OLYMPUS DIGITAL CAMERA

மீனாட்சி பாலகணேஷ்

(குதலைமொழியாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு பருவமான குதலைமொழியாடல் எனும் இப்பருவம் பொருளற்ற மழலைகூறும் பருவமன்று; ஐந்தாறுவயதுப் பெண்குழந்தை பேசும் அழகான பேச்சுகளாகக் கொள்ளப்பட வேண்டும். அதற்கேற்ப தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் இப்பருவத்தைப் பாடியுள்ள ஒரேயொரு புலவரான கிருட்டிணையர் இதனைப் பொன்னூசல் பருவத்திற்குப் பின்னும் நீராடற்பருவத்தின் முன்பும் வருமாறு அமைத்துள்ளார். இதன் கருத்தை கா. நாகராசு அவர்கள் இப்பிள்ளைத்தமிழுக்கான தமது உரைநூலில் விளக்கியுள்ளார்.

‘குதலைமொழி என்பதற்கு மழலைமொழி எனப் பொருள்கொள்வதைக் காட்டிலும் இனியமொழி எனப் பொருள் கொள்வதே பொருத்தமெனப்படுகிறது. ஏனெனில் இப்பருவம் ஊசல் பருவத்துக்கும் நீராடற்பருவத்துக்கும் இடையில் வருகிறது. இவ்விரு பருவங்களும் குழந்தையின் ஐந்தாம் ஆண்டுமுதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளைப் பாடுவது. குதலைமொழியாடல் பருவம் பற்றியோ அது குழந்தையின் எவ்வாண்டுக்குரியது என்பது குறித்தோ நூல்களில் சொல்லப்படவில்லை. எனவே இதையும் ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளுள் ஒன்றாகவே கருதலாம். ஐந்தாம் ஆண்டிலிருந்து குழந்தை நன்றாகப் பேசத்தொடங்கிவிடும். எனவே அதை மழலை என்று கொள்ளாமல் இனியமொழி எனவே கொள்ளலாம்1,’ என்கிறார்.

குதலைமொழியாடல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாயினும் பெண்பால் பிள்ளைத்தமிழில் மட்டுமே சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆண்பால் பிள்ளைத்தமிழான கதிர்காமப் பிள்ளைத்தமிழில் ‘மொழிபயிலல்’ என ஒரு பருவத்தைக் கண்டோம். இதுவும் அதுபோன்றே புலவரின் விருப்பத்தின்படி இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.

இப்பருவத்தில் இரண்டு பாடல்களே உள்ளன. இவையிரண்டுமே பொருள் செறிந்த அருமையான பாடல்கள். பாடல்களைக் காணப்புகுமுன் தொடர்பான சில கருத்துக்களைக் கண்டு மகிழலாம்.

சொல், அது என்னவாக வேண்டுமாயினும் இருக்கலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கென்றேயான தனிப்பட்ட ஒரு பொருளுண்டு. அடியார்களின் பார்வை இத்தகைய கருத்தினுள் ஒரு அதியற்புதமான வடிவைக் காண்கின்றது.

            ‘சொல்லும் பொருளும் எனநட மாடும் துணைவருடன்
         புல்லும் பரிமளப் பூங்கொடியே2….’ என அபிராமி அன்னையைப் போற்றுகிறார் அபிராமி பட்டர்.

சொல் என்பது பேசப்படுவது; கேட்கப்படுவது – ஆகவே அது சக்தியின் அம்சமாக விளங்குவது; பொருள் ஆனது மனதால் மட்டுமே உணரக் கூடியது – ஆதலால் அது சிவபிரானின் அம்சமாவது. சொல்லின்றிப் பொருளில்லை! பொருளற்ற சொல்லுமில்லை! அவை ஒன்றினையொன்று இணைபிரியாதவை; பிரிய இயலாதவை! அதனால்தான் அன்னையும் ஐயனுமாக, சொல்லும் பொருளுமாக எனப் பிணைந்துள்ள சிவசக்தி ஐக்கிய வடிவத்தினை இப்பாடல் அழகுற விளக்கியருளுகின்றது.

மகாகவி காளிதாசரும் தமது இரகுவம்ச மகாகாவியத்தின் முதல் ஸ்லோகமாக இக்கருத்தையே முன்வைக்கிறார்.

            வாகர்த்தாவிவ சம்ப்ரக்தௌ வாகர்த்தா ப்ரதிபத்தயே
         ஜகத பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ3

‘இந்தப் பிரபஞ்சத்தின் தாய்தந்தையரான பார்வதி, பரமேஸ்வரர்களை நான் வணங்குகிறேன். அவர்கள் சொல்லும் பொருளும் என இணைந்திருப்பவர்கள்,’ என்பது எளிமையான விளக்கம்.

சொற்களின் பிறப்பு, அமைப்பு, பொருள் அனைத்துமே அறிவியல் நோக்கிலும் அதற்கும் அப்பாற்பட்டதொரு தத்துவ வேதாந்த முறையிலும் உணரப்படுவனவாகும்.

சொல்லின் தோற்றத்தைத் தமிழின் பழம்பெரும் முதன்மைநூலான தொல்காப்பியமானது விளக்கியுள்ளது. சொல்லின் அடிப்படையான எழுத்துக்களும் அவற்றுக்கான ஓசையும் உந்தியிலிருந்து எழும் காற்றானது தலை, தொண்டை, மார்பு ஆகிய இடங்களில் தங்கி பல், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய இடங்களில் படுவதனால் பிறக்கின்றன. இதற்கென மாத்திரைகள் (கால அளவைகள்) உண்டு. இது தவிர்த்து உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் மறைநூல்களில் மட்டுமே காணப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

இது எவ்வாறு? நான்குவிதமான சொற்கள் (வாக்குகள்) உண்டென தொல்காப்பியரின் குருவான அகத்தியர் கூறுகிறார். அவை

            ‘………. பைசந்தி மத்திமை வைகரியுஞ்
         சூக்குமையும் நாலுமிது வாக்கேயாகும்4,’ என்கிறார்.

பரா (சூக்குமை), பச்யந்தி (பைசந்தி), மத்யமா (மத்திமை), வைகரீ,  என்பன வாக்கு எனும் சொல்லின் பலவிதத் தோற்ற வடிவங்களாகும்.

இதனை லலிதா சஹஸ்ரநாமத்திலும் காணலாம்.

            ‘பரா ப்ரத்யக் சிதீரூபா பச்யந்தீ பரதேவதா
         மத்யமா வைகரீ ரூபா5,’ என்பன அன்னையின் மீதான நாமாவளிகளில் 366, 368, 370, 371 ஆகும். பராசக்தியான லலிதாதேவியே இந்த நான்குவிதமான சொல்வடிவங்களில் விளங்குகிறாள்.

இவற்றுள் மிக நுண்ணிய நிலையானது பரா அல்லது சூக்குமை எனப்படும்; இது ஞானிகள் தமது சிந்தையில் உய்த்துணரும் ஒலிவடிவமாகும். வெளிப்படையாகக் கேட்கவியலாதது; ஒலிவடிவமற்றது. மூலாதாரத்தில் விளங்குவது.

பைசந்தி எனப்படுவது உள்ளத்தினுள் தோன்றும் ஒலிவடிவம். சொல்லின் ஆரம்பகாலத்துக் கலங்கிய நிலை எனலாம். மூலாதாரத்தில் கிளம்பி நாபிக்கு வருவது பச்யந்தீ ஆகும்.

மத்திமையாவது சொல்லின் இடைப்பட்ட நிலை. மனதால் மட்டுமே உணரக்கூடியது. பச்யந்தி நிலையிலிருந்து இருதயத்திற்கு வரும் நாதம் மத்திமை.

வைகரி என்பது தெளிவாகச் செவிக்குக்கேட்கும் அட்சர வடிவான ஒலியாகும். மத்யமா ஆனது கழுத்திற்கு வந்தால் பீஜம் அல்லது அட்சரம் ஆகின்றது.

பரா எனும் சூக்குமையான வாக்கினை மேலான முனிவர்களால் மட்டுமே உணரவும் கிரகித்துக்கொள்ளவும் இயலும். இவையே வேத மந்திரங்களின் அடிப்படை ஆகும். அவை உச்சரிப்பிற்கேற்ற மந்திரங்களாக ‘வைகரி’ ரூபத்தில் வெளிப்படுமுன்பு பைசந்தி, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைகளில் உருப்பெற்று வளரும். இதனையே தொல்காப்பியர், ‘அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே6,’ என்றார்.

இந்த வைகரியே உந்தி, மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு இவற்றுள் இடையறாது சென்றுவரும் மூச்சுக்காற்றில் கலந்து பல், அண்ணம், நாக்கு, இதழ் இவைகளில் பட்டு பற்பல சொல்வடிவாகி உருப்பெறும். இதனையே பெற்றோர் தம் சிறுகுழந்தைகள் எழுப்பும் இனிய ஓசைகளிலும், பேசும் பொருளற்ற மழலையிலும், குதலை மொழியாகவும் உணர்கின்றனர். கேட்டும் மகிழ்கின்றனர்.

இன்னும் எளிதாகக் கூற வேண்டுமெனில், ‘அம்மா’ எனும் ஒரு சொல்லைக் கூற முற்படும்போது முதலில் அந்த ஒலியின் வடிவம் மனக்கண்ணில் சூக்குமையாக, நுட்பமாகத் தோன்றுகிறது. அடுத்து அதற்கு மட்டுமேயான அந்த அம்மாவின் உருவம் ஒலிவடிவமாக உள்ளத்தில் எழுகின்றது. இதுவே பைசந்தி அல்லது பச்யந்தி. பின்பு அது சொல்லாக ஒலியோடு நமது வாயிலிருந்து வெளிப்படும் முன்பு அதன் ஒலிவடிவு மனதில் தோன்றி  மத்திமை என உணரப்படுகின்றது. பின்பு ஒலியுடன் கூடிய அழுத்தமான சொல்லாக (வைகரி) வெளிப்படுகின்றது. இது செவிக்குத் தெளிவாகக் கேட்கும் அட்சர வடிவான ஒலி.

நாதமாக (ஓசையாக) உயிரோடு கூடியிருப்பது மொழித்தன்மை; மொழிக்கு இன்றியமையாதன சொற்கள் எனும் வாக்கு; அவை விந்து தத்துவமாகும் என்பன சித்தாந்த சாத்திரக் கருத்துக்களாகும். இதனையே சிவஞான சித்தியார்,

‘சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்7 என்கின்றது.

நாம் எண்ணும் எண்ணங்களும் அவை ஒலிவடிவம் பெற்று நம்மால் பேசப்படுதலும் சிவசத்தியின் அம்சங்களே, தத்துவங்களே எனும் பேருண்மை இதனால் புலனாகும்.

உண்மைக்காதலின் உயர்வைப் போற்றிப் பாடியுள்ள ‘பாயுமொளி நீயெனக்கு,’ எனும் பாடலில் பாரதியார், ‘பேசுபொருள் நீயெனக்கு, பேணுமொழி நானுக்கு8,’ என்று சொல்-பொருளின் தொடர்பினைப் பாடியுள்ளார்.

சிவசக்தி வடிவமான பிரணவத்தின் – ஓங்காரத்தின் – முழுமுதற்பொருளாக, அதன் தூல வடிவமாகவே விளங்கும் விநாயகப்பெருமானே அனைத்து எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் முழுமுதற் பொருளாவான். இக்கருத்தினை அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று அருமையாக விளக்குகிறது.

வேதவிநாயகப்பெருமான் நமது புத்திக்கு (புந்தி) எட்டாத புண்ணியவெளியில் திகழ்ந்து அருளுபவன். நாபியை இடமாகக் கொண்டு நாதம் எனப்படும் அறிவே வடிவாக இருக்கும் சூக்குமை, உந்தியில் உற்பத்தியாகி பிராணவாயுவை வடிவாகக் கொண்ட பைசந்தி, நெஞ்சையும் கண்டத்தையும் இடமாகக் கொண்டு அட்சர வடிவினை ஒழுங்குபட நிறுத்தி, செவிக்குக் கேளாமல் உள்ளறிவாக நிற்கும் மத்திமை, நாக்கினடியிலிருந்து பிறந்து ஒலிவடிவம் பெறும் வைகரி எனச் சொற்கள் நான்குவகைப்படும்.

‘இந்த நாலுவிதமான எழுத்துக்களுக்கும், மிகுதியான நூல்களிலுள்ள எழுத்துக்களுக்கும், பழமையான நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்களுக்கும், குற்றமற்ற சமஸ்கிருத மொழியில் உள்ள எழுத்துக்களுடன் பதினெட்டுவகை நிலங்களில் வழக்கிலுள்ள அத்துணை எழுத்துக்களுக்கும் மேற்பட்டு விளங்கி ஓங்காரப்பொருளாகவும் அவற்றின் தலைவனாக அவற்றை ஆள்பவனாகவும் விளங்கி, மேலான ஞானத்தின் மூல ஆதாரம் எனும் இடத்தில் நமது புத்திக்கு எட்டவியலாத ஒரு புண்ணியவெளியில் அடைவதற்கு அரிய பரம்பொருளாக இருக்கும் விநாயகப் பெருமானே!

‘குற்றமற்ற புகழைக் கொண்டவனே! வெற்றி அளிப்பவனே! செங்கீரை ஆடியருளுக!’ என அடியார் வேண்டுவதாக அமைந்த பொருள்செறிந்த பாடல் இது.

