குழவி மருங்கினும் கிழவதாகும்-15

மீனாட்சி பாலகணேஷ்
(உணவூட்டல்)
ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் உணவூட்டல் பருவம் ஆகின்றது.
‘ஏழாந் திங்களி னின்னமு தூட்டலும்,1‘ என்பது பிங்கல நிகண்டுவின் பாடல்வரி. அரிதாகப் பாடப்பட்டுள்ள பருவங்களில் ஒன்றான இதுவும் கதிர்காமப்பிள்ளைத்தமிழில் மட்டுமே நயமுறப் பாடிப் பதியப்பட்டுள்ளதனைக் கண்டு மகிழலாம்.
உணவூட்டல் எனும் செய்கையைப் பொருளாகக்கொண்ட இப்பருவம் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானதும் குழந்தை வளர இன்றியமையாததுமாகும். பெரியாழ்வார் கிருஷ்ணனைப் பற்றிப் பாடிப்பரவிய திருமொழிப்பாசுரங்களில் ‘அன்னை முலையுண்ண அழைத்தல்’ எனத் தனியாகப் பாசுரங்களைப் பாடியுள்ளார். இருப்பினும் எந்தப் பிள்ளைத்தமிழிலும் இதுவோ, உணவூட்டல் எனும் நிகழ்வோ தனிப்பருவமாக எடுத்துப் பாடப்படவில்லை என்பது வியப்பிற்குரியது. குழந்தை நல்ல அறிவாற்றலுடன், நற்குணங்களுடன் வளர சத்தான உணவைத் தாயும் செவிலியரும் தேர்ந்தெடுத்து ஊட்டிடல் வேண்டும். தானே உண்ணவியலாத பருவமாதலால், உணவைக் குழந்தைக்கு ஊட்டிவிடவும் வேண்டும். உணவு உண்ணாது சில குழந்தைகள் மறுத்துவிடும். அப்போது நிலவைக் காட்டியும், காக்கை, குருவி, நாய் ஆகியனவற்றைக் காட்டியும், தாய் உணவினை ஊட்டுவாள். சிலபொழுதுகளில் நல்ல கதைகளைக் கூறியும் உணவூட்டிடுவாள்.
பாடல்களைக் காணலாம்:
முதல்பாடல்: ஏறு எனப்படும் விடையிலேறி வரும் சிவபிரான் அருமையாகச் சீராட்டிடும் எங்கள் ஏறு (சிங்கம்) போலும் மகவே! இதில் ஏறு எனும் சொல்லை விடை, சிங்கம் எனும் இரு பொருட்களில் பயன்படுத்தியுள்ள நயத்தைக் காணலாம். குகைக்குள் சிங்கமானது நினது நடையினைக்கண்டு நாணமுற்று வருந்திக் கிடக்கின்றது.
கதிர்காமத்திலுள்ள அழகிய மாணிக்ககங்கை எனப்படும் வடவையாற்றின்கண் உள்ள துறைகளில் ஆங்காங்கே நீராடும் தொண்டர்களுக்கு கடைக்கண்ணால் பார்த்து அருள் செய்யும் விடாத பெருமழை போல்பவனே! இதில் சுவையானதொரு தத்துவம் தொக்கி நிற்கிறது; முருகப்பெருமானுக்கு அடியாராகி விட்டவர்களை அவன் எப்போதுமே விடாது பெய்யும் கொடைமழைபோன்று அருள்பாலித்தவண்ணம் இருப்பவன் என்பதே அது.
இனிக்கும் தீம்பாகினில் தோய்த்தெடுத்த கரும்பினின்றும் பெறப்பட்ட கற்கண்டுக் கட்டியே!
ஆயர்கள் வைத்துள்ள தயிரினைக் கள்ளத்தனத்தால் உண்ட திருமாலின் மருமகனே! பாலருந்துங்கால் நகத்தாற் கீறிய முலையின் இன்னமுதினைப் பருகும் கோமான் நீ! இன்று அக்கொங்கைகளுக்கு ஒப்பான பொற்கிண்ணத்தில் படைக்கப்பட்டுள்ளதும் உள்ளன்பு எனும் நெய்யினைப் பெய்தமையால் அது சிவமணம் கமழ்வதாயும் உள்ளதாகச் சமைத்த அமுதனைய சோற்றினை, நீ உண்ணவேண்டும். இங்கு இறைவனுக்குப் படைக்கப்படும் அமுது எதுவாயினும் உண்மை அன்பு எனும் நெய்யினைப் பெய்து படைத்தால் அது சிவமணம் கமழும் அமுதாகிவிடும் எனும் செய்தி தொக்கி நிற்கின்றது. ஆயர்களின் தயிரைக் கண்ணபிரான் களவாடி உண்டமையால் அவர்கள் பெரும்பேறு பெற்றனர் எனும் கருத்தையும் காணலாம்.
பொய்மையற்ற நின்னடியாரின் உள்ளங்களைக் கவர்ந்து உண்பதேபோன்று நான்தரும் இச்சோற்றினையும் உண்டருள வேண்டும் எனத்தாய் வேண்டுவதாக அமைந்த பாடல்.
ஏறூரு மவனினிது கோதாட்ட வருமெங்க
ளேறே!மு ழைக்குள்யாளி
…………………………………………..
கிண்ணத்து நறுமணஞ் சிவமணம் போன்மன்பு
கெழுனெய்ய ளாய்ச்சமைத்த
சோறமுது மாயர்தயிர் தொட்டுண்ட கள்வன்மகிழ்
சூழ்மருக! உண்டருள்கவே!
சொற்றொழும் பாளரது ளங்கவர்ந் துண்டல்போற்
சோறமுது முண்டருள்கவே.2
குழந்தையின் இனிய செயல்களும், அக்குழந்தை முருகப்பிரானாகியமையால் அவனுடைய தெய்வத்தன்மையும் விளங்கித்தோன்றுமாறு பாடப்பெற்ற அருமையான பாடல்கள் இவையாகும்.
சிறுகுழந்தை உணவுண்ண அவ்வளவு எளிதாக இயைவதில்லை. அதற்காக வெவ்வேறு விதமான நயமான சொற்களைக்கூறித்தான் தாய் உணவூட்ட வேண்டும். அவ்வாறே அடுத்த பாடல் அமைந்துள்ளதனைக் காணலாம்.
இவ்வுலகிலேயே உனக்கு அளிக்கப்படும் இவ்வுணவுதான் மிக்க உயர்வானது எனத்தாய் கூறுகிறாள். இது குமரப்பெருமானுக்கு மிக நயமாகப் பொருந்துகின்றது. ‘பாற்கடல் எனும் ஆழியைக் கடைந்து குடத்தில் அள்ளி எடுத்த அமுதமும் இதற்கு நிகரன்று குழந்தாய்! அந்தணர்கள் தாமியற்றும் வேள்விகளில் நெருப்பில் அவி எனச் சொரியும் எவையும் இதற்கு நிகரன்று.
‘திருத்தமான செந்தமிழின் உலகவழக்கு, செய்யுள் வழக்கு ஆகியனவும் இதற்கு இணையல்ல அப்பா! வள்ளியம்மை நின்னிடம் ஊடல்கொண்டபோதினில் செய்யும் தருக்கம் செறிந்த சொற்களே இதற்கு நிகராகும் என்போம்.
‘மேலும் சீர்காழியில் உமையம்மையின் ஞானப்பால் உண்டமையால் சிவஞானம் பெற்றுக் கூறிய பாடல்களும் (கலை) இதற்கு நிகராகும். கதிர்காமத்திற்கு வரும் நின் அன்பர்கள் பலரும் கனிந்து குழைந்து நின்னைத் துதிக்கும் சொற்களும் இதற்கிணையாகும்.
‘கூவும் சேவலைக் கொடியினிற்கொண்ட கோவே! இவ்வுணவைச் சிறிது உண்பாயாக’! என்று தாய்ப்பாசம் மீதூர, ‘உனது அருள்வடிவாகிய உடல் கொழுத்து நீ உயரமாக வளருவதற்காகவும் இதனைச் சிறிதே உண்பாயாக!’ என வேண்டுவதாக அமைந்த அழகிய பாடல்.
ஆழி கடைந்து குடம்நிறைத்த
அமுது மிதற்கு நிகரல்ல
அந்தண் வேள்வி அவிசொரியும்
அதுவு மிதற்கு நிகரல்ல
…………………………………..
காழி ஞானப் பால்குழைத்த
கலையு மிதற்கு நிகராகும்
கதிர் காமத் தன்பர்பலர்
கனிவும் குழைத்த திதுவாகும்
…………………………………
குறித்த அருண்மெய் கொழுத்துயரக்
கோவே சிறிதே யுண்டருளே!3
இதற்கும் மேல் நயமான சொற்களைக்கூறி தெய்வக் குழந்தையை உணவருந்த வேண்ட இயலுமோ?
இயலும் என்பதனை அடுத்த இனிமையான பாடல் நமக்கு உணர்த்துகிறது!
“ஆடியவாறே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் செய்யும் ஐயன் உயிர்களுக்குத் தன்னையடையும் பக்குவத்தை இந்த ஐவகைத் தொழில்களால் உண்டுபண்ணுகிறான். அதுபோன்றும் ஆரிய முனிவராகிய துர்வாச முனிவரின் வயிறு நிறையுமாறு கண்ணன் உண்டது போலும் நீயுண்ண வேண்டும்.
இதிலொரு அழகான தொன்மத்தை நயமாக இணைத்துள்ளார் புலவர். வனவாசத்தில் பஞ்சபாண்டவர்கள் இருந்தபோது சினத்திற்குப் பெயர்பெற்ற துர்வாச முனிவர் உரியபொழுது கழிந்தபின் தமது பெரும் குழுவினருடன் விருந்தினராகச் சென்றார். திரௌபதியிடமிருந்த அட்சயபாத்திரத்தில், அவள் எல்லாருக்குமளித்துத் தானும் உண்டுமுடித்தபின் அன்றைய தினத்திற்கு வேறு உணவைப் பெற இயலாது. அவர் உணவில்லாமையால் சினம்கொண்டு பாண்டவர்களை வைதிடாவண்ணம் கண்ணபிரான் திரௌபதிக்கு அருள்செய்தான். எவ்வாறெனில் அவள் கழுவிக் கவிழ்த்திய சோற்றுப்பானையில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சோற்றுப்பருக்கையை அவன் உண்டமையால் நீராடச் சென்ற முனிவரும் அவர் குழுவினரும் வயிறுநிரம்பப் பெற்றோராகி, வேறு உணவினை ஏற்காமல், பாண்டவரையும் திரௌபதியையும் வாழ்த்திச் சென்றார் என்பது புராணம். அதுவே இங்கு கூறப்பட்டது. முருகன் உண்பதனால் உலகமே உண்ணும் எனும் பொருளில் இக்கருத்து இங்கே கூறப்பட்டது.
இளம் கன்னிப்பெண்கள் காடுகளில் விளையாடுகின்றனர். அவர்கள் விளையாடும்போதெழும் ஓசை காடுகளில் ஒலிக்கின்றது. அவர்கள் விளையாட்டாகக் கூவி அதன் எதிரொலியை மலைகள் முழங்கக் கேட்டு மகிழ்கின்றனர். முருகன் மிகுதியான அருள் செய்வதும் அதுபோன்றதே.
மானிடரைப் படைத்தும், நின்னடியாராகிய அவர்கள் உனது பேரருளைப் போற்றிக் கொண்டாடிடவும், பயிர்களுக்கு மேகங்கள் பொழியும் மழைபோன்றும் இருப்பவனே!
வறுமையால் வாடும் தமிழ்ப்புலவர்கள் வயிறு நிறையுமாறு நீ ஒருவாய்ச்சோறாவது உண்பாயாக! நீயுண்ணும் இச்சோறு வள்ளியம்மை தரும் தினைமாவிற்கு இணையானது எனக்கொண்டு அதனை நீ உண்பாயாக!
ஆடுமி ருட்டிர ளயரப் பெரியோ
னாடியி ளைப்பதுபோ
லாரிய முனிவர ருந்தக்கண்ணன
ருந்திய முறையேபோற்
……………………………………
வாடுத மிழ்ப்புல வோர்வயி றார
வாய்ச்சோ றார்குகவே
வள்ளித ருந்தேந் தினைமா வெனவே
வாய்ச்சோ றார்குகவே.4
இவ்வாறெல்லாம் பலவித நயமான கருத்துக்களைக்கூறி குழந்தை முருகனை உணவருந்த வேண்டும் பகுதி சுவைமிகுந்ததாகும்.
பார்வை நூல்கள்:
1.பிங்கல நிகண்டு
2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்
(தொடரும்)