சேசாத்திரி ஸ்ரீதரன்

இந்தியத் துணைக் கண்டத்தில் சற்றொப்ப ஒரு லட்சம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் பிராமி, பிராகிருத கல்வெட்டுகள் தவிர்த்து பெரும்பாலன கோவில் சார்ந்த கல்வெட்டுகளே. இவற்றில் கோவிலுக்கு நன்கொடைகள் தந்த செய்திகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. தமிழ்க் கல்வெட்டுகள் 60,000 மேல் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் யாவும் பிராமணர்களின் இசைவால் கோவில் சுவற்றில் பொறிக்கப்பட்டவை. எனவே பிராமணரால் தான் இந்த வரலாற்றுப் பதிவு நமக்கு கிட்டியுள்ளது. பிராமணரின் கோவில் தொடர்பால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் அவற்றில் அதிகம் உள்ளன.

கல்வெட்டில் அறியப்படும் சதுர்வேதி மங்கலங்கள் ஆற்றுப் பாசனத்தை சார்ந்த பிராமணக் குடியேற்ற ஊர்கள் ஆகும். பிரம்மதேயம் என்பது ஒரு பிராமணருக்கு தனிப்பட்ட முறையில் விலையில்லாமல், ஆவணப்பதிவுக் (registration fee) கட்டணம் இல்லாமல் மன்னனால் கொடுக்கப்பட்ட நிலங்கள் ஆகும். எனினும் பிரம்மதேயமாக அறிவிக்கப்பட்டு நேரடியாக மன்னனிடம் இருந்து முதன் முறையாகப் பெறும் பிராமணருக்கு மட்டும் தான் இந்த சலுகை கிடைக்கும். அங்ஙனம் பிரம்மதேய நிலத்தை பெற்ற ஒரு பிராமணர் வேறு ஒருவருக்கு அந்நிலத்தை விலைக்கு விற்றால் அது ஆவணப்  பதிவுக் கட்டணம் கட்டப்பட வேண்டியதாகின்றது. அதோடு இந்த விற்பனை நிகழ்வால் அந்நிலம் பிரம்மதேயம் என்ற பொருளையும் இழந்து விடுகின்றது என்பதை பலரும் உணர்ந்திருப்பது இல்லை. இதே போல் தவறாகப் பொருள் புரிந்து கொள்ளப்பட்ட இன்னொரு சொல் தான் இறையிலி என்பது. இறை என்பதற்கு மன்னன், வரி என்ற சொற் பொருள் உள்ளன. ஒரு மன்னன் இறையிலி அறிவித்தால் அதற்கு வரிகட்ட வேண்டியதில்லை என்று பரவலாக தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது.  உண்மையில் மன்னன் தனக்கு வரவேண்டிய வரித்தொகையை கோவில் ஊர் அல்லது கோவிலின் வளச்சிக்கு பயன்படட்டும் என்ற நோக்கில் விட்டுக்கொடுப்பதை வரி கட்டத் தேவையில்லை என்று கொண்டால் மன்னன் எந்த நோக்கத்திற்கு இறையிலி அறிவித்தானோ அந்த நோக்கம் ஈடேறாது போகும். இப்படி ஆவதற்கு அவன் இறையிலி அறிவிக்காமலே இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும்.  அப்படியானால் இதன் உண்மைப் பொருள் தான் என்ன? இறையிலி என்றால் மன்னனுக்கு தான் வரி கட்டவேண்டியதில்லையே தவிர கோவில் வளர்ச்சிக்காக ஒருவர் கட்டாயமாக அந்த வரியை கட்டியே ஆகவேண்டும். ஆதலால் பொருட்படி அது மக்களுக்கான இறையிலி அல்ல மன்னனுக்கே அது இறையிலி. எனவே பிராமணர் அக்காலத்தே பிரம்மதேயம், இறையிலி ஆகிய சலுகைகளைப் பெற்று வரியே கட்டாமல் சுகபோக வாழ்வு வாழ்ந்தனர் என்ற தப்பான கருத்து சிலரால் அச்சிலும் இணையதளத்திலும் பரப்பப்பட்டு வருகின்றது. பிராமணர்களும் வரிகளைக் கட்டினர். அவர்களுக்கு வரிச் சலுகை ஏதும் இல்லை என்று சிந்திக்க கீழே இடம்பெறும் முதல் இரு கல்வெட்டுகள் சான்றாகின்றன. பிணை, தாலி காது அறுப்பு, போரில் பிராமணர் பங்கு பெறல் பற்றிய சிந்தனைக்கும் கீழே கல்வெட்டுகள் உள்ளன. சமூகப்பிரிவினையை, சமூக ஏற்றத் தாழ்வை சதுர்வேதி மங்கலங்களும் அதன் பிடாகைகளும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன என்று J.S. கிரேவால், சாந்தின் பீ போன்ற பேராசிரியர்கள் தவறான செய்திகளை அச்சில் வெளியிட்டுள்ளனர். அது தவறான கருத்து என்பதை இரண்டாவது கல்வெட்டு தெரிவிக்கின்றது.

The State and Society in Medieval India by J. S. Grewal Page 207

https://books.google.com/books/about/The_State_and_Society_in_Medieval_India.html?id=LKkBJyKdoZ8C

நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் ஊரில், சேடபுரீசுவரர் கோவிலின் கருவறை தெற்கு, மேற்கு, வடக்குப்புற பட்டிகைளில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோற்சடபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ஸுந்தர பாண்ட்ய தேவர்க்கு யாண்டு 23 வது மகர நாயற்று அப[ர]பக்ஷத்து த்ருதியையும் பெற்ற ஆலியத்து நாள் உய்யகொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு பாம்புரமான குலோத்துங்க சோழ சருப்பேதி மங்கலத்து உடையார் திருப்பாம்புரமுடையார் கோயில் ஆதிசண்டேசுர தேவர், கன்மிகளுக்கு. இவ்வூர் திருக்குடந்தை _ _ _ செம்பியன் மாராயனும் முட்டைப் புறத்து சங்கர நாராயண பட்டனும் _ _ _ ணவ _ _ _ _ பிரமாணம் பண்ணிக் குடத்த பரிசாவது. இவ்வூர் பெரும் பற்றப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரமராயனும் திரு_ _ _பண்_ _ _சோனா_ _ _ _
  2. முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இவ்மூவோம் இருபத்தொன்றாவதும் இருபத்திரண்டாவதும் வரை_ _ _[கொ]ற்றவாயில்  புவனயர் நிற்கையில் இந்த இ[ராச நாரா]யண பிரம[ரா]யன் நிலை நின்று கடமை இறாமல் ஓடிப்போகையில் இருபத்திரண்டாவது வரை சிகைக்கு நாட்டுக் கணக்கு கீழ் முத்தூருடையார் பேராயிரமுடையார் கணக்குப்படி இவர்பேரால் வந்த _ _ _ இராசநாராயண பிரம்மராயற்கு [பு]ணைப்பட்ட கவுசியன் அழகிய திருச்சிற்றம் பலமுடையான் _ _ _ _ இராசநாராயண பிரமராயற்க்கு [பு]ணைப்பட்ட எங்களை இறுக்க வேணும் என்கையில் இந்த இராசநாராயண பிரமராயன் _ _ _ க்ஷேத்ரமான மனைகளும் நிலங்களும் இன்னாய _ _ _ பாம்புரமுடையார் _ _ _ _
  3. க நாங்கள் புணைவிலையாக விற்றுக் குடுத்தோம். விற்றுக் குடுத்த மனைகளும் நிலங்களுமான இவ்வூர் நத்த[த்]து இவர் மனைகளுக்கு கீழ்பாற்கெல்லை இன்னாயனார் திருமடை விளாகத்து எல்லைக்கு மேற்கு தென்பாற்கெல்லை இன்னா[யனா]ர் திருக்குளத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை விழாவரு வீதிக்கும் சேலூர் சோலை அரசு பட்டன் மனைக்கும் திருவரங்கமுடையான் பட்டன் மனைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை விழாவரு வீதிக்கு தெற்க்கு ஆக [இ]சைந்த  இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட மனைகளும் _ _ _ _ _ ஆற்றுக்கு தெற்குப்பட்ட விளைநிலத்தில் உய்ய வந்த விளாகம் என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை பாம்பூர்க் கிழார் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஓடை வாய்க்கா[லுக்கு] வடக்கும் மேல்[பாற்கெல்லை] _ _ _ _
  4. _ _ _ _ __  கீழ்பாற்கெல்லை பெருமருதூர் திருசெல_ _ பலவூர் சதிர பட்டன் நிலத்துக்கு வடக்கு மேற்பாற்கெல்லை_ _ _ உடையான் பட்டன் நிலத்துக்கு மேல்பாற்கெல்லை _ _ _ பட்ட ரு இரண்டு மாவும் _ _ _ _ [வ]டக்கடை _ _ _ என்று பேர்கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை வீற்றிருந்தான் பட்டன் நில்த்துக்கு மேற்கு
  5. கெல்லை _ _ _ _ மாதேவ பட்டன் உள்ளிட்டார் நிலத்துக்கு வடக்கும் மேற்பாற்கெல்லை கவுணியன் செம்பியன் மாராயந் பட்டன் நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை கோன் நிலத்துக்கு இசைந்த இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட ரு இரண்டு மாவும் தத்தமான்னாற்றுக்கு வடக்கு _ _ம் பற்றூரூடையான் உய்ய கொண்டான்_ _இவன்_ _ _ _நத்தத்துக்கு கீழ்பா
  6. ற்கெல்லை_ _ _ற்றூர் நத்தத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உடையார் பாம்புரமுடையார் திருநாமத்துக்காணி_ _ _ (கல்வெட்டு நிறைவுறாமல் நிறுத்தப்பட்டுள்ளது).

அபரபக்ஷம் – தேய்பிறை; ஆதிசண்டேசுவரர் – சிவன் கோவிலகளில் முதல் மரியாதை செலுத்தப்படுபவர்; கன்மிகள் – கோவில் பொறுப்பாளர்; பிரமாணம் – உறுதி ஏற்பு ஆவணம்; பரிசாவது – ஏற்பாடு, வகை, விவரம்; நிற்கையில் – சாட்சியாக இருக்க; கடமை இறாமல் – அரசுக்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை செலுத்தாமல்; புணை – பிணை, surety, collateral security, ஆள் ஜாமின்; க்ஷேத்ரம் – வயல் நிலங்கள், வீடு இவை யாவும்; பிரம்மராயன் – மன்னனால் கோவில் செயற்பாட்டை கவனிக்க அமர்த்தப்படும்  பிராமண அதிகாரி.

விளக்கம்:  சடவர்ம சுந்தர பாண்டியனின் 23-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1273) நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் சேடபுரீசுவரர் கோவிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. ஆதிசண்டேசுவர தேவரை வணங்கி கோயில் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கும் விவரமாவது “திருக்குடந்தை கவுணியன் செம்பியன் மாராயனும் முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் இந்த உறுதி ஏற்பு ஆவணத்தில் செய்து கொடுத்த ஏற்பாடு யாதெனில், இவ்வூரில் வாழும் பெரும் பற்றுப் புலியூர் காசிபன் உலகமுண்டான் இராசநாராயண பிரம்மராயனும், திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டனும் ஆகிய இம்மூவரும் சுந்தர பாண்டியனின் 21-22 ஆம் ஆட்சிக் கால கட்டத்தில் கொற்றவாயில் புவனயர் சாட்சியாக இருந்திட இம்மூவருக்கும் இடையே ஒருவர் தவறினால் மற்றவர் அவர் சார்பாக வரி கட்டுவது என்ற பிணை (surety) ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் இந்த இராசநாராயண பிரம்மராயன் தன் கடமையில் வழுவாது நின்று அரசிற்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை கட்டாமல் எங்கோ போய் மறைந்தான்.  நாட்டுக் கணக்கர் கீழ்முத்தூருடையார் பேராயிரமுடையார் ஆகியோரின் கணக்குப்படி இந்த இராசநாராயண பிரம்மராயன் பேரில் 22 –ம் ஆட்சி ஆண்டில் செலுத்த வேண்டிய வரி நிலுவையை அவருடன் இன்னொரு பிணையில் உள்ள கவுசியன் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் இராசநாராயண பிரம்மராயனோடு பிணையப்பட்ட எங்கள் இருவரையும் (திரு_ _பண்_ _ _சோனா_ _ _, முட்டைப்புறத்து சங்கர நாராயண பட்டன் ஆகியோர்) கட்டச் சொன்னான். ஆகையால் இந்த இராசநாராயண பிரம்மராயனுக்கு சொந்தமான நிலங்களை இதாவது, வீடு விளைநிலம் ஆகியனவற்றை திருப்பாம்புர ஈசனுக்கு பிணைக்கு விலையாக விற்றுவிட்டோம்” என்று கூறியுள்ளனர். இந்நிலங்கள் பற்றிய எல்லை விவரங்கள் எஞ்சிய வரிகளில் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்தி நிறைவு செய்யப்படாமல் அப்படியே பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒரேஒரு ஆண்டிற்கான வரியை கட்டாததாலேயே ஒருவரது உடைமை முழுவதையும் விற்றுவிடுவது ஞாயமா? உடைமையின் மதிப்பு வரிநிலுவையை விட அதிகமாகத்தானே இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது. கல்வெட்டில் பிணைக்கட்ட அனைவரும் பிராமணர் என்று தெரிகின்றது.

இக்கல்வெட்டின் மூலம் பண்டு ஒருவருக்கு ஒருவர் பிணை (ஆள் ஜாமீன்) கொள்ளும் முறை சமூகத்தில் இருந்தது தெள்ளப் புலனாகின்றது. அதோடு பிராமணரும் மற்றவரைப் போல வரி கட்ட வேண்டி இருந்தது என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு நல்ல சான்றாகும். இதுவல்லாமல் பிராமணர் அந்தராயத்தில் அடங்கும் நெல் வரி, காசாய வரியில் அடங்கும் குடிமகண்மை வரி, வீட்டிற்கான வாசல் வரி உள்ளிட்ட பல வரிகளையும் கட்ட வேண்டும் என்பதை மேலும் சில கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது. எனவே பிராமணர் வரி கட்டாமலேயே அரசு சலுகை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர் என்ற பரவலான கருத்து பிழையானது என்று தெரிகின்றது. எனவே யார் என்ன எழுதினாலும் சொன்னாலும் அதன் உண்மைத் தன்மை என்ன என்று தக்க சான்றுகளுடன் ஆராய வேண்டிய கட்டாயக் கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

பார்வை நூல்: நன்னிலம் கல்வெட்டுக்கள் – I, எண்: 138/1977, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அரசர் கோயில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கருவறை வடக்கு முப்படைக் குமுதம் மற்றும் மேற்கு பட்டிகையில் பொறித்த 3 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடைபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு [ப]தினைஞ்சாவது மீந நாயற்று அபரபக்ஷத்து ஸப்தமியு[ம்] ச[னி]க்கிழமையும் பெற்ற [ஸ்வா]தி நாள் _ _ _ _ த்த ஸ்வதுர்வேதிமங்கலத்துப் பிடாகை மாத்தூர் ஸபை. [இவ்]வூர் திருவரசுர நாயனார் கோயிலில் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வார்க்கு ஸ்ரீ ஸேனாபதிப் பெருவிலை ஆக விற்றுக் குடுத்த பரிசாவது, இவ்வூர் ஸபையாரில் காஞ்சி சொக்கத் தேவரான [மூ]த்த வாமன பட்டன் பதினாலாவது வரையும் உழுது தன் பேர்க்கடமை செலவறாதே ஓடிப் போகையில். இவன் பேர்க்கடமைக்கு சேர்வை என்று எங்களை இப்பணம் _ _ _
  2. _ _ ன்று கோமுள்ள மாவிஸனம் பண்ணுகையாலே. எங்களுக்கு _ _ ங்க _ _ _ பாத்தி இல்லாதப்படியாலே _ _ _ _ _இதர்க்கு தேவரான [உ]த்த[ம] வாமன பட்டன் உள்ளிட்ட _ _ _ _ _ன நிலமான மேலைப்புதுத் திரு ந_ _த்து _ _ _சி குருகூர் ஸ்ரீ  சவ_மம் ப்ரயாகைத் திருப்பொரி பட்டன் உள்ளிட்டார் இராசேந்த்ர விளை நிலமான முன் மடைப் புதுத்திருத்து நந்த[கஸ]ம். வெண்ணைக் கூத்தன் _ _ _ தனால் இன்னிலம் ஒன்றே இரண்டு மாவுக்கும் பெறும் வஸ ஆக நிச்சயித்த அன்றாடு நற்காசு வாசிபடர் வராகன் பணம் 27
  3. [இரு]பத்தேழும் விலையாவதாகவும். இப்படி சம்மதித்து மாத்தூர் [எ]ழுவாத நா[ய]னார்க்கு ஸ்ரீவேதநாயகனும் இவற்கு விலை ஆக விற்றுக் குடுத்தோம் மாத்தூர் ஸபை ஊரோம். இப்படிக்கு இவை _ _ _ ஞ்சி இவாய்வ _ _ _ _ன் பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை வங்கிப்புறத்து திருவேங்கட பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை ஆதன்பாக்கத்து திருவேங்கட பட்டன் எழுத்து. இவர்கள் சொல்ல இப்ரமாணம் எழுதினேன் ஸ்ரீ சுத்தவல்லிச் சருப்பேதி மங்கலத்து உய்ய வந்த பெருமாள் கோயில் வீற்றிருந்தான் பட்டனேன். இவை என் எழுத்து.

சேனாபதி ஆழ்வார் – விஷ்வக்சேனர். சிவன் கோவிலில் ஆதிசண்டேசுவரரை முதலில் வணங்குவது போல் பெருமாள் கோவிலில் விஷ்வக்சேனரை முதலில் வழிபடுவர். இவரை சேனை முதலி என்பர்; பிடாகை – ஒரு கோவில் ஊரின் பின்புறத்தே (backyard) அமைந்த உட்கிடையூர், a small village at the backyard of a bigger village; சபை – சதுர்வேதிமங்கலம், பிடாகை ஆகியவற்றின் ஊரவை; பேர்க்கடமை செலவறாதே – தன்பெயரில் ஏற்பட்ட அரசுக்கு கட்ட வேண்டிய வரியை செலுத்தாமல்; சேர்வை – தொண்டு, ஊழியம்; மாவிஸனம்- பெருந் தொல்லை; பாத்தி – பொறுப்பாதல், பிணையாதல், பங்கு.

விளக்கம்:  சடவர்ம சுந்தர பாண்டியனின் 15- ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1265) காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அரசர் கோவிலில் தேய்பிறை ஏழாம் நாள் சனிக்கிழமை சுவாதி நட்சத்திரத்தன்று மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து வட பிடாகையான மாத்தூர் எனும் அரசர் கோயில் ஊரின் ஊரவையர் கூடினர். “மாத்தூர் பிடாகையின் திருவரசுரம் பெருமாள் கோயிலில் சேனாபதி ஆழ்வாரான விஷ்வகசேனரை வணங்கி பெருவிலையாக நிலம் விற்றுக் கொடுத்த விவரம் என்னவெனில், இவ்வூரின் ஊரவை உறுப்பினனான காஞ்சி சொக்கத் தேவரான மூத்த வாமன பட்டன் சுந்தர பாண்டியனின் 14- ம் ஆட்சி ஆண்டு வரை இவனுக்கான நிலத்தை உழுது பயன்கொண்டான். ஆனால் 15 –ம் ஆட்சி ஆண்டில் தன் பேரில் அரசுக்குக் கட்ட வரிஇனங்களைக் கட்டாமல் எங்கோ சென்று மறைந்தான். இதனால் இவன் பெயரில் உள்ள வரிகளைத் கட்டுவது தொண்டு, ஊழியம் என்றெல்லாம் சொல்லி எங்களைக் கட்டும்படி தொடர்ந்து பெருந் தொல்லை கொடுத்து வருகின்றனர். எங்களுக்கு அவனது வரியைக் கட்ட வேண்டிய பொறுப்போ பிணையோ இல்லாமையால் இதற்கு தேவரான உத்தம வாமன பட்டன், பிரயாகை திருப்பொரி பட்டன் உள்ளிட்டோர் வெண்ணைக் கூத்தன் என்பவனுக்கு ஒன்றே இரண்டு மா அளவுள்ள மூத்த வாமன பட்டனின் நிலத்தை அன்றாடு நற்காசு வாசிபடவர் வராகன் பணம் 27 க்கு விற்றுவிட ஒப்புக் கொண்டனர்.” பிற பட்டர்களும் இதற்கு ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்தின் வட பிடாகையான மாத்தூர் ஒரு வைணவ தளம். இக்கோவிலில் பணியாற்றும் பிராமணருக்கும் மற்ற கோவில்களில் உள்ளது போல கோவில் அருகிலேயே வீடுகள் அமைந்திருக்க வேண்டும். எனவே பிடாகைகளில் வைணவக் கோவில்கள் அறவே இருந்ததில்லை. பிராமணர் வீடுகளும் இல்லை, பிராமணர் சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்துகொண்டு பிற உழைக்கும் மக்களை பிடாகைகளுக்கு ஓரங்கட்டித் தாழ்வுபடுத்தி சமூகப்பிரிவினையை ஏற்படுத்திய புறச்சேரியே பிடாகைகள் என்ற அலிகார் பல்கலைக்கழக இணைப் பேராசிரியை சாந்தினி பீயின் கருத்தை இக்கல்வெட்டு சுக்கு நூறாக உடைத்தெறிவது நமக்குக் கண்கூடாகத் தெரிகின்றது.

http://thalaivazhaivirundhu.blogspot.com/2018/03/blog-post_21.html

பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் – IV, பக்கம் 109-110, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம் இஞ்சிக்குடி ஊரில் அமைந்த ஸ்ரீ பார்வதீசுவரர் கோவிலின் மகாமண்டபம் வலப்புறத் தூணில் உள்ள, 32 வரிக் கல்வெட்டு நீட்சி கருதி சாய்வுக் கோட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்தி ஸ்ரீ திரு / வுலளகளந்த  கணக் கிந்படி இரட்டபா டி ஏ[ழ]ரை இலக்கமு /  ங் கொண்டு ஆ / கோமல்லனை இரும / டி வெந்கண்டு _ _ _ குலைவிந்  கொட / _ _ _[கானை] தேவற்கு / [பா]டு ஆத[லை] /  இரட்ட  ராச்சியந்  /  துமிச்சு பேரா /  ற்றங்க[ரை] கேய் வ  / ந்து ஆகோமல்  /  லனோடு பொ[ரு] /  த பூசலில் ஆனை / முகத்தில் குதி  / ரை பாச்சியட்[ட]  /  சங்கரன் பெரி  /  யாநான கல்லி /  யாணபுரங் கொ / ண்ட சோழ பிர  / மாதராயந் [மக]  /  [ன்] ராஜாதிராஜனுக் / கும் அரையன் திரு  / ச்சிற்றம்பலம் /  முடையாநுக்கு  /  ம் இவநு_ _ _ _ /  ந்த சங்கரன் இரா / மநான ராஜேமஹே / ந்த்ர _ _ _  ராம நுக்கு _ _ _ _

பாச்சியட்ட – பாயவிட்டு மறிக்க, தடுக்க; பிரமாதராயன் – மன்னனால் கோவில் செயற்பாட்டை கவனிக்க அமர்த்தப்படும் பிராமண அதிகாரி.

விளக்கம்:  இரண்டாம் இராசேந்திரச் சோழனின் 10–ம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மேலைச் சாளுக்கிய வேந்தன் ஆகவமல்லனான முதலாம் சோமேசுவரனை கி.பி. 1054 ல் கொப்பத்து பேராறான துங்கபத்திரைக் கரையை அண்டிய போர்க்களத்தில் இராசேந்திரச் சோழன் எதிர் கொண்டான். அப்போது யானைப் படையை நோக்கி குதிரைப்படையைப் பாயவிட்டு யானைப் படையை முன்னேற விடாமல் மறிக்க, தடுக்க என்ற செய்தியோடு வேறு ஒரு செய்திக்கு கல்வெட்டு தாவுகின்றது. சங்கரன் பெரியானான கலியாணபுரம் கொண்ட சோழ பிரமாதராயன் மகன் ராஜாதிராஜனுக்கும் அரையன் திருச்சிற்றம்பலமுடையானுக்கும் இவனொடு உறவுடையவனான சங்கரன் இராமனான ராஜேந்திர _ _ _ ராமநுக்கும் என்று மூவரைக் குறித்துவிட்டு அதற்கு மேல் கல்வெட்டுச் செய்தி ஏதும் கிட்டாமல் நின்றுவிடுகின்றது. ஏனென்றால் அதன் பின் கல்வெட்டின் சில வரிகள் சிதைந்துவிட்டன. எனவே செய்தி இன்னதென்று மேலும் தெளிவாகத் தெரியவில்லை.

கோவிலில் கோவிலுக்கு தொடர்பற்ற செய்திகள் கல்வெட்டில் இடம்பெறா. இக்கல்வெட்டு இக்கோவிலில் இடம்பெற்றதென்றால் அது தொடர்பான செய்தி தான் சிதைந்த வரிகளில் இருக்கும். பிரம்மராயன் என்போர் கோவில் செயற்பாட்டை மேற்பார்வையிடவும் கோவில் செயற்பாடு சீராக நடந்து வரவும் வேந்தரின், மன்னரின் நேரடி பார்வையில் நியமிக்கப்பட்ட பிராமண அதிகாரிகள் ஆவர். தொழில் தர்மத்திற்கு மாறாக பிரம்மராயரான இந்த பிராமணர் போரில் கலந்து கொண்டு வீரசாவடைந்தார் என்று விளக்கப் பகுதியில் குறித்திருப்பது தவறானச் செய்தியாகப்படுகின்றது. கல்வெட்டுகளை படிப்போர் நூல் வெளியீட்டாளர் கொடுக்கின்ற விளக்கத்திற்கு மேல் தாமாக முயன்று எந்த கல்வெட்டிற்கும் பொருள் விளக்கம் கொள்ளப் போவதில்லை என்பதே நடப்பாக உள்ள நிலையில் இப்படியான தவறான விளக்கத்தை படிப்போர் அதையே உண்மை என்று கருதும் அவல நிலை தான் உள்ளது. ஒரு அரசு அமைப்பான தொல்லியல் துறை இத்தகு தவறுகளை தவிர்க்க வேண்டும்.

பார்வை நூல்:  நன்னிலம் கல்வெட்டுக்கள் – I, எண்: 171/1977, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டை வட்டம், பாளையங் கோட்டையில்  அமைந்த கோபால சுவாமி கோயில் கருவறை வடக்கு அதிட்டானம் முப்படைக் குமுதத்தில் பொறித்த 9 வரிக் கல்வெட்டு.

  1. ழரை இலக்கமும் திண்டிரல் வென்றித் தண்டார் கொண்டு தன்னெழில் (வளர் ஊ) ழி உள் எல்லா யா
  2. ண்டு தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசு கொள் ஸ்ரீ (கோவிரா)ஜராஜ கேஸரி வர்ம
  3. ரான ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 25 ஆவது ராஜராஜ ம(ண்டலத்)து கீழ்க் களக் கூற்றத்து
  4. ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வல்லப (சதுர்வேதிம)ங்கலத்து மகா சபையோம். பெருங்குறி சாற்றின ம_ _ _க் கூட்ட குறைவ
  5. றக் கூடி இருந்து செறுகை சீமாமினவனம் யென்றிய னுள்ளிட்டாராவது நம்மூர் யெட _ _ _ விலே யவது புகுந்து ஊர்
  6. அழிப்போமென்று ப்ராமணரைப் படைகளம் பறிக்க பிராமணிகள்த் தாலியு_ _ காதுமறுத்துக் கவரா நிற்க
  7. கக் கவராமல் பட்ட வள்ளுவன் மாணிக்கன் மணியன்னான கவறை இகைற்சி_ _ மயில் ஒப்பனுக்கு உதிரப்ப
  8. ட்டியாகப் பணிச்ச நிலம் திருவரங்கனேரிக் குளத்தடியால் கொல்லன் வச்ச
  9. _ _உள்பட அடைஞ்சிலியிடை

சாற்றின – அறிவித்த; செறுகை – ; பறிக்க – வலுவில் பிடுங்க; கவர் – கொள்ளையிடு; பட்ட – போரில் இறந்த; உதிரப்பட்டி – உயிர் ஈகம் செய்தவர் குடும்பத்திற்கு தரப்படும் இரத்த காணிக்கை நிலக் கொடை; பணிச்ச நிலம் –

விளக்கம்:  இரட்டப்பாடி ஏழரை இலக்கம் என முதலாம் இராசராசனின் மெய்கீர்த்தியொடு தொடங்கும் இந்த கல்வெட்டு அவனது 25-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1010) வெட்டப்பட்டுள்ளது. இராசராச மண்டலத்தில் அடங்கிய கீழ்களக் கூற்றத்தில் அமைந்த பிரம்மதேயமான ஸ்ரீ வல்லப சதுர்வேதி மங்கல  (பாளையங்கோட்டை) மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் கூட்டத்தில் மக்கள் திரளாக கூடி இருந்து எடுத்த முடிவு யாதெனில்,”நம்மூரில் புகுந்து ஊரையே அழிப்போம் என்று இங்குள்ள பிராமணர் உடைமைகளைப் படைக்களம் வலுவந்தமாகப் பிடுங்கியது. பிராமணிகளான மாமிகளின் தாலியையும் காதையும் அறுத்ததோடு கொள்ளையிட முற்பட்ட நேரத்தில் அப்படிக் கொள்ளையிட முடியாமல் தடுத்து போரில் இறந்து போன வள்ளுவன் மாணிக்கன் மணியன் ஆன கவறை இகைற்சி_ _ மயில் ஒப்பனுடைய குடும்பத்தாருக்கு இரத்த காணிக்கை நிலம் கொடையாக திருவரங்கனேரி குளத்தடி பக்கம் வழங்கப்பட்டது.

வேந்தர், மன்னர்களின் பேராதரவு பெற்றவர்களாகக் கருதப்பட்ட பிராமணர்களுக்கே இப்படி ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழல் இருந்தது என்றால் மற்றவர் உயிர் பாதுகாப்பும் கேள்விக்கிடமானதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

5-ம் வரியில் அதிகமான தட்டச்சுப் பிழை உள்ளது. நூலைப் படிப்பவர் யாரும் மூலக் கல்வெட்டொடு ஒப்பிட வாய்ப்பில்லாத போது ஒருவர் தட்டச்சிய கல்வெட்டு வாசகத்தை இன்னொருவரைக் கொண்டு சரிபார்த்த பின்னர் தான் அதை அச்சிடுட வேண்டும் அதுவே சரியானது. இந்தக் கல்வெட்டில் அவ்வாறு கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிகின்றது.

பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் – I, பக்கம் 42, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிந்திக்கச் சில கல்வெட்டுகள்

  1. மேலும் செய்திகளை அறிய சொடுக்குவீர் https://groups.google.com/forum/#!topic/vallamai/5tdfNiR7R20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *