Category: பரிமேலழகர் உரைத் திறன்

  • பரிமேலழகர் உரைத்திறன் – 25

    பரிமேலழகர் உரைத்திறன் – 25

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகரின் உவமத் திறன்

    முன்னுரை

    சொல்லவரும் கருத்து, கற்பாருக்கு மயக்கமின்றிப் புலப்பட வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவதே உவமம் ஆகும். தொல்காப்பிய எழுத்ததிகாரத்திலோ சொல்லதிகாரத்திலோ இலக்கண விளக்கத்திற்காகத் தொல்காப்பியர் உவமத்தைக் கையாளவில்லை. ஆனால் பொருளதிகாரத்தில் பதின்மூன்று இடங்களில் பதின்மூன்று உவமங்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார். இது தனித்த ஆய்வுக்கு உரியது. உவமத்தைச் செய்யுளுக்கு அணியாகக் கொள்வது வடமொழி வழக்கு. அது தமிழிலும் விரவியது. அதாவது உவமப்பயன்பாடு தமிழ் வழக்கு. அதனைச் செய்யுளுக்கு அணியாகக் கொள்வது வடமொழி வழக்கு. தொல்காப்பியத்தில் உவமம் என்ற சொல்லே பயன்பட்டு வந்திருக்கிறதேயன்றி ‘உவமை’ என்ற வழக்கு இல்லை. ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்னும் நூற்பாவில் மட்டும் ‘உவமத்தின் தன்மை’ என்ற பொருளில் அச்சொல் பயின்று வந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் உவமத்தைப் பழந்தமிழ் வல்லார் பொருட்பகுதியாகவே கருதியிருக்கின்றனர் என்பது தெளிவாம். ‘உவம விளக்கம்’ என்னுந் தலைப்பில் உவமத்தை நுட்பமாக ஆராய்ந்திருக்கும் அறிஞர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள், மிகத் தெளிவானதொரு கருத்தினை முன்னெடுக்கிறார். “உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். தருக்க நூலோர் உவமத்தை ஓர் அளவையாகக் கொள்வர். அலங்கார நூலோர் அதனை ஓர் அலங்காரமாகக் கொள்வர். தமிழிலக்கண நூலோர் அதனைப் பொருள் புலப்படுக்கும் கருவியாதல் பற்றிப் பொருளுறுப்பாகக் கொள்வர்” என்பது அவர் ஆய்வு. செய்யுளியலும் அது தொடர்பான உவமவியலும் தொல்காப்பித்துள் பொருளதிகாரப் பகுதியில் அமைந்திருப்பதும் நாட்டார் அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கக் கூடும். மேலும் தொல்காப்பியர் உவமத்தை உவமவியலில் மட்டும் ஆராயாமல் அகத்திணையியல், பொருளியலிலும் ஆராய்ந்திருக்கிறார் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. இந்த அடிப்படையில் திருக்குறள் பரிமேலழகர் உரையில் குறட்பாக்களின் பொருள் விளக்கத்திற்காகப் பரிமேலழகர் பயன்படுத்தும் உவமங்கள் சிலவற்றைப் பற்றிய ஆய்வுத் தொகுப்பு இக்கட்டுரைத் தொடரின் இறுதிக் கட்டுரையாக அமைகிறது.

    உவமப் பயன்பாட்டில் திருக்குறள்

    திருக்குறளில் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள உவமங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. அது என்ன தனித்தன்மை? திருக்குறள் கருத்துக்களைத் திருவள்ளுவரால் காட்டப்பட்டிருக்கும் உவமங்களைத் தவிர்த்துப் பிற உவமங்களைக் கொண்டு விளக்க இயலாது. அவர் காட்டியிருக்கும் உவமங்களைக் கொண்டு பிற கருத்துக்களோடு பொருத்திக் காட்ட முடியாது. நுட்பமான இப்பிணைப்பு திருக்குறளில் மட்டுமே காணக்கூடியதாகும். ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்னும் உலகவழக்கை மாற்றிப் ‘பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று’ (273) என்றது ஒரு சான்றாகலாம். கருத்து விளக்கத்திற்காகவே திருவள்ளுவர் உவமங்களை நன்கு சிந்தித்துத் திட்டமிட்டே பயன்படுத்தியிருக்கிறார் என்பது இதனால் புலனாகக் கூடும்.

    அழகர் உரையில் உவமப் பயன்பாடு

    திருக்குறள் பொருள் விளக்கத்திற்காகப் பரிமேலழகர் பல்வகையான உவமங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். உலகவழக்கிலிருந்தும் செய்யுள் வழக்கிலிருந்தும் உவமங்களை எடுத்துக் கொள்கிறார். உரையெழுதும் திருக்குறளிலிருந்தே உவமங்களை எடுத்துக் கொள்கிறார். இலக்கியமாகிய திருக்குறளுக்கு இலக்கணத்தை உவமமாக்கி விளக்கம் தருகிறார். சங்க இலக்கிய வரலாற்று நிகழ்வுகளை உவமமாகக் கொள்கிறார். இலக்கியப் பதிவுகளையும் வரலாறாகக் கருதி உவமமாக்கிக் கொள்கிறார். தமிழ் மருத்துவத்தையும் சமுதாயத்தில் நடப்பியலில் உள்ள மருத்துவச் சிந்தனைகளையும் உவமமாக்கி விளக்கம் தருகிறார். இவ்வாறு அவர் தமது உரையில் கருத்து விளக்கத்திற்காக எடுத்தாளும் உவமங்கள் சிலவற்றை ஆராய்வதன் மூலம் இலக்கிய உரைகளிலும் உவமம் செலுத்தும் ஆளுமையைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாகக் கவிதைகளில்தாம் உவமங்களைக் காண்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வேடு என எந்தப் பதிவுகள் ஆனாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் உவமங்களின் ஆழத்தை அறிந்து துய்த்தல் வேண்டும் என்பதை முன்னெடுப்பதும் இக்கட்டுரையின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

    உவமத்தில் உலாவரும் உலகியல்

    ஒரு பொருளைக் கேட்டு வாங்கிச் சென்று திருப்பித் தந்துவிடுதல் உலகியல் நிகழ்வு. சிலர் வாங்கிப் போவதோடு சரி. திரும்பத் தரமாட்டார்கள். பொருளைக் கொடுத்தவன் அவர்களைக் காணும் பொழுதெல்லாம் அவன் நினைவில் ‘இவன் அந்தப் பொருளைப் பெற்றுச் சென்றவன் அல்லவா?’ என அவன் வாங்கிச் சென்ற பொருள் நினைவுக்கு வரும்.’ ‘அவனைப் பார்க்கிற பொழுதெல்லாம் அவன் வாங்கிச் சென்ற புத்தகம் அல்லவா நினைவுக்கு வருகிறது’ என்பது போல! இந்த உலகியலை உற்று நோக்கிய பரிமேலழகர் பொருட்பாலில் அமைச்சனின் பழக்க வழக்கம் பற்றிக் கூறும் குறட்பாவில் இதனை உவமமாகப் பதிவு செய்திருக்கிறார்.

    “போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது” (693)

    “அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வராமல் காக்க; அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.”

    (மேற்கண்ட தவறுகளைப் பற்றி) ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது, தகாதென்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றால் தெளிவித்தாலும் கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் ‘யார்க்கும் அரிது’ என்றார்.

    என விளக்கவுரையில் அழகரின் உலகியல் நோக்குப் புலப்படுவதைக் காணலாம். அரசு மந்தணங்களை மாற்றாரிடம் வெளிப்படுத்துதல் என்பது அறைபோதல், அரசுனுக்குரிய மகளிரோடு உறவு கொள்வதற்கு உரிமையோடு மருவல்.  அருமையான பொருளை அபகரித்தலுக்கு அரும்பொருள் வௌவல். இவையே அரிய பிழைகள். இத்தகைய பிழைகளை இவன் செய்திருப்பானோ என அரசன் ஐயுறா வண்ணம் அமைச்சன் ஒழுக வேண்டுமாம். ஒருமுறை ஐயம் ஏற்பட்டுவிடின் பிறகு மன்னனைத் தெளிவித்தல் அரிதாம். இந்தக் கருத்தினை விளக்கத்தான் பரிமேலழகர் உலகியல் சார்ந்த ‘கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போல’ என்னும் உலகியல் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

    இலக்கணத்தை உவமமாகக் காட்டுதல்

    ‘அண்ணல் காந்தியடிகளின் வழி செல்வோம்’ என்றால் எல்லாரும் தண்டி யாத்திரை போகவேண்டும் என்பது பொருளன்று. அவர் சொன்ன நெறிமுறைகள் என்பது பொருள். ‘கபிலரது பாட்டு’ என்னுந் தொடரில் கபிலரும் அவர் எழுதிய பாட்டும் தனித்தனியாக இருந்து உடைமைப் பொருளை உணர்த்துகிறது. அதனால் இது பிறிதின் கிழமை. இனி, அந்தப் பாட்டு அவர் எழுதியதாலேயே அவர்க்கு அது உடைமையாயிற்று. பாட்டாகிய செய்யுள் அவ்வுடைமைக்குக் காரணமாதலின்  அது செய்யுட்கிழமை ஆயிற்று. எனவே செய்யுட் கிழமை என்பது ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய உடைமைப் பொருளை உணர்த்தும் இரண்டு முறைகளில் பிறிதின் கிழமையின் வகைகளுள் ஒன்று என்பது பெறப்படும்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடு வாழ்வார்” (6)

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

    “மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார், பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரையைத் தொடர்ந்து வரும் விளக்கவுரையில்,

    “ஒழுக்கநெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது ‘கபிலரது பாட்டு’ என்பது போல”

    என்று ஒரு குறிப்பு வருகிறது. ஐந்தவித்தவன் இறைவன். ஐந்தவித்தான் ஆற்றல் என்றால் ஐந்தவித்தானது ஆற்றல் என்று பொருளன்று. ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல் என்பது பொருள். சொன்னவன் ஐந்தவித்தான், சொல்லப்பட்டவை ஐவகை ஆற்றல். இவ்வாற்றல் அவனோடு பிணிக்கப்பட்டது அன்று. பிரிந்து நிற்பது. எனவே ‘ஐந்தவித்தானது ஆற்றல்’ என்னும் ஆறாம் வேற்றுமை விரிக்கப்படினும் அது ‘அவனது ஆற்றல்’ என்னும் தற்கிழமையாகாது. ‘அவனால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமையாய் நின்றதாம். எதுபோல? ‘கபிலரது பாட்டு’ என்பதுபோல!. ‘கபிலரது பாட்டு’ என்றால் ‘கபிலருடைய பாட்டு’ என்று பொருள் தந்தாலும் அவ்வுரிமைத்தொடர் கபிலரால் எழுதப்பட்ட பாட்டு’ என்று பிறிதின் கிழமையாகத்தான் அமையும். அதுபோல  ‘‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்னும் தொடர் ஆறாம் வேற்றுமைக்குரியதாக விரிக்கப்படினும் அது ‘ஐந்தவித்தானது ஆற்றல் எனத்’ தற்கிழமையாக நில்லாது ‘ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமைப் பொருளினைத் தருவதைக் காணலாம். இந்த விளக்கத்திற்குக் ‘கபிலரது பாட்டு’ என்னும் இதனைப் போன்ற இலக்கணப் பயன்பாடு உடைய மற்றொரு தொடரை உவமமாகப் பயன்படுத்தியுள்ளார் அழகர்.

    பாமர வழக்கை உவமமாக்குதல்

    ‘முரண்’ என்பது எல்லாப் படைப்புக்களுக்கும் அழகு சேர்க்கும் தொடையழகு, ‘பகலில் ஒரு நிலவு!’ ‘முள்ளும் மலரும்’ ‘பஞ்சும் நெருப்பும்’ ‘கருப்பும் சிவப்பும்’ என்பதுபோல. ‘இருளும் ஒளியும்’ என்பது மக்கள் வழக்கு!. புத்தாண்டு பிறந்தவுடன் இருளாண்டு கழிந்தது இனி வரும் ஆண்டு ஒளியாண்டு’ என்பது ஒரு மாற்ற முடியாத முரண். இந்த முரணைத் தனது உரையில் வைத்துத் திருக்குறளுக்குக் கருத்து விளக்கம் தந்திருக்கிறார் பரிமேலழகர்.

    “களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்கண் இல்” 287

    “களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல் உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை”

    “களவும் துறவும் ‘இருளும் ஒளியும்’ போலத் தம்முள் மாறாகலின் ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது”

    எனப் பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியிருக்கிறார் அழகர்.

    1. களவின்கண் கன்றிய காதலவர் அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் (286)
    2. பொருள் கருதிப் பொச்சாப்பு பார்ப்பார்கண் அருள் கருதி அன்புடையர் ஆதல் இல் (285).

    இவையிரண்டும் இந்தப் பாடலுக்கு முந்தைய குறட்பாக்கள். ‘கள்ளாமை’ என்பது உள்ளத்தினாலும் கள்ளக் கருதாமை என்னும் பொருளைத் தரும். உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது இல்லறத்தில் இயலாது, துறவறத்திற்கும் அரியது. துறந்தார்க்குரித்தாய அறங்களுள் இது தலையாயது. துறவுநிலையில் உள்ளவர்கள் களவுமனம் கொண்டவர்களாக இருப்பின் துறவு நிலையில் அமைதி கிட்டாது. ஞானம் பிறவாது. இது திருவள்ளுவம். காரணம் துறவும் களவும் முரண். எதுபோல? இருளும் ஒளியும் போல. கரவு இருள். துறவு ஒளி. ‘இருளோடு சேர்ந்த ஒளி’ என்பது எங்கும் இல்லை. இது இருக்கும் இடத்தில் அது இருக்காது. அது இருக்கும் இடத்தில் இது இருக்காது. எனவே களவு மனம் கொண்டவர்களிடத்தில் துறவு காழ்கொள்ளுவதில்லை என்பதை விளக்கிய மூன்று பாடல்களுக்கும் ஒரே உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளித்திருக்கும் அழகரின் உரைத்திறன் இது!.

    நத்தையெழுத்து நல்லெழுத்தாகாது

    யானைக்கும் அடிசறுக்கும் என்பது பழமொழி. அதனால் அடி சறுக்குவதனாலேயே அது யானையாகிவிடாது. கடற்கரையில் நத்தை ஊர்ந்து செல்லும். அதன் கூரிய கால்களால் மற்றும் கொம்புகளால் கோடுகள் சில உருவாகும். அவை எழுத்துக்களைப் போலத் தோன்றும். ஆனால் அவை எழுத்துக்கள் அல்ல. அந்த எழுத்துக்களைக் கொண்டு இலக்கியம் செய்ய முடியாது.  கற்க முடியாது.  நத்தைக்கு ‘ஏரல்’ என்பது பெயர். மணலில் ஊரும் நத்தையின் கோடு எழுத்தாவதில்லை. ஆயினும் அதனை யாரும் மதிப்பதில்லை. காரணம் கல்மேல் எழுத்து என்பது இந்த மண்ணின் எழுத்துக் கொள்கை. நீர்மேல் எழுத்து என்பதும் ஏரல் எழுத்து என்பதும் ஒரே தன்மையன. அறிவுடையார் அதனை எழுத்தாகவோ இலக்கியமாகவோ கொள்ளார்.  கல்லாதவன் ஊழ் காரணமாகச் சிற்சில பொழுதுகளில் கற்றாரும் வியக்கும் வண்ணம் கருத்துரை சொன்னாலும் அறிவுடையார் அதனை மதியார்.

    “கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
    கொள்ளார் அறிவுடையார்” (404)

    “கல்லாதவனது நுண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும் அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்”

    “(நன்றாயினும் – நன்றாகாது) ஆயிற்றாயினும் ஏரல் எழுத்துப் போல்வதோர் விழுக்காடாதலின் நிலைபெற்ற நூலறிவுடையார் அதனை மதியார் என்பதாம்”

    நத்தையின் கோடு எழுத்தாகாது. கல்லாதவரின் நுண்மை அறிவாகாது. கற்றாரின் கையெழுத்தைவிட நத்தையின் எழுத்து அழகாக இருப்பினும் ஏற்பாரில்லை. கல்லாதவர்களின் கருத்துக்கள் ஒரோவழிச் சிறப்பாயிருப்பினும் அதனை மதிப்பாரில்லை என்னும் திருக்குறள் கருத்தினை ‘ஏரல் எழுத்து’ என்பது கொண்டு விளக்கிய அழகர் உரைத்திறன் இது.

    அடைச்சொற்களுக்கும் உவமம் காட்டும் அழகர் 

    ‘இனியவை கூறல்’ என்பது ஒரு அதிகாரத்தின் பெயர். இனிய சொற்களைப் பேச வேண்டும் என்பது மட்டுமன்று. இன்னாத சொற்களைப் பேசுதல் கூடாது என்பதும் அந்த அதிகாரம் சொல்லவரும் கருத்து. இனிய சொற்களைப் பேசுவதினால் உண்டாகும் நன்மையையோ இன்னாத சொற்களைப் பேசுவதால் உண்டாகும் தீமையையோ திருக்குறள் குறிக்கவில்லை. அழகர் கண்டறிகிறார். இனிய சொற்களை ஏன் பேச வேண்டும்? இன்னாத சொற்களை ஏன் பேசக்கூடாது என்னும் வினாவைப் பரிமேலழகர் தமக்குத் தாமே எழுப்பிக் கொள்கிறார்.

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” (100)

    “அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; இனிய கனிகளும் தம் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்”

    என்று பொழிப்புரை எழுதியவர்,

    “இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனிபோல் அமிழ்தாவனவற்றை இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சாவனவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்”

    என விளக்கவுரை எழுதியிருக்கிறார். இந்தக் குறட்பாவிலும் அதற்கான உரையிலும் கவனத்திற்குரியன பல.

    1. ‘இனிய, இன்னாத’ என்றவாறு உவமத்திற்கு அடைபுணர்க்கப்பட்டுள்ளன.
    2. பொருளுக்கு அடைபுணர்க்கப்படவில்லை.
    3. ‘இனிய கனி’ என்றும் ‘இன்னாத காய்’ என்றும் பரிமேலழகர் தாம் வருவித்துக் கொண்ட தொடருக்கு உரையெழுதுகிறார்.
    4. ‘இனிய’ ‘இன்னாத’ சொற்களுக்கான காரணம் அறப்பயன் என்பதாகக் கொள்ளுகிறார்.
    5. கூடுதலாக இன்னாத சொற்கள் அறப்பயன் நல்காததோடு பாவத்தை நல்கும் என்பதாகவும் எழுதுகிறார்.

    இங்கே பதிவிடப்பட்ட இவைகள் திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்கள். அறப்பயன் தருவதால் சொற்கள் இனிமையாயின. அறப்பயன் தராதது மட்டுமன்றி உயிருக்கும் கேடு தரும் என்பதால் சொற்கள் இன்னாதவாயின. இவற்றுக்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்னும் புறநானூற்றுப் பதிவையும் ‘எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகா’ என்னும் உலகியல் பழமொழியையும் இணையாகக் கொண்டு உவமித்துக் கருத்து விளக்கம் தருகிறார். ஒரே குறட்பாவின் இரண்டு கருத்துக்களை இருவேறுபட்ட உவமங்களால் விளக்கியிருப்பதே அழகரின் உரைத்திறனாகும்.

    தேனும் நெய்யும் சேர்ந்தால் நஞ்சு

    ‘மாறுபாடில்லாத உணவு’ என்னும் தொடர் திருக்குறளில் 944, 946 என்னும் இரண்டு குறட்பாக்களில் பயின்று வருகிறது. முதற் குறட்பாவில் வந்திருக்கும் மாறுபாடில்லாத உணவு எது என்பதை விளக்குவதற்காகப் பரிமேலழகர் கையாண்டிருக்கும் உவமமே தேனும் நெய்யும் சேர்ந்தால் நங்சாகும்’ என்பதாகும்.  முன் உண்ட உணவு செரித்தலும் வேண்டும் செரித்த உணவு குருதியாக மாறவும் வேண்டும். அதற்குச் சிறிது கால அவகாசம் வேண்டும். இதனைத்தான் ‘அற்றதறிந்து’ என்னும் சொல் குறிக்கிறது. ‘’அற்றாலும் அதன் புரதம் அறாதாகலின்’ என்பார் பரிமேலழகர். மாறு கொள்ளாத உணவு வகைகளை அவர் விரிவாகப் பட்டியலிடுகிறார்.

    1. உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமை
    2. கால இயல்போடு மாறுகொள்ளாமை
    3. சுவை வீரியங்களால் தம்முள் மாறு கொள்ளாமை

    இவை எப்படி எதனால் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளார்.

    1. வாத, பித்த, ஐயங்களான் ஆய பகுதிகளுக்கு அடாதவற்றைச் செய்தலும்
    2. பெரும்பொழுது, சிறுபொழுது என்னும் கால வேறுபாடுகளுள் ஒன்றற்கு ஆவன பிறிதொன்றற்கு ஆகாமையும்
    3. தேனும் நஞ்சும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவுமாம்.

    “அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து” (944)

    “முன்னுண்டது அற்றபடியை அறிந்து பின் மிகப்’ பசித்து உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க”

    “தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல” (944)

    என்று அமைந்திருக்கிறது. மாறுபட்ட சுவைகளின் இணைப்பு உடல்நலத்திற்குக் கேடு தரும். இன்றைக்கும் நடப்பியலில் மீனையும் கோழியையும் ஒரே நேரத்தில் உண்ணக் கூடாது என்பது பின்பற்றப்படுகிறது. இந்த மாறுபட்ட சுவைக்குத்தான் இருவேறுபட்ட சுவைகளைக் கொண்ட தேனையும் நஞ்சையும் உவமாக்குகிறார் பரிமேலழகர். அதாவது இனிப்புச் சுவையுடைய தேனும் அதனின் மாறுபட்ட சுவையுடைய நெய்யும் தனித்தனியாக நலம் செய்யினும் இணைந்தால் கேடுதரும். இதனைப்போல முரண்பட்ட சுவையுடைய உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும் என்பதற்காக இந்த இணைப்பை அழகர் உவமமாக்கியிருப்பதுதான் அவர்தம் உவமத்திறனாகும்.

    பசும் பானை நீரும் பரிமேலழகர் உரையும்

    இலக்கியப் பயன்பாடு, உலக வழக்கு என்னும் இரண்டிடத்தும் சிறக்கின்ற சில உவமங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று வேகாத மண்பானையில் ஊற்றிய நீர் போல’ என்பது மழலையைப் ‘பச்சை மண்’ என்பதும் மகப்பேறுற்ற மகளிரை ‘பச்சை உடம்பு’ என்று சொல்வதும் உலக வழக்கு. பச்சைப் பானையில் நீரூற்றுதல் என்பது செயல் ஒருங்கிணைந்து உருப்படாது என்பதற்கும் கனவாய்க் கற்பனையாய் மெல்லப் போய் முடிந்துவிடும் என்பதற்கும் வழக்கில் சொல்லப்பட்டு வரும் உவமையாகும். இலக்கியத்தில் திருவள்ளுவர் இந்த உவமத்தைச்,

    “சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட்
    கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று” (660)

    என்னும் குறட்பாவில் கையாள்கிறார். அல்நெறியில் தேடிய செல்வச் சேமிப்பு பசிய மட்கலத்துள் பெய்த நீருக்கு ஒப்பாகும் என்பது கருத்து. திருவள்ளுவருக்கு முன் இந்த உவமத்தைத் தொல்காப்பியர் தலைவி தன் அகவுணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிற்குப் பயன்படுத்தியுள்ளார்.

    “தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
    எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
    பிறநீர் மாக்களின் இன்றிய ஆயிடைப்
    பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப” (1064)

    என்னும் நூற்பாவில் இந்த உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அழகையும் ஆழத்தையும் உள்வாங்கிய பரிமேலழகர் தனது உரையிலும் எடுத்தாண்டுள்ளார்.

    “அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்” (755)

    “தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை அரசர் பொருந்தாது கழியவிடுக”

    “கூடிவருதல் ஆறில் ஒருபங்காய் வருதல் அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் செய்தானையும் கொண்டு இறத்தலின் அதனைப் புல்லார் என்று ஒழியாது புரளவிடல் என்றும் கூறினார்”

    தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் எனத் தொடங்கும் குறட்பாவால் அரசனுக்குரிய திறை குடிமகனின் வருமானத்தில் ஆறில் ஒருபங்கு என்பது பெறப்படும். அதற்கு மாறாக வரும் வருமானம் அல்நெறியால் பெறப்படுவதாகக் கருதப்படும். அவ்வருமானத்தைக் கருவூலத்தில் சேமித்தால் சேமிக்கப்படும் செல்வமும் அதனைச் சேமிக்கின்ற கருவூலமும் ஒருங்கே அழியும் என்பது கருத்து. இதனைத்தான் ‘செய்தானையும் கொண்டு இழத்தலின்’ என்னும் தொடர் குறிக்கிறது. ஆனால் இவ்வாறு உரை சொல்வதற்குக் குறட்பாவில் சொல்லோ இடமோ இல்லை. ‘சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்’ (660) என்னும் குறட்பாவைக் கருத்திற் கொண்டே இதனை எழுதுகிறார். மேலும் அந்தக்  குறட்பாவின் கருத்தாக, ‘அரசனும் செல்வமும் சேரப்போம்’ என்பதாம் என உரைத்திருப்பதும் காண்க. அகத்திணைப் பொருள் விளக்கத்திற்காகத் தொல்காப்பியத்தில் கண்ட உவமத்தைத் திருவள்ளுவர் பொருளதிகாரக் கருத்துக்குப் பயன்படுத்தி நூல் செய்கிறார். அவ்விரண்டனையும் உள்வாங்கிய பரிமேலழகர் அவ்விரண்டும் பொருளாகாத வேறொரு குறட்பாவின் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதே அழகரின் உவமத்திறன் ஆகும்.

    நிறைவுரை

    நூல் நுகர்ச்சிக்குக் காரணங்கள் பல. கருத்து, சொல்லாட்சி, யாப்பு, வெளிப்பாட்டு உத்தி, உணர்ச்சி, வண்ணனை, உவமங்கள் எனப் பல்வகையாக அது பல்கும். அவற்றுள் உவமத்தால் ஒரு நூலை நோக்குவதும் மதிப்பிடுவதும் கற்பாரின் உளப்பண்பைச் சார்ந்தது. தொடக்கத்தில் சொல்லியது போலத் திருக்குறளின் உவமங்களும் பொருள்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாய்ப் பிரிக்க முடியாததுபோலப் பரிமேலழகரின் உரையில் காணப்படும் உவமங்களும் குறட்பாவின் கருத்துக்களோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. மேலாகத் திருக்குறளில் காணமுடியாத இலக்கண உவமங்களைப் பரிமேலழகர் காட்டியிருப்பது மொழி, சிந்தனை, இலக்கிய உத்தி ஆகியவற்றின் வளர்ச்சிநிலையைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும். பரிமேலழகர் காட்டிய இந்த நெறியைப் பிற்காலத்தில் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர், உவமைக் கவிஞர் சுரதா முதலியோர் பின்பற்றிச் சிறந்தனர். திருக்குறள் உவமங்களும் அழகரின் உவமங்களும் துலாக்கோலின் தட்டுக்கள் இரண்டிலும் சமமாகவே நிற்கின்றன என்பதைக் குறிப்பிட்டு இந்தக் கட்டுரையும் ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்னும் இக்கட்டுரைத் தொடரும் நிறைவு பெறுகிறது!. வல்லமைக்கு நெஞ்சார்ந்த நன்றி!

    (நிறைவு)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 24

    பரிமேலழகர் உரைத்திறன் – 24

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகரும் புறநானூறும்

    முன்னுரை

    பரிமேலழகர் தாம் எழுதிய திருக்குறள் உரையில் தாம் கற்றறிந்த பல நூல்களைப் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். அறிந்த எல்லா நூல்களையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பயன்படுத்திய நூல்களிலிருந்தும் ஒரே எண்ணிக்கையில் எடுத்துக்காட்டுக்களைத் தரவில்லை. தந்த எடுத்துக்காட்டுக்களையும் ஒரே தன்மையை விளக்குவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறட்பாவுக்குத் தாம் சரியென்று கருதிய கருத்தியலை முன்வைத்து உரையெழுதும் பரிமேலழகர், எந்த விளக்கத்திற்கு எந்த எடுத்துக்காட்டைத் தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். சொற்பொருள் விளக்கம், பொருளமைதி, இலக்கணக் கொள்கை, வரலாற்றுப் பதிவு, பண்பாட்டுப் பதிவு எனப் பல நோக்கங்களுக்காகப் பல இலக்கியங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இத்தகைய பயன்பாட்டிற்கு முதலில் திருக்குறளையே பயன்படுத்திக் கொள்வது பற்றிய கருத்துக்கள் முந்தைய கட்டுரை ஒன்றில் விளக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய நூல்களில் அதிகமான எடுத்துக்காட்டுக்களுக்காகப் பயன்பட்ட நூல் ‘புறநானூறு’. அந்நூலிலிருந்து அவர் தரும் எடுத்துக்காட்டுக்களையும் அவை தரும் விளக்கங்களையும் சுருக்கமாக ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    அறமா? பொருளா? இன்பமா? (அதிகார விளக்கம்)

    கல்வியா? செல்வமா? வீரமா? எனத் தொடங்கும் திரையிசைப்பாடலைப் பலரும் கேட்டிருக்கக்கூடும். அது இணையான பொருட்களை எடைபோடுகின்ற பாடல். எது சிறப்பு என்று வினவுகிற பாடல். அறம் பொருள் இன்பம் என்னும் தொடர் தம்முள் மாறுபட்டும் வழங்கப்படுகிறது. ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என்பது தொல்காப்பியம் கண்ட தலைகீழ் பாடம். ‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும்’ என்பது நாலடியார். இத்தகைய சிந்தனைகளையெல்லாம் உள்வாங்கிய திருவள்ளுவர் ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் அதிகாரத்தைப் பாயிரத்துள் அமைத்திருக்கிறார். அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளைப் பாடியிருக்கும் திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் என்றால் அறத்தினை மட்டுமே வலியுறுத்துகிறாரா என்னும் ஐயம் தோன்றக் கூடும். நம்முள் பலருக்கும் வராத இந்த ஐயம் பரிமேலழகருக்கும் வந்திருக்கிறது. ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் தொடருக்கு,

    “அம்முனிவரால் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனை பொருளும் இன்பமும் போலாது அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல்” (பாயிரம் — அறன் வலியுறுத்தல் – அதிகாரப் பொருண்மை விளக்கம்)

    என்று தொடர் விளக்கம் தந்திருக்கிறார். வழக்கில் வலியுறுத்தல் என்பதை ஒரு சொல்லாகவே நோக்கிய நம்மில் பலரும் வலி என்பது வலியறிதல் என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் வலிமையை உணர்த்தும் என்பதை அறிவதில்லை. அறம் பொருளைவிட வலிமையானது, இன்பத்தைவிட  வலிமையானது என்று கூறுவதோடு அதற்கான காரணத்தையும் தொடர்ந்து கூறுகிறார். அறம் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் தரும். மற்ற இரண்டும் தராது.

    அறத்தை அறத்துப்பாலில் கூறிய வள்ளுவர் பொருளைப் பொருட்பாலில் கூறுகிறார். அதற்கு விளக்கமளித்த பரிமேலழகர் ‘பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாய பொருள்’ (பொருட்பால் முன்னுரை) என்று தெளிவாக்குகிறார். இன்பத்தைப் பற்றிச் சொல்ல வருமிடத்து ‘இம்மையே பயப்பதாய இன்பம்’ (இன்பத்துப்பால் முன்னுரை) என்று பொருள் வரையறை செய்கிறார். எனவே அறம் மூன்றுவகையான பயனைத் தரும். அறமே மற்ற இரண்டினும் வலியுடையது என்னும் கருத்தினை அவர் புறநானூற்றிலிருந்து  பதிவிறக்கம் செய்து கொள்கிறார்.

    “சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப் படூஉம் தோற்றம் போல” (புறம். 31)

    என்னும் எடுத்துக்காட்டால் விளக்குகிறார். அதிகாரத்தின் தொடக்கத்திலேயே அது பற்றிய பொருள் வரையறை தெளிவானால் ஏனைய அதிகாரக் கருத்துக்களும் தெளிவாகும் என்பது அவர் கருத்து. அதற்கே புறநானூற்றைத் துணை கொள்கிறார்.

    இலக்கணம் இலக்கியத்திற்காகவே

    ‘ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்’ என்பன மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபுகள் ஆகும். இந்த ஐந்து உருபுகளுள் ‘ஆல் ஆன்’ என்னும் இரண்டும் கருவிப் பொருளிலும் கருத்தாப் பொருளிலும் வரும், ‘மழையினால் குளம் நிறைந்தது’, ‘கோலால் எழுதினான்’, ‘இதனான் முடிக்கும்’, ‘கலைஞரால் கட்டப்பட்டது’, ‘சாமிநாத அய்யரால் பதிப்பிக்கப்பட்டவை’ என்பன போல. ‘ஆன்’ உருபு தற்போது வழக்கில் இல்லை. ‘ஒடு, ‘ஓடு’, ‘உடன்’ என்னும் மூன்றும் உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும். ‘அமைச்சரோடு உதவியாளர் சென்றார்’, ‘அமைச்சருடன் ஒப்பந்தக்காரர் சென்றார்’ என்பன போல. இவற்றால் ஐந்து உருபுகள் கொண்ட மூன்றாம் வேற்றுமை மூன்று பொருண்மைகளில் வரும் என்பது தெரியவரும். வந்தாலும் இவ்வைந்து உருபுகளும் மூன்றாம் வேற்றுமைக்குரியனவே என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

    “அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
    புறத்த புகழு மில”  (39)

    என்ற குறட்பாவிற்கு,

    ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினும் துன்பத்தினிடத்த., அதுவுமேயன்றிப் புகழுடைய அல்ல”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது ‘தூங்கு கையால் ஓங்கு நடை’ என்புழிப்போல” (புறம் 22)

    என்று விளக்கவுரை எழுதியிருக்கிறார். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்னும் தொடரில் பயின்று வரும் ‘ஆன்’ என்னும் வேற்றுமை உருபு அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் பாட்டில் சொல்லப்படுவது காம இன்பத்தினை. அது இல்லறத்தோடு இணைந்திருக்க வேண்டிய ஒன்று. ‘பிறன்மனை விழைதல்’ காம இன்பம் தருமெனினும் அது துன்பத்தைத் தரும் புகழைத் தராது. இருக்கின்ற புகழை அழிக்கும். இழிவைத்தரும். அந்த வேற்றுமை உருபிற்கு இலக்கண அடிப்படையில் கருவிப்பொருளைக் கொண்டால் ‘இல்லறத்தால் வருவது இன்பம்’ எனப் பொருள் மயக்கம் உண்டாகும். ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே காம இன்பம்’ என்னும் பொருள் கிட்டாது. எனவே பரிமேலழகர் ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு உடன்நிகழ்ச்சிப் பொருள் தந்ததாகக் கருதி எழுதுகிறார். சரி! பரிமேலழகருக்காக வேற்றுமை இலக்கணம் மாறுபடுமா? என்றால் அவர் தான் கொண்ட அதே பொருளை மற்றொருவரும் கொண்டிருக்கிறார் என்பதற்கான இலக்கியச் சான்றினைப் புறநானூற்றிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த எடுத்துக்காட்டில், யானையின் வரவு கூறப்பட்டுள்ளது. ஆடிவரும் அதன் துதிக்கையும் அசைநடையும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆனால் பாட்டு எப்படி அமைந்திருக்கிறது? ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ என்றிருக்கிறது. ‘தூங்கு’ என்றால் ‘தொங்கு’ என்பது பொருள். ‘தொங்குகின்ற கையால் ஓங்கிய நடை’ என்று வராது.  நடைக்குக் கை காரணமல்ல. கையொடு நடையாம். ‘கையான் நடை’ என்பதைக் ‘கையொடு நடை’ என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். கொள்ளவே ‘தூங்கு கையொடு ஓங்கு நடைய’ என்பது பெறப்படும். இங்கே ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு, உடன்நிகழ்ச்சிப் பொருளில் வந்தது. இவ்விரண்டு உருபுகளும் மூன்றனுக்குரியன வெனினும் இலக்கியப் பொருள் நுட்பத்திற்காக மாறிய பொருள் தந்து அமைந்திருக்கிறது என்பதைப் பரிமேலழகர் புறநானூறு கொண்டு உணர்த்தியிருக்கிறார்.

    கோட்டுப் பூ என்றால் கிளைப்பூ அல்ல

    இலக்கணப் பொருண்மை விளக்கத்திற்காகப் புறநானூற்று வரிகளைப் பயன்படுத்திக் கொண்ட பரிமேலழகர் தான் கொண்ட பொருளுக்குத் துணையாகவும் புறநானூற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார். நீர்ப்பூ, நிலப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ எனப் பூ நால்வகைப்படும். அவற்றுள் கோட்டுப்பூ என்பது கிளையில் மலரும் பூ. அது இலைகளுக்கு நடுவே மலராது. திருக்குறள் இன்பத்துப்பாலில் தலைவன் தலைவிக்கு இடையே நிலவிய ஊடல் பற்றி உசாவிய தோழிக்குத் தலைவன் சொல்கிறான்,

    “கோட்டுப்பூச் சூடினும் காயும், ‘ஒருத்தியை
    காட்டிய சூடினீர்’ என்று” (1313)

    “கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேன் ஆயினும், நும்மால் காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்ட வேண்டிச் சூடினீர் என்று வெகுளா நிற்கும்”

    அக்காலத்தில் (தற்காலத்தில் அருகிய பழக்கம் இது) ஆண்களும் குஞ்சி வளர்த்துப் பூச்சூடுவர். ‘குஞ்சி’ என்பது ஆண்பாலுக்குரியது. ‘குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்’ என்பது நாலடியார் (131). ‘கூந்தல்’ என்பது பெண்பாலுக்குரியது. அந்தக் குஞ்சியில் தலைவன் சூடியது கோட்டுப்பூ. ஊடலுக்கு உரிய திணை மருதம். அத்திணைக்குரிய பூ கோட்டுப்பூ அல்ல. நீர்ப்பூ! மருதம் வயலாகிய நீர்ப்பகுதி! தலைவன் மருத நிலத்துப் பூவைச் சூடாமல் பிறிதொரு நிலத்துப் பூவைச் சூடியதே தலைவியின் ஊடலுக்குக் காரணம் என்று பிற உரையாசிரியர்கள் கருதினார்கள். ஆனால் பரிமேலழகரோ ‘கோட்டுப்பூ’ என்பதைத் தொழில் அடிப்படையில் வந்த பெயராகக் கருதி உரையெழுதுகிறார். எப்படி?

    ‘கோடுதலைச் செய்யும் மாலை’

    ‘கோடு’ என்பதைக் கிளையென்னும் பெயர்ச்சொல்லாகக் கொள்ளாமல் முதனிலைத் தொழிற்பெயராக் கொள்கிறார். கொண்டு, ‘பூ’ என்பதைப் பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலைக்கு ஆகுபெயராக்குகிறார்.

    பூ – ஆகுபெயர்

    என்று எழுதுகிறார். சரி. இப்படி கோட்டுப்பூ என்பதற்கு அவர் ஏன் ‘வளைந்த மாலை’ என்று பொருள் கொண்டார். தலைவன் உண்மையில் பிற நிலத்துப் பூவை அணியவில்லை. அணிந்திருந்தால் ஊடல் உண்மையாகிவிடும். ஊடல் என்பது கூடலை மிகுவிக்கும் பொய்யாக வருவித்துக் கொண்ட காரணியன்றி உண்மையன்று. அதற்கான காரணம் பொய். எனவேதான் ‘வளைந்த மாலை’ என்று பொருள் கொள்கிறார். மேலும் அதிகாரம் ‘புலவி நுணுக்கம்’. இவ்வாறு ‘வளைந்த மாலை எனத்  தன்னிச்சையாகப் பொருள் கொள்ள இயலுமா? என்னும் வினாவை அவரே எழுப்பிக் கொண்டு அதற்கான சான்றினைக்,

    “கோட்டம் கண்ணியும் கொடுந்திரை காடையும்’ (புறம். 275)
    என்றார் பிறரும்”

    எனப் புறநானூற்று வரிகளை எடுத்தாள்கிறார். இந்தப் புறநானூற்றுப் பாடலுக்குரிய சிறப்பு இதன் ஆசிரியர் ஒரூஉத்தனர் என்பார் பாடிய ஒரே பாடல் இது மட்டுமே. இந்தப் பாடலின் தொடக்க அடியில் போர்க்களத்து வீரனின் தோற்றப் பொலிவைக் குறிப்பிடும் ஆசிரியர் ‘கோட்டம் கண்ணி’ என்ற தொடரை ‘வளைந்த மாலை’ என்னும் பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். இதனைத் தம் நினைவுப் பேழையிலிருந்து பரிமேலழகர் காட்டி ஒரு நூல் தொடருக்கோ சொல்லுக்கோ சொல்லப்படுவது புத்துரையேயானாலும் அதற்கான சான்றுகளைத் தருவதையும் தமது உரைக்கொள்கையாகக் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது.

    ஒன்றில் இரண்டும் இரண்டில் ஒன்றும்

    பரிமேலழகர், புறநானூற்றில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை அவருடைய உரையால் அறிந்து கொள்ளலாம். இக்காலத்தில் உரையெழுதும் அறிஞர் பெருமக்கள் உலகப் பெருநூலைக் கையடக்கப் பதிப்பாகக் கொண்டுவருவதில்தான் கவனமாயிருக்கிறார்களே தவிர, நூல்  நுவலும் பொருளாழத்தை உணர்ந்து புத்துரை கண்டார் இலர். அளவையியல் நுட்பத்தோடு தமது உரையை எழுதும் அழகர், ஒரு நூலை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் முறையறிந்தவர். ஒரே திருக்குறளுக்கு இரண்டு புறநானூற்று எடுத்துக்காட்டுக்களைத் தருகிறார். அதே நேரம் ஒரே புறநானூற்று வரியை இரண்டு குறட்பாக்களுக்கும் பொருத்திக் காட்டுகிறார்.

    “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்” (765)

    என்று ஒரு குறட்பா. இது உண்மையான நட்பிற்கு மெய்ப்புணச்சியும்  சொல்லாடலும் வேண்டுவதில்லை. உணர்ச்சி ஒத்திருப்பதே அதன் அடையாளமாகும் என்னும் கருத்தில் அமைந்திருக்கிறது.

    “ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் ஒத்த உணர்ச்சிதானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்”

    புணர்ச்சி ஒரு தேயத்தராதல். “இன்றே போல்க நும் புணர்ச்சி என்றதும் அதனை. ‘பழகுதல்’ பலகாற் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின் அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்.

    என்று பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியிருக்கும் பரிமேலழகர், விளக்கவுரையில் நட்பாகிய பொருண்மையை விளக்க இரண்டு முறை  புறநானூற்று வரிகளை இரண்டுவகையான பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.

    1. சோழன் குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. புணர்ச்சியென்பது அவர்களைப் போல ஓரிடத்திருந்தது என்பதை விளக்குதற்கு ‘இன்றே போல்க நும் புணர்ச்சி’ என்ற தொடரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
    1. பழகுதலாகிய சொல்லாடுதலைப் பற்றிய விளக்கம் தருகிறார். அதனைத் தொடர்ந்து புணர்ச்சியும் பழகுதலும் இல்லாததோர் உயரிய நட்பினை விளக்குவதற்காகக் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையர் நட்பினைப் புறநானூற்றுப் பதிவிலிருந்து எடுத்து விளக்குகிறார்.

    புறநானூறு ஒரு இலக்கியம். அதனைத் தமிழினத்தின் வரலாற்று ஆவணம் எனக் கருதும் வரலாற்றறிஞரும் உளர். ஆனால் இலக்கியத்தை வரலாற்று ஆவணமாகக் கருதுவது குறைந்த விழுக்காட்டுப் பயனையே தரும் என்பர் சிலர். ஆனால் பரிமேலழகர் புறுநானூற்றுப் பதிவுகளை வரலாற்று நிகழ்வுகளாகவே கருதியிருக்கிறார் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு சான்றாகலாம்.

    இது ஒரு குறட்பாவிற்கு இரண்டு புறநானூற்றுப் பதிவுகள் என்றால் மற்றொரு குறட்பாவில் ஒரே புறநானூற்று வரிகளை இரண்டு வகையான விளக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.

    ‘நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தேள் உலகு” (234)

    “ஒருவன் நில எல்லைக்கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச், செய்யுமாயின், புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது”

    “புகழுடம்பான் இவ்வுலகும் புத்தேள் உடம்பால் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின் ‘புலவரைப் போற்றாது’ என்றார். அவை இரண்டும் உலகும் ஒருங்கு எய்துதல்”

    என்று பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதிப்,

    ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வானவூர்தி,
    எய்துப என்ப தம் செயலினை முடித்தெனக் கேட்டல்”

    (சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடல் (27)) என்னும் பாடலை எடுத்துக்காட்டாக்கியிருக்கிறார்.

    ஞானிகளைப் பேணாது என்றது, “இம்மையிற் புகழையீட்டாமல் அறிவை மாத்திரம் பெற்று யோக முயற்சியால் மறுமையில் தேவ உடம்பைப்  பெற்றவர்களினும், இம்மையிற் புகழையும் ஈட்டித் தானம் முதலியவற்றின் பயனால் மறுமையில் தேவ உடம்பையும் பெற்றவர்களுக்குத் தேவலோகத்தில் மிக்க சிறப்பு கிட்டும் என்பது கருத்து.

    இம்மையில் பூத உடம்பு, புகழுடம்பு என உடம்பு இருவகைப்படும்.  பூதவுடம்பாவது மண், நீர், நெருப்பு, காற்று, விண் என்னும் ஐம்பூதங்களால் ஆன உடம்பு. புகழுடம்பாவது கீர்த்தியாலும் சீர்த்தியாலும் பெறுவது. முன்னதற்கு அழிவுண்டு. பின்னதற்கு அழிவில்லை. தேவ உடம்பு என்பது ஞானிகள் மறுமையில் பெறுவது.

    இம்மூவகை உடம்பினுள் பூத உடம்பு மட்டும் பெற்றுநின்ற மண்ணுலகத்தாரினும் தேவ உடம்பு மட்டும் பெற்றுநின்ற விண்ணுலகத்தாரினும் இவ்விரு உடம்புகளையும் ஒரே நேரத்தில் பெற்றவர்களின் பெருமை சிறந்து நிற்றல் காண்க. அதனால்தான் புத்தேள் உலகம் தேவ உடம்பு மட்டும் பெற்ற ஞானியரைப் போற்றாதாம்.

    இந்தக் கருத்தியலைத் தாம் புறநானூற்றிலிருந்து பெற்றதாகக் கூறுகிறார். அதாவது புகழைப் பற்றிய கருத்தியல் புறநானூற்றுக் காலத்திலேயே நிலவிவந்த வரலாற்று உண்மையை இந்த எடுத்துக்காட்டின் மூலம் அவர் உறுதி செய்கிறார்.

    புகழைச் செய்கின்ற உடல் நிலையற்றது. நிலையற்ற அதனால் ஈட்டப்படும் புகழ் நிலையானது. இது அறிவின் உச்சம். இதற்கு ‘வித்தகம்’ என்று பெயர். இதனை உடையவர் ‘வித்தகர்’. அடுத்த பாட்டில் (235) ‘வித்தகர்க்கல்லால் அரிது’ என்னுந் தொடருக்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கம் இதனை இன்னும் தெளிவாக்கும்.

    மேற்கண்ட புறநானூற்றுப் பதிவினை மற்றொரு பாடலுக்கும் மேற்கோளாகக் காட்டுகிறார் அழகர்.

    “இளிவரின் வாழாத மானமுடையார்
    ஔிதொழுதேத்தும் உலகு” (970)

    “தமக்கோர் இழிவு வந்துழிப் பொறுத்து உயிர்வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ்வடிவினை எஞ்ஞான்றும் தொழுது துதியா நிற்பர் உலகத்தார்” என்று பொருளைத் தருவது அது. புகழின்றேல் புத்தேள் நாட்டு உய்யாதால் (பாடல் எண். 966) என்பது மேலே சொல்லப்பட்டது. இந்தப் பாட்டில் ‘உலகு மானமுடையார் ஒளியை ஏத்தும்’ (970) என்று இருக்கிறது. இருக்கவே, ‘புத்தேள் நாடு உய்த்தல்’ பாட்டில் சொல்லப்படவில்லையே, அதாவது இளிவரின் வாழாத மானமுடையவரது புகழால் தேவலோகம் செல்லுதற்பற்றி யாதும் கூறப்படவில்லையே என்பாரின் ஐயம் களைவதற்காகப்,

    “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துவராகலின்” துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று”

    எனப் புறநானூற்றின் அதே பாடலை ஈண்டும் எடுத்துக்காட்டாக்குகிறார்.

    மரணத்திற்கு மருந்தில்லை

    எமனுக்கு ‘எமதர்மன்’ என்றும் பெயர். ‘கூற்றுவன்’ என்றும் பெயர். உயிர் வௌவுதலாகிய தன்னுடைய கடமையை வினைப்பயனுக்கு ஏற்பத் தவறாது செய்தலின் எமனுடைய செயல் அறஞ்சார்ந்து நிற்பது. அதனால் அவன் எமதர்மன். உயிரையும் உடலையும் இரண்டாகக் கூறுபடுத்தலின் கூற்றுவன் என்றும் பெயர். இவையெல்லாம் அறிஞர்களுக்குத் தோன்றிய விளக்கங்கள். எனினும் கூற்றுவன் வந்து உயிரைப் பறித்துவிடின் அம்மரணத்தை மாற்றுதற்கு மருந்து கிடையாது. பரிகாரம் கிடையாது. மரணம் வந்தால் இறப்பைத் தவிர வேறு வழியில்லை.

    “கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை.” (765)

    வீரனின் வீரம் பற்றிக் கூறும் இந்தக் குறட்பாவிற்குக்,

    “கூற்றுவன்தானே வெகுண்டு மேல்வந்தாலும் நெஞ்சொத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலுடையதே படையாவது”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் ‘மேல்வரினும்’ என்னும் தொடரிலுள்ள உம்மைக்கு விளக்கம் தர எண்ணுகிறார். அது சிறப்பும்மை என்பது அவர் கருத்து. அது சிறப்பும்மையாக வேண்டுமானால் கூற்றத்தைச் சிறப்பிக்க வேண்டும். எப்படிச் சிறப்பிப்பது? அந்தக் கூற்றுவனுடைய தொழிலுக்கு மாற்றாகப் பிறதொழில் இல்லையாம். அதுதான் சிறப்பாம். அதாவது கூற்றுவனுடைய தொழிலாகிய மரணத்தைத் தடுக்கும் அல்லது நீக்கும் மருந்து இல்லையாம். எனவே அது ‘மருந்து இல் கூற்று’ இந்தக் கருத்துக்குரிய பதிவினைப் புறநானூற்றிலிருந்து எடுத்துக்கொள்ளும் பரிமேலழகர், அதனால் உம்மை சிறப்பும்மை என்கிறார்.

    “மருந்தில் கூற்றமாகலின் உம்மை சிறப்பும்மை”

    இந்தத் தொடர் அமைந்த புறநானூற்று வரிகள்,

    “பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
    மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
    கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி” (புறம். 3)

    “மாற்றரும் கூற்றம்” (1026) என்பது தொல்காப்பியம். கூற்றத்துக்கு மருந்தில் என்றும் அவன் செயலுக்கு அருந்தொழில் என்றும் அடைபுணர்த்திய பாங்குணர்ந்த பரிமேலழகர் ‘மருந்தில் கூற்றமாகலின்’ என்பதைத் தமது உரையில் ஆசிரிய வசனமாகவே (முன்னோர் மொழியை அப்படியே எடுத்துத் தம் உரையில் ஆளுதல்) எடுத்தாண்டுள்ளார்.

    நிறைவுரை

    ஏறத்தாழ முப்பது இடங்களில் ‘புறநானூறு’ என்னும் ஒரு நூலை மட்டும் திருக்குறள் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார் பரிமேலழகர். இது ஒரு பன்முகப் பயன்பாடு. ஒரு நூலைக் கற்கிறபோது உண்டாகும் பயன்களையும் அவற்றின் கூறுகளையும் மனத்துள் பதிவு செய்வார்க்கே இத்தகைய வல்லாண்மை கைகூடும். சொற்பொருள் விளக்கம், பொருள் விளக்க அமைதி, இலக்கண அமைதி, இலக்கண விளக்கம், இலக்கியத்தை வரலாறாகக் கொள்ளுதல் என்னும் இத்தகைய பன்முகப் பயன்பாட்டுக்கான கருவியாகப் புறநானூறு அவரால் நோக்கப்பட்டிருக்கிறது. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து காட்டப்பட்டிருக்கும் மேற்கோள்களால் திருக்குறள் ஆழம் தெளிவாகிறது. ஒரு நூலை எப்படிக் கற்க வேண்டும் என்னும் கற்றல் கொள்கையும் புலப்படுகிறது. திருக்குறளை இப்படி நோக்கி உரையெழுதியோர் இவரன்றி யாரும் உளரோ? என்னும் ஐயம் ஐயமாகவே நிற்கிறது!

    (அடுத்த கட்டுரையோடு நிறைவுறும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 23

    பரிமேலழகர் உரைத்திறன் – 23

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!’

    முன்னுரை

    ‘வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்’ என்பது உலக வழக்கு. ‘உரைவழக்கிற்கும்’ இது பொருந்தும். பொதுவாக நூல் ஒன்றிற்கு உரையெழுதுவார் பிற இலக்கிய இலக்கணங்களைத் தாம் கொள்கிற பொருளமைதிக்கும் கருத்துக்கும் வலிமை சேர்ப்பதற்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஒரு சிலர் எந்த நூலுக்கு உரையெழுதுகிறார்களோ அந்த நூலிலிருந்தே எடுத்துக்காட்டுக்களையும் சான்றுகளையும் பெற்று எழுதுவர். அந்த சிலருள் அழகரும் ஒருவர். இக்கட்டுரையின் தலைப்பு திருமந்திரப் பாடலொன்றின் நான்கு வரிகளில் ஒன்று. “முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்!” என்று விளித்துத்தான் இந்த வரியை அவர் பாடுகிறார். முதல் வரியால் பெறப்படும் உண்மைகள் பல. 1. கண் புறத்தில் இருந்தாலும் பார்ப்பது புறத்தை மட்டுமே. 2. மனக்கண்ணைக் காண முடியாவிட்டாலும் பிறவற்றை உற்று நோக்கும். ‘காண்பது’ என்பதன் பொருள் அதுதான். ‘காண்பது அறிவு’ என்பது வள்ளுவம். அது எந்த இடத்திலும் ‘பார்ப்பது அறிவு’ எனச் சொன்னதில்லை. 3. ‘மனக்கண்’ என்று ஒன்று இருப்பதையும் அதனாலும் ஆழமாக நோக்க முடியும் என்பதையும் அறியாதவர்களையே மூடரென்று திருமூலர் விளிக்கின்றார். இதனை நன்குணர்ந்தவர் பரிமேலழகர். தமது உரைக்குப் புறநூல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் குறளுரைக்குத் துணை நூலாகத் திருக்குறளையே பயன்படுத்திக் கொள்கிறார். அழகரின் திருக்குறள் உரையில் பொருள் விளக்கத்திற்காகத் திருக்குறள் பயன்பட்டிருக்கும் பாங்கினை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    தனக்குத் தானே விளக்கமான திருக்குறள்

    பரிமேலழகர் திருக்குறளைத் தமது உரைக்கு இரு வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்.

    1. அதிகாரங்களின் பொருண்மை கூடுதல் துலக்கம் பெறுவதற்கு மற்றொரு திருக்குறளைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
    2. குறட்பாக்களின் சொற்பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

    இவற்றைப் பயன்படுத்தி விளக்கமளிப்பதிலும் ஒரு நுட்பம் காணப்படுகிறது. முன்னால் உள்ள குறளுக்கு நூலின் பின்னால் உள்ள குறளாலும் பின்னால் உள்ள குறளுக்கு நூலின் முன்னால் உள்ள குறளாலும் விளக்கமளிக்கிறார். இது வியப்பான ஒன்று. என்ன வியப்பு? பல நூறு குறட்பாக்களை உள்ளடக்கிய ஒரு நூலை முற்றவும் கற்று மனத்திருத்தினாலன்றி இது கூடுமா? பரிமேலழகரைப் போகிற போக்கில் குறைசொல்வார் கவனிக்க வேண்டிய இடம் இது.

    அதிகாரப் பொருண்மை விளக்கங்களில் குறள்

    இல்லறவியலில் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து ‘அன்புடைமை’ என்னும் அதிகாரம் அமைந்திருக்கிறது. இல்லறம் இனிது நடத்தற்கும் அதன் முதிர்ச்சியாகிய அருள் பிறத்தற்கும் அன்பு தேவை. முன்னதற்குச் கோவலனைப் பிரிந்த கண்ணகி இல்லறக் கடமைகளை ஆற்ற இயலாமையைச் சுட்டும் கண்ணகியின் வாய்மொழியைச் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டி விளக்கும் பரிமேலழகர், அன்பு அருளிற்குக் காரணம் என்பதை விளக்க அதனைப்போலப் புறத்தில் வேறொரு இலக்கியத்தை நாடாமல் திருக்குறளில் இருந்தே எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

    “அதனான் (அன்பால்) அருள் பிறத்தல் அருளென்னும்
    அன்பீன் குழவி (757) என்பதனானும் அறிக”

    என்று எழுதி அன்பின் முதிர்ச்சி நிலை அன்பு என்பதைத் திருக்குறளே கூறியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

    படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னுமிவை அரசனுடைய அங்கங்கள். இவற்றின் செயல்பாடுகளுக்குத் தேவையானவை தூங்காமை, கல்வி, துணிவு. இவற்றுள் கல்வி ஆறு அங்கங்களுக்கும் உரியது. ஏனைய (தூங்காமை, துணிவு) வினைக்குரியன என்பதை முன்னரே (383) தெளிவுபடுத்திவிடும் பரிமேலழகர் அடுத்த அதிகாரமாகக் கல்வியை வைத்தமைக்கான காரணத்தைப் பதிவிடுகிறார்.

    “மேல் ‘தூங்காமை கல்வி’ (குறள். 383) எனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின், இஃது இறைமாட்சியின் பின் வைக்கப்பட்டது”

    மேற்கண்ட குறள் விளக்கங்களில் பின்னது முந்தைய குறட்பாவைச் சுட்டியும் முன்னது அறுபத்தெட்டு அதிகாரங்களுக்குப் பின்னுள்ளதைச் சுட்டியும் கூறப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

    பொருள் விளக்கத்திற்கு

    ‘பித்தத்திற்கு இஞ்சி நல்லது’ என்பது உலக வழக்கு. இவ்வாறு சொல்வது ‘பித்தம் வருவதற்கு இஞ்சி நல்லது’ என்று பொருளன்று, ‘பித்தம் தெளிவதற்கு இஞ்சி நல்லது’ என்றுதான் பொருள்.

    “அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை” (76)

    என்னும் குறட்பாவின் கருத்து அன்பு அறத்திற்குத் துணைசெய்யும். மறத்திற்கும் அந்த அன்பே துணையாகும்’ என்பது போல உள்ளது.  முன்னது சரி. ‘மறத்திற்கும் அன்பு துணையாகும்’ என்றால் அறத்திற்கு எதிரான மறத்தையும் அது வளர்க்குமா? என்னும் ஐயம் தோன்றும். அதனை விளக்கிக்காட்ட  காமத்துப்பாலில் உள்ள,

    “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சம் துணையல் வழி” (1299)

    என்னும் குறட்பாவை எடுத்துக்காட்டி விளக்குகிறார் பரிமேலழகர். ‘துன்பத்திற்குத் துணை யாரோ?’ என்றால் அது வந்துழி அதனை நீக்குதற்கு அவருடைய நெஞ்சத்தையன்றி வேறு துணையில்லை என்பது பொருள். அதுபோல மறத்திற்கும் அன்பு துணை என்றால் அறத்திற்கு மாறான மறத்தை நீக்குதற்கும் அவ்வளவே துணை என்பது பொருளாம். எட்டாவது அதிகாரப் பாடலுக்கு நூற்று முப்பதாவது அதிகாரப் பாடலை எடுத்துக் கொண்டு வந்து பொருள் உரைக்கும் திறன் காண்க.

    ஒழுக்கமிலாதவனின் சுற்றமும் கெடும்

    உவமம் கூறுவதில் திருவள்ளுவர் ஒரு வேறுபட்ட ஆனால் சிறப்பான நெறியைப் பின்பற்றியிருக்கிறார். இந்த நெறி கலித்தொகை முதலிய இலக்கியங்களில் பின்பற்றிய மரபு சார்ந்த நெறியே. அதாவது கருத்துக்களையே உவமமாக்குவது. இதனால் உவமேயமான பொருளும் விளங்கும். உவமமாகச் சொல்லப்படும் கருத்தும் வலிமை பெறும். ‘வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்’ என்பதுபோல. இது ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும்’ (1230) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் தழுவிக் கொள்ளப்படும்.

    “அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
    ஒழுக்கமிலான் கண் உயர்வு” (135)

    ‘அழுக்காறு உடையவனுக்கு ஆக்கம் இல்லாதவாறு போல ஒழுக்கமிலாதவனுக்கு உயர்ச்சி இல்லை’ என்பது மட்டுமே எழுசீர்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் கருத்தாகும். ஆனால் பரிமேலழகர், ஒழுக்கமிலாதவனுடைய சுற்றத்திற்கும் உயர்ச்சியில்லை’ என்று கூறுகிறார். இது இந்தப் பாட்டில் சொல்லப்படாத கருத்து. ஆனால் வேறொரு இடத்தில் சொல்லப்பட்ட கருத்து. அது என்ன? அழுக்காறு உடையவனின் சுற்றமும் உண்பதும் உடுப்பதுமின்றித் துன்பப்படும் என்று,

    “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்” (166)

    என்னும் குறட்பாவில் கூறியிருக்கிறார். கூறவே, இந்தப் பாட்டுக்குரியவன் மேற்பாட்டில் உவமமாகக் கூறப்பட்டுள்ளான். அழுக்காறுடையவனுக்கு ஆக்கம் இல்லையென்றால் அவன் சுற்றத்திற்கும் ஆக்கம் இல்லை. அதனால் பொருளான (உவமேயம்) ஒழுக்கமிலானுக்கு உயர்ச்சி இல்லையென்றால் அவனுடைய சுற்றத்தார்க்கும் உயர்ச்சி இல்லை’ என்னும் இந்த நுட்பத்தை,

    “உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லையென்பது பெற்றாம். என்னை? “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற”மும் (குறள். 166) நல்கூர்தலின்”

    என்று எழுதுகிறார். உரையெழுதுவது பதினான்காவது அதிகாரப் பாடலுக்கு. எடுத்துக்காட்டி விளக்கும் பாடல் அமைந்திருப்பதோ பதினேழாவது அதிகாரத்தில்!

    ‘உரம்’ என்றால் அறிவு

    பயிருக்கு இடுகின்ற உரம் வேறு. மனிதர்க்கு இருக்க வேண்டிய உரம் வேறு. முன்னது பயிருக்கு ஊட்டச்சத்து. பின்னது பிற உயிர்களினின்றும் மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது. உரமாகிய அறிவு இல்லாதவன் மரத்திற்கும் கீழானவன் என்னும் கருத்தினை,

    “உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
    மரம் மக்களாதலே வேறு” (600)

    என்னும் குறட்பாவில் திருவள்ளுவர் கூறுகிறார்.

    “ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி. அவ்வூக்கமிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார். சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிதில்லை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி ‘மரம்’ என்றும், மரத்திற்குள்ள பயன்பாடு இன்மை பற்றி ‘மக்களாதலே வேறு’ என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும்; தேவர் கோட்டம் இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன”.

    என்னும் பொழிப்புரையாலும் விளக்கவுரையாலும் பல நுண்ணிய கருத்துக்களைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகர், பாட்டில் பயின்றுவரும் ‘உரம்’ என்ற சொல் ‘அறிவு’ என்ற பொருளைத் தரும் என்பதற்கு,

    ‘உரம்’ என்பது அறிவாதல்; உரனென்னும் தோட்டியான் (24) என்பதனானும் அறிக.

    என்று மற்றொரு குறட்பாத் தொடர்ப் பொருளையே எடுத்துக் காட்டுகிறார். இரண்டு பாட்டிற்குமான இடைவெளி ஏறத்தாழ அறுநூறு பாக்கள் நினைவாற்றல் என்பது முன்னால் படித்ததை நினைவிற் கொள்வது என்பது பொதுவான கருத்து. பரிமேலழகரோ படித்த அத்தனையையும் நினைவிற் கொள்கிறார். அதனால்தான் அறுநூறாவது பாட்டிற்கு உரையெழுதும் போது இருபத்து நான்காவது பாடற்பொருளை அவரால் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. அந்த நிலையிலும் குறட்பாவிற்கான பொருளைக் குறட்பாவிலேயே தேடிக் கண்டடையும் அவருடைய முயற்சி வெளிப்படுவதைக் காணலாம்.

    ஆயிரம் பாடல் கடந்தாலும் ஆகுபெயர் ஆகுபெயரே

    வேந்துவினை பொருட்டு மனை விட்டுப் பிரிந்தான் தலைமகன். ‘அவ்வேந்தனின் வினை விரைவில் தீருமாயின் இல்லம் சென்று மனைவியோடு கலந்து மாலைப்பொழுதினை இனிமையாக்கலாமே’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான். ‘அவர்வயின் விதும்பல்’ என்னும் அதிகாரத்தில் வினைமுடியா நிலையில் தலைமகளை நினைந்து விதுப்புறும் தலைமகன் தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறுகிறான். இதனை,

    “வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து” (1268)

    என்னும் குறட்பாவில் காட்சிப்படுத்துகிறார் திருவள்ளுவர். பாட்டில் ‘மனைகலந்து’ என்பதற்கு ‘மனைவியைக் கலந்து’ என்பது பொருள். ‘மனை’க்கு  ‘வீடு’ என்பது பொருளாயினும் இங்கே அது மனைவியைக் குறித்தது. ‘மனைகலந்து’ என்றால் ‘வீட்டினை அணைத்து’ என்பது பொருளன்று. சரி அப்படியானால் இது ஆகுபெயரா? ஆம். இது ஆகுபெயரே. ‘மனை’ என்பது வேறு எந்தக் குறட்பாவில் ஆகுபெயராக வந்துள்ளது? இங்கேதான் பரிலேழகர் தன் நினைவாற்றலையும் குறட்புலமையையும் ஒருங்கே காட்டுகிறார். வீட்டை அழகுபடுத்துவதும் அது அழகாயிருப்பதும் வேறு. மனைவி பண்புநலன்களால் மங்கலமாக இருப்பது வேறு.

    “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு” (60)

    என்னும் குறட்பாவில் ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ என்பதில் ‘மனை மாட்சி’ என்னும் சொல் மனைவியின் மாட்சிமைப்பட்ட பண்புகளைக் குறிக்குமே தவிர வீட்டுக்குப் பூசப்படும் வண்ணங்களைக் குறிக்காது. அந்தத் தொடரில் ‘‘மனை’ என்பதை ஆகுபெயராகச் சொன்னாராம் திருவள்ளுவர். அதனை நினைவூட்டி எழுதுகிறார் அழகர்.

    தானம் பெரிதா? தவம் பெரிதா?

    தவம் துறவறத்திற்குரியதெனினும் இல்லறத்தார், துறவறத்தார் என யாவருக்கும் பொதுவானது. காரணம் அது செய்வார்க்கு வேண்டியன நல்கும் சிறப்புடையது. இவ்வுண்மை தெரிந்தும் ‘இல்லறத்தார் ஏன் தவத்தை மறந்தனர்? என்பதற்குத் திருவள்ளுவர் தற்குறிப்பேற்றமாக ஒரு கருத்தினைப் பதிவு செய்கிறார். துறந்தார்க்குச் செய்யும் தானத்தின்மேல் உள்ள ஆர்வத்தால் அவர்கள் (இல்லறத்தார்) தவத்தினை மறந்து போனார்களாம். இதனைத்,

    “துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்” (263)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார். இந்தக் குறளில் தவத்தின் அருமையை விளக்க வந்த பரிமேலழகர் விளக்கவுரையில்,

    “வேண்டிய வேண்டியாங்கு எய்தற் பயத்த தாகலின் யாவராலும் செய்யப்படும் தவத்தைத் தாம் செய்யும் தானத்தின் மேல் விருப்பமிகுதியான் மறந்தார்போலும். எனவே தானத்தினும் தவம் மிக்கதென்பது பெற்றாம்”

    என்று எழுதியிருக்கிறார். தவத்தது சிறப்புப் பற்றிய அழகரின் குறிப்பு இதற்கு அடுத்து வரும் குறட்பாவாகிய,

    “வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்” (265)

    என்னும் குறட்பாவில் அமைந்துள்ளது. அந்தத் தொடரையே உரையாக்கும் பரிமேலழகர், அதிகாரக் கருத்துக்களை நிரல்பட நோக்குவதோடு முன்பின்னாக நோக்கி முன்னதற்கான விளக்கம் இருக்கும் பிந்தைய குறட்பாவின் தொடரைப் பொருத்தமான இடத்தில் வைத்து உரைகாணும் திறன் இது.

    ‘தள்ளாது’ என்றால் ‘தவறாது’

    ‘தள்ளாத வயது’ என்றால் முதுமை என்று பொருள். ‘வண்டியைத் தள்ளிவிட உதவுக’ என்றால் ‘நகர்த்துதல்’ என்று பொருள். ‘தள்ளுபடி’ விலையென்றால் தமிழகத்துப் பெண்களின் ஏமாற்றுக் களம் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரியாது. திருக்குறளில் இந்தத் ‘தள்ளாது’ என்ற சொல் பயின்று வருகிற போது அதற்குப் பொருள் தவறாது, ‘மாறாது’ என்பதாகும்.

    “கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
    தள்ளாது புத்தேள் உலகு” (290)

    என்ற குறட்பாவிற்குப், (‘கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும். கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது’ என்பது உரைநடை (PROSE ORDER)) பரிமேலழகர், கள்ளமனம் கொண்டார்க்கு  உடம்பு பாதிப்புக்கு ஆளாவது தவறாது. கள்ளமனம் இல்லார்க்கு வீட்டுலக இன்பம் தவறாது” என்று உரையெழுதுகிறார். ‘உடையார் துன்புறுவர். இல்லாதார் இன்றுவர்’ என்பது கருத்து. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ள தள்ளாது என்னும் சொல் ‘தவறாது’ என்ற பொருளைத் தருவதாகக் கூறும் அழகர், இதே சொல் இதே பொருளில் பயின்றுவரும் மற்றொரு இடத்தை எடுத்துக்காட்டித் தம் நினைவாற்றலையும் புலமைத் திறத்தையும் உறுதி செய்கிறார்.

    “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினும் தள்ளாமை நீர்த்து” (596)

    என்பது ஒரு குறட்பா. ‘முயற்சி உரிய பலனைக் கைகூட்டா விடினும் அம்முயற்சியைக் கைவிடாமல் இருப்பதே சான்றோரால் மதிக்கப்படும். இடைவிடாத முயற்சிக்கு என்றைக்கும் பயன் உண்டு. ஆதலின் முயற்சி பயனளிக்கத் தவறினும் அதனைத் தவறியதாகக் கருதாமல் உயர்ச்சியினைப் பெற்றார் போலச் சான்றோரால் மதிக்கப்படுவர். இது இந்தக் குறட்பாவின் பொருள். இந்தக் குறளில் ‘தள்ளினும் தள்ளாமை’ என்ற இரண்டு இடத்தும் அது ‘தவறுதல்’ – ‘தவறாமை’ என்னும் உடன்பாடு மற்றும் எதிர்மறைப் பொருள்களில் வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் பரிமேலழகர்.

    ‘மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” என்புழியும் தள்ளுதல் இப்பொருட்டாதல் அறிக”

    என்று எடுத்துக்காட்டி விளக்கும் அழகரின் அறிவாற்றலை முந்நூறு பாடல்கள் இடைவெளியில் காண்க.

    கொல்லாமையா? பொய்யாமையா?

    திருவள்ளுவர் ஒரு அதிகாரக் கருத்தினை வலியுறுத்துகிறபோது அதனை முன்னெடுத்து மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதுபோல் தோன்றும். மதுவையும் புகைப்பிடிப்பதையும் பழக்கமாகக் கொண்டவனை நோக்கி “ஐயா! இந்த மதுவை மட்டும் விட்டுடு” என்று சொல்வது போன்றது அது. புகைபிடிப்பதைப் பிறகு கண்டிக்கலாம் என்பது கண்டிப்பவர் கருத்து என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாதிரியான சூழல் திருவள்ளுவருக்கும் வருகிறது.

    “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று” (323)

    என்பது குறட்பாவாகும். திருவள்ளுவருக்கு என்ன சிக்கல் என்றால் இதற்கு முன்பாகப் பொய்யாமையை வலியுறுத்தும் போது,

    “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று” (297)

    செய்தற்கு அருமையால் சில அறங்கள் தவறினாலும் அவை எல்லாவற்றின் பயனையும் தரவல்ல பொய்யாமையாகிய அறத்தையே மேற்கொள்ளுதல் சிறந்தது என்றெல்லாம் சிந்தித்தே திருவள்ளுவர் இதனை எழுதியிருக்கிறார்.  இவ்வளவு சிந்தித்து எழுதிய திருவள்ளுவர் மூன்று அதிகாரங்கள் கடந்து கொல்லாமையாகிய அறத்தினை வற்புறுத்துகிறபோது அவ்வளவு சிறப்புடைய பொய்யாமையை இரண்டாவதாக ஆக்கிக் கொல்லாமையை முதலிடத்திற்கு உயர்த்துகிறார்.  பொய்யாமைக்குத் தலைமைப் பதவி கொடுத்தவரும் அவர்தான். அதனைக் கொல்லாமைக்கு அடுத்த நிலையில் பதவியிறக்கம் செய்தவரும் அவர்தான். இப்போது திருவள்ளுவர் சொல்லியிருக்கும் நிரலில் கற்பாருக்கு ஐயம் தோன்றக்கூடும். இரண்டறங்களில் எது சிறந்தது? என்று ஐயத்தைக் களைய வேண்டிய பொறுப்பு உரையாசிரியர் பரிமேழகருக்கு நேரிடுகிறது. பரிமேலழகர் உரையெழுதிய அனைத்துக் குறட்பாக்களும் பொருள் துலக்கத்தில் சிறந்து விளங்கினும் ஒருசில குறட்பாக்களும் உரையாசிரியர் பிறர் எண்ணிப் பார்க்க இயலாத உரைகளைக் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான் மேலே காட்டிய “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்னும் குறட்பாவாகும்.

    “நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை. அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நின்று”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகருக்கு மேற்பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் ஐயம் கற்பாருக்கு வருமே எனக் கவலைப்பட்டிருக்கிறார். அந்தக் கவலையை அவர் ‘அவர்மொழி’யில் பதிவு செய்திருக்கிறார்.

    “அதிகாரம் கொல்லாமையாயினும் மேல் “பொய்யாமை பொய்யாமை ஆற்றின்” (297) எனவும், “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை” (300) என்றும் கூறினாராகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே, அது நிகழாமை பொருட்டு ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று” என்றார். முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்தாதலின். அதனைப் ‘பின்சார நன்று’ என்றது நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும் தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்து வருதலான் என உணர்க”

    திருக்குறளில் கருத்து முரண் என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக அழகர் எழுதிக்காட்டும் இந்த உரை நுட்பம் கட்டுரையாசிரியர் தரும் பின்வரும் விளக்கத்தால் தெளிவாகலாம்.

    அழகர் உரைப்பன இவையே  

    1. அதிகாரக் கருத்தினை முன்னிறுத்தும் வழக்கம் திருவள்ளுவருக்கு இருப்பினும் இந்தப் பாடல் அத்தகையதன்று. ஒரு முரணைக் களைய முற்படுகிறது.
    1. பொய்யாமையை ஏனைய அறங்கள் எல்லாவற்றினும் சிறந்ததாக முன்னர்க் கூறிக் கொல்லாமையை இந்த அதிகாரத்தில் முன்னெடுத்தால் ‘மாறுகொளக் கூறல்’ என்னும் குற்றம் திருக்குறளுக்கு நேரும்.
    1. ‘முன்சொன்ன விதியினும் பின் சொல்லும் விதி’ சிறப்புடைத்தாதலின் பொய்யாமை, கொல்லாமைக்கு அடுத்த நல்ல அறமாகக் கொள்ளப்படும்
    1. ‘பொய்யாமை’ பின்னுக்குத் தள்ளப்பட்டதன் காரணம் என்ன? “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்” (291) “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்” (292) என்பதனால், ‘நிகழாதது கூறலும் நன்மை தந்தால்’ உண்மையெனவும், ‘நிகழ்ந்தது கூறலும் தீமை தந்தால் பொய்ம்மையெனவும் பயனை நோக்கி இவ்வாறு வாய்மையின் தன்மை மாறுபடும். கொல்லாமையோ அங்ஙனம் மாறுபடாதாதலின் பொய்யாமையினும் கொல்லாமை மேலானது காண்க.
    1. ‘கொலை’ பொய்போல நன்மை பயந்தாலும் குணமாகாது. குற்றமே! ‘கொல்லாமை’ தீமை பயந்தாலும் குற்றமாகாது குணமாம் என்க. இதனைப் பற்றி அது திரிந்து வருதலான் ‘திரியாத கொல்லாமை சிறந்தது’ என்க .
    1. ‘சான்றாண்மை’ என்னும் அதிகாரத்துக் ‘கொல்லா நலத்தது நோன்மை’ (984) என நோன்புக்கு அடையாளமே கொல்லாமை என நாயனார் கூறியதும் அறிக.

    மேற்சொன்ன அத்தனைக் கருத்துக்களும் பரிமேலழகரின் பொழிப்புரையிலும் விளக்கவுரையிலும் அடங்கியிருக்கின்றன. ஒரு குறளுக்கு உரையெழுத அதிகாரம், இயல், பால் எனத் தமது எல்லை கடந்த அகநோக்கினால் பொருளெழுதும் அழகரின் உரைத்திறன் இது!.

    நிறைவுரை

    நூலுக்கு உரைசொல்லுவது என்பது தற்காலத்தில் ஒரு பொழுதுபோக்காகக் கருதப்படலாம். கருதப்படுகிறது. திருக்குறளுக்கு வெளிவந்திருக்கும் உரைகளிற் பல சொற்கோவைகளாகவே சோர்ந்து படுத்துவிட்டன. உரை, சிந்தனை வளர்ச்சியின் அடையாளம். பன்முகப் புலமையின் பந்தி. அது முன்னோர்களை விஞ்சியது என்னும் முனைப்பின் வெளிப்பாடாக அமைந்துவிடக்கூடாது. குறட்பா இருக்கிறது. அதற்குள் சீர்கள் இருக்கின்றன. பரிமேலழகர் அவற்றுக்குப் பொருளுரை தருகின்றார். தான் தந்த உரைக்கே விளக்கவுரை தருகின்றார். அந்த விளக்கத்திற்கான சான்றுகளைத் தருகிறார். அந்தச் சான்றுகளைப் புறத்தில் இருந்து காட்டுகிறார். தான் உரையெழுதும் நூலிலிருந்தே காட்டுகிறார். முன்னால் உள்ள குறளுக்குப் பின்னால் இருந்தும் பின்னால் உள்ள குறளுக்கு முன்னால் இருந்தும் எடுத்துக் கொள்கிறார். ஒரு நூலை அவர் எத்தனை முறைப் படித்திருந்தால் இந்த நினைவாற்றலை எட்டியிருப்பார்? மரச்சிலை செதுக்கும் சிற்பி உளிப்பிடியை மரத்திலேயே செய்துகொள்வது போன்றது அழகர் செயல். அவர் படித்தது கரும்பலகையிலோ கணிப்பொறியிலோ அல்ல. ஒலைச் சுவடியில்! எண்ணிப் பார்க்க வேண்டாமா?.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 22

    பரிமேலழகர் உரைத்திறன் – 22

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகர் உரையும் அருத்தாபத்தி அளவையும்

    முன்னுரை

    மக்கள் வழக்கே மொழிக்கு அடிப்படை. இலக்கியத்திற்கு மக்கள் வாழ்க்கையே அடிப்படையாகும். இது இயல்பானது. எந்த படைப்பிலக்கியம் ஆனாலும் புலவனின் சிந்தனையாலும் பட்டறிவாலும் வெளிப்படும் நீதி இலக்கியமே ஆனாலும் மக்கள் வாழ்க்கையின் தாக்கம் இல்லாமல் தனித்து அமைய முடியாது. இதற்குப் பல சான்றுகள் காட்ட முடியும். வெளிப்பாட்டு உத்திகளிலும் இத்தகைய சமுதாய தாக்கம் ஆங்காங்கே அமைந்து கற்பாரின் சிந்தனையைக் கூர்மையாக்கும். அவ்வுத்திகளில் ஒன்றுதான் ‘அருத்தாபத்தி’ என்பது. பொதுவாகக் கவிதை அல்லது செய்யுள் என்பது ஒன்றினைச் சொற்களால் விளக்குவது அன்று. ஒன்றினைக் காட்சிப்படுத்துவது. ஒரு அனுபவத்தைச் சொற்கள் வழிக் கற்பாருக்கு உணர்த்துவது. அந்தக் காட்சியை முழுமையாகக் காட்சிப்படுத்துவது படைப்பு நெறி ஆகாது. ஒரு பொருளின் ஒரு பக்கத்தைக் காட்டி ஏனைய பக்கங்களை உய்த்துணரச் செய்வதே படைப்பு நுட்பம். ‘அருத்தாபத்தி’ என்பது இத்தகையதே. ஒரு கருத்தினை விரிவாகச் சொல்லாமல் ஒன்றினைச் சொல்லி மற்றொன்றைப் பெற வைப்பது. ‘அவன் பணக்காரன் அல்லன்’ என்றால் ஏழை என்பது பெறப்படுவது போல. அருத்தாபத்தி என்பது சமயக்கோட்பாடுகளிலும் தத்துவ விசாரணைகளிலும் பயன்படுத்தப்படும் அளவையியல் (LOGIC) வகைகளில் ஒன்று. திருக்குறளில் அமைந்த அருத்தாபத்தி நுட்பங்களைப் பரிமேலழகர் கண்டுணர்த்தும் பாங்கினை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

    அருத்தாபத்தி – ஒரு விளக்கம்

    ‘நல்லாற்றான் நாடி அருளாள்க’ (242) என்னும் குறட்பாத் தொடருக்குத் தாம் எழுதிய பொழிப்புரையில் ‘ஆறு’ என்பதற்கு விளக்கமளிக்கும் பரிமேலழகர் ‘அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும்’ என்று குறிப்பிடுகிறார்.  விளக்கவுரையில் அளவைகளின் வகைகளை நிரல்படக் கூறுகிறார்.

    “பொறிகளால் காணும் காட்சியும், குறிகளால் உய்த்துணரும் அனுமானமும் கருத்தாமொழியாகிய ஆகமமும்’ என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும்  உண்மைக்கு மாறாய இன்மையும்  என இவற்றையும் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் ஒருவாற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்றென்றலே கருத்து”

    பரிமேலழகர் மேற்சுட்டிய விரிவான ஆறு அளவைகளுக்கும் விளக்கம் கூறுவது கட்டுரையின் பொருள் சிறக்க உதவக்கூடும்.  அளவைக்கு வடமொழியில் ‘தர்க்க சாஸ்திரம்’ என்று பெயர். அதாவது ஒரு பொருளின் உண்மையை அளவிட்டு அறிவதற்குக் கருவியான பிரமாணங்களையே தர்க்கம் என்னும் சொல்லால் குறிப்பிடுவர். வடமொழியில் பிரதியட்சம், அநுமானம், உபமானம், ஆகமம், அருத்தாபத்தி, அபாவம், ஐதிகியம், சம்பவம் என எட்டு வகையாக அழைக்கப்படும்.

    1. கண்ணால் காண்பது பிரதியட்சம்
    2. புகையைக் கண்டு நெருப்பு உண்டென்பது அநுமானம்.
    3. குயில் போலப் பாடுவாள் என்பது உபமானம்
    4. சான்றோர் சொல் ஆகமம்
    5. பகல் உண்ணான் பருத்திருப்பான் என்றால் ‘இரவில் ஒளித்துண்பான்’ என்பது அருத்தாபத்தி
    6. ‘நேற்றில்லை இன்றில்லை எனவே நாளையுமில்லை’ என்பது அபாவம்
    7. இம்மரத்தில் பேய் இருக்கிறது என்பது ஐதிகியம் (ஐதீகம்)
    8. ஆயிரத்தில் நூறு என்பது சம்பவம்

    மேற்கண்டவற்றுள் ஐதிகியத்ததையும் சம்பவத்தையும் பலரும் கொள்ளார். எனவே பரிமேலழகர் கூறிய ஆறு மட்டுமே அளவைகள் எனக் கருதப்படும். இருப்பினும் பட்டியலில் காட்டிய எட்டனையும் காட்சி, அனுமானம், ஆகமம் என்னும் மூன்றனுள் அடக்குவர்.

    1. உபமானம் காட்சியில் அடங்கும் (2)
    2. அருத்தாபத்தி, சம்பவம் இரண்டும் அனுமானத்துள் அடங்கும் (3)
    3. ஐதிகியம் ஆகமத்தில் அடங்கும் (2)

    எஞ்சியிருக்கும் அபாவம் காட்சி, அனுமானம், ஆகமம் என்னும் மூன்றனுள்ளும் அடங்கும். எனவே எட்டு மூன்றாயிற்று என்க.

    அளவைகள் எட்டாயினும் ஆறாயினும் அவற்றுள் ‘அருத்தாபத்தி’ என்பது தவிர்க்க இயலாத ஒன்று. இந்த அருத்தாபத்தியைத்தான் முன்னுரையில் கூறியபடி மக்கள் வழக்கிலிருந்து வந்த இலக்கியக் கூறு என இக்கட்டுரை முன்னெடுக்கிறது. ‘அவன் நல்ல பழக்கம் உடையவன் அல்லன். அவனோடு சேராதே’ என்பது வழக்கு. இல்லாத நல்ல பழக்கம் செயல்பட முடியாது. சூனியம் செயல்படாது. வினைமுதலே செயல்படும். இவன் கெட்டுவிடுவான் என்றால் மற்றவனிடத்தில் இருக்கிற தீய பழக்கம் இவனைக் கெடுத்துவிடும் என்பது பொருள். எனவே ‘நல்லொழுக்கம் இல்லாதவன்’ என்றால் ‘தீயொழுக்கம் உண்டு’ என்பது பெறப்படும், அழுக்காறு என்பது போல. தீயொழுக்கம் செயல்படும். தீயொழுக்கம் அவனிடத்தில் இருக்கிறது என்று சொல்லாமல் அல்லது அவன் தீயவன் என்று சொல்லாமல் ‘நல்லொழுக்கம் இல்லாதவன்’ என்னும் சொல்லால் ‘தீயன பழகியவன்’ என்பதை உணர வைப்பதைச் சமுதாயத்திலிருந்து, சமுதாய வழக்கிலிருந்து பெறமுடிகிறதல்லவா? எனவே அருத்தாபத்தியின் மூலம் உலக வழக்கே! இந்த அருத்தாபத்தி திருக்குறளில் பயின்று வரும் இடங்களும் பரிமேலழகர் அதனைக் கண்டறியும் பாங்கும் தொடர்ந்து ஆராயப்படுகிறது.

    விலங்காய்ப் பிறப்பதே மேல்

    ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று அப்பர் பாடினார் என்றால் இப்பிறவியின் பெருமை நோக்கி என்க. இப்பிறவி பெருமை பெறவேண்டுமானால் புகழ் பெறவேண்டும். ஒருவனுடைய ‘பிறவி சிறந்தது’ என்பது அவனடைந்த புகழலால் அறியப்படும். திருவள்ளுவர் இல்லறவியலின் இறுதியில் ‘புகழ்’ என்னும் அதிகாரத்தில் இதனைச் சுட்டுகிறார்.

    “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று” 236

    என்னும் குறள் ‘வாழ்ந்தால் புகழோடு வாழ்க’ என்னும் பொருளை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. இதற்கு உரையெழுதிய பரிமேலழகர்,

    “மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க, அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று”

    என்று கூறுகிறார். பாட்டில் தோன்றின் புகழொடு தோன்றுக என்னும் தொடரில் உள்ள ‘தோன்றுக’ என்னும் வியங்கோளுக்கு எழுவாய் இல்லை. வியங்கோளுக்கான எழுவாய் மூவிடத்திலும் அமையலாம். ‘மக்களாய்ப் பிறக்கின்’ என உரை காண்பதற்குரிய சொல் குறட்பாவில் இல்லை. ஆனால் அழகர் எழுதுகிறார். எப்படி? அஃதிலார் (அப்படிப் பிறக்கமாட்டாதவர்) என உயர்திணையில் இருப்பதால் ‘தோன்றுக’ என்னும் வியங்கோளும் மக்களை நோக்கியதாகவே இருத்தல் வேண்டும் என்பதாக அனுமானிக்கிறார். எனவே   ‘மக்களாய்’ என்பதை வருவித்துக் கொள்கிறார். இனித், ‘தோன்றலின் தோன்றாமை நன்று’ என்பதற்குப் ‘பிறத்தலின் பிறவாமையே நன்று’ என்றுதான் உரை எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதினால் பிறப்புக்குத் தடைசெய்வதுபோல ஆகிவிடும். அழகர் ‘மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று’ என்று எழுதுகிறார். ‘தோன்றுவதைவிடத் தோன்றாமையே நன்று’ எனக் குறட்பாவில் இருக்க ‘விலங்காய்ப் பிறத்தல் நன்று’ என்று அவர் எழுதுவதற்குத் துணையாக இருப்பதுதான் அருத்தாபத்தி அளவை. ‘தோன்றுக’ என்னும் உடன்பாட்டால் தோன்றாமை என்னும் எதிர்மறையும் உடன்பாடாகிறது. எபப்டி;? புகழோடு பிறக்க முடியுமென்றால் சரி. இல்லையாயின் பிறக்காதே என்னாமல் விலங்காய்ப் பிறப்பதே நல்லது என்கிறார். இது உலகியல் தழுவியது.  ‘செய்தால் இப்படிச் செய் இல்லையென்றால் அப்படிச் செய் என்பது உலக வழக்கு’ உலக வழக்கில் இருக்கின்ற இந்த அருத்தாபத்தி அளவையைப் பயன்படுத்திக் கொண்ட பரிமேலழகர்,

    ‘அஃதிலார் என்றமையின் மக்களாய்’ என்பதூஉம் மக்களாய்ப் பிறவாமை என்னும் அருத்தாபத்தியால் ‘விலங்காய்ப் பிறத்தல் என்பதூஉம் பெற்றாம்”

    என்று எழுதுகிறார். பிறப்பைத் தடை செய்ய முடியாது அல்லவா?

    தின்பது இல்லையானால் கொல்வதும்  இல்லை!

    ‘அருளல்லது யாதெனின்’ (254) என்னும் குறட்பாவினாலும் ‘உண்ணாமை உள்ளது’ (255) என்னும் குறட்பாவினாலும் (கொலைசெய்யாவிட்டாலும்) ஊன் தின்பவர்க்குக் ‘கொலைப்பாவம் உண்டு’ என்பது சொல்லப்படுகிறது. ‘கொலை செய்பவன் வேறொருவன் ஆதலின் அப்பாவம் அவனுக்கேயன்றி ஊன் உண்பவனுக்கு வராது’ என்பது ஒரு வாதம். இந்த வாதத்தை மறுத்துப் பின்வரும் குறட்பாவில் திருவள்ளுவர் தம் கருத்தினைப் பதிவு செய்கிறார்.

    “தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யார்யார்க்கும்
    விலைபொருட்டால் ஊன் தருவார் இல்” (256)

    இந்தக் குறட்பாவிற்குப்,

    “பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாரும் இல்லை.”

    எனக் கிடக்கை நிலையிலேயே எந்த மாற்றமும் இல்லாமல் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்குப் பின்னால் அமையும் விளக்கவுரையில்தான் பரிமேலழகர் தம் உரைநுண்ணியத்தைக் காட்டுகிறார். ஈண்டு உரை நுண்ணியம் என்பது திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை. பாட்டுக்குள் கிடக்கும் ஆழமான பொருளை வெளிப்படுத்துவதாகவும் திருவள்ளுவரின் உள்ளம் அறியும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.

    “பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம்  இன்மையின் தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணம் ஆதலைச் சாதித்தலின்”

    “காரணம் காரியம் என்னும் இரண்டனுள் காரணம் முற்பட்டிருப்பதும் காரியம் பிற்பட்டிருப்பதும் யாவரும் ஒப்புக் கொள்ளும் இலக்கணமாம். ஆதலால், முன்னே செய்கின்ற கொலைத்தொழிலுக்குப் பின்னே மற்றொருவன் ஊன் தின்பது காரணமாகாது. ஆதலால் கொலைப்பாவம் கொன்றவனைச் சேராது. தானே கொன்று தின்னக் கூடாதேயன்றிப் பிறன் கொன்று விற்றதை விலைகொடுத்து வாங்கித் தின்னத் தடையில்லை” என்பது ஒரு வாதம். இவ்வாறு வாதம் செய்வானை நோக்கி, ‘இவன் வாங்குவான் என்னும் நம்பிக்கையே கொலைஞன் கொல்லுதற்குக் காரணம் ஆதலால், கொலைப்பாவம் கொன்றவனைச் சேரும் என்பது நியாயம். ஊனை வாங்குவார் இல்லையாயின் விற்பார் இல்லை என்னும் கருத்து இவன் தின்னுதற்கு வாங்குவான் இல்லையாயின் அவன் கொன்று விற்றல் செய்யான் என்பது அருத்தாபத்தி பிரமாணம். அதாவது காரணம் முன்னும் காரியம் பின்னுமாய் அமைவதே உலகியல்பு. இங்கே ஊன் தின்பதாகிய காரணம் பின்னிருக்கிறது. இக்காரணத்தின் விளைவு முன்னிருக்கிறது. இதனைத் தெளிவுபடுத்துகிறார் அழகர்.

    இந்த விளக்கத்தை உள்ளடக்கிய பரிமேலழகரின் விளக்கவுரை அமையாதிருக்குமாயின் குறட்பாவில் அட்ங்கியிருக்கும் தர்க்க நியாயம் புலப்படாமல் போயிருக்கக்கூடும்.

    நல்லவன் இல்லையென்றால் தீயவன் தானே!

    கட்டுரையின் முன்னுரையில் கூறியவாறு இன்மை செயல்படாது. இன்மைக்கு மாறாய உண்மைதான் செயல்படும். ஒருவனை நேரடியாகக் குற்றம் சாட்டுதலறியாத பண்பாடு நோக்கிய தமிழியல் பதிவு இது. ஒழுக்கமுடையவளும் அது இல்லாதவளும் இணைந்து போனால் ஒழுக்கம் உடையவளுக்குத்தான் கேடு. உடன் செல்லும் ஒழுக்கமிலாதவளின் எதிர்மறைப் பண்புகளால் இவள் பாதிக்கப்படுவாள் என்பது நடப்பியல். ‘பெரியாரைத் துணைக் கோடல்’ என்று கூறிய திருவள்ளுவர் ‘சிற்றினம் சேராமை’ என்றதும் இது நோக்கியே. இது போன்ற குறிப்புக்களைத் திருவள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவற்றுள் அருத்தாபத்தியைச் சார்ந்த சில குறட்பாக்கள் ஆராயப்படுகின்றன.

    “பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது” (811)

    என்பது ‘மாறாத மிக்க அன்பு கொண்டார்போல் பழகுவார் ஆயினும் தீய குணங்களை உடையவருடைய நட்பு வளர்வதைவிடத் தேய்தலே சிறந்தது., நன்மையைத் தரும் என்னும் பொருளைத் தரும் இந்தக் குறட்பாவிற்குக்,

    “காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு வளர்தலின் தேய்தல் நன்று”

    என்று பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். எழுதிக், குறட்பா, தான் தந்த பொழிப்புரை அவ்விரண்டனையும் கற்பாருக்குத் தோன்றும் ஐயம் ஆகிய அனைத்தையும் சிந்திக்கிறார். சிந்தித்த பிறகு குறட்பாவில் ‘பண்பிலார் கேண்மை’ என்னும் தொடரில் உள்ள ‘பண்பிலார்’ என்னும் சொல்லுக்குத் ‘தீக்குணம் உடையார்’ என்று தாம் எழுதியது சரியா என்பதற்கான விளக்கத்தையும் விளக்கவுரையில் தந்திருக்கிறார்.

    “நற்குணமில்லார் எனவே தீக்குணம் உடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது.”

    என்பதே அந்த விளக்கம். நற்குணம் இன்மையே ஒருவனிடம் செயல்படாது. அடையாளப்படுத்தாது. அதற்கு மாறாய தீக்குணமே செயல்படும். ஒருவனை அடையாளப்படுத்தும். பாட்டில் அவ்வாறு இல்லையே என்றால் அதற்குத்தான் அருத்தாபத்தி அளவை பயன்படுகிறது. கற்பாருக்குத் தெளிவையும் தருகிறது. இதனையொத்த வேறுசில குறட்பாக்களுக்கும் பரிமேலழகர் அருத்தாபத்தி அளவையைப் பயன்படுத்தி உரையெழுதியிருப்பதைக் காணமுடிகிறது.

    “இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்” (851)

    என்னும் குறட்பாவையும்,

    “எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம் இகல் என்று சொல்லுவர் நூலோர்”

    “நற்குணமின்மை அருத்தாபத்தியான் தீக்குணமாயிற்று”

    என மேற்கண்ட குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும் பொழிப்புரை மற்றும் விளக்கவுரை ஆகியனவற்றைக் கற்பார் இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

    தனிப்படர் மிகுதியும் தனிமைப் புலம்பலும்

    காமத்துப்பால் அதிகாரங்களுள் ‘தனிப்படர் மிகுதி’ என்பதும் ஒன்று. தன்னைப் பிரிந்த தலைவனை எண்ணித் தலைமகள் தனிமையில் புலம்புதல். அதாவது தனிமைத் துன்பம். இது உலகியல் வழக்கும் புலனெறி வழக்குமாகும். ஆனால் புலனெறிவழக்கில் தலைவியைப பிரிந்த தலைவன் புலம்புதற்கு இலக்கியம் இல்லை. கற்பியலில் பிரிவு அறுவகைப்படும். ஓதற்பிரிவு, பொருள்வயின் பிரிவு, பரத்தையிற் பிரிவு என்னும் மூன்றனையும் தவிர, காவற்பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ என்ற மூன்றும் அறத்தை நோக்கிய பிரிவுகளாம். எனவே ‘அவன் புலம்பினான்’ என்று இலக்கியம் செய்தால் அது அறத்திற்கும் பொருளுக்கும் ஏலாதென்க. இதனைப் பரிமேலழகர். ”அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் அவன்கண் இல்லையாயிற்று’ என எழுதுகிறார்.

    தலைவியின் புலம்பலில் ஒன்றினைச் சொல்கிறாள். தாம் விரும்பும் கணவனால் தாம் விரும்பப்படவில்லையெனின் தான் நல்வினை செய்யவில்லை என்றுதானே பொருள்?’ என்று வேதனைப்படுகிறாள். இதனை,

    “வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்” (1194)

    என்னும் குறளாலும் அதற்குப் பரிமேலழகர் எழுதிய,

    “கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும் தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்”

    என்னும் பொழிப்புரையாலும் அறியலாம். விளக்கவுரையில்,

    ‘கெழீயின்மை’ — நல்வினையின்மை அது அருத்தாபத்தியான தீ வினையுடைமை யாயிற்று”

    என்று எழுதுகிறார். குறட்பாவில் உள்ள ‘கெழீஇயிலர்’ என்னும் சொல்லுக்கு  நல்வினை யின்மை’ என்பதுதான் பொருள். ‘கெழுதகை இன்மை’ என்பதாம் ஆனால் அழகர் ‘தீவினையாட்டியர்’ என உரைகாண்கிறார். காரணம் நல்வினை ‘இன்மை’ செயல்படாது. தீவினை ‘உண்மையே’ செயல்படும். அதாவது இவள் தீவினை காரணமாகவே கணவன் இவளை விரும்பவில்லையாம் என்பது மனைவியின் கருத்து.

    புகழும் அழியாது! புகழுடையவனும் அழியமாட்டான்

    ‘அவன் யாரோடும் ஒட்டமாட்டான்’ என்பது உலகியல். பொருளதிகாரத்தில் இது இகல். அதாவது இரு மன்னர்களும் போர்க்களத்தில் தமது ஆற்றலை வீணாக்குவதற்கு ஏதுவான கருத்து மாறுபாடு அல்லது பகையுணர்வு. விட்டுக் கொடுத்தல் என்பது அதற்கு எதிர்மறை. இந்தப் பகையுணர்வை நீக்கியார்க்கு அழியாத புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். இந்தக் கருத்தினை உள்ளடக்கிய,

    “இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்  தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்” (853)

    என்னும் குறட்பாவிற்குப் பரிமேலழகர்,

    “மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்றும் நீக்குமாயின் அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கு  ஏதுவாய்ப் புகழைக் கொடுக்கும்”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அழிவில்லாத புகழைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘எஞ்ஞான்றும் உளன் ஆதற்கு ஏதுவாய’ என்பதற்கான சொற்கள் குறட்பாவில் இல்லை. ‘தவல் இல்லாமை’ என்பதற்கு ‘அழிதல் இல்லாமை’ என்பது பொருள். ‘எக்காலத்தும் உளதாதல் இன்றி ‘அழிதல் இல்லாமை’ கூடாது. எனவே ‘தவலில்லா’ என்னும் புகழுக்கான அடைமொழியால் ‘எக்காலத்தும் உளனாதற்கு ஏதுவாய’ என்னும் உரியவனுக்கான அடைமொழி அருத்தாபத்தியான் பெறப்பட்டது. அதாவது புகழுக்குரிய பண்படை புகழைச் செய்தவனுக்கும் அடையானது அருத்தாபத்தியின் பொருட்கொடை என்க. இதனைத்,

    ‘தவலில்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று’

    என்னும் தொடரால் விளங்க வைக்கிறார் பரிமேலழகர்.

    மறந்தவர் தானே  நினைக்க முடியும்?

    கண்ணதாசன் கண்ட தலைவி தன் மனத்தைப் பார்த்து ஒரு வினா தொடுக்கிறாள். அது ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பதாகும். திருவள்ளுவர் கண்ட தலைவியோ உண்மையில் தன்னை எப்போதும் தன் நினைவில் வைத்திருந்த தலைவனை அவன் மறந்ததாகப் பொய்யாகக் கற்பித்து ஊடுகிறாள். காரணம் ஊடுதல் கூடுதலின் அடர்த்தியை அதிகரிக்கும் என்பது இருவருக்கும் தெரியும். குறிப்பாகத் தலைவிக்குத் தெரியும்.  கூடி மகிழாமல் இவ்வாறு ஊடிப் பொழுதை வீணாக்குவது ஏன் என்று வினவிய தோழியிடம் தலைவன் சொல்கிறான்,

    “உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்றென்னை
    புல்லாள் புலத்தக் கனள்” (1316)

    என்பது தலைவன் கூற்று!

    தலைவன் கருத்து (பரிமேலழகரின் பொழிப்புரை)

    “பிரிந்த காலத்து நின்னை இடையீடின்றி நினைத்தேன் என்னும் கருத்தால் ‘உள்ளினேன் என்றேன்’ (என அதனை (அவ்வாறு நான் சொல்லியதனை) ஒரு கால் மறந்து பின்நினைந்தேன் என்றதாகக் கருதி) “என்னை இடையே ஏன் மறந்தீர் என்று சொல்லி முன் புல்லுதற்கு (கூடுதற்கு) அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு (ஊடுதற்கு)” அமைந்தாள்’

    அருத்தாபத்தியால் அளந்த இடம்

    காமத்துப்பால் முழுமையும் நாடக வழக்கு. திருவள்ளுவர் இந்த இருபத்தைந்து அதிகாரங்களிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டு அகத்திணை மாந்தர்களைப் பேச வைத்திருக்கிறார். இந்த நுட்பத்தை அறிந்த பரிமேலழகர் தலைமக்கள் மற்றும் தோழி கூற்றாகவே இந்த அதிகாரத்திற்கு உரை எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டில் அருத்தாபத்தி அளவையைப் பரிமேலழகர் நேரடியாகத் தான் கண்டதாகக் கூறாமல் தலைவி கண்டதாகக் கூறுகிறார். இது மிகப்பெரிய நுட்பம்.

    தலைவன் “எப்பொழுதும் நினைத்தேன் என்கிறான். மறந்தால்தானே நினைக்க வேண்டி வரும்? அப்படியானால் என்னை மறந்தது ஏன்?’ என்று ஊடுகிறாளாம் தலைவி.

    ‘அவன் எழுந்தான்’ என்றால் விழுந்தது பெறப்படும் அல்லவா? குமரகுருபரர் பேசினார் என்றால் அதற்குமுன் அவர் ஊமையாக இருந்தார் என்பது பெறப்படும். அதுபோலத் தலைவன் ‘நினைத்தான்’ என்றவுடன் ‘ஏன் மறந்தீர்’ என்பது தலைவி தலைவனை அளந்த அருத்தாபத்தி. தலைவி ஊடுதற்கும் இந்த அருத்தாபத்தி உதவியிருக்கிறது என்பதுதான் சிறப்பு!.

    நிறைவுரை

    ‘அருத்தாபத்தி’ என்னும் அளவை தத்துவ விசாரணைக்கும் சமயக் கோட்பாடுகளுக்குமானது. அதனை இலக்கிய உரையில் தேவையான இடத்தில் பயன்படுத்தி மூலப்பொருளைத் துல்லியமாக விளக்கியதுதான் பரிமேலழகரின் உரைத்திறன்!. திருக்குறளுக்கான ஏனைய உரைகளில் இவ்வாறு அளவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து சொல்வது கற்பார் கடன்!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 21

    பரிமேலழகர் உரைத்திறன் – 21

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கணமின்றி இலக்கியம் இல்லை…….?

    முன்னுரை

    ‘கொட்டி கிழங்கோ கிழங்கெ’ன்று கூறித் தெருவில் நடந்த வணிகம் அருகிய காலம் இது. எல்லாம் ‘அங்காடி மயம்’ அல்லது ஆன்லைன் மயம். பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தெருவில் ஒருவர் காலை வேளையில் பற்பொடி விற்பனை செய்தார். அவர் இப்படிச் சொல்லித்தான் விற்பார். எப்படி? ‘பாடாவதி பற்பொடி வேணுமா?’ என்று. ‘பாடாவதி பற்பொடியை யாராவது வாங்குவார்களா?’ என அவரை வினவியபொழுது அவர் சொன்னார் ‘பற்பொடி பாடாவதி அல்ல. பல்லுதான் பாடாவதி. அதுதான் பூச்சிப்பிடித்துக் கெட்டிருக்கும். அதற்குத்தான் இந்தப் பொடி’ என்றார். அவர் சொன்ன விளக்கம் என்னவென்றால் ‘பாடாவதி பல்லுக்குப் பொடி’யாம். ‘பாடாவதி’ என்ற சொல்லைப் பற்பொடிக்கும் அடையாக்கலாம். பல்லுக்கும் அடையாக்கலாம். ஒரு தொடரை வேற்றுமையாகவும் பொருள் விரிக்கலாம். அல்வழியிலும் பொருள் விரிக்கலாம். இரண்டும் இரண்டு தனித்தனிப் பொருளைத் தரும். இதுபோலவே திருக்குறளில் சில சொற்கள், தொடர்கள். இவற்றிற்கு இலக்கண அமைதியைக் கூறுவதன் மூலம் அவற்றின் செம்பொருள் துலங்கவும், குழப்பத்தைத் தவிர்க்கவும் பரிமேலழகர் உரை உதவியிருக்கிறது. அது பற்றிய ஒரு சிறு விளக்கத்தைத் தருவதையே நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

    ஏன் வேண்டும் இலக்கண விளக்கம்?

    இனிமை வேண்டும் என்றால் இலக்கணம் வேண்டும்! ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே’ என்பார் பாரதியார். ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்’ என்பார் பாரதிதாசன். பாரதிதாசன் வழக்கறிவார். பாரதியார் இலக்கணமறிவார். முன்னவர் வழக்கு நோக்கிக் ‘கடைக்கண்’ என்றார். பின்னவர் இலக்கணமறிந்துக் கண்ணின் கடை என்றார். எது சரி? இரண்டுமே சரி. பின்னதன் பொருளைத்தான் முன்னது தருகிறது. முன்னதன் கருத்தையே பின்னது காட்டுகிறது. இதுதான் இலக்கணம். எப்படி? கடைக்கண் என்று ஒன்றில்லை. ஏனென்றால் முதற்கண், இடைக்கண் என்று வேறு இல்லையாதலால்!. சொல் வழங்குகிறதே எனின் அதன் நோக்கம் கண்ணின் கடைப்பகுதியைக் குறிப்பதே!. எனவே ‘கடைக்கண்’ என்பதன் பொருள் கண்கடை என்பதே!. இது பாரதிக்கும் தெரியும் பாரதிதாசனுக்கும் தெரியும்.  அவரிருவருமே இலக்கணம் அறிந்தவர்கள். இந்த மக்களின் வழக்கும் உணர்ந்தவர்கள். எனவே கடைக்கண் என்பது ‘கண்ணினது கடைப்பகுதி’ என்னும் பொருளைத் தருகிறது. ‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு. ‘கண்ணினது கடை’ என்றிருந்தால் நெறி. கடைக்கண் என்றிருந்தால் அதனை முன்பின்னாகக் கொண்டு உருபை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இலக்கணம். அதனால்தான்,

    “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி யாகி விடும்”  (476)

    என்னும் குறட்பாவில் பயின்றுள்ள ‘நுனிக்கொம்பர்’ என்னும் சொல்லுக்கு இலக்கண அமைதி கூற வந்த பரிமேலழகர்,

    ‘நுனிக்கொம்பர் என்பது கடைக்கண் என்பதுபோல முன் பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை’

    என்று எழுதுகிறார். கொம்பு என்றால் கிளை. கொம்பினது நுனி என்றால் கிளையினது நுனி என்பது பொருள். இப்படித்தான் பாட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று திருவள்ளுவரிடம் யாரும் சொல்லமுடியாது. அவர் எழுதியதற்குத்தான் நாம் விளக்கம் தரவேண்டும். எனவே ‘கொம்பினது நுனி’ என்பதைத்தான் ‘நுனிக்கொம்பு’ என்று எழுதியிருக்கிறார். கொம்பில் நுனிக்கொம்பு, இடைக்கொம்பு, கடைக்கொம்பு என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ‘நுனிக்கரும்பு’, ‘நுனியிலை’ என்பதற்கும் இது பொருந்தும் ‘வாழையிலையின் அடி’ என்பார் பாரதிதாசன். பரிமேலழகரின் இந்த இலக்கண விளக்கத்தால் ‘கண்ணினது கடைப்பகுதி’, ‘கொம்பினது நுனி’ என்னும் பொருட்தெளிவும் கிட்டுகிறது. கிட்டவே பிற கண்களும் உளவோ? ‘பிற கொம்புகளும் உளவோ என்னும் குழப்பமும் வராமல் தடுக்கப்டுகின்றன. இதுபோன்று திருக்குறள் பரிமேலழகர் உரையில் வரும் சில இடங்களைத் தொடர்ந்து காணலாம்.

    ஆறாம் வேற்றுமை பொருள் விளக்கம்

    பெயர்ச்சொற்களின் வேற்றுமை பற்றி ஆராய்கிற தொல்காப்பியச் சொல்லதிகாரம் ஆறாம் வேற்றுமைப் பொருள் பற்றி,

    “ஆறாகுவதே
    அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
    தன்னினும் பிறிதினும் ‘இதனது இது’ எனும்
    அன்ன கிளவிக் கிழமைத் ததுவே!” தொல் சொல் (79)

    என்னும் நூற்பாவில் ஆராய்கிறார். ‘இதனது இது’ என்றால் ‘இதனுடைய உரிமை இது’ என்பது பொருள். ‘கிழமை’ என்றால் உரிமை. திங்களுக்கு உரியது திங்கட்கிழமை என்பதுபோல. இந்த உரிமை இரண்டு வகைப்படும். ஒன்று பொருளிலிருந்து பிரிக்க இயலாத உரிமை. பொருளிலிருந்து பிரிக்கக் கூடிய உரிமை. பிரிக்க இயலாத உரிமைக்குத் தற்கிழமை என்று பெயர். பிரிக்கக் கூடிய உரிமைக்குப் பிறிதின் கிழமை என்று பெயர். ‘பெண்ணினது அழகு’ ‘கண்ணினது பார்வை’ என்னும் தொடர்களில் பெண்ணையும் அழகையும் பிரிக்க இயலாது. கண்ணையும் பார்வையையும் பிரிக்க இயலாது. எனவே இவை தற்கிழமை. ‘பாரியது மலை’, ‘கபிலரது பாட்டு’ என்னும் தொடர்களில் பாரியையும் பறம்பையும் பிரிக்கலாம். கபிலரையும் பாட்டையும் பிரிக்கலாம். எனவே இவை பிறிதின் கிழமை.

    இனி இந்தப் பிரிக்க இயலாத தற்கிழமை என்பது ஒன்றுபல குழீஇய தற்கிழமை, வேறுபல குழீஇய தற்கிழமை, ஒன்றியற் கிழமை, உறுப்பின் கிழமை மெய்திரிந்ததாய ஐந்து வகைப்படும்.

    பிரிக்கக் கூடிய உரிமைகளாகிய பிறிதின் கிழமை, உடைமைக் கிழமை, முறைமைக்கிழமை, கருவிக்கிழமை, துணைக்கிழமை, கலக்கிழமை, முதற்கிழமை, செய்யுட்கிழமை எனப் பலவகைப்படும். இவற்றை விரிப்பின் பெருகுமெனினும் செய்யுட்கிழமையைப் பற்றிய ஒரு விளக்கம் தரப்படுகிறது.

    செய்யுட் கிழமை என்றால் என்ன?

    ‘கபிலரது பாட்டு’ என்னுந் தொடரில் கபிலரும் அவர் எழுதிய பாட்டும் தனித்தனியாக இருந்து உடைமைப் பொருளை உணர்த்துகிறது. அதனால் இது பிறிதின் கிழமை. இனி, அந்தப் பாட்டு அவர் எழுதியதாலேயே அவர்க்கு அது உடைமையாயிற்று. பாட்டாகிய செய்யுள் அவ்வுடைமைக்குக் காரணமாதலின்  அது செய்யுட்கிழமை ஆயிற்று. எனவே செய்யுட்கிழமை என்பது ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய உடைமைப் பொருளை உணர்த்தும் இரண்டு முறைகளில் பிறிதின் கிழமையின் வகைகளுள் ஒன்று என்பது பெறப்படும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் பின்வரும் பாட்டின் இலக்கண நுட்பத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடு வாழ்வார்” (6)

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

    “மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார், பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரையைத் தொடர்ந்து வரும் விளக்கவுரையில்,

    “ஒழுக்கநெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது ‘கபிலரது பாட்டு’ என்பது போல”

    என்று ஒரு குறிப்பு வருகிறது. ஐந்தவித்தவன் இறைவன். ஐந்தவித்தான் ஆற்றல் என்றால் ஐந்தவித்தானது ஆற்றல் என்று பொருளன்று. ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல் என்பது பொருள். சொன்னவன் ஐந்தவித்தான். சொல்லப்பட்டவை ஐவகை ஆற்றல். இவ்வாற்றல் அவனோடு பிணிக்கப்பட்டது அன்று. பிரிந்து நிற்பது. எனவே ‘ஐந்தவித்தானது’ ஆற்றல்’ என்னும் ஆறாம் வேற்றுமை விரிக்கப்படினும் அது ‘அவனது ஆற்றல்’ என்னும் தற்கிழமையாகாது ‘அவனால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமையாய் நின்றதாம். எதுபோல? ‘கபிலரது பாட்டு’ என்பதுபோல!. ‘கபிலரது பாட்டு’ என்றால் ‘கபிலருடைய பாட்டு’ என்று பொருள் தந்தாலும் அவ்வுரிமைத்தொடர் கபிலரால் எழுதப்பட்ட பாட்டு’ என்று பிறிதின் கிழமையாகத்தான் அமையும். அதுபோல  ‘‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்னும் தொடர் ஆறாம் வேற்றுமைக்குரியதாக விரிக்கப்படினும் அது ‘ஐந்தவித்தானது ஆற்றல் எனத்’ தற்கிழமையாக நில்லாது ‘ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமைப் பொருளினைத் தருவதைக் காணலாம்.

    வேற்றுமை மயக்கம்

    ‘வேற்றுமை மயக்கம்’ இரண்டு வகைபப்டும். ஒன்று ‘பொருள் மயக்கம்’. மற்றொன்று ‘உருபு மயக்கம்’. வேற்றுமை உருபுகள் தமக்குரிய பொருள் வரையறை எல்லைகளைக் கடந்து வேறொரு வேற்றுமையின் பொருளை உணர்த்தி நிற்பதைப் ‘பொருள் மயக்கம்’ என்பர். பிறிதொரு வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தைத் தான் பிடித்துக் கொண்டு அதனை விரட்டி விடுவதை ‘உருபு மயக்கம்’ என்பர். இவ்வாறான மயக்கங்கள் இயல்பானதன்றிச் செயற்கையானதல்ல. புலவனின் உணர்ச்சி வேக வெளிப்பாட்டில் நிகழ்ந்துவிடும் ஒரு விபத்தாகவே கருதப்படலாம். திருவள்ளுவர்,

    “உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு”. (261)

    என்று எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டிற்குத்,

    “தவத்தின் வடிவு உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிருக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும் தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று”

    என்று பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார். ‘தவத்திற்கு இலக்கணம்’ (தவத்திற்கு உரு) என்று பாட்டு அமைந்திருக்கிறது. இப்படி அமைந்தால் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபாகிப் பொருள் தெளிவிருக்காது. புலவனுக்குக் கொடுத்தான் என்றால் பெற்றவன் புலவன். தவத்திற்கு உரு என்றால் கொடைப்பொருளால் குழப்பம் உண்டாகும். உண்மையில் தவத்தினுடைய உரு என்றுதான் இருக்க வேண்டும். அதாவது பாட்டில் நான்காம் வேற்றுமை உருபு வந்திருந்தாலும் அது ஆறாம் வேறாம் வேற்றுமைக்குரிய உடைமைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் நான்காம் வேற்றுமை உருபு தனக்குரிய கொடைப் பொருளை உணர்த்தாமல் தனக்கு உரிமையல்லாத ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. இந்த இலக்கண நுட்பத்தை அறிந்த பரிமேலழகர்,

    ‘தவத்திற்கு உரு’ என்பது யானையது கோடு கூரிது என்பதனை ‘யானைக்குக் கோடு கூரிது’ என்றாற்போல ஆறாவது பொருட்கண் நான்காவது வந்த மயக்கம்.

    என்று இலக்கண விளக்கம் தருகிறார். ‘யானைக்குக் கோடு கூர்மையானது’ என்பது ‘யானையினுடைய தந்தம் கூர்மையானது’ என்பதையே குறிக்கும்.  ஆனால் இலக்கியங்களில் ‘யானைக்குக் கோடு கூரிது’ என்று வருகிறது. அதனைப் போலவே ‘தவத்திற்கு உரு’ என இருந்தாலும் ‘‘தவத்தினுடைய உரு’ என்று கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஒவ்வொரு வேற்றுமைக்கும் தனித்தனிப் பொருள் வரையறை செய்யப்பட்டிருப்பதால் அதனுள் மாற்றம் வந்துவிடக்கூடாது என்னும் மொழிச் செப்பம் காக்கும் முயற்சி இது. வெள்ளாடு மட்டுமன்று வேற்றுமை உருபுகளும் வேலி தாண்டக்கூடாது என்பது இதனால் பெறப்படும்!

    பொருத்தம் பொருளிலும் வேண்டும்

    ‘ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்’ என்பன மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபுகள் ஆகும். இந்த ஐந்து உருபுகளுள் ‘ஆல், ஆன்’ என்னும் இரண்டும் கருவிப்பொருளிலும் கருத்தாப் பொருளிலும் வரும். ‘மழையினால் குளம் நிறைந்தது’, ‘கோலால் எழுதினான்’, ‘இதனான் முடிக்கும்’, ‘கலைஞரால் கட்டப்பட்டது’, ‘சாமிநாத அய்யரால் பதிப்பிக்கப்பட்டவை’ என்பன போல. ‘ஆன்’ உருபு தற்போது வழக்கில் இல்லை’. ‘ஒடு, ‘ஓடு’, ‘உடன்’ என்னும் இரண்டும் உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும். ‘அமைச்சரோடு உதவியாளர் சென்றார்’ ‘அமைச்சருடன் ஒப்பந்தக்காரர் சென்றார்’ என்பன போல. இவற்றால் ஐந்து உருபுகள் கொண்ட மூன்றாம் வேற்றுமை மூன்று பொருண்மைகளில் வரும் என்பது தெரியவரும். வந்தாலும் இவ்வைந்து உருபுகளும் மூன்றாம் வேற்றுமைக்குரியனவே என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

    “அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
    புறத்த புகழு மில”  (39)

    என்ற குறட்பாவிற்கு,

    ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினும் துன்பத்தினிடத்த., அதுவுமேயன்றிப் புகழுடைய அல்ல”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. ‘தூங்கு கையால்’ ஓங்கு நடை என்புழிப்போல” (புறம் 22)

    என்று விளக்கவுரை எழுதியிருக்கிறார். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்னும் தொடரில் பயின்று ‘ஆன்’ என்னும் வேற்றுமை உருபு அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் பாட்டில் சொல்லப்படுவது காம இன்பத்தினை. அது இல்லறத்தோடு இணைந்திருக்க வேண்டிய ஒன்று. ‘பிறன்மனை விழைதல்’ காம இன்பம் தருமெனினும் அது துன்பத்தைத் தரும் புகழைத் தராது. இருக்கின்ற புகழை அழிக்கும். இழிவைத்தரும். அந்த வேற்றுமை உருபிற்கு இலக்கண அடிப்படையில் கருவிப்பொருளைக் கொண்டால் ‘இல்லறத்தால் வருவது இன்பம்’ எனப் பொருள் மயக்கம் உண்டாகும். ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே காம இன்பம்’ என்னும் பொருள் கிட்டாது. எனவே பரிமேலழகர் ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு உடன்நிகழ்ச்சிப் பொருள் தந்ததாகக் கருதி எழுதுகிறார். சரி, பரிமேலழகருக்காக வேற்றுமை இலக்கணம் மாறுபடுமா? என்றால் அவர் தான் கொண்ட பொருளை மற்றொருவரும் கொண்டிருக்கிறார் என்பதற்கான இலக்கியச் சான்றினைப் புறநானூற்றில் இருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த எடுத்துக்காட்டில், யானையின் வரவு கூறப்பட்டுள்ளது. ஆடிவரும் அதன் துதிக்கையும் அசைநடையும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆனால் பாட்டு எப்படி அமைந்திருக்கிறது? ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ என்றிருக்கிறது. ‘தூங்கு’ என்றால் ‘தொங்கு’ என்பது பொருள். ‘தொங்குகின்ற கையால் ஓங்கிய நடை’ என்று வராது. நடைக்குக் கை காரணமல்ல. கையொடு நடையாம். ‘கையான் நடை’ என்பதைக் ‘கையொடு நடை’ என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். கொள்ளவே, ‘தூங்கு கையொடு ஓங்கு நடைய’ என்பது பெறப்படும். இங்கே ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு, உடன் நிகழ்ச்சிப் பொருளில் வந்தது. இவ்விரண்டு உருபுகளும் மூன்றனுக்குரியன எனினும் இலக்கியப் பொருள் நுட்பத்திற்காக மாறிய பொருள் தந்து அமைந்திருக்கிறது என்பதைப் பரிமேலழகர் உணர்த்தியிருக்கிறார்.

    இங்கே இரு சொல் அங்கே ஒரு சொல்!

    உலகவழக்கில் இயல்பாகப் பேசப்படும் சில தொடர்கள் நம் கவனத்தை ஈர்ப்பதுண்டு. ‘பார்த்துக் கேள்’, ‘கேட்டுப் பார்’, ‘போய்ப் பார்’, ‘பார்த்துப் போ’ என்னும் உலகவழக்கினையும் “புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்பது திருவாசகத்தையும் நோக்குதற்குரியன. மேற்கண்ட சொற்களில் ‘பார்த்தல் என்பது ஒரு வினை. ‘கேட்டல்’ என்பது தனிவினை. ஆனால் ஒரு பொருளைத்தான் குறிக்கிறது. திருவாசகத்தில் வரும் ‘கேட்டல்’ என்பது தனிவினை. ‘அறியோம்’ என்பது தனிவினை. பொருளில் ‘உன்னைக் கண்டவர்களை நாங்கள் கேட்டதில்லை’ என்பது மட்டுமே உலகவழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அமைந்த இது மாதிரியான சொற்கள் ஆழமான கவனத்தைப் பெறுவதில்லை. ஆனால் உரையாசிரியப் பெருமக்கள் இலக்கியத்தின் பொருளாழம் கருதித் தம் நுண்ணோக்கினால் சில இலக்கண அமைதிகளைக் கூறுகின்றனர்.

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல்” (314)

    என்னும் குறட்பாவிற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “தமக்கு இன்னா செய்தாரைத் துறந்தோர் ஒறுத்தலாவது அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்”

    என்று கூறுகிறார். இக்குறட்பாவைச் சொல்லுகின்ற தமிழ்ப்பேராசிரியர் உட்பட அனைவரும் ‘பிறர் செய்த தீமையையும் நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுதல்’ என்று சரியாகச் சொன்னாலும் ‘மறந்துவிடுதல்’ என்பதற்கான வினைச்சொல் குறட்பாவில் இருக்கிறதா என்பதை எண்ணுவதே கிடையாது. அதாவது அவர்கள் கொள்கின்ற பொருளும் சொல்கின்ற பொருளும் சரியே. அதற்கான சொற்பயன்பாடு குறட்பாவில் இருக்க வேண்டுமல்லவா? இவர்கள் படாத கவலையைப் பரிமேலழகர் பட்டிருக்கிறார். தமது விளக்கவுரையில்,

    ‘செய்து அவ்விரண்டனையும் மறத்தல்’

    என்ற ஒரு தொடரில் தமது உரைநுட்பத்தைப் பதிவு செய்திருக்கிறார். ‘விடல்’ என்பதைப் பகுதிப் பொருள் விகுதியாகக் கொள்ளாமல் அதாவது துணைவினையாகக் (Auxillary verb) கொள்ளாமல் தலைவினையாகவே (principal verb) கொண்டு உரையெழுதுகிறார். ‘செய்து’ என்பது தனி வினையெச்சம். ‘விடல்’ என்பது தொழிற்பெயர். ‘செய்து விடல்’ என்னும் தொடர் ‘செய்து’ என்றும் ‘விடல்’ என்றும் இரண்டாகக் கொள்ளப்பட்டது. இக்குறட்பாவில் ‘ஒறுத்தல்’, ‘விடல்’ என்னுமிரண்டும் தொழிற்பெயர்கள். முன்னது எழுவாய். பின்னது பயனிலை. ‘ஒறுத்தலாவது மறத்தல்’ என இயைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைந்திருக்கிறது. எனவே ‘விடல்’ என்பதன் பொருள் மறத்தல் என்பதாகும். பரிமேலழகர் இவ்வாறு ‘செய்துவிடல்’ என்பதனை இரு சொல்லாகக் கொண்டு உரையெழுதியிருக்காவிட்டால் ‘பிறர் செய்த தீமையையும் அதற்கு மறுதலையாகச் செய்யப்பட்ட நன்மையினையும்  மறத்தல்’ என்னும் பொருண்மை கிட்டாதாம் என்க.

    ஒரு சொல்லை இரண்டாகப் பிரித்துக் காட்டி உரையெழுதிய பரிமேலழகர் வேறு சில இடங்களில் அது போன்ற சொற்களை ஒரு சொல்லாகவே காட்டியிருக்கிறார். அறிவுடையார், ‘உரிமை காரணமாகத் தம் நண்பர் செய்யும் பணியினை அச்செயலது தன்மை நோக்கி விரும்பி ஏற்றுக் கொள்வார்’ என்னும் பொருள்பட அமைந்த திருக்குறள்,

    “விழைதகைமை வேண்டியிருப்பர் கெழுதகையான்
    கேளாது நட்டார் செயின்” (804)

    என்பதாகும். இதற்குத்,

    “தம் கருத்தை நட்டார் உரிமையால் கேளாது செய்தாராயின் அச்செயலது விழையப்படும் தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர், தமது விளக்கவுரையில் நடத்தியிருக்கும் சொல்லாராய்ச்சியில்,

    “வேண்டியிருப்பர் என்பது எழுந்திருப்பர் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து”

    என்று எழுதிக் காட்டுகிறார். ‘வேண்டுதல்’ என்றால் ‘விரும்புதல்’. ‘இருப்பர்’ என்றால் ‘வினையின்றி வாளா இருத்தல்’ ‘வேண்டியிருப்பர்’ என்பதற்கு இவ்வாறு பிரித்து உரைகண்டால் அவர் விரும்புவாரா? விரும்பி இருப்பாரா? என்னும் மயக்கம் ஏற்படும் இதனைக் களையவே ‘வேண்டியிருப்பர்’ என்னும் அச்சொல்லை ‘ஒருசொல் நீர்மைத்து’ என எழுதுகிறார். எதுபோல? ‘எழுந்திருப்பர்’ என்பதுபோல. ‘எழுந்திருப்பர்’ என்பதில் ‘எழுதல்’ ஒரு வினை. ‘இருத்தல்’ அதன் துணைவினை. ‘யானை எழுந்திருக்கும்’ என்றால் ‘யானை எழும்’ என்றுதான் பொருளே தவிர, ‘யானை முதலில் எழும். அப்புறம் இருக்கும்’ என்று பொருளன்று. அதுபோல ‘எழுந்திருப்பர்’ என்றால் ‘எழுவர்’ என்ற ஒருபொருளைத்தான் தரும். அதுபோலவே ‘வேண்டியிருப்பர்’ என்றால் ‘விரும்புவர்’ என்னும் ஒரு பொருளைத்தான் தரும் என்பது பரிமேலழகர் விளக்கம். ‘எழுந்திருப்பர்’ என்பது ‘எழுவர்’ எனப் பொருள்படுமிடத்து ஒருசொல் நீர்மைத்து. இங்கே ‘வேண்டியிருப்பர்’ என்பது ‘விரும்புவர்’ என்னும் பொருள்படுவதால் இதுவும் அதுபோல ஒருசொல் நீர்மைத்து. இதே விளக்கத்தைச்,

    “சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.” (498)

    என்னும் குறட்பாவுக்குப்,

    “பெரும்படையுடைய அரசன் ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சேருமாயின் அவனால் தன் பெருமை அழியும்”

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையில்,

    “‘அழிந்துவிடும்’ என்பது ‘எழுந்திருக்கும்’ என்பதுபோல ஒருசொல்.”

    எனக் கூறியிருப்பதை நோக்குக. ‘எழுந்திருக்கும்’ என்பது ‘எழும்’ என்று பொருள்படுவதுபோல ‘அழிந்து விடும்’ என்பது ‘அழியும்’ எனப் பொருள்பட்டு ஒரு சொல்லாகும்.

    நிறைவுரை

    மொழியிலக்கணம் அதற்கானதன்று. நமக்கானது. ‘கத்தி கொண்டு ஓடினான்’ என்பதற்கும் ‘கத்திக்கொண்டு ஓடினான்’ என்பதற்குமான வேறுபாடு ஓர் ஒற்றெழுத்தேயெனினும் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் வேறுபடுத்திக் காட்டுவது காண்க. ‘இலக்கியம் கண்டதற்கே இலக்கணம்’ என்பது உண்மையே. ஆனால் அவ்விலக்கியத்தின் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இலக்கணப் புலமை இன்றிமையாத ஒன்று என்பது மேற்கண்ட பதிவுகளால் புலனாகலாம். பரிமேலழகர் இவ்வாறு விளக்கியன அவர் திறன் காட்டுதற்கன்று குறட்பாவின் பொருள் திறன் புலப்படுவதற்கே! உண்மையில் இலக்கணமின்றி இலக்கியம் இல்லை என்பது உண்மையே!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 20

    பரிமேலழகர் உரைத்திறன் – 20

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொல் – சொற்பொருள் – சொற்பொருள் விளக்கம்

    முன்னுரை

    திருக்குறளில் பயின்று வரும் சீர்களாகிய சொற்கள் உரையாசிரியர்கள் பார்வையில் அகராதிப் பொருளைத் தருவதில்லை. திருக்குறளின்  பொருண்மையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டு எழுதும் உரையாசிரியர்கள் அச்சொற்களுக்குப் புலனெறி வழக்கத்திலும் உலகியல் வழக்கத்திலும் உள்ள பொருளைத் தராது சிறப்புப் பொருளைத் தருகின்றனர். இவ்வாறு இயல்பாக உள்ள பொருளைத் தவிர்த்துப் பொருள்புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டு பாட்டில் அமைந்துள்ள சொற்களுக்குச் சிறப்புப் பொருள் தருவதையே தலைப்பின் ‘சொற்பொருள்’ என்பது குறிக்கும். இனி அப்பொருளுக்கேற்ற விளக்கத்தையும் அவர்கள் தந்திருக்கிறார்கள். சொல், சொற்பொருள், அதற்கான விளக்கம் என்னும் நிரலை முற்றுமாகக் கற்கின்ற நிலையில்தான் அச்சொல்லுக்கு இயல்பான பொருளைத் தவிர்த்துச் சிறப்புப் பொருள் தந்ததன் உரை நுட்பம் புலப்படுகிறது. ஆசிரியர் பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இவ்வாறு உரைத்த சில இடங்களை ஆராய்ந்து சுட்டிக்காட்டுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    சேர்தல் – நினைத்தல்

    ‘’அவன் சென்னை சென்று சேர்ந்தான்’’ ‘இந்த வண்டி மதுரைக்கு எப்போது சென்று சேரும்?’ ‘இந்தப் பள்ளியில் நான் சேரலாமா?’ என்றெல்லாம் செவிமடுத்திருக்கலாம் இந்தத் தொடர்களில் உள்ள ‘சேர்தல்’ என்னும் சொல் அந்த வாகனம் அல்லது மாணவன் பௌதிக ரீதியாகச் சேர்வதைக் குறிக்கும். அதாவது வாகனம் சென்னை சேரும். மதுரை சேரும். மாணவன் பள்ளியில் சேர்வான். இந்தச் ‘சேர்தல்’ என்னும் சொல் ‘மானம்’ என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றும் வழக்கில் பேசப்படுவது உண்டு. ‘அவன் நல்லவனாகத்தான் இருந்தான் சேர்மானம் சரியில்லை, கெட்டுவிட்டான்’ என்பது போல அது அமையும். இங்கே ‘சேர்மானம்’ என்பதைப் ‘பிடிமானம், அடமானம், வெகுமானம், வருமானம்’ என்ற சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால்,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    என்னும் குறட்பாவில் வரும் ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு மேற்கண்ட பொருள் கொண்டால் இறைவனுடைய திருவடியை அடியார் தழுவிக் கொண்டதாகப் பொருள்படும். பாட்டின் பொருண்மை அதுவன்று. தற்காலத்தில் ஒருவர் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்றால் இறந்துபோனார் என்றுதான் பொருள். அவருக்குத்தான் சுவரொட்டி வழியாகக் கண்ணீர் சிந்துவார்கள். அதே பொருளை இங்கே கொண்டால் பாட்டுக்கான பொருள் முரண்படும். என்ன முரண்? உள்ளத்தில் இறைவனை இடைவிடாது எண்ணுவார் வீட்டுலகின்கண்  அழிவின்றி வாழ்வார் என்பதுதான் பாட்டின் பொருள். கடவுள்வாழ்த்து பாயிரத்துள் அமைந்திருப்பதாலும் நூலின் ஒட்டுமொத்தப் பொருளையும் சுருக்கமாக முன்னுரைபோலச் சொல்ல வேண்டியது பாயிரத்தின் பணியாதலாலும் மேற்கண்ட ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு இயல்பான அகராதிப் பொருளைச் சொல்லுவது முரணாகும் என்பதோடு குழப்பத்தையும் உண்டாக்கும். எனவே பரிமேலழகர்,

    “சேர்தல் – இடைவிடாது நினைத்தல்”

    என்று உரையெழுதிக் காட்டுகிறார். சரி, இவ்வாறு இவர் உரைகொள்ளுவது சரியா? சரியானால் அதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் திருக்குறள் அதிகாரக் குறட்பாக்களை அவர் நோக்கிய பாங்கு புலப்படும். அதாவது,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல” (4)

    “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (5)

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” (7)

    என்னும் நான்கு குறட்பாக்களையும் அவர் ஓரலகாகக் கொள்கிறார். அது என்ன ஓரலகு? இறைவனை வழிபடு முறைகளின் தொகுப்பாகக் காண்கிறார். மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான் வழிபடு முறைகள். நினைப்பதும் வழிபாடு. இறைவன் திருநாமங்களைச் சொல்வதும் வழிபாடு. நித்திய, நைமித்தியங்கள் செய்வதும் வழிபாடே. மூன்றும் தத்தம் அளவில் சிறந்து நிற்பன. ‘உள்ளம் பெருங்கோயில்’ என்றார் திருமூலர். ‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்’ என்பார் அப்பர் பெருமான். “தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” என்பார் ஆண்டாள் நாச்சியார்.

    மேற்கண்ட உணர்வுப் பதிவுகளை உற்றுநோக்குவார் பரிமேலழகர் அதிகாரத்துக்குள் உள்ள இந்த நான்கு குறட்பாவையும் ‘இறைவழிபாடு’ என்னும் ஓர் அலகுக்குள் கொண்டு வரும் நுட்பம் உணரக்கூடும். அதாவது இறைவனை நினைத்தவர்க்கும் வீடுபேறு உண்டு. அவன் திருநாமங்கள் வாழ்த்தியோருக்கும் வீடுபேறு உண்டு. அவன் நெறிநின்றார் தமக்கும் வீடுபேறு உண்டு என்பது கருத்து.

    ‘நெறிநின்றார்’ எனத் தெளிவாக அமைந்திருக்கிறது. ‘புரிதல்’ என்பதும் ‘சேர்தல்’ என்பதும் அவ்வாறு அமைந்திருப்பதாகக் கருத முடியாது. புரிதல் என்பதற்குப் புரிந்து கொள்ளுதல் என்பதே நேர்பொருளாகும். எனவே ‘புரிதல்’ என்பதற்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என்று உரை காண்கிறார் அழகர். அதாவது இறைவன் திருநாமங்களை எப்போது உச்சரிப்பது ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’  அத்திருநாமங்களைச் சொல்லுவது வீடுபேற்றுக்கு வழிவகுக்கும் ஆதலின் இறைவனுடைய பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதல் வேண்டும் என்கிறார். இதற்கேற்பப் ‘புரிதல்’ என்னும் சொல்லுக்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என உரைகாண்பதை அறியலாம்.

    அறியவே மனத்தால் எண்ணுவார்க்கும் வீடுபேறு என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனைத் திருவள்ளுவர் இரண்டு பாடல்களால் சொல்லுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். இறைவனை எண்ணுகிறபோது அவனுடைய ஏனைய உறுப்புக்களைவிடத் திருவடியே நினைவுக்கு வரும்., வரவேண்டும் என்பது மரபு. ‘ஈசன் அடிபோற்றி எந்தையடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி’, ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்னும் திருவாசகமும் அவை. ‘மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது பெரியபுராணம். ‘திருவடிப்புகழ்ச்சி’ என்பது வள்ளலார் பாடியது. ‘சொற்கழிவு பாதமலர்’ என்பது திருவாசகம். அந்தத் திருவடியை மனத்தால் எண்ணுதல் வேண்டுமல்லவா? ‘மாணடி சேர்ந்தார்’, ‘இலானடி சேர்ந்தார்’ என்னும் இரு பாடல்களில் பயின்றுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இடைவிடாது நினைத்தல் என உரைகாண்கிறார். ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை’ என்பது அபிராமி அந்தாதி. ‘மாணடி சேர்ந்தார்’ என்பதிலுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இவ்வாறு உரைகண்ட பரிமேலழகர் அடுத்த பாடலில் ‘இலானடி சேர்ந்தார்’ என்பதில் உள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கான அவ்விளக்கத்தை மீளவும் குறிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

    1. ‘மாணடி சேர்ந்தார்’, இலானடி சேர்ந்தார்’ என்னும் இரண்டு குறட்பாக்களையும் இறைவனைச் சிந்திப்பதற்கும்
    1. ‘புகழ்புரிந்தார்’ என்பதை இறைவன் திருநாமங்களைச் சொல்லுவதற்கும்
    1. ‘ஒழுக்க நெறிநின்றார்’ என்பதைச் செயலுக்கும்

    அவர் பொருத்திக் காட்டி எழுதுகிறார்.

    “இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும் வாழ்த்தலும் அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவார் என்பது கூறப்பட்டது”

    என்னும் விளக்கத்தாலேயே அவர் ‘சேர்தல்’ என்பதற்கு ‘இடைவிடாது நினைத்தல்’ என்றும் புரிதல் என்பதற்கு எப்போதும் சொல்லுதல் என்றும் உரையெழுதியதற்கான காரணம் புலப்படுகிறது. ‘சேர்தல் என்பது குறட்பாச் சொல். இடைவிடாது நினைத்தல் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள்.  ‘புரிதல்’ என்பது குறட்பாச் சொல். ‘எப்போதும் சொல்லுதல்’ என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். இவ்விரு சொற்பொருளுக்குமான அவர் தந்த காரண விளக்கங்கள் மேலே தரப்பட்டன.

    ‘குறை’ என்றால் இன்றிமையாத பொருள் (முக்கியம்)

    பொதுவாகக் ‘குறை’ என்ற சொல்லுக்குக் குற்றம் என்பது பொருள். ‘எப்பொழுதும் குறைசொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு இயல்பு’ குறையே இல்லாதவர் இவ்வுலகில் இலர். நிலவிலும் குறை உண்டு ‘நிறைகுறை நோக்கி’ என்பன வழக்கு. இலக்கியங்களிலும் இப்பொருளே பெரும்பான்மை. ஆனால் பரிமேலழகர் இந்தச் சொல்லுக்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகண்டிருக்கிறார்.

    “வினைக்கண் வினைகெடல் ஓம்பல்! வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு” (612)

    “வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது. அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக!” என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அமைந்துள்ள தொடர்களை முன்பின்னாக்கி உலகு வினைக்குறை தீர்ந்தாரின் (ஐ) தீர்த்துவிடும் ஆதலின் வினைக்கண் வினை கெடல் ஓம்பாது ஒழிக’ என்னுமாறு கண்ணழித்து உரையெழுதுகிறார்.

    இங்கே ஆய்வுக்குள்ளாவது ‘வினைக்குறை’ என்னும் சொல்லாகும். வினையாகிய இன்றியமையாத பொருளைக் கைவிட்டாரை இந்த உலகம் மதிக்காது என்பது கருத்து. இந்த உரையை முன்னெடுக்கும் பரிமேலழகர் ‘குறை’ என்பதற்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகாண்கிறார். பாட்டில் ‘குறை’ என்று இருக்க பரிமேலழகரோ (வினையாகிய) ‘இன்றியமையாத பொருள்’ என்று உரைசொல்வதற்குரிய முகாந்திரம் ஏதேனும் உண்டா என்பதே கருதுகோள்.

    குறை – இன்றியமையாப் பொருள்.

    அதாவது வினையாகிய இன்றியமையாத பொருளாம். தொடக்கத்தில் கூறியவாறு ‘குறை’ என்பதற்குப் ‘பழுது’ என்றே பொருளிருக்க பரிமேலழகர் தாம் கொண்ட பொருளுக்குப் புறநானூற்றுப் பாடலில் வந்த இந்தச் சொல்லைத் துணைக்கழைக்கிறார். அந்தப் பாட்டு,

    “படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்கு
    ‘பயக்குறை இல்லை’ தாம் வாழும் நாளே!” (188)

    என்னும் பாடலாகும். இந்தப் பாடலின் இறுதி வரியிலுள்ள ‘பயக்குறை’ என்ற சொல்லில் உள்ள ‘குறை’ என்பதற்கான பழைய உரையைத் தன்னுரைக்குச் சான்றாக்கிக் கொள்கிறார். மழலையின் செயல்களால் அறிவு மயங்கும். அத்தகைய குழந்தைகளைப் பெறாதவர்க்கு இல்லறத்தின் பயனாகிய ‘இன்றியமையாப் பொருள்’ வேறு ஏதும் இல்லை என்பது இப்பாட்டிற்கான பழைய உரை. இதனை,

    அது “பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” என்பதனானும் அறிக.

    என்னும் தமது விளக்கவுரைக் குறிப்பின் வழி இதனை அறிய வைக்கிறார் பரிமேலழகர். மழலையாகிய இன்றியமையாத பொருள் இல்லையெனின் வாழ்நாள் பெருமை இல்லை. வினையாகிய இன்றியாமையாப் பொருள் இல்லையெனின் ஆள்வினைப் பெருமை இல்லை என இயைத்துப் பொருளறிக.

    ‘குறை’ என்பது குறட்பாச் சொல். இன்றியமையாப் பொருள் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். அச்சொல் அப்பொருளுக்கு உரித்தாமாறு புறநானூறு கொண்டு விளக்கியது அவர்தம் சொற்பொருள் விளக்கம்.

    இதற்கு இவ்வாறு உரைகாணாது வேறுவகையாக உரைகண்டால் ‘வினையே ஆடவர்க்குயிரே’ என்னும் கருத்தினை உள்வாங்கிக் குறள் கூறும் கருத்து சிறக்காமல் போய்விடுவதுடன் ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தோடும் பொருந்தாதாம்.

    ‘உயர்வு’ என்பது பணியாமை

    உலகியலிலும் இலக்கிய வழக்கிலும் உயர்வு என்பது உடன்பாட்டுச் சொல். அது எதிர்மறை அன்று. ஒருவன் உயர்ந்தான் என்றால் அவன் தாழ்ச்சியடையவில்லை என்பது பொருளன்று. முன்பு இருந்த நிலையைவிட இன்னும் உயர்ந்திருக்கிறான் என்பதுதான் பொருள். ‘தாழ்ச்சியடையவில்லை’ என்றால் இருந்த நிலையிலேயே இருந்திருக்கிறான் என்றே பொருளாகும்.  இத்தகைய பொருளைப் பரிமேலழகர் குறட்பா ஒன்றில் பதிவு செய்து தம் உரை நுண்ணியத்தை உறுதி செய்வதைக் காணலாம்.

    “பெருக்கத்து வேண்டும் பணிதல்., சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு”  963

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்குக்,

    “குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும். குறைந்த நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்.”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். பெருக்கத்து வேண்டும் பணிதல் என்பதற்கு அவர் எழுதிய செல்வம் உளதாயவழிப் பணிவு வேண்டும் என்ற உரையில் மாறுபாடு ஏதுமில்லை. ஆனால் சுருக்கத்து வேண்டும் உயர்வு என்பதற்கு அவர் ‘நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்’ என்று எழுதுகிற உரைதான் ஆய்வுப் பொருளாகிறது.

    இந்த உரைக்கு மூலமாக அவர் வருவித்துக் கொண்ட சொல் ‘குடிப்பிறந்தார்’ என்பதாகும். இது இதற்கு (97) முந்தைய அதிகாரமான ‘குடிமை’ (96) என்னும் அதிகாரப் பொருண்மை நோக்கி அமைந்ததாகும். எப்படி? குடிப்பிறந்தார்க்குப் பணிவு இயல்பு. ‘தன்னிலையில் தாழாமை’ (96) என்று குறிப்பாகப் பொருள் விரிப்பார் பரிமேலழகர். எனவே செல்வம் வந்து உற்றக்காலை ஆணவம் கொள்வதும் செல்வம் குறைந்து வறுமை வந்தக்கால் குலைந்து நடுங்குவதும் அவர் அறியாதவை. வறுமையாகிய சுருக்கம் வந்துற்ற காலை அவர் நிமிர்ந்து நிற்பது முந்தைய பணிவு நிலையையே குறிக்கும். இந்தப் பணிவு செல்வம் வந்து குவியும் போது உயராது. அதனால் செல்வம் குறைகிறபோது தாழாது. அதாவது முந்தைய பணிவிலிருந்து குறையாது. அதனால்தான்,

    ‘பணியாமை – தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல்’

    என்று உரையெழுதுகிறார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கருதிய பரிமேலழகர்,

    “செல்வக்காலை அது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும் அல்லற்காலை அது தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம்”

    என்றும் விளக்கவுரை எழுதுகிறார். செல்வம் தன்னை உயர்த்துங்கால் உயராமல் தாழ்ந்து நிற்றலும் செல்வம் இல்லாத போது அச்செல்வம் தன்னைத் தாழ்த்த தான் உயர்ந்து நிற்றலும் குடிப்பிறந்தார்க்கு இயல்பாம் என்பது இவ்விளக்கவுரையால் பெறப்படும். பணிவும் உயர்வும் செல்வத்தை நோக்கியது என்பது அறிக.

    இவ்வுரையில் ‘உயர்வு’ என்பது குறட்பாச் சொல். அதற்குப் பணியாமை என்பது பரிமேலழகர் கண்ட சொற்பொருள். “அது (செல்வம்) தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும்” என்பது அச்சொற்பொருளுக்கான விளக்கம்.

    உயர்வு ‘பணியாமை’ என்றால் பணிவு ‘உயராமை’ என்பது பெறப்படும். ‘மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு’ என்பதும் ‘மெய்த்திருப் பதம் மேவு என்ற போதினும் ‘இத்திரு துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருக்கும் முகம்’ (5088) என்னும் கம்பராமாயணமும் இந்த வெளிப்பாட்டை ஒத்திருப்பதை உணரலாம். இது எந்த நிலை வந்தாலும் இருந்தநிலை மாறாதிருத்தல். இவ்வாறு உரைகாணாது ‘உயர்வு’ என்பதற்கு இயல்பான பொருளைக் கொண்டால் குடிப்பிறந்தார் இயல்பாகக் கொண்டிருந்த பணிவு சலனத்திற்கு ஆளாகிவிடும் என்பது அறிக.

    நிறைவுரை

    வள்ளுவர் சொல்லுக்குப் பரிமேலழகர் காணும் பொருளும் அதற்கான விளக்கமும் ஒரே அலைவரிசையில் நிற்பதைக் காணலாம். திருக்குறளில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த உரைநெறியை அவர் பின்பற்றியிருக்கிறார். அவர் சொல்லுக்கு இவர் தரும் பொருள் அகராதியில் கிட்டாது. முன்னது மொழிசார்ந்தது. பின்னது படைப்பவன் உள்ளம் அறியும் முயற்சி சார்ந்தது. ஏனைய உரையாசிரியர்களாலும், இல்லாத காரணங்களைச் சுட்டியோ மிகச் சிறுபான்மை மாற்றுக்கருத்துக்களுக்காகவோ அவர் கருத்தினை மிகக் கடுமையாக மறுப்பவர்களாலும் எண்ணிப் பார்க்க இயலாத இத்தகைய புலமைப் பேராற்றல் அவருக்கு இயல்பு.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 19

    பரிமேலழகர் உரைத்திறன் – 19

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ஒருமுறை சொல்வதே உரைக்கழகு!

    முன்னுரை

    ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்பார் நம்மாழ்வார். அதனைச் சற்று மாற்றி ‘இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன்’ என்று வைத்துக் கொண்டால் இந்தக் கட்டுரையின் சாரம் நன்கு விளங்கும். ‘சுருங்கச் சொல்லல்’ என்பது நூலுக்கு ஓதப்பட்ட பத்து அழகுகளில் ஒன்று. ‘கூறியது கூறல்’ என்பது நூலுக்கு இருக்கக் கூடாது என விலக்கப்பட்ட குற்றங்கள் பத்தினுள் ஒன்று. அழகையும் குற்றத்தையும் திசைகளைப்போலப் பத்தாக வைத்த பாங்கு எண்ணத்தக்கது. பரிமேலழகர் தம் உரையில் ஒருமுறை கூறியதை மறுமுறை கூறுவதில்லை. அவ்வாறு கூற வேண்டிய நிலை ஏற்படின் முன்பே கூறப்பட்டது என வாளாச் சுட்டிச் சென்றுவிடுகிறார். இதனால் நினைவாற்றல் உள்ளவர்க்கே என்பதும் அத்தகையோரே நூல்பயிலத் தகுதியானவர் என்பதும் அவற்கே அந்நூற்பயிற்சி பயன்படும் என்பதும் பெறப்படும். ஒவ்வொரு முறையும் முன்னர்க் கூறியதையே பின்னரும் எடுத்தோதுவது கற்பாருக்குச் சலிப்பை ஏற்படுத்துவதுடன் நூலுள் அல்லது உரையுள் இருக்கக் கூடாத குற்றங்களைத் தெரிந்தே செய்வது போலாகிவிடும் என்று அவர் கருதியிருக்கலாம். கூறியது கூறலாகிய குற்றம் தவிர்க்கும் பரிமேலழகரின் உரைத்திறனை முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை தொடர்கிறது.

    உழைப்பவர்க்கன்றி உரை புரியாது

    உத்திவகை முப்பத்திரண்டு எனப்படுவது போலப் புத்திவகையும் பல உள. மண்புத்தி, மரபுத்தி, கல்புத்தி, மூங்கில் புத்தி, எண்ணெய் புத்தி என்று ஐந்து வகையாகப் பகுப்பர். (வடநூலார் இதனை முறையே மிருத்து புத்தி, தாரு புத்தி, சிலா புத்தி, வேணுபுத்தி, தைலபுத்தி என்பர்). பிறவகை புத்திகளை விரிப்பின் பெருகும். தைலமாகிய எண்ணெய் நீர்ப்பரப்பில் ஒரு துளி வீழினும் அப்பரப்பு முழுவதையும் பரவ எத்தனிப்பதைப்போல ஒரு கருத்தினை ஒருமுறை செவிமடுப்பின் அது தொடர்பான அத்தனைப் பொருண்மைகளையும் உள்வாங்கும் ஆற்றலுடையாரைத் ‘தைலபுத்தி உடையவர்’ என்பது வழக்கு. பரிமேலழகர் உரை தைலபுத்தி உடையார்க்கே செய்யப்பட்டது என்பது அதனை ஒருமுறை நோக்குவார்க்கும் புலப்படும் உண்மையாகும்.

    ‘அழுக்காறு’ – பொருள் வரையறை

    அறத்துப்பால் பதினேழாவது அதிகாரத் தலைப்பு ‘அழுக்காறாமை’ என்பதாகும். திருவள்ளுவர் இருக்கக்கூடாத பண்புகளை எதிர்மறையில் சுட்டுவார். வெஃகாமை, புறங்கூறாமை, வெகுளாமை என்பன போல. இருக்க வேண்டிய பண்புகளை உடன்பாட்டில் வைத்துக் கூறுவார். ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை என்பன போல. ‘அழுக்காறு’ என்பது இருக்கக்கூடாத பண்பாதலின் அதனை எதிர்மறையில் வைத்து ‘அழுக்காறாமை’ என்று கூறுகிறார். அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் கூறும் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    ‘அழுக்காறு’ என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் மேலே உரைத்தாம். அச்சொல் பின் ‘அழுக்காற்றைச் செய்யாமை’ என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று ’அழுக்காறாமை’ என நின்றது.

    மேலே சொன்ன விளக்கத்தால் இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று, ‘அழுக்காறு’ என்பது ஒருசொல் என்பதும் ‘அழுக்கு + அறு’ என இதனை இரண்டு சொல்லாக நோக்கக் கூடாது என்பதுமாகியன சொல்லுக்கான புறநிலை விளக்கம். இரண்டு, அதற்கான பொருள் இதற்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்பதனால் கூறியது கூறலாக இங்குப் பதிவிடவில்லை என்னும் பொருள்நிலை விளக்கம்.

    “அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்” (35)

    என்பது அறத்துப்பால் முப்பத்தைந்தாவது குறட்பா. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ளள ‘அழுக்காறு’ என்ற சொல்லுக்குத்தான் பிறர் ஆக்கம் பொறாமை (பிறருடைய வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமை – அடைப்பிற்குள் இருப்பன கட்டுரையாளர் கருத்து) என்று உரைப்பொருள் தந்திருக்கிறார். பிறர் ஆக்கம் பொறாமை என்னும் மூன்று சொற்களைக் கூட மீளவும் சுட்டுதல் உரைக்கட்டுமானத்தைப் பாதிக்கும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். கருதி ‘அதற்குப் பொருள் மேலே உரைத்தாம்’ என 125 குறட்பாக்களுக்கு முன்னால் தான் எழுதிய உரைப்பொருளை நோக்கிய பயணத்திற்கு முன்னோக்கப் பணிக்கிறார். பரிமேலழகரின் படிப்பும் பணியும் ஓலைச்சுவடிகளில் நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கருத்திற் கொண்டால் அவருடைய அளப்பரிய நினைவாற்றல் புலப்படக் கூடும்.

    ஏழாவது அதிகாரமும் எழுபிறப்பு உண்மையும்

    இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பாசுரம். இந்த ஏழு பிறவியைத் திருவள்ளுவர் நட்போடு பொருத்திப் பார்த்திருக்கிறார். ‘செய்ந்நன்றி’ என்பதன் பொருள் செய்பவனுக்கு ஆகாது செய்யப்பட்டவனுக்கு ஆகிவரும். அதாவது உதவியைப் பெற்றுக் கொண்டவன் என்றைக்கும் அதனை மறக்காமல் இருப்பதே செய்ந்நன்றி. இதனை ‘உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து’ என்று பின்னும் ஓதுவார் திருவள்ளுவர். நல்லோர், ஒருவன் இப்பிறவியில் தனக்கு உதவி செய்தவனுடைய நட்பினை எழுபிறப்பிலும் எண்ணிப் பார்ப்பர்’ என்ற கருத்தினைச் சொல்லுகிற குறட்பா,

    “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமம் துடைத்தவர் நட்பு” (107)

    என்று அமைகிறது. இந்தக் குறட்பாவில் சொல்லப்பட்டிருக்கும் ‘எழுபிறப்பு’ என்பதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் சொல்லாமல் அதற்கு முன்னதிகாரங்களில் உள்ள ஒரு குறட்பாவிற்குத் தான் சொல்லிச் சென்ற பொருள் நோக்கிக் கற்பாரை ஆற்றுப்படுத்துகிறார்.

    “எழுமை என்றது வினைப்பயன் தொடரும் எழுபிறப்பினை. அது வளையாபதியுட் கண்டது. ‘எழுவகைப் பிறப்பு மேலே (62) உரைத்தாம்”

    என அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்திற்குக் கற்பார் கவனத்தைக் கொண்டு செல்கிறார். பிறப்பு ஏழாவன,

    “ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
    நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் — சீரிய
    பந்தம் ஆம் தேவர் பதினாறு அயன்படைத்த
    அந்தமில்சீர்த் தாவரம் நாலைந்து”

    என்னும் வெண்பா அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தில் காணப்படுகிறது. 107 ஆவது குறட்பா பொருள் விளக்கத்திற்காக அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தைக் காட்டிச் செல்கிறார். அது மட்டுமன்று. இந்த வெண்பாவின் எழுபிறவி பற்றிய உள்ளடக்கம் வளையாபதி என்னும் காப்பியத்தில் அடங்கியுள்ளது என்பதையும் (107) குறளுரையில் சுட்டுகிறார்.

    அளவைகள் ‘ஆறும்’ பொருந்தும் ஆறும்

    மெய்யுணர்தல் அதிகாரத்தில் உள்ள குறட்பா ஒன்றிற்குப் பரிமேலழகர் விளக்கம் எழுதுகிறார். இது துறவறவியல் சார்ந்ததாதலின் சமயக் கொள்கைகள் சார்ந்த நுட்பமான பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வதிகாரத்தில் உள்ள ஒரு குறள்,

    “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (357)

    என்று அமைந்திருக்கிறது. உயிர்களின் நிலையாமை நோக்கி அவற்றின் மீது வைத்த பற்றினைத் துறந்த ஒருவன் பரம்பொருள் ஒன்றே அழியாதது என்பதை உணர்ந்தால் அவனுக்குப் பிறப்பு தொடராது” என்பது இக்குறட்பாவிற்கான எளிய இயல்பான பொருள். குறட்பாவிலுள்ள ‘உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின்’ என்னும் தொடருக்குப் பரிமேலழகர்,

    “அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் தெளிய ஆராய்ந்து அதனால் முதற்பொருளை உணருமாயின் அவனுக்கு மாறிப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டா”

    என்று பொழிப்புரை எழுதிச் சுருக்கமான விளக்கவுரையில்,

    “அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம்”

    என இன்னும் சுருங்கிய தொடரைக் கையாள்கிறார். இந்தக் குறட்பாவில் கண்ட ‘அளவைகள்’ என்பன தனக்குத் துணையாகும் அறங்களை அறிகின்ற அளவுகோல்கள். ‘இதனைச் செய்ய இயலும்’, ‘இதனைச் செய்ய இயலாது’ என்று வரையறுத்துக் கொள்வதற்குப் ‘பொருந்தும் ஆறு’ என்று பெயர். இவற்றையெல்லாம் இந்தக் குறட்பாவிற்கும் பொருத்தியுரைக்கும் பரிமேலழகர் விளக்கத்தை இன்னொரு முறை பதிவிடாமல் தான் ஏற்கனவே பதிவிட்ட குறட்பாவுக்குக் கற்பாரை வழி நடத்துகிறார்.

    “நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
    தேரினும் அஃதே துணை” (242)

    இந்தக் குறட்பாவுக்கு “அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் நன்றான நெறியிலே நின்று நமக்குத் துணையாம் அறம் யாது என ஆராய்ந்து அருளுடையராக, ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றாலும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே பிறிதில்லை” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் மேற்கண்ட அளவைகள் பற்றியும் பொருந்தும் ஆறு பற்றியும் பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

    அளவைகளாவன,

    “பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும் கருத்தா மொழியாகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும் உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து.

    பொருந்தும் ஆறாவன,

    “இது கூடும் இது கூடாது எனத் தன் கண்ணே தோன்றுவது“

    இவ்வளவு விளக்கங்களையும் திருக்குறளில் ‘அளவைகள் மற்றும் பொருந்தும் ஆறு’ என வருகிற இடங்களில் எல்லாம் ஒவ்வொரு முறையும் சொன்னால் என்ன ஆகும்? உரைச் செறிவு குறையும், கற்பார் உள்ளம் சலிப்படையும். எனவேதான் பரிமேலழகர் தானும் உரைக்குற்றத்தில் சிக்காமல் உரையின் செறிவும் குன்றாமல், கற்பாருக்குக் கைகாட்டியாய் விளங்க நிற்கிறார். கற்பார்தம்  நினைவாற்றலையும் அவ்வப்போது சோதித்துக் கொள்கிறார்.

    எஞ்சாமையும் நீங்காமையும் ஏழுக்கும் உண்டு

    ‘இறைமாட்சி’ என்னும் அதிகாரப் பொருண்மையாக அரசர்க்கு அங்கம், அவனது மாட்சி, மாட்சியும் பயனும் என மூன்றாகப் பகுத்துக் கொள்கிறார் பரிமேலழகர். இவற்றுள் அரசனது மாட்சியை நான்கு குறட்பாக்களில் அடக்கிக் காட்டும் பரிமேலழகர் அவற்றுள் இரண்டு பாட்டினை பொருண்மையால் ஓர் அலகாகக் கொள்வதைக் காணமுடிகிறது. அவ்விரண்டு பாடல்கள் வருமாறு,

    “அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” (382)

    “தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலன்ஆள் பவர்க்கு” (383)

    இவ்விரண்டு பாடல்களினாலும் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை என்னும் ஏழு பண்புகளும் மன்னனிடத்து இயல்பாகவே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வள்ளுவர் பதிவு செய்கிறார்.  இப்பொருண்மையை,

    “அரசனுக்கு இயல்பாவது திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்” (382)  “நிலத்தினை ஆளும் திருவுடையார்க்கு அக்காரியங்களில் (அரச காரியங்களில்) விரைவுடைமையும் அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும் ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா” (383)

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரைகளால் அறியலாம். அரசனுக்கு இருக்கவேண்டிய இந்த ஏழு பண்புகளையும் தனித்தனிக் குறட்பாக்களில் பதிவு செய்தமைக்குக் குறள் யாப்பே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது கட்டுரையாளர் அனுமானம். மேலும் ‘ஏழு’ என்னும் தொகைக்கான விரியைத் திருக்குறள் யாண்டும் கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு பாடல்களிலும் சொல்லப்பட்ட பண்புகள் மன்னனிடத்து இடையறாது நிற்க வேண்டும் என்பதுதான் மூலப்பொருள்.

    ‘அஞ்சாமை’ முதலிய நான்கு பண்புகளும் எஞ்சாது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘எஞ்சாமை’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் எழுதியிருக்கும் பரிமேலழகர் அடுத்த குறட்பாவில் ‘தூங்காமை’ முதலிய பண்புகளும் நீங்காது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘நீங்கா’ என்பதற்கு விளக்கம் எழுதவில்லை. ஆனால்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்று எழுதிவிடுகிறார். பல குறட்பாக்களை முன்நோக்கி உரையெழுதிய பரிமேலழகர் இங்கே முந்தைய குறட்பாவினை (382) நோக்கி இரண்டையும் ஓரலகாகக் கருதுமாறு உரையெழுதுகிறார். முதலில் முதற்குறட்பாவில்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார் ‘எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு” என்றார்.”

    என்று எழுதிய விளக்கத்தை அடுத்த குறட்பாவில் பயிலும் ‘நீங்கா’ என்பதற்கும் பொருத்திக் கொள்க என்று சுருக்கிக் கொள்கிறார். இதனால், இந்த ஏழு பண்புகளுக்கும்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும்” என்று (382) எழுதிய உரை பொருந்தும் என்பது பெறப்படும். பரிமேலழகர் உரையால்,

    1. உயிர்க் குணங்கள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும்
    2. சொல்லப்பட்ட ஏழு குணங்களும் ஒரே நேரத்தில் இடையறாது இருத்தல் வேண்டும்.
    3. அதனால்தான் ‘எஞ்சாமை’ என்ற சொல்லையும் ‘நீங்கா’ என்ற சொல்லையும் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.

    இவ்வளவு பொருள் விளக்கங்களையும்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்னும் ஆறு சொற்களில் பதித்துக் காட்டும் பரிமேலழகர் உரைத்திறனை எப்படிப் புகழ்வது?

    எப்படிக் கொடுப்பது?

    ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியின் சாரம் படைப்பிலக்கியத்தில் பதிவு செய்யப்படுகிறபோது அதன் மதிப்பும் பாதுகாப்பும் கூடிவிடுகிறது.

    “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கும் நெறி” (477)

    என்னும் குறட்பா ‘வலியறிதல்’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகையாற்றலில் பெருமையின் பகுதியாக இருப்பது பொருள். பொருளைப் பிறர்க்கு ஈவது அறத்துப்பாலில் ஈகையெனும் அறமாகக் கருதப்படினும் பொருட்பாலில் அரசனுக்குரிய வலிமைகளுள் ஒன்றின் பகுதியாகக் கருதப்படுகிறது. அறத்துப்பாலில் ‘வறியார்க்கொன்றீவதே ஈகை’ என்பது பொருந்தும். பொருட்பாலில் அதற்கு நோக்கமும் வரையறையும் உண்டு. அதனைக் கூறுகிறது இந்தப் பாடல்.

    “ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்!”

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரையால் இந்தப் பாடல் அரசநீதி செலுத்தும் மன்னன் பொருளைப் பயன்படுத்தும் நெறி பற்றிக் கூறுவதாகக் கருதப்படும். ‘அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கு ஈயும் நெறியான் என உரைகண்ட பரிமேலழகர் அந்த நெறியை இங்கே விளக்காது தான் முன்பே விளக்கிய இன்னொரு குறட்பாவின் விளக்கவுரையைச் சுட்டுகிறார்.

    “ஈயும் நெறி மேல் இறைமாட்சியுள் ‘வகுத்தலும் வல்லதரசு’ (385) என்புழி உரைத்தாம்”

    என்று எழுதுகிறார். அந்தப் பாட்டின் விளக்கவுரையில் “காத்த வகுத்தலாவது,

    1. கடவுளர் அந்தணர் வறியோர் என்ற இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்
    2. யானை, குதிரை, படை, நாடு, அரண் என்ற இவற்றிற்கும் பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும் தன்னிற் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட்பொருட்டாகவும்
    3. மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும் ஐம்புலன்களால் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க

    என ஈதலின் நெறி பற்றி விளக்கும் பரிமேலழகர், பொருட்பாலில் ஈதலின் தன்மையை அறத்துப்பாலினின்றும் முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதை அறியலாம். ‘வறியார்க்கு’ என்னும் அறத்துப்பாலின் வரையறை இங்கே முற்றிலும் நீங்கி அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் நோக்கத்தை முன்னெடுப்பதையே இந்தக் குறட்பாவில் பரிமேலழகர் விளக்குகிறார். இந்த விளக்கத்தைத்தான் ‘ஆற்றின் அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கும் பொருத்திக் கொள்ளச் சொல்கிறார். ஒரு நூறு குறட்பாக்கள் கடந்து உரையெழுதினாலும் எந்தக் குறட்பாவில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருளை உரைத்தோம் என்பதைத் தம் நினைவுப் பேழையில் இருந்து எடுத்தளிக்கும் அழகரின் ஆற்றல் சொல்லுந்தரமன்று!

    உடன் நிகழ்ச்சியும் உண்டு

    ‘காலமறிதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு பாட்டு. காலமும் இடமும் அறிந்து ஒரு செயலை நன்கு திட்டமிட்டுச் செயல்படுகிற ஒருவன்  இவ்வுலகத்தையே ஆள நினைத்தாலும் அது கைகூடும் என்னும் பொதுவான கருத்தைச் சொல்வது போல் அமைந்திருக்கிறது.

    “ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தாற் செயின்” (484)

    “ஒருவன் ஞாலம் முழுதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது ஒருவன் கையகத்ததாம் அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்”

    என்று இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் தொடர்ந்து எழுதிய விளக்கவுரையில்,

    ‘இடத்தான்’ என்பதற்கு மேல் ‘கருவியான்’ என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’

    என்று எழுதிக் காட்டுகிறார்.

    இந்தப் பாடடில் உள்ள உரைநுட்பம்

    முந்தைய பாட்டில் ‘கருவியால்’ என மூன்றாம் வேற்றுமை ‘ஆன்’ உருபு பயின்று வந்திருக்கிறது. இந்த ‘ஆன்’ என்னும் உருபு கருவிப் பொருள் தருவதாக இருந்தாலும் இந்த இடத்தில் அது ‘ஒடு’ உருபின் உடனிகழ்ச்சிப் பொருளைத் தருவதாகக் கொள்கிறார். கொண்டு, ‘கருவிகளுடனே’ என்று உரையெழுதுகிறார்.

    “கருவிகளாவன – மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். ‘அவை உளவாய வழியும் காலம் வேண்டும்’ என்பது அறிவித்தற்குக் ‘கருவியான்’ என்றான்.”

    என்னும் அழகர் விளக்கம் கருவிகள் இன்னின்ன எனப் பட்டியலிடுகிறது. அறிவு, ஆண்மை, பெருமை என்பன மூவகை ஆற்றல். சாம, பேத, தான, தண்டம் என்பன நால்வகை உபாயம். காலத்தால் வினையாற்றினும் இந்தக் கருவிகளோடு வினையாற்ற வேண்டும் என்பது கருத்து. அதாவது இந்தக் ‘கருவிகளால்’ வினையாற்றாமல் ‘கருவிகளோடு’ வினையாற்ற வேண்டுமாம். இவ்வாறாகவே பின்னால் வரும் ‘இடத்தான்’ என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ‘மேல் கருவியான் என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’ எனச் சுருக்கம் காட்டுகிறார். இதனால் ‘இடத்தாற்செயின்’ என்பதற்கு ‘இடத்தினால் செய்’ என்னாது ‘இடத்தோடு’ என்பது பொருளாம்.

    ‘கருவியான் செய்’ என்பதற்குக் ‘கருவியோடு செய்’ என உரை கண்டதால் முன்னுள்ள வலியறிதல் என்னும் அதிகாரத்தோடும் ‘இடத்தான் செய்’ என்பதற்கு ‘இடத்தொடு செய்’ என உரைகண்டதால் பின்னுள்ள இடனறிதல் என்னும் அதிகாரத்தோடும் இயைத்து சிங்கநோக்காகக் ‘காலமறிதல்’ என்னும் இவ்வதிகார அமைப்பு முறை நுட்பம் உணர்த்தினார் என்க.

    நிறைவுரை

    ‘இதற்கான பொருள் அங்கே உரைக்கப்பட்டது’ என்பதை ‘உரைத்தாம்’ என்றும், ‘அங்கே உரைத்ததைப்போல இங்கேயும் பொருள் கொள்க’ என்பதை ‘உரைத்தாங்கு உரைக்க’ என்றும் தெளிவுபடுத்துகிறார் பரிமேலழகர். ஒருசில இடங்களில் மட்டும் முந்தைய அதிகாரத்தின் பெயர் சுட்டும் பரிமேலழகர் பெரும்பாலான இடங்களில் அதிகாரப் பெயரையும் சுட்டுவதில்லை. குறட்பா எண்ணையும் குறிப்பதில்லை. ‘உரைக்குற்றம் வந்துவிடக் கூடாது’ என்னும் பொறுப்புணர்வும், ‘கற்றுணர வல்லார்க்கே அரிய இலக்கிய உரைகள் கைவரபெறும்’ என்னும் கல்விக் கொள்கையும் ஒருங்கே கொண்ட உரையாசிரியர்களுள் பரிமேலழகர் தனித்து நிற்கிறார். ‘உழைத்தால் உயரலாம்’ என்பது பழமொழி! இலக்கியத்தைப் பொருத்தவரையில் ‘உழைக்காதவர்க்கு உரை புரியாது’ என்பது புதுமொழி!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 18

    பரிமேலழகர் உரைத்திறன் – 18

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    மனங்கோணா மறுப்பு

    முன்னுரை

    உள்ளங்களின் எண்ணிக்கையும் கருத்து வேறுபாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அவை ஒன்றே போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தல் ஆகாது. இலக்கிய உரை பற்றிய சிந்தனைகளில் உள்ளங்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டதால் இலக்கிய உரைவளர்ச்சி தடைபட்டதுதான் கண்ட பயன். அறிவும் புலமையும் சார்ந்த அறிஞர்கள் தம் சிந்தனைக்கேற்ப உரைமாற்றம் காண்பது ஏற்கத்தக்கதே. பரிமேலழகரைப் பொருத்தவரையில் அரசியல் கொள்கை, குறுகிய மனப்பான்மை, குறைந்த புலமை, உரைப்பொருள் தவிர வேறுபிற காரணிகள் இவற்றின் அடிப்படையில் மறுப்புக்கு ஆளானவர். பரிமேலழகரின் உரையை மறுப்போர்கள் அவர்தம் உரைமறுப்புக் கோட்பாடுகளையும் உரைமறுப்புத்திறனையும் வகைகளையும் உணர்ந்திருந்தால் இத்தகைய நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். முன்னோர் கண்ட உரைகளை அவர் மறுக்கும் முறைகளே ஒரு ஆய்வுப்பட்டத்திற்கு உரிய பொருளாம். ‘அடிப்பது தெரியாமல் அடிக்க வேண்டும்’ என்றாற்போல மறுப்பது தெரியாமல் மறுக்க வேண்டும் என்ற கொள்கையையும் பரிமேலழகர் பின்பற்றியிருக்கிறார் என்பதை நிறுவுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    சொல்லக் கூடாததும் செய்ய வேண்டியதும்

    ‘ஈகை’ என்னும் அதிகாரத்தில் நல்ல குடி பிறந்தவனிடத்தில் இருக்கின்ற இரண்டு பண்புநலன்களைக் கூறுவதாக ஒரு பாட்டு இருக்கிறது.

    “‘இலன்’ என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்
    குலன் உடையான் கண்ணே உள” (223)

    இந்தப் பாட்டுக்குப் பரிமேலழகர்,

    “யான் வறியன் என்று (இரப்பான்) சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும் அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் இவையிரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே”

    என்று பொழிப்புரை எழுதி,

    “மேல் ‘தீது’ என ஒழிதற்கும் ‘நன்று’ என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி, ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்’ என்பதற்கு, ‘அவ்விளிவரவை (ஒருவன் தனக்குச்) சொல்வதற்கு முன்னே (அவன் குறிப்பறிந்து கொடுத்தல்)’ எனவும், அதனைப் பின்னும் பிறன் ஒருவன் பால் சென்று அவன்) உரையாவகையால் கொடுத்தல்’ எனவும், ‘(யான் இது பொழுது) பொருளுடையேனல்லேன்’ எனக் ‘கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்’ எனவும் உரைப்பாருமுளர். அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பார்”

    என்று விளக்கவுரையும் தந்திருக்கிறார்.

    பரிமேலழகர் உரை விளக்கத்திற்கு விளக்கம்

    “நல்ல குடியில் பிறந்தவனிடத்தில் இருக்கின்ற இரண்டு பண்புகளாவன, ஒன்று தான் எந்த நிலையிலும் தனது இளிவரவைப் பிறரிடம் சொல்லாத தன்மை. இரண்டு அவ்வாறு தன்னிடம் வந்து தமது இளிவரவைச் சொல்லி இரப்பார்க்கு இல்லையென்னாது கொடுக்கும் இயல்பு.”

    பரிமேலழகர் உரை அமைந்த காரணம்

    இந்தத் தொடரின் பல நேர்வுகளில் சொல்லியவாறு பரிமேலழகர் எந்தக் குறட்பாவையும் தனி அலகாகக் கொள்வதில்லை. அதாவது ஒரு குறட்பா (இன்றைக்குப் பேராசிரியர்கள் உட்பட பலரும் கருதியுரைப்பதுபோல்) தனிப்பட்ட நீதியினைக் கூறுவதாகக் கருதிலர். குறட்பாவின் பொருளமைதியை அதிகாரம், அதிகாரத்தின் பொருண்மை, பகுப்பின் முழுமை, குறட்பா இடம்பெறும் இயல், பால் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நோக்கி உரையெழுதுவதைக் குறித்திருந்தோம். இந்தக் குறட்பாவையும் அங்ஙனம் நோக்கித்தான் உரையெழுதுகிறார். இந்தப் பாட்டுக்கு முந்தைய பாடல்,

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று” (222)

    இந்தப் பாட்டில் ‘கொளல்’, ‘ஈதல்’ என்னும் தொழில் இடம்பெற்றிருக்கின்றதேயன்றி எழுவாய் இல்லை என்பதை அறியலாம். அதாவது யார் கொள்ளுவது தீது? யார் ஈதல் நன்று? என்னும் வினாவிற்குப் பாட்டில் விடையில்லை. பொதுப்படையான நீதியுரைப்பதாகவே அமைந்திருக்கிறது. ஈகையாகிய உயர்பண்பு பொதுப்படையாக அமைய வாய்ப்பில்லை. இதனை அவர் எழுதிய விளக்கவுரையில்,

    “மேல் தீது என ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு”.

    எனத் தெளிவுபடுத்துகிறார். ‘உரியவன்’ என்னும் சொல் பொதுமைப்பண்பு கொண்டதன்று. எனவே இந்தப் பாடலுக்கான வினைமுதல் அல்லது எழுவாய் அடுத்த பாட்டில் அமைந்திருப்பதை அவர் நோக்கியிருக்கிறார். அதனால் அடுத்த பாட்டுக்கு உரையெழுதுகிறபோது பாட்டின் அமைப்பைப் பற்றி ஆராயமுடிகிறது. முதல் பாட்டில் எழுவாய் இல்லாமல் எழுதிய திருவள்ளுவர் அடுத்தபாட்டில் எழுவாயோடு (குலனுடையான்) எழுதுகிறார். பரிமேலழகர் இதனை (இரண்டுக்கான தொடர்பை)த் தம் புலமையாற்றலால் கண்டறிகிறார்.

    எஞ்சிய உரைகளும் பரிமேலழகர் பார்வையும்

    ஒரே குறட்பாவிற்குக் கற்பார் புலமைக்கும் சிந்தனையாற்றலுக்கும் ஏற்பப்  பல உரைகளைக் காண முடியும். ஆனால் ஒரே உரையாசிரியர், பிற உரையாசிரியர் கூறும் உரைக்கருத்துக்களை முன்மொழிந்து கற்பார் முன் வைப்பது என்பது அரியது. அரியவற்றுள் அரியனவற்றை இயல்பாகச் செய்துகாட்டும் அழகர் இதனையும் செய்துகாட்டியிருக்கிறார். ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்” என்பதற்குக் குலனுடையானுக்கு இருக்கும் இருவேறு சிறப்பியல்புகள் என உரைகண்ட தன் கருத்துக்கு மாற்றாக உரையாசிரியர்கள் பிறர் கூறும் கருத்துக்களை அவர் முன்மொழிகிறார். அழகர் முன்மொழியும் பிறருடைய கருத்துக்களையும் அவர் உரைகொண்ட பாங்கினையும் தொடர்ந்து காணலாம். இனி ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை’ என்பதற்கு,

    1. ‘(ஒருவன் தனக்குச்) சொல்வதற்கு முன்னே (அவன் குறிப்பறிந்து) கொடுத்தல் எனவும்’ கண்ட உரையினை முன்மொழிகிறார். இந்த உரையால் ‘எவ்வம் உரையாமை’ என்பதற்கு இரப்பவன் இளிவரவைச் சொல்லுதற்கு முன்பாக’ என்பது பெறப்படுகிறது. படவே ‘உரையாமை’ என்பது இரப்பவனுக்கு ஆகிறது.
    2. ‘அதனைப் பின்னும் பிறன் ஒருவன் பால் சென்று அவன்) உரையாவகையால் கொடுத்தல் எனவும் கண்ட உரையினை அடுத்ததாக முன்மொழிகிறார். இதிலும் ‘உரையாமை’ என்பது இரப்பவனுக்கே ஆகி வருகிறது. வரினும் பொருள் பெற்றவன் அதன் பற்றாக்குறை கருதி மற்றொருவனிடம் சென்று (போதவில்லை என்று) ‘உரையாமை’ என்ற பொருளைத் தருகிறது. கொடுக்கின்ற அளவு நோக்கிய அவன் வருத்தத்தைக் குறிப்பதாக இது அமைந்திருக்கிறது என்பதை அறிதல் வேண்டும்.
    3. (யான் இது பொழுது) பொருளுடையேனல்லேன் எனக் கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் கண்ட உரையினையும் முன்மொழிகிறார். முன்னிரண்டு உரைகளில் உரையாமை என்பது இரப்பவனுக்கு ஆக, இந்த உரையில் அது ஈதலைச் செய்பவனுக்கு ஆகி வருகிறது. முந்தைய இரண்டு உரைகளிலும் ‘உரையாமை’ என்பதை மற்ற இரு உரையாசிரியர்களும் தொழிற்பெயராகக் கொள்ள இவ்வாசிரியர் இதனை வினையெச்சமாகக் கொண்டு உரையெழுதியுள்ளார்.

     பரிமேலழகரின் பண்பாட்டு முதிர்ச்சி

    ‘என்னுடைய பார்வை இது’ என்பதில் உறுதியாயிருக்கும் பரிமேலழகர் தவறு கண்ட இடத்துச் சுட்டிக்காட்டத் தயங்கினாரல்லர். ஆனால் இந்தக் குறட்பாவுக்கான உரைவேற்றுமைகளை மனமுவந்து முன்மொழிகிறார். ‘‘இப்படியும் சொல்லுகிறார்கள்’ எனப் பிற உரைகளுக்குப் பாசத்தோடு பரிந்துரைக் கடிதம் தருகிறார். அந்தக் கடிதத்தில் ‘அவர்கள் ஏன் அப்படி உரைசொன்னார்கள்?’ என்பதற்கான காரணத்தையும் விளக்குகிறார். அவர்தம் புலமைத்திறத்தை மெச்சுகிறார். எப்படி? உரையாமை என்பதற்குப் பொருள் காண்பதில் தொழிற்பெயராகவும் வினையெச்சமாகவும் உரைகண்ட சான்றோர்கள். ‘ஈதல்’ என்பதை தொழிற்பெயராகக் கருதாது பொருட்பன்மையாகவே கருதி உரையெழுதியிருக்கின்றனர். இவ்வாறு பொருட்பன்மையாகக் கருதலாம் என்பதுதான் பரிமேலழகர் கருத்தும். ஆனால் அவர் அதனைப் பொருட்பன்மையாகக் கருதாதற்குக் காரணம் பின்னர் உரைக்கப்படும்.

    பொருட்பன்மை என்றால் என்ன?

    ‘உரையாமை’, ‘ஈதல்’ ஆகிய இரண்டனையும் பரிமேலழகர் எதிர்மறை மற்றும் உடன்பாட்டுத் தொழிற்பெயர்களாகக்  கொண்டு உரையெழுதினார்.  அவர் சுட்டிய ஏனைய உரைகளில் ‘ஈதல்’ என்பது பொருட்பன்மையாக்கி உரைக்கப்பட்டிக்கிறது என்று அவர் கூட்டுகிறார். நம் உள்ள வினா ‘பொருட்பன்மை என்றால் என்ன?’ என்பதுதான். ஈதல் என்பது தொழில். அது ஒருதன்மைத்து ஆகாது. பலவகையாக விரியும். தானம் என்பதும் அது. தானம் பல வகைப்படும். ஈதல் தொழில் ஒன்றாயினும் இரப்பவர்க்குக் கொடுக்கப்படும் பொருட்களால் பலவாகும். அன்னதானம், கன்னிகாதானம், சொர்ணதானம், பூதானம், கோதானம், வித்யாதானம் என்பதனைக் காண்க. எனவே பிறர் உரைகளில் இந்த ‘ஈதல்’ என்பது பால்பகா அஃறிணைப் பன்மைப் பெயராகக் கொண்டு ‘உள’ என்னும் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. ‘உரையாமை’ என்பதற்குப் பிறரெல்லாம் கண்ட உரைகள் மேலே சுட்டப்பட்டன. ‘ஈதல்’ என்பதற்கான விளக்கம் இங்கே குறிக்கப்பட்டு,

    ‘அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பார்’

    என்னும் பரிமேலழகரின் விளக்கத்திற்கான காரணம் தரப்பட்டது.

    பரிமேலழகர் மறுக்கிறாரா? ஏற்கிறாரா?

    ‘ஈதல்’ என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைக்கும் பரிலேழகர் அதனைப் பன்மைப் பொருட்பெயராக உரைப்பார் கருத்துக்களை முன்னெடுக்கிறார். ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்கிறாரா என்பது தெளிவாகவில்லை. பல இடங்களில் ‘உரைப்பாரும் உளர். இன்ன காரணத்தினால் அதனை ஏற்கவில்லை’ என்பார். முரண்பாடுகளைச் சுட்டி ‘அஃது உரையன்மை அறிக’ என்பார். ‘அதிகாரப் பொருளோடு இயையாமையின் உரையன்று’ என்பார் இவற்றுள் எதனையும் குறிப்பிடாது வாளாச் சுட்டிக் கற்பாருக்கு ஒரு சிக்கலையும் உண்டாக்கி விடுகிறார். பிறர் உரைகளைப் பரிமேலழகர் சுட்டுவதனின்றும் அவற்றை மதித்துப் போற்றுகிறார். சரி. இவர் ஏன் அவ்வாறு உரையெழுதவில்லை? அல்லது இவர் ஏன் இவ்வாறு (உரையாமையை எதிர்மறைத் தொழிற்பெயராகவும் ஈதலை உடன்பாட்டுத் தொழிற்பெயராகவும் கொண்டு) உரையெழுதியிருக்கிறார் என்ற வினா தோன்றுகிறது.

    பரிமேலழகரின் உரை நுட்பம்

    பரிமேலழகரின் உரை விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் முந்தைய குறட்பாவின் (222) கருத்தினை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று” (222)

    என்பது அந்தக் குறட்பா.

    “ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது. ஈந்தார்க்கு அவ்வுலகம் எய்துதல் இல்லை என்பார் உளராயினும் ஈதலே நன்று”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘எனினும்’ என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களில் ஈதல் சிறந்ததென்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.

    என்ற விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    உரை மதிப்பீடு

    தன்னுரை தருகிறார். பிறர் உரைகளைச் சுட்டுகிறார். பிறர் உரைக்கான காரணத்தையும் பதிவு செய்கிறார். அவற்றை மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. அதனால் ஆய்வுச் சிந்தனைக்கு அழகர் வழிவிடுகிறார். பரிமேலழகர் உரையெழுதுங்கால் இரண்டு உண்மைகளைக் கருத்திற் கொள்கிறார்.

    1. அதிகாரத் தலைப்பு
    2. அதிகாரப் பொருண்மை.

    அதிகாரத் தலைப்பு ஈகை என்பது. ‘ஈகை’ என்பது கொடுப்பவனைச் சார்ந்தது. இரப்பவனுக்கும் ஈகைக்கும் தொடர்பேதும் இல்லை. ‘ஈகை’ என்பது தொழிற்பெயர். அந்தத் தொழில் கொடுப்பவனுக்கே உரியதன்றிப் பெறுபவனுக்குப் பொருந்தாது. அதிகாரத்தின் எந்த இடத்திலும் இரப்பவனைப் பற்றிய குறிப்பேதும் இல்லை. அதிகாரப் பொருண்மை பகுப்பிலும் இது எதிரொளிக்கிறது.

    1. ஈகையின் இலக்கணம் (1)
    2. ஈதலின் சிறப்பு (2-7)
    3. ஈயாமையின் குற்றம் (8-10)

    இந்தச் சிந்தனை பிற உரையாசிரியப் பெருமக்களிடம் இருந்திருக்குமாயின் ‘உரையாமை’ என்பதை இரப்பவனுக்கு ஏற்றி இடர்ப்பட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் ‘உரையாமை’ என்பது கொடுப்பவனுக்குரியது. அதிகாரம் அவனைப் பற்றியே பேசுகிறதாதலின். ‘ஏற்பது இகழ்ச்சி’ என்பது ஔவை மொழியாலும் ‘இரவச்சம்’ என்னும் நாயனார் அதிகாரத்தாலும் பெறப்படும். காட்டப்பட்ட உரைகளில் மூன்றாவது உரையிலும் ‘உரையாமை’ என்பதைக் கொடுப்பவனுக்கே உரித்தாக்கியுரைத்திருப்பதையும் காண்க. எனவே ‘உரையாமை’ என்பதை இரப்பவனுக்கு ஆக்கி உரைப்பது அதிகாரத்தின் குறட்பாக்களின் பொருண்மையோடும் மையக்கருத்தோடும் பொருந்தவில்லை என்பதைப் பரிமேலழகர் உணர்கிறார்.

    இரண்டாவதாக முன்பே சுட்டியபடி ‘நல்லாறு எனினும்’ எனத் தொடங்கும் குறட்பாவில் வினைமுதல் இல்லை. ‘தீச்செயல்’ ஒன்றும் ‘நற்செயல்’ ஒன்றும் என இரண்டு செயல்கள் குறிக்கப்படுகின்றனவேயன்றி அவை யாருக்கு உரியது என்பது தெளிவாகவில்லை. செய்யக் கூடாத செயலைத் தவிர்க்க வேண்டியவன் யார்? என்பதற்கும் ‘செய்ய வேண்டிய செயலைச் செய்பவன் யார்? என்பதற்கும் குறட்பாவில் (222) விளக்கமில்லை. ‘மாட்டேறு’ என்பது அழகர் அறிந்த உரை உத்தியாதலின் முந்தைய குறட்பாவையும் இந்தக் குறட்பாவையும் மாட்டேற்றி குறட்பாக்களின் கருத்துக்களை ஒன்றிணைத்துக் காட்டுகிறார். ‘உரையாமை’ என்பதையும் ‘ஈகை’ என்பதனையும் இனம் பற்றியும் ஒருவனுக்கே உரிய குணம் பற்றியும் தொழிற்பெயராகவே கொண்டு தமது கருத்தினைக் குறிப்பால் புலப்பட வைக்கிறார்.

    மனங்கோணா மறுப்பும் தெளிவும்

    பரிமேலழகரைத் தவிர மற்றவர்கள் ‘உரையாமையை’ இரவலனுக்கு ஆக்கியதால் ஈகை செய்வானுக்கு இருக்கக் கூடாத பண்பும் இருக்க வேண்டிய பண்பும் வெளிப்படவில்லை. இதனால் ‘நல்லாறு எனினும் ‘கொளல் தீது’ என்னும் நீதி ‘கேட்பாரின்றித்’ தவிக்கிறது. ஈதலைப் பொருட்பன்மையாகக் கருதி உரைத்ததால் குறட்பாவுக்குக் கூடுதல் பொருட்சிறப்பு வந்ததாகக் கருத முடியவில்லை. மாறாகப் பரிமேலழகரின் உரையால் முந்தைய குறட்பாவின் வினைமுதல் தெளிவாகிறது. ‘எல்லாரும் ஈகை செய்ய இயலாது. குலனுடையானுக்குரிய ஒழுக்கம் அது’ என்னும் தெளிவு கிட்டுகிறது. அவ்வொழுக்கமும் இருபகுதிகளை உள்ளடக்கியது என்பதும் புலனாகிறது. பிறருடைய உரைகளை மதித்துப் போற்றும் பரிமேலழகர் ‘தானாஅட்டித் தனது நிறுத்தல்’ என்னும் உத்தியை மிகவும் இலாவகமாகப் பயன்படுத்திப் பிற சான்றோர்களின் கருத்துக்களைச் சுட்டுவதோடு அமைகிறார். அவர் உரைநெறி பற்றிய தமது கருத்துக்களைத் தவிர்த்துவிடுகிறார். விளைவு? தம்மைப் பற்றிய பரிமேலழகர் கருத்து என்ன என்பது அறியாமலேயே அவ்வுரைகள் அமைதியாகின்றன.

    நிறைவுரை

    மாற்றுரை காணும் நேர்வுகளில் (583, 1001, 1116) ‘உரைப்பினும் அமையும்’ என்று ஏற்றுக் கொள்கிற பரிமேலழகர் இங்கே அவ்வாறு குறிக்காதது நோக்குதற்குரியது. அவ்வுரைகளால் குறட்பாவின் பொருண்மைப்பகுதி முழுமை பெற்றதாக அவரால் கருத இயலவில்லை போலும்! “உரையாமையையும் ஈதலையும்” தொழிற்பெயராக்கி உரைகண்ட தமது நெறியையும், ஈதலைப் பொருட்பன்மையாக்கிப் பிறர் கண்ட உரைநெறியையும் பந்தி வைக்கும் பரிமேலழகர் சீர் தூக்கும் பொறுப்பினைக் கற்பாருக்கு விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். ஏற்றுக் கொள்ளாததை மறுக்காமல் மறுக்கிறார். பிறர் மனம் கோணாமல் மறுக்கிறார். பரிமேலழகரின் உரை மட்டும் மாட்சியுடையதன்று. அவரும் மாட்சிமை உடையவரே என்பது இதனால் புலனாகலாம்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 17

    பரிமேலழகர் உரைத்திறன் – 17

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    திருக்குறளில் ‘நோக்கு’

    முன்னுரை

    ‘நோக்கம்’ என்ற சொல்லை அனைவரும் அறிவர். ‘பார்வை’ என்ற சொல்லும் ‘காட்சி’ என்பதும் அவ்வாறு பழக்கமானதே. ஆனால் ‘நோக்கு’ என்ற சொல் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நோக்கம் என்னும் சொல்லின் திரிந்த வடிவம் ‘நோக்கு’ எனவும் சிலர் கருதியிருக்கக் கூடும்.  கண்ணின் வினை ‘பார்வை’ என்றால் மனத்தோடு கூடிய கண்ணின் வினைக்கு நோக்கம் என்று பெயர். திருவள்ளுவர் முன்னதைப் ‘பொதுநோக்கு’ என்பார். பின்னதை ‘நோக்கு’ என்பார். இன்னும் தெளிவாகச் சொன்னால் உள்ளக்குறிப்பினைக் கண் வெளிப்படுத்துவதற்கே நோக்கம் என்று பெயர். ஆனால் நோக்கு என்பது ‘பார்வை’, ‘நோக்கம்’ என்பவற்றினின்றும் மாறுபட்டது. இவற்றுக்கும் ‘நோக்கு’ என்பதற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பு கிடையாது. இந்த நோக்கு திருக்குறளில் அமைந்திருக்கும் பாங்கினை உரையாசிரியர் பரிமேலழகர் வெளிப்படுத்துமாற்றை ஆராய்வதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    நோக்கு என்றால் என்ன?

    உண்மையில் இந்த ‘நோக்கு’ என்பது மக்கள் வழக்கில் உள்ளதே. திருமண வீட்டில் விருந்துண்டவன் சொல்வான் “விருந்து சாப்பிடுகிற மாதிரி இல்லையே?”  இளைஞர் வட்டத்தில் ஒரு பேச்சு கேட்டிருக்கலாம் “படம் பாக்குற மாதிரி இல்லையே?” விருந்து உண்கிற மாதிரி இருக்க வேண்டும். படம் பார்க்கிற மாதிரி இருக்க வேண்டும். ஊன்றிக் கவனித்தால் ‘விருந்து’ என்பதும் ‘படம்’ என்பதும் சில அம்சங்களை உள்ளடக்கி இருக்கவில்லையே என்னும் ஏக்கம் அந்தத் தொடர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். இந்த அம்சங்கள் செயப்படுபொருளில் அமைந்திருக்க வேண்டும். சரியா? கவிஞன் படைக்கிறான். இந்த அம்சங்கள் படைப்பில் இருக்க வேண்டும். இதுபோல்தான் நோக்கு என்பதும். ‘நோக்கு’ என்பது நோக்குகிற வினையைக் குறிக்கும். அந்த வினைக்கு உகந்ததாக அதற்கான செயப்படுபொருள் அமைந்திருக்க வேண்டும். ஒருவன் ஒரு கவிதையைப் ‘பார்த்தான்’ என்பதற்கும் ‘படித்தான்’ என்பதற்கும் ‘நோக்கினான்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. நோக்கிற்கான கூறுகள் இருந்தால்தான் அது நோக்கிற்குரியது. அந்தக் கூறு காலங்கடந்தும் எண்ணி வியப்பதாயும் வியந்து திளைப்பதாயும் அமைதல் வேண்டும். இதிலிருந்து ‘நோக்கு’ என்பது கவிதையில் அமைந்திருக்கும் கூறுகளின் தொகுதி என்பது பெறப்படும். இது ஒரு செய்யுளின் அல்லது கவிதையின் மாத்திரை முதலாக அடி ஈறாக அமைந்திருக்கும். எப்படி அடுத்த பத்தியில்.

    தொல்காப்பியம் கூறும் நோக்கு

    பொருளதிகாரச் செய்யுளியலில் செய்யுளின் உறுப்புக்களாக முப்பத்திரண்டு கூறுகளை ‘மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ’ (தொல் 1259) என நிரல்படுத்தும் தொல்காப்பியம் “நோக்கே” என்று இதனைக் குறிப்பிடுகிறது. இது மேற்குறிப்பிட்ட நூற்பாவில் முற்பகுதியான இருபத்தாறு சிறந்த கூறுகளில் ஒன்று. நூற்பாவின் பிற்பகுதியில் கூறப்படும் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டும் முன்னர்க் கூறிய இருபத்தாறுக்கு இணையானவை அல்ல என்பது இளம்பூரணர் கருத்து.

    “மாத்திரை முதலா அடிநிலை காறும்
    நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” (1306)

    என்னும் நூற்பாவில் நோக்கு என்பதற்கான விளக்கமும் பொருள் வரையறையும் பெறப்படுகிறது. இந்த நூற்பாவிற்கு உரையாசிரியப் பெருமக்கள் எழுதிய குறிப்புரைகளைக் காண்பது பொருள் தெளிவுக்கு உதவக்கூடும்.

    நோக்கிற்கான இளம்பூரணர் விளக்கம்

    தொல்காப்பியத்திற்கு உரைத்தடம் காட்டிய ஆசிரியர் இளம்பூரணர் மேற்கண்ட நூற்பாவிற்குப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

    “மாத்திரை முதலா அடிநிலையளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும். காரணம் எனினும் கருவியெனினும் ஒக்கும். நோக்குதற்காரணம் என்பதால் உண்டற்தொழில் என்றாற்போலக் கொள்க” அதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்கும் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங் காலும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை.”

    உரையாசிரியர் இட்ட தடத்தைப் பின்வந்த உரையாசிரியர்கள் சிறிதளவு செப்பமிட்டார்களே தவிர அடிப்படையில் பொருள் மாற்றம் ஏதும் செய்ய  இயலவில்லை என்பதை அவர்தம் உரைகளால் அறிந்து கொள்ள முடியும்.

    பேராசிரியர் கருத்து

    “ஆறுதலையிட்ட அந்நாலைந்து’ எனவும் ‘எட்டு’ எனவும் இருவகையான தோன்றக் கூறியது ஏனையது போலாமல் எட்டுறுப்பும் ஓரொரு செய்யுட்கு ஒரோ ஒன்றேயும் வரும் என்பது அறிவித்தற்கும் அவைதாம் அச்செய்யுள் பல தொடர்ந்த வழியே பெரும்பான்மையும் உறுப்பு என்பது அறிவித்தற்கும் அவ்வாறு கூறினான் என்க. எனவே ஒழிந்த உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம். “நோக்கென்பது மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்” எனப் பொதுநூற்பாவில் எழுதிய பேராசிரியர்,

    “மாத்திரையும் எழுத்தும் அசைநிலையும் சீரும் முதலாகக் கொண்ட  அடி நிரம்பும் துணையும் நோக்குடையவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது. ………………..…….. நோக்கிப் பயன்கொள்ளும் கருவியை நோக்குதற் காரணம் என்றான் என்பது”

    என்று நோக்கு என்பதற்குப் பொருள் விளக்கம் தருகிறார். நச்சினார்க்கினியர் கருத்து பின்வருமாறு அமைந்திருக்கிறது.

    நச்சினார்க்கினியர் கருத்து

    இலக்கியத்தை இலக்கணமாக்கி, இலக்கணத்தை இலக்கியமாக்கி உரையெழுதி உரைக்கோபுரத்தின் உச்சந்தொட்ட உரைக்கடல் நச்சினார்க்கினியர் இந்த நோக்கு பற்றித் தம் கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

    “நோக்கென்றது மாத்திரை முதலிய உறுப்புக்களையுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை. நோக்குதல் – பயன்போடல் என்று பொருள் வரையறை எழுதி,

    “மாத்திரை முதலிய அடிநிரம்பும் துணையும் கேட்டோர் மீண்டும் நோக்கிப் பயன்கோடலையுடையதாகச் செய்யும் கருவி, நோக்கென்று  பெயர் கூறப்படும் என்றவாறு”

    என ‘நோக்கு’ பற்றிய மேற்கண்ட நூற்பாவிற்குப் பொழிப்புரை தருகிறார். நோக்கு பற்றி ஏனைய உரையாசிரியர்களினும் நச்சினார்க்கினியர் கருத்து பெரிதும் ஆராயத்தக்கதும் தகுதி மிக்கதுமாம். அவர் எழுதிய உரைகளில் இந்த உறுப்பைப் பயன்படுத்தாமல் உரைகண்ட வரலாறே இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

    உரையாசிரியர்கள் பார்வையில்

    உரையாசிரியர் இளம்பூரணர் நோக்கிற்கான பொருள் வரையறை தந்து அதனை “ஒரு நோக்காக ஓடுதல், பல நோக்காக ஓடுதல், இடையிட்டு  நோக்குதல்” என மூவகை எனப் பகுத்தும் காட்டுகிறார். காட்டி, நாலடியாரிலிருந்து இரண்டு பாடல்களை (1, 172) முதலிரண்டிற்கும் “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ எனத் தொடங்கும் திருமுருகாற்றுப்படையை இடையிட்டு நோக்குதலுக்கும் எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறார். பேராசிரியரும் பின்னர் வந்த நச்சினார்க்கினியரும் “முல்லை வைந்துனை தோன்ற” எனத் தொடங்கும் (அகம். 4) பாடலை எடுத்துக்காட்டி விளக்குகின்றனர். நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி குணமாலை இலம்பக வரிகளை மேற்கோள் காட்டி கூடுதல் விளக்கம் தருகிறார்.

    நோக்கு என்ற சொல்லின் இலக்கியப் பயன்பாடு

    கூறாமை நோக்கி, முகம் நோக்கி, இருநோக்கு, சிறுநோக்கம்,  நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள், ‘யான் நோக்குங்காலை’ குறிக்கொண்டு நோக்காமை, செற்றார்போல் நோக்கும் யான் நோக்க பொதுநோக்கு, கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்பன திருக்குறளில் உள்ள ‘குறிப்பறிதல்’ என்னும் இரண்டு அதிகாரங்களுள் பயின்று வரும் சொற்களாகும். ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பது கம்பராமாயணம். ‘நோக்கரிய நோக்கே’ என்பது திருவாசகம். ‘நோக்க நோக்க களியாட்டம்’ என்பது பாரதி வாக்கு. ‘நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்’ என்பது பாவேந்தர் வரி. எண்ணற்ற பயன்பாடுகள் உள. காட்டப் புகின் கட்டுரை அளவு விஞ்சும்.

    நோக்கு எனபது பற்றிய கட்டுரையாளர் விளக்கம்

    முன்னுரையில் குறிப்பிட்டதுபோல ‘நோக்கு’ என்பது படைப்பில் இருக்க வேண்டிய அரிய கூறுகள். அது மாத்திரையிலிருந்து தொடங்கும். சான்றாக அளபெடை பற்றிப் பலரும் அறிவர். ஆனால் அந்த அளபெடையை ஒரு நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறார் திருவள்ளுவர். இது பற்றிய விரிவு அடுத்த கட்டுரையில். குறட்பாவில் பயன்படுத்தபட்டுள்ள ஒவ்வொரு மாத்திரையும் அசையும் சீரும் அடியும் ஒரு காரணம் பற்றியனவாகவே இருக்கின்றன. இந்தக் காரணங்களே அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. எனவே ஒரு நூல் பன்முறை படிக்கப்படுகிறது என்றால் படிப்பதற்கான காரணங்கள் அங்கே அமைந்திருக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். இந்தக் காரணங்களையே ‘நோக்கு’ என்னும் சொல் குறிக்கிறது. ‘நோக்குதற் காரணம்’ என்பது அதுதான். இனிக் குறிப்பிட்ட குறட்பாவில் ‘நோக்கு’ அமைந்துள்ள சிறப்பினைக் கண்டு மகிழலாம்.

    குறட்பா – பொழிப்பு –  விளக்கம்

    திருக்குறள் கட்டுமானம் முழுமையும் நோக்கிற்குரியதாகவே இருக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. அவர் கருத்து இதுதான் என்பதை அவர் எழுதிய உரை நன்கு புலப்படுத்தும். பரிமேலழகரின் உரைநுண்ணியத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்குக் குறள் அமைந்திருக்கிறது. இது வள்ளுவத்தைத் தாழ்த்துவதோ குறைத்து மதிப்பிடுவதோ ஆகாது. ஏனைய உரைகளைக் கற்றார் பரிமேலழகர் உரையினைக் கற்கும் பொழுது உள்ளத்தில் ஏற்படும் உணர்வே இது. ‘பரிமேலழகர் நோக்கியதை மற்றவர் ஏன் நோக்கவில்லை?’ என்ற எண்ணம் தோன்றுவதை யாரே தடுக்க இயலும்? வேறு வாய்பாட்டில் சொன்னால் திருக்குறளில் அமைந்துள்ள நோக்கினைக் கண்டறிந்து கூறுவதில் பரிமேலழகர் முன்களப் பணியாளராகவே திகழ்கிறார் எனலாம். இவ்வாறு பரிமேலழகரின் தனித்த உரைநோக்கிற்கு உரிய குறட்பாக்களில்,

    “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்” (415)

    என்னும் குறட்பாவும் ஒன்று. இதற்கு,

    “வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும். காவற்சாகாடு உகைப்பார்க்கு  ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.”

    (இதனைக் காவற்சாகாடு உகைப்பாற்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொற்கள் “வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும் எனப் பொருள் உவமம் என்ற நிலையில் படிக்கலாம். இந்தப்  பொழிப்புரையைத் தொடர்ந்து,

    “அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல்போல உதவுதல் தளர்ந்துழி அதனை நீக்குதல். ‘கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார்  ‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது. அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

    என்று விளக்கவுரை தந்திருக்கிறார்.

    நோக்கு அமைந்திருக்கும் இடம்

    ஒழுக்கமுடையார் சொல், வழுக்குநிலத்தில் ஊற்றுக்கோல் போல் என்பது மட்டுமே குறட்பாவில் உள்ளது. குறட்பாவை ஊன்றிப் படித்தால் இது புலனாகும்.  ஒழுக்கமுடையார் சொல் யாருக்குப் பயன்படும் என்பதற்குப் பாட்டில் குறிப்பில்லை. ஊற்றுக்கோலின் பயன்பாடு வழுக்கு நிலத்திற்கா? அந்நிலத்தில் நடப்பர்க்கா என்பதற்கும் விடையில்லை. ஊற்றுக்கோல் என்ன செய்யும் என்பதற்கும் தெளிவில்லை. வாயிலிருந்து வருவதே சொல்லாயிருக்க ‘வாய்ச்சொல்’ எனக் கூறியது ஏன் என்பதற்கான விடையும் காணவேண்டியதிருக்கிறது. சொல்லை ஊற்றுக்கோலோடு ஒப்பிடுவதால் மட்டும் குறட்பாவின் கருத்து நிறைவடைந்துவிடுமா (ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் ஊற்றுக்கோல் அற்று என்றுதானே உள்ளது)? என்பதும் புரியவில்லை. ஆனால் நமக்குப் புரியவில்லை என்பதற்காக இல்லை என்று சொல்லிவிட இயலுமா? இந்தக் கூறுகளை (நோக்கினை) உள்ளடக்கித்தான் திருவள்ளுவர் குறட்பா எழுதியிருக்கிறார். அவற்றைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். பரிமேலழகரின் உரை நோக்கிற்கான காரணங்கள் குறட்பாவில் ஆழ்ந்து பரவியிருக்கின்றன. அவை ஒவ்வொன்றினையும் முற்றாக அறிந்து கொள்வதன் மூலம் திருக்குறளின் குறட்பாக்கள் நோக்கு என்னும் உறுப்பால் கட்டியமைக்கப்பட்டிருக்கும் பாங்கு புலனாகலாம்.

    ஏழு சீர்களில் பரிமேலழகர் கண்டறிந்த நோக்கு

    இந்தப் பாட்டில் நோக்கு அமைந்திருக்கும் பாங்கினை இனிக் காணலாம். அதாவது இந்தச் சொல்லை இந்த இடத்தில் பெய்ததற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து கண்டறியுமாறு அந்தச் சொல் அமைந்திருப்பதுதான் நோக்கு.  ஏழு சீர்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பரிமேலழகர் பிரித்து நோக்கித்  திருக்குறளில் ‘நோக்கு’ அமைந்திருக்கும் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறார். பொழிப்புரை, விளக்கவுரை என்னும் இரண்டின் அடிப்படையிலும் இதனை நிரலாகக் காணலாம்.

    1. ‘இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே’ என்றுதான் பாட்டில் இருக்கிறது. ஆனால் பரிமேலழகர் “ வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும்” என்று உரையெழுதுகிறார். வழுக்கல் நிலத்துக்கும் ஊற்றுக்கோலுக்கும் தொடர்பில்லை. வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கும் ஊற்றுக்கோலுக்குமே தொடர்பு.  இயங்குவார்க்குத்தான் ஊற்றுக்கோல் உதவுமே தவிர நிலத்திற்கு உதவாது. பாட்டில் இல்லாத இந்தத் தெளிவினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். இனி, ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல்’ என்றால் பொருள் புலப்படாது. ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் என்ன செய்யும்? ‘உதவும்’. ஊன்றப் பயன்படுவதால் அது உதவி.
    1. இனி ‘ஊற்றுக்கோல் அற்றே’ என்றே பாட்டில் அமைந்துள்ளது. ‘அது அவர்க்கு உதவுவதுபோல என்று இல்லை. பரிமேலழகர் ‘உதவுதல்போல’ என்று நோக்கி உரையெழுதுகிறார். ‘ஊற்றுக்கோல் உதவுதல் அற்றே’ என்று கொள்ள வேண்டுமாம்.
    1. ‘ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்’ என்பதற்குக் காவற்சாகாடு உகைப்பார்க்கு (அரசனுக்கு) ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்’ என்று உரை காண்கிறார் பரிமேலழகர். அதாவது வழுக்கல் நிலத்து இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் உதவும் என்றால் ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதற்குத் திருக்குறளில் விடையில்லை.  அதாவது ஊற்றுக்கோல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ‘இயங்குவார்க்கு’ என்ற அடைச்சொல்லை அவாவி உவமத் தொடர் அமைந்திருப்பது போலவே, காவற்சாகாடு உகைத்தார்க்கு என்னும் அடைச்சொல்லை உவமேயத்திற்கு அதாவது பொருளிற்கு வருவித்துக் கொள்கிறார் பரிமேலழகர். நிலமாளும் அரசனுக்கு உதவும் என்பது கருத்து. அதனை வருவித்து உரையெழுதுகிறார். இதனை,

    “அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது.”

    என்னுந் தொடரால் விளக்கிக் காட்டுகிறார். உவமத்தில் அது அவாய் நிலையாம். பொருளில் அதனை வருவித்துக் கொள்கிறாராம். என்ன நுட்பம்?

    1. ஊற்றுக்கோல் வழுக்காமல் காக்கும். சரி. ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் காவாற்சாகாடு உகைத்தார்க்கு உதவுவது யாங்ஙனம்? இதற்கும் பரிமேலழகர் எழுதிக்காட்டுகிறார். அரசபாரம் தாங்காது மனம் தளர்ச்சியடைந்தவழி அத்தளர்ச்சியை ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் போக்குமாம். இதனை “உதவுதல் தளர்ந்துழி (வறுமையினால் அல்லது அறியாமையினால் துன்பமுற்றபோது) அதனை நீக்குதல்” என்ற தொடரால் விளக்குகிறார்.
    2. ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் என்பது குறட்பாவில் பயின்றுள்ள தொடர். இந்தத் தொடரில் இரண்டு சொற்கள் பரிமேலழகரின் நோக்கிற்குக் காரணமாகிறது. ஒன்று ‘ஒழுக்கமுடையார்’ என்ற சொல். இரண்டு வாய்ச்சொல். கேள்வி என்ற அதிகாரத்தில் வருகின்ற இந்தப் பாட்டில் ஒழுக்கத்திற்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுப்பானேன் என்னும் தன் வினாவிற்குப் பரிமேலழகரே விடைசொல்லுகிறார். எப்படி? இப்படி!

    ‘கல்வியுடையரேனும் ஒழுக்கமிலாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’ என்றார்”.

    1. இரண்டாவது ‘வாய்ச்சொல்.’ சொல் என்ற அளவே போதுமானதாயிருக்க வாய்ச்சொல் என வேண்டாது கூறியது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கும் விடையிறுக்கிறார்.

    “‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது”.

    என்று எழுதுகிறார். சொல் என்னும் கருவி எவர்வழியாகச் செயல்படவேண்டும் என்பதில் பரிமேலழகரின் நோக்கு வியப்பளிப்பதாக உள்ளது. இவ்வளவு நோக்கிற்கும் திருக்குறள் இடந்தருகிறது.

    பரிமேலழகரின் மீயுயர் நோக்கு

    1. இந்தப் பாட்டு ‘கேள்வி என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கேள்வி என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த பரிமேலழகர் “கேட்கப்படும் நூற்பொருளைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல்” என்று விளக்கம் தருகிறார். அதாவது கேள்வி என்பது தொழிற்பெயர். அதனை வியங்கோள் பொருளில் பயன்படுத்தியே இந்த அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் கேட்க என்று பொருள்படும்படியான சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை நோக்குகிறார் பரிமேலழகர். வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கு ஊன்றுகோல் உதவுவது போலத் தளர்ச்சி வந்துழி காவற்சாகாடு உகைப்போர்க்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் உதவும்! அதனால் அவர் சொல்லைக் கேட்கவேண்டும்’ என்று இருந்தாலேயே பொருண்மை நிறைவுறும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். அவர் எழுதுகிறார்,

    அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

    பாட்டில் சொல்லாவிட்டாலும் அதிகாரம் கேள்வியாதலின் அத்தகைகய பயன்தரும் சொற்களை நாட்டை ஆளுகிற மன்னன் கேட்டுச் செலுத்துவதே செங்கோல் சிறக்கும் நெறியாகும்’ என விளக்கமளிக்கிறார் பரிமேலழகர்.

    நிறைவுரை

    ‘உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம்.’ என்னும் பேராசிரியர் கருத்தும் ‘கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை’ என்னும் நச்சினார்க்கினியர் விளக்கமும் நோக்கு என்பதன் பொருளைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன. பொதுவாக ‘நோக்கு’ என்பது பார்ப்பவர் வினையாக இருக்கும். இங்கே அது படைப்பிலுள்ள கூறுகளைக் குறிப்பதாக அமையும். இந்தக் கூறுகளே அதற்குப் பெருஞ்சிறப்பைத் தந்து அவ்விலக்கியம் நீடித்து நிலைப்பதற்குக் காரணமாக அமையும். திருக்குறளில் நோக்கு அமையாத குறளே இல்லை என்பதும் அதில் பரிமேலழகர் அறியாத நோக்கும் இல்லை என்பதும் அவ்விரண்டனையும் கற்பார் அடையும் வியப்பு!. ‘பானை சோற்றுக்குப் பதச்சோறாக’ மேற்கண்ட குறளில் அமைந்துள்ள நோக்கினைப் பரிமேலழகர்வழி ஆராய்ந்து கண்டதன் மூலம் அவர் உரைத்திறம் உணரலாம்!

    (தொடரும்…..)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 16

    பரிமேலழகர் உரைத்திறன் – 16

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகர் உரையில் ‘குறிப்பெச்சம்’

    முன்னுரை

    திருக்குறள் பரிமேலழகர் உரை காலங்கடந்து நிற்பதோடு அறிஞர் பெருமக்களால் சிறப்பாகவும் புகழப்படுகிறது. இத்தகைய பெருமை அதற்குக் கிட்டியிருப்பதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று அவர் குறட்பாவிற்கு உரை காணும் நெறி. இந்தத் தொடரில் பல முறை சுட்டிக்காட்டியிருப்பதுபோலக் குறட்பாவின் சொற்சுருக்கம் அதாவது குறுகிய கட்டுமானம் அவரைப் பெரிதும் ஈர்த்திருந்தது. ஈர்க்கவே அதனை உற்று நோக்கி உரையெழுதும் நிலை வந்தது. வரவே எழுசீர்களில் அடங்கிய ஒரு சிறுபாட்டு எந்தெந்த வகையில் எல்லாம் பொருட்சுமையைத் தாங்கி நிற்கிறது என்று அவர் எண்ணினார். எண்ணி அந்த வகைகளில் எல்லாம் உரை சொன்னார். குறட்பாவின் ஏழு சீர்களுக்குள் வெளிப்பட நிற்கும் உரை சொல்வார். வள்ளுவர் சொல்ல நினைக்கும் உள்ளக்கருத்தினைக் கண்டுரைப்பார். உவமத்தின் இயல்புகளைப் பொருண்மைக்கு ஏற்றி உவமத்தால் பொருண்மையின் ஆழம் காட்டுவார். இவற்றோடு சொல்லாமல் விடுபட்ட கருத்தினைக் ‘குறிப்பெச்சம்’ என்னும் பெயரால் கண்டறிந்து கூறுவார். அவர் கண்டறிந்து கூறிய ‘குறிப்பெச்சம்’ என்னும் அதனை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்வதன் மூலம் பரிமேலழகரின உரைத்திறனை அறிய முயல்கிறது.

    குறிப்பெச்சம் என்றால் என்ன?

    ‘எஞ்சியிருப்பது எச்சம்’ என்பது பொதுவழக்கு. ‘வந்த’ என்ற வினைச்சொல் பொருள் முடிவடையாது, தான் முடிவடைவதற்கு இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்பதைக் காணலாம். எதிர்பார்க்கப்படும் அச்சொல் பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லை அதனோடு இணைத்தால்தான் பொருள் நிறைவுறும், ‘வந்த பையன்’ என்பதுபோல. எனவே அந்தத் தொடர் முடிவடைய ஒரு பெயர்ச்சொல் எஞ்சியிருக்கிறது. அதனால் அது பெயரெச்சம். ‘வந்து’ என்ற வினைச்சொல் பொருள் முடிவடையாது தான் முடிவடைவதற்கு இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்பதைக் காணலாம். எதிர்பார்க்கப்படும் அச்சொல் வினைச்சொல். ஒரு வினைச்சொல்லை அதனோடு இணைத்தால்தான் பொருள் நிறைவுறும், ‘வந்துப் போனான்’ என்பதுபோல. எனவே அந்தத் தொடர் முடிவடைய ஒரு வினைச்சொல் எஞ்சியிருக்கிறது. அதனால் அது வினையெச்சம். இந்தத் தெளிவினை உள்வாங்கினால் குறிப்பெச்சம் என்பதை எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியும்.

    1. ஒரு சொல்லின் குறிப்பால் வேறுசில சொற்களை வருவித்துப் பொருள் முடிப்பது, இது எஞ்சி நின்றதால் எச்சமாயிற்று. எஞ்சுதல் – குறைந்து நிற்றல்.
    2. வெளிப்படையாகவன்றி மறைந்து நின்று வேறொரு சொல்லின் குறிப்பினால் தோன்றும் பொருள்
    3. வெளிப்படையாகச் சொல்லாமல் எஞ்சி நின்ற பொருளை ஒரு சொல்லின் குறிப்பினால் கொள்வது

    என்று பலவாறாக இது ஆராயப்படுகிறது. படைப்பாளன் தன் உள்ளத்துக் குறிப்பினைத் தொடர்புடைய பாடலுக்குள் பதிவு செய்ய இயலாத நிலையில் அவன் உள்ளத்துக்குள்ளேயே எஞ்சியிருப்பதால் அது குறிப்பெச்சம் எனப்படலாம். எஞ்சிய குறிப்பு எச்சக் குறிப்பு. இது முன்பின்னாகிக் குறிப்பெச்சம் எனப்படும்.  அதனைக் கண்டறிந்து கூறுவது உரையாசிரியர் கடன். குறிப்பு உள்ளம் சார்ந்தது.  ‘உள்ளக்குறிப்பு’, ‘முகக்குறிப்பு’, ‘சொற்குறிப்பு’ என்பன நோக்குக. வெளிப்படையாக அமைந்தால் அது கருத்து. உள்ளுக்குள்ளேயே அமைந்துவிடுமானால் அது குறிப்பு. அந்தவகையில் திருக்குறள் பரிமேலழகர் உரையில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் உரையாசிரியர் பரிமேலழகர் குறிப்பெச்சம் பற்றிச் சிந்தித்திருக்கிறார். எனினும் கட்டுரையின் அளவு மற்றும் செறிவு கருதி ஒருசில பாக்களின் உரையைக் கொண்டு அதனை விளங்கக் காணலாம்.

    கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரா?

    மழலைச்சொற்களின் இனிமையைத் திருவள்ளுவர் எதிர்மறையால் பதிவு செய்கிறார். மழலையின் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்காதவரே குழலிசையையும் யாழிசையையும் வியந்து போற்றுவர் என்பது குறட்பாவின் சொற்பொருள்.

    “குழல் இனிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்.” (66)

    கேளாதாதவர் இனிமை என மயங்குவர் எனச் சொன்னதன் மூலம் கேட்டிருந்தால் அவற்றினும் இனிதென மழலையைச் சொல்லியிருப்பர் என்பது குறிப்பு. இந்தக் குறிப்புப் பாட்டில் இல்லை. எஞ்சி நிற்கிறது. பரிமேலழகர் அறிந்து சொல்கிறார். ‘குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர் தம் புதல்வருடைய மழலைச் சொல்லைக் கேளாதவர்’ எனப் பொழிப்பெழுதிய பரிமேலழகர் விளக்கவுரையில்,

    “கேட்டவர் அவற்றினும் மழலைச் சொல் இனிது என்பர்’ என்பது குறிப்பெச்சம்”

    என்று எழுதுகிறார். கேளாதவர் சொல்லியன பாட்டில் உள்ளது. கேட்டவர் சொல்லியிருக்கமாட்டார் என்பது திருவள்ளுவர் குறிப்பு. இது பாட்டில் இல்லாதது. இதனைப் பரிமேலழகர் கண்டுரைக்கிறார்.

    தானாக விளையாதா?

    விருந்தோம்பலாகிய இல்லற உயர்பண்பினைப் போற்றும் திருவள்ளுவர், அந்தப் பண்பினை உடையவர் வயல்களில் விதைக்க வேண்டிய தேவையில்லை என்பதை ஓகாரத்தால் உணர்த்துகிறார். அந்தப் பாட்டு,

    “வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்” (85)

    என்று அமைந்திருக்கிறது. இதற்கு “முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத்தான் மிசைவானது விளைநிலத்துக்கு வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா” என்று பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். முந்தைய இரண்டு பாடல்களையும் இணைத்து ஓரலகாக்கிப் பொருள் முடிவு கூறும் பரிலேழகர், ‘இம்மைப்பயன் கூறப்பட்டது’ என்று எழுதுகிறார். எவை இம்மைப்பயன்.

    1. விருந்தோம்புவானுக்கு வறுமை வராது
    2. (காரணம்) அவன் இல்லத்தில் திருமகள் உறைவாள்.
    3. செய்யவள் இருப்பதனால் வயலுக்கு விதை தேவையில்லை.

    என்று விரிவாக எழுதுகிறார்.

    ‘தானே விளையும் என்பது குறிப்பெச்சம்’

    ‘விதைக்கவும் வேண்டுமோ’ என வினவிய திருவள்ளுவருக்கு ‘வேண்டா’ என விடையிறுத்த பரிமேலழகர், ‘விளைச்சல் என்ன ஆகும்’ என்னும் கற்பார் வினாவிற்கு இப்படி விடைகூறுகிறார். விதைக்க வேண்டுமோ என்பது திருவள்ளுவர் வினா. வேண்டாம் என்பது பெறப்படும். தானாக விளையும் என்பது திருவள்ளுவர் உள்ளக்குறிப்பாம்.

    கோடாதவன் தாழ்வு கேடன்று

    ‘கேடு’ என்பது நடுவுநிலை தவறாதவன், தவறியவன் என அனைவருக்கும் பொதுவானது. மற்றவர்களுக்குக் கேடு வரின் பிறரால் அது கேடாகவே நோக்கப்பட்டு அனுதாபத்திற்கு ஆளாவர். ஆனால் நடுவுநிலை பிறழாத ஒருவருக்குக் கேடுவரின் அதனைச் சான்றோர் கேடாகக் கொள்ள மாட்டார் என்ற கருத்தினைக்,

    “கெடுவாக வையாது உலகம், நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு” (117)

    என்னும் குறட்பாவில் எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். இங்கே கேடு என்பது வறுமையைக் குறிக்கும். திருவள்ளுவர் இதற்கு “நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவனது வறுமையை வறுமையென்று கருதார் உலகோர்” என்பது பரிமேலழகர் பொழிப்புரை. இதற்கு இவர் எழுதிய விளக்கவுரையில்,

    “செல்வமென்று கொள்ளுவர்’ என்பது குறிப்பெச்சம்.”

    என்று பதிவிடுகிறார். ‘பாட்டில் வறுமையென்று கருதார்’ (கெடுவாக வையாது) என்றுதான் இருக்கிறது. அவரும் அவ்வாறே உரையெழுதியிருக்கிறார். ஆனால் விளக்கவுரையில் ‘செல்வமென்று கொள்ளுவர்’ எனத் திருவள்ளுவர் எண்ணி ஆனால் சொல்ல இயலாத அவருடைய உள்ளக் குறிப்பினை எடுத்துக்காட்டுகிறார். ‘வறுமையென்று கருதார்’ என்பதே வள்ளுவர் சொல்லியது. ‘செல்வமென்று கருதுவர்’ என்பது அவர் உள்ளம் தோய்ந்தது. தோய்ந்ததைத் தோண்டித் தருபவர் பரிமேலழகர்.

    தேடவேண்டிய செல்வம் செவிச்செல்வம்

    செல்வம் இருவகைப்படும். ஒன்று கேள்வியால் வரும் செவிச்செல்வம். மற்றவை பொருளால் வரும் பிறசெல்வங்கள். முன்னது நிலையானது. பின்னவை  நிலையற்றவை. எனவே முன்னதை வற்புறுத்தி எழுதப்பட்டதே ‘கேள்வி’ என்னும் அதிகாரமாகும்.

    “செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை” (411)

    என்ற பாட்டில் திருவள்ளுவர் செவிச்செல்வத்தைச் ‘செல்வத்துள் செல்வம்’ என்று பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டை உள்வாங்கிய பரிமேலழகர்,

    “ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வரும் செல்வம். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையாதலான்.”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். கற்பாருக்கு எழுகிற வினா ‘கேள்விச் செல்வத்தைப் பாராட்டுவதற்கு ஒரு குறட்பாவா?’ என்பதுதான். திருவள்ளுவர் எதனையோ சொல்லத்தான் நினைக்கிறார். ஆனால் சொல்லாமல் தவிக்கிறார் என்பதுபோல அமைந்திருக்கிறது இந்தப் பாடல். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உரையாசிரியர் பரிமேலழகர் கண்டறிகிறார். அவர் அறிந்ததை அனைவரும் அறியத் தருகிறார்.

    “அவற்றை ஒழித்து இதனையே செய்க’ என்பது குறிப்பெச்சம்”

    என்ற ஒரு தொடரால் விடுபட்டுப் போனதைப் பொருண்மையோடு இணைத்துக் காட்டுகிறார். ‘செவிச்செல்வம் தலையாயது ஆதலின் அதனையே தேடுக’ என்று அவர் சொல்லவில்லை. ‘தலையாய செல்வம்’ என அடையாளப்படுத்தியதோடு நின்றுவிடுகிறார். அழகர் அதனைக் கண்டறிந்து “அவற்றை ஒழித்து இதனையே செய்க’ எனக் ‘கேள்விச் செல்வத்தைத் தேடுக’ என்னும் வேண்டுகோளைத் திருவள்ளுவர் முன்வைப்பதாக எடுத்து மொழிகிறார். செவிச்செல்வத்தின் பெருமை சொன்னது குறள். அதனைத் ‘தேடுக’ என்னும் வள்ளுவர் உள்ளமறிந்து சொன்னவர் பரிமேலழகர். எஞ்சி நின்ற குறிப்பு இதுதான்.

    அறிவில் சிறுகுறை அரசுக்குப் பெருங்கேடு. 

    அறியாமை அனைவர்க்கும் பொது. ஆனால் அரசாள்வோர் தம் பக்கல் வைத்துக் கொள்ளும் நபர்களின் அறிவாற்றலைச் சரியாக எடைபோட்டு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அரச நீதி. ஏதேனும் ஒரு காரணம் பற்றி ஒருவரைத் தெளிய முற்படும் போது நம்பிக்கை அளவுகோல் ஆகிவிடக் கூடாது. காரணம் எல்லாவகையிலும் சிறந்திருப்பார் கூட ஏதோ ஒரு மூலையில் சற்றுப் பிசகியிருப்பார். இந்த உண்மையை,

    “அரியகற்றும் ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு” (503)

    என்னும் குறட்பாவில் தெளிவுபடுத்துகிறார் திருவள்ளுவர்.

    “கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும் நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.”

    என்பது இப்பாடலுக்கான பரிமேலழகரின் பொழிப்புரை. அறியாமை இல்லாதவர் யாருமிலர் என்பதுதான் பாட்டின் கருத்து. சரி. இதனால் திருவள்ளுவருடைய உள்ளக் குறிப்பென்ன? என்பது பாட்டில் இல்லை. ‘ஆசற்றார் கண்ணும் வெளிறு இன்மை அரிது’ என்பது ஒரு செய்தி. அது அறிவுரை ஆகாது. அரசாள்வார் என்ன செய்யவேண்டும் என்பதைப் பாட்டில் அவர் கூறவில்லை. பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார்.

    “காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம்.”

    குறட்பாவின் உள்ளடக்கத்தைப் பரிமேலழகர் பாட்டின் கருத்தினை அரசாள்வார்க்கு அறிவுரையாக மாற்றுகிறார். அப்படி மாற்றுவதுதான் திருவள்ளுவர் கருத்தாம். அறியாமை இருந்தே தீரும் என்பதுதான் குறட்பா கருத்து. அதுவும் இல்லாதாரையே தெளிக என்பதுதான் முழுமையான வள்ளுவம்.   முன்னது குறட்பாவில் உள்ளது. பின்னது வள்ளுவரின் திருவுள்ளக் குறிப்பு.

    கண் பெற்ற பயன்

    ‘கண்ணுக்கு மையழகு’ என்பது திரையிசைப்பாடல். ‘கண்ணிற்கு அழகு இரக்கம்’ என்பது சான்றோர் கருத்து. ‘அமைச்சர்க்கழகு அகப்பட்டதைச் சுருட்டுதல்’ என்பது இன்றைய வழக்கு ‘மந்திரிக்கழகு வரும்பொருள் உரைத்தல்’ என்பது அன்றைய அமைச்சறம். சமுதாயம் புறத்தில் வளர்ந்த அளவுக்கு அகத்தில் வளரவில்லை, அதற்கான சூழலும் அமையவில்லை என்பது காலை கறுப்பாக இருக்காது என்பதுபோல உண்மை.

    “உளபோல் முகத்து எவன் செய்யும்? அளவினால்
    கண்ணோட்டம் இல்லாத கண்”  (574)

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு இதன் உள்ளடக்கம் தோன்ற,

    “கண்டார்க்கு முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது என்ன பயனைச் செய்யும் அளவிறாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்?”

    என்று பரிமேலழகர் உரையெழுதியிருக்கிறார். உயிர்கள் மாட்டுக் கண்ணோடி  அதாவது இரக்கம் கொண்டு நோக்காத நிலையில் கண்களால் பயனில்லை.  உடம்பின்கண் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வினைக்குரியது. அவ்வினை பிறர்நலம் சான்றது. இறைப்பணி நோக்கியது. இது தமிழ்ப்பண்பாடு. “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும்” என்பது உறுப்புக்களின் பணியை நினைவூட்டும் தேவாரமாகும். ‘தாளை வணங்காத் தலை’ என்பதும் அது. எனவே கண்ணின் பணி உயிர்கள் மேல் இரக்கம் காட்டுதல். அதுவன்றி வாளா இரக்கவுணர்வின்றி இருக்கும் மாந்தர்கள் இருக்கிறார்களே என்றால் அவர்களுக்கு முகத்தில் இருக்கும் உறுப்பு கண் என்ற அளவிலேயே அமைதி கிட்டும். இதுதான் பாடற் கருத்து. ‘முகத்தில் இருக்கிறது’ என்பதைத் தவிர வேறு என்ன பயன் என்பது திருவள்ளுவர் வினா.

    ‘ஒரு வினையும் செய்யா என்பது குறிப்பெச்சம்’

    இது பரிமேலழகர் எழுதும் குறிப்புரை. ‘இருக்கிறது’ என்பதற்கும் ‘செயல்படுகிறது’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. கண்ணோட்டம் என்பது கண்களின் வினை. அதுவில்லாதபோது அது இருப்பதைத் தவிர வேறு எந்தவினையும் செய்யாது என்பது திருவள்ளுவர் குறிப்பு. இந்தக் குறிப்பினைத்தான் பரிமேலழகர் எடுத்து  மொழிகிறார்.

    கீழே விழுவதெல்லாம் எழுந்திருக்கவே!

    ‘ஆகூழ்’, ‘போகூழ்’ என்பவற்றால் வாழ்க்கை சூழப்படினும் முயற்சி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. ‘முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்’ என்பது மறை. தன் குஞ்சைக் கொத்தவரும் வான்பருந்தை எதிர்க்கும் திறன் தனக்கு இல்லையாகிலும் எதிர்க்க முயல்வது கோழிக்குப் பெருமை.

    “பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்த
    ஆள்வினை இன்மை பழி” (618)

    என்கிற குறட்பாவிற்குப் “பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்குப் பழியாகாது. அறிய வேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.” என்னும் பொழிப்புரையால் பாடல் விளக்கம் தருகிறார் பரிமேலழகர். விதியின்மை பழியாகாது. முயற்சி இன்மை பழியாகும் என்பதுதான் குறட்பாவின் பொருண்மை நிலை. வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்? அந்தப் பழியை ஒருவன் ஏற்கலாமா? கூடாது. கூடாது எனின் என்ன செய்தல் வேண்டும். முயல வேண்டும். இது பாட்டில் இருக்கிறதா?. இல்லை இதனைத்தான் ‘குறிப்பெச்சம்’ என்கிறார் பரிமேலழகர்.

    ‘விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்’

    என்னும் தொடரால் ‘முயற்சியின்மை பழி தரும்’ என நீதிக்கருத்துக்கு அரண் செய்வதைப் போல அதனை வியங்கோள் ஆக்கிக் கூறுகிறார் பரிமேலழகர்.

    வீரனுக்கு இணை வேறில்லை

    திருக்குறள் காலம் கடந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இருப்பினும் தான் தோன்றிய காலத்துச் சித்திரிப்பு என்பதை மறுப்பதால் யாருக்கும் பயனில்லை. வள்ளுவர் படை என்றது விமானப்படையை அல்ல. விமானந் தாங்கிய கப்பற்படையை அல்ல. அன்றைய நாளில் இருந்த நால்வகைப் படைகளைத்தான் அந்நால்வகைப் படையுள்ளும் மூலப்படை சிறந்தது. மூலப்படை என்பது இந்நாள் தரைப்படை யொத்தது. இந்நாளில் ஏனைய படைகளிலும் வீர்ர்கள் இருப்பர். ஆனால் அவர்கள் இயக்கத் துணையாக விமானம் முதலிய கருவிகள் இருக்கும். தரைப்படைக்கு அவ்வாறு கருவிகள் இருக்காது. இன்றைய நாளில் டாங்கி முதலிய கருவிகளும் தரைப்படைப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. படைகளுள் தரைப்படை வீரனைப் பாராட்டுகிறார் திருவள்ளுவர்.

    “உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்.
    தொல்படைக்கு அல்லால் அரிது” (762)

    என்பது குறள். போர்க்களத்தில் மன்னனுக்குத் தளர்ச்சி ஏற்படும்போது அளவால் தான் சிறியதாயினும் தன் துன்பம் நோக்காது மன்னர்க்குப் பேருதவி செய்வதில் ஏனைய படைகளைக் காட்டிலும் தொல்படையே சிறந்தது என்பது பாடற் கருத்து.

    “தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின் கண் உலைவு வந்தால் தன் மேல் உறுவதற்கு அஞ்சாது நின்று தாங்கும்  வன்கண்மை அவன் முன்னோரைத் தொடங்கி வரும் படைக்கல்லது உளதாகாது.”

    என்பது பாடலைப் படம்பிடித்துக் காட்டும் பரிமேலழகர் உரை. இதற்கு,

    “மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையுள்ளும் சிறப்புடையது மூலப்படையாகலான் அதனை அரசன் “வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க (பு.பொ.வெ.மா – தும்பை 2)  என்பது குறிப்பெச்சம்.”

    என்று அவர் எழுதிய விளக்கவுரையில் திருவள்ளுவரின் உள்ளக் குறிப்பினைக் கண்டறிந்து எழுதுகிறார். தொல்படையாகிய மூலப்படையே மன்னனைக் காப்பாற்றும் என்றால் அப்படைவீரனைத் தாங்குதல் வேண்டும் என்பது வள்ளுவர் குறிப்பாம். எப்படித் தாங்குதல் வேண்டும்? என்னென்ன கொடுத்துத் தாங்குதல் வேண்டும் என்பதை விளக்கவே புறப்பொருள் வெண்பாமாலை பாடலை எடுத்துக்காட்டுகிறார். வீரன் மன்னனைத் தாங்குவான் என்பது குறள்.  அவனை மன்னன் தாங்கவேண்டும் என்பது குறிப்பெச்சம்.

    காமத்துப்பாலும் பரிமேலழகரும்

    அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகியவற்றுள் பரிமேலழகர் கண்டறிந்து கூறும் எச்சக் குறிப்புக்கள் நூலாசிரியர் திருவள்ளுவருக்குரியன. ஆனால் காமத்துப்பாலில் பரிமேலழகர் கண்டறிந்து கூறும் குறிப்பெச்சங்கள் தலைமக்களுக்கானவை. காமத்துப்பால் முழுமையும் உளவியல் சார்ந்த பாத்திரங்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அப்பாத்திரங்களின் உள்ளக் குறிப்பினை அறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்ததாகும். ஒருசில குறிப்பெச்சங்களை இங்கே காணலாம்.

    கண்ணிலும் உள்ளான் கருத்திலும் உள்ளான்!

    கண்முன்னால் இருக்கின்றான் காதலன். ‘அவன் தலைவியை மறந்து போனான்’ என அவனுடைய இயல்பினைத் தோழி பழித்துரைக்க முற்படுகிறாள். அப்போது தலைவி கூறுகிறாள்.

    “கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (1127)

    எம் காதலர் எப்போதும் என் கண்முன்னே இருப்பதாலேயே நாங்கள் கண்ணுக்கு மையிடாமல் இருக்கிறோம். ஏனென்றால் மையெழுதும் அந்நொடிப் பொழுதினும் அவன் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக என்று தலைவி தனக்குள்ளே கூறிக் கொள்கிறாள்.

    “காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான்  கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யோம்  அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து”

    என்னும் பொழிப்புரையில் பரிமேலழகர் இதனை விளக்குகிறார். ஆனால் தோழி இயற்பழித்தலைத் தடுத்தற்பொருட்டுத் தலைவி கூறினாள் என்பது பாட்டில் இல்லை. தலைமகளின் அந்த உள்ளக் குறிப்பினைப் பரிமேலழகர் அறிந்து கூறுகிறார் இப்படி.

    ‘யான் இடையீடின்றிக் காண்கிறவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை? என்பது குறிப்பெச்சம்”

    “தலைவன் மறைந்துவிடுவான் என்பதற்காகவே மையெழுதாமல் இருக்கிறேன்” என்பது தலைவி கூற்று. தலைவியைச் சந்திக்க வரவில்லை என்பதனால் இயற்பழிப்பது தோழியின் எண்ணம். அந்த எண்ணம் தவறு என்பதைத்தான் தலைவி வேறு வாய்பாட்டில் (மையெழுதா வாய்பாட்டில்) கூறித் தன் குறிப்பினைத் தெரியப்படுத்துகிறாள் என்பது பரிமேலழகரின் கருத்து.

    மேலே கண்ட பாடல் கண்ணைப் பற்றியது என்றால் பின்வரும் பாடல் நெஞ்சம் பற்றியது. பார்வையில் மட்டுமன்று. தலைவன் எப்போதும் தன் நெஞ்சிற்குள்ளேயே நிலைத்திருக்கிறான் என்பது தலைவி கூற்று. அதனை எப்படி வெளிப்படுத்துகிறாள் தெரியுமா?

    “நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” (1128)

    மேலே உள்ள பாட்டில் மையெழுதும் நேரத்தில் மறைந்துவிடுவான் என்றஞ்சிய தலைமகள் இந்தப் பாடலில் உள்ளத்தில் (மனசுக்குள் உட்கார்ந்து மணியடிக்கும் தலைவன் என்று கூடச் சொல்லலாம்) இருக்கும் தலைவனுக்கு வெப்பம் ஆகாது என்று கருதி வெப்பமானவற்றை உட்கொள்ளுவதில்லையாம்.

    “காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான், உண்ணுங்கால்  வெய்தாக உண்டலை அஞ்சா நின்றேம் அவர் வெய்துறலை அறிந்து”

    என்னும் பொழிப்புரையால் இதனைப் பெறவைக்கும் பரிமேலழகர்,

    “எப்பொழுதும் எந்நெஞ்சின் கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.”

    என்று எழுதித் தலைவியின் இயற்பழித்தலுக்குத் தடையாணை போடுகிறாள். இந்தப் பாட்டில் என்ன சொல்லுகிறாள்? ‘தலைவன் நெஞ்சிற்குள் இருப்பதால் வெப்பமானவற்றை உட்கொள்ளுவதில்லை’ சரி. சொல்ல வருவதென்ன? ‘நான் எப்போதும் வெப்பமானவற்றை உட்கொள்ளாத நிலையில் அவன் என் நெஞ்சிற்குள்ளேயே இருக்கிறான். அவனை எப்படி நீ பிரிந்தார் என எண்ணி இயற்பழிக்க முயலலாம்?’ என்பதே.

    தலைவனோடு களித்தபோது இன்பம் செய்த மாலை தனிமையில் இப்போது துன்புறுத்துகிறது. ‘அந்தப் பிரிவுத் துன்பத்தை ஆற்றியிருக்க வேண்டும்’ என்று ஆறுதல் கூறுகிறாள் தோழி. அந்தத் தோழிக்குத் தலைவி மறுமொழி கூறுகிறாள் இப்படி!

    “பனியரும்பி பைதல்கொள் மாலை துனியரும்பித்
    துன்பம் வளர வரும்” (1223)

    என் தலைவன் என்னருகில் இருந்தபோது என்னைக் கண்டு நடுங்கிய மாலைப் பொழுது, அவன் பிரிந்த இந்த நிலையில் என் உயிருக்கு இறுதி வரவழைக்கும் முறையில் துன்புறுத்த, அத்துன்பம் பொழுதும் வளர்கிறது என்கிறாள் தலைவி. இதனைக்,

    “காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமெய்திப் பசந்துவந்த மாலை இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்குளதாம் துன்பம் ஒரு காலைக்கொருகால் மிக வாராநின்றது”.

    என்னும் பரிமேலழகர் பொழிப்புரையால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ‘ஆற்றியிரு’ என்னும் தோழிக்குரிய விடையாக இதனைக் கருத முடியுமா என்றால் முடியாது. ‘இன்பமாக இருந்த மாலை துன்பம் செய்கிறது’ என்பது மட்டுமே தலைவியின் மொழியாக அமைந்திருக்கிறது. மாலை உயிருண்ணும் கூற்றாக வருவதால் தலைவனைப் பிரிந்துத் தன்னால் இருக்க இயலாது என்பதைக் குறிப்பாகச் சொல்கிறாளாம்.

    “யான் ஆற்றுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்”

    என்னும் தொடரால் பரிமேலழகர் இதனைக் குறிக்கிறார். ‘மாலை செய்யும் கொடுமையால் யான் ஆற்றியிருப்பது அரிது’ என்பது அவள் உள்ளக்குறிப்பு. அந்தக் குறிப்பைத்தான் பரிமேலழகர் வினாவடிவில் பதிவு செய்திருக்கிறார். மாலையின் கொடுமை குறட்பா கருத்து. ஆற்ற இயலாது என்பது தலைவியின் குறிப்பு.

    நிறைவுரை

    குறட்பாவிற்குக் கிடக்கை நிலை உரைசொல்வது எல்லார்க்கும் பொதுவான இயல்பு. ‘இதனான் இது பெற்றாம்’ என்பது பரிமேலழகர் எழுதிக்காட்டும் அரிய உரைக்கருத்து. ‘இந்தப் பாட்டின் கருத்து என்பது இந்தப் பாட்டினால் அறிந்து கொள்ளும் படிப்பினையைக் குறிக்கும். ‘குறிப்பெச்சம்’ என்பது ‘சொல்ல வேண்டிய ஆனால் சொல்ல முடியாமல் எஞ்சி நிற்கும் கருத்து. இது உரையாசிரியரின் ஊகமாகாது. சொற்கிடக்கையின் இடைவெளியில் உரையாசிரியரின் நோக்கிற்கு மட்டும் புலப்படும் அரிய உண்மை. ‘இதனைச் செய்யமாட்டார்’ என்றால் ‘அதனைச் செய்வர்’ என்பதும் ‘இதனைச் செய்வர்’ என்றால் ‘அதனைச் செய்யமாட்டார்’ என்பதும் ‘அருத்தாபத்தி’ என்னும் அளவையியலைச் சார்ந்ததாகும். கருப்பஞ்சாறு எடுப்பவர்கள் கரும்புச் சக்கையைப் பலமுறை ஆலையிலிட்டுப் பிழிவதுபோலக் குறட்பாவைப் பன்முக உரைநெறிகளால் பிழிந்தெடுத்துத் தரும் ‘கருத்துச்சாறே’ அவர்தம் உரைத்திறனாம்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 15

    பரிமேலழகர் உரைத்திறன் – 15

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

     வள்ளுவர் சொன்ன கதையும் பரிமேலழகர் எழுதிய உரையும்

    முன்னுரை

    தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்னும் முத்திறத்தன. அதில் யாப்பு, அணி என்பனவற்றைக் கூட்டிய வழக்கு பிற்காலத்தது. எனின் யாப்பு பொருளுக்குள்ளேயே அடங்கும், அது செய்யுள் கட்டுமானம் பற்றயதாதலின். செய்யுளின் உள்ளடக்க உத்தியைத் தொல்காப்பியத்தின் பொருளியல் விளக்குகிறது. எனவே அணி என்பது தமிழ்நெறியாகாது. ‘செய்யுளுக்கு அணி’ என்பது பெண்ணுக்கு அணிகலன் என்பதுபோலப் புற அழகைக் கூட்டுமேயன்றி அகத்துக்கு அழகுதராது. தமிழ்க்கவிதைகளின் வெற்றி அவற்றின் யாப்பில் இல்லை. பொருளில்தான் அடங்கியுள்ளது. யாப்பினால் ஒரு கவிதையோ காப்பியமோ வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அது புலவர்களின் திறங்கூறலாம்.

    “வெண்பாவிற்புகழேந்தி பரணிக்கோர்
    சயங்கொண்டான் விருத்தமென்னும்
    ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
    அந்தாதிக் கொட்டக் கூத்தன்
    கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
    வசைபாடக் காள மேகம்
    பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
    லாலொருவர் பகரொ ணாதே.”

    பலபட்டடைச் சொக்கநாதப் புலவரும் மூன்று புலவர்களைத் தவிர மற்றவருக்கான பெருமையை அவர்தம் கவிதைகளின் பொருண்மைக்கு ஏற்றியுரைப்பதைக் காணலாம். எனவே செய்யுளணி என்பது மிகவும் பிற்காலத்தது. தண்டியலங்காரம் செய்த ‘தமிழ்வினை’ அது. உவமம் அணியாகாது என்பதும் அதனைத் தவிர வேறு எதனையும் தமிழ்க்கவிதைகள் செறித்துக் கொள்வதில்லை என்பதும் தனி ஆய்வுக்குரியது. பொருட்பகுதியான உவமத்தைப் பின்னாலே வந்தவர்கள் அணியாக வரித்துக் கொண்டது அவர் விருப்பம் ஆயிற்று. ஆகவே பொதுமக்களாலும் பிறராலும் அவ்வணிகள் புறக்கணிக்கப்பட்டன. அல்லது அணியை முன்னிறுத்தி எழுதப்படும் இலக்கியங்கள் தோல்வி கண்டன. திருவள்ளுவர் காலத்திலோ தொல்காப்பியர் காலத்திலோ அணியிலக்கணச் சிந்தனை தமிழில் இருந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை. ஆனால் திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையில் பரிமேலழகர் பல இடங்களில் அணியிலக்கணத்தைப் பொருத்திக் காட்டுவதைக் காணலாம். அந்த அடிப்படையில் பிறிதுமொழிதல் அணி பற்றிய அழகரின் விளக்கம் விரிவாகவும் ஆய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    பழமொழிகளும் சமுதாயமும்

    சமுதாயத்தின் சாயலே இலக்கியம். அதாவது சமுதாயச் சிந்தனைகளின் நிழல் படியாத இலக்கியம் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்.  சமுதாயச் சிந்தனைகள் என்னும் தொடர் மக்கள் வழக்காறுகளையும் உள்ளடக்கியதே. மொழி மக்களுக்கானது. ‘வழக்கும் செய்யுளும்’ என்பது தொல்காப்பியம். மக்கள் வழக்கில் ஒரு முறை காணப்படுகிறது. அந்த முறை என்னவென்றால் கசப்பான கருத்துக்களையோ இன்றியமையாக் கருத்துக்களையோ நேரடியாகக் கூறின் கேட்பார் மனம் புண்படும் எனக் கருதிக் குறிப்பாகச் சொல்லுவது. பிறரைக் காட்டிச் சொல்லுவது. உவமங்களால் சொல்லுவது என இது பலதிறத்தவாகும். சான்றாகக் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது. இது நெல் மணியைக் காணாதவனுக்குப் பொருந்துமா? ஒரு செயலைச் செய்து முடிக்கும் காலச் சூழல் நிலையாக இருக்காது., தொடராது. எனவே அந்தச் சூழல் அமைகிற அந்தக் குறித்த குறைந்த காலத்திலேயே அதனை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தப் பழமொழி உணர்த்துகிறது. அன்றிக் காற்றைப் பற்றியும் தூற்றுவதைப் பற்றியும் கூறுவதாகாது. ‘கள்ளன் பெண்சாதி கைம்பெண்’ என்பது ஒரு பழமொழி. ‘மற்றவர் பெண்சாதி கைம்பெண் ஆகமாட்டார்களா?’ என்றால் இல்லை. கள்ளன் திருடுவதையே தொழிலாகக் கொண்டிருப்பதால் கொலை எப்போதும் நிகழலாம். அவன் மனைவிக்கு மங்கல வாழ்க்கை நிலையில்லை. திருடச் சென்ற கணவன் உயிரோடு திரும்புவான் என்பதற்கு உறுதியில்லை. எனவேதான் மனைவியாகவே இருந்தாலும் கள்ளனுக்கு வாழ்க்கைப்பட்டால் விதவையாகவே வாழ வேண்டும்’ என்பதை உணர்த்துகிறது.

    பழமொழியே பிறிது மொழிதலணி

    பிறிது மொழிதல் அணி பற்றிய தண்டியலங்காரக் கருத்து இப்படி அமைந்திருக்கிறது.

    “கருதிய பொருள் ஒத்தது புலப்படுத்தற்கு
    ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டென மொழிப” (தண்டி-52)

    “கருதிய பொருளை மறைத்து, ஆனால் அதனை வெளிப்படுத்தற்குப் பொருத்தமான பிறிதொன்றனைச் சொல்வது ஒட்டு என்னும் அலங்காரமாம்” என்னும் உரை இந்த அணி விளக்கத்திற்கு மட்டுமன்று முந்தைய பத்தியில் கூறப்பட்டிருக்கும் பழமொழிக்கான பொருளுணர்த்தும் பாங்கிற்கும் பொருந்துவதைக் காணலாம். தண்டியலங்கார உரையாசிரியர் இதனை ‘உவமப்போலி’ எனவும் ‘பிறிது மொழிதல்’ எனவும் ‘நுவலா நுவற்சி’ எனவும்  ‘புனைவிலிப் புகழ்ச்சி’ எனவும் அணியின் பிறபெயர்களைக் கூறுகிறார். ‘சுருக்கணி என்பது வீரசோழியம்’ சொல்ல வேண்டியதைப் பிறிதொன்றால் விளக்குவது ஆதலின் பிறிது மொழிதல் ஆயிற்று. ‘சொல்லாமல் சொல்வது’ என்பதால் நுவலா நுவற்சி ஆயிற்று.

    ஆனால் உவமப்போலி என்பது அகப்பொருள் பொருள் புலப்பாட்டு உத்தி. இதனை ‘உள்ளுறை உவமம்’ என்பதும் வழக்கு. இது அகப்பொருளுக்கே உரியது. பிறிது மொழிதல் அணியோ புறப்பொருளுக்கு உரியது. அகத்தில் உவமப்போலியாக இருப்பது புறத்தில் பிறிதுமொழிதல் அணியாகுமா என்பதற்கும் போதிய விளக்கம் பெறுமாறு இல்லை. புறத்திணையில் கருத்துக்களை வெளிப்படுத்துகிற முறையாக புறநிலை வாழ்த்து, வாயுறை வாழத்து, செவியறியுறூஉ என்பன போலப் பல உள்ளன. எனவே பிறிதுமொழிதல் அணியை ‘உவமப்போலி’ என்பது பொருந்தாதாயினும் உள்ளுறை உவமத்தில் பொருளுணரும் பாங்கும் பிறிதுமொழிதலணியில் பொருளுணரும் பாங்கும் ஓரளவு ஒத்திருப்பதால் இதனை ஏற்கலாம்.

    பிறிதுமொழிதல், ஒட்டு, நுவலாநுவற்சி, உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவையெல்லாம் ‘பழமொழி’ என்னும் மக்கள் வழக்கின் இலக்கிய இலக்கண உருவாக்கங்களே என்பது தள்ளிவிடக் கூடிய கருத்தன்று.

    திருக்குறளில் பிறிது மொழிதல்

    திருக்குறளில் இவ்வாறு பிறிது மொழிதலணியாகக் கருதக்கூடிய பாடல்கள் அமைந்ததற்கு அணியிலக்கணச் சிந்தனை காரணமன்று. முந்தைய பத்திகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கியல் சார்ந்த சிந்தனைகளும் பழமொழிப்  பயன்பாடுகளுமே எனலாம். கடுஞ்சொல்லை விலக்கி இன்சொல்லை முன்னெடுக்கும் திருவள்ளுவர்க்கு இது இயல்பாகவும் இருந்திருக்க முடியும்.  அதனால்தான் ஒட்டுமொத்த திருக்குறள் நூலில் அதாவது ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களில் வெறும் எட்டு பாடல்களில் மட்டுமே இத்தகைய பதிவுகள் காணக்கிடக்கின்றன. அவையும் பொருட்பாலில் மட்டுமே அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.

    எதற்கும் அளவுண்டு எளியர்க்கும் வலிவுண்டு

    ‘நாலாறு கூடினால் பாலாறு’ என்பது பழமொழி. துன்பத்தைப் பாரம் என்பது வழக்கு. ‘மனப்பாரம்’, ‘தலைப்பாரம்’ என்னும் வழக்கு நோக்குக. பாரம் அதிகமானால் மனம் உடையும். பொருள் அளவு மிக, வண்டியின் அச்சும் முறியும். இந்த உள்ளடக்கத்தையும் எடுத்துக்காட்டையும் பொருட்பாலில் வலிமைமிகுந்த மன்னனைப் பார்த்து வள்ளுவர் கூறுகிறார்.

    “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
    சால மிகுத்துப் பெயின்” (475)

    என்று. இந்தக் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் “பீலியேற்றிய சகடமும் அச்சு முறியும். அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்” என்னும் பொழிப்புரையில் ‘பொறுக்கும் அளவின்றி’ என்னும் தொடர் பயின்றிருப்பது காண்க.

    “எளியர் என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்க வழி வலியழியும், என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

    என்று எழுதிக் காட்டுகிறார். எளியவர்க்கு வலிமை குறைவே. ஆனால் அவ்வெளிமையே கூட்டணி அமைத்துக் கொண்டால் எளிமை வலிமையாகும். வலிமை எளிமையாகும். இன்றையக் காலக்கட்டத்து அரசியல் நுட்பத்தை அன்றே திருவள்ளுவர் கண்டுணர்ந்து எழுதியிருப்பதைக் காணலாம். இந்தப் பாடலில் திருவள்ளுவர் மயிற்பீலி மென்மையானது என்பதைச் சொல்லவோ அதனை அளவுக்கதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும் என்பதைச் சொல்லவோ வரவில்லை. இவையெல்லாம் அந்தக் காலத்துச் சமுதாயத்து நடைமுறைகள். அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண மனிதனுக்குத் தெரிந்த வழக்கியல் உண்மையை வைத்து நாட்டை ஆளும் மன்னனுக்கு அவன்தன் வலிமையின் அளவுணர்த்தும் அறிவுரை என்பதைப் பரிமேலழகர் விளக்கிக் காட்டுகிறார்.

    எதற்கும் எல்லையுண்டு

    ‘கரும்பு இனிக்குதென்று வேரோடும் பிடுங்காதே’, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பன சிற்றூர் வழக்கு. ‘கொடுக்கிறான் என்பதற்காகத்  தொந்தரவு செய்யாதே’ என்பதைச் சொல்லவந்தவர், சொல்ல வேண்டியதை மறைத்து வேறு வாய்பாட்டில் சொல்லிய பழமொழிகள் இவை. இவை போன்ற பொருள் தரும் பழமொழிக் கருத்தினைத் திருவள்ளுவர்,

    “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்தூக்கின்
    உயிர்க்கு இறுதியாகி விடும்” (476)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார். “ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின் உயிர்க்கு இறுதியாகிவிடும்” என்று பொழிப்புரை தரும் பரிமேலழகர்,

    “பகைமேல் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாம் அளவும் சென்று நின்றான். பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவன் உயிர் முடிவிற்கு ஏதுவாம்” என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.”

    முந்தைய பாட்டில் தனியொரு பகைவன் எளியன் என்று எண்ணாதே அவனையொத்தார் இணைந்து கொண்டால் தனியொரு வல்லாளன் வலிமை குறைந்தவனாக்கப்படுவான் என்பதைக் கூறிய திருவள்ளுவர் இந்தப் பாடலில் உன் ஊக்கம் பெரிது என்பதற்காகவும் எதிர்ப்பார் யாரும் இல்லை என்பதற்காகவும் அளவு கடந்து போகாதே என்னும் உண்மையைக் கூறுகிறார். ஊக்கம் வினைமுடிக்க உதவ வேண்டும். ஆனால் மனவெழுச்சியால் முந்துறுகிற பொழுது அந்த ஊக்கமே அவனைக் கொன்று விடுகிறது. ‘வினை முடிவிற்கு ஏதுவாகாது உயிர் முடிவிற்கு ஏதுவாம்’ என்னும் சுருங்கச் சொல்லி விளக்கும் அழகரின் உரைத்திறன் சொல்லி மாளாது.

    முதலைக்கு முடிவு தரையில்

    ‘சேற்றிலே புதைந்த யானையைக் காக்கை கொத்தும்’ என்பது பழமொழி! பகைவலிமை அறிந்து செயல்பட வேண்டிய அரசனுக்கு வழிசொன்ன திருவள்ளுவர் கள நிலவரத்தை ‘இடனறிதல்’ என்னும் சொல்லால் அறிவுறுத்துகிறார்.

    “நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற” (495)

    என்னும் குறட்பாவிற்கு “முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவற்றையெல்லாம் தான் வெல்லா நிற்கும். அப்புனலின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லா நிற்கும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் எழுதிக்காட்டும் விளக்கவுரை அவருடைய நுண்ணியத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    “மேற்செல்லும் அரசன் பகைவன் நிற்றலாற்றா இடமறிந்து செல்வராயின் அவர்  தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றர் இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரமாம்.”

    “எதிரி நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு அவன் நிற்க முடியாத இடத்தில் அவனை எதிர்ப்பதே வெற்றி தரும் போர்முறை. மாறாக தான் நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு உறுதியான இடத்தில் நிற்கும் எதிரியை எதிர்த்தால் நமக்கு எளியராய் இருந்திருக்க வேண்டிய எதிரிக்கு நாம் எளியவர் ஆகிவிடுவோம்” என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். முதலைக்கு இறுதி தரையில் என்பதை அறிந்து கொண்டு அதனைத் தாக்கியழிப்பதைப்போலப் பகைவர்களை அழிக்க வேண்டுமாம் என்பது வரலாறு. இதனை உள்வாங்கி எழுதும் அழகரின் விளக்கவுரை பலமுறை படித்து இன்புற்று வியக்கத்தக்கதாம்.

    கப்பலுக்குக் கடலே வீதி! தேருக்குத் தெருவே வீதி!

    ‘ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்’ என்பதும் ‘ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்பதும் தமிழகப் பழமொழிகள். இவையொத்தன இன்னும் இருக்கலாம். இதன் சாரத்தை இலக்கிய மதிப்பீட்டுக்கும் பொருட்பாலின் பொருளடர்த்திக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திருவள்ளுவரின் சதுரப்பாடு பின்வரும் குறட்பாவில் அறியப்படுகிறது.

    “கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து” (496)

    “நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடுந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா. இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் அந்நிலத்தின்கண் ஓடமாட்டா” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க என்பது தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.

    என விளக்கவுரை எழுதியிருக்கிறார். பொழிப்புரையிலேயே அவருடைய நுண்ணியம் வெளிப்படுவதை அறியலாம். கடலோடும் நாவாய் என்பதைக் கொண்டு ‘நிலத்தோடும் தேர்’ என்று எழுதுகிறார். ஓடுதற்குரிய வலிய கால்கள் இருந்தாலும் அவையின்றி நீந்தும் நாவாய் ஆகாது. இதுபோலவே பாய்மரம், பாய், சுக்கான் முதலிய கடல் நீந்தும் கருவிகள் இருந்தாலும் நாவாய் தரையோடும் தேராகாது. ‘ஏற்ற கருவிகளால் வினைசெய்க’ என்பதுதான் திருவள்ளுவர் சொல்லவரும் கருத்து. ‘கப்பலுக்குக் கடலே வீதி’ என்பதும் ‘தேருக்குத் தெருவே வீதி’ என்பதும் தெரியாத பொருளல்ல. தெரிந்த பொருளைக் காட்சிப்படுத்தியதன் நுட்பத்தை உணர்ந்துகொண்டு பரிமேலழகர் எழுதும் பாட்டுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஆழமான பொருளை அதிகாரப் பொருண்மைக்கேற்ப இயைபுபடுத்தி உரைக்கும் உரைத்திறன் உணர்க.

    நரிக்கதை சொன்ன நாயனார்

    பாட்டி சுட்ட வடையைக் கவ்விக் கொண்ட காக்கையை நரி ஏமாற்றிய கதையைப் பள்ளியில் படித்தவர்கள் நாம். ஆனால் நரியை அதன் சூழல்பற்றி மதயானையை வெல்லும் என்ற அதன் திறனைப் பாடியிருக்கிறார். இங்கே நரியைப் பாடுவது திருவள்ளுவர் நோக்கமன்று. யானையின் தோல்வியைப் பாடுவதுதான் அவர் நோக்கம். அவர் பாடுகிறார்.

    “காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு” (500)

    இந்தப் பாட்டிற்குப் “பாகர்க்கு அடங்காவுமாய் வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்று நிலத்துப் பட்டுழி நரி கொல்லும்” என்று பொழிப்புரை எழுதும் பரிமேலழகர் அந்தப் போர்க்களக் காட்சியை அப்படியே சித்திரித்துக் காட்டுகிறார்.

    பரிமேலழகர் சித்திரித்துக் காட்டும் காட்சி வள்ளுவருடையது. சித்திரிப்பு அழகருடையது. களிற்றின் முகத்தில் ஆட்கள் தொங்குகிறார்கள். எப்படி? அவர்கள் அந்த யானையை எதிர்த்தபோது கையில் வேலைத் தாங்கிய வீரர்கள். அவர்கள் வேலொடு நின்றபோது எதிர்சென்று குத்தித் தூக்கிய யானையின் தந்தத்தில் அவர்கள் தொங்குகிறார்களாம். அத்தகைய வல்லமை உள்ள களிறு.  இது யானையின் ஒரு வகை வீரம். இன்னொரு வீரத்தை ஒரு சொல்லால் திருவள்ளுவர் குறிக்கிறார். அந்தச் சொல் ‘கண்’ என்பது. கண் என்றால் மூங்கில். பாகன் கையில் வைத்திருக்கும் கோல் மூங்கிலால் ஆனது. முகப்பு இரும்பால் நங்கூரம்போல் இருக்கும். எனவே அது அந்தக் கோலுக்கு ஆகி வந்தது ஆகுபெயர். பிறகு அந்தக் கோலைத் தாங்கிய பாகனுக்கு ஆகிவந்ததும் ஆகுபெயர். அதாவது ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளைக் குறித்து அதுவும் இன்னொரு பொருளைக் குறிக்குமானால் அது இருமடியாகுபெயர். எனவே ‘கண் அஞ்சா களிறு’ என்றால் மூங்கிலால் செய்யப்பட்ட அங்குசத்தைக் கையில் தாங்கிய பாகனுக்கும் அடங்காது என்பது இன்னொரு வீரம். கண்ணஞ்சா களிறு என்றும், வேலாள் முகத்த களிறு என்றும் தனித்தனியும் கூட்டலாம். கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு என ஒரு தொடராகவும் ஆக்கலாம். இவ்வளவு விளக்கமாகப் பரிமேலழகர் சொன்னதற்குக் காரணம் சுருங்கக் கூறிய வள்ளுவரின் களக்காட்சியைச் சித்திரிக்கவும் யானையின் வலிமை கூறவுமே. இத்தகைய யானை அதாவது வட்டமான பெரிய அடிகளையுடைய யானை சேற்று நிலத்தில் சிக்கிக்கொண்டால் அதனின் மிக எளிமையான நரியால் வெல்லப்படும் என்பதாம்.

    “ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயனின்றி மிகவும் எளியரால் அழிவர் என்பது தோன்ற நின்றமையின் இதுவும் அவ்வலங்காரமாம்.”

    பிறிதுமொழிதல் அணியைப் பொருத்தவரையிலும் பள்ளிக்கல்வியில் மாணவர்கள் அறிவது அணியிலக்கணம் என்ற அளவிலேயே. தமிழாசிரியப் பெருமக்களும் அமைதியடைவார்கள். திருக்குறளில் பிறிதுமொழிதலணி வாய்பாட்டில் சொல்லப்பட்டுள்ள அரசியல் நுட்பங்களை அறிந்த மாணவரை நாம் இனிதான் தேடிக் கண்டறிய வேண்டும்.

    வேங்கையைக் கண்டால் வேழத்திற்கும் வேர்க்கும்!

    ‘வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்தும் மூலதனம்’ என்பது ஒரு கவிதை வரி. ‘கீழே விழுவதெல்லாம் எழுந்திருப்பதற்காகவே’ என்பது அறிஞர் வாக்கு. ‘சுமக்கும் வரைதான் பாரம். கடக்கும் வரைதான் தூரம்’, ‘கிழக்கு இல்லையெனின் மேற்கு ஏது? தோல்வி இல்லாவிடின் வெற்றி ஏது’ என்பனவெல்லாம் சிந்தனையாளர்களின் கருத்துரைகள். இந்த ஆற்றல் யானைக்குக் கிடையாது. அது தன் பருத்த உடம்பை நம்பும். நீண்ட இரு தந்தங்களை நம்பும். என்ன ஆகும்? அதற்கு இருக்கும் அவ்விரண்டும் இல்லாத புலி சீறினால் பதுங்கும். காரணம் ஊக்கம் இன்மை. நரியிடம் தோற்ற யானை இப்பொழுது புலியிடம் நடுங்குவதை வள்ளுவர் காட்சிப்படுத்துகிறார்.

    “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்” (599)

    இந்தக் குறட்பாவிற்கு “எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும் யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கமின்மையான் அஃதுடைய அதற்கு (புலிக்கு) அஞ்சும் என்ற இது. “பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர்” என்பது தோன்ற நின்றமையின், பிறிதுமொழிதல்.”

    என்னும் விளக்கவுரையில் திருவள்ளுவரின் அரசியல் நுட்பங்களை நிரல்படுத்துவதைக் காணலாம். மெய்வலியும் கருவிச்சிறப்பும் காவற்சாகாடு உகைத்தற்கு உதவினும் ‘ஊக்கம்’ தலையாயது. அதனால்தான் திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்பதையும் ‘ஆள்வினை உடைமை’ என்பதையும் பொருட்பாலில் பாடியிருக்கிறார். எல்லாவகையிலும் ஆற்றல் உள்ளவர்கள் தாம் தோற்கமாட்டோம் என எண்ணுவது அரசியலில் இயல்பு. திருவள்ளுவர் அத்தகையோரை எச்சரிக்கும் வகையில் கூறும் அறிவுரைகளை நயமாகக் கூறுகிறார். வழக்கில் சொன்னால் ‘நாசுக்காகக்’ கூறுகிறார் எனலாம்.

    ஆயிரம் கோழைகளும் ஒரு வீரனும்

    ‘ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்’ என்பது பழமொழி. காக்கைகள் ஆயிரம் என எண்ணிக்கையால் ஆயிரம் இருந்தாலும் உயிரற்ற ஒரு கல் அவை அத்தனையையும் துரத்துதற்குப் போதுமானவை. இந்தப் பழமொழியை வைத்து முன்றுரையறையனார் எழுதுகிறார்.

    “மறுமனத்தான் அல்லாத மாநலத்த வேந்தன்
    உறுமனத்தன ஆகி ஒழுகின் – தெறுமனத்தார்
    பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?
    ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்” பழமொழி (165)

    அறிவுடைமை, நீதிநெறி பின்பற்றுதலாகிய ஒற்றுமைத் துணையும் படை, பொருள் முதலிய வேற்றுமைத் துணையும் உடைய மன்னன் தோன்றிய அளவிலேயே பகைவர் அழிவர் என்பது பாட்டின் கருத்தாக அமைந்திருக்கிறது.

    “ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்” 763

    என்னும் குறட்பாவிற்கு “எலியாய பகை கடல்போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “வீரர் அல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அவற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

    என்று விளக்கவுரை தருகிறார். விளக்கவுரையின் இறுதியில் ‘வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனே ஆடல் நன்று’ என்பதாம் எனப் பொருள் முடிவு கூறுவார். இந்தக் குறட்பாவின் உருவகத்தால் ஈர்க்கப்பட்ட கம்பர் தமது காப்பியத்தில் ‘எலியெலாம் இப்படை அரவம் யானென’ (2312) எனப் பயன்படுத்தியிருப்பது காண்க. ‘எலிக்குப் பாம்பு பகை’ என்பது உலகியல் சார்ந்த உண்மையே. நாகம் விடும் மூச்சுக்கே எலிக்கூட்டம் பறந்துவிடும் என்பதனால் ஆண்மை கொண்ட வீரன் ஒருவனுக்கு ஆண்மையற்ற ஆயிரம் வீரரும் ஈடாகார் என விளக்குகிறார். தனியொரு வீரனைப் பற்றி இவ்வாறு திருக்குறள் சொல்லுதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். அங்கங்களுள் படை சிறந்தது என்பதும் அது தன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும், அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதும் கூறப்பட்டன என்னும் அவர்தம் விளக்கவுரையே பேருரையாக அமைகிறது.

    செடியை மரமாக நோக்கிய திருவள்ளுவர்

    ‘நகத்தால் கிள்ள வேண்டியதைக் கோடாரிக் கொண்டு வெட்டுகிறான்’ என்பதும் “வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு” என்பதும் தமிழகத்தில் பெருவழக்கு.

    “இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்தவிடத்து” 879

    என்னும் குறட்பாவிற்குக் “களைய வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக. அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “களையப் படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக. அன்றியே வலிதாய காலத்துக் களையலுறின் நம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல்”

    என்னும் விளக்கவுரையைத் தருகிறார். ‘முள்ளை முள்ளிலே களைந்துவிடு, அதுவளர்ந்தபின் களைய எண்ணினால் எண்ணுகிற உன்கையை அது காயப்படுத்திவிடும் என்பதன்று திருவள்ளுவர் கூறநினைத்தது. ‘கேடுசெய்யும் பகைவர்கள் இவர்கள் என்று அடையாளம் கண்டபின் அவர்களை விட்டுவைப்பது தமக்கே கேடாக முடியும். இது அரசியல் கொள்கை. எனவே அவர்கள் வலிமை குன்றியிருக்கும்போதே அழிப்பதே நெறி. இல்லையாயின் அவர்கள் நம்மால் களைய முடியாத அளவுக்கு வலிமை பெற்று நம்மை அழித்து விடுவார்கள் என்பதாம். ‘இளைதாக’ என்பதற்கேற்ப ‘மெலிதாக’ என்றும் கைகொல்லும் என்பதற்குக் ‘களைவார் கையை’ என எழுவாய் வருவித்தும் எழுதும் பரிமேலழகர் நுண்ணியத்தையும் செடியாக இருக்கிறபோதே அதனை மரமாகக் கண்டு ‘முள்மரம்’ என்று காட்சிப்படுத்திய திருவள்ளுவர் படைப்பாற்றலையும் ஒருசேர எண்ணி மகிழலாம்.

    நிறைவுரை

    அணியிலக்கணச் சிந்தனையில்லாத காலத்தில் திருக்குறள் உருவாக்கம் செய்யப்பட்டது என்னும் கருத்தியலை ஏற்றுக் கொண்டாலே இந்தக் கட்டுரையின் அருமை புரியும். அடுத்து மக்கள் வாழ்க்கையையும் வழக்கையும் இலக்கியப் பதிவுகளில் கொண்டு வரும் முயற்சி திருவள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும். அரசு பற்றிய தனது சிந்தனைகளில் ‘ஆலமரத்தடிக் கதைகளைத்’ திருவள்ளுவர் சொல்லியதற்கு வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?. ‘வலியறிதலில்’ இரண்டும், ‘இடனறிதலில்’ மூன்றும், ‘உட்பகை’, ‘ஊக்கமுடைமை’, ‘படைமாட்சி’ என்னும் அதிகாரங்களில் அதிகாரத்திற்கு ஒன்றுமாக எட்டுப்பாடல்களில் திருவள்ளுவர் சொல்லியிருக்கும் இயற்கை உண்மைகளுக்குப் பரிமேலழகர் தனது பொருளறிவு (அர்த்த சாஸ்திரம்) சான்ற உரையைத் தந்திருக்கிறார். ‘பழமொழிகளையே திருவள்ளுவர் பாடலாக்கியிருக்கலாம்’ என்பது அனுமானமாகலாம். ஆனால் அதற்குப் பரிமேலழகர் சொல்லியிருக்கும் கருத்துரை அனுமானமன்று. ஆழ்ந்த அரசியல் கருத்துக்கள். கருத்துக்குத்தான் கதை சொல்வார்கள். பரிமேலழகர் கதைக்குக் கருத்துரை தந்திருப்பதுதான் அவருடைய உரைத்திறன்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 14

    பரிமேலழகர் உரைத்திறன் – 14

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொன்னதும் சொல்ல நினைத்ததும்

    முன்னுரை

    திருக்குறள் அதிகாரப் பொருண்மைகளைப் பகுத்துக் கொண்டு உரைகூறுவது பரிமேலழகர்க்கேயுரிய உரைநெறியாகும். அந்த வகையில் ‘கடவுள் வாழ்த்து’ என்னும் முதல் அதிகாரத்தின் முதற்பாடலை ‘முதற்கடவுளது உண்மை கூறுவதற்கானது’ என்று எழுதுவார். அதாவது ‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்’ என்னும் உண்மையை முதற்பாடல் சொல்லுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார். ஆனால் பாட்டின் கட்டமைப்பு அவ்வாறாக இல்லை.

    “எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலையுடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் என்னும் முதலை உடைத்து”

    என்று கருதுமாறே அமைந்துள்ளது. என்ன சிக்கல்? உவமம் சரி. அந்த உவமத்தைப் பொருளோடு பொருத்தினால் உலகம் முன்னதாகவும் கடவுள் பின்னதாகவும் ஆகும். ஆகவே கடவுள் ‘உலகிற்குக் காரணம்’ என்னும் பொருள் கிட்டாது. பிறகு ஏன் திருவள்ளுவர் இவ்வாறு கூறினார்? உவமத்தை விளக்கிவிடலாம். பொருளில் கடவுளாகிய காரணத்தை விளக்க முடியாது. கடவுளால் உண்டாக்கப்பட்ட உலகை வைத்துத்தான் அதற்கான கருத்தாவை அடையாளப்படுத்த முடியும். கிழக்காற்றில் நீர் வருகிறது என்றால் மேற்கே மழை பெய்திருக்கிறது என்னும் அனுமானம் போல! எனவே பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின் மேல் வைத்துக் கூறினார்”.

    இந்த விளக்கத்தில் கடவுள்தான் உலகினைப் படைத்தார் என்றால் கடவுளின் இருப்பை எப்படி நிலைநிறுத்துவது? அதனால் காரிய காரணமாக ஆராய்கிறார். ஆய்ந்து மேற்கண்ட விளக்கத்தைத் தருகிற பரிமேலழகர், அதனாலேயே உலகம் முன்னாக கடவுள் பின்னாக எனக் கருதுதல் வேண்டா. காரணமாகிய கடவுள்தான் முன்னது என்பதைக் கருத்தாகக் கொள்க என விளக்கம் தருகிறார்.

    ‘கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    என்று எழுதுகிறார். இது குறட்பாவின் கிடக்கை நிலைக்கு மாறுபட்டது. இந்தக் கருத்தினை வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகரின் அனுமானத்தில் வந்த ஆய்வுண்மை. சொல்லப்பட்ட குறட்பாவின் கருத்தினை மட்டும் கருத்திற் கொள்ளாது உண்மையில் அது சொல்ல வருகிற கருத்தினை உணர்ந்து கொள்வதே ஓதுதலின் பயன் என்பது பரிமேலழகர் எண்ணமாகும். இவ்வாறு குறட்பா ஒன்றாகவும் அது உணர்த்த வரும் கருத்து வேறொன்றாகவும் உள்ள பல இடங்களில் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    எமனும் தோற்பான்!

    மரணம் பலவகைப்படும். ‘இயற்கையெய்தினார்’ ‘காலமானார்’ ‘படுகொலை’ ‘பயங்கரக்கொலை’ ‘பரிதாபச் சாவு’ ‘தீக்கிரையானார்’ ‘வெள்ளத்தில் மூழ்கினார்’ ‘விபத்தில் மரணம்’ ‘உயிர் பிரிந்தது’ ‘வீரமரணம்’ என்னும் சொற்களெல்லாம் மரணத்தின் பல சூழல்களையும் தன்மைகளையும் குறிப்பிட்டுக் காட்டும். கொல்லாமையாகிய அறத்தினைப் பின்பற்றி ஒழுகுபவனை உயிர் பறிக்கும் எமன் அண்டமாட்டான் என்பது பின்வரும் திருக்குறளுக்கான பொருள்.

    “கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணும் கூற்று”. (326)

    மேலே சொன்ன சாவுகள் பலவகையாயினும் எமனின் ‘கடமையுணர்வு’ என்ற அளவில் மாறுபாடு ஏதுமில்லை. சாவு எத்தகையதாயினும் அதற்கு விதியைக் காரணமாக்குவது உலகியல். இந்தக் குறளுக்குக்,

    “கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின் மேல் உயிருண்ணும் கூற்றுச் செல்லாது.”

    என்று அழகர் எழுதியிருக்கும் உரையிலும் ‘கூற்றுச் செல்லாது’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ‘கொல்லாமை’ என்பதைக் கொலைக்கு எதிர்நிலையாகக் கருதுகிறாராம் திருவள்ளுவர். அது மேலே சொன்ன மரணங்களுள் கொலைக்கு நிகராம். ஊனுக்குக்காக, உணவுக்காகக் கொல்லப்படுவன அஃறிணை உயிர்களேயானாலும் அவையும் கொலையே என்பதே வள்ளுவர் கருத்தாம். அதனால்தான் அவர் கொல்லாமை என்று பெயர் வைத்தாராம்!. பிற உயிர்களைக் கொல்லாதவனுக்குச் சாவில்லை என்பதுதான் திருக்குறள் சீர்கள் தரும் பொருள். பரிமேலழகர் தனது சிந்தனையால் கொல்லாமை என்னும் சொல் நோக்கி இன்னொரு விளக்கத்தைப் பதிவு செய்கிறார். “உண்பவன் கொலை செய்யாவிட்டால் உண்பவனை எமனும் கொலை செய்யமாட்டான்”

    “இப்பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான். படானாகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் ‘வாழ்நாள் மேல் கூற்று செல்லாது’ என்றார். செல்லாதாகவே ‘காலம் நீட்டிக்கும். நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து”

    உரையறிஞர் எவர் சிந்தனைக்கும் அவ்வளவு எளிதாக பிடிபட இயலாத கருத்து இது. எமனால் கொல்லப்படான் என்றால் அவனுக்கு மரணமில்லை என்பது பொருளன்று. மரணம் ஒத்திவைக்கப்பட்டு, வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு அக்காலத்துள் ஞானம் பிறக்க, பாவங்களை ஒதுக்கிய நிலையில் உயிர் வீடு பெறும் என்னும் கருத்தைத்தான் இந்தக் குறள் கூறுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். மரணம் வராது என்றார் வள்ளுவர். உண்மையில் ஞானத்திற்காக மரணம் வரும் காலம் ஒத்திவைக்கப்படுகிறது என்கிறார் பரிமேலழகர்.

    விலகும் அளவு வேதனையில்லை

    அறத்துப்பாலில் ‘துறவு’ என்னும் அதிகாரம் உலக இன்பங்களைத் துறத்தல் என்பது பற்றிக் கூறுகிறது. துறவறவியலாக இருந்தாலும் பொதுவாகப் பொருளின் மீது வைக்கின்ற பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதைக் கூறுகிறது. “ஈட்டல், ஈட்டியவற்றைக் காத்தல் – காத்தவை குறைபடுதல், கெடுதல் ஆகிய அனைத்தும் துன்பம். எனவே இன்பத்திற்காகத் தேடும் பொருள் துன்பத்திற்கு உறைபதியானது” என நாலடியார் கூறுகிறது. திருக்குறளில்,

    “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்” (341)

    என்ற குறட்பா “ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இல்லை” என்னும் பொருள் தாங்கி நிற்கிறது. மேலே காட்டிய நாலடியாருக்கு விளக்கமாகப் பரிமேலழகர்,

    “ஈண்டுத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும் காத்தலானும் இழத்தலானும் வருவனவும் மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம்.”

    என்று விளக்கமளித்திருக்கிறார். ‘யாதனின்’, ‘அதனின்’ ஆகிய இரண்டு சொற்களையும் இரண்டு முறை பயன்படுத்திய நுட்பம் நோக்கிய அழகர் அவைகொண்டு ஒரு கருத்தினைப் பதிவிடுகிறார். ‘எல்லாவற்றையும் ஒருசேரத் துறத்தல் இயலுமா?’ என்னும் ஐயத்திற்கு ‘அவ்வாறு துறப்பது தலை. இருப்பினும் பற்று வைத்துள்ள பொருட்களில் ஒவ்வொன்றாகத் துறக்க அவ்வொவ்வொரு பொருளாலும் வரக்கூடிய துன்பம் நீங்கும். இதனைத்தான் இந்தக் குறட்பா தனது கருத்தாகக் கொண்டிருக்கிறது என்கிறார்.

    “எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.”

    என்பது பரிமேலழகர் கருத்தாக எழுதிக்காட்டும் தொடர். பற்று வைத்த பொருள்களிலிருந்து அதனை நீக்கினால் அவற்றால் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது திருக்குறள் முற்றும் துறக்க இயலாதவர் ஒவ்வொன்றாகத் துறந்தாலும் அவற்றான் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது பரிமேலழகர் கண்ட கருத்து. “யாதனின் நீங்கியான் அதனின் நோதல் இல்லை. யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இல்லை” என்று நிரல்பட ஓதினால் பரிமேலழகரின் நுட்பம் புரியக் கூடும்.

    கெட்டவனை நினைத்தால் நன்மை வருமா?

    ‘கஞ்சா அடித்தே கந்தசாமி செத்தான் தெரியுமா?’ என்று ஒருவர் மற்றொருவருக்கு அறிவுரை கூறினால் அவர் கஞ்சாவிற்கு விளம்பர அலுவலர் அல்லர். கந்தசாமியை உவமமாக்கி உயார்த்துகிறார் என்பதுமன்று. அவர் யாருக்கு அறிவுரை கூறுகிறாரோ அவருக்கு நன்மை தர வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும், இருக்க வேண்டும். இந்தக் கருத்தியலின் அடிப்படையில் திருவள்ளுவர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

    “இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
    மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து” (539)

    என்பதே அந்தக் குறட்பா. கடன் வாங்கிக் கந்தசாமி குடிக்கிறபோது ‘குடியால் அழிந்த குப்புசாமியை எண்ணிக்கொள்’ என்பது போல அமைந்த பாடல் இது.

    “அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க”

    என்று பரிமேலழகர் பொழிப்புரை எழுதினார். ‘கெட்டவர்களை எண்ணுக’ எனச் சொல்வது திருவள்ளுவர் நோக்கமன்று. அவர்களை எண்ணினால் மகிழ்ச்சிக்கான காரணங்களால் வரும் ஆணவம் இல்லாது ஒழியும். ஒழியவே அவற்றால் வரும் சோர்வில் மயங்காது தப்பலாம் என்பது கருத்து. மகிழ்ச்சிக்கான காரணங்கள் செல்வம், இன்பம், வீரம் முதலியனவாம். அவற்றால் அழிந்தவர் இரணியன், சூரபதுமன், இராவணன், சச்சந்தன், துரியோதனன் முதலியோர். இவர்கள் எவ்வாறு அழிந்தார்கள் என எண்ணினால் எண்ணுபவர் அந்த மகிழ்ச்சியில் மதிமயங்கார் என்பது கருத்து. இதனைக்,

    “கெட்டாரை உள்ளவே ‘நாமும் அவ்வாறே கெடுதும்’ என்று அதன் கண் மைந்துறார் என்பது கருத்து”

    பிறர் பாட்டை மட்டும் நோக்கப் பரிமேலழகர் பாடியவரின் உள்ளத்தையும் பார்க்கிறார்.

    சோம்பல் மிகக் கெடுதி பாப்பா!

    வினைசெய்யுங்கால் குணங்களின் மாறுபாட்டால் ஏற்படும் சோர்வு பேரழிவை உண்டாக்கும், என்பது அறிந்ததே. அதனால்தான் வள்ளுவர் தொடங்கிப் பாரதி வரைக்கும் அது கண்டிக்கப்படுகிறது. “நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதும் காண்க. சோம்பலைச் சோம்பலாகவே கருதி அதனைக் கைவிட வேண்டும் என்னும் கருத்தினைப் பின்வரும் குறட்பாவில் வலியுறுத்துகிறார்.

    “மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்” (602)

    இந்தக் குறளுக்குத் “தாம் பிறந்த குடியை மேன்மேல் உயரும் நற்குடியா வேண்டுவார் மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.” எனப் பொழிப்புரை கூறிய பரிமேலழகர்,

    “நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி நெருப்பை நெருப்பாகவே கருதுக’ என்றாற்போல மடியில் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று  ஒழுகவே தாம் உயர்வர். உயரவே குடி உயரும் என்பார் ‘குடியைக் குடியாக வேண்டுபவர்’ என்றார்.”

    என விளக்கமெழுதிக் காட்டுகிறார். இந்தப் பாட்டில் சோம்பலைச் சோம்பலாகக் கருதுக என்றுதான் இருக்கிறது. இது எப்படி ஒரு நீதியுரைத்ததாகும்? சோம்பலைச் சாதாரணமாகக் கருதாது அதனை (அதனால் வரும் கேடுகளை முன்வைத்து) அதுவாகவே கருதிக் களைய வேண்டும். இல்லாவிட்டால் குடி அழியும் என எச்சரிக்கை செய்கிறார்.

    ‘அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து’.

    ‘நினைக்க’ என்று வள்ளுவர் கூறுகிறார். ‘நீக்காவிட்டால் நின் குடி அழியும்’ என்னும் அவர் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிகிறார்.

    நம்மையறியாரை நாமறிவோம்

    ‘அமைச்சு’ என்னும் தலைப்பில் அமைந்த அதிகாரம் அமைச்சனது தன்மைகளையும் செயல்களையும் கூற வந்தது. அதில் ஆறாவது பாடலாக அமைந்திருப்பது,

    “மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்னிற் பவை?” (636)

    என்னும் குறுட்பாவாகும். இந்த வினா வடிவத்தில் முடிந்திருக்கும் இதன் உள்ளடக்கம் “அறிவுள்ளவனால் இனங்கண்டு அழிக்க முடியாத எதிரிகள் உண்டா? என்பதே. இதற்கான பரிமேலழகர் பொழிப்புரை இப்படி அமைகிறது.

    “(இயற்கையாகிய) நுண்ணறிவை (செயற்கையாகிய) நூலறிவோடு உடையராய அமைச்சர்க்கு மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை யாவையுள?”

    இந்தப் பொழிப்புரையில் இயற்கையறிவு, செயற்கையறிவு என்னும் அறிவு மூலங்களைச் சுட்டும் பரிமேலழகர் குறட்பாவின் கிடக்கை நிலையிலேயே உரைகாண்கிறார். காணவே வினா வடிவத்திலேயே பொருளும் நிறைவடைந்துவிடுகிறது. வினாவைத் தொடுப்பதா படைப்பின் நோக்கம்? வழிகாட்டுவதுதான் படைப்பின் நோக்கம். “முன்னிற்பவை யாவுள?’ என்னும் வினாவிற்கு ‘ஏதுமில்லையாம்’ என முடித்து விடலாம். ஆனால் பரிமேலழகர் இன்னும் ஒருபடி மேலே சிந்திக்கிறார். சிந்தித்து எழுதுகிறார்.

    பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து.

    ஈரறிவும் கலந்தமைந்த அறிவுடைய அமைச்சர்களுக்கு அவற்றினும் மிக்க நுட்பமுடைய சூழ்ச்சிகள் இல்லாமற் போவதற்குக் காரணம் என்ன என்பதைத் தமது தனிநோக்கினால் கண்டறிந்து எழுதுகிறார். பகைவர் செய்வனவற்றை இவருடைய நுண்ணறிவால் அறியக்கூடுமாம். அறிந்து அவற்றை அழிப்பாராம். பகைவர் அறிய முடியாதவற்றையும் அழிக்க முடியாதவற்றையுமே இவர் எண்ணுவாராம். இதுதான் சொல்ல வந்த அமைச்சர் பெருமையாம். இவர் தரும் இந்த விளக்கத்தினால் தம்முடைய அறிவு நுட்பத்தையே முன்னெடுக்கிறாரேயன்றிப் பகைவர் அறிவு பற்றிக் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    அடுத்தவர்க்கே வேண்டுமெனின் அமைச்சர்க்கு வேண்டாமா?

    மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் அடக்கத்தைத் திருவள்ளுவர் பேசியிருக்கிறார். வாயைத் தவிர ஏனைய புலன்கள் அவற்றுக்கான பொறிகளையே குறிக்க, ‘வாய்’ என்னும் புலன் நாவையே  குறிக்கும். வாய் பேசாது. நாக்குத்தான் பேசும். மருத்துவர் ‘வாயைத் திற’ என்றால் இரு தாடைகளைத் திறப்பதைக் குறிக்கும். வாயை மூடு என்றாலும் அந்த நிலையே. ஆனால் ஒருவன் பேசுகிறபோது ‘வாயை மூடு’ என்றாலோ ‘நீ வாயைத் திறக்காதே’ என்றாலோ அப்போது அது தாடைகளைக் குறிக்காது. நாவினைத்தான் குறிக்கும். திருவள்ளுவர் ‘நாகாக்க’ என்றாரேயன்றி ‘வாய்காக்க’ என்றார் அல்லர். ‘நாநலம்’ என்றாரேயன்றி ‘வாய்நலம்’ என்றார் அல்லர். நாக்குத்தான் நலன் உண்டு. வாய்க்கு நாற்றந்தான் உண்டு. நாக்கு நாறாது. வாய்தான் நாறும். ‘நாவினால் ‘சுட்ட வடு’ என்றாரேயன்றி ‘வாயினால் சுட்ட வடு’ என்றார் அல்லர். ஆனால் எதிர்மறையில் ‘வாயுணர்வு மாக்கள்’ என்பார். வாயடக்கம் என்பது நாவடக்கமே.

    “நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று” (641)

    என்னும் பாடல் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. இதற்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும்,

    “அமைச்சர்க்கு இன்றியமையாக் குணம் ஆவது சான்றோரான் ‘நாநலம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல் அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.”

    என்னும் பொழிப்புரை குறட்பாவிலிருந்து வெகுதொலைவு விலகிப்போயிருப்பதைக் காணலாம். ‘நாநலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று’ என்று பொதுவாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் உயிரான உள்ளடக்கம். பரிமேலழகர் இயல், அதிகாரம் ஆகியவற்றையெல்லாம் சீர்தூக்கிச் சொற்களை வருவித்து மிக ஆழமாக உரைகாண்கிறார். இது அமைச்சியலில் இருப்பதால் பொதுவாகச் சொல்லப்பட்ட இப்பாடற் கருத்தினை அமைச்சர்க்கு ஏற்றியுரைக்க விழைகிறார். அதனால்,

    “பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாததாயபின் அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.”

    அழகரின் இந்தத் தொடரை நோக்காவிட்டால் பொழிப்புரையின் முதற்பகுதி விளங்காது. ஏனென்றால் அது குறட்பாவில் சொல்லப்படாத கருத்து. ஆனால் அதுதான் திருவள்ளுவர் சொல்ல வருகிற கருத்து. அமைச்சுப்பணி இல்லார்க்கே இது இவ்வளவு இன்றியமையாது எனின் அமைச்சுப்பணி உள்ளார்க்குச் சொல்ல வேண்டுவதில்லை. அவருக்கு மிக மிக இன்றியமையாதது என்பதையே திருவள்ளுவர் கருத்தாக்கிச் சொல்கிறாராம்.

    இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?

    காமத்துப்பாலில் அமைந்துள்ள குறட்பாக்களுக்குத் துறைதழுவி உரையெழுதியவர் பரிமேலழகர். அதாவது திருவள்ளுவரை முற்றிலும் மறைத்துத் தலைமக்கள் கூற்றாகவே காட்சிப்படுத்தும் பேராற்றல் அந்த உரைக்கு உண்டு. ‘ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது’ என வரைவுகடாய தோழிக்குச் (தலைவன்) சொல்லியது’ என்னுந் துறையில் அமைந்த பாடல்,

    “வீழும் இருவர்க்கும் இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு” (1108)

    என்பதாகும். இந்தப் பாடலுக்குத் தலைமகன் கூற்றாகவே உரையெழுதியிருக்கிறார் பரிமேலழகர். அவன் தோழியிடம் இப்படிச் சொல்கிறான்.

    “நீ சொல்லுகின்றது ஒக்கும். ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம், ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே!”

    திருவள்ளுவரின் திருக்குறளைத் தலைவனுக்காக்கியதே நுண்ணியம். களவொழுக்கத்தில் வந்து சேர்வதும் சேர்ந்து பிரிவதும் துன்பமல்லவா? மணம் செய்து கொண்டால் பிரியாது இருவரும் எப்பொழுதும் முயங்கிக் கிடப்பதை நீ விரும்பவில்லையா? என்பதுபோல் தோழி வினவுகிறாள். அதற்குத் தலைமகன் தோழியின் கூற்றினை அப்படியே உள்வாங்கி “நீ சொல்லுகின்றது ஒக்கும்” அதாவது (நீ சொல்லுவது சரிதான்) என்பதுபோல விடையிறுக்கிறான். பாட்டில் தலைமகன் கூற்று இந்த அளவிற்கே அமைய. இதனால் ‘தலைமகன் கூறவரும் கருத்தென்ன?’ என்பது புலப்படவில்லை. தோழியை வழிமொழிவது அவன் பணியன்று. வரைவுடம்படாது களவொழுக்கத்தை நீட்டிக்கச் செய்வதே அவன் உட்கிடக்கை. அந்த எண்ணத்தைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து பதிவிடுகிறார் இப்படி.

    “ஈண்டு இருவர் இல்லை. இன்மையான் இஃது ஒவ்வாது என்பது கருத்து”

    ‘நாங்கள் இருவராக இருந்தால் அல்லவா அவ்வாறு இணைய வேண்டும். நாங்கள் ஒருவராகவே நிலைப்பதால் நீ சொல்வது பொருந்தாது’ என்பதைத்தான் இப்படி ‘நீ சொல்லுகின்றது ஒக்கும்’ எனச் சொல்லுகிறானாம்.

    தந்தவள் அவள்! நீக்க வேண்டியவள் நீ!

    தலைவியைச் சந்திக்கும் முன்னர் அவனுக்குக் காதற் துன்பமும் தெரியாது. அது நீக்கும் நெறியான மடலூர்தலும் தெரியாது. ‘இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன?’ என்று தோழி வினவுகிறாள். தலைமகன் பின்வருமாறு விடைதருகிறான்.

    “தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்” (1135)

    “மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும் அதற்கு மருந்தாய மடலினையும் முன்னர் அறியேன். இது பொழுது எனக்கு மாலைபோலத் தொடர்ந்த சிறுவளையினை உடையாள் தந்தாள்” என்பதே தலைமகனின் விடையாக அமைகிறது. தோழியின் வினாவிற்கு விடைசொல்வது அன்று தலைமகன் நோக்கம். அந்த நோயினால் ஏற்பட்ட துன்பத்தினையும் அது நீங்கக் கைகொள்ளவிருக்கும் மடலூர்தலையும் தவிர்ப்பதற்குத் தோழி உதவ வேண்டும் என்பதே அவன் உள்ளக்கிடக்கை. “நீ அவளிடம் சென்று என் காமத்துயர் சாற்றி, மடலூர்தலுக்கு முன்பாகவே மணவினை நிகழ ஆவன செய்க’ என்று அவன் கருதுவதைத்தான் இந்தப் பாட்டு சொல்கிறதாம்.

    “இவை அவள் தந்தன வாகலின் நின்னால் நீங்கும்” என்பது கருத்து.’

    என்னும் நுட்பமான உரை பரிமேலழகருடையது. ‘யார் தந்தது என நீ கேட்டாய். தந்தவள் பெயர் சொன்னேன். எனவே நீக்கியருள வேண்டியது நின் கடன்’ எனத் தலைமகன் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார்.

    நிறைவுரை

    திருவள்ளுவர் சொன்னவற்றை மேம்போக்காக நோக்காது அவர்தம் உள்ளத்தின் ஆழம் காண முயன்றவர் பரிமேலழகர். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் திருவள்ளுவர் சொன்னது ஒன்றாக இருக்க, அவர் சொல்ல நினைத்ததைக் கண்டறிந்து பந்திவைக்கும் பரிமேலழகர் உரைத்திறன். ‘முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு’ (1274) எனத் தலைவன் தலைவியின் முறுவலை ஆராய்ந்ததைப் போலவே பரிமேலழகர் ஆராய்ச்சி அமைந்திருக்கிறது. தலைவன் கண்டது தலைவியின் காதல் பரிமேலழகர் கண்டது திருவள்ளுவரின் கருத்து. திருக்குறளில் ஏறத்தாழ 60 இடங்களில் பயின்று வந்திருக்கும் இத்தகைய உரைப்போக்கு அழகரின் உரைத்திறனில் ஒரு மணிமகுடமாகவே ஒளிர்கிறது.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 13

    பரிமேலழகர் உரைத்திறன் – 13

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொன்னவையும் பெற்றவையும்

    முன்னுரை

    ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்னுந் தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் இத்தொடர் பரிமேலழகர் உரைவழித் திருக்குறள் பொருண்மையை முழுமையாகக் காண்பதையே தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது. திருக்குறளுக்குத் தான் விரும்பியவழி உரையெழுதும் பரிமேலழகர் அவ்விருப்பத்தைத் தன்னிச்சையாகச் செய்யாது அறிவியல் அடிப்படையில் வலிமையான சான்றுகளின் அடிப்படையில் பதிவு செய்கிறார். தான் இப்படி உரை காண்பதற்குரிய காரணங்களை அவர் அடுக்கியுரைக்கிறபோது கற்பார்க்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுகிறதேயன்றிக் குழப்பம் என்பதே இல்லாமற் போய்விடுகிறது. (1) குறளுக்கு உரையெழுதுகிறார். (2) அதில் அமைந்துள்ள சீர் அல்லது தொடருக்குத் தனித்த பொருள் கொள்கிறார். (3) இந்தப் பொருளன்றி உண்மையில் உணர்த்துகின்ற பொருள் வேறொன்று என்பதைக் குறிக்கின்றார். (இதுபற்றிய விளக்கம் கடந்த வாரக் கட்டுரையில் தரப்பட்டது) (4) இறுதியாக இந்தக் குறட்பா கூறவரும் கருத்துப் பிறிதொன்று என வினைமுடிபு செய்கிறார். இந்த நான்கனுள் ஏற்றபெற்றி அமைத்துக் கொண்டு இத்தொடரைக் கற்றாலன்றித் தொடர்ப்பயன் கிட்டுவது எளிதன்று. அறிமுகத்தை முன்னிறுத்திச் சொல்வோமேயானால்,

    “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற” (34)

    என்னும் குறட்பாவில் மன மாசை முன்னிறுத்துகிறார் வள்ளுவர். இந்தப் பாட்டில் பயின்றுவந்த சொற்களைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் கருத்து, “உள்ளத்தில் குற்றமில்லாது இருத்தலே அறம். அதுவன்றி ஏனைய சொல்லும் ஒப்பனையும் ஆரவாரத்தன்மையுடையன” என்பது மட்டுமே. ஆனால் ‘வித்தின் பழுது விளைச்சலில்’ என்பதை உணர்ந்த பரிமேலழகர், மனத்தது மாசோடு கூடிய  ஏனைய சொல்லும் செயலும் பயனற்றன என்னும் குறட்பாவில் சொல்லாத கருத்தினைப் பெற்றுச் சொல்லுகிறார்.

    “மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது”

    இந்தத் தெளிவால் குறட்பாவின் கருத்து முழுமையாகக் கற்பாரைச் சென்றடைவதைக் காணலாம். குறட்பா மனத்து மாசைச்சுட்டி ஏனையவற்றின் தன்மையை விவரிக்கப், பரிமேலழகர் ‘அவற்றால் எந்தப் பயனும் இல்லை’ என்னும் கூடுதல் தகவலைக் கூறுகிறார் என்பதாம். வள்ளுவர் சொன்னவற்றோடு இவ்வாறு தம் நுண்மான் நுழைபுலத்தால் பெற்றறிந்து உரைப்பதைத்தான் ‘சொன்னவையும் பெற்றவையும்’ என்னும் தலைப்பு குறிப்பதாகக் கொள்ளலாம்.

    ஆகம அளவையும் காட்சி அளவையும்

    அறத்தின் வலிமையை உணர்த்த வந்த அதிகாரம் ‘அறன் வலியுறுத்தல்’. அதனுள் அமைந்த குறட்பா ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை (37)

    இந்தக் குறளுக்கு,

    “அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா. சிவிகையைக் காவுவானோடு செலுத்துவான் இடைக் காட்சியளவைத் தன்னானே உணரப்படும்”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். இது முதல் நிலை. ‘இனி அறத்தின் பயன் இது’ என்பதை ‘ஆகம அளவையால் சொல்ல வேண்டியதில்லை’ என்பதற்கும் ‘காட்சியளவையால் காணலாம்’ என்பதற்குமான மூலம் (மூலச்சொல்) குறட்பாவில் இருக்க வேண்டும் அல்லவா? நம் கண்ணுக்குத் தெரியாதது அவர் கண்ணுக்குத் தெரிகிறது. எப்படி? ‘என’ என்னும் எச்சத்தால் ‘சொல்’ (ஆகமம்) என்பதைப் பெற்றாராம். ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்பதால் காட்சியளவையைப் பெற்றாராம். அதாவது ஒரு பொருளை உணர்த்துவதற்குரிய மூன்று வழிகள் ‘அளவைகள்’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.

    “பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும்  கருத்தா மொழி ஆகிய ஆகமும் என மூன்று” (242)

    என்னும் அவருடைய உரைப்பகுதியாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். திருக்குறளில் அமைந்துள்ள,

    “என’ என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்றதனால் காட்சியளவையும் பெற்றாம்”

    இந்த இரு சொற்களைக் கொண்டுதான் ஆகம அளவை என்பதையும் காட்சியளவை என்பதையும் உணர்ந்து கொண்டு உரையெழுதுவதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறார் பரிமேலழகர். இத்தகைய தர்க்க அறிவியல் சார்ந்த நெறிமுறையைப் பற்றியே இந்தக் கட்டுரை ஆராய்கிறது. அதாவது குறட்பாச் சீர்களை அவற்றின் உள்ளடக்கம் அறியும் கருவிகளாகத் தான் பயன்படுத்திக் கொள்வதாகப் பரிமேலழகர் கூறுகிறார். இவ்வாறு குறட்பாத் தொடர்களிலிருந்து பரிமேலழகர் பெற்றுக் கொண்ட ‘பொருட்செல்வத்தைப்’ பற்றிய ஆய்வு தொடர்கிறது.

    பலருக்கும் பொதுவான ‘பனுவல்’

    ஒழுக்கத்தை வற்புறுத்தாத சமயங்களோ சமுதாயமோ இல்லை. எல்லாச் சமயங்களுக்கும் சமுதாய அமைப்புக்களுக்கும் ஒழுக்க நெறி பொதுவானது. இன்றியமையாதது. மானுடத்திற்கு அழியாப் புகழை அளிப்பது. திருவள்ளுவர் கூறிய பத்து உடைமைகளில் அதுவும் ஒன்று. இல்லறத்தில் கடைப்பிடிக்கப்படும் அவ்வொழுக்கம் துறவறத்தில் பிசகிவிடுமானால் அது கூடாவொழுக்கம் ஆகிவிடும். அதனால்தான் அதனை உலகத்து நூல்களெல்லாம் உயர்த்திப் பிடிக்கின்றன என்பது திருவள்ளுவர் கருத்து. அதனை,

    “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு” (21)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார்.

    “தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும்  இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு”

    என்னும் பொழிப்புரையைத் தொடர்ந்து பரிமேலழகர் எழுதுகிறார்.

    ‘பனுவல்’ எனப் பொதுப்பட கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம்.

    ‘நூல்கள் சொல்லுகின்றன’ என்பதுதான் குறட்பா கூறவரும் கருத்து. ஆனால் எத்தகைய நூல்கள் அல்லது எந்தச் சமயத்து நூல்கள் என்பதைத் திருவள்ளுவர் கூறவில்லை. நூலின் அகக்கட்டுமானத்தைக் கருத்திலிருத்தி உரையெழுதும் பரிமேலழகர் ‘எல்லாச் சமயத்திற்கும் திருவள்ளுவர் பொதுவானவர்’ என்னும் தனது உட்கிடக்கையை இதன் வழி வெளிப்படுத்துகிறார். பரிமேலழகர் உரையில் எல்லாச் சமயத்து நூல்களும் உரைவிளக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது நோக்குதற்குரியது.

    ‘பனுவல்’ என்பது எல்லாச் சமயங்களையும் தழுவி நிற்கும் ஒரு பொதுச்சொல் திருவள்ளுவர் ‘பனுவல்’ என்று பொதுப்படக் கூறுகிறாரேயன்றி ‘இன்ன சமயத்து நூல்’ என விதந்தோதவில்லை. அது மட்டுமன்றி இணக்கமான சமயங்கள் என்றும் முரண்பட்ட சமயங்கள் என்றும் வடகலை, தென்கலை என்றும் பாசுரங்கள், பதிகங்கள் என்றும் வழங்கப்படும் சொற்களை நோக்கினால் உண்மை புரியக்கூடும். எனவே மாறுபடு சமயங்கள் வேறுவேறாயினும் ஒழுக்கம் என்பது மாறாத எல்லாரும் ஏற்றுக் கொள்கிற ஒன்று. இதனைத்தான் பரிமேலழகர் அந்தப் பொதுச்சொல்லிலிருந்து பெற்றுக் கொண்டதாக எழுதிக் குறட்பாவின் பொருளடர்த்தியை மிகுவிக்கிறார்.

    இனித் திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட சமயச் சிமிழுக்குள் அடக்க முற்படுவாருக்கும் பரிமேலழகர் வடமொழிச் சார்பாளர் என்னும் கருத்தியல் கொண்டவர்க்கும் அவரை வைணவர் என அடையாளப்படுத்துவார்க்கும் இவ்வாறு பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரைநெறியே அவர்தம் கருத்து பிசகானது என்பதற்குப் போதுமான சான்றாகலாம். அதாவது பரிமேலழகர் எந்த நிலையிலும் எந்தக் குறடபாவிலும் தன் கருத்தினைத் திருக்குறளுக்கு ஏற்றிக் சொல்லவில்லை என்பதாம். காரணம் திருவள்ளுவர் எல்லாச் சமயங்களுக்கும் தத்துவங்களுக்கும் பொதுவானவர் என்னும் கருத்தியலால் கவரப்பட்டவர் பரிமேலழகர் என்பதும் அதனைக் கருத்திற்கொண்டே அவர் உரை அமைந்திருக்கிறது என்பதும் இங்கே முன்னெடுக்கப்படுகிறது.

    ‘இனிய’, ‘இன்னாத’ எப்படிச் சொற்களாகும்?

    ‘இனியவை கூறல்’ என்னும் அதிகாரத்தின் இறுதியில் அமைந்திருப்பது,

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

    என்னும் குறட்பாவாகும். இந்தக் குறளை உற்று நோக்குவார்க்கு ஓர் உண்மை புலப்படக் கூடும். ‘இனிய’ என்பது பண்படியாகப் பிறந்த உடன்பாட்டுப் பெயர்ச்சொல். அதாவது ‘இனிமையானவை’ என்பது பொருள். ஆனால் ‘எவை இனிமையானவை?’ என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதுபோலவே ‘இன்னாத’ என்பதும் பண்படியாகப் பிறந்த எதிர்மறைப் பெயர்ச்சொல். அதாவது ‘இன்னாதவை’ என்பது பொருள். ஆனால் “எவை இன்னாதவை?” என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதிகாத்தின் தலைப்பு ‘இனியவை கூறல்’ என்பதாகும். பரிமேலழகரின் பொழிப்புரை இப்படி அமைகிறது.

    “அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது, பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல் இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னா காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்”

    ‘இனிய, இன்னாத’ என்று குறிப்பாகவே குறட்பாவில் பயின்றிருக்கப் பரிமேழகர் அவற்றிற்கு ‘இனிய சொற்கள்’ ‘இன்னாத சொற்கள்’ என உரைகாண்கிறார். அவ்வாறு உரை காண்பதற்கு அந்தக் குறட்பாவில் ஏதேனும் இடமிருக்கிறதா என்றால் இருக்கிறது. இருப்பதும் அவருக்குத் தெரிகிறது!. எங்கே? ‘கூறல்’ என்ற வினைச்சொல்லை நோக்கி உரையெழுதுகிறார். சொல்லைத் தானே கூறுவார்கள்?. எனவே ‘கூறல்’ என்ற வினைச்சொல் பொதுவாக அமைந்திருப்பதால் ‘சொற்கள்’ என்பதாகத் தான் உரை காண்பதாக விளக்கமளிக்கிறார்.

    “கூறல் என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம்”

    இது பரிமேலழகரின் சுருக்க உரை. ‘இன்னாத கூறல்’ என்னும் தொடரில் உள்ள ‘கூறல்’ என்னும் உடன்பாட்டை உற்று நோக்கி, அதனை ‘இனிய’ என்பதோடு எதிர்மறையாகப் பொருத்தி உரை காணும் நுண்ணியம் உணரத்தக்கது. அதிகாரத்  தலைப்பு, குறட்பாவில் சொற்களின் பயன்பாடு ஆகியவற்றை நோக்கி உரையெழுதுவதை இயல்பாகக் கொண்ட பரிமேலழகர் தான் உரைகாண்பதற்கான மூலத்தைக் குறட்பாவிலிருந்தே காட்டுவதைக் காணலாம்.

    என்பில்லாததும் அன்பில்லாததும்

    மேலே காட்டிய குறட்பாவில் ‘கூறல்’ என்னும் வினையால் சொற்கள் என்பதைப் பெற்றுக் கொண்டதைப்போல இன்னொரு குறட்பா அமைந்திருக்கிறது. ‘அன்பு’ என்பது உயிர்ப்பண்பு. அப்பண்பு இல்லாவிடின் மானுடம் சிறக்காது. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பது வள்ளுவம் அத்தகைய அன்பு ஒருவனுக்கு இல்லாவிட்டால் தெய்வ நிந்தனைக்கு ஆளாவான் என்பது வள்ளுவர் சொல்லவரும் கருத்து. இதனை ஓர் உவமத்தின் வழி நின்று விளக்குகிறார்.

    “என்பிலதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்” 77

    என்பது அந்தப் பாட்டு. இதற்கு,

    “என்பில்லாத  உடம்பை வெயிற் காய்ந்தாற்போலக் காயும், அன்பில்லாத உயிரை அறம்”

    எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். இந்தக் குறட்பாவில் ‘என்பிலது’ எனவே இருக்க, பொழிப்புரையில் ‘உடம்பு’ என உரைகாண்கிறார். அதுபோலவே ‘அன்பிலது’ எனவே குறட்பாவில் இருக்க ‘உயிர்’ என உரை காண்கிறார். இவ்வாறு அவ்விரு சொற்களுக்கும் உரைகண்டதற்குரிய காரணத்தை விளக்குகிறார். உடம்பும் எலும்பும் இணைந்தேயிருக்கும். எலும்பில்லாத உடம்பு என்றால் அதனால் நிற்க இயலாது. வெப்பத்தைத் தாங்காது. மென்மையான தோல் மட்டுமே இயக்கத்திற்கு உதவும் ‘புழு’ என்பது கருத்து. அன்போடு இயைந்த வழக்காதலின் அன்பு உயிர்ப்பண்பு ஆயிற்று. எனவே அன்பிலது என்பதனால் அன்பில்லாத உயிர் என்பது கருத்து. இதனை,

    “என்பிலது என்றதனான் உடம்பு என்பதும் அன்பிலது என்றதனான் உயிர் என்பதும் பெற்றாம்.”

    திருவள்ளுவர் சொன்ன சொற்களிலிருந்து சொல்ல நினைத்த கருத்தினைப் பெற்றுக் கொள்ளும் பரிமேலழகரின உரைத்திறன் இதுவாம்.

    ‘பாவம்’ மறுமைக்கானது

    மாற்றானுடைய மனைவியை விரும்பியொழுகும் ஒழுக்கத்தை வன்மையாகக் கண்டிப்பது திருக்குறள். அவ்வாறு விரும்பி ஒழுகுபவனிடத்தில் இருக்கக்கூடிய பண்புகளாக நான்கினைப் பட்டியலிடும் குறட்பா இவ்வாறு அமைந்திருக்கிறது.

    “பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
    இகவாவாம் இல் இறப்பான் கண்”  146

    “பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்” என்பது இப்பாட்டிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புரை. இந்தப் பாட்டு இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தை அடுத்து அமைந்துள்ளது. இல்லறவியலில் சொல்லப்படும் எதிர்மறை நெறிகளுக்கான விளைவு இம்மைப் பயன் இழப்பதே, இல்லறம் இம்மை நோக்கியதாதலின். ஆனால் பிறனில் விழைதலாகிய இம்மைப் பாவத்தைச் செய்பவன் மறுமைப்பயனையும் இழக்கிறான் எனச் சொல்ல வரும் பரிமேலழகர்  பார்வையில் ‘பாவம்’ என்னும் சொல் படுகிறது.

    “எனவே இருமையும் இழத்தல் பெற்றாம்.”

    என்னும் ஒரு தொடரால் பிறனில் விழைபவனுக்கு மறுமைப்பயனும் கிடையாது எனத் தெளிவுபடுத்துகிறார். அதாவது பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கனுள் ‘பாவம்’ மறுமைக்காக, ஏனைய மூன்றும் இம்மைப் பயனை இழக்கச் செய்வது. எனவே இருமைப் பயனையும் அவன் இழப்பதாக உரையெழுதுகிறார். குறட்பாவில் பயின்று வந்துள்ள சொற்களை அப்படியே பின்பற்றி உரையெழுதாமல் ஆசிரியரின் உள்ளக்கிடக்கைக்கு ஏற்ப நுட்பமாக உரையெழுதும் அவருடைய ஆற்றல் இதனால் புலப்படக் கூடும்.

    களிற்றை எதிர்ப்பதுதான் காளையின்  வீரம்

    ‘என’ என்னும் எச்சத்தால் ஆகம அளவை என்பதைப் பெற்றுக் கொள்கிறார். ‘கூறல்’ என்னும் தொழிற்பெயரால் ‘சொற்கள்’ என்னும் செயப்படுபொருளைப் பெற்றுக் கொள்கிறார். ‘என்பிலது’ என்பதால் உடம்பையும் ‘அன்பிலது’ என்பதால் உயிரையும் பெற்றுக் கொள்கிறார். பயின்று வந்துள்ள சொற்களின் சரியான பொருத்தப்பாட்டினை அறிந்து பாவம் என்பது மறுமைக்கானது என்பதைப் பெற்றுக் கொள்கிறார். இன்னொரு வகையாகவும் அவர் இவ்வாறு பெற்றுக் கொள்வதை அறிய முடிகிறது. சித்திரிக்கும் காட்சியைக் கொண்டு சித்திரிக்கப்படாத காட்சியைப் பெற்றுக் கொள்கிறார்.

    பொருட்பாலில் படையினது தன்மை எனப் படையினது இயல்புகளைக் கூறும் அதிகாரத்திற்குப் ‘படைமாட்சி’ என்று பெயர். படை அங்கங்களுள் சிறந்தது என்பதும் அதனுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும் அதுதன்னுள்ளும் வீரன் சிறந்தவன் என்பதும் அந்த அதிகாரம் விளக்கும் பொருண்மையாகும். அந்த வீரனின் வீரச்செருக்குப் பற்றிக் கூறுவதே அடுத்த அதிகாரமாகிய  ‘படைச்செருக்கு’. இந்த அதிகாரத்தில் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    “கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்” (774)

    இந்தக் குறட்பா ‘படைச் செருக்கு’ என்னும் அதிகாரத்தில் வருகின்ற பத்துப்பாடல்களில் நான்காவதாக அமைவது. போர்க்களத்தில் எதிர்கொள்கின்ற இடர்களைப் பொருட்படுத்தாது மேன்மேலும் முன்னோக்கிச் செல்லும் போராண்மையை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டது. இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித் திரிவான் தன் மார்பின்கண் நின்ற வேலைக்கண்டு பறித்து மகிழும்”

    என்று விளக்குகிறார். பாட்டில் சொல்லப்படும் கருத்துக்கள் இரண்டே.

    1. கைப்படையாகிய வேலைக்கொண்டு தன் மேல் முதலில் பாயவரும் களிற்றினை உயிரோடு போக்குகிறான்
    1. தொடர்ந்து தன் மேல் பாயவரும் களிற்றினை எறிவதற்கு வேல் இல்லையே என்ற நிலையில் ஏற்கனவே பகைவர்கள் எய்து, தன் மார்பில் தைத்திருக்கும் வேல்களில் ஒன்றினைக் கண்டு மகிழ்கிறான். அவ்வளவுதான்!.

    பரிமேலழகர் சிந்தனையில் கூடுதலாக மூன்று வினாக்கள் தோன்றுகின்றன.

    1. முதலில் தாக்கியது களிறு என்பது சரி. தொடர் தாக்குதலுக்கு வந்ததும் களிறுதானா? என்பதற்கான குறிப்பு பாட்டில் இல்லை.
    2. வேல் கிடைக்காது திகைத்தவன் தன் மார்பில் தைத்த வேல்கண்டு மகிழ்கிறான் என்றால் அவன் மார்பில் பகைவர்களின் வேல் தைத்ததை அவன் அறியவில்லை. இந்தக் குறிப்பு பாட்டில் இல்லை.
    3. ஒரு களிறு அடக்கியது போதுமென எண்ணாது தொடர்போரில் அவன் மனம் ஈடுபட்டது என்பது பாட்டில் குறிக்கப்படவில்லை.

    ஆனால் இந்த மூன்றும் இருந்தால்தான் அது படைச்செருக்கு. ‘படைச்செருக்கு’ என்பதற்கு வீரத்தனம் என்பது பொருள். வழக்கில் இது ‘சூரத்தனம்’ எனப்படும். படைவீரர்களின் போர்க்குணம். இந்தப் போர்க்குணத்தைத் தம் மனக்காட்சியால் பெற்றுக் கொண்டு உரையெழுதுகிறார் பரிமேலழகர்.

    “இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம் சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன.”

    இரண்டு வினைகளோடு முற்றுப்பெறும் ஒரு குறட்பாவை ஐந்து வினைகளோடு முடித்துக்காட்டும் பரிமேலழகரின் உரைத்திறனை என்னென்பது? எப்படிப் புகழ்வது?

    நிறைவுரை

    குறட்பாவிலிருந்து இவ்வாறு வேண்டியனவற்றைப் பெற்றுக் கொண்டு உரையெழுதும் இத்தகைய உரைநெறி பரிமேலழகர் உரையில் ஏறத்தாழ தொண்ணூறு (90) இடங்களில் பின்பற்றப்படுகிறது. இந்த உரைநெறியை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கை கொண்டும் அளக்க முடியாது. அதனால் அளக்கவும் கூடாது. அளந்தால் பயன் தராது. இந்த உரை நெறி தமிழுக்கேயுரியது. உலகமொழி இலக்கியங்களில் காணற்கரிய காட்சி இது. தமிழ் உரையாசிரியப் பெருமக்களின் உரைநெறிகள் தனித்த நோக்கிற்கும் ஆழமான ஆய்வுக்கும் உரியவை. மூலநூல் ஆசிரியனின் உள்ளம் கண்டுணரும் பேரார்வம் இருந்தாலேயொழிய இத்தகைய உரைத்திறன் கைவரப்பெறுவது அரிது. பரிமேலழகருக்கு அந்த ஆர்வம் அளவு கடந்தது. அதனால் அது கைவரப்பெற்றது!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 12

    பரிமேலழகர் உரைத்திறன் – 12

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    விரும்பிக் கூறிய ‘வேண்டாதவை’

    முன்னுரை

    நூல்களுக்குப் புற அழகு ஓவியர்களாலும் அச்சகத்தாலும் வழங்கப்படும் வண்ணங்களால் அமையலாம். அக அழகு அவ்வாறு கொடுத்து அமையாது. முன்னது கண்ணுக்குரியது. அதனால் அது சாத்தியம். பின்னது புலன்களுக்கு உரியது. அதனால் அது அவர்களால் இயலாது. படைப்பாளனின் உள்ளம் மொழிவழி வெளிப்படும் அழகுக் கோலமே நூலின் அக அழகைத் தீரமானிக்கும். சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்கள் புறத்தோற்றத்தில் பெரியன. சிவஞான போதமும் ஆத்திசூடியும் அளவால் மிகச் சிறியன. இவ்விரண்டு தன்மையிலமைந்த நூல்களின் பெருமையை உள்ளடக்கமே தீர்மானிக்கிறது. எத்தனைப் பக்கம் என்பதல்ல அவற்றுக்குப் பெருமை சேர்ப்பது. எவ்வளவு ஆழமான கருத்துக்கள் எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதுதான் பெருமை சேர்க்கும். கருத்தாழமும் அக்கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளின் பேராற்றலுமே நூல்களின் வெற்றிக்கு மூலதனம். காதல், வீரம் என்னும் இரண்டே பாடுபொருள்களைப் பற்றி இத்தனையாயிரம் பாடல்களைச் சங்கச் சான்றோர்கள் சலிப்படையாமல் பாடியிருப்பதற்கும் நாமும் சலிப்படையாமல் தலைமுறைகள் பல தாண்டியும் படித்து வருகிறோம் என்பதற்கும் சொல்லும் முறைதான் காரணம். அவ்வாறு சொல்லும்போது இருக்க வேண்டிய அழகு, நீக்க வேண்டிய குற்றம் இவைகளைப் பற்றியெல்லாம் தமிழிலக்கணங்கள் விரிவாக ஆராய்கின்றன. குற்றமேதும் இல்லாத நூலை எழுதுபவனைத்தான் ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவன்’ என்பர். அந்தக் குற்றங்களுள் ‘வெற்றெனத் தொடுத்தல்’ என்பதும் ஒன்று. வேண்டாது கூறலும் என்றாலும் பொருந்தும். எத்தகைய பயனும் இல்லாமல் தேவையின்றிச் சில சொற்கள் சில நூல்களில் பயின்று வருவது கண்கூடு. சான்றோர் செய்த நூல்களிலும் இத்தகைய குற்றங்கள் இருக்குமா? இருந்தால் அதனைக் கண்டிக்க இயலுமா? இல்லையாயின் அதற்கான காரணமாகிய அமைதியைக் கண்டறிய  இயலுமா? என்னும் ஐயங்கள் எழுவது இயற்கை. திருக்குறளில் ஒரு சில குறட்பாக்களில் பயின்று வந்துள்ள வேண்டாத சொற்களைப் பற்றி ஆய்கின்ற இக்கட்டுரையில் அதற்கான விளக்கம் ஓரளவு கிடைக்கலாம்.

    ‘வேண்டாத சொற்கள்’ ஒரு விளக்கம்

    “ஐயா நீங்க உங்க வாயால சொல்லாதீங்க!” இத்தகைய வழக்காற்றினைப்  பலரும் செவிமடுத்திருக்கக்கூடும். எல்லாவகையிலும் உயர்ந்தார் ஒருவர் மனம்புழுங்கிச் சில சொல் சொல்லுகிறபோது ‘அவை பலித்துவிடுமோ?’ என்னும் அச்சமும் ‘பலிக்கும்’ என்னும் நம்பிக்கையும் சமுதாயத்தில் நிலவும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. சமுதாயம் அச்சொற்களை ஒலியின் காரியமாகக் கருதாமல் சத்தியத்தின் வெளிப்பாடாகக் கருதுவதே இத்தகைய மனநிலைக்குக் காரணம். இதனால் என்ன மாற்றம் என்றால், சொல்லுக்குக் கருவியான வாய் பதவியிழப்புக்கு ஆளாகிறது. அதிலிருந்து வருகிற சொற்களுக்கான காப்புரிமை சொல்கிறவருடைய பண்பாடு, ஒழுக்கம், சான்றாண்மைக்குச் சென்றுவிடுகிறது. அந்தத் தொடரில் அழுத்தம் ‘வாய்க்கு’ அன்று. ‘உங்க’ என்னும் சொல்லுக்கு என்பதை நோக்குதல் வேண்டும். அவர் வாயினது சிறப்புக்கு அச்சொற்கள் பொருந்தாமையை நோக்கி மக்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி வெளிப்பாடு இது. நாம் எதனைக் கவனிப்பதில்லை? ‘வாயால் சொல்லாதீர்கள்’ என்பதை!. வாயைத்தவிர வேறு எக்கருவியால் சொல்ல இயலும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பேசுவதற்கான கருவி வாய்!. இருந்தாலும் கேட்டு அமைதியடைகிறோம்!.

    இதனை உடன்பாடாகவும் கேட்டிருக்கக்கூடும்!. “நீங்க உங்க வாயால ஒரு சொல் சொல்லுங்கள் அது போதும் எனக்கு” எதிர்மறையை மறுதலித்த நாம் உடன்பாட்டுக்காக ஏங்குகிறோம். இருநிலையிலும் சொல்வார் பெருமையே சொற்களின் காரணமாக உணரப்படும். அல்லவர் வசவினைப் பெறுதலின் நல்லவர் வாழ்த்தினைப் பெறுவது சிறப்பு. ‘அறம் பெருக அல்லவை தேய்வது’ இயல்பல்லவா?  இவ்விரண்டிடங்களிலும் ‘வாய்’ என்பது சொல்லுக்கான கருவி என்னும் நிலையிலிருந்து மாறிச் சொல்வார்தம் பண்புக்கான குறியீடாகிவிடுவதைக் காணலாம். ஒருவன் பண்புகளால் உயர்ந்திருப்பான் எனின் உலக வழக்கு இப்படியும் அமையும் “அவன் வாயில் விழாதே!’ ‘வாயில் விழாதே’ என்றால் ‘வாயில் சென்று விழுதல்’ என்று பொருளன்று. அவரின் எதிர்மறை வசவுக்கு நீ ஆளாகிவிடாதே!’ என்று பொருள்.

    மொழி மக்களுக்கானது. மொழியியல் அறிஞர்களுக்கானதன்று. அது பாமர மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் தலையாயது. ஓரினத்தின் உயிர் அடையாளம் மொழியே!. அவ்வினத்தின் வழக்கு நிலைகள் பெரும்பாலும் அம்மொழியின் இலக்கிய இலக்கணங்களில் தாக்கத்தை உண்டாக்கும் என்பது தொல்காப்பிய நெறி. அந்த நெறியில் நூல் செய்த திருவள்ளுவர் வேண்டாதன சிலவற்றை விரும்பிக் கூறிய நுட்பத்தை இனி ஆராயலாம்.

    வள்ளுவர் கண்ட வாய்ச்சொல்

    திருவள்ளுவர் இரண்டு வகையான மனிதர்களின் வாய்ச்சொற்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். உடன்பாட்டு வகையால் அதாவது உயர்பண்புகளின் தொகுப்பாக விளங்கிப் புகழ்பெற்ற சான்றோர்களின் வாய்ச்சொற்களின் சிறப்புக்களைப் பதிவிடுவதைக் காணலாம். எழுத்துக்களின் காரியமாக வெளிப்படுவதால் தமிழில் எழுத்துப் பிறக்கும் இடங்களிலிருந்து சொற்கள் பிறக்கும் இடங்கள் மாறுபடுவதில்லை. அதே நேரத்தில் புற உறுப்புக்களின் தன்மையைச் சொற்களுக்கு அவர் ஏற்றுவதில்லை. விளக்கமாகச் சொன்னால் சொற்களின் இறுதிவாயில் உதடுகள். அவ்வுதடுகளின் இனிமையைச் சொற்களுக்கு ஏற்றியுரைக்கும் இயல்பு திருவள்ளுவருக்கு இல்லை.

    இன்சொல்லுக்கு வரைவிலக்கணம் தந்த வள்ளுவர் உயிரிரக்கம், மனத்துக்கண் மாசின்மை, வீடுபேற்றுக்கு நிமித்த காரணமாகிய செம்பொருள் கண்டார் சொல்வது என்னும் மூன்று பண்புகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதை,

    “இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
    செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (91)

    என்னும் குறட்பாவில் தெளிவுபடுத்தியிருக்கிறார். தற்காலத்தில் வழங்கும் ‘பழகுதற்கு இனியவர்’ என்னும் ‘உதட்டுறவு’ உதிர்க்கும் பாசாங்கு மொழி திருவள்ளுவர் அறியாதது. இந்தக் குறட்பாவுக்குப் பொழிப்புரை தந்த  பரிமேலழகர்,

    “அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் சொல் இன்சொல்லாவன“

    என வரையறைக்குக் கூடுதல் தெளிவு தருகிறார். அன்பு, வஞ்சனையற்ற தன்மை, அறமுணர்தல் ஆகிய முப்பெரும் பண்புகளுக்கும் சொற்களின் மூலாதாரமான தொண்டை, நா முதலிய உறுப்புக்களுக்கும் நிலவும் தொடர்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இத்தகைய பெருமக்கள் அடிமனத்திலிருந்து வரும் உண்மையான சொற்கள் வாய்வழியாக வெளிப்படுகிறபோது அந்த வாயும் அகப்பண்புகளால் சிறப்படைகிறது என்பதாம். அதனால்தான்,

    “‘வாய்’ என வேண்டாது கூறினார் தீய சொல் பயிலா என்பது அறிவித்தற்கு”

    என்று பரிமேலழகர் நுண்ணியம் காண்கிறார். ‘சொல்’ என்ற அளவிலேயே ‘வாய்’ என்பது பெறப்படுதலின் ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய் என்னும் முன்னொட்டு வேண்டாதது. ஆனால் வேண்டாத அச்சொல்லைப் பெருமக்களின் சிறப்புடைய வாயென்பதைப் பிரித்துக் காட்டலின் திருவள்ளுவர் விரும்பியே எழுதினாராம்! அந்த இடத்தில் ‘வாய்’ என்பது ஒலித்தொகுப்பின் வாயில் அல்லவாம்! பண்புக்கூறுகளின் வாயிலாம். இது பரிமேலழகர் பார்வை!.

    வழுக்கத் தெரியாத வாய்

    ‘நாக்கு தவறிச் சொல்லிவிட்டேன்’, ‘வார்த்தை பிசகிவிட்டது’, ‘அவசரத்தில் சொல்லிவிட்டேன்’, ‘பதற்றத்தில் ‘சொல்லிவிட்டேன்’, ‘கவனிக்காமலேயே சொல்லிவிட்டேன்’ இதுபோன்ற தொடர்களை நம்மில் பலரும் கேட்டிருக்கக் கூடும். இந்தத் தொடர்களை ஊன்றிக் கவனித்தால் நாக்கின் பிறழ்வாகவே சொற்பிழைகள் தோன்றுகின்றன என்னுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். அடிமனத்தில் உள்ளதுதான் வாய்வழியாக வெளிப்படுகிறது என்பது உளவியல் உண்மை. இந்த உண்மையை உணர்ந்தவர் திருவள்ளுவர்.

    “ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்” (139)

    என்பது ஒரு குறள். இதற்கு,

    “மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள் ஒழுக்கம் உடையவர்க்கு முடியா”

    எனப் பொழிப்புரை தருகிறார் பரிமேலழகர். இந்தப் பொழிப்பிலேயே இந்தப் பத்தியின் தொடக்கக் கருத்துக்களின் சாரத்தைக் காணமுடியும். ‘வழுக்குதல்’ என்பது புறத்தொழில். ‘தரை வழுக்கும்’, ‘வழுக்கு நிலம்’, ‘பாறை வழுக்கியது’, ‘வழுக்கி விழுந்தான்’ என்பன நோக்குக. ஆனால் பரிமேலழகர் வழுக்கியும் என்னும் சொல்லுக்கு ‘மறந்தும்’ என உரை காண்கிறார். ‘மறத்தல்’ நினைவு தடுமாறுதல். நல்ல பண்போ தீய பண்போ அது பழக்கமான, வழக்கமான ஒன்றாகிவிடுமானால் அதனை அவ்வளவு எளிதில் மாற்ற இயலாது. சொற்கள் வாயினது செயலாக மட்டும் இருக்குமானால் இந்தத் தவறு நடக்காது. உரையும் பொருந்தாது. அது மனத்தின் வெளிப்பாடாக, நடத்தையின் வெளிப்பாடாக,  ஒழுக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தால்தான் இந்த உரை பொருந்தும். மற்றவர்களுக்கெல்லாம் சொற்களுக்கு வாயும் நாக்கும் கருவிகள். ஆனால் சான்றோர்களுக்கு அவை தடங்கள். மூலம் உள்ளம். உள்ளம் தூய்மையாயின் வாக்கு அதனை வெளிப்படுத்தும். ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே வாய்மையுண்டாகும்’ என்னும் மகாகவியின் தொடர் நோக்குக.  விளக்கவுரையில் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்,

    “சொலல்’ எனவே அமைந்திருக்க ‘வாயால் என வேண்டாது கூறினார் ‘நல்ல சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு”

    மிகத்தெளிவாக அமைந்திருக்கும் இந்த விளக்கவுரையில் வாய் என்பது எப்படி வேண்டாத சொல் என்பதையும் விளக்கிவிடுகிறார் பரிமேலழகர். விளக்கி ‘நல்ல சொற்கள் பயின்ற நா, இத்தகைய சொற்களை மறந்தும் கூறாது’ என்னும் தனது கருத்தினைக் குறிப்பாகப் புலப்படுத்தவே ‘வாய்ச்சொல்’ என்று கூறினாராம்! சொல்லுக்குக் கருவியாக வாய் இருப்பினும் அவ்வாயை ஒழுக்கத்தின் தலைவாசலாகக் கருதுகிறார் என்பதாம்!

    இல்லறத்தான் வெல்லுமிடம் இதுதான்!

    ‘துறவறம்’ உயர்ந்தது என்பதனால் ‘இல்லறம்’ தாழ்ந்தது என்பதன்று.  இல்லறத்தின் நோக்கம் துறவறம் என்பதாலும் வாழ்வின் உச்சநிலை ‘வீடுபேறு’ என்பதாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகிய இல்லறம் தனக்குரிய மதிப்பை என்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திருவள்ளுவர் சில அறங்களைத் துறவறத்திற்கே ஒதுக்கியிருக்கிறார். உலகியல் நோக்கி அத்தகைய அரிய அறங்களை இல்லறத்தான் கடைப்பிடிக்க இயலாது என்பதே அதன் காரணமாகும். உலகியலில் கடுஞ்சொற்களைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை இல்லறத்தானுக்கு ஏற்படும். பொய், குறளை, கடுஞ்சொல், பயனிலசொல் என்னும் சொற்குற்றங்கள் நான்கனுள் திருவள்ளுவர் பொய்யை இல்லறத்தானுக்கு விதிவிலக்காக்கி அதனைத் துறவறவியலில் ‘வாய்மை’ என்னும் அதிகாரத்தில் விளக்கிக் காட்டுவார். சொற்குற்றங்களைப் பொறுக்கும் பேராற்றல் துறவியைவிட இல்லறத்தானுக்கே உண்டு என்பது இதனால் பெறப்படும். இதனைத்,

    ‘துறந்தாரின தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற்பவர் (159)

    என்னும் குறுட்பாவில் பதிவு செய்திருக்கிறார் திருவள்ளுவர். “இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர் துறந்தாரின் தூய்மை உடையார்’ என்னும் இந்தக் குறட்பாவிற்கு,

    “நெறியைக் கடந்தார்வாய் இன்னாச் சொல் பொறுப்பவர், இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார்போலத் தூய்மையுடையார்.”

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர், ‘நெறிகடந்தவர் சொல்’ என்னாது ‘நெறிகடந்தவர் வாய்ச்சொல்’ என்னும் குறட்பா தொடர் பற்றி விளக்கவுரையில் கூறுகிறார். துறவிகள் ‘துறப்பினமாதலின்’ அங்கே தர வேறுபாடுகள் இல்லை. அதனால் இத்தகைய நெருடல் இல்லை. இருக்க வாய்ப்பில்லை. உலகியலில் பலதரப்பட்ட மக்களோடு வாழவேண்டிய கடப்பாடு இல்லறத்தானுக்கு உண்டாதலின் ‘நெறிகடந்தவர்தம் வாய்ச்சொல்’ என விதந்தோதுகிறார். நெறி கடப்பதற்கு இங்கே வாய்ப்புண்டு ஆதலின்.

    “வாய் என வேண்டாது கூறினார், தீய சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் இழிபு முடித்தற்கு”

    ‘நெறிகடந்தவனுடைய வாய்ச்சொல்’ என்பதால் நெறிகடந்ததால் பண்பற்ற சொற்கள் என்பது பெறப்படும். நல்ல சொல்லுக்கும் தீய சொல்லுக்கும் வாயே கருவியானாலும், இங்கே நெறிகடந்தவனுடைய இழுக்கம் சொல்வடிவில் வாய்வழியாக வருகிறது என்பதாம். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல், செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் இவற்றுக்கும் இறந்தார் வாய்ச்சொல்லிற்கும் உள்ள வேறுபாட்டினை இதனால் புரிந்து கொள்ள இயலும். முன்னவரின் உயர்வு அவர்தம் சொல்லால் வெளிப்படுவதுபோலப் பின்னவரின் இழிவும் அவருடைய சொல்லால் வெளிப்படுகிறது என்பதாம். மூன்றும் வாய்ச்சொற்களே! நடத்தை வேறுபாடு நாவில்!

    உள்ளமா? நெஞ்சமா? மனமா?

    மூளையைச்  சிந்தனைக்கருவியாகக் கொண்டால் உள்ளம், நெஞ்சம், மனம் ஆகியவற்றை உணர்வுக்கருவிகளாகக் கொள்ளலாம். திருவள்ளுவர் இவற்றோடு ‘அகம்’ என்பதையும் இணைத்துக் கொள்கிறார். ‘அகம் நக’ என்பது குறட்பாத் தொடர். ‘நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்’, ‘மனத்தொடு வாய்மை மொழியின்’, ‘உள்ளத்தால் பொய்யாதொழுகின்’ என்பனவெல்லாம் திருக்குறளில் காணக்கிடக்கின்ற சொற்களே! எனினும் இவற்றுள் நுட்பமான வேறுபாடு நிலவுகிறதோ என்னும் ஐயம் உண்டு. அது பற்றிய ஆராய்ச்சி தனி. இம்மூன்று சொற்களிலும் வினைமுதலாகக் கொள்ளப்படுவது உள்ளமே!, உள்ளுவதால் உள்ளம்!. உள்ளம் உள்ளும்! நெஞ்சத்திற்கும் மனத்திற்கும் அத்தகைய வினைப்பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. நெஞ்சத்தின் வினை, மனத்தின் வினை ஆகியவற்றை அறியக்கூடவில்லை. இந்நோக்கு திருக்குறளை மட்டும்  அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய்’ என்பது எவ்வாறு வேண்டாத சொல்லாக நின்றதோ அவ்வாறே ‘உள்ளத்தால்’ என்ற சொல்லும் வேண்டாத சொல்லாக நிற்பதைத் தொடர்ந்து காணலாம்.

    நினைவும் செயலும் ஒன்றே

    திருக்குறள் அடையாளப்படுத்தும் பத்து உடைமைகளில் செம்பாகம் அறத்துப்பாலுக்குரியது. அவற்றுள் ஒழுக்கமுடைமை, அன்புடைமை என்னும் இரண்டு உடைமைகளைச் சொற்களுக்கான மூலாதாரமாகக் கருதுகிறார் திருவள்ளுவர். ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’லும் ‘ஈரம் அளைஇ செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்லும்’ ஆராயப்பட்டன. அருளை உடைமையாகக் கொண்ட அருளாளர்கள் தீயன எண்ணமாட்டார், தீயன சொல்லமாட்டார், தீயன செய்யமாட்டார் என்பது நியதி.

    “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்” (282)

    என்னும் குறட்பா தீயன எண்ணல் பற்றிக் கூறுகிறது. இல்லறச் சூழல் காரணமாக மனத்தளவில் (ஒழுக்க நெறிகளில்) வழுவும் நேர்வுகள் உண்டு. துறவறத்தில் அது முற்றிலும் கடியப்படுகிறது. எனவே அருளாளர்கள் தீயனவற்றை உள்ளத்தாலும் நினைக்கமாட்டார்கள் என்பதாம். இந்தக் குறட்பாவிற்குக்,

    “குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் பாவம்! ஆதலால் பிறனொருவன் பொருளை அவன் அறியா  வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க”

    என்னும் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘உள்ளத்தால்’ என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது கருதியது முடித்தற்கு.”

    என விளக்கவுரையில் உள்ளுதலாகிய வினைக்கேயுரிய உள்ளத்தை ‘உள்ளத்தால் உள்ளலும்’ எனக் கூறியது பற்றிய தனது கருத்தினைப் பதிவு செய்கிறார். மற்றையோர் உள்ளம் ஊழ் காரணமாகத் தீயன எண்ணிவிடுமாம். ஆனால் துறந்தாராகிய அருளாளர் வழுக்கியும் தீயன எண்ணமாட்டாராம். அந்தக் கருத்தினைப் புலப்படுத்தவே (அந்தச் சிறப்புடைய) ‘உள்ளத்தால் உள்ளலும் தீது’ எனச் சொல்லுகிறாராம்!

    அருளிருக்கும் இடத்தில் சினத்துக்கு இடமில்லை!

    துறவிகளுக்கு எதிரி வெகுளி. செல்லிடத்தும் தீது. செல்லாவிடத்தும் அது தீது. அது அவர்தம் இனத்தைச் சுடும். தீய பிறக்கும். இத்தகைய எதிர்மறைச் செயல்களை அது செய்யுமென்றால் ‘வெகுளாமை’ இவற்றுக்கு மறுதலையான செயல்களை செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்ல வேண்டுமல்லவா?  சொல்லுகிறார்.

    “உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்” (309)

    வெகுளியை ஒரு பொருளாகக் கொள்ளாத துறவி தான் எண்ணியதையெல்லாம் ஒரே நேரத்தில் உடனே பெறுவான் என்பது குறள். இந்தக் குறட்பாவின் கருத்தினைத்,

    “தவம் செய்யும் அவன் தன் மனத்தால் வெகுளியை ஒரு காலும் நினையான் ஆயின் தான் கருதிய பேறெல்லாம் ஒருங்கே பெறும்”.

    என்னும் பொழிப்புரையால் பெறலாம். விளக்கவுரையில் உள்ளுவதே உள்ளத்தின் தொழிலாய் இருக்கவும் உள்ளத்தால் உள்ளான் எனின் எனத் திருவள்ளுவர் வேண்டாது கூறியதற்குக் காரணம் கூறுகிறார்.

    “உள்ளத்தால் என வேண்டாது கூறிய அதனால் அருளுடை உள்ளம் என்பது முடிந்தது.”

    துறவியின் உள்ளம் தவ உள்ளம். தவத்தைச் செய்து முதிர்ச்சியடைந்த உள்ளம். அந்த உள்ளத்தில் வெகுளி தோன்றாது. வெகுளி தோன்றாத, அருளுடைய அந்த உள்ளத்தைப் பிரித்துக்காட்டுகிறாராம் திருவள்ளுவர்.

    பிரிக்க முடியாததும் கலந்தே நிற்பதும்!

    இணைந்திருந்தாலும் நகமும் சதையும் பிரிக்க முடியும். மலரும் மணமும்  கலந்தே நிற்பதால் பிரிக்க இயலாதது. ‘வாசமில்லா மலரிது’ என்பது திரையிசைப்பாடல் தொடர். ‘மலரும் மணமும் போல’ என்பது உலகியல். கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம். ‘பண்’ பாட்டோடு இணைய வேண்டும். ‘பண்ணோடு பிறந்தது இராகம், குலப்பெண்ணோடு பிறந்தது நாணம்’ என்பது வழக்கு. இந்தப் பின்புலத்தில்தான் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பெண்ணியப் பண்புகளை நோக்க வேண்டியதிருக்கிறது.

    “பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை யுடைத்து” 907

    என்னும் குறளுக்கு,

    “(நாண் இன்றித்) (தன்) இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து நிற்கின்றவனது ஆண் தன்மையின் நாணினை உடைய (அவள்) பெண்தன்மையே மேம்பாடு உடைத்து”

    எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். ‘நாணம்’ என்பது பெண்ணுக்குரியது ‘நாண்’ என்பது ஆணுக்குரியது. ‘நாணுடைமை’ என்னும் அதிகாரம் சான்றோர்களுக்குரியது. இது தமக்கு வரும் பழியையும் பிறர்க்கு வரும் பழியையும் ஒப்ப மதிப்பது. உண்மையில் இந்த ‘நாண்’ ஆணுக்குப் பெருமை தரும். அந்த நாணம் பெண்ணுக்குப் பெருமை தரும். அக்காலச் சூழலில் புறத்தொழுக்கம் அறியாத பெண் பழிபாவங்களுக்கு அஞ்சும் நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை.

    கணவன்வழி மனைவியொழுகுதலே இல்லறம். மனைவி சொல் கேட்டுக் கணவன் ஒழுகுதல் இல்லற நெறியன்று. எனின் இல்லறத்தைக் கொண்டு செலுத்தும் ஆற்றலும் பண்பும் ஆணிடம் நிறைந்திருக்க வேண்டும் என்பது பொருள். இது மாறி நிகழுமாயின் இல்லறம் தடம்புரளும். நாணமில்லா ஆண்மையினும் நாணமுடைய பெண்மை போற்றுதற்குரியதாக ஆகிவிடும். இதனைத்தான் மேற்கண்ட குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். அவ்வாறு வலியுறுத்தும்போது, ‘நாணுடைப் பெண்’ எனச் சுட்டுகிறார். இதனால் ‘நாணமில்லாத பெண் இருப்பாளோ?’ என்னும் ஐயம் வருதல் இயல்பு. அதனைக் களைகிறார் பரிமேலழகர். எப்படி?

    “நாணுடைப் பெண் என வேண்டாது கூறியது அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின் அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது”.

    நாணமில்லாத ஆண்தான் பெண்ணேவல் செய்வான். அதனைக் குறிக்க எண்ணுகிறார். வள்ளுவர் ‘யாப்பு காரணமாக ‘ஆண்மையின்’ என வாளா கூறிப் பெண்ணுக்கு உரிய நாணத்தை அவளுக்கு அடையாக்குகிறார். இருப்பவளுக்குரிய பண்பை வேண்டாது எடுத்துமொழியும் வள்ளுவர் இருக்கக்கூடாத பண்பைப் பெற்றிருக்கின்ற நாணமில்லாத ஆணை அடையாளப்படுத்துகிறாராம். ஆணின் நாணமின்மையைச் சுட்டுதற்குப் பெண்ணின் நாணம் பயன்பட்டிருக்கிறது என்பதாம்!

    நிறைவுரை

    ‘நடந்தான்’ என்றாலே ‘கால்’ என வேண்டுவதில்லை. ‘கேட்டான்’ என்றாலே போதும்! செவி எதற்கு? ‘நோக்கினான்’ போதாதா? ‘கண்களால்’ என்பதைச் சொல்ல வேண்டுமா? ‘கொடுத்தான்’ என்றாலே ‘கைகள்’ நினைவுக்கு வராதா?  ஆனால் திருவள்ளுவர் கூறுகிறார். ‘சொல்லுகிற வாய்’, ‘உள்ளுகிற உள்ளம்’, ‘நாணுடைப் பெண்’ என்றெல்லாம் வேண்டாது கூறினாலும் அவற்றை விரும்பித்தான் கூறியிருக்கிறார். எல்லா வாயும் ஒரே வாய் அல்ல. எல்லா உள்ளமும் ஒரே உள்ளம் அல்ல. இவற்றைப் பிரித்துணர்த்த விரும்பிய திருவள்ளுவரின் உட்கிடக்கை அறிந்து உரையெழுதியதுதான் பரிமேலழகர் உரைத்திறன்!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 11

    பரிமேலழகர் உரைத்திறன் – 11

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                                                         
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘சொல்லும் பொருளும், உணர்த்தும் பொருளும்’

    முன்னுரை

    எழுத்தால் அமைவது சொல். அது பொருளையுணர்த்துவதைத் தனது பணியாகக் கொள்ளும். பொருளுணர்த்துவதும் நேரடியாக உணர்த்துவது,  குறிப்பாக உணர்த்துவது என இருவகைப்படும். அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் சொற்கள் வேறுபட்ட நிலையில் பொருளுணர்த்தும் பாங்கினைத் தொல்காப்பியப் பொருளியல் ஆராய்கிறது. ‘பொருளியல்’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த ஆசிரியர் நச்சினார்க்கினியர், “இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையின் பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஓத்துக்களும் பொருளிலக்கணமன்றே உணர்த்தின. ‘இதற்கிது பெயராயவாறு என்னை?’யெனின், சொல்லதிகாரத்தில் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிபில் சொல்லென்பராதலின் அவை ஈண்டு தம் பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாம் எனவும், இப்பொருளாதிகாரத்து முன்னர்க் கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச் சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி உணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலின் பொருளியல் என்றார்.” என்னும் கருத்து இங்கே சிந்திக்கத்தக்கது. ‘வேறுபட்டிசைப்பினும் பொருளாம்” என்பதுபோலத் திருக்குறளில் சொற்கள் கருத்து விளக்கத்திற்காக வெளிப்படையாகப் பொருளுணர்த்துவதன்றிக் குறிப்பாகப் பொருளுணர்த்தும் பாங்கினைப் பரிமேலழகர் உரைவழி நின்று இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    சொற்கள் பொருளுணர்த்தும் முறை

    எழுத்துக்களால் ஆகியிருந்தாலும் சொற்கள் பொருளுணர்த்துங்கால் பல நிலைகளைக் காண முடிகிறது. ‘ஆ’ என்பது எழுத்திலும் ஓரெழுத்து ஒரு மொழியிலும் ஆகாரமே. அது அகரத்தின் நீட்சியாகி நெடிலாக அமைந்தாலும் ‘ஆ’ என்பது பெயர்ப் பொருளைச் சுட்டியும் வியப்பிடைச் சொல்லாக உணர்த்தியும் பொருளுணர்த்தி நிற்பதை அறிய முடியும். எனவே எழுத்துக்கள் எழுத்துக்களாகவே இருக்கலாம். ஆனால் சொல் ஒரே முறையில் ஒரு பொருளைத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை.

    • ‘மாணடி சேர்ந்தார்’ (3) என்பது ஒரு திருக்குறள் தொடர். இதற்கு ‘இறைவனுடைய திருவடியைச் சேர்தல்’ என்று பொருள் கொண்டால் பாட்டின் மையக்கருத்துக்கு அது முரணாகும். பரிமேலழகர் தன் புலமையாற்றலால் ‘சேர்தல் – ‘இடைவிடாது நினைத்தல்’ என உரையெழுதுகிறார்.
    • ‘ஓஒ இனிதே’ (1176) என்று, தலைமகள் அழுகின்ற தன் கண்களைத் தனக்குக் காதல் நோயைக் கொடுத்த பாவத்திற்காக ‘நன்றாக அழு’ எனச் சபிப்பதாகத் திருவள்ளுவர் கற்பனை செய்கிறார். ஓகாரம் தம்முள் இணைந்து தேமாவாக நின்றாலும் பரிமேலழகர் ’ஓ’ என்பது மிகுதி பொருட்கண் வந்த குறிப்புச்சொல்’ என்னும் உரையெழுதி அதன் பொருளுணர்த்தும் ஆற்றலை வெளிப்படுத்துவதைக் காணலாம்

    ‘சொல்’ என்றால் நிகழ்த்துதல்

    ‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு குறட்பா. அவையத்து முந்தி இருப்பச் செய்கிறான் தந்தை. அத்தந்தைக்கு மகன் என்ன கைம்மாறு செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் சுட்டுகிறார். அந்த மகனைப் பார்க்கிறவர்கள் ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ?’ என்று சொல்ல வேண்டுமாம்!.

    “மகன்தந்தைக் காற்றும் உதவி ‘இவன்தந்தை
    என்னோற்றான் கொல்? எனும் சொல்” (70)

    கல்வியுடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது, தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார், இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான்கொல்லோ? என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல். இதுதான் பாட்டின் பொருள். ஆனால் இந்தப் பொருளைத் தருகிற அளவில் பாட்டில் சொற்கள் அமைந்திருக்கிறதா என்றால் உறுதியாக இல்லை. ‘என்ன தவம் செய்தானோ என்ற சொல்” என்ற அளவிலேயே குறட்பா நிறைவுற்றிருப்பதைக் காணலாம்.

    பரிமேலழகர் உரைத்திறன்

    குறட்பாவில் ‘தந்தைக்கு’ என வாளா இருக்க, பரிமேலழகரோ ‘கல்வியுடையவனாக்கிய தந்தை’ என எழுதுகிறார். ‘கல்வியைத் தந்த’ என்று கூட அவர் எழுதவில்லை. காரணம் கல்வி பிறிதின் கிழமையாகிய பொருளன்று அன்று. உயிருக்கு உடம்புபோன்ற தற்கிழமை. அழியாத உடைமை. அதனால்தான் வெகு நுட்பமாகக் ‘கல்வியுடையவனாக்கிய’ என்று எழுதுகிறார். எழுதிச் ‘சொல்’ என்று வள்ளுவர் கூறுகிறாரே, சொல் தானாக வருமா? சொன்னால்தானே சொல்வரும்? சரி. தானாகச் சொல்வார்களா? அரசியல் வாதியா காசுகொடுத்துச் சொல்லச் சொல்லுதற்கு? சொல் காரியம். எது காரணம்? சொல் வருமாறு ஒழுகுதல் காரணம். காரணமின்றிக் காரியம் இல்லை. குறட்பாவில் காரியம் மட்டுமே உள்ளது. பரிமேலழகர் காரணத்தைக் கண்டறிந்து கூறுகிறார். எப்படி?

    ‘சொல்’ நிகழ்த்துதலாகிய தன் (சொல்லுக்கான) காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல் – அங்ஙனம் தோன்ற ஒழுகல்”

    என்று எழுதிக் காட்டுகிறார். பொழிப்புரையில் ‘தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார்’ என விளக்கமாக எழுதித், தந்தையளித்த கல்வியின் பயன் அவ்விரண்டுமே என்பதனை நுட்பமாகக் காட்டுகிறார். இந்த விளக்கவுரையில் ‘சொல்’ என்பது சான்றோர் புகழும் சொல்லாக இருந்தாலும் அச்சொல்லுக்குப் பின்னாலே உள்ள மகனின் நடத்தையாகிய காரணத்தைத் தோற்றுவிக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. எனவே ‘சொல்’ என்பது சான்றோர் சொல்வது. ஒழுகுதலாகிய காரணம் என்பது சொல் உணர்த்துவது!

    கொள்ளுவது நன்றா? கொடுப்பது தீதா?

    ‘ஏற்பது இகழ்ச்சி’ என்பது ஆத்திசூடி. ‘இலன் என்னும் எவ்வம்’ என்பது திருக்குறள். ஆனால் இவற்றுக்கு முரண்படுவதுபோல் திருக்குறள் ஒன்று அமைந்திருக்கிறது.

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று”  (222)

    என்னும் குறட்பா “ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது ஈந்தார்க்கு அவ்வுலகம் இல்லையென்பார் உளராயினும் ஈதலே நன்று” என்னும் பொருள்பட அமைந்திருக்கிறது. அதிகாரம் ‘ஈகை’ யாதலின் அதற்கு மறுதலையான இரத்தலாகிய கொளலைப் பொய்யாக உயர்த்திச் சொல்லவேண்டிய நிலை ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பரிமேலழகர் புரிந்து கொள்கிறார். கொண்டு, ஏற்பது வீட்டு நெறிக்கு வழிகாட்டும் என்பாரும் இலர். ஈதல் வீடுபேற்றிற்குத் தடையாகும் என்பாரும் இலர் என்னும் தெளிவை முன்னிறுத்த விழைகிறார். ஆனால் குறட்பா அமைப்பு அவ்வாறு பொருள் கொள்ளுமாறு இல்லையே என எண்ணுகிறார். எண்ணி, ‘எனினும்’ என இருவழியும் வந்த சொல்லை உற்று நோக்கி அந்த உம்மையை எதிர்மறையாக்கி விளக்கமளிக்கிறார். எப்படி? இப்படி!

    “எனினும் என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது”

    இந்த விளக்கத்தில் ‘எனினும்’ என்னும் சொல் ‘இல்லையென்று சொன்னாலும்’ என்னும் சொற்பொருளைக் கொண்டிருந்தாலும் ‘இன்மை’ என்னும் பொருளையே உணர்த்துகிறது என்பதைப் பரிமேலழகர் உரையால் புரிந்து கொள்ள இயலும்.

    ‘சினம்’ என்னும் நெருப்பு

    ‘ஆறுவது சினம்’ என்பது முதுமொழி!. ‘கோபத்தை அடக்கா வேந்தன்’ என்பது விவேக சிந்தாமணி! இத்தகைய மொழிகள் சினம் மனிதன் கைக்கொள்ள வேண்டாத பொருள் என்பதை உணர்த்துகின்றன. திருவள்ளுவர் வெகுள்தல் என்னும் இந்தப் பண்பை எதிர்மறையால் ‘வெகுளாமை’ என அதிகாரப் பகுப்புச் செய்வார். இந்த எதிர்மறையே அப்பண்பு கூடாத பண்பு என்பதைக் குறிப்பாய்ப் புலப்படுத்தும். இந்த அதிகாரத்தில் உள்ளதொரு குறட்பா,

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்” (306)

    என்னுமாறு அமைந்திருக்கிறது. இந்தக் குறட்பாவிற்குச் சினம் என்னும் நெருப்பு தனக்கு இடமானவரையேயன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்’ எனப் பொழிப்புரை கண்ட பரிமேலழகர்,

    ‘சினமென்னும் நெருப்பு’ என்ற விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே! இந்நெருப்பு தான் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது”

    என்று விளக்கவுரையில் எழுதுகிறார். இயல்பான நெருப்புக்கும் சினமாகிய நெருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால் பற்றுகிற இடத்தினை மட்டும் எரிப்பது இயல்பான நெருப்பு! தன்னைக் கொண்டவனை மட்டுமன்றி அவனுக்கு நல்வழி காட்டுகின்ற இனமாகிய நண்பர்களையும் எரித்தழிப்பது சினம் என்னும் நெருப்பு.  ‘சினநெருப்பு’ என்னாமல் ‘சினம் என்னும் நெருப்பு’ என்னும் விரியுருவகத்தால் (முகத்தாமரை – உருவகம். ‘முகம் என்னும் தாமரை’ – விரியுருவகம்) கூறியது விதப்பு. இந்த விதப்பினைப் பயன்படுத்திப் பரிமேலழகர் தனது உரையாற்றலைக் காட்டுகிறார். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பது சொற்பொருள்  இயல்பான நெருப்புக்கும் சினமென்னும் நெருப்புக்கும் உள்ள வேறுபாட்டை உணரச்செய்வது சொல் உணர்த்தும் பொருள்!.

    அறிவுச் செல்வமும் அறியாமை வறட்சியும்

    செல்வம் பலவகைப்படினும் பெரும்பாலும் பொருட் செல்வத்தையே அது குறிப்பதாகக் கொள்வது ஒரு நடப்பியல் உண்மை. ‘அவன் செல்வன்’ என்றால் அவன் வாங்கிய பட்டங்கள் யாருடைய நினைவுக்கும் வராது. அதுபோல அவன் ‘வறியன்’ என்றால் அவனுடைய வயிறும் பசியுமே நினைவுக்கு வருமேயன்றி அவனுடைய அறியாமையோ அதனால் பெற்ற அவமானமோ நினைவுக்கு வராது. ஆனால் பரிமேலழகருக்கு வரும்!

    “இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
    சிலர் பலர் நோலாதவர்” (270)

    என்னும் குறட்பா ‘தவம்’ என்னும் அதிகாரத்து இறுதியாக அமைந்திருப்பது. இந்தக் குறட்பா இவ்வுலகில் செல்வம் உடையார் சிலராகவும் வறுமையால் துன்புறுவோர் பலராகவும் இருப்பதற்குக் காரணம் தவம் செய்வார் சிலராகவும் அது செய்யாதார் பலராகவும் இருப்பதே காரணம் என்ற கருத்தினை முன்னெடுக்கிறது.  இதனை,

    “உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், தவம் செய்வார் சிலராக அது செய்யார் பலராதல்”

    என்னும் பரிமேலழகர் பொழிப்புரையாலும் புரிந்து கொள்ள இயலும். ‘இலர்’ ‘உளர்’ என்பவற்றிற்கான செயப்படுபொருட்கள் குறட்பாவில் இல்லை. பரிமேலழகர் அவற்றைச் ‘செல்வம்’ எனக் கருத்தாகக் கொண்டு உரையெழுதுகிறார். அடுத்துச் ‘சிலர் நோற்பார்’ என்பதைக் கொண்டு அதற்கியைய (குறட்பாவில் குறிக்கப்படாத) செல்வர் சிலராகவும் என உரையெழுதுகிறார். தொடர்ந்து செல்வத்தை அறிவோடு பொருத்தி ‘நுண்ணுணர்வு உடைமையே செல்வம் நுண்ணுணர்வு இல்லாமை வறுமை’ என்னும் கூடுதல் விளக்கத்தையும் தருகிறார். இந்த விளக்கத்தில் அவர் வளத்தையும் வறுமையையும் பொருட்செல்வத்தோடு மட்டும் பொருத்திப் பார்க்காமல் அறிவின் உண்மை இன்மைகளோடு பொருத்திப் பார்க்கிறார். இவ்வாறு அவர் பார்ப்பதற்குத் துணை நின்றது அவருடைய பன்னூல் புலமை.

    “செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன. என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்  (நாலடியார் 251)”

    பரிமேலழகர் உரையால் ‘வளப்பம்’ என்பது பொருளை மட்டும் குறிக்காது. அறிவுடைமையையும் குறிக்கும் ‘வறுமை’ என்பது பொருளில்லாமையை மட்டும் குறிக்காது. அறிவின்மையையும் குறிக்கும் என்பது புலனாகிறதல்லவா? செல்வம் பொருளைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவுடைமையும் குறிப்பது உணர்த்தும் பொருள். ‘வறுமை’ பொருளின்மையைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவின்மையைக் குறிப்பது உணர்த்தும் பொருள். இவ்விருவகைப் பொருளையும் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் தொடர் “செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன” என்பதாகும்!.

    உண்மை பிறத்தல்! இன்மை இறத்தல்!

    “நேற்றிருந்தவர்கள் இன்றில்லை” என்பது வழக்கு. இந்த வழக்கில் நிலைமையாகிய உணர்வு வெளிப்படுவது என்பது உண்மையே. ஆனால் என்றோ தோன்றியது நேற்றுவரை இருந்திருக்கிறதே என்ற உண்மையும் இருக்கிறது என்பதைப் பலரும் அறியார். நிலையாமை என்பது தோன்றிய கணமே மறைவது. அதாவது ‘தோன்றுதல் – மறைதல்’ என்பதே நிலையாமையேயன்றித் தோன்றுதல்; இருத்தல் – மறைதல் என்பது நிலையாமை ஆகாது. ‘கணந்தோறும் பிறந்திறப்பது’ என்பதும் அது. பிறந்த நொடியே இறப்பது. எனவே நேற்று (வரை) இருந்தவர்கள் இன்றில்லை என்பது நிலையாமையின் முழுப்பொருண்மையாகாது. அதனால்,

    “நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
    பெருமை யுடைத்திவ் வுலகு” (336)

    என்னும் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் அவ்வழக்கினையும் உட்கொண்டு,

    “ஒருவன் நெருநல் உளனாயினான் அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து இவ்வுலகு”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். இதில் ‘நேற்று’ என்பதை வழக்கிலிருந்து எடுத்துக் கொள்கிறார். ‘இருந்தான்’ என்பதை மாற்றி ‘உளன் ஆயினான்’ அதாவது ‘தோன்றினான்’ என்னும் தன் கருத்தினை இணைத்துக் கொண்டு உரையெழுதுவதைக் காணலாம். உலகியல் வழக்கு ‘நேற்றுவரை இருந்தான்’ என இருக்க, பரிமேலழகர் ‘நேற்று தோன்றியவன்’ என விளக்கமளிக்கிறார் ‘உளன்’ என்பதற்கு ‘உண்மை’ (உளதாம் தன்மை) என்றும், ‘இலன்’ என்பதற்கு ‘இல்லை’ (இலதாம் தன்மை) என்றும் உரை காண்கிறார். கண்டு “உளன் ஆயினான் இலனாயினான்” என நூலாசிரியரின் நுண்ணியம் கண்டு உரையெழுதுகிறார்.

    “ஈண்டு உண்மை பிறத்தலையும் இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன”

    பரிமேலழகர் உரையால் நேற்று பிறந்தவன் (உளன் ஆயினான்) இன்று இல்லையாயினான் (இலனாயினான்) என்னும் நிலையாமையின் ஆழம் புரிகிறது. பாட்டில் இதற்கான சொல் இல்லையாயினும், ‘உளன்’ ‘இலன்’ என்னும் இரண்டு சொற்களோடு ஆக்கச் சொல்லை வருவித்துக் கொண்டு ‘பிறத்தல் மற்றும் இறத்தல்’ என உணர்த்துகிறார். உண்மை என்பது ‘உளது’ என்னும் பொருளைத் தருவது. அது சொற்பொருள். அது ‘பிறப்பு’ என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள். இன்மை என்பது ‘இலது’ என்னும் பொருளைத் தருவது. அது இறத்தல் என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள்!

    பிரிவதற்காகவே பிறந்த உறவு

    ‘சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்’ என்னும் திரைப்பட உரையாடல் பலருக்கும் நினைவிருக்கலாம். சில அரசியல் கட்சியினர் கலைவதற்காகவே கூடுவதையும் அறிந்திருக்கலாம். ‘பிரிவதற்காகவே வந்த உறவு’ பற்றித் திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார். உயிர்வழி நீங்கிய வழிக் கிடக்கும் உடம்பு பற்றிப் ( பரிமேலழகர் உரை – 340) பேசுகிறார். வழக்கில் பயன்படுத்தப்படும் பல தொடர்கள் எதிர்மறைப் பொருளைத் தருவதைப் பலரும் உணர்வதில்லை. சான்றாக அன்பால் பிணைந்தவர்களை வாழ்த்துங்கால் ‘உடம்பும் உயிரும் போல’, ‘மலரும் மணமும் போல’, ‘நகமும் சதையும் போல’ என்றெல்லாம் சொல்வார்கள்.  இவர்கள் உடம்போடு சேர்ந்து பிறக்கும் உயிர் இறுதிவரை உடம்பினைவிட்டுப் பிரியாது என்னும் மயக்கத்தில் கூறுவதை ஓர்ந்திலர். இந்த மயக்கம் குறள் கண்ட தலைமக்களுக்கும் இருந்திருக்கிறது.

    “உடம்பொடு உயிரிடை என்ன? மற்று அன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு” (1122)

    என்னும் தலைவன் மொழிகேட்டு நம்பிய தலைவியைத் திருக்குறள் காட்டுகிறது. உண்மையில் இது பொருந்துமா என்பதைக்,

    “குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
    உடம்போடு உயிரிடை நட்பு” (338)

    என்னும் குறட்பாவில் திருவள்ளுவர் ஆராய்கிறார். அக்குறட்பாவை ஆராய்ந்த பரிமேலழகர்,

    “முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்து புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு”

    என்னும் பொழிப்புரையைத் தருகிறார். இந்தப் பொழிப்புரையில் உடம்பை முட்டையாகவும் உயிரைப் பறவையாகவும் உருவகம் செய்த திருக்குறளின் திறனைப் பாராட்டுகிறார். ‘ஒரு குறிப்பிட்ட காலம் வரை முட்டையும் பறவையும் ஒன்றாக இருந்ததைச் சுட்டிப் புள்ளுப் பருவம் வந்துழித் தனித்தறியாத முட்டையைத் தனித்துவிட்டுப் புள் பறந்துவிடும் என்னும் நுண்ணியம் காட்டுகிறார். ‘உடம்போடு உயிர்’ என்பதைப் ‘பிரியாத நிலை’ என்று கருதுவார்க்கு (உவமம் கொண்டு) அதன் ‘பிரிநிலையை’ விளக்குகிறார் பரிமேலழகர். ‘நட்பு’ என உடம்புக்கும் உயிருக்குமான உறவைச் சுட்டும் திருவள்ளுவர் அதற்குக் காட்டிய உவமம் முட்டையும் புள்ளுமாகும் என்பதை நோக்கி உரையெழுதுகிறார். பிரிந்து போகக் கூடியதை உவமமாகக் காட்டியதால் ‘நட்பு’ என்பதும் பிரிந்து போகக் கூடியதே என்பதைக் குறிப்பாகக் காட்டியது என்று விளக்கமளிக்கிறார்.

    “‘நட்பு’ என்றது குறிப்பு மொழியால் ஈண்டு நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது”

    இங்கே குறிப்பு மொழி என்றால் என்ன? ‘நட்புத்தான்! அது எது போல என்றால் முட்டையும் புள்ளையும் போல’ என்றாம்!. “பழகுதற்கு இனியவர், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தணியாத நட்பை என்மீது காட்டியவர், கருத்து வேறுபாடுகள் நட்பு முரிவதற்கான காரணங்கள் ஆகா” என்னும் இன்றைய நடப்பியல் சமுதாயத்துப் பசப்பு மொழிகளையெல்லாம் இந்தப் பாட்டிற்குப் பரிமேலழகர் தரும் அரிய விளக்கவுரை தவிடுபொடியாக்கிவிடுகிறது. அவர் எழுதுகிறார்.

    “சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக”

    எனச் செவியில் அறைவதைக் காணலாம். உயிருணர்ச்சியாகிய நட்பு உள்ளங்களின் இடப்பெயர்ச்சியால் தோன்றுவது என்பது இதனால் புலனாம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பிரியாதது போலவும் உண்மையில் பிரியக்கூடியதே என்பதையும் ‘நட்பு’ என்னும் சொல் சுட்டுகிறதாம். ‘நட்பு’ என்பது உணர்ச்சியால் பிரியாத உறவு என்பது சொற்பொருள். அது பிரியக்கூடிய உறவே என்பது சொல் உணர்த்தும் பொருள்!.

    நிறைவுரை

    மூலநூலாசிரியனின் உள்ளங் காண முயல்வதும் தாம் கண்டவற்றைச் சான்றுகளோடு முன்மொழிவதுமே உரையாசிரியர் கடன். அந்த வகையில் திருக்குறள் உரையாசிரியர்களில் முன்னிற்பவர் பரிமேலழகர். நூலைப்  பன்முறை நோக்கி ஆசிரியரின் உள்ளமறிந்து அதற்கேற்ப உரைகாண்பதற்குச் சொற்களையும் அவை பொருளுணர்த்தும் முறைகளையும் நன்கு உள்வாங்கி உரையெழுதுகிறார். சொல்லுக்குரிய நேரடிப் பொருளால் குறட்பொருள் சிறக்காது என்னும் நிலையில் அதனின்றும் விலகிச், சொல் உணர்த்தும் பொருளைக் கண்டறிந்து காட்டும் அவர் உரைத்திறன் புலப்படக் கூடும்.

    (தொடரும்…)

    Share