தமிழாசிரியர் சுந்தர வாத்தியாருக்கு அன்று மனதே சரியில்லை. பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடலாமா என்று யோசித்தார். வேண்டாம், அங்கு சென்று குழந்தைகளின் பிஞ்சு முகங்களைப் பார்த்தாவது மனது சற்று சாந்தமாகும். புறப்பட்டார். வழியில் பார்த்தவர்கள் எல்லோரும் வணங்கினார்கள். அதை ஏற்கும் மனநிலை இல்லை இன்று அவருக்கு. மனம் அன்று நடந்தவைகளை நினைத்துப் பார்த்தது.
காலையில் அவர் தன் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் ஒரு சாதாரண தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா. இரண்டு பெண்கள், ஒரு பையன் அவருக்கு. பையன் வெகு காலம் கழித்து, யாசித்து, தவமிருந்து பிறந்தவன். அவர் முதல் பெண் திருமணத்திற்கே தடுமாறிவிட்டார். சுந்தர வாத்தியார் உதவியிருக்கா விட் டால் இரண்டாவது பெண் கரையேறிருக்கவே மாட்டாள். பெரியவரும் தன் தம்பியை நினைத்துப் பார்க்காத நாளேயில்லை. பையனுக்கு ஒரு நல்ல இடத்தில் வேலையும் வாங்க உதவினார் தம்பி.
இன்று காலை அண்ணன் வீட்டில் ஏதோ பேசுகையில், பையன் ஏதோ சொல்ல, சுந்தர வாத்தியாருக்கு கோபம் வந்து விட்டது. பேச்சு முற்றியது. கேட்டுக்கொண்டிருந்த அண்ணன், தன் பையனை ஏன் என்று கேட்காமல், அவனைத் திட்ட வாத்தியாருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று கூறி வெளியே போகச்சொல்லி விட்டார்.
தான் பார்க்க வளர்ந்த, வளர்த்த பையன். அவனை சொல்ல உரிமையில்லையா? எவ்வளவு செய்திருக்கிறேன் அண்ணன் குடும்பத்திற்கு? வள்ளுவன் சொன்ன குறள் நினைவிற்கு வந்தது.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” எவ்வளவு அழகாக, கருத்தாழத்துடன் கூறியிருக்கிறான்.
யோசித்துக் கொண்டே பள்ளிக்கு வந்து, வகுப்பறைக்குச் சென்றார். அன்று பாடம் திருக்குறள் பற்றியது. முதல் மாணவனைப் பார்த்து ஒரு குறள் சொல்லச் சொன்னார். அந்த பையன் உடனே சொன்னான்.
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.”
நெற்றியில் அடித்தது போலிருந்தது வாத்தியாருக்கு. தான் அண்ணனுக்குச் செய்தது பண உதவி தான். ஆனால் அண்ணன்! பிறந்த உடனேயே தாய், சில நாட்களிலேயே தந்தை, இருவரையும் இழந்த நிலையில் தான் படிக்காமல், தன்னை படிக்க வைத்தவர். தான் அவருக்கு உதவும் நிலையை தந்தவரே அவர்தானே. அப்படியிருக்க அவர் சொன்ன வார்த்தைகளை நான் உடனே மறந்திருக்க வேண்டாமா?
அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சுந்தர வாத்தியார் தன் அண்ணனைப் பார்க்க!!!!!!!!!!!
படத்திற்கு நன்றி : கூகுள்


Leave a Reply