சக்குவின் சின்னிக்குட்டி

0

நிர்மலா ராகவன்

“உங்கள் மனைவிக்கு ஹிஸ்டீரியா!”

மருத்துவர் கூறியபோது, கருணாகரனுக்கு நிம்மதிதான் ஏற்பட்டது. எங்கே `பைத்தியம்’ என்று சகுந்தலாவைக் கணித்துவிடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தவன் ஆயிற்றே!

காரணமின்றி அழுதவள். எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பவள். அவளுடைய மனக்குறை என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.

திருமணமாகிய முதல் மூன்று வருடங்களில் சாதாரணமாகத்தானே இருந்தாள்? இப்போது, இரண்டு வருடங்களாக ஏன் இப்படி?

தான் அடிக்கடி வேலை விஷயமாக வெளிநாடு போவதால், தனிமை அவளை வாட்டுகிறதோ? பெரிய உத்தியோகம் என்றால், பொறுப்புகளும் அதிகமாகத்தானே இருக்கும்! இதுகூடவா புரியவில்லை அவளுக்கு?

கேட்டும் பார்த்துவிட்டான். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏதாவது கேட்டால், ஒரே அழுகை.

கடைசி முயற்சியாக, வைத்தியம்.

“இன்னும் பிள்ளை பிறக்கலியேன்னு அவங்களுக்கு ரொம்ப ஏக்கம். நம்ப சமூகத்தைப்பத்தி ஒங்களுக்குத் தெரியாதா! யார் வீட்டு விசேஷத்துக்காவது போனா, அக்கறையா, துக்கம் விசாரிப்பாங்க. சின்னக் குழந்தைங்களைத் தூக்க விடமாட்டாங்க!”

தன்னிடம் மனைவி இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கோபமும், உடனே பச்சாதாபமும் ஏற்பட்டன.

சகுந்தலாவிடம் நைச்சியமாகப் பேச்சுக்கொடுத்தான். ‘சில பேருக்கு, கல்யாணமாகி, பத்துப் பதினஞ்சு வருஷம் கழிச்சுக்கூட குழந்தை பிறந்திருக்கு. ஒனக்கு அவ்வளவு ஆசையா இருந்தா..,” அவன் சொல்லி முடிப்பதற்குள், அவள் குறுக்கிட்டாள்: “தத்து எடுக்கிற சமாசாரமே வேண்டாம்”.

அதன் காரணத்தைக் கேட்கவெல்லாம் அவனுக்குப் பொறுமை இருக்கவில்லை.

‘எப்படியோ போ!’ என்று மனத்துக்குள் திட்டத்தான் அவனால் முடிந்தது.

நல்லவேளை, அனுதினமும் இவளுடைய அழுமூஞ்சித்தனத்தைச் சகித்துக்கொண்டிருக்க வேண்டாம் என்ற ஆறுதல் எழுந்தது.

அயல் நாட்டில் இரு வாரங்களைக் கழித்துவிட்டு வீடு திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

சிரித்த முகத்துடன் சகுந்தலா!

“இங்க வாங்களேன்,” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள். அவள் காட்டிய இடத்தில் ஒரு பூனைக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. சொகுசாக, மெத்து மெத்தென்று மடிக்கப்பட்டிருந்த ஒரு ஜமக்காளத்தின்மேல்.

“இது எங்கேயிருந்து வந்தது?” சற்று எரிச்சலுடன் பிறந்தது கேள்வி.

“தானே வருமா? நான்தான் நேத்து கொண்டுவந்தேன், என் ஃப்ரெண்ட் கோகிலா இல்லே, அவ வீட்டிலேருந்து!” பெருமையாகச் சொன்னாள்.

சிறு வயதில், ‘பூனைகிட்ட போகாதே, பிறாண்டும். தொட்டா, அலர்ஜி வந்து, அரிக்கும்,’ என்று பலவாறாக எச்சரிக்கை விடுத்திருந்தாள் அவன் தாய். இப்போது, அந்த அறிவுரை ஞாபகத்தில் எழ, “வீட்டுக்குள்ளே விடாதே. அசுத்தம் பண்ணிடும்,” என்றபடி, அப்பால் நகர்ந்தான்.

ஏதோ நினைத்துக்கொண்டவனாய், “இந்தக் குட்டி ரொம்ப சோனியா இருக்கே! ரோமமும் இல்லே. ஏன் சக்கு? ஒனக்கு ஆசையா இருந்தா, கடைக்குப் போய், அழகான, புசுபுசுன்னு இருக்கிற நாயோ, பூனையோ வாங்கிக்கிறது!”

அவளுடைய ஆத்திரம் அவன் எதிர்பாராதது. “ஒங்களுக்கு சோனியா, அழகில்லாம ஒரு குழந்தை பிறந்தா அதைத் தூக்கிப் போட்டுடுவீங்களா?”

எழுந்த வேகத்திலேயே அவள் ஆத்திரம் அடங்கியது. “இதுக்கு பேர் என்ன தெரியுமா? சின்னி! நல்லா இருக்கில்ல?”

இவள் என்ன, வளர்ந்த குழந்தையா? ஆயாசம்தான் எழுந்தது கருணாகரனுக்கு.

தாய்ப்பால் மறக்காத குட்டிக்கு அவள் தன் விரலைப் பாலில் நனைத்து, அதன் வாயில் வைத்தாள். அதுவும் தாயின் மடிக்காம்பு என்று நினைத்து சப்பியது.

ஆறுமாதங்கள் கழிந்தன. சின்னியின் உடலில் பருவ மெருகு ஏறியிருந்தது தெருவில் போகிற ஆண்பூனை ஒன்றின் கண்களுக்குத் தப்பவில்லை. அது உரிமையுடன், வீட்டுக் காம்பவுண்டில் நுழைந்து, சின்னியைத் துரத்தியதைக் கண்டு கருணாகரனுக்குப் பயம் ஏற்பட்டது.

போனால் போகிறதென்று மனைவிக்குத் துணையாய் ஒரு பூனைக்குட்டியைச் சகித்துக்கொண்டாயிற்று. இது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மூன்று அல்லது ஐந்து குட்டிகளைப் பிரசவித்தால் என்ன செய்வது! இது என்ன வீடா, அல்லது மிருகக்காட்சிசாலையா?

ஒரு நீண்ட கம்பை எடுத்துக்கொண்டு ஆண் பூனையைத் துரத்தினான்.

“என்ன செய்றீங்க?” அதட்டலாக வந்தது சகுந்தலாவின் குரல்.

“ஒன்னோட பூனையை டாக்டர்கிட்ட கூட்டிப் போகணும்,” என்று முணுமுணுத்தான்.

“எதுக்கு?” என்றாள், புரியாது.

அவன் விளக்கியதும், “எந்த ஜன்மத்திலே செஞ்ச பாவமோ, என் வயிறு திறக்கலே. அறுவைச்சிகிச்சை செஞ்சாவது சின்னியையும் மலடியா ஆக்கணுமா? பிள்ளை பெத்து, பால் குடுக்கிற இயற்கையான சந்தோஷத்தை அதுக்குக் கிடைக்காம பண்ணினா, அது பெரிய பாவங்க!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள் சகுந்தலா.

அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. சின்னி வந்த நாளிலிருந்தே அவளது அழுகை குறைந்து, உற்சாகமாக இருந்தாளே! இப்போது மீண்டும் தொடர் அழுகையா!

“நீயும் ஒன் பூனையும் எப்படியோ தொலைங்க”. மனம் வெறுத்துப் பேசினான்.

“அப்பா கிடக்கார்! நீ வாடி சின்னிக்குட்டி,” என்று அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சியபோது, அவனுக்குள் பொறாமை கிளர்ந்தது அவனுக்கே அவமானமாக இருந்தது. ஒரு பூனைக்குட்டியுடன் போட்டியா?

தன்னை அப்பா என்கிறாளே! அப்போது, அவள் அம்மாவா?

சில மாதங்களில் அதுவே உண்மை என்று தெரியவந்தது.

“சின்னியை மிருக வைத்தியரிடம் கூட்டிப்போகணும்”.

அவள் கூறியது புரியவே சில வினாடிகள் பிடித்தன. “எதுக்கு சக்கு? நீதானே வேண்டாம்னு சொன்னே?”

“அது அப்போ. நம்ப பிள்ளை பிறந்துட்டா, பூனைக்குட்டிங்களை யாரால பாத்துக்க முடியும்?” அலட்சியமாக வந்தது அவள் குரல்.

உணவும் சுத்தமான குடிநீரும் கொடுத்து, அதற்கு ஈடாக தன் அடிப்படை உரிமையைப் பறித்துக்கொள்ளும் மனிதர்களின் குணம் புரியாது, சகுந்தலாவின் காலடியில் அமைதியாக உட்கார்ந்து, தன் உடலை நக்கி சுத்தப்படுத்திகொண்டிருந்த அந்த பூனைக்குட்டியைக் கண்டு கருணாகரனுக்குப் பரிதாபமாக இருந்தது.

தனக்கு மட்டும் ஏன் குட்டிகள் இல்லை என்று என்றாவது அதற்கும் அழத்தோன்றுமோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *