மீனாட்சி பாலகணேஷ்

(கழங்காடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு இனிய பருவம் கழங்காடற் பருவமாகும். இதனைப் பெதும்பை எனும் (எட்டுமுதல் பதினோரு ஆண்டு வயதுவரை உள்ள) பெண்மக்கள் விரும்பி விளையாடுவதாகக் கூறுவர்.

கழங்காடல் அனைத்து வயது மகளிரும் விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்றாகும். ஆயினும் இது பெதும்பைப்பருவப்பெண்களின் விளையாட்டென்று உலா இலக்கியங்கள் கூறும். விளையாடும் முறைகளையும் விளக்கும். ஏழுகாய்களைக் கொண்டு விளையாடப்படுவது கழங்கு. இது அம்மானை ஆட்டத்தினின்றும், பந்தாட்டத்தினின்றும்  மிகவும் வேறுபட்டதாகும்.

பந்தாடிக் களைத்த சங்ககால மகளிர் ஆற்றங்கரை மணலில் கழங்காடினர் என்பதனை,

          ‘கைபுனை குறுந்தொடி தத்த, பைபய,
         முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்
   பட்டின மருங்கின் அசையின்1…,’ எனும் பெரும்பாணாற்றுப்படை வரிகளால் அறியலாம். அதாவது, ‘கையிலணிந்த வளையல்கள் குலுங்க, மென்மையான சிறுமுத்துக்களையொத்த பொடிமணலில் பொன்னாலான கழங்குகளைக் கொண்டு விளையாடும் பட்டினத்தின் ஒரு பக்கம்…..’ எனப்பொருள் கொள்ளவேண்டும்.

பெருத்த முத்துக்கள், மரக்கட்டையில் கடைந்தெடுத்த  உருண்டைகள், பொன்னால் செய்யப்பட்ட பொற்கழங்குகள் முதலானவை கழங்காடப் பயன்படுத்தப்பட்டன. செடியிலிருந்து கிடைக்கும் கழற்சிக்காய் என்பதும் பயன்படுத்தப்பட்டது.

இன்றும் கிராமிய விளையாட்டாக, அச்சாங்கல் (ஐந்து காய்களை வைத்து விளையாடுவது) ஏழாங்கல் (ஏழு காய்களைக் கொண்டு ஆடுவது), சுங்கரக்காய் (பல காய்களைக்கொண்டு ஆடுவது) என கூழாங்கற்கள் அல்லது கருங்கற்களைக்கொண்டு இவ்விளையாட்டு விளையாடப்படுகின்றது.

அம்மானை, கழங்கு ஆகிய விளையாட்டுகள் ஆயமொடு (தங்கள் தோழிமார், விளையாட்டுக் குழுக்களுடன்) ஆடப்பெறும் என்பதனை சங்க இலக்கியங்களிலிருந்து அறியலாம்.

            ‘இனந்துணை ஆயமொடு கழங்குடன் ஆடினும்2,’

            ‘கழங்கா டாயத் தன்றுநம் மருளிய3,’ எனும் பாடலடிகள் இதனை விளக்கும்.

            ‘கூறை நன்மனைக் குறுந்தொடி மகளிர்
         மணலாடு கழங்கின் அறைமின்சத் தாஅம்4,’

எனும் பாடலடிகள் மகளிர் மாடத்து முற்றங்களில் மணலைப்பரப்பிக் கழங்காடினர் என விளக்கும். விளையாடும் முறையாவது தரையில் பொடிமணலைப்பரப்பி, அதன்மீது கழங்குகளை வைத்து, கையாலெடுத்துத் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடுவதாகும்.

கழங்காடும் பொழுது ஏழு காய்களையும் தரையில் பரப்பி வைத்துப் பின் ஒவ்வொரு காயாக எடுத்து மேலெறிந்து, அடுத்து இரண்டிரண்டு காய்களாக எடுத்து மேலெறிந்தும் இவ்வாறு ஏழு வரை மேலெறிந்து, மேலேசென்ற காய் கீழே விழுவதற்குள் மற்றொரு பகுதியை மேலெறிந்துவிட்டுக் கீழேவரும் காய்களைக் கையில் பிடித்து ஆடினால், ஆடினவரே தொடர்ந்து ஆடலாம். கீழேவரும் காய் தரையில் விழுந்துவிட்டால் ஆட்டம் மற்றவர்களுக்கு உரித்தாகிவிடும். இவ்வாறு ஆடும்பொழுது, ஒன்றொன்றாகக் கழங்குகளை மேலே எறிகையில் ஒன்றுமுதல் ஏழுவரை உள்ள பொருட்களைப் பாடிக்கொண்டே ஆடுவார்கள். அவையே ஏழு கண்ணிகளில் உலா இலக்கியங்களில் காணப்படும்.

பெண்மக்களைப் பருவவகையால் பிரிப்பதனையும், அவர்களின் பருவத்துக்கேற்ற செயல்களையும் நாம் உலா இலக்கியங்களில் காணலாம். கழங்காடும் பெதும்பை எனும் பெண் பாதி பேதைக்குணமும் பாதி மங்கைக்குணமும் கலந்தவள் என்கிறது உலா இலக்கியம். இது எட்டு முதல் பதினோரு ஆண்டு நிரம்பிய சிறுமி என்பதற்குப் பொருத்தாமாயுள்ளது. (கடம்பர்கோயில் உலா) ஆடும் கழங்குகளின் நிறமும் பெருமையும் விளக்கப்படுகின்றன:

பத்து வயது நிரம்பிய சிறுபெண்ணொருத்தி கைகளில் ஏழுவிதமான கழற்சிக்காய்களை எடுத்துக்கொண்டு கழங்காடுகிறாள். அக்காய்களை வெகு லாவகமாக மேலே வீசுகிறாள்! மேகத்தின் கருநீல நிறத்தையொத்த நீலக்கழங்கொன்று; களங்கமற்ற சந்திரன் போலும் வெளேரென்ற முத்தாலான கழங்கொன்று; எந்தை சிவபிரானின் பாதியுடலைக் கொண்ட பார்வதியைப் போலும் பச்சைநிறம் பொருந்திய மரகதத்தாலான கழங்கு ஒன்று; மறுபாதியான ஐயனின் தகதகக்கும் செம்பவள நிற உடல்போன்ற மாணிக்கத்தாலான கழங்கு இன்னொன்று; மலர்ந்த கொன்றைப் பூக்களின் தேன்போன்ற நிறங்கொண்ட கோமேதகக் கழங்கொன்று; பொருந்திய கங்கைநீர்போல் பளபளக்கும் வயிரக் கழங்கொன்று; மன்றுள் நின்றாடும் எம்பிரானின் சிவந்த சடைபோன்ற மென்மையான செம்பவழக் கழங்கொன்று என ஏழுவிதக் கழங்குகளைக் கையிலெடுத்து ஆடுகிறாள் இப்பெதும்பை எனப்படும் சிறுமி.

            ‘கந்தரம்போல் நீலக் கழங்குங் களங்கமில்லாச்
         சந்திரன்போல் முத்தின் தனிக்கழங்கும்–எந்தையுடற்
         பாதியன்ன பச்சைப் பசுங்கழங்கும் பாதியெழிற்
         சோதிமா ணிக்கச் சுடர்க்கழங்கும்–தாதலரும்
         கொன்றையந்தே னன்னநிறக்கோமே தகக்கழங்கும்
         துன்றுகங்கை போல்வயிரச் சொற்கழங்கும்–மன்றுடையான்
         வேணியன்ன செம்பவழ மென்கழங்கும் பங்கையப்பூம்
         பாணி யதனில் பரிந்தெடுத்து5..’

ஒவ்வொரு கழங்கை மேலே வீசும்போதும் பாகைப் பழிக்கும் தீங்குரலில் ஒன்றிலிருந்து ஏழுவரை அமைந்த இறைவனின் திருத்தலங்களைப் பற்றிப் பாடுகிறாள் இப்பெண். என்னெவெல்லாம் கூறுகிறாள் எனச் சிறிதே கேட்போமா?

ஒன்றை எடுத்தவள்  ஏகம் (ஒன்று, அனைத்தும் ஒன்று) எனும் ஏகாம்பரத்தைப் பற்றிப் பாடுகிறாள். கச்சி ஏகாம்பரநாதரைப் பற்றிப்பாடுகிறாள்.

            ……………………………………… ‘நீணிலத்துப்
         பாகாங் குதலைமொழிப் பாவைகுறித் தொன்றையெடுத்
         தேகாம் பரத்தினிசைபாடி5  ………. ‘

பிறகு இரண்டு கழங்குகளை எடுத்துக்கொண்டு அன்றொருநாள், பிரமன், திருமால் ஆகிய இருவர் சிவபிரானின் அடியும் முடியும் தேடிக் கொண்டாடிய அண்ணாமலையைப் பாடிப் போற்றுகிறாள்.

            ………………………………………  வாகாகக்
         கூடு மிரண்டெடுத்துக் கொண்டாடி யன்றிருவர்
         தேடு மலையின் செயல்பாடி5 ……………..’

மூன்று கழங்குகளை எடுத்து, புகழ்வாய்ந்த திரிசிராப்பள்ளி எனும் தலத்தைப் பாடுகிறாள். இது திரிசிரன் எனும் மூன்றுதலை அரக்கன் சிவபிரானைப் பூசித்து வழிபட்ட தலமாம்.

            ……………………………  ‘நாடரிய
         வள்ளிதழி மூன்றெடுத்து மன்னு திரிசிராப்
         பள்ளியெனுந்தலத் தைப்பாடி5 ………….’

விளையாட்டில் உள்ளம் மிக்க மகிழ்ச்சியில் திளைப்பதனால் நான்குகாய்களை எடுத்துக் கொண்டு நான்மாடக்கூடலான மதுரையம்பதியின் வளத்தைப் பாடியாடுகிறாளாம்.

            …………………………… ‘உள்ளமகிழ்
         வாடலா னாலென் றடுத்தெடுத்து நான்மாடக்
         கூடல்வளம் பாடிமிகக்கொண்டாடி5 …………’

இதழ்கள் மலர்ந்தவிழும் சிவந்த மலர்போலும் வாய் கொண்ட கிளியின் மொழி பேசும் அப்பெண் ஐந்து காய்களைக் கையில் எடுத்துக்கொண்டு பஞ்சநதித்தலமான திருவையாற்றின் பெருமைகளைப் பாடிக் கழங்காடுகிறாள்.

            …………………………………………….. ‘தோடவிழும்
         கிஞ்சுகப்பூஞ் செவ்வாய்க் கிளிமொழியா ளைந்தெடுத்துப்
         பஞ்சநதி மான்மியத்தைப் பாடியே5 ………………’

காய்களுடன் கண்களும் மேலும் கீழும் சென்றுவர, அவ்வண்ணமே ஆறு காய்களைக் கையில் எடுத்தவள், அன்றொருநாள் ஆறுபெண்கள் அட்டமாசித்திகள் பெற்ற மெய்த்தலமான பட்டமங்கையின் பெருமைகளைப் பாடுகிறாளாம்.

            …………………………………… ‘கஞ்சவிழி
         அத்திறத்தால் ஆறெடுத்து அன்று ஆறு மின்னார் அட்டமா
         சித்திபெற்ற மெய்த்தலத்தின் சீர்பாடி5…………’

இதனைப் பாடி மகிழ்ந்த பெண்ணரசி, அடுத்து ஏழு கழங்குகளைக் கையிலெடுத்துக் கொண்டு, ஏழு உலகங்களிலும் எம்பெருமானாகிய சிவபிரான் இசைந்து உறையும் இடங்களைப் பற்றிப் பாடியாடுகிறாளம்.

            …………………………….. ‘கைத்தலத்தில்
         ஏழெடுத்துப் பாரிடத்தி லித்தலங்களாதியா
         ஏழுலகத் தெம்மா னிசைதலங்கள்5

இவ்வாறு ஆடுபவள் தன் பாடலில், “இத்தகைய தலங்களில் கிட்டும் பேறுகளெல்லாம் எம்மான் உறையும் இந்தக் கடம்பநகரை அடைந்தோர்க்குக் கிடைக்கும்,” என்றுகூறி எல்லாக் கழங்குகளையும் சேர்த்தெடுத்து மேலே வீசியெறிந்து பிடிக்கிறாள். அவ்வாறு செய்யும்போது, அவளுடைய மூக்குத்தி அசைந்தாடுகிறது; கழுத்திலணிந்த முத்து வடம் சரிந்தாடுகிறது; கண்கள் இரண்டும் மேலும் கீழுமாகக் கழங்குகளோடு ஓடியாடுகின்றன. அவளுடைய கொடியிடையும் உடனாடுகின்றது.

                                        ‘-சல்லாப
         மூக்குத்தி முத்தாட முத்து வடமாட
         நோக்கிரண்டு மாட நுசுப்பாட–ஆக்கமகள்
         கொண்டாட மாதுசெங்கை கொண்டாடும் போதிலே5

எனக் கைகளில் கழங்கினை எடுத்து ஆடுகிறாள் அவள்.

இக்காட்சி கடம்பர்கோயில் உலாவில் காணப்படுவது. பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் ஏழு கழங்குகளுக்கும் பாட்டுடைத்தலைவனாம் சிவபிரானின் ஏழுதலங்களின் சிறப்புகளைப் பாடியுள்ள அழகான உத்தி படித்து ரசிப்பதற்கு சிறப்பாக உள்ளது.

இவ்வாறு சில உலாப் பிரபந்தங்களில் கழங்காடுதல் பற்றிய அருமையான பாடல்களைக் கண்டு மகிழலாம். காளமேகப்புலவர் பாடிய திரு ஆனைக்கா உலா6 எனும் பிரபந்தம் சிறப்பாகப் பெதும்பை ஆடும் ஏழு கழங்குகளுக்குமாக ஈசனின் செயல்களை அழகுற விவரிக்கின்றது.

சேறைக்கவிராச பிள்ளையும் தாமியற்றியுள்ள வாட்போக்கியுலா7 எனும் நூலில் கழங்காடும் முறையினை நன்கு விளக்கியுள்ளார். இங்கு தலங்கள் இல்லாது ஒன்றுமுதல் ஏழுவரையிலான இறைவனின் பெருமைகளைக்கூறிப் பெதும்பை கழங்காடுகிறாள் எனப்பாடியுள்ளார்.

கழங்காட்டம் பற்றிய இத்துணை விரிவான விளக்கத்தின்பின்பு, பிள்ளைத்தமிழ் நூல்களுக்குச் செல்லலாமா?

சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ் நூல் பத்துப்பருவங்களையே கொண்டதாயினும் சிறிது வேறுபட்டு கழங்கு, அம்மானை ஆடுதல் இரண்டினையும் முறையே எட்டாவது ஒன்பதாவது பருவங்களாகக் கொண்டுள்ளது. இதிலிருந்தும் கழங்காடுவதென்பது அம்மானையாடும் விளையாட்டிலிருந்து வேறுபட்டதென அறிகிறோம். இந்த பிள்ளைத்தமிழ் நூலில் அம்மை கழங்காடுவது மிகவும் நயமான விதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

மேலெறியும் ஒவ்வொரு கழங்கிற்கும் உண்டான எண்ணிக்கையில் பாடுவார்கள் என அறிந்தோமல்லவா? அதுபோன்றே அம்மையின் ஒவ்வொரு கழங்குக்கும் புலவர் அருமையான விளக்கம் தருகிறார்.

உனக்குரிய நினது மணாளன்மீது நீ வைத்துள்ள பக்தி (அன்பு) என ஒரு கழங்கை மேலெறிகின்றனை!

நீ, உனது தலைவனாகிய ஈசன் என நீவிர் இருவரும் உறைகின்ற உடல்கள் சிவம் சக்தி என இருவகைப்படும் எனக்கூறும் விதமாக இரு கழங்குகளை வீசுகின்றனை!

மேலுலகு, இவ்வுலகு, பாதாள உலகங்கள் என மூன்று உலகங்களைப் படைத்து அவற்றைக்க் காத்தருளும் திருப்பாதங்கள் முறையே இரண்டு உன்னுடையனவும் இரண்டு ஐயனுடையனவாகவும் நான்காகும் எனும்படி மூன்று, நான்கு எனக் கழங்குகளை வீசுகின்றனை!

நீ செய்யும் தொழில்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) எனக்கூறி ஐந்து கழங்குகளையும், உலக உயிர்களுக்கு உள்ள குணங்களான காமம், குரோதம், மதம், மோகம், உலோபம், மாற்சர்யம் இவை ஆறெனவும், சீவித்து வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்டாகும் பிறப்பு ஏழுவகை என்று உணர்த்தும் வகையாக ஏழு கழங்குகளையும்  வரிசைமுறையில் வைத்துப் பாடியாடி அருளுவாயாக!

உனது திருவருள் விளங்குமாறு பசியநிற மேனியை உடைய நீ, உனது சிவந்தகையினில் ஏந்தியுள்ள நீலமணிக் கழங்கானது குளிர்ச்சியான பொய்கையின்கண் அலர்ந்த செந்தாமரைமீது கரியநிறம் படைத்த வண்டானது ஆடுவதுபோல உள்ளது. பெருந்துறைச் சிவயோகவல்லியே! நீ கழங்காடியருளுகவே!’ என வேண்டும் பாடலிது.

            உரியநின் கேள்வர்மேல் வைத்திடும் பத்தியொன்
                            றுறைகின்ற மேனி களிரண்டு
                   …………………………………………………
                            சீவிக்கு மாவிக்கெலாந்
                   தேகங்கொடுத்த குறியொரே ழெனக் கொண்டு
                            சீர்வைத் துடன்பாடியே
         ……………………………………………
         கரியவண்டாடுமா போலவே நீலக்கழங் கெடுத்
                            தாடி யருளே
                   கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                            கழங்குநீ யாடியருளே8.

என்பன பாடல்வரிகள்.

‘ஒருகாயை மேலெறிந்து ஆறினைக் கீழ்வைத்து, இரண்டினை எறிந்து ஐந்தினை வைத்து (உய்த்து) மூன்றினை எறிந்து நான்கினை வைத்து, நான்கினை எறிந்து மூன்றினை வீசி, ஐந்தினை வீசி இரண்டினை வைத்து, இரண்டினை எறிந்து ஒன்றினை வைத்து  ஏழினையும் வீசிப்பிடித்து,’ எனக்கூறுபவர், இன்னும் வெவ்வேறுவிதமான எண்ணிக்கைகளில் வீசியும் வைத்தும் கைகள் சிவக்குமாறு தாயே நீ கழங்கு ஆடியருளே,’ என வேண்டிப்பாடியுள்ள பாடல் நயம் கருத்தைக் கவருவதாகும்.

            ‘ஒன்றெறிந் தாறுவைத் துய்த்திரண் டைந்துவைத்
                            துய்த்துமூன் றிட்டுநான்
                   குய்த்துநான் கிட்டுமூன் றுய்த்தைந்
                            ……………………………
         ஒன்றொடா வேழுமேத்தர முழங்கைப் பெறும் கைத்தலம்
         …………………………………………
             கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                   கழங்குநீ யாடியருளே9,’ என்பன பாடல்வரிகள்.

இதில் விளையாடும் முறைமையை விளக்கியுள்ளார் புலவர். இங்ஙனம் அமைந்துள்ள பத்துப்பாடல்களும் நயக்கத் தக்கவையாகும்.

அடுத்து நாம் காண்பது தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ். இதில் நமக்குக் கிடைத்துள்ளன இரண்டே பாடல்கள்தாம். இரண்டுமே அரிய முத்துக்களாலான கழங்குகள்தான்!

சிவகாமி அன்னையாகிய பெதும்பை ஆடும் கழங்காட்டம் எதையெல்லாம் ஒத்துள்ளது எனச் சுவைபட விவரிக்கிறார்.

கழங்கு விளையாடும் சிறுமியர் கண்ணிமைக்கும்பொழுதில் ஒன்று, இரண்டு, மூன்று எனக் கழங்குகளை எடுத்தெடுத்து வீசியாடுவர். பார்ப்போர் கண்களுக்கு இவை பல்வகையாகத் தோற்றமளிக்கின்றனவாம்.

அந்நாளில் தம்மை நாடிவரும் பாணர்களுக்கு அரசர்கள் பொன்னால் செய்யப்பட்ட தாமரைமலரைப் பரிசிலளிப்பர். சில சமயம் அம்மலரின் இதழ்களில் சிகப்பு நாகமாணிக்க மணிகள்  பதிக்கப்பெற்றும் தண்டில் மரகதமணிகளும் பதிக்கப் பட்டிருக்கும். இவற்றிலிருந்து பொங்கும் ஒளி ஒன்றையொன்று தாக்கி எதிரொளித்தால் எவ்வாறு இருக்கும்? கண்ணைப் பறிக்காதா?

மாவின் இளம்பிஞ்சுகள் (மாவடுக்கள்) காற்றிலசைந்து மாந்தளிரின்மீது மோதியாடினால் எப்படி இருக்கும்?

இளம்மகளிரின் வேல்விழிகள் பல நவரத்தினங்கள் பதித்த காதணிகளில் (கொப்பில்) பட்டுத் திரும்பினால் எவ்வாறு இருக்கும்?

நறுமணம் கலந்து சந்தனம் மணக்கும் அம்மையுனது இளங்கொங்கைகள்மீது உன் கணவராகிய சிவபிரானின் கண்கள் தாவி விளையாடுவது எவ்வாறு இருக்கும்?

அழகான கருவண்டுகள் தேன் உண்ணுவதற்காகச் செங்காந்தள் மலரை இடைவிடாது மொய்ப்பது கண்கொள்ளாக் காட்சியன்றோ?

இந்திரநீலக் கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பெற்ற கழங்குகளைக்கொண்டு அன்னை கழங்காடுவது இவையனைத்தையும் போலுள்ளது எனப் பூரிக்கின்றனர் அடியவர்கள்.

           பாந்தள் மாணிக்கமணி பொற்பூவின்
                   மரகதம்பத்தி பாய்ந்தாடல் எனவும்
         ………………………………………………..
         மழை மதரரிக் கண்கள் பன்மணிக்
                   கொப்பில் மறிந்து விளையாடல் எனவும்
         ………………………………………
         தண்டாது வரிவண்டு செங்காந்தள்
                   மலர்மீது தண்தாது நுகர்வது எனவும்
         ……………………………………………
         …………………………………. இந்திர
                   நறுநீலக் கழங்கு விளையாடி அருளே!
         கனக சிற்சபையில் வாழ் சிவகாம
                   சுந்தரி கழங்கு விளையாடி அருளே10!

மிக அழகான உவமைகள் நிறைந்ததொரு பாடல் இது. இயற்கையின் செயல்கள் அனைத்திலும் அன்னையின் கழங்காட்டத்தைக் கண்டு உருகும் அடியவர் இப்பெரும்புலவர்.

இரண்டாம் பாடல் அன்னை விளையாடும் பலவிதமான ஆடல்களையும் தொகுத்துக் கூறுகிறது. கழங்கு விளையாடவேண்டிக் கொள்வதுடன் நிறைவுறுகின்றது.

சொற்கள் பழகும் இளங்கிளியோடு சில பொழுது கொஞ்சி மகிழ்கிறாள் இப்பெண்!

பொற்கூண்டில் வளரும் பூவைப்பறவைக்கு மென்மையான சொற்களைப் பயிற்றுவிக்கிறாள்.

ரத்தினங்கள் பதித்த சிறு பாவைகளுக்கு (பொம்மைகளுக்கு) குழமணம் மொழிந்தும், சிறுவீடு கட்டியும், நறுமணப்பொடிகளைத் தோழியர்மீது வீசி எறிந்தும், யாழினைமீட்டி, இனியகுரலில் இன்னிசைப் பாடல்களைப் பாடியும், மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை வைத்து விளையாடியும், இனிய தோழிமாருடன் நீரில் திளைத்து விளையாடியும், அப்போது நறுமணப்பொடி கலந்த நீரினை இறைத்துக் களித்தும், நீலமயில்மீது     ஏறியமர்ந்து விளையாடியும் மகிழும் பெண்ணே!

சங்கத்தமிழில் முத்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கழங்கு ஆடிடுக! என வேண்டும் பாடலிது.

            பழகுசொல் பச்சிளம் கிள்ளையொடு
                   கொஞ்சியும் பஞ்சரம் வளர் ……
         ……………………………………………….
         குழமணப் பிள்ளைகொடு வண்டல்
                   விளையாடியும்……………………
         கொடுங்கையாழ் குரலிசை நரம்பினொடு
                   ……………………………………
         கழகு முத்தமிழ் பாடும் இகுளையரொடும்
                   பொற்கழங்கு விளையாடி அருளே11!

என்பன பாடல் வரிகள்.

இளமகளிரின் ஆடல் பாடல்களைச் சித்தரிப்பதில் உலா இலக்கியங்களும் பிள்ளைத்தமிழ் பிரபந்தங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது மிகையேயல்ல எனலாம்.

(தொடரும்)

 பார்வை நூல்கள்:

  1. பெரும்பாணாற்றுப்படை
  2. அகநானூறு. பா. 17. வரி.2
  3. அகநானூறு, பா.66. வரி.24
  4. நற்றிணை, பா.79, வரி-2-3.
  5. கடம்பர் கோயில் உலா
  6. காளமேகப்புலவர்- திரு ஆனைக்கா உலா
  7. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா.

       8, 9. சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ்

10, 11. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *