“போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து”
தமிழ்த்தேனீ
சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன். ஒரு அலமாரி திறந்து அதிலிருந்து குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டு பொம்மைகள் கீழே சிதறின. பார்த்து மலைத்துப் போனேன். ஆமாம் ஒரு கடையில் இருப்பதைப் போல் விதம் விதமாக அவ்வளவு பொம்மைகள்.
ஆனால் யாருக்காக அவை வாங்கப் பட்டனவோ அந்தக் குழந்தை அழுது அடம் பிடித்துத்கொண்டு கீழே விழுந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. ஆமாம் அந்தக் குழந்தை இவ்வளவு விளையாட்டு பொம்மைகள் இருந்தும் திருப்தி இல்லாமல் ஏதோ ஒன்றுக்கு அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே விளைவை யோசித்தால் அந்தப் பொம்மைகள் யாரால் வாங்கப்பட்டதோ யாருக்கு கொடுக்கப்பட்டதோ இருவருக்குமே திருப்தி இல்லை,
ஏன் இவ்வாறு குழந்தைகள் திருப்தி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால், பெற்றவர்கள் குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கிக் கொடுப்பது அவர்களுடைய வேலைகளில் அந்தக் குழந்தை தலையிடாமல் இருந்து, அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்து அவர்கள் விளையாடவேண்டும். என்னும் சுயநலம் அதிகமாக இருக்கிரதே தவிர, ஆசையாய் வாங்கிக் கொடுக்கும் நிலை மாறிவிட்டது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் அழுது அடம் பிடிக்கக் கூடாது, சொன்ன பேச்சைக் கேட்க வேண்டும் என்னும் உயரிய கொள்கைக்காக ஏற்பட்ட வாங்கிக் கொடுக்கும் பழக்கம். நாளடைவில் அந்தக் குழந்தைகளின் பிடிவாதத்தையும் முரட்டுத் தனத்தையும் வளர்க்கும் பேராசை எனும் கருவியாக, திருப்தி இன்மை என்னும் கருவியாக மாறிப் போனது கொடுமை என்றால், இந்தக் கொடுமையை உணராத பெற்றோரின் மனநிலை இன்னமும் கொடுமை.
எந்தப் பொம்மை வாங்கிக் கொடுத்தாலும் அந்தப் பொம்மையை விளையாட முழுதுமாகக் கற்றுக் கொள்ளாமல், அதன் அதிக விலையை[ப் பற்றித் தெரியாமல், அதன் அருமையை உணராமல், அடுத்தடுத்து கிடைக்கும் பொம்மைகளால் கவரப்பட்டு எதிலுமே நிலையில்லாமல் தவித்து அத்துணை பொம்மைகளையும் அலக்ஷியப் படுத்தி அடம் பிடிக்கும் குணத்தையும், திருப்தி இல்லாமை என்னும் பிடிவாத குணத்தையும் மட்டுமே உள்வாங்கும் குழந்தைகள் நாளடைவில் வாழ்க்கையில், காதலில், படிப்பில், விளையாட்டில், எதிலுமே திருப்தி இல்லாமல் எப்போதும் எதையோ பறி கொடுத்தாற் போல, காதிலே ஒரு உயர்தர செல்போனை வைத்துக் கொண்டு சாலையில் வாகனங்கள் வருவதுகூடத் தெரியாமல், ஆபத்துக்களை உணராமல் விரக்தியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
எண்ணிப் பார்க்கிறேன், எங்கள் குழந்தைப் பருவங்களை, அதிகமாகத் தெரிந்து கொள்ளாமல், அதாவது அந்தப் பருவத்துக்கு எது வேண்டுமோ அதை மட்டும் தெரிந்து கொண்டு, மனதிலே கள்ளமில்லாமல் ஆடி, ஓடித் திரிந்த குழந்தைகளாக, ஏதேனும் ஒன்று கிடைத்தாலும் அதிலே திருப்தி கொண்டு அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கத் தெரிந்த குழந்தையாக இருந்து, எப்போதும் மனதிலே உற்சாகமாக, குதூகலமாக வளையவந்த அந்தக் காலங்களில் பெற்றோர்களும் குழந்தைகளும் எல்லோருமே அதிக ஆசைப்படாமல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும் பொன்னான வாசகத்தை மனதிலே வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்பது புரிகிறது.
குழந்தைகள் பல விளையாட்டுப் கேட்டாலும் அந்தப் பல பொருட்களில் எது அந்தக் குழந்தைக்கு வேண்டும் என்று பெற்றவர்களும் புரிந்துகொண்டு, அதைக் குழந்தைகளுக்கும் புரியவைத்து தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து வாங்கிக் கொடுத்த அந்தப் பொருளின் உபயோகத்தையும்,, குழந்தைகளுக்கு உணர்த்து அந்தக் குழந்தைகளின் திருப்தி என்னும் உயரிய குணத்தை வளர்த்து வாழ்க்கையில் அவர்களை சிறப்பாக யோசிக்க வைத்து , உணர்ச்சி பூர்வமான முடிவுகளை எடுக்காமல் ஆராய்ந்து முடிவெடுக்கும் நல்ல பொறுப்பான குழந்தைகளாக வளர்த்த அந்தக் காலத்துப் பெற்றோரும், அதைப் புரிந்து கொண்டு நற்குணங்களை வளர்த்துக் கொண்ட அந்தக் காலத்துக் குழந்தைகள், இந்தக் காலத்துப் பெரியவர்களை மனதார வாழ்த்தத் தோன்றுகிறது.
தீர்க்கமாக சிந்தித்தும் திடமான முடிவுகள் எடுக்காமல் எப்போதும் அலைபாயும் மனதோடு வாழும் இந்தக் காலத்துக் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும், அவர்களின் வளர்ப்பு முறைகளையும் பற்றிக் கவலை வருகிறது. இந்தத் தலைமுறையினரைக் காணும் போது மனம் பதைக்கிறது.
உடனடியாக யோசித்து உண்மைகளை உணர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் காலத்துப் பெற்றோர்களும் குழந்தைகளும் கவனித்து தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய முது மொழி “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து “ இல்லையென்றால் வாழ்க்கை இப்படித்தான் சிதறிப் போகும்.
உண்மைதான். எதையோ தேடிக்கொண்டே, இதுவரை கிடைத்ததன் அருமை தெரியாமல் ஓடிகொண்டிருப்பது இன்றைய அவசரகதியான வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது.
சற்றே பொறுமையாக சிந்தித்தால் யாவருக்கும் புரியக்கூடிய உண்மைதான், ஆனால் யாரும் சிந்திப்பதில்லை. நல்ல கட்டுரைக்கு நன்றி.
அன்புடன்
….. தேமொழி