Tag: காவிரி மைந்தன்

  • ஆனந்தம் விளையாடும் வீடு… ‘நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு’.. நீயில்லை என்றால் தெரியாது கிழக்கு’

    காவிரி மைந்தன்

    கணவன் – மனைவி என்கிற பந்தமுடன் தொடங்கும் இல்வாழ்க்கை இனிமையானது!  இனிதானது!  ‘சம்சாரம் என்பது வீணை;  சந்தோசம் என்பது ராகம்’ என்பார் கண்ணதாசன்.

    பருவகாலங்களில் இருபாலரும் கனவாய்ச் சுமந்திடும் இல்லற வாழ்வு இனிதாய் துலங்கும் திருநாள் வருமே!  திருமணம் எனுமே!  சுற்றம் சூழ நட்பும் பேண புதிய வாழ்க்கைக் கதவு திறக்கப்படுமே!  அவன் என்பது அவளுக்காகவும்.. அவள் என்பது அவனுக்காகவும் என ஒரு அழகிய வட்டம் தோன்றும்.ஒருவருக்கொருவர் புரிந்து அனுசரித்து விட்டுக் கொடுத்து வாழுகின்ற தம்பதியர் மட்டுமே இல்வாழ்க்கையில் முழுமையாக வெற்றி பெறுவார்கள்.

    இந்தப் பந்தத்தின் மூலம் ‘தாய்’ என்றும் ‘தந்தை’ என்றும் ஆகின்றனர்.  நேற்றுவரை ஒருவருக்கொருவராய் இருந்தவர்கள் – இன்று முதல் இருவரும் – தமக்குப் பிறந்த ஓருயிர்க்காக புதியதாய் பிறப்பெடுக்கின்றார்கள்.  காலச்சக்கரம் சுழல – ஒன்று இரண்டாக .. கணவன் மனைவி என்கிற நிலையிலிருந்து உயர்வு பெற்று – தந்தை.. தாய்.. மகன்.. மகள்  என இல்லற வாழ்வு தொடர்கிறது!  அன்பினால்,  நிரப்பப்படும் உள்ளங்கள் அழகுடன் காட்சி தரும்! இன்பமே என்றுமே என இதயங்கள் முழங்கி வரும்!  தன்னுயிர் நீயென ஒன்றினை ஒன்று எப்போதும் சார்ந்திருக்கும்!  இந்தச் சொந்தங்கள் வாழ்க! வாழ்கவே!! என்றே இறைவனின் அருளிருக்கும்!

     santhippu

    ‘சந்திப்பு’ என்கிற திரைப்படத்திற்காக அமைந்த பாடலில் ஒன்று!  கவிஞர் வாலி வரைந்த கோலமிது!  சிறுவயது முதலாகவே உள்ளமும் உதடுகளும் முணுமுணுக்கும் இனிமையான கீதமிது!

    ஆனந்தம் விளையாடும் வீடு… நான்கு

    அன்றில்கள் ஒன்றான கூடு..

    அன்றில் பறவைகள் என்றொரு வகைப் பறவைகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது!  ஒன்றைப் பிரிந்து ஒன்று உயிர் வாழாதாம்!  அப்படி இந்தச் சொந்தங்கள் கூடி வாழ்கின்றன என்பதற்காக உவமை கலந்து ஊட்டியிருக்கிறார்.  ‘நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு’..  நீயில்லை என்றால் தெரியாது கிழக்கு’  வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.. இது வாழ்க்கை வெளிச்சம்!  திரைப்படளிது என்று மட்டும் கொள்ளாமல் இல்லற வாழ்க்கையின் அழகிய சூத்திரம் வரையப்பட்டுள்ள வடிவம் இப்பாடல் என்றே மனதில் கொள்ளுங்கள்.. வாழ்வை வெல்லுங்கள்!

    msv tms ps vaaliஆனந்தம் விளையாடும் வீடு -இது
    ஆனந்தம் விளையாடும் வீடு
    நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
    நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
    ஆனந்தம் விளையாடும் வீடு

    ஒரு நூல் கொண்டு உருவான மாலை
    ஒரு நூல் கொண்டு உருவான மாலை
    இன்பம் நாள் தோறும் பூ பூக்கும் சோலை-இது
    ஆனந்தம் விளையாடும் வீடு

    நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
    நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
    நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
    நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
    அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு
    அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு
    ஆனந்தம் விளையாடும் வீடு -இது
    ஆனந்தம் விளையாடும் வீடு

    ஆ-மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
    மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
    மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
    மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
    எடுத்தாலும் என்ன எழேழு பிறவி
    நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி
    ஆனந்தம் விளையாடும் வீடு –
    நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
    ஆனந்தம் விளையாடும் வீடு

    இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே
    எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
    எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
    பெ-நீ தானே எங்கள் திருக்கோயில் விளக்கு
    நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
    இரு-ஆனந்தம் விளையாடும் வீடு –
    நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
    ஆனந்தம் விளையாடும் வீடு

     http://www.youtube.com/watch?v=pHiqJbj8bFo

    Share
  • மயக்கும் மாலைப் பொழுதே நீ போ.. போ…  – கவிஞர் விந்தன்

    காவிரி மைந்தன்

     vindhan

    நினைக்கும் போதே இனிக்கும் பல்லவி…  கூண்டுக்கிளி திரைப்படத்திற்காக கவிஞர் விந்தன் அவர்கள் எழுதிய இந்தப் பாடல்… இருபெரும் கதாநாயகர்கள் – எம்.ஜி..ஆர்., சிவாஜி இருவருக்குள் எவர் இடம் பெறும் பாடலாய் திரையில் தருவது என்கிற கேள்வி எழவே, தவிர்க்க வேண்டிய பாடலானது. அப்படத்தின் இயக்குனர் டி ஆர். ராமண்ணா அவர்கள் அடுத்து இயக்கிய குலேபகாவலி திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.  – ஜி. வரலட்சுமி நடிப்பில் இப்பாடலைப் பயன்படுத்தினார்கள் என்பது தகவல்.

    மென்மை மட்டுமே வார்த்தைப் பூக்களாய் விரிந்து கிடக்கும் இப்பாடலில் இனிமை முழுமையாய் பரவிக் கிடைக்கிற அதிசயம் நம்மை இப்பாடலில் அடிமையாக்குகிறது பாருங்கள். குலேபகாவலி திரைப்படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றிருந்தாலும் கூண்டுக்கிளி தந்த பாடல் இது என்பதால் இதன் இசை திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்களையே சாரும்.   குரலில் அமுதம் பொழியும் இரண்டு குயில்கள் ஜிக்கி, ஏ.எம்.ராஜா …

    மகுடியின் முன் நாகங்கள் போல் ..புன்னாகவராளி ராகமோ என்று நம்மை திகைக்க வைக்கும் ஒரு மயக்கத்தை இசை அமைப்பாளர் இப்பாடலில் கையாண்டிருக்கிறார்.  இரவின் மடியில் கேட்க இதைவிட இனிமையான பாடல் எங்கே?

    பார்த்திபன் கனவிற்காக கவிஞர் விந்தன் எழுதிய “இதய வானில் உதய நிலவே எங்கே போகிறாய்” .. அடடா.. இதே போல் இனிமையான கானம் அல்லவா?  பிறகு எப்படி.. இந்தக் கவிஞர் பிரபலம் ஆகவில்லை என்கிற ஏக்கம் பற்றிகொள்கிறது.

    கனிந்த சொற்களின் கவிதை மொழியினை கைவரப் பெற்றவர் இன்னும் இன்னும் பல இனிமையான பாடல்களை எழுதியிருக்கலாமே..

    ஜி. வரலட்சுமி அவர்களின் பேசும் விழிகளும் மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்பும் இன்பம் சேர்க்கின்றன.

     kulebagavali

    ஆஆ… ஆஆஆஆஆஆஆ ஆஆஆ..

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா
    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
    பசும்புல் படுக்கப் பாய் போடுமே
    பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
    பசும்புல் படுக்கப் பாய் போடுமே

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

    பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
    பாடும் தென்றல் தாலாடுமே
    பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
    பாடும் தென்றல் தாலாடுமே
    புன்னை மலர்கள் அன்பினாலே
    புன்னை மலர்கள் அன்பினாலே
    போடும் போர்வை தன்னாலே
    போடும் போர்வை தன்னாலே

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

    கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
    காண்போம் பேரின்பமே
    கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
    காண்போம் பேரின்பமே
    வானிலும் ஏது வாழ்விது போலே
    வசந்தமே இனி எந்நாளும்
    வானிலும் ஏது வாழ்விது போலே
    வசந்தமே இனி எந்நாளும்

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா
    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

    http://www.youtube.com/watch?v=g-MZUdwH9hg

    Share
  • ஐந்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    முனைவர் அண்ணாகண்ணன்
    5_five

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மையக் கருவுடன், 2010 மே 16 அன்று தன் முதல் இடுகையை வல்லமை வெளியிட்டது. 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 2014 மே 16 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 4 ஆண்டுகளில் வல்லமை ஒட்டுமொத்தமாக 5726 படைப்புகளை வெளியிட்டுள்ளது. இவற்றுக்கு 8204 பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன. பல நாடுகளிலிருந்து பல்லாயிரம் வாசகர்கள், இலட்சத்துக்கும் மேலான முறைகள், வல்லமையின் பக்கங்களை வாசித்துள்ளார்கள்.

    2013 மே 16 முதல் 2014 மே 15 வரையிலான இந்த ஓராண்டில் வல்லமை, முக்கியத்துவம் வாய்ந்த பல முத்திரைகளைப் பதித்துள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.

    வல்லமையின் தொடர்கள்

    இந்த ஒரே ஆண்டில் வல்லமை, 30க்கும் மேற்பட்ட தொடர்களை வெளியிட்டுள்ளது.

    திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேசி மோகன், வெண்பாவிலும் சந்தப் பாடல்களிலும் தமக்குள்ள தனித் திறனை வல்லமையில் வெளிப்படுத்தியுள்ளார். திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் அவர் தினந்தோறும் இயற்றி வரும் துடிப்பான, வீச்சு மிகுந்த பாடல்கள், வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

    பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய சைவ சமயம் அறிவியல் மையம், ராமஸ்வாமி ஸம்பத் எழுதிய உத்தமன் அலெக்சாண்டர்!.., ராமன் வரும் வரை காத்திரு, தேமொழியின் பிக்கோலிம் புளுகு, மலர் சபாவின் நான் அறிந்த சிலம்பு, புவனேஷ்வரின் மகாபாரத முத்துகள், இவள் பாரதியின் சிறுகை அளாவிய கூழ், நாகேஸ்வரி அண்ணாமலையின் கென்யா பயணம், இஸ்ரேல் பயணம், சு.கோதண்டராமன் எழுதி வரும் பாரதியின் வேத முகம், ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! உள்ளிட்ட தொடர்கள், நல்ல வரவேற்பைப் பெற்றன.

    சி.ஜெயபாரதனின் அணுவியல் – அறிவியல் கட்டுரைகள், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், காதல் நாற்பது, பவளசங்கரியின் வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! , சுபாஷிணி ட்ரெம்மலின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!, இன்னம்பூரானின் கனம் கோர்ட்டார் அவர்களே, சாகர் பொன்னியின் செல்வனின் அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை, சங்கர் ராமனின் நம்பிக்கை.. அதானே எல்லாம்!, செல்வனின் நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! கவியரசு கண்ணதாசன் குறித்த காவிரி மைந்தனின் தொடரும் சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், சச்சிதானந்தம் எழுதும் அறுமுகநூறு, பரம்பொருள் பாமாலை, கே.எஸ்.சுதாகரின் அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்கள், மேகலா இராமமூர்த்தி எழுதிய புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள், விசாலம் அவர்களின் இசையும் கோயிலும் உள்ளிட்ட தொடர்கள் மிகுந்த தரமும் நேர்த்தியும் கொண்டவையாய் அமைந்தன.

    மின்னூல்கள் பகுதியில் தேமொழியின் முயற்சியில், குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை நலம் என்ற 60 பகுதிகள் கொண்ட நூல், முழுமையாக இடம் பெற்றுள்ளது.

    போட்டிகள்

    இந்த ஓராண்டில் வல்லமை 4 போட்டிகளை நடத்தியுள்ளது.

    வல்லமை – ஐக்கியா டிரஸ்டு சிறுகதைப் போட்டி

    ஐக்கியா டிரஸ்டுடன் இணைந்து வல்லமை நடத்திய சிறுகதைப் போட்டியின் மே, ஜூன் மாதங்களிலும் தொடர, வெங்கட் சாமிநாதன் மாதந்தோறும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளிலிருந்து சிறந்த மூன்று சிறுகதைகளை நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்து அளித்தார். இதன் முடிவுகள் ஆகஸ்டில் வெளியாகின. முன்னர் அறிவித்தவாறு, வல்லமைச் சிறுகதைகள் என்ற தலைப்பில் இவற்றைத் தாரிணிப் பதிப்பகம் நூலாக வெளியிட்டது. இந்தப் போட்டியை எம்முடன் இணைந்து நடத்திய வையவன் அவர்களுக்கு நன்றி.


    புத்தக மதிப்புரைப் போட்டி

    தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. அந்த வகையில் இந்தப் போட்டியை 11.10.2013 அன்று வல்லமையில் நாம் அறிவித்த போது, இதற்கு முன் இத்தகைய போட்டி நடந்ததில்லை என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அந்தரவெளிகள் குழுமத்திலும் (18.08.2010) முகநூலில் இயங்கும் டீக்கடைக் குழுமத்திலும் (02.02.2014) புத்தக மதிப்புரைக்கான சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இவையல்லாமல், தமிழின் எந்த நூலுக்கும் விமர்சனம் எழுதலாம் என்ற கூடுதல் சுதந்திரத்துடன், விரிந்த தளத்தில் பொதுவான புத்தக மதிப்புரைப் போட்டியை நடத்தியதில் வல்லமை முன்னோடியாக விளங்குகிறது. இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துவதில் உறுதியாக இருந்த கவிதாயினி மதுமிதா அவர்களுக்கும் சிறந்த மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டி

    வல்லமை வளர்தமிழ் மையமும் – மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து முதல் இணையவழி சர்வதேச அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டியை (First International Peer Reviewed Scientific Tamil Oration Competition For School Students) நடத்தின; கோவை, மேட்டுப்பாளையம் அருகில் அன்னூரில் அமைந்துள்ள கே.ஜி. சர்வதேசப் பள்ளி மாணவர்கள் 5 பேரின் அறிவியல் தமிழ்ச் சொற்பொழிவை ஒளிப்பதிந்து, யூடியூபில் ஏற்றினோம். 100 நாள்கள் அவற்றைப் பார்த்து மதிப்பிட அவகாசம் அளித்தோம். வல்லமைக் குழுவினர் அவற்றை மதிப்பிட்டு, நான் விரும்பும் வடிவியல் கருவி என்ற தலைப்பில் உரையாற்றிய சுமதியை முதல் பரிசுக்கு உரியவராகத் தேர்ந்தெடுத்தோம். இந்தத் திட்டத்தை அறிவித்த மருத்துவர் செம்மல் அவர்களுக்கும் கே.ஜி.சர்வதேசப் பள்ளி நிர்வாகி மகேஷ் துளசி அவர்களுக்கும் நம் நன்றிகள்.

    Vallamai_oratory_competitio

    கடித இலக்கியப் போட்டி

    அன்புள்ள மணிமொழிக்கு என்ற தலைப்பில், முனைவர் தேமொழி அறிவித்த கடித இலக்கியப் போட்டி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 2013ஆம் ஆண்டு மறைந்த அவர்தம் சகோதரி மணிமொழியின் நினைவாக நடத்தப் பெற்ற இந்தப் போட்டியில் 60க்கும் மேலான கடிதங்கள் வந்து சேர்ந்தன. பல புதிய கோணங்களில், நெகிழ்வூட்டும் தருணங்களுடன் இக்கடிதங்கள் அமைந்தன. முதலில் மூன்று பரிசுகள் என அறிவித்தோம். அடுத்து, கூடுதலாக மூன்று ஆறுதல் பரிசுகளைத் தேமொழி அளிக்க முன்வந்தார். நடுவர் பொறுப்பேற்ற இசைக்கவி ரமணன் அவர்கள், தம் பொறுப்பில் கூடுதலாக ஆறு பேருக்குச் சிறப்புப் பரிசுகளை அறிவிக்க, மொத்தம் 12 பேர் பரிசு பெற்றனர். இது, கடித இலக்கியத்திற்கு அழுத்தமான பங்களிப்பாகவும் அமைந்தது. அந்த வகையில் இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்த முன் வந்த தேமொழி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

     
    வல்லமை.காம் ISSN: 2348 – 5531

    வல்லமை.காம், பன்னாட்டுத் தரநிலைத் தொடரியல் எண்ணைப் பெற்றுள்ளது. (International Standard Serial Number – ISSN: 2348 – 5531). இந்த எண்ணைப் பெற்றுள்ள மின்னிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளுக்குக் கல்வித் துறையில் மதிப்பும் மதிப்பெண்ணும் உண்டு. கல்லூரி / பல்கலைக்கழகம் / ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்கள், இத்தகைய இதழ்களில் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால், ஒவ்வொரு கட்டுரைக்கும் பல்கலைக்கழக மானியக் குழு மதிப்பெண் வழங்குகிறது. இது, அவர்களின் பணி வாய்ப்புக்கும் பதவி உயர்வுக்கும் உதவும். இத்தகைய கல்விப் புல முக்கியத்துவத்தை வல்லமை மின்னிதழ் பெற்றுள்ளது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்.

    ஃபேஸ்புக் & வாட்ஸ் அப் குழுமம்

    கூகுள் குழுமத்தைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலும் வல்லமை புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. https://www.facebook.com/groups/682321115112693/; வாட்ஸ் அப், செல்பேசி வலைப்பின்னலிலும் Vallamai – Tamil Minds என்ற புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. வல்லமை அன்பர்கள், இவற்றில் இணைந்து கலந்துரையாடுமாறு அழைக்கிறோம்.

    ஆசிரியர் குழுவில் மேகலா, தேமொழி

    வல்லமை ஆசிரியர் குழுவில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழாசிரியர் மேகலா இராமமூர்த்தி, முனைவர் தேமொழி ஆகியோர் இணைந்துள்ளார்கள். மேகலா, திருக்குறள், புறநானூறு, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட பலவற்றில் வாசிப்பும் நேசிப்பும் கொண்டவர். முனைவர் தேமொழி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் வசித்து, திட்ட ஆய்வாளராகவும் பணி புரிந்தவர்; கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறப்புகள் வாய்ந்த இந்த இருவரையும் வல்லமை ஆசிரியர் குழு சார்பில் இனிதே வரவேற்கிறேன். ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் இணைந்துள்ள பெருவை பார்த்தசாரதி, பர்வதவர்த்தினி ஆகிய இருவரும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்கள். இவர்களின் துணையுடன் வல்லமை மேலும் ஒளிரும்.

    கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

    வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளோம். கண்ணதாசனை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது பங்களிப்பு என்ன? உங்களுக்கு அவரிடம் பிடித்தவை என்னென்ன? உங்கள் வாழ்க்கையில் அவரது பாடல்கள், எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இப்படியாக, எந்தக் கோணத்திலும் உங்கள் கட்டுரைகள் அமையலாம். மொத்தப் பரிசு, ரூ.4250. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பாகக் காவிரி மைந்தன் மற்றும் கிரி ஐங்கரன், இதனை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள். வாசகர்கள் இதிலும் துடிப்புடன் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

    புதிய தொடர்கள்

    வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை நாம் தரிசிக்கலாம். இவர், பாரதி, இசை, இலக்கியம், பக்தி, யோகம், ஞானம்.. எனப் பல துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பாக, இந்தப் புதிய பகுதி அமைகிறது. இது தவிர, கே.ரவியின் கவிதைகள், சு.ரவியின் கவிதை ஓவியங்கள், கேஷவ் ஓவியங்கள் எனப் பலவும் தொடர்ந்து வல்லமையை அலங்கரித்து வருகின்றன.

    புதிய முயற்சிகளுக்கு வல்லமை, சிறந்த களமாக உருவாகி வருகிறது. கருத்துச் சுதந்திரமும் இயல்பான நட்புறவும் ஆரோக்கியமான பின்னூட்டங்களும் இதனைத் தரமான மின்னிதழாக வளர்த்தெடுத்துள்ளன. இதனை இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல, அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

    புதிய திட்டங்கள்

    வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதிந்து, மேலும் அதிகப் பணிகளை ஆற்றத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு நேரம், நிதி, வளங்கள், தன்னார்வலர்களின் உழைப்பு.. எனப் பலவும் தேவை. எனவே, உங்களால் எந்த வகையில் எங்களுக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தால், அடுத்தடுத்துத் திட்டமிட வசதியாய் இருக்கும்.

    வல்லமையின் பணிச் சுமை அதிகரித்து வருவதால், புதிய தன்னார்வலர்களை வரவேற்கிறோம். இதழியல் ஆர்வமுள்ள மாணவர்களையும் இல்லத்தரசிகளையும் ஓய்வுபெற்ற ஆர்வலர்களையும் எழுத்தார்வமும் படைப்பூக்கமும் கொண்ட திறனாளர்களையும் ஆவலுடன் அழைக்கிறோம். நுட்பியல் திறனுள்ள அன்பர்கள் ஒத்துழைத்தால், வல்லமைக்கு என ஆண்டிராய்டு குறுஞ்செயலிகளை உருவாக்கலாம்.

    நன்றிகள்

    வல்லமையின் இந்த வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. அர்ப்பணிப்பு மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழு, எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன், ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய காயத்ரி பாலசுப்பிரமணியன், கவிநயா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள், இன்னும் வளர்வோம்.

    Share