Category: தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும்

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 4

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 4

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பிய நோக்கில் ‘உவமம்’ 

    முன்னுரை

    தமிழிலக்கியத்திலோ இலக்கணத்திலோ இயல், படலம் என்பன போன்ற  பகுப்புக்கள் பொருள் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டவையாகும். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனவும்,  புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனவும் அமையும் இலக்கியப் பாகுபாடானாலும், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் எனவும், உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனவும் அமையும் இலக்கணப் பாகுபாடானாலும் அவையெல்லாம் தொடர்புடைய நூற்பொருள் பாகுபாடே. இலக்கியத்தில் முன்னோக்கு, பின்னோக்கு உத்திகள் அமைவதும் இலக்கணத்தில் ‘மாட்டேறு’ முதலிய உத்திகள் அமைவதும் அத்தகையதே! ஆனால் உள்ளடக்கத்தால் வேறுபட்ட இயல்களில், குறிப்பிட்டதொரு பொருளை நுட்பமாகவும் தெளிவாகவும் சுட்டிச் செல்கிற மரபு தொல்காப்பியத்தில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. இது பற்றிய சிந்தனையைச் சுருக்கமாக இப்பகுதி முன்னெடுக்கிறது.

    உவமம் பொருளிலக்கணத்தைச் சார்ந்ததே

    தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களையும் தனித்தனி பொருள் கட்டுமானம் கொண்ட இயல்களாக அமைத்திருக்கிறார்.  உவமவியலையும் அவ்வாறே உவமம் பற்றிய செய்திகளுக்காக ஒதுக்கியிருக்கிறார். ஆனால் உவமம் பற்றிய சிந்தனைகளைப் பொருளதிகாரத்தின் ஏனைய சில இயல்களிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

    “உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத்
    தள்ளா தாகும் திணையுணர்  வகையே”

    “உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்
    கொள்ளும் என்ப குறியறிந் தோரே”

    “உள்ளுறுத் திதனோடு ஒத்துப்பொருள் முடிகென
    உள்ளுறுத் திறுவது உள்ளுறை உவமம்”

    “ஏனை யுவமம் தானுணர் வகைத்தே”

    என்னும் நூற்பாக்கள் அகத்திணையியலில் காணக்கிடக்கின்றன. அதாவது உவமவியலில் ஆராய்ந்திருக்கும் உவமம் பற்றிய சிந்தனைகள், அகத்திணை அமைக்கிற பொழுதும் தொல்காப்பியருக்குத் தோன்றியிருக்கின்றன என்பது கருத்து. மேலும்,

    “நோயும் இன்பமும் இருவகை நிலையிற்
    காமங் கண்ணிய மரபிடை தெரிய
    ……………………………………………………….
    இருபெயர் மூன்றும் உரியவாக
    உவம வாயிற் படுத்தலும் உவமம்
    ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி”

    “இறைச்சி தானே உரிப்புறத் ததுவே”

    “இறைச்சியிற் பிறக்கும் பொருளு மாருளவே
    திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே”

    “அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்
    வன்புறை யாகும் வருந்திய பொழுதே”

    “உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பென
    கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே”

    என்னும் நூற்பாக்கள் பொருளியலில் காணக்கிடக்கின்றன. பொருளியல் என்பது சொல்லதிகாரத்துக் கண்டறியப்பட்ட சொற்கள், அகப்பொருள் மாந்தர்கள் வழியாக வெளிப்படும் போது எத்தகைய பொருளைத் தருகின்றன என்பது பற்றி ஆராயும் இயல்புடையது. மேற்கண்ட அகச்சான்றுகளால் உவமம் பற்றிய தொல்காப்பியர் கருத்துக்கள் பின்வருமாறு நிரல்படுத்தப்படலாம்.

    1. தொல்காப்பியர் உவமத்தைத் தனியானதொரு இயலில் ஆராய்ந்திருக்கிறார்.
    1. செய்யுளைப் பற்றி ஆராயும் செய்யுளியலில் உவமத்தைச் செய்யுளுறுப்பாகவோ வேறு வகையாகவோ அவர் சுட்டவில்லை.
    1. உவமவியலில் எட்டு நூற்பாக்களில் அகப்பொருள் மாந்தர்களின் உவமக் கோட்பாட்டை ஆராய்கின்றன.
    1. உவமவியல் நூற்பாக்கள் அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாக அமைந்து, பொருட்புலப்பாட்டையே தம் நோக்கமாகக் கொண்டிலங்குவதை அறியமுடிகிறது.
    1. உவமவியலில் மட்டும் ஆராயப்பட வேண்டிய உவமம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் அகத்திணையியல், பொருளியல் என்னும் ஏனைய இயல்களிலும் ஆராய்ந்திருக்கிறார். .

     தொல்காப்பியமும் உள்ளுறை உவமமும்

    இதுகாறும் சுட்டிக்காட்டிய எடுத்துக்காட்டுக்களால் தொல்காப்பியர்   உவமத்தை உவமவியல் தவிர ஏனைய இயல்களிலும் ஆராய்ந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. ஆகவே அவர் உவமத்தைப் பொருளதிகாரத்தின் பகுதியாகவே கருதியிருக்கிறார் எனக் கருத இடமேற்படுகிறது. தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பது பிற்கால வழக்கு.

    “எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி”

    என்பதே தொல்காப்பியப் பாயிர வழக்கு. மேலும்,

    “தள்ளாதாகும் திணையுணர் வகையே”

    என்றதனால், உள்ளுறை உவமத்தையும் வெளிப்பட நின்ற ஏனைய உவமத்தையும் திணையை உணர்வதற்குரிய கருவிகளாகவே அவர் கருதியிருக்கிறார் எனவும் எண்ண முடியும். ‘கவிதைக்கு அழகு உவமம்’ என்னும் கருத்து தொல்காப்பியருக்கு இருந்ததற்கான சான்று தொல்காப்பியத்துள் கிட்டுமாறில்லையாயினும் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாகவும் உள்ளுறை உவமத்தைத் திணையுணர் கருவியாகவும் சுட்டிச் செல்கிறார் என்பதை அறியமுடிகிறது.

    நிறைவுரை

    மேற்கண்ட சில பத்திகளில் தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்ட கருத்துக்களால் ‘உவமம்’ என்பது தற்காலத்தில் கருதப்படுவதுபோலக் கவிதைக்குரிய அழகியல் பகுதி அன்று என்பதும் பொருள் விளக்கத்திற்கானதே என்பதும் பெறப்படும்.  உவமத்தைப் பயன்படுத்துதற்குரியார் அகப்பொருள் மாந்தர் என்பதாலும், அவரும் குறிப்பிட்ட இடத்திலேயே சூழலிலேயே வரையறைக்கு உட்பட்டே உவமம் கூறுதல் வேண்டும் என்னும் கடப்பாடு காணப்படுவதாலும் அதனை அகப்பொருள் பகுதியென்றும் துணியலாம். இதற்கும் பிற்காலத்தில் செய்யுளணியாகக் கருதப்படும் தண்டியலங்காரத்தின் கருத்தியலுக்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை என்பதும் ஆனால் தமிழ்க் கவிதைகளின் பெரும்பரப்பு தண்டியின் அழகியல் சார்ந்த உவமத்தாலேயே சூழப்பட்டிருக்கிறது என்பதும் பின்னர் விளக்கப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 3

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 3

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘தொல்காப்பியத்தில் உவம உருபுகள்’ ஒரு பார்வை

    முன்னுரை

    பயிர்களுக்கு ‘வளர்ச்சி’ என்பது தனி. ‘காப்பு’ என்பது தனி. ஆனால் மொழிகளுக்கு வளர்ச்சியே காப்பு. வீக்கம் வளர்ச்சி ஆகாது. மரபாகிய அடிச்சட்டகம் எந்த நிலையிலும் மாறக்கூடாது. ‘மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்’. உவம மரபு என்பது தமிழின் ஆழமான மரபு. பொருள், உவமம் பொதுத்தன்மை, உவமச்சொல் என்பன பற்றிய ஆராய்ச்சி தமிழில் செழித்தோங்கிய காலம் ஒன்று இருந்திருக்கிறது. படைப்பாளனின் உள்ளக் கருத்திற்கேற்ப உவம உருபுகள் பயன்பாட்டுக்கு வர அவற்றை வகைதொகைப்படுத்தும் பணியில் அறிஞர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அவருள் தொல்காப்பியரும் ஒருவர். இதுபற்றிய கருத்துக்கள் இந்தப் பகுதியில் சுருக்கமாக ஆராயப்படுகின்றன.

    தொல்காப்பிய அகத்தும் புறத்தும் உவம உருபுகள்

    தொல்காப்பிய உவமவியல், அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் உவமை அமையும் திறத்தினை ஆராய்கிறது. அவ்வாராய்ச்சியில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமங்கள் அமையலாம் என வரையறுக்கிறது. அவ்வாறு அந்நான்கு தளத்துள் அமைகின்ற உவமைகளுக்கும் அவை விளக்கும் பொருண்மைகளுக்கும் இடையில் அமைய வேண்டிய உவம உருபுகளைப் பற்றியும் தொல்காப்பியம் கருத்துரைக்கின்றது. உவம உருபுகளை ‘உவமச்சொல்’ எனவும் வழங்குவர். தொல்காப்பியத்துள் இவ்வுவம உருபுகளைத் தொகுத்துச் சுட்டுங்கால் ஓரியல்பாகவும் வகுத்துக் காட்டுங்கால் வேறொரு இயல்பாகவும் அமைந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.

    தொகுத்துச் சுட்டலும் வகுத்துக் காட்டலும்

    தொல்காப்பியத்துள் உவம உருபுகள் எண்ணிக்கையால் இருவகையாகக் கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகையாக அமையும் உவமத் தொடர்களில் பயன்படுத்தப்படும் உவம உருபுகளைத் தொகுத்தும் வகுத்தும் தொல்காப்பியர் சுட்டியுள்ளார். இவ்வாறு கூறப்படும் இருவகை நிலையிலும் மெல்லிய வேறுபாடு தென்படுகிறது.

    தொகுத்துச் சுட்டல்

    ‘அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய’ என்னும் முப்பத்தாறு உவம உருபுகள் தொகுத்துச் சுட்டும் நூற்பாவில் காணக்கிடக்கின்றன.

    வகுத்துக் காட்டல்

    தொகுத்துச் சுட்டிய உவம உருபுகளை இன்ன உவமத்திற்கு இன்ன உருபு என வகுத்துக் காட்டும் நூற்பாக்கள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

    வினையுவம உருபுகள்

    “அன்ன ஆங்க மான இறப்ப
    என்ன உறழத் தகைய நோக்கொடு
    கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்”

    பயனுவம உருபுகள்

    “எள்ள, விழையப், புல்லப், பொருவக்,
    கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ
    என்றாங்கு எட்டே பயனிலை உவமம்”

    மெய்யுவம உருபுகள்

    “கடுப்ப, ஏய்ப்ப, மருளப், புரைய,
    ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப என்று
    அப்பால் எட்டே மெய்ப்பால் உவமம்”

    உருவுவம உருபுகள்

    “போல, மறுப்ப, ஒப்பக், காய்ந்த,
    நேர, வியப்ப, நளிய, நந்த என்று
    ஒத்துவரு கிளவி உருவின் உவமம்”

    தொகை நூற்பாவையும் வகைநூற்பாக்களையும் உறழ்ந்து நோக்கினால் பெறக்கூடிய உண்மைகளைப் பின்வருமாறு நிரல்படுத்தலாம்.

    1. தொகை நூற்பாவில் உவம உருபுகளின் எண்ணிக்கை முப்பத்தாறு (36) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
    2. வகைநூற்பாக்களில் கூறப்பட்டிருக்கும் உவம உருபுகளின் எண்ணிக்கையோ முப்பத்திரண்டு மட்டுமே. (32)
    3. தொகை நூற்பாவில் கூறப்பட்ட உருபுகளில் ஆறு உருபுகள் (ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க) வகைநூற்பாக்களில் கூறப்படவில்லை. (36-6=30)
    4. தொகை நூற்பாவில் சொல்லப்படாத நேர, நோக்க என்னும் இரண்டு உருபுகளும் வகை நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன. (36+2=38)
    5. மேற்சுட்டிய அனைத்தையும் நோக்கத் தொல்காப்பியரால் கூறப்பட்டிருக்கும் உவம உருபுகள் முப்பத்தெட்டாகும். (38)

    வினையுவம உருபுகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்டிருக்கும் ‘நோக்க’ என்பதும் உருவுவம உருபுகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்டிருக்கும் ‘நேர’ என்பதும் தொகை நூற்பாவில் குறிக்கப்படவில்லை. வகைநூற்பாக்களில் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ள இவற்றையும் சேர்த்துத் தொல்காப்பியம் கூறும் உவம உருபுகளின் எண்ணிக்கை முப்பத்தெட்டாகும். (36+2 =38)

    ‘இன்ன உவமத்திற்கு இன்ன உருபுதான் வருதல் வேண்டும்’ என்னும் தொல்காப்பியத்தின் கட்டுப்பாடு இலக்கிய ஆய்வில் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படலாம். இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் சிற்றறிவால் எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு அமையவில்லை.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 2

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 2

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமம் கவிதைக்கானதா?

    முன்னுரை

    ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்பதனால் மணமக்கள் பொருத்தம் என்பதுபோலப் பொருளுக்கேற்ற உவமம் அமைதல் வேண்டும் என்பது பெறப்படும். அதாவது விளக்கப்படும் பொருளின் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு கூறுகளில் எதற்காக உவமம் கூறப்படுகிறதோ அவற்றுள் அவை ஒத்திருக்க வேண்டும். பேராசிரியர் உரையில் இந்த நுட்பம் அமைந்துள்ளது. உவமம் தொல்காப்பியத்தில் விரிவாக ஆராயப்படினும் தற்காலத்துக் கவிதையுலகில் உவமம் பற்றி நிலவும் கருத்தினுக்கும் தொல்காப்பியம் கூறும் கருத்திற்கும் இடைவெளி நிலவுவதாகவே தெரிகிறது. அது பற்றிய விளக்கத்தை இந்தப் பகுதி தர முயல்கிறது.

    எல்லாரும் உவமம் கூற இயலுமா?

    தற்காலத்தில் கவிதைக்கு அழகு சேர்க்கும் ‘அணி’களுள் ஒன்றாக உவமையைக் கருதும் போக்கு நிலவுகிறது. இவ்வாறு உவமையைச் செய்யுளணியாகக் கொள்ளும் கருத்தியல் தொல்காப்பியருக்கு இருந்ததா என்பது பெரும் சிந்தனைக்கும் ஆய்வுக்குமுரியது. உவமம் கவிதைக்கானது என்பது தொல்காப்பியத்தின் கருத்தாக இருந்திருக்குமானால் அது பற்றிய பதிவுகளையும் ஆய்வையும் கவிதை பற்றி ஆராயும் செய்யுளியலில் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால்,

    “மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
    ……………………………………………
    நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
    வல்லிதின் கூறி வகுத்துரைத்தனரே” 23

    என முப்பத்திரண்டுச் செய்யுளுறுப்புக்களைத் தொகுத்துரைக்கும் தொல்காப்பிய நூற்பாவில் உவமம் பற்றிய குறிப்பு காணப்படவில்லை. யாப்பிலக்கணத்துள் இன்றியமையாத ‘தளை’ பற்றிய குறிப்பும் தென்படவில்லை. தொல்காப்பியர் செய்யுளணி பற்றிய சிந்தனை உடையவராயிருந்திருப்பின் உவமத்தைச் செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாகக் குறித்திருப்பார். குறிக்காதது மட்டுமன்று., உவமம் பற்றிய ஆராய்ச்சி நிகழும் தொல்காப்பிய உவமவியலில் அகப்பொருள் மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலியோர் இடம்பெற்றிருப்பதையும் அறியமுடிகிறது.

    தொல்காப்பியர் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாகவே கருதியிருக்கிறார் என்பது பின்வரும் அவருடைய நூற்பாக்களில் இருந்து பெறப்படும் உண்மையாகும்.

    “கிழவி சொல்லின் அவளறி கிளவி”

    “தோழிக் காயின் நிலம்பெயர்ந் துறையா”

    “கிழவோர்க்காயின் உரனொடு கிளக்கும்”

    “ஏனோர்க்கெல்லாம் இடம் வரைவின்றே”

    “இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்

    உவம மருங்கில் தோன்றும் என்ப”

    “கிழவோட்கு உவமம் ஈரிடத்துரித்தே”

    “கிழவோற் காயின் இடம் வரைவின்றே”

    “தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்

    கூறுதற் குரிய  கொள்வழி யான”

    எனவரும் உவமவியல் நூற்பாக்கள் உவமத்தைப் பற்றி ஆராயாது உவமம் கூறுதற்குரியாரையும் அவர் உவமம் கூறும் சூழல்களையும் வரையறுப்பனவாகவே உள்ளன. இதனால் அகப்பொருள் மாந்தர்கள் உவமம் கூறும் பாங்கைப் புலப்படுத்துவனவாகவே அவை அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

    செய்யுளுக்கும் உவமத்திற்குமான தொடர்பு

    செய்யுள் பற்றிச் சிந்திக்குங்கால் தொல்காப்பியருக்கு உவமம் பற்றிய எண்ணமோ உவமம் பற்றிச் சிந்திக்குங்கால் செய்யுள் பற்றிய சிந்தனையோ அவருக்கு இருந்ததற்கான அகச்சான்றுகள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவ்விரண்டையும் தனித்தன்மையுடைய இருவேறு நிலைக்களங்களிலேயே சிந்தித்து அமைத்திருப்பதாகவே தோன்றுகிறது. உவமவியலைத் தனித்ததொரு இயலாக அமைத்ததும், அதனை மெய்ப்பாட்டியலுக்கும் செய்யுளியலுக்கும் இடையில் வைத்ததும் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களோடு தொடர்புடைய ஒன்றாகவே தொல்காப்பியர் கருதியிருந்தாரோ என எண்ணத் தோன்றுகிறது.

    உவம வகைகளும் நிலைப்பாடும்

    தொல்காப்பிய உவமவியல், அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் உவமை அமையும் திறத்தினை ஆராய்கிறது என்பதைக் கண்டோம். அவ்வாராய்ச்சியில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமைகள் அமையலாம் என வரையறுக்கப்படுகிறது. அவ்வாறு அந்நான்கு தளத்துள் அமைகின்ற உவமைகளுக்கும் அவை விளக்கும் பொருண்மைகளுக்கும் இடையில் அமைய வேண்டிய உவம உருபுகளைப் பற்றியும் தொல்காப்பியம் கருத்துரைக்கின்றது. உவம உருபுகளை ‘உவமச்சொல்’ எனவும் வழங்குவர். தொல்காப்பியத்துள் இவ்வுவம உருபுகளைத் தொகுத்துச் சுட்டுங்கால் ஓர் எண்ணிக்கையிலும் வகுத்துக் காட்டுங்கால் வேறொரு எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன என்பதை அறியமுடிகிறது. அதாவது ‘திசைகள் நான்கு வகைப்படும்’ என்னும் தொகுத்துச் சுட்டலுக்கும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் அதன் விரிவுக்குமான எண்ணிக்கையில் வேறுபாடு வரக்கூடாதல்லவா? ஆனால் தொல்காப்பியத்தில் வருகிறது. வினை, பயன், மெய், உரு என்னும் நான்கிற்கும் மொத்தமாக ‘இத்தனை உருபுகள்’ என வரையறுத்துக் கூறும் எண்ணிக்கைக்கும் அவற்றின் விரிவாக ஒவ்வொன்றுக்கும் பகுத்துரைக்கப்படும் உவம உருபுகளின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு நிலவுகிறது.

    (தொடரும்….)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 1

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 1

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘உவமம்’ – ஓர் இலக்கணப் பார்வை

    முன்னுரை

    இலக்கிய வடிவங்கள் அனைத்துக்கும் பொதுவானது உவமம். கருத்து நுண்பொருள். உவமம் பருப்பொருள். நுண்பொருளை விளக்க மற்றொரு நுண்பொருளே உவமமாவதும் உண்டு. கருத்துக்களை விளக்க மற்றொரு கருத்தே உவமமாவதும் உண்டு. இயற்கைக்குச் செயற்கையும் செயற்கைக்கு இயற்கையும் உயர்வுக்கு இழிவும் இழிவுக்கு உயர்வும் உவமமாவதும் உண்டு. எது எவ்வாறாயினும் உவமம் என்பது எந்தப் படைப்புக்கும் அழகு சேர்ப்பதோடு பொருள்விளக்கத்திற்கும் தெளிவுக்கும் பயன்பட்டாலே அது சிறக்கும். ‘உவமப் பயன்பாடு’ என்பது மொழியாளுமை, கருப்பொருள் தேர்வு, கருத்து விளக்கம் என்பன போன்றதொரு படைப்பாளனின் பேராளுமை. உவமம் சொல்லிச் சிறந்தாரை ‘உவமைக் கவிஞர்’ என்று போற்றக்கூடிய அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. அத்தகைய உவமங்களைப் பற்றிய கோட்பாடுகளையும் அவற்றையொட்டியும் விலகியும் அமைந்த உவமச் சிறப்புக்களையும் விளக்குவதாக இக்கட்டுரைத் தொடர் அமைகிறது. தொடக்கக் கட்டுரைகள் உவமத்தைப் பற்றிய பழந்தமிழ் இலக்கணப் பார்வையை முன்னிறுத்தித் தமிழில் உவமக் கோட்பாடுகளை வரையறுக்க முயல்கின்றன.

    தொல்காப்பியமும் உவமமும்

    தமிழின் தலையிலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர் பலரும் உவமம் பற்றிய தொல்காப்பியக் கருத்துக்களையும் ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் ஏனைய அதிகாரங்களைப் போலவே ஒன்பது இயல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்பதும் அவற்றுள் ஏழாவது இயலாக ‘உவமவியல்’ அமைந்துள்ளது என்பதும் அறியப்பட்ட உண்மையாகும். தொல்காப்பியர், ‘உவமவியல்’ என்றே இயலுக்குத் தலைப்பிட்டிருக்கவும் தமிழியல் ஆய்வாளர்கள் பலரும், தமிழறிஞருள் சிலரும் ’உவமையியல்’ என்றே தொல்காப்பியர் வழங்கியிருப்பதாகக் கூறி வருவது சிந்தனைச் சிக்கலாகவே தோன்றுகிறது. ‘உவமவியல்’ என அகர இடைநிலையா, ‘உவமையியல் என ஐகார இடைநிலையா என்பதன்று சிக்கல். ‘உவமமா? உவமையா?’ என்பதுதான் உண்மையான சிக்கல்.

    ‘உவமை’யில்லாத் தொல்காப்பியம்

    தொல்காப்பிய நூற்பாக்களில் ‘உவமம்’என்னும் சொல்லே பேரளவு பயன்பாட்டுக்குரியதாக விளங்குகிறது.

    “உள்ளுறை உவமம் ஏனை யுவமம்
    தள்ளாதாகும் திணையுணர் வகையே”

    “தடுமா றுவமம் கடிவரை யின்றே”

    “பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
    மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்”

    “உவமப் போலி ஐந்தென மொழிப”

    என்னுமாறு தொல்காப்பியத்தில் பரவலாகவும் தெளிவாகவும் பயின்றுவரும் நூற்பாக்களால், அந்நூல் ‘உவமம்’ என்னும் சொல்லுக்குத் தரும் இன்றியமையாமையும் மதிப்பும் புலப்படக்கூடும். ‘உவமப்பொருள், உவம உருபு, உவமப்போலி, உவமத்தொகை, உவமத் தோற்றம், உடனுறை உவமம், உவம வாயில், தடுமாறுவமம்’என்றெல்லாம் வரும் வழக்குகள், ‘உவமம்’என்னும் சொல்லின் பயன்பாட்டையே உறுதி செய்கின்றன.

     ‘உவமம்’ —  ‘உவமை’ — சிறு விளக்கம்

    தொல்காப்பிய உவமவியலில் அமைந்துள்ள முப்பத்தெட்டு நூற்பாக்களில் ஒரு நூற்பாவைத் (8) தவிர எந்தவிடத்திலும் ’உவமை’என்னும் சொல் பயன்பாட்டைக் காணவியலவில்லை. அவ்வெட்டாவது நூற்பாவும்,

    “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”

    என அமைகிறது. இந்நூற்பாவில் தொல்காப்பியர் ‘உவமை’என்னுஞ் சொல்லை, ‘உவமத்தின் தன்மை’என்னும் பொருளிலேயே கையாள்கிறார் என்பது பேராசிரியர் எழுதியுள்ள உரையால் புலனாகும். உள்ளத்தின் தன்மை ‘உண்மை, வாயின் தன்மை ‘வாய்மை’ என்றாற்போல உவமத்தின் தன்மை உவமை. ‘மை’பண்புப்பெயர் விகுதி. எனவே உவமத்தின் தன்மை உவமை. பொருளுக்கிசைந்த உவமம் கூறப்படுகிறபொழுது ’அவ்வுவமப்பொருளின் உவமத்தன்மை’ பொருளோடு பொருந்துமாறு உரைத்தல் வேண்டும் என்பதே இந்நூற்பாவின் கருத்து. ஆசிரியர் இளம்பூரணர்  இதனை,

    “உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்”

    எனப் பாடங்கொண்டு, ‘உவமம் இரட்டைக் கிளவியாயினும் நிரல் நிறுத்தமைந்த நிரல்நிறை சுண்ணமாயினும் பொருளும் அவ்வாறே வருதல் வேண்டும்’என உரைகூறுவார். அவர் கொண்ட பாடத்திற்கு அவ்வுரை பொருந்தும். அவ்வாறு பாடங்கொண்டால், ‘உவமத்தின் தன்மை பொருளில் புலப்படுமாறு உவமித்தல் வேண்டும்’என்னும் உவமை பற்றிய இன்றியாமையாக் குறிப்பினைத் தொல்காப்பியர் கூறாது போனார்’ என்னும் நிலை ஏற்படும்.

    (தொடரும்…)

    Share