Tag: சேசாத்திரி ஸ்ரீதரன்

  • மருத்துவமனை இயங்கிய கோவில்கள்

    மருத்துவமனை இயங்கிய கோவில்கள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    ஒரு நோயாளி தங்கிப் பண்டுவம் மேற்கொள்ளும் இடம் தான் ஆதுலர் சாலை என்பது. ஆதுலர் என்றால் நோயாளி சாலை என்றால் ஆதரவு விடுதி எனப் பொருள். முடியாட்சியின் போது கோவில் மண்டபங்களே இத்தகு மருத்துவமனைகளாக இருந்தன. இப்படியான மருத்துவமனைகள் பல ஊர்களில் செயற்பட்டன. அதற்கான கல்வெட்டுச் சான்றுகள் நமக்கு சில கோவில்களில் காணக் கிடைக்கின்றன. கோவில்கள் பண்டு வழிபாட்டு இடம் என்பதோடு அல்லாமல் ஆடல் பாடல் இசைக் களமாக, வேதக் கல்விக் கூடமாக, சரசுவதி பண்டாரம் எனும் நூலகமாக, மருத்துவகமாக செயற்படும்படியாக வேந்தர், மன்னர், அரைசர், கிழார்களின் பெரும் நிதி ஆதரவினால் கட்டியெழுப்பப்பட்டன. இத்தகு மருத்துவகங்களில் சமஸ்கிருதம் அறிந்த பிராமணர் ஆயுர்வேத மருத்துவத்தையும், மங்கலக் குலத்தார் என்ற அம்பட்டர் தமிழ் மருத்துவத்தையும், அறுவை மருத்துவத்தையும் மேற்கொண்டனர். இங்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி இலவசமாகவே மருத்துவம் அளிக்கப்பட்டது. அந்நாளில் பிணம் கையாளும் வெட்டியான்கள் தவிர்த்து வேறு எவரும் தீண்டாமைக்கு ஆட்படவில்லை. மருத்துவத்தில் ஈடுபட்டோருக்கு வைத்தியபோகம், மருத்துவக்காணி என்ற பெயரில் விளை நிலமும் வீட்டு மனையும் மானியமாகப் பலரால், ஊர்ச்சபையால் வழங்கப்பட்டன. இது பற்றிய கொடையாளர் பெயர்கள், மானியம் பெற்ற மருத்துவர் பெயர்கள் போன்றன கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அக்கால மருத்துவர் தமக்கு கொடையாக விளைநிலமும், வீட்டு மனையும் பெற்றுக் கொண்டு வாழ்க்கை முழுவதும் கட்டணம் பெறாமல் அனைவருக்கும் இலவச மருத்துவம் செய்து மக்கள் தொண்டு புரிந்தனர். ஆனால் இன்று மருத்துவம் பணம் கொழிக்கும் ஒரு முதலாளியத் தொழிலாகவே ஆகிவிட்டது. மக்கள் தம் பிள்ளைகளை பணம் சம்பாதிப்பதற்காகவே மருத்துவம் படிக்கச் வைக்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி > கீரக்களூர், திருவரங்கம், திருவாவடுதுறை, கும்பகோணம் > வேம்பத்தூர், நன்னிலம் > திருப்புகலூர், பழனி > அம்பிலிகை, கோயில் தேவராயன் பேட்டை > கும்பகோணம், திருப்பத்தூர், கூகூர், கடத்தூர், குன்றத்தூர், சிறுவாக்கம், சிதம்பரம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் ஆதுரர் சாலை பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. திருமுக்கூடல் கல்வெட்டு மருத்துவப்  பணியாளருக்கு வழங்கப்பட வேண்டிய நாள் கூலி, அதன் செயற்பாட்டை பற்றி விவரமாக பதிவு செய்கின்றது. அவற்றில் சில கல்வெட்டுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

    நங்கை எட்டிக்கூறு “காஸ்யபன் அரையன் அரைசான ராஜகேஸரி மங்கலப் பெரையன்” உடைய மருத்துவம் செய்வதற்காக அளிக்கப்பட்ட ‘வைத்தியக் காணி’ நிலம் தவறானது எனவே காணி நிலமும், வீடும் செல்லாது எனச் சபையோரால் அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் அவனுக்கு மாற்றீடாக நிலம் கிடைக்க நடந்த வழக்கைப் பற்றி திருத்துறைப்பூண்டி கீரக்களூர் கிராம அகத்தீஸ்வரர் கோயிலுள்ள இரண்டாம் இராசேந்திரனின் 11-ஆம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பண்டு பறையரே ஊரில் மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்கு நாகஸ்வரம், தவில் இசைத்தனர். இதனால் மங்கலப் பறையன் எனப்பட்டனர். இவர்கள் மயிர் மழிக்கும் தொழிலுக்கு கத்தியைக் கையாள்வதால் அறுவை மருத்துவமும் செய்தனர். நங்கை எட்டிக்கூறில் வாழ்பவனும் காசியபன் எனும் பிராமண அறுவை மருத்துவனின் (அரைசு) அறுவைமனைக் கூடமான ‘ராஜகேசரி’யில் பயின்றவனுமான மங்கலப் பறையன் என்பதே இக்கல்வெட்டுத் தொடருக்கான சரியான பொருள். இதை விளக்கியோர் தப்பும் தவறுமாக படித்துப் பொருள் கூறி உள்ளனர். இதில் புழங்கும் அரையன் என்ற சொல்லை அரச பட்டமாகத் தவறாகப் பொருள் கொண்டதால் பெறையன் என படிக்க வேண்டிய இடத்தில் பே(ர)ரையன் என்று படித்துவிட்டனர். பேரரையன் என்ற சொல் அரைசனை விட பதவியில் உயர்ந்த மன்னனைக் குறிப்பது. மன்னன் இப்படி மெய்க்காவல், மருத்துவப் பணி செய்வானா? என்று சிந்திக்கவில்லை. சோழர் கால எழுத்தில் ஏகார ஓகார நெடில் குறிகளுக்கு இப்போது உள்ளது போல் இரட்டைக் கொம்பு முன் துணைக் குறி கிடையாது. அதனால் பெறையன் என்பதை பேரையன் என்று படித்துள்ளனர். இக்கல்வெட்டுக் குறிப்பு பறையர் ஊரிலும், கோவிலிலும் தீண்டாமைத் தடை ஏதுமின்றிப் போய் வந்ததற்கு ஒரு சான்று.

    கோவில்களில் இப்படிப் பல்எண்ணிக்கையில் பிராமணர்களை போற்றியதால் தான் வருணாசிரமத்தில் பிராமணர் என்ற பிரிவே உண்டாகியது. இப் பிரிவையும் மற்ற மூன்று வருணப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் அதிகாரமும், பெரும் படையும், செல்வக் குவையும் பெற்ற ஆட்சியாளர்களே அன்றி பிராமணர் அல்லர் என்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நால் வருணாத்தை பிராமணரே உருவாக்கியதாக ஆங்கிலர் ஆட்சியில் பொய்ப் பரப்புரை செய்யப்பட்டு இன்று வரை பரவலாக நம்பப்பட்டு வருகின்றது. ஆனால் கல்வெட்டுச் சான்றுகள் அந்தக் கருத்தை உடைத்து எறிந்து நமக்கு உண்மையைத் தெளிவிக்கின்றன.

    சோழர், பாண்டியர் ஆட்சியில் கல்வெட்டு செப்பேடு எழுதும் ஆசாரிகள், தமிழ் மருத்துவர்கள், ஜோசியர்கள், வணிகர்கள், வரி மதிப்பீடு செய்பவர்கள் ஆகியோர் தம் தொழிலை மேற்கொள்ள எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற வகையில் தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை, வாழ்க்கைத்தரம் தமிழ் வேந்தர் ஆட்சியில் மிகுந்து இருந்தது. ஆனால் பிற்பட்டு வந்த நாயக்கர் ஆட்சியில் இதன் விழுக்காடு குறைந்தது என்றால் அதற்கு தெலுங்கு ஆட்சியாளர் தானே பொறுப்பு?  ஆனால் பிராமணர் தான் பிறர் கல்வி கற்பதை தடுத்துவிட்டனர் என்று பொய் பரப்பினர். இப் பொய்களையும் கல்வெட்டுகள் பொய்யாக்கின.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருமுக்கூடல் வேங்கடேச பெருமாள் கோவில் 55 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ (மெய்க்கீர்த்தி உள்ளது)

    வீரத்தனிக்கொடி தியாகக்கொடி மேற்பவர் வருகென்று நிற்ப கோத்தொழிலுரிமையிநெய்தி   அரைசு வீற்றிருந்து மேவருமனுநெறி விளக்கிய கோவி ராஜகேசரிவர்மரான முடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்க்கு  யாண்டு அஞ்சாவது கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழகேரளத் திருமாளிகையில் ராஜேந்திரசோழ மாவலி வாணராஜநில்  எழுந்தருளியிருந்து ஜயங்கொண்ட

    சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருமுக்கூடல் மஹாவிஷ்ணுக்கள் தேவதானமாய் வருகின்ற காலியூர்க் கோட்டத்துத் தேரோடு பருவூர் நாட்டு வயலைக்காவூர(க)கள் சாலைக் கிறுத்து வருகின்ற பொந் எழுபத்தைங் கழஞ்சும் இச்சாலைக்குச் சாலபோகமாய் வருகின்றபடி  (இதன் பின் இரண்டு திருவிழாவும் ஒரு வேதபாடசாலை அதன் விடுதியும் பற்றிய 7 பக்கத்திற்கு நீண்ட கல்வெட்டு இடம்பெறுகின்றது)

    _ _ _ ஆதுல சாலைக்கு வேண்டுங் கலமிருங் குசவனுக்கு  நாளொன்றுக்கு நெல் குறுணியுங்  ஆழ்வாற்குப் பரிசட்டமுஞ் ஜனனாதன் மண்டபத்திலோது _ _ _ _  ஓத்துக் கேட்பாற்கும் ஆதுலற்கும் ஒலிக்கும் ஈரங்கொல்லிக்கு(ம்) நாளொன்றுக்கு நெல் நானாழியும், ஜனனாதன் மண்டபமும் ஆதுலசாலையும் நிமந்த _ _ _ _ குந் திருமெய்காவலே திருமுக்கூடற் பெறையனுக்கு நாளொன்றுக்கு நெல் நானாழியுங் காசொன்றும், திருச்சுற்று மாளிகை புதுக்குப்புறத்துக்கு நெல் நாற்பதின் கலமுஞ்ச _ _ _

    இம்மண்டபத் துண்ணுஞ் சாத்திரர்க்குங் கிடைகளுக்கும் பணி செய்யும் பெண்டுக(ளிருவர்க்கு)ப் பேரால் நெல்லு நாநாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறாற் காசொன்றாகக் காசிரண்டும் சாத்திரர்குங் கிடைகளுக்கும் ஆதுலர்க்கும் கிடக்கப் பாயெழுபத்தைந்துக்குக் காசிரண்டும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் தலைக்கட்டச் சனியொன்றுக் கெண்ணெயிரு நாழியாக ஆண்டொன்றிற் சனி ஐம்பத்தொன்றுக் (கெண்ணை) னூற்றிரு நாழிக்கும் ஜநநாதன் மண்டபத்தோத்துக் கேட்பார்க்கு இராயெரியும் விளக்கொன்றுக் கெண்ணை உழக்காக ஆண்டொன்றுக் கெண்ணை தொண்ணூற்று நாழியும் இவ்வெண்ணை நூற்றுத் தொண்ணூற்றிரு நாழிக்குக் காசொன்றுக் கெண்ணை யிருபதி நாழியாக காசொன்பதைரையே யரைக்காலு ஜந நாதன் மண்டபத்(துக்கு) புதுக்குப் புறத்துக்கு  நெல் நாற்பதின் க(லமு)ம்

    ஆது(ல)ர் சாலை வீரசோழநில் வ்யாதிபட்டுக் கிடப்பார் பதிநைவர்க்குப் பேராலரிசி நாழியாக அரிசி குறுணியெழு நாழிக்கு நெல் (தூணி ஐ) ஞ் ஞாழியுரியும் வ்யாதிபட்டுக் கிடப்பார்க்கும் பலபணி நிவந்தகாறர்க்கும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும்    வைத்தியஞ் சொல்லக் காணியாகத் தநக்குந் தந் வர்க்கத்தார்க்கும் பெற்றுடைய ஆலப்பாக்கத்து சவர்ண்ணந் கோதண்டராமந் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் காசெட்டும் சல்லியக்கிரியை பண்ணுவா(னொருவ)னுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும் மருந்து பறித்தும் விறகிட்டும்  பரியாரம் பண்ணுவா ரிரு(வரு)க்குப் (பேரால்) நாளொன்றுக்கு நெல் குறுணியாக நெல் பதக்கும் பேரால் காசொன்றாகக் காசிரண்டும் ஆதுலர்க்கு வேண்டும் பரியாரம் பண்ணி மருந்தடும்  பெண்டுகளிருவர்க்குப் பேரால(ரிசி  நா)  நாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறாற் காசரையாகக் காசொன்றும் ஆதுலர்க்குங் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் வேண்டும் பணி செய்(யும் நா)விசனொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் நா நாழியும்

    ஆதுரசாலை வீரசோழனில் ஆண்டொன்றில்லிடு(ம்) மருந்து பிராம்யம் கடும்பூரி யொன்றும், கருங்காய் நீங்க இப்படி _ _ _ டும், வாசா ஹரீதகிப் படியிரண்டும், தசமூல ஹரீதகி படியொன்றும், பல்லாத ஹரீதகி படியொன்றும், கண்டீரம் (படி) யொன்றும், பலாகேரண்ட தைலந் தூணியும், லஸுநாகயேரண்ட தைலந் தூணியும், உத்தம கர்ணாதி தைலந் தூணியும், உ_ _ _(ப)தக்குஞ் சுக்_ _ _சா க்ருதம் பதக்கு(ம்), பில்வாதி க்ருதம் பதக்கும், மண்டூ(க)ர வடகம் இரண்டாயிரமும், த்ரவத்தி நாழியும்,  விமலை இரண்டாயிரமும், சுனெற்றி யிரண்டாயிரமும், தம்ராதி யிரண்டாயிரமும், வஜ்ர கல்பந் தூணிப் பதக்கும், கல்யாண லவணந் தூணிப் பதக்கும், இவை யடுகைக்கு வேண்டும் மருத்(து)களுக்கு நெ_ __(ரையும்) தெ_ _ _யும் உள்ளிட்டன கொள்ளவும் ஆண்டுதோறும் புராணசர்ப்பி புதைக்கப் பசுவி(ந்) நெய் பதக்கும் கொள்ளவும்(க்) காசு நாற்பதும்

    ஆதுரசாலையில் இராயெரியும் விளக்கொன்றுக் கெண்ணை யாழாக்காக நாள் முந்னூற்றறுபதுக் கெண்ணை நாற்பத்தைஞ் ஞாழிக்கு காசிரண்டே காலும் ஜந நாதன் ம_ _ _ன்பில் தன்_ _யனுக்குப் பங்குனியுத்திரந் துடங்கிப் புரட்டாதிந் திருவோணத் தளவும் பரம்பாலூறத் தண்ணீர் கொடுவந்து வை(த்துச் சாய்ப்)பான் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் குறுணியாக நாள் நூற்றென்பதுக்கு நெல் பதிநைங் கலமும் ஏலத்துக்கும் இலாமச்சத்துக்கும் நெல்லிரு_ _ _ பதக்கும் த_ _ _ _ண்யாகம் பண்ணின பிராமணர்க்குத் தக்ஷிணைக்கும் வெற்றிலை வெறுங்காய்க்கும் நெல் கலநே தூணியிரு நாழி முழக்(கே முச்)செவிடும் வயலைக்காவூர் காணியுடைய மாதவன் தாமயன் வர்க்கத்தார்க்குப்  புரட்டாதித் திருவோணத் திநால் குடுக்கும் பரிசட்டம் இர(ண்டு)க்குக்  காசொன்றெ யெழுமா _ _ _மூவாயிரத்திரு நூற்று நாற்பத்து முக்கலனே யிரு தூணிப்பதக்கரு நாழியுழக்கே முச்செவிட்டுக்கும் காசிருனூற் றொருபத்தரையே யிரண்டு மாவுக்கும் இக்காசுதராவிடில் காசொன்றுத் தண்டவாணியோ டொக்கும் பொன் காசு நிறைக்கால் இடுவதாகவும்

    இப்படி யாண்டு ஆறாவது நிமந்தஞ் செய்தபடி இன் – – – – – லுமிடத்து சாத்திரக் கண்காணியோடும் கிடைக் கண்காணியோடும் செல்லக்கடவதாக நிவந்தம் செய்தபடிக்கு கல்லு வெட்டுவித்தார் இன்நாடு கூறு செய்த ஆதிகாரிகள் சோழமண்டலத்து விஜைய ராஜேந்த்ர வளநாட்டு இடையள நாட்டு மீனற்குடையான்

    பசுவதி திருவரங்க தேவநாரான  ராஜேந்த்ர  மூவேந்த வேளார். பாண – – – – – ஏவக் கல்லு வெட்டுவித்தான்  ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப்  புழற் கோட்டத்  தாகுடிநாட்டு அயண்டம் பாக்கத்து இறைவேட்டிந் குமரபாசூர்க்கத்தநான வீரராஜேந்த்ர செம்பியதரையன். இந்த தந்மம் செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் கங்கைகொண்ட சோழ தன்மபாலற்க்கும், இவர் தம்பியார் தா – – – – – – நான சேனாதிபதிகள்   வீரராஜேந்திர தன்மபாலற்குமாய்.  இது கல்லுவெட்டுவித்தான் ஜயங்கொண்ட சோழமண்டலத்து புழல் கோட்டத்து – – – – – நாட்டு ஸதுவேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்ம மாராயன். இ தர்மம் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து மஹாசபையார் ரக்ஷை ஸ்ரீ.

    சாலாபோகம் – உணவுச் சாலைக்கு கொடுத்த நிலம்; ஆதுலர் – நோயாளி, வறியவர்; ஆதுலர் சாலை – உணவும் தங்கும் வசதியும் கொடுத்து பண்டுவம் செய்யும் மருத்துவகம்; பரிசட்டம் – சிலைக்கு சாற்றும் ஆடை; ஓத்து கேள் – வேதபாடம் கேள்; ஒலிக்கும் – துப்புரவாக்கும்; ஈரங்கொல்லி – வண்ணான்; நிமந்த – செலவு திட்டம்; புதுக்குப்புறம் – கட்டடம் புதுப்பிக்க வைத்த நிலம்; சாத்திரர் – வேதம் முதலான வடமொழிக் கல்வி ஆசிரியர்; கிடைகள் – வேதம் பயிலும் மாணவர் குழாம்; கிடக்கப் பாய் – உறங்கப் பாய்; தலைகட்ட – நீராட; நிவந்தக்காரர் – கோவில் ஊழியரில் அவரவர்க்கு உரிய பணிகொண்டோர்; சவர்ணன் –   எல்லா மருத்துவப் பிரிவிலும் வல்லவன், பெரு மருத்துவன், medical expert;  சல்லியக் கிரியை – கூர் ஆயுத காயத்தை ஆற்றும் மருத்துவம்; பரியாரம் – நோய்விடுபாடு, relief; நாவிதன் – மயிர் திருத்துவோன்; சாய்ப்பான் – ஊற்றுவான், இடுவான்; வர்க்கத்தார் – சார்ந்தோர், வழிவந்தோர்; முச்செவிட்டு – ஒரு முகத்தல் அளவை; தண்டவாணி – பொன்னின் மாற்று அறியும் ஆணி; கூறு செய் – வேலையை வகை செய்து நிர்வகி; மஹாசபை – பிராமண ஊர்களில் சபையின் முழுக் கூட்டம்; ரக்ஷை – பாதுகாப்பு.

    விளக்கம்:  இக்கல்வெட்டு வீரராசேந்திரனின் 5-ம் ஆட்சி ஆண்டில் (1068 AD) வெட்டப்பட்டது. மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்தில் அடங்கிய திருமுக்கூடல் பெருமாளுக்கு தேவதானமாய் காலியூர்க் கோட்டத்தின் வயலைக்காவூரார் உணவுச் சாலைக்கு தேவதானமாய் கொடுத்து வந்த 75 கழஞ்சு பொன்னை வீரராசேந்திரனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு முதல் கொடுக்காமல் போகவே தன் 5 – ம் ஆட்சி ஆண்டு முதல் 75 கழஞ்சு பொன்னையும் இவ்வூரால் வந்த வரியையும் இறையிலியாக வீரராசேந்திரன் வழங்கினான்.  இதன் மதிப்பு 147 கழஞ்சும்  216 -1/2 காசும் 2 மாவும் ஆகும். இது கோவிலின் பல்வேறு பணிகளுக்கும், ஆவணியில் ஒரு திருவிழாவும் கார்த்திகையில் ஒரு திருவிழாவும் கொண்டாடுதற்கும், கோவிலில் உண்டு உறைவிட வேத பாடசாலையை நடத்தவும், கோவிலின் ஜனநாதன் மண்டபத்தில் 15 படுக்கையுடன் செயற்பட்டு வந்த மருத்துவமனையை தடையின்றி நடத்திச் செல்லவும் தரப்பட்டது. வேத பாடசாலையில் 14 ஆசிரியரும் 50 மாணவரும் இருந்துள்ளனர். அவர்களுக்கு     அன்றாடப் படியாக தரவேண்டிய நெல்லின் அளவு குறிக்கப்பட்டுள்ளது.

    இம் மருத்துவமனைக்கு தேவையான கலம் வணையும் இரு குயவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு குறுணி நெல்லும், சிலையின்  உடுப்பை, ஜனனாதன் மண்டபத்தில் வேதபாடம் கேட்கும் மாணவர், நோயாளிகள் துணியை துவைக்கும் வண்ணானுக்கு நாள் ஒன்றுக்கு நெல் நான்கு நாழியும், ஜனனாதன் மண்டபத்துக்கும், அதில் இயங்கும் மருத்துவமனைக்கும், கோவிலில் திட்டச் செலவை மேற்கொள்வோருக்கும் மெய்க்காவல் புரியும் திருமுக்கூடல் பறையனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் நான்கு நாழியும் ஒரு காசும் தரப்பட வேண்டும். இதுகாறும் பறையர்கள் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக ஊருக்குள்ளும் கோவிலுக்குள்ளும் செல்ல முடியாமல் தீண்டாமை பாராட்டி தடுத்து வைக்கப் பட்டனர் என்ற தலித்திய, பெரியாரியப் பொய்க் கூற்றை இந்தக் கல்வெட்டுவரி தகர்த்துத் தவிடு பொடியாய் ஆக்கிவிடுகின்றது. பாடிகாவல் எனும் ஊர்காவல் பணியை மேற்கொண்டோர் பெரும்பாலும் பறையரே. ஊரினுள் நுழையாமல் இப்பணியை மேற்கொள்ள இயலாது. தமிழகத்தில் சோழர், பாண்டியர் ஆட்சியில் தீண்டாமை நிலவவில்லை. அது நாயக்கர் ஆட்சியில் புதிதாக ஏற்பட்ட சமூகச் சீர்கேடு ஆகும். ஆனால் தெலுங்கர் இதற்கு பொறுப்பு ஏற்காமல் பழியை தமிழ் பிராமணர் மீது சாற்றுகின்றனர்.

    கோவிலின் திருச்சுற்றை புதுப்பித்துக் கட்ட நெல் 40 கலம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த மண்டபத்தில் உண்ணும் வேத ஆசிரியர்க்கும், வேதம் பயிலும் மாணவருக்கும், பணிப் பெண்கள் இருவருக்கும் ஆள் ஒருவருக்கு நெல் நான்கு நாழியாக நாள் ஒன்றுக்கு குறுணி அளவும் இருவருக்கும் ஒரு காசு என்ற வகையில் இரு காசும் தரப்பட வேண்டும். வேத ஆசிரியர், மாணவர், நோயாளிகள் படுத்து உறங்கப் பாய் 75 ஐ வாங்க 2 காசும், வேத ஆசிரியர், மாணவர் தலைக்கு தேய்க்க ஒவ்வொரு சனிக் கிழமையும் எண்ணெய் இரு நாழி என்ற கணக்கில் ஒரு ஆண்டிற்கு  51 சனிக் கிழமைக்கும் நூற்றியிரு நாழியும், ஜனனாதன் மண்டபத்தில் வேதம் கேட்கும் மாணவர்க்கு இரவில் எரியும் விளக்கு ஒன்றுக்கு எண்ணெய் உழக்கு அளவு ஆண்டு ஒன்றுக்கு 90 நாழியும், இந்த எண்ணெய் 192 நாழிக்கு  ஒரு காசிற்கு 20 நாழி என்ற மேனியில் 9-1/2 1/8 காசும், ஜனனாதன் மண்டபத்தை புதுப்பித்துக் கட்ட 40 கலம் நெல்லும் ஒதுக்கப்பட வேண்டும்.

    இம் மருத்துவமனைக்கு வீரசோழன் எனப் பெயர். இதில் நோயுற்றுக் கிடக்கும் 15 நோயாளிகளுக்கு தலைக்கு அரிசி நாழியாக குறுணி ஏழு நாழிக்கு நெல் தூணி ஐந்து நாழியும் உரியும் நோயுற்றார்க்கும், பலபணி கோவில் பணியாளருக்கும், மாணவர்க்கும், வேத ஆசிரியருக்கும், மருத்துவம் செய்யக் காணியாக தனக்கும் தன் வழிவந்தோருக்கும் பெறுவதற்கு ஆலப்பாக்கத்து பெரு மருத்துவன் கோதண்ட ராமன் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் 8 காசும், ஒரு அறுவை சிகிச்சை செய்பவனுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நெல்லும், நோயாளியர் மருந்துகளுக்கு தேவையான பச்சிலைகளை பறித்து வந்து அடுப்பெரித்து மருந்து ஆக்கி நோய்விடுபட  இருவருக்கு தலைக்கு நாள் ஒன்றுக்கு நெல் குறுணியாக நெல் பதக்கு அளவும் தலைக்கு ஒரு காசு என இரு காசும் தரப்பட வேண்டும். நோயாளியர்க்கு தேவைப்படும் நோய்விடுபாடு மருந்திடும் இரு செவிலிப் பெண்களுக்கு தலைக்கு நான்கு நாழியாக நாள் ஒன்றுக்கு குறுணி நெல்லும் தலைக்கு 1/2 காசு என்ற மேனியில் ஒரு காசும், வேத ஆசிரியர் மாணவர்க்கு மழித்துவிடும் நாவிதனுக்கு நாள் ஒன்றுக்கு நான்கு நாழி நெல்லும் தரப்பட வேண்டும்.

    வீரசோழன் மருத்துவமனையில் ஆண்டு ஒன்றில் இடும் மருந்தின் அளவு 1) பிராமியம் கடும்பூரி – 1 எண்ணம் 2) வாசா ஹரீதகி -2 படி 3) தச மூல ஹரீதகி – 1 படி 4) பல்லாதக ஹரீதகி – 1 படி 5) கண்டீரம் – 1 படி 6) பலாகேரண்ட தைலம் – 1 தூணி 7) லசுநாக ஏரண்ட தைலம் – 1 தூணி 8) உத்தம கர்ணாதி தைலம் – 1 தூணி 9) _ _ _ கிருதம் – 1 பதக்கு 10) பில்வாதி கிருதம் – 1 பதக்கு 11) மண்டூகர வடகம் – 2000 எண்ணம் 12) திரவத்தி – 1 நாழி 13) விமலை – 2000 எண்ணம் 14) சுனெற்றி – 2000 எண்ணம் 15) தம்ராதி – 2000 எண்ணம் 16) வஜ்ர கல்பம் – 1 தூணி 1 பதக்கு 17) கல்யாண லவணம் – 1 தூணி 1 பதக்கு தவிர இவற்றின் மேல் பூச்சு மருந்திற்கும் தேவையானவை வாங்கவும், ஆண்டுதோறும் புராண சர்ப்பி புதைப்பதற்கு பசுநெய் பதக்கு அளவு வாங்க 40 காசும் மருத்துவமனையில் இரவில் எரியும் விளக்கு ஒன்றினுக்கு எண்ணெய் ஆழாக்கு என்ற மேனி 360 நாளுக்கு எண்ணெய் 45 நாழிக்கு காசு 2-1/4 தரவேண்டும். ஜனனாதன் மண்டபத்தில் பங்குனி உத்திரம் தொடங்கி புரட்டாசித் திருவோணம் வரை பரம்பால் ஊறுவதற்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நெல் என்ற அளவில் 49 நாளுக்கு 15 கலம் நெல்லும், ஏலக்காய்க்கும் இலாமச்ச வேருக்கும் நெல் இரண்டு பதக்கும், த_ _ண்யாகம் செய்த பிராமணர் தட்சணையாக வெற்றிலை பாக்கிற்கு நெல் ஒரு கலனும் தூணி இரு நாழி முழக்கு மூன்று செவிடு வயலைக்காவூரில் பரம்பரை நிலம் (முதுசொம்) உள்ள மாதவன் தாமயன் வழிவந்தோர்க்கு புரட்டாசி திருவோணத்து நாளில் கொடுக்கின்ற இறைவன் ஆடைக்கு 2 காசு 7 மா _ _ _ _ 3243 கலன் 2 தூணிப் பதக்கு  6 நாழி உழக்கு 3 செவிட்டுக்கும் 210 -1/2 இரண்டு மாவிற்கு தரவேண்டும். இக் காசைத் தராவிடில் காசு ஒன்றுக்கு பொன்னின் மாற்று அறியும் ஆணியை ஒத்த அளவிற்கு பொற்காசை எடைபோட்டுத் தருவதாக ஒத்துக் கொண்டோம்.

    இப்படியே 6-ம் ஆண்டும் செலவுத் திட்டம் வகுத்தபடி செய்து _ _ _ வேதஆசிரியக் கண்காணியுடனும், மாணவர் கண்காணியுடனும் செல்வதாக கோவில் நிர்வாகத் திட்டம் செய்தவாறு கல்வெட்டு வெட்டுவித்தார் இந்நாட்டு வேலையை பகுத்து நிர்வகிக்கும் அதிகாரியான சோழமண்டலத்து விஜய ராஜேந்திர வளநாட்டின் இடையள நாடனான மீனக்குடையான் பசுபதி திருவரங்க தேவனார் ராஜேந்திர மூவேந்த வேளார். _ _ _ ஏவல் ஏற்று கல்லில் வெட்டி வைத்தான் ஜெயங் கொண்ட சோழமண்டலத்து புழற் கோட்டத்தை சேர்ந்த தாகுடி நாட்டின் அயண்டம் பாக்கத்தின் இறைவேட்டின் குமரபாசூர்க் கத்தன் வீரராஜேந்திர செம்பியதரையன். இந்த அறத்தை செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் கங்கை கொண்ட சோழ தர்மபாலர், இவன் தம்பி தாமயனார் மகன் சேனாதிபதிகள் வீரராஜேந்திர தர்மபாலர் சார்பில் இதைக் கல்லில் எழுதினான் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் புழல் கோட்டத்து _ _ _ நாட்டு சதுர்வேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்ம மாராயன். இவ் அறம் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து ஊர் சபையோரின் பாதுகாப்பிற்கு உட்பட்டது.

    பெரு மருத்துவர் அஸ்வத்தாம பட்டன் தனது மாணவர், உறவுகள் போன்றோருடன் பணியாற்றுவதால் அவருக்கு நெல் முக்குறுணியும் 8 காசும் தரப்படுகின்றது. அறுவை மருத்துவன் சேவை சிலருக்கு மட்டுமே தேவைப்படும் என்பதால் ஒரு குறுணி நெல்லும், மருந்து ஆக்குவோருக்கு நெல் குறுணியாக ஒரு பதக்கும் ஒரு காசும் தரப்படுகின்றது. செவிலிகள் ஒரு குறுணி நெல்லும் 1/2 காசும் பெறுவது ஆகியன அவரவர் வேலைக்கு தக்கபடியே ஆகும். இதில் பாகுபாடு ஒன்றும் இல்லை.

    (பார்வை நூல் Select Inscriptions of Tamil Nadu p. (137 – 152), Tamilnadu  State Dept of Archaeology, 2006) 

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோயில் தேவராயன் பேட்டை மச்சபுரீசுவரர் கோவில் 23 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னிவளர இருநிலமடந்தையும் பொற்ச் செயற் பாவையும் சீர்த்தனிச் செல்வியும் _ _ _ (மெய்கீர்த்தி முழுதும் உள்ளது)
    2. கோப்பரகேசரி பர்ம்மராகிய ஸ்ரீ இராசேந்திர சோழ தேவற்கு
    3. யாண்டு ஏழாவது ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார் அருளிச்செய்த திருமுகத்தின் வாசகமாவது அருளிச் செய்க நித்தவினோத வளநாட்டு நல்லூர்நாட்டு பிரம்மதேயம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து சவையார்க்கு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் சுந்தரசோழ விண்ணகர ஆதுலர் சாலைக்கு வைத்தியஞ் செய்ய முன்பு இவ்வாதுலர் சாலையில் நிவந்தஞ் செய்த நிவந்தம் இராசகேசரியால் நெல்லுப் பதக்கு நானாழியும் ஆண்டுவரை
    4. பொன் நாற்கழஞ்சும் பற்றாவிட இவை ஜயபோகத்துக்கு பற்றும் வண்ணம்
    5. இந்த ராசகேசரி சதுர்வேதி
    6. மங்கலத்து கலகரச்சேரி
    7. இராயூர் எச்சபோக கிரமவித்தநேன்
    8. ஆழ்வார் ஸ்ரீபாதம்
    9. தாங்கிகள் குந்தவைப் பிராட்டியார்
    10. பக்கல் காசுக் கொண்டு
    11. வைத்திய போகத்துக்கு மனையாக இவ்வாண்டே விற்றுக்குடுத்த மனையாவது
    12. இவ்வூர் ஸ்ரீகண்டச்சேரி மேற்கு நின்றும் எட்டாம் சட்டத்துக்குத்
    13. தெற்கு நின்றும் அஞ்சாமனையில் வடக்கடைய அரையமனையும்
    14. ஆறாம் மனையில் தெற்கடைய முக்கால்
    15. மனையும் விற்றுக் குடுத்தேன் எச்சக்கிரமவித்தனேன். ஆழ்வார்
    16. ஸ்ரீபராந்தகன் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார்_ _ _ கோயிலில் மாளிகை
    17. ஆதிபூமியில் எழுந்தருளி இருந்து நம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து தன்மத்துக்கு வைத்தியபோகம் வைக்க கொண்ட நிலம்
    18. ஒன்பது மாவும் ஒன்றேகால் மனையும் சத்திரிய சிகாமணி  வளநாட்டு மருகல்நாட்டு மருகல் ஸவர்ணன் அரையன் மதுராந்தகனுக்கும் இவன்
    19. அனுவயத்தாற்கும் ராசேந்திர சோழர்க்கு யாண்டு மூன்றாவது முதல் இறையிலியே சந்திராதித்தல் வரை வைத்தியபோக காணியாகக் குடுத்தோம்
    20. என்று அருளிச் செய்யப் பெற்றான் என்று அரையன் அம்பலநான நெழுத்திநால் அரையன் மதுராந்தகனுக்கும் இவன் அன்வயத்தாற்க்கும்
    21. நாம் குடுத்தபடியும் நம்முடைய பிராமணப் படிகளும் கெல் மேல் வெட்டிவிக்க என்று அருளிச்செய்து ஆழ்வார் ஸ்ரீமுகம் வந்தமையில்
    22. கல்வெட்டுவிச்சோம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து மஹாசபையோம். பணியால் இச்சாதனம் வெட்டினேன்
    23. மதுராந்தகப் பெருந்தச்சனேன். இவை என் எழுத்து.

    திருமுகம் – அரசாணை; பற்றாகவிட – உரிமையாக அனுபவிக்க; ஜயபோகத்துக்கு –  ; எச்சபோகம் – முதுசொம், சந்ததியாக அனுபவி, ancestral property; வைத்தியபோகம் – மருத்துவம் செய்பவருக்கு ஒதுக்கப்பட்ட மானிய நிலம்; சட்டம் –  ; அருளிச் செய்- மனம்இரங்கிக் கொடு; ஆழ்வார் – இறைப் பற்றாளரை குறிக்கும் மதிப்புச் சொல்; மாளிகை ஆதிபூமியில் – கருவறை முதற் தளம்; மருகல் – குடியோன், செல்வம்; அரையன் –  அறுவை மருத்துவன்; அனுவயத்தார் – பின்வரும் கால்வழியர்; பக்கல் – இடத்து, 7ஆம் வேற்றுமையான கண்; படிகள் – நாட்செலவு பொருள்கள்; பணி -கட்டளை; சாசனம் – கல்வெட்டு ஆவணம்.

    விளக்கம்:  இது முதலாம் இராசேந்திரச் சோழனின் ஏழாம் ஆட்சிஆண்டில் (1020 AD) வெட்டப்பட்ட கல்வெட்டு. இங்கு இராசராசன் தமக்கை குந்தவைப் பிராட்டியார் தந்தை இரண்டாம் பராந்தகன் பெயரை முன்னொட்டாக பெற்று குறிக்கப்படுகிறார். குந்தவை மனம் இரங்கிக் கொடுத்த போது சொன்ன சொல் யாதெனில், “நித்தவினோத வளநாட்டின் நல்லூர் நாட்டில் அமைந்த பிரம்மதேயமான இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் ஊர் சபையோர்க்கு தரும் செய்தியாவது, தஞ்சாவூர் கூற்றத்தில் உள்ள தஞ்சாவூர் சுந்தரச்சோழ விண்ணகரத்தில் அமைந்த மருத்துவகத்தில் மருத்துவம் செய்வதற்கு கூலியாக முன்பு இந்த மருத்துவகத்தில் ஏற்பாடான திட்டப்படி ‘இராசகேசரி’ என்னும் அளவையால் நாள்தோறும் நெல் பதக்கு நானாழி அளவும் ஆண்டிற்கு பொன் நான்கு கழஞ்சும் உரிமையாக அனுபவிக்கத் தரப்பட்டிருந்தது. இவை இப்போது ஜெயபோகத்திற்கு உரிமையாகும் வண்ணம் விடப்பட்டதால் அதற்கு மாற்றீடாக, “இந்த இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் கலகரச்சேரி இராயூரில் முதுசொம் உள்ள கிரமவித்தன் என்பான் இறைவனடி பற்றும் இறையடியாரான ஆழ்வார் குந்தவை பிராட்டியிடம் காசு பெற்றுக் கொண்டு மருத்துவர் காலம் முழுதும் ஆண்டு அனுபவித்தற் பொருட்டு இவ்வாண்டு விற்ற மனையானது இந்த ஊர் ஸ்ரீ கண்டச்சேரிக்கு மேற்கில் இருந்து எட்டாவது சட்டத்துக்கு தெற்கில் இருந்து ஐந்தாம் மனையில் வடக்கே அரை மனையும், ஆறாம் மனையில் தெற்கில் முக்கால் மனையும் விற்றுள்ளான் இந்த எச்சக் கிரவித்தன் என்ற பிராமணன்”. இறையடியாரான குந்தவை பிராட்டியார் கோயிலின் கருவறைக்கு முன்னுள்ள முதல் தளத்தில் வந்திருந்து நம் இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் அறக்கொடையாக மருத்துவரின் உரிமையாகத் தருவதற்கு வாங்கிக் கொண்ட நிலம் ஒன்பது மாவையும் (1/2 + 3/4 =1-1/4) ஒன்றேகால் மனையையும், சத்திரிய சிகாமணி வளநாட்டின் மருகல் நாட்டுச் செல்வமான பெரு மருத்துவன் அரையன் மதுராந்தகனுக்கும் இவன் வழிவந்தோருக்கும் இராசேந்திரச் சோழனின் மூன்றாம் ஆட்சிஆண்டு (1016 AD) முதற்கொண்டே இறையிலியாக நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் காலம் வரை மருத்துவர் உரிமைக் காணியாக மனமிரங்கிக் கொடுத்தேன் என்று சொல்லி கொடுக்கப்பட்டான் என்று அரையன் அம்பலன் ஓலை எழுத்தினால் அறுவை மருத்துவன் மதுராந்தகனுக்கும் அவன் வழிவருவோருக்கும் கொடுக்கப்பட்டது. அதோடு பிராமணர்களுக்கு கொடுத்த நாட்செலவுப் பொருள்கள் பற்றியும் கல்மேல் கல்வெட்டு ஆக்கி வைக்க வேண்டும் என்று இறையடியார் குந்தவைப் பிராட்டியாரிடம் இருந்து ஆணை வந்தமையால் கல்வெட்டாக்கி வைத்தோம் இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் ஊர்ச் சபையோம். கட்டளைக் கடமைக்கு இந்த ஆவணத்தை வெட்டுவித்தேன் மதுராந்தகப் பெருந்தச்சன். இது என் கையொப்பம். ஊர்ச் சபையோர் வேண்டுகோள் விடுத்ததால் இந்த மருத்துவர் கொடையை குந்தவை பிராட்டியார் தந்திருக்க வேண்டும். அதனால் கல்வெட்டில் ஊர்ச்சபையோர் குறிக்கப்படுகின்றனர். அப்போது குந்தவைக்கு 75 அகவை கடந்திருக்கும் என ஊகிக்க முடிகின்றது.

    இதே போல் குந்தவையார் 1016 A.D. இல் சவர்ணன் அரையன் சந்திரசேகரன் ஆன பாரத்துவாசி அரையன் சண்டேசுவர கருணாகர உத்தம சோழ அசலண் என்ற பெருமருத்துவனுக்கு வீடும், மருத்துவக் காணியும் கொடையாக நல்கிய செய்தி திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவிலின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. (காண்க ARIEp 1923 B No 112)

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (பொ.ஆ. 300 – 1800), பக்.287- 288. ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம். (ARIEp 1923, B No 249).

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் நாலாம் திருச்சுற்றில் உள்ள தந்வந்திரி கோயில் முன் உள்ள கற்பலகையில் உள்ள 118 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் 1415 ந் மேல் செல்லா நின்ற ப்ரமாதி ஸம்வத்ஸரத்து ருஷப நாயற்று பூறுவ பக்ஷத்து பஞ்சமியும் ஸோம வாரமும் பெற்ற பூசத்து நாள் திருவரங்கன் திருப்பதி இறந்த காலம் எடுத்த பெருமாள் கூடல் சக்ரவாள நம்பி ஆன உத்தமநம்பி பிள்ளை காலத்திலே பட்டாள் கொத்து அழகிய மணவாள மங்களாதராயர் புத்ரந் ஸ்ரீ நிவாஸந் ஆன ஸ்ரீரங்க கருடவாஹன பட்டர் கயிங்கரியம் ஆக ஸ்ரீ சந்த்ரபுஷ்கரணிக்கு மேல்புறமாக முன்னாள் ப்ரதாப சக்ரவத்தி காலம் துடங்கி இவருடைய பூர்வாள் கருடவாஹந பட்டர் நடத்தி வந்த ஆரோக்ய ஸாலை வாணத்திலே பிலமாகையில். இப்பொழுது ஆரோக்ய ஸாலையும் சமைப்பித்து தந்வந்தரி எம்பெருமானையும் ஏறி அருளப்பண்ணுகையில் நாள்தோறும் பெருமாள் குடினீர்அமுது செய்தருளுகிற கட்டளைக்கும் தந்வந்தரி எம்பெருமான் திருவாராதந கட்டளைக்கும் நடக்கும்படி முன்னாள் கருடவாஹந பட்டர் பெருமாளுக்கு ரங்கபோஷனை ப்ரபந்தம் பண்ணி பெருமாள் திருவுள்ளம் உகந்து திருக்கை வழக்கம் ஆகப் பல்லக்கு மான்னியம்மாகத் திருவுள்ளம் பற்றின திருமுகப்படியிலே அனுபவித்து வந்த தென்கரை திருவிடை ஆட்டம் (பா)ண்ட மங்கலத்து இராஜவிபாடன் நிலம் இருவேலியும் நாளது பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்து தந்வந்தரி எம்பெருமானுக்கு திருவிடை ஆட்டமாக ஸமர்ப்பிக்கையில் இந்த நிலம் இருவேலியும் தந்வந்தரி எம்பெருமானுக்கு திருவாராதநக் கட்டளைக்கும் குடினீர் அமுதுக்கும் கருடவாஹன பட்டர் அதிஷ்டானம் ஆக புத்ர பௌத்ர பரம்பரையாக ஆசாஞ்ரார்க்கு ஸ்தாயி ஆக நடத்தக் கடவதாவும் இந்த தர்ம்மத்துக்கு அஹிதம் நினைத்தவர்கள் கங்கைக் கரையில் கபிலயை வதைத்தவர்கள் பாபத்திலே போகக் கடவர்களாகவும் ஸுபமஸ்து.

    ஆரோக்கிய சாலை – மருத்துவகம்; கொத்து – ஊழியர் தொகுதி; கைங்கர்யம் – அறத்தொண்டு, தர்ம சேவை, இறைத் தொண்டு; பூர்வாள் – முன்னோன்; வாணம் – தீ, வேட்டு; பிலம் – குகை போல் பள்ளம்; சமைப்பித்து – உண்டாக்கி; ஏறிஅருள- எழுந்தருள, பிரதிஷ்டை செய்; குடிநீர் அமுது – மூலிகை நீர், தீர்த்தம்; கட்டளை – கோயில் சிறப்பு நடைமுறை, பூசை ஏற்பாடு; திருமுகம் – ஆணைஓலை; அதிஷ்டானம் – நிலைக்களம், location; ஆசாஞ்சரார் – வந்து போவோர்; ஸ்தாயி – விடுதி; சுபமஸ்து – நன்மையே உண்டாகுக.

    விளக்கம்: சக ஆண்டு 1415 (1493 AD) பிரமாதி ஆண்டில் திருவரங்கன் திருவரங்கத்தில் இறந்த காலம் எடுத்த பெருமாள் கூடல் சக்ரவாள நம்பி எனும் உத்தமநம்பி நிர்வகிக்கும் காலத்தில் பட்டர்களின் ஊழியர் குழுவைச் சேர்ந்த ஒருவரான அழகிய மணவாள மங்களாதராயர் மகன் சீறினிவாசன் எனும் ஸ்ரீரங்க கருடவாகன பட்டரின் அறத்தொண்டாக சந்திரன் எனப் பெயரிட்ட தாமரைக் குளத்திற்கு மேற்கே முன்னாளில் போசளன் சோமேசுவரனின் இரண்டாம் மகன் பிரதாப சக்ரவர்த்தியான வீரராமநாதன் ஆட்சிக் காலம் முதல் இவருடைய முன்னோன் கருடவாகன பட்டர் வழிவந்தோர் நடத்தி வந்த மருத்துவகம் பின்னாளில் தீக்கோளினால் பள்ளமாகி அழிந்தது. இப்பொழுது மீண்டும் இந்த ஸ்ரீரங்க கருடவாகன பட்டர் ஒரு மருத்துவகத்தை உண்டாக்கி அதில் தந்வந்தரி பெருமானை எழுந்தருளச் செய்து நாள்தோறும் பெருமாளுக்கு மஞ்சனநீரை உருவாக்குகிற கோயில் நடைமுறைக்கும், தந்வந்தரி பெருமான் பூசையை நடத்துவதற்கும், முன்னாளில் கருடவாகன பட்டர் பெருமாளுக்கு ரங்கபோஷனை பிரபந்தம் செய்து பெருமாளின் திருவுள்ளத்தை மகிழ்வித்து பிரசாதமாக, பல்லக்கு மானியமாக கொடுத்தாற் போல இறைவன் உள்ளத்தை பிடித்த போது கிடைத்த ஆணையால் தான் அனுபவித்து வந்த தென்கரையில் அமைந்த வைணவக் கோயில் மானிய நிலம் உள்ள பாண்ட மங்கலத்து இராசவிபாடன் நிலம் இரண்டு வேலியை இன்று பெருமாளுக்கு வேண்டுதல் வைத்து தந்வந்தரி பெருமானுக்கு திருவிடையாட்டமாக விட்டார். இந்நிலம் இரண்டு வேலியைக் கொண்டு தந்வந்தரி பெருமானின் பூசை நடைமுறைக்கும், தீர்த்தத்திற்கும், கருடவாகன பட்டர் நிலையென அறியப்பட்டு அவர் பிள்ளை, பேரப்பிள்ளை பரம்பரையோர் மற்றும் வந்துபோவோர்க்கு தங்கும் விடுதியாக நடத்திச் செல்லவேண்டும். இந்த அறத்தை அழிக்க நினைப்போர் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்றவர் அடைந்த பாவத்தை அடைவதாகுக. நன்மை உண்டாகட்டும்.

    ஸ்ரீரங்க கருடவாகன பட்டர் தொழிலால் அர்ச்சகர் தான் மருத்துவர் அல்லர். ஆனால் மூதாதை கருடவாகன பட்டர் மீது கொண்ட மதிப்பால் மீண்டும் மருத்துவகம் இயங்கச் செய்கிறார். போசளன் வீரராமனாதன் (1253-1295) 3-ம் ஆட்சி ஆண்டில் அவன் படைத் தலைவன் சிங்கதேவ சிங்கண்ணன் ஒரு மருத்துவகத்தை இக்கோயிலில் உண்டாக்கி 1100 வராகன் பொன் கொடுத்து விளைநிலத்தை வாங்க வைத்து அதில் மருத்துவர் கூலி, மருந்து செலவுகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான். தனக்கு மருத்துவரும் இந்த மருத்துவகத்தின் தலைவருமான மூதாதை கருடவாகன பட்டருக்கும் பிறருக்கும் தர வேண்டிய கூலி பற்றியும் குறிப்பிடுகிறான். கொடையளிக்கும் வேந்தர் நேரடியாகத் தனது பெயரை குறிப்பிடும் மரபை கடைபிடிக்காததால் படைத்தலைவரை பணித்து இவ்வாறு நன்கொடை வழங்கச் சொல்வதை மரபாகக் கடைபிடித்தனர். பூலாங்குறிச்சி கல்வெட்டு இதற்கு ஒரு சான்று. இச் செய்தி S.I.I. 24 பக்.286-288 எண். 266 ம் கல்வெட்டில் உள்ளது. இரண்டு கருடவாகன பட்டருக்கும் உள்ள கால இடைவெளி 238 ஆண்டுகள் எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – 24, பக். 352-353 எண். 353

    நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் கோட்டை முனியப்பன் கோவில் பரந்த பாறையில் பொறிக்கப்பட்ட இரு கல்வெட்டுகள். முதல் கல்வெட்டு 15 வரியும் இரண்டாம் கல்வெட்டு 8 வரியும் கொண்டவை.  

    ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனநச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான் அங்கவைத்யரில் ஸவனந்  பா / ரா ஸ்ரீயன் ஆதித்ததேவன் திருவம்பலப் பெருமாளான வைத்யபுரந்தரற்கு வ / ட கொங்கு ஏழூர்நாட்டு வானவன் மாதேவி  நான்கெல்லைக்குட்பட்ட  நஞ்(சை) புன்செயும் / நத்தமும் நத்தப்பாடும் வாஸ்துவும்  வாஸ்துஷேமமு(ம்) குளமும் குளப்பரிப்பும் தோட்டமும் தோ  / ட்டக்கூறும் ஆற்றங்காலும் துரவும் காடும் மலையு(ம்) மற்ரு மெப்பெற்பட்ட ஸமஸ்த ப்ரா / ப்திகளிலும் (ப)ழந் தேவதானந் திருவிடையாட்டம் பள்ளிச்சந்தம் பட்டர் களிறையி(லி) நீ / க்கியுள்ள ஸம(ஸ்த ப்ரா)ப்திகளும் எட்டாவது புரட்டாதி  மாதமுதல் உதகப்பூர்வ்வ தர்மதாந இரையிலியா / கத் தந்தோம். இத்தால் வரும் கடமை, பொந் வரி, கற்பூர வினியோகம், மரவடை, புன் பயிர், தறி இறை,செக்கிறை, தட் / டொலி, தட்டார்ப் பாட்டம், ஏர் வரி, இனவரி, இடைவரி, எரிமீன் பாட்டம், காணிக்கை, காத்திகைப்பட்டை நல்லெத்து, / நற்பசுப், பஞ்சு பிலி, ஓலை எழுத்து வினியோகம், வாசல்பேறு, இலாஞ்சினைப்பேறு, வெட்டி ஆள் தேவை, தச்சுத் தே / வை ஆனைச்சாலை, குதிரைப்பந்தி  மற்றும் எப்பேர்ப்பட்ட இறைகளும்  இன்னாள்முதல் வரியிலார் கணக் / கிலும்  கழித்து முன்னுடையாரையும் பழம்பேரையும் முதலறத் தவிர்த்துத் தமக்கு முதலடங்கலும்  / இறையிலி ஆகவும் தாநாயமந விக்கிரயங்களுக்  குரித்தாகவும் தந்தோம். இப்படிக்கு  சந்திராதித்தவற் செல்வதாகக் / கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொண்டு அனுபவித்துக் கொள்ளவும் பார்க்க. இவை இலைநல்லூருடையான் / எழுத்து. இவை சுந்தர பாண்டியப் பல்லவராயன் எழுத்து அளவு 16.  

    ஸ்வஸ்திஸ்ரீ ஏழூர்நாட்டு ஸபையாரும் நாட்டாரும் நகரத்தாரும் நாங்கூர் ஸவர்ண்ணந் / பாராஸ்ரீயன் ஆதித்ததேவன் திருவம்பல பெருமாளான வைத்ய புரந்தரர்க்கு எங்கள் / நாட்டு வானவன்மாதேவி நான்கெல்லைக்குள்பட்ட  ஸகல ப்ராப்திகளும் எட்டாவது / புரட்டாதி  மாதமுதல் பண்டுடைய்யாரையும்  பழம் பேரையும் முதலறத் தவிர்த்து இவ்வூர் ஸகல / ப்ராப்திகளும் தமக்கு உதகபூர்வ்வ தர்ம்மதானமாக ஸர்வ்வ  மாந்யமும் இறையிலி ஆகப் பெருமாள் / சுந்தரபாண்டிய தேவர் தந்தருளின திருமுகப்படியே நாங்களும் தமக்கு உதகம் பண்ணி / இறையிலி ஆகத் தந்தோம். இப்படிக்குப் பணியால் நாட்டுக்கணக்குச் (சூரிய) தேவன் / எழுத்து.         

    அங்கம் – வெட்டுகை, chopping; சவர்ணன் – பெரு மருத்துவன்; பிராப்தி – உரிமை; வைத்தியபுரந்தரன்- மருத்துவரில் இந்திரன் போன்றவன்; திருமுகம் -வேந்தனின் ஆணை.

    விளக்கம்:  வேந்தன் சுந்தர பாண்டியனின் ஆணைப்படி அவனது எட்டாம் ஆட்சி ஆண்டில் அவனிடம் பணிபுரியும் அறுவை மருத்துவர்களில் ஒருவரான நாங்கூரைச் சேர்ந்த பெருமருத்துவன் பராசர கோத்திரத்தவன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாளான மருத்துவரில்  இந்திரன் போன்றவனுக்கு வடகொங்கின் ஏழூர் நாடான இன்றைய நாமக்கல் நகரமாம் வானவன்மாதேவியில் வைணவ, சைவ, சமண கோவில்களின் கொடைநிலங்கள், பிராமண பட்டர்கள் பெற்றுள்ள இறையிலி நிலங்கள் மற்றும் ஏற்கனவே நிலம் உடையோர், பழைய ஆள்கள் ஆகியோர் பெயரைத் தவிர்த்து பிற எல்லா நிலத்தின் உரிமையையும் தர்ம தானம் செய்யத்தக்க இறையிலியாக நீரட்டித் தந்தோம். இந்த நிலங்களில் இருந்துவரும் எல்லா வகை வரிகளும் அரசருக்கு தரவேண்டாத இறையிலியாக வரியிலார் கணக்கில்  கழித்துத் தந்தோம். இதை கல்லிலும் செப்பிலும் வெட்டிக்கொள்க என்று ஊர்சபையாரும், ஊராரும், நகரத்தாரும் ஒப்புக்கொள்ள ஊர்க்கணக்கன் இந்த ஆணையை கையெழுத்திட்டான்.

    ஒரு அறுவை மருத்துவனுக்கு ஒரு ஊரும், ஊரின் வரிவருவாயும் இறையிலியாக கொடுக்கப்படுகிறது என்றால் ஆதித்த தேவன் செய்யும்  சேவை, தொண்டு மிகப் பெரியதாகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. யானைச் சாலை, குதிரைப்பந்தி ஆகிய சொற்களை நோக்க இவ்வூரில் சுந்தர பாண்டியனின் நிலைப் படை (reserve army) நிலை கொண்டிருந்திருக்க வேண்டும் என்று தெரிகின்றது.  இந்த படையினருக்கும்  படை விலங்குகளுக்கும் போரில், போர்ப் பயிற்சியில் காயமுறும் போது சிதைந்த உறுப்புகளை  வெட்டிஅகற்ற, தைக்க ஆதித்த தேவன் அறுவை மருத்துவம் செய்யவேண்டி இருப்பதால் இப்பெருங்கொடை பெற்றான் எனத்  தெரிக்கின்றது. பொது மக்களை விட படைப்பிரிவில் தான் அறுவை மருத்துவரின் சேவை அதிகம் தேவை.

    பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், தஞ்சைப் தமிழ்ப் பல்கலை வெளியீடு,  ஆசிரியர் அ. கிருஷ்ணன், எண். 250-251, பக். 198-200  

    மயிலாடுதுறை மாவட்டம்  திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் தென் சுவரில் உள்ள  14 வரிக் கல்வெட்டு.

    I III. ஸ்வஸ்திஸ்ரீ [||*] பூமாலைமிடைந்து பொன் மாலைத் [திகழப் பாமாலை] மலிந்த படுமணித்திரள் புயத்திரு நிலமடந்தையொடு ஜயமகள்ளிருப்ப கநவரை மாரவன்தன[ப்பெற்]றுத் திருமகள்ளொடு தநி இருப்ப கலை மகள் சொற்றிறம் புணந்து கற்பினளாகி விருப்பொடு நாவக[த் திருப்ப திசை] தொறும் திகிரி யொடு[ஞ்] செங்கொல் நடப்ப அகில புவனமுழுதுங் கவிப்பதொரு புதுமதி போல வெண்குடை[அடி]மிசை நிழற்றக் கருங்கலி
    யொளித்து வந்பிலத்திடைக் கிடப்ப குளத்திடைத் தெலுங்க விமனநடு விலங்கல் மிசை எறவும் கலிங்க பூமியைக் கநன எரிபருகவும் ஐம்படைப் பருவத்து வெம்படை- 

    2.தாங்கி வேங்கை மண்டலத் தாங்கிநிதிருந்து வடதிசை யடிப்படுத்த[ருளி]… ழமும்… தானமுந்தழைத்து வேதமும் மெய்மை… லைசிறப்ப தநித் தநி சிற[ந்]து வந்தருளி வெற்கரும் பொற்புலி ஆனைபா… … முறைமையில் சூடி மந்நூயிர்க்கெல்லாம் மிந்நுயித்தாய் போலத் தந்நொளி பரப்பித் தநித்து   நிபரந்து மண்முழுதுங்கவிப்ப மநு நெறி வளரத் தன் கோயில் கொற்றவாசல்ப் புறத்து மணிநாவொடுங்க முரைசுகள் முழங்க விஜயமும் புகழும் மேல்மேலோங்க செழியர் வெஞ்சுரம் புக சேரலர் கடல் புக வழி தரு சி-

    3.ங்கணரஞ்சி கங்கர் திறையிட கந்நடர் வெழ்கிட கொங்கர் பொது… தந்துமககரனெ …றஞ்சி தொல்லை எழுலகுந் தொழுதெழத் தோன்றி முல்லை வா…..சங்கர இமையத்திருந்தெனப் பொருந்தி உடநிருப்பக் கங்கையொப்பாகிய தெரிவயர் திலதந தியாகபதாகை புரிகுழல் மடந்தை புநிதகுணவநிதை திருபுவனமுடையா… வரு திருவிளத்திருள்ள முழுதுமுடையாள் உடநிருப்பச் செம்பொற் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக்கிழாநடிகளொ

    4.டும் விற்றிருந்தருளிய கோப்பரகேசரி பற்மரான த்ரிபுவநச் சக்கிரவத்திகள் ………… ஆவது த 4 நு நாயற்று சுவ……..ரியும் த்ரயோத 3 ஸியும் திங்கட்கிழமையும் பெற்ற மூலத்து நாள் விருதராஜ [பயங்கரவளநாட்டு] மண்ணிநாட்டுப் ப் 3 ரதே 3 யம்விருதராஜபயங்கர சருப்பேதி மங்கலத்து  மஹா ஸஹையோம்  நம்மூர்த் திருப்பாற்கடலாழ்வார் கோயிலிலே தன்மி செய்து கூட்டங்குறைவறக் கூடி இருந்து உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார் திருவாவடுதுறை உடையார் மூலப்ருத்தியராகிய ஆதி சண்டேச் 0 வரவர தேவர்க்-

    5.கு நாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது இவ்விருத ராஜபயங்கர சதுர்… … குடியில் உய்யக்கொண்டார் … …[சே] நாபதிகள் இளங்கா… … இளங்காரி[க்குடையாந்] சங்கரந் அம்பலங் கோயில் கொண்டாநான அனந்தபாலர் நம்மூர்க் குடிமக்கள் பக்கல் விலை கொண்டுடையராய் இவருதாயிருந்த நிலம் சளுக்கி குலகால வாய்க்காலுக்கு மேற்கும் வடக்கு நின்றும் மூன்றாங் கண்ணாற்று திருவுலகளந்தருளினபடி நீறா 2 ப 1 ம் நாலாங் கண்ணாற்றுத் திருவுலகளந்தருளினபடி நீ2 ப 2 ம் ஐஞ்சாங் கண்ணாற்றுத் திருவுலகளந்தருளினபடி நீ 2 ம .. ஆக திரு

    6. வுலகளதெருளினபடி நீ 5 4 ப இந்நிலம் ஐஞ்செய் நாந்மாவரைக்கும் கிழ்பாற்…க்காலுக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஆறாங்….. ற்கெல்லை திரு….முடையார் த…. நிலத்துக்கும் துவேதை கோமபுரத்துத்து மாதவபட்டந் நிலத்துக்கும் கழுமலவாய் நீரோடு காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை செந்திறத்து காளிதாஸ பட்டந் நிலத்துக்கும் சேஞலூர்க் கவணியந் திருவரங்கதேவன் சிவந் நிலத்துக்கு தெற்கும் ஆன இவ்விசைந்த பெருநாந்கெல்லையுள் நடுபட்ட திருவுலகளதெருளினபடி நீ …… ஆக நிலம் ஐஞ்செய் நா-

    7.ன்மாவரையும் இந்நிலம் … … வாரவும் பெறுவதாகவும் இந்நிலத்துக்கு வந்த … … ரி யெச்சோறு கூற்[றரிசி] வெள்ளாந்வெட்டி வெலா… மற்றும் திருவாசலில் போந்த குடிமை எப்பேர்ப்பட்டதும் செய்ய … … ஸம்மதித்து இந்நிலம் இறையிலி செய்து குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப் பொருளன்றாடு நற்காசு 425 இக்காசு நாநூற்றிறுபத்தை

    8. ஞ்சுங்கொண்டு இந்நிலம் ஐஞ்… … காசு கொள்ளா இறையிலியாக இறையிலி செய்து குடுத்[தோம்] உடையார் திருவாவடுதுறை உடையார் மூலலவரத்துராகிய ஆதிசண்டேச் 0 வர தேவக்கு மஹாஸபை 4 யார் இன்நிலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார் திருவாவடுறையுடையார் கோயிலில் சிவலோக நாயகன் திருவாசலின் [முன்பால்ச்] சங்கர தேவந் அறச்சாலை ப் 3 ராஹ்மணர்க்கும் தவஸியற்க்கும் அநாதி கிரிசர்க்கும் வயிஜ்யா சா 0 ஸ்த்ரமும் ப்3ரஹடமும் ச் 0 ரகமும் வ்யாகரணமும் உருபாவதாரமும் படிப்பாக்குச் சோ[றிடவும்] திருநா-

    9. ளில் சோறிடவும் மடப்புறமாக இறையிலி செய்த நீ 34 இந்நிலம் முன்றே நா…………டக்குத் திருச்சாக்காட்டுப்பிச்சர் எடுப்பித்த அம்பலங்கோயில் கொண்டான் அனந்தபாலர் மடத்துக்கும் மடப்புறமாக இறையிலி செய்த நீ2 லி இன்நிலம் இருவேலியும் ஆக நீ5 4 பஇ இந்நிலம் ஐஞ்சே நாந்மாவரையு மிகிதிக்குறைவுள்ளடங்க இக்காசுநானூற்று இருபத்தைஞ்சுங் கொண்டு காசுகொள்ளா இறையிலியாகச் சந்த்ராதி 3 த்யவர் சா 0 ச் 0 வதிகமாக.. திகமாகச் செம்பிலுங் கல்லிலும் எழுத்து வெட்டிக் கொள்ளப் பெறுவராக இறையிலி செ-

    10.ய்து குடுத்தோம் உடையார் திருவாவடுதுறை யுடையார் முலவ்ருத்யராகிய ஆதி … … … ஸபை 4 யோம்.. இப்படி ஸபை 4 யுள்ளிருந்து பணி[த்தாந்] பிராந்தகர்சீராம பட்டர் பணியாலும் வங்கிப்புறத்துக் கோவிந்த பட்டர் பணியாலும் செந்திறத்து காலாதிர பட்[ட*]ர் பணியாலும் திருக்கடவூர் காச் 0 யபந் ஸ்ரீவைகுந்தன் திருக்கதவ பட்[ட*]ர் பணியாலும் கிராஞ்சிகிள்ளை போந்த திருநம்பிபட்[டர்*]பணியாலும் செந்திறத்து கருணாகர பட்[ட*][ர்*] பணியாலும் ஆபசரிச் சீராம பட்டர் பணியாலும் குண்டுர் முத்த ஸ்ரீபல தேவர் பட்டர் பணியாலும் குண்டூர்த் தாமோதிர பட்டர்

    11. பணியாலும் துவேதை கோவிந்த சீராமபட்டர் பணியாலும் நட[லூ]ர் திருச்சிற்ற … … … யாலும் துவேதை கொந்த அக்கிதவ பட்டர் பணியாலும் துவேதை கொதைமாத கொந்த அக்கிதவபட்டர் பணியாலும் துவேதை கோதைமாதவ பட்டர் பணியாலும் குண்டுர் இளய ஸ்ரீவாஸக தேவ பட்டர் பணியாலும் சாந்தூர் திருநம்பி பட்டர் பணியாலும் சிராஞ்சி ஸ்ரீதின் காபோந்த இளைய திருநம்பி பட்டர் பணியாலும் காரம்பிச் சேட்டு இளைய நாராயண பட்டர் பணியாலும் பணிப்பணியால் பணிகேட்டு இவ்விறையிலிப் பிராமணம் எழுதிநேன் இவ்வூர்
    கரணத்தான் கஞ்சனூருடையாந் சக்கர-

    12. க்கைய்யன் சிரீளங்கோவிநேன். இவை என்நெழுத்து இப்படிக்கு இவை … …நெழுத்து இப்படிக்கு இவைகுண்டூர் ஸ்ரீவாஸுதேவ பட்டநெழுத்து. இப்படிக்கு இவை இப்படிக்கு இவை சி….தை கோமபுறத்து நாராயணபட்டன் நெழுத்து. இப்படிக்கு இவை திருக்கடவூர் காசிபன் ஸ்ரீவைய்குந்தம் திருக்கதவபட்டநேன், இவை என்நெழுத்து. இப்படிக்கு இவை குண்டுர் ஸ்ரீ வாஸுதெவபட்டன் நெழுத்து. இப்படிக்கு இவை நடாதூர்த் திரிச் சிற்றம்பல பட்டன் நெழுத்து. இப்படிக்கு அறிவேந் துவேதை கோமபுறத்து…..ம பட்டநேன். இப்படிக்கு 

    13. இவை துவேதை கோமபுறத்து அங்ஙிதவபட்டநேந். இப்படிக்கு அறிவேன் வங்கி … … றத்து தாமோதிரபட்டந் ஸயிஞ்ஞையாதமைக்கு

    14. [இவை] கருவூருடையாந்நெழுத்து. இப்படிக்கு கிராஞ்சி இளைய திருநம்பிபட்ட … … … மோதிர பட்டநெழுத்து. இது நடாதூர் சீராம பட்டர் ஸயிஞ்ஞையாதாமைக்கு இவை கருவூருடையாந் எழுத்து. செந்திறத்து காளாதிருபட்டர் ஸ்யிஞ்ஞையாதாமைக்கு துவேதை கோமபுறத்து சீராமபட்டநெழுத்து||-

    விளக்கம்: விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தி முதல் மூன்று வரிகளில் இடம்பெறுகிறது. விக்கிரம சோழனின் 3 ம் ஆட்சி ஆண்டில் விருதராஜபயங்கர சருப்பேதி மங்கலத்து ஊர்  சபையர் அவ்வூர் திருப்பாற்கடலாழ்வார் கோயிலில் கூடி இருந்து உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார்  திருவாவடுதுறை உடையார் மூலவரான ஆதி சண்டேச்வர தேவர்க்கு இறையிலி செய்து கொடுத்த நிலமாவது, “உய்யக் கொண்டார் வளநாட்டு  சேனாபதி இளங்காரிக்குடியான் சங்கரன் அம்பலன் கோயில்கொண்டான் ஆன அனந்தபாலன் முன்னம் இவ்வூர் குடிமக்களிடம் வாங்கியிருந்த 5 செய் 4 மாவரை  நிலத்தின் நான்கு எல்லைகள்  குறிக்கப்படுகின்றன. இந்நிலத்திற்கான  வரியை நீக்கி இறையிலியாக்கி அதற்கு  விலையாக  அன்றாட்டு நற்காசு 425 பெற்றுக்கொள்ளப்பட்டது. இனி இந்நிலத்தில் வரும் வருவாயைக் கொண்டு திருவாவடுதுறை இறைவன் கோயிலில் சிவலோக நாயகன் திருவாசலின் முன்புள்ள  சங்கர தேவன்  அறச்சாலை பிராமணருக்கும், தவசியருக்கும், அநாதி கிரிசர்க்கும் (கவனிப்பாரற்ற இழிந்தோர்), இவர் தவிர வைத்திய சாஸ்திரமும் பிரகடமும் சரகமும் இலக்கணமும் உருபாவதாரமும் படிக்கும் மருத்துவ மாணவருக்குச் சோறிடவும், இதுதவிர திருநாளில் சோறிடவும் மடப்புறமாக இறையிலி  நிலம் மூன்றே நாலுமா நிலம் கொடுக்கப்பட்டது.  இந்நிலம் முன்றே நாலுமாவொடு திருச்சாக்காட்டுப் பிச்சர் எடுப்பித்த அம்பலங்கோயில் கொண்டான் அனந்தபாலர் மடத்துக்கும் மடப்புறமாக இறையிலி செய்த நிலம் 2 வேலி. இந்நிலம் இருவேலியும் சேர்த்து ஆக நிலம் 5 செய்  4 மாவரை ஆகும். இந்நிலம் ஐஞ்சே நாந் மாவரையும் மிகுதிக் குறைவுள்ளடங்க அன்றாட்டு காசு நானூற்று இருபத்தை பெற்றுக் கொண்டு காசுகொள்ளா இறையிலியாகவே நிலவும் ஞாயிறும் உள்ள அளவும் நிலைப்பதாக செம்பிலும் கல்லிலும் எழுத்து வெட்டிக் கொள்க” என்று பலர் கையொப்பமிட்டது குறிக்கப்பட்டுள்ளது.  ஆக அனந்தபாலர் தந்த கொடை சோறிடுவதற்கும் அனந்தபாலர் மடத்திற்குமாக இரண்டு பகுப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. இறையிலிக்கு இழப்பீடாக 425 அன்றாட்டு நற்காசு பெறப்பட்டது ஏன் என்றால் சில ஆண்டுகளுக்கான வரி வருவாயை முன்கூட்டியே பெற்று அதற்கு வட்டி கணக்கிட்டால் வரிவருவாய் இழப்பு ஈடு செய்யப்பட்டதாகிறது.

    பிரகடம், சரகம், உருபாவதாரம் ஆகியன ஆயுர்வேத மருத்துவ நூல்கள் ஆகும். இதன் மூலம் திருவாவடுதுறையின் இக்கோவிலில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையும் மருத்துவக் கல்விக்கூடமும் இயங்கிய செய்தி புலனாகிறது.

    பார்வை நூல்:  Annual report of Indian epigraphy 159 of 1925.

    இக்கல்வெட்டின் மைப்படியை தந்த இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் மைசூர்க் கிளை தொல்லெழுத் துறைக்கும், கல்வெட்டை படித்து சரிபார்த்துத் தந்த திரு. இராஜகோபால் சுப்பையாவிற்கும் நன்றிகள் பல.

    Share
  • சரசுவதி பண்டாரம் எனும் நூலகம்

    சரசுவதி பண்டாரம் எனும் நூலகம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டு கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக, ஆடல் இசைக் கலைக் கூடங்களாக மட்டுமே இருக்கவில்லை அவை இலவச உண்டு உறையும் வேதக் கல்வி நடுவமாகவும் ஆயுர்வேத மருத்துவச் சாலையாகவும் விளங்கின. அத்தோடு நூலகங்களும் கோவில்களைச் சார்ந்து இயங்கின.

    வேதக் கல்வியொடு நில்லாமல் இலக்கியக் காவியம், தொன்மமாம் புராணம், வரலாறு, இலக்கணம், தெய்வியல் கூறும் மீமாம்சம் போன்றனவும் கற்பிக்கப்பட்டன. இவை அல்லாமல் ஆயுர் வேத மருத்துவம், சோதிடம் போன்ற சிறப்பு புலக் கல்வியும் கற்பிக்கப்பட்டன. இதனால் இவற்றுக்கான நூல் தேவை இயல்பாகவே எழுந்தது. மேலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வோர் எல்லா இடங்களுக்கும் நூல்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தாலும், குறிப்பாக வெள்ள காலத்தில் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தாலும் இந்நூல்கள் கிடைத்தற்கரிய காரணத்தாலும் இவற்றை எழுதிப் பேண வேண்டிய கட்டாயத் தேவையும் ஏற்பட்டது. அதனால் உண்டானது தான் சரசுவதி பண்டாரம் (bandaram) என்னும் ஓலைச் சுவடி நூலகம். பல்வேறு புலங்களுக்கான நூல்களை ஓலையில் எழுதுவதற்கென்றே அன்னாளில் தனியே ஆள்கள் இருந்தனர். இவர்கள் தவசக் கூலி, ஆடை (புடைவை) முதல், நெல், ஆண்டு காசிற்கும் அமர்த்திக் கொள்ளப்பட்டனர். விருப்பமுள்ள யாரும் கட்டணம் செலுத்தி இந்த ஏடுகளைப் படியெடுக்கலாம், ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் சில ஊர்களில் இத்தகு நூலகங்கள் செயற்பட்டதற்கான கல்வெட்டுகள் சில கோவில்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றுக்கு வேந்தர்கள், மன்னர்கள், அரையர்கள் அல்லாமல் சில தனியாரும் கொடை ஈந்து பேணி வந்துள்ளனர்.

    நாட்டைக் காப்பதோடு அறம் காப்பதும் (தர்ம ரக்ஷ்ணம்) ஆட்சியாளர் கடமை என்பதால் இவ்வாறு மதக் கல்விக்கும் அதைச் சார்ந்த கல்விக்கும் அன்றைய ஆட்சியாளர் தாராளமாக நன்கொடை ஈந்தனர். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகின்றது. படைச் செலவு, நிருவாக செலவு தவிர இப்படி மதம் வளர்த்துக் காக்க வேதக் கல்விக்கு செலவு செய்திராவிட்டால் அந்த பணத்தை வேறு ஒன்றுக்கும் செலவிட்டிருக்க மாட்டார். அப் பணத்தை அவர் தம் கருவூலத்திலேயே சேகரித்து வைத்திருந்திருப்பார். ஏனென்றால் முடியாட்சி என்பது மக்களாட்சி போல் மக்கள் நலஅரசு (welfare state) அன்று. இக்கால் மக்கள் வரிப்பணம்! மக்கள் வரிப்பணம்! என்று கூப்பாடு போடுவோர் ஒரு வேந்தன் இன்னொரு வேந்தன் மீது போர் தொடுத்து வென்று அவனிடம் உள்ள வரிப்பணத்தை எல்லாம் கொள்ளையிடும் போது மட்டும் மக்கள் வரி பணம் கொள்ளை போனதே என்று புலம்பாமல் வென்ற வேந்தனின் வெற்றிச் சிறப்பை பாடத் தொடங்குகின்றனர்.  ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? எனவே இன்றைய மக்களாட்சியின் மக்கள்நலக் கருத்தை கொண்டு போய் பண்டைய அரச செயற்பாடுகளில் திணிப்பது அறியாமையின் உச்சம் ஆகும்.

    இக்காலத்தில் சிலர் வேதக் கல்விக்கு இப்படி செலவு செய்ததை கடுமையாகச் சாடி எழுதி தம் அறிவின்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.  அது அவர்களின் வேதநெறி மீதான வெறுப்பின் வெளிப்பாடே ஆகும். வேதக் கல்வி தான் இப்படி என்றில்லை புத்த விகாரையிலும், சமண பள்ளியிலும், மதரஸாக்களிலும் கூட மதக் கல்வி தான் புகட்டப்பட்டன என்பதை கூர்ந்து நோக்கினால் இந்த அறிவின்மை புலனாகும். திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றில் பயிற்சி கொடுப்பதும் மதக் கல்வியை சார்ந்தது தான். இன்று நமக்குள்ள மதம் சாரா பொதுக் கல்வி என்பது ஐரோப்பியரால் அறிமுகமானது. இக்கால பொதுக் கல்வியை பழைய கல்வி முறையோடு ஒப்பிட்டு பார்ப்பது வரலாற்றை புரிந்து கொள்ள உதவாது மாறாக அதில் குற்றமே மேலெழும்பி நிற்கும். இராசராசன், இராசேந்திரன் ஆட்சியைக் குறை கூறுவோர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

    மேற்கண்ட நூலகத் தேவைக்கான செய்திகளை நோக்க பல்லவர் கோவில் வழிபாட்டை ஒட்டி வேதக் கல்வியொடு பிற புலக் கல்வி, ஆயுர்வேத மருத்துவம் ஆகியன ஒருங்கே வளர்க்கப்பட வேண்டும் என்பதாலேயே சதுர்வேதி மங்கலம் என்ற பிராமணக் குடியேற்ற ஊர்களை ஆங்காங்கே ஆற்றை அண்டி அமைந்தனர் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. கோவிலை நம்பி 3-4 பிராமணப் பூசகர் மட்டுமே வாழ்ந்திருக்க வில்லை மாறாக கோவிலைச் சார்ந்த இந்த கல்வி வினைகளிலும் பிராமணர் ஈடுபட்டிருந்ததால் தான் கோவில் ஊர்களில் கோவிலையும் குளத்தையும் சுற்றி 30 – 40 பிராமண வீடுகள் இருக்கக் காண முடிகின்றது.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் திருப்பணியார அறைக்கு பக்கத்து அறையில் உள்ள 7 வரி சிதைந்த கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ பாலபள்ளி நீலகண்ட நாயக்கர் செய்வித்த இந்த ஸரஸ்வதி பண்டாரத்துக்கு ஸேஷமான இத்[திருமண்]
    2. [டபத்து] இவர் உகந்தருளுவித்து திருப்ரதிஷ்டை பண்ணித் திருவாராதநங் கொண்டருளுகிற ஹயக்ரீவ நாயனாற்கும் [சரஸ்வதி]
    3. [தே]விக்கும் ஸ்ரீ வேதவ்யாஸ பகவானுக்கும் திருவாராதனத்துக்கும் அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட விஞ்சனங்களுக்[கும் உட]
    4. [லா]க நூறாயிரங்காசு ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கவும் இதில் பொலிசை கொண்டு இவ்விடங்களுக்கு திருவாராதனமும்
    5. அமுதுபடி சாத்துபடிகளுக்கு வேண்டுவன திருக்கொட்டகாரத்திலே ப_ _ தாக விட்டு நடத்திப் பண்ணவேணு [மென்று]
    6. சொல்லுகையாலே, இப்படியே பெருமாள் திருப்பள்ளி அறையில் பே[ரருளாள]ன் திவ்யஸிம்ஹாஸனத்து நாச்சியாரொ_ _ _ _
    7. இதுக்கு ஜீயரும் திருப்பதி ஸ்ரீ வைஷணவரும் _ _ ண்ணப்ப _ _ _ _ (முழுமை பெறவில்லை)

    சரசுவதி பண்டாரம் – ஓலைச் சுவடி நூலகம்; ஸேஷமான – சிறப்பு வாய்ந்த; திருவாராதனம் – கடவுள் பூசை; அமுதுபடி- திருச்சோறு படையல்; சாத்துபடி – தெய்வச் சிலை அலங்காரம்; விஞ்சனம் – சமையலுக்கான பண்டம்; உடலாக – நிபந்தனையுடன் இட்ட முதல்; ஸ்ரீ பண்டாரம் – கோயில் கருவூலம்; ஒடுக்கு – பணம் செலுத்து, pay; பொலிசை – வட்டி; திருக்கொட்டாரம் – கோவிலில் பொருள் வைக்கும் அறை,  store room.

    விளக்கம்:  இதில் நாயக்கர், ஜீயர் ஆகிய சொல்லாட்சி இடம் பெறுவதை வைத்து இக்கல்வெட்டு விசயநகர ஆட்சியின் 15-16 ம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம். பால பள்ளியை ஆளும் நீலகண்ட நாயக்கர் இந்த ஓலைச் சுவடி நூலகத்தை முன்பு ஒருபோது ஏற்படுத்தினார். அந்த நூலகமாம் சரசுவதி பண்டாரம் அமைந்த சிறப்பு வாய்ந்த இந்த திருமண்டபத்தில் இவர் விரும்பி நிறுவி பூசனை செய்யப்பட்டு வரும் பரிமுகப் பெருமாளான ஹயக்ரீவர், நாமகளாம் சரசுவதி தேவி, வேத வியாச பெருமான் ஆகியோரது சிலைகளுக்கு பூசனை ஆற்றவும் திருச்சோறு படையல், அலங்காரம் உள்ளிட்ட சமையல் பொருள்களுக்கென்றே முதல் பணமாக நூறாயிரம் (1 லட்சம்) காசினை கோயில் கருவூலத்தில் இவர் செலுத்தினார். இக்காசினைக் கொண்டு வட்டி பெற்று அந்த வட்டிப் பணத்தில் சிலைகளுக்கு அன்றாட பூசனை, திருச்சோறு படையல், அலங்காரம் ஆகியவற்றுக்கு தேவைப்படும் பொருளை கோவிலின் பொருள் வைக்கும் அறையில் வாங்கி வைத்து இதனை நடத்தி வரவேண்டும் என்று சொல்லுவதாலும், அதே போல் பெருமாளின் பள்ளிஅறையில் இறைவனை தெய்வ சிம்மாசனத்தில் நாச்சியாரொடு எழுந்தருளிவிக்க வேண்டுமாய் ஜீயரும் திருப்பதி வைணவர்களும் விண்ணப்பம் செய்தபடியால் என்பதோடு கல்வெட்டு சிதைந்து விட்டது. எனவே முழுச் செய்தியை அறிய முடியவில்லை.

    இதற்கு முன்பே சுந்தர பாண்டியன் காலத்தில் இக்கோவிலில் சரசுவதி பண்டாரம் செயற்பட்டு வந்தது. ஆனால் அது இசுலாமியப் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டதால் மீண்டும் விசயநகர ஆட்சியில் நீலகண்ட நாயக்கரால் சரசுவதி பண்டாரம் தொடங்கப்பட்டு செயற்பட்டது போலும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – தொகுதி 24, பக். 297 (A.R. No. 130 of 1938-39), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்  துறை வெளியீடு.

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் சேரன்மாதேவி தெய்வீசுரமுடையார் கோவில் 8 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் கோனேரின்மை கொண்டான் சேரவன் மஹாதேவி சதுர்வேதி மங்கலத்து
    2. ஸபையாற்கு. தங்களூர் சீமித்துவார்பதி அப்பன் கோயிலில் கைச்சிக்கு வாச்சபாண்டிய பிரம்மாதிராயர்
    3. தன்மமான ஸரஸ்வதி பண்டாரத்துக்கு நாலாவது முதல் கண்ணாறு விளையும் நிலத்திலே பசானப்
    4. பண்டத்துடனே முதற்காலத்திலே இரண்டுமா நிலம் முதலடங்க இறையிலியாகக் குடுத்த
    5. இந்நிலம் இரண்டுமாவுக்கும் எப்பேற்பட்ட சர்வ உபாதிகளும் உட்பட தவிர்த்து சந்திராதித்த வரை செல்ல
    6. இறையிலியாகக் குடுத்து வரியிலார் கணக்கிலும் கழிக்கச் சொன்னோம் சந்திராதித்தவற் செல்லக்
    7. கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுக்கவும். பாற்க யாண்டு நாள் 377. இவை விக்கிரம பாண்டியக்
    8. காலிங்கராயன் எழுத்து. இவை வரந்தரும் பெருமாள் எழுத்து.

    கண்ணாறு – சிறு வாய்க்கால்; பசானப் பண்டம் – சித்திரையில் அறுவடை ஆகும் விளைச்சல்; இரண்டு மா- ; உபாதி – கடமை எனும் வரி இனம்; பாற்க யாண்டு.

    விளக்கம்: இது 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு. சேரன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து சபையோருக்கு அரச அதிகாரிகளான விக்கிரம பாண்டிய காளிங்கராயனும், வரந்தரும் பெருமாளும் வழங்கிய ஆணை ஓலையில் “உமது ஊரில் உள்ள மித்துவார்பதி அப்பன் கோவிலில் பிராமண அதிகாரியான கைச்சிக்கு வாச்ச பாண்டிய பிரம்மாதிராயர் அறக்கொடையாக ஏற்படுத்திய சரசுவதி பண்டாரத்திற்கு ஊரில் நாலாவதாக உள்ள கால்வாயின் முதல் சிறுவாய்க்காலை அண்டி அமைந்த நிலத்தில் விளைந்த சித்திரை விளைச்சலோடு அந்த இரண்டுமா அளவு நிலம் முன்பு நூலகத்திற்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு மா நிலத்திற்கு எல்லா வகை வரியும் தவிர்த்து நிலவும் ஞாயிறும் உள்ள வரை இறையிலியாகவே வரியிலார் கணக்கு புத்தகத்தில் எழுதி கழிக்க சொன்னோம். இது நிலவும் ஞாயிரும் உள்ள வரை செல்வதாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க” என்று கூறி உள்ளனர்.

    நூலக நிலத்திற்கு வரிகட்ட வேண்டும் என்று சபையோர் கூறியிருக்க வேண்டும் அதனால் நூலக பொறுப்பாளர் இந்த அரச அதிகாரிகளைச் சந்தித்து இந்நிலத்திற்கு வரி எதையும் விதிக்கக் கூடாது என்று ஊர் சபையோருக்கு கூறுவது போல புதுஆணை ஒன்றை பெற்றுவந்தனர் என்று தெரிகின்றது. இந்த கல்வெட்டு கோவிலில் இடம் பெறுவதற்கும் இந்த நூலகப் பொறுப்பாள பிராமணரே காரணம் என்பதை அறிஞர் புரிந்து எளிதில் கொள்வர்.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (பொ.ஆ. 300 – 1800), பக்.286. ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம். (ARIEp 1916 SL No 695).

    தென்னார்காடு மாவட்டம் சிதம்பரம் நடராசர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு வடக்கே வட கோபுரத்திற்கு அருகே உள்ள மண்டபத்தில் உள்ள 6 வரி சிதைந்த கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரத்துக்கு பல க்ரந்தங்கள் பார்க்கவும் எழுதவும் அவிழ்த்து…தேவர்…ஞானஸமுத்ரதேவர் … ற்ற … க்கு உள்வரி யெழுதிக் கொ[டு*]த் … ன திஸ்யாகத்துக்கும் வ்ய…ப்பிக்கவும் வாசிக்கவும் காரம்பிச் செட்டுச் சொக்கத் தே … ழகந்த . றத்து ஸுப்ரமண்யன்.  புளிங்குறுபட் … …

    2.ருமாள். வங்கிப்புறத்து வினாயகபட்டன். காஞ்சிகுறி திருவெண்காவுடையா …பொத்தகங்கள் அவிழ் … … றை வித்யாபதி பட்டர்.  தி…சறை முதலியார். இந்…ற மங்க … …கோம[ட]த்து திருவானைக்காவுடையார். எழுதும் பேர்க்கு கோமடத்து மண்டலபுருசஷன்வங்கிபுறத்துத் திருநம் … ஆழ்வார்.

    3.குரோவி திருவலஞ்சுழி உடையார்.வினாயகதேவர் நொரட்டூர் வெள்ளைப்பிள்ளை. காஞ்சி …நிர்த்தராஜன் ஆழ்வான். திருவல…கு குண்டூர்த் திருவம்பல … க்கன் …புராணத்துக்கு முப்ரால் பெரியதேவர். ஜோதிஷ ஸாஸ்த்ரத்துக்கு குரோவி ஆயத்[ராஜ]ன். ஆகப் பேர் இருபதுக்கு எழுதின ஏவற் தீட்டுப்படி அனைத்துலகுங் கொண்டருளிய … … ணி … ஒன் … னூற்று அறுவரும்.

    4. வில்லவதரையன் ஓலை தென்னவன் ப்ரஹ்ம……க்ரம சோழ ப்ரஹ்மராயரும் ஜயதுங்கப் பல்லவரையரும் குருகுலத்தரையரும் உடையார் திருச்சிற்றம்பலமுடையார்…ண்காணி செய்வார்களும் … ஞ் செய்வார்களும் சாமுதாயஞ் செய்வார்களும் கோயில்னாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக்கூறு செய்வார்களும் பண்டாரப் பொத்தகமுடையார்களும் கணக்கரும் … [கண்]டுவிடு தந்ததாவது இரா[ஜாதிராஜ] … … மேல்பக்கத்து ஸரஸ்வதி பண்டாரத்துடனே

    5. சேர தேவர் ஸு[வாமி]தேவர் செய்வித்த…ஸரஸ்வதி பண்டாரஞ் செய்விக்குமிடத்து முன்[பத்]தை ஸரஸ்வதி பண்டாரத்தில் எழுதிக்கிடக்கிற க்ரந்தங்கள் இப … … யச் ..[செ] … து இதுக் … ன்று போதுகிற பேர்ரிட்டும் முன்பு தேவை செய்து போதுகிறபடிகளிலே நின்று தேவை செய்து போதக்கடவார்களாகவும் இப்பண்டாரத்து …ங் … … ரிக க்ரந்தங்கள் …. க்ரந்தங்கள் இ…லெ இந்த க்ரந்தங்கள்

    6. எழுதி சேர்க்கவேண்டுகையில் … … த்துடனே சேர் … கவு[ம்] வேண்டும் இடம்பெற வகுத்து … காணியே பண்டாரத்தி … ழுதின … … இருக்கு … னவும் இப்பண்டாரத்தில் இக் க்ரந்தங்கள் எழுத[ப்] பேர் பத்து முன்பத்தைப் பண்டாரத்தில் உள்ள க்ரந்தங்கள் தேஸா[ந்த்ர]ங்களினின்றும் … வி … க்கவும் இ … … டியாலே பண்டார … …1

     1continuation lost

    க்ரந்தம் – நூல்; அவிழ்த்துக் கட்டு – ஏட்டைப் பிரித்துக் கட்டு; உள்வரி – அந்தராயம்; ஜோதிஷ – ஜோதிடம்; ஏவற் தீட்டு – ஆணை ஓலை; சாமுதாயம் செய்வார் – ஊர்ப் பொது நிர்வாகம் செய்பவர்; திருமாளிகைக்கூறு – கோயில் உட்புறமாக உள்ள கட்டடங்கள், மண்டபம், சுற்றுக் கோயில்கள் ஆகியனவற்றில் வேலை செய்து தம் பங்கைப் பெறும் அர்ச்சகர்; பொத்தகம் – நூலக வரிப் புத்தகம்; போதுகிறபடி – போகிறபடி; நின்று – இருந்து; தேசாந்திரம் – வெவ்வேறு இடம்.

    விளக்கம்:  நூலகத்திற்கு பல நூல்களைப் பார்த்திடவும், எழுதிடவும், நூல்களைப் பிரித்துக் கட்டவும் ஞானசமுத்திர தேவர் எழுதிக் கொடுத்த உள்வரி விவரம் யாதெனில் திஸ்யாகம், வாசிப்பு ஆகியவற்றிற்காக சொக்கத் தே _ _ _ , சுப்ரமணியன், புளிங்குறு பட்டன், _ _ _ பெருமாள், வங்கிப்புறத்து வினாயக பட்டன், காஞ்சிக்குறி திருவெண்காவுடையான் ஆகியோரும் நூல்களைப் பிரித்துக் கட்ட _ _ றை வித்யாபதி பட்டர், தி_ _ _ சறை முதலியார், _ _ _, கோமடத்து திருவானக்காவுடையான் ஆகியோரும் ஏடுஎழுதும் பொறுப்பிற்கு கோமடத்து மண்டல புருஷன், வங்கிபுறத்து திருநம்_ _ _ஆழ்வான், குரோவி திருவலஞ்சுழி உடையார், _ _ வினாயக தேவர், நொரட்டூர் வெள்ளைப் பிள்ளை, காஞ்சி _ _ _ நிர்த்தராஜன் ஆழ்வான், திருவம்பல_ _க்கன் ஆகியோரும் _ _ _ புராணத்திற்கு முப்ரால் பெரியதேவர், ஜோதிடத்திற்கு குரோவி ஆயத்ராஜன் ஆகியோர் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆக இந்த இருபது பேருக்கு கையெழுத்திட்ட ஓலை ஆவணப்படி  அனைத்துலகுங் கொண்டருளிய (சடவர்மன் சுந்தர பாண்டியன் என உய்த்துணரப்பட்டுள்ளது) மேலும் தெளிவாக அறியமுடியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது.

    வில்லவத்தரையன் விடுத்த ஓலைஆவணம் யாதெனில் தென்னவன் பிரம்ம_ _ _,  (வி)க்ரம சோழ பிரம்மராயரும், ஜயதுங்க பல்லவரையரும், குருகுலத்து அரையரும், உடையார் திருச்சிற்றபலமுடையார் (இறைவன் நடராஜன்) _ _ _ கங்காணி செய்பவர்களுக்கும், கோயில் நிர்வாகம் (ஸ்ரீகாரியம்) செய்பவர்களுக்கும், ஊர்ப் பொது நிர்வாகம் செய்பவர்களுக்கும், தமக்கான பங்கைப் பெறும் கோயில் உட்பிரிவு அர்ச்சகர்களுக்கும், நூலக வரிப்புத்தகம் பேணுபவருக்கும், கணக்கருக்கும் வழிகாட்டுதல் தந்தது யாதெனில் இராஜாதிராஜன் _ _ _ அமைந்த மேல்பக்கத்து நூலகத்துடன் சேர்த்து விரிவாக்கிடும் போது வேந்தரின் அரசகுரு எழுதிய நூல்களை நூலகத்தை ஏற்படுத்தும் போது முன்னம் நூலகத்தில் எழுதிவைத்துள்ள நூல்களோடு சேர்க்க வேண்டும்.

    முன்னர் எவ்வாறு தேவையானவற்றை செய்து கொண்டு போகிறபடியிலேயே இருந்தனரோ அப்படியே இப்போதும் தேவையானவற்றை செய்யக் கடவார்களாக. இந்த நூல்களை எழுதிச் சேர்க்கின்ற போது அவற்றுடன் அரசகுருவின் நூல்களும் அதில் இடம்பெறச் செய்து (தெளிவில்லாதபடி சிதைந்துள்ளது). இந்த நூல் களஞ்சியத்தில் இந்நூல்களை எழுதப் பத்து பேரை அமர்த்தி முன்பு இருந்தது போல வெவ்வேறு இடங்களில் இருந்து நூல்களைக் கொண்டு வந்து இப்படியாக நூலகத்தை நடத்திச் செல்ல வேண்டும். (இதன் மேல் தொடர்ச்சி விடுபட்டுள்ளதால் கல்வெட்டின் முழு விவரத்தை அறிய முடியவில்லை).

    பார்வை நூல்:  (A.R. B. 168 of 1961-62), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை.

    தென்னார்காடு மாவட்டம் சிதம்பரம் நடராசர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு வடக்கே மேற்கு கோபுர அடுக்குகளுக்கு அருகே உள்ள மண்டபத்தில் உள்ள 8 வரி கல்வெட்டு. நடுப்பகுதி கட்டடத்தில் மறைந்துள்ளது.
    1. ஸ்வஸ்தி ஸ்ரீ த்ரிபுவனச் சக்ர.. ருவையாறுடையானும் மதுராந்தக… …நும் ஆளுடையார் கோ… த் திருமாளிகைக்கூறு தில்லைஅம்பலப் பல்லவரையனும் ஸ்ரீகாரியஞ் செய்வார்க்ளும் ஸாமுதாயஞ் செய்வார்களும் கோயில்நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக்கூறு செய்வார்களும் செய்யத் திருவாய்மொழி … கோயிலில் இராசா[தி]ரா… மாளிகை மேலைத் திருமாளிகையில் ஸுப்ரமண்யப் பிள்ளையார் எழுந்தருளி இருக்கிற இடத்துக்கு வடக்காக … … …

    2. ச் செய்த ஸரஸ்வதி பண்… …உடையார் ஸ்வாமி தேவர் எழுதிவித்தனவாய்ப் புகுந்த பொத்தகங்களும் இவ் … [பெ] … ஸித்தாந்தாகரமும் உள்ளிட்டன எழுதின பொத்தகங்களும் நின்பை ஆட்கொண்டான் பட்டனும் கௌதமன் உய்யக் கொண்டான் பட்டனும் கோ … பட்டனும் தபஸ்ஸிவக …சம்பந்தன் …ணலூர் கிழவன் திருஞானசம்பந்தன் திருச்சிற்றம்பலமுடையானும் அவிழ்த்துக் கட்டவும் …ஜீர்ண்ணத்தவை …

    3. எழுதவும் இவையும் ஆளுடை … ம் … ன் இலைச்சினை … ணிய … இவனும் புல்லூருடையா[ன்] திருநீலகண்டன் மெய்காப்பானாய் இ … பல .. கோக்கவும் இவர்களுக்குக் கொற்றுக்கும் புடவை முதலுக்கும் இவர்களில் நின்பை ஆட்கொண்டான் பட்டனுக்கும் கௌதமன் உய்யக் கொ…னுக்கு … … நாள் ஒன்றுக்கு நெல்லு தூணியும் ஆட்டைக்கு காசு நாலும் …லிக்கு… [உய்]யக்கொண்டான் பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு … பதக்கும் ஆட்

    4. ட்டைக்கு காசு இரண்டும் அலஞ்… …டைவானுக்கும் பேர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுத் தூணியும் ஆட்டைக்குக் காசு நாலும் இராமபட்டனுக்கு நாள். ஒன்றுக்கு நெல் முக்குறுணி நானாழியும் ஆட்டைக்குக் காசு மூன்றரையும் புல்லூருடையான் திருநீலகண்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப் பதக்கு நானாழியும் … … க வந்த நெல்லுங் காசும் பெறவும் பெறுமிடத்து உடையார் த்ரிபு[வன] வீரஈஸ்வரமுடையார் கோயில் திருமலையில் [பெ]ரிய நாயனாரையும் நாச்-

    5. சியாரையும் எழுந்தரு[ளுவி]த்த வி…[ள] நாட்டு [வடநா]லூரான குலோத்துங்க சோழ அரசூர் நிலம் இருபத்தெழே இரண்டுமா அரைக்காணி முந்திரிகையும் இறையிலியாய் வருகிறபடி தவிர்ந்து பழம்படியே காணியாய் விஸ்வாதிகவிவேக மங்கலமென்னும் பேராகவும் இன்நிலம் ஆளுடையார்க்கு அந்தரா … தேவதான இறையிலியாக இடவும் இன்னிலத்துக்கு முன்பு முதல் … ண்டு வருகிறபடியே எண்ணூற்றொருபதின் கல நெல்லு கொண்ட முதலும் இன் நெல்லில் மூன்று.

    6. கூறிட்ட ஒரு கூற்றில்… …றவும் திருநாள் … க்கங்களில் இ … கரி … ப் பெறவும் இப்படி … இத்திருமாளிகையி[ல்] ஸுப்ரமண்யப் பிள்ளையார் … உடைப்பற்றக் கல்வெட்டவும் விக்கிரமசோழன் திருமாளிகைத் திருக்கை ஒட்டியில் க்ரந்தங்களிலும் தமிழ்களிலும் எழுதவேண்டுவன இவர்களில் வேண்டுவார் [பு]க்கு எழுதி ஒக்கப் பார்த்து இவை இ ஸரஸ்வதி பண்டாரத்துக்கும் கோயிலில் திருக்கை ஒட்டிக்கு முதலாக ஒடுக்கவும் செய்யக் கடவதாக வே[ண்டு]மென்று … …  ஸ்வாமிதேவர்

    7. செய்தமையில் இப்படிக்…ம் இப்படி செய்யவும் ஆரி[யன்] இராமபட்டன் …றை கைத் தீ … ளுக்குள்ளும் புகக்கடவனாகவும் பண்ணுவது எழுதினான் தி …

    ராஜெந்த்ர தே.. ….வேளான் என்றும் இப்படி திருவாய் மொழிந்தருளினார் … … இவை வீராடராய னெழுத்தென்றும் [சீ]த்தாராயனெழுத்தென்றும் இவை விசயராய னெழுத்தென்றும் இவை அங்கராய னெழுத்தென்றும் இவை தொண்டைமா னெழுத்தென்றும் ப்ரஸாத –

    8. ஞ் செய்தருளின செய்யும்படி கல்வெட்… …1

     1 Build in (புதிய கட்டடம் மறைத்துள்ளது)

    திருக்கை ஓட்டி – கோயிலில் திருமுறை ஓதுவார் மண்டபம்; சுவாமி தேவர் – அரச குரு; புகுந்த – வந்த; ஒக்க பார்த்து – ஒப்பிட்டு பார்த்து; கொற்று – தவசமாக பெறும் கூலி, daily wages received as grains; தீட்டு – எழுதிக் கொடுத்த ஓலை; பண்டாரக் கண்காணி – நூலக அதிகாரி; புடவை – ஆடை, துணி; சாமுதாயம் செய்வார் – ஊர்ப்பொது நிர்வாகம் செய்வார்; பிரசாதம் செய்தருளினபடி – அரசாணைப்படி; ஜீர்ண்ண – அழிந்து, சிதைந்த

    விளக்கம்:  திரிபுவனச் சக்கரவத்திகள் எனத் தொடங்கி கல்வெட்டு சிதைந்துள்ளதால் வேந்தனின் பெயர், ஆட்சி ஆண்டு அறியமுடிவில்லை. திருவையாறுடையனும் மதுராந்தக_ _நும், ஆளுடையார் கோமடத் திருமாளிகைக்கூறு தில்லை அம்பலப் பல்லவரைனும், கோயில் திருப்பணி செய்பவரும், ஊர்ப்பொது நிர்வாகம் செய்பவரும், கோயில் தலைமை ஏற்றிருப்பவரும், தமக்கான பங்கைப் பெறும் கோயில் உட்பிரிவு அர்ச்சகர்களுக்கும், கோயிலில் இராசாதிராசன் மாளிகை அமைந்த மேற்கு திருமாளிகையில் சுப்பிரமணிய பிள்ளையார் கோயில் இருக்கிற இடத்திற்கு வடக்காக ஏற்படுத்திய நூலகத்தில் வேந்தரின் அரசகுருவானவர் எழுதியது என்று வந்து சேர்ந்த நூல்களும், இவ்வாறு வந்து சேர்ந்த நூல்களில் சித்தாந்தாகாரம் உள்ளிட்டவையான நூல்களை நின்பை ஆட்கொண்டான்  பட்டனும், கௌதமன் உய்யக் கொண்டான் பட்டனும், கோ_ _ _ பட்டனும், தபஸ்ஸிவக _ _ சம்பந்தன், _ _ ணலூர் கிழவன் திருஞானசம்பந்தன் திருச்சிற்றப்பலமுடையான் ஆகியோர் பிரித்துக் கட்டுவதற்கும் அழிந்து சிதைந்த நூல்களை  எழுதுவதற்கும் அத்தோடு ஆளுடை_ _ _ம், இலைச்சினை_ _ _ ணியன், புல்லூருடையான் திருநீலகண்டன் நூலகத்திற்கு மெய்க்காப்பானாய் இருந்து பல நூல்களை கோர்க்க வேண்டும், இவர்களுடைய தவசக் கூலிக்கும், ஆடை முதலுக்கும் செய்யவேண்டியது யாதெனில் இவருள் நின்பை ஆட்கொண்டான் பட்டனுக்கும் கௌதமன் உய்யக் கொண்டானுக்கும் நாள் ஒன்றுக்கு தூணி அளவு நெல்லும் ஆண்டிற்கு நாலு காசும், உய்யக் கொண்டான் பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்கு அளவும் ஆண்டிற்கு காசு இரண்டும் பெறக்கடவதாக.

    _ _ _ ஆள் ஒருவர்க்கு நாள் ஒன்றுக்கு தூணி அளவு நெல்லும் ஆண்டிற்கு நாலு காசும் தரவேண்டும். இராம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு முக்குறுணி நானாழி நெல்லும் ஆண்டிற்கு காசு மூன்றரையும் தரப்படவேண்டும். புல்லூருடையான் திருநீலகண்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்கு நானாழி தரப்படவேண்டும். _ _ _ வந்த நெல்லையும் காசையும் பெற்று அப்படி வந்தவற்றை உடையார் திரிபுவன வீர ஈசுவரமுடையார் கோயில் இறைவனையும் இறைவியையும் எழுந்தருளச் செய்து வி_ _ளநாட்டு வடநாலூரான குலோத்துங்க சோழ அரசூர் நிலம் இருபத்தேழே இரண்டுமா அரைக்காணி முந்திரிகையும் இறையிலியாக வருவதை கருத்தில் கொள்ளாமல் தவிர்த்து பழையபடியே காணியாய் விஸ்வாதிகவிவேக மங்கலமென்னும் பெயராலேயே இந்நிலம் இறைவர்க்கு அந்தராயமாக தேவதான இறையிலியாக கொடுக்க இன்னிலத்திற்கு முன்னம் வருகிறபடியே 810 கல நெல்லைப் பெறும் போது இதில் மூன்றில் ஒரு பங்கை _ _ _. கோயிலில் சுப்பிரமணிய பிள்ளையார் உரிமை பெற கல்வெட்டாக வெட்டுவதற்கும் விக்கிரம சோழன் திருமாளிகையில் அமைந்த திருமறை ஓதுவார் மண்டபத்தில் சமஸ்கிருத நூல்களிலிருந்தும் தமிழ் விளக்க நூல்களிருந்தும் எழுத வேண்டியவற்றை எழுதக்கொள்ள விரும்புவோர் வந்து எழுதிக்கொள்ள, ஒத்துப் பார்த்து படியெடுக்க நூலகத்திற்கும் கோயில் திருமுறை ஓதுவார் மண்டபத்திற்கும் முதலாக கட்டணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசகுரு முன்ஏற்பாடு செய்ததால் அதன்படியே செய்ய ஆரியன் இராம பட்டனுக்கு ஆணைஓலை எழுதினான் இராசேந்திர தேவ வேளான். இதை வழிமொழிந்தார் _ _ _. இவை விராடராயன், சீத்தாராயன், விசயராயன், அங்கராயன், தொண்டைமான் ஆகியோரால் அரசாணைப்படுத்தியபடியே செய்யுமாறு கல்வெட்டு வடிக்கக்கடவது.

    பார்வை நூல்:  (A.R. B. 169 of 1961-62), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை.

    சிதம்பரம் கோவில் இரு கல்வெட்டுகளின் மைப்படியை தந்த இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் மைசூர்க் கிளை தொல்லெழுத் துறைக்கும், கல்வெட்டை படித்து சரிபார்த்துத் தந்த திரு. இராஜகோபால் சுப்பையாவிற்கும் நன்றிகள் பல.

    Share
  • பூலாங்குறிச்சி கல்வெட்டு விளக்கம்

    பூலாங்குறிச்சி கல்வெட்டு விளக்கம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் இருப்பது தான் பூலாங்குறிச்சி மலை. இம்மலையில் மூன்று கல்வெட்டுகள் முதன்முதலாக 1979 இல் அறியப்பட்டன. அவற்றில் வலப்புற கல்வெட்டு பெரும்பாலும் சிதையாமல் முழுமையான செய்திகளை அறியும்படி 13 வரி கொண்டதாக உள்ளது. 22 வரி உள்ள இடப்புற கல்வெட்டு தொடக்கத்திலும் இறுதியிலும் சிதைந்துள்ளதால் அதன் செய்தியை தெளிவாக முழுமையாக அறியமுடிவில்லை. இதன் நடுப் பகுதியில் மட்டும் சில செய்தி சிதையாமல் உள்ளன. நடுவில் உள்ள இன்னொரு கல்வெட்டு முழுவதும் தேய்ந்துவிட்டபடியால் அதன் செய்தியை அறிய முடியவில்லை. வலப்புறக் கல்வெட்டில் குறிக்கப்படும் பச்செறிச்சில் மலை தான் இன்று பூலாங்குறிச்சி எனப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் தமிழியில் இருந்து வட்டெழுத்து தோன்றுகிற தொடக்க நிலை எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மெய்யெழுத்திற்கும், எ, ஒ என்னும் உயிரெழுத்திற்கும் புள்ளி வைக்கப்பட்டுள்ளன. மிகப் பழங்காலக் தமிழ்க் கல்வெட்டில் இவையே நெடியதென அறியப்படுகின்றன. எழுத்தமைதியை கொண்டு இவற்றின் காலம் தொல்லியல் அறிஞரால் கி.பி. 5-ம் நூற்றாண்டு என முடிவு கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அக்கால சமய, சமூக, அரசியல் நிலையை ஓரளவு அறிந்து கொள்ள முடிகின்றது. இனி கல்வெட்டு விளக்கம் கீழே.

    வலப்புற கல்வெட்டு:

    1. கோச் சேந்தன் கூற்றற்கு யாண்டு நூற்றுத்தொண்ணூற்றி
    2. ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் ப(ன்னிரண்டு) வேள் மருகண் மகன் கடலகப் பெரும்படைத்
    3. தலைவன் எங்குமான் னொல்லையூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலை மேற் செஇவித்த தேவகுலமும்
    4. முத்தூற்றுக் கூற்றத்து விளமரு(ச்) செஇவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி
    5. த்த தாபதப்பள்ளியுள் (வா)சி தேவனாரு கோட்டமும் மவை அத்திக்கோயத்தாரு முள்மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக
    6. அவற்றுக்குற்றது செ(யக்) கொண்டமையால் லவற்றை வ(ழிபடுவது)ம் மவற்றுக்குப் பெயப்பட்ட அறப்புறந் நடையாட்டுவதூஞ் செயும்
    7. பாண்டங்கருஞ் சேவுக்கரும் (வி)ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ(ர்) காவல் கொண்டா(ரு ஆ) ராஇந்து வைஇக்கப்பட்டாரு அல்லது வழிபடப்
    8. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி(ல்) மலைமேற் செஇவி(த்த தேவகு)லத்துக்குக் குடும்பியராவாரு குழ
    9. (லூ)ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர் வழியல்லது வேறொரு) குடும்பாடப் பெறாமையும்
    10. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய_ _க(ளு)_ _(டஞ்) செயவும் மெழுதி வைக்கென் றருள்ளித்தாரு
    11. கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானெ இனங்குமானும் முலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி
    12. யு முலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின (னோ)லை எழுதுவான் (றம)ன் காரி
    13. கண்ணன். இது கடைப்(பி) ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் (வே)ண்ணாட்டான் (ந_ _ரி) நாரியங்காரி

    பக்கம் – (சுக்ல, கிருஷ்ண) பக்ஷம் எனும் நிலவின் பிரிவு; மகன் – நேரடியாக கீழ்பணிந்த வீரன், low rank subordinate warrior, சேவகன் என்பது வேந்தன் அல்லது மன்னனின் மேலாண்மையை ஏற்ற இன்னொரு ஆட்சியாளனை மட்டும் குறிக்கும்; கடலகம் – கடற்புறம்; தேவகுலம் – தேவன் இருப்பிடம், குருகுலம் குருவின் இருப்பிடத்தை குறிப்பது போல; கோட்டம் – சன்னதி, shrine; அத்திக்கோயத்தார் – காவல் புரியும் யானை அல்லது குதிரைப்படை வீரர் குழு; உள்மனையார் – ஊருள் வீடுடையோர். புறமனை என்றால் ஊருக்கு வெளியே வீடு; நாற்பாற்றிணை – நால்வகைக் குலம்; பெயப்பட்ட – வேறு இடத்தின்று அமர்த்திய; அறப்புற – நியதிப்படி, as per procedure;  நடையாட்டு – வழக்கில் பயிலுதல், usage; பாண்டங்கர் – பண்டாரக் காப்பாளர்; சேவுகர் – பிற்கால தேவரடியாரை ஒத்த அர்ப்பணிப்பு பணியாளர், dedicated worker; விரும்மாச்சாரி – ஒரு வகை கோவில் ஊழியர்; தருமி – துறவி, அறவோர்; ஆராய்ந்து – தகுதியை ஆய்ந்து; குடும்பி – பூசகர், சிலம்பில் சேடகுடும்பி என்ற சொல் பூசகரைக் குறிக்கின்றது; அருளி – ஆணையிட்டு; உலவியப் பெருந்திணை – ஆவணப்படியே செயலாக ஒப்பி ஆணைப்படுத்தும் அதிகாரி; கிழான் – வேந்தன் கீழ் மன்னன் அவன் கீழ் அரையன் அரையன் கீழ் கிழான் என்ற நாலாம் நிலை அதிகாரப் பொறுப்பு ஆட்சியாளன். ஒரு ஆவணத்தை ஆணைப்படுத்தும் அதிகாரியாக பெரும்பாலும் கிழார்களே செயல்பட்டனர்; கடைப்பி – பிடிபாடு, வழிகாட்டு நெறி, guidelines; ஓலைக்கால் – ஓலைச்சுவடி.

    விளக்கம்:  வேந்தன் சேந்தன் கூற்றனுக்கு மகுடம் ஏறிய பின் 192 ம் ஆண்டு, நாள் 36, பக்கம் தேற்பிறை 12 நாளிலில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது. சேந்தன் கூற்றனுக்கு அடங்கிய வேள்ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் என்பவன் ஒல்லையூர்க் கூற்றத்தில் வேள்கூரின் பச்செறிச்சின் மலை மேல் எடுப்பித்த தேவகுலமான கோவிலும் முத்தூற்றுக் கூற்றத்தின் விளமரில் செய்வித்த கோவிலும் மதிரையில் உலவியத்தான் குளத்தின் வடபக்கத்தில் உள்ள தாபதப்பள்ளியில் எடுப்பித்த வாசி தேவனார் கோட்டமும் ஆகிய இம்மூன்றுக்கும் அத்திகோயத்தார், ஊருள் வாழ்வோர், நாற்பிரிவு குலம் ஆகியோரை தமக்கு காவலாக, துணையாகக் கொண்டு அவற்றுக்கு தேவையானவற்றை செய்தமையால் அவற்றில் வழிபடவும் அவற்றுக்குப் ஏற்படுத்தப்பட்ட நியதிப்படியான பூசனையை வழக்கமாக செய்யும் பண்டாரம் காப்பாளரும், அர்ப்பணிப்பு பணியாளரும், விரும்மாச்சாரிகளும், துறவியரும், ஊர் காவல் கொண்டாரும் தகுதி ஆராய்ந்து வைக்கப்பட்டவரை தவிர பிறர் வழிபாடு ஆற்றாதவாறு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பச்செறிச்சில் மலைமேல் எடுப்பித்த கோவிலுக்கு பூசகராகின்றவர் குழலூரில் இறந்த வேந்தரால் வேள்கூருக்கு அழைத்து வந்து அமர்த்தப்பட்ட பூசகர் குடும்ப வழியினரைச் சாராத வேறொரு குடும்பத்து பூசகர் பூசனை ஆற்றக்கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அக்கோவிலுக்கு தேவையானதை செய்தும் தீங்கான செயல்களுக்கு தண்டம் விதித்தும் செயற்பட வேண்டும் என்று எழுதிவைக்கச் சொல்லி ஆணையிட்டார். இதை படைத் தலைவன் எங்குமான் சொல்லிடக் கேட்டவரான உலவியப் பெருந்திணை நல்லன்கிழான் எயினங்குமான், உலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி, உலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தை ஆகிய மூவரும் இதற்கு ஒப்பி  கையெழுதிட்டு ஆணைப்படுத்தினர். இதை கேட்டு வந்து கேட்டபடி கூறினவன் ஓலை எழுதுவான் தமன் காரி கண்ணன் ஆவான். இதையே வழிகாட்டு நெறியாக ஓலைச்சுவடி கண்டு (கல்லில்) எழுதிக் கொடுத்தேன் வேண்ணாட்டான் ந_ _ரி நாரியங்காரி.

    192–ம் ஆண்டு எந்த தொடக்க ஆண்டை குறிக்கின்றது என்று தெரியவில்லை. நாற்பாற்றிணை என்பது அந்தணர், அரசர், வணிகர், உழவர் என்ற நால்வருண முறை ஆகும். நால் வருண முறையை குறிக்கும் மிகப் பழைய தமிழ்க் கல்வெட்டு இதுவே எனலாம். தாபதப்பள்ளி என்பது சமண பள்ளி ஆகும். தேவகுலம் என்பது சமணம் சாராத கோவில் ஆகும்.

    இடப்புற கல்வெட்டு:

    1. _ _ _ ந்தற்கு யாண்டு நூற்றுத் _ _ _ _ _
    2. நா(ற்) _ _ _ ர.ப_ ] _ _
    3. (னு)_ _ _ ளள் (ளை) _ _ _ _
    4. _ _ _ _ (ள்) மருகண் மகன் (க)டலகப் பெ
    5. _ _ _ _ ன் ஒல்லையூருக்கூற்(ற)
    6. _ _ _ _ _ _ _ _
    7. _ _ செ _ _ _ வகள _ _ வய _ _ _ _
    8. _ _ _ _ _ _ _ _ _
    9. (பெ)_ _ரு நிலனும் புன்செ வெள்ளேற்றான் மங்கலமென்
    10. ._ _ (ழவரும்)_ ரு…ங் கூடலூரு நாட்டுப் பிரம்மதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயங்கி
    11. _ _ _ ழமையும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப்படுங்கடைய வயலென்னும்
    12. _ _ _ புலத்தவன் விற்றுக்கொண்டு கொடுத்த புன்செ நிலனு
    13. _ _ _ துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரா(ன)
    14. _ _ _ றாராலும் பிரம்_ _யுங் காரண்மையுமாகக் கொண்டாளுந் நீர் நிலனும் புன்
    15. _ _ லனும் பிறவுஞ்_ _ _ பாண்டி நாட்டுங் கொங்கு நாட்டும் மவரு காராண்கிழமையுங் கல
    16. க் கிழமையும் மேல்(லாண்மை) கொண்ட(ன)வும் மவருடைய காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம
    17. வரு குடிகளையும் _ _ _ டையாரும் பிரம்ம தாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்
    18. பாரும் முப்பு (ரு காப்பாரு) _ _ _ தாயந் நெறி அ_ _ செஇதாரு தத்தமானும் வேறு வேறு ஆஇரத்தாறுநூ
    19. று காணந் _ _ று __ டு வே_ _ ன்ற_ _ ரு கேட்டாருல வியப் பெருந்திணை நல்லகிழா னெ இனங்கு
    20. மானும் முலவி _ _ _ ம _ _ _  ங்கிழான் ளங் கூற்றனும் முலவியப் பெருந்திணை ஆலத்தூர் கி
    21. _ _ _ _ லை _ _ துவான் (றமன்வ)டுகங் குமான்_ _டைப்பி (ஒ)
    22. _ _ _(தளருக்கு)_ _ _

    விளக்கம்:   வேள்ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் ஒல்லையூர் கூற்றத்தில் செய்த செயலைக் குறிக்கின்றது. 12-ம் வரி வயலுக்கு உரிமையாளன் விற்றுக்கொடுத்த புன்செய் நிலம் பிரம்மதாயமாக ஆக்கப்பட்டதை தெரிவிக்கின்றது. அந்த பிரம்மதாயத்துள் ஒரு உரிமையாளரின் பயிர் செய்யும் உரிமை நீர், நிலம் என்பது பற்றியும் பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அவருக்கு உள்ள பயிர் செய்யும் உரிமை பற்றியும், அவருடைய கால்நடை, தோட்டம், குடிகள் பற்றியும் சொல்கின்றது.

    பிரம்ம தாயமுடையவரும், நாடுகாப்பாரும், புறங்காப்பாரும் முப்புரு காப்பாரும் தாயநெறியை காக்க வேண்டும் என்றும் இதற்கு அல்லவை செய்தாரிடம் ஆயிரத்தறுநூறு காணம் தண்டம் திரட்டவேண்டும் என்கின்றது. இதை ஆணைப்படுத்திய கிழார்கள் பெயரை குறிப்பதோடு கல்வெட்டு சிதைந்துள்ளது.

    இதன் மூலம் அக்காலத்தே பிராமணர் தமிழகத்தில் வாழ்ந்தது உறுதி செய்யப்படுவதோடு அவர் பெற்ற நிலக்கொடை அதன் பயிர் செய்யும் உரிமை பற்றி அறிய முடிகின்றது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ்1991 , பக். 67- 69.

    Share
  • குடவோலை கல்வெட்டு விளக்கம்

    குடவோலை கல்வெட்டு விளக்கம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    மக்களில் இருந்து மக்களே ஒருவரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் முறையே இந்நாளைய குடியாட்சி ஆகும். இந்த முறை நமக்கு மேலை நாட்டில் இருந்து அறிமுகமானது. இதற்கு முன் நம் நாட்டிலேயே பண்டு குடவோலைத் தேர்தல் முறையில் ஊராட்சிக்கான குடியாட்சி நடைபெற்றது. இதற்கு உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலின் இரண்டு குடவோலைக் கல்வெட்டுகள் சான்றாக உள்ளன. இதில் சதுர்வேதி மங்கலமான உத்தரமேரூரில் வாழ்ந்த பிராமணர்கள் தம்மூர் வாரியத்திற்காக தம்மில் இருந்து வாரிய உறுப்பினரை தேர்ந்தெடுத்த முறை பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

    இதனை குடியாட்சியே அல்ல அது பிராமண ஊர்ச் சபைக்கான பிராமணக் குடவோலைத் தேர்தல் என்று மறுப்பாரும் உண்டு. மேலும் பொது மக்கள் விரும்பி ஓட்டளிக்க வாய்ப்பு இல்லாத தேர்தல் முறை என்கின்றனர். இவர்கள் கூறும் காரணம் உண்மை தான் என்றாலும் அதுவும் ஒரு வகைக் குடியாட்சி தான். ஏனென்றால் ஒரு ஊரின் வாரியங்களுக்கு அரச அதிகாரி இல்லாமல் அவ்வூரின் குடிகளில் இருந்தே வாரியப் பணியை நிறைவேற்ற  பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வாரிய உறுப்பினருக்கான தகுதியும், கட்டுப்பாடும் வரையறுக்கப்பட்டு வரையறைக்கு தக தகுதி உள்ளவரே வேட்பாளராக குடவோலையில் பெயர் எழுதி இடப்பட்டனர். ஒரு குடத்தில் உள்ள பல பெயரில் ஒருவரது பெயர் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். குடும்பு என்பது ஒரு சிறு அலகு தான் இதாவது, ஒரு கூட்டுக் குடும்பம் அல்லது குழுவைக் கொண்டது. இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர் போட்டியிட்டாலும் அந்த குடும்பில் பெயர் எழுதப்படுவோர் அனைவருமே வரையறைப்படி தகுதி பெற்றவர் தான். ஒரு குடும்பின் தகுதி உள்ள, விருப்பம் உள்ள உறுப்பினர்கள் அத்தனை பேர் பெயரும் ஒரே குடத்தில் தான் இடப்படிகின்றன. அதில் ஒருவர் பெயரை மட்டுமே தேர்ந்தெடுக்க குடவோலை தேர்தலே போதுமானது. இதற்கு பெருவாரியான மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்லை. இதில் செலவு குறைவு. எனவே பொது மக்கள் விருப்பப்படி வேட்பாளர் தேர்ந்தெடுக்கவில்லை என்ற கருத்து மதிப்பிழந்து போகின்றது. மக்களில் இருந்து ஒருவர் என்ற முறையில் இது ஒரு குடியாட்சி முறை தான்.

    உத்தரமேரூர் இரண்டாம் கல்வெட்டில் குடும்பு என்பது குடத்தில் இருந்து பெயர் ஓலையை எடுக்கும் முறை என்று இன்னொரு பொருளிலும் குறிக்கப்படுகின்றது (கொடு < குடு > குடும்பு). உத்தரமேரூர் போன்ற சதுர்வேதி மங்கலங்களில் சிவன் கோவில், விஷ்ணு கோவில்களைச் சுற்றி மொத்தமே 40 + 40 = 80 பிராமண வீடுகள் தாம் அமைந்திருந்தன. ஏற்கெனவே தேர்ந்தெடுத்த குடும்பில் இருந்து வாரிய உறுப்பினரை தேர்ந்தெடுக்கக் கூடாது என்ற இரண்டாம் கல்வெட்டின் கட்டுப்பாடு மூலம் ஏற்கெனவே தேர்ந்தெடுத்த குடும்பை தவிர்த்தால் 80 – 30 = 50. எனவே குடும்பு என்பது குடும்பத்தை அல்லது கூட்டுக் கூடும்பத்தை தான் குறிக்கின்றது என்பது தெளிவு. அதே போல் பிடாகைப் பார்ப்பனச் சேரிகளில் மொத்தமே 8-10 வீடுகள் தாம் அமைந்திருக்கும். அங்குள்ள 50 பேரில் இருந்து தான் ஒருவர் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இப்படி குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஆண்டு வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் ஆகிய பல்வேறு வாரியங்களின் உறுப்பினராக பொறுப்பளிக்கப்பட்டனர். இவர்கள் 360 நாள் வாரியப் பொறுப்பாற்றி முடிந்த பின் மீண்டும் இவ்வாரியங்களுக்கு பழையபடியே குடவோலைத் தேர்தல் முறையில் வாரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உத்தரமேரூரின் இரண்டாம் கல்வெட்டு குடவோலைத் தேர்தல் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் பேசுகின்றது. இதில் உள்ள தகுதிகளும் கட்டுப்பாடுகளும் இக்காலக் குடிநாயக ஆட்சிக்கும் பொருத்தமுள்ளவையாய் உள்ளன.

    இதே போல் நெல்லை மாவட்டம் மானூரில் உள்ள அம்பலவாணர் கோவிலிலும் மாறன்சடையன் காலத்தில் ஊர்ச்சபை உறுப்பினருக்கு இருக்க வேண்டிய தகுதி கட்டுப்பாடுகளைச் சுட்டும் கல்வெட்டு உள்ளது. அதில் குடவோலைத் தேர்தல் பற்றி எந்த குறிப்பும் இல்லை. பிற தளங்களில் இம்மூன்று கல்வெட்டுகள் குறித்து விரிவான விளக்கம் இல்லாத குறையைப் போக்க எதிர்கால தமிழ்ச் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் கீழே இம்மூன்று கல்வெட்டுகளின் விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.

    செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 12 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பர கேசரிபம்மர்க்கு யாண்டு ப[ன்]னிர[ண்]டு ஆவது   உத்திரமேருச் சதுர்வ்வேதி மங்கலத்து ஸபையோம். இவ்வாண்டு முதல் எங்களூர் ஸ்ரீ முகப்படி ஆக்ஞை
    2. யினால்த் தத்தநூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக் காலும் ஸம்வத்ஸர வாரியமுந் தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தைய் [செய்]
    3. த பரிசாவது குடும்பு முப்[பதாய்] முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி கா  னிலத்துக்கு மேல் இறை நிலம் உடையாரை, தன் மனையிலே அ
    4. கம் எடுத்துக் கொண்டு இருப்[பானை], அறுபது [பி]ராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேத[த்]திலும், ஸாஸ்த்ரத்திலும், கார்யத்திலும் நிபுணரென்னப் பட்டி
    5. ருப்பாரை அர்த்த ஸௌஸமும் ஆத்ம ஸௌஸமும் உடையாநய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு
    6. அணிய பந்துக்கள் அல்லாத்தா[ரைக்] குடவோலைக்குப் பேர் தீட்டி சேரி வழியேய் திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராமாறு ஏது முருவறியாத்தான் ஒரு
    7. பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்துப் பன்னிருவரும் ஸம்வத்ஸர வாரியமாவதாகவும் அதின் மின்பேய் தோட்ட வாரியத்துக்கு மேற்படி குடவோ
    8. லை வாங்கிப் பன்னிருவரும் தோட்ட வாரியமாவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியமா
    9. வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம்(ஞ்) செய்கின்[ற] மூன்று திறத்து வாரியமும், முந்நூற் அறுபது நாளும் நிரம்[ப] வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவ்வ்யவஸ்தை யோ[லை]ப்படியேய் குடும்புக்குக் குடவோலையிட்டுக் குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியஞ் செய்தார்[க்]கு பந்துக்களும் சேரிகளில் அன்நோந்யம் _ _ __  அவரு
    10. ம் குடவோலையில் பேர் எழுதி இடப் படாதாராகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்ப(த்)து குடவோலை இட்டு சேரியால் ஒருத்தரைக் குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்ச[வார] வாரியமாவிதாகவும் அறுவர் பொன் வாரியமாவதாகவும் ஸம்வத்ஸர வாரி[ய]ம் அல்லா(த்)த
    11. வாரியங்கள் ஒருக்கால் செய்தாரை பின்னை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெறாத(தி)தாக[வு]ம். இப்பரிசே யிவ்வாண்டு முதல் சந்த்ராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்த்ரன் சக்ரவத்தி ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பராந்தக தேவராகிய பரகேஸரி வம்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட
    12. ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தநூர் மூவேந்த வேளாநுடனிருக்க நம் க்ராமத்து துஷ்டர் கெட்டு ஸிஷ்டர் வர்த்தித்திடுவாராக வ்ய[வ]ஸ்தை  செய்தோம் உத்தர மே[ரு]ச் சதுர்வேதி மங்கலத்து ஸபையோம்.

    ஸ்ரீ முகம் –அரசர் முதலானோரிடம் இருந்து வரும் செய்தி, அரசாணை; ஆக்ஞை – ஆணை, கட்டளை; விவஸ்தை – தீர்மானம், முடிவு, உடன்பாடு; பரிசு – விவரம், வகை; சேரி – பிடாகையில் உள்ள பார்ப்பனச்சேரி; உருவறி – விவரம் அறி; பறிச்சி – எடுத்து; பஞ்சவார – ஐவர் குழு; வரக்காட்ட – அனுப்ப, உத்தரவு; வர்த்தித்திட – பெருகிவளர

    விளக்கம் மதுரையைக் கைப்பற்றி ஆண்ட பராந்தக சோழனின் 12 –ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 917) உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலத்து ஊர் நிர்வாக சபையினர் தந்த அறிக்கை யாதெனில், “இவ்வாண்டு முதல் எங்களூரில் அரசாணைக் கட்டளையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் முன்னிலையில் வாரியம் ஏற்படுத்தும் செயலாக ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டுவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம் ஏற்படுத்த முடிவு செய்த விவரம் என்வென்றால் குடும்பு முப்பதுக்கு 30 குடும்புகளிலும் அந்தந்த குடும்பைச் சேர்ந்தவரே ஒன்றுகூடி தம் குடும்பில் வரி கட்டும் நிலம் கால் (1/4) அளவிற்கு மேல் உடையவராக இருக்கின்ற தன் சொந்த நிலத்தில் வீடு கட்டிக் குடியிப்பவராக இதாவது, வாடகை வீட்டில் இல்லாதவராக இருக்க வேண்டும்.  (பிராமணர் பிரம்மதேய இறையிலி நிலம் பெற்று வரி கட்டாமலேயே வாழ்க்கை வாழ்ந்தனர் என்ற பொதுவான கருத்தை தகர்த்து தவிடுபொடி ஆக்குகின்றது மூன்றாம் வரியின் இந்த முதல் அடிப்படை விதி.  நிலமும் வீடும் வற்புறுத்தப்படுவது ஏன் என்றால் வாரிய உறுப்பினர் கணக்கில் ஏதேனும் மோசடி செய்தால் இவற்றை ஏலத்தில் விற்று மோசடி பணத்தை ஈடுசெய்வதற்காக இருக்கலாம் என்று தோன்றுகின்றது. இந் நடவடிக்கை ஏற்படுத்தும் அச்சத்தால் மோசடியில் ஈடுபடாமல் இருப்பார்).

    60 அகவைக்கு மிகாமல் 30 அகவைக்கு மேல் உள்ளவராக இருப்பதோடு வேதக்கல்வி, சாஸ்திரம், பிறப்பு முதல் இறப்பு வரையான உலகியல் சடங்குகளில் வல்லுனர் என்று சொல்லப்படுபவராய் இருக்க வேண்டும். (4 –ம் வரி மூலம் முதுமையின் தளர்ச்சி, நினைவு மறதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வயது உச்ச வரம்பு வைக்கப்பட்டதாக உணர முடிகின்றது. இதே போல இக்காலக் கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி ஆகியவற்றுக்கும் வயது உச்சவரம்பு தேவை எனத் தோன்றுகின்றது. வேதம் காதால் கேட்டு வாயால் பலுக்கப்படுவது. இந்த வேதக் கல்வியை  செவிடர், ஊமையர் பெற்றிருக்க முடியாது. அதோடு குறைக்கல்வி உடைய பிராமண சமையல்காரர் போன்றோரும் வாரிய உறுப்பினர் ஆகமுடியாது என்று தெரிகின்றது. பிராமணப் பெண்கள் வேதம் கற்கத் தடை இருப்பதால் வாரியம், சபை போன்றவற்றில் பெண்கள் உறுப்பினர் ஆகமுடியாது என்று தெரிகின்றது. இவ்வூர் குடவோலைத் தேர்தல் பிராமண ஆண்களுக்கான தேர்தல் மட்டுமே எனக் கொள்ளலாம்).

    தூயவழியில் பொருளீட்டி ஆன்மத் தூய்மையும் கொண்டவராய் கடந்த மூவாண்டில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இல்லாதவராய் இருக்க வேண்டும். அதோடு கடந்த மூவாண்டில் வாரிய உறுப்பினராய் இருந்தவருக்கு நெருங்கிய சொந்தக்காரர் அல்லாதவராய் இருப்பவரை மட்டும் குடவோலைத் தேர்தலுக்கு ஓலையில் பெயர் எழுதி குடத்தில் இட வேண்டும். (5-6 ம் வரியின் இந்த கட்டுப்பாடு வாரியத்தில் வழி வழியாக ஒரே குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க விதிக்கப்பட்டது. இந்நாளைய கட்சி அரசியலுக்கு, குடிநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவைப்படும் இன்றயமையாத விதி இது).

    பிடாகைகளில் அமைந்த பார்ப்பனச்சேரிகளின் வழியாகவும் ஓலையில் பெயர் எழுதி உத்தரமேரூரில் அடங்கிய 12 பிடாகைப் பார்ப்பனச் சேரிகளில் இருந்தும் ஒவ்வொரு சேரிக்கும் ஒருவர் பெயர் என்று ஆகுமாறு செய்து பெயரை எழுதிக் குடத்தில் இட வேண்டும். (இராசராச சோழன் காலத்து ஆதித்த கரிகாலன் கொலைத் தொடர்பான உடையார்குடி ஆனந்தீசுவரர் கோவில் கல்வெட்டை இங்கு இதற்கு சான்றாகக் காட்டலாம் “மலையனூரான் ஆன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன்றாய் பெரிய நங்கைச் சாணியும், இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து மிப் பிடாகை தேவமங்கலம்”. இந்த  குடவோலைக் கல்வெட்டின் 6 –ம் வரி மூலம் உத்தரமேரூருக்கு 12 பிடாகைகளில் 12 பார்ப்பனச்சேரிகள் இருந்தன என்பது புலனாகின்றது. சமூகப் பிரிவினைக்கு வித்திடும்படியாக பிராமணர்கள் பிடாகைகளில் வாழ்ந்திருக்காமல் சதுர்வேதிமங்கலத்திலே வாழ்ந்து கொண்டு பிடாகைகளில் பிற சாதிமாரை ஒதுக்கித் தள்ளி தாழ்வு ஏற்படுத்தினர் என்ற பேரா. J.S. கிரேவால், சாந்தினி பீ ஆகியோரது பிழைக் கருத்து மீண்டும் இந்த குடவோலைக் கல்வெட்டால் இலவு தெறித்து பஞ்சாய் பறப்பது போல் பறக்கின்றது. பிராமணர் பிடாகைகளில் வாழ்ந்திராவிட்டால் இந்த உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்திற்கு 12 பார்ப்பனச் சேரிகள் எப்படி அமைந்திருக்க முடியும்? ஆக பிராமணர் பிடாகைப் பார்ப்பனச் சேரியில் வாழ்ந்தனர் என்பது இச் சட்டத்தால் உறுதிப்படுகின்றது).

    குடத்தில் இட்ட பெயர்ஓலையை விவரமறியாத ஆண் பிள்ளையின் கையால் வாங்கி 12 பேரை ஆண்டுவாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும். அதற்கு முன்பாக தோட்ட வாரியத்திற்கும் மேற்சொன்னபடியே குடவோலையை எடுக்கவித்து 12 பேரை தோட்ட வாரியத்திற்கு பொறுப்பாக்க வேண்டும். குடவோலையால் தேர்வான எஞ்சிய ஆறு பேரையும் ஏரிவாரியம் ஆகிடச் செய்க. இப்படி 30 குடவோலை எடுத்து வாரியத்திற்கு தேர்வானவர்கள் மூன்று துறை வாரியத்தாராக செயற்பட்டுவரவேண்டும். 360 நாள் கழிந்து வாரியம் இல்லாது போன பின் மீண்டும் அமையும் வாரியங்கள் இதே தீர்மான ஓலைப்படியே ஒவ்வொரு குடும்பிற்கும் பெயர்ஓலை எழுதி குடத்தில் இட்டு பின் குடவோலையை எடுத்து வாரியம் ஏற்படுத்த வேண்டும்.

    ஏற்கெனவே வாரிய உறுப்பினராய் இருந்தவரின் உறவினர்கள் அதோடு பார்ப்பனச்சேரிகளில் மக்களிடம் நெருக்கம் (அன்னோன்யம்) இல்லாதவர்கள் பெயரை ஓலையில் எழுதி குடத்தில் இடக்கூடாது. (ஒவ்வொரு பார்ப்பனச்சேரியிலும் ஓரிருவருக்கே குடவோலையில் தேர்வாக வாய்ப்பு உள்ளதால் அவர்கள் மற்றவரிடம் நல்லுறவு பேணுபவராய் இருக்க வேண்டும் என்று கருதுவதில் தவறு இல்லை).

    ஆண்டு, தோட்டம், ஏரி வாரியங்கள் போலவே பஞ்சவார வாரியத்திற்கும் பொன் வாரியத்திற்கும் இது போல் தனியாக 30 குடும்பிற்கும் 30 பெயர்ஓலையை குடத்தில் இட்டு அதில் ஒரு ஓலையை எடுக்கச் செய்து தேர்வாக வேண்டும். பார்ப்பனச் சேரிகளில் இருந்து ஒருவரைக் குடவோலை மூலம் தேர்வு செய்து பன்னிரண்டு பேரில் ஆறு பேரை பஞ்சவார வாரியத்துக்கும் மற்ற ஆறு பேரை பொன் வாரியத்துக்கும் ஒதுக்க வேண்டும். (பொன் வாரியத்தார்க்கு பொன்னைப் பற்றி அறிந்த பொற்கொல்லரின் அறிவுரை தேவைப்படும் என்பதை இங்கு உணர முடிகின்றது).

    ஆண்டு வாரியம் தவிர்த்து பிற வாரியங்களில் ஏற்கெனவே ஒருபோது உறுப்பினராய் இருந்தவர்களை மீண்டும் அதே வாரியங்களில் உறுப்பினராகதவாறு அவர்களுக்கு பெயர்ஓலை எழுதி குடத்தில் இடக் கூடாது. (இதன் மூலம் ஆண்டு வாரியம் என்பது ஒரு முக்கியத்துவம் இல்லாத வாரியம் என்று தெரிகின்றது).

    இந்த வகைப்படி இந்தாண்டு முதல் ஞாயிறும் நிலவும் நிலைக்கும் காலம் வரை எப்போதும் குடவோலை முறைப்படியே  வாரியம் ஏற்படுத்துவதாக தேவேந்திரன் சக்கரவத்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவராகிய பரகேசரி வர்மர் அரசாணை கொடுத்து அனுப்ப அந்த திருக்கட்டளையால் தத்தனூர் மூவேந்த வேளாண் வந்து உடனிருக்க நம் கிராமத்து வாழ் தீயோர் எல்லாம் ஒழிந்து நல்லோர் பெருகி வளர்வதற்காக வகை செய்தோம் உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்து ஊரவையோம்“ என்று முடிகின்றது.

    பராந்தகச் சோழனை தேவர்க்கு தலைவனான இந்திரனை நிகர்த்த சக்கரவர்த்தி என்றும் வீர நாராயணன் என்றும் போற்றிடுவதில் இருந்து இது தேவேந்திர குலத்தாரை குறிக்கவில்லை என்று தெளியலாம். இந்த தேவேந்திர சக்கரவத்தி என்ற புகழுரையே பிற்பாடு வந்த வேந்தர்களை குறிக்க திரிபுவன சக்கரவத்தி, சகலலோக சக்கரவத்தி என்றெல்லாம் பட்டங்கள் உருவானது போலும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – தொகுதி 32, பக் 18-20, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு.

    செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 18 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோபர கேஸரி வந்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதின்ஆறு காலியூர் கோட்டத்து தன் கூற்று உத்தரமேருச் சதுர்வ்வேதி மங்கலத்து ஸபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமான் அடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணந் ஸ்ரீ பராந்தக தேவந் ஸ்ரீ பரகேஸரி வந்மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முகப்படி ஆ
    2. ஞஞையினால் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகரக் காஞ்சை  கொண்டய க்ரமவித்த பட்டநாகிய சோமாசி பெருமாந் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செத பரிசாவது குடும்பு முப்பதா[ய்] முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா
    3. ரே கூடிக் கா நிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன் மனையிலே அகம்மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டார் மந்த்ர ப்ராஹ்மணம் வல்லத் ஓதுவியத்தறியவானைக் குட வோலை இடுவிதாகவும் அரைக்கா நிலமே உடைய நாயிலும் ஒரு வேதம் வல்லதாய் நாலு பாஷ்யத்திலும்  ஒரு பா
    4. ஷ்யம் வக்காணித்தறிவான் அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆசாரமு டையரானாரனயேய் கொள்விதாகவும் அர்த்த ஸௌஸமும் ஆன்ம ஸௌசமும் உடையராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்திலாத்தாரை கொள்வதாகவும் எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செது கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றவைப் பேர் அவை ம
    5. க்களையும், இவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தமப்பனோடுடப் பிறந்தானையும் தன்னோடுடப் பிறந்தானையும் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமானையும் இவர்கள் ப்ராஹ்மணியோடப் பிறந்தானையும்  தன்னோடுடப் பிறன்தானை வேட்டானையும் உடப் பிறன்தான் மக்களையும் தன் மகளை வேட்ட மருமகனையும் தன் தமப்பனையும்
    6. தன் மகனை[யும்] ஆக இச்சுட்ட…..பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாததாராகவும், அகம்யாகமனத்திலும் மகா பாதகங்களில் முன் படைந்த நாலு மஹா பாதகத்திலும் மெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முந் சுட்டப்பட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாதா[ரா]கவும் ஸம்ஸர்க்க[ல]திகரை ப்ராயசித்தஞ் செய்யுமளவும்
    7. குடவோலை இடாததாகவும்….தியும் ஸாஹஸிய ராயிருரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறாதாராகவும் பரத்ரவ்யம் அபஹரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறாதாராகவும் எப்பேற்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத ப்ராயஸ் சித்தஞ் செய்து ஸுத்தரானானையும் அவ்வவர் ப்ராணாந்திகம்
    8. வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெறாததாகவும் …. பாதகம்(ஞ்) செய்து ப்ராயச் சித்தஞ் செய்து ஸுத்தரானானையும் க்ராம கண்டகராய் ப்ராய[ச்சி]த்த(ம்) செய்து ஸுத்தரானாரையும் ஆக அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைய்வரையும் ப்ராணாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை  எழுதிப்புகவிடப் பெறாததாக
    9. வும் ஆக இச்சுட்டப்பட்ட இத்தனைய் பேரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இப்பன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறேய் வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக் குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மஹாஸபைத் திருவடியாரை ஸபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளூரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா
    10. மே மஹா சபையிலே உள்மண்டகத்தி லேய் இருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவேய் அக்குடத்தை நம்பிமாரில் விருத்தராய் இருப்பா (ர்)னொரு  நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்றா(ல்)லெடுத்துக் கொண்டு நிற்(க்)க பகலேய்ந்த்ரமறியாதா(ன்)னொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி(ய) மற்றொரு குடத்துகேய் புகவிட்டு குலைத்து அக்குடத்தி(ல்)லோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே
    11. குடுப்பதாகவும் அக்குடுத்த வோலை மத்தியஸ் வாங்கும் போது அஞ்சு விரலும் அகல வைத்து உள்ளங் கையிலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வெற்று வாங்கின வோலை வாஸிப்பானாகவும் வாஸித்த அவ்வோலை அங்குள்ள மண்டகத்திருந்த நம்பிமார் எல்லாரும் வாசிப்பாராகவும் வாஸித்த அப்பேர் தீட்டுவதாகவும் இப்பரிஸே முப்பது குடும்பிலும் ஒரோ பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரிலும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விஜ்யவ்ரத்தரையும்
    12. வயோ வித்தர்களையும் ஸம்வத்ஸர வாரியரையும் கொள்வதாகவும் மிக்கு நின்றாரு(ப்) பன்னிருவரைத் தோட்ட வாரியங் கொள்விதாகவும் நின்ற அறுவரையும்(ம்) ஏரி வாரியமாகக் கொள்வதாகவும். இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன் நூற்று அறுபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்யா நின்றாரை அபராதங்
    13. கண்டபோது அவனை யொழித்துவதாகவும். இவ[ர்]கள் ஒழிந்த அனந்தர(ம்)மிடும் வாரியங்களும் ப[ன்னிரண்]டு சேரியிலும் தந்ம க்ருத்தயங் கடைக் காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறி கூட்டிக் குடுப்பாராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியேய்…க்குக் குடவோலைய் பறித்துக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார [வாரி]யத்துக்கும் பொன் வாரியத்து.
    14. க்கு முப்[ப](த்)துக் குடும்பி(யி)லும் குடவோலைக்கு பேர் தீட்டி முப்பது வா[யோ]லை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்நிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்நிரண்டிலும் பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவநவாகவும். பிற்றை ஆண்டும் இவாரியங்கள் குடவோலை பறிக்கும் போது இவ்வாரியங்களுக்கு முன்னம் செ
    15. ய்த குடும்பன்றி[க்]கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொளுவதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக இடப் பெறாததாகவும் மத்யஸ்தரும் அர்த்த ஸோஸம் முடையாரே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி ஸுத்தந் ஆச்சிதின் பின்நன்றி மற்றுக் கண
    16. க்குப் புகப் பெறாதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெறாதார் ஆகவும் இப்பரிசை இவ்வாண்டு முதல் சந்த்ராதித்தவற் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திர சக்ரவர்த்தி, பண்டிதவத்ஸலந், குஞ்சர மல்லன், சூரசூளாமணி, கல்பகஸரிதை ஸ்ரீ பரகேஸரிபந்மர்(க) ஸ்ரீ முகமருளிச் செய்து வரக்காட்ட ஸ்ரீ ஆக்ஞை ஆ
    17. ல் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்டய க்ரமவித்த பட்ட[ன்]னாகிய சோமாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் க்ராமத்துக்கு அப்யதயமாக துஷ்டர் கெட்டு விஸிஷ்டர் வர்த்திப்பதாக வ்யவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வ்வேதி மங்கலத்துச் ஸபையோம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வ்யவஸ்தை எழுதினேன் மத்யஸ்தந்
    18. காட்டிப் போத்தன் சிவக்குறி இராஜமல்ல மங்கலப்பிரியநேன்.

    பெருமானடிகள் – வேந்தர்; செது – தொண்டாற்றி, செய்து; பாஷ்யம் – உரை, விளக்கம்; வக்காணித்தல் – விரித்துரைத்தல்; அ(வ்)வை – அம்மை, தாய்; வேட்டான் – மனைவியின் தாய் தந்தைக்கு உடன்பிறந்தார் வழிப் பிள்ளைகள்; இடப்பெறாததார் – பெயர் சேர்க்கக் கூடாதவர்; ப்ராஹ்மணி – பிராமணர் மனைவி; ப்ராணாந்திகம் – இறுதி மூச்சுள்ள வரையும்; கண்டர் – தீமை செய்தவர்,கேடர்; விருத்தர் – மூத்த வயதினர்; குடும்பு வாங்கு – ஓலைஎடுத்துக் கொடுக்க வாங்குதல், picking process; கரைபறி – பங்கெடு; கூடலேகை – பொய்க் கணக்கு; பெருங்குறி பெருமக்கள் – வாரியங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ள மேலோர் (lords); மத்யஸ்தன் – நடுநிலையாளன், கிராமத் தலைவன்; ஒடுக்கு – பண்டாரத்தில் சேர்; குஞ்சர மல்லன் – யானைப் படைத் தலைவன்; குறியுள் – கூட்டத்தில்.

    விளக்கம்: இது மேற்கண்ட முதற் கல்வெட்டிற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து சில திருத்தங்களையும் (amendment) கட்டுப்பாடுகளையும் கூடுதலாகக் கொண்டு குழப்பமற தெளிய விளக்கி வெட்டப்பட்ட இருண்டாம் கல்வெட்டாகும்.

    (1-3) மதுரையைக் கைப்பற்றி ஆண்ட பராந்தக சோழனின் 14 –ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 919) பதினாறாம் நாள் காலியூர் கோட்டத்துப் பிரிவாகிய உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்து ஊரவையோம். இந்த ஆண்டு முதல் எங்களுக்கு வேந்தரான வீர நாராயணன், பராந்தக தேவன், பரகேசரி வர்மருடைய அரசாணை அனுப்பப்பட்டு அந்த அரசாணையின் கட்டளையால் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்கநகர காஞ்சை கொண்டய கிரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமான்  முன்னிலை இருந்து வாரியம் ஏற்படுத்துவதற்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டு வாரியமும், தோட்ட வாரியமும், ஏரிவாரியமும் ஏற்படுத்த தீர்மானம் செய்த வகை யாதெனில், “குடும்பு முப்பதாக அம்முப்பது குடும்பிலும் அந்தந்த குடும்பினரே ஒன்றுகூடி வரி கட்டும் நிலம் கால் (1/4) அளவிற்கு மேல் உடையவராயும், தன் சொந்த நிலத்தில் வீடுகட்டி வாழ்பவராயும், எழுபது அகவைக்கு மிகாமலும் 30 அகவைக்கு மேலும் உள்ளவராயும், வைதிக மந்திர வினை முறையில் (மந்திர பிராமணம்) வல்ல, வேதம் ஓதுவிக்கத் தெரிந்தவர் பெயர்ஓலையை குடத்தில் இடலாம். (முதற் கல்வெட்டில் 60 வயது என்ற வரம்பை இதில் 70 ஆக உயர்த்தியது ஒரு திருத்தம், சலுகை எனலாம்).

    ஒரு வேதத்திலேனும் வல்லவனாய், நான்கு உரையில் (பாஷ்யம்) ஒரு உரையை விரித்து விளக்குபவனாய் இருந்தால் அவனிடம் வரி கட்டும் நிலம் அரைக்கால் (1/8) அளவிற்கு இருந்தாலே போதும் அவன் பெயர் ஓலையை குடத்தில் இடலாம் என்பது சலுகை (exempt). அவருள்ளும் பிறப்பு முதல் இறப்பு வரையான உலகியல் சடங்கில் வல்லுநனாயும், மத ஒழுக்கத்தை கைக்கொள்பவனாயும் இருப்பவனையும் ஏற்கலாம். தூய வழியில் பொருளீட்டி ஆன்மத் தூய்மை உள்ளவனையும் ஏற்கலாம். கடந்த மூன்றாண்டுகளில் வாரிய உறுப்பினனாய் இல்லானையும் ஏற்கலாம்.

    முன்பு எந்த வாரியத்தில் தொண்டு செய்திருந்தாலும் கணக்கு காட்டாமல் இருந்தவனையும், இவனுக்கு சின்னம்மை பெரியம்மை பிள்ளைகளையும், அத்தை மாமன் பிள்ளைகளையும்,  இவன் தாயுடன் பிறந்தானையும், தந்தையுடன் பிறந்தானையும், இவனுடன் பிறந்தானையும், இவனுடைய மாமனார் மைத்துனரையும், தன் உடன்பிறந்தார் மனைவியின் தாய் தந்தைக்கு உடன்பிறந்தார் வழிவந்த பிள்ளைகளையும் (வேட்டான்), இவன் உடன்பிறந்தார் பிள்ளைகளையும், இவன் மகளுடைய கணவனின் தாய் தந்தைக்கு உடன்பிறந்திட்ட பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, பெரியம்மா, சின்னம்மா பிள்ளைகளான வேட்ட மருமகன்களையும், இவன் தந்தையையும், இவன் பிள்ளைகளையும் ஆக இங்கு சுட்டப்பட்ட இவனது உறவினர்களின் பெயர்ஓலையை குடத்தில் இடக்கூடாது. (முதற் கல்வெட்டில் உறவினர்கள் இன்னின்னார் என்று இப்படி விரிவாக விளக்கவில்லை).

    ஆகமங்களுக்கு முரணானவரையும் பெரும் பாதகங்கள் செய்தவரையும் முன்னர் சொன்னது போன்றே இவர்களது இத்தனை உறவினர் பெயர்ஓலைகளை குடத்தில் இடக்கூடாது. கொள்கையை மீறினவர் அதற்கு கழுவாய் தேடும் வரையும் அவர் பெயர்ஓலையை குடத்தில் இடக் கூடாது. கொலைக் குற்றத்திற்கு தூண்டுபவர், கொலை செய்பவர் பெயர் ஓலையை குடத்தில் இடக் கூடாது. பிறர் பொருளைக் கவர்ந்தவன் பெயர் ஓலையை குடத்தில் இடக் கூடாது. எத்தகைய கையூட்டு பெற்றவரும் அதற்கான கழுவாயைச் செய்து தூயராக ஆன பின்னரும் அத்தகையோர் இறுதி மூச்சுள்ள வரை அவர் பெயர்ஓலையை குடத்தில் இடக்கூடாது என்று வாழ்நாள் தடை போடப்படுகின்றது.

    பாதகம் செய்து கழுவாயால் தூயரானவரையும், கிராமத்திற்கு கேடு செய்து கழுவாயால் தூயரானவரையும், கொள்கை முரண்பட்டு கழுவாயால் தூயரானவரையும் ஆக இப்படி சுட்டப்பட்ட அனைவரையும் இறுதி மூச்சுள்ள வரையும் வாரியத்திற்கு உறுப்பினர் ஆகாவண்ணம் குடத்தில் பெயர்ஓலையை இடக் கூடாது. இப்படி மேலே சுட்டப்பட்ட சுற்றாத்தார் இத்தனை பேரையும் நீக்கி இந்த முப்பது குடும்பிலும் குடவோலைக்கு பெயர் எழுதி, இப் பன்னிரண்டு பார்ப்பனச் சேரிக்கும் இக்குடும்பிற்கும் தனித்தனியே வாயோலை கட்டி பெயர்ஓலையை குடத்தில் இட வேண்டும். குடத்தில் உள்ள பெயர்ஓலைகளில் ஒன்றினை மட்டும் எடுக்கும் போது சிறுவர் கூட்டம் நிரம்புமாறு மகாசபைத் திருவடியாரைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும். அன்று ஊரில் உள்ள பூசக பிராமணரில் ஒருவரையும் விட்டுவிடாது மகாசபையின் உள் மண்டபத்தில் உட்கார வைத்து அப்பூசக பிராமணர் நடுவே அக்குடத்தை அப் பூசக பிராமணரில் வயது முதிர்ந்த ஒருவர் எல்லா மக்களும் காணற் பொருட்டு கையில் ஏந்தி நிற்க விவரமறியாத சிறுவனைக் கொண்டு குடத்தில் இருந்து பெயரோலையை எடுக்கவித்து வாங்கிய பின் இன்னொரு குடத்தில் கையை இட்டு மேலும் கீழுமாய்ப் புரளும்படி கலக்கி அக்குடத்தில் இருந்து ஒரு பெயரோலையை மட்டும் வாங்கி நடுநிலையாளன் கையில் கொடுக்க வேண்டும். நடுநிலையாளன் பெயர்ஓலையை கையில் வாங்கும் போது ஐந்து விரலையும் அகல விரித்து உள்ளங்கையிலே அதை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய பெயர்ஓலையை படிக்க வேண்டும். படித்த அந்த பெயர்ஓலையை மண்டபத்தில் உள்ள பூசக பிராமணர் அனைவரும் படித்துக் காட்ட வேண்டும். படிக்கப்பட்ட அப்பெயரை தனியே வேறு ஓலையில் எழுதிக் கொள்ள வேண்டும். இந்த ஏற்பாட்டின் படியே முப்பது குடும்பிலும் எடுத்த ஒரேஒரு பெயரை மட்டும் வேறு ஓலையில் எழுதிக் கொள்ள வேண்டும்.

    இப்படி பெயர் எழுதப்பட்ட முப்பது பேரில் இருந்து தோட்ட வாரியம், ஏரி வாரியம் செய்ய வேண்டும். விஜயவ்ருத்தரை, அறிவுசால் பெரியோர் (வயோ வ்ருத்தர்) 12 பேரை ஆண்டு வாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும். இன்னும் உள்ள 12 பேரை தோட்ட வாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும். எஞ்சி நின்ற அறுவரை ஏரிவாரியத்துக்கு பொறுப்பாக்க வேண்டும்.

    இப்படி வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியத்தாரும் 360 நாள் தம் பொறுப்பை ஆற்றி நீங்க வேண்டும். வாரியக் கடமைகளை ஆற்றாத குற்றங் காணும் போது அவனை நீங்க வேண்டும். இவர்களைத் தவிர்த்து பின்னர் ஏற்படுத்தப்படும் வாரியங்களுக்கு 12 பார்ப்பனச் சேரிகளிலும் அறச்செயலை (தர்ம க்ருத்ய) கடைபிடிக்கும் வாரியரே நடுநிலையாளரை வைத்து கூட்டம் கூட்ட வேண்டும். இந்த தீர்மான ஓலைப்படியே பார்ப்பனச்சேரிக்கு பெயர்ஓலை எடுத்து வாரியம் ஏற்படுத்த வேண்டும்.

    பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் மீண்டும் குடவோலைக்குப் பெயர்ஓலை எழுதி குடத்தில் இட்டு முப்பதிலும் பெயர்ஓலை எடுத்து எழுதிக் கொள்ள வேண்டும். முப்பதிலும் வாயோலை கட்டி பெயர்ஓலைகளை இட்டு முப்பது குடவோலைகள் எடுக்க வேண்டும். முப்பதில் பன்னிரண்டு பேரை எடுத்து பன்னிரண்டில் அறுவர் பொன் வாரியராகவும் அறுவர் பஞ்ச வாரியராகவும் ஆகட்டும்.

    (14-15 வரி) அடுத்த ஆண்டுகளில் இவ்வாரியங்களுக்காக குடவோலை எடுக்கும் போது இவ்வாரியங்களுக்கு முன்னர் தொண்டாற்றிய குடும்புகளைச் சேர்ந்தோரைத் தவிர்ந்து எஞ்சிய குடும்புகளில் இருந்து பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்பதால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பும் பெயர்ஓலை இட முடியாமல் தடை செய்யப்படுகின்றது.

    கழுதை ஏற்ற தண்டனை பெற்றவனும், பொய்க் கணக்கு எழுதியவனும் குடத்தில் பெயர்ஓலை இடப்படாதவர் ஆகின்றனர். நடுநிலையாளர் தூயநெறியில் பொருளீட்டுவாரை மட்டுமே கணக்கு எழுத அமர்த்த வேண்டும். ஏற்கெனவே கணக்கு எழுதியவனாக இருந்தால் கணக்கு சார்ந்த பெருங்குறி பெருமக்களிடம் கணக்கு காட்டி குற்றம் கரையற்றவன் என மெய்ப்பிக்கப்படும் வரை மற்ற கணக்கு எழுதும் வேலையை செய்யக்கூடாது. அவன் தான் எழுதிய கணக்கை தானே காட்ட வேண்டும் வேறு கணக்கன் வந்து பார்த்த பின்பு கருவூலத்தில் பணம் செலுத்துபவனாக இருத்தல் கூடாது.

    இந்த ஏற்பாட்டை இந்த ஆண்டு முதல் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை என்றென்றைக்கும் குடவோலை வாயிலாகவே வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று பராந்தகச் சோழன் அரசாணை இட்டு அனுப்பிய கட்டளையால் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்டய கிரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமான் உடன் இருந்து இத்தீர்மானத்தை செய்விக்க நம் கிராமத்துக்கு நலம் உண்டாக தீயோர் ஒழிந்து சான்றோர் வளர்ந்தோங்கும் வண்ணம் தீர்மானம் செய்துவித்தோம் உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்தின் ஊரவையோம். இந்த ஏற்பாட்டுக் கூட்டத்தில் பங்குபெற்று பெருமக்கள் பணிக்காக இத் தீர்மானத்தை எழுதினேன் நடுநிலையாளனான காட்டிப் போத்தன் சிவக்குறி இராசமல்ல மங்கலப் பிரியனேன்.”

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – தொகுதி 32, பக். 20 – 23, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு.

    திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வெலி வட்டம் மானுர் அம்பலவாணர் கோவில் தூண் ஒன்றில் உள்ள 64 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு.

    முதல் பக்கம் (1-21) : ஸ்வஸ்திஸ்ரீ கோ மாறஞ் ச / டையற்க்கு யாண்டு / முப்பத்தஞ்சு / நாள் நான்னூற்றறு பத்து ஒன்பது இ / ந் நாளால் களக்குடி / நாட்டு ப்ரஹ்மதேயம் மான / நிலை நல் ஊர் மஹாஸ / பையோம் பெருங்குறி (சா) / ற்றி ஸ்ரீ கோவர்த்தனத்துக் கூ / டி இருந்து இவ்வூர் ம / ஹா ஸபையோம் குடி மன்றா / டுவதனுக்கு  செய்த வ்யவஸ்தை / யாவது இவ்வூர் பங்குடை / யார் மக்கள் ஸபையில் மன் / றாடுகிறது  ஒரு தர்மம் உட்ப / ட

    Share
  • உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு

    உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    ஒரு மொழி தனது இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றால் அவ்வக்கால நிகழ்வுகளைப் பதிந்துகொண்டு அதை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கும் இன்னொரு தலைமுறைக்கும் கடத்தும் ஊடகமாகத் (media) தான் திகழ்கின்றது. இது தான் எல்ல மொழிகளின் அடிப்படைப் பண்பு. இந்த நிகழ்வுப் பதிவுகள் காலம் கடக்கக் கடக்க ஒரு காலத்தின் கண்ணாடியாகவே ஆகிவிடுகின்றன. இந்த அடிப்படைக் கருத்தில் இருந்து விலகி பேராசிரியர் வீ. அரசு போன்றோர் தலித்தியம், திராவிடவியல் நோக்கில் சாதிய மொழி என்ற கருத்தாக்கத்தை ஒரு மொழியின் மீது திணிக்கின்றனர். ஒரு மொழியில் சாதி, வருணாசிரமம், தீண்டாமை ஆகியன பற்றிய பதிவு இருப்பதாலேயே அம்மொழியை சாதிய மொழி என்று அழைப்பது அத்தகையோரின் மடமையைத் தான் காட்டுகின்றது. நல்லது தீயது, உகந்ததுஉகாதது ஆகிய செய்திகளை அவ்வக்காலத்து மக்கள் தாம் ஒரு மொழியில் பதிகின்றனர். அந்த வகையில் பதிகின்ற மக்கள் தாம் அந்த செய்திகளின் விளைவிற்கு பொறுப்பாவரே ஒழிய மொழியை அதற்கு எப்படி பொறுப்பாக்க முடியும்? இந்த மடமை இவர்களோடு நில்லாமல் இவர்தம் பேச்சு, எழுத்துகளால் பிறரையும் மடமையின் பிடிக்குள் தள்ளுகின்றது என்பதே இங்கு வருத்தத்திற்குரியதாக உள்ளது. தமிழ்க் கல்வெட்டுகளில் சாதி, தீண்டாமை பற்றிய செய்திகள் இருப்பதாலேயே தமிழ் ஒரு சாதிய மொழி ஆகிவிடாது. அதன் விளைவுகள் அச்செய்திகளைப் பதிந்தோரைச் சார்கின்றது. அவர்களாலும் தம் காலச் சூழல் நிகழ்வுகளை ஒட்டித் தான் எழுத முடியும் அது அவர் தவறல்ல. இது தமிழுக்கு மட்டுமல்ல பிற மொழிகளுக்கும் பிற மொழி பேசுநருக்கும் பொறுந்தும்.

    தீண்டாமை முதன் முதலாக தமோ குணமுடைய பிணத்தை தீண்டலாகாது என்பதில் இருந்து தான் தொடங்கியது. இது தொடக்கத்தில் புத்த மதத்தாரால் தான் கடைபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் புராண மதத்தை தழுவிய போது அந்த வழக்கத்தை புராண மதத்திலும் நடைமுறைப்படுத்தினர். இதனால் சாவுத் தீண்டாமை ஒரு சமூக வழக்காக காலப் போக்கில் ஆகிப்போனது. பின்னர் இது பிணத்தைக் கையாளும் வெட்டியான் குடும்பத்தாரும் தீண்டத்தகாதவர் என்று விரிந்தது. பிணம் ஆளும் தொழில் குடும்பரீதியாய் தொடர்ந்ததே இதற்கு காரணம்.  தமிழ்க் கல்வெட்டுகளில் இப்படி தீண்டார் எனக் குறிப்பது இந்த பிணம் கையாளும் வெட்டியான்களைத் தான் எனலாம்.  ஆனால் இன்று சமூகத்தில் இத்தீண்டாமை என்பது இவர்களையும் கடந்து இன்னும் பல சாதியாரை உள்ளடக்கியதாக ஆகிவிட்டது. பறையர் என்போர் இத்தகு தீண்டாமைக்கு 16 – ம் நூற்றாண்டு முடியும் வரை ஆட்பட்டிருக்கவில்லை என்பதற்கு அவர்கள் கோவில்களில் சந்தி விளக்கு எரிக்கக் காசு கொடுத்து எரிக்க ஏற்பாடு செய்தததற்கான கல்வெட்டுகளே சான்றாகின்றன.  இப்படி விளக்கு எரிப்போர் தமது முதல் விளக்கெரிப்பின் போது கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சந்தி விளக்கெரித்த பறையர் கோவலுக்குள்ளே சென்று வந்தது அவர்கள் தீண்டாமைக்கு ஆட்பட வில்லை என்பதைக் காட்டுகின்றது. கீழே அது தொடர்பான மூன்று கல்வெட்டுகள் விளக்கத்துடன்.

    இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோச மங்கையில் அமைந்த மங்களநாதசுவாமி கோயில் முன்மண்டபத் தென்புறச் சுவரில் உள்ள 21 வரிக் கல்வெட்டு.

    1. சகாப்தம் 1355  ன் மேல் ஸ்ரீ கோமாரபன்மரான திரிபு
    2. வனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 2 வருஷம் எதிர் வருஷம்
    3. மீந நாயற்று பூர்வ பக்ஷத்துலே தசமியும் புதன் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் முத்தூ
    4. ற்றுக் கூற்றத்து பிரமதேசம் மருங்கூரான பண்டித சோழ சதிர்வேதி மங்கலத்து
    5. பார்கவ கோத்திரத்து ஆஸ்ரயந சூத்திரத்து நாராயண சர்ம்மன் வீரபாண்டி
    6. ய தேவனுக்கு  தனக்கு நம்முடைய பேர் கூலிக்கு செம்பி நாட்
    7. டில் நம்முடைய உழவுப் பற்றான புறக்குளம் உட்பட்ட ப
    8. ற்றும் இவ்வூரில் புறஞ்சேரியில் தீண்டாஅடிமை உள்ளதும்
    9. உதக பூர்வ தன்மதானமாக நாம் தருகையில் _ _ _ கு எல்லையாவது கீழ்பாற்கு எல்லை நல்
    10. லாண் குடிக்கும் அஸவத்ர குடிக்கும் மேற்கு தென்பாற் கெல்லை கடம்பங்குடிக்கு வட
    11. க்கு மேற்பாற் கெல்லை வடவாலங் குளத்துக்கு கிழக்கு வடபாற் கெல்லை பனைக்குளத்து
    12. க்கும் இயற்கைக் குடிக்காலுக்கும் தெற்கும் ஆக இப்பெரு நான்கெல்லைக் குட்பட்ட ப
    13. ற்றும் மண்திடல், ஊருணி, உடைப்புகுளம், குளப்பரப்பு நன்செய், புன்செய் மேனோக்கிய
    14. மரமும் கீனோக்கிய கிணறு தீண்டா அடிமை மற்றும் எப்பேர்பட்டனவும் ஸமஸ்த ப்ராப்திகளும்
    15. கடமை வினியோகஞ் செக்கிறை தறிக்கடமை தட்டொலிப் பாட்டமும் மாவடை மரவடை
    16. பஞ்சுபீலி சந்தி விக்கிரகப்பேறு முதலாக எப்பேற்பட்டவையும் சர்வமான்யமாக நம் வரியிலார் கணக்
    17. கிலும் பதினொன்றாவது முதலுக்கு கழித்த அளவுக்கு இம்மரியாதியிலே இந்த நாள் முதலுக்கு உதக பூ
    18. ர்வ தன்ம தானமாக சந்திராதித்த வரை சந்ததிப் பிரவேசமே தான  வினியோக விசயங்களுக்கு உரித்தாக கல்லி
    19. லுஞ் செம்பிலும் வெட்டிக் கையாண்டு கொள்ளவும். இந்த உதக பூர்வ தன்ம தானத்துக்கு நம்முடைய வகை
    20. யிலுள்ளாரிலும் மற்றும் ஆராகிலும் விக்கினஞ் செய்யிர பேர்கள் கெங்கைக் கரையிலே பிரம்ம ஹத்தியும்
    21. கோ ஹத்தியும் செய்த பாவத்தை யெய்தக் கடவார்களாகவும்.

    கூலி – செய்த பணிக்கு தர வேண்டிய கூலி; உழவுப்பற்று – உரிமையுள்ள வேளாண் நிலம்; புறஞ்சேரி – ஊருக்கு வெளியே அமைந்த சேரி; அடிமை – கொத்தடிமை; உதகபூர்வ – நீரட்டி கொடு; சந்தி விக்கிரகப்பேறு – ஆவணக் கட்டணம்; சந்ததிப் பிரவேசம் – தலைமுறை தலைமுறையாக; கடவார்களாக – அடைவார்களாக.

    விளக்கம்:  சக ஆண்டு 1355 (கி.பி. 1433) குறிப்பிடப்பட்ட வீரபாண்டியனின் 3 ஆம் ஆண்டு கல்வெட்டு. இதில் வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவத்திகள் என்ற பட்டப் பெயரால் குறிக்கப்படுகின்றான்.  அப்போது விஜயநகரத்தில் இரண்டாம் தேவராயரின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் என்பதைப் பார்க்கும் போது சிறு காலப் பொழுதிற்கு இராமநாதபுரம் விஜயநகர ஆட்சியில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவன் தென்காசி பாண்டியரில் இருந்து வேறுபட்டவனாக இருக்கலாம்.

    முத்தூற்றுக் கூற்றத்தில் அடங்கிய பிரம்மதேசமான மருங்கூர் என்னும் பண்டித சோழ சதுர்வேதி மங்கலத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்திர கொண்ட ஆஸ்ரயன சூத்திரத்தை சேர்ந்த நாராயண சர்மன் என்ற பிராமணன் வீரபாண்டியன் என்பவனுக்கு தான் தர வேண்டிய கூலிக்கு ஈடாக செம்பி நாட்டில் தனக்கு உரிமையான புறக்குளம் உள்ளிட்ட உழவு நிலத்தையும் இதாவது, அதனுடன் சேர்ந்த மண்திடல், கிணறு, குளத்தைச் சுற்றி அமைந்த நன்செய் புன்செய் ஆகியவற்றையும் இவ்வூரின் வெளியே அமைந்த சேரியில் வாழும் தீண்டாரைச் சேர்ந்த கொத்தடிமையையும் நீரட்டி தர்மதானமாகத் தந்துவிட்டான். நிலத்தின் அமைவிடமாக அதன் நான்கு எல்லைகள் விரிவாகக் குறிக்கப்படுகின்றன. அதற்குண்டான அரச வரிஇனம், செக்குவரி, தறிவரி, ஆவணக் கட்டணம் என எந்த வகை வரியும் இல்லாமல் வரியிலார் கணக்கில் பதியப்பட்டு தசமிக்கு மறுநாளான பதினோரம் நாள் முதல் இப்படியாகச் செல்வதாக நீரட்டி தர்மதானமாக சந்திர சூரியர் உள்ள காலம் வரைக்கும் தலைமுறை தலைமுறையாக தானம் முதலானவை செய்வதற்கு பயன்படும்படி கையாண்டுவர இதை கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளக என்கிறான். இந்த தான தர்மத்துக்கு என்னுடைய உற்றார் உறவுகள் மற்றும் வேறு எவரேனும் தடை எற்படுத்துவாரானால் அவர் கங்கைக் கரையில் பிராமணரையும் பசுவையும் கொன்ற பாவத்தை அடைவார் என்று கூறி நிறைவு செய்கிறான்.

    கல்வெட்டில் நாராயண சர்மனுக்கும் இந்த கோவிலுக்கும் என்ன தொடர்பு என்று தெளிவாகத் தெரியவில்லை. இந்த தான தர்மத்தால் கோவிலுக்கு ஒரு பயனும் இல்லை. இவனது இந்த செம்பி நாட்டு நிலம் அரசனிடம் இருந்து நேரடியாகப் பிரம்மதேய இறையிலியாகப் பெறப்பட்டதாக இருக்கலாம். எனவே அதை விற்றால் வரி இல்லாச் சலுகை போய் ஆவணக் கட்டணமும் கட்ட வேண்டி வரும் என்பதால் தனது அந்த உரிமையை அப்படியே தர்ம தானமாக வீரபாண்டியன் என்பவனுக்கு மாற்றிக் கொடுக்கின்றான்.  நாராயண சர்மன் இப்படி செய்வதற்கு அவனுக்கு வாரிசு இல்லாமல் போனதால் அதை தான தர்மத்திற்கு பயன்படுத்த வீரபாண்டியனை ஒரு கண்காணியாக்கி (care taker) இப்படி கொடுத்திருக்கலாம் அல்லது வரியைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தானதர்ம முறையை கைக்கொண்டிருக்கலாம். இந்த கிராமத்தின் வருவாய் மன்னனால் இறையிலியாக கோவிலுக்கே விடப்பட்டிருந்தால் அதில் அடங்கிய இந்நிலத்திற்கு கோவிலுக்கு வரிகள் செலுத்தப்பட வேண்டும். வரிகளைக் கட்டத்தேவையில்லை என்று நாராயண சர்மன் அறிவிப்பதால் அது ஏற்கனவே கோவிலின் வரி கட்டாத வரியிலார் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டதால் இச் செய்தி இக்கோவிலில் கல்வெட்டாக இடம்பெற்றுள்ளது என்பதை ஊகிக்க முடிகின்றது.

    இக் கல்வெட்டில் தீண்டார் என்று குறிப்பது இடுகாட்டில் பிணங்களைக் கையாளும் வெட்டியாரைத் தான் என்று தெரிகின்றது. ஏனென்றால் பறையர்கள் கோவிலில் சந்தி விளக்கேற்றப் பணம் அளித்துள்ளனர் என்பதற்கு பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. அதனால் விளக்கேற்றும் போது தம் குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.  ஆகவே பறையர் தீண்டாமைக்கு உட்பட்டிருக்க முடியாது. அது 17- ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட புது வழக்கம்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 11, பக்கம் 71-72.

    புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள மூலநாதர் கோவில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 11 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னி வளர  என்ற முதலாம் இராசேந்திரச் சோழனின் மெய்கீர்த்தி 1-5 வரிகளுக்கு நீளுகின்றது.  இனி 6 ஆவது வரியில் இருந்துகீழே.

    கோப்பரகேஸரிபந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவற்கு யாண்டு 16 ஆவது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பவித்திர மாணிக்க வளநாட்டு வாகூரான அழகிய சோழ சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களோ[ம்]. இவ்வா / ட்டை தனு நாயற்று பூர்வ பக்ஷத்து பிரிதிதஷியும் வெள்ளிக் கிழமையும் பெற்ற பூரட்டாதினாள்  நம்மூர் அழகிய சோழன் அம்பலத்தேய் இன்னாட்டு வகை செய்கின்ற உய்யக்கொண்டார் வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு கப்பூர் உடையார் நீலன் வெண்காடனாரும் இருந்து நம்மூர் ஏரிக்கு ஏரியாயமாக புறவூரார் இருந்து. இவ்வூர் நிலத்து நெல்லும் வரகும் கரும்பும் எள்ளும் உள்ளிட்டுப் பயிற் செதாரைப் போகங்கள்டோறும் பன்நிரு சாண் கோலால் இருநூற்றைம்பத்தாறு குழி கொண்ட / தொரு மாவாக மாத்தால் எண்ணாழி கொள்ளுங் கங்கை கொண்ட சோழன் மரக்காலால் கைய்செய் வார்த்தேய் நெல்லு இரு தூணிநெல்லும் ஆட்டாண்டுதோறும் போகங்கள் தோறும் அவ்வவாண்டு ஏரி வாரியம் செய்வாரே ஏரி ஆயமாகக் கொள்வாராகவும். புறவூர் இருந்து இவ்வூர் வரும் குடிகளை ஏரியாய மல்லாது மாற்று இறை கொள்ளப் பெறாதாராகவும். இவ்வூரிலும் இவ்வூரோடும் ஏரினவாரியங்களிலும் இருந்தாரில் தீண்டாதாரொழிய நீக்கி நின்றாரில்ப் பத்து வயஸுக்கு மேல் எண்பது வயஸு / க்கு கீழ்பட்டாரை முதலெடுத்து நாற்ச்சாண் உள்ள கோலால் இரு கோலுக்கு இரு கோல்லகலமும் ஒரு கோல் மட்டுங் கொண்டு பேரால் ஒரு குழி ஆட்டாண்டுதோறும் இவ்வூர் ஏரியிலேய் கல்லக் கடவார்களாகவும். இப்பரிசு கல்லகடவாரை அவ்வவ் ஆண்டு ஏரி வாரியஞ் செய்வாரேய் குழி கல்லுவிக்க [க]டவார்களாகவும். குழி கல்லக்கடவார் குழி கல்லாதாரை ஏரியாயமாக பேரால் காற்பொன் அவ்வவ் ஆண்டு ஏரி வாரியஞ் செய்வாரே தண்டிக் கொள்ளப் பெறுவார்களாகவும். குழி கல்லாதா / ரைத் தண்டக் கடவ பொன் அவ்வவ் ஆண்டு நேராகத் தண்டாத ஏரி வாரியஞ் செய்வாரை பேரால் கழஞ்சு பொன் ஏரியாயமாக கொள்வதாகவும். இவ்வூர் நிலம் அடுத்தபடியன்றி அடையில் அழிந்துண்டாரை ஏரியாயமாக பேரால் கழஞ்சு பொன் கொள்ள பெறுவதாகவும் ஏரியாயமாகக் கட்டுவன வெயிற்றில் ஏரிக் கணக்கன் ஒருவனுக்கு நிசதப் பதக்கு நெல்லும். இவ்வேரிக்கு வேண்டுவன வெயிறுக்குமல்லது அழிப்பாரும் இப்பரிசு செய்யாமல் காப்பாரும் திருவாணை யென்று இக்க / ப்பூரூடையார் திருவாணை கூறினமையில் இப்பரிசு செய்வதாய் இவ்வண்ணம் ஏரியாயமாகக் கல்வெட்டுவித்தோம் பெருங்குறிப் பெருமக்களோம். பணித்தார் பாக்கைச் சோமநாத கிரமவித்தனும். பாவைக்கால் நின்ற ந[ம்]பிபட்டனும். நெலவங்கன் ஸ்ரீ க்ருஷ்ணக் கிரமவித்தனும். பணியால்  உத்தமப்பிரியன் எழுத்து. யாண்டு 1[6] நாள் 30. [ஏ]ரியா[ய]ம் சுட்டி திருவாணை கூறின திருவாணை கூற்றுவிட்டேன் கப்பூர் உடையானேன்.

    பெருங்குறி பெருமக்கள் – வாரியங்களின் செயற்பாட்டைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள பிராமண ஊர்ச் சபை உறுப்பினர், மூத்தோர்; அம்பலத்தே – கூட்டத்தில், மன்றத்தில்; புறவூரார் – வெளியூரார்; வகை செய்பவர் – நிலத்தின் அளவு, தரம் ஆகியன அளந்து வரி விதிப்பவர்; போகம் – பயிர் சுழற்சி, rotation of crop; பரிசு – விவரம், ஏற்பாடு, arrangement; கல்லுதல் – தோண்டுதல்; அடுத்தபடி – சார்ந்தபடி; அடை – விளைபயிர்; அழி – பயன்கொள்,செலவிடு, கழி; நிசதம் – நாள்தோறும்; காப்பார் – விலக்குவார்; கிரமவித்தன் – வேதத்தை நெறிப்படி ஆள்பவன்; திருவாணை- அரசாணை.

    விளக்கம்:  முதலாம் இராசேந்திரச் சோழனின் 16 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி.1028) கல்வெட்டு. அன்னாளிலே வாகூரான இன்னாளய பாகூர் எனும் அழகிய சோழ ச் சதுர்வேதி மங்கலத்தின் வாரியங்களைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள ஊர் சபை மூத்த உறுப்பினர்கள் ஒன்று கூடி இக்கல்வெட்டால் தெரிவிப்பது யாதெனில், “இந்த ஆண்டு தனுசு ராசியில் வளர்பிறையும் வெள்ளிக் கிழமையும் ஆன பூரட்டாதி நட்சத்திர நாளில் (மாதம் குறிக்கப்படவில்லை) அழகிய சோழன் ஊர்க் கூட்டத்தில் வரி அதிகாரியான கருப்பூருடைய நீலன் வெண்காடன் இங்கு நம்மோடு அமர்ந்து இருக்க நம்மூர் ஏரிப் பராமரிப்பிற்காக ஏரிவரியை முடிவு செய்ய உள்ளூராரும் வெளியூராரும் வந்து பங்கு கொண்டுள்ளனர்.

    இவ்வூரின் விளைநிலத்தில் நெல், வரகு, கரும்பு, எள் உள்ளிட்டன பயிர் செய்வாரிடம் ஆண்டாண்டுக்கு ஒவ்வொரு போகத்திற்கும் 12 சாண் கோலால் 256 குழிநிலம் கொண்ட பெரிய அளவு நிலப்பரப்பை உருவாக்கி அதில் எண்ணாழி கொள்ளும் கங்கை கொண்ட சோழன் மரக்காலால் மா ஒன்றுக்கு இருதூணி நெல்லை கையால் அள்ளிப் போட்டு அளந்து ஆண்டாண்டுக்கு ஒவ்வொரு போகத்திற்கும் ஏரிவாரியப் பணியை மேற்கொள்வார் ஏரிவரியாகப் பெறவேண்டும். வேற்றூரில் இருந்து இவ்வூருக்கு வரும் குடிகளிடம் ஏரிவரி தவிர வேறு எந்த வரியையும் பெறக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வூரில் குடியேறியவரில் தீண்டாதாரான வெட்டியான் குடும்பத்தவரை தவிர்த்து பத்து வயதுக்கு மேல் 80 வயதிற்குள் உள்ள ஆள் ஒவ்வொருவரும் நான்கு சாண் உள்ள கோலால் இருகோலுக்கு இரண்டு கோல் அகலமும் ஒரு கோல் மட்டத்திற்கு ஒவ்வொருவரும் குழி தோண்டித் தூர்வார வேண்டும். இந்த ஏற்பாட்டின்படி குழி தோண்டுகின்றவரை அந்தந்த ஆண்டு ஏரிவாரியத்தாரே குழி தோண்டுவதில் ஈடுபடுத்த வேண்டும்.   குழி தோண்டாதவர்களுக்காக மாற்று ஆளை (substitute) அமர்த்தி குழி தோண்டினால் குழி தோண்டாதவர் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏரிவாரியத்தார் கால்பொன்னை கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம். குழிதோண்டுவதில் கலந்து கொள்ளாதவரிடம் இருந்து அந்தந்த ஆண்டே திரட்ட வேண்டிய கால்பொன்னைத் திரட்டாவிடில் அதற்கு தண்டமாக (fine) ஏரிவாரிய பொறுப்பில் உள்ளவர் ஒவ்வொருவரிடம் இருந்தும் கழஞ்சு பொன்னை ஏரிவரியாகப் பெறவேண்டும். வாழக்கைக்கு இவ்வூர் விளைநிலத்தை சார்ந்திராமல் விளைபயிரை மட்டும் கொள்முதல் செய்து உண்பவரிடம் கழஞ்சு பொன் ஏரிவரியாகப் பெற வேண்டும். ஏரிவரியாகக் கட்டுவனவற்றில் இருந்து ஏரிக்கணக்கன் ஒருவனுக்கு நாள்தோறும் பதக்கு நெல் தரவேண்டும். இந்த ஏரிக்கு வேண்டியதைச் செய்யாமல் அதை பயன்படுத்த மட்டும் செய்வாரும் இந்த ஏற்பாட்டை புறக்கணித்து விலக்குவாரும் அரசாணையை மீறினவர் ஆகின்றனர். கருப்பூருடையார் அரசாணையிட்டபடியே இந்த ஏற்பாட்டை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்டோம். அதன்படியே ஏரிவரி பற்றி கல்லில் வெட்டுவித்தோம்” என்று வாரியங்களைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள ஊர்சபை மூத்தோரில் சோமநாத கிரமவித்தன், நம்பிபட்டன், ஸ்ரீ கிருஷ்ண கிரமவித்தன், உத்தமப்ரியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இராசேந்திர சோழனின் 16 ஆட்சி ஆண்டு 30 நாளில் ஏரிவரியை முடிவுசெய்து அரசாணை அறிவிக்கும் அரசாணையை கூறிவிட்டேன் கப்பூர் உடையானேன்.

    தீண்டார் பற்றிய குறிப்புள்ள அரிய கல்வெட்டுகளுள் இதுவும் ஒன்று. கோவிலுக்கும் இந்த ஏரிவரிக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை.  இதனால் கோவிலுக்கு எந்த பயனும் இல்லாத போதும் இக்கல்வெட்டு ஏன் கோவிலில் இடம் பெற்றது என்ற கேள்வி நம்மில் எழுகின்றது. “ஏரிக்கு வேண்டியதை செய்யாமல், இந்த ஏற்பாட்டை விலக்குவோர்” ஆகிய எதிர்மறைக் கருத்துகளை இதில் குறிப்பிடுவதில் இருந்து வாரியக் கண்காணிப்பு அதிகாரமுடைய பெருங்குறி சபை உறுப்பினர்களுக்கு இந்த ஏரிவரியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்காலத்தில் சிக்கல் வரும் என்ற ஐயம் இருந்துள்ளதை காட்டுகின்றது. சிக்கல் எழும் போதெல்லாம் இந்த அரசாணையைக் காட்டி முரண்படும் மக்களை ஏரிவரிகட்ட உடன்படச் செய்யலாம் என்ற எண்ணம் தான் பெருங்குறி சபையாரை இக்கல்வெட்டை கோவிலில் பொறிக்க வைத்தது எனலாம். பெருங்குறி சபை மக்களும் கோவிலில் பணிபுரியும் பிராமணர் தானே!!

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பக் 25-28, S. குப்புசாமி, G. விஜய வேணுகோபால். புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன வெளியீடு. தமிழ்க் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அறிய உண்மைகள், பக் 303-304, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்,

    செங்கற்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், பாலூர் பதங்கீசுவரர் கோவில் முன்மண்டப வடக்குச் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 15 வது
    2. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக் காட்டுக் கோட்டத்துப் பாலையூர் நாட்டுப் பா
    3. லையூரான இராசேந்திர சோழ நல்லூர் உடையார் திருப்பதங்காடுடைய நாயநா[ர்]க்கு இக்
    4. கோயிற் காணியுடைய சிவப்பிராமணன் காக்குநாயகப் பட்டன் மகன் உய்யக் கொண்டாநாந காக்கு
    5. நாயக பட்டனேன். இந்நாயனார்க்குத் திருப்பாலையூர் கிழவன் பறையடியாரில் வாசி மகன் பெருங்காடநாந
    6. இளமைப் பெரும்பறையன் வைத்த சந்தி விளக்கு ஒன்றுக்கு நான் உபையாமாகக் கைக் கொண்ட காசு ஆறு. (கல்வெட்டு முற்றுப் பெறவில்லை)

    காணிஉடைய – பரம்பரை உரிமை உடைய; கிழவன் – கிராமத் தலைவன்; பறையடியார் – பறையர்குல வேலையாள்; சந்தி விளக்கு – பகலும் இரவும் கூடும் வைகறை, மாலை வேளைகளில் கோவிலில் எரிக்கும் எண்ணெய் விளக்கு.

    விளக்கம்:  மூன்றாம் இராசராச சோழனின் 15 – ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1231) செயங்கொண்ட சோழமண்டலத்தில் அடங்கிய ஊற்றுக்காட்டு (வாலாஜாபாத் அருகில்) கோட்டத்தில் அடங்கிய பாலையூர் நாட்டின் ஊரான பாலையூரில் கோவிலுடைய திருப்பதங்காடு ஈசுவரன் கோவிலின் பரம்பரை பூசை உரிமை பெற்ற சிவப்பிராமணன் காக்குநாயகப் பட்டனுடைய மகன் உய்யக்கொண்டனான காக்குநாயக பட்டன் செய்யும் சத்திய பிரமாணம் யாதெனில், “இக்கோயில் இறைவர்க்கு திருப்பாலையூர் தலைவனிடம் வேலை செய்யும் பறையரான வாசி என்பாரது மகன் பெருங்காடனான இளமைப் பெரும்பறையனிடம் இருந்து அன்றாடம் ஒரு சந்தி விளக்கு ஏற்றுவதற்காக நான் உபையமாக ஆறு காசுகளை ‘அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக் கொண்டு’ பெற்றுக் கொண்டேன்”.

    இளமைப் பெரும்பறையன் கோவிலுக்குச் சென்று உய்யக் கொண்டான் காக்குநாயக பட்டனை சந்தி ஆறு காசு உபயம் கொடுத்து சந்தி விளக்கெரிக்கச் செய்தான். அதன் தொடக்க நாளில் அவன் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டிருக்க வேண்டும். இச்செயல் பறையர் தீண்டாமைக்கு ஆட்பட்டிருக்க வில்லை என்பதற்கு தக்க சான்றாகின்றது. இக்கல்வெட்டு மூலம் பறையர் தீண்டாதாரில் சேர்க்கப்படவில்லை என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி IX, பக். 83, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    பறையர் சந்தி விளக்கு எரித்த மேலும் சில கல்வெட்டுகளைக் காண சொடுக்குங்கள்

    https://groups.google.com/d/msg/vallamai/w2Ov5Sd8KG0/QaXdrvWCCAAJ

    https://groups.google.com/d/msg/vallamai/BqrYqyng6uY/orQnsT4ADgAJ

    Share
  • சிந்திக்கச் சில கல்வெட்டுகள்

    சிந்திக்கச் சில கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    இந்தியத் துணைக் கண்டத்தில் சற்றொப்ப ஒரு லட்சம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் பிராமி, பிராகிருத கல்வெட்டுகள் தவிர்த்து பெரும்பாலன கோவில் சார்ந்த கல்வெட்டுகளே. இவற்றில் கோவிலுக்கு நன்கொடைகள் தந்த செய்திகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. தமிழ்க் கல்வெட்டுகள் 60,000 மேல் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் யாவும் பிராமணர்களின் இசைவால் கோவில் சுவற்றில் பொறிக்கப்பட்டவை. எனவே பிராமணரால் தான் இந்த வரலாற்றுப் பதிவு நமக்கு கிட்டியுள்ளது. பிராமணரின் கோவில் தொடர்பால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் அவற்றில் அதிகம் உள்ளன.

    கல்வெட்டில் அறியப்படும் சதுர்வேதி மங்கலங்கள் ஆற்றுப் பாசனத்தை சார்ந்த பிராமணக் குடியேற்ற ஊர்கள் ஆகும். பிரம்மதேயம் என்பது ஒரு பிராமணருக்கு தனிப்பட்ட முறையில் விலையில்லாமல், ஆவணப்பதிவுக் (registration fee) கட்டணம் இல்லாமல் மன்னனால் கொடுக்கப்பட்ட நிலங்கள் ஆகும். எனினும் பிரம்மதேயமாக அறிவிக்கப்பட்டு நேரடியாக மன்னனிடம் இருந்து முதன் முறையாகப் பெறும் பிராமணருக்கு மட்டும் தான் இந்த சலுகை கிடைக்கும். அங்ஙனம் பிரம்மதேய நிலத்தை பெற்ற ஒரு பிராமணர் வேறு ஒருவருக்கு அந்நிலத்தை விலைக்கு விற்றால் அது ஆவணப்  பதிவுக் கட்டணம் கட்டப்பட வேண்டியதாகின்றது. அதோடு இந்த விற்பனை நிகழ்வால் அந்நிலம் பிரம்மதேயம் என்ற பொருளையும் இழந்து விடுகின்றது என்பதை பலரும் உணர்ந்திருப்பது இல்லை. இதே போல் தவறாகப் பொருள் புரிந்து கொள்ளப்பட்ட இன்னொரு சொல் தான் இறையிலி என்பது. இறை என்பதற்கு மன்னன், வரி என்ற சொற் பொருள் உள்ளன. ஒரு மன்னன் இறையிலி அறிவித்தால் அதற்கு வரிகட்ட வேண்டியதில்லை என்று பரவலாக தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது.  உண்மையில் மன்னன் தனக்கு வரவேண்டிய வரித்தொகையை கோவில் ஊர் அல்லது கோவிலின் வளச்சிக்கு பயன்படட்டும் என்ற நோக்கில் விட்டுக்கொடுப்பதை வரி கட்டத் தேவையில்லை என்று கொண்டால் மன்னன் எந்த நோக்கத்திற்கு இறையிலி அறிவித்தானோ அந்த நோக்கம் ஈடேறாது போகும். இப்படி ஆவதற்கு அவன் இறையிலி அறிவிக்காமலே இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும்.  அப்படியானால் இதன் உண்மைப் பொருள் தான் என்ன? இறையிலி என்றால் மன்னனுக்கு தான் வரி கட்டவேண்டியதில்லையே தவிர கோவில் வளர்ச்சிக்காக ஒருவர் கட்டாயமாக அந்த வரியை கட்டியே ஆகவேண்டும். ஆதலால் பொருட்படி அது மக்களுக்கான இறையிலி அல்ல மன்னனுக்கே அது இறையிலி. எனவே பிராமணர் அக்காலத்தே பிரம்மதேயம், இறையிலி ஆகிய சலுகைகளைப் பெற்று வரியே கட்டாமல் சுகபோக வாழ்வு வாழ்ந்தனர் என்ற தப்பான கருத்து சிலரால் அச்சிலும் இணையதளத்திலும் பரப்பப்பட்டு வருகின்றது. பிராமணர்களும் வரிகளைக் கட்டினர். அவர்களுக்கு வரிச் சலுகை ஏதும் இல்லை என்று சிந்திக்க கீழே இடம்பெறும் முதல் இரு கல்வெட்டுகள் சான்றாகின்றன. பிணை, தாலி காது அறுப்பு, போரில் பிராமணர் பங்கு பெறல் பற்றிய சிந்தனைக்கும் கீழே கல்வெட்டுகள் உள்ளன. சமூகப்பிரிவினையை, சமூக ஏற்றத் தாழ்வை சதுர்வேதி மங்கலங்களும் அதன் பிடாகைகளும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன என்று J.S. கிரேவால், சாந்தின் பீ போன்ற பேராசிரியர்கள் தவறான செய்திகளை அச்சில் வெளியிட்டுள்ளனர். அது தவறான கருத்து என்பதை இரண்டாவது கல்வெட்டு தெரிவிக்கின்றது.

    The State and Society in Medieval India by J. S. Grewal Page 207

    https://books.google.com/books/about/The_State_and_Society_in_Medieval_India.html?id=LKkBJyKdoZ8C

    நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் ஊரில், சேடபுரீசுவரர் கோவிலின் கருவறை தெற்கு, மேற்கு, வடக்குப்புற பட்டிகைளில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோற்சடபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ஸுந்தர பாண்ட்ய தேவர்க்கு யாண்டு 23 வது மகர நாயற்று அப[ர]பக்ஷத்து த்ருதியையும் பெற்ற ஆலியத்து நாள் உய்யகொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு பாம்புரமான குலோத்துங்க சோழ சருப்பேதி மங்கலத்து உடையார் திருப்பாம்புரமுடையார் கோயில் ஆதிசண்டேசுர தேவர், கன்மிகளுக்கு. இவ்வூர் திருக்குடந்தை _ _ _ செம்பியன் மாராயனும் முட்டைப் புறத்து சங்கர நாராயண பட்டனும் _ _ _ ணவ _ _ _ _ பிரமாணம் பண்ணிக் குடத்த பரிசாவது. இவ்வூர் பெரும் பற்றப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரமராயனும் திரு_ _ _பண்_ _ _சோனா_ _ _ _
    2. முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இவ்மூவோம் இருபத்தொன்றாவதும் இருபத்திரண்டாவதும் வரை_ _ _[கொ]ற்றவாயில்  புவனயர் நிற்கையில் இந்த இ[ராச நாரா]யண பிரம[ரா]யன் நிலை நின்று கடமை இறாமல் ஓடிப்போகையில் இருபத்திரண்டாவது வரை சிகைக்கு நாட்டுக் கணக்கு கீழ் முத்தூருடையார் பேராயிரமுடையார் கணக்குப்படி இவர்பேரால் வந்த _ _ _ இராசநாராயண பிரம்மராயற்கு [பு]ணைப்பட்ட கவுசியன் அழகிய திருச்சிற்றம் பலமுடையான் _ _ _ _ இராசநாராயண பிரமராயற்க்கு [பு]ணைப்பட்ட எங்களை இறுக்க வேணும் என்கையில் இந்த இராசநாராயண பிரமராயன் _ _ _ க்ஷேத்ரமான மனைகளும் நிலங்களும் இன்னாய _ _ _ பாம்புரமுடையார் _ _ _ _
    3. க நாங்கள் புணைவிலையாக விற்றுக் குடுத்தோம். விற்றுக் குடுத்த மனைகளும் நிலங்களுமான இவ்வூர் நத்த[த்]து இவர் மனைகளுக்கு கீழ்பாற்கெல்லை இன்னாயனார் திருமடை விளாகத்து எல்லைக்கு மேற்கு தென்பாற்கெல்லை இன்னா[யனா]ர் திருக்குளத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை விழாவரு வீதிக்கும் சேலூர் சோலை அரசு பட்டன் மனைக்கும் திருவரங்கமுடையான் பட்டன் மனைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை விழாவரு வீதிக்கு தெற்க்கு ஆக [இ]சைந்த  இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட மனைகளும் _ _ _ _ _ ஆற்றுக்கு தெற்குப்பட்ட விளைநிலத்தில் உய்ய வந்த விளாகம் என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை பாம்பூர்க் கிழார் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஓடை வாய்க்கா[லுக்கு] வடக்கும் மேல்[பாற்கெல்லை] _ _ _ _
    4. _ _ _ _ __  கீழ்பாற்கெல்லை பெருமருதூர் திருசெல_ _ பலவூர் சதிர பட்டன் நிலத்துக்கு வடக்கு மேற்பாற்கெல்லை_ _ _ உடையான் பட்டன் நிலத்துக்கு மேல்பாற்கெல்லை _ _ _ பட்ட ரு இரண்டு மாவும் _ _ _ _ [வ]டக்கடை _ _ _ என்று பேர்கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை வீற்றிருந்தான் பட்டன் நில்த்துக்கு மேற்கு
    5. கெல்லை _ _ _ _ மாதேவ பட்டன் உள்ளிட்டார் நிலத்துக்கு வடக்கும் மேற்பாற்கெல்லை கவுணியன் செம்பியன் மாராயந் பட்டன் நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை கோன் நிலத்துக்கு இசைந்த இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட ரு இரண்டு மாவும் தத்தமான்னாற்றுக்கு வடக்கு _ _ம் பற்றூரூடையான் உய்ய கொண்டான்_ _இவன்_ _ _ _நத்தத்துக்கு கீழ்பா
    6. ற்கெல்லை_ _ _ற்றூர் நத்தத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உடையார் பாம்புரமுடையார் திருநாமத்துக்காணி_ _ _ (கல்வெட்டு நிறைவுறாமல் நிறுத்தப்பட்டுள்ளது).

    அபரபக்ஷம் – தேய்பிறை; ஆதிசண்டேசுவரர் – சிவன் கோவிலகளில் முதல் மரியாதை செலுத்தப்படுபவர்; கன்மிகள் – கோவில் பொறுப்பாளர்; பிரமாணம் – உறுதி ஏற்பு ஆவணம்; பரிசாவது – ஏற்பாடு, வகை, விவரம்; நிற்கையில் – சாட்சியாக இருக்க; கடமை இறாமல் – அரசுக்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை செலுத்தாமல்; புணை – பிணை, surety, collateral security, ஆள் ஜாமின்; க்ஷேத்ரம் – வயல் நிலங்கள், வீடு இவை யாவும்; பிரம்மராயன் – மன்னனால் கோவில் செயற்பாட்டை கவனிக்க அமர்த்தப்படும்  பிராமண அதிகாரி.

    விளக்கம்:  சடவர்ம சுந்தர பாண்டியனின் 23-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1273) நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் சேடபுரீசுவரர் கோவிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. ஆதிசண்டேசுவர தேவரை வணங்கி கோயில் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கும் விவரமாவது “திருக்குடந்தை கவுணியன் செம்பியன் மாராயனும் முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இந்த உறுதி ஏற்பு ஆவணத்தில் செய்து கொடுத்த ஏற்பாடு யாதெனில், இவ்வூரில் வாழும் பெரும் பற்றுப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரம்மராயனும், திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் ஆகிய இம்மூவரும் சுந்தர பாண்டியனின் 21-22 ஆம் ஆட்சிக் கால கட்டத்தில் கொற்றவாயில் புவனயர் சாட்சியாக இருந்திட இம்மூவருக்கும் இடையே ஒருவர் தவறினால் மற்றவர் அவர் சார்பாக வரி கட்டுவது என்ற பிணை (surety) ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் இந்த இராசநாராயண பிரம்மராயன் தன் கடமையில் வழுவாது நின்று அரசிற்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை கட்டாமல் எங்கோ போய் மறைந்தான்.  நாட்டுக் கணக்கர் கீழ்முத்தூருடையார் பேராயிரமுடையார் ஆகியோரின் கணக்குப்படி இந்த இராசநாராயண பிரம்மராயன் பேரில் 22 –ம் ஆட்சி ஆண்டில் செலுத்த வேண்டிய வரி நிலுவையை அவருடன் இன்னொரு பிணையில் உள்ள கவுசியன் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் இராசநாராயண பிரம்மராயனோடு பிணையப்பட்ட எங்கள் இருவரையும் (திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டன் ஆகியோர்) கட்டச் சொன்னான். ஆகையால் இந்த இராசநாராயண பிரம்மராயனுக்கு சொந்தமான நிலங்களை இதாவது, வீடு விளைநிலம் ஆகியனவற்றை திருப்பாம்புர ஈசனுக்கு பிணைக்கு விலையாக விற்றுவிட்டோம்” என்று கூறியுள்ளனர். இந்நிலங்கள் பற்றிய எல்லை விவரங்கள் எஞ்சிய வரிகளில் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்தி நிறைவு செய்யப்படாமல் அப்படியே பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒரேஒரு ஆண்டிற்கான வரியை கட்டாததாலேயே ஒருவரது உடைமை முழுவதையும் விற்றுவிடுவது ஞாயமா? உடைமையின் மதிப்பு வரிநிலுவையை விட அதிகமாகத்தானே இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது. கல்வெட்டில் பிணைக்கட்ட அனைவரும் பிராமணர் என்று தெரிகின்றது.

    இக்கல்வெட்டின் மூலம் பண்டு ஒருவருக்கு ஒருவர் பிணை (ஆள் ஜாமீன்) கொள்ளும் முறை சமூகத்தில் இருந்தது தெள்ளப் புலனாகின்றது. அதோடு பிராமணரும் மற்றவரைப் போல வரி கட்ட வேண்டி இருந்தது என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு நல்ல சான்றாகும். இதுவல்லாமல் பிராமணர் அந்தராயத்தில் அடங்கும் நெல் வரி, காசாய வரியில் அடங்கும் குடிமகண்மை வரி, வீட்டிற்கான வாசல் வரி உள்ளிட்ட பல வரிகளையும் கட்ட வேண்டும் என்பதை மேலும் சில கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது. எனவே பிராமணர் வரி கட்டாமலேயே அரசு சலுகை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர் என்ற பரவலான கருத்து பிழையானது என்று தெரிகின்றது. எனவே யார் என்ன எழுதினாலும் சொன்னாலும் அதன் உண்மைத் தன்மை என்ன என்று தக்க சான்றுகளுடன் ஆராய வேண்டிய கட்டாயக் கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

    பார்வை நூல்: நன்னிலம் கல்வெட்டுக்கள் – I, எண்: 138/1977, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அரசர் கோயில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கருவறை வடக்கு முப்படைக் குமுதம் மற்றும் மேற்கு பட்டிகையில் பொறித்த 3 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடைபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு [ப]தினைஞ்சாவது மீந நாயற்று அபரபக்ஷத்து ஸப்தமியு[ம்] ச[னி]க்கிழமையும் பெற்ற [ஸ்வா]தி நாள் _ _ _ _ த்த ஸ்வதுர்வேதிமங்கலத்துப் பிடாகை மாத்தூர் ஸபை. [இவ்]வூர் திருவரசுர நாயனார் கோயிலில் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வார்க்கு ஸ்ரீ ஸேனாபதிப் பெருவிலை ஆக விற்றுக் குடுத்த பரிசாவது, இவ்வூர் ஸபையாரில் காஞ்சி சொக்கத் தேவரான [மூ]த்த வாமன பட்டன் பதினாலாவது வரையும் உழுது தன் பேர்க்கடமை செலவறாதே ஓடிப் போகையில். இவன் பேர்க்கடமைக்கு சேர்வை என்று எங்களை இப்பணம் _ _ _
    2. _ _ ன்று கோமுள்ள மாவிஸனம் பண்ணுகையாலே. எங்களுக்கு _ _ ங்க _ _ _ பாத்தி இல்லாதப்படியாலே _ _ _ _ _இதர்க்கு தேவரான [உ]த்த[ம] வாமன பட்டன் உள்ளிட்ட _ _ _ _ _ன நிலமான மேலைப்புதுத் திரு ந_ _த்து _ _ _சி குருகூர் ஸ்ரீ  சவ_மம் ப்ரயாகைத் திருப்பொரி பட்டன் உள்ளிட்டார் இராசேந்த்ர விளை நிலமான முன் மடைப் புதுத்திருத்து நந்த[கஸ]ம். வெண்ணைக் கூத்தன் _ _ _ தனால் இன்னிலம் ஒன்றே இரண்டு மாவுக்கும் பெறும் வஸ ஆக நிச்சயித்த அன்றாடு நற்காசு வாசிபடர் வராகன் பணம் 27
    3. [இரு]பத்தேழும் விலையாவதாகவும். இப்படி சம்மதித்து மாத்தூர் [எ]ழுவாத நா[ய]னார்க்கு ஸ்ரீவேதநாயகனும் இவற்கு விலை ஆக விற்றுக் குடுத்தோம் மாத்தூர் ஸபை ஊரோம். இப்படிக்கு இவை _ _ _ ஞ்சி இவாய்வ _ _ _ _ன் பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை வங்கிப்புறத்து திருவேங்கட பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை ஆதன்பாக்கத்து திருவேங்கட பட்டன் எழுத்து. இவர்கள் சொல்ல இப்ரமாணம் எழுதினேன் ஸ்ரீ சுத்தவல்லிச் சருப்பேதி மங்கலத்து உய்ய வந்த பெருமாள் கோயில் வீற்றிருந்தான் பட்டனேன். இவை என் எழுத்து.

    சேனாபதி ஆழ்வார் – விஷ்வக்சேனர். சிவன் கோவிலில் ஆதிசண்டேசுவரரை முதலில் வணங்குவது போல் பெருமாள் கோவிலில் விஷ்வக்சேனரை முதலில் வழிபடுவர். இவரை சேனை முதலி என்பர்; பிடாகை – ஒரு கோவில் ஊரின் பின்புறத்தே (backyard) அமைந்த உட்கிடையூர், a small village at the backyard of a bigger village; சபை – சதுர்வேதிமங்கலம், பிடாகை ஆகியவற்றின் ஊரவை; பேர்க்கடமை செலவறாதே – தன்பெயரில் ஏற்பட்ட அரசுக்கு கட்ட வேண்டிய வரியை செலுத்தாமல்; சேர்வை – தொண்டு, ஊழியம்; மாவிஸனம்- பெருந் தொல்லை; பாத்தி – பொறுப்பாதல், பிணையாதல், பங்கு.

    விளக்கம்:  சடவர்ம சுந்தர பாண்டியனின் 15- ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1265) காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அரசர் கோவிலில் தேய்பிறை ஏழாம் நாள் சனிக்கிழமை சுவாதி நட்சத்திரத்தன்று மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து வட பிடாகையான மாத்தூர் எனும் அரசர் கோயில் ஊரின் ஊரவையர் கூடினர். “மாத்தூர் பிடாகையின் திருவரசுரம் பெருமாள் கோயிலில் சேனாபதி ஆழ்வாரான விஷ்வகசேனரை வணங்கி பெருவிலையாக நிலம் விற்றுக் கொடுத்த விவரம் என்னவெனில், இவ்வூரின் ஊரவை உறுப்பினனான காஞ்சி சொக்கத் தேவரான மூத்த வாமன பட்டன் சுந்தர பாண்டியனின் 14- ம் ஆட்சி ஆண்டு வரை இவனுக்கான நிலத்தை உழுது பயன்கொண்டான். ஆனால் 15 –ம் ஆட்சி ஆண்டில் தன் பேரில் அரசுக்குக் கட்ட வரிஇனங்களைக் கட்டாமல் எங்கோ சென்று மறைந்தான். இதனால் இவன் பெயரில் உள்ள வரிகளைத் கட்டுவது தொண்டு, ஊழியம் என்றெல்லாம் சொல்லி எங்களைக் கட்டும்படி தொடர்ந்து பெருந் தொல்லை கொடுத்து வருகின்றனர். எங்களுக்கு அவனது வரியைக் கட்ட வேண்டிய பொறுப்போ பிணையோ இல்லாமையால் இதற்கு தேவரான உத்தம வாமன பட்டன், பிரயாகை திருப்பொரி பட்டன் உள்ளிட்டோர் வெண்ணைக் கூத்தன் என்பவனுக்கு ஒன்றே இரண்டு மா அளவுள்ள மூத்த வாமன பட்டனின் நிலத்தை அன்றாடு நற்காசு வாசிபடவர் வராகன் பணம் 27 க்கு விற்றுவிட ஒப்புக் கொண்டனர்.” பிற பட்டர்களும் இதற்கு ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

    மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்தின் வட பிடாகையான மாத்தூர் ஒரு வைணவ தளம். இக்கோவிலில் பணியாற்றும் பிராமணருக்கும் மற்ற கோவில்களில் உள்ளது போல கோவில் அருகிலேயே வீடுகள் அமைந்திருக்க வேண்டும். எனவே பிடாகைகளில் வைணவக் கோவில்கள் அறவே இருந்ததில்லை. பிராமணர் வீடுகளும் இல்லை, பிராமணர் சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்துகொண்டு பிற உழைக்கும் மக்களை பிடாகைகளுக்கு ஓரங்கட்டித் தாழ்வுபடுத்தி சமூகப்பிரிவினையை ஏற்படுத்திய புறச்சேரியே பிடாகைகள் என்ற அலிகார் பல்கலைக்கழக இணைப் பேராசிரியை சாந்தினி பீயின் கருத்தை இக்கல்வெட்டு சுக்கு நூறாக உடைத்தெறிவது நமக்குக் கண்கூடாகத் தெரிகின்றது.

    http://thalaivazhaivirundhu.blogspot.com/2018/03/blog-post_21.html

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் – IV, பக்கம் 109-110, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம் இஞ்சிக்குடி ஊரில் அமைந்த ஸ்ரீ பார்வதீசுவரர் கோவிலின் மகாமண்டபம் வலப்புறத் தூணில் உள்ள, 32 வரிக் கல்வெட்டு நீட்சி கருதி சாய்வுக் கோட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்தி ஸ்ரீ திரு / வுலளகளந்த  கணக் கிந்படி இரட்டபா டி ஏ[ழ]ரை இலக்கமு /  ங் கொண்டு ஆ / கோமல்லனை இரும / டி வெந்கண்டு _ _ _ குலைவிந்  கொட / _ _ _[கானை] தேவற்கு / [பா]டு ஆத[லை] /  இரட்ட  ராச்சியந்  /  துமிச்சு பேரா /  ற்றங்க[ரை] கேய் வ  / ந்து ஆகோமல்  /  லனோடு பொ[ரு] /  த பூசலில் ஆனை / முகத்தில் குதி  / ரை பாச்சியட்[ட]  /  சங்கரன் பெரி  /  யாநான கல்லி /  யாணபுரங் கொ / ண்ட சோழ பிர  / மாதராயந் [மக]  /  [ன்] ராஜாதிராஜனுக் / கும் அரையன் திரு  / ச்சிற்றம்பலம் /  முடையாநுக்கு  /  ம் இவநு_ _ _ _ /  ந்த சங்கரன் இரா / மநான ராஜேமஹே / ந்த்ர _ _ _  ராம நுக்கு _ _ _ _

    பாச்சியட்ட – பாயவிட்டு மறிக்க, தடுக்க; பிரமாதராயன் – மன்னனால் கோவில் செயற்பாட்டை கவனிக்க அமர்த்தப்படும் பிராமண அதிகாரி.

    விளக்கம்:  இரண்டாம் இராசேந்திரச் சோழனின் 10–ம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மேலைச் சாளுக்கிய வேந்தன் ஆகவமல்லனான முதலாம் சோமேசுவரனை கி.பி. 1054 ல் கொப்பத்து பேராறான துங்கபத்திரைக் கரையை அண்டிய போர்க்களத்தில் இராசேந்திரச் சோழன் எதிர் கொண்டான். அப்போது யானைப் படையை நோக்கி குதிரைப்படையைப் பாயவிட்டு யானைப் படையை முன்னேற விடாமல் மறிக்க, தடுக்க என்ற செய்தியோடு வேறு ஒரு செய்திக்கு கல்வெட்டு தாவுகின்றது. சங்கரன் பெரியானான கலியாணபுரம் கொண்ட சோழ பிரமாதராயன் மகன் ராஜாதிராஜனுக்கும் அரையன் திருச்சிற்றம்பலமுடையானுக்கும் இவனொடு உறவுடையவனான சங்கரன் இராமனான ராஜேந்திர _ _ _ ராமநுக்கும் என்று மூவரைக் குறித்துவிட்டு அதற்கு மேல் கல்வெட்டுச் செய்தி ஏதும் கிட்டாமல் நின்றுவிடுகின்றது. ஏனென்றால் அதன் பின் கல்வெட்டின் சில வரிகள் சிதைந்துவிட்டன. எனவே செய்தி இன்னதென்று மேலும் தெளிவாகத் தெரியவில்லை.

    கோவிலில் கோவிலுக்கு தொடர்பற்ற செய்திகள் கல்வெட்டில் இடம்பெறா. இக்கல்வெட்டு இக்கோவிலில் இடம்பெற்றதென்றால் அது தொடர்பான செய்தி தான் சிதைந்த வரிகளில் இருக்கும். பிரம்மராயன் என்போர் கோவில் செயற்பாட்டை மேற்பார்வையிடவும் கோவில் செயற்பாடு சீராக நடந்து வரவும் வேந்தரின், மன்னரின் நேரடி பார்வையில் நியமிக்கப்பட்ட பிராமண அதிகாரிகள் ஆவர். தொழில் தர்மத்திற்கு மாறாக பிரம்மராயரான இந்த பிராமணர் போரில் கலந்து கொண்டு வீரசாவடைந்தார் என்று விளக்கப் பகுதியில் குறித்திருப்பது தவறானச் செய்தியாகப்படுகின்றது. கல்வெட்டுகளை படிப்போர் நூல் வெளியீட்டாளர் கொடுக்கின்ற விளக்கத்திற்கு மேல் தாமாக முயன்று எந்த கல்வெட்டிற்கும் பொருள் விளக்கம் கொள்ளப் போவதில்லை என்பதே நடப்பாக உள்ள நிலையில் இப்படியான தவறான விளக்கத்தை படிப்போர் அதையே உண்மை என்று கருதும் அவல நிலை தான் உள்ளது. ஒரு அரசு அமைப்பான தொல்லியல் துறை இத்தகு தவறுகளை தவிர்க்க வேண்டும்.

    பார்வை நூல்:  நன்னிலம் கல்வெட்டுக்கள் – I, எண்: 171/1977, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டை வட்டம், பாளையங் கோட்டையில்  அமைந்த கோபால சுவாமி கோயில் கருவறை வடக்கு அதிட்டானம் முப்படைக் குமுதத்தில் பொறித்த 9 வரிக் கல்வெட்டு.

    1. ழரை இலக்கமும் திண்டிரல் வென்றித் தண்டார் கொண்டு தன்னெழில் (வளர் ஊ) ழி உள் எல்லா யா
    2. ண்டு தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசு கொள் ஸ்ரீ (கோவிரா)ஜராஜ கேஸரி வர்ம
    3. ரான ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 25 ஆவது ராஜராஜ ம(ண்டலத்)து கீழ்க் களக் கூற்றத்து
    4. ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வல்லப (சதுர்வேதிம)ங்கலத்து மகா சபையோம். பெருங்குறி சாற்றின ம_ _ _க் கூட்ட குறைவ
    5. றக் கூடி இருந்து செறுகை சீமாமினவனம் யென்றிய னுள்ளிட்டாராவது நம்மூர் யெட _ _ _ விலே யவது புகுந்து ஊர்
    6. அழிப்போமென்று ப்ராமணரைப் படைகளம் பறிக்க பிராமணிகள்த் தாலியு_ _ காதுமறுத்துக் கவரா நிற்க
    7. கக் கவராமல் பட்ட வள்ளுவன் மாணிக்கன் மணியன்னான கவறை இகைற்சி_ _ மயில் ஒப்பனுக்கு உதிரப்ப
    8. ட்டியாகப் பணிச்ச நிலம் திருவரங்கனேரிக் குளத்தடியால் கொல்லன் வச்ச
    9. _ _உள்பட அடைஞ்சிலியிடை

    சாற்றின – அறிவித்த; செறுகை – ; பறிக்க – வலுவில் பிடுங்க; கவர் – கொள்ளையிடு; பட்ட – போரில் இறந்த; உதிரப்பட்டி – உயிர் ஈகம் செய்தவர் குடும்பத்திற்கு தரப்படும் இரத்த காணிக்கை நிலக் கொடை; பணிச்ச நிலம் –

    விளக்கம்:  இரட்டப்பாடி ஏழரை இலக்கம் என முதலாம் இராசராசனின் மெய்கீர்த்தியொடு தொடங்கும் இந்த கல்வெட்டு அவனது 25-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1010) வெட்டப்பட்டுள்ளது. இராசராச மண்டலத்தில் அடங்கிய கீழ்களக் கூற்றத்தில் அமைந்த பிரம்மதேயமான ஸ்ரீ வல்லப சதுர்வேதி மங்கல  (பாளையங்கோட்டை) மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் கூட்டத்தில் மக்கள் திரளாக கூடி இருந்து எடுத்த முடிவு யாதெனில்,”நம்மூரில் புகுந்து ஊரையே அழிப்போம் என்று இங்குள்ள பிராமணர் உடைமைகளைப் படைக்களம் வலுவந்தமாகப் பிடுங்கியது. பிராமணிகளான மாமிகளின் தாலியையும் காதையும் அறுத்ததோடு கொள்ளையிட முற்பட்ட நேரத்தில் அப்படிக் கொள்ளையிட முடியாமல் தடுத்து போரில் இறந்து போன வள்ளுவன் மாணிக்கன் மணியன் ஆன கவறை இகைற்சி_ _ மயில் ஒப்பனுடைய குடும்பத்தாருக்கு இரத்த காணிக்கை நிலம் கொடையாக திருவரங்கனேரி குளத்தடி பக்கம் வழங்கப்பட்டது.

    வேந்தர், மன்னர்களின் பேராதரவு பெற்றவர்களாகக் கருதப்பட்ட பிராமணர்களுக்கே இப்படி ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழல் இருந்தது என்றால் மற்றவர் உயிர் பாதுகாப்பும் கேள்விக்கிடமானதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    5-ம் வரியில் அதிகமான தட்டச்சுப் பிழை உள்ளது. நூலைப் படிப்பவர் யாரும் மூலக் கல்வெட்டொடு ஒப்பிட வாய்ப்பில்லாத போது ஒருவர் தட்டச்சிய கல்வெட்டு வாசகத்தை இன்னொருவரைக் கொண்டு சரிபார்த்த பின்னர் தான் அதை அச்சிடுட வேண்டும் அதுவே சரியானது. இந்தக் கல்வெட்டில் அவ்வாறு கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் – I, பக்கம் 42, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    Share
  • திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

    துரோகம் என்றால் இரண்டகம், நம்பிக்கை குலைத்தல், நன்மதிப்பை பாழடித்தல் என்று கொள்ளலாம். இதில் ஒருவரை ஒருவர் மோசம் செய்வது என்றில்லாமல் இராசதுரோகம், ஊர்த்துரோகம், இனத்துரோகம், சிவத்துரோகம் என்பனவும் உண்டு. சிவத்துரோகம் என்பதற்கு சிவநெறிக்கு புறம்பாக நடத்தல் இதாவது, சிவன் கோவில் சொத்துகளை மோசடி செய்தல், களவாடுதல் ஆகியன அடங்கும். இதற்கு அக்காலத்தே கடும்தண்டனை இருந்தது. சிவத்துரோகத்தை புரிந்தவர் பெரும்பாலும் சிவன் கோவில் ஊழியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பிராமணர், வெள்ளாளர்  ஆகியோரே ஆவர். இந்த குற்றத்தை கண்டுபிடித்தவரும் பிராமணர் வெள்ளாளரே ஆவர். கஜினி முகம்மது, மாலிகாபூர் போன்றோர்  பல கோவில்களை இடித்துபோட்டு பொன்னும் பொருளுமாய் கொள்ளையிட்டுச் சென்றனர். அதற்கு காரணம் அவர்களிடத்தில் உருவ வழிபாட்டு நம்பிக்கை இல்லை என்பதும், பிறமத அவமதிப்பு ஆகியனவே காரணம். ஆனால் சிவன் கோவிலில் ஊழியம் செய்து கொண்டு மோசடியிலும் களவிலும் ஈடுபடும் செயலும் இத்தகையதன்றோ என எண்ணத் தோன்றுகிறது, இதாவது சிவன்பால் நம்பிக்கை இன்மை என்பதே.  இது குறித்த சில கல்வெட்டுகள் அக்காலத்தே இருந்த சட்ட முறைமைகளை எடுத்துக் காட்டுகின்றன.

    இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  15 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதிவாரமும் பெ ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் உடையார் திருத்தளியாண்ட நாயினார் கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீகாரியஞ் / செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தானத்துக் கமைந்த தானத்தாரும் ஆக இவ்வனைவோமும் இக்கோயிற் /  கணக்கு ப்ரஹ்மப்ரியனுக்கும் இன்னாட்டு மட்டியூரான ந்ருபசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் வ / ழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே தானறிந்ததாக ஸிவத்ரோகமாக காணாமல் களவிலே ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து கற்தச்சன் அலைவாயுகந் / தானைக் கொண்டு தன்னுதென்று கல்வெட்டுவிக்கையில், இப்படி செய்த இந்த வெளிப்பட்டு ஸிவத்ரோகம் வெளிப்பட்டு அம்பலத்தாடுவோன் ஓடிப்போகையில் தட்டானை / யுங் கற்தச்சனையுங் கைக்கொண்டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து கண்மாளரும் இவர்களை அழியச் செய்து தானத்துக்கு பொருந்த ப்ராய / ச்சித்தம் பண்ணிவிடுகையாலும் இந்த ஸிவத்ரோகியான அம்பலத்தாடுவான் முன்னில்லாமல் ஓடிப்போகையாலும் கோயிற் கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் தேவர் விசையாலய தேவற்கு கற் / பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200 ஸ்ரீ பண்டாரத்துக்கு முதலாக பற்றின ஆடூர் பணம் 100 ஆக ஆடூர் பணம் 300. இப்பணம் முன்னூற்றுக்கும் கணகெழுதுத்துக் காணி / யாட்சியும் ஸுதந்த்யங்கள்  எப்பேற்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லவிற்று விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் உடையார் திருத்தளியாண்ட நாயினார் கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீ காரியஞ் செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தாநத்துக் கமைந்த / தாநத்தாரும் ஆக இவ்வோமும் ப்ரஹ்மப்ரியருக்கும் கரியமாணிக்காழ்வாநுக்கும் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும்.

    பூர்வபக்ஷம் – வளர்பிறை; ஸ்ரீ காரியம் – திருப்பணி; மாடாபத்தியம் – மடைபள்ளி நிர்வாகம்; தானத்துக் கமைந்த தானத்தார் – அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர்; பரிசாவது – விதம், எப்படி எனில்; முதலெழுத்தும் முதல் வழக்கமும் – தந்தை முகவரியும் முதல் மதிப்பும்; காணாமல் – கண்டுபிடிக்கமுடியாதவாறு; களவிலே – திருட்டுத்தனமாக; கைக்கொண்டு – பிடித்துவைத்து; காட்டிக் கொடுத்து – பிடித்துக் கொடுத்து.

    விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387, மார்ச்சு 28) வெட்டப்பட்ட கல்வெட்டு. இது விசயநகர ஆட்சிக்காலம்.

    கேரளசிங்க வளநாட்டில் பிரமதேயமான திருப்பத்தூர் திருத்தளியில் அமைந்த இறைவர் கோவிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்களும் மடைபள்ளி நிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவபிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக எல்லோரும் கூடி இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியனுக்கும், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்திற்கான காணியாட்சியை விலைப்பிரமாணம் செய்துகொடுத்தது எப்படி எனில் பிரம்மபிரியன் தனக்கு உதவியாக கணக்கு பணிக்கு அமர்த்திய கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு இக்கிராமத்தில் வீடும், இன்னார் மகன் என்ற முகவரியும், முதல் மதிப்பும் இல்லாத போதிலும் இவ்வாறு இருப்பதாக காட்டி வீடும், பிற சலுகைகளும் தனக்கு வர வேண்டி எவரும் கண்டு பிடிக்காதபடி திருட்டுத்தனமாக ஆயிரத்தெழுநூற்று தட்டானை கண்டு அவன் மூலம் கல்தச்சன் அலைவாயுகந்தானை ஏற்பாடு செய்து கொண்டு இந்த கிராமத்து வீடு தனதென்று கல்வெட்டிக் கொண்டான். இது ஒரு சிவத்துரோகம் ஆகும் என்கின்றது கல்வெட்டு. இப்படி மோசடி செய்த சிவத்துரோகச் செயல் வெளிப்பட்டு அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு எங்கோ ஓடிப்போய்விட  கோவிலார் தட்டானையும் கல்தச்சனையும் பிடித்து வைத்து கம்மாளரிடம் விசாரிப்பதற்கு ஒப்படைத்து விடுகின்றனர். கம்மாளர் இந்த இருவரையும் தக்கபடி அடித்து உதைத்து கோவிலுக்கு பொருத்தமான வகையில் கழுவாய் செய்ய வைத்து விடுகின்றனர். சிவத்துரோகி அம்பலத்தாடுவன் கண்ணில்படாவாறு எங்கோ ஓடிப்போனமையால் பிரம்மபிரியன் கோயில் கணக்கெழுதும் காணியாட்சியில் ஒருகாணியைப் இரு பாதியாகப் பிரித்து ஒரு பாதியை தான்  வைத்துக்கொண்டு அதற்கு விலை கொடுத்துவடுகின்றான் மற்றொரு பாதியை அம்பலத்தாடுவான் பங்காக கோயிலாரிடம்  ஒப்படைக்கின்றான்.அதை கோவில் நிர்வாகத்தார் ஊராருக்கு விற்றுவிடுகின்றனர். இப்படியாக 300 ஆடுர் பணம் விற்ற காசாக சேர்கின்றது. அதில் 200 ஆடூர் பணம் விசையாலைய தேவருக்கு கற்பூர முதலாக கொடுக்கப்பட்டது. எஞ்சிய100 ஆடூர் பணம் கோவில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிரம்மபிரியனுக்கு நிலமும் அதன் உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு கோவிலாரால் விற்றுஆவணம் செய்து தரப்பட்டது. திருத்தளி இறைவர் கோயில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்கள், மடநிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவப்பிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக இவரனைவரும் பிரம்மபிரியன், கரியமாணிக்காழ்வான்,  ஆயப்பிள்ளை ஆகிய இம்மூன்று கணக்கருக்கும் விலைப் பிரமாணம் செய்து கொடுக்கின்றனர் .

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 158-161, (A.R.No 126  of 1908)

    இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  19 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதி வாரமும் பெ ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் மூலவ[ரு]ஷ மஹாஸபையோம் நம்[மூர்]க்கணக்கு  மத்யஸ்தன் ப்ரஹ்மப்ரியனுக்கும் / இன்னாட்டு ப்ரஹ்மதேயம் மட்டியூரான நிர்ப்பசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து மத்யஸ்தன் சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானான மஹாஜன ப்ரியனுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் [ஆக] இவ்வனைவற்கும்  கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது நம்மூர்க்கண் கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் / வழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே ஸபை தனக்குக் கல்வெட்டிக்குடுத்ததாக அம்பலத்திலே ஸபையை /  அரியாமல் க்ராமத்ரோகமாகக் காணாமல் களவிலே நம்மூர் ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து இவனைக் கொண்டு திருக்கோட்டியூர் கல்தச்சன் / அலைவாயுகந்  தானை  அழைப்பித்து நங் க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல்  வழக்கமும் தன்னுதென்று களவிலே கல்வெட்டுவிக்கை / யில், இப்படி செய்த  க்ராமத்ரோகம் வெளிப்பட்டு இ[வ்வம்]பலத்தாடுவான் ஓடிப்போகையில் தட்டானைய்யும் [க]த்தச்சனையுங் கைக்கொண்  டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து இவர்க[ளை] _ _ _ _  றைக்கு கண்மாளர் அழியச் செய்து ஸபைக்குப் பொருந்த ப்ரா ச்சித்தம் பண் / ணிவிடுகையில் இந்த க்ராமத்ரோகம் செய்த அம்ப[லத்தா]டுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான்  முன்னில்லாமல் ஓடிப் / போகையில் நம்மூற்கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக் / கும் இவன் ஒற்றி விலை கொண்ட நிலக்காணியாட்சிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் இவன் ஒற்றி விலை கொண்ட காணியா / யாட்சியாய் பலற்கும் ஸபா விநியோகமாக விற்ற நிலத்துக்கு ஆடூர் பணம் 100 நீக்கி தேவர் விசையாலய தேவற்கு கற்பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200. / இப் பணம் இருநூற்றுக்கும் கணக்கெழுத்து காணியாட்சியும் ஸு[த]ந்த்யங்கள்  எப்பேர்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லக் கல்வெட்டிக் குடுத்தோம் / மூலபருஷ மஹாஸபையோம் இந்தக் கொள்கின்ற மு[றைக்]கும் நங்க்ராமத்தில்  ப்ரமப்ரியன் மனையை அடுத்த ஒருமனை சேர்ம்மா / னமாக அனுபவிப்பார்களாகவும் இப்படி சம்மதித் கணக்கெழுத்துக் காணியாட்சி விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் மூலபருஷ மஹா / ஸபையோம் ப்ரஹ்ம்ப்ரியனுக்கும் கரியமாணிக்காழ்வானுக்கும் ஆயப்பிள்ளைக்கும் அருளால் ஸபைக் கணக்கு மத்யஸ்தன் பெருமாண்டான் /  மயிலேறுவானான ப்ரஹ்மப்ரியன் எழுத்து.

    காணியாட்சி – நில உரிமை, மூலபருஷ மகாசபை – கோவில் நிர்வாக சபை,

    விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387 ல்) வெட்டப்பட்ட கல்வெட்டு.  மேற்கண்ட கல்வெட்டின் அதே செய்தியை கொண்டுள்ளது. ஆனால் இதில் சிவத்துரோகம் என்ற முறையில் அணுகாமல் கிராமத்துரோகம்ர ஊர்த்துரோகம் என்ற முறையில் அணுகி உள்ளனர். இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியன், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வான், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளை ஆக இம்மூவரும் இக்கல்வெட்டில் ஊர் மத்தியஸதராக அறியப்படுகின்றனர். அம்பலத்தாடுவான் தனக்கு ஊர்ச்சபை வீடு கொடுத்ததாக கல்வெட்டிக் கொள்கிறான். இந்த மோசடி அறியப்பட்டதும் அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு ஓடிப்போகின்றன். பிரம்மபிரியன் ஒரு காணி நிலத்தை பாதியாக பிரித்து தான் ஒரு பாதியை வைத்துக் கொண்டு எஞ்சிய பாதியை அம்பலத்தாடுவான் பங்காக அறிவிக்கிறான்.  அம்பலத்தாடுவானுடைய பறிமுதல் செய்த நிலத்தில் பாதியை வைத்துக் கொண்டு அதை பிரம்மபியனே விலைக்கு வாங்கிவிடுவதால் அதற்கு விற்று ஆவணமும் அடுத்த பாதி நிலத்தை பலருக்கும் விற்று அவற்றுக்கும் விற்று ஆவணம் கொடுத்தனர் கோவில் நிர்வாக சபையார். இக்கிராமத்து நிலத்தை வேறு எவரும் வெளியில் இருந்து வந்து வாங்கி பயிர் செய்யப்போவதில்லை. எனவே  உள்ளூரான் பிரம்மபிரியன் வாங்கியதில் தவறு ஏதும் இல்லை. அதே வேளையில் பிரம்மபிரியன் வீட்டிற்கு அடுத்துள்ள வீட்டை கணக்கர் மூவரும் சேர்ந்தே அனுபவிப்பதற்கான உரிமை ஆவணத்தையும் கோவில் நிர்வாக சபையார் கொடுக்கின்றனர். இந்த வீட்டையும் விலைக்குத் தானே விற்றிருக்க வேண்டும். ஏன் இந்த மூன்று கணக்கரும் காசில்லாமல் வீட்டை அனுபவிக்க கோவில் நிர்வாக சபையார் ஒப்புக் கொண்டனர் என்று புரியவில்லை.  இதைத் தான் தன்னதென்று அம்பலத்தாடுவான் கல்வெட்டிக் கொண்டானா? தெரியவில்லை.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 162-163.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்பெரும்பூதூர் வட்டம், குமட்டூர், 10 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்த்திசிரி திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரைகொண்ட பாண்டியன் முடிதலையுங் கொண்டருளிய சிரிகுலோத்துங்க சோழதேவருக்கு யாண்டு பதினாறாவது விக்கிரமசோழ வளநாட்டு இன்னம்பர்நாட்டு உடையார் சிரிவி_ _ _ _ கோயிலில் கும்பிட்டு இருக்கும் ஆண்டார்கள் பெரியதேவர் இராசாதிராச தேவர்க்கு யாண்டு ஏழாவது நாளிலே பழையனூருடையார் / பல்லவராயருக்கு உடையார் தேவதானமான கமுகுதிருநந்தவன மாத்தலாறு நூற்றுநால்பது கமுகாக்கி கல்வெட்டவேமும் விண்ணப்பஞ்செய்து பிரசாதம் செய்தருளிச் செய்யும்படி பெறவேணுமென்று அவரும் விண்ணப்பஞ் செய்தும் _ _ _ _  இருந்து வருகையாலும் திருக்கொடிக்கமுகும் தெண்டும் திறப்பிலே கைவிலைக் கொண்டு வெட்டிவந்து இப்படியாய் வருகிற / கமுகை இக்கோயில் மாடாபத்தியம் பழுவூர் ஆண்டான் பதிநாலாவதும் பதினைஞ்சாவதும் கமுகு தன்னகத்துக்கு வெட்டியும் காசுக்கு வெட்டி விற்றும் தன் சம்மந்திக்கு வெட்டிக்குடுத்தும் இப்படியாக அழித்து கமுகு மூவாயிரத்தி இருநூற்றுக்கும் பாக்கு முப்பத்திரண்டு நூறாயிரமும் பதினைந்தாவது _ _ _ _  நாற்பத்திராயிரத்தறநூற்று சின்னமும் மின்னிலே மேனோக்கிப் பாழாய்த் தேவர்கடமை இழந்து வருகையாலு மித்தேவருக்கு தானத்தாரும் / கும்பிட்டிருக்கும் ஆண்டார்களும் இருந்து முதலாய் சீபண்டாரத்து ஒடுக்கினகாசு முதலிடாதேயிவன் தான் கையுற்றக் காசு முப்பத்தினாயிரத்தி நானூறு மிவன் பேரவரியோலை ஏற்றத்தாலுமிவன் கல்லிமுக்கி வாங்கிய காசிலுமிவன் சிவநாமத்து வரிசைக்கு முதநிலத்தாலும் கமுகு கடைமையாலும் _ _ _ _  அஞ்சாவது ஆனிமாதத்தே திருக்காப்புக்கொண்டு கிடந்தவாறே ஆண்டார்கள் பழுவூருடையானை யழைத்து முறையாட்டம் கேட்க புக இவன் புழக்கடையே விழுந்து ஓடிப்போனவாறே யிவனகத்தை சோதிச்ச இடத்து நாற்பதில் கல  நெல்லும் கோயிற்குறியான திருப்பரிகலமும் கண்டு எடுக்கையாய் மற்றும் பல  சிவதுரோகம் முன்னாளிவன்  செய்கையாலும் இவன் வீட்டை இடித்து குலோத்துங்க சோழ வினாயகப்பிள்ளையாரை எழுந்தருளிவித்து இவனகத்தே கண்டு எடுக்காயாயிவனும் சிவதுரோகம் செய்கையாலும் சிரீபண்டாரத்து தன்கையுற்ற காசாலுமிப்பல / படியால் முதலாந காசிலி காசுக்கு திறப்பில் சிரீபராந்தக சதுர்வேதி மங்கலத்திலத்து இவன் தனக்கு கொண்ட காணியாக்கக் கொண்ட கமுகும் விளைநிலமும் திருநாமத்து சிரீபண்டாரத்து கொண்டகாசுக்கு சிரீவீரநாராயணர்க்கு விண்ணப்ப _ _ _ _ பிடாரி வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ கிழக்கடைய நிலம் ஒருமாவரைக்காணி நீக்கி தெற்கடையதிலம் ஒருமாவரைக்காணியில் தெற்கடைய நிலம்முக்காணியில் / கிழக்கடைய ஒரு பூ நிலம் காணி அரைக்காணியும் எட்டாங்கண்ணாற்று நாலஞ்சதிர நிலம் இரண்டுமாமுக்காணியும் கோதண்டராம வாய்க்காலில் _ _ _ _வடக்கடைய நிலம் நான்மாவரையில் கிழக்கடைய நிலம் ஒருமாவரையின் உத்தேசம் நீக்கி இதன்மேற்கு நிலம் முக்காணியில் இதன் கிழக்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகை நீக்கி இதன்மேற்கு கமுகு நிலம் காணிமுந்திரிகையும் இதன் தெற்கடைய  நிலம் நான்குமாவரையில் கிழக்கடைய நிலம் இரண்டுமாக்காணியில் தெற்கடைய நிலம் ஒரு மாவரைவரை_ _ _ _  நிலம் அரையான்த தேசம் நீக்கி / இதன் தெற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் முந்திரிகை கீழ்கால் நோக்கி மேற்கடைய நிலம் முந்திரிகை கீழ் முக்காலும் இதன் மேற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் தெற்கடைய நிலம் அரைக்காணி நீக்கி வடக்கு_ _ _ _ வதிக்கு மேற்கு வானவன்மாதேவி வாய்க்காலுக்கு வடக்கு நாலாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து தெற்கடை ய நிலம் நான்மாவரையில் / மேற்கடைய நிலம் முக்காணியில் வடமேற்கடைய நிலம் மாகாணி யிப்படியாக காசுக்குடலாக திருநாமத்துகாணியாக கூட்டினோம். இது பன்மாஹேஷ்வர ரக்ஷை.

    ஆண்டார்கள் – அடியார்கள்; கமுகு திருநந்தவனம் –பாக்குதோப்பு; முறையாட்டம்- கணக்கு.

    விளக்கம்: கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதினாறாவது ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1194ல்)  வெட்டப்பட்டது. இன்னம்பர் நாட்டில் இறைவனை கும்பிட்டு இருந்த அடியார்கள் இரண்டாம் இராசாதிராசனின் 7-ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ.1173 ல்) பழையனூர் பல்லவராயரிடம் வேந்தரின் தேவதானமாக 140 மரங்கள் கொண்ட பாக்குத் தோப்பை இறைவனுக்கு எழுதித்தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள். பல்வரையரும் இறைவனுக்கு பிரசாதம் செய்தருளும்படி பாக்குத் தோப்பை தேவதானமாக எழுதிக் கொடுத்தார். கோவில் மடைபள்ளி நிர்வாகி பாக்குத்தோப்பிற்கே சென்று விலை கொடுத்து பாக்கை வெட்டிவருகின்றான். இப்படி வரும் பாக்கை தன்வீட்டிற்கும் கொண்டு வந்து, பிறருக்கு காசிற்கு வெட்டி விற்றும், தன் சம்பந்திக்கு கொடுத்தும் அப்படியாக பச்சைப் பாக்கை  3200 காசிற்கும், 3200000 பாக்கை 42,600 காசிற்கும் விற்றதனல் கோவிலுக்கு முன்புவந்துகொண்டிருந்த நில வருவாய், பாக்கு வரி இழப்பு ஏற்பட்டது. பல்வரையரும், கோவில் பொறுப்பாளரும், இறைவனைத் தொழும் அடியார்களும் கொடுத்த காசை 30,400 இவன் கோவில் கருவூலத்தில் சேர்க்காமல் தானே கையாடல் செய்துகொண்டான். இதனால் சிவநாமத்து நில வருவாயும், பாக்கு வரியும் வராமல் போனது. ஆடிமாதத்தில் காப்புகட்டிய அடியார்கள் இந்த மடைபள்ளி நிர்வாகியை கணக்குதரும்படி கேட்டனர். அவன் தன் விட்டின் புழக்கடைவழியே ஊரைவிட்டு ஓடிப்போனான்.அவன் வீட்டை வந்து சோதித்தபோது 40 கல நெல்லும் கோயில் திருப்பரிகலமும் கண்டு எடுத்தனர். இன்னும் பல சிவதுரோகம் செய்திருந்ததினால் இவன் வீட்டை இடித்து பிள்ளையார் கோவில் கட்டினர். இவன் பாக்கு விற்ற காசில் ஊரில் பல்வேறு இடங்களில் வாங்கிப் போட்டிருந்த நிலங்கள் அத்தனையும் பறிமுதல் செய்து அவற்றை இறைவன் பெயருக்கு உரிமை ஆக்கினர். மடைபள்ளி நிர்வாகி பழுவூர் ஆண்டான் ஒரு பிராமணர் ஏனென்றால் மடைபள்ளியில் பிராமணரே பணியாற்றுவர்.

    பார்வை நூல்: தமிழ்க் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக் 292-293, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம். 0-9886769865

    Share
  • முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை

    முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    Liberty: The state of being free within society from oppressive, restrictions, imposed by authority on one’s way of life, behaviour, or political views, the power or scope to act as one pleases.

    மேற்கண்ட ஆங்கில விளக்கம் சுதந்திரம், தன்னுரிமை என்பதற்கு ஒருவர் வாழும் சமூகத்தில் ஒருவரது வாழ்வில், நடக்கையில், அரசியல் பார்வையில் அரசதிகாரத்தால் ஒடுக்குதல், கட்டுப்பாடுகள் ஆகியன திணிக்கப்படாத நிலை என்கின்றது. இன்னொரு விளக்கம் தான் விரும்பியவாறு செயற்படுதல் என்கின்றது.

    நமது தமிழ்நாட்டு வரலாற்றில் இத்தகு விளக்கத்தின் படியான தன்னுரிமைகள் எளிய பொதுமக்களுக்கு இருந்ததில்லை என்பதையே தமிழ்க் கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேற்கண்ட உரிமைகள் யாவும் வேந்தர், மன்னர், அரையர், கிழார், பெருஞ்செல்வ வணிகர் ஆகியோருக்கு மட்டுமே இருந்திருக்கும் போல் தெரிகின்றது. ஏனெனில், இப்படி இருந்ததால் தான் பின்னாளிலே அதை எளிய மக்களும் அனுபவிக்க உரிமை தரப்பட்டுள்ளது.  ஏன் இப்படி உரிமை பின்னாளிலே தரப்பட்டது என்றால் அது முன்னாளிலே வழக்கத்தில் இருந்திருக்கவில்லை, இதாவது சங்க காலத்திலே இருந்திருக்கவில்லை அதனால் அதன் தொடர்ச்சியாகவே இந்த உரிமைகள் அடுத்து வந்த இடைக்காலத்தில் மக்களுக்கு தரப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை நிலை.  ஆனால் பலரும் சங்க காலத்தை பற்றி ஆஹா! ஒஹோ என்று கூறி புலகாங்கிதம் அடைகின்றனர். இதை நாமே கல்வெட்டில் நேரில் படித்து அறிந்து கொண்டால் தான் இலக்கியங்களை விளக்கியோர் சொன்ன பொய்மைகள் உலகுக்கு தெளியத் தெரிய வரும். உண்மையில் கல்வெட்டுகள் இத்தகையோர் கற்பனை எழுத்திற்கும், பேச்சிற்கும் வாய்ப்பூட்டாகவும் கைப்பூட்டாகவும் அமைகின்றன. இந்தப் பதிவு கம்மாளர் பற்றியது என்பதால் அது தொடர்பாக மூன்று கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன மற்ற இரண்டு கல்வெட்டுகள் துணைச் சான்றுகள்.

    கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் பட்டீசுவரர் கோயில் தென் சுவர் 12 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மேல்
    2. கொண்டான்  தெந்கொங்கில் கண்மாளர்க்கு தங்க
    3. ளுக்கு பதினைஞ்சாவது ஆடிமாதம் முதல் னன்மைத் திந்மைக்
    4. கு இரட்டைச் சங்கும் ஊதிப் பேரிகை யுள்ளிட்டன கொட்டி
    5. வித்துக் கொள்ளவும் தாங்கள் புறப்படவேண்[டும்] இடங்க
    6. [ளு]க்கு  பாதரக்ஷை கோத்துக் [கொ]ள்ளவும் தங்கள்  வீ
    7. [டுக]ளுக்கு சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோம் [இ]ப்[ப]
    8. [டி]க்கு நம்மோலை பிடிபாடாக் கொண்டு ச[ந்த்ரா]தித்யவ
    9. ரை செல்வதாகத் [த]ங்களுக்கு வேண்டும் இடங்களி[லே]
    10. [க]ல்லிலும் செம்பிலும் வெட்[டிக் கொள்]க. இவை விழு
    11. ப்பாதராயந் எழுத்து. யாண்டு 15 ள் 129 . இவை(க்) கலி[ங்]
    12. கராயந் எழுத்து.

    நன்மை தின்மை – நல்லது கெட்டது ஆகிய நிகழ்விற்கு; பேரிகை – முரசு; சாந்து – சுண்ணாம்பு அடித்தல்; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines.

    விளக்கம்: விழுப்பாதராயனும் கலிங்கராயனும் கொங்கு சோழ வேந்தன் கோனேரின்மை கொண்டான் வீரராஜேந்திரனின் 15 –ம் ஆட்சிஆண்டு(1222), 129 -ம் நாளில் வேந்தன் சார்பாக அரசாணை ஓலை ஒன்றை வழங்குகின்றனர். அதில் தென்கொங்கில் வாழும் கம்மாளரான பதினெண் விஷயத்தார் ஆடிமாதம் 15-ம் நாள் முதல் தமது இல்லத்து எல்லா நல்லது கெட்டதுக்கும், இதாவது நிகழ்வுகளுக்கும் இரட்டை சங்கு ஊதவும் முரசு கொட்டிக் கொள்ளவும் ஆட்களை அமர்த்திக் கொள்ளலாம். அதோடு தாம் புறப்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு காலில் செருப்பு அணிந்து செல்லலாம். தமது வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொள்ளலாம் என்று இசைவு தந்ததாக சொல்கின்றார் வேந்தர். இந்த ஓலை ஆணையை வழிகாட்டுநெறியாகக் கொண்டு ஞாயிறும் நிலவும் நிலைக்கும் நாள் வரை நடத்திச் செல்லவேண்டும். இதைத் தாம் விரும்பும் இடங்களில் பாறையிலும் செப்பேட்டிலும் பொறித்துக் கொள்ள உரிமை தருகின்றான் வேந்தன். சுதந்திரம் என்பதன் மேற்கண்ட ஆங்கில விளக்கத்திற்கு தக்கபடி 13 ஆம் நூற்றாண்டிற்கு முன் பதினெண் விஷயத்தாரான கம்மாளருக்கு தன்னுரிமை இருந்ததில்லை என்று தெரிகின்றது.   ஏன் இப்படி? இராசராசன் இராசேந்திரன் ஆகியோரது சோழப் பேரரசு காலத்தில் அதற்கு அடங்கிய கொங்கு மண்டலத்தில் இந்த உரிமைகள் இல்லாதது சோழநாட்டிலும் கம்மாளருக்கு அத்தகைய உரிமைகள் இல்லாததால் அன்றோ? அதற்கு முந்தைய பல்லவப் பேரரசு காலத்திலும் இந்த கம்மாளருக்கு சுதந்திரம் இருந்ததில்லை என்று தெரிகின்றது. தொண்டை நாட்டு கம்மாளருக்கு அத்தகு சுதந்திரம் இருந்திருந்தால் கொங்கு நாட்டிலும் கம்மாளருக்கு முன்னமே இத்தகு சுதந்திரம் வந்திருக்கும். அப்படியானால் சங்க காலத்தில் அப்படி ஒரு சுதந்திரம் இருந்திருக்கவே முடியாது என்பதன்றோ முடிவு. இத்தனைக்கும் கம்மாளர்கள் நாகரிக சமுதாயத்தில் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள். அவர்களுக்கே இந்தநிலை என்றால் மற்றவர் நிலையும் இதே போன்றது தான் என்பது இரங்கத் தக்கதாக உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட வேளிரான பல்லவர், வாணர், நுளம்பர், அதியமான்கள் போன்றோர் வடக்கே இருந்து வந்தவர். வடக்கில் இத்தகு உரிமைகள் மக்களுக்கு இருந்திருந்தால் இங்கே தமிழ்நாட்டிலும் அத்தகு உரிமை முன்னரே வந்திருக்கும். அப்படி வடநாட்டில் உரிமைகள் மக்களுக்கு இருந்தது இல்லை என்பதை இது தெளிவாக்குகிறது. பிராமணர் நிலையும் இப்படித் தான் இருந்துள்ளது என்பதை அடுத்த கல்வெட்டு உணர்த்துகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 5, பக். 87, (A.R.No 562  of 1893)

     

    கோயம்புத்தூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோயில் முகமண்டப மேற்குச் சுவர் – வாயிலுக்குத் தெற்கு. 9 வரிக் கல்வெட்டு.

    1. வீரசோழனேன் எமக்குச் செல்லா நின்ற யாண்டு _ _ _ _ வடபரி
    2. சார நாட்டில் திருமுருகன்பூண்டி மகாதேவ
    3. சிவபிராமணன்  காசியபன் வெண்காடன், சிவ(ன்)
    4. கோயில் திருமடைவிளாகத்தில் இருக்
    5. கும் சிரி நிமந்தகாற்கும் குடுத்த  உரிமைகளாவன
    6. முற்றம் குதிரையும் பேரிகையும் செகண்டியும் கொட்டவும்
    7. இரண்டு நிலையும் இரட்டைத் தலைக் கடையும்
    8. கொள்ளப்  பெறுவார்களாகவும். இப்படி இவ்வரிசைகள்
    9. செம்பிலும் சிலையிலும் செய்யிது கொள்ளவும்
    10. குடுத்தோம்.

    திருமடைவிளாகம் – கோவிலைச் சூழ்ந்த தெரு; நிமந்தக்காரர் – செப்புத் திருமேனியை எழுந்தருளச் செய்ய சப்பரத்தில், வாகனத்தில் தண்டு கட்டுபவர், சாமி தூக்கும் பாதந் தாங்கியர்க்கு தலைவர்; செகண்டி –  ஒலி எழுப்புத்வெண்கலத் தட்டு; இரட்டை நிலை – இரண்டு நிலைவாயிற்படி; தலைக்கடை – இரட்டை பின்வாசல்

    விளக்கம்: கொங்கு வீரசோழனின் ஆட்சியில் (ஆண்டு சிதைந்துள்ளது943-1074 வரை மூன்று வீரசோழர் ஆண்டுள்ளனர்)  வடபரிசார நாட்டில் அமைந்த திருமுருகன்பூண்டி மகாதேவர் கோயில் சிவபிராமணன் காசியபன் வெண்காடன் மற்றும் அக்கோயிலை சூழ்ந்த இடத்தில் வாழும் சாமி தூக்கும் நிமந்தக்காரர் ஆகியோர் வீட்டிற்கு முற்றம் அமைத்துக் கட்டவும், குதிரை ஏறி ஊர்வலம் வரவும், நல்லது கெட்டதற்கு பேரிகையும் செகண்டியும் கொட்டவும், வீட்டிற்கு இரண்டு நிலை வாசலும், இரண்டு பின் வாசலும் வைத்துக் கட்ட வேந்தர் உரிமை தருகின்றார்.

    இதன் மூலம் இருவருக்கு மட்டும் இந்தச் சலுகை வழங்கப்படுகின்றது மற்ற பிராமணர்க்கு   இவ்வாறான உரிமை இல்லை என்பது தானே பொருள்.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள்; கோயம்பத்தூர் மாவட்டம், பக். 75, ஆசிரியர்:  மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    தென்ஆர்க்காடு மாவட்டம், விருத்தாசலம் வட்டம், திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் கருவறை முன் உள்ள மண்டபத்தின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. சு[ப]கிறி[து] ஆண்டு ஆடிமாதம் 20 – கு ஸ்ரீமது நாகம நாயக்கரய்யன் காரியத்துக்கு கடவர் வசியப்ப முத
    2. லியார் திட்டைகுடி தாநத்தாரும், இளமங்கலம் ஊரவர் வெள்ளாழரும் தந்[தி]ரிமாரும் ந
    3. த்தக்கேடு அடிக்கேட்டுக்காக சண்டையாய் யிரண்டு திறவரும் குடிப்போய் ஊரும்
    4. நாலாறு வருஷ(ம்)மாகப் பாழாயிருக்கையில் யிப்பொழுது வெள்ளாழர் தந்[தி]ரிமார் கா
    5. ணியாழ்ச்சி. பறையர் உள்பட நத்தக்கேடு அடிக்கேடு யிறுக்கடவராகவும் [யி]ந்த படிக்கு
    6. எழுதின கோயில் கணக்கு _ _ _ _  திரு[த்தாந்தோன்றி] பிரிய[னெ]ழுத்து.

    தானத்தார் – ஸ்தானத்தார், பொறுப்பாளர்; தந்திரிமார் – படைவீரரை கொண்ட சாதி ; நத்தக்கேடு – விளையாத தரிசுநில மாசு; அடிக்கேடு – தரிசுக்கு நிலத்திற்கு அண்மைநில மாசு; குடிப்போய் – ஊரைவிட்டுப் போய்; பாழ் – வெறிச்சோடிப்போய் இரு; காணியாழ்ச்சி – பரம்பரை நில உரிமை; இறுக்கக் கடவர் – தண்டம் அல்லது இழப்பீடு கட்டு.

    விளக்கம்: சுபகிறிது ஆண்டு (1542 / 1602 இல் ஏற்படுகின்றது) ஆடிமாதம்  20-ம் நாள் நாகமநாயக்கரின் செயல்களை ஆற்றும் வசியப்ப முதிலியார் இசைவுப்படி திட்டக்குடி வைத்தியநாதர் கோயில் பொறுப்பாளர்களும் இளமங்கலம் ஊராரும் வெள்ளாளரும் தந்திரிமாரும் இங்கத்து விளையாத தரிசு நிலமான நத்தம் கேடு அடைந்ததால் கோயில் பொறுப்பாளர்களுக்கும் இளமங்கல ஊராருக்கும் சண்டை ஏற்பட்டு ஊர் வெள்ளாளரும் தந்திரமாரான படைச் சாதியாரும் காலிசெய்து கொண்டு போனதால் 4-6 ஆண்டுகளாக ஊரே வெறிச்சோடிப் போனது. இப்பொழுது இளமங்கலத்தில் வெள்ளாளரும் படைச்சாதிமாரும் பரம்பரை நில உரிமையை காரணம் காட்டி குடிசை போட்டும், பறவை விலங்குகளின் புலாலுக்காக அவற்றின் இறகுகளை, தோலை உறித்து போட்டும் நத்தத்தில் மாசு ஏற்படுத்துபவர்கள், நத்தத்தை அண்மித்த நிலத்தில் மாசு ஏறபட்டுத்துபவர்களான பறையர் உள்ளிட்டோர் இனி அதற்கு இழப்பீடு கட்ட வேண்டும். இப்படிக்கு எழுதினேன் கோயில் கணக்கனான திருத்தான்தோன்றிப் பிரியன்.

    புதிதாக ஒரு உரிமையை ஆட்சியாளர் தரலாம் ஆனால் இருக்கின்ற உரிமையை அனுபவிக்க விடாமல் ஒரு குழு இன்னொரு குழுவைத் தடுத்தால் அதுவும் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும். இங்கே நத்தக்கேடு அடிநிலக்கேடு என்று காரணம் காட்டி வெள்ளாளரும் படைச்சாதியாரும் பறையர் உள்ளிட்டாரின் உரிமையை தடுத்தனாரா? அல்லது பறையர் உள்ளிட்டோர் வெள்ளாளர் தந்திரிமாரின் உரிமையை தடுத்தனரா? யார் மீது குற்றம் என்ற தடுமாற்றம் ஏற்படும். ஆனால் காணியாட்சி பெற்றவருக்கே நத்தம், அடிநிலப் பயன்பாட்டு உரிமை என்று நிலைநாட்டுகின்றனர். அதற்காக பறையர் உள்ளிட்டாருக்கு தண்டம் அல்லது இழப்பீடு விதிக்கப்படுகின்றது. இதனால் ஏழைகளான அவர்கள் அந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போய்விடுவரன்றோ?

    மூன்று ஆண்டுகள் முன் மடலாடற் குழு ஒன்றில் முடியாட்சியில் விளைநிலங்கள் மட்டுமல்லாது ஆறு, ஏரி, குளம், காடு, நத்தம் ஆகியன கூட தனியாருக்குச் சொந்தமாக இருந்தன. அதனால் குடிசை போட வேண்டும் என்றாலும் உரியவரிடம் அனுமதி பெற்றால்தான் குடிசைகூட போட முடியும் என்றேன். இதை அறிஞர் திரு. கௌதம் சன்னா மறுத்து நத்தம் புறம்போக்கில் குடிசை போடலாம் என்றார். அப்பொழுது என்னால் இந்தக் கல்வெட்டை அவருக்கு சான்றாகக் காட்ட முடியவில்லை. இப்பொழுது இயன்றது. முடியாட்சி என்பது ஒருவரது செயல்களை வரையறை செய்வதாகவே அந்நாளிலே இருந்துள்ளது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 8, பக். 150, (A.R.No 6  of 1903)

    மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பொய்கைக்கரைப்பட்டி ஊருக்குக் கிழக்கே உள்ள தோட்டத்தில் தனிக் கல்லில் பொறித்த 51 வரிக் கல்வெட்டு.

    ஸ தது ஸகல நிர்மாண / கரணாம் விஸ்வகர்மணாம் / ஸாஸநரேத காராணா / ம் ஸேஷபுவ நாந்திதம் / மப ஜீவநகர்த்யணாம் ஸ / மஸ்தபுரவாஸிநாம் அ / க்ஷ ஜாத ஜநாநாந்து  ஸ / த்யமேவாதி தைவதம் / விஸ்வகர்ம்மா ஜகந்மாதா / விஸ்வகர்மா ஜகது புரு வி / ஸ்வே ச விஸ்வகர்ம்மாணம் / விஸ்வகம்மணுர வாஸதே / இப்படி யுபஸியா நின்ற / ஸ்ரீ பாண்டி மண்டலத்து  / மாடக்குளக் கீழ் மாடமது / ரை மங்கலவாசல் சேரியில் மூன் / று வினைப் பள்ளி அறுவகைத் / தொழில் நால்வகை இர[த]கா / ரோமும் உலகுடைய நாயனார்  / உடன் கூட்டத்து மூன்றுவினைப் / பள்ளி யறுவகைத் தொ / ழில் நால்வகை யிரதகார  ரோமும் சமைய சங்கேதி / களோமும் கீழையிரணிய / முட்ட நாட்டுத் திருமாலிருஞ்சோலை / நின்றருளிய பரமஸ்வாமிகள் திரு / ப்பதி ஸ்ரீயான பவித்ர மாணிக்க பு / ரத்து மூன்று வினைப் பள்ளி அறு / வகைத் தொழில் நால்வகை / யிரதகாரோம் குறைவறக் கூ / டி நிறைந்து செய்த சமையகா / ரியமாவது இத்திருப்பதியில் தா / த நம்பிமாரில் திருவாய்கு / ல முடையான் திருமலை ஆழ்வா  / ர் சாதிக்குப் பல  நன்மைகள் / செய்கையாலிவற்கு பெரு / மாள் குலஸேகர தேவற்கு மு / ப்பத்தொன்பதாவது நாள் / லிலே எங்கள் சமைய வரி / சையுங் குடுத்து முழுதும் / தலத்தார் இடை எங்கள் பேரும் / குடுத்து நாங்களிவர்க்கு பண் / ணி குடுத்த சமைய சாதன / படியுள்ளவை அனைத்  / தும் பெற்று மேலும் எங்கள் / சாதிக்கு வேண்டும் நன்மை / செய்து போதுவதாக இ / வர் வாசலிலே வரி[ச] / ட்டம் [பூமி] தோரணமு _ _ _ / ம் ஆக குடுத்தோம் பதிணென் / விக்ஷையத்து _ _ _ _

    வினைப்பள்ளி – school of art, பாணி; இரதகாரர் – தேர் செதுக்குவோர்; சமைய சங்கேதிகளோம் – மத தொடர்பான கூட்டம் கூட்டி செய்தியைப் பரப்புவோர்;

    விளக்கம்: பிற்காலப் பாண்டியரில் குலசேகரனின் 39 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1307) வெட்டப்பட்ட கம்மாளப் பிரிவில் அடங்கும் ரதகாரரான தேர் செதுக்குவோர் பற்றிய கல்வெட்டு இது. முதல் பன்னிரெண்டு வரிகள் சமஸ்கிருத மொழியில் அமைந்த ரதகாரர்களின் மெய்கீர்த்தி ஆகும். தமிழில் சமஸ்கிருதம் கலந்தோரில் பிராமணரல்லாத பிரிவைச் சேர்ந்தவர்களில் இவர்கள் குறிப்பிடத்த்தக்கவர் என்பதை உணரமுடிகின்றது. இந்த தேர் செதுக்கும் ரதகாரரில் மூன்று பாணியில் ஆறுவகைத் தொழிலாற்றும் நாலு வகையான தேர் செதுக்குவோர் என்பது முற்றிலும் அரிய செய்தி ஆகும்.

    பாண்டி மண்டலத்தில் கிழக்குமாட மதுரை மங்கலவாசல் சேரியில் வாழும் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும்  நால்வகை  தேர் செய்வோர்  உலகுடை நாயனார் உடன் வந்த  மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும்  நால்வகை  தேர் செய்வோரும் மதத் தொடர்பான கூட்டம் கூட்டி செய்தியைப் பரப்புவோரும்  இணைந்து கிழக்கு இரணிய முட்ட நாடான திருமாலிருஞ்சோலையில் தங்கி தெய்வீகப் பணிகள் ஆற்றி வரும் பரமசுவாமிகளும் பவித்ர மாணிக்கபுரத்து மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும்  நால்வகை  தேர் செய்வோருடன்  கூடிச்செய்த சமயப்பணி

    யாதெனில் திருமாலிருஞ்சோலை தாத பிராமணரில் திருவாய்க்குலமுடையான் என்பான் திருமலை ஆழ்வார் சாதிக்கு நன்மைகள் பல செய்ததால் இவருக்கு ரதகாரரின் மத மதிப்பை அளித்து சிறப்பு செய்தனர்.

    இக்கல்வெட்டின் மூலம் ஆறு தொழில் செய்கின்ற  நால் வகை தேர் செதுக்கும் தேரோரை அறிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டு தீவிர சிந்தனைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. அது யாதெனில் பொது மக்கள் யாரும் தேரைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற நிலையில் இவர்கள் செய்த தேர் கோவிலுக்கும்  நாற்படைகளில் ஒன்றான தேர்ப் படைக்கும் தான் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. இப்படியாகப் போர்க் கருவிகளை உருவாக்குதற்கு இவர்கள் பணி முழுக்க முழுக்க அரசாள்பவருக்குத் தான் பயன்பட்டுள்ளது. இவ்வாறு கைத்திற மிக்க ( artisans and craftsman) பல ஆயிரம் பேரை அரசாள்பவர் தமக்காக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இந்த கம்மாளர் ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் நால்வருணத்தில் வைசியர் என்ற பிரிவில் அடங்குகின்றனர். அதேபோல கோட்டை, கொத்தளம் போன்ற  கட்டுமானப் பணிகளுக்காக நான்காம் நிலை உழைப்பாளிகளை அரசாள்பவர் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இரண்டாம் நிலையில் சேர்க்கப்பட்டுள்ள போர்க்குணமிக்கோரை  படைப்பிரிவில் ஊர்க்காவல் பிரிவில் சேர்த்து விட்டனர். முதல்நிலையில் உள்ள அறிவுத்திற மக்களை  ராஜ்ய பரிபாலனம் என்ற நாடாட்சியிலும் தர்மபரிபாலனம் என்ற அற வளர்ச்சியிலும் ஈடுபடுத்தினர். மக்களைத் தன்  பணிக்கு அமர்த்திக் கொள்ளும் ஆட்சியாளனுக்கு தான் வருணாசிரமம் தேவை. ஏனென்றால் மக்களின் மனஈடுபாடு எப்படியோ அதன்படி அவர்களைத்  தன்  பணியில் ஈடுபடுத்திக்கொண்டான் அரசாள்பவன். மக்களைப் பெருந்திரளாக வேறு யாருமே இப்படி தம் பணிக்கு ஈடுபடுத்திக்கொண்டது இல்லை.  15% மக்கள் வாழ்க்கை அரசாள்பவனின் செலவை நம்பித் தான் நடந்தது. அந்த வகையில் பிராமணர், வைசியரை விட இந்த வருணாசிரமம் அரசாள்பவருக்குத் தான் அதிகம் தேவைப்பட்டது, பயன்பட்டது. ஆதலால் வருணாசிரமத்தை ஆட்சியாளர்கள் தாம் உருவாகிக் கொண்டார்கள். இது காலப்போக்கில் வெவ்வேறு வடிவு கொண்டது என்பதே உண்மை. இதை புரிந்து கொள்ளாத மக்கள்தாம் கடந்த 130 ஆண்டுகளாக மனுதர்மம், வருணாசிரமம் என்று  சர்ச்சையை கிளப்புகிறார்கள்.   மதத்தையும் பிராமணரையும் பொருத்தமின்றி சாடுகிறார்கள். முதற் கல்வெட்டுப்படி 13 –ம் நூற்றாண்டில் தான் தென்கொங்கில் செருப்பு அணிய கம்மாளருக்கே உரிமை தரப்பட்டது. அதே நேரம் பிராமணர் தோல் செருப்பு அணியாமல் கட்டைசெருப்பை அணிந்தனர் என்றால் செருப்பு தைக்கும் சக்கிலியர் சாதி யாருக்காக? யாரால்? உருவாக்கப்பட்டது என்ற கேள்விக்கு அரசாள்பவர் உற்றார், உறவு குடும்பங்களுக்கு தான் என்ற விடை தானே மேலெழுகின்றது. ஆக சாதி உருவாக்கத்திற்கும் வருணாசிரம உருவாக்கத்திற்கும்  அரசாள்பவர் தான் காரணம் என்று படுகின்றது.

    பார்வை நூல்: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 206 – 208. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

     

    பெரியகுளம் வட்டம் சின்னமனூர் இராசிம்மேஸ்வரர் கோவில் கருவறை வடக்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ தி[ருவாய்க்கேழ்]விக்கு மேல் ஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவத்திக
    2. ள் யெம்மண்டலமு[ங்]  கொண்டருளிய ஸ்ரீ குலஜேகர தேவற்கு யாண்டு 41 வது ஆனி மாத 14 தியதி பூர்வபக்ஷத்து ப்ரதமையும் புணர்
    3. பூசமும் பெற்ற திங்கள் கிழமை நாள் அளநாட்டு அரிகேசரி நல்லூர் உடையார் திருப்பூலாந்துறை (உறை) உடையாரான ராஜஸிம்ஹசோள ஈஸுரமுடையா
    4. ற்கு நாலுநகரம் பதினெண் வி[ஷய]த்தோமும் பதினெட்டிராச்சியத்திற் பதினெண் விஷயத்தோமும் தரகரோ[மு]ம் நாட்டுச் செட்டிகளோமும் தளச்செட்டிகளோமும்
    5. உடையார் விக்ரமபாண்டீஸ்வரமுடைய நாயனார் திரும_ _ _தில் நிறைவற நிறைந்து _ _ _ _ நிச்சயித்த காரியமாவதுஉடையார் திருப்பூலாந்து
    6. றையுடைய நாயனார் _ _ _ _ _ _  த்த பட்டின பகிதியாவது

    விளக்கம்: பிற்காலப் பாண்டியரில் குலசேகரனின் 41 வது ஆட்சி ஆண்டில் (1309) ஆனி 14 ம் தாள் புணர்பூச நட்சத்திரம் கூடிய திங்கள் கிழமையான வளர்பிறையில் அளநாட்டு அரிகேசரி நல்லூர் திருப்பூலாந்தறை இராசசிம்ம சோளீசுரருக்கு நாலுநகரத்தை சேர்ந்த பதினெண் விஷயத்தாரும், தரகரும், நாட்டுச் செட்டிகளும், தளச் செட்டிகளும் விக்ரமபாண்டிசுரமுடைய இறைவர் கோவிலில் நிறைந்து கூடி திருப்பூலாந்துறை இறைவனுக்கு செய்ய வேண்டியது பற்றி பேசினர். கல்வெட்டு அரைகுறையாக இத்தோடு நிறுத்தப்பட்டு விட்டது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 23, பக். 328 (A.R. No 431 of 1907)

    Share
  • பட்லூர் வாகீசுவரர் கோயில் – அனுலோம பாரசிவர் பற்றிய கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பட்லூர் வாகீசுவரர் கோயில்

    அனுலோமர், பிரதிலோமர் எனக் கலப்பினச் சாதி மக்கள் இரண்டு பெரும் பிரிவினராக முறைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு மனு தர்மம் சான்றாகக் காட்டப்படுகின்றது. அனுலோமர், உயர்சாதி தந்தைக்கும் தாழ்ந்த சாதி அன்னைக்கும் பிறந்தவர். இதாவது சத்திரிய உயர்சாதி ஆணுக்கும் வைசிய குல தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர், அனுலோமர் எனப்பட்டனர்.  கராணி என்போர் வைசிய தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர். இது தந்தை வழிமுறை பிறங்கடையை அடையாளப்படுத்தி சொல்லப்படுகின்றது. தமிழ்க் கல்வெட்டுகளில் அனுலோமர் பாரசிவர், பஞ்ச கம்மாளர்கள், பதினெண் விஷயத்தார்கள் என்ற வாணிகக் குழுவில் உள்ள பலர், வணிகர்களாக அறியப்படுகின்றனர். பொற்கொல்லர் என்பாரும் இதில் ஒருவர்.

    அனுலோமர், பிரதிலோமர் என்ற வரைவிலக்கணப்படி தான் (definition) இச்சாதிகளில் உள்ள எல்லா ஆடவருடைய பெண்டிருடைய தாயும் தந்தையும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களா? என்றால் தெளிவான விடை இல்லை. இதாவது, ஒரு சாதியின் கலப்பு முன்னோர் என்றோ, எப்போதோ, ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நாட்டின் ஒரு மூலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறு சேர்ந்த கலப்புச் சாதியர் தானே ஒழிய, ஒவ்வொரு தலைமுறையின் தாயும் தந்தையும் கலப்புச் சாதியர் அல்லர் என்ற புரிதல் ஏற்பட்ட மாத்திரத்திலேயே இதன் பொருள் குளறுபடி எல்லோராலும் உணர முடிகின்றது. அவ்வகையில் அனுலோமர் பிரதிலோமர் என்போர் கலப்புச் சாதியார் அல்லர் என்பதே உண்மை.

    இதை எல்லாம் சாஸ்திரத்தில் மட்டுமே படித்து அறிந்திருந்த ஒரு சில முட்டாள் பிராமணர்கள், கல்வெட்டுகளில் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறித்துவிட்டனர். இவ்வாறு கல்வெட்டில் அனுலோமராக, பிரதிலோமராகக் குறிக்கப்பட்ட இச்சாதி மக்களுக்கு தாம் அவ்வாறான கலப்புச் சாதியர் என்பதே தெரியாது. தெரிந்திருந்தால் அதை ஏற்றிருக்க மாட்டார்கள், எதிர்த்திருப்பார்கள் என்பது தான் உண்மைக்கும் உண்மை. ஏனென்றால் அவர் தம் பெற்றோர் எல்லோரது பெற்றோரையும் போல ஒரே தொழிலைச் செய்கின்ற ஒரே சாதி மக்கள் தாம், கலப்புச் சாதியர் அல்லர்.

    ஆனால் இக்காலத்தே வரலாறு எழுதும் தொல்லியல் வல்லுநர்கள் பலர்,  இந்த உண்மையைச் சற்றும் எண்ணிப் பாராமல், கல்வெட்டில் தவறாகக் குறித்த பிராமணர்களைப் போல, இவர்களும் இதற்கு மதிப்பு (weightage) கொடுத்து சோழர் ஆட்சிக் காலத்தே வர்ண ஏற்றத் தாழ்வு, சாதி வேறுபாட்டுக் கொடுமை தலைவிரித்தாடியது, ஆதலால் சோழ ஆட்சி கேடுகெட்ட ஆட்சி என்று மதிப்பளிக்கின்றனர். இது இவர்கள் எந்த அளவிற்கு முட்டாள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடுகின்றது.

    உண்மையில், ஊருக்கு ஊர் இடம் பெயருகின்ற ஆண்களில், குறிப்பாக, சத்திரியர், வணிகர் என்போர், மனக்கட்டுப்பாடு இல்லாமல் வேற்று சாதிப் பெண்கள் மூலம் கலப்புப் பிள்ளைகளுக்கு வழிகோலினர். அப்பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும் பிழைப்பிற்கு ஏதோ ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகின்றது. அந்நாளில் இந்நாளைப் போல் விரும்பிய தொழிலை ஒருவர் ஏற்றுச் செய்ய முடியாது. அத்தொழிலை ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் சாதி மக்கள் அதை எதிர்ப்பார்கள். இதைக் குற்றம் என்று மன்னனிடம் முறையிடுவார்கள். அப்படி ஒரு சூழல் வரும் போது மன்னன் புதிய கலப்பு சாதிக்கு ஒரு பெயரை வழங்கி ஏற்பிசைவு (recognize) தந்து பிழைப்பதற்கு இன்னின்ன தொழிலை மேற்கொள்ளலாம் என்ற உரிமையையும் தந்து பிணக்கைத் தீர்த்து வைக்கிறான்.

    இப்படித் தான் சாதிகளை மக்கள் உருவாக்கி விடுகிறார்கள் அதற்கு மன்னன் ஏற்பிசைவு மட்டும்தான் தருகிறான்.  மன்னன் வேண்டும் என்று எந்த ஒரு சாதியையும் உருவாக்குவதில்லை. ஆனால் வரலாறு எழுதுவோர், பழிபோடுவது என்னவோ மன்னன் மீது அல்லது பிராமணர் மீது தான். தமிழ்நாட்டில் தமிழ்ச் சமூகத்தில் வர்ணக் கோட்பாடு, மனு தர்மக் கோட்பாடு கல்வெட்டளவில் தான் இருந்தது. பலரும் உரைப்பது போல அது சமூகப் பிரச்சனையாக தலைவிரித்தாடியது இல்லை.

    பாரசிவர் என்பவர் பிராமணத் தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் என்ற சாஸ்திரக் கூற்றின் படி அனுலோமப் பிரிவில் வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டுக் கோவில்களில் அம்மனுக்குப் பூசனை ஆற்றிய உவச்சர் மரபினர் ஆவர். இவர்கள் பல கோவில்களில் பிராமணருடன் பிராமணரல்லாத பூசகராக, காணி உரிமையோடு பணி புரிந்தது கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளது. ஈங்கு  நாலு கல்வெட்டில் அவர் பற்றிய குறிப்பு கீழே. 

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் கருவறை தென்மேற்கு ஜகதி கல்வெட்டு:

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ வீரராசேந்திர தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதற்கெதிர் ஒன்பதாவது வ
    2. டகரை நாட்டு பட்டில் ஊரும் ஊராளிகளோம் எங்களூர் இந்நாயனார் வாகீஸ்வரமுடையாற்கு னாங்கள் ஏரி இட்டுக் குடத்தபடியாவ
    3. து பசுங்கண்ணித் தாழையோமுற்று இதில் நீர் பாஞ்ச நிலங்கண்டிட மெல்லாம் இறையின்றி ஏகபோகமாக இட்டு
    4. குடுத்தோம் வாகீசுரமுடையாற்கு. இக்கோயில் காணியுடைய பிராமணரில் பாலாசிரிய கோத்திரத்து பொ[ல்]லாத பிள்ளை ம
    5. கன் மாதேவ பட்டனும் இக்கோயிற் காணி உடைய உகச்சரில் பாரேசிவரில் பூமந்வந்நியான வீரபத்திர சக்கரவத்திய் இக்குளம்
    6. உழுது மூன்றிலொன்று னாயநாற்கு குடுப்பார்களாகவும் இவ்வேரியைக் கோயிற்றமந்னாதல் ஊராராதல் மாற்றுவாந் யாதொ
    7. ருவன் வழியேச்சமறுவாந். இது பன்மாஹேஸ்வர ரட்சை.

    ஊரும் – ஊரில் வாழ்வோர்; ஊராளிகளும் – ஊரைச் சேர்ந்த வெளியிடத்தில் வாழ்பவர்; ஏகபோகமாக – முழுஉரிமையாக; கோயில்காணி உடைய பிராமணர் – official priest; உவச்சர் – காளி, துர்க்கை பூசகர்; ஏரி – குளம்; கோயிற்றமன் – கோயில் பணி நிகழ்த்தும் பூசகர் மேற்பார்வை; ஊராராதல் – ஊரார் மேற்பார்வை; மாற்றுவான் – தனக்கு உரிமை மாற்றுவான்; ஏழு அச்சம் அறுவான் – ஏழுதலைமுறை இல்லாது ஒழிவான்; மாகேசுவரரர் – சிவனடியார்.

    விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 29+9 =38ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1244) போது வடகரைநாட்டில் அடங்கிய பட்டில் ஊரான இன்றைய பட்லூர் ஊரைச் சேர்ந்தவர்களும் அதில் வாழ்வோரும் சேர்ந்து தமது ஊர் இறைவரான வாகீசுவரருக்கு ஏரி ஒன்றைக் கட்டிக் கொடுத்தனர். அதற்குப் பசுங் கண்ணித்தாழை முற்று எனப் பெயரிட்டனர். இந்த ஏரியையும் அதன் நீர் பாயும் நிலத்தையும் வரியின்றி முழு உரிமையாக வாகீசுவர கோயில் இறைவர்க்கு கொடுத்தனர். இக்கோயில் காணியுடைய பிராமணர் பாலாசிரிய கோத்திரத்தில் பிறந்த பொல்லாப்பிள்ளையின் மகன் மாதேவ பட்டன், அதேபோல இக்கோயில் காணி கொண்ட அம்மன் கோயில் உவச்சன் ஆன பாரசிவரில் பூமன் வந்நியான வீரபத்திர சக்கரவர்த்தி ஆகிய இருவரும் இக்குளத்தின் நீரைக் கொண்டு உழுவித்து அதில் விளையும் பயிரில் மூன்றில் ஒன்றை இக் கோயில் இறைவனுக்கு கொடுக்க வேண்டும். இவ் ஏரி கோயில் மேறபார்வையில், ஊரார் மேற்பார்வையில்  இருப்பதைத் தடுத்துத் தம் சொந்த நலனுக்கு மாற்றிக் கொள்பவன் குலம் ஏழு தலைமுறைக்கு இல்லாததாகிப் போகும். சிவனடியார் இதை முறைமையைக் காக்க வேண்டும்.

    பொதுவாக, கோயிலுக்கு நிலம், விலங்கு, பொன் ஆகிவற்றைத் தான் கொடையாகத் தருவார்கள். அதைத் தவிர்த்து இந்த ஊர் மக்கள் நீர்ப் பாசனத்திற்கு வேண்டி ஏரி அமைத்துக் கொடுத்து உள்ளனர். நீரை எந்த நிலத்தில் பாய்ச்சிப் பயிர் செய்வது என்பதைக் குறிக்காமல் 3இல் 1 பங்கு விளைச்சலை மட்டும் இறைவனுக்குத் தப்பாமல் கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்கு இடம் அளிக்கின்றது.

    பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.192

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் தெற்கு கிழக்கு  பட்டிகைக் கல்வெட்டு:

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலம் சிறக்க கோவிராஜகேசரி பந்மராநத் திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீர ராசேந்திர தேவர்க்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு 201 (21) எதிர் பத்தாவது ஆநிமாஸ முதலாக வடகரை பட்டில்லூராளிகளும் நடுவில் நித்யகண்ட சக்கரவத்திகளும் தேவர்க்கும் எம்மிலி _ _ _
    2. _ _ _ யாவது மேக்கடுக்கு கல்லுக்கு மறைக்கும் கிழக்கு  பிடாரியார் தேவதானத்துக்கு மேற்கும் தெற்கு இட்டேறிக்கு வடக்கும் இவ்வெல்லைக்குட்பட்ட நிலமும் இந்நாயனாற்கு பூசிக்கும் நம்பிமார் பட்டில் காணியாளருக்கும் மாணபோகத்துக்கும் பட்டில் காணியாள உவச்சரில் பாரேசிவர் பூமந் வந்நியாந வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோகம் _ _ _ மேற்கு பிடாரியார் தேவதானத்துக்கு கிழக்கும் கிழக்கு இட்ட கல்லுக்கு மேற்கும் தெற்கு ஒழுகு கல்லிச்சிறு பொழிக்கு வடக்கும் _ _ _

    திருவெழுத்திட்டு – முடிசூடி; செல்லா நின்ற – நடப்பாண்டு, current year; திருநல்லி யாண்டு – ஆட்சி ஆண்டு; எதிர் – வருகின்ற, வந்த; நடுவில் – சூழ அமர்ந்து; பிடாரி – காளி, துர்க்கை போன்ற அம்மன்; இட்டேறி – வயல்கள் நடுவே செல்லும் வரப்புப் பாதை; நம்பிமார் – பிராமணர்; மாணபோகம் – மழைநம்பி பயிரிடுதல் அல்லது சாய்நிலத்தில் பயிரிடுதல் ; ஒழுகு – பாயும்

    விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 21+10 = 31 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1237) ஆனி மாதம் முதலே பட்டில் ஊரைச் சேர்ந்தவர்களும் அவர்க்கு நடுவே நித்யகண்ட சக்கரவர்த்தியும் கொலுவிருக்க, தம்மால் இயன்ற கொடையான மேற்கில் அடுக்கிய கல்லுக்கு மறையிலும் கிழக்கில் பிடாரி  கோயில் தேவதானமும் தென்மேற்கில் இட்டேறிக்கு வடக்கும் என உள்ள நிலத்தை இக்கோயில் இறைவர்க்கு பூசனை ஆற்றும் பிராமணர்க்கு பட்டில் நிலமாகவும், மாணபோகமுள்ள பட்டில் நிலம் உள்ள இடத்தில் பாரசிவரான பூமன் வந்நியான  வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோக நிலமும் தந்தனர். அந்நிலம் பிடாரி கோயிலுக்கு கிழக்கும், தெற்கே ஓடும் கல்லிச்சிறு குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது என்று நில எல்லைகளை குறித்து உள்ளனர். மேலே உள்ள முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்ட பாரசிவ உவச்சரும் இவரே.

    பண்டு பரவலாக கோயில்களில் பிராமணப் பூசகரோடு பிராமணரல்லா பாரசிவ பூசகரும் பணியாற்றி உள்ளனர் எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.190.

    கோயம்பத்தூர் மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் இடத்தில் அமைந்த மன்னீசர் கோவில் கல்வெட்டு:

    1. _ _ _ _ ம
    2. ண்டல முதலி துறையூரில் உவச்சக்காணியுடைய பராசிவன்
    3. வாச்சிய மாராயனுக்கு அந்நாள் வதிமுகம் கொடுத்து இவன் ஆளுடையார்
    4. திருமுருகன் பூண்டி நாயனார் கோயிலுக்கும் ஆளுடையார் _ _ _ _
    5. களில் உள்ள உவச்சக் காணிகளுக்கும் இக்கோயில்களில்
    6. கோயிற் காணிகளும் இவர்களுக்கு காணியாக கொடுத்தோம் சோழகுல மாணிக்க _ _ _

    வதிமுகம் – தங்க இடம் கொடுத்து உவச்சர் காணி – அம்மன்கோயில் பூசகருக்கு ஒதுக்கிய நிலம்

    விளக்கம்: 13 ஆம் நூற்றாண்டின் இக்கல்வெட்டில் வேந்தன் பெயரும், ஆட்சி ஆண்டும் குறிக்கப்படவில்லை. மண்டலமுதலி துறையூரில் உவச்சருக்கான காணியை உடைய பாரசிவன் வாச்சிய மாராயனுக்கு முன்னாளிலே தங்கு இடம் கொடுத்து இவன் தெய்வமான திருமுருகன் பூண்டி இறைவர் கோயிலுக்கும் கல்வெட்டில் சிதைந்துள்ள கோயில்களில் உள்ள உவச்சருக்கான காணிகளுக்கும் மற்றும் இக்கோயில்களின் காணிகளுக்கும் (வரிவிலக்கு தந்து) அவற்றை இவனுக்குக் காணியாக கொடுத்தேன் என்று சோழகுல மாணிக்கம் என்ற அரையன் தெரிவிக்கிறான்.

    பார்வை நூல்:  கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக். 82

    எளவானரைசூர் கோவில் கல்வெட்டு , திருக்கோவிலூர் வட்டம்:

    1. ஸ்வஸ்த்திசிரி கோச்சடைய பன்மாரான திரிபுவனச் சக்கரவத்திகள் சிரிசுந்தர பாண்டிய தேவற்கு
    2. யாண்டு 13- ஆவது எதிர் மூன்றாவது உடையார் ஊர்பாகங்கொண்டருளிய நாயனார்
    3. கோயில் தானத்தாரோம் இக்கோயில் பாரசிவற்கு விவாஸ்தாபத்திரம் பண்ணிக் குடுத்த பரிசாவது
    4. நலங்கிங்குகளுக்கு அனுதரிக்கும் இடத்து பாண்டி மண்டலம்,
    5. சோழ மண்டலம், மகத மண்டலம் இம்மண்டல்களிலும் பலதிருப்பதிகளில் செய்தபடியும் நடுவில்மண்டலத்தில் திருமுதுகுன்றமும்
    6. திருவாமாத்தூரும் திருவதிகை திருவெண்ணைநல்லூர் செய்த மரியாதை செய்யக்கடவராகவும்
    7. இப்படி செய்தோமாகில் சிவத்துரோகிகளும் இராசத்துரோகிகளுமாக கடவதாகவும்
    8. இப்படி சம்மதித்து விவஷ்த்தாபத்திரம் பண்ணிக் குடுத்தோம் பாரசிவற்கு தானத்தாரோம்.

    விவஸ்தா பத்திரம் – தீர்மான ஆவணம்; அனுதரிக்கும் – பின்பற்றும்; திருப்பதிகளில் – கோவில்களில்

    விளக்கம்: மதுரை சுந்தர பாண்டியனின் 13 + 3 =16 ஆவது ஆட்சி ஆண்டில் எளவனூர் இறைவர் கோயில் பொறுப்பாளர்களாகிய நாங்கள் இக்கோயிலில் திருப்பணி செய்யும் பாரசிவற்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்ததாவது நலங்கிங்குகள் கடைபிடிக்கும் போது பாண்டி மண்டலம், சோழ மண்டலம், மகத மண்டலம் ஆகிய மண்டலங்களில் உள்ள பல கோவில்களில் செய்தபடியே நடுவில் மண்டலம் திருமுதுகுன்றமான விருத்தாசலம், திருவாமாத்தூர், திருவதிகை, திருவெண்ணை நல்லூர் ஆகிய ஊர்களில் செய்த மரியாதையை இந்த பாரசிவருக்கும் செய்யக்கடவராக அல்லாக்கால் சிவதுரோகிகள், இராசதுரோகிகள் போல்வார் ஆகுவராக. இப்படியாக கோவில் பொறுப்பாளர்கள் நாங்கள் இசைந்து பாரசிவருக்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்தோம்.

    கோயில் பெயர்கள் சமஸ்கிருதம் ஆனது என்னவோதெலுங்கு நாயக்கர் ஆட்சியில் தான் என்பதை கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.

    பார்வை நூல்:  தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (C.Era 300 – 1800), க.பன்னீர்செல்வம், 2018.  ARIEp 1938 B. No 492

    https://www.facebook.com/pg/ஶ்ரீ-வாகீஸ்வரர்-திருக்கோவில்-பட்லூர்-245845535884081/posts/

    Share
  • கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள் 

    கொங்கு நாடு கன்னியாகுமரி போலவே தனக்கெனத் தனிவரலாறு கொண்டிருந்ததானது அங்கத்து கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. கொங்கு, சோழர் காலத்தில் இங்கு கோயில் இயக்கம் தொடங்கியது முதல் அவர் உத்தாரம் (support) பெற்று நல்ல முறையில் கோயில் இயக்கம் எடுத்துச் செல்லப்பட்டதைக் கல்வெட்டுகளில் காண முடிகின்றது. இவற்றில் வெள்ளாளர் குழுக்களாக, கூட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப் பொறுப்பில் இருந்த வெள்ளாளரிடம் பறையர் காவற் பணியில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. இப்பறையர்கள் இங்கத்து கோயில்கள் சிலவற்றில் விளக்கேற்றித் திருத்தொண்டு புரிந்தது பதிவாகி உள்ளது. இது இவர்கள் கோயிலுட் சென்று கருவறை மூலவரை எதிர் வணங்கினமைக்குச் சான்றாகின்றது.

    இதை ஏன் இங்கே சிறப்பாகக் குறிக்க வேண்டி உள்ளது என்றால் புராணங்கள், மனுதர்மம் ஆகியவற்றின்படி இவர்கள் கோயிலில் நுழைய அனுமதி இல்லாத தீண்டத் தகாதோராக நடத்தப்பட்டனர் என்ற தப்பான, பிழையான கருத்தே மக்கள் பெரும்பாலார் நெஞ்சங்களில் குடிகொண்டு உள்ளது. இப்பிழையான கருத்தை முறியடிக்கும் ஆயுதமாகச் சில கல்வெட்டுகள், கொங்கில் காணக் கிடைக்கின்றன.

    ஏன் இங்கே மட்டும் கிடைக்கின்றன? மற்ற இடங்களிள் இவ்வாறான கல்வெட்டுகள் இல்லையா? என்ற கேள்விக்கு முதலாவதாக இங்கே தமிழகத்தின் பிற பகுதிகள் போல் அல்லாமல் பெரிய கோயில்கள் மிகக் குறைவு அதனால் கல்வெட்டுகளும் குறைவு. ஆதலால் இங்கத்துச் சாதி உணர்வுள்ளவரில் தனியார் சிலர், தம் சொந்தச் செலவில் இங்கத்துக் கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்தும், படித்தும் அச்சில் ஏற்றி, நூலாக வெளியிட்டு உள்ளனர். இப்படி மற்ற இடத்தில் பெரிதாக எவரும் செய்யாததால் பறையர் பற்றிய செய்திகள் பிற இடங்களில் அதிகம் வெளியாகவில்லை.

    வெளியான அளவிற்கு இவை பறையர் சமூக சமநீதிப் போராட்டத்திற்கான சிறந்த ஆயுதங்களாக உள்ளன. இதை உணர்ந்தால் இவர்களுக்கு நன்மை உண்டாகும். அப்படி அல்லாமல் மீண்டும் மீண்டும் புராணத்தையும் மனுதர்மத்தையும் காட்டி சைவ, வைணவ மதங்களைச் சாடி, பிராமணரைப் பழிப்பார்களானால் இக்கல்வெட்டுகள், பிடியில்லாக் கத்தியாக இவர்களைத்தான் காயப்படுத்தும். கொங்கு கல்வெட்டு போல பிற இடத்துக் கல்வெட்டுகள், கோயில் வாரியாக நூலாக வெளியாவதற்கு நடுவண் தொல்லியல் துறைக்கு அழுத்தம் தர வேண்டும். இனி, சில கல்வெட்டுகளைக் காண்போம்.

    கோயம்புத்தூர் மாவட்டம் சங்கமேசுவரர் கோயில் தெற்கு ஜகதி உள்ள 3 வரிக் கல்வெட்டு.    

    1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு பதினேழாவது எதிர் எதிர் பேரூர் நாட்டு கோவன்புத்தூர் உடையார் சங்கீசுரமுடையார் கோயில் பக்கல் வடபரிசார நாட்டி
    2. லிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன் வைத்த சந்தியா தீபமொன்றுக்கு மிக்கோயிலிற் காணியுடைய சிவப்பிராமணனுக்கு ஓரச்சு குடுத்தே _ _ _ _
    3. சந்திராதித்தவரை செல்வதாகவு மிக்கோயிற் குடமுங் குச்சியுங் கொடு புக்கானிவனொருவன் செலுத்தக் கடவேனாகவும் கல்வெட்டுவித்தேநிது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பக்கல் – for, ஆக; நாட்டுக் காமுண்டன் – ஊர் காவலன்; காணியுடைய பிராமணன் – official priest ; அச்சு – காசு; புக்கான் இவன் ஒருவன்- கருவறையில் புகும் உரிமையுள்ள பிராமணன்; பன்மாகேசுவரர் – சிவனடியார்; ரக்ஷை – காக்கவேண்டும்.

    விளக்கம்: கொங்கு சோழர் மூன்றாம் விக்கிரம சோழனுக்கு 17+1+1 = 19 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1292 ) கோயம்புத்தூர் தெற்கு சங்கமேசுவரர் கோயிலில் வடபாரிச நாட்டில் வாழ்கின்றவனும் புல்லிகூட்டத்து வெள்ளாளனிடம் பணியில் உள்ளவனுமான பறையனான பறையன் என்பான், ஊர்க் காவல் செய்து வந்தான். அவன் இக்கோயில் காணியுடைய சிவப் பிராமணனிடம் காசு ஒரு அச்சு கொடுத்து சந்தியா விளக்கு ஒன்று எரிக்கச் செய்தான். இது சந்திர சூரியர் காலம் வரை ஏற்று நடத்தப்படும் என்று குடமும் குச்சியும் கொண்டு கருவறையில் நுழையும் அனுமதி பெற்ற பிராமணன் அப்படியே செய்வதாகக் கல்வெட்டி, அதைச் சிவனடியார் காக்க வேண்டும் என்கிறான்.

    இக்கல்வெட்டில் பயிலும் காணியுடைய பிராமணன், புக்கான் இவன் ஒருவன் என்ற சொல்லாட்சிகள் கருவறை பிராமணரைப் பிற கோயில் பிராமணரிடம் இருந்து வேறுபடுத்தி உயர்வாகக் காட்டுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அக்காலத்தே கோயில் சாராத (unofficial) ஆனால் அகவை முதிர்ந்த கோயில் சார்ந்த பிராமணருக்கு சார்பாக (substitute) அவர்களது உறவினரும் கோயில் பூசையில் ஈடுபட்டிருந்தனர். இத்தகையோருக்கு அந்த முதிர்ந்த பிராமணர் தான் தன் உரிமையில் இருந்து ஒரு பங்கைச் சம்பளமாக வழங்குவார்.  இது தான் அந்த வேறுபாடு.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 153 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    கோயம்பூத்தூர் வடக்கில் அமைந்த இடிகரை ஊரில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவர் 15 வரிக் கல்வட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய / தேவற்கு யாண்டு 8 வது வ / டபரிசார நாட்டுக் கொற்ற / மங்கலத்திலிருக்கும் வெள் / ளாழன் பையரில் பறைய / ன் பறையனேன் ஆளுடை / யார் வில்லீஸ்வரமுடையா / ற்கு வைத்த / சந்தியா தீபவிளக்கு / ஒன்றுக்கு ஒடுக்கின வராகன் பணம் 10 இ / ப் பணம் பத்துங் கைக் கொண்டேன் இக் / கோயிற் காணியுடைய சிவ பிராமணன் / காசிவ கோத்திரத்துத் திருநட்டன் அகத்திஸ்வர / முடையானான சித்தரமேழி பட்டனேன் கு / டங் கொடு கோயில் புகுவார் சந்திராதித்த / வரை செல்வதாக பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பையர் – கூட்டம், கீழ்ப்படிந்த வீரன், மகன், subordinate warrior; ஆளுடையார் – இறைவர்; ஒடுக்கின – கொடுத்த; வராகன் – ஒரு வகை காசு; சந்தி தீபம் – மாலை விளக்கு.

    விளக்கம்: இது 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியனான வீர பாண்டியனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் கொற்ற மங்கலத்தில் இருக்கும் பையர் கூட்டத்தை சேர்ந்த வெள்ளாளனிடம் பணியாற்றும் பறையன் பறையன் என்பான் வில்வீஸ்வரமுடையாருக்கு சந்தி விளக்கு ஒன்றிற்காக 10 வராகன் பணம் கொடுக்கின்றான். இதை பெற்றுக்கொண்ட கோயில் காணியுடைய சிவபிராமணன் காசிபகோத்திரத்தில் பிறந்த திருநட்டன் அகத்தீசுவரன் என்ற சித்திரமேழி பட்டன் அதைச் சந்திர சூரியர் உள்ள காலம் வரை நடத்திச் செல்வதாக உறுதி கூறுகின்றான்.  விளக்கேற்றியவர் கோயிலில் சென்று வழிபடுவது இயல்பு. இதாவது, பறையன் பறையன் உள்ளே சென்று வழிபட்டுள்ளான். இது அவன் தீண்டாமைக்கு ஆட்படவில்லை என்பதற்கு சான்று.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 179, மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    ஈரோடு பெருந்துறை வட்டம், ஆதியூர் கண் அமைந்த ஆதீசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு நாலாவது குழப்பு நாட்டு ஆதவூரில் வெள்ளாளன் வண்ணக்கரில் பிள்ளையாழ்வான் கரும்பறையனேன் நாயனார் ஆதீஸ்வரமுடையார் திருக்கோயில் திருநிலைகால் இரண்டு படி இரண்டும் என் தர்மமாகச் செய்வித்தேன் கரும்பறையனேன்.

    திருவெழுத்திட்டு – முடிசூட்டி; திருநல்லியாண்டு – ஆட்சி ஆண்டு; பிள்ளையாழ்வான் – கீழ்படிந்த பணியாள்; திருநிலைக்கால் – கதவு நிலை.

    விளக்கம்: மதுரை வேந்தன் வீரபாண்டியனின் நான்காம் ஆட்சி ஆண்டான 1269 இல் குழப்பு நாட்டில் அடங்கிய ஆதவூர் வண்ணக்கர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாளான கரும்பறையன் என்பான் ஆதிசுரமுடைய ஈசன் கோயிலில் இரண்டு திருநிலைக் கதவும் இரண்டு படியும் செய்வித்து கொடுத்து திருத்தொண்டு புரிந்தான்.

    பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப் பாடலும், பக். 143

    கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் கோபுர வாசல் இடது நிலைக்காலில் வெட்டப் பட்ட 11 வரி கல்வெட்டு.

    ஸ்வஸ்திஸ்ரீ வீ / ராஜேந்திர தேவற்கு / யாண்டு பத்தாவ / து கடற்றூர் வெ / ள்ளாந் கள்ளந் ப / றையந் நரவீரகே / ரழச் சிலை செட்டி / இட்ட திருநிலை வாய் / முகவணை உ / த்தரமும் திருக்க / தவும் இட்டேந்.

    திருநிலைவாய் – கோபுரத்தோடு கூடிய வாயில்; முகவணை – வாயிலை ஒட்டிய கற்சுவர்.

    விளக்கம்: கொங்குச் சோழன் வீர ராஜேந்திரனின் 10ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1217) கடத்தூரில் வாழும் வெள்ளாளனுக்குப் பணியாற்றும் கள்ளன் பறையன் என்பான் நரவீரகேரளச் சிலைச் செட்டி சார்பாக இக்கோயில் திருநிலை வாயிலுக்கு முகவணை, உத்தரம், திருக்கதவு ஆகியன செய்து இட்டான். இதை வீரகேரளச்செட்டி நேரில் நின்று கவனிக்க முடியாததால் கள்ளன் பறையன் இத் திருப்பணியை அவன் சார்பில் மேற்பார்வை செய்து இட்டான் என்று கொள்வதே முறையானது. அந்த வகையில் கோயிலில் வழிபாடும் நடத்தி இருக்கின்றான்.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக் 190.

    கோயம்புத்தூர் வடக்கில் இடிகரை ஊரில் அமைந்த வல்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவரில் பொறித்த 4 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 12 வது வடபரிசார நாட்டு இடிகரையி லிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் ச
    2. டையன் நேரியான் பறையனேன்ஆளுடையார் வில்லீஸ்வர முடையாற்கு வைத்த சந்தியா தீபவிளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின வ
    3. ராகன் பணம் 10. இப்பணம் பத்துங்கைக் கொண்டேன் இக்கோயிற் காணியுடைய சிவபிராமணன் காசிவ கோத்திரத்து திருநட்ட அகத்தீ
    4. ஸ்வரமுடையானான சித்திரமேழிப் பட்டனேன் குடங்கொடு கோயில் புகுவார் சந்திராதித்த வரை செல்வதாக இத்தன்மம். பன்மீயேசுவர ரக்ஷை.

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியரில் வீரபாண்டியனுக்கு 12 ஆவது ஆட்சி ஆண்டில் இடிகரையில் வாழும் பையர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாள் நேரியான் பறையன் வில்லீசுவரமுடைய இறைவர்க்கு மாலை விளக்கு ஏற்ற 10 வராகன் பணம் கொடுத்தான். இதைக் கோயில் அலுவல பிராமணன் சித்திர மேழிப் பட்டன் பெற்றுக் கொண்டு சந்திர சூரியர் உள்ள வரை நடத்துவதாக உறுதி தந்தான்.

    இதே கோவிலில் 8ஆம் ஆட்சி ஆண்டின் இதே போல ஒரு கல்வெட்டு மேலே இடம்பெற்றுள்ளது.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 342

    கோயம்புத்தூர் அவிநாசி வட்டம் சேவூரில் உள்ள கபாலீசர் கோயியில் முன்மண்டப தெற்கு குமுதத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு இருபத்து நாலாவது _ _ _
    2. பாக்குடியில் இருக்குஞ் சாமந்தரில் குன்றன் _ _ _ _
    3. உடைய பாரசிவரில் வீற்றிருந்த வறியான் _ _ _
    4. இடங்கை நாயகந் நித்தப் பரையன்உள்ளிட்டாரும் வடுக _ _ _
    5. யாரும் இவர் _ _ _ _ பிடாரியாற்கு சந்தியா தீபத்துக்கு _ _ _
    6. இதுபன்மாயேசுவர ரக்ஷை.

    பாரசிவர் – அம்மன் கோயில் பூசகர்; சாமந்தன் – அமைச்சன் அல்லது படைத்தலைவன்;  பிடாரி – துர்கை.

    விளக்கம்: கொங்கு சோழரில் வீர ராஜேந்திரனுக்கு 24 நாலாவது ஆட்சிஆண்டில் (கி.பி.1230) பாக்குடியில வாழும் சாமந்தன் குன்றன், கோயில் பூசகரான பாரசிவர் வீற்றிருந்த வறியான், இடங்கைப் பிரிவுத் தலைவன் நித்தப் பரையன் உள்ளிட்டோர் ஆன இவர்கள் பிடாரிக்கு மாலை விளக்கு எரிக்க ஆவன செய்துள்ளனர்.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 270

    திருப்பூர் காங்கேயம் வட்டம் பட்டாலியில் உள்ள பால்வண்ணீசுவரர் கோயில் தெற்கு சுவர் கல்வெட்டு.

    1.   ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்

    2.    செயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால் 

    3.   வெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி

    4.   ல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்

    5.   பொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக  இச்சந்தியாதீபம் கு

    6.   டமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _  

    வேளான் – அரசன், அரசமரபினன், ஆட்சியாளன்; மகன் – கீழ்படிந்த வீரன்.

    விளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவனுக்கு கீழ்படிந்த வீரன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன் கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ள வரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.

    பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 11, 2012,  த.நா.அ. தொல்லியல்துறை.

    Share