Tag: எம்.ரிஷான் ஷெரீப்

  • அகாலத்தில் மரித்தவனின் கைபேசி எண்கள்

    எம். ரிஷான் ஷெரீப்

     

    மரணித்தவர்களுக்கு வரும் கைபேசி அழைப்புக்கள்

    அலைவரிசைகளில் அதிர்ந்து பெருகி

    பேரலையாகித் துரத்த

    கரை மணலென எங்கும் பரந்து விடுகின்றன

    அவர்களது தொலைபேசி எண்கள்
    கடற்கரைச் சிப்பிகள் பொறுக்கும் சிறுமி

    மீன் வலைக்காரன்

    மணற் சிற்பக் கலைஞன்

    உப்பு நீரில் கால் நனைப்பவர்களென ஓரோரும்

    தாமறியாது எண்களைப் பொறுக்கி

    கடலில் எறிந்து விடுகிறார்கள்

     

    அன்றிலிருந்து
    இருளில் தொலைந்துவிடும்
    ஆத்மாக்களின் சுவடுகள்

    அம் மணலை மிதித்துதிர்க்கும் துகள்கள்

    தனித்தனி எண்களாகி

    படகுகளென வெளியெங்கும் மிதக்கும்
    எக் காலமும்

    அவ்வாறானதொரு காலத்தில்
    அகாலத்தில் மரித்தவனின் எண்கள்

    அவனை அழைப்பவர்களது விரல் துடுப்புக்களினூடு

    அசைந்தசைந்து… அசைந்தபடியே

    – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • சர்வதேச மகளிர் தினக் கவிதை

    எம்.ரிஷான் ஷெரீப்

    நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக…

    ghk-356x220

    நீர்ப் பூக்குழி

    தொலைவிலெங்கோ

    புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை

    ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும்

    மலைமுகடுகளிடையே அமைந்திருந்தது

    அந்த ஆதி மனிதர்களின்

    நதிப்புறத்துக் குச்சு வீடு

    ஊற்று

    ஓடையாகிப் பின்

    நீர்த்தாரையாய் வீழ்ந்து

    பெருகிப் பாய்ந்து

    பரந்து விரிந்த பள்ளங்களில்

    தரித்திராது ஓடும் ஆறு

    கற்பாறைகளைத் தேய்த்துத் தேய்த்து

    உண்டாக்கும் பூக்குழிகள்

    நதியின் புராண தடங்களை

    நினைவுறுத்தி வரலாறாக்கும்

    தண்ணீரில் தம் இரைக்கென

    காத்திருந்த பட்சிகளை

    அலறிப் பறக்கச் செய்த

    சிறுமியின் ஓலம்

    அவளது குடிசையின்

    மூங்கில் கதவு, களிமண் சுவர்களை

    எட்டவிடாது துரத்தியது

    அக் கணத்தில் தடதடத்துக் கூச்சலிட்ட ரயில்

    குரூர வேட்டைக்காரனொருவனின்

    கரம் தீண்டி சுவாசம் நின்றதிர்ந்த

    பட்டு வண்ணத்துப் பூச்சியின் உடல்

    ஒரு பூக்குழியில் மிதந்த நாளில்

    கொக்குகளும், மீன்கொத்திகளும், நீர்க்காகங்களும்

    அச் சின்னஞ்சிறிய பெண்ணின்

    சடலத்துக்குக் காவலிருந்ததைக் கண்டன

    சின்னவளைக் காணாது

    வனமெங்கும் தேடிய விழிகள்

    ஆந்தைக் குரல்

    அபாயத்தின் ஒலி
    பறவைச் சிறகின் உஷ்ணம்

    பாதுகாப்பைக் குறிக்கிறதென
    சொன்னாயெனினும்

    சிறுமியின் கூரிய பற்களும் நகங்களும்
    வேட்டைக்கானவை என அவளுக்கு

    ஏலவே அறிவுறுத்த

    மறந்து விட்டாய் அம்மா

     

    – எம்.ரிஷான் ஷெரீப்

    mrishanshareef@gmail.com

    Share
  • கட்டன்ஹாவும் மனைவியும்

    (அங்கோலா நாட்டுச் சிறுகதை
    எழுதியவர் – ராஉல் டேவிட்)

    ராஉல் டேவிட் (Raúl David) பற்றிய சிறுகுறிப்பு:

    ராஉல் மாத்யூ டேவிட் எனும் முழுப் பெயர் கொண்ட எழுத்தாளர் ராஉல் டேவிட் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அங்கோலா நாட்டிலுள்ள பெங்குஎலா மாகாணத்தில் காண்டா எனும் பிரதேசத்தில் பிறந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் மேற்படிப்புக்காக கலாங்கு எனும் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயர்கல்வியைப் பூர்த்தி செய்ததும் அரச சேவையில் இணைந்து பல தரங்களிலும் பணியாற்றியுள்ளார்.

    பணி நிமித்தம் நாட்டின் பல பிரதேசங்களுக்கும் பயணிக்க வேண்டியிருந்த காரணத்தால் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளவும் கிராமப்புறப் பண்ணைத் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகவும், அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும் அவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவற்றை கட்டுரைகளாகவும் இலக்கியப் படைப்புக்களாகவும் எழுதி வந்தார். அவை பின்னாட்களில் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

    அங்கோலா எழுத்தாளர்கள் சங்கம் (UEA) உருவாகுவதற்கான பிரதான  காரணகர்த்தாவான இவர், பல்வேறு கலாசார, இலக்கிய செயற்பாடுகளிலும், ஆப்பிரிக்க – ஆசிய எழுத்தாளர்களின் ஒன்றுகூடலிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    இவரது தொகுப்புக்கள்:

    Colonized and settlers (1974), Poems (1977), Traditional Tales of Our Land (I) (1978); Narratives at random (1979), Traditional Tales of Our Land (II) ( 1981), Against the law and the flock (1988), Song of Our People, written versions of songs and poems in language Umbundu (1988), Song of Yesterday to Listen and Tell (1989), From Traditional Justice of Umbundus (1997), Benguela in time and space (2000) and Old Owl history.

    ***

     தமிழில்  -எம்.ரிஷான் ஷெரீப்

                அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா – டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான ‘டுங்கா’வில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.

                அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.

                1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.

    இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.

                பிடித்துக் கொள்ளப்பட்டிருந்த மற்றவர்களோடு கட்டன்ஹாவும் ஆட்சியாளர் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். இவ்வாறு பிடித்துக் கொண்டு வரப்பட, தான் என்ன தவறு செய்தோமென கட்டன்ஹாவுக்குத் தெரியவில்லை. கையில் ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பிற்பாடு அவனுக்கு ‘சாந்தோம்’ நோக்கிச் செல்லும் கப்பலில் ஏற நேர்ந்தது.

                எல்லோரும் சாந்தோமில் இறக்கி விடப்பட்டனர். கட்டன்ஹா, கோப்பி மற்றும் கொக்கோ தோட்டமொன்றில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டான். அது மிகவும் கடினமானதொன்றாக இருந்தது. இரவில் திரும்ப முகாமுக்கு வருகையில் அவனுக்கு எவ்வளவு களைப்பாக இருப்பினும், அதையெல்லாம் மறந்து அவனது பிறந்த பூமியான டுங்கா பற்றி நினைத்துக் கொண்டிருப்பான். அவனது உடல் சாந்தோமில் இருந்த போதிலும், அவனது இதயமும், எண்ணங்களும் முழுமையாக அவனது மனைவியிடமும், மூன்று குழந்தைகளிடமுமே வசித்தன. அவன் தனிமையை உணர்ந்தான். எப்பொழுதாவது விடுதலை கிடைத்து திரும்பிச் செல்லும் இலக்கோடு அவன் தைரியமாக வேலை செய்தான். அவனது தைரியம் உறுதிப்பட்டுக் கொண்டு வந்ததோடு, அவன் ஐந்து வருடங்கள் சாந்தோமில் வேலை செய்திருந்தான்.

               ஐந்து வருடங்கள் மட்டுமே கழிந்து போயிருந்தன.  தனித்திருந்ததன் காரணத்தால் அவன் அந்த வருடங்களைப் பத்தாக உணர்ந்திருந்தான். இதற்கிடையில் அவனது மனைவி டொம்பூலா பற்றி எந்தத் தகவலையும் அவனால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் தனது குழந்தைகள் மூவருடனும் இன்னொருவனுடன் வாழத் தொடங்கியிருந்தாள்.

                டொம்பூலா மனம் கவரும் அழகுடன் கூடிய இளம் யுவதியாக இருந்தாள். செழிப்பாக வளர்ந்த மேனியைக் கொண்ட அவள் அப்பாவித் தோற்றமுடையவளாக இருந்தாள். அதனால் இம்மனிதன் அவள் பின்னால் சென்றது ஆச்சரியப்படத்தக்க விடயமொன்றல்ல. தனது மனதைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவள் ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்த போதிலும், பிறகு அவனது யோசனையை ஏற்றுக் கொண்டாள். அன்பானவனாக இருந்த அவன், அவளையும் மூன்று குழந்தைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்டான்.

                சாந்தோமில் கட்டன்ஹா ஆறு நாட்களும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் ஓய்வெடுத்தான். வீடு குறித்த வருத்தம் இருந்தபோதிலும் அவன் சுற்றுச் சூழலுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டான். கௌரவமான குடும்பமொன்றிலிருந்து வந்த அவனுக்கு அது இலகுவாகவும் இருந்தது.

                காலங்கள் கழிந்தன. வழமை போல ஓர் தினம், விடியலுக்கு முன்பு அவன் வரிசையில் இணைந்திருந்தான். கொக்கோ பழங்களைச் சேகரிக்கும் பை அவனது தோளைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்தது. கை விளக்கொன்றை வைத்திருந்த மேற்பார்வையாளர், தோட்டத்தில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர்களையும் முகாமையாளர் அழைத்துவரச் சொல்லியிருப்பதாக அறிவித்தார். எதிர்பார்த்திராத இந்த அழைப்பு குறித்து அம் மனிதர்கள் அச்சமுற்றனர். இதற்கு முன்பு நிகழ்ந்தது போல இதுவும் அவர்களுக்கு துயரம் விளைவிக்கும் நோக்கோடு அழைக்கப்படும் அழைப்பாக இருக்கக் கூடும்.

                முகாமையாளரின் அலுவலகத்துக்கு அருகில் வரும்போது மற்றத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் அங்கு கூடியிருப்பதை அவர்கள் கண்டனர். ஒருவருக்கொருவர் கதைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் அச்சத்தோடு அமைதியாக இருந்தனர்.

                அவர்கள் மீண்டும் வரிசையில் ஒன்று கூடினர். நீண்ட நேரத்துக்குப் பிறகு அலுவலகத்தின் கீழ் மாடி யன்னலில் முகாமையாளர் தோன்றினார். அவர் கண்களைக் கசக்கி முற்றத்தில் கூடியிருந்த மக்களைப் பார்த்து விட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றார்.

                அரை மணித்தியாலமளவில் கழிந்த பிறகு திரும்பவும் அவர் யன்னலின் முன்னால் தோன்றினார். அவரது மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிய மேற்பார்வையாளரும் அவரது அருகிலேயே நின்றார். மேற்பார்வையாளரின் கரங்களில் கடதாசித் தாள்களின் கட்டொன்று இருந்ததோடு, அவர் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார். அவரது பெயர் சொல்லி அழைக்கும் ஓசையோடு அங்கிருந்த அமைதி சிதறிப் போனது.

                டொங்குவா – இருக்கிறேன்
    மெகிண்டோ – இருக்கிறேன்
    நயீம் – இருக்கிறேன்
    உகம்பா – இருக்கிறேன்
    டுன்கோ – இருக்கிறேன்
    கொரன்கா – இருக்கிறேன்
    உலொம்பா – இருக்கிறேன்
    கலொன்கா – இருக்கிறேன்

              அநேகமாக நூறு பெயர்கள் தாண்டிய பின்பு கட்டன்ஹாவின் பெயரும் அழைக்கப்பட்டது. நீண்ட நேரமாக பெயர் கூப்பிட்டு முடிந்ததன் பிற்பாடு முகாமையாளர் உரையாற்றினார். அவர் ஒவ்வொரு வசனமாக தெளிவாக உச்சரித்து அறிவிப்பொன்றை நிகழ்த்தினார். வரிசையில் நின்றிருந்த மக்கள் தங்கள் கழுத்துக்களை நீட்டி முகாமையாளர் சொல்வதை மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளருக்கு செவிமடுத்தனர்.

                “இப்பொழுது உங்களால் அங்கோலாவுக்குத் திரும்பிச் செல்ல முடியும். நீங்கள் இங்கு இருக்க வேண்டிய காலம் நிறைவடைந்து விட்டது. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தொகை இப்பொழுது கிடைக்கும். அதன் பிறகு உங்களால் கப்பலேற முடியும். புரிந்ததா?”

               மேற்பார்வையாளரின் மொழிபெயர்ப்பு முடிவதற்கும் முன்பு, மக்களிடையே தவழ்ந்த அமைதி உடைந்து போயிற்று. அவர்களது உடனடி ஆரவாரத்தை, நீண்ட காலம் சிறையிலிருந்து விடுதலையாகும் ஒருவராலேயே புரிந்துகொள்ள முடியும். கட்டன்ஹாவின் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் நிலத்தோடு கலந்தது. இப்பொழுது அவர்கள் மீண்டும் பயணத்துக்குத் தயாராக வேண்டும். அவர்களுக்கு பணத்தின் ஒரு பகுதி கிடைத்ததோடு, நகரத்துக்குச் சென்று அப் பணத்தால் ஏதாவது விலைக்கு வாங்கிக் கொள்ளவும் முடியுமாக இருந்தது. மீண்டுமொரு முறை பெயர் கூப்பிடப்பட்டு, அவர்களுக்கு கடற்பிரயாண அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டது.

                பணமும், அனுமதிப் பத்திரமும் கிடைத்ததன் பிற்பாடு ‘லுஸிலா’ எனும் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. ‘லுஸிலா’ கப்பலானது நிறைய துறைமுகங்களில் பொருட்களை இறக்குவதற்காகவும், ஏற்றுவதற்காகவும் தரித்திருந்ததன் காரணத்தால், அதற்கு ‘லெபிடோ’ துறைமுகத்துக்கு வந்து சேர மூன்று வாரங்கள் பிடித்தது.

                கப்பலிலேறிய இருபத்தோராவது நாளின் மாலை ஆறு மணிக்கு ‘லுஸிலா’ கப்பலானது, அங்கோலாவுக்கு வந்து ‘லெபிடோ’ துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. அதன்பிறகு அம் மக்களுக்கு துறைமுகத்தின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சுங்கப் பரிசோதனைகளின் பிற்பாடு அவர்கள் வெளியே திறந்து விடப்பட்டார்கள்.

                கட்டன்ஹாவும் இன்னும் சிலரும் பேருந்தொன்றில் ‘பொகோய்’ நகருக்குச் சென்று, அவர்களது வருகை குறித்து அங்கிருந்த குடியுரிமை நிலையத்தில் தெரிவித்தார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கடைத் தெருவுக்குச் சென்றார்கள். அங்கு கட்டன்ஹாவுக்கு அவனது பழைய நண்பர்கள் சிலரையும், நெருங்கிய உறவினர்கள் சிலரையும் சந்திக்கக் கிடைத்தது. கட்டன்ஹாவின் பிறந்த ஊரான ‘டுங்கா’ கிராமத்திலிருந்து வியாபார நிமித்தம் பொகோய் நகரத்துக்கு வந்திருந்த கட்டன்ஹாவின் மிக நெருங்கிய உறவினரொருவனும் இவர்களிலொருவன்.

                வியப்போடு ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்ட கட்டன்ஹாவும், அவனது உறவினனும் கதைப்பதற்கு நிறைய விடயங்கள் இருந்தமையால் அருகிலிருந்த மதுபானச்சாலைக்குச் செல்லத் தீர்மானித்தனர். அங்கு அவர்கள் காலமானவர்கள் குறித்தும், காணாமல் போனவர்கள் குறித்தும் கதைத்ததோடு, இறுதியில் அவனது மனைவி குறித்தும் கதைத்தனர். நன்றாக மதுவெறியிலிருந்த கட்டன்ஹாவின் உறவினன் உளறத் தொடங்கினான்.

                “டொம்பூலா இப்பொழுது பெங்குலாவின் மனைவி. அவள் இப்பொழுது மூன்று பிள்ளைகளோடும் பெங்குலாவுடன்தான் இருக்கிறாள். அவர்களுக்கும் இப்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.”

       கட்டன்ஹாவின் முள்ளந்தண்டினூடு வேதனையொன்று பெருக்கெடுத்துச் சென்றது. மின்சாரம் தாக்கியது போல அவன் உணர்ந்தான். மது அருந்தியிருந்ததால் அவனால் கதைக்க முடியவில்லை. கட்டன்ஹா அதியுச்ச தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த அசுபத் தகவல் குறித்து கதைக்க முயற்சித்தான்.

                “அதற்குப் பரவாயில்லை. நான் இதனை மிக நல்ல முறையில் தீர்த்து வைக்கிறேன். எப்படியிருப்பினும் அவள் எனது பிள்ளைகளின் தாய் அல்லவா!”

               அவனது உறவினன் தனது முட்டாள்தனம் குறித்து கவலையுற்றதோடு அது பற்றித் தொடர்ந்தும் கதைப்பதைத் தவிர்க்க முயற்சித்தான். கட்டன்ஹாவின் பொறுப்புணர்வு அவனை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. டொம்பூலா, தான் முகம் கொடுக்க நேர்ந்திருக்கும் விதிக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தாள். அவள் தனது வாழ்வில் மிகத் துன்பகரமான நிலைமைக்கு முகம் கொடுத்திருந்தாள்.

                பெங்குலாவும் இந் நிலைமைக்கு முகம் கொடுக்கத் தயாராகவேயிருந்தான். குழாயை உறிஞ்சியபடியிருந்த அவனது மனதில் பல வித எண்ணங்கள் நிரம்பி வழிந்தன. கட்டன்ஹாவின் மீள்வருகை குறித்து அறியக் கிடைத்ததன் பிற்பாடு அவன் மோசமான செயல்களுக்குக் கூடத் தயாராக இருந்தான். கட்டன்ஹாவுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் அவன் தீர்மானித்திருந்தான்.

           தனக்கு தகவலைச் சொன்ன உறவினனுக்கு விடைகொடுத்த பிறகு, கட்டன்ஹா நடந்தே டுங்கா நோக்கி வந்தான். அவன் தனது குலத்தில் பெரியவரான ‘க்விடபோ’விடம் வரும்போது இருள் சூழ்ந்திருந்தது. நாய்கள் குரைக்க ஆரம்பித்ததோடு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஆண்பிள்ளைகள் இருவர் யாரென்று பார்க்க வெளியே வந்தனர். கட்டன்ஹாவை வரவேற்க பெரியவர்கள் முன்னே வந்தனர். அவர்கள் மிக மகிழ்வோடு கட்டன்ஹாவை வரவேற்றனர்.

             மறுநாட்காலையில் அதிகளவு மக்கள் அங்கு கூடினர். அபாயங்களுக்கு முகங்கொடுக்காமல் பத்திரமாகத் திரும்பி வர முடிந்ததையிட்டு அவர்கள் கட்டன்ஹாவை வாழ்த்தினர். சில தினங்கள் கட்டன்ஹாவுக்கு உறவினர்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் கிடைத்தன. அவனால் தனது வீட்டுக்குச் செல்வதை அதற்கு மேலும் தாமதப்படுத்த முடியவில்லை.

                அவன் பயணித்த ஒற்றையடிப் பாதையானது மேடுபள்ளங்களால் நிறைந்தது. மலையுச்சிக்குச் சென்ற பொழுது கீழுள்ள பிரதேசம் மிக அழகாகக் காட்சியளித்தது. எதுவும் மாறியிருக்கவில்லை. வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட அவன் வெட்டியிருந்த வாய்க்கால்கள் அப்படியே இருந்தன. அவன் தனது வீட்டுக்குச் செல்லும் பாதையில் திரும்பினான். உண்மையில் அங்கு வீடொன்று இருக்கவில்லை. அங்கிருந்தது, அவனது அழிவுற்ற பழைய வீட்டின் சேதாரங்கள் மட்டுமே. அவனது உடைமைகள் அனைத்தும் சேதமுற்றிருந்தன.

              வேலி உடைந்து வீழ்ந்திருந்தது. வாசலருகே இருந்த கற்தொடர்களைக் கொண்டுதான், வீடு இருந்த இடத்தை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. வீட்டின் கூரை, நிலத்தில் வீழ்ந்து கிடந்தது. அவன் தனது கரங்களால் நீண்ட காலத்துக்கு முன்பு கட்டிய வீடு, அழிவுற்ற சேதாரங்களின் குவியலாக இருந்தது. அவனது கண்களில் கண்ணீர் நிறைந்தது. முன்பிருந்தவாறே வீட்டைக் கட்டியெழுப்ப அவன் தீர்மானித்தான்.

                ஆனால் எல்லாவற்றும் முன்பு, அவன் டொம்பூலாவைக் காண வேண்டும். அவளும், அவளது பிள்ளைகளும் அவன் உயிர்வாழ்வதைக் காணும் மகிழ்வை அனுபவிக்க வேண்டும். அவர்கள் முன்பு போலவே மகிழ்வோடு இருக்க வேண்டும். அவனால் இன்னும் பார்த்திருக்க முடியாது. அவசரமான தீர்வொன்றை எடுக்க வேண்டும்.

                அவனது மனைவி சம்பந்தமாக எடுக்கக் கூடிய மிகச் சிறந்த தீர்வு குறித்து அவன் மிக ஆழமாகச் சிந்தித்தான். அவனுக்கு இப் பிரச்சினையை தனது மனைவியுடன் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள முடியுமெனினும், அவளது புதிய கணவனின் எதிர்வினை எவ்வாறானதாக இருக்கும்? இப் பிரச்சனையைச் சட்டத்தின் முன் வைக்குமிடத்து அங்கு எழும் தர்க்கங்களுக்கும், வேண்டுகோள்களுக்கும் முடிவற்றுப் போகும். உண்மையில் இரு சாராருக்கும் சாட்சிகள் இருக்கிறார்கள். எனினும் இறுதியில் ஒரு சாரார் தோற்றுப் போவர்.

                பைத்தியக்காரனொருவனைப் போலத் தனது மனைவியையும், பிள்ளைகளையும் கட்டன்ஹா நேசித்தான். அவர்கள் எப்பொழுதும் தனக்காகவே இருப்பார்களென அவன் நம்பினான். தான் வழக்கில் வெல்வதென்பது நிச்சயமென அவனுக்குத் தோன்றியது.

                அடுத்தநாள் காலை அவன் பணத்தையும் எடுத்துக் கொண்டு பொனோய் நகருக்குச் சென்று குடியுரிமை நிலையத்துக்குள் நுழைந்தான். அன்றைய தினமே மாலையில் அவன் நீதிமன்றத்தில் மொழிபெயர்த்துச் சொல்பவரைச் சந்தித்தான். கட்டன்ஹா, தான் வந்திருக்கும் காரணத்தை முழுமையாக அவரிடம் கூறினான். கட்டன்ஹாவுக்குத் தேவை, அவனது மனைவியையும் பிள்ளைகளையும் அவனிடமே பெற்றுக் கொள்வதுதான்.

                மறுநாட்காலை கட்டன்ஹா குடியுரிமை நிலையத்தின் வாயிலருகிலிருந்த வரிசையில் இணைந்து தனது முறை வரும்வரை காத்திருந்தான். மொழிபெயர்த்துச் சொல்பவருடன் கலந்துரையாடியதன் பிற்பாடு கட்டன்ஹாவின் வழக்கு முன்னிறுத்தப்பட்டது. பெங்குலாவுக்கும், டொம்பூலாவுக்கும் நீதவான் மூலம் அழைப்பாணைக் கடிதத்தை அனுப்புவதற்கு குடியுரிமை நிலைய அதிகாரி கட்டளையிட்டார்.

                அவர்களிடம் அழைப்பாணைக் கடிதத்தை கொண்டு சேர்ப்பதற்கு நீண்ட தூரம் செல்லவேண்டியிருந்ததால் அதற்காகவே ஒரு நாள் செலவழிந்தது. அழைப்பாணைக் கடிதமானது, பெங்குலா எதிர்பார்த்திருந்த ஒன்றே. என்ற போதிலும் அவன் இதற்குச் சற்றுப் பயந்தான். ஏனெனில் நீதி நிலைநாட்டப்படுவது மிகவும் அபூர்வமானது என்பதனால்தான். டொம்பூலா, பெங்குலாவின் எதிர்வினையை அறிந்துகொள்ள விரும்பினாள் எனினும் அவனிடம் செல்லும் வழிமுறை அவளுக்குத் தெரியவில்லை.

                அவர்கள் இருவருக்கும் பொனோய் நகருக்குச் செல்ல ஒரு தினம் எடுத்தது. முதலாவதாக அவர்கள் மொழிபெயர்ப்பாளரைச் சந்தித்து, வழக்கை விசாரிப்பதற்கான தினமொன்றைக் குறித்துக் கொண்டனர். குடியுரிமை நிலையத்தின் அதிகாரி விசாரிப்பதெல்லாம் அவசர வழக்குகளை மாத்திரமே. கிடைக்கும் முறைப்பாடுகளைப் பரிசீலிப்பதிலேயே அவரது காலம் கழிந்தது.

                பெங்குலாவும் டொம்பூலாவும் மூன்று நாட்கள் அங்கு இருந்ததோடு இறுதியில் அவர்களது வழக்கு விசாரிக்கப்பட்டது. முதலில் கட்டன்ஹாவும் அடுத்தது பெங்குலா, டொம்பூலா மற்றும் ஐந்து பிள்ளைகள் என முறைப்படி விசாரிக்கப்பட்டனர். முறைப்பாட்டையும் சித்தாஸியையும் வாசித்துப் பார்த்த நீதவான் எல்லோரையும் நோக்கினார்.

                ” இங்கு கட்டன்ஹா என்பது யார்?”

                ” நான்”

                “அவ்வாறெனில் உனது கதையைச் சொல்.”

                கட்டன்ஹா அவனது கதையை விவரித்தான். தான் சாந்தோமுக்கு அனுப்பப்பட்ட விதத்தையும், அங்கு ஐந்து வருடங்களைக் கழிக்க நேர்ந்த விதத்தையும் அவன் விவரித்தான். அவன் வீட்டைவிட்டு வெளியே இருந்த காலத்தில் வீட்டிலிருந்து எந்தத் தகவலும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் திரும்பவும் வந்தபோது அவனது மனைவி இன்னுமொருவனைத் திருமணம் செய்திருப்பதை அறியக் கிடைத்தது.

               நீதவான் அவனது உரையின் மொழிபெயர்ப்பைக் கேட்டுக் கொண்டிருந்தார். இது மற்ற வழக்குகளைப் போலவே அவருக்குச் சாதாரணமான ஒன்று. அவரது முப்பது வருட சேவை அனுபவத்தில் இவ்வாறான சம்பவங்கள் இத்தேச மக்களிடத்தில் சாதாரணம்.

              ” உனக்கு உனது முதல் மனைவி அவசியமாக இருப்பது ஏன்?” அவர் வினவினார்.

               “எனக்கு அவள் அவசியமானவள். அவளை எனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.” தயங்காது கட்டன்ஹா பதில் கூறினான். கட்டன்ஹாவின் பதிலிலிருந்து அவனுக்குள்ளிருந்த குருட்டுத்தனமான நம்பிக்கை தெளிவாக வெளிப்பட்டது.

      “எதிராளியிடமிருந்து நஷ்ட ஈடாக என்ன பெற்றுக்கொள்ள விரும்புகிறாய்?”

               “எனக்கு அவனிடமிருந்து எதுவுமே தேவையில்லை. நான் சாந்தோமிலிருந்த ஐந்து வருடங்களிலும் எனது குழந்தைகளை அவன் பராமரித்ததற்கு நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்” கட்டன்ஹா பதிலளித்தான்.

          எதிர்பாராத இப் பதிலால் எல்லோருமே ஆச்சரியத்துக்குள்ளானார்கள். ஒரு கணம் அமைதி நிலவியது. நீதவான் விழிகளைச் சுழற்றி ஆச்சரியத்தோடு பார்த்தார்.

                “டொம்பூலா நீயா?”

                “ஆமாம்”

                ” நீ என்ன சொல்ல விரும்புகிறாய்? இவர்களில் யாரை நீ கணவனாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாய்? கட்டன்ஹாவையா? மற்றவனையா?”

             “நான் முதல் கணவனைத் தேர்ந்தெடுக்கிறேன். அவர் எனது மூத்த குழந்தைகளின் தந்தை” டொம்பூலா தயங்காது பதிலளித்தாள்.

                அந்தக் கணத்திலேயே கட்டன்ஹாவின் பிள்ளைகள் மூவரும் தமது தந்தையின் பக்கம் சென்றனர்.

                “சரி. உனக்கு, உனது இரண்டாவது திருமணத்தின் மூலமும் இன்னும் குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா?” டொம்பூலாவின் எதிர்வினையைப் பார்த்தவாறு நீதவான் வினவினார்.

                “ஆமாம். இன்னும் இருவர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எனது மூத்த குழந்தைகளின் சகோதரர்கள்தானே”

                வழக்கு வேறோர் திசைக்கு திரும்புவதைப் போலத் தோன்றியது. இதனால் எதிராளியை அழைப்பதற்கு நீதவான் தீர்மானித்தார்.

               “இப்பொழுது உனது தீர்மானம் என்ன?”

            “நான் தீர்மானமொன்றை எடுப்பதில்லை. நான் இப் பெண்ணைத் திருமணம் முடித்தது அவள் தனியாக இருந்த காலத்திலேயே. இப்பொழுது அவளது சட்டபூர்வமான கணவன் வந்திருப்பதால் என்னால் எதுவும் சொல்ல இயலாது. உங்களது முடிவை வேண்டுகிறேன்.”

                குழம்பிப் போன நீதவான் மீண்டும் கட்டன்ஹாவை அழைத்தார்.

         “கட்டன்ஹா, இதற்குப் பிறகு எதிராளியின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது யார்?”

              “நான் அந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறேன். அப் பிள்ளைகள் எனது மனைவி பெற்ற பிள்ளைகள். ஆகவே அந்தப் பிள்ளைகளின் உரிமை எனக்குத்தான். அவனுக்கு எந்த நேரத்திலும் வந்து அப் பிள்ளைகளைப் பார்த்துச் செல்லலாம்.”

               நீதவான் தலையசைத்தார். அமைதி மீண்டும் அரசாண்டது. இப்பொழுது நீதவான் புத்திசாலித்தனமான, கருணை மிக்க  முடிவொன்றை எடுக்கவேண்டிய நிலையிலிருந்தார். அவர் சிறிது நேரம் சிந்தித்தார்.

              “சிலவேளை நீ இதன்பிறகு எதிராளியுடன் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வாயா?”

              “எதற்காக? எனது பிள்ளைகளை வளர்த்தெடுத்ததற்கு நான் அவனுக்குக் கடன்பட்டிருக்கிறேன். நான் அவனை எனது நண்பனொருவனாகத்தான் உபசரிப்பேன். அவனும் அப்படியே எண்ணுவானென நான் நினைக்கிறேன்.”

                “பெண்ணே, நீ பெங்குலாவிடம் பராமரிப்புப் பணம் ஏதாவது கேட்கவில்லையா?”

                “இல்லை. ஏனெனில் அவர் இன்றிலிருந்து எனது மூத்த பிள்ளைகளின் சகோதரர்களுடைய தந்தை.”

                “ம்ம்”

                எல்லோருக்குமே ஒற்றுமையாக வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்ததோடு எவரிடமிருந்தும் எந்தக் கட்டணமும் அறவிடப்படவுமில்லை.

    Share
  • கவிதை திறனாய்வு – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

    ரிஷான் ஷெரீஃபின் கவிதை 

    ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

     

         உங்கள் இதழில் ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்தின் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:

    கறுத்த கழுகின் இறகென இருள்

    சிறகை அகல விரித்திருக்குமிரவில்

    ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்

    ரட்சகனின் மந்திரங்கள் விசிறி

    கிராமத்தை உசுப்பும்

    சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்

    ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்

    குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்

    முன் தள்ளிய வேட்டைப் பற்கள்

    விடைத்து அகன்ற நாசியென

    நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு

    கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்

    சனம் விழித்திருக்கும் அவ்விரவில்

    பேரோலமெனப் பாயும்

    பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்

    ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப

    மாறி மாறியசையும் அக் காரிருளில்

    அவளது உடல்விட்டகழ மறுக்கும்

    யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்

    மந்திரவாதியின் கசையும்

    ஆட்டக்காரர்களின் பறையும்

    மட்டுப்படுத்தும்

    பேரிளம்கன்னியைப் பீடித்துள்ள பிசாசினை

    அன்றைய தினம்

    குறுத்தோலைப் பின்னல் அலங்காரங்களில்

    எரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்

    அடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்

    துரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு

    ஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்

    பீதியோடு உறங்கச் செல்லவிருப்பவர்களுக்கான

    துர்சொப்பனங்கள்

    அந்தகாரத்தினூடே

    அவர்களோடும் அவைகளோடும்

    சுவர்க்கத்துக்கோ அன்றி நரகத்துக்கோ

    இழுத்துச் செல்லும் தேவதூதர்கள்

    அவளது ஆன்மாவைக் காத்திருக்கிறார்கள்

    ***

         ஒரு பேரிளம் பெண் திருமண ஏக்கம், உடல் மற்றும் உணர்வுகளின் இயல்பான தாபம், அக்கம்பக்கம், உற்றார் உறவு, சாதி சனம் எல்லோரும் ஏச்சுப் பேச்சு இவற்றால் மன அழுத்தம் அதிகமாகி, ‘சாதாரண’மல்லாத நடவடிக்கைகளைச் செய்யும் போது அவளுக்கு முதலுதவியாக அமைய முடிவது ஆறுதலான ஒரு வார்த்தை. அடுத்ததாக அன்பும் அரவணைப்பும். அதன் பின்னரே தேவைப்பட்டால் மனநல மருத்துவ ஆலோசனை.

         ஆனால் நாம் அவளை என்ன செய்வோம்? அவளுக்குப் பேய் பிடித்து விட்டது என்று போன ஜென்மத்துத் துன்பத்துக்குப் பழி வாங்குகிறானோ இவன் என நாம் மலைக்குமளவு அடித்துக் கொடுமை செய்யும் ஒரு பேயோட்டியிடம் கொண்டு போய் விடுவோம். அவனது அடியில் அனேகமாக அவள் உயிர் நீப்பதே சகஜம். அதன் பின் அவள் சொர்க்கம் போனாலென்ன? நரகம் போனாலென்ன?

         ஒரு பெண் வறுமை, தோலின் நிறம், முகவாகு, உடல்வாகு என எந்தக் காரணத்தினாலும் திருமணம் அமையப் பெறாதவளாக சமூகத்தால் நிராகரிக்கப் படலாம். தனியாக வாழவும் ஒரு பெண்ணுக்கு அனுமதி இல்லை. எனவே அவளைத் திருமணத்திலிருந்து நிராகரித்த அதே சமூகத்தால் சொற்களால் சித்திரவதை செய்யப் படுவாள்.

         விதவையோ பேரிளம் பெண்ணோ அவர்களின் அவலம் நம்மை பாதிப்பதில்லை. அவர்களைப் பற்றிய பொறுப்புணர்வில்லாதோர் தமது மனசாட்சியின் உறுத்தலுக்கு ஆளாவதே இல்லை. அவளுக்கு இன்னும் குரூரமான ஒரு சித்திரவதை மூலம் நிரந்தர மன ஊனமோ அல்லது மரணமோ கூட நிகழ்த்தப்படுவதை நாம் சாட்சிகளாக நின்று பார்க்கிறோம். தேவதூதர்களும் அரூபமாய் அதையே செய்கிறார்கள்.

         பெண்ணின் வலியை ஆண் எழுத்தாளர்கள் ஆழ்ந்த பதிவாக்குவதில் அபூர்வமாகவே வெற்றி பெறுவார்கள். ரிஷானுக்கு அது சாத்தியமாகி இருக்கிறது.

         நவீனக் கவிதையில் ஒரு மந்திரமான பின்புலம் இயல்பாய் விரியும். அதில் நாம் நம்மையுமறியாமல் ஒன்றுமளவு அதன் காட்சிப்படுத்தும் புனைவின் வீச்சு தென்படும். கவிஞர் மறைந்திருக்க கவிதையின் கருவை நாம் மிக ஆழ்ந்தே உள் வாங்குவோம். கவிதையின் காலகட்டத்தைத் தாண்டி அது காட்சிப்படுத்தும் சூழலையும் தாண்டி அது மீறிச் செல்லும்.

         மனித தேவகணங்கள் யாருக்குமே பெண்ணில் வலி அன்னியமானது மற்றும் அலட்சியத்துக்குரியது என்னும் புள்ளியில் கவிதை ஒரு விடைதெரியாத கேள்வியை நமக்கு நினைவு படுத்துகிறது. மானுடத்தின் உள்ளார்ந்த குரூரம் பிரபஞ்சமெங்கும் விரவி நிற்கிறதோ? ஆழ்ந்த கவித்துவ தரிசனமும் கற்பனையும் கொண்ட கவிதையைத் தந்த ரிஷானுக்கு வாழ்த்துக்கள்.

    எழுத்தாளர் சத்யானந்தன்

    Share
  • ஆரம்பிக்கிறது சர்வதேச புத்தகக் கண்காட்சி. செல்ல நீங்கள் தயாரா?

    எம். ரிஷான் ஷெரீப் 

                “A reader lives a thousand lives before he dies, said Jojen. The man who never reads lives only one.”

    ― George R.R. Martin, A Dance with Dragons, Chapter 34

    5b8b4524

         இலங்கையின் இலக்கிய மாதமான செப்டம்பரின் ‘சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’ 16.09.2016 முதல் கொழும்பில், BMICH (Bandaranaike Memorial International Conference Hall – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்) இல் ஆரம்பமாகவிருக்கிறது. இக் கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடரவிருக்கிறது.

         இத் தினங்களில் தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதோடு, கண்காட்சியின் இறுதி நாளான 25 ஆம் திகதி, இரவு 12 மணி வரைக்கும் கடைகள் திறந்திருக்கும். இம் முறை 410 புத்தகக் காட்சியறைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் வாசகர்களுக்காக புத்தகங்களை வழங்க தயாராக உள்ளதோடு, அவற்றுள் 60 விற்பனை நிலையங்கள் வெளிநாட்டு பதிப்பகங்களுக்கானவை. அனுமதிக் கட்டணம் ஒருவருக்கு 20/= மாத்திரமே. அத்தோடு இங்கு விற்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 20% கழிவு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

         இலங்கையில் வருடம்தோறும் நடைபெறும் மிகப் பெரிய அளவிலான புத்தகக் கண்காட்சி இதுவாகும். ஆகவே தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இக் கண்காட்சியில் ஒன்று கூடுவர். எங்கும் சன நெரிசலும், புத்தகங்களுமே நிறைந்திருக்கும் இக் கண்காட்சியில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள சில வழிமுறைகளை அனுபவ ரீதியில் குறிப்பிட விரும்புகிறேன்.

    • நீங்கள் புத்தகக் கண்காட்சிக்கு செல்லத் தீர்மானித்ததன் பிறகு, வாங்க விரும்பும் புத்தகங்கள், நூலாசிரியர்கள், அவற்றின் பதிப்பகங்கள் குறித்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள். இதனால் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்ததன் பிறகு, வாங்க முடியாமல் போன அத்தியாவசியமான புத்தகங்கள் குறித்து வருந்த வேண்டி வராது. சன நெரிசலில் உங்கள் பட்டியலிலுள்ள புத்தகங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள உங்களால் முடியாவிட்டால் காட்சியறை உதவியாளரை தயங்காது நாடுங்கள். அவர் நிச்சயம் தேடித் தருவார் அல்லது அப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய காட்சியரங்குகளுக்குச் செல்ல உங்களுக்கு வழி காட்டுவார்.
    • புத்தகக் கண்காட்சியில் செலவழிக்கப் போகும் பணத்தின் அளவை ஏற்கெனவே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. புத்தகங்களை வாங்கும் ஆசையில், கையிலிருக்கும் கடைசித் தொகையையும் புத்தகங்களுக்காகச் செலவழித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பி வர வழிச் செலவுக்குக் கூடக் காசில்லாது  நடந்தே பயணிக்கும்  பலரையும் அங்கு பார்க்கலாம். அந்த நிலைக்கு நீங்களும் ஆளாகாதிருக்க, உங்களால் அங்கு புத்தகங்களுக்காக செலவழிக்க முடிந்த தொகை, உணவு, குடிபானங்கள் மற்றும் பிரயாணச் செலவுகளுக்காக ஒரு தொகை எனத் தனியாகப்  பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடித்ததன் பிறகு, உங்கள் வாழ்க்கை மீதமிருக்கப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வங்கிப் புத்தக மீதியை புத்தகங்களுக்காக மட்டுமே முழுவதுமாக செலவழித்து விடாதீர்கள்.
    • இந்தத் தடவை இக் கண்காட்சி தினங்களில், பௌர்ணமி தின விடுமுறையோடு சேர்த்து ஐந்து விடுமுறை தினங்களும் (16,17,18,24,25) , ஐந்து வேலை நாட்களும் (19,20,21,22,23) அடங்கியிருக்கின்றன.  கண்காட்சியின் ஆரம்ப தினத்திலும், வேலை நாட்களின் காலை நேரங்களிலும் கூட்டம் கணிசமான அளவில் குறைந்து காணப்படும். அதற்கு எதிர்மாறாக விடுமுறை நாட்களிலும், கண்காட்சியின் இறுதித் தினத்திலும் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படும். கடந்த புத்தகக் கண்காட்சிகளின் போது, கண்காட்சியின் இறுதித் தினத்தில், தமது புத்தகங்களை விற்றுத் தீர்ப்பதற்காக வேண்டி, பதிப்பகங்கள் அவற்றுக்கு பெரிய அளவில்  கழிவினைக் கொடுப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. எனவே நீங்கள் கண்காட்சிக்கு செல்லும் தினத்தை இவற்றைக் கவனத்தில் கொண்டு தீர்மானியுங்கள்.
    • புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி வரச் செல்லும் பயணம் என்பது வெறுமனே கை வீசிக் கொண்டு, காலாற நடந்து வரச் செல்லும் பயணமல்ல. இது மலையேறுவதற்கு ஒத்தது.  அதற்கிணையான ஏற்பாட்டோடு செல்லுங்கள். பாரமற்றதும், உங்களுக்கு நடமாட இலகுவானதுமான ஆடைகளையே அணிந்து செல்லுங்கள். ஆடை கசங்குவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையற்ற ஆடையாக அது இருக்கட்டும். புத்தகக் கண்காட்சியின் சன நெரிசலில், நின்று கொண்டும், அங்குமிங்கும் நுழைந்து நடந்து கொண்டும், சிறிய இடைவெளிகளில் மக்கள் கூட்டத்தில் சிக்குண்டு, வியர்வையில் குளித்து, புத்தகப் பாரங்களையும் சுமந்து கொண்டு மீண்டு வர வேண்டியிருக்கும். எனவே புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது அதற்கேற்ற ஆடைகளையும், பாதணிகளையும் அணிந்து வருவதோடு, வெளியரங்குக் கடைகளையும் பார்வையிட வேண்டியிருப்பதனால் குடை மற்றும் வெயில் கண்ணாடிகளையும் எடுத்துக் கொண்டு வர  மறக்க வேண்டாம்.
    • வாங்கும் புத்தகங்களைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு வர ஒரு பையை (Bag) எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம். காட்சியரங்குக் கடைகளில் சாதாரண பொலிதீன் பைகளிலும், காகித உறைகளிலுமே புத்தகங்களை இட்டுத் தருவார்கள்.  அவற்றை நீண்ட நேரம் கைகளில் சுமந்து செல்லும்போது விரல்களில் வலியெடுக்கும். அத்தோடு உறை கிழிந்தால் வாங்கிய புத்தகங்களெல்லாம் தரையில் விழுந்து வேலையைக் கூடுதலாக்கும். எனவே உங்கள் பட்டியலை வைத்து, வாங்கத் தீர்மானித்துள்ள  புத்தகங்களுக்கு ஏற்ற பையை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லுங்கள். அது முதுகில் சுமந்து செல்லக் கூடிய பையாக இருப்பின் இன்னும் இலகு. புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்க கைகள் எப்போதும் வெறுமனே இருக்கட்டும்.
    • காட்சியரங்கில் உணவு, குடிபானங்கள் விற்பனைக்கு இருக்கின்றன. ஆனால் அவற்றையே முழுவதுமாக நம்பிச் செல்லாதீர்கள். இருக்கும் சன நெரிசலில், அவற்றை வாங்கக் காத்திருப்பதில் நேரம் அதிகளவு விரயமாகும். எனவே தண்ணீர் மற்றும் சிற்றுண்டி வகைகளை கையோடு எடுத்துச் செல்வது நல்லது. அது ஆரோக்கியமானதும் கூட. அத்தோடு நீங்கள் மருந்துகளைப் பாவிப்பவராக இருந்தால் அன்றைய தினத்துக்கு அருந்தத் தேவையான மருந்துகளையும், தற்காலிக நிவாரணி மாத்திரைகளையும் எடுத்துச் செல்வது சிறந்தது.
    •  நீங்கள் பஸ்ஸிலோ, ரயிலிலோ கண்காட்சிக்கு வருபவராக இருப்பின், திரும்பிச் செல்லும்போது புத்தகப் பையை சுமந்து செல்ல ஏற்றதான, சன நெரிசலற்ற பஸ்ஸோ, ரயிலோ புறப்படும் நேரத்தை அறிந்து அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். சொந்த வாகனத்தில் வருபவர்களும் கூட வாகனத் தரிப்பிடத்துக்கு ஏற்ற இடங்களை நுழைவாயிலிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வதன் மூலம், வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் ஹெல்மட் தலைக்கவசங்களை சைக்கிளிலேயே விட்டுச் செல்ல வேண்டாம்.
    • புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது இன்னுமொருவருடன் சேர்ந்தோ, குழுவாகவோ செல்வதோ நல்லது. புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, புத்தகப் பாரங்களை சுமக்க ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளலாம்.  உங்களோடு கூட வரும் நபரும் / நபர்களும் புத்தக வாசிப்பை விரும்புபவர்களாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் சன நெரிசலில், காட்சியரங்குகளில் காத்திருக்க பொறுமையற்று, அங்கிருந்து அகன்று சென்று விட நச்சரித்துக் கொண்டேயிருப்பார்கள். அவ்வாறே கைக் குழந்தைகளை, சிறு பராயத்தினரை காட்சியறைகளினுள்ளே அழைத்துச் செல்ல வேண்டாம். அது உங்களுக்கும், ஏனையவர்களுக்கும் இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.
    • புத்தகக் கண்காட்சிக்காக BMICH க்கு வந்ததுமே அங்குமிங்குமாக அலைந்து திரிய முற்படாதீர்கள். நுழைவாயிலிலேயே காட்சியரங்கின் கடைகள் குறித்த தெளிவான விவரணப் படம் இலவசமாகத் தருவார்கள். அது மிகவும் பெறுமதியானது. அதனை வைத்து நீங்கள் செல்லப் போகும் கடைகளை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். காட்சியரங்கின் கடைகள் ஒரு ஒழுங்கிற்கமையவே அங்கு காணப்படும். கதை, கவிதை, இலக்கியப் பிரதிகளுக்கான காட்சியறைகள் ஒரு புறம், கல்வி சார்ந்த புத்தகங்களுக்கான காட்சியறைகள் ஒரு புறம், பிற நாட்டு பதிப்பகங்களுக்கான காட்சியறைகள் ஒரு புறம், பாடசாலை அப்பியாசப் புத்தகங்களும், பொருட்களும் விற்கும் கடைகள் ஒரு புறம் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். எனவே வழிகாட்டல் படத்தினைப் பார்த்து அதற்கேற்ப நீங்கள் செல்லப் போகும் கடைகளைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்லுங்கள். செல்லும் வழியில் கண்ட விஷேடமான அடையாளங்களை அவ் வழிகாட்டல் படத்திலேயே குறித்துக் கொள்ளுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே கடையைச் சுற்றுவதை விட்டும் உங்களைத் தவிர்க்கச் செய்யும்.
    • நீங்கள் வாங்குவதற்காகப் பட்டியலிட்டிருக்கும் புத்தகங்களை, அப் புத்தகங்களை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் காட்சியரங்குகளிலேயே வாங்குவது அதிகமான கழிவினைப் பெற்றுத் தந்து, உங்கள் செலவினைக் குறைக்கும். பிரசித்தமான, புகழ் பெற்ற பதிப்பகங்களின் காட்சியரங்குகளுக்கு மாத்திரமே செல்லாது, சிறிய காட்சியறைகளுக்கும் சென்று வாருங்கள். மிகப் பெறுமதியான புத்தகங்கள், குறைந்த விலையில் அங்கு கிடைக்கும். அவ்வாறே இங்குள்ள பழைய புத்தகங்களுக்கான காட்சியறைகளில்,  விலை மதிக்க முடியாத, அரிய புத்தகங்களை மிக மிகக் குறைந்த விலையில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
    • பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை பல பதிப்பகங்கள் இலவசமாகவும்,  மிக மிகக் குறைந்த விலையிலும் வழங்குகின்றன. அவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பாடசாலைகளின் ஆசிரியர்களோ, அதிபர்களோ தேவையான ஆவணங்கள், பட்டியல்களோடு சம்பந்தப்பட்ட பதிப்பகங்களை அணுகி அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
    •  மிக முக்கியமாக, நீங்கள் வாங்கும் புத்தகங்கள் குறித்து எப்போதும் ஞாபகத்திலேயே வைத்திருங்கள். ஒரு காட்சியறையிலிருந்து இன்னுமொரு காட்சியறைக்குச் செல்லும்போது, சில வேளைகளில் வாயிற்காவலரிடம் பொதிகளைக் கொடுத்து விட்டுச் செல்ல நேரும். திரும்பி வரும்போது அவற்றைப் பெற்றுக் கொள்ள மறக்காதீர்கள். அத்தோடு சன நெரிசலான இடமென்பதால் உங்கள் பணப் பை, சிறிய கைப்பைகள் கீழே விழுந்தாலும் இலகுவில் தேடிப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே அவற்றைக் குறித்தும் கவனமாக இருங்கள்.
    •  இந்த இறுதிக் குறிப்பை, புத்தகங்களை வாங்க வருவோரும், கண்காட்சியை வெறுமனே பார்க்க வருவோரும் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்கவும். காட்சியரங்கில் மூலைக்கு மூலை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நம்மவர்கள் பொதுவாக அவற்றைக் கவனத்தில் கொள்ளாத காரணத்தால், காட்சியரங்கின் நடைபாதைகள் தோறும் குப்பைகளை மிதித்தபடியே உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. உங்களது வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள், கரண்டிகள், தட்டுக்கள், மீதமான உணவுகள், ஏனைய குப்பைகள் போன்றவற்றை அவற்றுக்கேயுரிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட்டு விடுங்கள்.  அது அனைவருக்கும் உங்களால் ஆற்றப்படும் பேருதவியாக இருக்கும்.

         இப் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கச் செல்லவிருப்போருக்கு இக் குறிப்புக்கள் பயனுள்ளதாக அமையுமென நம்புகிறேன். உங்களுக்காக புத்தகங்களை வாங்கும்போது, வீட்டிலிருக்கும் உங்கள் குழந்தைகளையும், பரீட்சைகள் எழுதிவிட்டு பெறுபேறு வரும்வரையில் காத்திருக்கும் மாணவப் பருவத்தினரையும் நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்காகவும் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களது விஷேட தினங்களில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். சிறு வயதிலிருந்தேயான வாசிப்புப் பழக்கம் அவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுத்து சமூகத்துக்கு பயனுள்ளவர்களாக மாற்றித் தரும். நம் சமூகத்துக்கு அவ்வாறானவர்களே தேவைப்படுகிறார்கள் எப்போதும்.

    எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • தெருச் சருகுகள்

    – எம்.ரிஷான் ஷெரீப்

    பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள். காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும் முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது. மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது; பசித்தது. ஏஜண்ட்காரன் எதையாவது சாப்பிடக் கொண்டுவருவான் என்ற மெல்லிய நம்பிக்கை மனதுக்குள் ஓடியது. ஆனால் நிச்சயமில்லை. விகாரையைத் தரிசிக்க வரும் யாராவது புண்ணியவான்கள் அவள் மேலோ அந்தக் குழந்தையின் மீதோ ஏதேனும் பரிதாபப்பட்டு உணவாக எதுவும் போட்டுவிட்டுப் போனால்தான் உண்டு.

    விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணியில் சில்லறைகள், பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருக்கின்றனதான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஏதாவது வாங்கி வந்து உண்ணும் நப்பாசையும் உள்ளுக்குள் எழுந்தது; சாத்தியமில்லை. ஏஜண்ட்காரன் எங்கிருந்தாவது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனது பார்வையைத் தாண்டிப் போய் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு தைரியமில்லை. போன வாரம் இப்படித்தான். பணம் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறாளா எனக் குமாரியின் ஆடையை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீரு வீரென்று பிரம்பால் அடிவாங்குவதை விடவும் ‘பாருய்யா பாரு..எங்கேயும் எதுவும் மறைச்சு வைக்கல’ என்று கத்தி அவளே உடுப்பை அவிழ்த்துக் காண்பித்தாள். அன்று முழுக்க அவள் எதுவும் சாப்பிடவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.

    பிணத்தின் மீது இலையான்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. அது பிணம் என்பது இலையான்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. இலையான்களால் எப்படியும் ஒரு பிணத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இலையான்களால் மட்டுமல்ல. பிண வாடையை மோப்பம் பிடித்துத் தேடி வரும் நாய், பூனைகள் கூடப் பிணத்தை அடையாளம் கண்டு இழுத்துப் போக முயற்சிக்கும். அதனால்தான் புஷ்பமாலா பிணத்தைத் தனது மடியை விட்டு இறக்கவும் இல்லை. அங்கு இங்கென நகரவும் இல்லை. காசு போட்டுச் செல்லும் எவராலும் கூட அது பிணம்தான் என இன்னும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் சந்தேகப்படக் கூட இல்லை. வெறுமனே அசுத்தமான ஆடைகளைப் பார்த்துக் கொண்டு அசூசைப் பட்டுக்கொண்டு தூரத்திலிருந்து காசை விட்டெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். எவனாவது கண்டுபிடித்து விட்டால் அவளும் அவளது கூட்டமும் சிறையில் கம்பியெண்ண வேண்டியதுதான். அவள் இதற்கு முன்பும் சிறைக்குப் போயிருக்கிறாள். அப்பொழுது அவள் சிறுமி. கஞ்சா வைத்திருந்ததற்காக அவளது அப்பாவைக் கைது செய்து கொண்டு போயிருந்தார்கள். அம்மாவுடன் அவள் அப்பாவைப் பார்க்கப் போயிருக்கிறாள். பொலிஸார் அடித்து அப்பா செத்துப் போனதால் அப்பாவைப் பிணமாகத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். புஷ்பமாலாவுக்கு எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு அதுதான் பிரச்சினை. எதுவும் மறந்து தொலைய மாட்டேனென்கிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவிருக்கிறது. அவளும் பல விஷயங்களை மறந்துவிட தீராது முயற்சிக்கிறாள். ஒருபோதும் முடியவேயில்லை. முக்கியமாக மாதந்தோறும் அவளது வீட்டில் கிடக்கும் பிணங்கள். பல நாட்கள் இரவுகளில் அவள் தூங்காமல் விழித்திருந்திருக்கிறாள். என்னதான் அவர்களின் வாயில் அலறிவிடாமல் இருக்க பழந்துணியைத் திணித்து அடைத்திருந்த போதிலும் அவர்கள் வாய்க்குள்ளேயே கதறும் சப்தம் அவளது கனவில் கூடக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

    புஷ்பமாலா சலிக்காது இலையான்களை விரட்டிக் கொண்டிருந்தாள். யாராவது அவர்களைப் பார்த்துக் கொண்டு வருவதைக் கண்டால் குழந்தையைப் படுக்க வைத்திருந்த தொடையினை ஆட்டித் தாலாட்டுவது போல மெலிதாக வாய்க்குள் முணுமுணுத்தாள். பச்சை நிறப் பழைய சீலையொன்றால் சுற்றிப் பிணத்தை அவளிடம் கொடுத்திருந்தார்கள். பிணம் என்பதாலோ என்னவோ அது பெரிதாய்க் கனத்தது போல உணர்ந்தாள். முகத்தை மட்டும் திறந்து மற்ற எல்லாவற்றையும் முழுவதுமாகச் சுற்றி மறைத்திருந்தாள். ஏனைய நாட்களிலென்றால் அவளுக்குத் தரப்படும் குழந்தை அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறதா என அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். சாயத் தேனீர் வாங்கி போத்தலில் நிரப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று அந்தத் தொந்தரவு ஏதும் இல்லை. ஆனாலும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உணர்ந்தாள். இன்றைக்கு தன் மடியிலிருக்கும் குழந்தைப் பிணம் நாளைக்கு எங்கிருக்குமோ? பிண வாடையை அவள் லேசாக உணர்ந்தாள். அதை அவளால் மட்டுமே உணர முடிந்தது. விகாரை வளவுக்குள் பரவலாகப் புகைந்து கொண்டிருந்த சந்தனத்திரி வாடையும், புத்தருக்குப் படைக்கப்பட்ட பூக்களின் நறுமணமும், பக்தர்களிடமிருந்து எழுந்த வாசனையும் பிண வாடையை எப்படியும் மறைத்துவிடக் கூடும் என்பதால் அவள் சற்றுத் தைரியமாக இருந்தாள்.

    புஷ்பமாலா குழந்தையைப் பார்த்தாள். அதன் சிவப்பு நிறம் கறுப்பாக மாறிக் கொண்டு வருவதைக் கவனித்தாள். தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. எப்படியும் அழுகி விடும். விடிகாலையில் செத்துப் போயிருக்கிறது. இரண்டு நாட்களாக வயிற்றோட்டமும், வாந்தியும், காய்ச்சலுமென அவஸ்தைப்பட்டு இன்று அதிகாலையில் உயிரை விட்ட எட்டு மாதக் குழந்தை. வழமையாக ஏஜண்ட்காரன் வாடகைக்கு எடுத்துவரும் குழந்தைதான். இவளுடன் இதற்கு முன்பும் பிச்சைக்கென இதே குழந்தையைக் கொண்டு வந்து தந்திருக்கிறார்கள். குழந்தைக்கு ஒரு நாள் வாடகை ஆயிரம் ரூபாய். எப்படியும் அதற்கு மேலேயே அது உழைத்துக் கொடுக்கும். அதற்காக மழையும், வெயிலும் பாராமல், ஒழுங்காகப் பால் கொடுக்காமல் தெருவில் காலைத் தொடக்கம் இரவு வரை வைத்திருந்தால் குழந்தை உடம்பு என்னவாகும்? அதிலும் அதனை அடிக்கடி அழ வைக்க வேண்டுமென்பதற்காகத் தூங்க விடாமல், வயிறு நிறைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் தாங்கும் குழந்தை? ஆனாலும் அவளுக்குக் கிடைக்கும் ஊதியத்தை விடவும் அதிகமாக அந்தக் குழந்தையை வாங்கும்போதே அதன் தாய்க்காரிக்கு குழந்தையின் ஒரு நாள் வாடகையாக முழுமையாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் அதன் தாய்க்காரி சண்டைக்கு வந்துவிடுவாள் என்று தெரியும். காசைக் கண்ணில் காட்டாமல் குழந்தையைக் கொடுக்கவும் மறுத்துவிடுவாள்.

    இந்தக் காலத்தில் பிச்சையெடுக்கவெனக் குழந்தைக்கு எங்கு போவது? பிச்சைக்காரியின் கையில் குழந்தையொன்றைப் பார்த்தால்தான் பரிதாபப்பட்டு கொஞ்சம் அதிகமாகப் பிச்சை போடுவார்கள். பிச்சை போடுபவர்களின் மனிதாபிமானத்தின் அளவும், அப்போதைய கையிருப்பின் அளவும்தான் போடப்படும் பிச்சைத் தொகையைத் தீர்மானிக்கிறது என்பதைப் புஷ்பமாலா அறிவாள். ஒருவரைப் பார்த்தவுடனேயே அவள் அவர் குறித்து மதிப்பிட்டுவிடுவாள். இவரிடம் பிச்சை தேறுமா, எவ்வளவு தேறும் என்பதையெல்லாம் அவளது அனுபவ உள்ளுணர்வு சொல்லிவிடும். அது ஒருபோதும் பிழையாகிப் போனதில்லை. அவளது கையில் குழந்தையொன்றிருந்தால் அன்று எப்படியும் நிறையக் காசு தேறும். பிச்சை போடுபவர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அக் குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பரிதாபப்பட்டு எப்படியும் பிச்சை போட்டு விடுவார்கள்.

    வெள்ளை உடுத்திக் கொண்டு விகாரைக்கு வந்த பக்தர் கூட்டமொன்று அவளை நோக்கி வருவதைக் கண்டாள். குழந்தையின் தலை வைத்திருந்த தொடையை ஆட்டிக் கொண்டே தாலாட்டொன்றை முணுமுணுத்தபடி, வந்த கூட்டத்திடம் கையை நீட்டி இறைஞ்சினாள். வந்தவர்கள் ஒவ்வொருவராக பத்து ரூபாய் நோட்டுக்களை அவள் விரித்திருந்த துணியில் போட்டுவிட்டுச் சென்றார்கள். அவள், அவர்கள் போகும்வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படியும் இன்றைய வருமானம் ஐயாயிரத்தைத் தாண்டி விடும். காலையிலிருந்து எவ்வளவு பக்தர் கூட்டம்… எந்நாளும் இப்படியில்லை. வருடத்துக்குச் சில நாட்கள்தான். புத்தரின் பிறந்தநாள் வழிபாடுகளுக்காக அந்த விகாரை வருடந்தோறும் இந்த நாட்களில் எப்படியும் பக்தர்களால் நிறைந்துவிடும். வந்தவர்கள் தமது பாவங்களைக் கரைக்கவென்று உண்டியலிலும், பிச்சைக்காரர்களது தட்டுக்களிலும் காசுகளை இறைத்துக் கொண்டிருந்தார்கள். புஷ்பமாலா குழந்தையை அடுத்த தொடைக்கு மாற்றிக் கொண்டாள். எவ்வளவுதான் வெயிலடித்தபோதிலும், உஷ்ணமாக இருந்தபோதிலும் குழந்தை குளிர்ந்து விறைத்திருந்தது. வெள்ளைத் துணியில் சேர்ந்திருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து மடித்து, தான் உட்கார்ந்திருந்த துணியின் உள்மடிப்பில் செருகி வைத்தாள். விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணி நிறைய ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தால் எவரும் பிச்சை போட மாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

    அவளிருந்த சேரியில் அனேகருக்குப் பிச்சை எடுப்பது என்பது முக்கியமான ஒரு தொழில். ஊர் உலகத்தில் ஏதாவது பண்டிகை நெருங்கும்போது ஏஜண்ட்காரர்கள் அந்தச் சேரியைத்தான் தேடி வருவார்கள். அந்தச் சேரி ஏஜண்ட், ஆளுக்கு இவ்வளவுதான் என எவ்வளவு சொல்வானோ அதை எடுத்து வைத்துவிட்டு அந்த சேரி வயோதிபர்களையும், சிறுவர், சிறுமிகளையும் கூட்டிச் சென்றுவிடுவார்கள். வருபவர்கள் மத்தியில் பத்தொன்பது வயது புஷ்பமாலாவுக்கு எப்பொழுதும் கிராக்கி இருக்கும். கறுப்பு நிறமும், மூக்கு வரை பிளந்த மேலுதடும், வளைந்த ஒரு கையும் அவளுக்கான வாடகையை அதிகப்படுத்தியிருந்தது. சேரி ஏஜண்டிடம் அவளுக்கான வாடகையை மொத்தமாகக் கொடுத்துவிட்டு பண்டிகைக் காலங்களில் கண்டிக்கோ, அனுராதபுரத்துக்கோ, பொலன்னறுவைக்கோ அவளைக் கூட்டிக்கொண்டு செல்லும் ஏஜண்ட் அவளைத் திருப்பியனுப்பி வைக்கும்போது ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்து அனுப்புவான். ஒரு மாத காலத்துக்கும் மேலாக வெயிலிலும் மழையிலும் அவள் உழைத்ததற்கு அது மட்டும்தான் அவளிடம் எஞ்சும். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும்போது அவளது அம்மாவிடம் சேரி ஏஜண்ட் அவளுக்காகக் கொடுத்த காசு முழுவதுமாகத் தீர்ந்து போயிருக்கும். அம்மா, இவளிடமிருப்பதை நச்சரித்துக் கேட்டு வாங்கிக் கொள்வாள். ஆனாலும் அம்மாவை புஷ்பமாலாவுக்கு மிகவும் பிடிக்கும்.

    பெரிய பெரிய ஆட்களெல்லாம் அவளது அம்மாவைத் தேடி வருவார்கள். ஒருமுறை ஒரு பிரபல நடிகையொருத்தி கூட அம்மாவைத் தேடி வந்திருந்தாள். கவனக்குறைவால் மூன்று மாத காலத்துக்கும் மேலாக வளர்ந்திருந்த கர்ப்பத்தை அம்மாதான் கலைத்து விட்டாள். சேரிக்குள் எல்லோருக்கும் இது தெரியும். யாரும் காட்டிக் கொடுக்கவில்லை. பொதுவாக அப்படி யாரும் காட்டிக் கொடுப்பதில்லை. சேரிக்குள் எல்லோருமே ஏதோவொரு தப்பான செயலைத்தான் தமது ஜீவனோபாயமாகச் செய்துவருகிறார்கள். நெருக்கமான வீடுகள், குறைந்த வசதிகள், தீய பழக்கவழக்கங்கள் காரணமாக ஒருவருக்கொருவர் சண்டை பிடித்துக் கொள்வார்கள்தான். கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்வார்கள்தான். ஆனால் அதற்காகக் காட்டிக் கொடுக்க முடியுமா? அம்மாவுக்கு, புஷ்பமாலாவின் அக்காக்கள் இருவரும் இந்த வேலைகளில் உதவி செய்வார்கள். எப்படியும் மாதத்துக்கு நான்கைந்து பெண்கள் அம்மாவைத் தேடி வந்துவிடுவார்கள். ஆளைப் பார்த்து எடை போட்டு அதற்கேற்ப காசு வாங்கிவிடுவாள் அம்மா. கல்லூரி மாணவிகள் நிறையப் பேர் வருவார்கள். ஒரு தடவை பள்ளிக்கூட மாணவியொருத்தியும் வந்திருந்தாள். புஷ்பமாலா வயதுதான் இருக்கும். ஆளை, வயதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? வரும்வரைக்கும் இலாபம். எப்படியும் இந்த வருடத்துக்குள் மூத்த அக்காவின் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென அவளது அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

    அதிர்ஷ்ட லாபச் சீட்டுகள் விற்கும் சைமன் ஒரு நாள் அம்மாவிடமே நேரடியாக அக்காவைப் பெண் கேட்டிருக்கிறான். அம்மா, அக்காவிடம் அவளது விருப்பம் பற்றி எதுவும் கேட்கவில்லை. ‘இந்த வருடத்துக்குள் அவனுடன் உனக்குக் கல்யாணம்’ என உத்தரவாகச் சொல்லி விட்டிருந்தாள். சைமனின் அம்மா எப்பொழுதும் குடித்துக் கொண்டேயிருப்பாள். அவளுடன் எப்படியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருக்க முடியாது. அதனால் அக்காவுக்கென்று தனிக்குடிசையொன்று வாடகைக்கு எடுக்கவேண்டுமென அம்மா தேடிக் கொண்டிருந்தாள். அது இந்தச் சேரியைத் தாண்டி வேறெங்காவது இருந்தால் நல்லது என ஒருநாள் அவளது தலையில் பேன் பார்த்துக் கொண்டிருக்கையில் புஷ்பமாலா கூறினாள். அக்காவுக்குக் கோபம் வந்துவிட்டது. அதுதான் அக்கா. அவளுக்குத் திடீர் திடீரென கோபம் வரும். எதற்கென்றில்லை. அதனாலேயே ஒரு இடத்தில் வேலை பார்க்க முடியாது. முன்பு பங்களாக்களுக்கு வேலைக்குச் சென்றவளால் அங்கெல்லாம் ஒரு கிழமைக்குக் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்துவிட்டாள். அம்மா, அடி அடியென அப்படி அடிப்பாள். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாளேயொழிய கோபத்தைக் கட்டுப்படுத்த சிறிதும் முயற்சிக்க மாட்டாள். ‘எல்லோரும் சேர்ந்து என்னை இங்கிருந்து துரத்திடலாம்னு பார்க்குறீங்களா?’ என அக்கா கத்தினாள். சின்னக்கா ஓடி வந்து சமாதானப்படுத்தினாள்.

    புஷ்பமாலாவுக்கு மூத்தவளை விடவும் சின்னக்காவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அவள்தான் இவளுக்கு தலைக்கு ரிப்பன், முகத்துக்கு பவுடர் எல்லாம் வாங்கி வந்து கொடுப்பாள். புஷ்பமாலா எப்பொழுதும் தன்னுடன் வைத்திருக்கும் பச்சை நிறச் சீப்பு அவள் வாங்கிவந்து கொடுத்ததுதான். அவளுக்குத்தான் அந்த வீட்டில் முதன்முதல் கல்யாணம் ஆனது. கல்யாணம் என்பது விழா எடுத்துச் செய்வது என்றால் இது அப்படியில்லை. தனது பதினாறு வயதிலேயே பஸ் கண்டக்டராக வேலை பார்க்கும் ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாள். அவனும் இந்தச் சேரிக்குள்தான் இருந்தான். இரண்டு நாள் கழித்து இருவரும் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு சேரிக்கு வந்தார்கள். அம்மா விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு அவர்களை அடிக்க ஓடினாள். ‘எங்களை ஏதாவது செஞ்சே..நாங்க ஒன் தொழிலப் பத்தி பொலிஸ்ல சொல்லிடுவோம்’ என்று அவன் மிரட்டினதும் அடங்கினாள். அம்மா எதற்கும் பயப்படுபவளில்லை. ஆனாலும் இந்த வார்த்தைகளுக்கு அவள் பயந்துதான் போனாள். ‘எக்கேடு கெட்டும் போ’ எனக் கத்திவிட்டு வீட்டுக்கு வந்தவள் அன்றைய நாள் முழுக்க வாசலில் துப்பிக் கொண்டே இருந்தாள். அசிங்கமாகிக் கூழான குழந்தைகளின் இரத்தக் கட்டிகளைப் பார்த்துக் கூட அவளுக்கு இதுவரை அப்படியொரு அருவருப்பு தோன்றியதில்லை. புஷ்பமாலாவின் அப்பாவைப் புதைத்த அன்றுகூட அப்படித்தான். வந்திருந்த எல்லோரையும் தாண்டிப் போய் துப்பி விட்டு வந்து கொண்டிருந்தாள். ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை அவளுக்கு.

    புஷ்பமாலாவுக்கும் அப்பாவைப் பிடிக்காது. எப்பவுமே போதையிலிருப்பவனை எவருக்குத்தான் பிடிக்கும்? அவளது அப்பாவுக்கு நிரந்தரத் தொழிலில்லை. கஞ்சா கடத்துவான், தெருவோரத்திலிருக்கும் வாகனங்களின் பாகங்களைத் திருடி விற்பான், தப்பான தொழில் செய்யும் பெண்களுக்கு ஆள் பிடித்துக் கொடுத்து கமிஷன் வாங்குவான். புஷ்பமாலாவை பிச்சைக்கார ஏஜண்டுக்கு முதன்முதலில் விற்றதும் அவன்தான். அப்பொழுது அவளுக்கு நான்கு வயது கூட பூர்த்தியாகியிருக்கவில்லை. கூட்டிப் போனவன் காலை முதல் மாலை வரை பேருந்துகளில் ஏற்றிப் பிச்சை எடுக்க வைத்தான். ‘அம்மா, அப்பா யாருமில்லை. பசிக்குது’ என அழுது பிச்சையெடுக்கச் சொன்னான். அவளுக்குச் சும்மாவே அழுகை வந்தது. ‘அம்மா, அம்மா’ என அரற்றினாள். முதல் நாளே நூறு ரூபாய்க்கும் மேலான வருமானத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டாள். ஒரு ராசியான பிச்சைக்காரியாக அவள் ஆனது அன்றிலிருந்துதான்.

    செத்துப் போயிருந்த குழந்தையின் தாய் இவளை நம்பித்தான் குழந்தையைக் கொடுத்திருந்தாள். குழந்தையைக் கூட்டி வரவென விடிகாலையில் சக யாசகர்கள் எல்லோருடனும் வேனில் இவளும் போயிருந்தாள். யாரும் வேனை விட்டு இறங்கவில்லை. ஏஜண்ட் போய்ப் பார்த்துவிட்டு வந்து ‘அது செத்துப் போயிருக்கு’ என்றான். இவள் பதறிப்போய், வேனை விட்டு இறங்கிப் போய்ப் பார்த்தாள். நிலத்தில் கிடத்தப்பட்டிருந்த குழந்தைக்கருகில் சாய்ந்து படுத்திருந்த அதன் அம்மா இவளைக் கண்டதும் எழுந்து அழத் தொடங்கினாள். இவள் அருகில்போய் அந்த அம்மாவினது முதுகை தனது வளைந்த கையால் தடவிக் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்குத் தந்தை இல்லை. ‘வளர்ந்து பெரியவளாகி விட்டிருந்தாலும் அதன் அம்மாவைப் போல தப்பான தொழிலுக்குப் போயிருக்கும். அப்படிப் போகவில்லையாயினும் ஊரும் உலகமும் என்னவெல்லாம் பேசி அதன் மனதை நோகடிக்கும். நல்ல விதியைக் கொண்டு பிறந்திருக்கிறது அது. அதனால்தான் கொஞ்சநாளிலேயே மண்ணுக்குப் போகும் அதிர்ஷ்டம் அதற்கு வாய்த்திருக்கிறது’ என புஷ்பமாலா நினைத்துக் கொண்டாள். ஏஜண்ட்காரன்தான் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தான். வெசாக் நாளும் அதுவுமாக குழந்தை இல்லாமல் பிச்சையெடுக்கப் போனால் காசு அதிகமாகத் தேறாது எனப் பொருமினான். ‘ரெண்டாயிரம் தந்துட்டு வேணும்னா புள்ளயக் கொண்டுபோ..அந்திக்கு கொண்டு வந்து கொடுத்துடு. நாறிப் போறதுக்கு முன்ன புதைச்சிறணும்…புதைக்கிற செலவுக்குக் கூடப் பணமில்ல’ என்று குழந்தையின் அம்மா சொன்னதும்தான் அவன் முகத்தில் ஒரு சாந்தம் தோன்றியது. அவன் அதனை எதிர்பார்க்கவில்லை. அந்த யோசனை அவனுக்குக் கூட வரவில்லை. இரண்டாயிரம்தானே? தங்க முட்டையிடும் வாத்து. கொடுத்துவிட்டால் போச்சு. அடிக்கடி துணி மாற்ற வேண்டாம். தேனீர் வாங்கிக் கொடுக்க வேண்டாம். எந்தத் தொந்தரவும் இருக்காது. பொம்மையைத் தூக்கிக் கொண்டு போய் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பதுபோல கொடுத்து விடலாம். அதனை வைத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமாகவே உழைத்துவிடலாம். அழுது கொண்டிருப்பவளிடம் பேரம் கூடப் பேசவில்லை. பிணத்துக்கு மேலால் நிறைய வாசனைப் பவுடர் தூவிப் பழந்துணியால் நன்றாகச் சுற்றியெடுத்து புஷ்பமாலாவிடம் கொடுத்தான். அவள் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள். அந்தியானதும் குழந்தையைக் கொண்டு வந்து அதன் அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அதைப் புதைக்கும்வரை கூடவே இருக்கவேண்டும் என தீர்மானித்துக் கொண்டாள்.

    தூரத்தில் ஏஜண்ட்காரன் வருவது தெரிந்ததும் இன்னும் கடுமையாகப் பசித்தது. ஏஜண்ட்காரனைப் பார்த்ததுமே அவன் முகத்தில் இருக்கும் ஒரு அப்பாவித்தனம்தான் முதலில் தெரியும். ஆனால் பொல்லாதவன். முரடன். அப்படியிருக்காவிட்டால் அந்தப் பிச்சைக்காரர்களை கட்டிமேய்க்க முடியாதென்பதை அவன் அறிவான். ஆனாலும் புஷ்பமாலா மேல் அவனுக்கு தனிப்பட்ட பாசம் உண்டு. அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, கதிர்காமம், கெச்சிமலை என எல்லாப் புனித இடங்களுக்கும் அவனுடன் போயிருக்கிறாள். எல்லா இடங்களிலும் அவளைப் பரிவுடன்தான் கவனித்துக் கொண்டிருக்கிறான். ‘பன்சலை வாசல்ல தன்ஸல் கொடுக்குறாங்க… ஆளுக்கு ஒரு பார்சல் சோறுதான் கொடுப்பாங்களாம். வரிசையில நிக்கணும்..பிள்ளையத் தூக்கிட்டு வா’ என்றான். புஷ்பமாலா மடியில் கனத்த பிணத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டு மெதுவாக எழுந்தாள். தான் உட்கார்ந்திருந்த துணியை, காசு எதுவும் கீழே விழுந்து விடாமல் பத்திரமாகச் சுற்றியெடுத்துக் கொள்ளும்படிச் சொன்னாள். அவன் அதனைச் சுற்றியெடுத்து, தான் கொண்டு வந்திருந்த பைக்குள் போட்டுக் கொண்டு முன்னே நடந்தான். அவனைத் தொடர்ந்த புஷ்பமாலாவுக்கு அவன் அவளது கணவன் போலவும், அந்தப் பிணம் அவர்களது குழந்தை போலவும் தோன்றியது. அவள் அப் பிணத்தை நெஞ்சோடு அணைத்தபடித் தாலாட்டுப் பாடலை முணுமுணுத்தபடி நடந்தாள்.

     

     

     

    Share
  • பூனையாகிய நான்…

    கவிதை பற்றிய மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

         ஆதிமுதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

         பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக்குட்டியைப் போல
    அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் குறுக்குப் புத்தி’, ‘மாறிக் கொண்டேயிருக்கும் பூனைக் குணம்’ ‘பூனையைப் போல சோம்பேறி’, ‘பூனையைப் போல பாவனை’ போன்ற வசவு வார்த்தைகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

     பெண்கள் பூனைகளாகின்றனர்; பூனைகள் பெண்களாகின்றனர். ஆண்களின் சந்தர்ப்பங்களும், உணர்வுகளுமே அதையும் தீர்மானிக்கின்றன. கீழுள்ள கவிதையின் தலைப்பை ‘அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அக உணர்வு’ எனக் கருதினாலும், கவிதையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அவர்களுக்கும் எப்பொழுதும் பொருந்தக் கூடியன. இக் கவிதையை பெண்ணின் மனஉணர்விலிருந்து வாசித்துப் பார்க்கலாம். பெண்களை வெறுப்பவர்கள், தாம் இஷ்டப்பட்ட பிராணியைத் தலைப்பிலாக்கி, கவிதையோடு பொருத்தி வாசித்துக் கொள்ளலாம்.

    – எம்.ரிஷான் ஷெரீப்

    *****

     

    (சிங்கள மொழிக் கவிதை)

    பூனையாகிய நான்…

    – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி Thakshila Swarnamali 1தோன்றுமெனினும்
    உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது
    உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
    உங்களைப் போல என்னால் அழ இயலாது
    உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
    உங்களிடம் என்னால் அவற்றைக் கூறிவிட இயலவில்லை
    உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும்
    உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும்
    உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
    உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராகப் போராட இயலவில்லை

    உங்களைப் போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
    உங்களைப் போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
    உங்களைப் போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
    உங்களை விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்!

    ******

    கவிஞர் பற்றிய குறிப்பு

    தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

    சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதிவரும் பெண் கவிஞர். ஓர் ஆசிரியையாகக் கடமையாற்றிவரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், இரண்டு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என இதுவரையில் பத்துத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

     

    Share
  • வாசிப்பு – ஒரு கலை !

    எம்.ரிஷான் ஷெரீப்

    ‘வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்’ என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது ‘வாசிக்கும் கலை’ எனப்படுகிறது.

    வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

    S – Survey ( தேடிப் பார்த்தல்)

    Q – Question ( கேள்வி எழுப்புதல்)

    R – Read (வாசித்தல்)

    R – Retrive ( மீளவும் பார்த்தல்)

    R – Review (விமர்சித்தல்)

    இங்கு முதல் படிமுறை S – Survey ( தேடிப் பார்த்தல்) ஆகும். தேடிப்பார்ப்பதில் நூலின் பெயர், நூலாசிரியர், பிரசுரிக்கப்பட்டுள்ள ஆண்டு, முன்னுரை மற்றும் அறிமுகம், பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும். நூல் குறித்த கேள்விகளை எழுப்புவது இரண்டாவது படிமுறையாகும்.

    இந்த நூலை வாசிப்பதால் எனக்குப் பயனிருக்குமா?’

    இதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்னென்ன?’

    போன்ற கேள்விகளை எழுப்பி விடை கண்டுகொள்வது அவசியமாகும். அவ்வாறு விடைகளைக் கண்டுகொண்ட பிற்பாடு, அந் நூலை வாசிக்க ஆரம்பிப்பது மூன்றாவது படிமுறை. மிகுந்த அவதானத்தோடு புத்தகங்களை வாசிப்பது மிக முக்கியமானது. அவ்வாறு அவதானத்துடன் வாசிப்பதோடு, வாசித்த விடயங்களை மீளவும் மனதிற்குள் மீட்டிப் பார்ப்பது நான்காவது படிமுறை. இவ்வாறு செய்யும்போது நீங்களே அந் நூல் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். அடுத்ததாக இங்கு ஐந்தாவது படிமுறையானது, முழுமையாக நூலை வாசித்து முடித்த பிற்பாடு, அந் நூல் குறித்து விமர்சிப்பதாகும்.

    இந்த வழிமுறையில் புத்தகமொன்றை வாசித்து முடித்த பின்பு, உங்கள் அறிவு விருத்தியாகியிருப்பதோடு, மனதும் மகிழ்வுடன் இருக்கும். இதனால் வாசிக்கும் ஆர்வமும் அதிகரித்து, நேரமும் பயனுள்ள முறையில் கழியும்.

    மாணவர்கள் பரீட்சைகள் எழுதிவிட்டு, பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலகட்டமானது தரமான புத்தகங்களை  வாசிப்பதற்கென உகந்த காலம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களது நேரத்தைப் பயனுள்ளதாக்குவதோடு, நல்லதொரு வழிகாட்டியையும் அவர்களுடனேயே இருக்க வைப்பது போலாகும்.

    சிந்திப்போம் !

    Share
  • தமிழ்க்குடில் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி

    unnamed

    போட்டி எண் 1 – திரு. காமராசர் அவர்களின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி

    தலைப்பு : ‘இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்’

    விதிமுறைகள்:

    போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.(பள்ளி மாணவர்கள் தவிர)
    குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
    படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும்.
    உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில், இன்றைய கல்விச்சூழலை அவர் எப்படி கையாண்டு இருப்பார் என கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
    படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படவேண்டும் குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
    படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

    பரிசு விவரம்:

    முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    *******
    போட்டி எண் : 2 – தமிழ்க்கடல் திரு. மறைமலை அடிகளாரின் 140 வது பிறந்தநாளை (15 ஜூலை) முன்னிட்டு கவிதைப்போட்டி

    தலைப்பு : பொதுவான தலைப்பு இல்லை – விருப்பமான, பொருத்தமான தலைப்பில்…

    விதிமுறைகள் :
    போட்டியில் பங்குகொள்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதையைத் தங்கள் சொந்தக்குரலில் ஒலிப்பதிவு செய்து (MP3 Format ) தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

    ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த சுய விவரமும் கொடுக்காமல் கவிதையின் தலைப்பு, கவிதை, கவிதைக்கான களம், கவிதையின் சூழல் மற்றும் கவிதை என்ன சொல்கிறது என்பதையும் குறிப்பிடவும்.

    மின்னஞ்சலில் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி இவற்றோடு தாங்கள் பதிவு செய்த கவிதையினை தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டுகிறோம்.

    பரிசு விவரம்:

    முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசு: வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னமும், சான்றிதழும் வழங்கப்படும்.

    மூன்றாவது பரிசு : நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

    அனுப்பவேண்டிய மின்னஞ்சல் – tamilkkudil@gmail.com

    அனுப்பவேண்டிய கடைசி நாள் கட்டுரைக்கு…. 15.08.16கவிதைக்கு……10.08.16

    தொடர்ந்து தமிழ் தொடர்பான போட்டிகளை அறிவித்து அதை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்க்குடில் அறக்கடளையின் இந்தப் போட்டிகளும் சிறப்புற அனைவரும் கலந்து கொள்ளுங்கள். தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் எழுதச் சொல்லுங்கள்.

    Share
  • போராட்டத்தின் முற்றுப்புள்ளி?

    எம்.ரிஷான் ஷெரீப்

    irome_sharmila

                ‘நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது; நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும் இல்லை. 

         இப்போது நான் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். ஒரு மனித உயிர் வாழும்போது அவனோ அவளோ பல தவறுகளைச் செய்யலாம். நம் பெற்றோர் நமக்குப் பிறப்பளித்தாலும் அவர்கள் குணங்கள் எல்லாம் நமக்குண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனது தாய் தந்தையிடம் வேண்டாத குணங்கள் உண்டு. அவர்கள் என்னை வளர்த்த போது அவர்கள் சரி என்று கருதிய முறையில் வளர்த்தார்கள். ஆனால் நான் வளர்ந்து பெரியவளாகி எது சரி, எது தவறு என்பதை உணர்ந்தபோது, அவர்கள் செய்ததில் எது சரி, எது தவறு என்பது எனக்குத் தெரிந்தது. அவற்றைத் திருத்தும் ஆசை ஏற்பட்டது. அதுபோலவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.’

                சம கால வீர மங்கையான மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் மேற்படி கருத்து சாவை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு பதிலாக அமைந்தது. வீர மங்கை. மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர் என அறியப்பட்டுள்ள அவர், மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்தவர்.

         அயல் தேசத்தவர்களின் சட்ட விரோதமான ஊடுருவலைத் தடுப்பதற்காக, 1958 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முற்றுமுழுதாக ஆயுத மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச் சட்டம் வழங்குவதால் இராணுவம் மிக மோசமான வன்முறைகளை அம் மாநில பொதுமக்கள் மீது பிரயோகிக்க ஆரம்பித்தது. அம் மாநிலங்களில் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள்  எழுந்து கொண்டேயிருந்தன.

         இந்த நிலையில் ‘மலோம் படுகொலை’ என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படும், மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ஆயுதப் படையினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பொதுமக்களில் பத்துப் பேர் சுடப்பட்டு இறந்த சம்பவம், 2000.11.02 அன்று நிகழ்ந்தது.

         அந்தப் பிரதேசத்தின் கால்நடை சேவகரொருவரின் மகளான இரோம் ஷர்மிளா, மணிப்பூரின் வரலாற்றில் இருண்ட தினமாகப் பதியப்பட்டிருக்கும் அன்று முதல்,  தனது இருபத்தெட்டாம் வயதில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். போராளி என சந்தேகத்திற்கிடமாகக் கைது செய்யப்படும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை, (1958-AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாக அமைந்தது.

    rea_arrested

         உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள்ளாக, தற்கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையால்  அவர் கைது செய்யப்பட்டார். தற்கொலை முயற்சிக்கு, இந்திய சட்டத்தின் பிரகாரம் ஒரு வருடமே சிறைத்தண்டனை வழங்க இயலும் என்பதால், நீதித்துறை காவலில் இருந்தவரை, ஒரு வருடத்திலேயே விடுவித்து, பின்னர் பல்வேறுபட்ட வழக்குகளில் மீண்டும் கைது செய்தது. இவ்வாறு திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருந்தது. இடையில், சிறையில் வைத்து காவல்துறையினர் ஷர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு புகட்ட முனைந்ததும், மூக்கு வழியாக ஆகாரம் செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

                நிலைமை இவ்வாறிருக்கையில், தனது பதினாறு வருட கால உண்ணாவிரதப் போராட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 09 ஆம் திகதியன்று முடித்துக் கொள்ளப் போவதாக திடீரென்று நேற்று அறிவித்திருக்கிறார் இரோம் ஷர்மிளா. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் மணிப்பூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனத் தெரிய வருகிறது.

                ‘எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. எனவே அரசியலில் இணைந்து அதன் மூலமாக எனது போராட்டத்தை தொடருவேன்.’ எனக் குறிப்பிட்டிருக்கும் வீர மங்கையின் இத்திடீர் முடிவு அவரது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கு ஆனந்தத்தையும், அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.

         இன்றும் கூட அந்த மாநிலங்களில் இந்திய இராணுவத்தால் மிக மோசமான வன்முறைகள் தினந்தோறும் பொதுமக்கள் மீது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசின் மீதுள்ள அச்சம் காரணமாக ஊடகங்கள் இவ் வன்முறைகளை வெளிக்கொண்டு வருவதில்லை.

         உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். பதினாறு வருடங்களாக அவரது போராட்டத்துக்கு செவி சாய்க்காத அரசு, இனியும் செவி சாய்க்கும் என்ற நம்பிக்கை துளியுமில்லை. பதினாறு வருடங்கள் உண்ணாமல், குடிக்காமல் ஒரு பெண்ணால் மன உறுதியுடன் போராட முடியுமானால், அதே மன உறுதியுடன் அரசியலிலும் நுழைந்து, நிச்சயமாக தனது மக்களின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைந்து அவ் வீர மங்கை போராடலாம். அது மிகவும் மகோன்னதமான வெற்றியையே தரும்.

         பெண்களை பலவீனமான ஆத்மாக்கள் எனச் சொல்லிப் புறந்தள்ளி வைக்கிறோம். ஆனால், ஏழு மாநிலங்களின் அதிகாரச் சூழ்நிலையை, அதன் அவல நிலையை, அங்கு மக்கள் அனுபவிக்கும் துயரங்களை சர்வதேசத்தின் முன்னால் எடுத்துச் செல்ல, அதற்காக உயிரைக் கொடுக்கத் துணிந்து போராட ஒரு பெண்ணால் முடிந்திருக்கிறது. பதினாறு வருடங்கள் இடைவிடாப் போராட்டம். இடைக்கிடையே அந்தகாரச் சிறை வாசம்.

    இறுதியாக இக் கணத்தில் எழுத்தாளர் அம்பை மொழிபெயர்த்த இரோம் ஷர்மிளாவின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.

    சிறை உலகை

    என்னால் மறக்க முடியவில்லை

    பறவைகள் சிறகடிக்கும்போது
    விழிகளில் நீர் பொங்கும்
    நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு
    என்னும் கேள்வி எழும்
    பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை
    எனக் கூவத் தோன்றும்

    என்னைப் போன்றவர்கள்
    கண்ணில்படாமல் மறைந்துவிடு ஓ சிறையே!

    உன் வலிமையான சங்கிலிகளின் கொடுமையில்
    வாழ்க்கைகள் சிதறுண்டன
    உன்னால்தான் கடவுளுக்குச் சாபம்
    உன்னால்தான் அதிகாரத்தை
    நாங்கள் வெறுக்கிறோம்.

    எம்.ரிஷான் ஷெரீப்

    27.07.2016

    mrishanshareef@gmail.com

    Share
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

    எம்.ரிஷான் ஷெரீப் 

    கறுத்த கழுகின் இறகென இருள்
    சிறகை அகல விரித்திருக்குமிரவில்
    ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்
    ரட்சகனின் மந்திரங்கள் விசிறி
    கிராமத்தை உசுப்பும்

    சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
    ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்
    குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
    முன் தள்ளிய வேட்டைப் பற்கள்
    விடைத்து அகன்ற நாசியென
    நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு
    கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்
    சனம் விழித்திருக்கும் அவ்விரவில்
    பேரோலமெனப் பாயும்

    பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்
    ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப
    மாறி மாறியசையும் அக் காரிருளில்
    அவளது உடல்விட்டகழ மறுக்கும்
    யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்
    மந்திரவாதியின் கசையும்
    ஆட்டக்காரர்களின் பறையும்
    மட்டுப்படுத்தும்

    பேரிளம்கன்னியைப் பீடித்துள்ள பிசாசினை
    அன்றைய தினம்
    குறுத்தோலைப் பின்னல் அலங்காரங்களில்
    எரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்
    அடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்
    துரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு
    ஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்
    பீதியோடு உறங்கச் செல்லவிருப்பவர்களுக்கான
    துர்சொப்பனங்கள்

    அந்தகாரத்தினூடே
    அவர்களோடும் அவைகளோடும்
    சுவர்க்கத்துக்கோ அன்றி நரகத்துக்கோ
    இழுத்துச் செல்லும் தேவதூதர்கள்
    அவளது ஆன்மாவைக் காத்திருக்கிறார்கள்

    – எம்.ரிஷான் ஷெரீப்
    mrishanshareef@gmail.com

    Share
  • வேட்டை

    பெஸீ ஹெட் (தென்னாபிரிக்க நாட்டுச் சிறுகதை)

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

                ஜூலை மாதம் வேட்டைக்குரிய மாதம். பல காரணங்களுக்காக அக் காலநிலை வேட்டைக்கேற்ற பல அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. ஜூன் மாத அறுவடைக் காலமானது அத் தறுவாயில் முடிந்திருக்கும் என்பதால் எல்லோரிடமுமே சோளம் இருக்கும். அச் சோளத்தோடு கலந்து சுவையான உணவாகக் கொள்ள ஏதேனும் தேவைப்படும். சாதாரணமாக இக் காலத்தில், அவ் வருடத்திற்கான மழை வீழ்ச்சி பெய்யுமெனில் கொடிய மிருகங்களைக் காணக் கிடைக்கும்.

    பன்னிரண்டு மாதங்களிலும் மிக அதிகளவில் குளிரான மாதம் ஜூலை மாதம் என்பதனால் இறைச்சியைக் காய வைக்கையில் ஏனைய மாதங்களில் போல கெட்டுப் போகவோ புளுத்துப் போகவோ மாட்டாது. எனவே ஜூலை மாதத்தில் அனேக ஆண்கள் ஊரை விட்டுக் கிளம்பி விடுவார்கள். சிலர் வாரக் கணக்கிலும், சிலர் ஒரு மாதம் தாண்டியும் கூட ஊரைத் தாண்டி வெளியே இருப்பர். அவர்கள் அடர்ந்த வனாந்தரத்துக்குச் சென்று மிகக் கடினமாக வாழ்க்கையைக் கழிப்பர். மரங்களிலிருந்து கிளைகளை வெட்டியெடுத்து முக்கோண வடிவத்தில் நட்டு அதன் மேல் புற்களை கூரையாகப் பரப்பி கூடாரங்களையோ குடிசைகளையோ உருவாக்கிக் கொள்வர். இரவு நேரங்களில் ஓய்வெடுக்கவும் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதற்குள் புகுந்துகொள்வர். சிங்கங்கள் நடமாடும் பகுதியொன்றுக்கு அவர்கள் வேட்டைக்காக வந்திருப்பின் சிங்கங்களை அச்சுருத்துவதற்காக தமது குடிசைக்கருகில் தீ மூட்டி விசாலமானதாக எரிய விட்டிருப்பர்.

    அவர்களிடம் தமக்குச் சொந்தமான ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதனைக் கொண்டு அவர்கள் ஆபிரிக்காவில் வசிக்கும் மான், மரை போன்ற விலங்குகளை வேட்டையாடி தமது குடும்பத்துக்கு மூன்று, நான்கு மாத காலங்களுக்குத் தேவையான இறைச்சியை சேகரித்துக் கொள்வர். பொதுவாக வேட்டைக் குழுவொன்று நான்கைந்து பேரைக் கொண்டதாக இருக்கும். இயன்றவரையில் சிறிய குழுக்களாக இருக்கவே அவர்கள் முயற்சிப்பர். மிருகங்கள் மனித வாடையை உணர்ந்தால் அவை தப்பிச் சென்று விடுமென அவர்கள் கதைத்துக் கொண்டனர்.

                ராபுலா, டெபோகோ, லெசீட் மற்றும் கெலீபோன் ஆகிய நால்வரும் தோலோ என்பவனின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். டிரக்டர் வண்டியொன்றும் அதனுடன் பொருத்தக் கூடிய ட்ரேலர் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கும் ஒருவன் அக் கிராமத்தில் தோலோ மட்டுமே. எனவே அவனுடன் வேட்டைக்குச் செல்ல எல்லோருமே ஆர்வம் காட்டினர். தோலோவின் டிரக்டர் வண்டியில் சென்றால் தேவையான அளவு இறைச்சியோடு இரண்டே நாட்களில் வீடு திரும்ப முடியும். அவற்றைத் தமது வீட்டு முற்றத்திலேயே காய வைக்கும் நடவடிக்கைகளில் ஓய்வு நேரங்களில் ஈடுபடலாம். அவர்களது மனைவிமார் அந்த இறைச்சியை சமைத்தெடுப்பர் என்பதனால் எதுவுமே வீணாகப் போய்விடாது.

                இறுதியில் ராபுலாவாலும் டெபோகாவாலும் பொறுத்திருக்க முடியாமல் போயிற்று. அவர்கள் தோலோவின் முற்றத்துக்கு வந்தனர். தோலோ தனது டிரக்டரைத் திருத்தி, சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். சோள அறுவடையை அந்த டிரக்டரில் ஏற்றிக் கொண்டு அப்பொழுதுதான் வந்திருந்தான்.

                “நாங்க எப்ப போகலாம் தோலோ?” ராபுலா கேட்டான்.

                தோலோ தனது வேலையைத் தொடர்ந்தவாறே அமைதியாக தலையை உயர்த்திப் பார்த்தான். அவன் அவர்களுடன் தனது விழிகளால் மட்டுமே புன்னகைத்தான். அவன் உயர்ந்து மெலிந்த உடலுடையவன்.

                “இந்தத் தடவை என்னோட வருவியா?”

                அவர்கள் நட்பாகப் புன்னகைத்து சாதாரணமாகக் கேட்டார்கள்.

                “லெஸீட்டும் கெலீபோனும் கூட நம்மோட வருவாங்க.” ராபுலா கூறினான்.

                தோலோ பூரண சம்மதத்துடன் தலையை அசைத்தான். ஒவ்வொரு முறையும் தன்னுடன் வரப் போவது யாரென்பது குறித்து தோலோ மிகவும் கவனமாக இருந்தான். டிரக்டரில் சென்று விலங்குகளை வேட்டையாடும் அதிர்ஷ்டம் தனது கிராமவாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

                “நாளை விடிகாலையிலேயே எழும்பி காட்டுக்குப் போவோம்.” எனச் சொன்ன தோலோ தான் செய்து கொண்டிருந்த வேலையின் பக்கம் திரும்பினான். அது அவனது இயல்பு. வீண் அரட்டையடிப்பதோ ஊர் வம்பு கதைப்பதோ இல்லை.

                இருவர் இருவராக திரும்பிச் செல்லத் திரும்பினர். தோலோவுக்குக் கேட்காத தொலைவுக்குச் சென்ற பிற்பாடும் குள்ளமாகவும் மிரட்டும்விதமாகவும் இருந்த ராபுலா தனக்குள் எழுந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டிருந்தான்.

                “என்னால தோலோவை புரிஞ்சுக்கவே முடியல.” என அவன் சொன்னான்.

                “இவன் ஒரு பொம்பளையான்னு எனக்குத் தெரியல.” என கெலீபோன், தோலோவின் நற்குணத்தையும் நட்பாகப் பழகுவதையும் கிண்டலடித்தான். அவன் தலைவனைப் போன்ற ஒருவன். எனினும் நாம் கழிப்பதைப் போன்ற ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ்கிறான்.

                “தோலோ பற்றி கெலீபோன் சொன்னது நிஜம்தான்.” டெபோகோ கூறினான்.

                “இந்த மாதிரியான மனுஷன்கிட்டத்தான் உண்மையான சக்தியொண்ணு இருக்கும்..இப்படியொரு நல்ல மனுஷன் நம்ம கூட இருக்குறது எங்க அதிர்ஷ்டம்னு முன்னாடி ஒரு நாள் அவன் சொல்லியிருக்கான்.”

                தோலோ குறித்து எல்லோருமே அவன் ஒரு நல்ல மனிதனென்றே அறிந்திருந்தனர். அவனிடம் ஏதேனும் உதவி கேட்டுச் செல்லும்போது அவன் ஒருபோதும் அந்த வேண்டுகோளை நிராகரித்ததில்லை. அவனிடமிருக்கும் அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூட அவன் விருப்பத்துடனிருந்தான். எனினும் வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களிலிருந்தும் தப்பித்துச் செல்லும் பழக்கமொன்றும் அவனுக்குள்ளே இருப்பது தெரிந்தது. மனித வாழ்க்கையில் ஒழுங்குமுறையும் நன்மை மாத்திரமும் இருக்காது. எனினும் சுய கட்டுப்பாட்டுடன் வாழும் ஒழுங்குமுறையானது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டும். அவன் தனது மனைவி மற்றும் தனது வேலைகள் குறித்து ஆழமாகச் சிந்தித்தே செயலாற்றினான்.

                அவன் தனது மனைவியான தாட்டோவை மிகவும் கவனமாகவே தேர்ந்தெடுத்திருந்தான். நாகரிகத் தோற்றத்துடன் அவள் அமைதியானவளாகவும் குழப்பமடையாதவளாகவும் இருந்தாள். இந்தக் கணவனுக்கும் மனைவிக்குமிடையே இருந்த அன்னியோன்யத்தை எல்லாப் பெண்களுமே அறிந்திருந்தனர். தேவைக்கென கேட்டு வந்திருக்கும் எவர்க்கும் தன்னிடமிருக்கும் அனைத்தையுமே வழங்குவது தாட்டோவின் பழக்கம்.

    தோலோ அவளை மணமுடித்துக் கூட்டி வருகையில், அவளைக் கைவிட்டுச் சென்ற அவளது முந்தைய கணவனுக்குப் பிறந்த மகளொருத்தியும் இருந்தாள். இக் காலத்தில் இது ஒரு சாதாரணமான விடயம். திருமணத்துக்கு முன்பே எவருடனாவது உறவைக் கொண்டு செல்வது அவசியம் என்றே இன்று அனேகர் எண்ணுகின்றனர். இதனால் இலவசமாகவே இந்த உறவைக் கொண்டு செல்ல முடிகிறது. அவர்களுக்கு பெண்கள் மேல் எவ்விதமான விஷேட ஈர்ப்பும் இல்லாததோடு உண்மையிலேயே பெண்களை மதிக்கவும் மாட்டார்கள். தம்மால் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளால் அப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெண் என்றால் பண்பற்ற, கசப்பான, எந்தப் பெறுமதியும் அற்றவள். அவளுக்கும் அன்பு செலுத்த வேண்டும் என அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

                தோலோவுடன் தொடர்பொன்று ஏற்பட்ட முதல் சந்தர்ப்பத்தில் அவனது அனுபவங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள தாட்டோ முயற்சித்தாள். குழந்தையொன்றைப் பெற்றுக் கொள்வதில் அவளுக்கு ஆட்சேபணை இல்லை. எவரும் குழந்தைகளை மறுக்க மாட்டார்கள். எனினும் ஆண்களின் நேர்மையற்ற தன்மையும் ஏமாற்றும் திறனும் அவளுக்குப் பிடிக்காதவை.

                ‘முட்டாள் பொம்பளைங்க’ அவள் கோபத்துடன் சொன்னாள். ‘ஆம்பளைங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்றதுக்காகப் பொம்பளைங்க இருக்காங்க. ஆனா படிச்ச பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் ஆம்பளைங்களுக்குத் தேவையா இருக்கு. ஆனா அவங்களையும் ரொம்ப மோசமாத்தான் கவனிக்கிறாங்க. பொம்பளைங்க அவங்களுக்காகவே வேலை செய்றாங்க. அவங்களுக்கு உபகாரம் பண்றாங்க. ஆனா கல்யாணத்தினால பொம்பளைங்களுக்கு எந்தவொரு சந்தோஷமும் கிடைக்குறதில்ல.”

                சிறியதொரு இடைவெளி விட்டு ஏதொவொரு நிச்சயமற்ற தன்மையோடு அவள் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டே போனாள்.

                “நான் ரொம்ப நாளா கல்யாணத்துக்காகக் காத்திருந்தேன். அதுக்கப்புறம்தான் குழந்தையொண்ணப் பெத்துக்கத் தீர்மானிச்சேன். எனக்கு வயசாகும்போது பிள்ளையில்லாத அம்மாவா இருக்குற நிலைமைக்கு என்னை ஆளாக்க வேணாம்.”

                அவள் அடுப்பில் நெருப்பை மூட்டி களி கிண்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கு வந்த மனிதனால் அவளது மனதில் உதித்த எண்ணங்கள் அனைத்தையும் அழித்து விட முடிந்தது.

    தொடக்கத்தில் அவர்களது தொடர்பு ஆரம்பித்தது இவ்வாறுதான். முதலில் அவள் தனது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணங்களை அழித்து விட வேண்டும். ஆண் மகனொருவனைக் காதலிப்பதற்கு பெண்ணானவள் அதிக தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

                தோலோவின் டிரக்டர் வண்டியைப் பாவித்து தமது காணி நிலத்தைப் பண்படுத்திக் கொள்ள தாட்டோவின் தாய் நடவடிக்கைகளை மேற்கொண்டாள். டிரக்டர் வண்டியொன்று அவர்களது இடத்துக்கு வந்தது அதுதான் முதல் தடவை. வருடக் கணக்கில் அவர்களது நிலத்தை அவர்கள் எருமைகளைப் பயன்படுத்தியே செப்பனிட்டு வந்தார்கள். (அவர்களது காணியில் பெண்கள் மட்டுமே இருந்தனர். தாட்டோவின் தந்தை அவளது சிறு வயதிலேயே இறந்துவிட்டிருந்தார். அவள் தனது தாயோடும் சிறிய தங்கைகள் இருவரோடும் வசித்து வந்தாள்.)

    டிரக்டர் வண்டியின் மூலம் நிலத்தைப் பண்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பதே புதிய அனுபவம். மழை பெய்திருந்ததால் புதிதாக ஈரலித்துப் போயிருந்த நிலத்தை, விவசாயக் கல்லூரியில் பெற்ற தொழில் அனுபவத்தைக் கொண்டு அவன் தோண்டிக் கொண்டிருந்தான். அவர் மிகச் சரியான முறையில் தனது வேலையைச் செய்துகொண்டிருந்தான். அன்று அந்தி சாயும் நேரமாகுகையில் அவர்களது நிலத்தைப் பண்படுத்துவதைப் பூர்த்தி செய்த அவன் வண்டியை வேறொரு வேலைக்காகக் கொண்டு சென்றான்.

    இரவில் அவளது கனவு உலகத்தில் அசையாத உருவமொன்று நடமாடத் தொடங்கியது. அவள் அவனைத் தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். அவளது கஷ்டமான வாழ்க்கையை விடவும் அவன் தொலைதூரத்திலிருந்தான். அவளைப் போல இன்னும் பெண்கள் பலர் இருக்கக் கூடும். அவர்களுக்கும் அவளைப் போலவே எல்லா வேலைகளையும் செய்யக் கூடிய திறமைகளும் இருக்கக் கூடும். எனினும் அவர்களுக்கு வாழ்க்கையில் விஷேடமான மகிழ்ச்சி எதுவும் ஏற்பட்டிருக்காது.

                அவர்கள் தொடர்ந்தும் புதியவர்களாக இருக்கவில்லை. அறுவடைக் காலம் முடிந்து விற்பனைச் சந்தைக்குச் சென்ற சந்தர்ப்பமொன்றில் அவள் அவனை மீண்டும் சந்தித்தாள். ‘காதல் என்பது விபத்துக்களை நோக்கிக் கையசைக்கும் பயங்கரமான ஒன்று’.

    பெண்கள் இவ்வாறு சொல்லப் பழகியிருந்தார்கள். “எல்லா ஆம்பளைங்களுமே ஒண்ணு மாதிரித்தான். அவங்க ஒண்ணு ரெண்டு மாசம் ஒண்ணா சுத்திட்டு அப்புறம் நிரந்தரமாக் காணாமப் போயிடுவாங்க.”

                எனினும் ‘ஏனையவர்களின் கதைகளை நான் கண்டுகொள்வதில்லை. அவன் இன்னும் பல பெண்களை அறிந்திருக்கக் கூடும். எனினும் எனக்கு அது ஒரு தடையல்ல.’ எனத் தீர்மானித்த தாட்டோ, தோலோவின் எதிர்காலம் குறித்து எந்தவொரு உறுதிப்பாடும் கிடைத்திராத நிலையிலேயே அவனுடனான தொடர்பினை வளர்த்துக் கொள்ளச் சம்மதித்தாள். இரு மாதங்கள் கழிந்த நிலையில் ஏதொவொரு தவறு நிகழ்ந்திருப்பதாகத் தென்பட்டது. அவன் காதல் குறித்து எந்த ஈடுபாட்டையும் காட்டவில்லை. அவள் மிகவும் கவலைக்குள்ளானாள். அவள் எந்தளவு வெறுப்புக்குள்ளானாளெனில், அவன் வருகை தரும் போது அவனை வரவேற்பதைக் கூட அவள் செய்யவில்லை.

                “என்ன ஆகியிருக்கு உனக்கு?” என அவன் அமைதியாகக் கேட்டான். அவள் ஒரு கணம் எரியும் சுடர் போன்ற கூர்மையோடு அவனை நோக்கினாள். ஒரேயடியாக அவள் உடனடித் தீர்மானமொன்றை எடுத்தாள். அது அவனிடம் சொல்லியே ஆக வேண்டிய ஒரு பிரச்சினை. ‘ஆமாம். நான் குழந்தையை எதிர்பார்ப்பதாக அவனிடம் சொல்லி விடப் போகிறேன். எவ்வாறாயினும் நான் ஆண்களை வெறுக்கிறேன்’ எனத் தீர்மானித்த அவள் இறுதியில் உறுதியோடும் கோபத்தோடும் அவனிடம் அதனைச் சொல்லி விட்டாள். எனினும் அவன் அமைதியாகவே இருந்தான். அவள் கரிக் கட்டையொன்றை எடுத்து நிலத்தில் கோடு வரைந்தாள். அவளது நொந்து போயிருந்த மனதுக்குள் நேரடியாக ஊடுருவியபடி

                “நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்’ என அவன் அன்பாகக் கூறினான். “என்னால எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடலாம்.”

                எதிர்பாராத வகையில் அவனது அலங்காரமிக்க வாழ்க்கையுடன் தனது வாழ்க்கை இணையப் போவதை அவள் உணர்ந்தாள். பின்பு அமைதியாக லேசாய்ப் புன்னகைத்தாள். பண்டைய காலத்தைப் போல நிகழ்காலத்தில் திருமணத்தைத் திட்டமிடுவது பெற்றோர்களல்ல. ஆணும் பெண்ணும் தமது வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு கணவனும் மனைவியுமாக வாழ்க்கையை ஆரம்பித்து விடுகின்றனர்.

                “என்னிடம் தர்றதுக்கு எதுவுமே இல்ல தோலோ’ அவள் மிகவும் கையாலாகாத நிலையில் சொன்னாள். “நாங்க ரொம்ப ஏழைங்கங்குறது உனக்குத் தெரிஞ்சிருக்கும். என்னால ரொம்ப நல்லா விவசாய வேலைகளைச் செய்ய முடியும்.”

                அவன் அவளது முகத்தை வியப்போடு பார்த்தான். விழிகளால் புன்னகைத்தான். அச் சிரிப்பை உணர்ந்து கொள்ள அவளுக்குக் கொஞ்ச நேரம் பிடித்தது. அதன் அர்த்தம் அவன் இன்னுமொருவரது வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதைப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் போன்றது. ஆரம்பத்தில் அவள் அனைத்து விடயங்கள் குறித்தும் கவனமாக இருந்தாள். நிறைய நேரத்துக்குப் பிறகு அவர்களது உரையாடல் அறுவடை, விலங்கு வேளாண்மை, ஏனைய மனிதர்கள் போன்ற விடயங்களுக்குத் திரும்பியது. எனினும் அம் மாலை நேரத்தில் அவனுக்கு, அவளிடம் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்ல இயலாமல் போயிற்று. எதிர்பாராத அச் சுதந்திரத்தை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

                அவனைப் போன்ற விவசாயிகளுக்கும் விலங்குப் பண்ணையாளர்களுக்கும் முக்கியமான இடமொன்று கிடைத்தது. அவனுக்கு அரச விவசாய தொழில் பயிற்சி நிலையத்தில் விஷேட இடமொன்று கிடைத்ததோடு, அவளது முந்தைய கணவனுடன் இணைந்து அவனது நிலத்தில் வேலை செய்யவும், விலங்குகளைப் பார்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுடன் இணைந்து அவ்வாறு திருமண வாழ்க்கையைக் கொண்டு செல்லக் கூடிய பெண்ணே அவனது தேவையாகவிருந்தது. இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்பிருந்த மக்களுக்கு இவ்வாறானதோர் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவில்லை.

                அவன் அவளைத் தனது குடும்பத்திடம் அறிமுகப்படுத்திய வேளையில் அவர்கள் தமது மறுப்பைத் தெரிவித்தனர். அவனது அத்தையொருத்தி எல்லாவற்றையும் சுருக்கமாக இவ்வாறு சொன்னாள். ‘அவள் வாழ்க்கைல நிறைய அனுபவங்களைப் பார்த்தவளொருத்தி. வயசானவள்.”

                தாட்டோவின் முகத்தைப் பார்க்கையில், அவள் நன்கு யோசிக்கக் கூடியவளென அவர்களுக்குத் தென்பட்டது. ஆண் மகனொருவன் திறந்த மனதுடன் உள்ள, தன்னை விடவும் வயதில் பத்து வருடங்களாவது குறைந்த ஒருத்தியையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்களது திருமணம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்காவது நிலைத்திருக்கும்.

                எவ்வாறாயினும் அவர்கள் மூன்று வருடங்களாக திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கின்றனர். வேலைகள் மற்றும் ஏனையவர்களின் தேவைகளுக்காகக் கலந்துகொள்ளச் செல்வதனால் அவர்களது திருமண பந்தத்திலிருந்த மகிழ்ச்சி மெதுவாக நீங்கிச் சென்றது. ராபுலாவும் டெபோகோவும் தமது முற்றத்திலிருந்து சென்ற உடனேயே தண்ணீர்க் குடமொன்றைத் தலையிலேந்தியபடி தாட்டோ வந்தாள். தனக்கு ஏதோவோர் தேவையிருப்பதை உணர்த்தும் விதத்தில் தோலோ அவளைப் பார்த்தான். அவள் அவனருகே சென்று டிரக்டர் வண்டியின் அருகே தண்ணீர்க் குடத்தை நிலத்தில் வைத்தாள்.

                “ஏதாச்சும் கொண்டு போக ஏற்பாடு பண்றியா? நான் நாளைக்கு ராபுலாவோடும், டெபோகோ லேஸீட்டோடும், கெலீபோனோடும் வேட்டைக்குப் போக நினைச்சிருக்கேன்.”

                அவள் டிரக்டர் வண்டியின் மீது தனது ஒரு கையை வைத்தாள். “இந்த வருஷத்துல மிருகங்கன்னா நல்லா வளர்ந்திருக்கு. ஆனா நம்ம தோட்டத்து வட்டக்கா, பூசணி, தர்ப்பூசணி எல்லாம் நோய் வந்தது மாதிரி சின்னதாப் போயிருக்கு.”

                தீர்மானித்திருந்த படி அடுத்த நாள் விடிகாலையில் ஆண்கள் ஐந்து பேரும் தமது வேட்டைக்கான பயணத்தை ஆரம்பித்தனர். பெரிய மழைக்குப் பிற்பாடு மெல்லிய தென்றல் வீசுவதே வழமை. ஜூலை மாதமாகுகையில் எந்நாளும் வானம் நீல நிறத்தில் இருப்பதோடு குளிர்ந்த சூரியக் கீற்றுகளோடு மொத்த சூழலும் உறங்கச் செல்லத் தயாராவதைப் போன்றதொரு நிலையைக் காட்டும். தேனின் நிறத்தைக் கொண்ட புற்கள் குளிர்ந்த தென்றல் அலைகளில் சிக்கி அசைவது, ஆயிரக்கணக்கான சிறுமியர் தமது ஆடைகளை அசைத்து ஆடுவதைப் போன்றிருக்கும்.

    இந்த அமைதியான சூழலுக்கே இந்த ஐவரும் வேட்டைக்காகச் சென்றிருந்தனர். அந் நாளின் மத்தியான வேளையாகும் போது அவர்களுக்கு, தமக்குத் தேவையான அளவு விலங்குகளை வேட்டையாட முடிந்ததோடு மாலையில் அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். அன்றைய மாலைவேளை அனைத்து வீடுகளிலும் ஒரே களேபரம். பிள்ளைகள் சுட்ட இறைச்சியை தமது வயிறு வெடிக்குமளவுக்குச் சாப்பிட்டனர். அவர்கள் நீங்கிச் சென்ற பிற்பாடு பெரியவர்கள் முற்றங்களில் வெட்டவெளியில் நெருப்பை மூட்டி பெரிய இரும்புப் பாத்திரங்களில் இறைச்சியைச் சமைக்க ஆரம்பித்தனர். அடுத்த நாள் காலைவேளையில் அவர்களது வீட்டில் சமைக்கப்பட்ட இறைச்சியை  உண்டு செல்ல விருந்தாளிகள் வருகை தரவிருக்கின்றனர்.

                தோலோவுக்கு இந்த நாள் மிகவும் பிடிக்கும். இக் காட்சியை அவன் அநேகத் தடவைகள் கண்டிருக்கிறான். அவன் சிறியதொரு கதிரையில் அமர்ந்திருந்ததோடு அவனது மனைவி ஒரு காலை மடித்து நிலத்தில் அமர்ந்து நெருப்புச் சுடரைப் பார்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

                “என்ன சங்கதி?” ஒரு சந்தர்ப்பத்தில் அவன் கேட்டான்.

                அவளால் எந்தவொரு கலவர நிலைக்கும் முகம் கொடுக்க முடியும். ஆனால் அவனால் முடியாது. ஏனைய பெண்களைப் போலவே அவளும் ஊர் விடயங்கள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் ஈடுபாடு கொண்டிருந்தாள். எனவே அவளுக்கு ஊர் விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்கும். எனினும் அதனை வெளிப்படுத்தும் போது தேர்ந்தெடுத்துச் சொல்வதில் அவள் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

                அன்றைய மாலை நேரத்தில் அவனது ‘என்ன சங்கதி?’ எனும் கேள்விக்கு பதிலளிக்க அவள் தயாரானாள்.

    ‘மாட்டுக் கொட்டகையில ஒரு எருமை இன்னொரு வயதான எருமையோடு மோதிக் கொண்டதில பலத்த காயப்பட்டிருக்கு’

    அவள் சிறியதொரு இடைவெளி விட்டுவிட்டு விழிகளைச் சுழற்றியபடி சொன்னாள்.

    “ஊர்ல இன்னுமொரு பிரச்சினை. பிலீஷியாவுக்கும் அவளோட புருஷனுக்குமிடையில திரும்பவும் சண்டை. அவங்க சமீபத்துலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா பிலீஷியா கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடியிருந்தே சாதாரணமாக நடந்து கொள்ளல. அதேபோல கல்யாணத்துக்கு அப்புறமும் எந்நாளும் புருஷனோட சண்டை போடத் தொடங்கினா. வெளி மனுஷங்களுக்கு அவங்களோட முற்றத்துல அவங்க சண்டை போடுற சத்தத்தத் தவிர வேறெதுவும் கேட்டிருக்காது.அவள் இந்த நாட்கள்ல விவசாய வேலைகள்ல ஈடுபட மாட்டேங்குறா. அவளோட புருஷன் ஏதோ நல்ல வேலையொண்ணுல இருக்குறதால அவ கொஞ்சம் ஓய்வெடுத்தா என்னன்னு கேட்குறாளாம். இப்ப புருஷனோட நிலைமையும் மாறியிருக்கு. அவன் இன்னிக்கு வேலையை விட்டு நின்னுட்டானாம். அவனும் கொஞ்சம் ஓய்வெடுக்கணும்னு சொல்றானாம். ஓய்வெடுக்குறதும், சும்மா காலங்கடத்துறதும் அவங்களுக்கு நல்ல பழக்கமான ஒண்ணுதான். இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்குறதுன்னு யாருக்குமே தெரியல. அவங்க பசியிலிருக்கையில பிற மனுஷங்கதான் உதவி செய்ய வேண்டியிருக்கும்.”

                ஒவ்வொரு நாளும் மனிதர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவள் விபரிக்கத் தொடங்கினாள். சில காலத்துக்கு முன்பு ராபுலா கள்ளச்சாராயம் காய்ச்சும் இடமொன்றுக்குச் சென்று குடித்து விட்டு வந்து மனைவிக்கு அடித்த விடயத்தை அவன் தாட்டோவிடமிருந்து அறிந்து கொண்டான். அவள் அவனைத் திட்டுவதையும் கூட அறிந்து கொண்டான். இதற்கெல்லாம் என்ன செய்ய முடியும்? உலகில் எதையும் தேர்ந்தெடுத்துச் செய்ய இயலாது. அது எப்போதுமே வேதனையும் சிக்கலும் பின்னிப் பிணைந்தது. அவன், ராபுலா அங்கு வந்ததும் கருணையோடும் நட்போடும் புன்னகைத்தது அதனால்தான்.

    – பெஸீ ஹெட்

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    எழுத்தாளர் பற்றி :

     

    பெஸீ ஹெட் Bessie Head

     

    f3a7bdea-ce49-4cd1-a9c6-1435089920be           தென்னாபிரிக்க பெண் எழுத்தாளரான பெஸீ ஹெட் 1937 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஆறாம் திகதி பிறந்தவர். விருதுகள் பல பெற்ற பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ள இவர் இன்றும் கூட ஆளுமை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

    1950 களின் பின்னர் ஆசிரியையாகவும், ‘ட்ரம்’ எனும் சஞ்சிகையில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய இவர், அரசியல் நிலவரங்களின் காரணமாக 1964 ஆம் ஆண்டு பொஸ்த்வானாவிற்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலமான பெஸீ ஹெட்டின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான ‘The Collector of Treasures’ எனும் தொகுப்பிலுள்ள ‘Hunting’ எனும் சிறுகதை இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

     

    -மொ.பெ.

    Share
  • ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாய யதார்த்தத்தின் வலிமை

    சத்யானந்தன்

    (சிறுகதை குறித்த திறனாய்வுக் கட்டுரை)

    ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ சிறுகதைக்கான இணைப்பு இது

    http://mrishansharif.blogspot.qa/2011/10/blog-post.html

    வாசிப்பிலும் படைப்பிலும் சிறுகதையின் இடமே முதன்மையானது. இருப்பினும் படைப்பாளிகளால்  சிறுகதை என்னும் உருவம் உள்ளடக்கத்தை ஒட்டியே தேர்ந்தெடுக்கப் படுகிறது. நவீனத்துவத்தில் சிறுகதையின் வீச்சு மேம்பட்டு ஆகச் சிறந்த வடிவம் இதுதானோ என்று அதிசயிக்க வைக்கிறது. ஆனால் சிறுகதை வடிவத்துக்கு வரம்புகள் உண்டா? என்ன வரம்புகள்? படைப்பாளிக்கு மட்டும் சில இடத்தில் முட்டி நின்று விட நேர்வதா? ஏன் அப்படி ஆக வேண்டும்? அடுத்ததாக வாசகனுக்கு சில தடைகள் உண்டா? சொற்களின் ஆற்றலுக்கும் வாசகனுக்கும் கூட தாண்டிச்செல்ல முடியாத இடங்கள் உண்டா?

    உண்டு. நம்மால் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாத உணர்வுக் கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகள் உண்டு. நுட்பமான தருணங்கள் ஆழ்மன பிரக்ஞை அல்லது வெளிமனப் பிரக்ஞை எனப் பகுத்தறிய முடியாத தளத்தில் சலனப்பட்டு மறைபவை. அவற்றை நாம் புழங்கும் சொற்களால் நம் மனம் பழக்கப்படுத்தப்பட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குவது நம் உள்ளார்ந்த தடைகளால் இயலாத ஒன்று.

    இந்த இடத்தில் தான் மாய யதார்த்தத்தின் வீச்சு படைப்பாளி வாசகன் இருவருக்கும் இவற்றைத் தாண்டிச் செல்ல உதவுகிறது. காட்சி என்னும் ஊடகம் வாசிப்பு ஊடகத்தை ஒப்பிட நுட்பங்களைப் புரிய வைப்பதில் கையாலாகாதது. மாய யதார்த்தம், வார்த்தை என்னும் வடிவம் செயலிழக்கும் இடத்தை எளிதாகக் கடந்து செல்லுகிறது. நவீன கவிதையின் பலம் நாம் பழக்கப்பட்ட காட்சி அல்லது உரையாடலைக் காட்டி நாம் தடுமாறும் புள்ளியைத் தாண்டி ஒரு ஆழ் தரிசனத்துக்கு இட்டுச் செல்வது. மாய யதார்த்தம் காட்சி வழி நவீன கவிதை நம்மை உடன் அழைத்துச் செல்லும் மாயத்தை புனைகதைக்குள் கொண்டு வருவது.

                ரிஷானின் தலைப்பே அந்தக் கதையின் சுருக்கம் என்று கூறி விடலாம். சரி காக்கைகள் ஏன் அவன் தலையைக் கொத்த வேண்டும்? கதையின் இந்தப் பகுதியில் நமக்கு ஒரு முனை கிடைக்கும்:

    …. விந்தி விந்தி ஓடித் துரத்துவான். அவன் ஓடுவதைப் பார்க்க, தவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.

    ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளைந்திருந்தன. இன்னும் அவன் மிகவும் ஒல்லியானவன். அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும். கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒரு மாதிரியாக வெள்ளைக் காகிதத்தில் செம்மண் தூசு அப்பியதைப் போன்ற வெளிறிப் போன நிறம். நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது முப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன். வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டின. ஒருபோதும் அச் சிறுவர்கள் எவரும் அவனிடம் அகப்பட்டதில்லை….

                கதை நெடுக நாம் காக்கைகள் அவனைக் கண்ணில் படும் போதெல்லாம் துரத்தித் தலையில் கொத்தின என்பதையும், அவன் முதலாளி அவனுக்கு மந்திரித்த கயிறு தாயத்து எல்லாம் வாங்கித் தந்தார் எனவும் படிக்கிறோம். கதையில் மேற்கண்ட பத்தியின் வழியாகவே நாம் கதையின் உள்ளே போகிறோம். நமக்கு நன்றாகவே தெரியும் விளிம்பு நிலையில் உள்ளவர் தோற்றத்திலும் குறையுள்ளவராக இருந்தால் நாம் எப்படி அவரை நடத்துவோம் என்பது..

    ஆனால் நமக்குத் தெரியாதது அக்கறையில்லாதது ஒன்று அவரிடம் இருக்கிறது. அது தான் நிராகரிப்பாலும், இழிவு படுத்தப்படுவதாலும் நிகழும் வலி. அந்த வலி எப்படிப்பட்டது என்பது அனுபவித்தவருக்கு மட்டும் தான் புரியும். நாம் எந்தக் விதத்திலும் கண்டுகொள்ளாத அந்த வலி மிகவும் ஆழ்ந்தது. அல்லும் பகலும் மனதை கத்தியால் கீறும் மாறா ரணம்.

    இந்த ரணத்தை, வலியை, அவஸ்தையை நாம் உணரும் துவங்கு புள்ளியில் இல்லை என்பது எளிய உண்மை அது நமக்கு என்றுமே அக்கறையில்லாத விஷயம். நமக்கு அன்னியமானதும் நம் மரத்துப் போன மனித நேயத்தால் உணர முடியாததுமான அதை இந்த மாயயதார்த்தத்தின் மூலம் காண்கிறோம். பிறர் கண்ணால் இழிவாகப் பார்க்கப் படுவதும் வார்த்தைகளால் காயப்படுத்தப்படுவதும் எத்தனை துன்பம் தருவது என்பதையே பகலில் துரத்திக் கொத்தும் காகங்கள் வடிவில் காண்கிறோம். அதே காகங்கள் வழி வேறு ஒன்றும் நமக்கு உணர்த்தப் படுகிறது. இறுதியில் வரும் இந்தப் பத்தியைப் பார்ப்போம்:

    …. குளிக்கப்போன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதான் கரையோரப் பாறையொன்றில் வழுக்கிவிழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப்பு எறும்புகள் மொய்க்க, குருதி காயச் செத்துக்கிடந்தவனைக் கண்டு அலறினாள். ஆற்றங்கரையின் மருத மரத்தில், அயல்மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லை. எனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்தாப்போலக் கூட்டமாக இருந்து அவனைப்பார்த்துக் கரைந்தன. இரை தேடி அலைதல் மறுத்து அப் பிணம் அகற்றப்படும் வரையில் அங்கேயே கிடந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப்பெட்டியை அழுத்தி, ஒலிக்கவைக்கச் செய்யமுடியாதென அறிந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை.

                காக்கைகள் தமது இனத்தில் ஒரு காக்கைக்கு அடிபட்டாலோ அல்லது இறந்து போனாலோ மட்டுமே அவ்வாறு  கூடி  வருந்தும் எனவே அவனுக்காக இன்று கூடும் காக்கைகள் அவனை இத்தனை நாளாகவே தமது இனம் என்றே கருதி வந்தன. அவைகளைத் தவிர அவனைத் தன் இனம் என எண்ணுவோர் யாரும் இல்லை. இதை இந்த மாய யதார்த்தம் வாயிலாக அவர் எடுத்துரைக்கிறார்.

    மிகவும் நுட்பமாகவும் விரிவாகவும் அவர் இந்த மாயயதார்த்தத்தை கதைக்குள் சேர்த்திருக்கிறார். அப்படி சேர்த்திருப்பது பிழையென்று சொல்ல முடியாது. அதே சமயம் அது மாய யதார்த்தம் சுட்டும் புரிதலை  சற்றே நீர்க்க அடித்து விடுகின்றது.

    கதையின் இறுதி பத்தி அந்த நீர்க்கடித்தலைத் தாண்டி நம்மை ஆழ்ந்த புரிதலுக்கு இட்டுச் செல்வதால் நாம் ரிஷான் தமது முயற்சியில் வெற்றி கண்டார் என்றே கூறலாம். மூத்த எழுத்தாளர்கள் பலரும் மாய எதார்த்தம் தேவைப்படாத சூழலில் அதைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ரிஷான் பொருத்தமான கதையில் அதை சரியாகப் பயன் படுத்தி இருக்கிறார்.

    திண்ணையில் வெளியாகி நான்கு ஆண்டுகள் கழித்தாலும், இதை நான் வாசிப்பதற்குக் காரணம் மாய யதார்த்தம் பற்றி சக எழுத்தாளரிடம் விவாதித்த போது அவர் இதற்கான இணைப்பை எனக்குத் தந்ததே. ஓர் அசலான படைப்புக்குக் கிடைக்கும் அங்கீகரிப்புக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

    • சத்யானந்தன் (பதிவுகள்)

    sathyanandhan.mail@gmail.com

    Share
  • மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !

    – எம்.ரிஷான் ஷெரீப்

          சூழப்பல தேசங்களிலும் என் தேசத்திலும் மழை விடாமல் பொழிவதாயும், வீடுகள்,வீதிகள், மரங்கள் அனைத்துமென வெள்ளம் வழிவதாயும் செய்தித்தாள் சொல்லிற்று. தடவிப் பார்த்தேன். ஈரத்தின் சுவடுகள் விரல்களில் பொசிந்தன. காலம் காலமாக என் வானில் பெய்த மழை இன்று நான் வாழும் இப் பாலைவன தேசத்தில் பொய்த்தது. சூழலை இருட்டாக்கி, தேகங்களை வெம்பச் செய்து, மேகக் கூட்டங்கள் கருக்கட்டி, வான நடை போட்டுப் பார்த்துப் பல காலமாயிற்று.

            மழையின் துளிகளை முகத்தில் வாங்கி , அன்னை கூப்பிட்டலுத்து அன்பால் திட்டித் திட்டித் தலை துவட்டி விடும் சிறுபராயம் நினைவுகளில் இடறுகிறது. தலையின் பின்புறம் கட்டாயம் துடைக்கவேண்டும். ஈரத்தின் சாயல் கண்டு தடிமன் வரும். பின்னர் காய்ச்சல் வரும். நீர் தேங்கி நிற்கும் குட்டைகள் தோறும் விஷக்கிருமிகள் பெருகித்தொற்றி விதவிதமான நோய்கள் வரும் என்றெல்லாம் தந்தை மடியிலிருத்தி மழை குறித்த கதைகள் சொன்னதும் ஞாபக அடுக்குகளிலிருந்து மீளெழும்பிக் கிளர்த்துகிறது.

            பல காலமாக மழையற்ற எனது சிறுவயதின் காலமொன்று நினைவுக்கு வருகிறது. ஊரின் குறுக்கே ஓடும் பேராற்றில் நீர் வரண்டு நிறைந்திருந்த மணல்மேட்டில் ஊரின் இளைஞர்கள் கிரிக்கெட்டும் கால்பந்தும் விளையாடினர். சிறுவர்கள் பட்டம் விட்டனர். மரங்கள், செடி கொடிகள் வாடிய அக்காலத்தில் பட்டாம்பூச்சிகளும், மழைக்குருவிகளும் கூட வேறெங்கோ பறந்திருக்கவேண்டும். தண்ணீருக்குக் கடும்பஞ்சம்.  எங்கும் கடும்வெயில். சொன்னது கேட்காப்பிள்ளையை பிசாசுகளை நினைவுருத்தி வெருட்டுவது போலச் சூடும் வெயிலும்  எல்லாவற்றையும், எல்லோரையும் மிரட்டியபடி அலைந்தது.

            அக் கோடையில் அத்தியவசியத் தேவைகளுக்கே நீரற்றுப் போனதனால் விவசாயங்கள் பொய்த்துப் போயிற்று. வளர்ப்புப் பிராணிகள் மெலிந்து கொண்டு வந்தன. நீரோடி வற்றிய ஆற்றில் ஆழக்குழி தோண்டி உள்ளே ஊறித் தெரிந்த நீரை அகப்பையிலள்ளிக் குடங்களுக்கு சேலைத் திரையிட்டு அதனூடாக வடிகட்டி நீரைச் சேகரித்ததையும் கண்டிருக்கிறேன். தெளிந்த நீர்க் கிணறு உள்ளதென அறிந்து வெகுதூரம் நடந்தும், சைக்கிள்களிலும் தேடிப் போய்த் தண்ணீர் காவி வந்தனர் ஊரார். நாடு முழுதும் இதே நிலைமை. எல்லா நீர்த் தேக்கங்களிலும் தண்ணீரின் மட்டம் குறைந்ததனால் மின்சாரம் வழங்குவது கூட அரசுக்குச் சிக்கலாயிற்று. நாளொன்றின் பெரும்பகுதிகள் மின்சாரமற்றுப் போக விதிக்கப்பட்டன. நாட்டின் பெரும் பாகங்கள் இருளுக்குள் மூழ்கின.

            கடல் எங்களூரிலிருந்து மிகத் தொலைவில் அலையடித்தபடி இருக்கிறது. நேரில் கண்டதில்லை. கடல் பற்றிய பிம்பங்களை போத்தலில் அடைக்கப்பட்ட பூதமொன்று அலையில் மிதந்து வந்து சிறுவனொருவனுக்கு எட்டிய கதையூடாக சிறுவயதில் அறிந்திருக்கிறேன். ஆழக் கடலெனில் அது நிறைய என்றும் வற்றா நீரிருக்கும் என்ற தந்தையிடம் நீர் எப்படி வற்றுமெனக் கேட்டுத் தெரிந்த பின்னர் , கடல் பிரதேசங்களில் சூரியன் அலையாதா எனக் கேட்டுத் திண்டாடச் செய்திருக்கிறேன்.

            பள்ளிக்கூடச் சுற்றுலா போய் கடல் பார்த்து வந்த பின்னர், வெயில் வராத தெருக்களோடு, எல்லா ஊர்களிலும் என்றுமே வற்றாத கடல்கள் இருப்பின் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமெனக் கூட்டாளிகளுடன் கூடிக் கதைத்த கதைகளும், கடற்கரை இரவுகளின் மணல் நடையும் நிலாச் சோறுண்ணும் ஆசையும் சில வருடங்களுக்கு முன் வந்து சென்ற சுனாமியுடனும், பின் வந்த அடைமழையுடனும், அது கொண்டு வந்த வெள்ளத்துடனும் வடிந்து போயிற்று.

             இலங்கையில் விடிந்தும் விடியாப்பொழுதுகளிலிருந்து புதுத்திரையிசைப் பாடல்களோடு கும்மாளமிடும், மொழிக் கொலையுடன் அரட்டையடிக்கும் பல வானொலிகள் 26-12-2004 அன்று சுனாமி குறித்தான நேரடி அறிவிப்பினைத் தொடர்ந்தும் தந்துகொண்டிருந்தன. வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்க கடைவீதிக்குச் சென்றிருந்த எனக்குள்ளும், பலரிடமும் ஆழிப்பேரலை குறித்து வானொலிகள் அலறியது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. வழமையாகக் காலைவேளையில் மகளிருக்கான நிகழ்ச்சிகளை அள்ளிவழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் கூட அன்று பேரலைத்தாக்கத்தை நேரடியாகக் காட்சிப்படுத்தின. இந்நேரத்தில் நேரடிக்காட்சிப்பதிவுக்காக கடற்கரை சென்ற ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளரையும் படப்பிடிப்பாளரையும் அலைவிழுங்கியதை வருத்தத்துடனும், இன்னும் இலங்கையின் மற்ற ஊடகங்களை நன்றியுடனும் நினைவுகூறுகிறேன்.

            அந்த ஞாயிறன்று பல தொலைக்காட்சிகளும் கடலனர்த்தம் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கையில்தான் அப் பாய் வியாபாரி வந்தார். இவ் அசம்பாவிதங்கள் குறித்து ஏதும் அறியா அவரிடம் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காட்டி ஊரை விசாரித்ததில் கடலுக்கு அண்மையிலுள்ள ‘காத்தான்குடி’ என்றார். சமையலறைக் கழிவு நீரைக் கடலுக்குள் வீசியெறியும் தூரத்தில்தான் அவர் வீடிருப்பதாகச் சொல்லி இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு செய்வதறியாது நிலத்தில் அமர்ந்து விசித்து விசித்தழத் தொடங்கினார். வாழ்வில் முதல்முறையாக கடலலைகளின் சீற்றம் குறித்து அறியக்கிடைத்தது அவருக்கும் எங்களுக்கும். எப்பாடுபட்டாவது இப்பொழுது ஊருக்குப் புறப்படவேண்டும். கர்ப்பிணி மனைவியும், இரு சிறுகுழந்தைகளும், பாரிசவாத நோய் தாக்கிப் பாயோடு முடங்கிய வயோதிபத்தாயும் குடிசையில் தனித்திருப்பதாகச் சொல்லி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டார். வானம் இருட்டியிருந்தது. சூரியன் வெட்கி எங்கோ ஒளிந்திருந்தது.

            ஊடகங்களின் தொடர்ந்த அறிவிப்புக்கள் எனது ஊர்மக்களின் மனதினை பெருமளவில் இளகச் செய்திருந்தன. ஊர்ப் பள்ளிவாயிலிலிருந்து அறிவிப்புக்களோடு பல வாகனங்கள் ஊர்த்தெரு முழுதும் உலா வந்தது. வீடுகளிலிருந்த அரிசி, பருப்பு, கோதுமை மா முதல் கடைகளிலிருந்த பால் மா, சீனி,பாண், நூடுல்ஸ்,பிஸ்கட்டுகள் எனப் பல உணவுப் பொருட்களையும் மக்கள் தாமாகவே அள்ளியள்ளிக் கொடுத்துதவினர். பல தாய்மார்கள் ஒன்று கூடி கோதுமை மாவை , ரொட்டிகளாக சுட்டுத்தந்தனர். இப்படியாக உணவுப்பொருட்களாலும் சடலங்களைப் போர்த்தவென வெள்ளைத்துணிகளாலும் பாண்டங்களாலும் இரு பஸ்கள் நிறைந்தன. மாலைத்தொழுகை வரை சேர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள் நோக்கி நகர்ந்த பஸ்ஸொன்றுக்குள் நானும் இருந்தேன்.

            வெகுநேரம் பயணித்து , விடிகாலையில் அம்பாறை எனும் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் எனப் பல பிரதேசங்களுக்கும் நிவாரணப்பணிக்கென வந்திருந்த நாம் மனம் முழுதும் வியாபித்திருந்த துயரச் சலனத்தோடு பிரித்தனுப்பப்பட்டோம். பள்ளிவாயல்களுக்கு இரவிரவாகத் தட்டுவண்டிகள் சடலங்களை அள்ளிக்கொண்டு வந்துசேர்ந்தன. ஒவ்வொன்றாகத் திண்ணையில் கிடத்தி (அனேகமான சடலங்களில் ஆடையிருக்கவில்லையாதலால் )  துணியால் போர்த்திப் பின்னர் தூய நீரால் குளிப்பாட்டினோம். குளிப்பாட்டி , வெண்துணியால் போர்த்தப்பட்டவைகளை ஏற்றியபடி தட்டு வண்டிகள் மயானம் நோக்கிச் சென்றன. ஒரு கட்டத்தில் சடலங்களின் மீட்பும் , வருகையும் அதிகரிக்க எல்லாவற்றையும் திண்ணையில் வரிசையில் கிடத்தி அவசரமாகக் குளிப்பாட்டி, அவசரமாக எடுத்துச் சென்று ஒரு பெரிய குழியில் பிரார்த்தனைகளோடு ஒன்றாகப் புதைக்கவேண்டியேற்பட்டது. அவ்வளவு சடலங்கள். நீர் குடித்து, ஊதிப் பெருத்த சடலங்கள். தலைமயிர்களில் கடல்வேர்கள் சிக்குண்டிருந்தன. ஹஜ் பெருநாளும், கிறிஸ்மஸும் அண்மித்த தினமாகையில் அனேகமான பெண் சடலங்களின் கரங்களில் மருதாணி விரல்கள். சிறு குழந்தைகள் பொம்மைகளைப் போலத் துயில் கொண்டிருந்தன.

            விடிந்து பார்க்கையில் எல்லா இடங்களிலும் அழுது சோர்ந்த விழிகளுடன், எல்லா மதத்தவர்களுமான ஊர் மக்கள் பரவிக்கிடந்தனர். நிந்தவூரின் கடற்கரைப்பள்ளிக்கூடம் அலையால் மூழ்கடிக்கப்பட்டதில் அதில் கல்விக்காகச் சென்றிருந்த ஊர்ச் சிறுவர், சிறுமியர்கள் அருகிலிருந்த மயானத்தில் தாமாகவே சடலங்களாக மூடப்பட்டிருந்தனர். கொண்டு போயிருந்த உணவும் , மற்றையவும் பள்ளிவாயில் தலைமைப் பொறுப்பிடம் ஒப்படைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இலங்கையில் மாவனல்லை மக்கள் சேர்த்தளித்த பொருட்கள்தான் முதன்முதலாக பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர்ந்தனவென்று ஊடகங்கள் செய்தியறிக்கைகளில் சொன்னதும் பல ஊர்களிலிருந்தும் நிவாரணப்பொருட்கள் குவியத் தொடங்கின.

            இந் நிலையில் ஆழிப் பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய சில பிரதேசங்களில் திருட்டுக்களும் நிகழ்ந்திருக்கின்றன. கடற்கரையோரமாகப் பயணித்த ஒரு ரயில் வண்டியும் அதன் தண்டவாளங்களும் காட்டேறியொன்றின் கோர நகங்களையொத்த வளைவு நெளிவுகளுக்காளாகியிருந்தபோது அதில் பயணித்தவர்கள் அனைவரும் மரணித்துப் போயினர். உலா வந்த கொள்ளையர்கள் ஊதிப் பருத்திருந்த அச் சடலங்களின் காதுச் சோனைகளை வெட்டித் தோடுகளையும், விரல்களை வெட்டி மோதிரங்களையும், கைகளை வெட்டி வளையல்களையும் சங்கிலிகளையும் திருடிப் போயிருந்தனர். நகைகளின் பிரகாசம், அனர்த்தம் குறித்தான அவர்களது அனுதாபங்களை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றியிருக்க வேண்டும்.

            இலங்கை, காலியில் நடந்த சம்பவமொன்று இன்னும் நினைவிலிருந்து அகற்ற முடியாதுள்ளது. சுனாமி தினத்தன்று தற்செயலாகத் தொலைக்காட்சிச் செய்தியில் காட்சிப்படுத்தப்பட்ட சில நிமிடக் காட்சிகளைக் கூர்ந்து கவனித்த ஒருவர் , அதிலொரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வழக்குப் பதிவு செய்தார். சில மாதங்கள் கழித்து வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது அவ் வீடியோக் காட்சிகள் பெரும் சாட்சியொன்றை அளித்தன. காலி நகரத்தை முழுதாக பேரலை தாக்கிய பொழுதில் தப்பி நீந்திவந்த ஒரு இளம்பெண்ணின் கழுத்துச் சங்கிலியைக் கழட்டியெடுத்து அவரைத் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொல்கிறான் ஒருவன். அக் கொலைகாரனைக் கண்டுபிடித்து மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

            இது போலப் பல கோரங்கள் சுனாமியினால் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா இன்னும் சில நாடுகளில் கடலலை அனர்த்தத்தோடு நிகழ்ந்து கொண்டேயிருந்தன. வைத்தியசாலைகளும், பிரதேச சபைகளும் அடையாளம் தெரியாச் சடலங்களால் நிறைந்தன. இந் நிகழ்வுகளின் போதும் நிவாரணப் பணிகளின் போதும் ஊடகங்கள் பெரிதும் உதவின. பல நாடுகளும் தம் உதவிக்கரங்களை நீட்டின. இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளும், தொழில் இழந்தவர்களுக்கு தொழிலும் மற்றும் இழப்புகளுக்கும் தாம் உதவுவதாகச் சொல்லின. சில நிறைவேறின.

            அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் சென்று அவர்களுக்குக் கைகொடுத்து உரையாடி வந்ததை உலகின் பேரதிசயம் போல ஊடகங்கள் எண்ணிப்பலவாறாக விளம்பரப்படுத்தி வந்தன. பிறகு வந்த காலங்களில் ஊடகங்களுக்கு எழுதத்தெரிந்த அனேகர் ஆழிப்பேரலை குறித்துக் கவிதை, கட்டுரை, கதைகளெனக் கிறுக்கத் தொடங்கினர். அது சுனாமியை விடவும் மோசமாக இருந்தது.

              ” சுனாமியை விடக் கொடுமையானவை அதையொட்டி எழுதப்பட்ட பல கவிதைகள். இவற்றை எழுதிய கவிஞர்கள் பலரையும் டிசம்பர் 26, 2004 காலை 8.20 மணிக்கு மீன் வாங்கி வரும்படி கடற்கரைக்கு அனுப்பாதது நாம் விட்ட மகா வரலாற்றுப்பிழை. ‘ஆடை களவாடும் சுனாமி நீதானோ?’ எனக் காதலியின் விரகக்குரலுக்குப் பாடல்வரிகள் எழுதிய வைரமுத்துவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்” எனத் தன் பத்தியொன்றில் கூறும் எழுத்தாளர் திரு.உமா வரதராஜனின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியாகப் பல கவிதைகள் அலைகளின்றி ஆர்ப்பாட்டமின்றி ஆட்களைக் கொன்றன.

            அது போலவே அக் காலத்தில் மிகைத்திருந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்துதருவதாகச் சொன்ன அரசியல்வாதிகளின், நடிகர்களின் வாக்குறுதிகள் அனேகமானவை நிறைவேற்றப்படாமல் போன இடம் குறித்துத்தகவல்கள் இல்லை.

            இலட்சக்கணக்கான மக்களைக் காவுகொண்ட சுனாமியைப் போலவே தான் பேய்மழைகள் பெரும் இடர்களைக் கொண்டுவருவனவென்றும் அவை மரணத்தின் தூதுவனுக்கு உதவுபவையென்றுமான எண்ணங்கள் எல்லோர் மனதிலும் வலுப்பெற்று நிற்கும்படி பின் வந்த மழைநாட்கள் நாட்டின் பெரும்பாகங்களை வெள்ளத்துக்குள் மூழ்கடித்தன. எங்கு பார்க்கிலும் வெள்ள நீர் மட்டம். அனேக குடியிருப்புக்களின் கூரைகள் மட்டும் தமதிருப்பை உணர்த்தியபடி நீருக்குள் மிதந்தன. ஆட்களேற்றிய வள்ளங்கள் இடமற்ற காரணத்தால் விட்டுச் சென்ற செல்லப்பிராணிகள் சடலங்களாக மிதந்து காகங்களினதும் ,அனைத்துமுண்ணிப் பறவைகளினதும் வயிற்றினை நிரப்பின.

            பல இடங்களில் மண்சரிவினாலும், மழை, வெள்ளத்தாலும் மனிதர்களும் கூடத் தமது இருப்பிடங்களோடு மீளப்பெற முடியாச் சடலங்களாக மண்ணுக்குள் புதையுண்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வெள்ளத்துக்காக விட்டுச் சென்ற வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து திரவியங்களைத் தேடினர். எல்லாம் பார்த்திருந்த மழை, தொடர்ந்தும் வருடங்கள் தோறும் சில காலங்களுக்கொரு முறை அமோகமாக வந்து மேலும் மேலும் இன்னல்களைத்தான் சேகரித்துத் தந்துவிட்டுச் செல்கின்றது.

            காலநிலை மாற்றங்கள், யாராலும் நிறுத்த முடியா மழை, புயலின் பாதிப்புக்கள், திசைகள் நோக்கி நகரும் சூறாவளியின் தாக்கங்கள் எனப் பல சொல்லும் வானிலை அறிக்கைகளைக் கூடச் சில சமயங்களில் மழை ஏமாற்றிவிடுகிறது. எதிர்பாராத் தருணங்களில் ஒரு திருட்டுப் பூனையைப் போல வந்துவிடுகிறது. அடைமழை வரலாம் என அறிவிக்கப்பட்ட நாட்களில் தபால்காரனின் கரத்திலிருந்து தொலைந்து போன கடிதமாய் மழை வராமலே போய்விடுகிறது.

            கடந்த இருமாதங்களாக இலங்கையின் பல பிரதேசங்களிலும், இந்தியாவின் தமிழ்நாடு, இன்னும் சில பிரதேசங்களிலும் புயலுடனான மழை கோரத்தாண்டவமாடிச் சென்று நகரங்கள் ஈரலித்துக் கிடந்தமையையும், மனிதர்கள் ஏற்றத்தாழ்வு பாராமல் வெள்ளம் தீண்டாத ஊர்ப்பொது இடங்களில் கூடிக் கதைத்தபடியிருந்ததையும் காணும் வாய்ப்புக்கள் புகைப்படங்கள் மூலம் கிட்டியது. நகரங்களில் நேர காலமற்ற பணி நெருக்கடி, அயலவரைக் கூட அறிமுகமற்றவர்களாக ஆக்கியிருக்கிறது. பெற்ற பிள்ளைகளிடம் பல விடயங்களை பேசுதல், அவர்களது கல்வி, வாழ்வியல் முறைகள், நடவடிக்கைகள் எனக் கலந்தாலோசித்தல் போன்றவைக்கும் துணைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கும் நேரம் இடமளிக்கா வீடுகளில் உள்ளவர்களையெல்லாம் கூட வெள்ளம் ஒன்றாக்கி ஓரிடத்துக்குக் கூட்டி வந்து கலந்துரையாட விட்டது.

            வெள்ளங்களும், பல இயற்கை அனர்த்தங்களும் சமூகத்தின் கீழ்நிலை மற்றும் நடுத்தர மக்களையே அதிகம் பாதிக்கிறது. அன்றாட வாழ்க்கைக்காக அன்றாடம் உழைப்பவர்களும், மாத வருவாய் போதா மக்களுமே அதிகளவில் இன்னல்களுக்குள்ளாகின்றனர். வசதிப்பட்டவர்களின் மாளிகைகளுக்கு வெள்ளம் வராது. வரினும் அவர்கள் மாடிகளிலிருந்து வேடிக்கை பார்ப்பர். அவர்களுக்கான உணவுகள் குளிரூட்டப்பட்ட இயந்திரங்களுக்குள்ளும் சூடான சமையல் உபகரணங்களுக்குள்ளும் அடைபட்டுக்கிடக்க, மாடிகளிலிருந்து வெள்ளநீரையும், மழையையும் வேடிக்கை பார்ப்பர். சினிமா நாயகிகள் நீரில் அழியா முக ஒப்பனைகளுடன் மழையில் குதித்தாடுவதை தொலைக்காட்சிகளில் வேடிக்கை பார்த்தும் பொழுதைக் கடத்தலாம் அவர்கள்.

            இன்னும்,  இலேசான மழை தூறும் நாட்களில் கூட சுகமான போர்வைக்குள் பலத்த நித்திரையிலிருக்கும் பலர் நனைந்த தரையில், குளிரெடுக்கும் இரவில் வீதியோரங்களிலும், வெளிப்புறக்கடைத் திண்ணைகளிலும், புனிதஸ்தல வாயில்களிலும் ஒண்டிக் கிடக்கும் யாசக மனிதர்கள் குறித்து சிந்திப்பதேயில்லை. மழை நாட்களில் அவர்களது பண வரவுகள், ஊண், உறையுள், உறக்கம் எதுபற்றியும் யோசித்துப்பார்ப்பதில்லை. மேற்கூறிய இடங்களில் அடைக்கலமாகி இரவுறக்கம் பெறும்  சகமனிதர்களின் நிலை குறித்தும், மழை வந்தால் அவர்களது போக்கிடம், இருப்பு குறித்தும் உரையாடுவதுவும், நினைவுபடுத்துவதும் இங்கு அவசியமாகிறது.

            இன்றைய காலகட்டத்தில் அரசு வழிநடத்தும் ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்கள் பலவும் இது போன்ற அனர்த்தங்களுக்காக, அதற்கான நிவாரணங்களுக்காக ஒன்றுகூடுவதென்பது குறைவாகவே உள்ளது. குடும்பமே கூடிப் பார்த்துக் களிக்கும் தொலைக்காட்சித் திரைகள் கூடத் திரைநாயகிகளின் அங்க அசைவுகளையும், அதி பல சூரக் கதாநாயகர்களின் அடிதடிகளையும் , பொய் சொல்லும் விளம்பரங்களையும் காட்சிப்படுத்திக் காட்சிப்படுத்தியே மக்களின் நேரங்களை வீணடிப்பதோடு அவர்கள் மனதில் வக்கிரத்தையும் வன்முறைகளையும் விதைத்தபடியிருக்கிறது.

            எழுத்து ஊடகங்கள் கூட அனேகமாக நடிகைகளின் நாய்க்குட்டிகளுக்கும், நடிகர்களின் புதுப்படங்கள், அரசியல் பொய் வாக்குறுதிகளுக்கும்  கொடுக்கும் முக்கியத்துவம் கூட இதுபோன்ற அனர்த்தங்கள் பற்றிய செய்திகளுக்கும், அதற்கான நிவாரணத்துக்காக ஒன்றுதிரள ஊக்கப்படுத்துவதற்கும் கொடுப்பதாயில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், இயலாதவர்களுக்காகவும் எவ்வளவோ செய்யமுடியுமானவை மக்களுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் ஊடகங்கள்தான். சில ஊடகங்கள் உள்ளனதான். மறுப்பதற்கில்லை. எனினும் அவையும் காலத்தின் இடர்நிலைக்குச் சிலகாலம் தம்மைக்கொடுத்துவிட்டுப் பின்னர் திரும்பவும் தமது இன்னிசைகளிலும், ஆட்டம்பாட்டங்களிலும், நடிகைகளின் இடைகளிலும், அரசியல் வீரப்பிரதாபங்களுக்குள்ளும் தம்மை ஒளித்துக்கொள்கின்றன.

            காலநிலை மாற்றங்களால் இது போன்ற இயற்கை அழிவுகள் தொடரும் சாத்தியக்கூறுகள் அனேகமிருப்பதால் பாதிக்கப்படும் மக்களின் அரசினை இது போன்ற இன்னல்கள் ஏற்படுமிடத்து உடனடியாகச் செய்யவேண்டியவை குறித்துப் பல நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டிய கடமையில் நாம் இருக்கிறோம். ஆறுகளில் நீர் நிரம்பி ஊருக்குள் திரும்பும் வெள்ளங்களைக் கட்டுப்படுத்த தேவையான அணைகளைக் கட்டி, வேற்று வழிகளினால் நீர் வழிந்தோடச் செய்யவேண்டும். அழுக்குகளும், கழிவுகளும் தேங்கி, நீர் வழிந்து நிரம்பும் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டு, குப்பைகளால் நகர வீடுகள் நீருள் மூழ்குவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதைத் தடுக்கத் தேவையான வழிவகைகளையும் செய்யவேண்டும்.

            இவையெல்லாவற்றுக்கும் ஊடகங்கள் தான் பேருதவி செய்யவேண்டும். மக்களின் காலடிக்கு தினமும் போய்வருகின்றன ஊடக அலைகள். உலகில் சுனாமி எச்சரிக்கை விடுக்கும் நல்ல சேவை செய்யும் ஆராய்ச்சி மையங்கள் பல இப்பொழுது தோன்றிவிட்டன. அது போலவே  இயற்கை அனர்த்தங்கள் குறித்தும், அதன் போதான முதலுதவிகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்விகள், பிரச்சாரங்கள் போன்றவற்றை ஊடகங்கள் தினமும் முன்னின்று செய்துவரின் பல பேரிழப்புக்கள் தடுக்கப்படலாம்.  அறிந்த மக்கள், அறியாதவர்களிடமும், பாமரர்களிடமும் எடுத்துச் சொல்லாவிடின், சுனாமிக் கொள்ளையருக்கும் நமக்குமென்ன வித்தியாசம் இருக்கப் போகிறது ? நீருக்குத் தாகமெடுத்து உயிர்களைப் பருகித் துப்பவிடுவது இன்னும் எத்தனை நாளைக்கு ?

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    மாவனல்லை,

    இலங்கை.

    mrishanshareef@gmail.com

    Share
  • பிறகும் தொடரும் தீவின் மழை

    எம்.ரிஷான் ஷெரீப்

    1437820074-4948

    மழை வெளி நிலத்தின் பட்சிகள்

    ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்

    மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

     

    எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை

    மென்குளிரைப் பரப்பியிருக்க

    நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்

    நடந்து வந்த பாதையது

     

    தீவின் எல்லாத் திசைகளிலும்

    கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்

    அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட

    கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்

    ‘கருமேகக் கூட்டங்களற்ற வானை

    ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்

    சிரட்டைகளால் செதுக்கப்பட்ட

    அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்

    இவ்வாறாக

    கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு

    உன் சேமிப்பில் வந்தது

    மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்

     

    புனித ஸ்தல மரமொன்றில்

    கடவுளுக்காகத் தொங்க விடப்பட்டிருந்த ஏவல் பொம்மைகள்

    வெயிலை வேண்டும் அவர்களது பிரார்த்தனைகளை

    பொய்ப்பித்தே வந்தன

     

    சூரியனையும் நிலவையும் நட்சத்திரங்களையும்

    நேரில் பார்த்திரா அந்த ஊர்வாசிகள்

    நம்மிடம் அவை பற்றிக் கேட்டார்கள் இல்லையா

    ஆனாலும் அப் பிரதேசத்துக்கும்

    அவை தினந்தோறும் வந்தன

    மழைத் திரை ஒரு நீர்க்கோடாய்

    அவற்றை அவர்களிடமிருந்து மறைத்தது

     

    ‘விதியில் எழுதப்பட்டவர்கள்,

    சமுத்திரத்தில் வழி தவறி

    திசைகாட்டி நட்சத்திரத்தைத் தேடித் தொலைந்தவர்கள்

    முன்பெல்லாம் அத் தனித் தீவில் கரையொதுங்கினர்’

    என்றவர்கள் கூறியதை

    நீ குறித்து வைத்துக் கொண்டாய்

     

    தொலைதூரம் பறந்து சென்ற

    வலசைப் பறவைகள் மட்டுமே கண்டிருந்த வெயிலை

    ஒருபோதும் அறிந்திரா அத் தீவின் சிறார்கள்

    அதன் நிறத்தை, வாசனையை

    அது நம்மைத் தொடும்போது எழும் உணர்வைப் பற்றி

    மழை கண்டு ஆனந்தித்திருந்த நம்மிடம் வினவியதும்

    ‘எவ்வாறு உரைத்தல் இயலும்’ என்றாய்

    சிறிதும் கருணையேயற்று

     

    ஆவி பறக்கும் உஷ்ணப் பானங்களை அருந்தியபடி

    பிரயாணிகள் அனைவரும் சுற்றிப் பார்த்த பின்

    அத் தீவை மழையிடம் தனியே விட்டுவிட்டு

    கப்பலில் நமது தேசம் வந்து சேர்ந்தோம்

     

    ஆனாலும் அன்றிலிருந்து எப்போதும்

    நமது மர வீட்டின் தாழ்வாரத்தில்

    ஈரத் துளி விழும் சப்தம்

    கேட்டுக் கொண்டேயிருக்கிறது இரவிரவாக

     

     

    Share