எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

 

வெள்ளைநிறம் வாய்த்ததனால் விட்டெறிந்து பேசிவந்தாள்
கொள்ளை யழகென்று கொட்டமிட்டு அவளிருந்தாள்
நல்லநல்ல மாப்பிளைகள் பெண்பார்க்க வந்தார்கள்
எல்லோரும் கறுப்பென்று இறுமாந்து மறுத்துவிட்டாள் !

அவளப்பா கறுப்புநிறம் அவளண்ணா அப்படியே
அக்காவும் தங்கையும் அவள்போல நிறமில்லை
அம்மாவின் நிறமாக அவள்நிறமும் ஆனதிலே
அம்மாவின் மேல்பிரியம் அவளுக்கு இருந்ததுவே !

தான்சேரும் தோழியரும் தன்நிறத்தில் இருப்பதையே
தன்னுடைய எண்ணமாய் தானவளும் கொண்டிருந்தாள்
கறுப்புநிறம் கொண்டவர்கள் கூடவந்து இணைந்துவிட்டால்
வெறுப்புடனே ஒதுக்கியவள் விலகியே நடந்திடுவாள் !

எல்லோர்க்கும் திருமணம் நடந்துவிட்ட போதிலுமே
இவளுக்கு திருமணம் நடக்கவில்லை எனுமேக்கம்
அப்பாவின் மனதையே அறுத்துக்கொண்டு இருந்தாலும்
அவளெண்ணம் நிறைவேற அலையாக அலைந்தாரே !

கறுப்பான ஆண்கள்பலர் கட்டழகாய் இருந்தாலும்
வெறுப்பான பார்வையினை வீசியவள் நின்றதனால்
பொறுப்பான வயதினிலே திருமணமும் ஆகாமல்
பொழுதெல்லாம் அவளுக்கு வீணாகிப் போனதுவே !

வீட்டிலே தங்கையின் வளைகாப்பு நடந்ததுவே
வெளியிடத்தார் பலபேரும் வீட்டுக்கு வந்திருந்தார்
பட்சணங்கள் செய்வதிலே பலபேரும் ஈடுபட்டார்
வெள்ளைநிற வடிவழகி விருப்பமின்றி உதவிநின்றாள் !

சமயலறை தனிலிருந்து சலசலப்புக் கேட்டவுடன்
சகலருமே அவசரமாய் ஓடியங்கே போனார்கள்
வெள்ளநிற வடிவழகி முகமதிலே கொதியெண்ணெய்
விழுந்துவிட்ட காரணத்தால் வேதனையால் அவள்துடித்தாள் !

கறுப்புநிறம் கொண்டஅப்பா கண்ணீரில் மூழ்கிநின்றார்
வெறுத்துநின்ற கறுப்பண்ணா விரைந்தோடி வந்துநின்றான்
வெள்ளைநிற பெண்ணவளை கொண்டுசென்றார் மருந்துசெய்ய
கொள்ளைநிற அழகங்கே கொட்டிண்டு போனதுவே !

கொதியெண்ணெய் பட்டதனால் கொப்புளங்கள் வந்தங்கே
பொலிவான வெள்ளைநிறம் பொசுங்கிக் கறுப்பாகியதே
தலைமயிரில் தாக்கியதால் முன்மயிரும் கருகியதே
தளதளத்து அழகுமுகம் தான்கறுப்பாய் ஆகியதே !

ஓரளவு சுகமாகி வீடுவந்த பின்னாலே
கண்ணாடி முன்னின்று தன்முகத்தைப் பார்த்தாளே
ஓவென்று ஓலமிட்டு உன்மத்தம் பிடித்தவளாய்
ஒருவரையும் பாராமல் உட்கார்ந்தாள் தனிமையிலே !

அப்பாவும் அண்ணாவும் ஆறுதல்கள் கூறிநின்றார்
அப்போது தானவளும் அவர்கள்முகம் பார்த்தனளே
அப்பாவும் அண்ணாவும் அழகெனவே அவள்நினைத்தாள்
அழுதபடி ஓடிவந்து அணைத்தபடி அவள்நின்றாளே !

கறுப்புநிறம் அப்போது கட்டழகாய் தெரிந்தது
வெறுத்துநின்ற வெள்ளழகி வெளிவந்தாள் திரைவிலகி
நிறமென்னும் பேய்பிடித்து நின்றாடி நின்றஅவள்
நிறமெல்லாம் அழகெனவே நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *