சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !

வணக்கத்துடன் மீண்டும் உங்களை இம்மடலில் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

ஒரு நாட்டின் சுதந்திரம், ஒரு நாட்டின் இறைமை, ஒரு நாட்டின் தனித்தன்மை என்பன அந்நாட்டின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது.

தமது நாட்டின் பாதுகாப்பிற்காக மற்றொரு நாட்டில் தங்கியிருக்கும் எந்த நாடுமே உளசுத்தியோடு நேர்மையாக தம்முடைய கொள்கைகளை வழிநடத்துவதென்பது முடியாத காரியம்.

ஆனால் இன்றய உலகச் சூழலில் பெரும்பான்மையான் நாடுகள் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சில சிறுபான்மையான நாடுகளிலேயே தங்கியிருக்கும் நிலையைக் காண்கிறோம்.

ஒவ்வொரு நாட்டினது பாதுகாப்பிற்கும் அந்நாட்டின் இராணுவமே பொறுப்பாகிறது. தம்முடைய நாட்டிற்கான இராணுவத்தில் இணைந்து பணிபுரிவோர் தம் நாட்டின் மீதுள்ள அதீத பற்ரின் அடிப்படையிலே இணைந்து கொள்கிறார்கள்.

நாட்டின் இராணுவத்தினருக்கு ஊதியம் கொடுக்கப்பட்டாலும் அது என்னவோ அடித்து விழுந்து ஓடிப்போய் பணியில் அமர்ந்து கொள்லும் வகையில் பெரியதோர் ஊதியமாக இருக்காது. இருந்தாலும் தமது நாட்டிற்கு அந்நியதோர் நாட்டினாலே ஆபத்து என்று கண்டு கொண்டதும் தமது உயிரைப் பணயம் வைத்து அந்நதந்த நாட்டு இராணுவங்கள் போரிடுவது அவ்விராணுவத்தினரின் தியாக மனப்பான்மையையே சுட்டிக் காட்டுகிறது.

எதிலும், எங்கும் சில விதிவிலக்குகள் இருப்பது போல இவ்விராணுவத்தினர் மத்தியிலும் சில சுயநலம் கொண்ட,வர்கள் இல்லாமல் இல்லை ஆனால் அவர்கள் மிகச் சொற்ப அளவிலேயே கணப்படுவார்கள்.

சரி என்னடா இவன் இராணுவத்தைப் பற்றி ஏதோ எமக்குத் தெரியாதவைகளைச் சொல்ல வந்தது போல சொல்லிக் கொண்டே போகிறான் என்று நீங்கள் சலிப்படையாதீர்கள் வழக்கம் போல எனது பீடிகைக்கு ஒரு காரணம் இருக்கிறது.

கடந்தவாரம் இங்கிலாந்து தொலைக்காட்ச்சியில் தேசிய சேவையான பீ.பீ.சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கண்ணுற்ற போது எழுத என் எண்ணப் பரிமாணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேற்கண்ட ஆரம்பம்.

சமீபத்தில் இங்கிலாந்து இராணுவம் கண்ட போர்கள் கனமானவை, அதிக உயிரிழப்புகளைக் கொண்டவை. அவை மேற்கொள்ளப்பட்ட காரணங்களின் பின்னனியில் இருக்கும் நியாயத்தைப் பற்றி வாதிப்பதல்ல எனது இம்மடலின் நோக்கம். ஆயுதங்களின் பங்குபற்றி தற்போது இராணுவ சேவையிலிருந்து விடுபட்ட இராணுவ வீரர்களின் நிலை பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியை பற்றிய கருத்தோட்டமே இது.

அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படி கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட தற்கொலை செய்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையே அதிகம் எனக் கூறப்பட்டது.

களத்தில் நடைபெறும் போர் என்பது என்ன? மற்றொரு மனித உயிரைக் கொலை செய்வது அதேநேரம் எதிரியால் தனது உயிருக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ எனும் அச்சத்தில் வாழ்வது. இவையிரண்டும் ஒரு மனிதனின் மனதில் எப்போது பெரும்பான்மையாகக் குடி கொண்டிருந்தால் அம்மனிதனின் மனநிலை சீராக இருக்க முடியுமா?

ஆனால் இத்தகிய சீரற்ற மனோநிலையைத் தாங்கி அதைலிருந்து வெளிவந்து விடக்கூடிய வல்லமை பலருக்கு இருந்தாலும் இம்மனோநிலையில் சிக்கி வாழ விரும்பாமல் தமது வாழ்வை முடித்துக் கொண்டு விடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

2012ம் ஆண்டில் அப்கானிசஸ்தானில் பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களில் ஏழு பேர் தமது உயிரைத் தாமாக மாய்த்துக் கொண்டார்கள் எனவும் மேலும் 14 பேரின் மரணம் தற்கொலை எனச் சந்தேகிக்கப்பட்டாலும் அவர்களின் மரணத்தைப் பற்றிய விசாரணை முற்றுப்பெறாததால் அவை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என உத்தியியோகபூர்வமான அறிக்கை சொல்கிறது என்று டெய்லி டெலிகிராப் பத்திரிகை அறிக்கை ஒன்று கூறுகிறது..

நான் மேற்சொன்ன கணிப்பு பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவவீரர்களைப் பற்றியது. ஆனால் ஏற்கனவே ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பாணியாற்றி விட்டு இராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்ப்பி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர்களில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் தமது உயிரைப் பறித்துக் கொண்டார்கள் என்று இதே அறிக்கை கூறுகிறது..

இராணுவ நடவடிக்கை என்பது பல சமயங்களில் மற்றவர்களின் உயிரைப் பறிக்கும் நடவடிக்கை ஆகிரது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் தமது கண்முன்னால் தமது நண்பர்களின் உயிரைப் பறிகொடுத்தோர், தம்மோடு உண்டு, உடுத்தி, உறங்கி வாழ்ந்தோர் தமது கண்முன்னாலேயே உயிரிழப்பதைக் கண்ணுற்றோர் என பலவகையானோர் மனோநிலையில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

ஆனால் இத்தகைய மனஓநிலை பாதிக்கப்பட்டவர்களாக அரியப்பட்டோர் இராணுவ வாழ்க்கையில் இருந்து சகஜ வாழ்க்கைக்குத் திரும்போது அவர்களின் ஆரோக்கியத்தின் தொடர்ந்த பராமரிப்பை அரசாங்கம் சர்வரச் செய்கிறதா எனும் கேள்வியே இப்போது எழுந்துள்ளது.

இவ்விடயத்தில் இப்போது இங்கிலாந்து ஊடகங்களில் எழுந்துள்ள வினாக்கள் அரசாங்கத் திணைக்களத்தையும் ஓரளவு தட்டி எழுப்பியுள்ளது.

அது தவிர இத்தகிய தற்கொலைகளுக்குள்ளானவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் எடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஆங்காங்கே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

எமது பாதுகாப்பிர்காக, எம் நாட்டின் அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கி தமது உயிரைப் பணயம் வைப்போருக்கு நாம் எத்தகய கெளரவத்தை அளிக்கிறோம்? எமது அரசாங்கத்தில் இராணுவப்பிரிவுக்கான அமைச்சர்கள் இதனை எத்தனை தூரம் மிகவும் முக்கியமான விடயமாகக் கருதுகிறார்கள்?

கேள்விகளுக்கான விடைகள் சாதாரணத் தேர்தல் கோஷங்களாக இல்லாமல் நாட்டிற்க்குச் சேவை செய்யும் மனிதர்களில் நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கும் கொள்கைகளாக மிளிர வேண்டும் என்பதுவே பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை

அன்புடன்

சக்தி சக்திதாசன்

17.07.2013

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *