Author: டாக்டர்.சுபாஷிணி

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 55

    டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம்(2), பாயார்ன், ஜெர்மனி.

    முனைவர்.சுபாஷிணி

    இனவெறி, மதவெறி, மொழிவெறி ஆகியன மனிதரை மனிதப்பண்புகளை இழக்கச் செய்வன. தன் இனம், சமயம், மொழி ஆகியவற்றின் மீது மனிதருக்கு ஆர்வமும், ஈடுபாடும், பற்றும் இருக்கலாம். ஆனால் அது வெறியாக மாறும் தன்மையைப் பெறும் போது தன்னைப் போன்ற சக மனிதரையே, தன் கொள்கையை நிலைநாட்டுவதற்காக வதைத்து துன்புறுத்தி கொல்லும் கொடும்மனமும் மனிதருக்கு வாய்த்துவிடும் அபாயம் இருக்கின்றது. நாம் அறிந்த உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இனம், மதம், மொழி ஆகியவற்றிற்காக இதுகாறும் இந்த உலகம் சந்தித்திருக்கும் மனித குல கொடூரங்கள் என்பது மிக அதிகம். பசுமை நிறைந்த புல்வெளிகள் ரத்தக்காடாக இருந்த வரலாற்று நிகழ்வுகள் கற்பனைகள் அல்ல. அவை உண்மை சம்பவங்கள். இந்த இன, மத, மொழி வெறியோடு தமிழர்களை இருக்கப்பற்றிக்கொண்டிருக்கும் மேலும் ஒரு வெறித்தனமான பொருள் ஒன்று உண்டு என்றால் அது தான் சாதி என்பது. சாதிக்காக தன் சக இன மனிதரையே மனதாலும் உடலாலும் வதைத்து துன்புறுத்தும் மனிதர்கள் நம்மிடையே ஏராளமானோர் உலவத்தான் செய்கின்றனர். இந்த வெறித்தனங்களெல்லாம் எவ்வகையிலும் யாருக்கும் நன்மையைத்தராதவை. கொடுமைகளும் கொடூரங்களும் வன்முறைகளும் அழிக்கும் தன்மையுடயவை அன்றி எந்த நற்பலனும் மனித குலத்திற்கு தராதவை.

    அன்று, ஐரோப்பா முழுமையையும் ஆரிய ஜெர்மானிய இனம் ஆளவேண்டும் என்னும் பேராசை அடோல்ஃப் ஹிட்லரின் மனதை ஆக்கிரமித்திருந்தது. அவரது கொள்கையைச் சித்தாந்தமாக்கி அதனைப் பரப்பினர் அவரது தளபதிகள். ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை வாசிக்கும் பொழுது அவரை விட அவரது சகாக்களும் அவர் கட்சியின் அரசியல் பொறுப்பாளர்களும், ஆரியரல்லாதோர், அதிலும் குறிப்பாக யூதர்களுக்கு மிக அதிகமாக கொடுமைகள் செய்தவர்கள் என்ற தகவலை அறிய முடியும்.

    ஜெர்மனியில் நாஸி கொடுமையைப் பற்றி பேசும் பலர் அதே வேளையில் இன்னும் சற்று வட மேற்கே பால்டிக் நாடுகளான, லித்துவானியா போன்ற நாடுகளில் அதே காலகட்டத்தில் இவர்கள் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை.

    இதுமட்டுமா..? நாஸி கொடுமையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட மிகப் பெரிது என அறியப்படுவது துருக்கி ஆர்மேனியர்களை ஒன்றாம் உலகப்போர் காலகட்டத்தில் கொன்று குவித்த சம்பவம். ஜெர்மனியின் நாஸி கொடுமை பேசப்படும் அளவிற்கு இந்தக் கொடும் நிகழ்வு உலக அளவில் பேசப்படுவதில்லையே என்ற வியப்பு எனக்கு மட்டுமல்ல, பொதுவாக ஐரோப்பிய வரலாற்றில் ஆர்வம் உள்ளோருக்கு மனதில் எழும் கேள்வியே.

    வன்முறைகள் என்று தொடர்ந்தால் இப்படி யோசித்துக் கொண்டே செல்லலாம். சரி..டாஹாவ் மனித சித்ரவதை முகாம் பற்றி மேலும் தொடர்வோம்.

    as
    சித்ரவதை செய்யப்படும் பங்கர் பகுதியின் வெளித்தோற்றம்

    இந்த முகாம் இயங்கிய 12 ஆண்டுகாலத்தில் அரசியல் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்த பங்கர் இருக்கும் பகுதி SS என்ற குறியீட்டுப் பெயரால் அழைக்கப்பட்டது. இங்கு அடைத்து வைக்கக்கொண்டு வரப்படும் கைதிகள் இங்கிருக்கும் பங்கரின் மற்றொரு பகுதியில் பல அடுக்கு படுக்கைகள் வைத்த நீண்ட அறையில் தங்கி வருவர். ஆனால் பங்கர் பகுதியில் தான் தனித்தனியாக இவர்களைக் கொண்டு வந்து அடித்து துன்புறுத்தி தகவல்களைப் பெறும் கொடூரங்கள் நிகழும்.

    as1

    பங்கர் உள்ளே

    ஒவ்வொரு நாள் காலையும் வரிசையாக எல்லா கைதிகளும் வெளிப்புற பகுதிக்கு வந்து விடவேண்டும். இவர்கள் அங்கே வெயிலோ மழையோ, பனியோ எதுவாகினும் 1 மணி நேரம் காலையில் நிற்க வேண்டும். அப்போது கைதிகள் எண்ணிக்கை எடுக்கப்படும். யாரேனும் தப்பி ஓடியிருந்தால் ஏனையோர் மேலும் பல மணி நேரங்கள் தண்டனையாக அங்கேயே நிற்க வேண்டும். மின்சாரம் பொருத்தப்பட்ட கம்பிகளையும் மீறி ஒரு சிலர் தப்பித்துச் சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இப்படி பல மணி நேரங்கள் இங்கே நிற்கும் வேளையில் சிலர் அங்கே யே மயங்கி விழுந்து இறந்தும் போயிருக்கின்றனர்.

    as2

    பங்கர் அறையின் முன்

    தற்சமயம் பங்கர் முழுதுமே அருங்காட்சியமாக்கப்பட்டிருப்பதால் இங்கு இறந்தோர் பட்டியல் அவர்களது விபரங்கள் ஆகியன இங்கே புகைப்படங்களோடு வழங்கப்பட்டுள்ளன. அப்படி இறந்தோரில் ஜோர்ஸ் எல்சர் என்பவரும் ஒருவர். இவர் 1939ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி அடோல்ஃப் ஹிட்லரை வெடிகுண்டு வைத்து கொல்ல முயற்சித்தார். அது தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக இவர் சிறைபிடித்து வந்து இந்த டாஹாவ் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 9ம் தேதி 1945ம் வருடம் இவர் சித்ரவதை செய்யப்பட்டு இதே முகாமில் கொலை செய்யப்பட்டார். இவரைப்போல இறந்தோர் ஏராளம்.

    as3

    விசாரனைக்கு அழைத்து வரப்படும் இக்கைதிகள் பலவகை சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படி சித்ரவதை செய்யப்பட்டு ஆனால் பின்னர் உயிருடன் இங்கிருந்து வெளியேறியவர் பூசன்கைகர். இவரை சிறை அதிகாரிகள் 1934ம் ஆண்டில் பெப்ரவரி முதல் அக்டோபர் வரை ஒரு இருட்டு அறையில் காலில் இரும்பு சங்கிலி கட்டி அடைத்து வைத்து சித்ரவதைச் செய்தனர். இவர் அதனை படமாக வரைந்து கொடுக்க அந்தப் படம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    as4

    இதே போன்ற மற்றொரு புகைப்படம். கொலைசெய்யப்பட்ட யூத சிறைக்கைதி லூயுஸ் ஸ்லோஷ் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை விளக்கும் வகையில் இங்குள்ளது. இவர் இறந்த போது கொலைசெய்யப்பட்டாலும் அறிக்கையில் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்றே எழுதப்பட்டதாகவும் இங்குள்ள குறிப்பு சொல்கின்றது.

    as5

    இப்படி ஏராளமான நிகழ்வுகள் வன்கொடுமைகள் இங்கே நிகழ்ந்துள்ளன.

    அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் இங்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட போது அடைபட்ட சில சாமான்கள் வைக்கும் அறைகளில் கொத்து கொத்தாக இறந்த மனிதர்களின் சடலங்களைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர். நாஸி அரசியல் சித்தாந்தத்திற்கு எதிர் குரல் எழுப்புவோரையெல்லாம் பிடித்து வந்து துன்புறுத்துவதோடு அவர்களைக் கொலை செய்து குவித்து வைத்த்திருந்தனர் இந்த முகாமின் அதிகாரிகள் சிலர்.

    as6

    அவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். அடுத்த பதிவில் தொடர்ந்து வாருங்கள்!

    தொடரும்…
    சுபா

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 54

    டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம், பாயார்ன், ஜெர்மனி

    முனைவர்.சுபாஷிணி

    1933ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அடோல்ப் ஹிட்லர் ஒன்றிணைக்கப்பட்ட ஜெர்மனியின் சான்சலராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அரசியல் எதிரிகளைச் சிறைவைப்பதற்கென்றே பிரத்தியேகமாக ஒரு சித்ரவதைமுகாம் ஜெர்மனியின் தெற்குப் பகுதி மானிலமான பாயார்னில் டாஹாவ் என்ற கிராமப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இந்தச் சிறை அடுத்தடுத்து விரிவாக்கப்பட்ட ஜெர்மானிய ஆட்சிக்குட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட ஏனைய சிறைகளுக்கு ஒரு மாடலாக வன்முறைகளின் பள்ளிக்கூடமாக அமைந்தது. 12 ஆண்டுகள் இந்தச் சித்ரவதைமுகாம் பயன்பாட்டில் இருந்தது. இந்த 12 ஆண்டுகள் ஐரோப்பா முழுமையும் நாஸி ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் கூடமாக இது திகழ்ந்தது. இந்த 12 ஆண்டு காலகட்டத்தில் இச்சித்ரவதை முகாமில் 200,000 சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 41,500 பேர் நாஸீ அதிகாரிகளால் வதைத்து துன்புறுத்தி கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் நாஸி ஜெர்மனியைத் தாக்கி ஹிட்லர் கொல்லப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன் அதாவது, 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி இச்சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டோர் அமெரிக்கப் படையினரின் உதவியால் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.

    as

    இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. இன்றைய ஜெர்மனியை அன்றைய ஜெர்மனியோடு ஒப்பிட முடியாது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்கின்றோம். அன்று இருந்த ஆரிய சமுதாயம் என்ற இனவெறி, ஈடுபாடு இன்று இல்லை. அன்றைய ஆவணப் படங்களையும் அக்கால நிகழ்வை ஒட்டி எடுக்கப்படுகின்ற சினிமா படங்களையும் பார்க்கும் போது ஜெர்மனியில் இப்படியும் கூட நடந்திருக்குமா என்ற அய்யத்தை உருவாக்குவதை மறைக்க முடியவில்லை.

    அன்றைய நாஸி கொடுமைகளைப் பற்றி பேசி தன்னைத்தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் தைரியசாலிகள் தான் இன்றைய ஜெர்மானியர்கள். தன் இனம் வேற்று இனத்திற்குச் செய்த தவற்றை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் திறந்த மனத்துடன் பேச இம்மக்கள் தயங்குவதில்லை. நாஸி போதனைகளால் மயங்கிக் கிடந்த மனிதர்களில் எஞ்சியிருப்பவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரலாற்றில் முக்கிய நாட்களில் நடைபெறும் சில விவாத நிகழ்வுகளில் பார்க்கக்கூடிய வாய்ப்பு அமைகின்றது. அவர்களது அக்காலத்தைய மன நிலை, அவர்களை எவ்வாறு அவர் தம் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர், ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை குடும்பத்தாரையெல்லாம் அழைத்து வந்து வைத்துக் கொண்டு அலசும் தைரியமும் மனத்திடமும் பாராட்டுதலுக்குறியது.

    எந்த இனம் அல்லது எந்த மனிதர் தன் தவற்றை தானே பார்த்து அலசி ஆராய்ந்து .. “ஆம் நான் இதனைச் செய்தேன். இது தவறு. அதற்கான விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன்” என நினைக்கின்றாரோ அவர் தன்னைப் புடம் போட்டுக் கொண்டு மேன்மையடையமுடியும். அவ்வினம் தன்னை திருத்திக் கொண்டு பரந்த நோக்கத்தைப் பெற முடியும். ஆனால் அதற்கு எதிர்மாராக “நான் செய்ததெல்லாம், செய்வதெல்லாம், செய்யப்போவதெல்லாம் நன்மை உண்மை” என்று வாதாடும் நபர்களும் சமூகமும் தன்னிலையை மேம்படுத்திக் கொள்ள இயலாது என்பது தான் சமூகவியல் உண்மை.அந்த வகையில் இக்கால ஜெர்மானிய சமூகம் நாஸி காலகட்டத்திலிருந்து பல பாடங்களைக் கற்று புடம்போட்டு செம்மை படுத்தப்பட்ட சமூகமாகத் திகழ்கின்றது. அதன் விளைவாக இன்றைய ஜெர்மனியில் இன்றைய வெளியுறவுக் கொள்கை என்பது மனிதாபிமானம் மிக்க ஒரு கொள்கையாக உலக நாடுகள் அங்கீகரிக்கின்ற ஒரு முத்திரையைப் பெற்றிருக்கின்றது.

    டாஹாவ் கிராமத்தில் இருக்கும் நினைவுச் சின்னப் பகுதி 1965 ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சித்ரவதை முகாமை உருவாக்குவதில் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இங்கு கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தோர் பலர் இணைந்து இந்த நினைவகத்தை முழுமையாக்கியிருக்கின்றனர்.

    as1
    டிக்கட் பெற்றுக் கொண்டு சித்ரவதை முகாம் நோக்கி செல்லும் பாதை

    டாஹாவ், பவேரியா மானிலத்தின் தலைநகரமான மூனீக் செல்வதற்கு முன்னராக இருக்கின்றது. இப்பகுதிக்குச் செல்லும் சாலையில் இச்சித்ரவதைமுகாம் பற்றிய தகவல் சாலைகளில் ஆங்காங்கே காணக்கூடியதாக இருப்பதால் இந்த இடத்தைச் சென்று சேர்வதில் எவ்வகைச் சிரமமும் இருக்காது. நான் வாகனத்தில் சென்றதால் நேரடியாக முகாமின் முன் வாசல் பகுதி வரை சென்று கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.

    வழிகாட்டிப் பலகைas2

    இங்கே பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் 8 யூரோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கும் வயதானவர்களுக்கும் சலுகை உண்டு. மலேசியாலிருந்து என்னைச் சந்திக்க வந்திருந்த என் தோழி சரஸ்வதியையும் என் உறவினர் திலகேஸ்வரியையும் என்னுடன் அன்று அழைத்துச் சென்றிருந்தேன்.

    இச்சித்ரவதை முகாம் நினைவகத்தை அமைக்க பவேரிய மானிலம் பொருளாதார உதவியை வழங்கியுள்ளது. முகாம் இருக்கும் பகுதியில் ஓரிடத்தில் 2003ம் ஆண்டு வாக்கில் கண்காட்சி கூடம் ஒன்று நிர்மாணித்து முடிக்கப்பட்டது. இது, வதை முகாமில் இருந்த ஐரோப்பாவின் பல நாட்டு கைதிகள் பற்றிய தகவல்களைச் சொல்வதாகவும், அந்த நாடுகளில் அவர்களது அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி விவரிக்கும் தகவல் களஞ்சியமாகவும் இருக்கின்றது. இங்கே ஒரு தனி அறையில் தொடர்ச்சியாக குறும்படங்கள் குறிப்பிட்ட சில மொழிகளில் திரையிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டும் வருகின்றது.

    as3

    அன்று, அரசியல் கைதிகள் ரயிலில் அழைத்து வரப்படுகின்றனர்

    as4

    இன்று, அதே பகுதி

    டாஹாவ் சித்ரவதைமுகாம் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. வெளியிலிருந்து பார்க்கும் போது இன்னாளைய சிறையை ஒத்த ஒரு அமைப்பு. அதனைத் தொடர்ந்து உள்ளே செல்லும் போது சிறிய கண்ணாடி கூடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே தான் கட்டணம் கட்டி டிக்கட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கே நினைவுச் சின்னங்கள் விற்கும் கடை, உணவு அங்காடி ஆகிய பகுதிகள் இருக்கின்றன. வெளியே வந்ததும் அங்கே அம்பு குறியிடப்பட்ட பாதை வழிகாட்டியைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு பகுதியாக பார்த்து முடிக்கலாம். நாங்கள் டிக்கட்டை பெற்றுக் கொண்டு அம்புக்குறியிட்ட பாதையில் சித்ரவதை முகாமை நோக்கி நடக்கலானோம். முகப்புப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 150மீ தூரம் இந்த முகாம் உள்ளது. நடந்து வரும்போது நமக்கு வலது புரத்தில் இச்சித்ரவதை முகாம் இருக்கின்றது. இடது பக்கத்தில் ரயில் பாதை தண்டவாளம் இருக்கின்றது. இப்போது இங்கே ரயில் பயணச் சேவை நடப்பில் இல்லை. ஆனால் அன்று இருந்திருக்கின்றது. இந்த ரயிலில் தான் சிறைப்பிடிக்கப்பட்ட அரசியல் கைதிகளை முகாமிற்கு அழைத்து வருவார்கள். அங்கே நின்று அவர்கள் மன நிலையை சற்றே யோசித்துப் பார்க்கும் போது அச்சம், வேதனை, கோபம், ஆகியவற்றின் பிரதிபலிப்பின் உணர்வு அலைகள் நம்மையும் சூழ்வதை நம்மால் தடுக்க முடியாது.

    as5

    ​சித்ரவதை முகாம், முன் வாசலில்

    சரி, வலது புரம் திரும்பி சித்ரவதை முகாமிற்குள் செல்வோம். தொடர்ந்து வாருங்கள்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 53

    எல்ஸாஸ் சமூக அருங்காட்சியகம் (2), ஸ்ட்ராஸ்போர்க், பிரான்சு

    முனைவர்.சுபாஷிணி

    ஸ்ட்ராஸ்பொர்க் படுகொலை நிகழ்வு என்பது ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் வன்முறை சமபவங்களின் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறும் ஒரு நிகழ்வு. காதலர் தினம் என நாம் இப்போது கொண்டாடும் பெப்ரவரி 14ம் தேதி, 1349ம் ஆண்டில் ஒரு கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதாவது, இதே நாளில் 1349ம் ஆண்டில், ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் வசித்து வந்த யூதமக்களை அவ்வூர் மக்கள் உயிருடன் பிடித்து கொளுத்தி கொன்ற கருப்பு நாள் இது என்றும் குறிப்பிடலாம். யூதர்களில் பலர் கொல்லப்பட்டும், இருந்த ஏனையோர் அந்த நகரத்தை விட்டே அகற்றப்பட்ட நிகழ்வும் இந்த நாளிலும் அதன் தொடர்ச்சியான நாட்களிலும் இந்த நகரில் நடந்தது.

    asu

    1348ம் ஆண்டின் வசந்தகாலம் தொட்டே யூதர்களின் மீதான வெறுப்புணர்ச்சி என்பது இப்பகுதியிலும் அதன் சுற்றுப் புறத்திலும் பரவி வர ஆரம்பித்தது. இதன் அடிப்படையில் இப்போது சுவிஸர்லாந்தின் ஒரு முக்கிய நகரமான பாசலிலும், இன்றைய ஜெர்மனியின் தென்மெற்கு நகரங்களில் ஒன்றான ஃப்ரைபுர்க் நகரிலும் அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் யூதர்களை உயிருடன் பிடித்துக் கொல்லும் நிகழ்வுகள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக 1349ம் ஆண்டில் பெப்ரவரி 14ம் தேதி ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்திலிருந்து ஒட்டு மொத்தமாக யூதர்கள் அகற்றப்பட்டார்கள்.

    இந்த வன்கொடுமைகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது யூதர்களின் பொருளாத மேண்மை தான். ஐரோப்பாவின் அன்றைய நகரங்கள் பலவற்றில் பணம் வட்டிக்குக்கொடுத்துப் பெறும் வகையில் செல்வாக்குடன் யூதர்கள் இருந்தார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது யூதர்களுக்கும் ஏனைய பிற சமூகங்களுக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை ஒத்ததாக அமைந்த நிலை, பொருளாதார ஆதிக்க நிலை ஆகிய யூதர்கள் மீதான பரவலான வெறுப்புணர்ச்சியை ஏனைய சமூகத்தினரிடம் உருவாக்கியது. இதே நிலை தான். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால சூழலில் ஜெர்மனியில் யூதர்களின் இன அழிப்பு நிகழ்வுக்கும் நாஸி சிந்தனை எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றே.

    ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் 1349ம் ஆண்டு வாக்கில் ஏற்கனவே இருந்த யூதர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியோடு அப்போது மிக வேகமாகப் பரவி பலரது உயிரைக் கொன்ற ப்ளேக் நோயும் ஒரு முக்கிய காரணமாகவே அமைந்தது. யூதர்கள் தான் இந்த ப்ளேக் நோய் பரப்பும் நச்சை கிணற்று நீரில் கலந்து விட்டதாகச் சொல்லி அதனையே ஒரு காரணமாக வைத்து யூதர்களைப் பிடித்து வந்து உயிரோடு கொளுத்திக் கொன்றனர். இந்த ப்ளேக் நோய், அது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் ஐரோப்பாவின் பல நகரங்களில் பெப்ரவரி மாதம் திருவிழாக்கள் நடைபெறும் அதில் மக்கள் கொடூரமான வகையில் முக அலங்காரம் செய்து கொண்டு அசுரன், பேய் பூதம், அங்கவீன மனிதர்கள் என்ற வகையில் ஆடையலங்காரம் செய்து கொண்டு தெருக்களில் ஊர்வலம் வருவர். இன்று கேளிக்கை நிகழ்வுகளில் ஒன்றாகிப்போன ப்ளேக் நோய் திருவிழா ஐரோப்பாவை கடந்த 1000 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அவ்வப்போது தாக்கி மக்கள் தொகை எண்ணிக்கையில் மிகப் பெரிய எண்ணிக்கை குறைய ஒரு காரணமாக அமைந்ததை மறந்து விட முடியாது.

    as1

    இப்படி பல வரலாற்று சம்பவங்கள் ஸ்ட்ராஸ்போர்க் நகரிலே நடந்துள்ளன. அப்படியான பல தகவல்களை உள்ளடக்கிய எளிமையான ஒரு அருங்காட்சியகமாகவே இந்த எல்சாஸ் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. எல்சாஸ் மக்களின் வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் 5000க்கும் மேற்பட்ட காட்சிப்பொருட்கள் இங்குள்ளன.

    as2

    ஆண் பெண், குழந்தைகளுக்கான பாரம்பரிய உடை, காலணிகள் தலையலங்காரப் பொருட்கள் ஆகியன ஒரு பகுதியில் உள்ளன. வீட்டு பொருட்களான படுக்கை அறை அமைப்பு, அலமாரி, சாப்பாட்டு மேசை, சமையல் பொருட்கள், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஆகியன ஒரு தளத்தில் சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    as3

    இப்பகுதியின் வரலாற்றுச் சம்பவங்களைச் சொல்லும் பட்டயங்கள், ஆவணங்கள், நில வரைபடங்கள் ஆகியன ஒரு பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

    as4
    இந்த அருங்காட்சிகத்திற்கு உள்ளே சென்று பார்த்து வர கட்டணம் தேவையில்லை. இது மையச் சாலை பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி 23-25 quai Saint-Nicolas, 67000 Strasbourg. எல்சாஸ் சமூகத்தினரின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோரும், ஆய்வு செய்ய விரும்புவோரும் நிச்சயம் சென்று பார்த்து வர வேண்டிய அருங்காட்சியகங்களில் இது முக்கியமானது.

    as5

    ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் மேலும் சில முக்கிய அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் பிரிதொரு முறை எழுதுகின்றேன்.

    அடுத்த பதிவில் மேலும் ஒரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வரவும்.!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 52

    எல்ஸாஸ் சமூக அருங்காட்சியகம், ஸ்ட்ராஸ்போர்க், பிரான்சு

    முனைவர்.சுபாஷிணி

    ஐரோப்பாவில் அதன் அதிகாரப்பூர்வ பார்லிமண்ட் இருக்கின்ற நகரமாக விளங்குவது பிரான்சில் வடகிழக்கு நகரங்களில் ஒன்றான ஸ்ட்ராஸ்போர்க். இந்த ஐரோப்பிய பார்லிமெண்ட் ஒவ்வொரு ஆண்டும் 12 முறை கூடும் போதும் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஐரோப்பிய நாடாளுமன்ற செயற்பாடுகள் பற்றிய பல்வேறு விடயங்கள் இங்கு அலசி ஆராயப்படுவது வழக்கம். பெல்ஜியம் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் இருக்கும் மற்றொரு ஐரோப்பிய பார்லிமெண்டின் பகுதியை விட முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக இந்த பார்லிமண்ட் அமைந்துள்ளது. இங்குதான் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படுகின்றது என்பது இதன் சிறப்பை மேலும் புரிந்து கொள்ள உதவும்.

    2bad3b72-fe7c-4c8c-9775-3a27c5358631
    ஐரோப்பிய பார்லிமென்ஸ் – ஸ்ட்ராஸ்போர்க்

    ஐரோப்பாவின் அரசியலமைப்பிற்கு மையப் புள்ளியாக விளங்கும் இந்த மாநிலம் வரலாற்று பழமைக்குச் சிறிதும் குறைந்ததல்ல. ஏறக்குறை கி.மு.1500 ஆண்டு வாக்கிலேயே செல்ட்டிக் இனக்குழுவினர் இங்கு இருந்தமைக்குச் சான்றாக இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்கள் கிடைத்திருக்கின்றன. அதன் பிறகான ரோமானியப் பேரரசின் தாக்கம் இப்பகுதியில் அமைந்ததற்குச் சான்றாக இன்றளவும் காணப்படும் சுவர்களின் எச்சங்கள், அகழ்வாய்வுச் சான்றுகள், ரோமானிய தெய்வங்களின் சிலைகள், போர் கருவிகள் ஆகியனவை அமைந்திருக்கின்றன. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பகுதி ஜெர்மானியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாக அமைந்திருந்தது.

    இப்பகுதியில் புழக்கத்தில் இருந்த மொழி அல்சேட்டியன் என அழைக்கப்படுவது. இது இன்றைய ஜெர்மன், அதாவது டோய்ச் மொழியின் ஒரு வகை பேச்சு மொழி. இந்த மொழியை விட தற்சமயம் இங்கு பிரஞ்சு மொழியே விரிவாகப் பேசப்படுகின்றது.இதற்கு முக்கியக் காரணம், இப்பகுதி பிரான்சு நாட்டின் எல்லைக்குள் தற்சமயம் இருப்பதேயாகும். ஆயினும் எனது நேரடி அனுபவத்தில் காணும் போது இங்குள்ள மக்கள் ப்ரென்சு மொழியும் டோய்ச் மொழியும் என இரு மொழி தெரிந்தவர்களாகப், பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

    a1
    ரைன் நதியால் சூழப்பட்ட ஸ்ட்ராஸ்பொர்க் நகரம்

    பிரான்சு நாட்டின் எல்லைக்குள் இருந்தாலும் எல்சாஸ் என அழைக்கப்படும் இப்பகுதி முழுமையாக பிரென்சு பண்பாடு மற்றும் கலாச்சரத்தை உள்வாங்கிய பகுதியாக இல்லை. அதே போல, ஜெர்மனியின் பல நூற்றாண்டு தாக்கம் இப்பகுதியில் இருந்தாலும் ஜெர்மானிய கலாச்சரமோ பண்பாடோ இங்கு நிலைபெற்றது என்றும் சொல்வதற்கில்லை. இப்பகுதி எல்சாஸ் என்ற தனித்துவத்துடன், இரண்டு பெரு நாடுகளுக்கிடையில் தனித் தீவாக விளங்குவதே இதன் தனிச் சிறப்பாக அமைகின்றது.

    இப்பகுதியின் மாறுபட்ட தன்மை மட்டுமே இதனைத் தனித் தீவாக அமைத்திருப்பதாக நினைத்துவிட வேண்டாம். எல்ஸாஸ் பகுதியின் முக்கிய நகரான ஸ்ட்ராஸ்பொர்க் நகரமே ரைன் நதி சூழப்பட்டு ஒரு தீவாகவே அமைந்திருக்கின்றது. இந்த நில அமைப்பு இந்த நகரத்தின் எழிலுக்கு ஒரு கூடுதல் தனிச்சிறப்பாக அமைந்திருக்கின்றது.

    எல்ஸாஸ் எனப்படும் பகுதி Alsace-Champagne-Ardenne-Lorraine என்ற மாவட்டப்பகுதியில் அமைந்திருக்கின்றது. எல்ஸாஸ் மக்களின் மொழி எப்படி தனித்துவம் வாய்ந்ததோ அதே போல இம்மக்களின் உடை யலங்காரம் வித்தியாசமானது. வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் கருவிகள் விவசாயக் கருவிகள் ஆகீயனவும் இப்பகுதிக்குண்டான தனிச்சிறப்பைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இருந்திருக்கின்றன.

    a2

    ​காளானும், சீஸும் கலந்த ஃப்ளாம்கூகன்

    எல்ஸாஸ் பகுதிக்கான பிரத்தியேக உணவாக அமைவது ஃப்ளாம்கூகன். இது பீஸா போன்ற வகையில் அமைந்த ஒரு உணவு. ஆனால் மிகத்தட்டையாக மெலிதாக இருக்கும். இப்பகுதியில் மட்டுமன்றி ஜெர்மனியின் மேற்கு மானிலங்கள் பலவற்றில் பிரபலமாகிவிட்ட உணவு இது. அதிலும் குறிப்பாக இலையுதிர் காலத்து சாலை நிகழ்வுகளில் கிடைக்கக்கூடிய உணவு வகைகளில் இது கட்டாயம் கிடைக்கும்.

    a3

    எல்ஸாஸ் பற்றிய இவ்வகையான பல விசயங்களை உள்ளடக்கிய ஒரு தகவல் கூடமே இன்றைய பதிவில் இடம்பெறும் இந்த அருங்காட்சிகம். எல்ஸாஸ் அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் ஸ்ட்ராஸ்புர்க் நகரின் மையப் பகுதியின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1902ம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் உருபெற்றது. இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கட்டிடமும் எல்சாஸ் கட்டிட அமைப்பில் அமைந்த ஒரு கட்டிடமேயாகும்.

    அருங்காட்சிகத்தின் உள்ளே சென்று காண்போமே..!

    தொடரும்…!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 51

    முனைவர்.சுபாஷிணி

    ஆதிகலாமணி எகிப்து கோயில், மட்ரிட், ஸ்பெயின்

    ஸ்பெயின் நகரின் தலைநகரமான மட்ரிட் நகரில் பணி நிமித்தமாக 18 மாதங்கள் ஒவ்வொரு வாரமும் செல்லும் நிலை எனக்கு ஏற்பட்டிருந்தது. ஜூலை மாதம் 2012 தொடங்கி 2014 இறுதி வரை இப்படி ஒவ்வொரு வாரமும் பயணம் மேற்கொள்ள வேண்டிய சமயங்களில் மாலை வேளைகளில் கிடைக்கும் நேரத்தில் நான் எனது தங்கும் விடுதிக்கு அருகாமையில் நடைப்பயணம் செல்வதுண்டு. அப்படி செல்லும் போது அடிக்கடி நான் கண்டு தரிசித்த ஒரு கோயில் ஆதிகலாமணி கோயில்.

    asu

    கோயிலின் முன் வாசல் தோற்றம்

    ஆதிகலாமணி கோயிலா..?
    ஸ்பெயின் தலைநகரமான மட்ரிட் நகரிலா?
    இது தமிழ்ப்பெயராக இருக்கிறதே?
    இந்தியர்கள், அதிலும் தமிழர்கள் கட்டிய கோயிலாக இருக்குமோ என்ற சிந்தனை உங்களுக்கு வரலாம்.

    இக்கோயிலைச் சென்றடைந்து அதன் முகப்புப் பகுதியில் உள்ள கோயில் பெயர், கட்டிய ஆண்டு ஆகியன பற்றி அறிந்து கொள்ள விபரங்களை நான் வாசித்த போது ஆச்சரியத்தில் அதிசயித்துப் போனேன், இந்த ஆதிகலாமணி கோயில் என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயரைப் பார்த்து. பெயர் நமக்கு தமிழ்ப்பெயரை நினைவுறுத்தினாலும் இது தமிழர்கள் கட்டிய கோயில் அல்ல. தமிழகத்தில் கட்டிய கோயிலுமல்ல? பிறகு எங்கே யாரால் கட்டப்பட்டதாக இருக்கும் என்ற ஐயம் எழுகின்றதல்லாவா? அதே ஆவல் தான் எனக்கும் எழுந்தது. அதனை அறிந்து கொள்ள கோயிலே அருங்காட்சியமாக இருக்கும் இக்கோயிலுக்குள் சென்றேன்.

    இது எகிப்து நாட்டில் கட்டப்பட்ட கோயில். எகிப்து நாட்டின் தெற்குப் பகுதியில் அதாவது சூடான் எல்லைக்கு மேலே ஏறக்குறைய 15 கிமீ தூரத்தில் அஸ்வான் ஏரி என்ற ஒரு மாபெரும் கடலை ஒத்த ஏரியின் பெயரை கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பகுதியில் இருந்த ஒரு கோயில் தான் இது.

    என்ன புதிராக இருக்கின்றதே.. இருந்த கோயில் என்று சொல்கின்றேனே என்ற ஆச்சரியம் உங்களுக்கு எழலாம். ஆம். இது அங்கே இருந்த ஒரு கோயில் தான். முழுமையாக எகிப்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்டு ஸ்பெயின் நாட்டின் தலைநகராம் மட்ரிட்டின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆச்சரியத்தில் விழிகள் விரிகின்றதா..? வாருங்கள் ஆலயத்தின் உள்ளே சென்று மேலும் பல விபரங்களை அறிவோம்.

    இக்கோயில் ஐசிஸ் எனப்படும் தாய்தெய்வத்திற்காக உருவாக்கப்பட்ட நைல் நதிக்கரை ஓரத்து வளாகத்தில் ஆமூன் என்ற கடவுளுக்காக பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட கோயில். இது கட்டப்பட்ட காலம் கி.மு 2ம் நூற்றாண்டு. இதனைக் கட்டியவர் தாம் ஆதிகலாமணி [Adikhalamani (Tabriqo)] என்ற குஷைட் பகுதியின் அரசர். ஆதிகலாமணி இக்கோயிலை முதலில் கட்டினாலும் இதனை சிறிது சிறிதாக விரிவாக்கியவர்கள் 4ம் தாலமி, 8ம் தாலமி, 12ம் தாலமி ஆகிய கிரேக்க அரசர்கள். பிறகு எகிப்து ரோமானிய அரசின் ஆட்சிக்குட்பட வேளையில் இதே கோயிலை மேலும் விரிவாக்கினர் மன்னன் ஆகஸ்டஸும் மன்னன் டிபேரியஸும்.

    மன்னன் ஆதிகலாமணி ஹார்ப்போக்ரெட்டஸ் வாட்ஜே ஆகிய கடவுளர்களுக்கு நைவேத்தியம் அளிக்கும் காட்சி மேலே கோயிலின் உள்ளே கல்வெட்டாக, கீழே வரை படமாக.

    asu1

    asu2

    1960ம் ஆண்டு எகிப்தின் விவசாயத்தை வளமாக்க அஸ்வான் ஏரிப்பகுதியில் அணை கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. அஸ்வான் பகுதி எகிப்தை பொருத்த வரை மிகப் பிரமாண்டமான பல கோயில்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னங்களையும் கொண்டிருக்கும் பகுதி. ஆக இங்கே இருந்த ஏரியைப் பெரிதாக்கி அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது யுனெஸ்கோ இந்தப் பகுதில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களை பாதுகாக்கவும், எகிப்திற்கே நீர்வளத்தைப் பெருக்கும் அணையைக் கட்டவும் உதவ கரம் கொடுக்கக்கோரி உலக நாடுகளுக்கு விண்ணப்பம் வைத்தது.

    அப்போது ஸ்பெயின் நாடு எகிப்தில் இருக்கு உலகப் பிரசித்தி பெற்ற அபு சிம்பெல் கோயிலை பெயர்த்து எடுத்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அங்கே வைத்து எழுப்பி அதனை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டு செய்து காட்டியது. எகிப்தின் மிகச்சிறந்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கி.மு.13ம் நூற்றாண்டு எகிப்திய பண்டைய கோயில் அபு சிம்பல்.

    ஆக, இந்த மாபெரும் உதவியைச் செய்த ஸ்பெயின் நாட்டிற்கு தமது நன்றியை செலுத்தும் முகமாக தனது கோயில்களில் ஒன்றை எகிப்து நாடு ஸ்பெயின் நாட்டிற்கு வழங்கியது. அது தான் Temple of Debod என அழைக்கப்படும் இந்த ஆமூன் கடவுளுக்காக ஆதிகலாமணி அரசன் கட்டிய கோயில்.

    எங்கோ ஒரு மன்னன் கட்டிய கோயில், எங்கோ ஒரு நாட்டில் முழுதாக கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது வியப்பு  தரக்கூடிய ஒரு விசயம் அல்லவா?

    asu3

    ​கோயிலின் கர்ப்பக்கிருகம்

    டெபோட் என்னும் கிராமத்தில் ஆதியில் இக்கோயில் இருந்ததால்  இங்கே மட்ரிட் நகரிலும் இந்தக் கோயில் அதே பெயருடன் அழைக்கப்படுகிறது. கோயிலின் உள்ளே சென்றால் ஒரு பக்கத்தில் ஆமூன் ரா வின் கர்ப்பக்கிரகப் பகுதி அமைந்திருப்பதைக் காண்போம். அடித்தளம் சென்றால் இக்கோயிலின் அருங்காட்சியகத்தைக் காண்போம். இந்த அருங்காட்சியகத்தில் முதலில் இக்கோயில் இருந்த அஸ்வான் நகரப் பகுதிகள், அங்கிருந்து எவ்வாறு இக்கோயில் பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்டது, விமானத்தில் எவ்வாறு இக்கோயிலின் முழு பகுதியும் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன ஆகியன தொடர்பான எல்லாத் தகவல்களும் புகைப்படங்களும் விளக்கங்களுமாக வழங்கப்பட்டுள்ளன.

    asu7

    கடவுள் ஆமூன் – லேசர் வெளிச்சமாக

    மட்ரிட் நகரில் இக்கோயில் இருக்கும் இடத்தின் முகவரி Ferraz, 1 28008 Madrid, Parque del Cuartel de la Montaña
    இக்கோயிலைச் சென்று காணவும் உள்ளே உள்ள அருங்காட்சியகம் செல்லவும் கட்டணம் ஏதும் தேவையில்லை.

    asu5

    கோயில் நுழை வாயில் பகுதி

    நான் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் மாலையில் இக்கோயில் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே தங்கும் விடுதியில் தங்கியிருந்தமையால் இப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு நடக்கச் செல்வேன். கோயிலின் அழகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சூரிய வெளிச்சத்தின் நிலைக்கேற்ப தென்படும். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இக்கோயிலின் அழகு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இக்கோயில் என்ன முதலில் ஈர்த்தமைக்குக் காரணம் இதனைக் கட்டிய அரசன் ஆதிகலாமணியின் பெயர்தான். தமிழ் பெயர் போல ஒலிக்கின்றதே என யோசித்துத் தான் உள்ளே சென்று பார்த்தேன். மேலும் எகிப்தின் தெற்கு பகுதியின் வரலாற்று விபரங்களை அறிந்து கொள்ள முனைந்து நூல்களை வாசிக்க முனைந்த போதும், இணையத்தில் மேலும் என் ஆய்வுகளை மாலை வேளைகளில் தொடர்ந்த போதும் எகிப்தின் எல்லைப் பகுதி நாடான சூடானுக்கும் அதன் அருகே இருக்கும் எத்தியோப்பிய நாட்டிற்கும் தமிழ் இன மக்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் உணர்ந்தேன்.

    2007ம்  ஆண்டில் 16 நாட்கள் பயணமாக எகிப்து சென்று 7 நாட்கள் நைல் நதியில் பயணித்து சூடான் வரை சென்றேன். அங்கே செல்லும்போது என்னைப் பார்த்த உள்ளூர் எகிப்திய மக்கள் பலர் என்னைப் பார்த்து நான் நூபியனா என்று வினவினார்கள். காரணம் எனது உடல் தோற்றம் கண்கள் ஆகியவை சூடானிய, எகிப்திய எத்தியோப்பிய மக்களின் சாயலை ஒத்ததாக அவர்கள் கருதியதுதான்.

    asu6

    ​2007ம் ஆண்டு என் எகிப்து பயணத்தில் கைரோவில் சியோப் ப்ரமிட்டின் முன்பகுதியில்

    எகிப்தின் பண்டைய இறை வழிபாடு, தெய்வ உருவங்கள் ஆகியன பற்றி நான் ஆராய முனைந்தபோது குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் காணமுடிகிறது. என் எண்ணப்படி பண்டைய எகிப்து, சூடான், எத்தியோப்பிய நாடுகளிலிருந்து வந்த மக்களில் பலர் இன்றைய தமிழக நிலப்பரப்பிற்கு குடியேறி இருக்கலாம். இதனை மேலும் வலுவாக்கும் வகையில் தமிழகத்தில் திருமயம் போன்ற பகுதிகளில் கிடைக்கின்ற பாறை ஓவியங்கள் அமைகின்றன. 2007ம் ஆண்டில் நான் எகிப்தின் லுக்ஸூர், மற்றும் ஏனைய பகுதி ஆலயங்களில் பார்த்த சில பண்டைய எகிப்திய தெய்வ வடிவங்களின் உருவங்களுக்கு ஒத்ததான உருவங்களை தமிழகத்தின் காரைக்குடிக்கு அருகாமையில் இருக்கும் திருமயம் நகரில் உள்ள பாறைகளில் ஓவியங்களாக நான் எனது தமிழகத்திற்கான 2012ம் ஆண்டு பயணத்தில் கண்டு வியப்புற்றேன். இது என்ன இப்படி ஒரு ஒற்றுமை என என்னை திகைக்க வைத்தன அந்த உருவங்கள்.

    எகிப்து, சூடான், எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கும் இன்றைய தமிழகத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய வேண்டியது வரலாற்று ஆய்வுப் பணிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். தமிழக பல்கலைக்கழகங்களின் வரலாற்று ஆய்வுத்துறையும் தமிழ்த்துறையும் இணைந்து இவ்வகையான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வகையில் ஆய்வுகள் தொடங்கப்படும் போது இந்த இரு வேறு நிலப்பகுதிகளுக்கும் இடையிலான மொழி, பண்பாட்டு, இறையியல் கூறுகளின் ஒற்றுமைகள் அறியப்பட நிறைய வாய்ப்புகள்  உள்ளன.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 49 (2)

    அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (2)

    சுபாஷிணி

    மிக ரம்மியமான சூழலில் உள்ள புற நகர் பகுதியில் இந்த அரிசி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வரும்போதே பசுமையான வயல் வெளியையும் ஆங்காங்கே நிற்கும் காளை மாடுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே பயணிக்கலாம்.

    12,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றனர். மூன்று மாடிகளில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகக் கட்டிடத்தின் வடிவமே நெற்களஞ்சியத்தைக் காட்டுவது போலவும், நெற்பயிர்களின் படங்களுடனும், அலங்கரிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் பற்றியும் அரிசி வகைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய யாரேனும் விரும்பினால் எந்த ஐயமும் இன்றி இந்த அருங்காட்சியகத்திற்கு வரலாம். நெற்பயிர் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கும் ஒரு நிலையமாகவும் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

    asu

    நெல் பயிர் உற்பத்தி செய்யும் முறை பற்றிய தகவல்கள், வெவ்வேறு வகையான நெல் பயிர்கள், நெல் பயிரிடுவதற்கான விவசாயக் கருவிகள் ஆகியன இங்கு காட்சிப் பொருட்களாகவும் மூன்று தளங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

    asu1

    நெற்பயிர் உற்பத்தி என்பது இன்றோ நேற்றோ தொடங்கிய ஒரு விசயமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெல்பயிரிடுதல் என்பது மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. மக்கள் நாகரிகம் அடைய அடைய விவசாயம் என்பதைக் கற்றுக் கொண்டு உணவு தயாரித்தலுக்காகப் பயிரிடுதல் என்பதை வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகக் கடைபிடிக்க ஆரம்பித்தனர். நெல்பயிரில் இயற்கையாக விளைந்த பயிர்கள் என்பது போக அறிவியல் தொழில்நுட்பத்தின் வழியாக அரிசி வகைகளில் சில நுணுக்கமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி சில வகை அரிசிகள் உருவாக்கப்பட்டதும் விவசாய உலகில் நிகழ்ந்திருக்கிறது.

    asu2
    மலேசிய மக்களின் உணவில் அரிசி மிக முக்கிய உணவாக அமைகின்றது. காலை பசியாறுதலுக்கும் அரிசி உணவு வகை. மதிய உணவுக்கும் அரிசி வகை, மாலை உணவுக்கும் அரிசி வகை. என ஒரு நாள் முழுமைக்குமான உணவுத் தேவைக்கு ஒவ்வொருவரும் அரிசியை மிக அதிகமான அளவில் இங்கே பயன்படுத்துகின்றனர்.

    asu3

    மலேசியா மலாய், சீனர், இந்தியர் என்ற வகையில் மூன்று இனங்களை பெருவாரியாகக் கொண்ட ஒரு நாடு. மூன்றுமே மிகச் சிறந்த உணவு பாரம்பரியத்தைக் கொண்ட இனங்கள்.

    asu4

    காலை, மதியம் மாலை உணவு வகைகள் எனும்போது பல வித்தியாசமான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் முறை அறிந்த இனங்கள் இவை மூன்றும். தமிழர்கள் அரிசியை குழம்புடன் சேர்த்து உண்ணும் சோறு என்ற வகை மட்டுமன்றி அரிசியைப் பயன்படுத்தி தோசை, இட்டிலி, ஆப்பம், ஊத்தப்பம், பணியாரம், வடகம், அப்பளம், என பல வகைப் பலகாரங்கள் செய்கின்றோம். சீனர்கள் அரிசியை குழம்புடன் சாப்பிடுவதோடு, கஞ்சி, நூடல் வகைகள் தயாரிப்பு என்ற வகையில் பயன்படுத்துகின்றனர். மலாய் இனத்தவர்கள் குழம்புடன் சேர்த்த சோறு என்ற ஒரு வகை மட்டுமன்றி மாறுபட்ட வகையிலான உணவுகளைத் தயாரிக்கும் முறை அறிந்தவர்கள்.

    ​​asu5

    ஆக, இந்த மூன்று இனங்களுமே அரிசியை வெவ்வேறு வகையில் தங்கள் அன்றாட உணவில் பயன்படுத்துவதை நன்கு அறிந்து கொள்ளலாம்.

    மலேசியா முழுமைக்கும் காலை உணவு எனச் சாலையோரக் கடைகளிலும், சந்தைகளிலும், உணவு விடுதிகளிலும் தேடினால் நமக்கு மிக எளிதாகக் கிடைப்பது நாசி லெமாக் எனும் தேங்காய்ப்பால் சாதமும் கெட்டியான மிளகாய்ச்சாந்து சேர்த்த குழம்பும் இணைந்த ஒரு வகை உணவு.

    நாசிலெமாக், அத்துடன் ‘தே தாரிக்’ (மலேசிய வகை தேநீர்) – இதனை மலேசியா செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் சுவைத்துப் பார்க்க மறக்கக் கூடாது.

    தொடரும்…

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 48 (1)

    அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (1)

    சுபாஷிணி

    தமிழர்களாகிய நமக்கு அரிசு உணவு என்பது அன்னியம் அல்ல. நாம் தினமும் உண்ணும் அரிசிக்கு ஒரு அருங்காட்சியகமா எனக் கேட்கத் தோன்றலாம்.

    ஆச்சரியமாக இருக்கிறதா?

    வாருங்கள். மலேசிய நாட்டின் வட பகுதி மாநிலங்களில் ஒன்றான கெடாவிற்கு இப்பதிவின் வழி உங்களை அழைத்துச் செல்கிறேன். மலேசியாவின் நெற்களஞ்சியம் எனப் பிரத்தியேகமாக அழைக்கப்படும் மலேசிய மாநிலம் தான் கெடா.

    asu
    ​கெடா மானிலத்தின் இயற்கை காட்சி (2011)

    கண்களை மூடிக் கொண்டு கெடாவை நினைத்துப் பார்த்தால் என் மனக்கண்ணில் ஓடுவது கம்பளம் விரித்தார்போல் பரந்து விரிந்திருக்கும் கெடா மாநிலத்தின் பசுமை கொஞ்சும் நெல்வயல்கள்தாம். கரும்பச்சை மலைகள் சூழவும் இளம்பச்சை வயல்வெளிகள் சூழவும் எங்கும் பசுமை என நம்மை மயக்கும் ஒரு மலேசிய மாநிலம் கெடா.

    asu1
    ​​கெடா மாநிலத்தின் நெல் வயல் (2011)

    இம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் மலாய் இனத்தவர்கள். கெடா மாநிலத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பல்லாண்டுகள் தொடர்புண்டு என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வர். கடாரம் என்றும் இதற்குப் பெயருண்டு எனச் சொன்னால் ராஜேந்திரச் சோழனின் நினைவு பலருக்கு வரலாம். ஆம் 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரன் படையெடுத்து வந்து கைப்பற்றி ஏறக்குறைய 99 ஆண்டுகள் ஆட்சி செய்த பகுதிதான் கெடா. அன்று இன்றைய கெடா மாநிலம் மட்டுமன்றி இந்த மாநிலத்தின் வடக்கு தெற்கு கிழக்கு பகுதி மாநிலங்களும் கூட கடாரத்தின் ஒரு பகுதியாக சோழ ஆட்சியில் இருந்தன. அது தமிழர்களுக்கு ஒரு பொற்காலம். ஆனால் இன்றோ நிலைமை வேறு. சரி. அந்த பழம்கதை ஏன் இப்போது? நாம் அருங்காட்சியகத்திற்குச் செல்வோமே..!

    asu2

    ​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – முகப்புப் பகுதி (2011)

    உலகின் அதி முக்கிய தானிய வகை அரிசி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிய நாடுகளில் மட்டுமல்ல. ஆப்பிரிக்க கண்டத்திலும் சரி, வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களிலும், ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும்.. எங்கு சென்றாலும் அரிசி உணவு இல்லாமல் இல்லை என்பது இக்கால நிலை. கோதுமையையும் சோளத்தையும் தங்கள் முக்கிய உணவாகக் கொண்டிருந்த ஐரோப்பிய மக்கள் கூட கடந்த முப்பது ஆண்டுகளில் பெருவாரியாக அரிசியை தங்கள் உணவில் இணைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். அரிசி வகைகள் இல்லாத பல்பொருள் அங்காடிகள் இல்லை என தைரியமாகக் கூறலாம். அந்த அளவிற்கு அரிசி பயன்பாடு உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது.

    asu3

    ​​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – முகப்புப்பகுதி (2011)

    தற்சமயம் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2015ன் ஒரு பகுதியில் ஆசிய நாடுகளின் முக்கிய உணவாகச் சித்தரித்து பாசுமதி அரிசிக்கான விரிவான தகவல் மையத்தை வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பெர்லிஸ் மாநிலத்திலிருந்து கெடா மாநிலத்தை அடையும் நெடுஞ்சாலையில் பயணித்து வந்தால் ஏறக்குறைய 10 கி.மீ தூரத்திலேயே பசுமையான வயல் வெளிகளுக்கு மத்தியிலே இருக்கும் இந்த பிரமாண்டமான அரிசி அருங்காட்சியகத்தை அடையலாம்.

    asu4

    ​​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – நுழைவாயிலில் (2011)

    இந்த அருங்காட்சியகத்தின் பெயர் Kedah Paddy Museum. Padi என்னும் சொல்லிற்கு மலாய் மொழியில் அரிசி எனப் பொருள். ஆங்கிலச் சொல்லான Paddy என்பது இந்த மலாய் மொழிச் சொல்லிலிருந்து உருவாகி இருக்க வேண்டும். உலகில் அரிசிக்காக இருக்கும் அருங்காட்சியகங்களென கணக்கிட்டால் மலேசியாவைத் தவிர்த்து ஜப்பான், பிலிப்பைன்சு ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம்.

    தொடரும்..

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 47 (2)

    கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம் (2), ட்ரியா, ஜெர்மனி

    சுபாஷிணி

    ​கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊரான ட்ரியா ​மிக அழகிய ஒரு நகரம். மோஸல் நதிக்கரையில் அமைந்திருக்கும் நகரங்களில் ஒன்று இது. இன்றும் இந்த நகரில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ரோமானியப் பேரரசின் கட்டிடங்களின் எச்சங்களைக் காணலாம். போர்ட்டோ நியாக்ரா, 2ம் நூற்றாண்டின் மிகப் பழமையான கேத்திட்ரல், ரோமானிய மாவீரர்களான க்ளேடியேட்டர்கள் போர் செய்யும் அம்ஃபிதியேட்டர் , ரோமானிய அரண்மனையில் பாதாள நீச்சல் குளம் ஆகியவற்றை இவ்வகை உதாரணங்களாகக் கூறலாம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புக்களோடு அரசியல் தனிச்சிறப்பையும் இந்த நகர் பெறுவதற்குக் கார்ல் மார்க்ஸ் ஒருவர் போதாதா?

    asub

    கார்ல் மார்க்ஸ் இளம் வயதிலேயே லத்தீன், க்ரீக், டோய்ச், ப்ரென்சு ஆகிய மொழியில் புலமை பெற்றிருந்தார். இளமைக் கல்வி முடிந்து பல்கலைக்கழகக் கல்வியை முதலில் அவர் தொடக்கியது போன் (Bonn) பல்கலைக்கழகத்தில் தான். ஆனால் ஓராண்டு மட்டுமே அவரது படிப்பு அங்கு அமைந்தது. பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இவர் தன் கல்வியைத் தொடர்ந்தார். பெர்லினில் படிக்கும் காலத்தில் கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒரு நாளில் தான் தன் வாழ்க்கை துணையான ஜென்னியை இவர் சந்திக்க நேர்ந்தது.

    ஜென்னி பணக்கார குடும்பத்துப் பெண் என்பதோடு அவர் தந்தை அரசாங்கத்தில் முக்கியப்பதவி வகித்தவர் என்பதும் அவரது குடும்பச் செழுமையைச் சொல்லும். ஆனால் பிற்காலத்தில் திருமணத்திற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸுடன் அவர் இணைந்திருந்த காலகட்டத்தில், அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அவர்களது குடும்பத்திற்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் பொறுமையுடன் சமாளித்து, வறுமையில் வாடினாலும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள் எந்த வகையிலும் பலம் இழக்கா வண்ணம் அவருடன் உற்ற துணையாக இருந்தவர் என்ற பெருமை ஜென்னிக்கு உண்டு.

    மார்க்ஸூக்கும் ஜென்னிக்கும் பிறந்த குழந்தைகளில் இறந்த குழந்தைகள் போக எஞ்சியவர்கள் 4 பேர். அவர்களில் 3 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் அடங்குவர். இவர்கள் திருமணம் முடித்து குழந்தையும் குடும்பமுமாக ஆகிப்போயினர். ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரும்பாலும் வருமையிலேயே கழித்த ஜென்னி உடல் நோய் முற்றி அதற்கு சரியான மருத்துவம் செய்வதற்கு வசதியில்லாத நிலையில் 1881ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி இவ்வுலகை விட்டு உயிர் நீத்தார். தனது வாழ்வின் திருமணத்திற்குப் பிந்தைய எல்லா கால நிலையிலும் ஜென்னியுடனேயே கழித்து வந்த மார்க்ஸுக்கு இது ஒரு பேரிழப்பு. ஜென்னி இறந்த போதே கார்ல் மார்க்ஸின் சக்தியும் பிரிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸ் வாழ்ந்தது அடுத்த 15 மாதங்கள் தான். இடையில் இவரது மூத்த பெண் மரணமும் நிகழ அதுவும் மார்க்ஸின் உடல் நிலையையும் மன நிலையையும் மிகப் பாதித்தது. இந்தத் துக்கங்களுடன் 1883ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி கார்ல் மார்க்ஸின் உயிர் உடலிலிருந்து பிரிந்தது. அதே மாதம் 17ம் தேதி லண்டன் ஹைகேட் மயானத்தில் அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    asub1

    ​உலகில்​ தோன்றிய, சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்த முக்கிய மனிதர்களில் ஒருவர் கார்ல் மார்க்ஸ் என்பது மிககையற்ற கூற்று. புதிய கருத்துக்களை உருவாக்குவதிலும் தத்துவங்களை அலசுவதிலும் நூல்களை வாசிப்பதிலும் அவரது நாட்கள் பல கழிந்தன. அவரது அறை முழுவதுமே புத்தகங்களின் குவியலும், ஒழுங்குபடுத்தப்படா எழுத்துக்கள் அடங்கிய காகிதங்களும் நிரம்பியிருக்குமாம். தன் வாழ்க்கையின் மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி எப்போதும் எவ்வேளையும் முதலாளித்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் சமுதாய அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசுகளின் சித்தாந்தங்களை மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தேடுவதிலும் அவற்றை எங்கனம் செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு உரிய வகையில் அவர்கள் உழைப்பு மதிப்பைப் பெறும் நிலையைப் பெற்றுக் கொடுப்பது என்பதிலுமாகவே அவர் சிந்தனை இருந்தது.

    கார்ல் மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் அரசாலும் சரி அரசாங்க பெரு மனிதர்களாலும் சரி வெறுக்கப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு இவரது சித்தாந்தங்கள் கேடு விளைவிக்கும் என்று சொல்லி ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம் என இந்த நாடுகள் எல்லாம் அவரை நாட்டிலிருந்து துரத்தின. இதனால் தன் இறுதிக் காலத்தில் இங்கிலாந்தில் தான் இவரது வாழ்க்கை அமைந்தது.

    கார்ல் மார்க்ஸின் சித்தாந்தத்தின் நூல் வடிவம் Das Kapital. டோய்ச் மொழியில் இதனை, “அரசியல் பொருளாதாரத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம்” எனக் கொள்ளலாம்.

    இந்த நூல் 1967ம் ஆண்டில் அச்சாகி லண்டனிலிருந்து வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளிவந்த காலத்தில் கார்ல் மார்க்ஸ் அனுபவித்து வந்த கஷ்டங்களுக்கு ஒரு அளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏகப்பட்ட கடன். தினமும் கடன் கேட்டு வீட்டு வாசலில் வந்து நிற்கும் கடன்காரர்களின் வசைமொழிகளுக்கிடையேயும், வறுமையில் வாடி பசியால் நலிந்து வாடிக்கொண்டிருந்த தன் மனைவி குழந்தைகளின் உடல் நிலை நலிவினைக் கண்ணுற்றவாறே தான் தனது சிந்தனையின் கருவூலமான இந்த நூலை அவர் படைத்தார். இத்தகைய இன்னல்களுக்கிடையில், ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி 1867 ஆண்டு இந்த புரட்சி சிந்தனை நிறைந்த நூல் வெளிவந்தது என்பதை நினைக்கும் போது மனம் சிலிர்க்கின்றது.

    கார்ல் மார்க்ஸின் சித்தாந்தம் ஏற்படுத்திய சிந்தனை அலை மிகப் பெரிது. அது தொழிலாள வர்க்கத்தினிடையே பெறும் வரவேற்பை பெற்ற கருத்தாக புரட்சியாக வெடித்தது. ஜெர்மனி, பிரான்சு என்று மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் மிக ஆழமாக மார்க்ஸின் சித்தாந்தங்கள் பரவ ஆரம்பித்தன என்றாலும் முதலாளி வர்க்கத்தினரின் எதிர்ப்பை எளிதில் பெற்றன என்பதும் உண்மையே.

    asub2

    இந்த கார்ல்ஸ் மார்க்ஸ் அருங்காட்சிகம் மிக நன்கு சீரமைக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திலும் கார்ல் மார்க்ஸ் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இளமை காலத்துத் தகவல்கள் முதல் பகுதியில் அமைக்கப்படிருக்கின்றன. இரண்டாம் தளத்தில் ஜென்னியைப் பற்றிய விபரங்கள், குழந்தைகளின் புகைப்படம், அவர்கள் பற்றிய தகவல்கள் என உள்ளன. அதே தளத்தில் 19ம் நூற்றாண்டு தொழிலாளர் புரட்சி, கார்ல் மார்க்ஸ் பணியாற்றிய பத்திரிக்கை செய்திகள், அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியன புகைப்படங்களோடு வழங்கப்பட்டுள்ளன. கார்ல் மார்க்ஸின் கையெழுத்துப் பதிவுகள், ஜென்னியின் கையெழுத்துப் பதிவாக சில கடிதங்கள், மார்க்ஸின் சில கடிதங்கள் ஆகியனவும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

    asuba3

    அதற்கடுத்த தளத்தில் மார்க்ஸிய சிந்தனை ஜெர்மனியில் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் உருவாக்கிய தாக்கத்தை விளக்கும் அரிய வரலாற்றுச் செய்திகள் நிறைந்திருக்கின்றன. உலக வரலாற்றில் ஜெர்மனியை நினைப்பவர்களுக்கு நாஸி சித்தாந்தம் என்பது தான் உடனுக்குடன் நினைவுக்கு வரும். ஆனால் கார்ல் மார்க்ஸ் என்ற சிறந்த அறிஞனைத் தந்த நாடும் இதே ஜெர்மனிதான் என்பதை உலகம் மறந்து விடக் கூடாது.

    கார்ல் மார்க்ஸ் என்ற மனிதரின் வாழ்க்கையின் நோக்கமே das Kapital நூலை உருவாக்குவதற்காகத்தானோ என்ற சிந்தனை தோன்றுவதில் மறுப்பதற்கேதுமில்லை. ஆனால் இந்த நூலை வடிப்பதற்கு வாழ்நாளில் அவர் அனுபவித்த இன்னல்களை நோக்கும் போது, இவை எல்லோருக்கும் நல்ல கற்றல் அனுபவமாக நிச்சயம் அமையும். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது சித்தாந்தங்களின் தொகுப்பான das Kapital நூலையும் இளைஞர் சமூகம் ஒதுக்காமல் கட்டாயமாகக் கற்க வேண்டும்.

    asuba4

    அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்தை அறிமுகப்படுத்துகின்றேன். அதற்காக நாம் மலேசியா செல்லலாம். காத்திருங்கள்!!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 46

    கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம், ட்ரியா, ஜெர்மனி

    சுபாஷிணி

    ஐரோப்பிய அரசியல் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிறப்பு மார்க்சியத்திற்கு உண்டு. அரசாட்சியை மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த ஐரோப்பிய நாடுகளில் மக்களின் சிந்தனையில் மாற்றுக் கருத்தை விதைத்த சித்தாந்தங்களில் மார்க்சியம் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. மார்க்சியம் என இன்று அழைக்கப்படுகின்ற இந்த அரசியல் சித்தாந்தத்தை வழங்கியவர் கார்ல் மார்க்சு. 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய சரித்திரத்தை மார்க்சின் சித்தாந்தங்களிலிருந்து பிரித்து வைத்துப் பார்ப்பது இயலாத ஒன்று. அத்தகைய ஆளுமையான கார்ல் மார்க்சு பற்றிய வரலாற்றுச் செய்திகளை வருகை தருகின்ற பார்வையாளர்களுக்கு வழங்கும் கார்ல் மார்க்சு அருங்காட்சியகம் பற்றிய தகவல்களே இன்றைய பதிவாக அமைகின்றது.

    asuba

    கார்ல் மார்க்சு அருங்காட்சியகம் ஜெர்மனியின் ட்ரியா நகரில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் மிகப் பழமை வாய்ந்த உரோமானிய பேரரசு கோட்டை கட்டி வாழ்ந்த ஒரு அரச நகர்ப்பகுதி என்ற தனிச்சிறப்பும் கொண்டது. ட்ரியா நகர் அமைந்திருக்கும் இடம் ஏனைய பிற அண்டை நாடுகளான பிரான்சு, லுக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் அமைந்திருப்பது அக்காலத்தில் கார்ல் மார்க்சு மட்டுமன்றி ஜெர்மானிய தொழிற்சங்கவாதிகளும், அரசுக்கு எதிர்மறையான அரசியல் சிந்தனைப் போக்கு கொண்டோருக்கும் ஓர் பெரும் நகரத்திலிருந்து மற்றொரு நகரம் சென்று கலந்துரையாடல்களையும் சந்திப்புகளையும் நிகழ்த்த மிக ஏதுவாக அமைந்திருந்தது என்பது ஒரு முக்கிய விசயம்.

    asub5

    கார்ல் மார்க்சு ஜெர்மனியில் பிறந்து தன் இளம் பிராயத்தை ட்ரியா நகரில் கழித்து பின்னர் பெர்லினில் தனது பட்டப்படிப்பை முடித்து தனது இளம் வயதில் குடும்ப வாழ்க்கையை மீண்டும் ட்ரியாவில் தொடங்கினாலும் அவர் தன் வாழ்நாளில் ஜெர்மனியை விட்டு ஏனைய நாடுகளில் செலவழித்த ஆண்டுகள் தான் அதிகம். ஜெர்மனியில் தனது அரசியல் சித்தாந்தத்திற்கான அடித்தளத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். பிரான்சில் பணியாற்றிய காலத்தில் புறச் சூழலும் தன் நட்பு வட்டாரமும் ஏற்படுத்திய தாக்கத்தால் ஒரு புரட்சியாளராக வடிவெடுத்தார். பின்னர் பெல்ஜியத்தில் சில நாட்கள் அகதி நிலை போன்ற வாழ்க்கை அவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாக்கினாலும் தனது கொள்கையில் அவர் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை. இறுதியில் அவரது இங்கிலாந்து வாழ்க்கை அவரை உலகம் போற்றும் ஒரு பெரும் அறிஞராக வடிவமைத்தது.

    asub4

    கார்ல் மார்க்சின் வாழ்க்கை சரித்திரத்திலிருந்து பிரிக்க முடியாத இருவர் என்றால் அது அவரது மனைவி ஜெனியும் அவரது நண்பர் ஃப்ரெடெரிக் எங்கெல்சும் என்று தயங்காது கூறலாம். இவர்கள் இருவரும் அவரோடு இணைந்து இருந்தவர்கள் மட்டும் அல்ல. கார்ல் மார்க்சிற்கு எல்லா சிரம காலங்களிலும் உடன் துணையாக இருந்து அவரை உள்ளமும் உடலும் சோர்வடையாது இருக்க உதவியவர்கள். வரலாறு இவர்களை மறக்காது!

    asub3

    கார்ல் மார்க்சு அடிப்படையில் ஒரு யூத இனத்தவர். அவரது தந்தையார் ஹைன்ரிக் மார்க்சு பின்னர் கிறிஸ்துவ மதத்தை தழுவிக் கொண்டு ட்ரியா நகரிலே வழக்கறிஞராகத் தொழில் புரிந்து வந்தார். மத நம்பிக்கைகள் மிக ஆழமாக வேறூன்றிய காலகட்டத்தில் ஜெர்மனி அப்போது இருந்தது. இன்றைய ஜெர்மனியிலிருந்து மாறுபட்ட சிந்தனையைக் கொண்ட மக்கள் இருந்த காலகட்டம் அது. வக்கீல் தொழில் மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் ஹைன்ரிக்மார்க்சு. ஹென்ரிட்டே என்னும் பெண்மணியை மணந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடந்தி வந்தார். இவர்களுக்கு 1818 மே மாதம் 5ம் தேதி பிறந்தவர் தான் கார்ல் மார்க்சு. பிறந்து வளர்ந்து தன் இளமை காலத்தை கார்ல் என்னும் இளைஞன் கழித்த அந்த இல்லமே இப்போது கார்ல் மார்க்சு அருங்காட்சியகமாக இருக்கின்றது.

    asub2

    ஒரு நாட்டின் எல்லா வளங்களுக்கும் அடிப்படையில் மனித சக்தியே இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பாளிகளை விட அவர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகளே பெரும் அளவில் லாபத்தை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர். உழைத்து வளத்தைப் பெருக்கும் உழைப்பாளி வர்க்கமோ அந்த வளத்தை அனுபவிக்க இயலாத ஒரு சமூகமாகவே இருக்கின்றது. இது மனித இனத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வகையில் அமைகின்றது.

    கார்ல் மார்க்ஸ் கையெழுத்து

    asub1

    மக்கள் வாழ்க்கையில் பொருளாதார சமன்பாடு என்பது நடந்தால்தானே ஒட்டு மொத்த சுபிட்சத்தை ஒரு நாடு அனுபவிக்க முடியும்?

    மக்களில் பெருவாரியானோர் சுபிட்சமாக இருந்தால் தானே நாடு வளமுடன் இருக்கும்?

    ஒரு சிலர் மட்டுமே பொருளாதார அனுகூலங்களை அனுபவிப்பதும் ஏனையோர் வருமையில் வாடி துன்பத்திலும் நோயிலும் கிடந்து அல்லல் படுவதும் மட்டும் நிகழ்ந்தால் அந்த நாட்டில் அமைதி எவ்வாறு நிலவும்?

    மக்களின் தொடர்ச்சியான அதிருப்தியானது சமூகப் பிரச்சனைகளான கொள்ளை, போராட்டம் பொருள் சேதம் ஆகியவற்றில் தான் ஒரு நாட்டை கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பெரும் தடையாக அல்லவா அமையும்?

    தொடரும்..

    ​​

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 45

    இசைக்கருவிகள் அருங்காட்சியகம், ப்ரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் (2)

     

    சுபாஷிணி

    ​இந்த அருங்காட்சியகத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட இசைக்கருவிகள் இருப்பதாக முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன். இந்த வடிவத்தில்தான் ஒரு இசைக்கருவி இருக்கும் என்ற நமது பழகிப் போன கண்களுக்கு சவால்விடும் வகையில் இங்கிருக்கும் இசைக்கருவிகள் இருக்கின்றன என்பது தான் ஆச்சரியம்.

    1

    பியானோவில் பழங்காலத்து வகையிலிருந்து இக்காலம் வரை என பலவேறுபாடுகளைக் கொண்ட பியானோக்கள்; வயலினில் சிறியது பெரியது நடுத்தர அளவு என வித்தியாசங்கள்; மேள வகை இசைக்கருவிகளில் தோலினால் செய்யப்பட்டவை, மரத்தால் செய்யப்பட்டவை- சிறியவை பெரியவை என வேறுபாடுகள் என ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் விளங்குகின்றன. சாக்ஸஃபோன் கருவிகளில் வெவ்வேறு வகைகள். அதன் பளபளக்கும் வெளிப்பகுதிகள் இசைப்பிரியர்கள் மட்டுமல்ல.. கண்காட்சிக்கு வந்திருக்கும் எல்லோரையும் கவரக்கூடியதாக இருக்கின்றது.

    2
    இவைதான் இசைக்கருவிகள் என அடையாளம் காணமுடியாத வகையில் தூக்கணாங்குருவிக் கூடுகளை ஒத்த வடிவிலான சில இசைக்கருவிகள் ஆச்சரியமூட்டுகின்றன. குழல் வகை கருவிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. பறை வடிவ இசைக்கருவிகள் மொத்தமான வடிவத்தில் மெலிதான வடிவத்தில் சிறியவை பெரியவை என பல நாடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை இங்கு காட்சிக்கு உள்ளன. மனித குல வரலாற்றில் குழல் போன்ற இசைக்கருவிகளும் தாள இசைக்கருவிகளும் மிகப் பழங்காலம் தொட்டே உள்ளன என்பதை நேரில் இங்கு வந்து பார்ப்பதன் வழி நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.

    3

    இந்த அருங்காட்சியகத்தை அடைவது மிகச் சுலபம். பிரஸ்ஸல்ஸ் அரச மாளிகையின் இடப்புறத்தில் இருக்கும் Rue Montagne de la Cour/Hofberg 2 சாலையில் Old England department store கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. 18ம் நூற்றாண்டின் புதிய அமைப்பை பிரதிபலிக்கும் இக்கட்டிடம் 1899ம் ஆண்டில் கட்டப்பட்டது.

    4

    இசைக்கருவிகளை பார்ப்பது மட்டுமல்லாது ஒவ்வொரு இசைக்கருவியையும் இசைத்தால் வெளிப்படும் ஓலியையும் கேட்டு மகிழும் வகையில் இங்கே கட்டிட அமைப்பே அமைந்துள்ளது. கண்காட்சிப் பகுதி ஒவ்வொன்றிலும் அங்கு காட்சிக்கு உள்ள இசைக்கருவிகளின் முன்னே நின்று தரையில் இருக்கும் சென்சர் பட்டனை அழுத்தினால் நமது காதில் நாம் பொறுத்திக் கொள்ளும் headset வழியாக நாம் இசையைக் கேட்டு ரசிக்க முடியும். என் கண்களுக்கு வித்தியாசமாக எனக்குத் தெரிந்த இசைக்கருவிகளையெல்லாம் கேட்கும் எண்ணத்தில் நான் இதனை முயற்சி செய்து பார்த்து மாறுபட்ட இசை ஒலிகளைக் கேட்டு வியப்படைந்தேன்.

    எத்தனை எத்தனை இசைக்கருவிகள்.. அவை எழுப்பும் ஒலிகள் தான் எத்தனை எத்தனை..!

    மனித வாழ்வில் பல்வேறு சிந்தனைகளால் இழுத்தடிக்கப்படும் மனம் அமைதியுற இசைக்கருவி வாசித்தல் உதவும். சிலருக்கு இயற்கையாகவே இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்க விருப்பம் இருக்கின்றது. பலருக்கு பெற்றோர் அல்லது சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்படும் ஆர்வம் தூண்டுதலாக அமைகின்றது. எப்படியாகினும் ஏதாகினும் ஒரு இசைக்கருவியை பயிற்சி செய்தலை வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பழக்கிக் கொள்வது அதிலும் குறிப்பாக இளம் வயதினில் இருந்தே இவ்வகை பயிற்சிகளில் ஈடுபடுவது இசைக்கருவிகளில் திறமையைப் பெருக்கிக் கொள்ள மிக உதவும். பள்ளிக் கூட பாட நடவடிக்கைகளோடு இசைக் கருவிகளிலும் குழந்தைகளின் நாட்டத்தை பெற்றோரும் ஆசிரியரும் செலுத்த வழிகாட்ட வேண்டியதும் மிக முக்கியம்.

    5

    பெல்ஜியம் வருபவர்கள் தவறாது வந்து பார்க்க வேண்டிய ஒரு கூடம் என்றால் இந்த அருங்காட்சியகத்தை கூறுவேன். இந்த அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வரும் போது நம் மனம் மாறுபட்ட சிந்தனையில் மூழ்கியிருப்பதை நிச்சயம் உணர்வோம்.

    அடுத்த பதிவில்.. மற்றுமொரு நாட்டில் .. மற்றுமொரு அருங்காட்சியகத்தைக் காண்போமா..?

    சுபா

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (44)

    இசைக்கருவிகள் அருங்காட்சியகம், ப்ரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்

    சுபாஷிணி

    ஜெர்மானிய அகழாய்வுக் குழுவினர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து மேற்கொண்ட அகழாய்வுப் பணிகளில் 30,000 முதல் 37,000 ஆண்டுகள் வரை பழமையானது எனக் கணக்கிடப்படும் மிகப் பெரிய அளவிலான இசைக் கருவிகளைக் கண்டெடுத்தனர். இவை எலும்புகளால் செய்யப்பட்ட குழல் போன்ற இசைக்கருவி வகை. இவையே இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பழமையான இசைக்கருவிகள் என நாம் கணக்கிடலாம்.

    உலகின் எல்லா நாடுகளில் வாழும் மக்களும் தங்கள் இனக்குழுக்களில் நாகரிகம் படிப்படியாக வளரும் காலம் தொடங்கி தங்கள் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றாக இசை, இசைக்கருவிகள், நடனம் என்ற பண்பாட்டுக் கூறுகளை வளர்த்து வந்தனர் என்பதை வரலாற்று நூல்களையும் தகவல் களஞ்சியங்களையும் நோக்கும் போது உணர முடிகின்றது.

    நம்மில் பலருக்கு நாம் பார்த்து பழகிய அல்லது பிறர் வாசிக்கக் கேட்டு அறிமுகமான சில இசைக்கருவிகளே நினைவிருக்க சாத்தியமுண்டு. ஒரு சிலர் தமது இனக்குழுவில் அதிகம் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை மட்டும் அறிந்திருப்பர். ஒரு சில அண்டை நாட்டு அல்லது தூர தேசத்து மக்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றி போதிய அறிமுகம் கிட்டாத சூழலிலும் பலர் இருப்பர். ஆனால் தகவல் தொழில்நுட்பம் மிகத் துரிதமாக வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில் உலக மக்கள் பல்வேறு நாடுகளில் தங்கள் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக தனித்துவம் வாய்ந்த இசைக்கருவிகளை மீட்டும் வாய்ப்பை, அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே பார்த்து அறிந்து கொள்ளவும் கேட்டு மகிழவும் யூடியூப், வலைப்பக்கங்கள், ஒலிக்கோப்புக்கள் ஆகியன உதவுகின்றன என்பதை மறுக்க முடியாது.

    இசைக்கருவிகளுக்காக அருக்காட்சியகங்களும் உள்ளன. ஜெர்மனியில் லைப்ஸிக், பெர்லின் ஆகிய நகரங்களில் இசைக்கருவி அருங்காட்சியகங்கள் உள்ளன. இசைக்கருவிகளுக்காக அருங்காட்சியகங்கள் அமைத்திருக்கும் ஏனைய நாடுகள் என்று சொல்வதென்றால் உதாரணமாக ஸ்வீடன், நெதர்லாந்து அமெரிக்கா, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம். அந்த வகையில் பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தில் இருக்கும் இசைக்கருவி அருங்காட்சியகத்தைப் பற்றியதே இன்றைய பதிவு,

    asub

    இந்த இசைக்கருவி அருங்காட்சியகம் தொடங்கிய கதையே நமக்கு சுவாரசியமான தகவலாக இருக்கின்றது. ஆரம்பத்தில் பெல்ஜியம் அரச குடும்பத்திற்குச் சொந்தமானதாக இருந்தது இந்த இசைக்கருவிகளின் காட்சிக் கூடம். இசையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அறிமுகம் அளிப்பதே இதன் செயல்பாடுகளின் மைய நோக்கமாக அமைந்திருந்தது. இதன் தொடக்க காலத்தில் இந்தஅருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இருந்தவை இந்திய மன்னர் சௌரிந்த்ரோ மோகுன் தாகூர் பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்டுக்கு 1876ம் ஆண்டில் அளித்த 100 இந்திய இசைக்கருவிகளும் பெல்ஜியத்தின் இசை வல்லுநர் ஃப்ரான்ஸுவா ஜோசப் ஃபெட்டிஸ் அவர்களிடமிருந்து அரச குடும்பம் விலைக்கு வாங்கிய இசைக்கருவிகளும் ஆகும்.

    asu1
    படிப்படியாக இந்த கண்காட்சிக்கூடத்தின் சேகரிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. 1924ம் ஆண்டில் 3,666 இசைக்கருவிகள் இந்த காட்சிக் கூடத்தில் சேகரிப்பில் இருந்தன. இப்போது இந்த அருங்காட்சியகத்தில் 7000க்கும் அதிகமான இசைக்கருவிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளும் போது ஆச்சரியம் மேலிடுகின்றது அல்லவா?

    asu2

    ஆறு மாடிகளில் ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு வகையான பிரிவுகளில் என்ற வகையில் கண்காட்சி அமைப்பு அமைந்துள்ளது.

    asu3

    பழமையான சமூகங்களின் இசைக்கருவிகள். தற்காலப் பயன்பாட்டில் அதிகம் இருக்கும் இசைக்கருவிகள், சீன, இந்திய, இந்தோனேசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பழங்குடிகள், ஐரோப்பிய தேசத்தின் பல்வேறு இனக் குழுக்கள், அரேபிய, ரஷ்ய என உலகின் எல்லா மூலைகளிலும் பழங்காலம் தொட்டு இன்று வரை உருவாக்கப்பட்ட இசைக்கருவிகள் இந்த சேகரிப்பில் அடங்குகின்றன.

    asu4

    நான் இந்த அருங்காட்சியகம் சென்ற போது மதிய வேளை. ஏறக்குறைய 90 நிமிடங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருந்தேன். எல்லா இசைக்கருவிகளையும் பார்த்தும் அதன் இசை ஒலிப்பதிவுகளைக் கேட்டும் ரசிக்க இந்த நேரம் நிச்சயம் போதாது என்பதை அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறிய போது உணர்ந்தேன். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சில இசைக்கருவிகளைப்பற்றி அடுத்த பதிவில் தொடர்கின்றேன். அதுவரை எந்த இசைக்கருவியை நீங்கள் வாசிக்க விரும்புகின்றீர்கள் என யோசித்துக் கொண்டிருங்கள்!

    தொடரும்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 43

    அஞ்சல்தலை அருங்காட்சியகம், வாடூஸ், லிக்ஸ்டஸ்டைன்

    சுபாஷிணி

    இளம் பிராயத்தில், பள்ளியில் படிக்கும் காலங்களில், அஞ்சல் தலை சேகரிப்பு என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக, பலருக்கும் இருந்திருக்கும். எனது அனுபவத்திலும் அப்படியே. முன்பெல்லாம் இணைய வசதி என்பது இல்லாத சூழலில், ஈமெயில் என்பதே என்ன என்று தெரியாத காலகட்டத்தில், வீட்டில் பெற்றோருக்கு வருகின்ற எல்லா கடிதங்களையும் பார்க்கும் போது அதிலிருக்கும் அஞ்சல் தலைகள் தான் என் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தன. கடிதத்தில் இருக்கும் அஞ்சல் தலையை வெட்டி அதனை தண்ணீரில் லேசாக நனைத்து தாளிலிருந்து அகற்றி பின்னர் மிதமான வெயிலில் உலர்த்தி அஞ்சல் தலை சேர்க்கும் ஆல்பத்தில் சேர்த்து விடுவது என் வழக்கம். நம்மில் பலரும் இதே போல செய்தது இப்போது நினைவுக்கு வரலாம்.

    அஞ்சல் தலைகளில் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. பொதுவாக நாம் பார்க்கும் பல அஞ்சல் தலைகள் சதுர வடிவமானவை என்றாலும், நீள் சதுரம், முக்கோணம், வட்டம், என்ற வடிவிலும் அஞ்சல் தலைகள் வெளியிடப்படுகின்றன. சிறப்பு வெளியீடுகளாக வருகின்ற அஞ்சல் தலைகள், அதாவது சுதந்திர தின வெளியீடு, முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வெளியீடு, அல்லது முக்கிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றிய செய்தியை பரவலாக்கும் வகையில் வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் ஆகியவை அஞ்சல் தலைகள் சேகரிப்போரின் கவனத்தை எப்போதுமே ஈர்க்கத் தவறுவதில்லை.

    asu4

    ​அஞ்சல் அட்டைகள் – இதே அருங்காட்சியகத்தில்

    உலகளாவிய அளவில் அஞ்சல் தலை சேகரிப்பு என்பது சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களாலும் விரும்பி மேற்கொள்ளப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. தனி நபர் அஞ்சல் தலைகள் சேகரிப்பு என்பது ஒரு புறமிருக்க, அரசே அஞ்சல் தலைகள் சேகரிப்பிற்காக அருங்காட்சியகங்களை அமைத்து பராமரிப்பதும் உண்டு. அமெரிக்காவின் சில மாநிலங்களிலும். கனடா, சுவிட்சர்லாந்து, டென்மார்க், பாக்கிஸ்தான், எகிப்து, ஜெர்மனி, மோனாக்கோ, இந்தியா, ஜப்பான், ஹங்கேரி, ஃபின்லாந்து, இங்கிலாந்து மற்றும் சில நாடுகளிலும் அஞ்சல் தலைகளுக்கென்றே பிரத்தியேகமாக அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. இதேபோல சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் இருக்கும் சிறிய நாடான லிக்ஸ்டஸ்டைன் நாட்டின் தலைநகர் வாடூஸிலும் ஒரு அஞ்சல் தலை அருங்காட்சியகம் இருக்கின்றது.

    asu3

    அருங்காட்சியக முகப்பு பகுதி

    இந்த அருங்காட்சியகம் வாடூஸ் நகரின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1930ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியம் முழுமைப்படுத்தப்பட்டு 1936ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. லிக்ஸ்டஸ்டைன் தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது தனித்து இயங்கும் ஒரு அருங்காட்சியகமாகவே அமைந்திருக்கின்றது.

    asu2

    ​அஞ்சல்தலை சேகரிப்புகள் வரிசையாக அலமாரியில்

    இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக லிக்ஸ்டஸ்டைன் நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் சேகரிப்புகளே நிறைந்துள்ளன. 1912ம் ஆண்டு தொடக்கம் லிக்ஸ்டஸ்டைன் அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் அனைத்தும் இங்கு சேகரித்து வரிசை வரிசையான காட்சிப் பலகைகளில் பொறுத்தி கண்ணாடிக் கதவுகள் பாதுகாப்பாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. அஞ்சல் தலை சேகரிப்புகள் மட்டுமன்றி இங்கு வைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் தலை தயாரிப்பு பணிகளோடு தொடர்பு கொண்ட கருவிகளும் இங்கு வரும் பார்வையாளர்களுக்குக் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக அமைகின்றன.

    asu1

    ​அஞ்சல்தலைகளில் சில..

    இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் http://www.postmuseum.li/ என்ற முகவரியில் முக்கிய தகவல்களைப் பெறலாம். நான் இந்த அருங்காட்சியகத்திற்கு இவ்வாண்டு மே மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் சென்றிருந்தேன். அருங்காட்சியகம் திறக்கும் நேரத்தை அறிந்து செல்வது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் திறப்பதில்லை.

    asu
    பழங்காலத்தில் கடிதம் கொண்டு வரும் குதிரை வண்டியின் ஓவியம்

    சுவிட்சர்லாந்து செல்பவர்கள் வாய்ப்பு கிடைத்து லிக்ஸ்டஸ்டைன் வந்தால் தவறாது இந்த அருங்காட்சியகம் சென்று வரவேண்டும். ஒரு தளத்தில் மட்டுமே சேகரிப்புகளும் கருவிகளும் இருந்தாலும் அஞ்சல் தலை தயாரிப்பு பற்றிய விரிவான விளக்கத்தை வழங்க இந்த அருங்காட்சியகம் தவறவில்லை.

    சரி.. இந்த அருங்காட்சியகத்திலிருந்து மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்கிறேன். காத்திருக்கவும்!.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 42

    42. நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி (3)

    சுபாஷிணி

    நியாண்டர்தால் அருங்காட்சியகம் ஒரு தகவல் சுரங்கமாக திகழ்கிறது. மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான இக்காலகட்டத்தில் பண்டைய பழங்கூறுகளையும் அதன் பொதுத் தன்மைகளையும் வெளிப்படுத்தும் ஒரு காட்சிக்கூடமாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.

    கற்கால மனிதர்களின் ஈமச்சடங்கு முறைகளை ஆராயும் போது உலகின் பல மூலைகளில் இவ்வகைச் சடங்குகளில் இருக்கும் ஒற்றுமைக் கூறுகளைக் காண முடிகிறது. பூகோள ரீதியாக மனிதர்கள் நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருந்தாலும் அடிப்படையில் மனித மனம் ஒரே வகையில் சிந்திப்பதை பொதுக்கூறுகளாகக் காணமுடிகிறது. உதாரணமாக, பெருங்கற்காலத்தில் இறந்து போன மனிதர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கற்திட்டை வடிவங்களைக் கூறலாம். ஐரோப்பிய நிலப்பரப்பில் பிரித்தானியாவில் வரலாற்றாய்வாளர்கள் சுட்டும் stonehenge வடிவங்களை இவ்வகையில் இருக்கும் ஒற்றுமையாகக் குறிப்பிடலாம். இதே போன்ற ஈமக்கிரியை தொல் வடிவங்களைத் தமிழக நிலப்பரப்பிலும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    a

    மற்றொரு ஈமக்கிரியை தொல்வடிவம் வட்டக் கல் என்பது. நான் சென்னைக்கு புற நகர்ப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஒரு வரலாற்றுப்பயணத்தில் இவற்றை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். அதே போல கொடுமணல் அகழ்வாய்வுப் பகுதியிலும் இதே போன்ற வடிவங்களைக் கண்டேன்.இதே போன்ற மெகாலித்திக் காலகட்டத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கபப்ட்ட Mystical Circle எனப்படுபவை பிரித்தானிய தீவுகளில் இருப்பதையும் இங்கே புகைப்படங்களுடன் கூடிய தகவல் வழி இங்கு வருவோர் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

    தாய் தெய்வ வழிபாடு என்பது தொண்மையான ஒரு வழிபாட்டு முறை. பழம் நாகரிகங்கள் அனைத்திலும் ஏதாகினும் ஒரு வகையில் தாய் தெய்வ வழிபாடு என்பது அமைந்திருந்தது என்பதும் அவற்றின் உருவப் படிமங்களும் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் வரலாற்று உண்மை.

    1

    இதன் தொடர்பில் ஐரோப்பிய நிலப்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட தொண்மையான தாய்தெய்வ வடிவங்களை இந்த அருங்காட்சியகத்தில் சிறு தொகுப்பில் காணமுடிகின்றது. ஆஸ்திரிய நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாய்தெய்வ வடிவத்தின் ரெப்ளிக்கா ஒன்றினை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். இதன் அசல் வடிவம் ஆஸ்திரியாவின் வீன் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இதனைப் போலவே உக்ரயேன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட 22,000 ஆண்டு பழமையான ஒரு தாய்தெய்வ வடிவமும் இங்கு உள்ளது.

    உலகில் வேறெங்கும் சென்று ஆச்சரியங்களைத் தேடவேண்டியதில்லை. நம் உடலே ஆச்சரியங்கள் பல கொண்ட ஒரு அற்புதப் புதையல் தான். நம் உடலில் இருக்கும் பாகங்களில் ஒவ்வொன்றும் ஒரு செயலைச் செய்தாலும் பிராதன முக்கியத்துவத்தைப் பெறுகின்ற மூளையானது ஆச்சரியத்தும் மேல் ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது. காலங்காலமாக நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியில் மனித உடலின் வளர்ச்சியில் மனித மூளையில் அளவின் வளர்ச்சி என்பதும் அடங்கும். மூளைவின் அளவு பெரிதாகப் பெரிதாக அதன் திறன்களும் அதிகரிக்கின்றன. சிந்தனையின் ஆழமும் சிந்தனைப் பதிவின் திறமும் மூளையின் அளவு பெரிதாகும் போது அதற்குத் தகுந்தார் போல பெரிதாகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் மனித மண்டை ஓடுகளும் மூளை பற்றிய ஆய்வுகளும் அமைந்துள்ள பகுதியில் இத்தகைய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    2

    மனித இனம் விலங்கினமாக இருந்து பின்னர் வேட்டையாடும் திறனை அமைத்துக் கொண்டு குடும்பம், சமூகம் என வளர்ந்து விவசாயத்தையும் கற்றுக் கொண்டு, அதனை பெருவாரியாக விரிவாக்கி, நாடு, நகரம், அரசியல், ராஜ்ஜியம் என இருந்து பின்னர் மொழி, கலை, வழிபாடு, சடங்குகள், மாந்திரீகம், தத்துவம் என தன் ஆளுமையை விரிவாக்கிக் கொண்டு, வர்த்தகம், தொழில் நுட்பம் என்றும் உயர்வடைத்து விட்டது. இந்தத் தொடர் வளர்ச்சி பல போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இது பல தேடுதல்களும் மாற்றங்களும் இருந்தமையால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு வளர்ச்சி.

    மாற்றங்களை விரும்பாத, தேடுதலில் ஈடுபடாத ஒரு இனம் வளர்ச்சி பெற முடியாது. மனித இனத்தின் தேடுதல் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

    Was ist der Mensch? (மனிதன் என்பர் யார்?)
    Was soll ich tun? (நான் என்ன செய்ய வேண்டும்?)
    Was kann ich wissen? (நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்?)
    Was darf ich hoffen? (நான் எதை எதிர்ப்பார்த்திருக்க முடியும்?)
    -Immanuel Kant

    3
    நமது தேடலையும் தொடர்வோம். அடுத்த கட்டுரையில் மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்தில்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (41)

    ​ நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி (2)

    சுபாஷிணி

    *குரங்கு விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி கண்டு வளர்ந்த இனம் தான் மனித இனமா?

    *நியாண்டர்தால் எனக்குறிப்பிடப்படும் மனித இனக்குழு இன்று காணப்படும் ஐரோப்பிய நிலப்பரப்பில் மட்டும் தான் இருந்தனரா?
    *உலகின் எல்லா பாகங்களிலும் மனித இனம் ஒரே நேரத்தில் தோன்றியதா?
    *ஆப்பிரிக்கா தான் மனித இனத்தோற்றத்தின் முதல் நிலப்பகுதியாக அமைந்திருந்ததா?
    *விவசாயம் என்பதும், உலக நாகரிகம் என்பதும் உலகின் பல இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றினவா?
    ​*மனித குலத்தை ஆக்கிரமித்திருக்கும் உலகத்தோற்றம், மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பற்பல கேள்விகளில் மேற்குறிப்பிட்ட இவையும் அடங்குவன.

    aru
    ​ஆதி மனிதனின் வாழ்க்கை முறையைக் காட்டும் மெழுகு வடிவங்கள்

    இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தியரியின் படி மனித குலத்தின் ஆரம்பம் என்பது, அதாவது மரத்திலிருந்து தாவிச்செல்லும் குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான மாற்றம் என்பது ஆப்பிரிக்காவில் நிகழ்ந்தது. குரங்கினத்திலிருந்து மனித இனத்திற்கான பரிணாம மாற்றம் என்பது உடன் ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிகழ்ந்ததல்ல என்றும் பல்வேறு சமகால நிகழ்வுகளில் சூழலியல், தட்பவெப்ப சீதோஷ்ண நிலை மாற்றங்களாலும் நீண்ட கால அளவிலேயே இம்மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்பது ஆய்வறிஞர்களின் கூற்று.

    aru1

    ​முழுமையான ஒரு நியாண்டர்தால் எலும்புக்கூடு

    குரங்கினத்திற்கு வாழ்க்கையை நடத்த ஆயுதங்களும் கருவிகளும் தயாரிக்கும் திறன் இல்லை. மனித இனமோ தனது சிந்தனைத்திறத்தை பயன்படுத்தி கற்களால் ஆயுதங்களையும் கருவிகளையும் செய்யும் திறமையை வளர்த்துக் கொண்டது. கருவிகள் வருவதால் வேட்டையாடுதல், உணவை தேடுதல் இனையைத் தேடுதல், குழுவாக வாழ்தல், என்ற திறனையும் படிப்படியாக மனித இனம் பெருக்கிக் கொண்டது. உணவுத்தேவையும் இனப்பெருக்கத்தேவையும் மட்டுமே அடிப்படை என்ற நிலையிலிருந்து படிப்படியாக மாறி குடும்பம், சமூகம், விவசாயம், குழு தலைமைத்துவம், கிராமம், நகரம், நாடு, அரசியல், வியாபாரம், கல்வி எனப்படிப்படியாக மனித இனம் தன து சிந்தனை வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டே வந்துள்ளது. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு புதுமையை உட்புகுத்திக் கொண்டு வசதிகளை மேலும் மேலும் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள மனித இனம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. உலகியல் தேவைகளோடு மட்டும் நின்றுவிடாமல் உள நிலை தேடலையும் மனித இனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணத்தினால் பல்வேறு சடங்குகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் தோன்றுவதற்கும், தத்துவங்கள் பிறப்பதற்கும் காரணமாகின்றது.

    aru2

    நியாண்டர்தால் ​பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட கருவிகள்

    நியாண்டர்தால் அருங்காட்சியகத்தில் உள்ளே நுழையும் போதே அங்கே நம்மை வரவேற்க ஒரு நியாண்டதால் மனித உருவச்சிலை உள்ளது. ஒருவருக்கு 8 யூரோ கட்டணம் கட்டி டிக்கைட்டை பெற்றுக் கொள்வதோடு விளக்கம் கொடுக்கும் கருவியையும் பெற்றுக் கொள்ளலாம். 6 தளங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முதன் முதலாக நியாண்டர்தால் மனித எலும்புகளும் அதன் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பற்றிய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஒலிப்பதிவு இருப்பதால் அவ்வொலிப்பதிகளைக் கேட்டுக் கொண்டே தொடர்ந்து செல்லலாம். ஒலிப்பதிவுகள் அனைத்தும் டோய்ச் மொழியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

    aru3

    ​நியாண்டர்தால் ​பள்ளத்தாகில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த எலும்புகளில் எச்சம்

    அதனை அடுத்து வரும் தளத்தில் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள், உலோகக் கருவிகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில கருவிகள் 50,000லிருந்து 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்ற குறிப்புக்களைப் பார்த்து வியந்து போனேன். மனித குல கண்டுபிடிப்புக்களில் அடங்கும் கற்கருவிகள் பல, விலங்குகளின் உடலைக் கொல்லவும், அப்படிக் கொன்ற உடலை கீறி இரைச்சியைக் கிழித்து எடுக்கவும் பயன்படுத்தப்பட்ட கருவிகள். படிப்படியான இந்த வளர்ச்சியில் கற்கருவிகளிலிருந்து பின்னர் உலோகக் கருவிகளை மனித குலம் கண்டுபிடிப்பதும் பின்னர் மட்பாண்டங்களை உருவாக்கி சமைத்தல், சேகரித்தல் என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் இந்த மனித குல வளர்ச்சியில் ஒரு முக்கிய வளர்ச்சியாகத்தான் காண வேண்டும்.

    aru4

    ​அருங்காட்சியகக் கூடத்தின் உள்ளே

    தொடர்ந்து மேலே செல்லும் போது எலும்புக் கூடுகளும், மனித எலும்புகளில் சில பகுதிகளும் இங்கு அறிவியல் தகவல்களோடு வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை மிகச் சிறப்பான வகையில் இந்த அருங்காட்சியகத்தில் 2 மாடித்தளங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி ஆங்காங்கே நியாண்டர்தால் மனிதர்களின் முந்தைய கால நிலையை விளக்கும் வகையில் சில்லிகானில் செய்யப்பட்ட உருவ வடிவங்களை காட்சியாக வைத்திருக்கின்றனர்.

    aru5

    ​புலி மனிதன் (ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்புர்க் மானிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. 40,000 ஆண்டு பழமையான வடிவம்)

    மேல் தளத்தில் இந்த நியாண்டதால் அருங்காட்சியகத்தின் அதி முக்கியசேகரிப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்குதான் இந்த நியாண்டர்தால் மனித இனத்தின் DNA க்கள் கன்ணாடி அலமாரிக்குள் மிகப்பாதுகாப்பாக அதே வேளை பொது மக்கள் சிரமமின்றி பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

    aru6

    ​நியாண்டர்தால் அசல் DNA

    இந்த DNA சேகரிப்பைக் குடுவையில் பார்க்கும் போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு வியப்பு கலந்த பிரத்தியேக உணர்வு காண்போர் அனைவருக்கும் நிச்சயம் உண்டாகும் என்பதில் சந்தேகவில்லை.

    தொடரும்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் ​40.

    நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி

    சுபாஷிணி

    ​சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதகுல வரலாற்றில் ஒரு வளர்ச்சி பதியப்பட்டது. ஹோமோ குழுவகை மனித குலம் கற்களாலும் பாறைகளாலும் உபகரணப் பொருட்களை உருவாக்கும் திறனைப் படிப்படியாக வளர்த்துக் கொண்ட காலகட்டம் அது. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் சில சான்றுகளின் அடிப்படையில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் (Homo Errectus) மனித இனத்தின் உடற்கூறுகளை ஒத்திருப்பதை அறியமுடிகின்றது. இந்த வகையினர் விலங்கினத்திலிருந்து மாறுபட்ட, அறிவு வளர்ச்சி பெற்ற ஒரு இனக்குழுவாக இருப்பதை கிடைத்திருக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், அதிலும் குறிப்பாக மூளைப்பகுதியில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். ஏனைய விலங்கினங்களிலிருந்து மாறுபடும் வகையில் இவர்களது கால்களின் அமைப்பு, ஓடும் தன்மை ஆகியவையும், இவர்களின் பற்கள் அளவில் சிறியதாக மாற்றம் கண்டதையும், உடலின் மேல் அமைந்திருக்கும் மயிர் மெல்லியதாக மாற்றம் கண்டமையையும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஹோமோ இரெக்டஸ் குழுவினர் அடிப்படையில் விலங்கினங்களிலிருந்து மாறுபட்ட வகையில் கற்களையும் பாறைகளையும் கொண்டு அவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைக்கு அடிப்படையான கருவிகளை உருவாக்கும் திறனை படிப்படியாக வளர்த்துக் கொண்ட இனமாகத் திகழ்கின்றனர்.

    ஜெர்மனியின் எஸ்ஸன் மாநிலத்தில் டூசல்டோர்வ் அருகே, ஆகஸ்டு மாதம் 1856ம் ஆண்டு, ஒரு சாதாரண நாளில், காடுகளைத் தூய்மை செய்யும் ஊழியர்கள் ஃபெல்தோவ் குகைப்பகுதியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது 16 எலும்புகள் ஒரு பகுதியில் இருப்பதைக் கண்டனர். கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புகளை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்தனர். இதனை ஆய்வு செய்த யோஹான் கார்ல் ஃபூல்ரோத் அவர்கள் இவை மனித எலும்புகள் தாம் என உறுதி செய்தார். கண்டெடுக்கப்பட்டபோது இது அக்குகையின் உள்ளே, முதுகுப்புறம் வெளியே தெரியும்படி படுத்த நிலையில், குகையின் முன்பகுதியை நோக்கியபடி தலைவைத்துக் கிடந்ததாக இதனைக் கண்டெடுத்தோர் தெரிவித்த குறிப்பு மட்டுமே உள்ளது.

    asub
    எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி (மே 2015)

    இது மட்டுமே முதல் முறையாக கண்டெடுக்கப்பட்ட பழமையான மனித எலும்புகள் அல்ல என்பது உண்மை. ஏற்கனவே பெல்ஜியம், கிப்ரால்டா போன்ற நாடுகளிலும் பண்டைய மனித குலத்தின் எலும்புகள் கிடைக்கப்பெற்றன என்ற போதும் அவற்றிற்கு இந்த எலும்புக் கூட்டிற்கு செய்யப்பட்ட விரிவான ஆய்வுகளைப் போல  மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கிய விஷயம்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளும் அதனைத் தொடர்ந்தார் போல செப்டம்பர் 1859ம் ஆண்டில் வெளியான சார்ல்ஸ் டார்வினின் “On the Origin of Species by Means of Natural Selection” என்ற நூலும் இந்த நியாண்டர்தால் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை மானுடவியல் ஆய்வுலகில் மிக துரிதமாகப் பிரபலமடைய உதவின. அப்போதிருந்த பழமைவாத உலகச் சிந்தனையைத் திருப்பிப் போடும் சார்லஸ் டார்வினின் இந்த அதி அற்புத கோட்பாடு, இந்த புதிய கண்டுபிடிப்பை மையப்படுத்தி தொடர் ஆய்வுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட அடிப்படையை அமைத்துக் கொடுத்தன. மனித இனம் அதன் பழமையான முன்னோர் இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று  வந்த ஒரு இனம் என்னும் கோட்பாடு இந்த விஞ்ஞான ஆய்வோடு இணைந்து செயலாற்றத் தொடங்கியது.

    asuba

    ​அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியில் (மே 2015)

    அதன் பின்னர் இந்த ஆய்வுகள் தொடரப்படவில்லை. இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி இருக்கும் இடமும் பதியப்படாத நிலையில் அடுத்தடுத்து ஜெர்மனியில் நிகழ்ந்த யுத்தம், அரசியல் மாற்றம் என்ற வகையில் இந்த ஆய்வு தொடரப்படாமல் மறக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. 1997 மற்றும் 2000ம்  ஆண்டுகளிலும் இரண்டு அகழ்வாய்த்துறையினர் இந்த இடத்தை கண்டுபிடித்தே தீரவேண்டும் என முயற்சி செய்து ஆய்வில் இறங்கினர். ரால்ஃப் ஸ்மித், யூர்கன் தீஸன் ஆகிய இருவருமே அவர்கள். இவர்கள் ஆய்வு தோல்வியில் முடியவில்லை. நிலத்தின் மேல்பரப்பிற்கு 4 அடி கீழே மண்ணையும் பாறைகளையும் தோண்டி எடுத்து ஆய்வு செய்ததில் கற்கருவிகள், விலங்குகளின் எலும்புக் கூடுகள் ஆகியன கிடைத்தன. அவை மட்டுமல்ல மனித இனத்தின் உடல்கூறுகளைக் கொண்ட எலும்புக் கூடுகளும் கிடைத்தன. அதில் முன்பு 1856ல் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் மிச்சப்பகுதியும் அடங்கி இருந்தமை ஆய்வாளர்களுக்கு வெற்றிப்பாதயைக் காட்டியது.

    asu

    அருங்காட்சியகத்தின் முகப்பு பகுதி (மே 2015)

    ஜெர்மனியின் டூசல்டொர்ஃப் நகரில் பசுமையான சூழலில் ஃபெல்தோவ் குகைப்பகுதி அமைந்திருக்கின்றது. அங்கு தான் அழைத்துச் செல்கின்றேன். அருக்காட்சியகத்தைக் காண தொடர்ந்து வருக!

    Share