் கட்டுகிறீர்கள் என்று நான் பலரைக் கேட்டபோது, எல்லாரும், TRADITION (பாரம்பரிய வழக்கம்) என்றார்கள்,” என்றார், சற்று ஏமாற்றத்துடன். அறிவுப்பசி அவருக்கு.

    நல்லவேளை, நான் அதைப்பற்றிப் படித்திருந்தேன். “பலரும் நம் வீட்டுக்கு வரும்போது, அவர்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளியாகும் கரியமல வாயுவை பச்சை மாவிலைகள் உள்வாங்கிக்கொள்கின்றன. இது சுகாதார அடிப்படையில் உண்டான பழக்கம்,” என்று என் `அறிவாற்றலை’ வெளிப்படுத்திக்கொண்டேன்.

    இன்று பலரும் கட்டுவது பச்சை இலைகளால் அல்ல. பிளாஸ்டிக்காலான `மாவிலைத்’ தோரணம்!

    அரிசி மாவானான கோலத்தைப் போடுவது எறும்புபோன்ற சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு ஆகாரமாக. அழகுக்காக அல்ல.

    இதைப் பலரும் மறந்துவிட்டதால், பிளாஸ்டிக்கின்மேல் போடப்பட்ட வண்ணக்கோலம் அமோகமாக விற்பனையாகிறது.

    பெண்களைக் கிண்டல் செய்வது நகைச்சுவையா?

    பட்டிமன்றங்களில் பெண்களைப்பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார் ஆண் ஒருவர். `நகைச்சுவை’ என்று ஆண்கள் சிரிக்க, `நாமும் ஒத்துப்போய்விடலாமே!’ என்று பெண்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

    அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று எவரும் யோசிப்பதில்லை.

    கதை

    என் கல்லூரி நாட்களில், பிரபலமான ஒருவர் கோயிலில் கதாகாலட்சேபம் செய்ய வருவார். அவருடைய புகழும் வருமானமும் அதிகரிக்க, தான் எது பேசினாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் பிறந்தது அவருக்கு.

    இந்துப் புராணக்கதைகளின் நடுவே, தற்காலப் பெண்களைப்பற்றி இழிவாகப் பேச ஆரம்பித்தார். `சுவாரசியமாக இருக்கட்டுமே!’ என்று நினைத்திருப்பார். எல்லாரையும் சிரிக்கவைக்கலாம் என்ற அவர் நம்பிக்கை வீண்போகவில்லை.

    அதன்பின், நான் அவருடைய நிகழ்ச்சிக்குப் போக மறுத்துவிட்டேன்.

    “நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை!” என்று என்மேல் தாயாருக்குக் கோபம்.

    நான் மசியவில்லை.

    சில ஆண்டுகளுக்குப்பின், அம்மாவும் போவதை நிறுத்திவிட்டார், “பொண்களைக் கேவலமா பேசறார்!” என்று முகத்தைச் சுளித்தபடி.

    கூட்டத்தில் ஒருவர் சிரித்தால், சற்றும் யோசியாது, எல்லாரும் அவரைப் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும்வரை பெண்களை இழிவுபடுத்தும் பேச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். `கும்பலோடு கோவிந்தா!’ என்பது இப்படிப்பட்ட நடத்தைக்குத்தானா!

    பெண்கள் ஆண்களிடம் தாம் காணும் குறைகளைப்பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ, ஆண்கள் கொதித்தெழுவார்கள்.

    எந்த உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் வேண்டும். ஆனால், அதைவிடப் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எளிதாயிற்றே!

    திரைப்படங்களைக் காப்பியடிப்பது

    திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், ஆண் எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அறையலாம், மனம்போனபடி கேலி செய்யலாம் என்று காட்டுகிறார்கள்.

    முட்டாள்களைப் பின்பற்றி நடப்பவனும் முட்டாளாகிறானே! அதையெல்லாம் பார்த்துவிட்டு, அதேபோல் நடக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

    இயக்குனர் ஒருவர், சிறிதும் மாற்றமின்றி, தான் சொல்லிக்கொடுப்பதுபோலவேதான் நடிகர்களும் பேசி, நடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். அப்படிச் செய்யாவிட்டால் தண்டனை என்று அவர்கீழ் வேலை பார்த்தவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

    நடிக்க வந்தவர்களின் மனோதர்மத்துக்கு இடங்கொடுக்காவிட்டால், எல்லாரும் ஒரேமாதிரிதான் நடிப்பார்கள். அதில் இயக்குனரின் கைவரிசை தெரியும். புதுமையோ, சுவாரசியமோ இருக்குமா?

    மதத்தின் பெயரால்

    “மத குரு” என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு, பெயரும் புகழுமாக இருக்கிறார்களே சிலர், எப்படி?

    கலை, தர்மம் இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள்போல் எதையாவது ஆரம்பித்தால், நல்லவர்கள் பலர் அவருக்கு உதவியாக நடக்க முன்வருவார்கள். இது உலக நியதி.

    பல காலம் கழிந்தபின்னர்தான் அவர் செய்துவந்தது சமூக சேவை இல்லை, சுயநலம் என்பது வெளியாகும்.

    நான் அப்படி ஒருவரைச் சந்தித்திருக்கிறேன் – கலை நிகழ்ச்சிகளில்.

    அவர் நடக்கும்போதே சில பக்தைகள் அவர் காலில் விழுந்து வணங்குவார்கள். மரியாதை என்பது ஒருபுறமிருக்க, ஒருவர் அப்படிக் கும்பிட்டால், அவர் செய்த பாபம் வணங்கப்பட்டவருக்குப் போய்விடுமாம்.

    சில ஆண்டுகளிலேயே, நடக்கக்கூட முடியாது அவர் தள்ளாடியதைக் கண்டு, “அவருக்கு என்ன, கான்சரா?” என்று அவருடைய மருத்துவரைக் கேட்டேன்.

    “அது மட்டும்தான் இல்லை. மற்ற எல்லா வியாதிகளும் இருக்கின்றன,” என்ற பதில் கிடைத்தது.

    பிறர் தன்னைப் பின்பற்றுகிறார்களே என்ற பெருமிதம் அப்போதாவது மறைந்திருக்குமா?

    ஏனென்று கேள்!

    குழந்தைகள் இயற்கையாகவே எதையும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களது அறிவுப்பசிக்குத் தீனி போடாது, `சும்மா தொணதொணக்காதே!’ என்று விரட்டிவிட்டால், அடங்கிவிடுவார்கள்.

    பதின்ம வயதில், `இப்படி நட!’ என்று அதிகாரம் செய்தால் கேட்பார்களா?

    `ஏன்? ஏன்?’ என்று கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் பிறர் கூறுவதையோ, செய்வதையோ பின்பற்றமாட்டார்கள். சுயமாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள். அவர்களைப் பார்த்துப் பிறர் அச்சமடையும் அபாயம் உண்டு!

    ஒரு மருத்துவர் கூறினார்: “தொண்டையில் வலி இருந்தால், கடையில் வாங்கும் மருந்துகளைவிட உப்பு கரைத்த வெந்நீரால் கொப்புளிப்பது சிறந்தது”.

    நான் அதை அப்படியே ஏற்கவில்லை. “ஏன், டாக்டர்?” என்று அவரை மடக்கினேன்.

    என் கேள்வியை எதிர்பாராத அவர் சற்று அயர்ந்துவிட்டார். அவரிடம் வேறு யாரும் அப்படி `எதிர்த்து’ப் பேசியதில்லை போலிருக்கிறது!

    “கூடுதலாக இன்னும் சில மணி நேரம் உப்பின் குணமாக்கும் தன்மை நீடித்திருக்கும்,” என்றார், ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு.

    `டாக்டர் சொன்னால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். அவருக்குத் தெரியாததா!’ என்பவர்களுக்கு: `அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியாதே!’

    Share
  • தம்பட்டை அவரை அறுவடை

    தம்பட்டை அவரை அறுவடை

    தேசிய விவசாயிகள் தினமாகிய இன்று, நம் மாடித் தோட்டத்து அறுவடையைப் பாருங்கள். தம்பட்டை அவரை, மூக்குத்தி அவரை, நட்சத்திர வெண்டை உள்ளிட்டவற்றைப் பறிக்கும் காட்சிகள், இதோ உங்களுக்காக.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எருமையின் மீது ஆனைச்சாத்தன்

    எருமையின் மீது ஆனைச்சாத்தன்

    நிறைய இரட்டைவால் குருவிகளைப் பார்த்திருக்கிறேன். கால்நடைகள் மீது அமர்ந்து வந்ததைப் பார்த்த நினைவு இல்லை என நண்பர் ஐயப்பன் கிருஷ்ணன், நோக்கர் (Facebook) உரையாடல் ஒன்றில் கூறியிருந்தார். இதோ, எருமையின் மீது இரட்டைவால் குருவி அமர்ந்து வருவதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அரவிந்த மலர்ப்பாதம் | கிருஷ்ணகுமார்

    அரவிந்த மலர்ப்பாதம் | கிருஷ்ணகுமார்

    ஞானானந்த மண்டலியில் அனுதினமும் பாடப்படும் ‘அரவிந்த மலர்ப்பாதம்’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நித்திலாவின் படகு சவாரி

    நித்திலாவின் படகு சவாரி

    ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர்கள் தாங்களாகவே படகு ஓட்டும் வகையில் ஒரு வாய்ப்பினை வழங்குகிறார்கள். ஒருவருக்கு ரூ.40 மட்டுமே கட்டணம். நித்திலாவின் உற்சாகமான படகு சவாரி இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share