Author: கவிநயா

  • என்னை அழ வைத்த குறும்படம்

     

    கவிநயா

    நம் தாய் மொழி பற்றி அடிமனசில் கனன்று கொண்டிருந்த கவலையை சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம் நன்றாக விசிறி விட்டு விட்டது. எதிர்காலம் கண் முன்னே காட்சிகளாக விரிய விரிய, அதில் உள்ள உண்மையும் நிதர்சனமும் நெஞ்சில் அறைகிறது. நமக்குத் தேவையான விழிப்புணர்வை இந்தப் படம் சரியான சமயத்தில் தந்திருப்பதாகத் தோன்றுகிறது.

    நம் தமிழ் மொழியின் சிறப்பு எத்தகையது? காஞ்சி மஹா சுவாமிகளின் திருவாய் மொழி மூலமாகக் கேட்போம்…

    காஞ்சிப் பெரியவர் ஒரு முறை கி.வா.ஜ. விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும், “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம். அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!”, என்றார்.

    கி.வா.ஜ. அவர்கள் அடக்கமாக, “பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்”, என்றார்.

    “எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும் அழகு, இனிமை, இவற்றைக் குறிப்பதாகவே இருக்கும். மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ், இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை.  ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடம் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா?” என்றார்.

    உடனே கி.வா.ஜ. அவர்கள், “இதை விடப் பொருத்தமாகச் சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்”, என்றாராம். (எஸ். கணேச சர்மா அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து தட்டச்சிய வரகூரான் நாராயணன் அவர்களுக்கு நன்றி)

    பலப் பல மொழிகளிலும் வல்லமை பெற்றிருந்த பாரதி, “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றுதான் சொன்னானேயன்றி, “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று சொல்லவே இல்லை! (அதே தவறான புரிதலில்தான் நானும் இருந்தேன் என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறேன்). நம் பாரதி, நம் தமிழ் மொழியின் பெருமைகளைத்தான் விண்டு விண்டு வைக்கிறான்! மேலும், யாரோ ஒருவர் தமிழ் இனிச் சாகும் என்று சொன்னதைப் பொறுக்க முடியாமல், அந்த நிலை வராதிருக்க என்ன செய்ய வேண்டுமென்றுதான் இங்கே சொல்கிறான், பாரதி. முழுக் கவிதையும் கீழே இருக்கிறது, கவனமாகப் படித்தால் உங்களுக்கும் புரியும். (நன்றி: http://kiruthikan.blogspot.com/2009/06/blog-post_5671.html)

    ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். (1)
     
    மூன்று குலத் தமிழ் மன்னர் – என்னை
    மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
    ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். (2)
     
    கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல
    காற்றையும் வான் வெளியையும் சேர்த்துத்
    தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் – பல
    தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். (3)
     
    சாத்திரங் கள்பல தந்தார் – இந்தத்
    தரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
    நேத்திரங் கெட்டவன் காலன் – தன்முன்
    நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். (4)
     
    நன்றென்றுந் தீதென்றும் பாரான் – முன்
    நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
    சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் – வையச்
    சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். (5)

     
    கன்னிப் பருவத்தில் அந்நாள் – என்றன்  
    காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்  
    என்னென்ன வோபெயருண்டு – பின்னர்  
    யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர். (6)  
     
    தந்தை அருள்வலி யாலும் – முன்பு  
    சான்ற புலவர் தவவலி யாலும்  
    இந்தக் கணமட்டும் காலன் – என்னை  
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான் (7)  
     
    இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி  
    ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!  
    கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு  
    கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் (8)  
     
    ‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச  
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;  
    மெத்த வளருது மேற்கே – அந்த  
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை (9)  
     
    சொல்லவும் கூடுவதில்லை – அவை  
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை  
    மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த  
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’ (10)
     
    என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!  
    இந்த வசையெனக் கெய்திடலாமோ?  
    சென்றிடு வீர் எட்டுத் திக்கும் – கலைச்
    செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! (11)  
     
    தந்தை அருள் வலியாலும் – இன்று  
    சார்ந்த புலவர் தவ வலியாலும்  
    இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்  
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். (12)

    நீங்களும் மணி ராம் என்பவர் இயக்கிய “தமிழ் இனி…” என்ற இந்தப் படத்தைப் பாருங்களேன்… அவரும் கடைசியாக பாரதியின் கவிதையைத் தவறாக mislead பண்ணும் வகையில்தான் சேர்த்திருக்கிறார் என்றாலும், சரியான நேரத்தில் விழிப்புணர்வு தரும் இந்தக் குறும்படத்தைத் தந்தமைக்கு அவருக்கு நன்றி.

    இனியேனும் நாமும் தமிழில் பேசி, நம் சந்ததியினரையும் தமிழில் பேச ஊக்குவிப்போமா? பாரதி சொன்னவற்றை மனதில் கொள்வோமா?

     
    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். என் அன்னைத் தமிழோடு!

     

    அன்புடன்

    கவிநயா

     

    பி.கு: இந்தப் பதிவில் படத்திற்கான சுட்டியையும் இணைத்திருந்தேன்; ஆனால் அது you tube-ல் இருந்து நீக்கப் பட்டு விட்டதாகத் தெரிகிறது. மன்னிக்கவும்.

     

     

    Share
  • குரங்கா, குழந்தையா?

     

     கவிநயா

     

    இப்பல்லாம் எல்லாப் பொருளும் கூடவே ஒரு கைந்நூலோடதானே (அதாங்க, நம்ம கூட சுத்தத் தமிழ்ல manual-ன்னு சொல்வோமே) வருது… மின் ஆட்டுக்கல்லோ (கிரைண்டர்), மின் அம்மியோ (மிக்ஸி) வாகனமோ, தொ(ல்)லைக்காட்சியோ, எது வாங்கினாலும், கூடவே ஒரு புத்தகமும் குடுத்துருவாங்க. (அதை நாம படிக்கிறோமா இல்லையாங்கிறது வேற விஷயம்!) அதே போல இந்த உலகத்தில் எப்படி வாழறதுங்கிறதுக்கு “Life For Dummies” மாதிரி ஒரு புத்தகம் இருந்தா நல்லாருக்கும்தானே!

     

    எந்தெந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படியெப்படி நடந்துக்கணும், எந்தெந்த இடத்தில் எப்படியெப்படி பேசணும், எந்தெந்த மாதிரி பிரச்சனைகளை எப்படியெப்படி தீர்க்கலாம், இதெல்லாம் சொல்லித் தர்ற மாதிரி ஒரு புத்தகம் இருந்தா? முக்கியமா, அவசர ஆபத்துக்கு யாரைக் கூப்பிடலாம் அப்படிங்கிறதுக்கு ஒரு தொலைபேசி எண்ணோ, இல்லை ஒரு மின்னஞ்சல் முகவரியோ இருந்தா? (பக்க விளைவுகள் தெரிஞ்சுதான் இறைவன் மின்னஞ்சலெல்லாம் வெச்சுக்கலை போல!)

     

    இப்படியெல்லாம் வேடிக்கையா சொன்னாலும், நிஜமாவே ‘எப்படி வாழணும்’ அப்படின்னு பெரியவங்கல்லாம் ஏற்கனவே எழுதி வெச்சுட்டுதான் போயிருக்காங்க. ஆனா நாமதான் manual –ஐப் படிக்காமலேயே பொருட்களைப் பயன்படுத்தற ஆளுங்களாச்சே. அதே மாதிரி இங்கேயும், பெரியவங்க சொல்லி வெச்சுட்டுப் போனதையெல்லாம் கண்டுக்கிறதும் இல்ல, படிக்கிறதும் இல்ல, பயன்படுத்தறதும் இல்ல.

     

    கண்ணன் சொன்ன கீதை அப்படிப்பட்ட புத்தகம்தான். நிறைய பெரியோர்கள் சொல்வதும் இதுதான். நாமதான் அதெல்லாம் ‘ஆன்மீகம்’ அப்படின்னும், வயசான பிறகு, ஓய்வெடுத்த பிறகு, தெரிஞ்சிக்கிட்டா போதும்னும், தள்ளி வெச்சிட்டோம்.

     

    கொஞ்சம் பக்கத்தில் போய் பார்த்தாதான் தெரியுது… இதெல்லாம் முக்தி அடையறதுக்கான வழியோ இல்லையோ, ஆனா இதையெல்லாம் கடைப்பிடிச்சா நிச்சயமா மன அமைதியோட வாழலாம் அப்படின்னு.

     

    எந்த மதத்தை எடுத்துக்கிட்டாலும், அதனோட போதனைகள் கிட்டத்தட்ட ஒண்ணாதான் இருக்கும். குறிப்பா நற்குணங்களை வளர்த்துக்கறது, தீய குணங்களை விட்டுத் தள்றது. புறம் பேசாம இருக்கறது. சக உயிர்களிடம் அன்பாக இருக்கறது. அறத்தின் படி நடக்கறது. இந்த மாதிரி. யோசிச்சுப் பாருங்க,  இப்படியெல்லாம் இருந்துட்டாலே மன அமைதி தன்னால வந்துடும்.

     

    ஒரு அறைக்குள்ள நிறைய்ய தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்குன்னு வைங்க. ஒரு குட்டி இடம் கூட விடாம அவ்வளவு சாமான்கள் கிடக்கு. ஒண்ணு மேல ஒண்ணா கிடக்கு. அடுத்தடுத்து கிடக்கு. கதவைத் திறக்கக் கூட இடம் இல்லாம கிடக்கு. இப்படிப் பட்ட அறைக்குள்ள எப்படிப் போவீங்க? சூரிய ஒளியோ காற்றோ கூட இங்கே போக முடியாது. தூசியும் தும்பும்தான் சேர்ந்துக்கிட்டே வரும்.

     

    நம்ம மனசுக்குள்ளயும் இப்படி நிறைய தட்டு முட்டுச் சாமான்கள் கிடக்கு. ஆசை, பாசம், எதிர்பார்ப்பு, கோபம், தாபம், வருத்தம், பொறாமை, கவலை, கண்ணீர், இப்படி எக்கச்சக்கமா கிடக்கு. இப்படி அடைச்சுக் கிடக்கிற மனசுக்குள்ள அமைதியும் ஆனந்தமும் எப்படிப் புக முடியும்?

     

    இந்த மாதிரி அடைசல் சேரச் சேர, சுத்தம் பண்ற வேலை கஷ்டமாயிடும். தேங்கிக் கிடக்கிற தண்ணீர் சாக்கடையா மாற ரொம்ப நாளாகாது. பூட்டிக் கிடக்கிற அறைக்கும், தேங்கிக் கிடக்கிற தண்ணிக்குமே இந்த கதின்னா, நம்ம மனசு என்ன ஆகும். அதனால மனசை அப்பப்ப சுத்தம் பண்றது ரொம்ப அவசியம். அப்பதான் அமைதியும் சந்தோஷமும் மனசுக்குள்ள வர்றதுக்கு வழி ஏற்படும். இப்படிப்பட்ட கசடுகளைச் சேர்த்துக்காம இருக்கறதுக்கான வழிகளைத்தான் ஆன்மீகம் சொல்லுது.

     

    எண்ணம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றாக இருந்தாலே மனசு தானாக சுத்தமாயிடுமாம்,  சரியாயிடுமாம்.  சொல்றதுக்கு எவ்வளவு சுலபமா இருக்கு! செய்து பார்த்தாதான் தெரியும், இந்த மூன்றும் ஒன்றாக இருக்கும்படி நடந்துக்கிறது எவ்வளவு கஷ்டம்னு.

     

    எல்லாத்துக்கும் அடிப்படை எண்ணங்கள் தான். எண்ணங்கள் ரொம்ப வலிமை வாய்ந்ததாம். நம்முடைய போன பிறவியில் நமக்கு ஏற்பட்ட எண்ணங்களாலும், அவற்றால் ஏற்பட்ட ஆசாபாசங்களின் படியும் தான் நம்மோட இந்தப் பிறவியும்,  வாழ்க்கையும் அமையுது அப்படின்னு சொல்றார், ஸ்ரீயோகானந்தர். அந்த அளவுக்கு அடுத்த பிறவியையே நிர்ணயிக்கும் சக்தி எண்ணங்களுக்கு இருக்குன்னா, நம் இப்போதைய வாழ்க்கையில், அடுத்த நாட்களில், நிமிடங்களில் நடக்கிறதும் நம் எண்ணங்களைப் பொறுத்துதானே இருக்கு!

     

    அதனால, நம்ம மனசுக்குள்ள அப்படி என்னதான் ஓடிக்கிட்டிருக்குன்னு அப்பப்ப திறந்து பார்க்கணும். கவனிக்கணும். ஒரு சாதாரண இயந்திரத்தில் தொடங்கி, எல்லாத்துக்குமே பராமரிப்புங்கிறது (maintenance) ரொம்ப முக்கியம். அப்பதான் அது ரொம்ப நாளைக்கு சிறப்பா உழைக்கும். அப்படி இருக்கும் போது மனசை மட்டும் கண்டுக்காம விடலாமா?

     

    மனசு இருக்கே, அது குரங்கு மாதிரின்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா குரங்கா இருக்கறதைக் குழந்தையா மாத்தறது நம்ம கையில்தான் இருக்கு.

     

    சரிதானே நான் சொல்றது J

     

    எல்லாரும் நல்லாருக்கணும்.

     

     http://tlc.howstuffworks.com/family/how-to-draw-a-monkey.htm

    Share
  • உன்னைப் போல எவருண்டு!

     

    கவிநயா

    சின்னக் கண்ணே சிரிக்கும் முத்தே
    சின்னப் பாப்பா வா
    கண்ணின் மணியே கொஞ்சும் கிளியே
    கண்ணே பாப்பா வா

    அ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டு
    அழகாய்ப் பேசிடணும்
    நம்தாய் மொழியாம் தமிழை நீயும்
    கண்ணாய்ப் போற்றிடணும்

    உண்ணும்போது பிறர்க்கும் கொடுத்து
    பகிர்ந்தே உண்டிடணும
    உதவி வேண்டும் பேர்க்கு உடனே
    ஓடி உதவிடணும்

    கோபம், அழுகை, பிடிவாதம், இவை
    எல்லாம் விட்டிடணும்
    அன்பே தெய்வம் எனும் எண்ணம்உன்
    மனதில் நின்றிடணும்

    குழந்தை உள்ளம் மாறாமல் நீ
    உலகில் வாழ்ந்திடணும்
    உன்னைப் போல எவருண்டு என
    உலகம் சொல்லிடணும்!

    படத்திற்கு நன்றி :

    http://www.pakindifun.com/picdetail.php?catId=33&tid=471

    Share
  • பொறுமை

    கவிநயா

    தாகூரின் ‘கீதாஞ்சலி’யில் உள்ள ‘பொறுமை’ என்ற கவிதையின் தமிழாக்கம்.

     பொறுமை

     நீ ஏதும் பேச மறுத்தால்…

    என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி

    அதனை அடைகாத்து வைத்திருப்பேன்.

    சிறிதளவும் அசையாமல்

    தலை குனிந்து விழிப்புடனே காத்திருக்கும்

    நட்சத்திரங்கள் நிறைந்த இரவைப் போல

    மிகப் பொறுமையுடன் நானிருப்பேன்.

    காலை நிச்சயம் மலரும்,

    கவிந்திருக்கும் காரிருள் மறையும்,

    வானவெளியைப் பிளந்து கொண்டு உன் குரல்

    பொன்னருவியாகப் பொழியும்.

    சிறகு முளைத்த உன்னுடைய சொற்கள்

    என் குருவிக் கூடுகள் ஒவ்வொன்றிலிருந்தும்

    இனிய கானங்களாய் ஒலிக்கும்,

    என் காடுகளில் அடர்ந்த மரங்களுக்கிடையில்

    உனது இன்னிசை புகுந்து,

    வண்ணப் பூக்களாய்ப்

    பூத்துச் சொரியும்.

    Original in English

    Patience

    Rabindranath Tagore

     

    If thou speakest not I will fill my heart with thy silence and endure it.
    I will keep still and wait like the night with starry vigil
    and its head bent low with patience.
    The morning will surely come, the darkness will vanish,
    and thy voice pour down in golden streams breaking through the sky.
    Then thy words will take wing in songs from every one of my birds’ nests,
    and thy melodies will break forth in flowers in all my forest groves.

    படத்துக்கு நன்றி

    http://discomaulvi.wordpress.com/2011/04/30/sabr-patience-by-ibn-qayyim-al-jawziyyah/

     

     


    Share
  • ஸ்வபாவ மதுரா

     

    கவிநயா

     

    ‘லலிதா சஹஸ்ரநாமத்தில்’ வரும் அன்னையின் அற்புதமான நாமங்களில் ஒன்று, ஸ்வபாவ மதுரா.

