புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

“மோப்பக்  குழையும்  அனிச்சமும்  நோக்கக் குழையும்  விருந்தும்”

முன்னுரை

திருக்குறளில் ‘ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது, ஒன்று மற்றொன்றைவிடத் தாழ்ந்தது’ என்பன போன்ற பதிவுகள் வரும். ஆனால் அவை எப்படிச் சிறந்தது? எப்படித் தாழ்ந்தது? என்பதற்கான காரணத்தைத் திருவள்ளுவர் கூறமாட்டார். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவது கற்பார் கடன். அல்லது உரையாசிரியர் பணி. இது ஓர் உரை நெறி. இந்நெறியில் பரிமேலழகர்  உரை தனித்தன்மை பெற்றது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்னும் திருவள்ளுவரின் வினாவிற்கு விடையிறுத்த பரிமேலழகர், “கற்புடையாள்போல் அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் யாவுள?” (54) என்றார் என எழுதுவதையும், “செல்லா இடத்து சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே! ஏனையது இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீய பிற இல்லை என்றார்” (3020) என எழுதுவதும் காண்க. இந்த வகையில் எதிர்பாராச் சூழலில் இல்லத்திற்கு வரும் விருந்தின் இயல்பு  அனிச்சப்பூவினும் மென்மையானது என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

திறனறியப்படும் குறளும் உரையும்

திருக்குறள் அறத்துப்பாலில் ஒன்பதாவது அதிகாரத்தின் பத்தாவது இறுதிப் பாடலாக அமைந்தது,

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (90)

என்னும் குறட்பாவாகும். இதற்கு,

  • அனிச்சம் மோப்பக் குழையும் — அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது
  • விருந்து முகந்திரிந்து நோக்கக் குழையும் – விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் எனப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார்.

பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் மையக்கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.

அதிகாரக் கருத்துப் பகுப்பு

ஒவ்வொரு அதிகாரத்து உட்பொருளையும் பாகுபடுத்திக் கொள்ள பரிமேலழகர் பெரிதும் முயன்றிருக்கிறார். இந்தப் பகுப்புத்தான் திருக்குறளுக்கான புத்துரைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற உரைத்தளவாடங்கள் ஆகும். பரிமேலழகர் வகுத்துக் காட்டும் பகுப்புமுறையைப் புறந்தள்ளித் திருக்குறளுக்கு உரைசொல்லப் புகுந்தால் ஒவ்வொரு அதிகாரத்திலும் அதிகாரத் தலைப்புக்குப் பொருத்தமில்லாத குறட்பாக்கள் இருப்பதைக் காட்டிவிட இயலும். ‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “இறைவனடி சேராதார் பிறவிக்கடலை நீந்தார்” என்பதற்கும் என்ன தொடர்பு? ‘ஒழுக்கமுடைமை’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்பதற்கும்” என்ன தொடர்பு?” என்று ஆயிரம் வினாக்களைத் தொடுத்துவிட முடியும். “ஒரு தலைப்பின் கீழ் அதுபற்றிய பன்முகப் பரிமாணங்களைத் திருவள்ளுவர் ஆராய்ந்திருக்கிறார்” என்பதுதான் பரிமேலழகரின் உரைப்பணியின் தொடக்க நிலையாகும்.

  1. விருந்தோம்பலின் சிறப்பு (1-2)
  2. விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் (3-5)
  3. விருந்தோம்புவார் மறுமைக்கண் எய்தும் பயன் (6)
  4. இருமைப் பயனுக்கான காரணம் (7)
  5. விருந்தோம்பாவழிப் படும் குற்றம் (8-9)
  6. விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்முகம் (10)

எனப் பகுத்துக் காட்டி, விருந்தோம்பலின் பன்முகப் பரிமாணத்தை எடுத்து விளக்கியதால்தான், ‘இத்தகைய சிறப்புக்கள் உடைய விருந்தினை ஓம்புவார்க்கு இருக்க வேண்டிய எளிய ஆனால் தலையாய இயல்பு இன்முகமே’ என்பதை அவரால் இறுதிக் குறட்பாவிற்கான விளக்கமாக்க முடிந்தது.

பொழிப்புரை நுட்பம்

  • ‘அனிச்சம் குழையும்’ என உடன்பாட்டில் குறளிருக்க ‘மோந்துழியன்றிக் குழையாது’ என எதிர்மறை வாய்பாட்டில் உரை காண்கிறார். அதிகாரம் விருந்தோம்பல். விருந்தினர் மனம் குழைவதே பரிமேலழகரின் கருத்தில் நின்றதாதலின் உடன்பாட்டு உவமத்தை எதிர்மறை வாய்பாட்டிலும் பொருளை உடன்பாட்டிலும் வெளிப்படுத்துகிறார். ‘(காண்டல் தொடுதல் அன்றி,) மோந்தால்தான் அனிச்சம் குழையும்., திரிபு நோக்கினாலேயே விருந்து குழையும்’ என்பது கருத்து.
  • ‘திரிதல்’ என்பது இலக்கணத்துள் மூவகை விகாரங்களுள் ஒன்று. இயல்புதான் திரியும். விருந்தோம்புதற்குரியார், விருந்து வருவது கண்டு மகிழ்வதற்கு மாறாக தமது இசைவின்மையை (விருப்பமின்மையை), முகத்தால் மாறுபட நோக்கின், வந்தவர் மனம் குழைந்துவிடுமாம். நுட்பம் என்னவென்றால் இயல்பாக இருப்பதைச் செயற்கையாக மாற்றிக்கொள்வதைக் ‘கண்டுழி’ “முகம் வேறுபட்டு நோக்குதல்” என்னும் சொல்லாட்சிகளால் பரிமேலழகர் உணரவைப்பதுதான்.

விளக்கவுரை

‘அனிச்சம்’ ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் எனப்து கூறப்பட்டது.

விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

  • திருக்குறளில் ‘அனிச்சம்’, ‘குவளை’ ஆகிய இரண்டு பூக்கள், முறையே மென்மைக்கும் கண்ணுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. ‘வாழி அனிச்சமே’ (1111) (மென்மையால்), ‘அனிச்சப்பூ’ கால்களையாள்’ (1115) (மென்மை கருதாது) ‘அனிச்சமும்’ (1120) (மென்மைக்காக எடுக்கப்பட்ட) என்னும் இடங்களிலெல்லாம் ‘அனிச்சம்’ என்னும் சொல் தலைமகன் தலைமகள் நலத்தைப் புகழ்வது ஆதலின் பூவை நேரடியாகக் குறித்தது. இக்குறட்பா ஆசிரியர் கூற்றாக அமைந்ததாதலின் ‘அனிச்சம்’ என்னும் மரத்தின் பெயர் மலருக்கு ஆகுபெயர் ஆயிற்று. அதாவது தலைவன் மரத்தைப் பற்றிப் பேசாது மலரைப் பற்றித்தான் பேசுவான் என்பது குறிப்பு. பாட்டில் ‘குழையும்’ என்ற வினையால் ‘அனிச்சம்’ ஆகுபெயராயிற்று, குழைவது மரத்திற்கின்மையின். தலைமகன் கூற்றில் அனிச்சம் ஆகுபெயராகாததற்கு அவன் கருத்தில் அனிச்சப் பூ மட்டுமே நின்றதனான் என்க.
  • மேம்போக்காக இந்தப் பாடலைக் கண்ணுறுவார் இதனை எடுத்துக்காட்டுவமமாகவே கொள்ளக் கூடும். மோந்தால் அனிச்சம் குழையும் (மாறுபட்ட) நோக்கினால் விருந்து குழையும்’ என்னும் பாட்டின் கிடக்கை நிலையும் அவ்வாறு கொள்ளுமாறு அமைந்திருப்பதும் உண்மை. ஆனால் பரிமேலழகரின் சிந்தனையாற்றலால் பாட்டில் வெளிப்படும் நுண்ணியம் இறுதியில் விளக்கப்படும்.
  • மென்மைக்கு எடுத்துக்காட்டு அனிச்சப்பூ. ‘பூ’ என்னும் சொல்லுக்கே ‘மென்மை’ என்பது பொருள். ‘பூந்தென்றல்’, ‘பூங்கோதை’, ‘பூங்கதவு’ என்பன காண்க. அனிச்சம் பூக்களில் மென்மையானது. அதனினும் விருந்தினர்கள் மென்மையானவர்கள் என்றுதான் வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகர் அனுமானம். பாட்டில் அதற்கான காரணம் வெளிப்பட இல்லை. அக்காரணத்தை ‘மோப்ப’, ‘நோக்க’ என்னும் இரு சொற்களைக் கொண்டு கண்டறிய முற்படுகிறார். முற்பட்டு ‘மோத்தல்’ என்பது ‘காண்டல், தொடுதல், மோத்தல் என்னும் நிரலில் மூன்றாவதாகவும் ‘நோக்குதல்’ என்பது அவற்றின் தொடக்க வினையாகவும் அமைந்திருப்பதை அறிகிறார். கண்ணால் காணுகிறபொழுது அனிச்சம் வாடாது. விரல்களினால் தீண்டுகிறபோதும் வாடாது. மூக்கினால் மோந்தால்தான் அது வாடும். தொலைவில் வரும் விருந்தினர்களைக் காண்பது ஒரு வினை. அவர்களை இன்சொல்லால் வரவேற்பது அடுத்த வினை. அவர்களை அறுசுவை உண்டியளித்து ஓம்புதல் அவற்றின் தொடர்வினை. ஓம்புபவர் தொலைவில் வரும் விருந்தினர்களைத் தம் பார்வையால் மாறுபட்டு நோக்கினாலேயே மனம் வாடுவர். எனவே மூன்றாம் நிலையில் வாடும் அனிச்சப் பூவினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினர் மென்மையானவர் என்னும் உண்மையைப் பதிவு செய்கிறார் பரிமேலழகர். இதனைச் “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்முகமும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்” என்னும் பகுதி உணர்த்துவது காண்க.
  • அதிகார உள்ளடக்கக் கருத்துப் பகுப்பில் பெரிதும் நம்பிக்கை கொண்ட பரிமேலழகர் விருந்தோம்புவார்க்கு முதற்கண் வேண்டுவது இன்முகம் என்பதை வலியுறுத்தவே இக்குறள் இறுதியாக வைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறார். கருதி, “இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது” எனக் குறட்பாவின் மையக்கருத்தினைப் புலப்படுத்துகிறார்.

விருந்து பற்றிய விளக்கம்

இல்லறத்தான் ஓம்புகின்ற அறங்களுள் விருந்து சிறந்தது. ‘விருந்து’ என்னும் சொல் விருந்தினரைக் குறித்தாலும் இவ்வறம் பற்றிய அனைத்துச் சிந்தனைகளும் ஓம்புவாரையே களமாகக் கொண்டுள்ளன என்பதைக் கருத்திற் கொள்ளல் வேண்டும். அதாவது விருந்தோம்பலில் ஓம்புகிறவனே தலைமகன், அறம் செய்வானும் அதற்கான அனைத்துப் பயன்களையும் அனுபவிப்பவன் அவனேயாதலின். தேனும் மீனும் கொடுத்து ஓம்பிய குகனைப் (தெய்வத்தை ஓம்பிய அடியவன்) பற்றியே இராமாயணம் பேசுகிறது. குசேலனை ஓம்பிய கண்ணனைப் (மானுட நண்பனை ஓம்பிய இறைவன்) பற்றியே குசேலோபாக்கியானம் பேசுகிறது. சிவனடியாரை மழையிரவில் ஓம்பிய இளையான்குடி மாறனாரையே (சிவனை ஓம்பிய சிவனடியார்) பெரியபுராணம் பேசுகிறது. விருந்தோம்பலில் ஓம்புகிறவன் (அறம்) செய்பவனாகவும் விருந்து செயப்படுபொருளாகவும் அமைந்துவிடுவதே இதற்குக் காரணம்.  விருந்தோம்பலாகிய அறத்தில் பயன் செய்பவனுக்கே என்பது குறிப்பு. ஓம்புகிறவன் உயர்ந்தவன் என்பது தத்துவம். இந்தப் பின்புலத்தில் பரிமேலழகர் உரையருமையை நோக்கினால் அதன் நுட்பம் புரியக்கூடும்.

பரிமேலழகரின் உரையருமை

  • ‘விருந்தோம்பல்’ என்னும் பொருண்மை திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரத்தில் ஆராயப்படினும் ஐந்தாவது அதிகாரத்தின் 43 ஆவது குறட்பாவிலிருந்தே இது பற்றிய சிந்தனையைப் பரிமேலழகர் தொடங்கிவிடுகிறார். இதனை “இருவகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் (தென்புலத்தார், தெய்வம்) கட்புலனாகாதன நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் (ஒக்கல், தான்) பிறர்க்கு ஈதல் அன்மையானும் இடைநின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்களுக்கு முதலாயிற்று.” என்னும் அதிகாரப் பொருண்மை விளக்கத்தினால் உணர முடியும்.
  • ‘அறிந்து வருவது’, ‘அறியாது வருவது’ என்னும் இருவகையில் எவ்வகையாயினும் எதிர்பாராமல் வருவதே ‘விருந்து’ எனப்படும். ‘விருந்தே புதுமை’ என்பதற்கு அதுதான் பொருள்! அவ்வெதிர்பாராச் சூழலில் வருகின்ற விருந்தினை ஓம்புங்கால் இன்முகமே தலையாயது என்பதனையே திறனறியும் குறட்பாவின் (90) மையக்கருத்தாகப் பரிமேலழகர் கொள்கிறார். விருந்தோம்புவார்க்குரிய முகமலர்ச்சியே இவ்வதிகாரத்தில் கண்ட அனைத்துப் பயன்களையும் தரும் என்பது குறிப்பு. மேற்கண்ட விளக்கங்களையெல்லாம் உள்ளடக்கி “விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது.  அவர் இரு வகையர். பண்டு அறிவுண்மையின் ‘குறித்து’ வந்தாரும் அஃது இன்மையின் ‘குறியாது’ வந்தாரும் என.” என்னும் விளக்கத்தாலும் இவ்வைந்து அறங்களுள் விருந்தோம்பலையே இல்லறத்தின் தலையாய அறமாக விதந்தோதிய திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை அறிந்த நுட்பத்தானும் உணர்க.

ஒரே அலைவரிசையில் “திருவள்ளுவர் – பரிமேலழகர் — பாவேந்தர் “

குறிப்பிட்ட குறட்பாவிற்குரிய பரிமேலழகர் உரைத்திறனை மட்டும் எதிர்பார்க்கின்ற சிலர் இந்தப் பகுதியில் இவ்வளவு விளக்கமும் எடுத்துக்காட்டுக்களும் சான்றுகளும் தேவையா என எண்ணக் கூடும். பழந்தமிழ்  உரையாசிரியப் பெருமக்களின் ஒரு பொருள் பற்றிய சிந்தனை, பல தளங்களிலும் வேர்கொண்டிருந்தது என்பது ஓர் இன்றியமையாக் குறிப்பு. ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர்களின் தலைசான்ற பண்பாட்டுக் குறிப்பு. உலக நீதி உரைக்க வந்த திருவள்ளுவரே “இன்மையுள் இன்மை விருந்தொரால்” (153) என்றும், “உடைமையுள் இன்மை விருந்தோம்பா மடமை” (89) என்றும் இருவகை வாய்பாட்டில் நுட்பமாக இத்தமிழ்ப் பண்பாட்டை ஆராய்ந்திருக்கிறார்.

கணவனைப் பிரிந்துறைந்த நாளில் தான் இழந்த அறங்ளை நிரல்படுத்திய கண்ணகி விருந்தோம்ப இயலாமையைச் சுட்டி வருந்துவதை இளங்கோடிவகள்  “தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடல் இழந்த என்னை” (சிலம்பு. கொலைக்களக்காதை – 73) என்னும் வரிகளில் கண்ணகி வாய்மொழியாகவே பதிவு செய்திருக்கிறார் என்பதும் அசோகவனத்தில் தனிமைச் சிறையில் வாடிய சீதை வனத்தில் இராமனின் நிலையெண்ணி வருந்தியபோது, ‘விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்” (கம்ப…சுந்தரகாண்டம் – 5083) எனக் கம்பர் பதிவு செய்திருப்பதும் பலராலும் அறியப்பட்டவையே.

விருந்தோம்பலாகிய மரபுவழிப் பண்பாட்டைத் திருவள்ளுவர் வழி நின்று விளக்கியவர் பரிமேலழகர் என்பது மேற்சொன்ன விளக்கங்களால் புலப்படக் கூடும். திருவள்ளுவரையும் பரிமேலழகரையும் முற்றும் உள்வாங்கிய பாவேந்தர் தமக்கே உரிய தமிழ்ப் பண்பாட்டு உணர்ச்சியுடன் எழுதிய ‘குடும்பவிளக்கு’ என்னும் அரிய காப்பியத்தில் ‘விருந்தோம்பல்’ என்பதை இரண்டாவது பகுதியாக  வைத்திருக்கிறார். அது மட்டுமன்று. குடும்பத்தலைவியாகிய தங்கம் விருந்து வரக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சியைச்,

“சுடுவெயிலில் காயவைத்த சோளம் துழவி
உடல் நிமிர்ந்தாள்., கண்கள் உவந்தாள். —  நடைவீட்டைத்
தாண்டி வரும்விருந்தைத் தான்கண்டாள்! கையேந்திப்
பூண்ட மகிழ்வாள் புகழேந்தி – வேண்டி
வருக!  அம் மாவருக! ஐயா வருக!
வருக! பாப்பா தம்பி என்று – பெருகன்பால்
பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம்
அன்றலர்ந்த செந்தாமரையாக – நன்றே
வரவேற்றாள்” (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

என வெளிப்படுத்துவதில் பரிமேலழகருக்கு உரையெழுதுகிறார். மாவரசர், மலர்க்குழலி, நாவரசு நகைமுத்தும் வந்திருக்கிறார்கள் எனக் கேட்டவுடன் மகிழ்ந்த தங்கத்தின் மாமன், மாமி மகிழ்ந்து மருமகள் தங்கத்திடம் விருந்தோம்பலின் சிறப்பைக் கூறுவதில் திருவள்ளுவர், பரிமேலழகர் வார்த்தெடுத்த தமிழ் மரபுப் பாவேந்தரிடம் குடிகொண்ட பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

“வீட்டுக்கு வந்த விருந்தோம்பு! நாட்டிலுறு
நற்றமிழர் சேர்த்த புகழ் ஞாலத்தில் என்னவெனில்
‘உற்ற விருந்தை உயிரென்று — பெற்றுவத்தல்’
மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று – ஆய்ந்த திரு
வள்ளுவனார் சொன்னார்! அதனைநீ எப்போதும்
உள்ளத்து வைப்பாய்! ஒரு போதும் – தள்ளாதே!
ஆண்டு பல முயன்றே ஆக்குவை ஊண் எனினும்
ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
வந்தாரின் ‘தேவை, வழக்கம்’ இவையறிய
நந்தா விளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
இட்டுப்பார்! உண்டவர்கள் இன்புற்றிருக்கையிலே
தொட்டுப்பார் உன் நெஞ்சைத் தோன்றுமின்பம்!
கரும்பென்பார் பெண்ணைக் கவிஞரெலாம் வந்த
விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?”

(பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

தமிழிலக்கியத்தில் விருந்தோம்பல் என்னும் தலைப்பில் சிந்தித்து எழுதப்படும் படைப்பு எதுவாக இருந்தாலும் அது பாவேந்தர் சித்திரித்துக் காட்டிய குடும்ப விளக்குக்குப் பிறகுதான் என்பதை இந்தப் பகுதி காட்டும். வள்ளுவரை மனக்கோயிலில் வைத்துக் கொண்டாடும் பாவேந்தர் பரிமேலழகரின் உரைநயத்தையும் ஆழத்தையும் உள்வாங்கியே இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார் என்பதைக் கற்பார் உணரக்கூடும். “தொல்லோர் சிறப்பின்’ என்ற தொடருக்கு “நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்” என்று கவிதையில் உரையெழுதுகிறார் பாவேந்தர். விருந்து கண்டவுடன் தங்கத்தின் மேனி பூரித்தது என்பதைப் “பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம் அன்றலர்நத செந்தாமரையாக” என்று வண்ணனை செய்கிறார். உரைத்திறன் அறியும் இந்தக் குறட்பாவை  முற்றாக எடுத்தாள்கிறார்.  எல்லாவற்றையும் விட திருக்குறளில் சொல்லாத ஆனால் பரிமேலழகர் சொன்ன (சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் என்னும் முதல் நிலை தவிர்த்து) நண்ணியபழி இன்சொல்லும், உடன்பட்டவழி நன்றாற்றலும் என்ற விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதனவாகிய மற்ற இரண்டு கடமைகளையும் இல்லறக் காட்சிகளாகவே சித்திரித்துக் காட்டியுள்ளார். இதனால் பரிமேலழகர் உரை பாவேந்தரை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் இல்லறத்தின் தலையறமாக விருந்தோம்பலை விதந்தோத, அதற்குப் பரிமேலழகர் ஆழ்ந்த உரையெழுதினார். குறளையும் பரிமேலழகர் உரையையும் செரித்துக் கொண்ட மரபுவழிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அதனைக் குடும்ப விளக்கில் எல்லாருக்குமாகச் சித்திரித்துக் காட்டினார். “வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட மரபு” என்றால் இப்படித்தான் இருக்கும்!

நிறைவுரை

பொருட்பகுப்பில் தெளிவு கொண்ட பரிமேலழகர் விருந்தினர்க்கு உவமமாக்கிய அனிச்சத்தின் திறமறிகிறார். அறிந்து ‘அனிச்சத்தை விருந்துக்கு ஒப்பாக்கவில்லை’ என்னும் உண்மை உணர்கிறார். உணர்ந்து ‘ஒப்பு நிலை மாற்றி உறழ்வு நிலையில்’ உரை காண்கிறார். கண்டு ‘அனிச்சமும் விருந்தினரும் ஒப்பு’ என்னும் கருத்தியலைப் பின்னுக்குத் தள்ளுகிறார். தள்ளி, மூன்றாம் நிலையில் வாடுகின்ற அனிச்சத்தினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினரின் மென்மையின் உயர்ச்சியை வேறுபடுத்தி விளக்குகிறார். இந்த விளக்கத்தால் பெரும்பாலோர்க்கு எடுத்துக்காட்டுவமமாகத் தோன்றும் இந்தப் பா வேற்றுமையணியாக தனது உண்மை உருவத்தைக் காட்டி நிற்கிறது. இதுவே இக்குறட்பாவில் பரிமேலழகர் உரைத்திறனாகும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *