வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-40

0

தி. இரா. மீனா

அக்கம்மா

கல்யாணைச் சேர்ந்தவர். ’ஆசாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

1. “பற்றற்றவனுக்கன்றி ஆசையுள்ளவனுக்கு விரதமுண்டோ?
அமைதியுடையவனுக்கன்றி சினமுடையவருக்கு விரதமுண்டோ?
கொடையாளிக்கல்லாமல் கருமிக்கு விரதமுண்டோ?
தன்னாற்றலுக்கு ஏற்றாற்போல் மனத்தூய்மையுடன்
இருக்கும் மாயபக்தனே உலக வினைகளற்ற சரணர்
அவர் பாதம் என்னுள்ளத்தில் வார்ப்புப் போலுள்ளது.
சரணரின் மாட்டுக் கொட்டகையாம்
ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்“

2. “குருவாக இருந்தாலும் ஒழுக்கக் கேடுடையவனெனில்
பின்பற்ற முடியாது.
இலிங்கமாயிருப்பினும் ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டிருப்பின்
வழிபட முடியாது.
ஜங்கமனாயிருப்பினும் ஆசாரத்தைப்
பின்பற்றவில்லையாயின் சேர இயலாது.
ஆசாரமே பொருள், விரதமே உயிர்,செயலே அறிவு
அறிவே ஆசாரம்
ஆச்சாரமே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம் அதுவே“

3. “தான் மூழ்கிய பின்னர் கடலின் ஆழம் தனக்கேன்?
தான் ஆயுதமொன்றில் அகப்பட்ட பின்னர்
தன்னுடலை ஆயுதங்கள் பல தளைப்படுத்தினாலென்ன?
ஒரு முடிவுக்கு வந்த பின்னர்
இந்த உலகோருடன் வேறு பேச்செதற்கு?
இது கட்டுப்பாடுடன் கூடிய நியமம்
நியமத்தால் வந்த முடிவு
ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் விருது.“

4. “பக்தன் வீட்டிற்கு அடியார் வந்தால்
திருமண  மகிழ்ச்சியை விட அதிகமென நினைத்து
உடலுருகி மனமிணைந்து கண்கள் நிறைந்து
வஞ்சனை ஐயம் தோன்றாமல்
ஐயமற்றவனாகிச் செய்கின்ற பக்தனுடைய
முற்றத்தின் வாசலே
ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் சிரமாம்.”

5. “ஐயமுள்ள வரையில் தவமிருப்பவன் இல்லை
வாள்முனைக்கு அஞ்சும் வரையில் வீரமுடைய வீரனல்ல.
மூவகையுடல்  உள்ளவரையில் இலிங்கமுள்ள
அங்கமுடையவனல்லன்.
நிந்தனை வந்தபின்னும் அங்கத்தை விடவில்லையெனில்
ஒழுக்கமுடையவன் அல்லன்.
இந்த நியமங்களில் உட்பட்டவனுக்கு
அங்கிங்கெனும் பயமெங்குமில்லை.
ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கத்திலுமில்லை.”

உரிலிங்க பெத்தியின் புண்ணியஸ்திரி காளவ்வே

உரிலிங்க பெத்தியின் மனைவி.’உரிலிங்க பெத்தியிகளா அரசா ’இவரது முத்திரையாகும்.

1. “கடமை காயகமற்றவர் பக்தரல்லர்
வாய்மை தூய்மையற்றது காயகமல்ல
ஆசையென்பது பிறப்பின் மூலம்
ஆசையற்றது நித்திய முக்தியாம்
உரிலிங்கப் பெத்திகளரசனுள், சுலபமல்ல காண் தாயே.”

3. “தும்பையின் கொள்ளிபோல் எரிகின்றவன் பக்தனா?
பொய்யுரைத்துப் பெற்றுச் செய்பவன் பக்தனா?
பக்தர் குலத்தை இகழ்பவன் பக்தனா?
தன்னுயிருக்குத் துன்பம் வரினும் இவரைவிடவேண்டும்
விடவில்லையெனில் உரிலிங்கப் பெத்திகளரசன்
விரும்பான் தாயே“

எடேமட நாகிதேவய்யாவின் புண்ணியஸ்திரி மசணம்மா 

’ நிஜகுணேஸ்வர ’இவரது முத்திரையாகும்.

“காகம் நாய் இரண்டையும் உண்டவரில்லை;
விரதம் கெடுத்தவரோடு இணைந்தவரில்லை;
நாய்க்கு ஆரஞ்சு செரிக்குமா?
உலக மாந்தருக்கு விரதம் பொருந்துமா ,
சிவமூலத்துக்கன்றி?
நிஜகுணேஸ்வர இலிங்கத்தில் தாங்களே சாட்சி“

எச்சரிகே காயகதா முக்திநாதய்யா :

இவருக்கு முத்தண்ணா  என்ற பெயருமுண்டு.காயகம் இரவுநேர காவலாளி. ’சுத்த சித்த பிரசித்த பிரசன்ன குரங்கேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

“உடல் மாற்றம் போதும் எழுக,
வஞ்சகச் செயல்கள் பல மறந்தெழுக,
பக்தியும் முக்தியும் உமக்களிக்கும் இலிங்க நட்பை
நினைத்தெழுக.
உமது குருவின் ஆணை
உமது பற்றற்ற அறிவின் விழிப்புணர்வறிந்தெழுக.
சுத்த சித்த பிரசித்த பிரசன்ன குரங்கேஸ்வர
இலிங்கத்துடன் இணைய வேண்டுமெனில்.”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *