Month: August 2013

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (21)

    பவள சங்கரி

    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

    பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதை நீயே செய்.

    மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.

    3.bp.blogspot.com--A2e7CEAq6dg-UEJX_Q97iXI-AAAAAAAAA_E-NJ9xRqdIF-k-s1600-quotes-life2

    நாம் எல்லோருமே மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அன்பும், கருணையும், பெருந்தன்மையும், பொறுமையும், மன்னிக்கும் மனமும் நிறைந்த அமைதியான உலகைக்காணவே விரும்புகிறோம். குற்றங்களும், தவறுகளும் மலிந்து கிடக்கிற மக்களின் செயல்கள் நம்மைக் கோபமூட்டி, ‘இவர்களெல்லாம் எப்பொழுதுதான் திருந்தப் போகிறார்களோ’ என்று எண்ண வைக்கிறது. நேர்மையற்ற வியாபாரிகள், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், பொறாமை நிறைந்த சமூகம், சுயநலம் நிறைந்தவர்கள், கருணையும், அன்பும் துளியும் இல்லாதவர்கள் என்று பலவகையான மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் உலகம் இப்படி கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிவிட்டதே என்று நொந்து போகிறோம். இப்படி அடுத்தவரிடம் குறை காண ஒவ்வொரு முறையும் நம் ஆள்காட்டி விரலை நீட்டும் அதே சமயம் நம்முடைய மற்ற மூன்று விரல்களும் நம்மையே குறிபார்ப்பதைக் காணத் தவறிவிடுகிறோம். அடுத்தவரின் தரத்தை எடை போடும் அந்தக் கருவி தமக்கென்று வரும்போது தம்மையறியாமலே நியாயத்தை விட்டு விலகிப்போய்விடுகிறது. தமக்கான தீர்ப்பும் பாரபட்சமாகவே ஆகிவிடுகிறது.

    உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கக்கூடிய நாம் அதற்கேற்றார்போல முதலில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அன்பு, கருணை, நேர்மை, அமைதி, சுயநலமின்மை போன்ற அனைத்திலும் அடுத்தவரிடம் எதிர்பார்க்கிற அந்த தரத்தை நம்மிடம் முதலில் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டுமல்லவா? அப்படி இருக்கும்போது நாமே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவும் முடியும். செய்த தவறுகளை துணிச்சலாக ஒப்புக்கொள்ளும்போது மட்டுமே நம்மால் அதைத் திருத்திக்கொள்ளவும் முடியும். நேர்மையான பார்வையுடன் நம்மை நாமே உணர ஆரம்பிக்கும்போதே நன்மையும், தீமையும் கலந்ததுதான் மனித மனம் என்பது விளங்கும். நம்முள் சக்தியும், பலவீனமும் சரிவிகிதத்தில் இருப்பதை உணர்ந்து ஒப்புக்கொள்ள ஆரம்பித்தாலே அடுத்தவரைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டமும் கபடமற்ற முறையில், மன்னிக்கும் மனோபாவத்துடன் இருக்க ஆரம்பித்துவிடும். முள்ளை முள்ளால் எடுக்க முடிவது போல வெறுப்பை, வெறுப்பால் நீக்க முடியாது. புத்தர்பிரான் சொல்வது போல, வெறுப்பை அன்பு கொண்டு மட்டுமே கைப்பற்றமுடியும் என்பதே மாறாத சட்டம். மன்னிக்கும் மனம் மட்டுமே என்றுமே அமைதி காண இயலும். மன்னிக்கும் குணம் மட்டுமே அன்பின் உச்சம். முழுமையாக மன்னிக்கும் மனம் மட்டுமே மகிழ்ச்சியையும், நிம்மதியையும் பெற வல்லது. இந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் மட்டுமே நம்மை வெற்றிப் பாதையில் வழிநடத்தக்கூடியது.

    quotesthoughts.com-wp-content-uploads-2013-02-motivational-Inspirational-quotes-thoughts-success-hardwork-self-confidence

    ஓய்வில்லாத மனம்

    வெகு நாட்களுக்குப் பிறகு வெளி நாட்டிலிருந்து வந்த என் தோழி திடீரென்று தொலைபேசியில் அழைத்து கோவைக்குச் செல்லும் வழியில், மதிய உணவிற்கு வருவதாகச் சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தாள். இரண்டு மணி நேரம் இருக்கிறதே, எத்தனையோ செய்யலாமே என்று ஆர்வக் கோளாரில் இனிப்பு, காரத்துடன், அவளுக்குப் பிடித்த காளான் பிரியாணி, தயிர் சேமியா, ஆந்திரா ஸ்டைல் பகாலாபாத், பன்னீர் மஞ்சூரியன் என அனைத்தையும் செய்ய ஆயத்தமானேன். நான்கு அடுப்பும் ஒரே நேரத்தில் ஜெகஜோதியாக எரிந்து கொண்டிருக்கிறது. பரபரவென ஒவ்வொன்றாக நறுக்கி தாளித்துக் கொண்டிருந்தேன். நேரம் ஆகிவிட்டது. அவள் அவசரமாகச் செல்வதால் வெகு நேரம் காக்க வைக்க முடியாது. இந்த பரபரப்பில், காளான் பிரியாணியில் ஊற்ற வேண்டிய தேங்காய்ப்பாலை பிசிபேலாபாத்திலும், பிசிபேலாபாத்தில் போட வேண்டிய மசாலாவை காளான் பிரியாணியிலும் போட்டுவிட்டேன். குழப்பம் அதிகமாக இரண்டையும் அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, தயிர் சேமியாவை முதலில் பொறுமையாகச் செய்து முடித்தேன். அடுத்து அன்னாசிப்பழக் கேசரியும் அருமையாக வந்துவிட்டது. பிசிபேலாபாத்தை மீண்டும் வேறு பாத்திரத்தில் பொறுமையாகச் செய்து முடித்தேன். அவள் சொன்னபடியே குறித்த நேரத்திற்கு வந்தாள் குடும்பத்துடன். சுவையான விருந்து என்று மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுவிட்டுச் சென்றாள். எனக்கும் மன நிறைவாக இருந்தது. இதை ஆரம்பத்திலேயே நிதானமாக முடிவெடுத்துச் செய்திருந்தால் இரண்டு பதார்த்தங்கள் வீணானதைத் தவிர்த்திருக்கலாம். ‘Mearsure twice, cut once’ என்ற ஆங்கிலப் பழமொழிதான் நினைவிற்கு வந்தது. இருக்கக்கூடிய நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு, முடிந்ததை மட்டும் நிதானமாகச் செய்திருந்தால் இன்னும் அதிக தரத்துடன், சக்தி, காலம், பணம் என அனைத்து விரயத்தையும் தவிர்த்திருக்கலாம்.

    மனதின் அதிகப்படியான பணி நெருக்கடிச் சுமை குறிந்த விழிப்புணர்வைக் கொண்டோமானால் நம்முடைய வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான பெரும் மாற்றங்களைச் சந்திக்க முடியும். தத்தம் சக்தியின் அளவை அறிந்து அதற்கேற்றவாரு பணி நிர்ணயம் செய்யும் பழக்கம் மன அமைதியையும், மகிழ்ச்சியையும், நம்ப முடியாத அளவிற்கு நல்ல பலாபலன்களையும் தரவல்லது. பலவிதமான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி குழப்பம் ஏற்படுத்துவதைக் காட்டிலும் ஒவ்வொருப் பணியாக எடுத்துக் கொண்டு அதில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்தி செயல்படும்போது அதன் பலன் மிகத்தரமானதாக ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்பதே நிதர்சனம். மற்றவர்களைக்காட்டிலும் அதிகமான உழைப்பைப் போடுவதான தோற்றம் அளித்தாலும், நம்முடைய சக்தி ஒழுங்கில்லாமல் தன் வழியில் சென்று இறுதியில் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. மனதிற்குள் மட்டுமன்றி வீட்டிற்குள்ளும் அளவிற்கு அதிகமான பொருட்களை அடைக்கும் போது, அது எத்துனை அழகான பொருட்களாக இருந்தாலும் ஒரு கசகசப்பை ஏற்படுத்தி அழகைக் கெடுத்துவிடும். சுத்தம் செய்வதற்கும் சிரமமாகவும் இருக்கும். எந்த நேரத்தில் எந்தப் பணியைச் செய்ய வேண்டும், எதை முதலில் செய்ய வேண்டும் என்று நிதானமாகத் திட்டமிடல் மட்டுமே வெற்றிக்கான பாதையை அடையும் வழி. இது போன்ற தெளிவான திட்டமிடல், குழப்பமானதொரு இருண்ட மனக்குகையிலிருந்து பளிச்சென்ற சூரிய ஒளி நிறைந்த பகுதிக்குள் வந்தது போன்றதொரு சுதந்திரமான நிலையை உருவாக்கும். இந்தச் சுதந்திர நிலையே வெற்றிக்கான ஆதாரம்.

    அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா!

    0133

    படங்களுக்கு நன்றி :

    http://kootation.com/life-quotes-saying-wallpaper-and-animation/3.bp.blogspot.com*-A2e7CEAq6dg*UEJX_Q97iXI*AAAAAAAAA_E*NJ9xRqdIF-k*s1600*quotes-life2.jpg/

    http://kootation.com/motivational-quotes-thoughts-inspirational-success-hardwork-confidence/quotesthoughts.com*wp-content*uploads*2013*02*motivational-Inspirational-quotes-thoughts-success-hardwork-self-confidence.jpg/

    Share
  • “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து”

    தமிழ்த்தேனீ 

     

    toysசமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன். ஒரு அலமாரி திறந்து அதிலிருந்து குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டு பொம்மைகள் கீழே சிதறின. பார்த்து மலைத்துப் போனேன். ஆமாம் ஒரு கடையில் இருப்பதைப் போல் விதம் விதமாக அவ்வளவு பொம்மைகள்.

    ஆனால் யாருக்காக அவை வாங்கப் பட்டனவோ அந்தக் குழந்தை அழுது அடம் பிடித்துத்கொண்டு கீழே விழுந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. ஆமாம்  அந்தக் குழந்தை இவ்வளவு விளையாட்டு பொம்மைகள் இருந்தும்  திருப்தி இல்லாமல் ஏதோ ஒன்றுக்கு  அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

    ஆகவே விளைவை யோசித்தால் அந்தப் பொம்மைகள் யாரால் வாங்கப்பட்டதோ  யாருக்கு கொடுக்கப்பட்டதோ இருவருக்குமே திருப்தி இல்லை,

    ஏன் இவ்வாறு குழந்தைகள் திருப்தி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால், பெற்றவர்கள் குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கிக் கொடுப்பது அவர்களுடைய வேலைகளில் அந்தக் குழந்தை தலையிடாமல் இருந்து, அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்து அவர்கள் விளையாடவேண்டும். என்னும் சுயநலம் அதிகமாக இருக்கிரதே தவிர, ஆசையாய் வாங்கிக் கொடுக்கும் நிலை மாறிவிட்டது.

    எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் அழுது அடம் பிடிக்கக் கூடாது, சொன்ன பேச்சைக் கேட்க வேண்டும் என்னும் உயரிய கொள்கைக்காக ஏற்பட்ட வாங்கிக் கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  அந்தக் குழந்தைகளின் பிடிவாதத்தையும்  முரட்டுத் தனத்தையும் வளர்க்கும்  பேராசை எனும் கருவியாக, திருப்தி இன்மை என்னும் கருவியாக மாறிப் போனது  கொடுமை என்றால், இந்தக் கொடுமையை உணராத பெற்றோரின் மனநிலை இன்னமும் கொடுமை.

    எந்தப் பொம்மை வாங்கிக் கொடுத்தாலும்  அந்தப் பொம்மையை விளையாட முழுதுமாகக் கற்றுக் கொள்ளாமல், அதன் அதிக விலையை[ப் பற்றித் தெரியாமல், அதன் அருமையை உணராமல், அடுத்தடுத்து கிடைக்கும் பொம்மைகளால்   கவரப்பட்டு எதிலுமே நிலையில்லாமல் தவித்து அத்துணை பொம்மைகளையும் அலக்‌ஷியப் படுத்தி அடம் பிடிக்கும் குணத்தையும், திருப்தி இல்லாமை என்னும் பிடிவாத  குணத்தையும் மட்டுமே  உள்வாங்கும் குழந்தைகள்  நாளடைவில் வாழ்க்கையில், காதலில், படிப்பில், விளையாட்டில், எதிலுமே திருப்தி இல்லாமல் எப்போதும் எதையோ பறி கொடுத்தாற் போல, காதிலே ஒரு உயர்தர செல்போனை வைத்துக் கொண்டு  சாலையில் வாகனங்கள் வருவதுகூடத் தெரியாமல், ஆபத்துக்களை உணராமல் விரக்தியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

    எண்ணிப் பார்க்கிறேன்,  எங்கள் குழந்தைப் பருவங்களை, அதிகமாகத் தெரிந்து கொள்ளாமல், அதாவது  அந்தப் பருவத்துக்கு எது வேண்டுமோ அதை மட்டும் தெரிந்து கொண்டு, மனதிலே கள்ளமில்லாமல் ஆடி, ஓடித் திரிந்த  குழந்தைகளாக, ஏதேனும் ஒன்று கிடைத்தாலும் அதிலே திருப்தி கொண்டு அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கத் தெரிந்த குழந்தையாக இருந்து, எப்போதும் மனதிலே உற்சாகமாக, குதூகலமாக வளையவந்த அந்தக் காலங்களில்  பெற்றோர்களும்  குழந்தைகளும் எல்லோருமே  அதிக ஆசைப்படாமல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும்  பொன்னான வாசகத்தை மனதிலே வாங்கிக் கொண்டு  மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்பது புரிகிறது.

    குழந்தைகள் பல விளையாட்டுப் கேட்டாலும்  அந்தப் பல பொருட்களில்  எது அந்தக் குழந்தைக்கு வேண்டும்  என்று பெற்றவர்களும் புரிந்துகொண்டு, அதைக் குழந்தைகளுக்கும் புரியவைத்து  தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து  வாங்கிக் கொடுத்த அந்தப் பொருளின்  உபயோகத்தையும்,, குழந்தைகளுக்கு உணர்த்து  அந்தக் குழந்தைகளின்  திருப்தி என்னும் உயரிய குணத்தை  வளர்த்து   வாழ்க்கையில் அவர்களை சிறப்பாக யோசிக்க வைத்து , உணர்ச்சி பூர்வமான முடிவுகளை எடுக்காமல் ஆராய்ந்து   முடிவெடுக்கும்  நல்ல பொறுப்பான குழந்தைகளாக வளர்த்த அந்தக் காலத்துப் பெற்றோரும், அதைப் புரிந்து கொண்டு நற்குணங்களை வளர்த்துக் கொண்ட அந்தக் காலத்துக் குழந்தைகள், இந்தக் காலத்துப் பெரியவர்களை மனதார வாழ்த்தத் தோன்றுகிறது.

    தீர்க்கமாக சிந்தித்தும் திடமான முடிவுகள் எடுக்காமல் எப்போதும் அலைபாயும் மனதோடு வாழும் இந்தக் காலத்துக் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும், அவர்களின் வளர்ப்பு முறைகளையும் பற்றிக் கவலை வருகிறது. இந்தத் தலைமுறையினரைக் காணும் போது மனம் பதைக்கிறது.

    உடனடியாக யோசித்து உண்மைகளை உணர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.  இந்தக் காலத்துப் பெற்றோர்களும் குழந்தைகளும் கவனித்து  தொடர்ந்து கடைப்பிடிக்க  வேண்டிய முது மொழி    “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து “  இல்லையென்றால் வாழ்க்கை இப்படித்தான் சிதறிப் போகும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(68)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    வணக்கத்துடன் மீண்டும் உங்களை இம்மடலில் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒரு நாட்டின் சுதந்திரம், ஒரு நாட்டின் இறைமை, ஒரு நாட்டின் தனித்தன்மை என்பன அந்நாட்டின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது.

    தமது நாட்டின் பாதுகாப்பிற்காக மற்றொரு நாட்டில் தங்கியிருக்கும் எந்த நாடுமே உளசுத்தியோடு நேர்மையாக தம்முடைய கொள்கைகளை வழிநடத்துவதென்பது முடியாத காரியம்.

    ஆனால் இன்றய உலகச் சூழலில் பெரும்பான்மையான் நாடுகள் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சில சிறுபான்மையான நாடுகளிலேயே தங்கியிருக்கும் நிலையைக் காண்கிறோம்.

    ஒவ்வொரு நாட்டினது பாதுகாப்பிற்கும் அந்நாட்டின் இராணுவமே பொறுப்பாகிறது. தம்முடைய நாட்டிற்கான இராணுவத்தில் இணைந்து பணிபுரிவோர் தம் நாட்டின் மீதுள்ள அதீத பற்ரின் அடிப்படையிலே இணைந்து கொள்கிறார்கள்.

    நாட்டின் இராணுவத்தினருக்கு ஊதியம் கொடுக்கப்பட்டாலும் அது என்னவோ அடித்து விழுந்து ஓடிப்போய் பணியில் அமர்ந்து கொள்லும் வகையில் பெரியதோர் ஊதியமாக இருக்காது. இருந்தாலும் தமது நாட்டிற்கு அந்நியதோர் நாட்டினாலே ஆபத்து என்று கண்டு கொண்டதும் தமது உயிரைப் பணயம் வைத்து அந்நதந்த நாட்டு இராணுவங்கள் போரிடுவது அவ்விராணுவத்தினரின் தியாக மனப்பான்மையையே சுட்டிக் காட்டுகிறது.

    எதிலும், எங்கும் சில விதிவிலக்குகள் இருப்பது போல இவ்விராணுவத்தினர் மத்தியிலும் சில சுயநலம் கொண்ட,வர்கள் இல்லாமல் இல்லை ஆனால் அவர்கள் மிகச் சொற்ப அளவிலேயே கணப்படுவார்கள்.

    சரி என்னடா இவன் இராணுவத்தைப் பற்றி ஏதோ எமக்குத் தெரியாதவைகளைச் சொல்ல வந்தது போல சொல்லிக் கொண்டே போகிறான் என்று நீங்கள் சலிப்படையாதீர்கள் வழக்கம் போல எனது பீடிகைக்கு ஒரு காரணம் இருக்கிறது.

    கடந்தவாரம் இங்கிலாந்து தொலைக்காட்ச்சியில் தேசிய சேவையான பீ.பீ.சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கண்ணுற்ற போது எழுத என் எண்ணப் பரிமாணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேற்கண்ட ஆரம்பம்.

    சமீபத்தில் இங்கிலாந்து இராணுவம் கண்ட போர்கள் கனமானவை, அதிக உயிரிழப்புகளைக் கொண்டவை. அவை மேற்கொள்ளப்பட்ட காரணங்களின் பின்னனியில் இருக்கும் நியாயத்தைப் பற்றி வாதிப்பதல்ல எனது இம்மடலின் நோக்கம். ஆயுதங்களின் பங்குபற்றி தற்போது இராணுவ சேவையிலிருந்து விடுபட்ட இராணுவ வீரர்களின் நிலை பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியை பற்றிய கருத்தோட்டமே இது.

    அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படி கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட தற்கொலை செய்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையே அதிகம் எனக் கூறப்பட்டது.

    களத்தில் நடைபெறும் போர் என்பது என்ன? மற்றொரு மனித உயிரைக் கொலை செய்வது அதேநேரம் எதிரியால் தனது உயிருக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ எனும் அச்சத்தில் வாழ்வது. இவையிரண்டும் ஒரு மனிதனின் மனதில் எப்போது பெரும்பான்மையாகக் குடி கொண்டிருந்தால் அம்மனிதனின் மனநிலை சீராக இருக்க முடியுமா?

    ஆனால் இத்தகிய சீரற்ற மனோநிலையைத் தாங்கி அதைலிருந்து வெளிவந்து விடக்கூடிய வல்லமை பலருக்கு இருந்தாலும் இம்மனோநிலையில் சிக்கி வாழ விரும்பாமல் தமது வாழ்வை முடித்துக் கொண்டு விடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

    2012ம் ஆண்டில் அப்கானிசஸ்தானில் பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களில் ஏழு பேர் தமது உயிரைத் தாமாக மாய்த்துக் கொண்டார்கள் எனவும் மேலும் 14 பேரின் மரணம் தற்கொலை எனச் சந்தேகிக்கப்பட்டாலும் அவர்களின் மரணத்தைப் பற்றிய விசாரணை முற்றுப்பெறாததால் அவை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என உத்தியியோகபூர்வமான அறிக்கை சொல்கிறது என்று டெய்லி டெலிகிராப் பத்திரிகை அறிக்கை ஒன்று கூறுகிறது..

    நான் மேற்சொன்ன கணிப்பு பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவவீரர்களைப் பற்றியது. ஆனால் ஏற்கனவே ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பாணியாற்றி விட்டு இராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்ப்பி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர்களில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் தமது உயிரைப் பறித்துக் கொண்டார்கள் என்று இதே அறிக்கை கூறுகிறது..

    இராணுவ நடவடிக்கை என்பது பல சமயங்களில் மற்றவர்களின் உயிரைப் பறிக்கும் நடவடிக்கை ஆகிரது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் தமது கண்முன்னால் தமது நண்பர்களின் உயிரைப் பறிகொடுத்தோர், தம்மோடு உண்டு, உடுத்தி, உறங்கி வாழ்ந்தோர் தமது கண்முன்னாலேயே உயிரிழப்பதைக் கண்ணுற்றோர் என பலவகையானோர் மனோநிலையில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

    ஆனால் இத்தகைய மனஓநிலை பாதிக்கப்பட்டவர்களாக அரியப்பட்டோர் இராணுவ வாழ்க்கையில் இருந்து சகஜ வாழ்க்கைக்குத் திரும்போது அவர்களின் ஆரோக்கியத்தின் தொடர்ந்த பராமரிப்பை அரசாங்கம் சர்வரச் செய்கிறதா எனும் கேள்வியே இப்போது எழுந்துள்ளது.

    இவ்விடயத்தில் இப்போது இங்கிலாந்து ஊடகங்களில் எழுந்துள்ள வினாக்கள் அரசாங்கத் திணைக்களத்தையும் ஓரளவு தட்டி எழுப்பியுள்ளது.

    அது தவிர இத்தகிய தற்கொலைகளுக்குள்ளானவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் எடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஆங்காங்கே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

    எமது பாதுகாப்பிர்காக, எம் நாட்டின் அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கி தமது உயிரைப் பணயம் வைப்போருக்கு நாம் எத்தகய கெளரவத்தை அளிக்கிறோம்? எமது அரசாங்கத்தில் இராணுவப்பிரிவுக்கான அமைச்சர்கள் இதனை எத்தனை தூரம் மிகவும் முக்கியமான விடயமாகக் கருதுகிறார்கள்?

    கேள்விகளுக்கான விடைகள் சாதாரணத் தேர்தல் கோஷங்களாக இல்லாமல் நாட்டிற்க்குச் சேவை செய்யும் மனிதர்களில் நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கும் கொள்கைகளாக மிளிர வேண்டும் என்பதுவே பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    17.07.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • குறவன் பாட்டு – 4

    
    
    சச்சிதானந்தம்
    கானகம் செல்லுதல்

     

    
    அரும்பொருள் சேகரிக்கக் கானகம் செல்லுதல்
     
    
    

    மனிதனின் வாடை அண்டாக் காட்டில்,

    தன்னந் தனியாய்ச் செல்லும் குறவன்,

    கடவுளும் கூடக் காணாக் காட்சியைக்,

    காணும் வாய்ப்பைப் பெற்றிருந் தானே!                                                                                                           31

     
    புலியைப் பின் தொடர்ந்து செல்லுதல்
     
    
    

    கடமான் ஒன்றை உணவாய்ப் பிடிக்கத்,

    தவறாய்ப் பின்னால் பதுங்கிப் பாய்ந்த,

    கிழட்டுப் புலியைப் பலமாய் உதைத்து,

    உயரத் துள்ளிப் பாய்ந்தது மானே!                                                                                                                      32

     

    உதைபட்ட புலியின் இரண்டு பற்கள்,

    சிதைவுற்று மண்ணில் சிதறிக் கிடக்க,

    பதைப்புற்ற புலியும் பசியில் மறைய,

    அதைக்கண்ட குறவன் பலசேக ரித்தான்!                                                                                                        33

     

    புலிநடந்த கால்தடத்தை வைத்ததனின் வயதறிந்து,

    தனிமையிலே நடமாடும் முதுமைப்புலி என்றுணர்ந்து,

    தொடர்ந் ததனைத் தொடர்ந்து சென்று,

    அது வசிக்கு மிடமறிந் தான்!                                                                                                                                   34

     

    அடர்ந்த் திருக்கும் கானகத்தில், உடல்

    தளர்ந் திருக்கும் புலியைத்தேடி, தோள்

    வளர்ந் திருக்கும் வாலிபக் குறவன்,

    துணிந்து தினம் பின் தொடர்ந்தான்!                                                                                                                   35

     

    மானடிக்கும் பலமிழந்துமெல்லப் பின்னர்

    முயலடிக்கும் திறனிழந்து, நாட்கள் செல்லச்செல்ல

    உயிர்வாழும் மனமிழந்து,  ஊன்வளர்க்கும் உணவிழந்து,

    நீர்பருகும் வழிமறந்து, உயிர்துறந்த புலி!                                                                                                       36

     

    உயிர்துறந்த புலிசுமந்து,  பல்நகங்கள் பிளந்தெடுத்து,

    உடல் கிழித்துக் கறி எடுத்து,  

    தோல் தனித்துப் பிரித்தெடுத்து,  அள்ளி

    நீர் தெளித்து சுத்தம் செய்தான்!                                                                                                                          37

     

    துறவறம் பூண்ட முனிவனைப் போலக்,

    குறவனும் புலித்தோல் தனிலே அமர்ந்தான்,

    அறநெறி ஆகம விதியினும் உயர்ந்த,

    அன்பெனும் நெறியினில் தினம் நடந்தான்!                                                                                                38

    Share
  • கொண்டாடுவோம் தேசியத் திருநாட்களை

    முனைவர். ப. பானுமதி

    “ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த
    சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”

    என்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குதித்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம்.

    நம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் பாதையில் பிற நாடுகளுடன் போட்டிப் போடலாம் என்பதால் சுதந்திரம் பெற்ற தாய்த்திருநாடு குடியரசு நாடாக உருமாறியது. ஆனால் அன்னிய நாகரிகம் குடியேறி இருக்கும் இக்காலத்தில் இந்த நாட்கள் இன்றைய சமுதாயத்தினரிடம் நினைவில் இருக்கிறதா என்று வினா எழுப்பினால் இல்லை என்றே அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.

    பொங்கல் திருநாளன்று ஒரு தொலைக்காட்சி ஊடகம் தகவல் தொழில் நுட்ப அலுவலகம் ஒன்றில் பணிபுரிவர்களிடம், அதாவது பொறியியல் பட்டப் படிப்புப் படித்தவர்களிடம், “பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?” என்று வினா எழுப்பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன? விழா கொண்டாடுகின்றனர் வெகு மகிழ்ச்சியாக.

    “பஞ்சம் பஞ்சமென்று பரிதவிப்பார் அதன்
    காரணம் யாதெனும் அறிவுமிலார்”

    என்று பாரதியார் சொன்னது போல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். விடுமுறையைக் கழிக்கின்றனர். ஆனால் அதன் நோக்கமோ காரணமோ இளைய சமுதாயத்திற்குத் தெரியவில்லை. அதை முறையாகத் தெரிய வைக்காதது அல்லது கொண்டு சேர்க்காதது யார் குற்றம்? வீட்டில் விமர்சையாகக் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கே இந்நிலை என்றால் நாட்டில் கொண்டாடும் சுதந்திர தின விழாவும் குடியரசு தின விழாவும் அவர்கள் மனத்தில் எந்த இடத்தைப் பெற்றிருக்கும்?
    மெல்ல மெல்ல மறைந்து கொண்டு வரும் இந்தியக் கலாச்சாரத்தை மீட்க, அதே வேளையில் வெகு வேகமாக விஷ விருட்சமாக வளர்ந்து கொண்டு வரும் அன்னியக் கலாச்சாரத்தைப் போக்க என்ன செய்யப் போகிறோம் என்ற பெரிய வினா நம் கண் முன் விரிந்து கிடக்கிறது.

    இளைய சமுதாயம் அடுத்தடுத்து கோலாகலம், கொண்டாட்டம், ஆடல் பாடல், ஆரவாரம் என்று மகிழ்வாக இருக்கிறது. செப்டம்பரில் தீபாவளி வரும் என்று சொல்லும் இளைய சமுதாயத்திற்கு அதற்கு முந்தைய மாதம் ஆகஸ்டில் சுதந்திர தினம் வரும் என்னும் நினைவு இருப்பதில்லை. பிப்ரவரியில் காதலர் தினம் என்று மனத்தில் அழுத்தமாக பதிந்த அளவுக்கு அதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் குடியரசு தினம் என்று ஒன்று இருப்பது எந்த இளைஞனுக்கும் லேசாகக் கூட நினைவில் பதியவில்லை.

    எந்த மாணவனாலும் மறக்க முடியாத விழாவாக, அங்கு இங்கு எனாதபடி எங்கும் ஒளிமயமாய் சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஆயத்தம் ஆகத் தொடங்கி விடுகின்றது, எங்கோ இருந்து தமிழகத்தில் கால்கொண்ட காதலர் தினத் திருவிழா. இங்கு காதலர் தினத்தைக் கொண்டாடுவது தவறு என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. தெரிந்திருக்க வேண்டிய நம் வரலாறு தெரியவில்லையே என்னும் அங்கலாய்ப்பே.

    சுதந்திர தினத்தன்று நாம் இந்தியர் என்று பெருமிதமாகச் சட்டையில் குத்திக் கொள்ள ஒரு தேசியக் கொடிக்கு எங்கெங்கோ அலைய வேண்டியுள்ளது. காதலர் தினம் வர மாதங்கள் சில இருக்கும்போதே மழைக்காலக் காளான்களாகப் பரிசுகளும் வாழ்த்து அட்டைகளும் முளைத்து விடுகின்றன. இதில் விந்தை என்னவென்றால் வாலிபத்தின் வாசலில் நிற்பவர் மட்டுமல்ல. வயோதிகத்தைக் கடந்தோரும் காதலர் தினம் கொண்டாடுவோரில் இடம் பெறுவதுதான். இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் கருத்திலும் கலந்திருப்பது காதலர்தினம். அதே போல எண்பது வயதைத் தொட்ட இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்போரும் காதலர்தினம் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தன்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்வது மரபாகிப் போனது. பெற்றோரையும், கல்வி புகட்டும் ஆசிரியர்களையும் தாத்தா பாட்டியையும் பார்த்து ‘ஹாப்பி வாலைண்டைன்ஸ் டே’ என்று வாழ்த்தும் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    சர்வோதயா நாள் என்று ஒன்று இருந்தது. ஜனவரி 30 ஆம் நாள் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அது தற்போதைய குழந்தைகள் மட்டுமல்ல; பெற்றோர்கள் முதியவர்கள் என்று எவருக்குமே நினைவில் இல்லை. மகாத்மா காந்தியின் நினைவு நாள் சர்வோதயா நாளாக அனுஷ்டிக்கப் பட்டது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒரு மணி அடிப்பார்கள். 11.02 மீண்டும் ஒர் மணி அடிப்பார்கள். அந்த இரண்டு நிமிடங்கள் பல இன்னல்களையும் தாங்கி அகிம்சை வழியில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்திக்கு மெளன அஞ்சலி செலுத்துகிற வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் எங்கு போனது? எப்போது நின்று போனது? யாரால் நின்று போனது என்று தெரியவில்லை.

    சுந்தந்திர நாளிலும் குடியரசு நாளிலும் கல்விச்சாலைகளில் வண்ண வண்ண கொடிகள் கட்டி, காலையில் அனைவரும் ஒன்று கூடி தேசியக் கொடியை உயர்ந்த கம்பத்தில் பறக்க விட்டு, தேசபக்தி பாடல்களைப் பாடியும், சுதந்திரம் பெற்றுத் தந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் வண்ணமாக பேசியும், நடித்தும்,ஆடியும் விழாவைக் கொண்டாடினர். இப்போது இதற்கெல்லாம் ஒருவருக்கும் நேரமில்லை. ஏதோ கடமைக்கு என்று கொடியேற்றப்படுகிறது. இந்த இரு விழாவுக்கும் பெரும்பான்மையான ஆங்கில வழிப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுப்பு அறிவித்து விடுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழைந்தகளாவது இனிப்புக் (சாக்லேட்டு)காகவாவது வருவார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கோ குடியரசு விழாவைப் போலவே சாக்லேட்டும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. எண்ணி நான்கு மாணவர்களோ அல்லது அவர்களும் இல்லாமலோ ஆசிரியர்கள் மட்டிலுமே என்று கொடியேற்றுத் திருவிழா பள்ளிகளில் சுருக்கமாக முடிந்து விடுகின்றது.

    சில கல்விச் சாலைகளில் முதல் நாள் மாலையே காமா சாமாவென்று கொடியேற்று விழா இனிப்புடனோ இனிப்பின்றியோ அரைமணி நேர விழாவாக நடந்தேறுகின்றது. ஆசிரியர்கள் இந்த ஒரு மணி நேரத்திற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்னும் புலம்பல்களுடன் வருவதும் வேண்டா வெறுப்பாக விழாவைக் கொண்டாடுவதும் வழக்கம் ஆகிப் போனது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும் என்பது கல்வி நிறுவங்களின் கட்டளையாக இருப்பதால் அவர்கள் வருகின்றனர். இல்லாவிட்டால் ஆசிரியர்களும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனம்.

    கல்லூரிகளில் கேட்கவே தேவையில்லை. விடுதி இருப்பின் விடுதி மாணவர்கள் நான்கைந்து பேரைக் கொண்டு விடுதிக் காப்பாளர் கொடியேற்றி விடுவார். இல்லாவிட்டால் பத்து மாணவர்களுடன் பத்து நிமிட நிகழ்ச்சியாகக் கொடியேற்று விழா முடிவடைந்து விடுகின்றது.

    புற்றீசல் போல முளைத்துள்ள அத்தனை தொலைக்காட்சிகளும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒரு மாதத்திற்கு முன்னரே போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோ (நிகழ்ச்சிகள் பற்றிய முன்னோட்ட விளம்பரங்கள்) போட்டுக் காட்டுகின்றன. இது போல சுதந்திர தின நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் அவற்றில் இடம் பிடிப்பது இல்லை. தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய சுதந்திர நாள், குடியரசு நாள் முதலிய தேசியத் திருநாள்களைக் கொண்டாடுவதை, அவை பற்றிய செய்திகளை வழங்குவதை அத்தனை தொலைக்காட்சிகளும் முற்றிலுமாக ஒதுக்கி விட்டன.

    ஒரு சில தொலைக்காட்சிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்களை ஒளிப்பரப்புகின்றன என்றால் அவை ஆளும் அரசியல் கட்சிகளாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சிகள் கொடியேற்றுவதுடன் ஒரு சில நலத்திட்ட உதவிகள் வழங்குவதை காட்சியாக்கித் தம் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. அரசு விடுமுறையை இன்பமாகக் கழிக்க நினைக்கும் இளைஞர்களுக்குச் சுவையான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டி முன்னணி நடிகர், நடிகையின் பேட்டியைப் போட்டு தம் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதில் குறியாக உள்ளன அத்தனை தொலைக்காட்சிகளும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் அந்த நடிகர் அல்லது நடிகைகளின் பங்கு என்ன என்று தொலைக்காட்சிகள் சிந்திப்பதே இல்லை.

    அரசு தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற தேசிய விழாக்களின் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகிறது. ஆனால் அந்தத் தொலைக்காட்சியை இளைய சமுதாயம் ஒதுக்கி ஆண்டுகள் பல ஆயின.

    ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்

    குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
    கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
    நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
    ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

    மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
    வானையளப் போம்கடல் மீனையளப்போம்
    சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
    சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.

    என்று எண்ணற்ற கனவுகளைக் கண்டு மறைந்தனர் அரும்பாடு பட்டுச் சுதந்திரம் வாங்கித் தந்தத் தியாகிகள். அவர்களை, அவர்களின் தியாகத்தை, அவர்களின் கனவை நினைவு கூர்வது தலையாய கடமை. அது மட்டுமல்ல.

    ஒவ்வொரு துறையிலும் நாடு சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது என்ன நிலையில் இருக்கிறது? துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன?, இந்த உச்சம் எப்படி சாத்தியமானது என்று கூறும் விதமான நிகழ்ச்சிகளையாவது ஒளிபரப்ப வேண்டும். அந்தத் தார்மிகக் கடமைகள் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் உள்ளது.

    அதே போன்று இக்கடமை தொலைக்காட்சிகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகக் கல்விச்சாலைகளுக்கு உள்ளது. இன்று கல்விச்சாலைகளின் நிலை எப்படி உள்ளது? புத்தகக் கல்வியே மதிப்பெண்ணுக்காக மட்டும் என்னும் வித்தகக் கல்வியாகிப் போனது. இந்நிலையில் இக்காலத்தில் இது போன்ற வாழ்க்கைக் கல்விகளையும் நாட்டுக்காக வாழ்ந்தோரைப் பற்றியும் கற்றுக்கொடுப்பதை வணிக நிறுவனங்களாக மாறிப் போன கல்வி நிலையங்கள் விரும்புவதில்லை.

    “விளையும் பயிர் முளையிலே’ என்பார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது குழந்தைகள் விழாக்களை விரும்பிப் பார்ப்பார்கள். விரும்பிப் பார்க்கும் இவ்விழாக்கள் குழந்தைகளின் மனத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். இது போன்ற விழாக்களைப் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள கல்வி நிறுவனங்கள் விமர்சையாகக் கொண்டாடுதல் வேண்டும். அப்படிக் கொண்டாடும் போதுதான் குழந்தைகளின் மனத்தில் நாட்டுப் பற்று சிறிதாவது முளைக்கும்..

    Share
  • வாழ்க்கை நலம் – 20

    குன்றக்குடி அடிகள்

    20.  மற்றவர் சிந்தனைக்கு மதிப்பு தருக!

    நடுவு நிலைமை என்பது வாழ்வியலின் சிறந்த பண்புகளில் ஒன்று. நடுவு நிலை என்றால் எதிலும் சேராத இரண்டுங்கெட்டான நிலை என்று பொருள் கொள்ளக் கூடாது. இறுக்கமான சார்பு நிலை நடுவு நிலைக்கு எதிரானது. அதாவது நாம் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அந்த முடிவு நிலையின் அடிப்படையிலேயே மற்றவர்களை ஆய்வது. மற்றவர்களுடைய கருத்துக்களை ஆய்வது என்பது தவறான அணுகுமுறை. அது மட்டும் அல்ல. உள்நோக்கம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டு ஆய்வு செய்தல் – அணுகுதல் ஆகாது.

    மனிதன் எந்த வகையிலும் சுதந்திரமுடையவனே. ஒவ்வொரு மனிதனும் அவன் நிலையில் சிந்திக்கும் உரிமை உடையவன் என்பதை மறந்துவிடக்கூடாது. அவனைச் சிந்திக்கத் தூண்டி அந்தச் சிந்தனையில் தவறு இருந்தால், மடை மாற்றம் செய்ய வேண்டுமே தவிர, சிந்திக்கிற பழக்கத்தையே முறியடித்துவிடக் கூடாது.  அதுமட்டுமல்ல, மற்றவர்களின் சிந்தனையின் மதிப்பை தற்சார்பின் காரணமாகவோ, பாரம்பரியம் அல்லது வேறுசில காரணங்கள் அடிப்படையிலோ  தரக்குறைவாக எண்ணுதல் கூடாது. அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து சமநிலையில் கருதி – அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு வேண்டும்.

    இங்ஙனம் சிந்தனைகள் மதிக்கப் பெற்றால்தான் அறிவு வளரும்.  முதலில் ஒருவர் சிந்தனையைச் சமநிலையில் மதிப்புணர்வுடன் எண்ணி  ஆய்வுசெய்து ஒப்புநோக்கி நல்லதைத் துணிந்து முடிவு செய்க. அடுத்து, ஆய்வு செய்த பிறகு தம் கருத்துடனும் மற்ற கருத்துக்களுடனும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்யலாம். இந்த முழுநிலை ஆய்வு நடந்த பிறகு எது நன்று – அல்லது சரியானது என்ற துணிவுக்கு வரலாம். வரவேண்டும்.

    எதுபோல எனில், கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில் அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு நிலையில் பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறுந்தராசைத் தூக்கிச்  சரிபார்த்தல் முறை. அதுபோலவேதான், தக்க கருத்து அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவி செய்வது மற்றவர்களை மதித்தலாகும். அவர்தம் சிந்தனை மதிக்கப் பெறும்; நம்பிக்கையைத் தரும். எல்லோரையும் மதிக்கும் அடிப்படையிலே இது நிகழும்.

    “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி.”

    குறள் – 118

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share