ஏகாந்தம்

பாஸ்கர்
அதே இடத்தில் இன்றும் அமர்ந்திருக்கிறேன்
தபால்காரர் உதட்டை சுழித்து ஏதுமில்லை என்கிறார்
புறா ஒன்று வெறுமெனே அமர்ந்து இருக்கிறது
சப்தம் போடாமல் இலைகள் விழுகின்றன
கோவில் மணி சப்தம் அடங்கியும் எதிரொலிக்கிறது
விமானத்தின் சப்தமும் அதிர்வும் அடங்கவில்லை
சட்டென உதித்த நிசப்தம் கலவரம் செய்கிறது
நான் மட்டுமே உயிருடன் எனும் நினைவே நிற்கிறது
சுயமெதிரில் அமர்ந்திருக்க விழிப்பே பிரமிப்பாகிறது
உறைந்த மனம் கடக்காமல் காலமே தள்ளி நிற்கிறது
கண்களும் மனதும் விரிந்தே கிடக்கிறது மூலையில்
ஏகாந்தம் இனிதெங்கே என்றும் இந்த வாழ்வினில்
விழிப்பொன்றே நிஜம்- நிஜமே என்றும் விழிப்பு .
கனிந்து போய் கிடந்து பாரும் -காலமே இல்லையங்கு.