5

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(516)

ஏவவுஞ் செய்கலான் தான்தேரா னவ்வுயிர்
போஅ மளவுமோர் நோய்.

-திருக்குறள் -848(புல்லறிவாண்மை )

புதுக் கவிதையில்…   

நலம்தரும் செயலைப்
பிறர்
ஏவினாலும் செய்யாதவனாய்,
தானாகவும் உணர்ந்து
தெளியாதவனாய் உள்ளவன்
தாங்கியிருக்கும் உயிர்
போகும் வரை
தரணிக்கு அவனொரு
தாக்கும் நோயே…!

குறும்பாவில்…

அடுத்தவர் சொல்லியும் செய்யாமல்
அவனாகவும் அறிந்து கொள்ளாத அறிவிலி
உயிருள்ளவரை புவிக்கொரு நோயே…!

மரபுக் கவிதையில்…

நலமே யளிக்கும் செயலதனை
நல்லோர் சொல்லிச் செயாதவனாய்,
சுலப மென்றே தானறிந்து
சுற்றி யுள்ளோர் வியந்திடவே
பலவும் செய்யா அறிவிலிதான்,
பாரி லுள்ள நாள்வரையில்
உலகுக் கவன்தான் ஆவானே
ஊறு நல்கும் நோயெனவே…!

லிமரைக்கூ…

சொல்லியும் செய்யாத ஒருவனாய்
தானாய் அறிந்தும் செயல்படாத அறிவிலி
உயிருள்ளவரை உலகுக்குப் பெரியநோய்…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும்
நல்ல அறிவு வேணும்
நல்லதாப் பாத்து செய்ய
நல்ல அறிவு வேணும்..

நல்ல செயல செய்யிறதுக்கு
நாலுபேர் சொல்லியும் செய்யாமயும்
தானே ஒணர்ந்து
அறிஞ்சியும் செய்யாத
அறிவு கெட்டவன்,
அவன் உயிரோட இருக்கிறவர
ஒலகத்துக்கு
ஒரு நோயிதான்..

அதால
வேணும் வேணும்
நல்ல அறிவு வேணும்
நல்லதாப் பாத்து செய்ய
நல்ல அறிவு வேணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.