     ஸ்வபாவம், அல்லது தமிழில் சுபாவம். சுபாவம் என்றால் இயல்பு. மதுரம் என்றால் இனிமை. இயல்பிலேயே இனிமையானவள் என்று பொருள்.

     

    சாதாரணமாக, ஒருவரை இனிமையானவர் என்று எதை வைத்துச் சொல்கிறோம்? பெரும்பாலும் அவர் நம்முடன் பழகும் விதத்தை வைத்துத்தான். ஒருவருடைய நற்குணங்களாலும், நற்பண்புகளாலும், நன்னடைத்தயாலும், இனிய பேச்சாலும்தான் அவருடைய பழகும் விதம் அமைகிறது.

     

    முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவள் என்று சொன்னாலும், பக்தர் மனதில் நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்பவள் அன்னை பராசக்தி. அவளுடைய அன்பு எப்பேர்ப்பட்டது! அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

     

    அபிராமி பட்டர் சொல்கிறார், “ஆசைக்கடலில் அகப்பட்டு, அந்தகன் கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்வேன்!” என்று. அன்னையின் அருள் இருந்தால்தான் அவளை நினைப்பதே, பக்தி செய்வதே, சாத்தியம் என்று ஆதிசங்கரர், சௌந்தர்ய லஹரியில் சொல்லுவார். அதே போல பட்டரும், “ஆசைக் கடலில் அகப்பட்டு எப்படியெல்லாமோ உழன்று கொண்டிருந்த என்னை, உன் வாசனை மிகுந்த தாமரைப் பாதங்களை என் தலையில் வைத்து, நீயாக வந்து என்னை ஆட் கொண்டு விட்டாயே! அத்தகைய உன்னுடைய அன்பை என்னவென்று சொல்லுவேன்!” என்கிறார்.

     

    தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனானவன், யோகத்தில் நிலைத்திருந்த மகேஸ்வரனின் மீது பாணங்களை விட்டு, அவர் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனான். அவன் மனைவியாகிய இரதிதேவியின் கண்ணீரைக் காணச் சகியாத தேவி, மன்மதன் அனங்கனாகி (உருவமில்லாதவனாய்), மனைவியின் கண்களுக்கு மட்டுமே தெரிந்தவனாய் இருப்பான் என்று வரம் அளித்தாள். “சதாசிவ பதிவ்ரதா” என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் போற்றப்படும் தேவி, கணவனால் எரிக்கப்பட்டவன் என்பதால், அவரையும் மீறாமல், அதே சமயம் தன் குழந்தையான இரதிதேவியின் மனமும் திருப்தியுறும் வண்ணம் மிகுந்த கருணையுடன் நடந்து கொண்டாள் என்றால், அவளின் இனிமைக்கு இணையேது?

     

    சிறிதே பேசினாலும், நிறையப் பேசினாலும், வார்த்தைகளின் இனிமை மிகவும் முக்கியம் அல்லவா? வார்த்தைகளில் இனிமை எப்படி வரும்? நல்லதையே பேசும்போது, பிறரைப் புண்படுத்தா வண்ணம் பேசும்போதுதான் பேச்சில் இனிமை வரும்.

     

    அவளோ ‘வாக் அதீச்வரி”, வாக்கிற்கெல்லாம் முதன்மையானவள்; தலைவி.

     

    அவள் குரல் எப்படி இருக்கிறதாம்? சௌந்தர்ய லஹரியில் ஒரு சுலோகம் வருகிறது… அன்னைக்கு முன்னால் அமர்ந்து வீணை மீட்டிக் கொண்டிருக்கும் வாணி, அன்னையின் பதியான சிவபெருமானின் பெருமைகளை இனிமையாக இசை கூட்டிப் பாடுகிறாள். பதியின் புகழைக் கேட்டுக் கொண்டு சரஸ்வதியின் கானத்தில் திளைத்திருக்கிறாள், அன்னை. வாணிகானம் முடிந்த பிறகு, அன்னை, வாணியைப் பாராட்டிப் பேசத் தொடங்குகிறாள். அவள் குரலின் இனிமையில் சொக்கி, தன் வீணையின் நாதமும் ஒரு நாதமா என வெட்கி, வீணையைப் பார்க்கக் கூச்சப்பட்டு, அதனை உறைக்குள் போட்டு மூடி கண்படாத தொலைவில் வைத்து விடுகிறாளாம், வாணி!

     

    அவளுடைய சொல்லின் இனிமையைப் பற்றி, பலப்பலவாய்ப் போற்றிப் புகழ்கிறார் அபிராமி பட்டரும். “பண் அளிக்கும் சொல் பரிமள யாமைளப் பைங்கிளி” என்றும், “இன்சொல் திரிபுர சுந்தரி” என்றும், “பாலினும் சொல் இனியாய்” என்றும், “பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியாள்” என்றும்…

     

    சிலர் தனக்குச் சமமானவர்களிடமும், தனக்கு மேலானவர்களிடமும், அன்பும் மரியாதையும் செலுத்துவார்கள். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் தம்மை விடத் தாழ்ந்தவர் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால், அவரை மதிக்கவே மாட்டார்கள். தம்மை விடத் தாழ்ந்தவராக யாரையும் நினைப்பதே தவறு, அதிலும் அதற்காக அவர்களை மதிக்காமல் இருப்பதோ அதை விடப் பெருந் தவறு. நற்பண்பு என்பது எப்போதும், எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில் இருக்கிறது. ஆளுக்குத் தகுந்தாற் போல் பழகுவதற்குப் பெயர் பண்பே அல்ல.

     

    அன்னை பராசக்தி எப்படிப்பட்டவள்? ஞானியர்க்கு மட்டுமே தன்னைத் தெரியப்படுத்துபவள் அல்ல, அவள். அவள், “ஆபால கோப விதிதா”! எளியவர்களுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கும், இடையர்களுக்கும் கூட அடைவதற்கு எளியவளாய் இருப்பவள். பட்டரும், “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய். நின்னை பேயேன் அறிவும் அறிவு தந்தாய். என்ன பேறு பெற்றேன்” என்கிறார். “என்னைப் போன்ற நாயினும் கீழானவனுக்குக் கூட அருள் செய்தாயே! உன்னை அறிந்து கொள்ளும் அளவிற்கு இந்தப் பேயேனுக்கு அருள் தந்தாயே!” என்று போற்றிப் பரவுகிறார்.

     

    மேலும், “உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு படைத்தனை. நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை. சுந்தரி, நின் அருள் ஏதென்று சொல்லுவதே” என்பார். “எனக்காக இத்தனையும் செய்தாயே. உன் அன்பிற்கு எல்லை ஏது” என்று பரவசம் அடைகிறார்.

     

    அவளுடைய இனிமை இன்னும் எப்படி விரிகிறது பாருங்கள். சிவனும் அவளும் பாதிப் பாதி. பதியோடு பாதியாகி அர்த்த நாரியானவள், அவள். காமனைக் கண்ணால் எரித்த கண்ணில் பாதி இவளுடையது! மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காக, கூற்றுவனைக் காலால் உதைத்த இடது கால் இவளுடையது! இப்படியெல்லாம் இருந்தும் எல்லா ‘credit –ஐயும்’ பரமசிவனுக்கே கொடுத்து விட்டாள் என்கிறார் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்!

     

    அது மட்டுமா? சிவன் அவளுக்குப் பாதி உடலைத் தந்ததாகவேதானே எப்போதும் சொல்கிறோம். அவளும் தன் பாதியைத் தந்ததால் அல்லவா இருவரும் சேர்ந்து அர்த்தநாரியானார்கள்! இருந்தாலும் அந்தப் புகழையும் பதிக்கே தந்து விட்டாள். அந்த அளவிற்கு ச்வீட்டானவள் அம்மா!

     

    அவளே ‘அவ்யாஜ கருணாமூர்த்தி”. காரணமின்றி கருணை செய்பவள். ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துப் பணி செய்தாலும், ஒரு இலையும் தண்ணீரும் மட்டும் வைத்துப் பூசித்தாலும், பக்தியுடன், உள்ளன்புடன் பூசித்தால், அவளுக்கு எல்லாமே ஒன்றுதான்.

     

    அன்னையின் அழகின், தோற்றத்தின், கடைக்கண் பார்வையின் சக்தியின், அவள் அருளின்,  இனிமைகளை, அவளின் மகிமைகளைப் பற்றிச் சொல்ல ஒரு ‘சௌந்தர்ய லஹரியே’ இருக்கிறது!

     

    மதுரமானவளே என்பதற்கு இனிமையானவளே என்றும் பொருள் கொள்ளலாம், மதுரையில் மீனாக்ஷியாக வசிப்பவளே என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறது அமரர் ‘அண்ணா’ எழுதிய ‘லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம்’. அவளைப் பற்றி இன்னும், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், இப்போதைக்கு அபிராமி அந்தாதியில் இதே பொருள் (மதுரம் + மதுரை) உள்ள ஒரு மதுரமான பாடலைச் சொல்லி முடித்துக் கொள்ளலாம்:

     

    கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
    களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
    மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
    பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

     

    “அபிராமி அன்னையே, உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் சூழ்ந்த இடத்தில் வசிக்கின்றவளே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் – இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.” –கவியரசர் கண்ணதாசன்.

     

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

    அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!

     

    அன்புடன்

    கவிநயா

     படத்திற்கு நன்றி :

    http://santhipriyaspages.blogspot.in/2010/09/thirumeeyachur-sree-lalithambigai.html

     

    Share
  • சகலகலாவல்லியே…!

     

    கவிநயா

    சகலகலா வல்லியே — உனைப் பாட
    தீந்தமிழ் வரும் துள்ளியே
    (சகலகலா)

    பண்ணிசை உனைப் பாட
    எண்திசை உனை வாழ்த்த
    கண்மிசை நீர் பெருக
    என்திசை நீ பார்க்க
    (சகலகலா)

    ஒவ்வொரு கலையிலும் உள்ளொளிர்ந்திருப்பாய்
    வேதத்தின் நாதமாய் நீ ஒலித்திருப்பாய்
    நான்முகன் நாவினில் நீ குடியிருப்பாய்
    நற்றமிழ் நான்பாட அகம்மகிழ்ந்திருப்பாய்
    (சகலகலா)

    சுப்புத்தாத்தாவின் சகலகலாவல்லி

    Share
  • எழில் மிகு அலைமகள்

     

    கவிநயா

    மதியொளி முகத்தினள் கதிரொளி நிறத்தினள்
    தாமரைக் கரத்தினள் தங்கத்தின் குணத்தினள்

    அலைகடல் நடுவினில் அவதரித்தவள் அவள்
    அரிதுயில் மாலவன் மனங்கவர் மனையவள்
    விரிமலர் மீதினில் வீற்றிருப்பவள் அவள்
    பரிகின்ற தாயென புவியினைக் காப்பவள்

    மரகத வண்ணனின் மார்பினில் உறைபவள்
    மறைக ளெல்லாம் போற்றும் மங்கலப் பெண்ணவள்
    கருவிழி இரண்டினால் உறுவினை அழிப்பவள்
    கவிமழை யில்மகிழ்ந்து கனிமழை பொழிந்தவள்

    எழில்மிகு அலைமகள்! (அடானா ராகத்தில் சுப்பு தாத்தா)

    படத்திற்கு நன்றி :

    http://www.astromuni.com/puja/mlk.asp

     

    Share
  • துர்க்கை

     

     கவிநயா

     துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் துன்பம் மிரண்டு போகுமே!

    நற்சொல்லாகி நாவில் நின்று நாளும் நம்மைக் காக்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தீமை ஓடிப் போகுமே!

    நற்பலன்கள் நம்மைத் தேடி வந்து நன்மை சேர்க்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் அச்சம் அச்சம் கொள்ளுமே!

    நற்றுணையாய் நிமிடந் தோறும் கூட நின்று காக்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் சஞ்சலங்கள் விலகுமே!

    சத்தியத்தைக் காட்டி நம்மின் சோதனைகள் தீர்க்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் வினைகள் யாவும் தீருமே!

    வித்தை போல நல்லவற்றைத் தந்து நம்மைக் காக்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தோல்வி தோற்றுப் போகுமே!

    நிற்க என்று சொல்லி வெற்றி நம்மை வந்து பற்றுமே!

     

    துர்க்கை என்னும் நாமம் சொன்னால் அமைதி நெஞ்சில் கூடுமே!

    ஆனந்தமே ஆனந்தமாய் நம்மை வந்து சேருமே!

     

    கற்க என்று காலன் வந்து பாடம் சொல்லும் முன்னமே

    துர்க்கை நாமம் நெஞ்சில் வைக்க என்றும் நன்மை நன்மையே!

     

    படத்திற்கு நன்றி

    http://iravuvaanam.blogspot.com/2011_10_01_archive.html

    Share