புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

எல்லாம் இருந்தும் என்ன பயன்?

முன்னுரை

திருக்குறள் இரண்டடிக் குறட்பாவாகத் தோன்றுவதால் அதன் பொருளைப் பலரும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம் எனக் கருதுவது இயல்பே. உண்மையில் ‘குறுகத் தரித்தது’ என்பதை உணர்வார் சிலரே. அவ்வாறு நோக்கியுணர்ந்து உரைகண்டவர்களில் பரிமேலழகர் தலையானவர். ஒரு சீருக்கும் மற்றொரு சீருக்கும் ஓரடிக்கும் மற்றொரு அடிக்கும் நிலவும் அல்லது நிலவ வேண்டிய யாப்பு, தொடைவிகற்பம், பொருண்மை, பொருத்தம் ஆகியவை செம்மையாக இருக்கிறதா என்பதைப் பொறுமையுடனும் ஆழ்ந்த புலமை மற்றும் சிந்தனையுடன் அணுகுவது அவர்க்கு இயல்பு. அவ்வாறு, எல்லார் பார்வைக்கும் ஒரே மாதிரியாகத் தோன்றிப் பரிமேலழகருக்கு மட்டும் மாறுபட்டுத் தோன்றி உரைகாணப்பட்ட குறட்பா ஒன்றினைக் காணலாம்.

திறனறியும் குறட்பாவும் உரையும்

‘அன்புடைமை’ என்னும் அதிகாரத்தில் ஒன்பதாவது குறளாக அமைந்திருப்பது,

 “புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில வர்க்கு” (79)

என்னும் குறட்பா. இதற்கு,

  • யாக்கை அகத்து – யாக்கை அகத்தின்கண் (நின்று)
  • உறுப்பு – (இல்லறத்திற்கு உறுப்பாகிய)
  • அன்பு – அன்பு
  • இலவர்க்கு – உடையரல்லாதவர்க்கு
  • புறத்து உறுப்பு எல்லாம் – ஏனைப் புறத்தின் கண் நின்று உறுப்பாவன எல்லாம்
  • எவன் செய்யும் – (அவ்வறம் செய்தற்கண்) என்ன உதவியைச் செய்யும்?

எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

பொழிப்புரை நுட்பம்

  • குறட்பாவில் ‘உறுப்பு’ என வாளா கூறியிருக்க, பரிமேலழகர் ‘இல்லறத்திற்கு உறுப்பு’ என உரை காண்கிறார். அதிகாரம் அன்புடைமையெனினும், இயல் இல்லறவியல் என்பதனை நோக்கி. இல்லறம் அன்பின்றிக் கடைபோகாது ஆதலின் ‘இல்லறத்தின் உறுப்பு’ என நுண்ணியம் காண்கிறார்.
  • ‘அன்பு இலவர்க்கு’ எனக் குறட்பாவில் இருக்க, ‘அன்பு உடையரல்லாதார்க்கு’ என உரை காண்கிறார். அன்பாகிய பண்பினை ‘உடைமை’ என உருவகம் செய்யும் திருவள்ளுவர் கருத்திற்கு (அன்புடைமை) இயைய அன்பினை ஓர் உடைமையாகக் கொள்கிறார்.
  • ‘அகத்துறுப்பு’ ‘புறத்துறுப்பு’ என நிற்க பரிமேலழகர் ‘நின்று’ என்னும் சொல்லை இருவழியும் வருவித்து உரை காண்கிறார்.

பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

“புறத்துறுப்பாவன – இடமும் பொருளும் ஏவல் செய்வாரும் முதலாயின. துணையோடு கூடாதவழி அவற்றாற் பயனின்மையின் ‘எவன் செய்யும்’ என்றார். உறுப்புப் போறலின் உறுப்பு எனப்பட்டன. “யாக்கையில் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இலாதார்க்கு என்று உரைப்பாரும் உளர்., அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக”

விளக்கவுரையில் கண்ட உரையருமை

  • இல்லறத்தான் அறம் செய்வதற்கான கருவிகள் இடம், பொருள், ஏவல் என்னும் மூன்றுமாம். இந்தக் கருவிகள் ‘அன்பு’ என்னும் மூலக்கருவியாகிய இல்லறத் துணையின்றிச் செயல்படாது. செயல்படினும் பயனில்லையாம். இதனைத் ‘துணையோடு கூடாத வழி அவற்றாற் பயனில்லை என்னும் தொடரால் குறிக்கின்றார்.
  • அன்பு அகத்துறுப்பாதலின் இவை புறத்துறுப்பாயின.
  • ‘‘எல்லாம்’ (என்னும் பன்மையால்) அவை மூன்றாக இருப்பினும் அன்பில்லாதவழிப் பயனில்லை என்பார் ‘எவன் செய்யும்’ என்று எழுதுகிறார்.
  • முதலோடு இணையாதவழிச் சினை வினை சிறக்காது. அன்பென்னும் முதலுக்கு இடம், பொருள், ஏவல் என்பன உறுப்புப்போலச் செயல்படுவதால் ‘உறுப்பு’ என்றாராம் திருவள்ளுவர்.
  • பிறரெல்லாம் புறத்துறுப்பு என்பதற்குக் கண் முதலிய உறுப்புக்கள் எனப் பொருள் கண்டதனை ஏற்றுக்கொள்ளாத பரிமேலழகர் மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு ‘யாக்கையில் கண் முதலிய உறுப்புக்களெல்லாம் என்ன பயனைச் செய்யும்? என உரைப்பாரும் உளர்” என எழுதி “அதற்கு (அவ்வுரைக்கு) இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக’ எனக் குறிப்பாகச் சுட்டி மறுக்கிறார். அகத்துறுப்பு அன்பு என்பதில் மாறுபாடு காணாத பரிமேலழகர் புறத்துறுப்பு எவை என்பதில் மாறுபடுகிறார்.

பரிமேலழகரும் இயைபும்

ஆசிரியர் பரிமேலழகர் ‘நோக்கு’ என்னும் திறனாய்வுக் கொள்கையை அடிப்படையாக வைத்தே உரைகாண்கிறார். ‘இயைபு’ என்றால் பொருத்தம். குறட்பாவில் பயின்று வந்துள்ள அசை முதலாக அனைத்துறுப்புக்களின் பொருத்தத்தை ஆராய்கிறார். ஒருமை பன்மை மயக்கத்தை ஆராய்கிறார். உவமப் பொருத்தத்தை ஆராய்கிறார். செய்வினை, செயப்பாட்டு வினை பற்றி ஆராய்கிறார். தன்வினை, பிறவினைகளைப் பற்றி ஆராய்கிறார். இத்தகைய பல நுண்ணியங்களை அவரது உரையில் காணலாம். உரை சொல்வார் பாட்டின் இயைபறிந்து சொல்ல வேண்டும் என்பது அவர் உரைக்கொள்கை. அத்தகைய  கொள்கையைப் பின்பற்றும் அவர், அதனைப் பின்பற்றாது எழுதப்படட உரைகளைப் பல இடங்களில் மறுத்துரைக்கின்றார். குறட்பாவில் எப்படியெல்லாம் அவர் இயைபு காண்கிறார் என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் அறியலாம்.

  • ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்’ (643) என்னும் குறட்பாவில், ‘சொல் தகை அவாய்’ எனப் பிரித்து ‘சொல்லானது சில குணங்களை அவாவி’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார். எழுதிச், சொல் அவாவும் அதாவது சொல்லுக்கு இருக்க வேண்டிய உயர்பண்புகளைப் பட்டியலிடுகிறார். பிறரெல்லாம் ‘கேட்டாரைப் பிணிப்பதாகிய தகையவாய்’ எனப் பன்மையாக்கி உரை கூறினர். பரிமேலழகர் அப்படி ‘தகையவாய்’ எனப் பன்மையாகக் கொண்டால் ‘அப்பன்மை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையவில்லை’ என இயைபின்மை காட்டுகிறார்.
  • ‘எற்று? என்று இரங்குவ செய்யற்க’ (655) என்னும் குறட்பாவிற்குப் ‘பின்னால் நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக, மயங்கிச் செய்தால், அங்ஙனம் நினைந்து வருந்தற்க’ என்று பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம் ‘நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக மயங்கிச் செய்தால் தொடர்ந்து செய்யாது ஒழிக’ என உரை கண்டார். பரிமேலழகர், தவறுகளைச் செய்து விட்டு வருந்துவதுதான் இயல்பாதலால் அத்தவறுகளைத் தொடர்ந்து செய்யாதிருப்பது முந்தைய கருத்தோடு இயையவில்லை என்பார் ‘பின் தொடர்தற்குச் செய்வானாயின் அவைபோல்வனவும் செய்யாமை நன்று” எனப் பிறரெல்லாம் இயைபற உரைத்தார்’ என இயைபின்மை சுட்டுவார்.
  • “ஊறொரால் உற்றபின் ஒல்காமை’’ (662) என்னும் தொடருக்குப் பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும் தெய்வத்தான் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையும் ஆகிய இரண்டும்’ எனப் பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம், ‘ஊறொரார் எனப் பாடம் ஓதி உரைகண்டார். ‘ஊறொரால்’ என்பதும் ‘ஒல்காமை’ என்பதும் இணைந்து இரண்டு என்னும் செவ்வெண்ணோடு பொருந்தியது. ‘ஊறொரார்’ என்னும் உயர்திணைப் பன்மை என்றால் பின்வரும் சொல் ஒல்கார் என்றிருந்தால் சரி. அது ‘ஒல்காமை’ என இருப்பதால் அதனோடும் பொருந்தாது. மேலும் செவ்வெண்ணும் பொருந்தாது. “இதனை ஊறொரார் எனப் பாடம் ஓதுவாரும் உளர். “அஃது ஒல்காமை என்னும் எண்ணோடும் இரண்டு என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்” என இயைபின்மை காட்டுவார்.
  • “அங்கணத்துள் உக்க அமிழ்து” (720) எனத் தொடங்கும் குறட்பாவில் அல்லினத்தார் முன் எதனையும் சொல்லற்க, அவ்வாறு சொல்லப்படும் சொல் தூய்மையற்ற முற்றத்தின்கண் உக்க அமிழ்து’ என உரையெழுதினார். பிறரெல்லாம் எதனையும் சொல்லற்க அது தூயதல்லாத முற்றத்தின்கண் அமிழ்தினைக் கொட்டியதுபோல’ என்று உரையெழுதினார். ‘உக்கப்பட்ட அமிழ்து’ என்பது பொருளுவமை. ‘அமிழ்து உக்கினாற் போல என்றால் அது வினையுவமை. ‘பிறரெல்லாம் ‘கொளல்’ என்பதைத் தொழிற்பெயராக்கி உரைத்தார். அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருளுவமையோடு இணையாமை நோக்கிற்றிலர்” என இயைபின்மை சுட்டுவார்.
  • “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்” (926) என்னும் குறட்பாவிற்கு உறங்கினார் செத்தாரின் வேற்றுமை இல்லாதது போலக், கள்ளுண்பார் நஞ்சுண்பாரினும் வேறல்லர் என்று உரை காண்கிறார். பிறரெல்லாம் நிரல்நிறையாக்கிப் பொருள் உரைப்பர். “அதிகாரப் பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக் கூறல் பயனின்றாகலானும் சொற்கிடக்கை நிரல்நிறைக்கு ஏலாமையானும் அஃது உரையன்மை அறிக” என்று அணியின் இயைபின்மை சுட்டுவார்.

இவ்வாறு குறட்பாவின் எல்லாவகையான இடுக்குகளிலும் நுட்பமாகப் பொருத்தப்பாட்டைக் காணும் இயல்பு ஏனைய உரையாசிரியர்களின் உரைகளில் காணப்படுவதாகத் தெரியவில்லை. இந்த நுண்ணோக்குத்தான் அவருரையின் தனிச்சிறப்பாகவும் கொள்ளப்படுகிறது.

பரிமேலழகரின் உரையருமை

  • ‘அறம் அன்பில்லாத உயிர்களைக் காயும்’ என்றும், ‘அன்பில்லாத உயிர் தளிர்க்காது’ என்றும் ‘அன்பில்லாதார்க்கு உடம்பு எலும்பினைத் தோலால் போர்த்தது போலாம்’ என்றும் முன்பின்னாக அன்பின் பேராற்றலையும் தேவையையும் கூறிய திருவள்ளுவர் நிறைவு செய்தற்பொருட்டு அன்பில்லாத நிலையில் புறத்துறுப்பால் பயனில்லை என்பதையும் வலியுறுத்துகிறார். எனவேதான் அன்புடைமை என்னும் அதிகாரத்துள் 77, 78, 79, 80 ஆகிய நான்கு குறட்பாக்களையும் ஓரலகாகக் கொண்டு ‘இவை நான்கு பாட்டானும் அன்பில் இல்வழிப் படும் குற்றம்” கூறப்பட்டது’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார்.
  • உடம்புக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., வாய்க்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., கண்ணுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., மூக்குக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., செவிக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., இவ்வாறு ஐம்புலன்களுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லாதபோது அவற்றைப் புறத்துறுப்புக்கள் எனக் கொள்வது பொருந்தாது என அவ்வுரையின் இயைபின்மை கூறி, இல்லறத்தில் இடம், பொருள், ஏவல் என்னும் புறத்துறுப்புக்கள் துணைக்கருவிகளாயினும் உயிர்த்துடிப்பாகிய அன்போடு இணைந்து செயல்பட்டாலே இல்லறப் பயனாகிய அறம் நிறைவுறும் என்பது அவர் கருத்து.

நிறைவுரை

கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசருக்குப் பரிமேலழகர் காலத்தால் முந்தியவராயினும் பிந்தியவராயினும் இந்தக் குறட்பாவுக்குப் பரிமேலழகர் எழுதிய கருத்தினை அப்படியே உட்கொண்டு,

“இல்லானுக்கு அன்பு இடம் பொருள் ஏவல் மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும்? – நல்லாய்!
மொழியிலார்க்கு ஏது முதுநூல்? தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு?”  (நன்னெறி15)

என்னும் வெண்பாவில் ‘நூலுக்கு மொழியும் ஒளிக்கு விழியும் போல’ இல்லறத்தானுக்கு அன்பு என உவம அளவையால் விளக்கிக் காட்டியிருக்கும் சதுரப்பாடு நோக்கத்தக்கது. “கொடுக்கணுங்கற மனசு வேணுமில்ல” என்ற வழக்கில் புறத்துறுப்புக்களின் அமைவிடம் நோக்குக. புறத்துறுப்புக்கள் என்பன ‘மெய், வாய், கண், மூக்கு, செவி என்பதாகக் கொள்ளாமல் “இடம், பொருள், ஏவல் என்பனவே என அவர் எழுதிய நுட்பமே இக்குறட்பாவின் உரையருமையாகும். இவ்வாறு படைப்பின் நுட்பம் காண்பதன் மூலம் படைப்பாளனின் உள்ளம் காண முயல்வது பரிமேலழகருக்கு இயல்பு என்பதை இதனால் அறியலாம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *