Month: June 2018

  • பழங்குடியினரும் பாறை ஓவியங்களும்

    -ரா. பிரசன்னாதேவி

    முன்னுரை

    பண்டைய தமிழக வரலாறு, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை அறிய தொல்வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ளத் தேவையான ஆதாரங்களில் பாறை ஓவியங்கள் முக்கியமானவை. ஓவியம், சிற்பம், இலக்கியம் முதலியவற்றின் செய்திகளும், பயன்பாடுகளும் அறிய பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவை வாழ்வியல் நெறிகளை வழிநடத்திச் செல்லும் சட்டங்களாகவும், சான்றுகளாகவும் உள்ளன. (தமிழ்ப்பொழில் கல்வெட்டுகளில் இலக்கியச் சான்றுகள்.ப.321) கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இன்றுவரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாறை ஒதுக்குகள் மற்றும் கற்குகைகள் ஆகியவற்றில் கற்செதுக்குகளாகவோ வண்ண எழுத்தோவியங்களாகவோ காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் அந்தந்தக் காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்களின் சமூகப் பொருளாதார மற்றும் கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் பதிவுகளாய் உள்ளன. பழைய கற்காலம், புதிய கற்காலம் அல்லது இரும்புக்காலம், வரலாற்றுக்காலம் என எல்லாக் காலகட்டங்களிலும் நடந்த பலநிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளவை இவை. இவைகளின் ஊடே பழங்குடியினாரின் பாறை ஓவியங்கள் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பாறை ஓவியங்களின் நோக்கங்கள்

    பொதுவாக இந்தப் பாறை ஓவியங்களை அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தகவல் பரிமாற்றம், அலங்காரம் என அவற்றைப் பெயரிட்டு அழைக்கலாம். பொதுவாக ஓவியம் ஒருவனது மனக்கிடக்கையில் இருக்கும் காட்சிகள், அவற்றுடன் இணைந்த உறவுகள் ஆகியன நிலைத்த வடிவமின்றி இலகுவாய் மாற்றியமைக்கும் கட்டமைப்புக்கு உரியனவாய், உகந்த காலம் மற்றும் இடத்திற்கேற்ப வெளிப்படுத்த விழையும் உந்துதலில், கோடுகளாய் உருவெடுத்து, அலங்காரமாய்ப் பரிணமித்து, கனபரிமாணமாய் நீண்டு, வண்ணங்களால் நிறைவுபெற்றுத் தகவல்களைப் பரிமாறும் கால ஓட்டத்தில் உருமாறிப் புதிய பரிணாமங்களோடு தொடர்ந்து பயணிக்கிறது.

    தமிழகப் பாறை ஓவியங்கள்

    தமிழகத்தில் இதுவரை சுமார் 75 இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பாறை ஒதுக்குகளிலும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களிலும், சில இடங்களில் குகைகளிலும், வரையப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாறை ஓவியங்கள் தருமபுரி, கிருட்டிணகிரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, தேனி போன்ற மாவட்டங்களில் பரவலாகக் காணப்படினும், இதுவரை வடக்கு மற்றும் வடமேற்குத் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் இவ்வோவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.131) இவை பெரும்பாலும் இடைக்கற்கால, புதிய கற்கால, பெருங்கற்கால, இரும்புக்கால மற்றும் வரலாற்றுக்கால ஓவியங்கள் எனக் கருதப்படுகின்றன. மேலும் பல இடங்களில் தொல்லியல் சின்னங்களுக்கு அருகிலேயே பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில் பெரும்பான்மையானவை இருளர் (நீலகிரி, தருமபுரி மற்றும் வடதமிழகப் பகுதிகளில் வாழ்பவர்கள்), குறும்பர், தோடர், கோத்தர், (நீலகிரி), இரவாளர், மலசர், பளியர், புலையர், முதுவர், மூப்பார் (கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) போன்ற பழங்குடி மக்கள் வாழும் குறிஞ்சி நிலப்பகுதிகளில் தான் காணப்படுகின்றன. இருப்பினும் கால்நடை மற்றும் சிறு வேளாண்மை செய்யும் சமூகங்கள் வாழும் முல்லை நிலப்பகுதிகளிலும் இது போன்ற பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    ஓவியங்களின் வண்ணங்கள்

    சிறுமலை, மயிலாடும் பாறை, உல்கோம்பை போன்ற இடங்களில் இடைக்கற்கால ஓவியங்கள் உள்ளன. தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகளும் வாழ்விடங்களும் மயிலாடும் பாறை, மூனாண்டிப்பட்டி, கீழ்வாலை, பெருமுக்கல், மல்லப்பாடி, மையம்பள்ளி போன்ற இடங்களில் ஓவியங்களோடு காணப்படுகின்றன. அதுபோலவே சில தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ள குகைத் தலத்தின் விதானத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அங்குள்ள எழுத்துக்களைவிடக் காலத்தால் முந்தியவையாகும். தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களால் வரையப்பட்டுள்ளன. இருப்பினும் கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ண ஓவியங்கள் சில இடங்களில் கிடைக்கின்றன. சிவப்பு மற்றும் வெள்ளை ஓவியங்கள் சில இடங்களில் சேர்ந்தும், சில இடங்களில் தனியாகவும் உள்ளன.

    பாறை ஓவியங்களின் தன்மைகள்

    இப்பாறைகளில் பெரும்பாலும் ஓவியன் தான்கண்ட உருவங்களை எளிய முறையிலேயே வரைந்துள்ளான். இருப்பினும் வெள்ளாரிக்கோம்பை, ஆலம்பாடி போன்ற இடங்களில் உருவங்கள் நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத நிலையில் வரையப்பட்டள்ளன. இவை அவ்வோவியனது உளக்கிடக்கையில் அமைந்த அச்சம், நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துபவைகளாகக் காணப்படுகின்றன. ஆனால் குறியீடுகளும் அலங்காரக் கூறுகளும் தமிழகப் பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் காணக் கிடைக்கவில்லை. குறியீடுகள் பெரும்பாலும் தகவல் பரிமாற்றம் செய்யவும் அலங்கார ஓவியங்கள் சடங்குகளின்போது ஒப்பனைக்காகவும் வரையப்பட்டள்ளன. பாறை ஓவியங்கள் யாவும் அழகியல் நோக்கில் சிறப்பானவை அல்ல. இருப்பினும் அவற்றின் நோக்கம், காலம், கருத்து வெளிப்பாடு போன்ற தன்மைகளில் அவை சிறப்பிடம் வகிக்கின்றன.

    பாறை ஓவியங்களின் சிறப்பு

    இந்தப் பாறை ஓவியங்கள் கடும் மழைக்காலங்களில் ஒதுங்கிய பாறையின் விதானங்கள், சுவர்கள், நீர்நிலைகளுக்கு அருகில்உள்ள பாறை ஒதுக்குகள், உயரமான தேன்பாறையின் சுவர்கள், வழிபாடு மற்றும் வழித்தடங்களுக்கு அருகில் உள்ள பாறைமுகடுகள் எனப் பிறர்வந்து போகும் பொதுஇடங்கள் ஆகியவற்றில்தான் அதிகம் வரையப்பட்டுள்ளன. சில சமயங்களில் ஓவியன் மிக உயரமான பாறைகளில் ஏறிக் கடும் சிரத்தையை மேற்கொண்டு, தன் சாகசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளான். இந்த ஓவியங்கள் நேர்த்தியான தோற்றம் உடையவைகளாகவும் குறியீடுகளாகவும் அடையாளப்படுத்த முடியாத உருவங்களாகவும் அமைந்துள்ளன. இப்பாறை ஓவியங்கள் உள்ள இடங்களுக்குப் பிற்காலத்தில் வந்த இனக்குழுக்கள் தங்க நேர்ந்ததால் அவர்களது ஓவியங்களும் ஏற்கனவே வரைந்த ஓவியங்களுக்கு மேல் வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ள இடங்கள் சில இன்று வரை உள்ளுர் மக்களால் வழிபாட்டுத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

    பழங்குடிகளும் பாறை ஓவியங்களும்

    பாறை ஓவியங்கள் தொல்மாந்தரின் சமகால வாழ்வியல் சூழலை மட்டும் அல்லாமல் நம்பிக்கை மற்றும் தத்துவார்த்த வாழ்வியலை குறியீடுகளாகவும் நேர்த்தியான உருவங்களாகவும் அலங்காரங்களாகவும் பதிவு செய்துள்ளன. ஒலிகளற்ற இம்மொழி நெடிய காலங்கடந்தும் இன்றுவரை தகவல்களைப் பரிமாற்றிக் கொண்டிருக்கின்றன. எழுத்து உருவாவதற்கு முன்னரே தொல்மாந்தரின் கற்பனை மற்றும் கலை உருவாக்கங்கள் பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன. பாறை ஓவியங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் எல்லாப் பகுதிகளிலும், இதுவரை சுமார் 50 மில்லியன் ஓவியங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் இதுவரை கண்டறியப்பட்ட ஓவியங்களில் மிகத் தொன்மையானவை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளன. இவை சுமார் 30,000 – 40,000 ஆண்டுகளுக்கு முந்தையன என்று கார்பன் 14 போன்ற அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிம்பெட்காவில் கிடைத்த தீக்கோழியின் முட்டையின்மீது வரையப்பட்ட ஓவியங்கள், சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கண்டறிந்துள்ளனர். (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.130) தொடர்ந்து இந்தியாவில் காஷ்மீர் முதல் தமிழ்நாடுவரை எல்லா மாநிலங்களிலும் பாறை ஓவியங்கள் பரவலாகக் காணப்படினும் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் அவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

    உலகில் கிடைக்கப்பெற்ற பாறை ஓவியங்களில் 80% சதவீதம் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சமூக மற்றும் பொருளாதார நோக்கில் இந்த ஓவியங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

    1. தொன்மையான வேட்டைச் சமூகம்
    2. வளர்ந்த வேட்டைச் சமூகம்
    3. கால்நடைச் சமூகம்
    4. கலப்புப் பொருளாதாரச் சமூகம் 

    தொன்மையான வேட்டைச் சமூகம்

    இந்த வேட்டைச் சமூகத்தில் வில், அம்பு குறித்த அறிவு இல்லை எனலாம். இவர்களது ஓவியங்களில் உருவங்களும் குறியீடுகளும் பெரும்பாலும் சேர்ந்தே காணப்படுகின்றன.

    வளர்ந்த வேட்டைச் சமூகம்

    இச்சமூகத்தில் வில், அம்பின் பயன்பாடு உள்ளது. ஓவியங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் தன்மையில் உள்ளன.

    கால்நடைச் சமூகம்

    கால்நடைகளைப் பிரதானமாய்க் கொண்டுள்ள சமூகத்தின் ஓவியங்களில் பெரும்பாலானவை கால்நடைகளைப் பழக்கப்படுத்துதல் மற்றும் அதன் தொடர்பானவை.

    கலப்புப் பொருளாதாரச் சமூகம்

    வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்ட இச்சமூகத்தில் பலதரப்பட்ட பொருளாதாரச் சூழலில் இருந்து கலைப்படைப்புகள் உருவாகியுள்ளன. மேலும் இறைநம்பிக்கை, இதன் தொடர்பான கதைகள், குறியீடுகள், திட்டமிட்ட உருவத் தொகுப்புகள் ஆகியன இவர்களது ஓவியங்களில் அதிகம் காணப்படுகின்றன.

    காரிக்கையூர் ஓவியங்கள்

    தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை ஓவியங்களில் மிகப்பெரியன, அதிக எண்ணிக்கையில உருவங்கள் அமைந்தன. நீலகிரி மாவட்ட கோத்தகிரி தாலுகாவில், இருளர் பழங்குடிகள் வாழும் காரிக்கையூர் ஓவியங்கள் ஆகும். காலனிய சுலிவன் என்பவனின் அசுர பாதம் பதிந்த முதல் நீலகிரி மலைக்கிராமம் இது. இங்குள்ள பொறிவரை என்னும் பாறை ஒதுக்கு பவானி ஆறு பாயும் நீண்ட பள்ளத்தாக்கின் உயரமான விளிம்பில் கிழக்கு முகத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 அடி நீளத்திற்கு, 20 அடி உயரத்தில், 500 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் சிவப்பு மற்றும் வெள்ளைவண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இங்கு விலங்குகள், மனிதர்கள், விலங்குகளுடன் மனிதர்கள், குறியீடுகள், அடையாளங் காணமுடியாத உருவங்கள் எனப் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உருவங்கள் தனியாகவும் தொகுப்பாகவும் உள்ளன. மேலும் இங்குள்ள ஓவியங்கள் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டவை. சில இடங்களில் ஏற்கனவே வரையப்பட்டுள்ள ஓவியங்களின் மேல் வேறு ஓவியங்களைப் பின்னால் வந்த ஓவியர்கள் வரைந்துள்ளனர். இங்குள்ள ஓவியங்களில் வேட்டையாடுதல், அதன் தொடர்பான சடங்குகள், விலங்குகளைப் பழக்கப்படுத்துதல், நடனம், இசை மற்றும் பிற வன வாழ்வியற் சூழல் ஆகியன சிறப்பிடம் பெறுகின்றன. மனிதன் வேட்டையாடும் விலங்குகள், மனிதனை வேட்டையாடும் விலங்குகளின் இயல்பான வாழ்க்கையையும் அவற்றின் விளையாட்டுகளையும் அதிகம் கொண்டுள்ளன. இருப்பினும் பறவைகள், தாவரங்கள் மற்றும் ஊர்வன ஆகியன குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன. மனிதர்களைவிட, விலங்குகளே பிரதானமாக வரையப்பட்டுள்ளன. எருமை, பன்றி, மான், சருகுமான், உடும்பு மற்றும் யானை வேட்டை பற்றிய காட்சிகள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. அதுபோலவே, வேட்டைக்குப் பயன்படும் நாய்களும் வரையப்பட்டுள்ளன.

    மனித உறவுகளைப் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு காலச்சூழல்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஆயுதங்களும் அவற்றைப் பயன்படுத்தும் விதமும் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஆரம்பகால ஓவியங்களில் மனிதர்கள் வேட்டையின்போது, கையில் தடிமனான மரத்தடிகளுடன் உள்ளனர். பின்னர் வில், அம்பு, வில் அம்போடு வாள், வாளோடு கேடயம் என வெவ்வேறு வடிவங்களில் ஆயுதங்கள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வரையப்பட்டுள்ள போர்க்காட்சிகள் மிகவும் கவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலைகளில் நடைபெற்ற மற்றும் தரைப்பகுதிகளில் நடந்த போர்க்காட்சிகளை வேறுபடுத்திக் காட்டும் விதமாக உருவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் வாழும் கோத்தர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து இரும்பின் பயன்பாட்டை அறிந்து, அதைத் தங்கள் தேவைக்குத் தகுந்தாற்போல் உருவாக்கியும்; பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஆயுதங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து, பிற பழங்குடியினரான இருளர், குறும்பர், தோடர் போன்றவர்களிடம் விற்றுப் பண்டமாற்று வணிகம் செய்து வந்துள்ளனர். அக்காலத்தில் இவர்கள் உருவாக்கிய இரும்பு ஆயுதங்கள் இன்று இங்குள்ள ஓவியங்களின் வழியாக மட்டுமே நமக்குக் காணக்கிடைக்கின்றன.

    தோடர்கள் காலங்காலமாக எருமை மாடுகளையே தங்கள் வாழ்வாதாரமாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். தொல்பழங்காலத்தில் பெரும்பாலான சமூகத்தவர் வேட்டையைப் பிரதானமாகக் கொண்டிருந்த போது, தோடர் போன்ற பழங்குடியினர் கால்நடைகளைப் பழக்கப்படுத்தி அவற்றின் பயன்பாடுகளை அறிந்து பராமரித்து வந்தனர். இக்காட்சிகள் யாவும் காரிக்கையூர் பாறை ஓவியங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்கள் செய்நேர்த்தியோடும் அழகியல் தன்மையோடும் சிறப்பாகக் காணப்படுபவை. கூட்டமாய் மாடுகள் நடந்து செல்வது, நுனி மரக்கிளையில் குரங்குகள் ஏறுவது, கூட்டங் கூட்டமாய் மான்கள் மேய்வது, நீண்ட உடும்புகள் ஊர்வது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் வரவேற்பது, பன்றி வேட்டை, நடனம், விலங்குகள் தங்கள் குட்டிகளுக்குப் பால்கொடுப்பது, வேட்டை நாய்களுடன் உறங்கும் மனிதன், குழந்தையைப் பலி கொடுத்தல், போர்க்காட்சிகள் போன்றவைகளாகும். 

    எழுத்துப்பாறை ஓவியங்கள்

    இயற்கையின் மாற்றங்களைப் புரிந்து வாழ்வியலைத் தன் வசப்படுத்திய மனிதன் சில சமயங்களில் இயற்கையின் சீற்றங்களையும் மாறுபாடுகளையும் பற்றிய புரிதலின்றிப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றான். அச்சத்திலிருந்து மீளத் தெரியாது. ஒன்றின் மேல் நம்பிக்கை கொண்டு, சடங்குகளும் நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் மாறுபடும். அது போல, நீலகிரியில் வாழும் பழங்குடிகள் மத்தியில் குறும்பர் இன மக்களின் வாழ்வியலும் நம்பிக்கைகளும் பிற மலைவாழ் மக்களிலிருந்து மாறுபடுகிறது. இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதிகளில் பாறைச் சரிவுகளிலும், இயற்கையாய் அமைந்த குகைகளிலும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இயற்கையையும் பிற எதிரிகளையும் எதிர்கொள்ளச் சடங்குகளின் மீது அபார நம்பிக்கை கொண்டு, மாந்திரிக வழிபாட்டை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, இன்றுவரை, தங்கள் வழிபாட்டுத் தலமான “எழுத்துப்பாறையில் ஆண்டுக்கு ஒருமுறை சென்று வழிபாடு செய்கின்றனர். இவ்வழிபாட்டின் போது வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் நேர்த்தியான குறியீட்டு ஓவியங்களை வரைந்துள்ளனர். இங்குள்ள பழமையான ஓவியங்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த ஓவியங்கள் இயற்கைச் சீற்றம் மற்றும் பிற இனக்குழுக்களின் தொல்லைகளில் இருந்து தங்களைக் காப்பாற்றும் என்பது இவர்களின் நம்பிக்கை. இவ்வகை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் வெள்ளாரிக்கோம்பை, குறும்பவரை மற்றும் சேலகொரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

    ஜவ்வாது மலைப் பாறை ஓவியங்கள்

    ஜவ்வாது மலை மலையாளியினர் திருமணச் சடங்கின்போது, மணமகன் வீட்டில், திருமணத்திற்கு முதல் நாள், வாசலுக்கு அருகில் ஒரு சோடிக் கால் பாதங்களை வரைகின்றனர். அதுபோல் திருமணம் முடிந்த பின்னர் மற்றுமொரு சோடிக் கால் பாதங்கள் அருகிலேயே வரையப்படும். அது போல் கார்த்திகை தீபம், பொங்கல் மற்றும் துர்க்கை அம்மன் திருவிழாக்களின் போது வீடுகளைச் சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்துக் கோலம் போட்டு, அலங்கரிக்கின்றனர். குறிப்பிட்ட செம்மண்ணிலிருந்து சிவப்பு வண்ணமும் அவரை இலையை அரைத்துப் பச்சை வண்ணமும் தயாரித்துக் கம்பந்தாள் கொண்டு ஓவியங்கள் வரையப்படுகின்றன. இங்கு ஓவியங்கள் வரையும் மரபு பெண்களிடம் மட்டுமே காணப்படுகின்றது. இந்த ஓவியங்கள் சமயத்திருவிழாக்களின் போது மட்டுமே வரையப்படுகின்றன. இருப்பினும் தங்களின் முன்னோர்களை வழிபடும் விதமாக அவர்களையும் இத்திருவிழாக்களின் போது குறியீடுகளாக வரைந்து வழிபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்துச் சுவர் ஓவியங்கள்

    மதுரை மாவட்டத்தில் வாழும் பழங்குடியினரான பிறன்மலைக் கள்ளர் சமூகத்தில் கல்யாணத்தின்போது, மணமகன் வீட்டின் முகப்புச் சுவர்கள் கல்யாணத்திற்கு முதல் நாள் பெண்களால் அலங்கரிக்கப்படுகின்றன. இவை “பச்சைக் கோலம்” என்று அழைக்கப்படுகின்றன. (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.137) இந்த ஓவியங்கள் பச்சை இலை மற்றும் தழைகள்கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்ட சுவர்களிலேயே வரையப்பட்டு வந்தன. தற்போது சிமெண்ட் மற்றும் கான்கிரிட் கலாசாரம் வந்தபின் இந்த ஓவியமரபு மறைந்துகொண்டு வருகின்றது. இருப்பினும் அளவுகள் குறைந்து குறியீடுகளாக இன்றுவரை வரையப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர் பாறை ஓவியங்கள்

    தஞ்சையிலுள்ள பிரகதீசுவர் கோயிலில் பிரதட்சண வீதிச் சுவர்களிலும், கர்ப்பக்கிருகத்தைச் சுற்றியுள்ள இருண்ட பாதையிலும் இரண்டு அடுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. மேலாகத் தெரியும் ஓவியங்கள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவை முக்கியமானவையல்ல. அவற்றினடியில் உள்ளவை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இராசராசசோழன் காலத்தில் தீட்டப்பெற்றவை. மேலேயுள்ளவை சில விடங்களில் மட்டுமே உரிந்து வந்திருக்கின்றன. இதில் சிவன் பிராமணக் கிழவன் போல் சுந்தரருடைய திருமணத்தன்று வந்து அவரை அடிமையாக உரிமை கொண்டாடுதல் வரையப்பட்டுள்ளன. (கலைக் களஞ்சியம் தொகுதி-2 ப.738)

    முடிவுரை

    பொதுவாக மலைவாழ் பழங்குடி மக்கள் தங்களது பூர்வீகக் கலை மற்றும் கலாசாரங்களோடு இணைந்து வாழ்ந்தாலும் சமவெளியில் வாழும் பிற மக்களுடைய கலாசாரம் இவர்களது வாழ்வியலோடு இரண்டறக் கலந்துள்ளது. இவர்களுக்குள் பண்டமாற்று வணிகம் காலங்காலமாக இருந்து வருகின்றது. இடையர்கள் போன்ற கால்நடை வளர்ப்புச் சமூகங்கள் மலைவாழ் பழங்குடிகளுக்கும் சமவெளியில் வாழும் மக்களுக்கும் இடையே நட்புப் பாலமாய் உள்ளனர். இவர்கள் வழியாகச் சமவெளியில் வாழும் மக்களுடைய நம்பிக்கை, சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் பிற கலாசாரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து இன்றுவரை இருந்து வருகின்றன. அதே சமயம் பழங்குடி மக்களது பூர்வீகக் கலாசாரமானது ஊடகங்கள் மற்றும் பிற மக்களின் தொடர்பால் அழிந்து வருகின்றது. குறிப்பாக இவர்களது நடனம், இசை, பாடல்கள், செவிவழி மரபுகள் ஆகியன பெரும்பாலான இடங்களில் வேகமாக மறைந்து வருகின்றன. நவீன தொழினுட்பத்தின் உதவியோடு இம்மரபுகளை ஆவணப்படுத்துதல் மிக அவசியமானதாகும்.

    *****

    ஆய்விற்குரிய நூல்கள்

    1. இந்தியப் பழங்குடிப்பண்பாடும் தமிழ்ப் பண்பாடும், முனைவர் அ. மரியசூசை, தூய நெஞ்சக் கல்லூரி திருப்பத்தூர்.
    2. தமிழ்ப்பொழில், தமிழாராய்ச்சித் திங்களிதழ், ஆவணி மலர்-7, ஆகஸ்ட் 2017.
    3. கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள், தி.வை.சதாசிவபண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம் சென்னை-08.
    4. இலக்கியமும் கல்வெட்டுக்களும், தி.வை.சதாசிவபண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம் சென்னை-08.
    5. கலைக்களஞ்சியம், தொகுதி இரண்டு, தமிழ் வளர்ச்சிக் கழகம்,பதிப்பு-1955 சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழியல் துறை,
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
    அண்ணாமலை நகர்,
    சிதம்பரம்.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180613 DWA icam l

    பாதத்தில் மாருதி, பதுமநாபர் பார்த்தனுக்கு
    கீதை மொழிந்தபின் காட்டுகிறார் -பாதாதி
    கேசத்தை விஸ்வரூபக் காட்சி கமல்சார்டூ(பார்ட்-2)
    கேசவ்தன் சித்திரத்தில் காண்’’…..கிரேசி மோகன்….!

    Share
  • ஆன்மாவின் ஓசை

     

     

    வே.சுமதி

     

    அர்த்தமற்ற நிலையில்

    அறுந்து விழுகின்றன

    சபிக்கப்பட்ட வார்த்தைகள்….

    மந்திர நாடகங்கள்

    தினந்தோறும் அரங்கேற்றம்

    செய்யப்படுகின்றது

    நகர வீதிகளில்….

    ஆத்திச்சூடியின்

    மூச்சுக்காற்றில்

    கொஞ்சமாய் கொதித்துக்கொண்டிருக்கிறன

    வரலாற்றின் எஞ்சங்கள்…

    சர்வ காலமும்

    ஆகாயத்தின்

    அந்தப்புரத்திலிருந்து

    ஏதோ ஒன்று

    பந்தெனத் துள்ளிக்குதிக்கிறது…

    வானத்தில் கொஞ்சும்

    விண்மீன்களை

    ரசித்தபடி

    லயித்திருக்கிறது

    யாருமற்ற இந்த இரவு….

    கணத்த இதயம்

    இளஞ்சூட்டில்

    மிதமான தென்றல் காற்றோடு

    காத்துக்கொண்டேயிருக்கிறது..

    நிலாவில்

    வடை சூடும் பாட்டியோடு

    விளையாட…

    Share
  • எங்கள் பயணம்

    சு.திரிவேணி

    உலக சகோதரத்துவம்
    நோக்கிய பயணத்தில்
    சக மனிதனை நேசிக்க
    இயலாதவர்கள் நாங்கள்
    வசதிகளுக்காக வாழும் உரிமை
    பறிப்பது எம்மியல்பு
    நித்தம் செத்துப் பிழைக்கும்
    நித்திய நரகம் கடந்தால்
    காத்திருக்கிறதாம் சொர்க்கம்!
    அவ்வின்ப வாழ்வு குறித்தான
    கற்பனையிலேயே முடிகிறது
    எங்கள் வாழ்வு
    கண்முன்னே பல கொடுமைகள்
    கடந்து வருகிறோம்
    சகித்துக் கொள்கிறோம்
    பெற்ற தாயை
    பிறந்த பூமியை
    ரத்த உறவுகளை
    பழைய நினைவுகளை
    விடைபெற்றுச் செல்கிறோம்-
    ஈரமில்லா இதயங்களை நோக்கி!
    வழி விடுங்கள்
    சடலங்களைக் கடந்து தான்
    எங்கள் சொர்க்க வாழ்வை
    எழுத வேண்டும்!

    Share
  • சுற்றுச் சூழல் சுத்தமாவது என்று!

     

     

    அ.ஸ்ரீதேவி

     

     

     

    நீரோடும் ஆறுதான்  அன்று

    சாயநீரோடும் ஆறானதே இன்று

    சகலமாய் இருத்த நீரோடை அன்று

    சாக்கடை நீர் செல்லும் நீரோடை என்று?

     

    ஏக்கரில் தோப்புகள் அன்று

    எல்லாம் குப்பைகளே இன்று

    வளர்ந்து செழித்த மரங்கள் அன்று

    வானுயிர் கட்டிடமே இன்று

     

    இயற்கை அன்னை எழில் முகம் காட்டுவது என்று?

     

    தூயக் காற்றாம் அன்று

    நச்சுப் புகைக்காற்றாம் இன்று

    மரம் நச்சைப் புகை சுவாசித்தது அன்று

    நாம் நச்சைப் புகை சுவாசிக்கிறோம் இன்று

     

    தென்றல் வீசுவது என்று?

     

     

    குயிலின் இன்னிசை அன்று

    குறையாத இறைச்சல்தான் இன்று

    தேனிசை  தான் என்று?

    நன்செய் புன்செய் விளைந்த நிலம் அன்று

    நடுகற்கள் முளைத்தபூமியோ இன்று

    நாம் திருந்துவது என்று?

     

    அமிர்த மழைநீராம் அன்று

    அமில மழையாம் இன்று

    அண்டம் மாறுவது என்று?

     

    மகிழ்ச்சியாய் குழந்தைகள் ஓடின அன்று

    மருத்துவமனையே வீடு இன்று

    மதியைத் தேடுவது என்றோ ?

    சுற்றுச்சூழல் சுத்தமாகுமே அன்று

    சுற்றுச் சூழல் காப்போம்

     

    புவியைமீட்போம்…….!

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 7

    பாலன் நாச்சிமுத்து

     

    பண்டைய தக்காண அரசுகள்

                 (சாதவாகனர்களும் காரவேலனும்)

    சாதவாகனர்:

            அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவாகனர்கள்(SATAVAHANA) தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். சாதவாகனர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் அல்லது சாதவ கன்னர்(சாதவ என்பது சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன(1).        சாதவாகனர் சங்ககாலத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தமிழகத்தோடு போர் செய்ததாகவோ, வெற்றி பெற்று தமிழகப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டதாகவோ தகவல் இல்லை. அவர்கள் தமிழ் அரசுகளின் கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த தக்காணப் பகுதிகளைத் தாக்கி வென்றிருக்கலாம். ஆனால்  உடனடியாகத் தமிழ் அரசுகளால் அவை திரும்பக் கைபற்றப்பட்டது. கிருட்டிணா நதிக்குக் கீழ் அவர்கள் வரவில்லை. சங்ககாலம் வரை தமிழ் அரசுகள் மிக வலிமையோடு இருந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைக்கால வாக்கில் இந்நிலை மாறியிருக்கலாம். சாகர்கள், மேற்கு சத்ரப் அரசுகள், மகத அரசு போன்ற பிற வடநாட்டு அரசுகளோடு தான் சாதவாகனர்கள் போர் புரிந்ததாக அவர்களது கல்வெட்டுகளும், அவர்களைப்பற்றிய இன்ன பிற குறிப்புகளும் கூறுகின்றன.

         டாக்டர் கே. கே. பிள்ளை,  ஆர். எசு. சர்மா ஆகிய இருவரும் தங்களது நூல்களில் சிமுகா(கி.மு. 230-207), சதகர்னி(கி.மு. 180-124),  கௌதமிபுத்ர சதகர்னி(கி.பி 106-130), வசிட்திபுத்ர புலுமாயி(கி.பி 130-160), யாஜன சதகர்னி(கி.பி. 170-199)  ஆகிய ஐந்து சாதவாகன அரசர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்(2). கி.பி.2ஆம் நூற்றாண்டில் ஆண்ட மூன்று முக்கிய அரசர்கள் குறித்துத்தான் ஓரளவு தரவுகள் உள்ளன. பிற அரசர்களின் ஆண்டுகள் புராணங்கள் தரும் ஆண்டுகளை வைத்தே தரப்பட்டுள்ளன. கி.மு. 180-124 வாக்கில் ஆண்ட சதகர்னி குறித்து கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் குறித்துள்ளான்.சாதவாகனர்கள் தங்கள் ஆட்சி மொழியாகத் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் கொண்டிருந்தனர். தமிழர்களின் கடற்படை வலிமையை, அவர்களது ஐக்கிய கூட்டணியின் வலிமையை, பொருள் உற்பத்தி, தொழிநுட்ப மேன்மை, வணிகம் ஆகியவற்றில் தமிழர்களின் உயர்நிலையை சாதவாகனர்கள் அறிந்ததன் காரணமாக, தமிழ் அரசுகளோடு அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை பகைமை பாராட்டாமல் இருந்தனர் எனலாம். சாதவாகனர்கள் அரசு அழிந்த உடன் தமிழகமும் களப்பிரர்களால் கைப்பற்றப்பட்டு விட்டது.

    மொழிபெயர் தேயம்:

        தமிழ்மொழி இருக்கிற நிலையில் இருந்து பெயர்ந்து கொடுந்தமிழாக மாறியிருந்த நிலையை மொழி பெயர்ந்தநிலை எனவும் அவ்வாறு மொழி பெயர்ந்த நிலையில் உள்ள கொடுந்தமிழைப் பேசும் பகுதியை மொழிபெயர் தேயம் எனவும்  பண்டைய தமிழர்கள் குறிப்பிட்டனர். கி.மு.4-ஆம், 3-ஆம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு பெற்றிருந்தன. அதனால் தமிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து, கொடுந்தமிழே பேசப்பட்ட பகுதியை, மொழிபெயர் தேயம் என்றனர். இந்த மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31 ஆவது பாடல் உறுதிப் படுத்துகிறது. மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்றால் மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

    கலிங்க மன்னன் காரவேலன்:

               கலிங்க மன்னர் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழர்களின் ஐக்கிய கூட்டணி குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகும். அதன் 11வது மற்றும் 13வது வரிகள் தமிழரசுகள் குறித்துப் பேசுகிறன.

    Hathigumpha inscription: Sadananda Agrawal has prepared the text in Sanskrit, which has been published in his book Śri Khāravela, 2000.

    Line 10-11 – And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies]. [His Majesty] caused to be cultivated Pithunda, founded by former kings of Kalinga, with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

     Line 13 – [His Majesty] caused to erect towers with strong and beautiful gateways at the cost of two thousand coins. [His Majesty] obtained horses, elephants and jewels losing strange and wonderful elephants and ships. The King of Pandya caused to be brought here Kalinga various pearls, jewels and precious stones hundred thousand in number(3).

    11வது வரி :     11ஆம் ஆட்சியாண்டில், 1300 ஆண்டுகளாக இருந்து வந்த, மக்கள்தொகை நிறைந்த ஊர்களையும், நகரங்களையும் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, “பித்துண்டா” என்ற நகரத்தைப் பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது, பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்.”

    13வது வரி :     “12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான, விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங்களையும் கலிங்கத்தின் தலை நகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன்

    பித்துண்டா நகரம்:

          “பித்துண்டா” என்கிற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் என்பதைத் தெளிவாகக் காரவேலன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலிங்கத்தில் இருந்த முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்நகரம் (பித்துண்டா நகரம்)  தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக, அவர்களின் காவல் அரணாக இருந்து வந்துள்ளது என்கிற செய்தி, தமிழகத்தின் வட எல்லையில் இருந்து கலிங்கத்தின் தென் எல்லை வரையான கடலை ஒட்டிய இன்றைய ஆந்திரப் பகுதி முழுவதும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்துள்ளது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கிறது எனலாம். அதன் மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் தான் இருந்து வந்தது என்கிற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.

    தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி :

        மேலும் இந்நகரம் மீண்டும் தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகளின்கீழ் வந்து விடக் கூடாது என்பதற்காக, அது தரை மட்டமாக்கப்பட்டு கழுதைகொண்டு உழப்பட்டுள்ளது. டி.என். சன்பக் (D.N.Shanbhag) அவர்கள், தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படை எடுத்துச் சென்ற போது, அவை கலிங்கத்தை தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்குப் பதிலடி தரும் விதமாகத்தான் காரவேலன் பித்துண்டா நகரத்தைத் தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது ஒரு துறைமுக நகரம் எனவும் குறிப்பிடுகிறார்(4).

         சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின் தென் கிழக்கு எல்லையில் கடலோரத்தில் இருந்த தமிழக அரசுகளின் துறைமுகக் காவல் அரண் என்பதை உறுதி செய்கின்றன. தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கவனாக இருந்தன என்ற அவரது செய்தி, தமிழ் அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர் தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதை சந்தேகமின்றி ஆதாரத்தோடு உறுதிப் படுத்துகின்றன.

         அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய அரசன் தொடர்ந்து வட நாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து , அவனோடு சமாதானம் செய்து கொள்ளும் பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக் கொண்டுள்ளான். அதைத்தான் காரவேலன் பாண்டியனே எனக்கு நிறைய பரிசுப்பொருட்களை அனுப்புமாறு நான் செய்வித்தேன் என்கிறான். மாமூலனாரின் பாடல்களும்  காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதையும், மொழிபெயர்தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும் உறுதிபடுத்துகின்றன.  இந்த பித்துண்டா நகரம் குறித்து, ஒரிசாவின் பொருளாத வரலாறு என்கிற நூலும், விக்கிபீடியாவும் தரும் தகவல்களைக் காண்போம்.

         பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய நகரம் பித்துண்டா((PITHUNDA) ஆகும். மகாவீரர் (கி.மு. 599-527) காலத்தில், இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் மிக முக்கிய நகர் மையமாக இருந்துள்ளது என உத்தரதயான சூத்திரம் (UTTARADHAYANA  SUTRA) என்கிற சமண நூல் குறிப்பிடுகிறது. இந்த பித்துண்டா துறைமுக நகரம் குறித்து டாலமி(கி.பி. 90-168) தனது புவியியல் நூலில்(GEOGRAPHY OF PTOLEMY) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பித்துண்டா துறைமுகம், பண்டைய கலிங்கத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுகம் எனவும் இரண்டாவது பெரிய துறைமுகம் எனவும் விக்கிபீடியா குறிப்பிட்டுள்ளது. இந்த நகரத்தைக் காரவேலன் தமிழ் அரசுகளின் கூட்டணியிடமிருந்து கைப்பற்றிக் கழுதைகளைக் கொண்டு உழுதான் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. காரவேலனின் ஆண்டு கி.மு. 209-170 எனச் சொல்லப்பட்டுள்ளது(5).

         நிகார் இரஞ்சன் பட்னாய்க் அவர்களும், விக்கிபீடியாவும் தரும் செய்திகள் இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் பண்டைய இரண்டாவது பெரிய துறைமுக நகரம் என்பதையும், கலிங்கத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பதையும் தமிழரசுகளின் கூட்டணியிடமிருந்து கலிங்க மன்னன் காரவேலனால் இந்நகரம் கைப்பற்றப்பட்டு கழுதை கொண்டு உழப்பட்டது என்பதையும் உறுதி செய்கின்றன. டாலமியின் புவியியல் நூலும் இந்நகரம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது என்கிற செய்தி இந்நகரம் முன்பிருந்தே ஒரு புகழ் பெற்ற துறைமுக நகரமாக இருந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

    பார்வை:

    1.இந்து ஆங்கில நாளிதழ், ஐராவதம் மகாதேவன், “An epigraphic perspective on the antiquity of Tamil”, நாள்: 24/6/2010.

    2.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா-தமிழி மாஜினி,  ஜூன் 2004, பக: 260-264.  2.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே. கே. பிள்ளை, 8ஆம் பதிப்பு, 2011    பக்: 34-37) 3. விக்கிபீடியா(SATAVAHANA DYNASTY).

    3.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

    4.சன்பக் (D.N. Shanbhag), www.freeindia.Org/biographies/kharavela/index.htm.

    5.ஒரிசாவின் பொருளாதார வரலாறு-நிகார் இரஞ்சன் பட்னாய்க், பக்: 22, 24, 131, 137. (ECONOMIC  HISTORY OF ORISSA BY  NIHAR RANJAN  PATNAIK, PAGES – 22, 24, 131,137) & பித்துண்டா(PITHUNDA)-விக்கிபீடியா

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    திரிலோக சஞ்சாரி நாரதன் உ(க)லகம் கண்ணனை கண்டதும் நன்மையில் முடிந்தது…..!

    ”நாத தனிமனுஷன் நாரதன் தம்புரா
    ஓதுமே நாரண ஓங்காரம்(ஓம்நமோநாராயணா) -யாதவரைக்
    கண்டதில் நாரதன் , கார்வண்ணன் நன்மையாய்க்
    கொண்டலாய்ப் பாடினான் கண்டு’’….கிரேசி மோகன்….!
    (அல்லது)
    விண்டனன் ஓங்கார விஷ்ணு…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180611 New Forever – 26×36 cms (10×14”) Arches -cold pressed – lr

    ஆண்டவா, பழுப்புவண்ணம் பூண்டவா, நீள்விசும்பில்
    நீண்டவா, பாரதப் பாண்டவராய் -வேண்டவா?,
    தூண்டவா பக்தியால் ?, தீண்டவா பாரதியாய் ?
    கீண்டவா தீங்கைக் கிழித்து….கிரேசி மோகன்….!

    Share
  • என்றும் இளமையோடு!

    ’’இடுக்கண் வருங்கால் இளிக்காய், துவர்க்கும்
    கடுக்காயை உண்ண இடர்போம் -படுக்கையில்
    இஞ்சி அளவு இரப்பையில் சேர்கடுக்காய்
    கஞ்சியின் கல்லும் கனி’’….கிரேசி மோகன்…..!

     

     

    என்றும் இளமையோடு வாழ#திருமூலர் கூறும் எளிய வழி!

     

    நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில்,

    #உஷ்ணம், #காற்று, #நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

    உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

    நமது தேகத்தை நீட்டித்து,ஆயுளை விருத்தி செய்ய

    திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

    ஒருவனுடைய உடல், மனம்,ஆன்மா ஆகிய மூன்றையும்

    தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

    கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

    தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய

    அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

    “பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது

    என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

    கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம்

    வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

    கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

    நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

    எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

    நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

    துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

    ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து

    பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

    பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

    அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால்,

    நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான

    அளவில் பெற்று வரலாம்.

    கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

    கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு,

    நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின்

    சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

    கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

    #கண் பார்வைக் கோளாறுகள்,

    #காதுகேளாமை,

    #சுவையின்மை,

    #பித்த நோய்கள்,

    #வாய்ப்புண்,

    #நாக்குப்புண்,

    #மூக்குப்புண்,

    #தொண்டைப்புண்,

    #இரைப்பைப்புண்,

    #குடற்புண்,

    #ஆசனப்புண்,

    #அக்கி, #தேமல், #படை,

    #தோல் நோய்கள்,

    உடல் உஷ்ணம்,

    வெள்ளைப்படுதல்,

    மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,

    #மூத்திரஎரிச்சல், #கல்லடைப்பு,

    #சதையடைப்பு, #நீரடைப்பு,

    #பாதஎரிச்சல், #மூலஎரிச்சல்,

    #உள்மூலம், #சீழ்மூலம், #ரத்தமூலம், #ரத்தபேதி,

    #பௌத்திரக்கட்டி,

    சர்க்கரைநோய், இதயநோய்,

    மூட்டு வலி, உடல் பலவீனம்,

    உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,

    ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற

    அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

    இதை பற்றி சித்தர் கூறும் பாடல்…

    “காலை இஞ்சி

    கடும்பகல் சுக்கு

    மாலை கடுக்காய்

    மண்டலம் உண்டால்

    விருத்தனும் பாலனாமே.-“

    காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

    நண்பகலில் சுக்கு-

    இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம்

    (48 நாட்கள்) சாப்பிட்டுவர,கிழவனும் குமரனாகலாம்

    என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

    எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு

    வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

    கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

    Share
  • வெல்லும் சொல்

     

     

    பழகும் விதத்தில் பழகினால் பகைவனும் நண்பனே

    சொல்லும் விதத்தில் சொன்னால் தலையாட்டுவானே

    பேசும் பேச்சும்,சொல்லில் நயமும் நம்மை உயர்த்திடுமே

    பிறர் விரும்பும் சொல்லைக் கூறினாலே புகழுண்டாகுமே!

    சொல்வன்மை என்றாலே சொல்லை திறம்பட கூறுபவனே

    பிறர்மனம் நோகாமல் சொல்லை சொல்பவன் நல்லவனே

    இனிய சொற்கள் இருக்கும்போது தீச்சொல் கூறுவானேன்

    பழமாக இனிய சொல்லிருக்க, காயை சாப்பிடுவது தீமைதானே !

    அவையறிந்து சொல்லைச் சொல்பவன் அறிவுடையவன் ஆவான்

    தவறான சொல்லை சொல்பவனே முட்டாள் எனப்படுவான்

    சொல்லாற்றல் மனிதனை என்றும் மண்டியிடச் செய்யாது

    எவர் எதிர்த்து வரினும் அவர் எதிரில் தலை வணங்காது !

    சொன்னதை எல்லாமே உடனே செய்துவிட முடியுமா

    காலம் கருதி, உரிய சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டாமா

    பழி பாவங்கள் வராமல் பார்த்து எடுத்துரைக்கவேண்டாமா

    நியாயத்தை நினைந்து உண்மையை நிலைநாட்டவேண்டாமா!

    கவிஞ்சன் சொல்லைக் கொண்டு வெல்லும் கவிதை புனைகிறான்

    பேச்சாளனோ பேச்சாற்றலால் சபையில் மதிக்கப்படுகின்றான்

    சொல்லாமல் சொன்ன சொல்லுக்கு ஏதாவது விலையுண்டா

    வெல்லும் சொல்லை உடையவனுக்கு பகைமை உண்டா !

    Share
  • நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

     

     எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

    வெள்ளைநிறம் வாய்த்ததனால் விட்டெறிந்து பேசிவந்தாள்
    கொள்ளை யழகென்று கொட்டமிட்டு அவளிருந்தாள்
    நல்லநல்ல மாப்பிளைகள் பெண்பார்க்க வந்தார்கள்
    எல்லோரும் கறுப்பென்று இறுமாந்து மறுத்துவிட்டாள் !

    அவளப்பா கறுப்புநிறம் அவளண்ணா அப்படியே
    அக்காவும் தங்கையும் அவள்போல நிறமில்லை
    அம்மாவின் நிறமாக அவள்நிறமும் ஆனதிலே
    அம்மாவின் மேல்பிரியம் அவளுக்கு இருந்ததுவே !

    தான்சேரும் தோழியரும் தன்நிறத்தில் இருப்பதையே
    தன்னுடைய எண்ணமாய் தானவளும் கொண்டிருந்தாள்
    கறுப்புநிறம் கொண்டவர்கள் கூடவந்து இணைந்துவிட்டால்
    வெறுப்புடனே ஒதுக்கியவள் விலகியே நடந்திடுவாள் !

    எல்லோர்க்கும் திருமணம் நடந்துவிட்ட போதிலுமே
    இவளுக்கு திருமணம் நடக்கவில்லை எனுமேக்கம்
    அப்பாவின் மனதையே அறுத்துக்கொண்டு இருந்தாலும்
    அவளெண்ணம் நிறைவேற அலையாக அலைந்தாரே !

    கறுப்பான ஆண்கள்பலர் கட்டழகாய் இருந்தாலும்
    வெறுப்பான பார்வையினை வீசியவள் நின்றதனால்
    பொறுப்பான வயதினிலே திருமணமும் ஆகாமல்
    பொழுதெல்லாம் அவளுக்கு வீணாகிப் போனதுவே !

    வீட்டிலே தங்கையின் வளைகாப்பு நடந்ததுவே
    வெளியிடத்தார் பலபேரும் வீட்டுக்கு வந்திருந்தார்
    பட்சணங்கள் செய்வதிலே பலபேரும் ஈடுபட்டார்
    வெள்ளைநிற வடிவழகி விருப்பமின்றி உதவிநின்றாள் !

    சமயலறை தனிலிருந்து சலசலப்புக் கேட்டவுடன்
    சகலருமே அவசரமாய் ஓடியங்கே போனார்கள்
    வெள்ளநிற வடிவழகி முகமதிலே கொதியெண்ணெய்
    விழுந்துவிட்ட காரணத்தால் வேதனையால் அவள்துடித்தாள் !

    கறுப்புநிறம் கொண்டஅப்பா கண்ணீரில் மூழ்கிநின்றார்
    வெறுத்துநின்ற கறுப்பண்ணா விரைந்தோடி வந்துநின்றான்
    வெள்ளைநிற பெண்ணவளை கொண்டுசென்றார் மருந்துசெய்ய
    கொள்ளைநிற அழகங்கே கொட்டிண்டு போனதுவே !

    கொதியெண்ணெய் பட்டதனால் கொப்புளங்கள் வந்தங்கே
    பொலிவான வெள்ளைநிறம் பொசுங்கிக் கறுப்பாகியதே
    தலைமயிரில் தாக்கியதால் முன்மயிரும் கருகியதே
    தளதளத்து அழகுமுகம் தான்கறுப்பாய் ஆகியதே !

    ஓரளவு சுகமாகி வீடுவந்த பின்னாலே
    கண்ணாடி முன்னின்று தன்முகத்தைப் பார்த்தாளே
    ஓவென்று ஓலமிட்டு உன்மத்தம் பிடித்தவளாய்
    ஒருவரையும் பாராமல் உட்கார்ந்தாள் தனிமையிலே !

    அப்பாவும் அண்ணாவும் ஆறுதல்கள் கூறிநின்றார்
    அப்போது தானவளும் அவர்கள்முகம் பார்த்தனளே
    அப்பாவும் அண்ணாவும் அழகெனவே அவள்நினைத்தாள்
    அழுதபடி ஓடிவந்து அணைத்தபடி அவள்நின்றாளே !

    கறுப்புநிறம் அப்போது கட்டழகாய் தெரிந்தது
    வெறுத்துநின்ற வெள்ளழகி வெளிவந்தாள் திரைவிலகி
    நிறமென்னும் பேய்பிடித்து நின்றாடி நின்றஅவள்
    நிறமெல்லாம் அழகெனவே நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

    Share
  • படக்கவிதைப் போட்டி 164-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. வனிலா பாலாஜி எடுத்திருக்கும் இந்தத் தலையாட்டி பொம்மையை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து, இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கிறார் திருமதி. இராமலக்ஷ்மி. மங்கையர் இருவர்க்கும் என் மனங்கனிந்த நன்றி!

    மனத்தில் நாணம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இயங்குதல், மரப்பாவையைக் கயிற்றால்கட்டி இயக்கி உயிருள்ளதைப் போல் மயங்கவைத்தலுக்கு ஒப்பானது என்று நாணில்லாதோரைப் பழித்துரைப்பார் செந்நாப்போதார்.

    நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி யற்று. 
    (1020)

    பிறரால் அசைத்துத் தலையாட்ட வைக்கப்படும் தலையாட்டி பொம்மையின் நிலையும் அஃதே.

    தலையாட்டும் பொம்மைகண்டு கலைவல்ல நம் கவிஞர் உள்ளத்துள் ஊறும் கற்பனையைக் கண்டுவருவோம்!

    *****

    தலைமைப் பதவியில் இருப்போர் தலையாட்டி பொம்மைகளாய் இருப்பதால் தமிழ்நாடு அடைந்துவரும் கேட்டைத் தன் பாட்டில் தொகுத்துரைக்கிறார் திரு. ஆ. செந்தில் குமார்.

    ஞ்சாவூரு பொம்மையிது… தலையாட்டும் பொம்மையிது…

    தஞ்சாவூரு பொம்மையிது…
    தலையாட்டும் பொம்மையிது…
    தொட்டுவிட்டால் போதுமே…
    தைதையென ஆடுமே…!

    தலைமைப்பதவி வகித்திட…
    தகுதியிது போதுமா…?
    ஆட்டுமந்தைக் கூட்டமாய்…
    ஆகிடுதல் நியாயமா…? (தஞ்சாவூரு…)

    தனதுபதவி நிலைத்திருக்க…
    தாழ்பணிதல் ஆகுமா…?
    தலைநிமிர்ந்துப் போராடும்…
    துணிவிருக்க வேண்டாமா…? (தஞ்சாவூரு…)

    காசுவாங்கி ஓட்டுப்போடும்…
    கயமைத்தனம் ஒழியணும்…!
    டாசுமாக்கு கடையெல்லாம்…
    தமிழ்நாட்டைவிட்டு ஓடணும்…! (தஞ்சாவூரு…)

    நீட்டுத்தேர்வு என்பதெல்லாம்…
    நாட்டிற்குத் தேவையா…?
    நியாயமானப் போராட்டத்தை
    நசுக்கிடுதல் நல்லதா…? (தஞ்சாவூரு…)

    நாதியற்ற மக்களுக்கு…
    நல்லவழி பிறக்குமா…?
    நேர்மையற்ற ஆட்சி நாட்டில்…
    நிலைத்திடுதல் ஆகுமா…? (தஞ்சாவூரு…)

    *****

    மத்திய அரசுக்குக் காவடி தூக்குவதையும் அவர்தம் சேவடி தொழுவதையுமே முழுநேர வேலையாய்ச் செய்துவரும் தமிழ்மாநிலக் கரைவேட்டிகள் மக்களின் துயர்துடைப்பதில் அக்கறை காட்டவில்லையே என்று அங்கலாய்க்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    தலையாட்டும் நடன பொம்மை

    நாடகமே உலகம், ஆடுவதோ ஓர் நாட்டியமாடும் பொம்மை
    ஒருகை மேலே, ஒரு கை கீழே நின்று ஆடும் நடன பொம்மை
    இன்றைய ஆட்சியும் மேலிடத்திற்கு கீழ்ப்படிந்து நடக்குதே
    தன்னாட்சி கவிழாமல் இருக்க மேலிடத்திற்குப் பணிந்து நடக்குதே!
    இன்றைய அரசியல்வாதிகளே தலையாட்டும் பொம்மைகள்
    ஆட்சி கவிழாமலிருக்க மேலிடத்து உறவை நாடும் மனித பொம்மைகள்
    கொடுமைகள் புரிந்துவிட்டு பூசி,மழுப்பி நிற்கும் கொடுங்கோலர்கள்
    ஜனங்களை ஆட்டுமந்தையென நினைத்துச் செய்யும் கொடுமைகள்!
    தன் பதவி நிலைக்க தன்மானத்தை அடகு வைக்கும் கூட்டம்
    மக்கள் நலனை துன்பத்தையும் கண்டும் காணாத ஆட்சிக் கூட்டம்
    பணத்தை சுரண்டி அதனை மறைக்க, எடுபிடி செய்யும் கூட்டம்
    மக்கள் குறைகளை தீர்ப்பதுபோல், பொய்ப் பிரசாரக் கூட்டம்
    பணத்திற்காக வோட்டு போட்டு மண்டியிடும் ஒரு கூட்டம்
    அக்ஷய பாத்திரத்தைக் கொடுத்துப் பிச்சைஎடுக்கும் கூட்டம்
    புதிய மதுபானக் கடைகளை எதிர்த்துப் போராடும் கூட்டம்
    நடுத்தெருவில் கூடி நடத்தும் போராட்ட கூட்டம்
    ஆளுநரும், மந்திரிகளும் கைப்பொம்மையாய் செயல்படுதே
    இப்பொழுதும் மக்களின் குறைகளைத் தீர்க்கத் தயக்கம் காட்டுதே
    மக்கள் எதிர்த்தாலும், அடக்கு முறையைத் தயக்கமுமின்றி செய்யுதே
    ஜனநாயக நாடா, எதேச்சதிகாரம் கொண்ட அரசாக விளங்குதே
    மக்களே! பணத்திற்காகத் தன்மானத்தை அடகு வைக்காதீர்
    தண்ணீருக்காகவும், மணல்கொள்ளைக்கும் எதிர்த்து போராடுவீர்
    தமிழனின் தனித் தன்மையை உணர்ந்து உயிருள்ளவரை போராடுவோம்
    மக்களின் துயர் துடைக்காத அரசை பதவியில் இருந்து இறங்குவோம் !

    *****

    ”தன்னலம் செழிக்கத் தலையாட்டும் பொம்மைகளாய் மனிதர்கள் மாறிப்போனதால் நாட்டைச் சூழ்ந்தது கேடு” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆட்டம்…

    ஆடும் பொம்மை ஆட்டமென
    ஆடியே அகில வாழ்வினிலே
    நாடும் நன்மைகள் நமக்கெனவே
    நாளும் தலையை ஆட்டிடுவர்,
    கேடு சூழ்ந்து வருவதையே
    கருத்தில் யாரும் கொள்வதில்லை,
    தேடு வாழ்வில் நல்லதையே
    தெரிந்து நடந்தால் இடரிலையே…!

    *****

    ”களிமண் தந்த கொடையால் உருவாகித் தனியே கொலுவிருந்து, கண்களுக்கு விருந்துபடைக்கும் தலையாட்டி பொம்மையின் சிங்காரச் சிற்றுடையும் ஓர் அழகுதான்!” என்று வியக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    கலைக்கு அழகு

    வாடாது முகம்மலர வந்தவரை
    ……….வரவேற்பதில் ஒரு மகிழ்ச்சியாம்..!
    ஆடாது நிற்குமொரு காட்சியிலே
    ……….அருமை நடனமாடும் மங்கையாம்..!
    மூடாது கண்ணிமை விழித்திருக்கும்
    ……….முந்தானை இல்லாத பொம்மைதான்..!
    கூடாது மற்றொன்றுடன் தனிநின்று
    ……….கொலுவிலே வீற்றிருக்கும் நாயகி..!

    வீட்டுக்குள் உள்ள அலமாரியில்
    ……….வியக்கு மாறுநீயும் அலங்கரிப்பாய்..!
    பூட்டுப் போடவும் அவசியமில்லை
    ……….பொம்மைதானே எங்கே ஓடுவாய்..!
    ஆட்டுவிப்போர் இல்லாமலே நீ
    ……….ஆட்டம் போடுவது கடினம்தான்..!
    கூட்டுக் கொள்ளை அடிப்போரை
    ……….கண்டு விட்டால் கூத்தாடுவாயா..?

    தலையாட்டும் செய்கையைத் தானே
    ……….தன்னிச்சையாய்ச் செய்ய முடியாது..!
    விலை கொடுத்து வாங்கியபின்னே
    ……….விளையாடத் தட்டுவார் தலையை..!
    சிலைபோல நின்றாலும் உனக்குச்
    ……….சிங்காரச் சிற்றுடையும் அழகுதான்..!
    கலைப் பொருளாக உன்னையாக்க
    ……….களிமண்ணும் கொடுக்கும் கொடை..!

    *****

    பாவையே! அசையாது அசையும் அதிசயம் நீ! ஓசையொழிந்த உன் ஆடல் தெருக்கூத்தாவது திருக்கூத்தே! பயனில பேசாது நீ இதழ்மூடியிருப்பதும் சிறப்பே! என்று பொம்மையின் மெய்ப்பாடுகளைப் பாடுபொருளாக்கி நம்மை இரசிக்கவைக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

    அசையாதசையும் நினதிசயம் என்னென்பேன் என்னென்பேன் பாவாய்
    ஆசைபடுமனம் தேடும் புனைவேடம் ஒழியெனக் காட்டுகிறாய் எம்பாவாய்
    இசைவதுவசையாதென்றோ ஏதொன்றும் பேசாயடி எந்தன் பாவாய்
    ஈசைவாழ்த்து ஈசை வாழ்த்துவெனவோ நின்வலக்கரம் வாழ்த்துது எம்பாவாய்
    உசைத்தாலும் விசைத்தாலும் நிலைநடுங்காது நில் என்பாய் எம்பாவாய்
    ஊசைமேனிமினுக்குள் மின்னமாய் ஞானம் சேரெனப் பார்க்குமென் பாவாய்
    ஒசித்தயோசனை பின்னி நிமிர்நெஞ்சுகொள்ளெனப் பணித்தனை எம்பாவாய்
    ஓசையொழிந்த உன்னாடல் தெருக்கூத்தாவது திருக்கூத்தே எம்பாவாய்
    ஒளவியம் கூடாதென பயனில பழுதென இதழ்பூட்டி இறுக்குமென் பாவாய்
    அஃ றிணைக்குயர்திணை சார்பெனவோ அபிநயநடை எடுத்தனை எம்பாவாய்?

    *****

    பொம்மைக்குச் செம்மையான கவிதைகளை அணிகளாய்ப் பூட்டிய பாவலர்க்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    பொம்மை சொன்ன உண்மை

    நான் நடனம் ஆடுகின்ற பொம்மை!
    காற்றிலாடும் பொம்மை!
    சொல்வதெல்லாம் உண்மை!
    இதைச் செவிமடுத்தால் விளையும் என்றும் நன்மை!
    பயனில்லா நிகழ்வுதானே மனிதனின் ஆட்டம்!
    நூல் இருக்கும் வரையில் தானே பட்டத்தின் ஆட்டம்!
    இலக்கில்லாப் பயணம்தானே மனிதா உன் ஆட்டம்!
    உயிர்இருக்கும் வரைதானே மனிதா உன் ஆட்டம்!
    ஆணவத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் வாழ்வை அழித்துவிடும் ஆட்டம்!
    மதுஅருந்தி நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் குடும்பத்தை அழித்துவிடும் ஆட்டம்!
    ஆடம்பரத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் அடுத்த தலைமுறையை அழித்துவிடும் ஆட்டம்!
    கடலின் ஆட்டம் ஆழிப்பேரலையாகும்!
    காற்றின் ஆட்டம் புயலாகும்!
    பூமியின் ஆட்டம் பூகம்பமாகும்!
    ஆற்றின் ஆட்டம் வெள்ளமாகும்!
    அளவிற்கு மீறிய ஆட்டமென்றும் அழிவாகும்!
    அடங்கி நடந்தால் உன் வாழ்க்கை இனிதாகும்!

    ”கடலின் ஆட்டம் ஆழிப்பேரலையாய், காற்றின் ஆட்டம் புயலாய், புவியின் ஆட்டம் பூகம்பமாய் உருமாறி உலகை அழிப்பதுபோல் மனக்கட்டுப்பாடின்றி மனிதன் ஆ(போ)டும் ஆட்டம் அவன் நல்வாழ்வைக் குலைத்துவிடும்!” என்று அமைதியாய் நிற்கும் பொம்மையின் மூலம் அரிய கருத்தை அவனிக்குச் சொல்லியிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (165)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அண்ணாகண்ணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share