Author: விசாகை மனோகரன்

  • ஜன்னல் முகங்கள்

    -விசாகை மனோகரன்

     

    வீட்டில், தெருவைப் பார்த்த ஒரு ஜன்னல்

    அதில் ரசித்துப் பார்த்த பல முகங்கள்

    ஆண்,  பெண், கருப்பு, வெளுப்பு,

    சிறுவயது, வயதிற்கு வந்தது, வயது போனது

    இப்படி எத்தனையோ!!

     

    எத்தனை முகங்கள் எத்தனை பாவங்கள்

    அதில்  மனதுள் பதிந்தன சிலமுகங்கள்

    கற்பனைக்கு மேனி தந்து

    மனதின் வேலி உடைத்து

    இரவு தூக்கத்தை கெடுத்து

    கனவுகளில் வந்தன சில முகங்கள்.

     

    ஜன்னல் வழியே பார்த்து

    மனக் கதவை உடைத்து

    உள்ளே வந்து குடியேற

    அனுமதி கேட்கும் சில முகங்கள்

    அனுமதி இல்லாமலே வந்தமர்ந்த சில முகங்கள்.

     

    குழாயடிச்சண்டை,

    தெரு நாய்களின் கூட்டம்

    நரிக் குறவர்களின் கூச்சல்,

    பிச்சைக்காரர்களில் கூவல்

    அனைத்துமே அந்த ஜன்னல் வழி பார்த்தவையே

    ஆனால் இவை எதுவும் பாதிக்காத என் மனதை

    அந்த சில முகங்கள் மட்டும் ஏன் பாதித்தன?

     

    நேரிலே பலமுகங்களைப்  பார்த்தாலும்

    அந்த ஜன்னல் முகங்கள் மட்டும் ஏன் வேறுபடுகின்றன

    அந்தப் பார்வையின் நோக்கில் மட்டும் ஏன் நெருடல்கள்

     

    புரியவில்லை, புரிந்தால் சொல்லுங்களேன் !!

     

    Share
  • பதில்??

    -விசாகை மனோகரன் 

     

    ஏங்க, நாளைக்கு எத்தன மணிக்கு ட்ரெயின்

    பொறப்படும்?

     

    எத்தன தடவ தான் கேட்ப மாலதி? 6மணிக்கு.

     

    காலேலயா சாயிந்தரமா?

     

    சாயிந்தரம்தான். போதும் நீ உன் அம்மா வீட்டுக்கு

    போறதும் போதும், என் உயிர வாங்குறதும் போதும்.

     

    ஏன் சொல்ல மாட்டீங்க? உங்க அம்மா மாதிரி,

    எங்க அம்மாவும் மூணு மாசத்துகொருதரம் வந்து,

    ஆறு மாசமா தங்கறாங்க? உயிர வாங்கறேனாமே

    உயிர. போயி ஒரு மாசம் இருந்தா தெரியும்

    சாப்பாட்டுக்கு திண்டாடறது.

     

    சாப்பாட்டுக்கா, நானா, உன்ன விட பிரமாதமா சமைப்பேன் நான், திண்டாடறதாமே திண்டாடறது.

     

    பாக்கலாம் பாக்கலாம், மூணாவது நாளே போன் பண்ணி வான்னு கூப்பிடுங்க, அப்ப சொல்றேன்.

     

    அடுத்த நாள் ட்ரேயின் ஏத்தி விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். அடுப்பில் பால் காயிச்சியது இருந்தது. காபி டிக்காக்ஷனும் இருந்தது. சூடா ஒரு காபி கலந்து குடித்தேன். ஒன்பது மணிக்கு அவள் செய்து வைத்து விட்டு போயிருந்த சப்பாத்தியும் கறியும் சாப்பிட்டுவிட்டு, தூங்கினேன்.

     

    காலையில் எழுந்து, காபி கலந்து குடித்துவிட்டு, குளித்தேன். டிபன் என்ன பண்ணலாம் யோசித்து, பிரட்டு ஆம்லேட் பண்ணி சாப்பிட்டேன். லஞ்சு வெளியே. வந்து நைட்டுக்கு சமைச்சுக்கலாம்.

     

    சாப்பாட்டுக்கு திண்டாடறதாமே, அதுவும் நான். பிரவீனா கொக்கா?

     

    மனதிற்குள் எண்ணம் ஓட, மத்தியானம் சரவணபவனில் சாப்பிட்டேன். அமிர்தம். வீட்டுக்கு வரும் போது மணி ஆறு. காபி கலந்து குடித்துவிட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி, என்ன சமைக்கலாம்னு யோசித்தேன்.

     

    கிச்சன்ல என்ன காய் இருக்கிறதென்று தேடினேன். உருளைக்கிழங்கும் வெங்காயமும் தான் கிடைத்தது. சரி நாளைக்கு கறிகாய் வாங்கனும்னு மனதிற்குள் சொல்லிக்கிட்டு, சாதம் வடித்து, வெங்காய சாம்பார் வைத்து, உருளை ஃப்ரய் பண்ணினேன். சாப்பிட்டேன். சரவணபவனைவிட அமிர்தம்.

     

    ‘சூப்பர் பிரவீன்’. சமையல்னா இதுதான் சமையல். சாப்பாட்டுக்கு திண்டாடறதாமே, அதுவும் நான். பிரவீனா கொக்கா?

     

    அவள் ஊருக்கு போய் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. அன்றைக்கு சனிக்கிழமை. ஜாலியாக நைட் ஷோ சினிமா போயிவிட்டு வந்து படுத்துவிட்டு, காலையில் எழுந்திரிக்கும் போது மணி பத்து. அடடா பாத்திரமெல்லாம் கழுவாம அப்படியே இருந்திச்சு. வேலக்காரிக்கு போன் பண்ணினேன்.

     

    “சார், நேத்து வந்தேன் வீடு பூட்டியிருந்திச்சு, இப்ப காலேல வந்து பெல் அடிச்சேன் அடிச்சேன் யாரும் திறக்கல.  சாயிந்தரம் நான் பேமிலியாட வெளிய போறேன், நாளைக்கு காலையில வரேன்”.

     

    வேலைக்காரியிடம் பேசவா முடியும். எல்லா வேலையும் முடியும் போது மணி ஒன்று. பசி வயிற்றைக் கிள்ளியது. இனிமேல் சமைத்துச் சாப்பிட நேரமில்லை. பக்கத்தில இருக்கிற ஓட்டலுக்கு போய், சிக்கன் பிரியானியும், மட்டன் குருமாவும் சாப்பிட்டேன். சாயிந்தரம் வயிறு கடமுட ஆகி, தொல்லை செய்தது. வலியும் ஆரம்பித்துக் கடைசியில் தாங்க முடியாமல் டாக்டர் கிட்ட ஓடினேன். பிளட் டெஸ்ட், எக்ஸ்ரே, ஸ்க்கேன் எல்லாம் செய்து, புட் பாய்சன்னு சொல்லி, மருந்து மாத்திரை குடுத்தார். மெடிக்கல் ஷாப் பில் நூறு ரூபாய், டாக்டர் பீஸ் 300/=, டெஸ்டிங் பில் 1700/=. இனிமேல் சாப்பாடு வெறும் சாதம் மோர். தண்டம். இந்த மாலதியை யார் ஊருக்குப் போகச் சொன்னது?.

     

    நினைச்சேன் போன் அடிச்சது. அவளே தான்.

     

    என்னங்க எப்படி இருக்கீங்க? போனே பண்ணல.

     

    நான் நல்லாதான் இருக்கேன்.

     

    ஏங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு, உடம்புக்கு ஒண்ணும் இல்லியே?

     

    அதெல்லாம் ஒண்ணுமில்ல, ஏதோ புட் பாய்சனாம், டாக்டர் மாத்திர கொடுத்தாரு டாக்டர். அவ்வளவுதான்.

     

    என்னங்க ஆச்சு, நான் உடனே புறப்பட்டு வரேங்க.

     

    வேணாம் மாலதி, ஒன்ணுமில்ல, மாத்திர சாப்பிட்டா ஓகேவாயிரும்.

     

    இல்லங்க நான் ஒடனே புறப்படறேன்.

     

    சொன்னா கேட்கமாட்டே, உன் இஷ்டம்.

     

    காலையில்  ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டாள்.

     

    என்னங்க இது, ஒரு வாரத்தில இப்படி ஆயிட்டீங்க. இரண்டு நாள் ஆபீஸிக்கு லீவ் போட்டு, ரெஸ்ட் எடுங்க. நான் கஷாயம் வச்சு தரேன். எல்லாம் சரியாயிரும்.

     

    இரண்டு நாட்களில் உடல்நலம்  சரியாகி, ஆபிஸ் போக ஆரம்பித்தேன்.

     

    ஒரு வாரம் கழித்து மாலதி, எங்க, என்னமோ ‘நானா, சாப்பாட்டுக்கா, திண்டாடறதா’ அப்படின்னு சொன்னீங்க, அப்பறம் ஏங்க டாக்டருக்கு 2000/= செலவு, உடம்பு பிரச்சினை எல்லாம்?

     

    அது, அது, வந்து ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கல அவ்வளவுதான்.

     

    ‘என்ன விட நல்லா சமைப்பேன்னுட்டு, ஏங்க ஹோட்டல்ல சாப்பிட்டீங்க’ ?

     

    ‘சமைக்கத் தெரியாம எல்லாம் இல்லை. ஏன்னமோ அந்த ஹோட்டல்ல போய் மாட்டிக்கிட்டேன். அடுத்த தரம் பாரு, ஹோட்டல மாத்திரமாட்டேன்’ .

     

    மாலதி !!!!!!!!!!!!!!!!

    Share
  • நினைவுகள்

    விசாகை மனோகரன்

     

    கடந்து போன பாதையின்,
    வழி நடந்த வாழ்க்கையின்
    விபரீத விளையாட்டுகளை
    நினைத்துப் பார்க்கிறேன்.

    இளமைப் பிராயத்தின் இளரத்த வேகத்தில்
    செய்யக் கூடாது என் தெரிந்தும் செய்த தவறுகள்
    நிகழக்கூடாது என தெரிந்தும் நிகழ்ந்த நிகழ்வுகள்
    மாட்டோம் என நினைத்தும் புகைத்த பெட்டிகள்
    தொடவே கூடாது  என் நினைத்தும் திறந்த புட்டிகள்

    நண்பர்களை சந்தேகித்து, பகைவர்களை சம்பாதித்த
    விபரீதங்கள்
    கேளிக்கையை பிரதானமாக்கி செலவான நிமிடங்கள்
    நாணயங்கள்

    கேளிக்கையான வாழ்க்கையின் நடுவில் திடீர் மாற்றம்
    அனைத்தும் மாறிவிட்டன எனக்கென வந்த ஒருத்தியால்
    அன்று தாய் சொன்னதை கேட்க மனதில்லை
    இன்று இவள் சொல்வதை மறுக்க முடியவில்லை
    தாயால் முடியாதது தாரத்தால் முடியும்
    என இதைத் தான் சொன்னார்களோ?

    புகையை விட்டேன், மதுவையும் விட்டேன்
    நண்பர்கள் வந்தனர், நல்ல நட்பும் வந்தது,
    காரணம், அன்றே சொன்னானே  அந்த தெய்வக் கவிஞன்
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று
    நினைவலைகள் நீங்க மனதிற்குள் ஒரு பாட்டு கேட்டது
    நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்!!!

     

    படத்திற்க்கு நன்றி: கூகுள்

    Share
  • முதியோர் இல்லம்

     

     

    விசாகை மனோகரன்

     

     

    ஏரெடுத்துழைத்துமை வளர்த்தவர்களை
    ஏறெடுத்தும் பார்க்காத தலைமுறையே!
    ஏற்றிவிட்ட ஏனியை எட்டி உதைத்தவர்களே
    அந்நிலை உதைப்பவனுக்கே திரும்பாதா!
    தந்தை வழி நட என்பது சரியாயின்
    உங்கள் பிள்ளைகளும் எட்டி உதைப்பார்களே!

    முதியோர் இல்லம் அனாதைகளுக்கே
    அனாதை ஆக்கப்பட்டவர்களுக்காக இல்லயே!
    முற்றிலும் துறந்த முனிவனுக்கு துணை தேவையில்லை
    நமக்காக முழுவதும் துறந்தவருக்கு அது அவசியம்தானே!

    முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
    பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
    பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!

    தவமாய் தவமிருந்து மெய்வலிக்கப்பெற்று
    கண்ணுக்குள் வைத்து வளர்த்து
    எங்கள் சந்தோஷத்தில் சந்தோஷித்த
    பெற்றோர்களே! உங்கள் இயல்பு
    நீங்கள் இதையும் மன்னிப்பீர்கள்
    தலை வணங்குகிறேன்.

    Share
  • ஞானோதயம்

    விசாகை மனோகரன்

    தமிழாசிரியர் சுந்தர வாத்தியாருக்கு அன்று  மனதே சரியில்லை. பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடலாமா என்று யோசித்தார். வேண்டாம், அங்கு சென்று குழந்தைகளின் பிஞ்சு முகங்களைப் பார்த்தாவது மனது சற்று  சாந்தமாகும். புறப்பட்டார். வழியில் பார்த்தவர்கள் எல்லோரும் வணங்கினார்கள். அதை ஏற்கும் மனநிலை இல்லை இன்று அவருக்கு. மனம் அன்று நடந்தவைகளை நினைத்துப் பார்த்தது.

    காலையில் அவர் தன் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் ஒரு சாதாரண தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா. இரண்டு பெண்கள், ஒரு பையன் அவருக்கு. பையன் வெகு காலம் கழித்து, யாசித்து, தவமிருந்து பிறந்தவன். அவர் முதல் பெண் திருமணத்திற்கே தடுமாறிவிட்டார். சுந்தர வாத்தியார்  உதவியிருக்கா  விட் டால் இரண்டாவது பெண் கரையேறிருக்கவே மாட்டாள். பெரியவரும் தன் தம்பியை நினைத்துப் பார்க்காத நாளேயில்லை. பையனுக்கு ஒரு நல்ல இடத்தில் வேலையும் வாங்க உதவினார் தம்பி.

    இன்று காலை அண்ணன் வீட்டில் ஏதோ பேசுகையில், பையன் ஏதோ சொல்ல, சுந்தர வாத்தியாருக்கு கோபம் வந்து விட்டது. பேச்சு முற்றியது. கேட்டுக்கொண்டிருந்த அண்ணன், தன் பையனை ஏன் என்று  கேட்காமல், அவனைத் திட்ட வாத்தியாருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று கூறி வெளியே போகச்சொல்லி விட்டார்.

    தான் பார்க்க வளர்ந்த, வளர்த்த  பையன். அவனை சொல்ல உரிமையில்லையா? எவ்வளவு செய்திருக்கிறேன் அண்ணன் குடும்பத்திற்கு? வள்ளுவன் சொன்ன குறள் நினைவிற்கு வந்தது.

    “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு”  எவ்வளவு அழகாக, கருத்தாழத்துடன் கூறியிருக்கிறான்.

    யோசித்துக் கொண்டே பள்ளிக்கு வந்து, வகுப்பறைக்குச் சென்றார். அன்று பாடம்  திருக்குறள் பற்றியது. முதல் மாணவனைப் பார்த்து ஒரு குறள் சொல்லச் சொன்னார். அந்த பையன் உடனே சொன்னான்.

    “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.”

    நெற்றியில் அடித்தது போலிருந்தது வாத்தியாருக்கு. தான் அண்ணனுக்குச் செய்தது பண உதவி தான். ஆனால் அண்ணன்! பிறந்த உடனேயே தாய், சில நாட்களிலேயே தந்தை, இருவரையும் இழந்த நிலையில் தான் படிக்காமல், தன்னை படிக்க வைத்தவர். தான் அவருக்கு உதவும் நிலையை தந்தவரே அவர்தானே. அப்படியிருக்க அவர் சொன்ன வார்த்தைகளை நான் உடனே மறந்திருக்க வேண்டாமா?

    அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சுந்தர வாத்தியார் தன் அண்ணனைப் பார்க்க!!!!!!!!!!!

    படத்திற்கு நன்றி : கூகுள்

    Share
  • யாரைக் கேட்டு இங்கு வந்தாய்?

     

    விசாகை மனோகரன்

    விண்வெளியின் முற்றத்தினுள்ளே 

    நட்சத்திரக் கோலங்களின் வழியே

    தவழ்ந்துவரும் முழுநிலவே!

    யாரைக் கேட்டு இங்கு வந்தாய்?

     

    நீ இருக்க நான் பார்த்தது

    அவள் முகம்தானே!

    அவள் அனுமதித்தே வந்தாயா

    இல்லை அழவைத்து வந்தாயா?

     

    அவளிடத்தில் இல்லையேல் நீ அழகில்லை

    உன் அழகே அவள் தானே

    நீயில்லாமல் அவளைப் பார்க்கலாம்

    அவளில்லாமல் உன்னை….

     

    அழகிற்கு மறுபெயர் அவள்

    அவளுக்கு பின் தானே நீ!

    நீ தரும் வெளிச்சமே அவள்தானே

    அவளில்லாமல் நீ இல்லை,

    ஏன்! 

    நானும் இல்லை.

    படத்திற்கு நன்றி

    Share
  • அவன்

    விசாகை மனோகரன்
     

    வாழ்க்கை ஓடத்தின் ஓட்டத்தில்

    வாழ்ந்து கொண்டிருக்கும் வேடத்தில்

    நிரந்தரம் என்பது ஏதடா?

    அதை நினைத்து மாய்வது ஏனடா?

     

    ஆட்டத்தின் நாயகன் அவன்

    ஆட்டுவிப்பனும் அவன்

    ஆடாது நிற்க முயன்றால்

    ஆட்டாது விடுவானோ அவன்

     

    ஆட்டுவதும் அவனே

    அரவணைப்பதும் அவனே

    அவன் ஆடாத ஆட்டமா?

    அவன் இல்லாமல் நாமா?

     எல்லாம் அவனே!!!!!!!!

     

     படத்துக்கு நன்றி

    http://www.puppetryindia.org/page1/page7/page7.html

     

    Share
  • தனக்கொரு நியாயம்

     

    விசாகை மனோகரன்

    திவாகர் ஆபீஸ் வந்து, சீட்டில் அமர்ந்தான். பக்கத்து சீட்டில் இருக்கும் அவன் நண்பன் சதீஷ் இன்னும் வரவில்லை. வந்துவிடுவான். ஏதாவது டிராபிக் ஜாமாயிருக்கும். சிங்காரச் சென்னையில் அதற்க்குத்தான் பஞ்சமேயில்லையே. பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு பேரும் ஒரே நாளில் இந்த பெரிய தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள். நல்ல நண்பர்கள். அதோ சதீஷ் வந்துவிட்டான்.

    வாடா, ஏன் லேட்டு? டிராபிக் ஜாமா?

    ஆமாண்டா. எலெக்டிரிக்  டிரெய்ன்ல ஏறமுடியல கூட்டம், பஸ்ல வந்தேன்.

    ஏண்டா இன்னிக்கு தெரியுமா நம்ம சம்பள உயர்வு பத்தி?

    ஆமாம். என்ன பண்ணப்போறாங்களோ!

    எப்படியும்  மாசம் ஒரு 5000/ உசராது? பாக்கலாம்.

    சுமார் 11மணி  வாக்கில் அவர்களது மேஜையில் வந்து விழுந்தன சம்பள சீட்டுக் கவர். இரண்டு பேரும் ஆவலுடன்  பிரித்தார்கள். சதீஷ் சந்தோஷத்துடன் “திவா, நீ சொன்னமாதிரியே 5000/ ரூபா உசந்திருக்குடா!” திவாகர் பேசவில்லை. பேயறைஞ்ச மாதிரி இருந்தான்.

    திவா, திவா என்னடா?

    ஒண்ணூம் சொல்லாமல் சீட்டை அவனிடம் நீட்டினான் திவாகர். அதில் அவனுக்கு வெறும் 2000/ தான் உயர்வு என்று இருந்தது. என்ன சொல்லவதென்று புரியவில்லை சதீஷ்க்கு. மவுனமாயிருந்தான்.

    திவாகர் சீட்டை எடுத்துக் கொண்டு மேலதிகாரியிடம் சென்றான்

    சார், என்ன இது? வெறும் 2000/ ரூபா உசந்திருக்கு?

    ஆமாம் திவாகர், நீங்க பன்ற வேலைக்குத் தகுந்த  மாதிரி கம்பெனி கொடுத்திருக்கு.

    எப்படி சார் இது நியாயம்? நானும் சதீஷும் ஒண்ணா சேந்தோம். ஒரே வேலை பாக்கறோம். அவனுக்கு 5000, எனக்கு 2000மா?

    நீங்களும் அவரும் ஒண்ணா சேர்ந்திருக்கலாம், ஆனா ஒரே வேலை பாக்கறோம்னு சொல்லாதீங்க. அவர் டேபிள்ல பாத்தீங்களா? ஒரு ஃபைல் பெண்டிங் இருக்கா? சரி, மாசம் எவ்வளவு லீவ் போடறாரு? நீங்க? போங்க ஸார், போயி வேலைய ஒழுங்கா பாருங்க. அப்பறம் கேளுங்க.

    ஒன்றும் பேசாமல், பேச முடியாமல், சாயங்காலம் வீட்டிற்கு டல்லாக வந்து, உட்கார்ந்தான். அவன் முகத்தைப் பார்த்து, என்னவோ சரியில்லை என்று புரிந்து கொண்ட அவன் மனைவி, கல்லூரிக்குச் செல்லும் மகனையும், பள்ளிக்கு செல்லும் மகளையும் அருகில் அழைத்து “அப்பா மூஞ்சி சரியில்ல, ஆபீஸ்ல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். இரண்டு பேரும் சத்தம் போடாதீங்க” அப்படின்னு சொன்னா.

    கொஞ்ச நேரம்  கழித்து காபியுடன் நுழைந்த அவள்..

    “ஏங்க ஒரு  மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா” ந்னு கேட்டாள்.

    ஆமாம்டி, நான் ஆபீஸ்ல வேலையே செய்யறதில்லையாம், ஃபைல் பெண்டிங் வெக்கறேனாம், லீவ் நிறைய போடறேனாம், அது இதுன்னு சொல்லி என்னைய சதீஷோட கம்பேர் பண்ணி, அவனுக்கு 5000, எனக்கு வெறும் 2000 தான் சமபளம் உயர்வுன்னு சொல்றாங்கடி.

    விடுங்க போகட்டும், ஏன் டென்சன்?

    அதில்ல எனக்கு. அவங்க “உனக்கு இவ்வளவுதான்”னு சொன்னா கூட பரவாயில்ல. அதென்ன இன்னொருத்தன் கூட கம்பேரிசன். அதான் எனக்கு பிடிக்கல.

    விடுங்க. வந்து  சாபிடுங்க வாங்க

    நான் கொஞ்ச  நேரம் கழிச்சு வரேன். நீ பசங்களுக்கு குடு.

    கொஞ்ச நேரம்  கழிச்சு, சாப்பிடப் போனா, பையன்  அம்மாகிட்ட அப்பான்னு ஏதோ சொல்லிக்கிட்டிருந்தான்.

    “ஏம்மா, போன  மாசம் நான் நம்ம பக்கத்து வீட்டு விஷ்ணுவோட ஃபைக் மாதிரி எனக்கும் வாங்கித்தாங்கப்பான்னதுக்கு, அவன மாதிரி நீயும் மார்க் வாங்கிக் காமி, பாக்கலாம்ன்னு கம்பேர் பண்ணினாரே அது கரெக்ட்டு, ஆபீஸ்ல பண்ணினா மட்டும் தப்பா?. இது என்னம்மா தனக்கொரு நியாயம், மத்தவங்களுக்கு வேறயா?”

    எனக்கு சுருக்குன்னு குத்திச்சு. அது கரெக்ட்டுன்னா  இதுவும்….

    சிரிப்பு  வந்தது, அறிவும் வந்தது. நாளைக்கு பையனுக்கு ஃபைக் வாங்கணும்

    எங்கியோ ஒரு பாட்டு கேட்டது..

    “துன்பம் வரும் வேளையில சிரிங்க
    என்று சொல்லிவெச்சான் வள்ளுவரு சரிங்க”.

    Share
  • நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

    விசாகை மனோகரன்

    சென்னை வரும் லுப்தாஸா பிளைட் துபாயிலிருந்து புறப்பட்ட 10 நிமிடத்தில் நித்திராதேவியின் மடியில் தவழ ஆரம்பித்து விட்டான் அரவிந்த். ஆனால் நிம்மதியான தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவன் மனதிற்குள். அந்த எண்ண ஓட்டத்தை ‘ தாகத்திற்க்கு ஏதாவது வேண்டுமா’ என்று ஒயிலாக வந்த ஏர் ஹோஸ்டஸ் கேட்டு தடுத்துவிட்டாள்.

    இங்கு நான் கட்டாயம் அரவிந்த் பற்றி சொல்ல வேண்டும். நான் எதற்கு உங்கள் நடுவே. அவன் வாயாலேயே கேளுங்க அவன் கதையை.

    என் வயது இருபத்தேழு. பெத்தவங்களுக்கு ஒரே மகன். ஒரு சாதாரன கம்பெனியில் சாதாரண குமாஸ்தா எங்கப்பா. வீட்டைத் தவிர வேறு உலகம் தெரியாத அம்மா. மாதம் 3ம் தேதி சம்பளம். 5ம் தேதி தட்டுப்பாடு ஆரம்பம். கீழ் நடுத்தர வர்க்கம். படிப்பில கெட்டிக்காரன். விளையாட்டுகளிலும் அப்படியே. ஆனா நான் காரணமில்லாத ஒரு தப்பால வாழ்க்கையில அவதிப்பட்டவன். அந்த தப்பு நான் மேல்ஜாதின்னு சொல்லப்படற குலத்தைச் சேர்ந்தவன் என்பது தான். எந்த ஸ்காலர்ஷ்ப்பும் கிடைக்கல. ஆனா படிக்கணும்கிற வெறி மட்டும் இருந்தது. அந்த கஷ்டத்திலேயும் என்னை படிக்க வைச்சாங்க. 10ம் கிளாஸ் தேறினேன். +2வும் முடித்தவுடன் வீட்டின் நிலைமை புரிந்து எனது ஆசைகளை புதைத்து விட்டு படித்தது போதும் எங்காவது வேலைக்கு போகலாம் என்று முடிவு செய்தேன்.

    ஒரு நாள் ‘அம்மா! நான் படிச்சது போதும்மா. ஏதாவது வேலைக்கு போய் சம்பாதிச்சா கொஞ்சம் கஷ்டம் குறையும்’ அப்படின்னேன்.

    ‘டேய் அரவிந்தா! நீ நல்லா படிக்கற பிள்ள. ஏண்டா நிப்பாட்டனும். நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போடா. என் உயிரகொடுத்தாவது நான் படிக்கவெக்கறேண்டா.’

    ‘சரிம்மா. இனிமே என் லட்சியமே படிப்பு படிப்பு படிப்பு தான்மா.’

    அப்ப ஆரம்பிச்சு ஒவ்வொரு பொருளா அடமானம் வெச்சு அதத் திருப்ப முடியாம வித்து என் படிப்பு தொடர்ந்திச்சு. M.Tech கடைசி வருஷம். Project Work பண்ண எங்க அப்பாவோட பழைய ஸ்கூட்டரையும் வித்தாச்சு. கடைசியா பரிட்சைக்கு பணம் கட்டனும். வெக்கவும் ஒண்ணுமில்ல விக்கவும் ஒண்ணுமில்ல. பணம் கட்ட கடைசி நாள் அம்மா என் கையில பணத்த கொடுத்தாங்க. எனக்கு ஒன்னும் புரியல.

    ‘அம்மா! ஏதும்மா பணம்?’

    பதில் இல்ல.

    ‘அம்மா உன்னத்தான் கேட்டேன் ஏது பணம். சொல்லலேன்னா நான் அத தொடமாட்டேன்’. அப்பத்தான் அம்மா கண்ல நான் எந்த கஷ்டத்திலயும் பாக்காத கண்ணீர பாத்தேன்.

    டேய் போய் பணத்த கட்டிட்டு வாடா அப்பறமா பேசிக்கலாம்ன்னு சொன்ன அம்மாவ உத்துப் பார்த்தேன். ஏதோ வித்தியாசமா புதுசா தெரிஞ்சிச்சு. சட்னு பொறி தட்டிச்சு. புதுசா தெரிஞ்சது அம்மா கழுத்துல மஞ்ச கிழங்கு தாலிக்கு பதிலா. கட்டிபிடிச்சிட்டு அழுதேன்.

    அம்மா சொன்ன ஒரே வார்த்தை ‘சீக்கிரம் போய் பணத்த கட்டு’

    எனக்கு வேற வழி தெரியல. போய் கட்டிட்டு வந்து அசுரத்தனமா படிச்சு ஒரு அமேரிக்க சாப்ட்வேர் கன்பெனில வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம் கழிச்சு இப்ப வரேன் பெத்தவங்கள பாக்க. இதோ இன்னும் ஒருமணி நேரத்தில சிங்காரச் சென்னை. அங்கேந்து ரெண்டுமணி நேரப் பயணம்.

    சொன்னபடி 3மணி நேரத்தில் வீட்டில் இருந்தேன். அப்பா அம்மா ரெண்டு பேர் கண்லேயும் கண்ணீர். ஆனா இது ஆனந்தக் கண்ணீர். கட்டிபிடிச்சு கால்ல விழுந்து வணங்கியபின். ரெண்டு பேரையும் உட்காரவெச்சு அவங்க காலடில நான் வாங்கி வந்திருந்த ஒரு பெட்டிய வெச்சுட்டு ‘அம்மாஇ இதுல நீ எனக்காக கடைசியா கழட்டிக் கொடுத்தியே தாலி அதுவும் மிச்சம் நகையும் இருக்கும்மா. மொதல்ல அப்பாவ அந்த தாலிய கட்டச் சொல்லும்மா’

    அரவிந்த் நீ நல்லா இருந்தா போதும்பா. தங்கத் தாலி கட்டிக்கிட்டாத்தான் பொண்டாட்டியா? தங்கத்தவிட மஞ்சளுக்கு மகிமை ஜாஸ்திப்பா.

    அம்மா சும்மா சினிமா டைலாக் பேசாதம்மா. கட்டிக்கம்மா

    சரிடா நாளைக்கு வெள்ளிக்கிழமை நீயும் நல்லபடியா திரும்பி வந்திருக்கே. கோயிலுக்கு போய் சாமி முன்னாடி கட்டிக்கலாம்.

    ராத்திரி சூப்பர் விருந்து. சாப்டுட்டு 12மணி வரைக்கும் பேசிக்கிடிருந்துட்டு படுத்துட்டோம் காலேல சீக்கிரம் எழுந்திரிச்சு கோயிலுக்கு போகணும்னு சொல்லிட்டு.

    சூரியன் முகத்தில பட்டு எழுந்திரிச்சு உக்காந்தேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு கோயிலுக்கு போகணுமேன்னு. அம்மா ஏன் எழுப்பல? இப்படியா தூங்க விடுவாங்கன்னு சொல்லிக்கிட்டே போய் கை கால் கழுவிட்டு உள்ள போய் அம்மான்னு கூப்பிட்டா பதில் இல்ல. எங்க போனாங்க? ஒரு வேள பிள்ள அசதியா தூங்குதுன்னு எழுப்பாம கோயிலுக்கு போய்ட்டாங்களா? நினச்சிக்கிட்டே அவங்க ரூம தாண்டும்போது அம்மா படுத்திருந்தது தெரிஞ்சிச்சு. அம்மா இந்நேரத்துல படுத்திருக்காங்கன்னா ஏதாதவது உடம்பு சரியில்லயான்னு யோசிச்சிக்கிட்டே கதவ தெறந்தேன்.

    அங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் படுத்திருக்க, நடுவில நான் வாங்கி வந்திருந்த நகைங்க கிடக்க, அந்த தாலிய மட்டும் கையில பிடிச்சிட்டு அம்மாவும் அம்மாவ பிடிச்சிட்டு அப்பாவும் அவங்க கடமை முடிஞ்சிருச்சின்னு நிம்மதியா நிரந்தரமா துங்கிட்டிருந்தாங்க.

    அந்த மஞ்சகிழங்கு அம்மா கழுத்தில தங்கத்தவிட அதிகமா ஜொலிக்குது.

    எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன். டாக்டர்லாம் வந்தாங்க. ஏதோதோ சொன்னாங்க ரெண்டு பேருக்குமே இதயம் வீக் ரொம்ப ரேர் இப்படி வர்ரது அது இதுன்னு. கொடுத்துவச்சவங்கன்னு சில பேர் சொன்னாங்க. ஆனந்த அதிர்ச்சில போய்ட்டாங்கன்னு சில பேர் சொன்னாங்க.

    ஆனா போனவங்க போனவங்க தானே.

    எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன்

    எங்கேயோ பாட்டு கேட்குது

    ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’. 

    Share