            ‘நாதத் தலத்திலெழு பறையினொடு பைசந்தி
                   நல்லமத் திமைவைகரி
             நாலெழுத் துக்கும்வெகு நூலெழுத் துக்குமுது
                   நான்மறை எழுத்தினுக்கும்
         ……………………………………..
         போதத்தின் மூலவா தாரத் தலத்திலே
                  புந்திக்கும் எட்டாததோர்
             புண்ணிய வெளிக்குளே ………..
         தீதற்ற விசைகொளும் அரும்பாத்தை புரிமுதல்வ
                   செங்கீரை ஆடியருளே9
         ………………………………………..’

எல்லாம்வல்ல சிவப்பரம்பொருளிடமிருந்து முதலாவதாக உண்டாகிய படைப்பு ஓம் எனும் பிரணவ நாதமாகும். அந்த ஓம் எனும் ஒலியின் வரிவடிவமே விநாயகரின் திருவுருவம். ஆகவே இவர் ஓங்கார ரூபன் எனவும் பிரணவ கணபதி எனவும் அறியப்படுகிறார்.

எழுத்து, ஓலி, ஓசை, சொற்கள் ஆகியவற்றின் பிறப்பினை இவ்வாறாக அறிந்துகொண்டு சிவகாமியம்மை பிள்ளைத்தமிழின் பாடல்களைக் காணப்புகலாம்.

மூன்று பிள்ளைத்தமிழ் நூல்கள் சிவகாமியம்மைமீது இயற்றப்பட்டுள்ளதெனக் கூறுவர். அவற்றினை இயற்றியோர்:

  1. நல்லதுக்குடி கிருட்டிணையர்.
  2. ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்.
  3. மு. ரா. அருணாசலக் கவிராயர்.

இருப்பினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவைகளில் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாததாகும்.

நாம் இங்கு காணப்போவது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றிய நூலின் பாடல்களைத்தாம். ஏனெனில் முன்பே கூறியதுபோல, இவர் மட்டுமே குதலைமொழியாடல் பருவத்தைப் பாடியுள்ளார். மற்றதில், இரண்டாவது நூல் வழக்கமான பெண்பால் பிள்ளைத்தமிழுக்கான பத்துப் பருவங்களையே கொண்டமைந்துள்ளது. மூன்றாவது காணக் கிடைக்கவில்லை.

முதல்பாடல் சிவகாமி அன்னையிடம் புலவரின் வினாக்களாகவே அமைந்துள்ளது:

‘தாயே! முழுநிலவு பொழியும் இனிய அமுதக்கிரணங்களும், தெள்ளிய அலைகளைக்கொண்ட பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் முன்பொருகாலம் கடைந்தபோழ்து அதிலிருந்து கிடைத்த தேவாமிர்தமும் முத்தியைத்தர வல்லனவோ?

‘அவ்வமுதத்திற்கு நிகரானவை எனக்கூறப்படும் மா, பலா, வாழை எனும் முக்கனிகளொடு சர்க்கரையும் பசுந்தேனும் சேர்த்தாலும் அவை இருவினைகளாலும் வரும் துன்பங்களை நீக்கி இன்பத்தைத் தருமோ?

‘காமதேனுவின் பாற்சுவையும் கிளியானது கொஞ்சிப்பேசும் மொழியும் பாசம் எனும் ஆணவமலமாகிய இருளை நீக்கிவிடுமோ?

‘ஆனால், (நீ பேசிடும் குதலைமொழியானது),

‘தவறுகளைத் திருத்தும்; இம்மைக்கும் மறுமைக்கும் முத்திதரும். இனிச்சொல்ல வேறென்ன உள்ளது? ‘தம் குழந்தைகள் பேசும் இனிய சொற்களைக்கேட்பது செவிக்கு இன்பம் எனும் உண்மை பொய்யாகுமோ? (ஆகாது; அதுவே உண்மை!)

‘குழலிசையும் யாழிசையும் இனியதன்று; இவற்றிலும் சிறந்த உனது பவளவாயினின்றும் பெருகும் குதலைமொழியைப் பேசியருள்வாயாக!

‘குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.”

          முழுமதியின் அமுதமும் தெண்டிரைப்
                   பாற்கடலில் முன்கடைந்திடும் அமுதமும்
         முத்திதருமோ? அதனையொப்பென உரைத்திடினும்
                   முக்கனி சருக்கரையொடும்
         …………………………………………………..
         வழுவகலும் இம்மைக்கும் மறுமைக்கும்
                   முத்திதரும் மற்றினி உரைப்பது
         ………………………………………………….
         குழலினிது யாழினிதுமன்று நின்பவளவாய்க்
                   குதலைமொழி ஆடியருளே10!
         ………………………………………………

மக்கட்பேறு எனும் திருக்குறள் அதிகாரத்தின் கருத்துக்கள் மிகப்பொருத்தமாகப் பாடலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

            ‘……….. ……….. …………… மற்றவர்
         சொற்கேட்டல் இன்பம் செவிக்கு11.’
‘குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
         மழலைச் சொல்கே ளாதவர்12.’

கருத்தினுள் வாங்கிக்கொண்டு சிந்தித்து இன்புற வேண்டிய பாடல் இதுவாகும்.

அடுத்த பாடல் மொழி பிறக்கும் விதத்தினை விளக்கிக் கூறுகிறது.

‘சொல்லின் நுண்ணிய நிலையான சூக்குமையாக முதலில் இருந்து, பின் பைசந்தி எனப்படும் கலங்கிய தெளிவற்ற நிலையிலெழுந்து, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைச்சொல்லாகி, இறுதியில் தெளிவான வைகரியாகி ஒலிக்கும் வாக்கானது, கொப்பூழ், மார்பு, கழுத்து, உச்சி, மூச்சுக்காற்று எப்போதும் சென்றுவரும் நாசித்துவாரங்கள் ஆகியவற்றில் கலந்து, பல், அண்ணம், உதடுகள், நாக்கு என்பவற்றுடன் கலந்து, வாயினில் ஒலிவடிவான சொற்களாக உருப்பெற்று ஒலிக்கும்.

‘இத்தகைய மழலைச் சொல்லினை தம் குழந்தைகள் பேசுவதனைக்கேட்டு, கண்டும், அனுபவித்தும், பார்த்தும், அன்னை தந்தையர் பேரின்பம் எய்துவர்.’

இவ்வாறு பேசும் மழலையர் பெற்றோரின் தெய்வங்களே அன்றோ? அதனையே அடுத்துக் கூறிப் போற்றுகிறார்.

‘எனக்கு வரம்தர வந்த தாயும் தந்தையும் நீ! நான் போற்றி வழிபடும் தெய்வமும் நீயே! குறைவில்லாத எனது உயிரும் நீ! பருவுடலும் நீ! உடலில் உறைந்துள்ள ஐம்புலன்களும் நீ! இனிமையாகக் கூவிடும் குரல்படைத்த கிளியும் நாணிடும் உனது குதலைமொழியைப் பேசியருளுகவே! குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.’ எனும்  பாடல்.

சூக்குமை விளங்கும் பைசந்தி மத்திமையொரு
                   துலங்கும் வைகரி ஆகியே
         சொல்லரும் இலஞ்சி யுரனொடு கண்டம்
                   உச்சி ஒலிதொடர் நாசியொடு கலந்தே
         வாக்கினில் எழுந்துபல் அண்ணம் இதழ்
                   நாவினில் வழங்கும் மழலைச் சொல்லுமேல்
         …………………………………………………..
                   உடலினில் படரும் ஐம்புலனும் நீயே!
         …………………………………
         குழகன் மகிழ்சிவ காமசுந் தரிநின்
                   மழலைவாய்க் குதலை மொழியாடி அருளே13!

நம் தமிழகத்தில் ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,’ எனும் வழக்குண்டு. இங்கு தெய்வத்தையே குழந்தையாக்கிப் போற்றி, அக்குழந்தை வடிவிலும் தெய்வத்தை உணரும் அடியாரின் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது.

மேலும் உரையாசிரியர் நாகராசு அவர்களின் கருத்துப்படி, தனது பாடல்களான மழலைச் சொற்களைத் தாயும் தந்தையுமாக விளங்கும் இறைவி ஏற்று மகிழ வேண்டுமெனும் விருப்பத்தையும் புலவர் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.

(தொடரும்)

___________________________________

பார்வை நூல்கள்:

1. கா. நாகராசு, 2015. நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் வகாமியம்மை பிள்ளைத்தமிழ்- மூலமும் உரையும்.

2. அபிராமி பட்டர்- அபிராமி அந்தாதி.

3. காளிதாசர்- இரகுவம்சம்

4. அகத்தியர்

5. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

6. தொல்காப்பியர் – தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்.

7. அருணந்தி சிவாச்சாரியார்- சிவஞான சித்தியார்

8. பாரதியார்- கவிதைகள்.

9. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

10, 13. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-குதலைமொழியாடல் பருவம்.

11, 12. திருவள்ளுவர்- திருக்குறள்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *